Iraiyuthir Kaadu - Part 1
()
About this ebook
பழநிமலை நவபாஷன முருகனை போகர் சித்தர் எப்படி செய்தார்? எதற்காகச் செய்தார்? என்கிற வரலாற்றுச் செய்திகளை 'அன்று' பகுதியிலும், வாழ்க்கை முறையைச் சொல்லும் "இன்று" பகுதியில் அமானுடம் கலந்த ஓர் ஆச்சரிய முரணாக தொடர் முழுக்க வரும் நாகம் அதில் ஓர் அங்கம். அதுமட்டுமல்லாமல் அறிவுப்பூர்வமான கேள்விகளை பாரதி என்கிற கதாநாயகி மூலம் விடைகாணமாட்டாத ஒரு கேள்விக்குறியாகவே தொடர்வதை காண வாசிப்போம் வாருங்கள்...!
Read more from Indira Soundarajan
Rajathanthiran Rating: 5 out of 5 stars5/5Dhinam Oru Uyir! Rating: 5 out of 5 stars5/5Pei... Pisasu... Bootham Rating: 4 out of 5 stars4/5Sivaragasiyam Rating: 5 out of 5 stars5/5Asura Jathagam Rating: 5 out of 5 stars5/5Kannip Parunthu Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Nandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Chidambara Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Mandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Aranmanai Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Thiruvannamalai Rating: 3 out of 5 stars3/5Kaatru… Kaatru... Uyir Rating: 3 out of 5 stars3/5Manam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Yandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Sivam Rating: 4 out of 5 stars4/5Thottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Kaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Aval Oru Savithri Rating: 5 out of 5 stars5/5Maayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Markazhi Roja Rating: 5 out of 5 stars5/5Sathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Kannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Rudhra Veenai - Part 3 Rating: 4 out of 5 stars4/5Nooravathu Kadathal Rating: 5 out of 5 stars5/5Mandhira Valai Rating: 5 out of 5 stars5/5Neela Neela Oodi Vaa Rating: 5 out of 5 stars5/5Sithargal Raajyam Rating: 5 out of 5 stars5/5Oru April Puthisaali Rating: 5 out of 5 stars5/5Ennodu Vaa Rating: 5 out of 5 stars5/5
Related to Iraiyuthir Kaadu - Part 1
Related ebooks
Ithu Sathiyam Rating: 5 out of 5 stars5/5Andhi Varum Neram Rating: 5 out of 5 stars5/5Pallavan Pandiyan Baskaran Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Aasai Nesavu Rating: 0 out of 5 stars0 ratingsMarma Bungalow Rating: 0 out of 5 stars0 ratingsBathran Rating: 0 out of 5 stars0 ratingsIthu Mounamana Neram Rating: 0 out of 5 stars0 ratingsLinga Pura Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsSuvaril Nuzhaintha Vergal Rating: 4 out of 5 stars4/5Thai Maasam...! Poo Vaasam...! Rating: 0 out of 5 stars0 ratingsMalai Soodiya Velai... Rating: 3 out of 5 stars3/5Siragai Thedum Sittu Kuruvi Rating: 5 out of 5 stars5/5Merke Oru Uthayam Rating: 0 out of 5 stars0 ratingsNee En Sanrothayam Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Vizhiyil Rating: 0 out of 5 stars0 ratingsJanani Jagam Nee Rating: 0 out of 5 stars0 ratingsViji - Adventure Naadgangal! Rating: 0 out of 5 stars0 ratingsKadhal Kalam Idhu Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu Mayavalai Rating: 4 out of 5 stars4/5Vasantha Kaala Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsKankalukku Sonthamillai Rating: 5 out of 5 stars5/5Ellaik Kodukal Rating: 5 out of 5 stars5/5Enathu Kavithai Neethan... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Mel Aanai Rating: 3 out of 5 stars3/5Idhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Azhagey Vaa! Arugil Vaa!! Rating: 0 out of 5 stars0 ratingsGnabagam Poo Mazhai Thoovum Rating: 0 out of 5 stars0 ratingsVanaththil Oru Thevathai Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Iraiyuthir Kaadu - Part 1
0 ratings0 reviews
Book preview
Iraiyuthir Kaadu - Part 1 - Indira Soundarajan
https://www.pustaka.co.in
இறையுதிர் காடு - பாகம் 1
Iraiyuthir Kaadu - Part 1
Author:
இந்திரா செளந்தர்ராஜன்
Indira Soundarajan
For more books
https://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
என்னுரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
என்னுரை
ஒரு பெருமிதத்துடன் இந்த என்னுரையை எழுத விழைகிறேன். ஒரு மகத்தான புதினத்தைப் படைத்து முடித்த செருக்குடன் என்றுகூட கூறலாம்தான்!
விகடன் குழும இதழ்களில் இந்த ‘இறையுதிர் காடு’ என்வரையில் ஏழாவது படைப்பு! என்னில் ஏழைத்தொட்டு பலவித கருத்துகள் உண்டு! அதிசயங்கள் ஏழு, ஸ்வரங்கள் ஏழு, பிறவிகள் ஏழு என்று அது விரிந்து கொண்டே செல்லும். இந்த வரிசையில் இந்த இறையுதிர் காட்டை தாராளமாகச் சேர்க்கலாம்.
ஏறத்தாழ 20 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு விகடனில் எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு, ஒரு செகண்ட் இன்னிங்ஸ் போன்றது. அப்படித்தான் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டார்.
என் முதல் இன்னிங்ஸில் நான் எழுதிய மூன்று நாவல்களுமே என்னை பலவித உயரங்களுக்கு அழைத்துச் சென்றன. முதல் தொடரான ‘கோட்டைப்புரத்து வீடு’ புத்தக வடிவிலும் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும், தொலைக்காட்சித் தொடராக வந்தும் எனக்கு பல முடிகளைச் சூட்டினால், அடுத்து வெளியான ‘ஐந்து வழி மூன்று வாசல்’ புதுமையான சரித்திர சமூக இரட்டைத் தொடராக வெளிப்பட்டதோடு, இதுவும் புத்தக விற்பனையிலும், நாடக வடிவிலும் புதிய வடிவமான ஒலிப் புத்தகமாகவும் வெளிப்பட்டு எனக்குப் புகழ் சேர்த்தது.
மூன்றாம் நாவலான ‘ரகசியமாக ஒரு ரகசியம்’ என்னை தொலைக்காட்சி உலகின் உச்சிக்கே அழைத்துச் சென்றது. ‘மர்ம தேசம்’ என்கிற பெயரில் தொலைக்காட்சித் தொடராக வெளிப்பட்டு டி.ஆர்.பி. ரேட்டிங்கில் வரலாறு படைத்தது.
அதன்பின்தான் நான் தொலைக்காட்சி உலகின் ஒரு தவிர்க்க முடியாத எழுத்தாளனாக ஆகி, ஏறத்தாழ 5000 எபிசோடுகளை, பல தொடர்களின் வடிவில் எழுதிக் குவிக்க நேர்ந்தது.
அதேபோல் நான் அடுத்து எழுதிய ‘சுந்தர காண்டம்’ ஆன்மிக உலகில் எனக்கொரு பெரும் முகவரியை அளித்தது. தொடர்ந்து அளித்துக்கொண்டும் வருகிறது.
இப்போது நான் எழுதியுள்ள இந்த ‘இறையுதிர் காடு’ நிச்சயம் இந்த வெற்றிப் பட்டியலில் சேர்ந்திடும் ஒரு புதினமாக விளங்கும் என்று நான் நம்புகிறேன். இதன் தலைப்பும் சரி, வடிவமும் சரி - முற்றிலும் புதியது.
‘இறையுதிர் காடு’ என்கிற தலைப்பை ‘இலையுதிர் காடு’ என்று உச்சரித்த பலரையும் பல தருணங்களில் நான் திருத்தவேண்டி வந்தது. அப்படி திருத்திய நொடி அவர்கள் முகத்தில் வியப்பும், ஒரு புதிய சிந்தனை தோன்றியதையும் நான் ஒவ்வொருவரிடமும் கண்டேன். இயல்பான இந்த சத்தப்பிழைகூட இதற்கொரு பலம்தான் என்பேன். தவறாக உச்சரித்துவிட்டு, பின் சரியாக உச்சரிக்கையில் பலமுறை பலர் சொல்லிப் பார்க்கவும் கண்டேன்.
ஒரு கவிஞர், அசாதாரண தலைப்பு என்று பாராட்டவும் செய்தார். தலைப்பு குறித்து இவ்வளவு தூரம் நான் எழுத காரணம் உள்ளது. ஆனந்த விகடன் இதழாசிரியர் திரு. சுகுணா திவாகர், இத்தொடருக்கான தலைப்பு ஒரு சராசரி தலைப்பாக இருந்துவிடக்கூடாது என்பதில் பெரிதும் அக்கறை காட்டினார். நான் கிட்டத்தட்ட ஏழு முதல் எட்டு தலைப்புகள் கூறியும் அவருக்குத் திருப்தியில்லை. இறுதியாக இறையுதிர் காட்டை ஓகே செய்தார். இதற்காக என்னைப் பெரிதும் சிந்திக்கவைத்தார்.
இதன் கருப்பொருளும் புதியது. போகர் என்கிற சித்தர் பெருமகனை நினைக்கும்போது, பழனியும் அங்குள்ள முருகனும் நம் நினைவுக்கு வருவார்கள். அதிலும் அந்த முருகன் கல்லாலோ, உலோகங்களாலோ ஆனவனல்ல. நவபாஷாணங்கள் எனப்படும் விஷப் பொருள்களின் கூட்டுறவில் உருவானவன்.
‘எதனால் அப்படி? அது எப்படி சாத்தியம்? இந்த முருகன் ஒரு சர்வரோக நிவாரணி என்கிறார்களே அது உண்மையா? எவ்வளவோ கடவுளர்கள் இந்து சமயத்தில் இருக்க, போகர்பிரான் எதனால் முருகனை பாஷாணத்தில் கட்டமைத்தார்? அப்படிச் சமைத்தவர் ஏன் அவனது அழகிய கோலங்களைப் பொருட்படுத்தாது, ஆண்டிக் கோலத்தில் இருக்கும் முருகனைச் செய்தார்?’
இப்படி பழனி முருகனைப் பற்றிச் சிந்திக்கையில் ஏராளமான கேள்விகள்.
இந்தக் கேள்விகளுக்கு விடைதேடும் விதமாகவும், கூடுதலாய் மிக விறுவிறுப்பான ஒரு புதினமாகவும், இந்தத் தொடர் அமைய வேண்டும் என்று எண்ணியே இதன் கருவை முதலில் உருவாக்கினேன்.
நாற்பதாண்டு கால எனது எழுத்துலக அனுபவங்களே இம்முயற்சிக்கு எனக்குத் துணை நின்றன. தொடரும் மிகச்சிறப்பாக தொடங்கியது. தொடங்கிய முதல் வாரத்திலேயே நான் பவுண்டரி அடித்ததுபோல் ஒரு நிறைவு! அப்புறமென்ன... இரண்டு மூன்று நான்கு என்று, தொடரானது 87 அத்தியாயங்களைக் கண்ட பிறகே நிறைவைத் தொட்டது.
அம்மட்டில் 18, 19-ம் நூற்றாண்டுகளில் நிறைய இடைச்செருகல்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பல அரிய கருத்துகளும், ரகசியங்களும் உடைய சுவடிகளை சுயநலமாய் சிலர் உலகறியாதபடி ரகசியமாகவே வைத்திருப்பதாகவும் ஒரு கருத்து உண்டு. சித்தர்கள் மட்டும் புதிரானவர்கள் இல்லை. அவர்கள் பாடல்கள் மற்றும் வாழ்வுமேகூட ஒரு வகை புதிர்தான். இப்புதிர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு விடை கிடைக்கக்கூடும்.
இப்புதினத்தைப் பொறுத்தவரையில் நான் மிக பயபக்தியோடும் பொறுப்போடுமே செயல்பட்டேன். அமானுடம் சேர்க்க அதிக வாய்ப்பளிக்கும் ‘அன்று’ பகுதியில் நான் பெரிதாக அமானுடம் சேர்க்கவில்லை. மாறாக இன்றைய வாழ்க்கைமுறையைச் சொல்லும் ‘இன்று’ பகுதியில் நான் அமானுடத்தைச் சற்றே அதிகம் கலந்தேன். இது ஓர் ஆச்சர்ய முரண். தொடர் முழுக்க வரும் நாகம் அதில் ஓர் அங்கம். கூடவே அறிவுபூர்வமான கேள்விகளை பாரதி என்கிற கதாநாயகியின் பாத்திரம் மூலம் எழுப்ப துளியும் தவறவில்லை. என் வாழ்வில் அதுபோல் நான் கேட்ட கேள்விகளுக்கான விடைகளைப் பகிர்ந்துகொண்டேன். அதேசமயம் பல கேள்விகள் விடைகாணமாட்டாத ஒன்றாய் கேள்விக்குறியாகவே தொடர்கின்றன. இத்தொடரிலும் தொடர்கின்றன.
இத்தொடரை எழுதிய ஒண்ணரை ஆண்டில் விகடன் வாசகர்களிடையே எனக்கு எவ்வளவோ அனுபவங்கள். எல்லாவற்றையும் எழுத இடமில்லாததால் தவிர்க்கிறேன்.
பொதுவில் இது படிப்பவர்கள் குறைந்துவிட்ட, பார்ப்பவர்கள் அதிகரித்துவிட்ட ஒரு காலம். இக்காலத்திலும் இத்தொடரை வாசிக்கத் தவித்தவர்கள், எனக்குப் பெரும் வியப்பளித்ததோடு வாசிப்பு குறித்து பெரும் நம்பிக்கை அளித்தனர். பலர் தொடரைத் தொடர முடியாத தருணத்தில் இது கட்டாயம் புத்தகமாக வரும்தானே என்று கேட்டனர். குறிப்பாக கொரோனா என்கிற கொடிய கிருமியால் வீடுகளே சிறைகளாகி, மனித சமூகமே உலகம் முழுக்க ஸ்தம்பித்துப்போய் நின்றுவிட்ட காலத்தில், விகடன் இதழ்கள் அச்சிதழ்களாக உருவாக இயலாத நிலையில், அவை இ-புத்தகமாய் வெளிப்பட்டு வாசகர்களை அடைய முற்பட்ட தருணத்தில், விகடனை தவறவிட்டவர்கள் பல்லாயிரம் பேர்களாவர்.
அவர்களில் இத்தொடரை தொடர்ந்தவர்கள் கேட்ட கேள்வியும் இதுதான்; ‘இது புத்தகமாய் வரும்தானே?’ என்பதே அது. அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்பவும், மேலும் பல்லோரின் விருப்பத்திற்கேற்பவும் இதோ ‘இறையுதிர் காடு’ நூல் வடிவில்...
இந்த நூலைக் காண்கையில் என்னுள் ஓர் ஆனந்தம் கலந்த நிறைவு. அனேகமாய் நான் எழுதிய நூல்களின் அளவிலும் பலவிதங்களில் இந்த நூலே பெரிதானதென்பேன்.
பெரும் வாய்ப்பு இது! இதனை என்னை நம்பி வழங்கிய விகடன் குழும நிர்வாக இயக்குநர் திரு.பா. சீனிவாசன் அவர்களை இவ்வேளையில் நன்றிகளோடு நினைவுகூர்கிறேன்.
மேலும் அழகாய் நெறிப்படுத்திய திரு. சுகுணா திவாகர் உள்ளிட்ட ஆசிரியர் குழுவுக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும்.
மேலினும் மேலாய் தன்னை எழுத என் சிந்தைக்குள் உதித்த போகர் சித்தரின் திருவடிகளையும் தொழுது மகிழ்வதோடு அவருக்கும் எனக்கும் உங்களுக்கும் நமக்கும் தண்ணருளினை வாரி வழங்கிடும் தமிழ்க் கடவுளாம் தண்டாயுதபாணியாம், அம்முருகன் பாதங்களையும் பணிந்து, அவனருள் அனைவருக்கும் சித்திக்க வேண்டி நிறைவு செய்கிறேன்.
நன்றி.
பணிவன்புடன்,
இந்திரா சௌந்தர்ராஜன்
07.09.2020
மதுரை-625003
இந்திரா சௌந்தர்ராஜன்
சித்தர்கள் பற்றிய சிந்தனை தோன்றும்போது அது தொடர்பானவர்களில் இந்திரா சௌந்தர்ராஜன் நினைவும் பலருக்கு ஏற்படும். அந்த அளவு சித்தர்கள் குறித்து ஆய்வு செய்து, அவர்களை நாவல்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இடம்பெறச் செய்தவர்.
குறிப்பாக ‘மர்ம தேசம்’ தொடரையும் ‘சிவமயம்’, ‘ருத்ர வீணை’, ‘யாமிருக்க பயமேன்?’ போன்ற தொடர்களையும் கூறலாம். இதில் ‘சிவமயமும்’, ‘ருத்ர வீணை’யும் புத்தக வடிவிலும் பெரிதும் வரவேற்கப்பட்டவை. லட்சக்கணக்கான பிரதிகள் என்னும் உயரத்தைத் தொட்டவை.
120 பத்திரிகைத் தொடர்கள், 390 மாத நாவல்கள், 750 சிறுகதைகள், தொலைக்காட்சியில் 5,000 எபிசோட்கள் எழுதியிருக்கிறார். சொற்பொழிவும் செய்கிறார். பொதிகை தொலைக்காட்சியில் ஆழ்வார்கள், நாயன்மார், சித்தர்கள் குறித்து 1500 எபிசோட்களுக்குமேல் சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறார். மேலும் திரைப்படத் துறையிலும் பங்கேற்று பல திரைப்படங்களில் பணிபுரிந்திருக்கிறார்
பிரபல டி.வி.எஸ். நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிறுவனத்தின் குடும்ப இதழுக்கு ஆசிரியராக உள்ளார்.
போகர் சித்தர் வாழ்வு மற்றும் நவபாஷாணத்தில் முருகன் சிலையை செய்த வரலாற்றை நுட்பமாக ஆராய்ந்து எழுதப்பட்ட ஒரு நாவலே இந்த ‘இறையுதிர் காடு’.
இந்த நூல்...
காஞ்சி மகா பெரியவர் திருவடிகளுக்கு...
1
அன்று
அந்த வனம் வெகு அழகாக இருந்தது! யானைத் தலை போன்ற ஒரு மலைப் பாறையின்மேல் நின்றுகொண்டு, சில்லென்ற காற்றானது திறந்த மார்பின் மேல்பட்டு இடம் வலம் என இரு கூறாய்ப் பிரிந்து சென்ற நிலையில், அதன் சிலுசிலுப்பை ஒரு சுகானுபவமாய் உணர்ந்து, அப்படியே அண்ணாந்து விண்ணகத்தையும் பார்த்தபடி இருந்தான் அந்த முப்பது வயது இளைஞன்.
கூம்புபோல் முடிந்திருந்த தலை முடியை அவிழ்த்துவிட்டதில் அவையும் காற்றில் பறக்கும் கேசக் கொடியாயின! அப்படியே அவன் விண்ணைப் பார்த்தபோது ஒரு உள்ளான் குருவிக் கூட்டம் வியூகம் வகுத்துச் செல்வதுபோல் சீரான இடைவெளியில், சிறகசைக்கும் ஒரு வினைப்பாடும் இன்றி உடம்பாலேயே விசைப்பை நிலைப்படுத்திப் பறந்து கொண்டிருந்தன!
விடிவெள்ளி அவிந்து ஆதித்தன் நிமிர்ந்ததில் கிழக்கு வானில் கொல்லன் ஊதிடும் தணல் நெருப்புபோல் ஒரு வெளிச்சம்! அந்த இளைஞன் பாறைமேல் நின்றபடியே ஆதித்தனை வெறித்தான். அரைக்கோளம் கடந்து மறு கரையின் முதல் பாகையில் அது முழுவதுமாய்க் காட்சி தந்தது. அதைக் கண்ட மாத்திரத்தில் அவன் கைகளைக் குவித்தான். மார்பை நிமிர்த்தினான் அவனது சரீரம் விடைத்தது.
அவனிடம் சூரிய வணக்கம் ஆரம்பமானது. அப்போது அவன் மூச்சை மிக உச்சமாய் உள்ளிழுத்து விட்டான்! பன்னிரண்டு முறை அவ்வாறு செய்தவன், அதன்பின் பாறைமேல் விழுந்து வணங்கி, பின் எழுந்து நின்று பன்னிரண்டு முறை ஆதித்ய வணக்கம் புரிந்தான். பன்னிரண்டாவது முறை அவன் விழுந்து வழங்கிய தருணம் அவனது கண்டங் கழுத்துப் பகுதியில் வியர்வை சுரந்து நீர்ப்பாம்பாய் அவன் தோள் பகுதியில் இறங்கியது. அந்த வியர்வையின் ஒரு துமியளவை ஆட்காட்டி விரலால் தொட்டு பின் நாவின் நடுவில் வைத்தான்
அந்த வியர்வை துமியில் எந்த ருசியுமில்லை பத்திய உணவு காரணமாக, குறிப்பாக உப்புக்கரிக்கவில்லை. அது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும். அவன் முகத்தில் அதன் நிமித்தம் ரேகைகள் ஓடி அவன் சிரிப்பதுபோல் தோன்றியது. அவனுக்குள் இப்போது அவனது குருவான போகரின் கட்டளைக் குரல் ஞாபகப் பதிவிலிருந்து ஒழிக்க தொடங்கியது.
அஞ்சுகா... நாளை அமாவாசை திதியின் முடிவிலும் பின் பிரதமையின் தொடக்கத்திற்கும் இடைப்பட்ட அறுபது நிமிட நேரம் வேண்டல் நேரம். அவ்வேளையில் பூகோள ரீதியில் ஒன்றுபட்ட சூரிய சந்திரக் கலைகள் அசைந்து இடவலமாய் பிரிந்திடும். அப்போது சுவர் பல்லியின் ஒட்டிய பாகம் உணரத்தக்க அளவில் அதிர்வுண்டாகி பிரபஞ்சம் முழுக்கப் பரவிடும். இக்காலத்தில் மனதில் எண்ண அலைகளோடு, இந்த அதிர்வு கலக்கும் பட்சத்தில் அந்த எண்ண அலை எவர் குறித்ததாக உள்ளதோ, அவரைச் சென்று சேர்ந்து அவர் கவனத்தை நம் பக்கம் ஈர்க்கும். நீ அவ்வேளையில் நம் தண்டபாணிச் சொரூபம் திரு உருக்கொள்ள அம்பிகையைப் பிரார்த்தித்துக் கொள்வதோடு, அதன் தொடர்பான நவ மூலங்களும் பாஷாணங்களும் மாத்திரைக் குறைபாடின்றிக் கிடைத்திட வேண்டிக்கொள். நவமரில் நீ கதிரவன்! அதாவது ஆதித்த பாகம் கொண்டவன். சூரியன் உச்சமிருக்கப் பிறந்த உன்னை அதனாலயே என் ஒன்பது சீடர்களில் ஒரு ஒரு சீடனாகக் கொண்டுள்ளேன். ஒளிக்கூறுகள் உனக்கு முழுமையாக வசப்படும். உன் மூலமே தண்டபாணிக்குள் ஒளிக்கூற்றைச் சேர்க்க உள்ளேன். எனவே, காலத்தைத் திறத்தோடு பயன்படுத்து. பிராணக் காற்றை உபாசனையின்போது 9 அங்குலத்தில் நிலைப்படுத்திக்கொள். காலம் முடியவும் உபாசனை முடிந்து பொதினியில் உள்ள என் குடிலுக்கு வந்து சேர். நாளை உன்னை நான் ஒரு பாஷானப் பரிசோதனையில் பொன்னன் ஆக்கி பரிசோதிக்கப் போகிறேன்...
அஞ்சுகன் என்னும் அந்த இளைஞனுக்குள் போகரின் குரல் ஒலித்து அடங்கவும், அவன் அவர் சொன்னவாறே நடந்துகொள்ளத் தயாரானான். கீழே விழத் தொடங்கியிருந்த நிழல் நிமித்தம் அப்போதைய கால நேரத்தைத் துல்லியமாய் அறிந்தவன், அப்போதே ‘அமாவாசை திதி’ முடியப்போவது உணர்ந்து, அந்த யானைத்தலைப் பாறைமேல் அப்படியே பத்மாசனமிட்டு அமர்ந்து 9 அங்குலத்திற்கு காற்று உள் செல்லும் அளவு சுவாசக் கட்டுமானம் செய்துகொண்டு அம்பிகையின் பீஜ மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பித்தான்.
***
இன்று
அந்த வானம் அத்தனை அழகாய் இல்லை! அங்கும் இங்குமாய் மேகப் பொதிகள். அவ்வளவுதான்! பறவைகளையும் காண முடியவில்லை. பால்கனியில் நின்றபடி, சோம்பல் முறித்துக்கொண்டே பார்த்தபடி இருந்தாள் பாரதி. பால்கனியிலேயே இரு தொட்டிச் செடிகள் இருந்து அவை வாடியிருந்தன. ஒன்றில் மணி பிளான்ட். இன்னொன்றில் ஊட்டி ரோஸ். இரண்டுமே தண்ணீர் கண்டிராத சோகையில் இருந்தன. அதைப் பார்க்கவுமே ஒரு சோகம் கலந்த கோபம்தான் அவளுக்குள் முதலில் வந்தது. முதல் காரியமாகத் தன் படுக்கை அறையில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரைக் கொண்டுவந்து இரு செடிகளுக்கும் சரிபாதி என்று விட்டாள். அப்போது காபியோடு வந்த பானுமதியைப் பார்த்து முறைக்கவுமே பானுவுக்குப் புரிந்துவிட்டது.
சாரிம்மா... நேத்து ஆரோக்யம் வேலைக்கே வரலை, நானும் இந்த ரூம் பக்கமே வரலை. வந்திருந்தா பார்த்து தண்ணீர் விட்ருப்பேன்...
நம்பள மாதிரிதான் பானு இந்தச் செடிகளும், நமக்கு வாய் இருக்கு, இதுக்கு இல்லை அவ்வளவுதான் வித்தியாசம்.
நிறைய வாட்டி இதைச் சொல்லிட்டீங்கம்மா... மன்னிச்சிக்குங்கம்மா...
ஆமா, ஆரோக்யம் ஏன் வேலைக்கு வரலை?
அதுக்கு பேத்தி பிறந்திருக்கும்மா...
மை குட்நெஸ்... ஏன் ஆரோக்யம் எனக்குப் போன் பண்ணல?
பண்ணுச்சாம். லைன் கிடைக்கலியாம்...
அஃப்கோர்ஸ்... நான் நேத்து போயிருந்த இடத்துல எனக்கு சரியா சிக்னல் கிடைக்கல, போகட்டும் குழந்தை எப்படி இருக்காம்?
அப்படியே செத்துப்போன அவங்கப்பனக் கொண்டிருக்குதாம்... சொல்லி அழுதுச்சு...
பானு அறைக்குள் நடந்தபடியே பேசிட, அவள் கொண்டுவந்த காபியைக் குடித்தபடியே உடன் நடந்த பாரதி அங்கங்கே தான் சேகரித்திருந்த கலைப் பொருள்கள்மேல் லேசாய்ப் படிந்திருந்த தூசியைக் கவனித்தவளாய் முகம் மாறினாள்.
பக்கத்துல புதுசா கட்டடம் கட்றவங்க பாடாப்படுத்தறாங்கம்மா. எப்பப் பார் சத்தம். ஒரே தூசி. அதாம்மா...
என்று பானு அதற்கும் ஒரு சரியான பதிலைச் சொன்னாள். பின் காத்திருந்து காபி டம்ளரை வாங்கிக்கொண்டு திரும்பிச் சென்றாள் பானுமதி. பாரதியும் தன் அன்றைய கடமைகள் நிமித்தம் தயாரானாள். டீப்பாய்மேல் இரவில் தூங்கப் போகும்போது, பல தடவைகளில் ஒரு தடவையாக படித்த பொன்னியின் செல்வன் திரும்ப புத்தக அலமாரிக்குள் போய் அடங்கிக்கொண்டான். அந்தப் புத்தகத்தை அலமாரிக்குள் செருகும்போது அந்த நாளைய வாழ்க்கை முறை மனதில் காட்சியாக விரிந்து, ‘தான்கூட இனி காரைப் பயன்படுத்தாமல் ஒரு ‘புரவி’ மேல் ஏறிக்கொண்டு அண்ணா சாலையில் இருக்கும் தனது ‘தமிழ்வாணி’ வார இதழ் அலுவலகத்திற்குப் போய்வந்தால் எப்படி இருக்கும்...!’ என்று ஒரு விநாடி நினைத்துப் பார்த்தாள். சுகமான அந்தக் கற்பனை ஒரு அரை நொடிக்கும் குறைவான சிரிப்போடு முடிந்து போனது. சட்டென்று ஒரு வேகம் அவளுக்குள் தொற்றிக்கொண்டது. அந்த அறைக்குள் சகலமும் நேராகத் தொடங்கின.
சுவர்க் கடிகாரம் கையிருப்பு நேரத்தை அவளுக்கு உணர்த்திற்று. லேப்டாப்பின் அன்றைய டைம்டேபிள் ‘போ - முதலில் குளி’ என்றது. குளித்து முடித்துவிட்டு வந்து ஜீன்ஸ், டி ஷர்ட், போனிடைல் சிகை அழகோடு, கழுத்தில் சன்னமான ஒரு குறப்பெண்மணியிடம் வாங்கிய ‘பவழமாலை’ என்று மாடியிலிருந்து இறங்கினாள்.
அற்புதமான சாம்பிராணி வாசம் அவளின் பாட்டியான முத்துலட்சுமி பூஜை அறைக்குள் இருப்பதை உணர்த்தியது. எட்டிப்பார்க்கவும் கண்ணாலேயே உள்ளே அழைத்து எரியும் கற்பூரச் சுடரை அவள் முன் நீட்டினாள். அவளும் பாட்டிக்காகக் கண்களில் ஏற்றிக்கொண்டாள். அப்படியே அதைக் கீழே வைத்து கன்னத்தில் போட்டுக்கொண்ட முத்துலட்சுமியும், அறைக்கு வெளியே வந்து பாரதியைச் சற்று உற்றுப் பார்த்தாள்.
நோ பாட்டி... என் டிரெஸ்ஸைப் பத்தின உன் கமென்ட்டை ஆரம்பிச்சிடாதே... திஸ் ஈஸ் வெரி கம்ஃபர்ட் ஃபார் மை செல்ஃப்
என்றாள். முத்துலட்சுமி விடுவதாயில்லை.
பருத்திப் புடவைல இல்லாத சௌகர்யமா இதுல இருக்குன்னு சொல்றே?
என்று கேட்ட மறுநொடி நெருங்கி வந்து பாட்டியின் உதட்டின்மேல் கை வைத்து செல்லமாய் இதற்குமேல் பேசாதே என்று தடுத்தவள், ஆமா டெல்லியில் இருந்து டாடி வந்துட்டாரா?
என்று கேட்டபோதே ஒருவித ‘சென்ட்’ வாசம் மூக்கை ஊடுருவவும், அது அவள் அப்பா தவறாமல் போட்டுக்கொள்ளும் ‘சென்ட்’ என்பதை உணர்ந்தவளாக,
என்ன எனக்கு முந்தி ரெடியாயிட்டாரு... ரொம்ப சுறுசுறுப்பான எம்.பியா மாறிக்கிட்டு வராரே...
என்கிற கமென்ட்டோடு டைனிங் டேபிளை நோக்கி நடந்தாள். அவள் அப்பாவான நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாமகேந்திரனும் முழுக்கை வெள்ளைச் சட்டையை ஏற்றிவிட்டபடி டைனிங் டேபிளுக்கு சாப்பிட வந்து அமர்ந்தார்.
ஹாய் டாட்...
ஹாய் க்யூட்.! எனக்காக வெயிட்டிங்கா?
அஃப்கோர்ஸ் உக்காருங்க. நிறைய பேசணும்?
அவரும் உட்கார்ந்தபடியே தெரியும்மா, நீ என்ன கேக்கப்போறேன்னு... பார்லிமென்ட்ல நான் என்ன பேசினேன், ரெஸ்பான்ஸ் எப்படி இருந்ததுன்னு கேப்பே நீ... ரிப்போர்ட்டர்ஸ் மூலமா உங்களுக்குத்தான் எல்லாம் தெரிய வந்திருக்குமே!
என்றபடியே முத்துலட்சுமி போட்ட இட்லியை விண்டு சட்னியோடு புரட்டி, சாப்பிட ஆரம்பித்தார் ராஜாமகேந்திரன். பதிலுக்கு ஏதோ கேட்க நினைத்தவளை முறைத்த முத்துலட்சுமி பேசாம சாப்பிடு பாரதி... உடம்புல சாப்பிடுறது ஒட்ட வேண்டாமா?
என்றாள்.
இடையிட்டது ராஜாமகேந்திரனின் கைப்பேசி.
‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’ எனும் டி.எம்.எஸ் குரலிலான ரிங்டோன் காதருகே செல்லவும் முடிந்துபோனது. யார் என்ன பேசினார்களோ தெரியாது. முகத்தில் அதுவரை நிலவிவந்த ஒருவித சாந்தம் கலைந்து கலக்கம் தெரியத் தொடங்கியது. ஓ.கே... ஓ.கே... நான் பாத்துக்கறேன்...
என்றபடியே அந்த ஐ போனை டேபிள்மேல் வைத்தார் ராஜாமகேந்திரன்.
டாட் எனிதிங் ராங்?
கொள்ளு சூப்பை அருந்தியபடியே கேட்டாள் பாரதி.
நத்திங்... எ ஸ்மால் த்ரெட்... தனியா எங்கேயும் போகாதீங்கன்னு ஐ.ஜி. ஆபீஸ்ல இருந்து வார்னிங்...
உங்களுக்கா த்ரெட்?
சென்ட்ரல் மினிஸ்டர் ஆயிடுவேங்கற பொறாமைல சிலர் பூச்சி காட்றாங்கம்மா...
யார் டாடி அவங்க?
உனக்கு எதுக்கு அதெல்லாம்? இதெல்லாம் அரசியல்ல ரொம்ப சகஜம்...
பேச்சோடு எழுந்து கொண்டு வாஷ்பேசின் நோக்கி நகர்ந்தார் மகேந்திரன். பாதிகூட சாப்பிடவில்லை.
திரும்பி வந்து அந்த ஐ போனை எடுத்துக்கொண்டு அவரது அலுவலக அறை நோக்கி நடந்தார். அவர் மறையவும் முத்துலட்சுமி ஆரம்பித்தாள்.
உன் அப்பன் எப்படியும் இந்த வருஷம் சொந்தமா காலேஜ் கட்ட அஸ்திவாரம் போட்டுடணும்னு துடிக்கிறான். அதுக்கான இடம் வாங்கறதுலதான் பிரச்னை. அந்த இடத்துக்குப் போற வழில, அரசியல்வாதிங்களோட ஆக்கிரமிப்பு கொஞ்சம் இருக்கும்போல... மத்தியில இருந்தே பிரெஷர் கொடுத்து ஆக்கிரமிப்புகளை எல்லாம் புல்டோசர் வெச்சு இடிச்சிருக்கான். அவங்க சும்மா இருப்பாங்களா... வெட்டுவேன் குத்துவேன்னு தொடங்கிடுவாங்களே?
முத்துலட்சுமி மகேந்திரன் சொல்லாததைச் சொல்லி பிரச்னையின் தன்மையைப் புரியச் செய்தாள்.
என்க்ரோச்மென்ட் பிராப்ளமா?
என்று கேள்வியாய் முணுமுணுத்தவள், மீதத்தைத் தன் பத்திரிகை ரிப்போர்ட்டர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடிவு செய்தாள். பின் சாப்பிட்டு முடித்தவளாகப் புறப்படத் தயாரானாள்.
பாரதி...
முத்துலட்சுமி தடுத்தாள்.
என்ன பாட்டி?
உனக்கு இந்த சண்டே லீவுதானே?
ஆமாம்... அதுக்கென்ன?
பழனி வரை போய்ட்டு வரலாமா?
பழனி... யூ மீன் பழனி கோயிலுக்கா?
ஆமாம்மா... உன் வரைல ஒரு வேண்டுதல் ரொம்ப நாளா பண்ணாம அப்படியே இருக்கும்மா...
என்ன வேண்டுதல்?
சொல்வேன்... அப்புறம் கத்தக் கூடாது.
அப்ப நான் கத்தாத மாதிரி சொல்லு.
அதான் முடியாதே...
டைம் ஆகுது பாட்டி, சீக்கிரமா சொல்லு...
நீ உன் அம்மா கிருத்திகை விரதம் இருக்க பிறந்தவ, தெரியும்தானே?
எத்தனை தடவதான் சொல்வே... அதுக்கென்ன இப்போ?
இல்ல... நம்ம குலதெய்வமே பழனி முருகன்தாம்மா, அந்த முருகனுக்கு முடி காணிக்கை கொடுக்கறதுதான் நம்ம வழக்கம்.
வாட்... முடி வெட்டிக்கணுமா?
அதிர்ந்தாள் பாரதி.
கத்தாமக் கேளு. உன் அப்பனும் என்னை இப்ப த்ரெட்டு, அது இதுன்னு ரொம்பவே பயமுறுத்தறான். நீகூட ஒரு கார் ஆக்ஸிடென்ட்ல சிக்கி போலீஸ் ஸ்டேஷனுக்கெல்லாம் போய்ட்டு வந்தே...
சோ வாட்?
குலதெய்வ வழிபாட்டுல குறை இருந்தாதான் இப்படி எல்லாப் பக்கமும் பிரச்னை ஏற்படும்மா... அந்த முருகனை எல்லாரும் ஒரேயடியா மறந்தா எப்படிம்மா?
என்ன பாட்டி நீ பேசறே? நான் வந்து என் தலைமுடியைக் கொடுத்துட்டா எல்லாம் சரியா போயிடுமா? உனக்கே இது ஒரு வடிகட்டின முட்டாள்தனமா தோணல?
காலம் காலமா நடக்கற விஷயத்தை முட்டாள்தனம்னெல்லாம் சொல்லாதே பாரதி. ஒவ்வொரு நாளும் திருப்பதிலயும், பழனிலயும் ஆயிரக்கணக்குல முடி காணிக்கை தர்றாங்க. அப்ப அவங்கெல்லாம் முட்டாள்களா?
ஐயோ பாட்டி... எனக்கு விவரம் தெரியறதுக்கு முந்தியே நீ இதை எல்லாம் முடிச்சிருக்கணும். இப்ப என்னக் கேட்டா நான் ஒத்துக்கமாட்டேன். நான் தெரியாமத்தான் கேக்கறேன். இந்த உலகத்தையே படைச்சதா சொல்லப்பட்ற கடவுளுக்கு, போயும் போயும் அல்ப தலை முடியையா தருவாங்க? இது என்ன பழக்கம் பாட்டி?
அலுத்துக்கொண்டே தன் ஹேண்ட் பேக்கிலிருந்து கார் சாவியை எடுத்துக்கொண்டு, திரும்ப பேக்கை மூடியவள் ‘பை’ என்றபடி புறப்பட்டாள். அதற்குமேல் அவளிடம் பேச முடியாது. பேசினாலும் நின்று அவள் கேட்கமாட்டாள் என்று முத்துலட்சுமிக்கும் தெரியும்.
***
துரியானந்தத்தின் அந்தப் பழைய சாமான் மற்றும் பழைய புத்தக கடை மயிலாப்பூர் லஸ் பகுதியில் இடங்கோடான ஒரு பிளாட்பாரக் கடையாக விரிந்து கிடந்தது. ஒருபுறம் ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், ரமணிச்சந்திரன் போன்றோர் முகம் நாவல் அட்டையும் சிரித்தபடி கிடக்க, மறுபுறம் தேவி பாகவதம், அபிதான சிந்தாமணி, விக்கிரமாதித்தன் கதை, அர்த்தமுள்ள இந்துமதம் என்கிற தடித்தடியான புத்தகங்கள்! எல்லாப் புத்தகங்களும் பழுப்பேறிப்போய் முனைகள் ஒடிந்திருந்தன. பக்கத்திலேயே ‘வால்காவிலிருந்து கங்கை வரை’யில் தொடங்கி ‘ஹிட்லர் வரலாறு’ வரை என்று உலக சரித்திரத்தைச் சொல்லும் நூல்கள். இத்தனைக்கும் நடுவில் பல்லாங்குழி, ஊஞ்சல் பலகை, பாதாளக் கரண்டி உண்டிவில், லாந்தல் விளக்கு, பரமபத அட்டை என்கிற வீடு காலி செய்யும்போது ‘வேண்டாம்’ என்று கருதித் தூக்கிப்போட்ட பொருட்கள் கிடந்தன. ஒரு ஓரமாக ‘உடைவாள்’ ஒன்றும் கிடந்தது. இரண்டடி நீளத்தில் செப்புத் தகட்டு உறைக்குள் வேலைப்பாடுள்ள கைப்பிடியோடு கிடந்த அதை, புத்தகம் வாங்க வந்திருந்த ஒருவர் கவனித்து எடுத்தார்.
அந்த உடைவாள் நல்ல கனத்தோடு இருந்தது.
என்ன துரியானந்தம்... அந்தக் காலத்துக் கத்தியாட்டம் இருக்குது. எங்க கிடைச்சிச்சு?
என்று கேட்டபடியே உரையிலிருந்து வாளை உருவ முயன்றார். சட்டென்று வராமல் இறுகிய பிடிப்போடு இருந்த கைப்பிடியை தம் கட்டி இழுக்கவும், சரக்கென்ற சத்தத்தோடு வெளிப்பட்ட அந்தப் பளபளப்பான வாள் முனை, மண்டியிட்டு சட்டை போடாமல் பனியனோடு அமர்ந்தபடி இருந்த துரியானந்தத்தின் தோளில் பட்டு ஒரு கோடு போட்டது. போட்ட வேகத்தில் ரத்தம் பீறிட எல்லாம் நொடிகளில் நடந்து முடிந்துவிட்டது. வேகமாய், ஒரு கிழிந்த துணியை எடுத்து ரத்தம் கசியும் இடத்தில் வைத்து அழுத்திக்கொண்ட துரியானந்தம் கோபமாய், என்ன சார் இப்படிப் பண்ணிட்டிங்க... பாத்து உருவமாட்டீங்க?
என்று கோபமாய்க் கேட்டான். சாரி சாரி, துரியானந்தம்... நான் இதை கொஞ்சம்கூட எதிர்பார்க்கல வெரி சாரி... காயம் பலமா பட்ருச்சா?
அதான் பட்ருச்சே அப்புறம் என்ன? இதை யார் உருவினாலும் ரத்தம் பாத்துடுது! நான் எட்டாவது ஆள்
என்று துணியை அமுக்கியபடியே துரியானந்தம் சற்று வலியை முகத்தில் காட்டினான். அதைக் கேட்ட நொடி அந்த நபர் அந்த வாளை பீதியோடு பார்த்தார். அதில் அவ்வளவாகப் புரியாதபடி அந்த நாளைய தமிழ் வட்டெழுத்துகள். ‘எட்டு கிணறு சுடலைக்கு இட்டமுடன் சமர்ப்பணம்’ என்கிற எழுத்துகள் மட்டும் படிக்க முடிந்ததாய் இருந்தன. அடுத்த நொடி அந்த வாளை, அந்தப் பழைய பொருள்களுக்கு நடுவில் போட்டுவிட்டு, தொடக்கூடாததைத் தொட்டு விட்டவர்போல் ஒதுங்கத் தொடங்கினார். துரியானந்தமும் ரத்தத்தைத் துடைத்துத் தனக்குத் தானே கட்டு போட்டு முடித்திருந்தான். அப்போது பாரதியின் கார், அவன் கடைமுன் நின்ற நிலையில் பக்கவாட்டுக் கண்ணாடி விர்ர் என்று இறங்கியது. அவளைப் பார்த்த நொடி நீ கேட்ட அந்தப் புத்தகம் இன்னும் வரலை பாப்பா...
என்றான், தோள் கட்டைத் தொட்டபடியே...
தோள்ல என்ன காயம்?
இப்பதான் பாப்பா... தா இந்தக் கத்தி பட்ருச்சு
என்று உடைவாளைக் காட்டவும் டிரைவிங் சீட்டில் இருந்தபடியே பார்த்த பாரதி ஹை அந்தக் காலத்துக் கத்தி... எடுத்து வைங்க. நானே வாங்கிக்கறேன். இப்ப டைமில்ல, வரேன். யாருக்கும் கொடுத்துடக்கூடாது
என்று சொன்னபடியே காரைக் கிளப்பினாள்.
அவள் கார் விலகவும் புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்த இன்னொருவர் தன் பங்குக்கு வாளைப் பார்த்தவராக நெருங்கிச் சென்று எடுத்துப் பார்த்தார்!
பார்த்தபடியே எங்கையாவது ஏலத்துல எடுத்தியா?
என்று கேட்டார். இல்ல சாமி... என் மவன் எங்க இருந்தோ பொறுக்கிகிட்டு வந்திருக்கான். எண்ணெய் போட்டு சுத்தம் செய்யணும். உறைக்குள்ள பச்சை புடிச்சி ஒரே இறுக்கமா இருக்குது
என்று அவன் சொல்லும்போதே அவரும் அந்த வாளை உருவிப்பார்க்க முனைந்தார். இம்முறை வாள் நுனி அவர் வலது புருவத்துக்குமேல் கீறலோடு பட்டதில் ரத்தம் துளிர்த்து அவரைத் துள்ளச் செய்தது.
சொல்லச் சொல்ல உருவிட்டிங்களா... திரும்பவும் ரத்தமா?
என்றவன் முன் கத்தியைக் கீழே போட்டவர் கர்ச்சீப்பை எடுத்து நெற்றிமேல் வைத்துக்கொண்டவர் வேகமாய்ப் புறப்பட்டார்.
துரியானந்தம் பயத்தோடு அந்தக் கத்தியைப் பார்க்கத் தொடங்கினான்!
***
தன் அலுவலகத்திற்குள் நுழைந்த பாரதி தனக்கான ‘உதவி ஆசிரியர்’ சீட்டிலும் அமர்ந்து, லேப்டாப்பையும் திறந்தபோது இன்டர்காமில் அமட்டல்! பெரிய வளையம் தொங்கும் தன் காதை ரிசீவருடன் பொருத்தவும். குட்மார்னிங், பாரதி
என்கிற எடிட்டர் ஜெயராமனின் குரல் ஒலித்தது. வெரிகுட் மார்னிங் சார்.
கொஞ்சம் என் டேபிளுக்கு வரியா?
வித் இன் தர்ட்டி செகண்ட்ஸ் சார்.
சொன்னதுபோல் முப்பதாவது செகண்ட் அவரின் குளிரூட்டமான அறையில் அவர் முன் சென்று நின்றாள்.
பாரதி ஒரு அசைன்மென்ட்...
சொல்லுங்க சார்
யோகா ஸ்காலர் திவ்யப்ரகாஷ் பற்றி கேள்விப்பட்ருக்கியா?
யெஸ் சார்...
அவர்தான் இந்த வாரம் நம்ப கவர் ஸ்டோரி ஹீரோ...
நம்ப கவர் ஸ்டோரிக்கு இந்த மனிதரா?
லெஃப்ட், ரைட்டால்லாம் டிவைட் பண்ணி யோசிக்காதே, நான் கல்கத்தா போய்ட்டு ஃப்ளைட்ல திரும்பும்போது எனக்குப் பக்கத்து சீட்ல ஐயாதான் உட்காந்திருந்தார். மூணரை மணி நேரம் சாலிடா அவரோட கழிஞ்சது. நான் ஒரு விஷயத்தை நினைக்கும்போதே அதை அப்படியே போட்டு உடைக்கறாரு. எப்படின்னு கேட்டா, ‘யோகாவுல இது சாதாரணம். எல்லாம் ‘மைண்ட் கான்சன்ட்ரேட் பவர்’னு சொல்றார். நீ நம்பமாட்டே ‘என்ன இந்த ஆள் பயங்கர ‘உட்டாலக்கடியா’ இருக்காருன்னு, நான் கொஞ்சம் லோக்கலா திங்க் பண்ண செகண்ட், ‘உட்டாலக்கடி’ இல்ல மிஸ்டர் ஜெயராமன் எல்லாமே ‘ஹ்யூமன் பவர்’தான். ‘ஹியர் ஈஸ் நோ மிஸ்ட்ரி, நோ மேஜிக்... எல்லாமே மென்டல் ஸ்ட்ரென்த். இட்ஸ் எ செயின்ட்ஸ் சைன்ஸ் அதாவது இது ஒரு வகை ‘சாமியார்கள் விஞ்ஞானம்’னு சொல்லி என்னை ஒரு உலுக்கு உலுக்கிட்டாரு.
அப்ப இவரை கொஞ்சம் பிரிச்சு மேயணுமா சார்?
எக்ஸாக்ட்லி. வித்தியாசமா புதுசா விஷயங்கள் கிடைக்கணும். நியூட்ரலா பிஹேவ் பண்ணு. ‘டுபாக்கூர்’னும் நினைச்சிடாதே ‘மகான்’னும் கவுந்துடாதே...
ஓ.கே. சார்...
நம்ப போட்டோகிராபர் கண்ணனைக் கூட்டிகிட்டுப் போ.
கண்ணனுக்கு இன்னிக்கு காட்ராக்ட் ஆபரேஷன் சார். லீவு போட்டிருக்கார். நானே போட்டோஸ் எடுத்துட்றேன் சார்.
டேக் கேர்!
***
அடுத்த நூற்று இருபதாவது நிமிடம் ஒரு கோயில் மண்டபத்தில் அவரைப் பின்பற்றும் ஒரு முப்பது பேருக்கு விசேஷ பயிற்சியைக் கொடுத்துவிட்டு வந்து, காத்திருக்கும் பாரதியின் முன் உள்ள வெண்மையான மெத்தைமேல் திரிகோண கனத்தில் அமர்ந்த திவ்யப்ரகாஷ் வாம்மா பாரதி
என்றார் மிக இதமான குரலில்.
எழுபது வயதிருக்கலாம். ஆனால் ஐம்பதுதான் இருக்கும் என்று சொல்லும்படியான தேகம். தலைமுடியில் ஒரு முடிகூட வெளுப்பில்லை. டை அடித்த மாதிரியும் தெரியவில்லை. கண்ணிரண்டிலும் ஆசிட் விட்டுக் கழுவினதுபோல் ஒரு சுத்தம். கன்னக் கதுப்புகளில் சுருக்கமில்லாத பளபளப்பு. நாசியிலும் ஒரு குத்தாத கூர்மை... நெற்றியில் படுக்கை வாக்கில் விபூதிக்குப் பதிலாக ரேகைகள்!
மொத்தத்தில் தோற்றமே அவர் அசாதாரணன் என்பதை பாரதிக்குள் உணர்த்திய அந்த நொடிகளில் அவர் உன் உண்மையான பேர் கார்த்திகாதானே?
என்று கேட்கவும் பாரதிக்கு திக்கென்றது.
ஆமாம்... உங்களுக்கெப்படித் தெரியும்?
உங்கம்மாகூட ஒரு கார் ஆக்ஸிடென்ட்ல இறந்துட்டாங்க இல்ல?
ஆமாம்... நான் உங்களைப் பேட்டி எடுக்க வரேன்னு தெரிஞ்சு என்னப்பத்தி யார்கிட்டயாவது கேட்டுத் தெரிஞ்சுகிட்டீங்களா ஜீ?
நோ நோ... அந்த ஆக்ஸிடென்ட் சம்பவம் உனக்குள்ள இப்பவும் அழியாம அப்படியே இருக்கு. உன் அம்மா உயிர் பிரியும்போதுகூட கார்த்திகான்னு உன் பெயரைச் சொல்லிக்கிட்டேதான் செத்திருக்கணும், எனக்கு அந்தக் குரல் கேட்டது. எனக்கு ஒருத்தரைப் பத்தித் தெரிஞ்சுக்க மற்ற யார் தயவும் தேவையில்லம்மா...
ஆரம்பமே திவ்யப்ரகாஷிடம் அதகளமாக இருந்தது. அவரை அடுத்து எப்படி அணுகுவது என்பதிலும் ஒருவிதக் குழப்பம் அவளுக்குள் ஏற்பட்டது.
உன் பாட்டிகூட பழனிக்குப் போய்வர ஆசைப்பட்டாங்க இல்ல?
இந்தக் கேள்வி பாரதியை ஓர் உலுக்கே உலுக்கிவிட்டது.
நீ இனிமே அடிக்கடி போவ... போயாகணும்! மாயம்னும் மந்திரம்னும் முத்திரை குத்தி, பயந்தும் அலட்சியமாகவும் பாக்குற பல விஷயங்கள் உன் வாழ்க்கைல இனி நிறைய நடக்கப்போகுது. அதெல்லாமே ‘சித்த விஞ்ஞானம்’னும் சொல்லலாம். நீ பிறந்திருக்கிறதே அதையெல்லாம் தெரிஞ்சிக்கிறதுக்காகத்தான்...
அவர் போட்ட போடில் விக்கித்து நின்றாள் பாரதி.
2
அன்று
அஞ்சுகன் தியானத்தில் மூழ்கத் தொடங்கினான். அவன் மனதுக்குள் அம்பிகைக்கு உகந்த ‘பீஜாட்சர’ மந்திரம் அட்சரப் பிசகின்றி இடையறாது ஒலிக்க ஆரம்பித்தது. ஒரு தைப்பூச நன்னாளில் நவதானியங்களைத் தரைமேல் பரப்பி, அதன்மேல் தன் சீடர்களை பத்மாசனத்தில் அமரச்செய்து, அவர்கள் காதுகளில் போகர் அந்த மந்திரத்தை உபதேசித்திருந்தார்.
அதற்கு முன்பாக சீடர்களிடம் மந்திரம் தொடர்பாக கேள்விகள் ஏதும் கேட்பதாய் இருந்தால் கேட்கலாம் என்றும் கூறியிருந்தார். எல்லோரும் சற்றுத் தயங்கியபோது அஞ்சுகன் மட்டும் எழுந்து, கைகட்டி நின்றவனாக தனக்கொரு கேள்வி என்பதுபோல் ஆயத்தமானான்.
கேள் அஞ்சுகா...
மந்திரம் என்றால் என்னவென்று விளக்க வேண்டும் ஆசானே...
மனத்தின் திறம்தான் மந்திரம்...
எப்படி என்று தெளிவாக விளக்குங்கள் ஆசானே.
விளங்கிக்கொள்ளக் கடினமானதாகவா இதை நீ கருதுகிறாய்?
ஆம் ஆசானே... மந்திரம் சொன்னால் மனதுக்குள் எப்படித் திறம் வரும் அல்லது வளரும்... எனக்குப் புரியவில்லை...
சொல்லிப்பார், உனக்குத் தானாகப் புரியும்...
என்றால், இதை அனுபவித்துப் பார்த்து மட்டுமேதான் புரிந்துகொள்ள முடியுமா?
"ஆம்... ஆயினும் சுருக்கமாகக் கூறுகிறேன். இப்படி நான் கூறுவதுகூட சரியானதல்ல... சித்தத்தில் எல்லாவற்றையும் அனுபவமாகப் புரிதல் வேண்டும். எனது வார்த்தைகள் நான் உணர்ந்ததை முழுமையாக உனக்குள் செலுத்தாது. இருப்பினும் கூற முயல்கிறேன். நான் கூறுவதை ஒரு அடிப்படையாக மட்டும் வைத்துக்கொள்.
மனம் என்பது ‘சப்தங்களின் தொகுப்பு.’ பல்வகை எண்ணங்கள், நினைவுகள், நோக்குகள் என்கிற அதன் சப்த வடிவம் கட்டுப்படுத்தப்பட்டு, எண்ணங்களே துளியுமில்லாத நிசப்தத்துக்குச் செல்ல உதவுவதே தியானம். இந்த நிலையை ‘மனோ நாசம்’ என்போம். ‘மனோ நாசம் ஆத்மபிரகாசம்!’ அதாவது, மனது நாசமாகி அடங்கி ஒடுங்கினால்தான் உள்ளிருக்கும் ஆத்மாவின் பிரகாசத்தை நாம் உணர முடியும். இந்தப் பிரகாசத்தை அறியாமலும் உணராமலும் வாழ்ந்து மறைகின்றவர்களே அனேகர்.
சித்தத்தை ஒடுக்க முனைந்த சித்தனுக்கே இந்தப் பிரகாசம் புலனாகும். சித்தத்தை ஒடுக்க உதவுவதே மந்திரங்கள். மந்திரம் என்பது சில சொற்களின் சேர்க்கை. அந்தச் சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது அது பிற எண்ணங்களை விரட்டி மனோநாசமடைய உதவுவதோடு, அப்போது உள்ளே புலப்படும் ஆத்மாவோடும் போய்க் கலந்துவிடும். இல்லையெனில் நம் உடலின் ஆதார சக்கரங்கள் ஏழும் ஒரு நேர்க்கோட்டில் தூண்டப்பட்டு அதன் சுழற்சி விசையால் புலன்கள் கூர்மையாகும். இந்நிலையில் ஒரு பூ பூக்கும் ஓசையைக்கூட நம் செவிப்புலன் உணர்ந்திடும். எதிரில் நிற்பவரின் மன ஓட்டமும் ஒரு வகை உள்சப்தம்தானே? அது, அவர் நம்மோடு பேசியதைப்போல் நம் காதில் ஒலிக்கும். மந்திர தியானம் இப்படி நம் உடம்பின் சக்தியை நமக்கு அறிமுகம் செய்யும். இந்த உடம்பை நீ என்னவென்று நினைத்தாய்? புறத்தில் நீ காண்கின்ற எல்லாமும் அகத்தில் இதனுள்ளும் உள்ளது. மலை, மடு, சமுத்திரம், அருவி, நதி, வெளி, வீச்சு, அமிலம், அமுதம் எல்லாம் தோல் வேய்ந்த இந்தக் கூட்டுக்குள்ளும் இருக்கிறதப்பா!"
இப்படி நெடிய விளக்கம் அளித்திருந்த அவர் கருத்தால் அஞ்சுகன் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தவனாய் இப்போது யானைத்தலைப் பாறைமேல் மந்திர தியானத்தில் ஆழ்ந்திருக்கிறான். ஆயினும் உள்ளுக்குள் அனேக எண்ணங்கள். மனம் பீஜாட்சரத்தை முணுமுணுக்கும்போதே இந்த எண்ணங்கள் அதற்குரிய வடிவங்களாய் அவன் மனதில் தோன்றி அவனைத் தொடரவிடாமல் செய்யப் பார்த்தன. அதுதான் மனதின் இயல்பும்கூட என்பது தெரியாமல் சில நிமிடங்களிலேயே அமர்ந்த நிலையிலிருந்து எழுந்துவிட்டான்!
‘என்ன இந்த மனம் இந்தப் பாடுபடுத்துகிறது? எப்போதோ பார்த்த காட்சிகள், நிகழ்ந்த நிகழ்வுகள் எல்லாம் வெள்ளமாய்ப் பெருக்கெடுக்கின்றதே...? இந்த வாழ்வுக்கு நான் தகுதி இல்லாதவனோ?’ அவன் கலங்கி நின்றபோது எதிரில் அந்த மலைத் தலத்தின் ஒற்றையடிப் பாதையில் புலிப்பாணி எனும் அவனின் சக தோழன் வந்தபடி இருந்தான்!
***
இன்று
விக்கிப்போடு நின்றவளைச் சிரித்தபடியே பார்த்த அந்த யோகி, என்னம்மா... என்கிட்ட எப்படி ஆரம்பிக்கறதுங்கற ஸ்டார்ட்டிங் ட்ரபிளா? உன்னைப் பேசவிடாம நானே பேசிட்டேனா?
என்று கேட்கவும், சுதாரிக்கத் தொடங்கினாள் பாரதி.
ஆமாம் சார்... என் பாட்டி பழனிக்குப் போகணும்னு ஆசைப்பட்டு என்னைக் கூப்பிட்டாங்க. ஆனா நான் வர முடியாதுன்னுட்டேன். அதை நீங்க அப்படியே சொல்லவும் எனக்கு அதிர்ச்சியாவும் இருக்கு. ஆச்சர்யமாவும் இருக்கு...
நத்திங் மை சைல்ட்...! முதல் தடவைதான் இந்த அனுபவம் ஆச்சர்யம் தரும். அப்புறம் பயத்தைத்தான் தரும். நானும் முதன்முதலா சந்திக்கறவங்ககிட்டதான் என்னோட இந்த டெலிபதியைக் கொஞ்சம் சாம்பிள் காட்டுவேன்... தட்ஸ் ஆல்! மத்தபடி இது ஒரு சாதாரண ஆர்ட். பிராக்டிஸ் பண்ணுனா உன்னாலயும் செய்ய முடியும்.
அப்ப இது மிஸ்ட்ரி இல்லையா?
மிஸ்ட்ரியாவது ஹிஸ்ட்ரியாவது... அவ்வளவும் மைண்ட் பவர்!
அப்ப இந்த பவரால கோர்ட்ல பொய் சொல்ற குற்றவாளிகளை உங்களால கண்டுபிடிக்க முடியுமா?
தாராளமா... ஆனா அதைவிடப் பெரிய வேலையெல்லாம் இருக்கிறதால நான் அதுக்கெல்லாம் போறதில்ல... யாரும் என்னைக் கூப்பிடுறதுமில்லை.
இதைவிடப் பெரிய வேலைன்னு நீங்க எதைச் சொல்றீங்க?
என்னம்மா நீ உன் பேட்டியைத் தொடங்கிட்டியா?
அது எப்பவோ தொடங்கிடுச்சு...
ஓ.கே இப்படி உக்காந்தே பேசலாமா... இல்லை நடப்போமா?
உங்க விருப்பம் சார்...
டோன்ட் சே சார்... ‘குருஜி’ன்னு அழகா கூப்பிடு... சார்னா உனக்கு அர்த்தம் தெரியும்னு நினைக்கிறேன். ‘நான் உங்க அடிமை’ன்னு அர்த்தம்.
‘ஜி’ன்னே கூப்பிட்றேனே?
பாரதி குருவைக் கத்தரித்து மரியாதை மட்டும் தரத் தயாராக இருப்பதை உணர்த்தவும் அவரும் புரிந்துகொண்டவராய் சிரித்தபடியே ஓ.கே... கேரி ஆன்...
என்றார்.
ரொம்ப நன்றி... என்னை ஆச்சர்யப்படவெச்ச டெலிபதி மாதிரி உங்ககிட்ட இன்னும் என்ன மாதிரி சக்தியெல்லாம் இருக்கு ஜி?
இந்தக் கேள்வியை பாஸ் பண்ணிடும்மா. இதுக்கு நான் பதில் சொன்னா எனக்குத்தான் கஷ்டம்.
எந்த வகைல?
நான் பூமில ஓட்ற நீரோட்டத்தை என் ஆல்பா பவரால் அதிகபட்சம் ஒரு நிமிஷத்துல கண்டுபிடிச்சுடுவேன். உடனே ஒரு கூட்டம் என்னைத் தேடிவந்து எங்க தோட்டத்துல எங்க தண்ணி கிடைக்கும்னு கண்டுபிடிச்சுக் கொடுங்கன்னு நிப்பாங்க. கைரேகையும் பார்ப்பேன்... உடனே கையை நீட்டி பலன் சொல்லச் சொல்வாங்க... கை நகங்களைப் பார்த்தே வியாதியைச் சொல்லிடுவேன். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்...
பூமிக்குக் கீழ எவ்வளவோ அடி ஆழத்துல இருக்குற தண்ணியை எப்படி நீங்க கண்டுபிடிக்கிறீங்க?
இந்தக் கேள்வியே வேண்டாம்னேனே... அப்புறம் எதுக்குக் கேக்கறே?
பர்சனலா நான் தெரிஞ்சுக்கக் கூடாதா?
அது ஒரு குரு, தன் சிஷ்யனுக்கும் சிஷ்யைக்கும் சொல்லித் தரும் விஷயம். ‘தீட்சை’ன்னு ஒண்ணு கொடுத்த பிறகுதான் அதையும் சொல்லித்தருவோம். உன் வரைல நான்தான் ‘குருஜி’ இல்லையே... சாதாரண ஜிதானே?
யோகியின் அந்த பதில் ஒரு சரியான மறுப்பாக மட்டுமன்றி, பாரதியைக் கொஞ்சம் குத்தவும் செய்தது.
கமான், யோகா பத்திக் கேள்... சொல்றேன்
அவரும் தூண்டினார்.
யோகா இப்ப ஒரு போரடிக்கிற சப்ஜெக்ட் ஜி. நிறைய அதைப் பத்திப் பேசியாச்சு. எழுதியாச்சு. அதோட இப்ப அது ஒரு கார்ப்பரேட் ஆர்ட்டாவும் மாறிடுச்சு. மேல்நாடுகளில் ஒரு இன்ஜினீயர், டாக்டரைவிட யோகா டீச்சர் அதிகம் சம்பாதிக்கிறார். நிறைய பேர் கத்துக்கவும் செய்யறாங்க. ஆனா வாழ்க்கைல யாரும் தொடர்ந்து யோகா பண்றதில்லை...
அப்படி எல்லாம் அவசரப்பட்டுச் சொல்லிடாதே... நான்லாம் ரொம்பவே ரெகுலர். என் ஸ்டூடன்ட்ஸும் ரெகுலர்...
இருக்கலாம்... ஆனாலும் யோகாங்கிறது அன்றாடம் காபி, டீ சாப்பிடுற மாதிரி ஒரு விடமுடியாத பழக்கவழக்கமா பலர்கிட்ட ஆகறதில்லையே?
என்கிட்ட கத்துக்கோ... நீ ஒரு யோகா அடிக்ட் ஆகி யோகியாகி வாழ்க்கைய ரொம்ப சந்தோஷமா வாழ்வே...
கிட்டதட்ட எல்லா கார்ப்பரேட் யோகீஸும் இப்படித்தான் சொல்றாங்க.
நீ என்னை கார்ப்பரேட் யோகின்னா நினைக்கிறே?
நீங்க அப்படித்தானோ ஜி?
பைஜாமா குர்தா, ஸ்பான்டேனியஸ் இங்கிலீஷ், விமானப் பயணம்னு காலத்தை அனுசரிச்சு வாழ்ந்தா கார்ப்பரேட் யோகியா?
அது ஒண்ணும் கெட்ட வார்த்தை இல்லையே ஜி... ஏன் மறுக்கிறீங்க?
கார்ப்பரேட்னா அது ஒரு வர்த்தகம்மா... வியாபாரம்! நான் யோகா வியாபாரி இல்லை... எனக்கு இவ்வளவு பணம் கொடுங்கன்னு நான் என் மாணவர்கள்கிட்ட கேட்டதுமில்லை...
மன்னிக்கணும். நீங்க போட்ருக்குறது பிராண்டட் டிரஸ் மெட்டீரியல். ஆன்லைன்ல பர்ச்சேஸ் பண்ணதாதான் இருக்கணும். குறைஞ்சது அஞ்சாயிரம் ரூபாய் இருக்கும். அப்புறம் உங்க கைல இருக்கிற ரோலக்ஸ் வாட்ச்... சிங்கப்பூர் ஏர்போர்ட்ல வித் அவுட் டேக்ஸ் 2000 டாலர்... உங்கமேல பிராண்டட் சென்ட் வாசனையையும் ஃபீல் பண்றேன். இந்த செகண்ட்ல உங்க மெட்டீரியல் வேல்யூவே இந்தியப் பணமதிப்புல 50,000 ரூபாய் இருக்கும். பணம் வாங்காம சேவை செஞ்சு, எப்படி ஜீ இவ்வளவு செளகர்யமா இருக்க முடியும்?
அப்ப நான் பொய் சொல்றதா நினைக்கிறியா பாரதி?
நம்ப முடியலேங்கறேன்...
சரிம்மா நம்பாதே... நீ எப்படி வேணும்னா நினைச்சுக்கோ...
உங்க ஸ்டூடன்ட்ஸ்கிட்ட கேட்டு உண்மையத் தெரிஞ்சிக்கச் சொல்வீங்கன்னு நினைச்சேன். ஆனா நம்பாதேன்னு எதிர்பார்க்காத பதிலைச் சொல்லிட்டீங்களே?
நான் எதுக்கும்மா ப்ரூவ் பண்ணணும்? அப்படி நான் பண்ண முயற்சி செய்தா நான் ஒரு சரியான யோகியாவே இருக்க முடியாது.
நீங்க சொல்றது எனக்குப் புரியல... சரியான யோகிக்கும் ப்ரூவ் பண்றதுக்கும் என்ன சம்பந்தம்?
ஒரு சரியான யோகிங்கிறவன் எல்லாத்தையும் சமமா நினைக்கணும். பிறருடைய அபிப்ராயங்களுக்காக வருத்தமும் படக்கூடாது. சந்தோஷமும் படக்கூடாது.
இது சாத்தியமா ஜி?
"நான் அப்படித்தான் வாழ்ந்துகிட்டு இருக்கேன். பை த பை, பிறப்பாலயே நான் ஒரு கோடீஸ்வரன். நூறு கோடிக்குமேல சொத்து இருக்கும்மா. என் மெட்டீரியல் வேல்யுவுக்கு உனக்கு இப்ப பதில் கிடைச்சிருக்கும்னு நம்பறேன். பலப்பல வருஷங்களுக்கு முன்னால இமய மலைப்பக்கம் சும்மா ஊரைச்சுற்றிப் பார்க்கப் போனேன். அங்க ஒரு சாமியாரை சந்திச்சேன். அவர்தான் என் ஞான குரு. சாதாரண ‘திவ்யப் பிரகாஷை’ அவர்தான் ‘யோகி திவ்யப் பிரகாஷ்’னு மாத்தினார். என் உடம்பு, மனசுன்னு எல்லாத்தையும் எனக்குப் புரிய வெச்சார். என் பூர்வ புண்ணியம்தான் காரணங்கிறது பின்னால தெரிஞ்சது.
இறப்புக்குப் பிறகுகூட வரப்போறது புண்ணியம் மட்டும்தான். அதனால் அதை உத்தேசம் பண்ணி எனக்குத் தெரிஞ்ச யோகக்கலையை மதிச்சு, கத்துக்க வர்ற அவ்வளவு பேருக்கும் சொல்லித்தரேன்."
யோகி திவ்யப்பிரகாஷின் சரளமான விளக்கமும் துளியும் பதற்றமில்லாத உடல் மொழியும், பாரதியை மெள்ள கட்டிப் போடத் தொடங்கியது. அணுகுமுறைக்கு அவரிடம் வேலையே இல்லை என்பது போலவும் தோன்றிற்று.
தொடக்கத்தில் அதிசயிக்கச் செய்தவர், அதைத் தொடராமல் யதார்த்தத்துக்குள்ளும் தத்துவத்துக்குள்ளும் சென்றது இன்னமும் ஆச்சர்யப்படவைத்தது. இப்படிப்பட்டவரை ஒரு மரியாதை நிமித்தமாகக்கூட ‘குருஜி’ என்று கூப்பிடத் தயங்கியதெல்லாமும் தவறுபோல் உணர்ந்தாள். அப்படியே மௌனித்தாள்.
வேண்டாம் பாரதி... என்னை குருஜின்னு கூப்பிடாம விட்டதை நினைச்சு வருத்தமெல்லாம் படாதே... அதுல எந்தத் தப்பும் இல்லை
என்று அதற்கொரு பதிலைச் சொல்லவும் திரும்பவும் ஆடிப்போனாள்.
ஜி... உங்க முன்ன உக்காந்து பேசவே பயமா இருக்கு... இப்படி மனசுல நினைக்குறத அப்படியே சொன்னா எப்படி?
அதான் தொடக்கத்துலேயே சொன்னேனே... முதல்ல ஆச்சர்யமா இருக்கும், அப்புறம் பயமா இருக்கும்னு...
எல்லாத்துக்கும் ஒரு சரியான பதில் வெச்சிருக்கீங்க...
உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கிலுண்டாகும். நான் சொல்லல... ‘ஞானக் கிறுக்கன்’ பாரதி சொல்லியிருக்கான்!
அதனாலதான்ஜி கார்த்திகாவான நான்கூட பாரதியானேன்.
தெரியும்... வரப்போற நாள்கள்ல நீ என்ன ஆவேன்னும் தெரியும்.
ஜோசியம் சொல்லப் போறீங்களா?
உன் பேட்டிய முடிச்சுக்கோ உன்னப்பத்தி நான் இன்னும் கொஞ்சம் சொல்றேன்.
சரி ஜி முடிச்சுக்கிறேன். என்னப் பத்தி என்ன சொல்லப் போறீங்க?
அதான் எடுத்த எடுப்புல சொன்னேனே... மாயம்னும் மந்திரம்னும் முத்திரை குத்தி பயந்தும் அலட்சியமாகவும் பார்க்கப்பட்ற பல விஷயங்களை நீ உன் வாழ்க்கைல சந்திப்பேன்னு.
உதாரணத்துக்கு ஒண்ணு சொல்ல முடியுமா?
சொல்றேன். அதை யார்கிட்டையும் சொல்லமாட்டேன்னு எனக்கு சத்தியம் செய்.
இதுக்கு எதுக்கு சத்தியம்?
சரி வேண்டாம் விட்டுடு... நானும் சொல்லலை...
உடனே இப்படிச் சொன்னா எப்படி?
அப்படித்தான்... சில அதிசயங்கள் ரகசியமா மட்டுமே இருக்கணும். இல்லேன்னா அது அதிசயமா நீடிக்காது...
அப்படி என்ன அதிசயம் அது? ஒண்ணே ஒண்ணைச் சொல்லுங்களேன்... சத்தியம்...!
தாங்கள் வாழ்ந்த காலத்துல சுமந்திருந்த இந்த உடம்பை ஒரு கட்டத்துக்குமேல சுமக்க முடியாம சமாதிக்குள்ள அடக்கிட்டு ஆத்ம உடம்போட நடமாடுற சித்தர்களைச் சந்திக்க நேர்ந்தா அது அதிசயமில்லையா... அதுக்காக நீ பழனிக்குப் போகப்போறே!
யோகியின் பேச்சு பாரதியை விக்கித்திருக்கச் செய்தது. வெறித்துப் பார்த்தாள்.
என்ன பாக்குற? உன்னால அவங்கள நானும் பார்க்கப் போறேன். நான் உன் எடிட்டரைப் பார்த்து, அவர் உன்னை என்கிட்ட அனுப்பினது எல்லாமே ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒண்ணு. இது வெறும் ஆரம்பம்தான்... நிறைய இனிமேல்தான் இருக்கு!
அவர் அப்படிச் சொல்லவும் ஆழ்ந்த மெளனவயப்பட்டவள் விநாடிகள் கழித்து, பேசலானாள்.
"இல்லை ஜி! நீங்க கடைசியா சொன்ன சில கருத்துகளை என்னால ஏற்க முடியாது. என் எடிட்டர் உங்களைப் பார்த்த பிறகு என்னை அனுப்பியது, நான் உங்களைச் சந்தித்தது எல்லாமே ரொம்பத் தற்செயலான விஷயங்கள்... இதை ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒண்ணுங்கிறத என்னால ஏற்க முடியாது. இல்லாத சித்தர்களைப் பார்ப்பேன்னு சொன்னதைக்கூட ஒரு ‘இன்ட்ரஸ்ட் பேஸ்’ல நான் நடக்கட்டும் பார்க்கலாம்னு சொல்லி ஏத்துக்குவேன். ஆனா எல்லாருடைய வாழ்வும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டதுங்கிற இந்தத் தலைவிதிச் சிந்தனையை நான் வெறுக்கிறேன், மறுக்கிறேன்.
எந்த ஒரு சம்பவமும் அதனுடைய தொடர்புடைய ஒரு முந்தைய சம்பவத்தின் தொடர்ச்சிதான். இதுக்கு நடுவுல எதிர்பாராமல் எதாவது நடந்தா அது ‘ஆக்ஸிடென்ட்’ இல்லேன்னா ‘இன்சிடென்ட்,’ அவ்வளவுதான். அவ்வளவேதான்!"
சரிம்மா... அடுத்து என்னை எக்காரணம் கொண்டும் சந்திக்கக்கூடாதுங்கிற உறுதியோட திரும்பிப்போ. அப்படியே நடக்கவும் முயற்சி செய். காலம் என்ன செய்யுதுன்னு பார்ப்போம்.
இந்த டீல் அவசியமில்லை ஜி! வீம்பா நான் உங்களைப் பார்க்கிறத தவிர்த்தா, நான் நீங்க சொன்ன கருத்துகளால் பாதிக்கப்பட்டுட்டேன்னு ஆயிடும். நான் நானா இருக்கேன். உங்க டெலிபதி பவருக்கு மட்டும் என் சல்யூட். கொஞ்சம் போட்டோ எடுத்துக்கிட்டு நான் கிளம்பறேன்
என்றவள் தான் கொண்டு வந்திருந்த டிஜிட்டல் கேமரா மூலமாக அவரை அப்படியும் இப்படியுமாகச் சுற்றி வந்து சில படங்களை எடுத்துக்கொண்டு அழகாய்க் கைகுலுக்கிவிட்டு விடைபெற்றாள். யதார்த்தமாய் அந்தக் கையை மோந்தபோது நல்ல சந்தன வாடை!
அலுவலகம் திரும்பி ஆசிரியர் முன்னால் அவள் வந்து அமர்ந்தபோது ஆசிரியர் ஜெயராமன், தன் ஐபோனில், வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ பார்த்தபடி இருந்தார். பாரதியை உட்காரச் சொல்லிவிட்டு வீடியோவைத் தொடர்ந்தார். சில நிமிடங்களுக்குப் பிறகே நிமிர்ந்தார். என்ன பாரதி... எந்த வீடியோவை அப்படிப் பார்த்தேன்னு ஆச்சர்யமா இருக்கா?
அதெல்லாம் இல்லை சார்... கைல செல்போன் இருந்து அதை அளவா பயன்படுத்தினா அதுதான் சார் இன்னிக்கு ஆச்சர்யம்.
சரி நீ போன விஷயம் நல்லபடி முடிஞ்சதா?
முடிஞ்சது சார்... நல்ல ரிசப்ஷன்!
ஆள் எப்படி?
நல்ல மனுஷனா, இல்லை, அப்படி இப்படியான்னுதானே கேக்குறீங்க?
உம்...
நல்ல மனுஷன் சார்... அதேசமயம் கொஞ்சம் அப்படி, கொஞ்சம் இப்படியும் சார்...