Karisal Kaattin Kavithai Solai Bharathi
()
About this ebook
பாரதியார் உண்மையான கவி. அவர் எத்தனையோ மணமுள்ள கவிதை மலர்களைச் சிருஷ்டித்து நமக்குக் கொடுத்திருக்கிறார். தேசத்துக்கு அவசியமான எல்லா விஷயங்களையும் பற்றி அவர் பாடியிருக்கிறார். அவர் தொடாத விஷயம் ஒன்றுகூட இல்லை. ஆனால், பாரதியார் எதைப் பற்றிப் பாடினார் என்பதைக் காட்டிலும், அவர் ஒரு கவி என்பதுதான் மகத்தான விஷயம். முக்கியமாக, நம் காலத்தில் பாரதியார் பிறந்து பாடியதனால், இந்தத் தமிழ் ஜாதியின் சக்தி அவிந்துவிடவில்லையென்பது நிச்சயமாய்த் தெரிகிறது. அப்பேர்ப்பட்ட கவியின் ஞாபகத்தை நாம் என்றென்றைக்கும் போற்ற வேண்டும். அப்படிப் போற்றுவதினால் இன்னும் பல கவிகள் தமிழ்நாட்டில் தோன்றக் கூடும்.
Read more from K.S. Radhakrishnan
Eezha Tamizhar Prachanai Rating: 0 out of 5 stars0 ratingsAzhagar Anai Rating: 5 out of 5 stars5/5D.M.K. – Samooga Neethi Rating: 0 out of 5 stars0 ratingsKi.Ra. Nooru - Thoguthi 2 Rating: 0 out of 5 stars0 ratingsNimira Vaikkum Nellai Rating: 0 out of 5 stars0 ratingsTamilnadu 50 Rating: 0 out of 5 stars0 ratingsKi. Ra. 85 – Kaalathai Vendra Kathai Solli Rating: 0 out of 5 stars0 ratingsUrimaikku Kural Koduppom! Rating: 0 out of 5 stars0 ratingsKi.Ra. Nooru - Thoguthi 1 Rating: 0 out of 5 stars0 ratingsThookkukku Thookku Rating: 0 out of 5 stars0 ratingsTamilaga Melavai Rating: 1 out of 5 stars1/5123 Indiayave Odathey! Nil!! Rating: 0 out of 5 stars0 ratingsKanavaagi Pona Katchatheevu Rating: 0 out of 5 stars0 ratingsSethu Kaalvai – Oru Paarvai Rating: 0 out of 5 stars0 ratingsMannin Perumai Rating: 0 out of 5 stars0 ratingsKadhai Solli Rating: 0 out of 5 stars0 ratingsManidha Urimaigal Endral Enna? Rating: 0 out of 5 stars0 ratings
Related to Karisal Kaattin Kavithai Solai Bharathi
Related ebooks
Hindustani Isaiyai Therinthu Kollungal Rating: 0 out of 5 stars0 ratingsKavithaiye Kanalagi.. Rating: 0 out of 5 stars0 ratingsBharathi Pottri Aayiram - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsSumeriavil Tamil Yazh! Japanil Saama Vedha Isai!! Rating: 0 out of 5 stars0 ratingsAthisaya Mahakavi Bharathiyar! Rating: 0 out of 5 stars0 ratingsNeedhidevan Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Manimaalai Rating: 2 out of 5 stars2/5Manapanthal Rating: 0 out of 5 stars0 ratingsMaha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum, Katturaigalum Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Kavi Bharathiyar Patri Ariya Uthavum Noolgalum, Katturaigalum Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsIsaiyin Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsUpanidatha Thendralum Vedha Mazhaiyum Rating: 0 out of 5 stars0 ratingsCarnataka Isaiyai Therinthu Kollungal Rating: 0 out of 5 stars0 ratingsOru Pen Thuraviyin Samaya Vazhvum - Samuthaya Vazhvum Rating: 3 out of 5 stars3/5Thathuva Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsUlagam Muzhuthum Paambu Vazhipaadu! Rating: 0 out of 5 stars0 ratingsPon chandran kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsMuthamizh Arignar Dr. Kalaignar Avargalin Aalumai Kuritha Aaivu Rating: 0 out of 5 stars0 ratingsMuppathu Katturaigalil Hindu Madha Athisayangal! Rating: 5 out of 5 stars5/5Rishigal Bhoomi! Rating: 0 out of 5 stars0 ratingsManuneethi Noolil Athisaya Seithigal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsSindhisai Padalgal Rating: 0 out of 5 stars0 ratingsBharatha Natiya Kathaigalum Pazhamozhi Kathaigalum Rating: 0 out of 5 stars0 ratingsAkanaanuru, Puranaanuru, Kaathaa Ezhunuru, Raja Tharangini Sollum Athisaya Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Kural Rating: 0 out of 5 stars0 ratingsAadi Pattam Thedi Vithai... Rating: 0 out of 5 stars0 ratingsTamil, Samskirutha Kalvettugal Tharum Suvaiyana Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Muthukal Rating: 0 out of 5 stars0 ratingsPanniru Azhwargal Rating: 0 out of 5 stars0 ratingsAanmeegamey Aanandham! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Karisal Kaattin Kavithai Solai Bharathi
0 ratings0 reviews
Book preview
Karisal Kaattin Kavithai Solai Bharathi - K.S. Radhakrishnan
https://www.pustaka.co.in
கரிசல் காட்டின் கவிதைச்சோலை பாரதி
Karisal Kaattin Kavithai Solai Bharathi
Author:
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
K.S. Radhakrishnan
For more books
https://www.pustaka.co.in/home/author/ks-radhakrishnan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முகப்புரை
நன்றி
1. உண்மைக் கவி/சுப்ரமண்ய பாரதி - ராஜாஜி
2. பாரதியும் தேச பக்தியும் - தமிழ்த்தென்றல் திரு.வி.க.
3. இதய ஒலி - பெருந்தலைவர் காமராஜர்
4. பாரதி பாதை/ பாரதியார் பற்றி அண்ணா கூறியது என்ன? - அறிஞர் அண்ணா
5. நான் கண்ட பாரதி - வ.உ.சி.
6. கண்ணன் பாட்டு - வ.வே.சு. ஐயர்
7. கவிதைத் திறன் - டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர்
8. பாரதியும் இலக்கியமும் - ப. ஜீவானந்தம்
9. தமிழினத்தின் சொத்து - எஸ். சத்தியமூர்த்தி
10. அக்கினிக் குஞ்சு! - கலைஞர் மு. கருணாநிதி
11. எனது குருநாதர் பாரதியார் - கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
12. தேச பக்தி - கே. பாலதண்டாயுதம்
13. பாரதியும் புதுவாழ்வும் - பரலி சு. நெல்லையப்பர்
14. சுப்பிரமணிய பாரதியார் கவிதை - தலைமை நீதிபதி மாதவையா அனந்த நாராயணன்
15. பாரதியும் பட்டிக்காட்டானும்/அமரகவி/பாரதி மண்டபம் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
16. பாரதி நினைவு/தோற்றுப் போனார்! - நாமக்கல் கவிஞர்
17. பாரதி கண்ட புதிய பாரதம் - டாக்டர் ம.பொ. சிவஞானம்
18. பாடல்களுக்குச் சித்திரம்... - டி.எஸ். சொக்கலிங்கம்
19. பாரதியார் நாமம் வாழ்க - பாரதிதாசன்
20. குயில் பாடிய குயில்/மகாகவி பாரதி - கவியரசு கண்ணதாசன்
21. பாரதியின் தாக்கம்/பாரதிக்கு மணி மண்டபம் - எஸ். காசி விஸ்வநாதன், சோ. அழகர்சாமி
22. பாரதி பாடல்களில் பொதுவுடைமைக் கருத்துகள் - என். சங்கரய்யா
23. தமிழச் சாதியின் அறிவுத் தலைமை பாரதி - ஆர். நல்லகண்ணு
24. யுகப்புரட்சியை இனங்கண்ட பெருங்கவிஞன் - பழ. நெடுமாறன்
25. நான் கண்ட பாரதி - எஸ். வையாபுரிப் பிள்ளை
26. பாரதியின் நகைச்சுவை - பெரியசாமி தூரன்
27. சுதந்திரக் கவிஞர் - டாக்டர் மு. வரதராசனார்
28. விசித்திரமான கவிதை/உலக மகாகவி - வ.ரா.
29. கத்தும் குயிலோசை - அ. சீனிவாச ராகவன்
30. பண்டாரப் பாட்டு - ரா.பி. சேதுப்பிள்ளை
31. திலகர் யுகத்தின் குரல் - தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்
32. புதுயுகக் கவி - பி. ஸ்ரீ
33. கடையத்தில் பாரதியின் நிகழ்வுகள்
34. ராஜீய வாழ்வு - வி. சக்கரைச் செட்டியார்
35. ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதியார் சரித்திரச் சுருக்கம் - ச. சோமசுந்தர பாரதி
36. அமரகவி பாரதி - பேராசிரியர் டாக்டர் மா. நன்னன்
37. பாரதி ஒரு முன்னுணர் ஞானி - டாக்டர் ஜி.ஆர். தாமோதரன்
38. பாரதியின் சக்தி வழிபாடு - மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார்
39. பாரதியின் இலக்கியக் கொள்கை - பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார்
40. என் கணவர் - திருமதி செல்லம்மாள்
41. கம்ப நிலை! பாரதியைக் கண்டேன் - குமரி அனந்தன்
42. பாரதியார் உட்கார்ந்த நாற்காலி - சாவி
43. பாரதியின் நினைவைப் போற்றுவோம்! - வைகோ
44. பாரதியாரின் சர்வ சமயம் - நீதிபதி எம்.எம். இஸ்மாயில்
45. காலம் கொடுத்த பரிசு - ஔவை டி.கே. ஷண்முகம்
46. எனது முதல் சந்திப்பு! - குவளை கிருஷ்ணமாச்சாரியார்
47. பாரதியாரின் நண்பர்கள் - வெ. சாமிநாத சர்மா
48. சென்றுபோன நாட்கள் - ஸ்ரீமான் ஸி. சுப்பிரமணிய பாரதி - எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு
49. இலக்கிய வீரன் - எம். ஸத்ய நாராயணா
50. பாரதி காட்டிய வழி - திருலோக சீதாராம்
51. பாரதியின் கவிதா சக்தி - ஆர். வாசுதேவ சர்மா
52. தமிழ் நெஞ்சம் மறவா பாரதி - கே.வி. ரங்கசாமி அய்யங்கார்
53. கவிஞர் போற்றிய கவிஞர் – கம்பர் - கம்பன் அடிப்பொடி சா. கணேசன்
54. கவிச் சொல் கேளீர் - சின்ன அண்ணாமலை
55. பாரதி நோக்கில் பெண்மை - தீபம் நா. பார்த்தசாரதி
56. பாரதியும் தாகூரும் - தொ.மு.சி. ரகுநாதன்
57. நாடகப் பண்புகள் - எஸ்.வி. சகஸ்ரநாமம்
58. வசன கவிதை - நா. வானமாமலை
59. பாரதியாரிடம் கரிசல் வழக்குகள் - கு. அழகிரிசாமி
60. நாம் எல்லோருமே பாரதியின் வாரிசுதான் - ஜெயகாந்தன்
61. கண்ணன் பாட்டு - எம். ராதாகிருஷ்ண பிள்ளை
62. காரைக்குடியில் பாரதியார் - வை.சு. ஷண்முகன்
63. நான் கண்ட பாரதி - தொ. பாஸ்கரத் தொண்டமான்
64. இரு கவிகள் - க. கைலாசபதி
65. பாரதியார் யாப்பிலக்கணம் நன்கு அறிந்தவர் - அ.கி. பரந்தாமனார்
66. பாரதி - சி.ஆர். ஸ்ரீநிவாசன்
67. பாரதியார் பாடல்கள் - பொ. திருகூடசுந்தரம்
68. பாரதியின் கலை இலக்கியக் கோட்பாடு - எஸ். தோதாத்ரி
69. வாஞ்சிக்குப் பயிற்சி தந்தவர் - தி.சா. ராஜு
70. பாரதியாரின் உவமைகள் - பேராசிரியர் டாக்டர் நா. பாலுசாமி
71. பாரதியும் இளங்கோவும் - பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவி
72. கண்ணன் பாட்டில் கற்பனை வளம் - கலைமாமணி
நாரண துரைக்கண்ணன்
73. மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் பாரதி - வல்லிக்கண்ணன்
74. பாரதி - கி. ராஜநாராயணன்
75. பாரதியின் தத்துவமும் இன்றைய சூழ்நிலையும் - தி.க. சிவசங்கரன்
76. மாயாவாதம் மண்ணுக்குத் தேவையில்லை - தமிழருவி மணியன்
77. பாரதியாரின் ஸர்வ ஜீவ பக்தி மதம்! - பெ.சு. மணி
79. பாட்டுத் தமிழில் பாரதி தமிழ் - கவிஞர் காசி ஆனந்தன்
80. பாரதியின் மரணம் எழுப்பும் கேள்விகள் - மாலன்
81. வந்தே மாதரம் கீதம் பிறந்த வரலாறு - சீனி. விசுவநாதன்
82. பாரதி நோக்கில் - கு. ராஜவேலு
83. இலக்கியத் தலைவன் பாரதியார் - சங்கு சுப்பிரமணியன்
84. பாரதி எனக்காக எழுதிய ஒரு பாட்டு - ச. தமிழ்ச்செல்வன்
85. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே! - டாக்டர் எஸ். பத்மநாபன்
86. பாரதி நூல்கள் முதற் பதிப்பு - ஒரு குறிப்பு - டாக்டர் விஜயபாரதி
87. துள்ளித் திரிந்த காலத்தில் நெல்லையில் பாரதி/மகாகவி பாரதி நினைவு தினம்/பாரதி மண்டபம்/எட்டையபுரம் பாரதி பிறந்த இல்லமும் தலைவர் கலைஞரும் எனது பார்வையும்... - கே.எஸ். இராதாகிருஷ்ணன்
88. பாரதியும் இதழியலும் - மணா
89. நாடும் மக்களும் நலம் பெற ஆழ்வார்கள் – பாரதி - அ. சீனிவாசன்
90. காடனும் மாடனுமாகிய தமிழரின் கருத்துருவ விளைபொருள் பாரதி - யவனிகா ஸ்ரீராம்
91. பாரதியின் பெண்ணியப் பார்வை - சுமதி ராமசுப்பிரமணியம்
92. பாரதியின் வாழ்வில் புதுச்சேரி - பாரதி வசந்தன்
93. இருளிடையே வீசிய ஒளி - மண்டயம் ஸ்ரீநிவாஸாசாரியார்
94. அன்புள்ள சி. சுப்பிரமணிய பாரதி - இரா. மோகன்
95. பாரதியின் குறும்பு - ஆர். மீனா
96. பாரதியின் கல்வியியல் தொலைநோக்கு - முனைவர் ஆ. மணவழகன்
97. புரட்சியை வரவேற்ற புதுயுகக் கவிஞர் - தி. வரதராசன்
98. கிளிபோல் பேசுக! - எம்.என். சுப்பிரமணியம்
99. பாரதி பாடல்களை மீட்டெடுத்த ஓமந்தூரார்! - எஸ். ராஜகுமாரன்
100. பாரதியார் தப்பிச் செல்ல உதவிய சென்னைப் பிரமுகர்! - மலர்மன்னன்
101. அபூர்வ ஆவணம்: பாரதி மொழிபெயர்த்த கலைச்சொற்களின் கையெழுத்துப் பிரதி - பொன் தனசேகரன் (இன்மதி)
102. இந்திய விடுதலையும் இளசைக் கவிஞனும் - பாரதி கிருஷ்ணகுமார்
103. பாரதி கனவு கண்ட பாரதம் எங்கே? - பிரேமா நந்தகுமார்
அழியாத சொற்கள்
104. அக்கினிக் குஞ்சு - முனைவர் எஸ். பாலகிருஷ்ணன்
105. பாரதியும் காங்கிரசும் - செ. திவான்
106. பாரதி ரசித்த இயற்கை - கழனியூரான்
107. பாரதி - வள்ளத்தோள் கவிதைகளில் தேசியம் - சிற்பி பாலசுப்பிரமணியம்
108. இரட்டைப் பிரசவம் - அப்துல் ரகுமான்
109. தூர தரிசனம் - மீரா
110. அதோ! இமயமலை வணக்கம் செலுத்துகிறது! - நா. காமராசன்
111. பாரதியாரின் நினைவுகள்/பாரதியாரைச் சந்தித்தது - அமுதன்
112. பாரதியார் பாமணம் - பண்டித ஜனாப் லு. அப்துல் சுகூர்
113. பாரதி ஏழையல்ல: கர்ணனே! - வ.வெ.சு. ஐயர் மனைவி பாக்கியலக்ஷ்மி அம்மாள்
114. நான் கண்ட பாரதியார் - டி. விஜயராகவாசாரியார்
115. நான் அறிந்த பாரதியார் - ஸ்ரீ வத்ஸ வெ. சோமதேவ சர்மா
116. பாரதியார் பற்றி சுதேசமித்திரன் ஆசிரியரும் ஊழியரும்
117. பாரதி நண்பர் நாராயண அய்யங்கார் - ரா.அ. பத்மநாபன்
118. நான் அறிந்த பாரதி - நாகசாமி
119. காரைக்குடியில் பாரதியார் 2 - ராய. சொக்கலிங்கம்
120. பாரதியாரை நேரில் கண்டேன் - ஏ. ரங்கநாதன்
121. பாரதி சொன்ன சின்னக் கதை - வரகவி. திரு. ஆ. சுப்ரமணிய பாரதி
122. பாரதி எதிர்பார்த்த ‘புதியதோர் தமிழ்க் கிளர்ச்சி’ - பேரா.ய. மணிகண்டன்
பாரதி மண்டப திறப்புவிழா கல்கி சிறப்பிதழ்
123. மகாகவியின் ஞாபகார்த்தம்/இதோ ஒரு அற்புதம்! - சாஸ்திரி
124. தமிழ் வளர்க்கும் கைகள் - டி.கே.சி.
125. வாழ்க அமரகவி - ஸ்ரீமதி தங்கம்மாள் பாரதி
126. பாரதி மண்டப மாலை - சுவாமி சுத்தானந்த பாரதியார்
127. அமரகவி பாரதியார்/பாரதி கைங்காரியம் - ஸ்ரீ பெரியசாமி தூரன்
128. தவமும் பலித்ததம்மா!/தெய்வத் தமிழ் நாட்டினிலே - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
129. கவிஞர் கண்ட செல்வம் - ஸ்ரீமதி செல்லம்மா பாரதி
130. வித்தகச் சித்தன் பாரதி/பாரதி பாட்டு - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
131. காசியிலிருந்து மனைவிக்குக் கடிதம் - பாரதி
132. தமிழருக்கு/கவிகளுக்கு ஞாபகச் சின்னம் - பாரதியார் திருவாக்கு
133. பாவலர் பாரதியார்- ச. சோமசுந்தர பாரதியார்
134. பாரதி விரும்பிய பாரதி - சுத்தானந்த பாரதியார்
135. மெருகிட்ட பாரதியார் - கி.வா. ஜகந்நாதன்
136. பாரதி மண்டப நிதி
கலைக்கதிர் பாரதி நூற்றாண்டு விழா சிறப்பு மலர்
137. நன்றி மறப்பது நன்று அன்று - ஜீ. வரதராஜ்
138. கண்ணன் பாட்டு - டாக்டர் தமிழண்ணல்
139. பாரதியும் அறிவியலும் - மணவை முஸ்தபா
140. கட்டுரையாளர்கள் குறிப்பு
மகாகவி பாரதி பற்றி சோவியத் நாட்டு அறிஞர்கள்
141. முகவுரை
142. சுப்பிரமணிய பாரதியின் கவிதை: இந்திய இலக்கிய வளர்ச்சியில் புதிய போக்குகளுக்கோர் எடுத்துக்காட்டு - பேராசிரியர் இ.பி. செலிஷேவ்
143. பாரதியின் தமிழில் வாக்கிய அமைப்புகள் - எம்.எஸ். ஆந்திரனோவ்
144. சோவியத் நாட்டில் பாரதியும் வள்ளத்தோளும் - விளதிமிர் ஏ. மகரெங்கோ
145. அமரகவி பாரதி - டாக்டர் வித்தாலி பி. பூர்னிக்கா
146. லெனினைப் பற்றி பாரதி - டாக்டர் வித்தாலி பி. பூர்னிக்கா
147. என்றென்றும் நிலைத்திருக்கும் விடுதலைக் கவிதை - டாக்டர் எல். புச்சிக்கினா
148. சுப்பிரமணிய பாரதி - எஸ். ஜி. ரூதின் (‘செம்பியன்’)
149. பாரதியின் கவிதைக் கலை; சில கருத்துகள் - டாக்டர் அலெக்சாந்தர் எம். துபியான்ஸ்கி
150. பாரதியின் கவிதை பற்றிய குறிப்புகள் - இரினா என். ஸ்மிர்னோவா
முகப்புரை
சென்றிடுவீர் எட்டுத்திக்கும்
கலைச் செல்வங்கள் யாவும்
கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
- பாரதியார்
விட்டு விடுதலையாக சிட்டுக் குருவியைப் போல, எட்டையபுரத்தில் பிறந்து இந்திய தேசமெங்கும் அல்லாமல் நல்ல கலையெனில் வெளிநாட்டார் வந்து வணக்கம் செய்தல் வேண்டும் எனும் தன் கூற்றினுக்கேற்ப, உலகப் புகழ் எய்திய சி. சுப்பிரமணிய பாரதியை, இன்றைய தலைமுறையினர் அறிந்தும், இன்றைய சமூகநிலை புரிந்தும் மேன்மையுறுவது அவசியம் என்றே இப்பணியை நான் சிரமேற்கொண்டேன்.
தமிழ்நாட்டின் தென்புலக் கரிசல் மண்ணில் பிறந்து தன் பாட்டுத் திறத்தாலே இவ்வையம் பாலிக்கப் பாடிய இந்தக் குடுகுடுப்பைக் கோணங்கி மறைந்து ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது. இளம்வயதில் உடல் துறந்தாலும் அவர் உள்ளம் துள்ளிய கவிதைகளும் கனவுகளும் வளர்ந்து அவற்றின் வயதும் ஒரு நூற்றாண்டைக் கடந்து வாழ்ந்து வருகிறது.
அத்தகைய பெருமகனை நம் தமிழ்கூறும் நல்லுலகத்தின் அறிஞர் பெருமக்கள் பலரும் தம்முள் நினைவுகூர்ந்து எழுதிய பலவிதமான கருத்துக் களஞ்சியங்களை ஒருசேரப் தொகுப்பது, சிதறி உருண்டோடும் நெல்லிக்கனிகளை ஓடிப் பொறுக்கி ஒரு மூட்டைக்குள் அடக்குவதற்கு ஒப்பான செயல், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக திருவனந்தபுரம், திருநெல்வேலி, எட்டையபுரம், கோவில்பட்டி, மதுரை, ஈரோடு, சென்னை, வாரணாசி வரை அலைந்து திரிந்து பலவாறாகத் தேடிச் சேகரித்த கட்டுரைகள் இத்தொகுப்பில் நூலாக்கம் பெறுகின்றன.
பாரதியார், வ.உ.சி, நேதாஜி போன்ற பலரை அவர்கள் வாழுங் காலத்தில் வாட்டி வதக்கிய சமூகக் கொடுமைகள் இன்னும் தொடர்கின்றன என்பதே என் வேதனை கலந்த அனுபவமாய் இருக்கிறது.
அடிக்கடி நான் கூறுவதுபோல சிலருக்குத் தகுதியே தடையாகி விடுகிறது. வாழும் காலத்தில் கொண்டாடப்படாமல் கைவிடப்பட்டு இறந்துபோன பாரதி. அவர் மறைந்துவிட்ட நெடுங்காலத்திற்குப் பின்பும் இறவாப்புகழ் எய்தி நிற்பதை இப்படியாகத்தான் என்னால் மீட்டெடுத்துத் தரமுடிகிறது. சிரஞ்சீவியான முண்டாசுக் கவி, என்றும் நிரந்தரமான எங்கள் கரிசல் காட்டில் பிறந்த அமரகவிக்குச் செய்யும் தொண்டாகவும், தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு ஒரு அருட்கொடையாகவும் இந்நூலை அளிப்பதில் மகிழ்வடைகிறேன்.
கடந்த காலத்தில், அதாவது பாரதியாரின் 125ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்களின்போது ரஷ்யப் பண்பாட்டு மையத்தில் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்கள் முன்னிலையில்
பழ. நெடுமாறன், எஸ்.ஏ. பெருமாள், வை.கோ, ஜெயகாந்தன், நடிகர் சிவக்குமார், பாரதி பாஸ்கர், பாரதியின் குடும்பத்தினர் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்நூல் சிறிய அளவு புத்தகமாக வெளியிடப்பட்டது. இப்போது அதனுடன் பல ஆளுமைகளின் கட்டுரைகளையும் இணைத்து செம்பதிப்பாக இந்நூல் வெளி வந்திருக்கிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்நூல் வெளிவர எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள் சிலரை இங்கு குறிப்பிடுவது அவசியம் என்று கருதுகிறேன்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான கோவில்பட்டி சோ. அழகிரிசாமி, ஞானபீடம் விருது பெற்ற எழுத்தாளர் அகிலன், நா. பார்த்தசாரதி, தொ.மு.சி. ரகுநாதன், திரவியம் ஐ.ஏ.எஸ்,
தி.க. சிவசங்கரன், வல்லிக்கண்ணன், தோப்பில் முகமது மீரான், கு. அழகர்சாமி அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் கிருஷ்ணசாமி பாரதி, கோவில்பட்டி பேராசிரியர் சங்கர வள்ளி நாயகம், மீ.ப. சோமு, நடிகர் சகஸ்ரநாமம், தமிழக முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பி.ஜி. கருத்திருமன், கவிஞர் மீரா போன்றவர்கள் இந்நூலின் நெடுங்கணக்கில் இணைந்தவர்கள் என்பதில் உவகை கொள்கிறேன்.
***
இந்தியாவின் ஈடு இணையற்ற பாரததேசத்தின் பாடகன் கவிஞர் பாரதியாரின் இத்தொகுப்பு நூலுக்கு, இன்றைய பின் நவீனப் போக்குகள் நிலவும் சமகால இலக்கியத்தின் அங்கமாகவும் திகழும் புதுக்கவிஞர் யவனிகா ஸ்ரீராம் அவர்கள் எழுதிய பாரதியார் குறித்த கவிதையினை இப்பதிப்புரையில் இணைப்பது காலப் பொருத்தமாகிறது.
பேசாப் பொருளைப் பேச வந்தவன்
வடக்கின் வெள்ளிப்பனிமலை தொட்டு
தெற்கின் மலைச்சாரல்களில் எந்நாளும் நனைந்து வாழும்
சிந்து நதி தீபகற்பத்தை தமிழால் மொழி விரித்து
வேற்றுமொழித் தர்க்கங்களுக்கு
அப்பால் மனம் தரித்து
கூத்தாடிய கோணங்கி குடுகுடுப்பைக்காரா
பாரதி வாழ்க நீ எம்மான்
தேசம் குறித்து ஒரு பைத்தியக்காரன் பாடினான் என்றார்கள்
நான் பிறக்காத இடம்
கும்பினியர் பெருங்கலங்களில் தேசத்தைச்
சுருட்டிப்போன காலம்
நல்லதோர் வீணையென்றான் அங்கே
புழுதியில் ஒரு புயற்காற்று எழும்பியது.
ஆயிரம் இங்குண்டு சாதியென்கிறான் அங்கே
ஆகுதியில் அக்கினிக்குஞ்சுகள் அலைபுரண்டன
பாரதி வாழ்க நீ எம்மான்
பற்றிய விடுதலையை
பாராமலேயே ஆனந்தச் சுதந்திரம்
அறிவித்த ஆன்ம ஞானி
வறுமை வாட்டியபோதும்
யுகப்புரட்சிக்கு களிநடனம் புரிந்தாய்
உன்னை ஞானக்கிறுக்கன் என்பார்கள்
உருக்கும் உடலம் ஒளிமிகுந்த கண்கள்
நிலத்தில் யாருக்கும் அஞ்சாத
செருக்கும் நீள் விசும்பில் தமிழே ஈன்றெடுத்த துவராடை நீ
ஒற்றுமையின் மட்டம் உயரும் போது உள்ளத்துள் நல் ஆம்பலும்
உயரும் என்றவனே
உன்னைப் பாடிப் போனார்கள்
தடியடி சிறைவாசம்
கண்ணீர்விட்டா வளர்த்தோம் எனச்
செந்நீர்ப்பயிர் வளர்த்து செகத்தோரிடைப்
பேசாப் பொருளைப் பேச வந்தவனே
எம்மான் வாழ்க நீ பாரதி
இன்று
நம்பத்தான் முடியவில்லை உண்மையில்
நீதான் காட்சிப் பிழையோ
இல்லை மானுடத் தோற்ற மயக்கமா
இருந்தாய் சிலகாலம் என்கிறார்கள்.
நானும்தான் தமிழெடுத்தேன்
கலங்கள் போன வழியில் மறுபடியும் வணிகப்புலங்கள்
உள்நுழைந்த காலத்தில்
நீ மனித மந்தையில் ஒற்றுமைக் குரலெழுப்பி
மானுடச்சிந்தனையில் அகப்பொருளானாய்
உந்தையும் தாயும் கூடிக்குலாவிய நாட்டில் இன்று
சந்தையில் வாடும் எண்ணற்ற கந்தைபராரிகளை கையில் எடுத்து
கண்ணில் காட்டும் புறப்பொருளானேன்
நீ எம்மான் வாழ்க பாரதி
வாழ்விழந்தோர் வாசலில் காவலிருந்தோர் காலம் முடிந்து
தாழ்வும் உயர்வும் தனித்தனிப் பொருளாயிற்று
ஞாலம் மிகுந்து வருகிறதோ இல்லையோ
ஜாலங்கள் மயக்கும்
சட்டங்கள் வியக்கும் காலம் இது
நூற்றாண்டுப் பொருள் விட்டுப் போயிருக்கிறாய்
மாற்றுகள் தோன்றி மகிழவேண்டிய நாளில்
இங்கே
கல்லில் நார் உரிக்கிறார்கள்
கடைவிரித்து தோல் உரிக்கிறார்கள்
இதுவும் கடந்து
இன்னொரு யுகம் உண்டெனில்
உன்னிடம் சொல்லெடுத்து ஓடிக் கைமாற்றி
இன்னொரு சுதந்திரம் வேண்டத்தான்
வேண்டும்
உன் கைப்பொருள் பராசக்தியின்
கடைக்கண்ணில் இன்னும் வழிகிறது உன் பாடல்
இத்தீபகற்பத்தின் ஒளிக்கு அதுவே என்றென்றும்
இருள் நீக்கும் எரிபொருள்
இருபெரும் நூற்றாண்டின் இடையில்
தோன்றி முதுமை காணாது முதிர்ந்த ஞானமே நட்ட நல்விதையே
எங்கள் பாடாண்திணையே படைப்பில் நீங்கா
பறவைக்குணமே!
வாழ்க பாரதி எம்மான்!!
பாரதி பற்றிய புரிதல் இளம் காலம் தொட்டு ஏற்பட்டது. எட்டையபுரம் கிராமத்தின் அருகில் இருந்ததால் அதிகம் பாரதி பெயர் உச்சரிப்புகள் குழந்தைப் பருவக் காலம் தொட்டுக் கேட்க முடிந்தது.
நான் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட காலமான 1989-ல் எட்டயபுரம் சென்னையில் பாரதி பிறந்தநாள், அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருவது வழக்கம்.
அந்தத் தேர்தலில் எட்டயபுரத்தில் பாரதி நினைவாக நாட்டுப்புறக் கலைகள், பாரதி நினைவான ஆய்வுகள் நடத்த அகாடமி அமைக்கப்படும் என உறுதி அளித்தேன். ஆனால் வெற்றிவாய்ப்பு இருமுறையும் தேர்தலில் கிடைக்கவில்லை.
பிரதமர் மோடி அறிவித்த பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதி இருக்கை அமைக்க, கடந்த 2007ல் முயற்சி எடுத்தது. அங்கு பணியாற்றிய முனைவர் விஸ்வநாத பாண்டேவை நன்கு தெரியும்.
பாரதி எங்கள் கரிசல் மண்ணின் அடையாளம். வானம் பார்த்த பூமியாக என்றும் போராட்டக் களமாக இப்பகுதி இருக்க, பாரதி, வ.உ.சி, சுப்பிரமணியம் சிவாவிலிருந்து துவங்கிய நாட்டின் விடுதலைப் போராட்டம் சி. நாராயணசாமி நாயுடு தலைமையில் நடந்த விவசாய போராட்டங்கள் வரை உயிரோட்டமான நிகழ்வுகள் என்றும் வரலாற்றில் இருக்கிறது.
இந்நூல் வெளிவர உதவியாக இருந்த மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சோ. அழகிரிசாமி, இளசை அருணா, டாக்டர் குமார் ராஜேந்திரன், மாரீஸ் (கோவில்பட்டி) மற்றும் எட்டையபுரம் பாரதி மணிமண்டப பொறுப்பாளர்கள், திருவனந்தபுரத்தில் சிலதரவுகள் கிடைக்க உதவியாக இருந்த மறைந்த கவிஞர் நகுலன் ஆகியோருக்கு நன்றி.
தொடர்ந்து உலகமயமாக்கலின் இன்றைய சமன்பாடற்ற நிலையிலும் நீடித்து வாழும் தகுதியானவர்களும் அதற்காக தங்களது அறம் சார்ந்த உழைப்பைக் கொடுப்பவர்களும் காசினியில் இன்புற்று வாழ வாழ்த்தும்
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
வழக்கறிஞர்,
அரசியலார்,
பொதிகை – பொருநை – கரிசல்
கதைசொல்லி
முகாம்: கோவில்பட்டி
நாள்: 01.12.2021
நன்றி
மறைந்த சோ. அழகர்சாமி
சட்டமன்ற முன்னாள் உறுப்பினர், கோவில்பட்டி
மறைந்த தி.க. சிவசங்கரன்
திருநெல்வேலி
நந்தன் மாசிலாமணி
கலைஞன் பதிப்பகம்
டாக்டர் குமார் ராஜேந்திரன்
இளசை அருணா
எட்டையபுரம்
மறைந்த சுப.கோ. நாராயணசாமி
நாச்சியார்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர்
மாரீஸ்
கோவில்பட்டி
ராஜேஷ் தேவதாஸ்
புஸ்தகா, பெங்களூர்
பாரதி மண்டபம்,
பாரதி நினைவு இல்லம்
எட்டையபுரம்
மறைந்த ஆனந்த ராமகிருஷ்ண ராஜா
கோவில்பட்டி
ஆசிரியர் அரசு சின்னசாமி
மேல நீலித நல்லூர்
1. உண்மைக் கவி/சுப்ரமண்ய பாரதி - ராஜாஜி
ஒரு நாட்டில் கவிகளின் பெருமையை அறிந்து பாராட்டி ஞாபகச் சின்னம் அமைப்பதற்கு வெகுகாலம் செல்லும். ஆனால், பாரதியாருக்கு இவ்வளவு சீக்கிரத்திலேயே ஞாபகச் சின்னம் ஏற்படுத்துவது, நமது நாடு கெட்டுப் போகவில்லை, மக்களிடையே சிறந்த உணர்ச்சி இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
***
சிலர் குழந்தைகளைப் பார்த்து ‘உனக்கு அப்பா வேண்டுமா? அம்மா வேண்டுமா?’ என்று கேட்பதுண்டு. அது தவறு. அது போலவே, கவிகளில் எந்தக் கவி உயர்ந்தவர் என்று விவாதிப்பதும் தவறு. ‘கம்பர் உயர்ந்தவரா, பாரதி உயர்ந்தவரா’ என்றெல்லாம் விவாதிக்கக் கூடாது. நமக்குக் கம்பரும் வேண்டும்; பாரதியும் வேண்டும். உண்மைக் கவி எவர் என்று தெரிந்து கொண்டு, எல்லாக் கவிகளையும் அநுபவிக்க வேண்டும்.
***
பாரதியார் உண்மையான கவி. அவர் எத்தனையோ மணமுள்ள கவிதை மலர்களைச் சிருஷ்டித்து நமக்குக் கொடுத்திருக்கிறார். தேசத்துக்கு அவசியமான எல்லா விஷயங்களையும் பற்றி அவர் பாடியிருக்கிறார். அவர் தொடாத விஷயம் ஒன்றுகூட இல்லை. ஆனால், பாரதியார் எதைப் பற்றிப் பாடினார் என்பதைக் காட்டிலும், அவர் ஒரு கவி என்பதுதான் மகத்தான விஷயம். முக்கியமாக, நம் காலத்தில் பாரதியார் பிறந்து பாடியதனால், இந்தத் தமிழ் ஜாதியின் சக்தி அவிந்துவிடவில்லையென்பது நிச்சயமாய்த் தெரிகிறது. அப்பேர்ப்பட்ட கவியின் ஞாபகத்தை நாம் என்றென்றைக்கும் போற்ற வேண்டும். அப்படிப் போற்றுவதினால் இன்னும் பல கவிகள் தமிழ்நாட்டில் தோன்றக் கூடும்.
(1945-ம் வருஷம் ஜூன் மாதம் 2, 3 தேதிகளில் எட்டையபுரத்தில் நடந்த பாரதி மண்டப அஸ்திவாரக்கல் நாட்டு விழாவின் போது நமது தலைவர் ராஜாஜி கூறியது.)
சுப்ரமண்ய பாரதி - ராஜாஜி
பண்டை நாட்களில் மகரிஷி வியாசரும் வால்மீகி முனிவரும் எவ்வாறு மனித இனத்தின் வளர்ச்சிக்கும் பண்பாட்டிற்கும் சேவை செய்தார்களோ, அதேபோன்று சிறப்புமிக்க முறையில் மகாகவி பாரதியார் சமீப காலத்தில் தமிழர்களுக்குச் சேவை செய்துள்ளார். பாரதியாரின் கவிதைகளைப் படிக்க எல்லைக்கோடு என்பதேயில்லை. படிக்கப் படிக்கத் தெவிட்டாத இனிமையையும், அதன் பலனையும் உணரலாம்.
பாரதி, ஆன்ம ஒளி கொண்ட தமிழராகப் பிறந்து துயில் நிலையிலிருந்த நம்முடைய விழிப்புணர்ச்சியைத் தம் கவிதைகளினால் எழுப்பி விட்டார். அவர் உண்டாக்கிய விழிப்பின் மூலம் சுயநல எண்ணத்தினின்று விடுபட்டு, நாட்டின், சுபிட்சத்தைப்பற்றி நாம் எண்ணலானோம். தமிழர்களாகிய நாம் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் பெற்று, சுதந்திரப் போராட்டத்தில் நமக்கு ஒரு சிறந்த இடம் பெற முடிந்ததற்குப் பாரதியாரே காரணமானவர். பாரதியை நினைத்துச் சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பணியாற்றுவோமாக.
நன்றி: கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம்
ஆதாரம்: Essays on Bharati – Vol II
2. பாரதியும் தேச பக்தியும் - தமிழ்த்தென்றல் திரு.வி.க.
இந்நாளில் தமிழ்நாட்டில் தமிழ்ப் பெரும் பாவலராயிலங்கிப் புகழுடல் தாங்கிய ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியாரைப் பற்றி அறியாத தமிழறிஞர் இருத்தல் அரிது. சுப்பிரமணிய பாரதியாரைச் தேசபக்தர் சுப்பிரமணிய பாரதியார் என்று சொல்வது வழக்கம் தேசபக்தி இஃது என்னும் உண்மை கண்டவருள் பாரதியாரும் ஒருவர்.
ஸ்ரீ பாரதியார் தேச பக்தியின் இயல்பைப் பலவாறு பாக்களால் ஓதியிருக்கிறார். அவர் பாடல்களை நேயர்கள் ஓதுவதோடு நில்லாது அவைகளைத் துருவித் துருவி ஆராய்தல் வேண்டும். ஆராய்ந்தால் தேசபக்திக்குரிய செம்பொருள் பல காணலாம். அவைகளை அகழ்ந்தெடுத்துப் புலவர்கள் சொற்பொழிவுகள் வாயிலாகவும், கட்டுரைகள் வாயிலாகவும் நாட் டார்க்கு அறிவுறுத்தல் நல்லது. அது நாட்டிடைத் தேச பக்தியை வளர்ப்பதாகும். சிறப்பாக நமது நாட்டுக்கு இப்பொழுது அத்தகைப் போதனை மிக மிக இன்றியமையாதது. தேசபக்தியை வீழ்த்தும். பலதிறக் கிளர்ச்சிகள் தலைவிரித்தாடும் இந்நாளில் பாரதியார் பாடல்களின் உள்ளக்கிடக்கைகளை நாட்டில் உலவச் செய்ய வேண்டுவது அறிஞர் கடமை.
நாட்டிற் பலதிற அறிஞர்கள் தோன்றுகிறார். ஒவ்வோர் அறிஞர் ஒவ்வொரு துறையில் நாட்டை ஓம்புகிறார். அவை எல்லாவற்றையும் வளர்ப்பவர் பாவலரேயாவர். தொழிலாளிடத்துத் தொழிலைக் காணலாம். வீரரிடத்து வீரத்தைக் காணலாம். மற்றவரிடத்து மற்ற மற்றக் கலைகளைத் தனித்தனியே காணலாம். பாவலரிடத்திலோ எல்லாவற்றையும் காணலாம். கம்பன் பாடிய இராமாயணத்தில் என்ன இல்லை? உலகமே இருக்கிறது என்று சுருங்கச் சொல்லலாம். எனவே, தேசம் பாவலரிடத்திருப்பது என்று கூறுவது மிகையாகாது. ஒரு தேசம் உரிமையிழந்து குலைந்தழியும் வேளையில் அதற்கு உரிமை வழங்கும் ஆற்றல் பாவலர்க்குண்டு, பாவலர் வீரரினுஞ் சிறந்தவர். அதைப் பற்றி ஆராய ஈண்டுப் புகவேண்டுவதில்லை. உரிமையைப் பற்றியும் பிறவற்றைப் பற்றியும் பாவலர்கள் பாடிய பாடல்கள் நமது கூற்றை வலியுறுத்தும்.
பாரதியார் எத்துறை நின்று நாட்டுக்கு உழைத்தார்? செந்தமிழ்ப் பாக்களைப் பாடி அவர் தேசத்தின் கண்ணைத் திறந்தார். தேசத்தின் பல கலைகளாம் பயிர்களை வளர்க்கச் செய்யும் உரிமைப் பாடல்களாம் அருவி, பாரதி என்னும் மலைவாயினின்றும் இழிந்தது. தேசக் கலைகளிடத்துக் கருத்தமையாது ‘தேசம் தேசம்’ என்று கூவுவது காக்கைக் கூட்டக் கூச்சலேயாகும். பாரதியார் பாடல்களில் தேச பக்தி ததும்புவதற்குக் காரணம் அவர் தேசக் கலைகள் மீது கொண்ட பக்தியாகும்.
***
நாட்டு மொழியும், அதனால் ஆகிய பனுவல்களும் தேச பக்திக்கு அடிப்படை. பாரதியார் அவ்விரண்டையும் பற்றி உரைத்துள்ள கருத்துகள் அவரது தேசபக்தியை விளங்கச் செய்வன. மொழி காவியங்களோடு வேறு கலைகளும் தேச பக்தியை எழுப்பும். அவைகளைப் பற்றியும் பாரதியார் பலபடக் கூறியிருக்கிறார். அவைகளில் இரண்டொன்று வருமாறு:
"மாதர் தீங்குரற் பாட்டி லிருப்பாள்
மக்கள் பேசும் மழலையி னுள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியி னாவை யிருப்பிடங் கொண்டாள்
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
சூலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்"
"வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழு மாந்தர் குலதெய்வ மாவாள்
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர் தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிபஞ் செய்வோர்
வீர மன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடும் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம்"
காவியங்களும், மற்றக் கலைகளும், தொழில் முறைகளும் சேர்ந்த ஒன்றே தேசம் என்று உன்னி அவைகளின்மீது அன்பு கொண்டு அவைகளின் வளர்ச்சிக்குப் பாடுபடுவது தேசபக்திக்கு அறிகுறி ஆகும். நாட்டுக் கலைகள் மீது பற்றின்றித் தேசத்தின்மீது செலுத்தும் பக்தி பொருளற்றதென்க. பாரதியார் நாட்டுக் கலைகளின்மீது சொல்லொணா ஆர்வம் உடையவராதலின்,
"செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே"
என்றார்.
தேசத்தில் தோன்றிய மக்களுள் உயர்வுதாழ்வு பாராட்டி வாழ்தலுந் தேசபக்தியாகாது. நமது நாட்டில் சாதி பேதத்தால் சாதி பக்தி நிலவுகிறதேயன்றித் தேசபக்தி நிலவுதல் அரிதாக இருக்கிறது. அன்பிற் சிறந்த பாரதியார்க்கோ சாதி பக்தி தோன்றியதில்லை. தேசக் கலையுணர்ந்த ஒருவர்க்குச் சாதி பக்தி எங்ஙனந் தோன்றும்? பாரதியாரைத் தேசபக்தியே விழுங்கி நின்றது.
மொழிப்பற்று, கலைவளர்ச்சி, சமத்துவம், பெண்ணடிமை நீக்கம் முதலியவற்றைப் பொருளாகக் கொண்ட துறைகள் வழி நின்று, பாட்டு வாயிலாகத் தேசபக்தி செலுத்தி வந்தவர் தாம் பாரதியார். இக்கால உரிமையுணர்ச்சிக்கு இன்றியமையாத தேசபக்திக்குப் பாரதியார் பாடல்கள் ஊற்றாயிருக்கின்றன. பாரதியார் பாடல் வாயிலாகத் தேசபக்தி இத்தகயது என்பதை உணர்தல் கூடும். அவ்வழி நின்று தமிழர் தேச பக்தியை வளர்ப்பாராக.
3. இதய ஒலி - பெருந்தலைவர் காமராஜர்
பாரதியார் பாமரமக்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பிய மாபெரும் கவிஞர். அடிமைத்தளையிலே சிக்குண்டு அச்சம் நிறைந்த நெஞ்சோடு பதுங்கிக்கிடந்த நம் தமிழ்ப் பெருமக்களை, ஆண்மை கொண்டு ‘அச்சம் இல்லை, அச்சம் இல்லை’ என்ற வெற்றி முரசு கொட்டிப் போராட்டத்திலே குதிக்கச் செய்தவர். சுதந்திரம் வெறும் கற்பனையல்ல; அதை நாம் அடைந்தே தீருவோம் என்ற நம்பிக்கையை அனைவரின் மனத்திலும் ஒன்றச் செய்தவர். அதோடு மட்டுமல்லாமல் சுதந்திரம் பெற்ற மக்கள் எவ்வாறு களிப்போடு வாழ்வார்கள் என்பதையும் தம்முடைய கற்பனைக் கண்ணால் கண்டு களித்து மற்றவர்களும் களிப்படையச் செய்த மாபெரும் கவிஞர். ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ என்ற பாட்டை அறியாதவர்கள் நம்மில் யார் இருக்கின்றார்கள்?
சுதந்திரம் பெற்றபின்னர், பெற்ற சுதந்திரத்தின் பெருமையை மட்டும் எண்ணி எண்ணி நாம் பூரித்து இருக்க முடியாது. அதனால் நமது நாடும் நாம் நினைத்தவாறு பற்பல துறையிலும் செழிப்படையாது. வளம் பெருகுவதற்கான ஆக்கத் திட்டங்கள் பலவற்றையும் நாம் வகுக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த கவிஞர், அதனையும் வலியுறுத்திப் பாடியுள்ளார்.
"காவியம்செய் வோம், நல்ல காடுவளர்ப்போம்;
கலைவளர்ப்போம், கொல்ல ருலை வளர்ப்போம்,
ஓவியம் செய் வோம், நல்லஊசிகள்செய் வோம்;
உலகத் தொழி லனைத்தும் உவந்து செய்வோம்"
என்ற பாடல் சுதந்திரம் பெற்ற நாடு ஆற்றவேண்டிய பணியையும் அருமையாக விளக்குகின்றது.
சமூகத்தில் மண்டிக்கிடக்கும் எல்லா அநீதிகளைப் பற்றியும், மூடப் பழக்க வழக்கங்களையும் அவர் குறிப்பிட்டு அவைகளைப் போக்க வேண்டிய அவசியத்தையும் பாடியுள்ளார். பழமைக்கு ஒரு புதிய மெருகேற்றி அதைப் பாஞ்சாலி சபதமாக நமக்குக் கொடுத்துள்ளார். நாம் அனைவரும் கற்பனையில் திளைப்பதற்காகக் குயில் பாட்டையும் பாடியுள்ளார். இன்னும் கடவுள், வேதாந்தம், பெண் விடுதலை முதலிய எல்லாவற்றைப் பற்றியும் அவர் பாடியுள்ளார். அவர் பாடாத துறை எதுவுமே இல்லை என்று சொல்லலாம்.
இவ்வாறு மக்களின் வாழ்க்கைத் துறையைப் பல கோணங்களிலிருந்து பார்த்து, அதை வளமூட்டும் வழிகளையும் பாடிய பாரதியாரின் புகழ் விளங்கப் பாடுபடுவது நம்முடைய கடமையாகும்.
4. பாரதி பாதை/ பாரதியார் பற்றி அண்ணா கூறியது என்ன? - அறிஞர் அண்ணா
எட்டையபுரத்திலே, தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியாருக்கு, அழகிய மண்டபம் அமைத்துச் சீரிய முறையில் விழா நடத்தினர். பரங்கியாட்சியை ஒழித்தாக வேண்டுமென்ற ஆர்வக்கொழுந்து விட்டெரியும் உள்ளத்துடன் வாழ்ந்தவர் பாரதியார். தாயகத்தில் உலவத் துரைத்தனத்தார் தடை விதித்ததால், புதுவையில் தங்கிப், புதுப்பாதை வகுத்தார் பாரதியார். அவருக்குக் காணிக்கை செலுத்த ஆட்சி அலுப்பையும் பொருட்படுத்தாது, ஆச்சாரியார் வந்தார். ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடினர். இசைவாணர்கள், கலைவாணர்கள், எழுத்தாளர்கள் பற்பலர் கூடினர்.
‘கல்கி’ ஆசிரியர், இப்பணியினைத் திறம்பட நடத்தி முடித்தார். விழாச் சொற் பொழிவுகளில், நாவலர் பாரதியார், சிவஞானக் கிராமணியார், ஜீவானந்தம், நாமக்கல்லார், எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ. தூரன் ஆகிய பலரும் கலந்து கொண்டனர்.
நண்பர் சிவஞானம் பெருமிதத்துடன் கூறினார்: அதிகாரமற்ற கரம் அஸ்திவாரக்கல் நாட்டுகிறதே என்று, முன்பு ஆயாசப் பட்டேன். இன்றோ, ஆளும் கரம், மணி மண்டபத்தைத் திறந்து வைத்தது கண்டு அகமகிழ்கிறேன்
என்ற உண்மை. வங்கமாளும் ஆச்சாரியார், மணிமண்டபத்தைத் திறந்தார். வறுமையாளராகக் கவனிப்பாரற்று, நாடு கடத்தப்பட்டு நலிவுற்றிருந்த பாரதியாருக்கு நாடு மே 8 ஆம் கொண்டாடும் அளவினதான விழா நடந்தேறியது.
பாரதியாரின் கவிதைத் திறன், அதனாலாய பயன், மறுக்க முடியாதன. பாரதியாரின் தனிப்பண்புகளை அவரை, அந் நாளில் அறிந்தவர்கள் கூறிடக் கேட்டால், புது உலகு காண விழைபவர்களின் அகமெலாம் மகிழும்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், பாரதியாரைக் குறித்துப் பேச ஆரம்பித்தால், அவருடைய கண்களிலே ஓர் புத்தொளி தோன்றிடக் காணலாம்.
பாரதியாரின் காலம் வேறு; இக்காலம் வேறு. எனவே, இன்றுள்ள எண்ணங்களையெல்லாம் அவர் அன்றே ஆய்ந்தறிந்து கூறியிருக்க வேண்டுமென்றே, நாம் எடுத்துரைப்பதும், வரலாற்று உண்மையுமான ஆரிய - திராவிடப் பிரச்சினையை அவர் கூறியிருக்க வேண்டுமென்றே நாம் எதிர்பார்ப்பதற்கில்லை. அவருடைய பாடல்களிலே பல இடங்களில், அவர், ‘ஆரியர்’ என்ற சொல்லை, உயர்த்தியேதான் பாடி இருக்கிறார். அந்தக் காலம் நாமெல்லாம் பள்ளிகளில் ‘ஆரிய மத உபாக்கியானம்’ எனும் ஏட்டினைப் பாடமாகப் படித்த காலம். நம் தலைவர், தமிழ் நாட்டுக் காங்கிரசிலே பெருந்தலைவராக இருந்த காலம்.
ஆரியர் - திராவிடர் பிரச்சினை, ஓர் ஆராய்ச்சி - வரலாறு, இதனை நாம், பாரதியாரிடம் காண்பதற்கில்லை.
ஆரியம் என்பது, ஓர் வகைக் கலாச்சாரம் - வாழ்க்கைமுறை.
திராவிடம், அதுபோன்றே, தனியானதொரு வாழ்க்கை முறை.
இது, இன்று விளக்கமாக்கப்படுவதுபோல, பாரதியாரின் நாட்களில் கிடையாது. பல ஜாதி - பல தெய்வ வணக்கம் - பற்பல விதமான மூட நம்பிக்கைகள் - தெய்வத்தின் பெயர் கூறித் தேசத்தின் பொருளைப் பாழாக்கும் கேடு - இவை தாம் ஆரியம்.
‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ இது திராவிடம்.
இரண்டிலே எது நல்லது? எந்தக் கலாச்சாரத்துக்கு நீர் ஆதரவு தருவீர்? என்று பாரதியாரைக் கேட்க, யாருக்கும் வாய்ப்பில்லை. கேட்டிருந்தால், நிச்சயமாக அவர் திராவிடக் கலாச்சாரத்தையே விரும்பியிருப்பார். அவருடைய பாடல்களில் - பிற்காலப் பகுதிகளில் - இந்தச் சூழ்நிலை இருக்கக் காணலாம்.
பாரதியார் விஷயத்தில் பகுத்தறிவாளர்களுக்குள்ள மதிப்பு, முதலில், பரம்பரை வழக்கப்படி அவர் தேவியின் வரப்பிரசாதம் பெற்றதாலோ, முனிவர் அருளாலோ, பஞ்சாட்சர உபதேசப் பலனாலோ, பாட ஆரம்பித்தார் என்று அருட்கவியாக்காது விட்டார்களே, அதுதான்.
நாமகளைத் துதித்தார் - நாலைந்து ஆண்டு - பலன் இல்லை,
பிறகோர் நாள், ‘அம்மே! இனி நான் உயிர் வாழேன்’ என்று கூறி நாவை அறுத்துக் கொள்ளக் கிளம்பினார்.
உடனே களுக்கென ஒரு சிரிப்பொலி கேட்டது; அம்மை பிரசன்னமாகி, பாலகா பாடு!
என்றாள். உடனே அவர் பாடலானார் - பாடினார். பாடினார், பார் முழுதும் பாடல் பரவும் வரை பாடினார் என்று, பாரதியார் புராணம் கட்டாதவரையில், நமக்கெல்லாம் மிகக் களிப்பு! நமக்குக் களிப்பு என்பது மட்டுமல்ல, பாரதியாருக்கே உண்மையில் பெருமை.
அவர் நாமகள் பூமகள் அல்லது வேறொர் தேவனின் அருள் பெற்றவரல்லர். அவர் ஓர் கவி, சிந்தனையில் பட்டதைச் செந்தமிழில் கவிதையாக்கினவர் என்பதனால்தான், கூடுமான வரையில், பாரதி விழாச் சொற்பொழிவாளர்கள் அவருடைய அருமை பெருமைகளை எடுத்துரைக்கையில், ‘புராணம்’ பேசாதிருந்தது பற்றி நாம் மகிழ்கிறோம்.
அன்பர் ஆச்சாரியார் மட்டும், பாரதியாரை, ஓர் ‘முனிவர்’ என்று கூறினார். ஆனால் அதற்கும் அவர் வழக்கமான பொருள் கூறத் துணியார்.
பாரதியாருக்குள்ள பெருமை, முதலில் இது, மற்றோர் பெருமை, அவர், தம்முடைய நாட்களிலே, மற்றவர்களைவிட வேகமாக முன்னேற்றக் கருத்துகளைப் பாடி, அதன் பயனாக அவருடைய சமூகத்தாராலேயே வெறுக்கப்பட்டு, ‘பார்ப்பன மேதைகள்’ என்போரால் அலட்சியப்படுத்தப்பட்டு, வறுமையில் வாடி, அன்னிய ஆட்சியாளரின் அடக்குமுறைக்கு ஆளாகி, அல்லலை அனுபவித்து, அந்த அல்லலால் மனம் உடையாமல், நோக்கம் மாறாமல் அரைக்க அரைக்க மணக்கும் சந்தனமானாரே, அந்தப் பண்பு அவருடைய பண்பு, ஜாதிக்கட்டுகளை உடைத்தெறியக் கூடியதாக இருந்தது என்பது அவருடைய கவிதைகளிலே பல ரசமான இடங்களில் தெரிகிறது.
அவருடைய நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் அந்த நாட்களில் நையாண்டி செய்யப்பட்டது. இன்று, அவருக்கு மகாகவி என்ற பட்டம் தரவும், பளிங்கு மண்டபம் கட்டவும் தமிழகம் முன் வந்தது.
கவிஞரைப் போற்றும் மாண்புக்கும், அதைக் கவர்ச்சிகரமான முறையிலே நடத்திக் காட்டிய கல்கியின் திறமைக்கும், நமது பாராட்டுதல்.
பாரதி மண்டபத்தை, விழாவுக்காகப் போடப்பட்ட பந்தல் மறைத்துக் கொண்டிருக்கிறது
என்று, அன்று ஆச்சாரியார் பேசினார். பந்தல் மறைப்பது மண்டபத்தை மட்டுமல்ல! தேசியக் கவிதைகள் என்ற ஒரு பகுதியை மட்டுமே பெரிதாக்கி நாட்டிலே பரப்பிக் காட்டுவதால் பாரதியாரின் முழு உருவம், மக்களின் கண்களுக்குத் தெரிய வொட்டாதபடி மறைக்கப்படுகிறது!
பாரதியார், தோத்திரப் பாடல்கள் பல பாடினார். ஆனால், தேவார திருவாசகமும் திருவாய் மொழியும் பாடியானபிறகு பாடினார். எனவே, அவருடைய கவிதைகளிலே, தோத்திரப்பகுதி முக்கியமோ, அவருடைய பெருமைக்குச் சான்றோ ஆகாது, வைதீகர்களின் நோக்கத்தின்படியே கூட.
பாரதியார், வேதாந்தப் பாடல்கள் பல பாடியுள்ளார். ஆனால் அவருக்கு முன்னர்த் தாயுமானாரும் வள்ளலாரும் பாடிவிட்டனர். எனவே, அந்தப் பகுதியும் பழம் பதிப்புப் போன்றதுதான்.
அவருடைய நாட்டுப்பற்றுப் பாடலே, அவருடைய கவிதைகளில் மிக முக்கியமான - மற்றக் கவிகள் பாடாத காலத்திற்கேற்ற, பலன் அளித்த பகுதி.
விடுதலைப்போர் புரிய அவருடைய கவிதைகள் தக்க கருவியாயின. எனவேதான், வெள்ளையன் வெளியேறிய விழாவுக்கு அடுத்ததாக, பாரதி மண்டபத் திறப்புவிழா நடைபெற்றது.
ஆச்சாரியார் சொன்னார், அன்னிய ஆட்சியை எதிர்த்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல கவிகள் பாடல்கள் இயற்றினர். தமிழர்களுக்கு தமிழ்க் கவிதானே பயன் பட முடியும்? பாரதியார், அந்த வகையிலே தமிழருக்குப் பயன் பட்டார்
என்று.
ஆகவே, பாரதியாரின் பக்திப்பாடல், வேதாந்தப் பாடல் இவைகளைவிட, நாட்டுப்பற்றுப் பாடலே மகத்தான பலன் தந்தது! விழாக் கொண்டாடின அன்பர்கள் இந்தப் பகுதியைத்தான் விளக்கினார்கள் விஸ்தாரமாக. மதுரை முஸ்லிம் தோழர் ஒருவர் பாரதியாரின் பாடல் ஆங்கிலேயரை ஓட்டிய அணுக்குண்டு
என்று கூறினார். தமிழகத்திலே காங்கிரசின் வெற்றிக்குப் பாரதியார் பாடல் மிக மிகத் தாராளமாகப் பயன்பட்டது. பயன்படுத்திக் கொண்டு பாராளும் அளவு உயர்ந்த பலர், பாரதியாரை ஏதோ ஒரு சமயத்திலே மட்டும் எண்ணுவதுடன் இருந்தனர். இக்குறையைப் போக்கி, கவிஞரின் நினைவுக்குறியாக ஓர் அழகிய மண்டபத்தை அமைத்தார் கல்கி.
ஆச்சாரியார் சொன்னாரே பந்தல் மண்டபத்தை மறைக்கிறது
என்று. அதுபோல, பாரதியாரின் தேசியப் பாடல்களை மட்டுமே பரப்பிய காரணத்தால், நாட்டவருக்குப் பாரதியாரின் முழு உருவமும் தெரியவில்லை! இனியாவது தெரியுமா என்றால், தெரியச் செய்தாலொழியத் தெரிவதற்கில்லை என்றே கூறலாம்.
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
வந்தே மாதரம் என்போம்
செந்தமிழ் நாடென்னும் போதினிலே
தாயின் மணிக்கொடி பாரீர்!
ஜெய ஜெய பாரத
இப்படிப்பட்ட பல தேசியப் பாடல்களை, நாட்டு மக்களின் செவிக்கும் சிந்தனைக்கும் கொண்டு வந்துள்ளனர். பாரதியார் அவ்வளவுதானா? அல்ல! பாரதியாரின் முழு உருவம், அதுவல்ல! அடிமை நிலை போக வேண்டும் என்ற கோபநிலையில் உள்ள பாரதி அது. ஆனால், அதைத் தாண்டி, நாட்டு உள்நிலை, மக்கள் மனநிலை இவைகளைக் கண்டு மனம் நொந்து வேதனைப்படும் பாரதி இருக்கிறார்! மக்களின் மந்த மதியினைக் கண்டு, அவர்களைத் திருத்த வேண்டும் என்ற ஆவல் கொண்டு துடிக்கும் பாரதி இருக்கிறார்! நாடு எப்படி இருக்க வேண்டும்? சமூகம் எவ்வண்ணம் அமைய வேண்டும்? என்ற இலட்சியம் கூறும் பாரதி இருக்கிறார்! தேசியப் பாரதியின் உருவம் இத்தனை பாரதிகளை மறைக்கிறது. ஆச்சாரியார், பந்தல் மண்டபத்தை மறைக்கிறது என்று கூறினாரே அதுபோல!
பெரிய பந்தல், விழாவுக்காக. மண்டபமோ, கவியின் பெருமைக்குரிய சின்னம். விழா முடிந்ததும் பந்தலைப் பிரித்து விடுவார்கள் - மண்டபம் நின்று அழகளிக்கும். அதுபோல், பாரதியாரின், ‘தேசியக் கவிதை’ அன்னியரை ஓட்டும் அரும் பணிக்காக மட்டுமே அமைவது. அந்தக் காரியம் முடிந்ததால், இனி அந்தப் பந்தலுக்கு அவசியமில்லை. அவசியமில்லாததால் அது எடுபடும். அது எடுபட்ட பிறகுதான், பாரதியாரின் மனம் தெரியும், பாரதியாரின் முழு உருவமும் தெரிய, அவருடைய கவிதா சக்தியின் முழுப் பயனையும் பெற, அப்போதுதான் முடியும்.
இனியும் மேடைகளிலே ஏறி, தாயின் மணிக்கொடி பாரீர்
போன்ற தேச பக்திப் பாடல்களை மட்டுமே பாடிப் பயனில்லை.
தாயின் மணிக்கொடி பார்க்கின்றோம். இங்கே காயும் வயிற்றையும் காண்பீர் என்று, மக்கள் முழக்கமிடுவர்! எனவே, எந்தப் பகுதியை மட்டும் அதிகமாகப் போற்றி நாட்டுக்கு எடுத்துரைத்து வந்தார்களோ, அந்தத் தேசீயப் பாடல் பகுதிக்குள்ள பயனும் ஜொலிப்பும், இனி இராது! ஆகவே பாரதி பயன் இல்லையா? அல்ல, அல்ல! பயனுள்ள பகுதி, பலரறியாப் பாரதி! மறைக்கப்பட்ட பாரதி! இனித்தான் மக்களுக்குத் தெரிய வேண்டும். தேசீயக் கவிக்கு அப்பால் நிற்கிறார், அந்தப் பாரதி! அந்தப் பாரதி, ஆங்கிலேயனை ஆரியப் பூமியிலிருந்து விரட்டும் பாரதி மட்டுமல்ல; நாட்டை விட்டுக் கேட்டினை எல்லாம் ஓட்ட வேண்டுமென்று கூறும் பாரதி! மேடைகளிலே இதுவரை நிறுத்தப்படாத பாரதி! தேசபக்தர்களின் நாவிலே நின்று, இதுவரை நர்த்தனமாடாத பாரதி மறைந்திருக்கிறார், பொன்னாலான பொடிக்குள் முத்து மாலை இருப்பதுபோல! அந்தப் பாரதியை நாம் அறிமுகப்படுத்தினால், விழாக் கொண்டாடியவர்களிலேயே பலருக்கு, முகமும் அகமும் சுருங்கக்கூடும்! இதோ அந்தப் பாரதி, நெடுநாட்களுக்கு மறைந்திருக்க முடியாது. வெளி வந்தாலோ, இன்று அவரை வந்திருக்கும் பலரே, நிந்திக்கவும் கூடும்! இதோ அந்தப் பாரதி பந்தலால் மறைக்கப்பட்டுள்ள மண்டபம்!
பண்டைப் பெருமை - பழங்கால மகிமை - அந்த நாள் சிறப்பு - என்றெல்லாம் பேசுகிறார்களே, அவர்களை நாம் எவ்வளவோ கௌரவமாகத்தானே கேட்கிறோம், ஐயோ! பழைய காலத்தைக் கட்டிப் பிடித்தழுகிறீரே, இது சரியா?
என்று.
பலருக்குத் தெரியாத முழுப் பாரதி, அவர்களை இலேசில் விடவில்லை. ‘மூடரே’ என்று அவர்களை விளிக்கிறார், கேட்கிறார் அவர்களை,
முன் பிறந்ததோர் காரணத்தாலே
மூடரே, பொய்யை மெய்யென லாமோ?
முன்பெனச் சொல்லும் காலமதற்கு
மூடரே, ஓர்வரை துறை யுண்டோ?
முன்பெனச் சொல்லின், நேற்று முன்பேயாம்
மூன்று கோடி வருடமு முன்பே!
முன் பிறந்த தெண்ணிலாது புவிமேல்
மொத்த மக்களெ லா முனிவோரோ?
நீர் பிறக்கு முன் பார்மிசை மூடர்
நேர்ந்ததில்லை என நினைத்தீரோ?
பார் பிறந்ததுதொட் டின்றுமட்டும்
பலபலப்பல பற்பல கோடி!
கார் பிறக்கு மழைத்துளி போலே
கண்ட மக்க ளனை வருள்ளேயும்,
நீர் பிறப்பதன் முன்பு மடமை
நீசத்தன்மை இருந்தன வன்றோ?
பழமை விரும்பி, என்ன எண்ணுவான் பாரதியாரைப் பற்றி?
சென்றதினி மீளாது மூடரே நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா,
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்றுவிளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்
தீமையெலாம் அகன்றுபோம் திரும்பி வாரா.
மற்றுமோர் சாட்டை, வெந்ததைத் தின்று வாயில் வந்ததைப் பேசுபவர்களுக்கு வகையாகத் தருகிறார் பாரதி! சென்றது இனி மீளாது,
மூடரே மனுதர்மம் இருந்ததே! அரசுகளிலே ஆதிக்கம் இருந்ததே! நமது வலக்கரத்திலே அக்னி இருந்ததே! நம்மைக் கண்டதும் மற்றவர்களுக்கெல்லாம் பயபக்தி இருந்ததே! இவை எல்லாம் இன்று இல்லையே! மீண்டும் கிடைக்கப் பெறுவோமோ என்றெல்லாம், எண்ணி எண்ணி ஏங்காதீர்! சென்றது இனி மீளாது!
என்று திட்டமாகக் கூறுகிறார். ‘கூறுகிறேன் கேளுங்கள் மூடர்களே!’ என்று இடித்துரைத்துப் பேசுகிறார்.
இந்தப் பாரதி, மேடையிலே தோன்றாத பாரதி!
செத்தபிறகு சிவலோகம் வைகுண்டம்
சேர்ந்திடலாமென்றே எண்ணி யிருப்பர்
பித்தமனிதர்
சாதிக் கொடுமைகள் வேண்டாம் – அன்பு
தன்னிற் செழித்திடும் வையம்
அரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரம் தொழில் செய்திடு வீரே
பெரும்புகழ் உமக்கே இசைக்கின்றேன் நான்
பிரமதேவன் கலையிங்கு நீரே
பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லை யென்றால்,
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை இல்லை
தேசியக் கவிஞரால் மறைக்கப்பட்டுள்ள புரட்சிக் கவிஞர் தெரிகிறார். இன்னும் தெளிவாக!
நெஞ்சு பொறுக்கு தில்லையே – இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்
என்று சோதிக்கிறார் பாரதி! ஏன் நிலைகெட்டுவிட்டது! தேசியக் கவியாக மட்டும் இருப்பின், பரங்கி பிடித்தாட்டப் பாரதநாடு பரிதவித்தது என்று மட்டுமே கூறுவார். ஆனால் பலருக்குத் தெரிய விடாதபடி மறைக்கப்பட்டிருக்கும் முழுப் பாரதி, பேசுவதைக் கேளுங்கள்:
அஞ்சி அஞ்சிச் சாவார் – இவர்
அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே!
வஞ்சனைப் பேய்களென்பார் இந்த
மரத்திலென்பார் அந்தக் குளத்திலென் பார்!
துஞ்சுது முகட்டிலென்பார்! மிகத்
துயர்ப்படுவார், எண்ணிப் பயப்படுவார்!
மந்திரவாதி யென்பார் சொன்ன
மாத்திரத்திலே மனக் கிலி
பிடிப்பார் யந்திர சூன்யங்கள் – இன்னும்
எத்தனை யாயிரம் இவர் துயர்கள்!
சாடுகிறார், சாடுகிறார், மூட நம்பிக்கைகளை!
கொஞ்சமோ பிரிவினைகள்? – ஒரு
கோடியென்றால் அது பெரிதாமோ?
ஐந்துதலைப் பாம்பென்பான்-அப்பன்,
ஆறுதலை யென்று மகன் சொல்லி விட்டால்,
நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்!
இங்ஙனம், சமுதாயத்திலே உள்ள கேடுகளை - மனதிலேயுள்ள தளைகளை - மூடக் கொள்கைகளைத் தாக்குகிறார், தமது கவிதா சக்தியைக் கொண்டு!
‘பாரதியாரா?’ என்று ஆச்சரியத்துடன் நாடு கேட்கும், அவர் சொன்னதத்தனையும் சொல்லப் போனால்! ஆனால், அந்தப் பாரதியாரை, அரும்பாடுபட்டு மறைத்திருக்கிறார்கள்!
பார்ப்பானை ஐயனென்ற காலமும் போச்சே!
என்ற ஒரு வரியைக்கூட அவர் சொன்னதாகச் சொல்ல அஞ்சி மறைத்தனர் அருந்தமிழ் நாட்டவர்தான்! பாரதியார், அந்தச் சமுதாயத்தை மேலும் என்னென்ன கூறினார் என்று தெரிந்தால் தானே, பாரதியின் முழு உருவம் தெரியும்?
இந்நாளிலே பொய்ம்மைப் பார்ப்பார் – அவர்
ஏது செய்தும் காசு பெறப்பார்ப்பார்!
பிள்ளைக்குப் பூணூலா மென் பான்! நம்மைப்
பிச்சுப் பணம் கொடெனத் தின்பான்!
பேராசைக்காரனடா பார்ப்பான்! – ஆனால்
பெரியதுரை என்னில் உடல் வேர்ப்பான்!
யாரானாலும் கொடுமை செய்வான்! – பணம்
அள்ளி இடவில்லையெனில் வைவான்!
மகாகவி பாரதியின் வாக்கு, ‘பேராசைக்காரனடா பார்ப்பான்’ என்பது, மேடைகளிலே கேட்டதுண்டா? பாரதி சிறப்பு விழாக் கூட்டங்களிலே, இந்தப் பாரதி தெரிந்தாரா? இல்லை. அவர் மறைந்திருக்கிறார், மண்டபம் பந்தலால் மறைக்கப்பட்டிருப்பது போல! விழா முடிந்தது; பந்தலும் பிரிக்கப்பட்டது; மண்டபம் தெரிகிறது என்பது போல, வெள்ளையர் வெளியேறும் விழா முடிந்தது! இனித் தேசியக் கவிதை அலங்காரத்தைக் கடந்து நிற்கும், பாரதி காண விரும்பிய புது சமுதாயம்!
ஏழை யென்றும் அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனிதரென்போர் இந்தியாவில் இல்லையே!
என்ற இலட்சியம் ஈடேறிய நிலை பெற்ற சமுதாயம், மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கமில்லாத சமுதாயம், பழமை மோகத்தில் படியாத சமுதாயம், காசியில் பேசுவதைக் காஞ்சியிலுள்ளோர் கேட்பதற்கான கருவி செய்யும் சமுதாயம், அத்தகைய புதிய சமுதாயத்தைக் காண விரும்பிய பாரதி நிற்கிறார். ஆனால் அவரைப் பந்தல் மறைத்துக் கொண்டிருக்கிறது! அவரை நாட்டுக்குத் தெரியவிடாதபடி செய்வதில், பலருக்கு இலாபம் இருக்கிறது! எனவே, தேசியக் கவிமட்டுமே தெரிய வேண்டும் என்று எண்ணி ஏற்பாடுகள் செய்வார்! ஆனால், அந்த எண்ணமும் ஈடேறுவதற்கில்லை. மக்களுக்குத் தெரிய ஒட்டாது அவர்கள் மறைத்து வைத்துள்ள பாரதியார், உண்மையில் மறைந்துவிடவில்லை. அதோ பாடுகிறார், கேளுங்கள்:
இருட்டறையில் உள்ளதடா உலகம் ஜாதி
இருக்கின்ற தென்பானும்...
இது பாரதிதாசன் குரல் அல்லவா? என்பீர்கள். ஆம்! பாரதிதாசன்தான்! அவர்தாம், மணிமண்டபத்தைவிட விளக்கமாக, முழுப் பாரதியைத் தமிழகத்துக்குத் தரும் அரும் பணியாற்றுகிறார். அவரிடம் நாங்கள், முழுப் பாரதியாரைக் காண்கிறோம். களிக்கிறோம். வாழ்த்துகிறோம்.
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
உடலினை உறுதி செய்
எண்ணுவ துயர்வு
ஏறுபோல் நட
ஒற்றுமை வலிமையாம்
ஔடதங் குறை
கற்ற தொழுகு
கால மழியேல்
குன்றென நிமிர்ந்து நில்
கூடித்தொழில் செய்
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்
சரித்திரத் தேர்ச்சிகொள்
சாவதற் கஞ்சேல்
சிதையா நெஞ்சுகொள்
சூரரைப் போற்று
சோதிடந் தனையிகழ்
தெய்வம் நீ என்றுணர்
தையலை உயர்வு செய்
தொன்மைக் கஞ்சேல்
நினைப்பது முடியும்
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல்
பிணத்தினைப் போற்றேல்
புதியன விரும்பு
பேய்களுக் கஞ்சேல்
போர்த்தொழில் பழகு
முனையிலே முகத்துநில்
மேழி போற்று
யாரையும் மதித்துவாழ்
இவை, பாரதியாரின் புதிய ஆத்திசூடி! புதிய பாரதி பாதை! தேசீய மணி மண்டபத்தோடு விடுவதல்ல, அதற்கும் அப்பாலுள்ள சமதர்மபுரி போவதற்கு அமைந்த பாதை! அந்தப் பாரதி பாதையை அமைத்துக்கொண்டிருக்கும் - அரும்பணியாற்றும் நாம், பாரதியார் பெற்ற சிறப்புக் கண்டு பெருமையடைவதுடன், பாரதியாரின் முழு உருவமும் மக்களுக்குத் தெரியச் செய்யும் காரியத்தையும் மேற்கொண்டுள்ளோம். பாரதி காட்டிய பாதையை, நாடு நன்கு அறிய வேண்டும்! பரங்கியை ஒட்டி, விடுவது மட்டுமல்ல அது. நாட்டின் கேட்டுக்குக் காரணமாக உள்ளதனைத்தையும் ஓட்டிப், புதிய சமூக அமைப்பாக்கும் பாதை! அந்தப் பாரதி பாதையை நாம் போற்றுகிறோம்!
ஆதாரம்: ‘மகாகவி பாரதியார்’ நூல்
நன்றி: புதுக்கோட்டை கிருஷ்ணமூர்த்தி
பாரதியார் பற்றி அண்ணா கூறியது என்ன? - அறிஞர் அண்ணா
மகாகவி பாரதியார் அவர்களைப் பற்றி எண்ணுகின்றபோது பேரறிஞர் அண்ணா அவர்கள் 1948ஆம் ஆண்டில் ‘People’s Poet’ என்னும் தலைப்பில் அகில இந்திய வானொலியில் முதன்முதலில் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இங்கே நினைவுகூரத்தக்கது.
Barathi was not merely the bard of Nationalism; he was certainly the morning star of reformation only because he was the People’s Poet.
பாரதியார் தேசியத்தைப் பாடுவதுடன் சாதாரணமாக நின்றிடவில்லை. அவர் மக்கள் கவிஞராகத் திகழ்ந்த காரணத்தினாலேதான் சீர்திருத்தத்தின் விடிவெள்ளியாக வலம் வந்தார்.
He was angry with the foreigner, and wanted his country to become free but that was not his goat that was not to be his end. It was but the beginning – he wanted to free his country men from all shackles, wanted them to rise up in the estimation of the world, wanted to see, a new land peopled by men and women of a new type altogether.
அவர் வெள்ளையரைச் சினந்தார்; தமது நாடு விடுதலை பெற விரும்பினார். ஆனால், அதுமட்டும் அவர் இலக்கு அன்று; அதுவே தனது முடிவான விருப்பம் என்றும் அவர் கருதிடவில்லை; ஆனால், அதுவே தொடக்கம். அவர் தனது நாட்டு மக்கள் அனைவரும் எல்லாவிதமான தளைகளில் இருந்தும் விடுதலை பெற வேண்டும் என்றார்; உலகம் மதிக்கத்தக்க அளவுக்கு அவர்கள் எழுச்சி பெற்று உயர வேண்டும் என்றார்; ஆணும் பெண்ணும் புதிய சிந்தனைகளுடன் கூடிவாழும் நாடாகம் தமது நாட்டைக காண விரும்பினார்.
He found the people enveloped in fear. Fear was written on their very faces. They were afraid of anything and everything. Not only did they fear the foreigner and his gun; but their owm brethern chanthing some slogans – they were afraid of ghosts and phantoms.
அதாவது,
மக்கள் அச்சத்தில் மூழ்கி இருப்பதைக் கண்டார். அச்சம் அவர்களுடைய முகத்திலேயே எழுதப்பட்டிருப்பதைக் கண்டார். அவர்கள் எதைக் கண்டும், எல்லாவற்றைக் கண்டும் அஞ்சினர்; வெள்ளையரையும், அவர்களது துப்பாக்கிகளையும் கண்டு மட்டும் அஞ்சுவதல்ல; சொந்த சகோதரர்கள் பேய், பூதம், பிசாசு என்று முழங்கி மந்திரங்களைக் கேட்டும் அவர்கள் அஞ்சி நடுங்குயதைக் கண்டு வருந்தினார்.
- என்று அண்ணா, பாரதியாரைப் பற்றிக் கூறுகிறார்.
5. நான் கண்ட பாரதி - வ.உ.சி.
பாரதியாரின் தந்தை ஸ்ரீ சின்னச்சாமி ஐயர் எட்டையபுரம் சமஸ்தானத்தில் உத்தியோகம் வகித்து வந்தார். அதே காலத்தில் எனது தந்தையார் ஸ்ரீ வ. உலகநாத பிள்ளை அதே சமஸ்தானத்தில் வக்கீலாகச் சேவை செய்து கொண்டிருந்தார். என் தகப்பனாருடன் பாரதியாரின் தந்தையார் எங்கள் சொந்த ஊராகிய ஒட்டப்பிடாரத்திற்கு அடிக்கடி வருவதுண்டு.
எங்கள் ஊர் சரித்திரப் பிரசித்தமானது. ‘வானம் பொழியுது; பூமி விளையுது; மன்னவன் காணிக்குக் கிஸ்தி ஏது?’ என்று முழங்கி ஆங்கிலக் கும்பினியாரோடு அருஞ்சமர் புரிந்து பெரும் புகழ் எய்திய பாஞ்சாலங்குறிச்சிப் பாளைய மன்னன் - வீரன் கட்ட பொம்மு காலத்தில் ஒட்டப்பிடாரம் சீரும் சிறப்பும் பொருந்திய சிற்றூராகத் திகழ்ந்தது. பின்னர் சமீபகாலம் வரை ஒட்டப்பிடாரத்தில் தாலுக்காக் கச்சேரியும், தாலுக்கா மாஜிஸ்டிரேட் கோர்ட்டும் இருந்து வந்தன.
இவ்விரண்டு கச்சேரிகளில் ஏதாவது ஒன்றில் ஜோலியாகவே எங்களூருக்கு ஸ்ரீமான் ஐயர் என் தந்தையாருடன் வருவார்.
அங்கு வந்த காலத்தில் என் வீட்டிலாவது, என் வீட்டிற்கு மேற்கேயுள்ள பழைய பாஞ்சாலங்குறிச்சித் ஸ்தானாதிபதிப் பிள்ளை வீட்டிலாவது தங்குவார். அப்பொழுது எனக்குப் பதினைந்து அல்லது பதினாறு வயதிருக்கும். ஸ்ரீமான் ஐயர் எந்தையாரிடமும், என்னிடமும், மற்றையோரிடமும் பேசிய மாதிரியிலிருந்து அவர் ஒரு பெரிய மேதாவி என நான் நினைத்தேன்.
என் தகப்பனார் என்னிடம் ஸ்ரீமான் ஐயருக்கு ஒரு மகன் இருப்பதாகவும் அவன் அதி புத்திசாலியென்றும், சிறு பிள்ளையாயிருக்கும்போதே தமிழில் வெகு அருமையாகச் சுயம்பாடுவான் என்றும் கூறுவதுண்டு, ஐயரது குமாரன் பாடிய கவிகளை என்னிடம் சொல்லிக் காட்டி அவனைப் பற்றி என் தந்தை வெகுவாகப் புகழ்ந்து பேசுவார். சிறு வயதிலேயே கவி பாடிய அச்சிறுபிள்ளைதான் சுப்பிரமணிய பாரதி என்று இன்று உலகமெல்லாம் புகழ்பெற்று விளங்கும் பெரியார்.
இப்பெரியாரை நான் முதன்முதலாகப் பார்க்கும் பாக்கியம் பெற்றது அவர் சென்னையில், ‘இந்தியா’ என்னும் பெயர் பெற்ற தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியராயிருந்த காலத்தில்தான். அந்தக் காலத்தில் ‘இந்தியா’வுக்குப் பேரும் புகழும் பெருஞ்செல்வாக்கும் இருந்தன. பத்திரிகையின் சிறப்புக்குக் காரணம் ஆசிரியர்தான் என்பது சொல்லாமலே தெரியும்.
அது 1906ஆம் வருஷ ஆரம்பமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அப்பொழுது நான் தூத்துக்குடியிலிருந்து சென்னை சென்றிருந்தேன். (எனது சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்திலிருந்து கச்சேரிகள் எல்லாம் எடுபட்டு விட்டதனால் அப்போது நான் தூத்துக்குடியில் வக்கீல் தொழில் புரிந்து வந்தேன்) சென்னையில் திருவல்லிக்கேணியில் ‘சுங்குராம செட்டி’ தெருவில் என் நண்பன் ஒருவன் வீட்டில் தங்கியிருந்தேன். அங்கிருந்து நான் பட்டணம் போகிற வருகிற வழியில் ஒரு பெரிய வீடு இருந்தது. அதுதான் இந்தியா
பத்திராதிபர் ஸ்ரீமான் திருமலாச்சாரியார் வீடு என்று தெரிந்து கொண்டேன்.
ஒரு நாள் மாலை நாலு மணி சுமாருக்கு நான் இந்தியா அதிபர் திரு. ஆச்சாரியாரைப் பார்ப்பதற்காக அப்பெரிய வீட்டிற்குள் புகுந்தேன். அங்கிருந்தவர்களிடம் விசாரித்ததில் அவர் மாடியில் இருக்கிறார் என்றனர்.
நான் மாடிக்குச் சென்றேன், அங்கு ஒரு அய்யங்கார் அமர்ந்திருந்தார். அவர் இளவயதினராகக் காணப்பட்டார். முகத்தில் அறிவுச்சுடர் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அவர்தான் அதிபராக இருக்கவேண்டுமென நினைத்து அவரைக் கேட்டேன். ஆம்
என்றார் அவர். அவரிடம் என் ஊரும். பேரும் சொன்னேன்.
அவர் மாடியின் உள்ளரங்கை நோக்கி பாரதி! உங்கள் ஊரார் ஒருவர் உம்மைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறார்
என்று உரக்கக் கூறினார்.
உடனே உள்ளிருந்து ஒருவர் வந்தார். முண்டாசுக் கட்டுக்கும் முறுக்கு மீசைக்கும் பெயர் பெற்றது எங்கள் ஜில்லா. எனவே தலைப்பாகைக் கட்டைப் பார்த்ததுமே பாரதியார் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
முறைப்படி அதிபர் ஸ்ரீமான் ஆச்சாரியார், இவர்தான் இந்தியா ஆசிரியர் சுப்பிரமணியபாரதி
எனப் பாரதியாரைச் சுட்டிக்காட்டி அறிமுகப்படுத்தினார்.
ஆசிரியர் பாரதியார் என் ஊரையும், பெயரையும் பற்றி உலாவினார்.
நான் ஒட்டப்பிடாரம் வக்கீல் உலகநாத பிள்ளை மகன் சிதம்பரம் பிள்ளை
என்றேன்.
ஓ, அப்படியா! பிள்ளையவாளின் பிள்ளையாண்டானா நீங்கள்! உட்காருங்கள்
என்று கூறி அருகிலிருந்த நாற்காலியில் அமரச் செய்தார். அவரும் மற்றவரும் வேறு இரு நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டனர்.
பாரதியார் ஆரம்பித்தார்:
உங்கள் தகப்பனார் என் தகப்பனாரின் அத்யந்த நண்பர், அவாளை எனக்கு நன்னாத் தெரியும். உங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கேன்
என்றார் பாரதியார். ஆமாம்! எங்கள் ஜில்லாவிற்கே உரித்தான அந்தச் சிறந்த தமிழ்ப் பாணியில் அவர் பேசினார். பின்னர் பல்வேறு விஷயங்களைப் பற்றி நால்வரும் - குறிப்பாக நானும் அவரும் பேசிக் கொண்டிருந்தோம். தேச காரியங்கள் பற்றிய பேச்சுகளே எங்கள் அளவளாவுதலில் தலைமை வகித்தன.
இந்த முதல் சந்திப்பும் பேச்சுமே என்னைச் சோழனாகவும் அவரைக் கம்பனாகவும் நான் நினைக்கும்படி செய்தது. பாரதியார் என்னைக் கடற்கரைக்கு அழைத்தார். நாங்கள் திருவல்லிக்கேணிக் கடற்கரைக்குச் சென்று வெகு நேரம் அரசியல் விஷயங்களைப் பற்றிப் பரஸ்பரம் பேசிக் கொண்டிருந்தோம். வங்க மாகாணத்தின் சிங்கச் செயல்கள் விபின் சந்திரபாலரின் தேச பக்தி, பிரசங்கங்கள் முதலியவை பற்றியும் பாரதியார் மிகுந்த ஆவேசத்துடன் பேசினார்.
என் உள்ளத்தில் மின்மினிப் பூச்சி போன்று மின்னிக் கொண்டிருந்த தேசாபிமான நெருப்பு விளக்குப் போல ஒளி விட்டுப் பிரகாசித்தது. உணர்ச்சிப் பெருக்கால் இங்கு எழுதியுள்ள இதே வாக்கியத்தை நான் பாரதியாரிடம் சொன்னேன். இதே சமயத்தில் கடற்கரை மின்சார விளக்குகளும் ‘பளிச்’சென ஒளி விட்டு எரிய ஆரம்பித்தன.
பாரதி, பிள்ளைவாள், சக்தி துணை செய்வாள். நம் உள்ள ஒளி பிரகாசிக்கும்போது மின் ஒளியையும் பிரகாசிக்கச் செய்தது நம் அன்னை பராசக்தியே! அவள் வாழ்க! இனி நம் முயற்சி வெற்றி, எடுத்ததெல்லாம் வெற்றி என்பதற்கான சுப சகுனம் இதுதான். வாழி அன்னை! வாழி அம்மை! சக்தி வாழி!
என ஆவேசம் வந்தவர் போலப் பேசினார்.
அவர் முண்டாசுக் கட்டின் முந்தானைத் துணி காற்றில் வெற்றிக்கொடி போலப் படபடவென்ற சப்தத்துடன் பறந்து கொண்டிருந்தது. கடல் அலை பேரிரைச்சலிட்டது. உள்ளம் நிரம்பிய மகிழ்வோடு நாங்கள் நால்வரும் திரும்பினோம்.
பின்னர் நாள்தோறும் நான் இந்தியா ஆபீசுக்கும், அதிபர் வீட்டிற்கும், கடற்கரைக்கும் செல்லலானேன்; அதிபரும், ஆசிரியரும், நானும் அவ்வப்போது அளவளாவுவது வழக்கமாகிவிட்டது. சுப்பிரமணிய பாரதியும் நானும் சோழனும் கம்பனுமாயிருந்தது மாறிக் கடைசியில் மாமனும் மருமகனும் ஆயினோம்.
மாமா இவ்வுலகைவிட்டு மறைந்து விட்டாலும், அவரது தேசிய கீதங்களும், மற்றைய பாடல்களும், கதை - கட்டுரைகளும் இவ்வுலகம் உள்ளளவும் நிலைத்துப் புகழ் வீசும் என்பதில் ஐயமில்லை. அவருடைய பெயர் தேசாபிமானிகளுடைய சரித்திரத்தில் மட்டுமல்லாமல் கவிதா மேதைகளின் சரித்திரத்திலும் வைரம் என ஒளிவிடும்.
6. கண்ணன் பாட்டு - வ.வே.சு. ஐயர்
நம் காலத்துத் தமிழ்க் கவிகளுள் பிரதம ஸ்தானத்தை வகிக்கும் ஸ்ரீமான் ஸுப்ரமண்ய பாரதியின் நூல்களுக்கு முன்னுரை வேண்டுவதேயில்லை. இருப்பினும், பாயிரமல்லது பனுவலன்றே என்னும் முதுமொழியை நினைத்தோ அல்லது வேறு என்ன எண்ணியோ, பதிப்பாசிரியர் இக்கண்ணன் பாட்டின் இரண்டாம் பதிப்புக்கு என்னை ஒரு முன்னுரை எழுதித் தர வேண்டுமெனக் கேட்டார்; சிறிதளவேனும் சாத்தியமாயிருக்கிற ஒரு காரியத்தை நட்புரிமை பூண்டோர் செய்யும்படி வேண்டினால் மறுத்தல் அழகன்று என நினைத்துச் சம்மதித்தேன்.
பாரத நாட்டின் குலதெய்வமாகிவிட்ட கண்ணனுக்குப் பாமாலை சூட்டாத கவிகள் அருமை. தன்னை நெடுநாள்களாக மறந்திருந்த பாரத நாடு திடீரென்று விழித்துக் கொண்டதும் அதன் எதிரே முதலில் தோன்றிய ஒளி, கீதா சாஸ்திரத்தைச் கூறிப் பார்த்தனுடைய ரதத்தை வெற்றி பெற ஓட்டிய கண்ணபிரானுடைய உருவமே. அந்த உருவமானது நமது கவியின் இருதயத்திலும் எழுந்து அவருடைய கவிதைக்கு ஒரு சோபையைக் கொடுத்தது.
பத்து வருஷங்களுக்கு முன் அவர் பதிப்பித்த ஜன்மபூமியிலேயே ஸ்ரீகிருஷ்ண ஸ்தோத்திரம் என்று இரண்டு செய்யுள்கள் காணப்படுகின்றன. ஆனால், பிற்பட்டுத்தான் கண்ணனுடைய செயல்களும், திருவிளையாடல்களும் அவர் மனத்தைப் பூரணமாக ஆகருஷித்தன. இவ் ஆகருஷணத்தால் நாலாயிரப் பிரபந்தத்துள் பெரியாழ்வார் அருளிச் செய்த திருப்பாசுரங்களின் அனுஸந்தானம் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. இக்கண்ணன் பாட்டானது பாவ விஷயத்தில் அப்பாசுரங்களின் வழியையே தழுவியதாக இருக்கிறது.
இஷ்ட தெய்வத்தைப் பல பாவங்களால் வழிபடலாகும் என்று நமது பக்தி சாஸ்திரங்கள் கூறுகின்றன. நமது ஆசிரியரும் இதை அனுசரித்துக் கண்ணனைத் தாயாகவும், தந்தையாகவும், எஜமானாகவும், குருவாகவும், தோழனாகவும், நாயகியாகவும், நாயகனாகவும் பாவித்துப் பாடுகிறார்.
இவற்றுள், நாயக - நாயகி பாவத்தைப் பற்றி இங்குச் சில மொழிகள் கூறாதுவிட முடியவில்லை. இப்பாவத்தால் பகவானை வழிபடும் முறை தொன்றுதொட்டு பக்தர்களாலும், கவிகளாலும், அனுசரிக்கப்பட்டு வருகிறது. ரோமன் கத்தோலிக் மதத்திலே கூட அடியார் வர்க்கத்தை நாயகியாகவும், கிறிஸ்துவை நாயகனாகவும் பாவித்து எழுதிய ஸ்தோத்திரங்கள் பல உள. நமது பாகவதத்தில் கோபிகைகளின் உபாக்கியானங்களெல்லாம் இப்பாவத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ளனவே. மகா பக்திமதியான மீராபாயி உலகத்திலுள்ள ஜீவகோடிகள் அனைத்தும் ஸ்திரீப்பிராயம் என்றும் பகவான் ஒருவனே புருஷன் என்றும் பாவித்துப் பக்தி செய்திருக்கிறார். பரமஹம்ஸ ஸ்ரீராமகிருஷ்ண தேவரும் தம்முடைய அனுபவங்களுள் நாயகி அனுபவத்தையும் அனுபவிக்க எண்ணி, சேலை தரித்துக் கொண்டு, ராதை என்கிற பாவத்தால் கண்ணனை வழிபட்டார் என்று சொல்லப்படுகிறது. திருக்கோவையாரையும், ராமலிங்க சுவாமிகளின் திருவருட்பாவையும் அனுபவித்த தமிழருக்கு இவ்விதம் ஈடுபடும் முறை புதிதாகப்படாது.
ஆனால், இந்தப் பாவத்தை ஆளுவது கத்தியின் கூர்ப் பக்கத்தின்மீது நடப்பதைப் போன்ற கஷ்டமான காரியம். ஒரு வரம்பு இருக்கிறது. அதற்கு இப்புறம் அப்புறம் போய்விட்டால், அசந்தர்ப்பமாகிவிடும். ஸ்ரீ பாகவதத்திலுங்கூட கோபிகா உபாக்கியானங்களில் சுக பகவான் இவ்வரம்பை அங்கங்கே கடந்து விட்டிருக்கிறார் என்பது எனது தாழ்ந்த அபிப்பிராயம்.
"கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்"
என்று தொடங்கும் திருவாய் மொழிகளையும்,
"கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ?
திருப் பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ?"
என்று தொடங்கும் ஆண்டாளுடைய பாசுரங்களையும் போலச் செயிரின்றி இப்பாவத்தைப் பாடுவது அநேகமாய் அசாத்தியம்.
நமது கவியும் இப்பாவத்தை விரிக்கையில் பரபக்தியை விடச் சாரீரமான காதலையே அதிகமாக வர்ணித்திருக்கிறார். ஆனால், சுகப்பிரம்மமே நிறுத்த முடியாததான தராசு முனையை நம் ஆசிரியர் நிறுத்தவில்லை என்று நாம் குறை கூறலாமா?
இந்தக் கீர்த்தனங்களைப் பரபக்திக்குப் பேரிலக்கியமாகக் கொள்ள வேண்டுவதில்லை. ஆசிரியர் இந்நூலில் கவி என்கிற ஹோதாவில்தான் நம்மிடம் வருகிறார் என நினைக்க வேண்டும். கவிதா ரீதியாகப் பார்க்கும்போது, இக்கீர்த்தனங்களுள் பெரும் பாலவையிலுள்ள சுவை தேனினும் இனிதாயிருக்கிறது.
இன்னொன்று: கவிதையழகை மாத்திரம் அனுபவித்து விட்டு, இந்நூலின் பண்ணழகை மறந்து விடக்கூடாது. இதிலுள்ள பாட்டுக்களிற் பெரும்பாலானவை தாளத்தோடு பாடுவதற்காகவே எழுதப்பட்டவையாயிருக்கின்றன. கடற்கரையில், சாந்தி மயமான சாயங்கால வேளையில், உலகனைத்தையும் மோஹ வயப்படுத்தி நீலக் கடலையும் பாற் கடலாக்கும் நிலவொளியில், புதிதாகப் புனைந்த கீர்த்தனங்களைக் கற்பனா கர்வத்தோடும் சிருஷ்டி உற்சாகத்தோடும் ஆசிரியன் தன்னுடைய கம்பீரமான குரலில் பாடினதைக் கேட்ட ஒவ்வொருவரும் இந்நூலிலுள்ள பாட்டுகளை மாணிக்கங்களாக மதிப்பர்.
தமிழபிமானிகள் ஆசிரியனுடைய உற்சாகத்தை உயர்த்தி அவரால் தமிழில் புதிய இலக்கியங்கள் பிறக்கும்படி செய்வார்கள் என நம்புகிறேன்.
7. கவிதைத் திறன் - டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர்
பிறந்த தேசம், பழகும் மனிதர்கள் முதலிய தொடர்புகளால் ஒருவருடைய வாழ்க்கையில் சில பழக்கங்கள் அமைகின்றன. ஸ்ரீ சுப்பிரமண்ய பாரதியார் எட்டையபுரத்தில் பிறந்தவர். இவர் பிறந்த பாண்டி நாடு தமிழுக்கு உரிய நாடு. தமிழ் நாடென்று பழைய காலத்தில் அதற்குத்தான் பெயர்.
பாரதியார் பிறந்த எட்டையபுர ஸமஸ்தானத்தில் பல வித்துவான்கள் இருந்தார்கள். எட்டையபுரத்தில் அங்கங்கே உள்ளவர்கள் தமிழ்ப் பாடல்களைச் சொல்லியும் கேட்டும் இன்புற்று வருபவர்கள். இதனால் பாரதியாருக்கு இளமை தொடங்கியே தமிழில் விருப்பம் உண்டாயிற்று. அது வரவர மிக்கது.
சிறு பிராய முதற்கொண்டே இவருக்குச் செய்யுள் இயற்றும் பழக்கம் உண்டாயிற்று. அக்காலத்திலேயே தேசத்தின் நிலைமை இவருடைய மனத்திற் பதிந்தது. தெய்வத்தினிடத்திலும், பாஷையினிடத்திலும் அன்பில்லாதவர்களைக் கண்டு இவர் மிக வருந்தினார். முயற்சியும் சுறுசுறுப்பும் இல்லாமல் வீணாகக் காலத்தைப் போக்குபவர்களை வெறுத்தார். புதிய புதிய கருத்துக்களை மிக எளிய நடையில் அமைத்துப் பாட வேண்டுமென்ற உணர்ச்சி இவருக்கு வளர்ந்து கொண்டே வந்தது.
தேசத்தின் பெருமையை யாவரும் அறிந்து பாராட்டும்படியான பாட்டுக்களைப் பாட வேண்டுமென்ற ஊக்கம் இவருக்கு நிரம்ப இருந்தது. அதனால் இவர் பாடிய பாட்டுகள் மிகவும் எளிய நடையில் அமைந்து படிப்பவர்களைத் தம்பால் ஈடுபடுத்துகின்றன. இவர் உண்மையான தேசபக்தியுடன் பாடிய பாட்டுக்களாதலின் அவை இவருக்கு அழியாத பெருமையை உண்டாக்குகின்றன.
பாரதியார் தேசியப் பாட்டுக்களைப் பாடியதோடு வேறு பல துறைகளிலும் பாடியிருக்கிறார். இசைப் பாட்டுக்கள் பலவற்றைப் பாடியிருக்கிறார். சங்கீதத்திலும் பழக்கம் உடையவர்.
கவிதைகளின் தன்மையை உபமானம் அமைத்து ஒரு புலவர்,
"கல்லார் கவிபோற் கலங்கிக்
கலைமாண்ட கேள்வி
வல்லார் கவிபோற் பலவான் றுறை
தோன்ற வாய்த்துச்
செல்லாறு தோறும் பொருளாழ்ந்து
தெளிந்து தேயத்
தெல்லாரும் வீழ்ந்து பயன்கொள்ள
இறுத்த தன்றே"
என்று சொல்லியிருக்கிறார். அதற்கேற்ப விளங்குபவை இவருடைய செய்யுட்கள். இப்பாட்டில் ‘தேயத்து எல்லாரும் வீழ்ந்து பயன்கொள்ள’ என்றது இவருடைய பாட்டுக்களுக்கு மிக்க பொருத்தமுடையதாகும்.
பாட்டுக்களின் பாகம் ஐந்து வகைப்படும். அவை நாளிகேர பாகம், இக்ஷு பாகம், கதலீ பாகம், திராக்ஷா பாகம், க்ஷீர பாகம் என்பனவாம். நாளிகேர பாகமென்பது தேங்காயைப் போன்றது. தேங்காயில் முதலில் மட்டையை உரிக்க வேண்டும். பிறகு ஓட்டை நீக்க வேண்டும்; அதன் பிறகு துருவிப் பிழிந்து வெல்லம் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இந்த வகையிலுள்ள பாட்டுக்கள் சில உண்டு. அதைப் பாடுபவர்கள் தம்முடன் அகராதியையும் எடுத்துக் கொண்டு போக வேண்டும். சில சமயங்களில் அவர்களுக்கே தாங்கள் செய்த பாட்டுக்களுக்கு அர்த்தம் விளங்காமற் போய்விடும்.
இக்ஷு பாகமென்பது கரும்பைப் போன்றது. கரும்பைக் கஷ்டப்பட்டுப் பிழிந்து ரஸத்தை உண்ணவேண்டும். கதலீ பாகமென்பது வாழைப்பழத்தைத் தோலுரித்து விழுங்குவது போலச் சிறிது சிரமப்பட்டால் இன்சுவையை வெளிப்படுத்துவது.
திராக்ஷா பாகமென்பது முந்திரிப் பழத்தைப் போல எளிதில் விளங்குவது. க்ஷீர பாகம் அதனிலும் எளிதில் விளங்குவது குழந்தை முதல் யாவரும் உண்பதற்குரியதாகவும், இனிமை தருவதாகவும், உடலுக்கும் அறிவுக்கும் பயன் தருவதாகவும் இருக்கும் பாலைப் போல் இருப்பது. பாரதியாருடைய கவிகள் க்ஷீர பாகத்தைச் சார்ந்தவை. சிலவற்றைத் திராக்ஷா பாகமாகக் கொள்ளலாம்.
ஆங்கிலம், வங்காளம் முதலிய பாஷைகளில் பழக்கமுடையவராதலால் அந்தப் பாஷைகளிலுள்ள முறைகளை இவர் தம் கவிகளில் அமைத்திருக்கிறார். இவருடைய கவிதைகள் ஸ்வபாவோக்தி என்னும் தன்மை நவிற்சியணியையுடையவை. பழைய காலத்தில் இருந்த சங்கப் புலவர்கள் பாடல்களில் தன்மை நவிற்சிதான் காணப்படும். அனாவசியமான வருணனைகளும் சொல்லடுக்குகளும் கவியின் ரஸத்தை வெளிப்படுத்துவனவல்ல.
பாரதியாருடைய பாட்டுக்களில் தெய்வ பக்தியும் தேசபக்தியும் ததும்புகின்றன. தனித்தனியாக உள்ள பாட்டுக்கள் இயற்கைப் பொருள்களின் அழகை விரித்தும், நீதிகளைப் புகட்டியும், உயர்ந்த கருத்துக்களைப் புலப்படுத்தியும் விளங்குகின்றன.
இவருடைய வசனத்தைப்பற்றிச் சில சொல்ல விரும்புகிறேன். பாட்டைக் காட்டிலும் வசனத்திற்குப் பெருமை உண்டாயிருப்பதன் காரணம், அது பாட்டைவிட எளிதில் விளங்குவதனால்தான். பாரதியாருடைய பாட்டும் எளிய நடையுடையது; வசனமும் எளிய நடையுடையது. வருத்தமின்றிப் பொருளைப் புலப்படுத்தும் நடைதான் சிறந்தது. பாரதியாருடைய வசனம் சிறுவாக்கியங்களால் அமைந்தது, அர்த்த புஷ்டியுடையது. இவருடைய கவிகளின் பொருள் படிக்கும்போதே மனத்துக்குள் பதிகின்றது. வீர ரஸம், சிருங்கார ரஸம் ஆகிய இரண்டும் இவருடைய பாட்டுக்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. பாரதியார் அழகாகப் பேசும் ஆற்றல் வாய்ந்தவர்.
இவருடைய பாட்டுகள் எல்லோருக்கும் உணர்ச்சியை உண்டாக்குவன; தமிழ் நாட்டில் இவருடைய பாட்டை யாவரும் பாடி மகிழ்வதனாலேயே இதனை அறிந்து கொள்ளலாம். கடல் கடந்த தேசங்களாகிய இலங்கை, பர்மா, ஜாவா முதல் இடங்களிலும் இவருடைய பாட்டுக்கள் பரவியிருக்கின்றன. அங்கே உள்ளவர்களில் சிலர் இவரைப் பற்றி எழுத வேண்டுமென எனக்குக் கடிதங்கள் எழுதியதுண்டு.
"மணவை மன் கூத்தன் வகுத்த கவி, தளைபட்ட காலுடனே கூட
லேழையுந் தாண்டியதே"
என்று ஒரு புலவருடைய கவியைப் பற்றி வேறொரு புலவர் பாடியிருக்கிறார். ஸ்ரீராமனுடைய கவியாகிய ஆஞ்சநேயர் ஒரு கடலைத்தான் தாண்டினார்; மணவைக் கூத்தன் கவியோ ஏழு கடல்களையும் தாண்டிவிட்டது. ஸ்ரீராமனுடைய கவி தளையில்லாமல் தாண்டியது; அங்ஙனம் செய்தது ஆச்சரியமன்று. இந்தப் புலவர் கவியோ, தளையுடைய காலோடு ஏழு கடலைத் தாண்டியது என்கிறார். தளையென்பதற்கு விலங்கென்றும், கவிக்குரிய லக்ஷணங்களுள் ஒன்றென்றும் பொருள். இந்தப் பாட்டுக்கு இப்போது இலக்கியமாக இருப்பவை பாரதியாருடைய கவிகளாகும்.
பாரதியார் தாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், ஜனங்களுக்கு நன்மை உண்டாகவேண்டுமென்ற கொள்கையையுடையவர். தைரியமுடையவர். இவருடைய புகழ் தமிழ் நாட்டின் புகழாகும்.
8. பாரதியும் இலக்கியமும் - ப. ஜீவானந்தம்
பாட்டுக்கொரு புலவன் பாரதி
என்பது கவிமணியின் கணிப்பு. நவீனக் கண்ணோட்டம் படைத்த தமிழ் அறிஞர்கள், தமிழ்க் கலைஞர்களுக்கெல்லாம், இந்தக் கணிப்பில் இரண்டு கருத்து இதுவரை இருந்தது கிடையாது.
பாரதி ஒரு தமிழனாக இருந்து, உலகத்தின், பாரதத்தின், தமிழகத்தின் புரட்சிகரமான புதிய சக்தியைப் பிரதிநிதிப்படுத்தினான். ஆகவே, பழைய முறைகளில் அழுந்தி, அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுந்தம்
என்று வாழும் தமிழ்ப் புலவர்கள் பாரதியைச் சரியாக அறிய முடியாமல் இருந்தார்கள்; இன்னும் இருக்கிறார்கள்.
புதிய இளைய நாகரிகத்தின் கலைப்போக்கையும் கருத்துப் போக்கையும் பழைய சிறந்த இலக்கிய அம்சங்களுடன் சுவையுறக் கலந்து, பாரதி, தமிழை நேர் நிகரற்ற விதத்தில், வழியில் வளர்த்தான்.
தமிழ்க் கவிதையின் நறுமணமற்று, செய்யுள் பாடுவதைச் செப்பிடு வித்தை போன்று செய்து, ஏட்டுக் கற்பனையில் தொங்கி, சத்தும் தற்காலப் பண்புமற்ற பாடல்களை எழுதி எழுதித் தள்ளிக் கொண்டிருந்த மெய்ப் புலமையற்ற தமிழ்ப் புலவர்கள் மலிந்திருந்த காலத்தில், பாரதி தோன்றினான். உண்மைக் கவிதை ஒளியைத் தமிழகமெங்கும் பரப்பினான்.
தற்கால இலக்கியங்களில் நிரம்பிய புலமை பெற்ற எனது நண்பர் ஒருவர், ஒரு மகாகவியை அளக்க நமது ஆராய்ச்சியில் இரண்டு கூறுகள் முதலிடம் பெற வேண்டும்
என்கிறார்.
முதலில், புதிய கற்பனை முறைகளையும், கவிதையில் புதிய நடை, உடைகளையும், காலத்திற்கேற்ற கருத்து லட்சியங்களையும் தனது படையலில் இன்றியமையாதனவாகக் கொண்டு வந்திருக்கிறானா என்று பார்க்க வேண்டும்.
இரண்டாவதாக, தன் கால சக்திகளால் ஒரு கவி உருவான போதிலும், தன் காலத்திற்கு அதீதமான லட்சியங்களைப் படைக்கும் ஆற்றல் பெற்றவனாயிருக்கிறானா என்று பார்க்க வேண்டும்.
இந்த இரண்டு வரையறைகளையும் அளவைகளாகக் கொண்டு, அளந்து பார்த்தால், பாரதியை ஒரு மகாகவி என்றே மதிப்பிட வேண்டும். நிற்க,
பாரதியின் இலக்கியத்தைப் பற்றிய நிர்ணயிப்பு என்ன? சகலகலாவல்லியான கலைமகளின் முழு வடிவழகை ஓரிடத்தில் வருணிக்கிறான், பாஞ்சாலி சபதத்தில் சரஸ்வதி வணக்கத்தில் பின்வருமாறு கலைமகளைப் பற்றிக் கூறுகிறான்:
வேதத் திருவிழியாள் – அதில்
மிக்க பல்லு ரையெனும் கருமையிட்டாள்,
சீதக்கதிர் மதியே - நுதல்,
சிந்தனையே குழல் ஒன்றுடையாள்,
வாதத் தருக்கம் எனும் - செவி,
வாய்ந்த நல் துணிவு எனும் தோடணிந்தாள்,
போதம் மென்னாசியினாள் – நலம்
பொங்குபல் சாத்திர வாயுடையாள்,
கற்பனைத் தேனிதழாள் – சுவைக்
காவிய மெனும் மணிக் கொங்கையினாள்
சிற்ப தற்கலைகள் பல
தேமலர்க்கரமெனத் திகழ்ந்திருப்பாள்;
சொற்படு நயம் அறிவார் – அசை
தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறிவார்
விற்பனத் தமிழ்ப்புலவோர் – அந்த
மேலவர் நாவெனும், மலர்ப்பதத்தாள்.
இந்த நீண்ட அடிகளை ஒருதரம் ஊன்றிப் படியுங்கள்! வேதம் கலைமகளின் கண்ணாம்; உரைகள் கண்ணுக்கிடும் மையாம்; தண்ணிய அறிவு, நெற்றியாம்; சிந்தனை, கூந்தலாம்; தருக்க வாதம், செவியாம்; துணிவு, செவித்தோடாம்; உணர்வு, நாசியாம்; சாத்திரம், வாயாம்; கற்பனை, இதழாம்; காவியங்கள், கொங்கைகளாம்; கலைகள், கரங்களாம்; புலவர்களின் நா, அவள் பாதங்களாம்.
இங்கு, பழைய புலவர்களை அவர்கள் பாணியிலேயே பாரதி வென்று விட்டான் என்பதைப் பார்க்கிறோம். இலக்கியத்தைப் பற்றிய ஒரு முழுமையான பார்வையைப் பாரதி நமக்குக் காட்டும் அருமையே அருமை!
இந்த இலக்கியப் பண்புகளோடு, புதிய சேர்மானங்களையும் பேராற்றலுடன் சேர்த்தருளுகிறான் பாரதி. பாரதியின் கவிதைகளை ஒரு முறைப்படுத்தி, ஒரு பாக்குக் கடிக்கிற நேரம், அலசிப் பார்ப்போம்.
அவற்றைத் தேசியப்பாடல்கள், தோத்திர - வேதாந்தப் பாடல்கள், தனிப்பாடல்கள், கற்பனைச் சித்திரங்கள், காவியங்கள் என்று முறைப்படுத்திக் கொள்ளலாம்.
பாரதி இலக்கியத்தில் தேசியப் பாடல்களுக்குத் தனி இடம் உண்டு. இந்தப் பாடல்களைப் போன்று, தெள்ளிய நடையில் தீங்கவிச் சுவையில் புதுமையும், வளமையும், பெருமையும் கொண்டு பொருளும் இசையும் மலரும் மணமும் போல் ஒளிரும் பாடல்கள் தமிழ் இலக்கியத்திலேயே வேறு இல்லை என்று சொல்லலாம். பழம்பெருமையில் பூரிப்பு, தற்கால நிலைமைக்கு நெஞ்சு உருகல், விடுதலைப் பேரார்வம், உயர்ச்சியில் நம்பிக்கை, களிப்பு, வீராவேசம் - இவை தேசியப் பாடல் தொகுப்பில், ஆற்றுப் பெருக்காய் ஓடுவதைக் காணலாம்.
தமிழ்ப் பெருமக்களின் கலைவளத்தின் சீர் சிறப்புக்களையும், வரலாற்று மாண்பையும், ஒரே படத்தில் நேர்நோக்காகப் பார்த்து இன்பப்பெருக்கு அடைய, ‘செந்தமிழ் நாடு’ என்ற பாரதியின் அருமருந்தன்ன பாட்டைத் தவிர, தமிழ்மொழியில் வேறு பாட்டு இல்லை.
‘எந்தையும் தாயும்’, ‘மன்னும் இமயமலை’, ‘பாருக்குள்ளே நல்ல நாடு’, ‘பாரத தேசம்’, ‘பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி’ போன்ற பாடல்களும், இன்ன பிறவும், பழம் பெருமையையும், தற்கால நிலையையும் எண்ணி நாட்டன்பு கரை புரண்டோடும்படி செய்ய இனிய ஓசைப் பெருக்கமும் கவிதை ரசமும் பொங்கும்படி பாடப்பட்டுள்ள நிகரற்ற பாடல்களாகும்.
இந்தப் பாடல்கள் கவிதா ரீதியிலும், இலக்கிய ரீதியிலும் அதிகச் சிறப்புடையன அல்ல என்றும், சுதந்திர பிற்காலத்தில், இவைகளுக்குத் தேவையில்லை, எனவே, மங்கிவிடும் என்றும் சிலர் நினைக்கிறார்கள். இந்த நினைப்பு ஆழ்ந்த ஆராய்ச்சியின் விளைவாக இருக்க முடியாது. தற்கால வாழ்க்கையின் அம்சங்கள், சுக - துக்கங்கள், சமுதாய லட்சியங்கள், மக்கள் போராட்டங்கள் - சாதனைகள் - ஆகியவற்றைக் கவிதைக்குப் பொருளாகக் கையாள்வது சிலருக்குப் பிடிக்கவில்லை.
ஆனால், ஒன்றுமட்டும் கூறமுடியும். கடவுளின்மீது காதலும், கன்னியர்மீது காதலும் பாட்டுக்கு ஏற்ற பொருளாயிருந்து, அற்புதமான கவிதைகளைப் படைக்க முடியுமானால், நாட்டன்பும் இதர உலகியல் வாழ்வின் குறிக்கோள்களும், கவிதைக்கு உகந்த பொருளாக ஏன் இருக்க முடியாது? கட்டாயம் இருக்க முடியும். முடியும் என்பதைப் பாரதி நன்றாக நிரூபித்திருக்கிறான்.
பாட்டு, இசைச் சுவையுடனும், நடை அழகுடனும், எளிய சொற்களுடனும், கற்பனை நயத்துடனும், கனிந்த மன உணர்ச்சியை எதிரொலிக்க வேண்டும். அவ்வாறு எதிரொலிக்க முடியுமானால், அது, நமது மனதை என்றென்றும் வசீகரிக்கக் கூடிய ஒரு சிருஷ்டி ஆகிவிடும்.
பாரதியின் பாடல்களில் சில பல, நடையிலும், ஒலியிலும் திருவாசகம், திவ்யப் பிரபந்தங்களைப் பின்பற்றுகின்றன. பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி ஓர் நல்ல எடுத்துக்காட்டு.
புள்ளினம் ஆர்த்தன, ஆர்த்த ஒரு முழம்
என்று வரும் பாரதியின் அடிகளையும்,
கூவின பூங்குயில், கூவின கோழி
என்று வரும் மாணிக்கவாசகரின் அடிகள்,
புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
என்று வரும் தொண்டரடிப் பொடியாழ்வாரின் அடிகளையும் ஒப்புநோக்கிப் பார்த்தால், இந்த உண்மை புலனாகும்.
பாரதியின் பாட்டு, இசைச் சுவையிலும், இலக்கியச் சுவையிலும் குறைந்திருக்கிறதா? இல்லை.
மாறாக, அதன் எளிமைக்கு அதிகக் கவர்ச்சி இருப்பதாகவே தோன்றுகிறது.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே
என்று வரும் அடிகளையுடைய பாட்டிலும், மாரத வீரர் மலிந்த நன்னாடு என்று வரும் அடிகளையுடைய பாட்டிலும் இவை போன்ற பிற பாட்டுகளிலும், கவிதைச் சுவையும் பண்பும் இல்லையா?
இல்லை என்று யாராவது சொல்லத் துணிந்தால், அன்னாருடைய கலைப் பயிற்சியிலும் ரசிகத்தன்மையிலும் ஊனம் இருக்கிறது என்று தீர்மானித்துவிடலாம். பாரதியின் பாடல்கள், அவற்றின் எளிமையினால், சர்வ சாதாரணமானவை போல் தோன்றலாம். ஆனால், அவை பொருள் செறிவு உடையவை; எத்தனை ஆயிரம் உணர்ச்சி அலைகளையும், கற்பனை ஓவியங்களையும் உள்ளத்தில் எழுப்புகின்றன!
9. தமிழினத்தின் சொத்து - எஸ். சத்தியமூர்த்தி
காலஞ்சென்ற சுப்பிரமணிய பாரதி, அவரது நாவிலேயே சரஸ்வதி தேவி தேசபக்தி நடனத்தை ஆடினாள் என்று நாம் மெய்யாலும் நம்பத்தகுந்த ஒரு வியக்தி.
அவர் எந்தச் சுதந்திர நாட்டில் பிறந்திருந்தாலும் - ஏன் இந்தியா தவிர உலகில் எந்தத் தேசத்தில் பிறந்திருந்தாலும் - அவரை அந்நாட்டின் ஆஸ்தான கவி ஆக்கியிருப்பார்கள்; மக்களின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்க அறிந்த எந்த அரசும் அவருக்கு கௌரவங்களையும், பட்டங்களையும் வழங்கியிருக்கும்; அவர் தமது நாட்டிலே தலையான மதிப்புப் பெற்றோருள் ஒருவராக வாழ்ந்து மரித்திருப்பார்.
ஆயினும், ஐயா, நம்முடைய நாடு அடிமைநாடாக இருப்பதால், அவர் பாண்டிச்சேரியில் பிரெஞ்ச் அரசின் உபசரிப்பைப் பெற்றே நம் நாட்டுக்கு பிரஷ்டராக வாழ வேண்டியிருந்தது. இந்த (பிரிட்டிஷ்) அரசில் தம்மால் உபயோகமும் இல்லை என அவர் கண்டுகொண்டதால், மனம் பிளந்து, சிதைந்த சரக்காகவே சாகவேண்டியிருந்தது. ஆனால், ஐயா, அவருக்கு முன்பிருந்த உயிர்த் தியாகிகளும், தேச பக்தர்களும் இதே விதிக்குத்தான் ஆளாகி இருக்கின்றனர்.
அவைத் தலைவரவர்களே, மீளவும் கூற விரும்புகிறேன்: இருக்கும் அத்தனை பாரதியார் பாடல் பிரதிகளையும் பறிமுதல் செய்து விட்டாலுங்கூட தனியொரு தமிழ் மகனே உயிர் வாழும் அளவும் இப்பாடல்கள் தமிழினத்தின் விலைமதிக்கவொண்ணா பிதுரார்ஜிதச் செல்வமாக நிலைத்து நிற்கும். நமது புனித வேதங்கள் அவற்றில் ஒரு சிறுபகுதியைக்கூட எழுதி வைக்காமலே நம்முடைய புராதன ஹிந்து மூதாதையரின் ஞாபக சக்தியின் துணையில் தலைமுறை தலைமுறையாக (வாய் மொழியிலேயே) வழங்கப்பட்டது போலவும்; மில்டனுடைய ‘இழந்த ஸ்வர்க்கத்தை மெக்காலே’ ஒவ்வொரு வரியும் (நினைவிலிருந்தே) ஒப்பித்தது போலவும் இப்பாடல்கள் நீடித்து வாழும்.
...எப்படியாயினும், எது இப்பறிமுதலுக்கு இலக்காயிற்றோ, அது சென்னை அரசின் காரியத்துக்குப் பிறகும், தமிழ் மொழி எவ்வளவு காலம் வாழுமோ அதுவரை, அல்லது ஒரே ஒரு தமிழன் மட்டுமே இருக்கும் வரையிலும், அப்பெரு மொழியின் மிக மிக மதிப்புயர்ந்த பாடல்களாகவும், தேசபக்தியில் தலைசிறந்த கீதங்களாகவும் உயிர் வாழும்.
ஆதாரம்: 1928 - சட்டப்பேரவைச் சொற்பொழிவின் பகுதி
10. அக்கினிக் குஞ்சு! - கலைஞர் மு. கருணாநிதி
இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் முத்தமிழ் மன்றமும் மாணவர் தமிழ்ப்பேரவையும் இணைந்து நடத்துகின்ற பாரதி விழாவில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திக்கின்ற நல்ல வாய்ப்பினைப் பெற்றமைக்காக, இந்த வாய்ப்பினை வழங்கிய இரு மன்றத்தினுடைய நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்த விழாவிலே கலந்துகொள்ள வேண்டுமென்று நண்பர்கள் என்னை அணுகியபோது, பாரதி விழாவில் சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
என்ற தலைப்பில் நீங்கள் பேசவேண்டும் என்று கேட்டார்கள்.
நான் அவர்களிடத்திலே, பாரதி அந்தக் காலத்திலே சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
என்று பாடிய உட்கருத்து வேறு. இன்றைக்கு - சிங்களத் தீவினுக்கே படை அனுப்புவோம்
என்று சொல்லவேண்டிய காலகட்டத்தில் - பாலம் அமைப்போம் என்ற பாட்டுக்கு பொருள் கூறுவதிலே பயனில்லை என்று குறிப்பிட்டேன்.
ஆனால் அன்றைக்குப் பாரதி பாடியவாறு பாலம் அமைக்கப்பட்டிருக்குமேயானால் இன்று நாம் இரண்டாயிரம் மைலுக்கு அப்பால் யார் தயவையும் நாடி காத்திருக்கத் தேவையில்லை. அந்தப் பாலத்தின் வழியாகவே தமிழர் பலத்தைக்காட்டி, அங்கே நாளும் இனப்படுகொலைக்கு ஆளாகின்ற நம்முடைய இன மக்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.
பாரதியினுடைய ஆசை நிறைவேறவில்லை. பாலம் அமைக்கப்படவில்லை. எனவேதான் தமிழர் படும் துயரம் எல்லையில்லை என்ற சூழ்நிலை இன்றைக்கு இலங்கைத் தீவிலே இருக்கின்றது.
அது குறித்து எனக்கு முன்னால் ஆராய்ச்சித் துறையிலே ஈடுபட்டுள்ள அன்புக்குரிய நண்பர்கள் உரையாற்றியபோது, மிக விரிவாகப் பேசியிருக்கின்றார்கள். நானும் என்னுடைய பேச்சின் இறுதிப் பகுதியில் அது குறித்து சில கருத்துகளை கூற இருக்கின்றேன்.
பாரதி விழாவில், பாரதி எந்தக் கொள்கைகள் நாட்டில் வேரூன்ற வேண்டும் என்பதற்காகப் பாடினான் என்பதையும், எந்த லட்சியங்களுக்காக பாரதி வாழ்ந்தான் என்பதையும், பாரதியினுடைய கனவுகள் இன்றைக்கு முற்றாக நிறைவேறி விட்டனவா என்பதையும் எண்ணிப் பார்த்திட வேண்டிய நிலைமையிலேதான் பாரதிக்கு விழாவினை நாம் எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
விழா எடுக்கின்ற இந்த மன்றம் முத்தமிழ் மன்றம் என்ற பெயர் உடைய மன்றம். விழாவினுடைய தலைவர் அவர்கள் இந்த மன்றம் பற்றிக் குறிப்பிட்ட பொழுது இயல், இசை, கூத்து எனப்படும் முத்தமிழுக்காகப் பாடுபடுகின்ற மன்றம்; முத்தமிழைப் பரப்புகின்ற மன்றம் என்றெல்லாம் குறிப்பிட்டார்கள்.
இயல் - இசை - கூத்து
இயல், இசை, கூத்து என்று வரிசைப்படுத்தப்பட்டு, அது முத்தமிழ் என்று கூறப்படுகின்ற அந்த நிலை எப்படி மாறியிருக்கிறது என்பதை, உலகத்திலே மனிதன் தோன்றிய காலந்தொட்டு இந்நாள் வரையிலே உள்ள வரலாற்றை ஆராய்ந்து பார்க்கின்றவர்களுக்கு மிக நன்றாக விளங்கும்.
இயல், இசை, கூத்து என்று சொல்லுகின்றோம், முத்தமிழ் என்று குறிப்பிடுகின்றோம். முதலிடத்திலே இயல் என்பதை வைக்கிறோம். இரண்டாவது இடத்திலே இசை என்பதை வைக்கிறோம். இது மூன்றாவது இடத்திலே கூத்து என்பதை வைக்கிறோம்.
ஆனால், உண்மை என்னவென்றால், மனிதன் தோன்றிய காலத்தில் இயல் இல்லை. மனிதன் தோன்றிய சில காலங்களுக்குப் பிறகு கூட இசை இல்லை. ஆனால் கூத்துதான் முதலிடத்தைப் பெற்றது.
தோன்றிய மனிதன் அவனுக்கென ஒரு மொழியை உருவாக்கிக் கொள்ளாத காரணத்தினால், கை ஜாடையால் தன்னுடைய உணர்வுகளை மற்றவர்களுக்கு புலப்படுத்திக் கொண்டிருந்தான். நான் அந்தக் காலத்து மனிதனைப் பற்றிச் சொல்கிறேன்.
அங்க அசைவுகளின் மூலமாக தன்னுடைய விருப்பத்தை தன்னுடைய எண்ணத்தை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிற நிலை தொடக்க காலத்து மனித சமுதாயத்திலே இருந்தது.
அந்தக் கூத்துக்குப் பிறகு இசை. அங்க அசைவுகளுக்குப் பதிலாக சற்று தொலைவிலே இருப்பவரைப் பார்த்து ‘ஓ’ என்று அழைப்பதும், வலியெடுத்தால் ‘ஆ’ என்று அலறுவதும், இந்த நிலைமைகள் ஏற்பட்டு - அந்த ‘ஓ’ மேலும் மேலும் நீண்டு ‘ஆ’ மேலும் மேலும் நீண்டு - அந்த ஓசையே பிறகு இசையாயிற்று.
இப்படி கூத்தும் இசையும் பிறந்த பிறகுதான் அவைகளுக்குரிய ‘இயல்’ உருவாயிற்று.
ஆனால் அந்த இயலுக்குள்ள கெட்டிக்காரத்தனம் முதலிலே தோன்றிய கூத்தையும் இசையையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்திலே வந்து அமர்ந்து கொண்டது.
இசை இரண்டாவது இடம் என்றாலும் பரவாயில்லை என்று அந்த இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. முதலிடத்திற்கு வந்த கூத்து இறுதி இடத்தை அடைந்தது. இதுதான் முத்தமிழ் - இயல் - இசை - கூத்து.
தமிழ்மொழியின் இணையற்ற சிறப்பு
தமிழ் என்று சொன்னாலே - நான் வேறு சில நிகழ்ச்சிகளிலே கூட அந்தச் சுவையை எடுத்துக் காட்டியிருக்கிறேன்.
எந்த மொழிக்குமில்லாத ஒரு சிறப்பு ‘தமிழ்’ என்கின்ற இந்த மொழிக்கு - அந்த மொழியைக் குறிப்பிடுகின்ற சொல்லுக்கு உண்டு.
தமிழ் என்கின்ற அந்தச் சொல்லில் மூன்று எழுத்துக்கள் ‘த’ ‘மி’ ‘ழ்.’ தமிழில் எழுத்துக்களை வகைப்படுத்தும் பொழுது ‘வல்லினம்’ ‘மெல்லினம்’ ‘இடையினம்’ என்று மூன்றாக வகைப்படுத்துகிறார்கள்.
வல்லினம் ‘கசடதபற’; அதிலே வருகின்ற ‘த’ தமிழ் முதல் எழுத்தாகிறது.
மெல்லினம் ‘ஙஞணநமன’; அதிலே வருகின்ற ‘ம’ ‘மி’யாகி ‘தமி’ என்று ஆகிறது.
இடையினம் ‘யரலவழள’; அதிலே வருகின்ற ‘ழ’ ‘ழ்’ ஆகி ‘தமிழ்’ என்று ஆகிறது.
ஆக இந்த மூன்று இனங்களும் வல்லினம், மெல்லினம், இடையினம் இந்த மூன்றையும் ஒருங்கே பெற்றுத் திகழுகின்ற ஒரு சொல்லாக - உலகத்திலே எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பாக - தமிழ்மொழி அமைந்திருக்கின்றது.
அந்தத் தமிழ் மொழியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் - சங்ககாலம் தொட்டு, எத்தனையோ அழகான கவிதைகள், பாக்கள், செய்யுட்கள், ‘அகம்’ ‘புறம்’ என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே போகக்கூடிய அளப்பரிய இலக்கியங்கள் - இவைகளெல்லாம் ஆக்கப்பட்டன.
அவர்கள் வழிநின்று, ஆனால் எளிய நடையில், அந்த நேரத்தில் உணர்வுகளைத் தட்டி எழுப்பக்கூடிய அளவில் - ஒரு நாட்டினுடைய விடுதலைக்காக முரசம் ஒலிக்கின்ற முறையால், தமிழகத்திலே முதல் கவிஞனாக எழுந்தவன்தான் சுப்ரமணிய பாரதி. எனவேதான் அந்த பாரதிக்கு அவ்வளவு சிறப்பு.
பாரதியை நான் கண்டதில்லை; ஏனென்றால் நான் பிறப்பதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே அவன் மறைந்துவிட்டான். எனவே பாரதிக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. ஆனால் பாரதியின் கவிதைகளுக்கும் எனக்கும் நிறையத் தொடர்பு உண்டு.
எளிய நடையில் எழுதக்கூடிய எத்தனையோ தமிழ்க் கவிஞர்கள் பாரதிக்கு முன்புகூட இருந்திருக்கிறார்கள்.
ஆனால் பாரதிதான் முதன்முதலில் முற்போக்கு கொள்கைகளை - சீர்த்திருத்த எண்ணங்களை - விடுதலை ஆர்வத்தை, நாட்டுப்பற்றை, மொழிப்பற்றை மக்களுடைய உள்ளத்திலே,
குறிப்பாக தமிழ் மக்களுடைய உள்ளத்திலே பதியவைக்கக் கூடிய அளவிற்கு அழுத்தம் திருத்தமாக - ஆவேசமாக - ஆணித்தரமாக எழுதிக் காட்டிய பெரும்புலவன், அந்தப் பெரும் புலவனுடைய இளமை வாழ்க்கையே ஏற்றமுடைய வாழ்க்கை. இந்த விழாவில் இளைஞர்களும் குழுமியிருக்க காரணத்தினால், அதிலும் இளம் சிறார் பலர் இருக்கிற காரணத்தினால் அவர்கள் அறியக்கூடும் என்றாலும் நினைவூட்டுவது என் கடமை என்பதால் நினைவூட்டுகிறேன்.
விளையும் பயிர் முளையிலே தெரியும்
அவன் இளம்பிராயத்திலே கவிபுனையும் ஆற்றலைப் பெற்றிருந்தான் என்பதும், அதுகண்டு பொறாமை கொண்ட ஒருவர் காந்திமதிநாதன் என்ற பெயர் படைத்தவர் - பாரதியை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணியவராய் பலபேர் முன்னிலையிலே, பாரதியைப் பார்த்து, நான் ஒரு ஈற்றடி தருகிறேன்; அந்த ஈற்றடியை வைத்து ஒரு பாடல் எழுது