Nimira Vaikkum Nellai
()
About this ebook
“நிமிர வைக்கும் நெல்லை” கேட்டாலே நெஞ்சில் கிளர்ச்சி ஊட்டும் எழுச்சி காட்டுகிறது பெற்ற தாய்க்கும் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் முனைப்புடன் கெழுதகை கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் தீட்டி உள்ள இந்நூல், தென்பாண்டிச் சீமையாம் நெல்லை மண்டலத்தின் மாட்சிகளுக்குச் சாட்சியமாகத் திகழ்கிறது...
Read more from K.S. Radhakrishnan
D.M.K. – Samooga Neethi Rating: 0 out of 5 stars0 ratingsEezha Tamizhar Prachanai Rating: 0 out of 5 stars0 ratingsKi. Ra. 85 – Kaalathai Vendra Kathai Solli Rating: 0 out of 5 stars0 ratingsAzhagar Anai Rating: 5 out of 5 stars5/5Ki.Ra. Nooru - Thoguthi 1 Rating: 0 out of 5 stars0 ratingsTamilnadu 50 Rating: 0 out of 5 stars0 ratingsKi.Ra. Nooru - Thoguthi 2 Rating: 0 out of 5 stars0 ratingsUrimaikku Kural Koduppom! Rating: 0 out of 5 stars0 ratingsThookkukku Thookku Rating: 0 out of 5 stars0 ratingsSethu Kaalvai – Oru Paarvai Rating: 0 out of 5 stars0 ratingsMannin Perumai Rating: 0 out of 5 stars0 ratingsTamilaga Melavai Rating: 1 out of 5 stars1/5Manidha Urimaigal Endral Enna? Rating: 0 out of 5 stars0 ratingsKadhai Solli Rating: 0 out of 5 stars0 ratingsKarisal Kaattin Kavithai Solai Bharathi Rating: 0 out of 5 stars0 ratings123 Indiayave Odathey! Nil!! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nimira Vaikkum Nellai
Related ebooks
Muransuvai Rating: 0 out of 5 stars0 ratingsNaan Krishna Devarayan - Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsNatrinai Rating: 0 out of 5 stars0 ratingsPeriya Puranathil Pengal Or Aaivu Rating: 0 out of 5 stars0 ratingsSetril Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsArul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratingsJaya Jaya Sankara Rating: 5 out of 5 stars5/5C. K. Subramania Subramania Mudhaliyarin Periyapuranam Uraithiran Rating: 1 out of 5 stars1/5Khan Shahib Rating: 0 out of 5 stars0 ratingsNaan Krishna Devarayan - Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsIraiyuthir Kaadu - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsThiraichudargal Rating: 0 out of 5 stars0 ratingsBhoomikku Kidaitha Puthayal Rating: 0 out of 5 stars0 ratingsBookmarks Rating: 0 out of 5 stars0 ratingsGnabagangal Rating: 0 out of 5 stars0 ratingsTamizhaga Medai Aalumaikal Rating: 0 out of 5 stars0 ratingsOru Koodai Nila Rating: 0 out of 5 stars0 ratingsIruvar: M.G.R vs Karunanidhi Uruvana Kathai Rating: 0 out of 5 stars0 ratingsTamil Cinemavin 100 Aandukaala Payanam Rating: 0 out of 5 stars0 ratingsRani Mangammal Rating: 0 out of 5 stars0 ratingsPutru Rating: 0 out of 5 stars0 ratingsNeelakesi Rating: 0 out of 5 stars0 ratingsSudumanal Rating: 5 out of 5 stars5/5Ganthimathiyin Kanavan Rating: 0 out of 5 stars0 ratingsPorpura Rating: 0 out of 5 stars0 ratingsMakkal Nenjil M.G.R Rating: 1 out of 5 stars1/5O Pakkangal Rating: 0 out of 5 stars0 ratingsSanga Ilakkiyathil Anthanarum Vedhamum! Rating: 0 out of 5 stars0 ratingsIndia Enum Aithegam Rating: 0 out of 5 stars0 ratingsOru Renduzhuthu Nadigaiyin Kathai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nimira Vaikkum Nellai
0 ratings0 reviews
Book preview
Nimira Vaikkum Nellai - K.S. Radhakrishnan
https://www.pustaka.co.in
நிமிர வைக்கும் நெல்லை
Nimira Vaikkum Nellai
Author:
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
K.S. Radhakrishnan
For more books
https://www.pustaka.co.in/home/author/ks-radhakrishnan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
கே.எஸ். இராதாகிருஷ்ணன் கரிசல் மண்ணான கோவில்பட்டி அருகிலுள்ள குருஞ்சாக்குளம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அரசியலில் தன் தடத்தைப் பதித்து வருகிறார் மறுமலர்ச்சி தி.மு.க.வின் முக்கிய தளகர்த்தாகளில் ஒருவர்.
மனித உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நதிகள் இணைப்பு - தேசியமயமாக்கப்படல், விவசாயிகள் பிரச்சினை போன்ற பல்வேறு பொதுநல வழக்குகளை உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் தொடர்ந்துள்ளார் Amnesty International - இயக்கத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார் பல்வேறு அரசியல் போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றுள்ளார் மத்திய அரசின் இரயில்வே அமைச்சகம், தொழிலாளர் அமைச்சகத்தின் குழந்தைத் தொழிலாளர் ஆலோசனைக் குழு போன்ற பல்வேறு மத்திய அமைச்சகங்களின் ஆலோசனைக் குழுவில் பணியாற்றியவர். திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராக மத்திய அரசால் பலமுறை நியமிக்கப்பட்டுள்ளார். கொச்சி துறைமுகக் கழகத்தின் நடுவராக பணியாற்றினார்.
இந்திய சட்ட மையத்தின் உறுப்பினராகவும், இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவில் இணைச் செயலாளராகவும் பொறுப்பேற்றுப் பணியாற்றுகிறார்.
‘உரிமைக்குக் குரல் கொடுப்போம்’, ‘மனித உரிமைச் சட்டங்களும் சில குறிப்புகளும்’ போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். தமிழக அரசின் சார்புள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் போன்ற அமைப்புகளுக்கு அரசு வழக்கறிஞராக இருந்துள்ளார்.
நல்லாசைகள்
"மகத்தான அறிவு வேண்டும்;
அழியாத நெஞ்சுறுதி வேண்டும்;
கல்விகள் வேண்டும்;
கீர்த்திகள் வேண்டும்;
சூழ்ந்திருக்கும் ஊரார், தேசத்தார், உலகத்தார்
எல்லோரும் இன்பத்துடன் வாழும்படி
நாம் செய்ய வேண்டும்.
இவை நல்லாசைகள்".
- அமரகவி பாரதியார்
‘தமிழ் எழுத்து உலகில், இதோ ஒரு மாணிக்கச் செழும்பரிதி!
வைகோ
நிமிர வைக்கும் நெல்லை
கேட்டாலே நெஞ்சில் கிளர்ச்சி ஊட்டும் எழுச்சி காட்டுகிறது பெற்ற தாய்க்கும் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் முனைப்புடன் கெழுதகை கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் தீட்டி உள்ள இந்நூல், தென்பாண்டிச் சீமையாம் நெல்லை மண்டலத்தின் மாட்சிகளுக்குச் சாட்சியமாகத் திகழ்கிறது.
எனக்கு நேர்வழி காட்டுங்கள்
என்று தன்னைப் பிரசவித்த பூர்வீக மண்ணையும், தன் பரம்பரையின் மூத்த குடிகளையும் வேண்டியபடி நெல்லைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார் பாரதியாரின் ஆசைகள் நூல் ஆசிரியரின் உள்ளக்கிடக்கைக்கு உரைகல் ஆகும் எல்லோரும் இன்புற்று இருக்க நினைக்கும் உள்ளப்பாங்கு உலகோர் அனைவருக்கும் வந்துவிட்டால் எந்நாளும் துன்பம் இல்லை. இன்பம் தானே வந்து எய்துமன்றோ!
இலக்கிய உலகில் தனி ஆட்சி செலுத்தி வரும் கரிசல் மண்ணின் அரசவை ஆசான் கி.ரா. அணிந்துரையில் மகிழ்ந்து உரைப்பது போல, ‘திருவிழாவில் தொலைந்த குழந்தை கிடைத்து விட்ட நிம்மதி’ எனக்கும் உண்டு அணிந்துரையிலேயே சுலோசன முதலியார் பாலம் பிறந்த கதையை கி.ரா., தம்முடைய பாணியில் எடுத்து உரைத்து நூலின் சிறப்புக்குப் பாயிரம் அமைத்து உள்ளார்.
‘தமிழ்’ பொதிகையில் பிறந்தது என்பது வெறும் புராணக் கதை அல்ல என்பதற்கு இரத்தச் சாட்சிகளாக இலக்கிய உலகின் ஈடு இணையற்ற தந்தையர்களின் பட்டியலை மாலன் சுட்டிக் காட்டுகிறபோது, நாம் நிமிர்ந்து அமர்கின்றோம்.
முல்லைத் தமிழ் மணக்கும் நெல்லைச் சீமை பற்றிச் சொல்லிற் சுவைகூட்டி ஆக்கப்பட்டு உள்ள இந்நூல் போற்றிக் காக்கப்பட வேண்டிய வரலாற்றுப் பேழையாகத் திகழ்கின்றது.
சலிப்பில்லாத அயரா உழைப்பிற்கு அடையாளமாகத் திகழும் இராதாகிருஷ்ணன், அரசியலுக்கும் அப்பால், தாம் பிறந்த மண்ணையும், மக்களையும் நேசிப்பதற்கு அடையாளமாக வெளிக்கொணர்ந்து இருக்கும் இந்நூல், அவரின் பன்முக உழைப்பின் பரிமாணத்திற்கு அத்தாட்சி ஆகும். எண்ணற்ற பெருமக்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவையான செய்திகளை, இயல்பான நடையில் எடுத்து உரைக்கும் பாங்கு பாராட்டுக்கு உரியது சொல்லின் செல்வரால் ஊக்கப்படுத்தப்பட்டு, குன்றக்குடி அடிகளார் உயர்நிலை பெற்ற செய்தியை அறியும்போது, ‘குறள் நெறி நின்றார் நீடுவாழ்வார்’ என்பது வெளிப்படுகிறது.
‘தமிழ் இசையின் தந்தை’ எனத் தமிழகம் போற்றும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், நெல்லை மாவட்டம் குற்றாலம் அருகில் சாம்பவர் வடகரையைச் சேர்ந்தவர் என்பது போன்ற செய்திகளை எல்லாம் அரும்பாடுபட்டு ஆசிரியர் திரட்டி இருப்பதில் இருந்து அவர் முயற்சியின் உயர்ச்சி தெளிவு ஆகிறது.
உச்ச நீதிமன்றத்தில் மெச்சும்படியாகப் பணிபுரிந்து நெல்லையின் பெருமைக்குப் பெருமை சேர்த்த அண்ணாச்சி நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் அவர்களின் திருப்பணிகளால் புதுப் பொலிவு பெற்று இருக்கும் திருப்புடைமருதூர் ஆலயத்தில், இலைகள் கொண்டு வரையப்பட்டு இருக்கும் எழில் ஓவியங்கள் பல நூற்றாண்டுகட்கு முன்பே கப்பல் கட்டும் தொழில் நெல்லை மாவட்டத்தில் இருந்தமைக்கான அத்தாட்சியாகத் திகழ்வதை ஆசிரியர் கூறும்போது நம் சிந்தை எல்லாம் சிலிர்க்கின்றது.
திராவிட இயக்கத்தினுடைய தியாக வரலாற்றில் தன் செந்நீரைத் தண்ணீராகத் தாரை வார்த்த கே வி.கே. சாமி போன்ற முன்னோடிகளுடைய உழைப்பும், வரலாறும் மிக அழகாக எடுத்து உரைக்கப்பட்டு இருக்கிறது.
வியர்வையை விதைத்து வேதனையை அறுவடை செய்யும் கடனாளி விவசாயி
என்று ஆசிரியர் கூறும்போது, நம் இதயமும் அந்த விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி காண முடியவில்லையே என்று விம்முகின்றது.
பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டு உள்ள கட்டபொம்மன் குறித்த பானர்மென் கடிதம், கட்டபொம்மு செப்பேடு, பட்டயச் செய்தி போன்றவை எல்லாம் தாம் மேற்கொண்ட பணியில் நூல் ஆசிரியர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் ஆழமாகவும், அகலமாகவும் செய்த ஆய்வுக்கும், அரும் உழைப்புக்கும் அசைக்க முடியாத சான்றுகள் ஆகும்.
காலம் காலமாக இழைந்து வரும் பண்பாட்டின் இலக்கியமாகவும், இருப்பிடமாகவும் திகழும் நெல்லையைப் பற்றி எல்லையற்ற ஆர்வத்துடன் ஆசிரியர் தொகுத்துத் தந்து இருக்கும் அரிய செய்திகள், இந்நூலைக் காலப்பேழையாக - கருத்துப் புதையலாக - வரலாற்றுக் கருவூலமாகச் செழுமைப்படுத்தி, ‘தமிழ் எழுத்து உலகில் இதோ, மற்றும் ஒரு மாணிக்கச் செழும் பரிதி எழுகின்றது’ என்று நம்மை மகிழ்ச்சியுடன் வாழ்த்தத் தூண்டுகிறது.
வாழ்க! வாழ்க! மலர்க! என்று ஆசிரியர் கே.எஸ். இராதா கிருஷ்ணன் அவர்களின் எழுத்துப் பணியைப் போற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் ஆசிரியர் கூறுவது போல, நிமிர வைக்கும் நெல்லையுடன் நாமும் நிமிர்ந்து எழுவோம்! வெல்வோம்!
தாயகம்
சென்னை - 9
24.6.2006.
nimira vaikum nellai 1பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி தி.மு.க.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர்.
திரு ஆர் நல்லகண்ணு
அவர்களின் அணிந்துரை
வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் நெல்லைச் சீமை
யின் சிறப்புகளைச் சேகரித்து, தொகுப்பு நூலாக வெளியிட்டிருக்கிறார். அவரின் முயற்சி பாராட்டுக்குரியது.
ஆங்கிலேயர்கள் நம் மண்ணில் காலூன்றத் தொடங்கியபோதே எதிர்த்துச் சமர் புரிந்த பூலித்தேவன், அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம் ஆகியோரை நினைவுபடுத்தியிருக்கிறார்.
20வது நூற்றாண்டில் இவர்களைத் தொடர்ந்து கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனார், விடுதலைப் போராட்டத்திற்குக் கட்டியங் கூறிய மகாகவி பாரதியார், சுப்பிரமணிய சிவா, நீலகண்ட பிரம்மச்சாரி போன்றோர் நெல்லைச் சீமையில் களம் கண்ட குறிப்புகளையும் தெரிவிக்கிறார்.
சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள ஐந்திணைக்குக் களமாக அமைந்த ஐவகை நிலங்களும் நெல்லைச் சீமையின் பன்முகத் தன்மைக்குத் தளமாக விளங்கின மேற்குத் தொடர்ச்சி மலையின் முகட்டில் உருவாகும் பொருநை நதி, வங்கக் கடலில் சங்கமமாகும் இடமும் புனிதமாகக் கருதப்படுகிறது.
வானோங்கிய கோபுரங்களைக் கொண்ட பெரும் கோவில்களும் உள்ளன. கிறிஸ்துவ மதம் மக்களிடையே வேரூன்றிய காலத்தில் உருவான பழமையான தேவாலயங்களும் உள்ளன.
இஸ்லாமியர்களின் பழம்பெரும் பள்ளிவாசல்களும், தர்காக்களும் உள்ளன. இவையெல்லாம் மதநல்லிணக்க மாண்புகளை வெளிப்படுத்துவதாக நூலாசிரியர் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
தேசிய இயக்கம், பொதுவுடைமை இயக்கம், திராவிட இயக்கம் ஆகிய முப்பெரும் இயக்க வரலாறுகளை அரசியல் சார்பு நிலையில்லாமல் குறிப்பிட்டிருப்பது பாராட்டத்தக்கது.
நுண்கலைகளான இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் வித்தாக வாழ்ந்த மேதைகளையும் நினைவுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.
ஆழமாக ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்களுக்குத் தூண்டு கோலாக இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது நண்பர் கே.எஸ். இராதா கிருஷ்ணனின் சீரிய பணிக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை
11.10.2004
ஆர். நல்லகண்ணு
கி.ரா. அவர்களின்
அணிந்துரை
அன்பார்ந்த கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, நலம்.
திடீரென்று எதிர்பார்க்காமல் உங்களிடமிருந்து கூரியர் தபால் வந்தது; அதிர்ச்சியான மகிழ்ச்சி.
அதனுள் இருந்த உங்கள் கடிதம் பார்த்த பிறகு ஒரு ஆசுவாசம்.
அரசியலிலிருந்து விடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது
என்று சொல்லியிருக்கிறீர்களே; அப்பாடா! என்று பெருமூச்சு விட்டேன். காலுக்குச் சரிவராததைக் கழற்றி எறி
என்று பெரியவர்கள் சொன்னது அனுபவபூர்வமான வார்த்தையல்லவா?
செட்டிக்கு என்னத்துக்குச் செம்மைச் சனியன்?
(செம்மை: ஜென்ம)
என்று பெரியவர்கள் சண்டை பிடிப்பார்கள் (புத்தி சொல்லுவார்கள்).
எடுக்க வேண்டிய எடுப்புதான் எடுக்கணும்; எடாத எடுப்பை எடுத்தா படாத பாடு படுவார்கள்
என்றும் சொல்லுவார்கள்.
எப்படியோ, திருவிழாவில் தொலைந்த குழந்தை கிடைத்துவிட்ட ஒரு நிம்மதி எனக்கு, உங்களைப் பற்றி.
உங்கள் முடிவு ரொம்பச் சரி.
பின்னால் ஏற்படப்போகும் ஒரு திருப்பம் வரை இவைகளையே பின்பற்றி வாருங்கள் காலம் இப்படியே போய்விடாது.
அடுத்து,
உங்களின் நெல்லை ஒரு புதிய கெஜட் (நிமிர வைக்கும் நெல்லை) பார்த்தேன். மளமளவென்று வேகமாகப் பல பக்கங்கள், நடுநடுவே.சி.ல பக்கங்கள் விட்டுப்போனாலும், படித்தேன்.
இப்படியும் ஒன்று வர வேண்டியதுதான் என்று பட்டது நல்ல முயற்சி; பாராட்டுக்கள்.
எழுத்து சம்பந்தமாக நீங்கள் எது செய்தாலும் நேர்த்தியாக, பூரணமாக ஈடுபாட்டோடு செய்கிறீர்கள். இதில் நீங்கள் ஒரு அயராத உழைப்பாளியாகத் திகழ்கிறீர்கள். இந்த மாதிரியான நூல்களில் தகவல்களும், புள்ளி விவரங்களும் இருப்பதோடு வாசகனுக்கு ஆயாசம் ஏற்படாதவாறு கொஞ்சம் கதைகளையும் சேர்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக,
கலெக்டர் ஈ.பி. தாம்ஸன் காலத்தில், சுலோசன முதலியார் பாலம் கட்டியதாகச் சொல்லுகிறீர்கள். இந்தப் பாலம் ஏற்பட்டதுக்கான ஒரு மூலக்கதை இருக்கிறது.
அந்தக் காலத்தில், இப்போது போன்ற நவீன வாகன வசதிகள் ஏற்படாத காலம். காசிக்குப் போகிறவர்களெல்லாம் நடந்தேதாம் போகணும். போய்த் திரும்புகிறதென்பது பெரிய்ய பாடு. காசி என்றால் அந்த ஒரு சேத்திரம் மட்டுமல்ல; அதைத் தொடுத்துப் பல சேத்திரங்களுக்கும் போகிறது என்றும் உண்டு. போய்த் திரும்ப மாசக்கணக்கு என்றில்லை, வருசக்கணக்கும் ஆகிவிடும். அதுவும் வயோதிகக் காலம் என்று ஆகிவிட்டால் அவ்வளவுதாம்; ஒரு நாடு என்று போகிறவர்கள் திருநாடு (மோட்சம் (சாவு) வைணவ வழக்குச் சொல், திருநாடு) போய்ச் சேர்ந்துவிடுகிறதும் உண்டு.
சுலோசன முதலியாருக்கு ஒரு சொந்தக்கார அம்மையார் இருந்தார். விதவை; பிள்ளை குட்டி கிடையாது. வயதும் ஆகி விட்டது. காசிச் சேத்திரம் போய் உயிரை விட்டால் நேராய் கைலாசமே போய்ச் சேர்ந்துவிடலாம் என்று புறப்பட்டார். தன்னிடம் இருந்ததை எல்லாம் ஒரு பொட்டலமாக்கிக் கட்டித் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான சுலோசன முதலியாரிடம் தந்து, திரும்ப வந்தால் வாங்கிக்கிறேன் என்று தந்துவிட்டுப் போனவர்தாம். வருசங்கள் பல ஆகிவிட்டன.
இனி ஆள் வராது என்று ஆகிவிட்டது. அந்தப் பொட்டலத்தை என்ன செய்ய என்று தெரியவில்லை அப்படி அதில் என்ன பிரமாதமாய் இருக்கப்போகிறது என்று அவிழ்த்துப் பார்த்தால் - வைர வைடூரியம் பதித்த தங்க நகைகள், தங்கக் காசுகள் என்று விலை மதிக்க முடியாத முதல் இருந்தது. அந்தப் பொட்டணம் அங்கே இதுவரை யாரும் சட்டை பண்ணாத ஒரு இடத்தில், அவருடைய அவ்வளவு பெரிய வீட்டில், ஒரு அறையின் மூலையில் பரணில் கேட்பார் அற்றுக் கிடந்தது.
சரி; இன்னுங் கொஞ்சநாள் காத்திருந்து பார்ப்போம் என்று பார்த்தார் முதலியார். நாட்கள், வருசங்கள் என்று காலம் போய்க்கொண்டே இருந்தது. அந்த அம்மையாருக்கு வேற அக்குதொக்கு என்று யாரும் கிடையாது இருந்தால் அவர்களிடமாவது கூப்பிட்டுத் தந்துவிடலாம். என்ன செய்ய, யாரிட்டெக் கேட்க என்று தட்டளியுதார்.
அந்த ஊரில் முதலியார் மதிக்கிற ஒரு சாமியார் இருந்தார் அவரைப் பெரிய சித்தர், யோகி என்றெல்லாம் சொல்லுவார்கள் இந்த மாதிரியான சித்தர்கள், யோகிகள் சமாச்சார மெல்லாம் ரொம்ப விநோதமாக இருக்கும். அவர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள். திறந்து பேசினால் என்ன சொல்லுகிறார் என்று அதை விளக்கிச் சொல்ல அதுபோல இன்னொரு சாமியாரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேணும்! முதலியார் போய்ச் சேர்ந்த நேரம், அந்தச் சாமியார் கண்ணை மூடி உட்கார்ந்து கொண்டிருந்தார். இவருக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை. வந்து நின்று ரொம்ப நேரம் ஆகிவிட்டது. சரி, போய்ட்டு இன்னொரு சமயம் வருவோம் என்று திரும்பி ஒரு எட்டு எடுத்து வைத்திருப்பார்; யாருடா
என்ற குரல் கேட்டது.
சாமீ; அடியேன் வந்திருக்கேம்
என்று சொல்லி, நெடுஞ்சாங்கிடையாக் கால்லெ விழுந்து சேவித்தார்.
எழுந்து கும்பிட்டுக்கொண்டே நின்றார். சாமியார், என்ன ஏது என்று கேட்காமல், பேசாமல் கம்மென்று முதலியாரைப் பார்த்துக்கொண்டே இருந்தார். சரி; சாமியார் கேக்க மாட்டார், நாமதாம் சொல்லணும் என்று விசயத்தை ஆதியோட அந்தமாய் நடந்ததை யெல்லாத்தையும் சொல்லி முடித்துவிட்டு, சாமி, இப்போ அந்தப் பொட்டணத்தை நா என்ன செய்யட்டும்
என்று கேட்டார்.
ஆத்துல கொண்டு போடு போ
என்றாராம்! முதலியார் மனசுக்குள்ளே சிரிப்பு ஒரு பக்கம்; வருத்தம் ஒரு பக்கம், இந்தக் கோட்டிக்கார சாமியார் இப்படிச் சொல்லீட்டாரே என்று.
வெள்ளம் போற ஆத்துல போடுறதா, வெறும் ஆத்துல போடுறதா என்று கேட்கலாமா என்று தோண்ணதாம்.
அது வேற கோவப்பட்டு, ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்லீட்டா என்ன செய்ய? சரீன்னு சொல்லி, திரும்ப ஒரு கும்பிடு போட்டுட்டு வந்துட்டார். தாமிரபரணி ஆத்துக்கு அந்தப் பக்கம் உள்ள ஊர்ல முதலியாருக்கு நஞ்சை நிலங்கள் இருந்தன. அந்த ஆண்டு நெல் நல்ல விளைச்சல். அறுவடை முடிந்து நெல் மூட்டைகள் வண்டிகள்ளெ பாரம் ஏத்தி ஆத்தைக் கடந்து வாரபோது, வெள்ளம் ஆத்துல பெருவாரியா வந்து, ஆட்கள், வண்டி மாடுகள், நெல் மூட்டைகள் என்று எல்லாம் ஆத்தோடு போய்விட்டன. முதலியாருடைய நெல்வண்டிகள் மட்டுமில்லை; பல பேருடைய நெல் மூட்டைகளும் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய்விட்டன.
எல்லோருக்குமே அப்பதான் தெரிந்தது, ஒரு பாலம் கட்டி இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்காது என்று. சரி; இப்பொ பாலம் கட்டணும். சர்க்கார் அனுமதி தந்தது; கொஞ்சம் உதவியும் கிடைத்தது. தன்னிடமிருந்த பணத்தையும் போடலாம். மீதிக்கு என்ன செய்ய? அப்பதான் ஞாபகம் வந்ததாம், அந்தச் சாமியார் சொன்ன ஆத்துல கொண்டு போடுடா
என்ற வாசகம்.
பாலத்துக்குச் சுலோசன முதலியார் வாணம் (அஸ்திவாரம்) தோண்ட ஆரம்பிக்கும்போது சிந்துபூந்துறையிலுள்ள பெரிய மனிதர்களை அழைத்திருக்கிறார். அப்படி வந்தவர்களில் ஒரு வயது முதிர்ந்த பெரியவர் சொன்னார்: நாஞ் சின்ன புள்ளெயா இருந்தப்பொ இங்கே ஒரு பாலம் இருந்தது அந்தப் பாலம் ஒரு பேமழை வெள்ளத்துல அடிச்சுகிட்டுப் போயிட்டது.
முதலியாருக்கு இது ஒரு எச்சரிக்கையா அமைந்தது.
அந்தக் காலத்தில் சிமெண்டு கிடையாது, காரைதான். காரைச் சாந்துக்குக் கடுக்காய், கருப்பட்டி, பதநீர் சேர்த்து குழைத்துப் பக்குவப்படுத்திக் கட்டினால் பாறை போல் உறுதியாக நிற்கும். அப்படிக் கட்டப்பட்டதுதான் இந்தச் சுலோசன முதலியார் பாலம்.
நாடு வெள்ளை ஆட்சியிடமிருந்து நம்மவர்களுக்குக் கைமாறிய பிறகு வாகனப் போக்குவரத்து எல்லாம் அதிகமாகியதால் அகலமான பாலம் தேவைப்பட்டது. சுலோசன முதலியார் பாலம் ரொம்பப் பழையது அதை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய ஒரு அகலமான பாலம் கட்டுவது என்று அரசு தீர்மானித்தது பாலத்தை இடிக்க ஆரம்பித்தார்கள்; இடிக்கவே முடியவில்லை இடிக்கக் காண்டிராக்ட் எடுத்தவர் மேலிடத்தில் போய்ச் சொன்னார். பெரிய பெரிய இன்சினீயர்களெல்லாம் வந்து பார்த்துவிட்டு, இது இடிக்க வேண்டிய பாலமில்லை; ரொம்ப உறுதியாக நிற்கிறது. இதன் பக்கத்திலேயே இதை ஒட்டி ஒரு பாலம் கட்டி இதோடு சேர்த்து அகலமாக்கிவிடலாம் என்று சொல்லி, அதேபடி சேர்த்துவிட்டார்கள். இன்றும் சுலோசன முதலியார் பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கிறது இந்தப் பாலம்.
இந்த நூலைச் சலிப்பில்லாமல் படிக்கும்படி உங்கள் தமிழ் நடை அமைந்திருக்கிறது. கதைகள் படிப்பது போல் சுவாரசியமாக இருக்கிறது. வேகமாகப் படிக்க முடிகிறது பைசா செலவில்லாமல் உங்களோடு நெல்லைச் சீமை பூராவும் சுற்ற முடிகிறது.
தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர், திருக்குற்றாலம் பக்கத்திலுள்ள சாம்பவர் வடகரை கிராமத்தில் பிறந்தவர் என்று படித்தபோது ‘அட இவரு நெல்லைச் சீமையில் பிறந்தவரா’ என்று நினைத்துக் கொண்டேன்.
இவை போக, பல சரித்திரச் சான்றுகள், குறிப்புகள் போன்றவை காணக் கிடக்கின்றன இவை பல விசயங்கள் வேண்டியவர்களுக்கு உபயோகமானவை.
சிரமப்பட்டுச் சேகரித்திருப்பது தெரிகிறது.
வைகோ பற்றி ஞாபகமாகவும், மிகச் சரியாகவும் பதிவு செய்துள்ளீர்கள்.
உங்கள் உழைப்பு வீண்போகாது.
மிகவும் போற்றப்படும்!
22.09.2004
புதுவை - 8
நல்வாழ்த்துக்களுடன்
கி. ராஜநாராயணன்
சொந்த மண்ணின் பெருமை தாய்நாட்டின் பெருமை!
டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி
நிமிர வைக்கும் நெல்லை
என்ற தலைப்பில் வெளிவரும் இந்த நூல், நண்பர் திரு. கே.எஸ். இராதாகிருஷ்ணனின் சீரிய முயற்சியைக் காட்டுகிறது. தெற்குச் சீமை, வீரம் செறிந்த மண்; கலாச்சாரப் பதிவுகள் கொண்ட இடம்; பொருநை நதி பாயும் மண்; அது மட்டுமல்ல, ‘சிந்துபூந்துறைகமழ் திருநெல்வேலி’ என்று திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட ஊரைக் கொண்ட பகுதி; பாண்டியர் ஆண்ட பூமி என்று அடுக்கடுக்கான தகவல்களைத் தொகுத்த விதம் படிப்போர் உள்ளத்தை ஈர்க்கும் சொந்த மண்ணிலும், அதன் பாரம்பரியத்திலும் பெருமை கொண்டால்தான், தாய்நாட்டுப் பெருமையை ஒருவர் உயர்த்த முடியும் என்பதை வலியுறுத்தும் இந்த நூல் சிறப்பானது. அவரது சிறந்த உழைப்பிற்கும், அவருடைய பொது வாழ்விற்கும் என் வாழ்த்துக்கள். நூலாசிரியரின் நுண்மாண் நுழைபுலம் பல இடங்களில் பளிச்சிடுகிறது. தமிழ்ப் பெருமக்கள் இந்நூலைப் படித்துப் பயன் பெற விரும்புகிறேன்.
4.12.2004
சென்னை
டாக்டர் இரா. கிருஷ்ணமூர்த்தி
ஆசிரியர், தினமலர்
தந்தையர் நாடென்னும் போதினிலே…
மாலன்
ஓர் உண்மையைச் சொல்லிவிட வேண்டும். நெல்லை மண்ணில் நெடுநாள் வாழ்கிற பேறு எனக்கு வாய்த்ததில்லை. தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள கல்லூரிகள் எதிலும் கற்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நெல்லைப் பேச்சு வழக்குகூட எனக்குக் கிடையாது. என்றாலும், எனக்கு ஊர் நெல்லை என்று சொல்லிக்கொள்ளும்போது நெஞ்சம் பூரிக்கிறது; நினைவிழந்துபோகிறது காரணம், அது என் மனம் வாழும் மண்.
‘தந்தையர் நாடென்னும் போதினிலே, ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே’ என்ற மகாகவியின் வார்த்தைகளை அனுபவமாய் உணர முடிகிறது. எனக்கு மட்டுமல்ல, நீங்கள் ஒரு தமிழ்ப் படைப்பாளியாக, பத்திரிகையாளனாக, சிந்தனையாளனாக இருந்தால் உங்களுக்கும் அதுதான் தந்தையர் நாடு.
தமிழ்க் கவிதை உலகின் சிகரம் மகாகவி பாரதி. தமிழ்ச் சிறுகதைகளின் உச்சம் புதுமைப்பித்தன் பிரதாப முதலியார் சரித்திரத்திற்கும் முந்திய படைப்பு ஆதியோர் அவதானி. அது தான் தமிழின் முதல் நவீன நாவல் (இதன் பிரதி ஒன்று இப்போதும் லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருக்கிறது) அதை எழுதியவர் சேஷையங்கார் அவருக்கும் சரி, தமிழ் நாவல் உலகின் ஆதிநாயகர்களில் ஒருவரான மாதவையாவிற்கும் சரி, நெல்லைதான் தாய் மண். நாடக இலக்கியம் தந்த மனோன்மணியம் சுந்தரனாராகட்டும், மேடை நாடகத்தின் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் ஆகட்டும், நெல்லையில் முகிழ்த்தவர்கள் மேடைப் பேச்சுக்கு இலக்கணம் வகுத்த ரா.பி. சேதுப் பிள்ளையும், நாவலர் சோமசுந்தர பாரதியும் திருநெல்வேலிக் காரர்கள் நவீன காலத் தமிழின் நாற்றங்கால்களான நாளிதழ்களின் ஆசிரியர்கள் டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.என். சிவராமன் துவங்கி, நெல்லை தந்த பத்திரிகையாளர்களின் பட்டியல் நெடிது. பாமரனிடம் பத்திரிகையை எடுத்துச் சென்றவரும், பத்திரிகை அலுவலகத்தை ஒரு பல்கலைக்கழகம் போல நடத்திய வருமான சி.பா. ஆதித்தனாரின் சீமை நெல்லை.
படைப்பிலக்கியம், பத்திரிகை இலக்கியம், மேடை இலக்கியம் எல்லாவற்றிற்கும் திருநெல்வேலிதான் ஊற்றுக்கண். தாமிரபரணியைப் பருகி வளர்ந்தவர்கள், தமிழ் பருகி வளர்ந்தவர்கள் காவிரி, தென்பெண்ணை, பாலாறு எனத் தமிழக நதிகளைப் பட்டியலிடும் பாரதி பொருநையை நெருங்கும்போது, தமிழ் கண்ட வையை, பொருநை
என்று ஒரு முன்னொட்டு சேர்க்கிறான். தமிழ் தோன்றியதே பொதிகையில்தான் என்று எண்ணுபவர்கள் உண்டு. அங்கு வாழ்ந்த அகத்தியன் தான் இலக்கணம் செய்து கொடுத்தான் என்று பாரதி சொல்கிறான். அகத்தியனை ஏற்க மறுப்பவர்கள் கூடக் கால்டுவெல்லை மறந்துவிட முடியாது. ஒப்பிலக்கணம் கண்ட அந்தப் பரங்கித் தமிழன் வாழ வந்த ஊர் நெல்லை.
இப்போது சொல்லுங்கள், தமிழறிந்தவர்கள் எங்கு பிறந்திருந்தாலும் அவர்களுக்கும் தந்தையர் பூமி நெல்லைதானே!
அது ஏதோ கனவுகளில் மிதந்தவர்களின் கற்பனையூர் அல்ல அது ஞான பூமி நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார் போன்ற வைணவ விருட்சங்கள் வாழ்ந்த மண். சைவ சித்தாந்திகளின் சிந்தனை செழித்த ஊர். சீறாப்புராணம் தந்த உமறுப்புலவரும், இரட்சண்ய யாத்திரீகம் எழுதிய கிருஷ்ணப்பிள்ளையும் இங்கே உலவியவர்கள்தான். சமணர்கள் நடத்திய கலாசாலை கழுகு மலையில் அமைந்திருந்தது. இது அத்தனை மதங்களும் கை கோத்து நடந்த நாடு. மதம் பிடித்து அலைந்த மண் அல்ல.
இந்தியாவிலேயே முதன் முதலில் தொழிற்சங்கம் கண்ட பெருமை நெல்லைக்கு உண்டு கோரல் மில் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுக்க வ.உ.சி. அதை ஆரம்பித்தார். ஆம், கப்பலோட்டிய தமிழன்தான் அவர் தொழில் அதிபர் மட்டுமல்ல, தொழிற்சங்கவாதியும் கூட. இலக்கியம் இந்த மண்ணில் நதியாக நடந்து நெஞ்சை நனைத்தது என்றால், அரசியல் இங்கே எரிமலையாகக் கனன்று எழுச்சியூட்டியது. தேசிய அரசியலின் திலகம் வ.உ.சி., திராவிட இயக்கத்தை உயிர் கொடுத்து வளர்த்த கே.வி.கே. சாமி, இடதுசாரி இயக்கங்களின் இணையற்ற தலைவர்கள் சங்கரய்யா, நல்லகண்ணு, முதலாளித்துவம் பேசிய சுதந்திரா கட்சியின் எஸ்.எஸ். மாரிசாமி, இஸ்லாமியர்களின் இணையற்ற தலைவர் காயிதே மில்லத் என்று எல்லா அரசியல் எண்ணங்களுக்கும் இடமளித்தது எங்கள் பூமி.
எங்களாலே சவால் விட்டுச் சொல்ல முடியும். நெல்லை மண்ணில் விளைந்தவர்களை, அவர்கள் அளித்த கொடைகளைக் குறிப்பிடாமல், எவரும் இலக்கியத்தின் சரித்திரத்தை எழுத முடியாது; ஆன்மீகப் பாதைகளை வரையறுக்க முடியாது; அரசியல் வரலாற்றை எழுத முடியாது; சமூக வரலாற்றை எழுத முடியாது; ஏன் இந்திய சரித்திரத்தையே எழுத முடியாது.
எங்கள் சீமையே ஒரு சிறிய இந்தியா. இங்கே நிமிர்ந்த குன்றுகள் உண்டு. நடக்கிற நதி உண்டு. கத்துகிற கடல் உண்டு. பைம்பொழில்கள் உண்டு. பசுஞ்சோலைகள் உண்டு. பாரெங்குமிருந்து பறவைகள் வந்து இளைப்பாறிப் போகிற இடங்கள் உண்டு. பாய்ந்து வருகிற அருவி உண்டு. காய்ந்துபோன கரிசல் மண்ணும் உண்டு. மதுரைக்குக் கடல் இல்லை தஞ்சைக்குக் குன்றில்லை சென்னைக்கு நதியில்லை. ஆனால், இதுவோ அனைத்தையும் கொண்ட ஓர் அருள் பூமி.
இந்த மண்ணின் எல்லா முகங்களையும் உங்களுக்குக் காண்பிக்கிற ஓர் உற்சாகத்தில் நண்பர் ராதாகிருஷ்ணன் இந்த நூலை எழுதியிருக்கிறார். கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்துகிற வேலை என்றாலும் கவனமாகச் செய்திருக்கிறார். நூலைப் பல அங்கங்களாக வகுத்துக்கொண்டு, செம்மையாக அவற்றைச் செதுக்கிச் செதுக்கிச் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறார். நெல்லையப்பர் கோவிலின் இசைத் தூண்கள் போல, இந்த நூலின் அத்தியாயங்கள் தனித்தும், அதே நேரம் ஓர் ஒத்திசைவோடும் விளங்குகின்றன. கிருஷ்ணாபுரத்துக் கோவில் சிற்பங்கள் போல, நுட்பமாகவும் அழகாகவும் இருக்கின்றன சாயர்புர மாதா கோவில் கண்ணாடிச் சன்னல் போல, வண்ணமும் ஒளியும் பொருந்தியிருக்கின்றன. உவரி மாதா கோவில் போல், நவீனமாகவும் உபயோகமாகவும் இருக்கின்றன. திருப்புடைமருதூர் கோவில் சித்திரங்கள் போல, வரலாற்றை அழியாத ஓர் ஆவணமாக அவை கொண்டிருக்கின்றன.
திருநெல்வேலித் தமிழன் ஒருவனாக இருந்தால் லாலா மிட்டாய்க் கடை வைப்பான், இருவராக இருந்தால் தேசாந்திரம் போவார்கள், மூன்று பேர் சேர்ந்தால் தமிழ்ச் சங்கம் ஆரம்பித்து விடுவார்கள் என்று ரா.பி. சேதுப்பிள்ளையோ அல்லது வேறு யாரோ எழுதியதாக ஞாபகம். ராதாகிருஷ்ணன், மிட்டாய்க் கடையின் இனிப்பும், சுற்றுப்பயணத்தின் சுவாரசியமும், தமிழ்ச் சங்கத்தின் ஞானமும் பொலிய இந்த நூலைத் தந்திருக்கிறார்.
நிமிர்ந்து நிற்பது நெல்லை மட்டுமல்ல, இராதாகிருஷ்ணனும் தான்.
அண்ணா பிறந்த நாள், 2004
சென்னை - 41
வாழ்த்துக்கள்
மாலன்
நிமிர வைக்கும் நெல்லை
தேரை வடம் பிடிக்க வாருங்கள்..!
வாஸந்தி
நிமிர வைக்கும் நண்பர் கே.எஸ்.ஆர்.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் எனக்கு, தில்லியில் அறிமுகமானார். அரசியல்வாதி என்ற அறிமுகத்துக்குப் பின், இனிய நண்பரானவர். தமிழ்நாட்டுக்கு நான் சென்ற போதெல்லாம் என்னைச் சந்திக்க வருவார். அரசியல் விஷயம் தவிர, பல்வேறு சமூகப் பிரச்சினைகளைப் பற்றியும் பேசுவோம். அரசியலில் அவருக்கு இருக்கும் ஈடுபாடும் நடைமுறை அரசியலில் இருக்கும் முரண்களைக் கண்டு அவர் படும் வேதனையையும், வருத்தத்தையும் நான் உணர்ந்தவள். அவரது பேச்சில் எப்பவும் சமூக மேம்பாட்டிற்கான நல்ல சிந்தனைகள் வெளிப்படும்: நிலவும் பிரச்சினைகளைப் பற்றிய கவலை எதிரொலிக்கும். அதில் எந்தப் பாசாங்குத்தனமும் இருக்காது. ஆனால், நான் அவரை ஓர் அரசியல்வாதியாகவே கண்டிருக்கிறேன். பூர்வாங்க ஆய்வு செய்து திரட்ட வேண்டிய இதிகாச, இலக்கிய ஆதாரங்கள் கொண்ட ஒரு நூலை எழுதும் ஆற்றல் அவருக்கு இருக்கும் என்று நிச்சயமாக நினைத்திருக்கவில்லை. ‘நிமிர வைக்கும் நெல்லை’ என்ற, அவர் எழுதிய நூலை அனுப்பி ஓர் அணிந்துரை வழங்கக் கோரியபோது, நான் ஐயத்துடனேயே படிக்க ஆரம்பித்தேன். படிக்கத் தொடங்கியதும், புத்தகத்தைக் கீழே வைக்க முடியாமல், என்னை நிமிர்த்தி உட்கார வைத்து விட்டார் நண்பர். நெல்லையை மையமாகக் கொண்டு அவர் பின்னியிருக்கும் தென்னகச் சரித்திரத்தின் சிறப்புகளைப் புள்ளி வைத்துக் கோலம் போல அழகுற நகர்த்திக் கோடிழுத்து ஒரு தேரை உருவாக்கி நம் முன் நிறுத்துகிறார். வாருங்கள் எல்லாரும், வடம் பிடிக்க என்று வாசிப்பவரை அன்புடன்கைபிடித்து இழுக்கிறார்.
அரசியலில் மூழ்கியிருக்கும் இராதாகிருஷ்ணன் நெல்லையைப் பற்றி ஒரு புத்தகம் இப்போது எழுதக் காரணமென்ன என்று யோசித்தேன். அதற்கான விடை கடைசியில்தான் கிடைத்தது அவரே அதை விளக்குகிறார்.
அனைத்திலும் சிறப்பும், கீர்த்தியும் பெற்ற இந்த மாவட்டத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு சகோதர பாசத்தை மறந்து, சாதி வேற்றுமைகளில் கலவரங்கள் ஏற்பட்டன. மிகவும் வேதனையைத் தந்தது. இதுமாதிரி துயர்மிகு சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க வேண்டுமென்ற ஆசையின் காரணமாக நெல்லையின் சிறப்பை அறிந்தாவது சகோதர பாசத்தோடு ஒன்றிணைய வேண்டும் என்பதே நெல்லையின் சிறப்பை அறிந்தவர்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை.
சமூகத்தின் மீது தீவிரமான அக்கறையும், அன்பும் கொண்ட ஒரு மனிதருக்குத்தான், அரசியலையும் கதை போல நெஞ்சை நிமிர்த்த வைக்கும் சரித்திர நிரூபணங்களுடன் இலக்கிய மேற்கோள்கள் காட்டி நயம்படச் சொல்ல நினைக்கத் தோன்றும். தொண்ணூறுகளின் இறுதியில் தென் தமிழ்நாட்டை ஜாதிச் சண்டைகள் உலுக்கியபோது, அந்த வெறியின் சூட்டைப் பத்திரிகையாளர் என்ற முறையில் நான் நேரில் கண்டவள். எத்தனையோ பொதுவான பிரச்சினைகள். வறட்சி, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி அறிவின்மை, குழந்தைத் தொழிலாளர், பெண்சிசுக் கொலை என்று ஒட்டுமொத்த சமூகத்தையும் வாட்டினாலும், சிறுவரிலிருந்து முதியோர் வரை தங்கள் ஜாதி அடையாளத்தையே தங்கள் பாதுகாப்பாகக் கருதி, உடும்புப் பிடியாக அதைப் பிடித்துக்கொண்டு வெறுப்பில் தகிப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஜாதியால் வந்த வெறுப்பல்ல ஏழ்மையாலும் வந்த பிளவல்ல. அறியாமையால் ஏற்படும் விரோத மதில்கள் அவை என்று இராதாகிருஷ்ணன் தமது புத்தகத்தில் சொல்லாமல் சொல்கிறார். பொருளாதார முன்னேற்றமே சாதிக் கலவரங்களுக்குத் தீர்வாகும் என்ற சோஷலிச வாதத்திற்கு இராதாகிருஷ்ணன் பண்பாட்டுத் தீர்வை முன் வைக்கிறார். படித்தவர், வசதியுள்ளவர் என்ற வேற்றுமை இல்லாமல் ஜாதி வெறி, ஆதார மனித நேயத்தை மாந்தருள் பொசுக்கிவிட்டதைக் கண்டிருக்கும் அவரது அனுபவமே இத்தகைய ஓர் எண்ணத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
மிகப் பொருத்தமாக மத நல்லிணக்கம் என்பதே அவரது முதல் தலைப்பாகிறது. ஒரு காலத்தில் தெற்குச் சீமை என்று பெருமையோடு அழைக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்டம் (இன்றைய நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களையும், விருதுநகர், சாத்தூர், திருவில்லிப்புத்தூர் ஆகிய வட்டங்களையும் உள்ளடக்கியது.) வீரம் செறிந்தது மட்டுமல்ல. மத நல்லெண்ணத்துக்கும் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தது என்று விளக்குகிறார். சைவத்தைப் பல ஆதீனங்கள் ஆதரித்தது போல, வைணவ மடங்கள் வைணவத் திருப்பணிகள் ஆற்றின கிறித்துவம், இஸ்லாம், சமணம், பௌத்தம் ஆகிய மதங்களும் முரணில்லாமல் கோலோச்சின என்பதற்குச் சரித்திர, இலக்கியச் சான்றுகளை முன்வைக்கிறார். பல்வேறு எல்லைகளிலிருந்து தெற்கே ஆள வந்த பிற மொழி பேசும் அரசர்களால் பல இனத்தவர், பல மொழி பேசுபவர் இயல்பாகத் தெற்கில் சங்கமித்ததும், வெவ்வேறு சமூகங்கள் இணக்கத்துடன் அவரவர் தர்மப்படி வாழ்ந்துவந்ததும் சுவாரஸ்யமாகச் சொல்லப்படுகின்றன.
ஆழ்ந்த சரித்திர ஞானத்துடன் விவரங்கள் அடுக்கப்படும் பக்கங்களில் அடிநாதமாக மக்கள் சமூகங்களிடையே நிலவிய பிணைப்பு, மூலக் கருத்தாக வெளிப்படுகிறது.
கட்டபொம்மனின் தீரமும், பூலித்தேவரின் வேகமும், நெல்லைச் சீமையில் சுதந்திரப் போராட்டத்தின்போது ஈடுபட்டவர்களின் விவரங்களையும் படிக்க நேரிடும்போது, தமிழ்நாட்டின் சரித்திரமே அந்த முக்கியமான காலகட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் மையம் கொண்டிருந்ததான எண்ணம் மேலோங்குகிறது. இதற்கிடையில் மாவட்டத்தின் எந்தச் சிறு தொகுதியையும் விடாமல், தேச பக்தர்கள், இலக்கியவாதிகள் ஆகியோர் ஆற்றிய தொண்டின் சிறப்பு எல்லாம் மறக்காமல் உவகையுடன் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எட்டயபுரம் பாரதி விழாக் கொண்டாட்டத்துடன் புத்தகம் முடிவுறும்போது, தமிழ்நாட்டின் சிறப்பனைத்தையும் தென் தமிழ்நாடே உள்ளடக்கமாகக் கொண்டிருந்த பெருமையை நினைத்து நமது நெஞ்சு நிமிர்கிறது. இத்தனை சிறப்புகள் கொண்ட இதிகாசப் பின்னணிக்கு முற்றிலும் முரணாக, இப்போது சாதிச் சண்டையில் தென் தமிழ்நாடு கருகிப்போவது மிக அநியாயமாகப் படுகிறது. இராதா கிருஷ்ணன் தற்கால நிகழ்வுகளையோ, சாதிச் சண்டைகளுக்கான காரணங்களையோ ஆராயவில்லை. பழைய பெருமைகளை நினைவூட்டினால் ஒற்றுமைக்கு மார்க்கம் கிடைக்கும் என்பது அவரது நம்பிக்கை. அறிவுபூர்வமாகவும், உணர்வுபூர்வமாகவும் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினை அது என்று அந்த மண்ணில் பிறந்து வளர்ந்த இராதாகிருஷ்ணன் அறிவார். நல்ல எண்ணத்துடன் சமூகத்தைப் பற்றின ஆத்மார்த்தக் கவலையுடன் எழுதப்பட்டிருக்கும் இப்புத்தகத்தைப் படிப்பவர்கள், தங்கள் சமூகத்தில் புகுந்துவிட்ட நஞ்சு அகல முற்படுவார்களானால் அது இராதாகிருஷ்ணனுக்குக் கிடைத்த பிரத்யேக வெற்றியாக இருக்கும்.
வாழ்த்துக்கள்; பாராட்டுக்கள்.
28 10 2004
பெங்களூர்
வாஸந்தி
திருநெல்வேலியுறை செல்வர்தாமே
குரு மகா சன்னிதானம் மதுரை ஆதீனகர்த்தர்
நமது அன்பிற்கும், பாராட்டுதலுக்கும், உரிய திரு. கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களுக்குத் திருவருளைச் சிந்தித்து எழுதுவது. தங்கள் அன்பு மடலும் நிமிர வைக்கும் நெல்லை
யும் கண்டு மகிழ்ந்தோம். தாமிரபரணி மண்ணின் மகிமை, மாவட்டத்தின் எழில்மிகு அமைப்புகள், விடுதலைப் போராட்ட வேள்வித் தீயில் பங்கேற்றுப் போராடிய தியாகிகளின் வீரதீரச் செயல்கள்,