Ithu Sathiyam
5/5
()
About this ebook
திடீரென்று ஒரு நாள் வேறு ஏதோ வேலையாக இருந்தபோது ‘இது சத்தியம்’ என்று ஒரு தலைப்புத் தோன்றியது. ஒரு காகிதத்தில் அதை எழுதி எடிட்டரிடம் காட்டினேன். ‘நன்றாக இருக்கிறது.’ தொடர் கதை எழுதுங்கள் இந்த தலைப்பில், என்று கூறினார். பல கட்டங்களில் அவருடைய யோசனைகளைக் கேட்டே இதைப் படைத்தேன்.
என் இளம் பிராயத்தில் கும்பகோணம் பெரிய பெருமாள் சன்னதித் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு என் தந்தை என்னை அழைத்துச் சென்றிருந்தார். அந்த வீட்டுத் தலைவி கம்பீரமான நெடிய தோற்றத்துடன் மிடுக்கும் அதிகார தோரணையுமாக இருந்தார். அவர்கள் வீட்டில் கூண்டில் ஒரு பச்சைக் கிளி வளர்த்து வந்தார்கள்.
என்னவோ தெரியவில்லை, அந்தப் பெண்மணி என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டார். அவரை வைத்துத்தான் ராஜலஷ்மி அம்மாள் பாத்திரத்தைக் கற்பனை செய்தேன்.
தொடர்கதையாக இது பாதி வந்து கொண்டிருந்த போது 20, 30 அத்தியாயம்தான் வந்திருக்கும். ஒரு நாள் பட அதிபர் ஜி. என். வேலு மணி எங்கள் அலுவலகத்திற்கு வந்து எடிட்டரையும் என்னையும் பார்த்து, இதைப் படமாக்க விரும்புவதாகக் கூறினார். ‘கதை இன்னும் முடியவில்லையே?’ என்று நான் சொன்னதற்கு, ‘எப்படி முடிந்தாலும் பரவாயில்லை, ராஜலஷ்மி அம்மாள் பாத்திரம் நன்றாயிருக்கிறது. அது போதும்’ என்றார். எடிட்டரும் சம்மதித்து அனுமதி கொடுத்தார். சில நாள் கழித்து கதையின் மீதிப் பகுதியைச் சுருக்கமாக எழுதி திரு. வேலுமணியிடம் தந்தேன்.
‘இது சத்தியம்’ படம் வெற்றி பெறவில்லை. ஆனால் ராஜலஷ்மி அம்மாவாக நடித்த கண்ணாம்மா அந்தப் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்று எல்லோரும் பாராட்டினார்கள்.
என் பால்ய நண்பனான கே. எம். குருசாமி என்ற குரு சென்னை ஜார்ஜ் டவுனில் ஒரு லாரி கம்பெனி நடத்தி வந்தான். லாரி, போக்குவரத்து சம்பந்தமான பல தகவல்களையும், சென்னை ஊட்டி சாலை பற்றிய விவரங்களையும் அவன் மூலமாக தெரிந்து கொண்டேன். அந்த அன்பு நண்பனின் இனிய நினைவிற்கு இப்புத்தகத்தைக் காணிக்கையாக்கி, என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- ரா.கி. ரங்கராஜன்
Read more from Ra. Ki. Rangarajan
Ore Vazhi Rating: 5 out of 5 stars5/5Olivatharkku Idamillai Part - 1 Rating: 5 out of 5 stars5/5Olivatharkku Idamillai Part - 2 Rating: 5 out of 5 stars5/5Innoruthi Rating: 0 out of 5 stars0 ratingsKudumba Kathaigal Rating: 5 out of 5 stars5/5Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsThirakkoodaatha Kathavu Rating: 0 out of 5 stars0 ratingsSumma Irukkatha Pena Rating: 0 out of 5 stars0 ratingsAangal Sevvai Pengal Velli Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thavira Rating: 5 out of 5 stars5/5Hassya Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPattampoochi Rating: 5 out of 5 stars5/523 - m Padi Rating: 5 out of 5 stars5/5Raathiri Varum Rating: 5 out of 5 stars5/5Houseful Rating: 5 out of 5 stars5/5Kannukku Theriyathavan Kaadhalikkiran Rating: 0 out of 5 stars0 ratingsHema! Hema! Hema! Rating: 0 out of 5 stars0 ratingsMarubadiyum Devaki Rating: 0 out of 5 stars0 ratingsPadagu Veedu Rating: 0 out of 5 stars0 ratingsViji - Adventure Naadgangal! Rating: 0 out of 5 stars0 ratingsMudhal Mottu Rating: 0 out of 5 stars0 ratingsEppadi Kathai Ezhuthuvathu? Rating: 4 out of 5 stars4/5Kanna Pinna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAdimaiyin Kaadhal Rating: 5 out of 5 stars5/5Aavi Rajiyam Rating: 0 out of 5 stars0 ratingsThooran Endra Kalanjiyam Rating: 0 out of 5 stars0 ratingsEngirunthu Vatuguthuvo... Rating: 0 out of 5 stars0 ratingsIthu Ungalukkaga! Rating: 0 out of 5 stars0 ratingsVayathu 17 Rating: 3 out of 5 stars3/5Jennifer Rating: 4 out of 5 stars4/5
Related to Ithu Sathiyam
Related ebooks
Padagu Veedu Rating: 0 out of 5 stars0 ratingsPon Magal Vanthal Rating: 5 out of 5 stars5/5Kaadhal Vendam Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsGhost Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Suriya Vamsam - Part 1 Rating: 5 out of 5 stars5/5Sutri Sutri Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thavira Rating: 5 out of 5 stars5/5Maya Maan Rating: 0 out of 5 stars0 ratingsIrandaavathu Amma Rating: 0 out of 5 stars0 ratingsAasai Thee Valarthen Rating: 5 out of 5 stars5/5Hassya Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKrishna Gaanam Rating: 0 out of 5 stars0 ratingsMarma Veedu Rating: 0 out of 5 stars0 ratingsOonjaladum Ullangal Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Antha Gnabagangal Rating: 0 out of 5 stars0 ratingsKanne Ethirkkaathe Rating: 4 out of 5 stars4/5Vilagatha Sirakugal Rating: 5 out of 5 stars5/5Maaya Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsMinmini Pookkal Rating: 5 out of 5 stars5/5Vikrama... Vikrama... - Part 2 Rating: 5 out of 5 stars5/5Aarthikku Mugam Sivanthathu Rating: 4 out of 5 stars4/5Kanne Kavya! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkey Uyiranean! Rating: 0 out of 5 stars0 ratingsKari Kodugal Rating: 0 out of 5 stars0 ratingsThulli Varukuthu Vel Rating: 0 out of 5 stars0 ratingsSuvaril Nuzhaintha Vergal Rating: 4 out of 5 stars4/5Megalaparanam Rating: 0 out of 5 stars0 ratingsSubhavin Sirukathaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Ithu Sathiyam
1 rating1 review
- Rating: 5 out of 5 stars5/5Excellent story though it was a family story every page had thriller effect can we have such an author and such a lovely expressions and narration all the characters are in front of our eyes
Book preview
Ithu Sathiyam - Ra. Ki. Rangarajan
http://www.pustaka.co.in
இது சத்தியம்
Ithu Sathiyam
Author:
ரா. கி. ரங்கராஜன்
Ra. Ki. Rangarajan
For more books
http://pustaka.co.in/home/author/ra-ki-rangarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
என்னுரை
இந்த நாவலை எழுதத் தொடங்கியது பற்றி ‘எடிட்டர் என். ஏ. பி.’ என்ற புத்தகத்தில் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
திடீரென்று ஒரு நாள் வேறு ஏதோ வேலையாக இருந்தபோது ‘இது சத்தியம்’ என்று ஒரு தலைப்புத் தோன்றியது. ஒரு காகிதத்தில் அதை எழுதி எடிட்டரிடம் காட்டினேன். ‘நன்றாக இருக்கிறது’ தொடர்கதை எழுதுங்கள் இந்த தலைப்பில், என்று கூறினார். பல கட்டங்களில் அவருடைய யோசனைகளைக் கேட்டே இதைப் படைத்தேன்.
என் இளம் பிராயத்தில் கும்பகோணம் பெரிய பெருமாள் சன்னதித் தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு என் தந்தை என்னை அழைத்துச் சென்றிருந்தார். அந்த வீட்டுத் தலைவி கம்பீரமான நெடிய தோற்றத்துடன் மிடுக்கும் அதிகார தோரணையுமாக இருந்தார், அவர்கள் வீட்டில் கூண்டில் ஒரு பச்சைக் கிளி வளர்த்து வந்தார்கள்.
என்னவோ தெரியவில்லை, அந்தப் பெண்மணி என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டார். அவரை வைத்துத்தான் ராஜலஷ்மி அம்மாள் பாத்திரத்தைக் கற்பனை செய்தேன்.
தொடர்கதையாக இது பாதி வந்து கொண்டிருந்த போது 20, 30 அத்தியாயம்தான் வந்திருக்கும். ஒரு நாள் பட அதிபர் ஜி. என். வேலு மணி எங்கள் அலுவலகத்திற்கு வந்து எடிட்டரையும் என்னையும் பார்த்து, இதைப் படமாக்க விரும்புவதாகக் கூறினார், ‘கதை இன்னும் முடியவில்லையே?’ என்று நான் சொன்னதற்கு, ‘எப்படி முடிந்தாலும் பரவாயில்லை, ராஜலஷ்மி அம்மாள் பாத்திரம் நன்றாயிருக்கிறது. அது போதும்’ என்றார். எடிட்டரும் சம்மதித்து அனுமதி கொடுத்தார். சில நாள் கழித்து கதையின் மீதிப் பகுதியைச் சுருக்கமாக எழுதி திரு. வேலுமணியிடம் தந்தேன்.
‘இது சத்தியம்’ படம் வெற்றி பெறவில்லை. ஆனால் ராஜலஷ்மி அம்மாவாக நடித்த கண்ணாம்மா அந்தப் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் என்று எல்லோரும் பாராட்டினார்கள்.
என் பால்ய நண்பனான கே. எம். குருசாமி என்ற குரு சென்னை ஜார்ஜ் டவுனில் ஒரு லாரி கம்பெனி நடத்தி வந்தான். லாரி, போக்குவரத்து சம்பந்தமான பல தகவல்களையும், சென்னை ஊட்டி சாலை பற்றிய விவரங்களையும் அவன் மூலமாக தெரிந்து கொண்டேன். அந்த அன்பு நண்பனின் இனிய நினைவிற்கு இப்புத்தகத்தைக் காணிக்கையாக்கி, என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ரா.கி. ரங்கராஜன்
இலக்கியத் தம்பதிகள்
தமிழ் நாட்டிற்குப் பெருமையைத் தேடித்தந்து ஜனரக எழுத்தாளர்களில் ஒருவர் ரா. கி. ரங்கராஜன், ‘ஆனந்த விகடனும், கலைமகளும்’ உச்சத்தில் இருக்கும் போது, ஆரம்பிக்கப்பட்டது குமுதம். காலத்திற்குத் தகுந்தாற் போல தனக்கென ஒரு தனி பாணியுடன் ஓங்கி வளர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தவர்களுள் ஒருவர் ரா. கி. ரங்கராஜன், அவருடைய பெரும்பாலான கதைகள் இதழில் வெளிவந்தவைதான். தன்னுடைய எழுத்தில் பல யுக்திகளைக் கையாண்டுள்ளார். பேய்க் கதைகள், திகில் கதைகள், குடும்பக் கதைகள், காதல் கதைகள் என்று ஏராளமாக எழுதியுள்ளார். குமுதம் இதழிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு, ஆனந்த விகடன், துக்ளக், மாம்பலம் டைம்ஸ் போன்ற இதழ்களில் சமூகப் பொறுப்புடம் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இவருடைய எழுத்தில் நக்கல், நையாண்டிக்குக் குறைவே இருக்காது.
இவருக்குக் கிடைத்தது போல வாழ்க்கைத் துணைவியார் இன்னொரு எழுத்தாளருக்குக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். திருமதி கமலா ரங்கராஜனுக்கும் புத்தகங்கள் படிப்பதில் மிகுந்து ஆர்வம் உண்டு. அதோடு நில்லாமல், அந்தந்த எழுத்தாளர்களை தொலைபேசியில் அழைத்தோ அல்லது நேரில் சந்தித்தோ அந்தப் புத்தகத்தைப் பற்றி விவாதித்து, வாழ்த்தும் தெரிவிப்பார். இதனால் ரா. கி. ரங்கராஜனின் புகழ் மேலும் வளர்ந்தது.
ரா.கி. ரங்கராஜன் எப்போதும், படிப்பும் எழுத்தும் என்றால், திருமதி கமலா ரங்கராஜன், தன் கணவர் எழுதியதை எல்லாம் சேகரித்து வைப்பதிலும், புத்தக ரூபமாக வெளிவருவதிலும் அக்கறை காட்டினார். இவர்களை இலக்கியத் தம்பதிகள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.
திருமதி கமலா ரங்கராஜன் தான், ரா கி, ரங்கராஜனின் முதல் வாசக விசிறி. அவ்வளவு ரஸித்து ரஸித்துப் படித்ததை, மறக்காமல் தன் இறுதி மூச்சு வரை நினைவில் வைத்துக் கொண்டு, ஏராளமான தகவல்களைச் சொன்னார். சிறுகதையானாலும், நாவலானாலும் சரி! எல்லாவற்றையும் நினைவில் வைத்துக் கொண்டிருந்தார். கடலளவு அவர் எழுதியதை, தன்னுள் அடக்கிக் கொண்ட அகத்தியர் திருமதி சுமலா ரங்கராஜன்.
ஒரு எழுத்தாளர் கதை, கட்டுரை, நாவல், கவிதை எழுதுவது எல்லாம் சகஜம். ஆனால் நடையிலேயோ, கருத்திலேயோ, உருவத்திலேயோ தொடர்பு எதுவும் இல்லாமல் தனித்தனி மனிதர் போல, வெவ்வேறு பெயர்களில் எழுதக் கூடிய திறமை ஒரு சில எழுத்தாளர்களுக்கு மட்டும் தான் உண்டு. அதில் ரா. கி. ரங்கராஜனும் ஒருவர்.
சுய விளம்பரம் எதுவும் இல்லாமல், கர்ம யோகி போல, சக எழுத்தாளர்களையும் ஊக்குவித்து, தன் எழுத்துக்களால் மட்டும் தனக்கென ஒரு தனியிடத்தை ஏற்படுத்திக் கொண்டவர் ரா. கி. ரங்கராஜனின்.
முன்னுரை
ரா.கி.ரங்கராஜன்: 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி.கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான், ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1948-ல் ‘சக்தி’ மாத இதழிலும் ‘காலச்சக்கரம்’ என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் ‘குமுதம்’ நிறுவனம் சிறிது காலம் நடத்திய ‘ஜிங்லி’ என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளான். ரங்கராஜன் ‘சூர்யா’, ‘வரம்பா’, ‘கிருஷ்ணகுமார்’, ‘மாலதி’, ‘முன்றி’, ‘அவிட்டம்’ - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள் - என பலதரப்பட்ட எழுத்துக்களைத் தந்தவர். ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ, எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.
- கல்கி
‘ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு - இவைதான் இவருடைய சிறப்புகள்’.
- சுஜாதா
1
எதிர் மெத்தையில் அமர்ந்திருந்த மனிதர் கொஞ்சம்கூட நாசூக்குத் தெரியாதவராக இருந்தார்.
கொட்டக் கொட்ட விழித்து உற்று உற்றுப் பார்க்கவில்லை என்பது உண்மையே. ஆனால் அடிக் கண்ணாலும், ஓரப் பார்வையாலும் அவர் தன்னையும், சித்ராவையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்று கண்டு கொண்டான் தியாகு. ஆகவே புது மனைவியிடம் பகிர்ந்து கொள்ளக் கூடிய இன்பப் பிதற்றல்களையும் குறும்புக் கிசுகிசுப்புகளையும் மூட்டை கட்டி வைத்து விட்டு, ஸீட்டின் கீழேயிருந்த ஹோல்டாலின் மறைவில் காலால் காலைத் தேய்ப்பதுடனும், பேப்பரின் பின்னால் விரலால் விரலை அழுத்துவதுடனும் திருப்தியடைய வேண்டியதாயிற்று.
சித்ரா அதற்கும் கூட இடம் தரவில்லை. அவளுடைய கவலையான பார்வை ஜன்னலுக்கு வெளியாகப் பிளாட்பாரத்தில் நீந்திக் கொண்டிருந்தது. விதவிதமான தலைகளுக்கிடையே தான் தேடுவதைக் காண முடியாத அலுப்புடன், ஒரு சின்ன சூட்கேஸ் தானே? நீங்களே எடுத்து வந்திருக்கக் கூடாதா? அந்தப் பையனிடம் எதற்காகக் கொடுத்தீர்கள்?
என்று கணவனைக் கடிந்து கொண்டாள்.
வண்டி புறப்பட இன்னும் பத்து நிமிஷம் இருக்கிறது. கவலைப்படாதே,
என்றான் தியாகு.
மனைவியின் பொறுப் புணர்ச்சி ஒரு வகையில் அவனுக்குப் பெருமையாயிருந்தது. இன்னொரு விதத்தில், தொந்திரவாயுமிருந்தது. வீட்டிலிருந்து புறப்பட்டது முதல் ஸ்டேஷனுக்கு வருவதற்குள் ‘தம்பி தம்பி’ என்று நூறு வேலைகளுக்கு நீ ஏவிக்கொண்டிருந்தாயே என்று நானும் ஒரு வேலை கொடுத்தேன்!
என்றான்.
அதற்காக? கொடுக்கிற வேலையில் தராதரம் கிடையாதா? கல்யாண நகைகளையெல்லாம் அந்த ஸூட்கேஸில்தான் வைத்திருக்கிறேன்
என்று சித்ரா சொல்லிக் கொண்டிருந்த போது, இரண்டாவது மணி அடித்தது; இருளின் தொலைவில் பச்சை விளக்கு தலையாட்டிற்று. பிளாட்பாரத்தில் ஓட்டமாக ஓடி வந்த ஒரு சிறுவன், உடம்பில் பாதியை வெளியே நீட்டியபடி எழுந்து நின்றிருந்த சித்ராவிடம் கைப் பெட்டியைத் திணித்தான்.
சாவியைப் பெட்டி வாயிலேயே வச்சிருந்தீங்களே சின்னம்மா
என்று அவன் சொன்னதும் சித்ராவுக்குப் பசிரென்றது. அப்படியா!
என்று பதறினாள்.
ஆமாம் சின்னம்மா! நான்கூடப் பார்க்கலை, டங்குனு கீழே விழுந்த சத்தம் கேட்டப்புறம்தான் தெரிஞ்சுது. சாவியைத் தேடி எடுத்திட்டு வர நேரமாயிட்டுது. எல்லாம் சரியாயிருக்குதா பார்த்துக்குங்க,
என்றான் பையன்.
கெட்டிக்காரன்,
என்று பாராட்டிய வண்ணம் தியாகு பர்சிலிருந்து எட்டணா நாணயமொன்றைக் கொடுத்தான் அவனிடம். ஒடு!
என்று அவனை விரட்டியதைத் தனக்குச் சொல்லப்பட்டதாக எண்ணியது போல் போட்மெயில் தஞ்சாவூர் ஸ்டேஷனிடம் விடைபெற்றது.
பெட்டியைத் திறந்து சரி பார்ப்பதற்குள்ளே அவனை அனுப்பிவிட்டீர்களே!
என்று சித்ரா முணு முணுத்துக் கொண்டிருந்தாள்.
நடு நிசி வேளைக்கு மெயில் கும்பகோணத்தைத் தாண்டியபோது எதிர் வீட்டுக்காரர் தூங்கத் தொடங்கி விட்டார். அவர் மறுபுறமாக ஒருக்களித்துப் படுத்துக் கொண்டுவிட்டது இன்னும் வசதியாயிற்று. அந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியில் வேறு யாரும் ஏறக் காணோம்.
சித்ராவின் மார்பில் தவழ்ந்து கொண்டிருந்த இரட்டைப் பின்னல்களையும் பிடித்து, அவள் மோவாயரின் கீழாகச் சேர்த்து மூடி போட்டவாறு விஷமம் செய்து கொண்டே, என்னிடம் வந்து விடுவதில் அத்தனை துடிப்பா என் செல்லத்துக்கு
என்று கொஞ்சினான் தியாகு.
பின்னே என்ன? தனி வீடு பார்த்தாயிற்று. குடித்தனத்துக்கு வேண்டியதெல்லாம் வாங்கி வைத்தாகி விட்டது என்று நீங்கள் எழுதினீர்கள், உடனே வந்து அழைத்துப் போங்கள் என்று நான் எழுதினேன்.
ஒரு வாரம் கழித்து உன் அம்மாவே கொண்டு வந்து விடுவாள் என்று நினைத்தேன். நீ என்னையே வரும்படி செய்துவிட்டாய்.
ஆமாம்! நாள் பார்க்கிறேன், நாள் பார்க்கிறேன் என்று ஒரு மாதம் தள்ளுவாள். அப்புறம் தடாலென்று அன்றைக்குப் பார்த்து உடம்பு சரியில்லாமல் படுத்து விடுவாள்
என்றாள் சித்ரா சலிப்புடன்.
தாயிடம் அவ்வளவாகப் பிடிப்பில்லாதது போல் அவள் பேசியது தியாகுவுக்கு வியப்பாயிருந்தது. ஆனால் அவனுக்கு அவர்கள் குடும்பத்தைப் பற்றி அதிகம் தெரியாது. கல்யாணமாகி ஒரு மாதம்தான் சென்றிருந்தது. அதுவும், கல்யாணத்துக்கு மறுநாளே சென்னைக்குப் புறப்பட்டுவிட்டான். அவனுடைய தொழில் நண்பரொருவர் பார்த்து முடித்து வைத்த கல்யாணம் அது. ஒண்டிக் கட்டையான தியாகுவுக்குத் தன் குடும்பத்தார் மூலம் அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பில்லாது போயிற்று.
"படுத்துக் கொள்கிறாயா?’ என்று தியாகு கேட்டான்.
சித்ரா புருவத்தை உயர்த்தினாள்.
எங்கே?
இங்கே!
தியாகு தன் தொடையை லேசாகத் தட்டிக் காட்டினான்.
தூ, வெட்கமில்லாமல்!
என்று சிரித்தாளாயினும் சித்ரா அவனை நெருங்கினாற்போல் மல்லாந்து படுத்துக் கொண்டாள். அவன் விரல்கள் அவள் வெள்ளைச் சிற்றாடையின் நீலக் கரையை மெதுவே நீவி விட கூட்டின் இடுக்கில் சிக்கியிருந்த ‘இல்லஸ்ட்ரேடட் வீக்லி’ யை விடுவித்து, அதன் பக்கங்களைப் புரட்டலானாள்.
புதுத் தம்பதிகளின் படங்கள் அச்சிட்ட பக்கம் வந்ததும் அவள் விழிகள் நின்றன, எத்தனை பேர் அனுப்பியிருக்கிறார்கள். நம் படம் கூட அனுப்பி வைத்திருக்கலாம்.
என்றாள்.
படம் ஏது நம்மிடம்? என் சினேகிதன் ஒன்று எடுத்தான். அதை அனுப்பியிருந்தால் பிரசுரிக்க மாட்டார்கள். பிரசுரித்திருந்தாலும் நீ சண்டைக்கு வருவாய்! அத்தனை கோரம்,
என்று கூறிய வண்ணம் அவள் நெற்றிக்கு நேராகக் குனிந்து புது ஜோடிகளின் புகைப்படங்களை ஆராய்ந்தான் தியாகு.
ஓ, ஓ!
என்ற வியப்பு வெளிப்பட்டது மறுநிமிடமே அவனிடமிருந்து, கடைசியில், மிஸ் நாச்சியாரிடம் அகப்பட்டுக் கொண்டு விட்டாரோ ஒரு அப்பாவி! அட பரிதாபமே!
யாரது மிஸ் நாச்சியார்?
என்று குப்புறத் திரும்பி, முகத்தை உயர்த்தி விசாரித்தாள் சித்ரா.
வலப்புறக் கீழ்க் கோடியில் இருந்த ஜோடியைக் காட்டினான் தியாகு என்னுடன் இண்டர் முதல் பி. ஏ. வரை படித்தவள். மிஸ் பத்ரகாளி என்று தான் நாங்கள் சொல்லுவது வழக்கம். சரியான ஆண்பிள்ளை!
சித்ராவின் கண்கள் அவன் உதட்டின் அசைவுகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தன. எல்லோருடனும் சுற்றுவாளாக்கும்?
என்றாள் அவன் பேச்சை நிறுத்தியதும்.
ஆமாம். ஆனால் நெருப்பு. அவளுக்காக இஷ்டமிருந்தால் யாருடன் வேண்டுமானாலும் எங்க வேண்டுமானாலும் போவாள். எவனாவது தானாக நெருங்கி பீச்சுக்குப் போகலாமா, பிக்சருக்குப் போகலாமா என்று கேட்டால் தொலைந்தான்! எந்த அப்பாவி வந்து இவளிடம் தலையைக் கொடுக்கப் போகிறானோ என்று இந்த மாப்பிள்ளைக்காக அந்த நாளிலிருந்தே இரக்கப்பட ஆரம்பித்துவிட்டோம்!
சித்ரா அவன் முகத்தைப் பார்ப்பதை விடுத்து மறுபடியும் படத்தை நோக்கினாள், போட்டோவில் புருவம், கண் எல்லாவற்றையும் ‘டச்’ பண்ணி அனுப்பியிருக்கிறாள்.
இருக்காது!
என்றான் தியாகு உறுதியாக. நேரில் பார்ப்பதற்கு இதைவிட அழகாயிருப்பாள்!
கண்டீர்கள்! போதும், கல்யாணமான பெண்ணைப் பற்றி விமரிசனம்!
என்று எதிர்பாராத விதமாய்ச் சின்னம் காட்டினாள் சித்ரா.
மந்தைவெளிப்பாக்கத்தின் புதிய செம்மண் தெருக்களில் டாக்ஸி நுழைந்ததும் சித்ராவின் பரபரப்பு அதிகரித்தது.
ரைட்டில் திரும்பு,
என்ற தியாகுவின் கட்டளைப்படி டாக்ஸி திரும்பியதும் ஆவலுடன் வெளியே பார்த்தவள் அந்த மாடி வீட்டுக்கு அடுத்த வீடுதானே? சின்னதாய், அழகாயிருக்கிறதே
என்றாள் குதூகலத்துடன்.
ஆமாம். எப்படிக் கண்டு பிடித்தாய்?
கேள்வி ஞானம், என்று சிரித்தாள் சித்ரா,
நேற்றுப் பூரா உங்களைத் துளைத்துத் துளைத்து விவரங்கள் கேட்டுக் கொண்டிருந்தேனே? பச்சை கேட் மாடியில்லாத ஓட்டு, வாசல் புறம் சின்ன அறை. ஐந்தடி காலி நிலம் - பூச்செடிகள் போட"
டாக்ஸி நின்றது.
தியாகு கைப்பையை எடுத்துக் கொண்டு இறங்கி டிரைவரை விட்டுப் பின் பெட்டியைத் திறந்து ஹோல்டால் ஸ்ட்கேஸ்களை இறக்கிக் கொண்டிருக்கையில் சித்ரா ஆர்வத்துடன் வெறுமே சாத்தியிருந்த கேட்டைத் திறந்து கொண்டு நுழைந்தாள்.
தியாகு பர்சைத் திறந்து இரண்டு ரூபாய் நோட்டொன்றை உருவிக் கொண்டிருந்தபோது, சித்ராவின் திகில் நிறைந்த குரல் கேட்டது.
என்ன, வீட்டைப் பூட்டாமலா புறப்பட்டு வந்தீர்கள் ஊருக்கு? திறந்திருக்கிறதே!
திறந்திருக்கிறதா, உடைத்திருக்கிறதா பார்!
என்று திகைப்புடன் பதிலளித்த தியாகு, சில்லறையை வைத்துக்கொள்,
என்று டிரைவரிடம் சொல்லிக் கொண்டே விரைந்தோடி வந்தான்.
ஆம், முன்புறக் கதவு பூட்டப்படவில்லை. சும்மா சாத்தியிருந்தது.
வீடு தவறிவிட்டீர்களா?
சே! நான் அமர்த்திய வீடு எனக்குத் தெரியாமல் போய்விடுமா? இந்த மாதிரி அமைப்பில் ஒரு வீடுகூட இந்தத் தெருவில் கிடையாது. வேறு யாரோ வந்திருக்கிறார்கள்! வா உள்ளே,
என்று கவலையும் பரபரப்புமாய் உள்ளே நுழைந்தான் தியாகு. இதோ பார்! என் படம், எங்கள் கம்பெனி காலண்டர்! இதெல்லாம் நான் மாட்டியது... இந்தக் கோட் ஸ்டாண்டு போன வாரம்...
பேச்சு நெஞ்சுக் குழியில் சிக்கிற்று: கண்கள் நிலை குத்தி நின்றன.
சித்ரா அதிர்ந்து நின்றாள்.
கோட் ஸ்டாண்டில் ஒரு நீல நிற வாயில் புடவை தாறுமாறாகத் தொங்கிக் கொண்டிருந்தது.
நாற்காலியின் சட்டத்தில், கறுப்பில் மஞ்சள் புள்ளி போட்ட மில்க் ரவிக்கையொன்றும், எலாஸ்டிக் வைத்த ஒரு பிரேஸியரும் தொத்திக் கொண்டிருந்தன.
உள்ளே சமையலறையில் ரசத்தின் கொதி மணம் ஓசையுடன் வந்தது.
நான்கே அறைகளைக் கொண்ட சிறிய வீடாகையால் ஆள் நடமாட்டம் இருந்தால் தெரியாமற் போகாது. ஆனால் யாரும் கண்ணில் படவுமில்லை.
நெற்றியைக் கையால் அழுத்திக் கொண்டு என்ன இது?
என்று தடுமாறினாள் சித்ரா.
எனக்கும் புரியவில்லையே... இரு.
என்ற தியாகு, முற்றத்துப் பக்கத்திலிருந்த பாத்ரூமைப் பார்த்தான். மூடியிருந்த கதவின் மேல் ஒரு துவாலை தெரிந்தது. உள்ளே குழாயின் வாய் சளசளத்தது.
யார் குளிப்பது?
கேட்க வாயெடுத்தான் தியாகு. அதற்குள் தண்ணீர் கொட்டும் ஓசை படக்கென்று நிற்க -
யாரங்கே?
என்ற குரல் - சந்தேகமில்லாமல் ஒரு பெண்ணின் குரல்தான் - குளியலறைக்குள்ளிருந்து கேட்டது. யாராயிருந்தாலும் அங்கேயே இருங்கள் தயவு பண்ணி... குளித்துக் கொண்டிருக்கிறேன்,
என்ற வேண்டுகோளும் பின் தொடர்ந்தது.
தியாகு வாயடைத்துப் போனான். சித்ராவுக்கோ கண்ணில் நீர் முட்டிக் கொண்டு வந்து நின்றது.
உங்களுக்கு அக்கா தங்கை யாரும் கிடையாதென்று கல்யாணத்தின் போது சொன்னீர்களே?
இப்போதும் அதையே தான் சொல்லுகிறேன்.
தூரத்து உறவுக்காரி யாரேனும்..
அப்படி யாருமே எனக்குக் கிடையாது. சித்ரா, அப்படி யாராவது இருந்தால்கூட நான் ஒருத்தருக்கும் இந்த விலாசத்தை எழுதித் தெரிவிக்கவில்லையே?
கையிலிருந்த டம்பப் பையை எரிச்சலுடன் ஒரு சுழற்றுச் சுழற்றி மூலையில் எறிந்தாள் சித்ரா. தியாகு சாய்ந்தார் போலிருந்த சில படங்களை நேராக்குகிற பாசாங்கில் பொழுதை ஓட்டினான்.
ஐந்து, பத்து நிமிடங்கள் ஓடின.
வாளியை நகர்த்தும் சப்தத்தைத் தொடர்ந்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் -
அவள்.
இதற்கு முன் ஒரு முறைகூட - தற்செயலாகக் கூட - அவளைத் தான் பார்த்ததில்லையென்பதை அந்தக் கணமே உணர்ந்தான் தியாகு. அடுத்த வினாடியே, எவ்வளவு அழகான பெண் என்ற ஏற்படக்கூடாத எண்ணமொன்றும் மின்ன விட்டுவிட்டு மறைந்தது அவன் உள்ளத்தில்.
யார் நீங்கள்?
என்று அவள் கேட்டாள், போதும் போதாததாய் இருந்த ஒரு பழைய தாவணியினால் தோள்களை இறுகச் சுற்றியபடி. தந்தத்தில் பதிந்த முத்துக்கள் போல அவள் கழுத்திலும் கன்னத்திலும் நீர்த்துளிகள் பளபளத்து நின்றன.
சித்ரா முன்வந்து, அந்தக் கேள்வியைக் கேட்க உரிமையுள்ளவர்கள் நாங்கள்! நீங்கள் யார்?
என்று கேட்டாள். அவ்வளவு கடுமை எடுத்த எடுப்பிலே காட்டியிருக்க வேண்டாமே என்று தியாகு நினைத்துக் கொண்டான்.
ஏற்கனவே மிருதுவாயிருந்த அவள் குரல் இன்னும் மெலிந்தது. இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்களா? வாருங்கள்
என்றபடி, நாற்காலிகளில் கிடந்த துணிமணிகளைப் பரபரவென்று சுருட்டிக் கையில் எடுத்துக் கொண்டாள். நீங்கள் வர ஒரு வாரமாகலாம் என்று சொன்னார்...
யார் சொன்னது?
- தியாகு குறுக்கிட்டான்.
அவர்தான்... அவர்... அவர் பெயர் எனக்குத் தெரியாது. என்னை இங்கே அழைத்து வந்தவர்...
எங்கிருந்து அழைத்து வந்தவர்?
ராயபுரத்திலிருந்து... என் அண்ணா வீட்டிலிருந்து...
எப்போது?
இரண்டு நாள் முந்தி... ராத்திரி...
எதற்காக உங்களை அழைத்து வர வேண்டும்? நீங்கள் அவர் மனைவியா?
இல்லை, இல்லை,
என்று மறுத்தபோது அவள் விழிக்கடையில் நீர்த்துளி தெறித்தது. குளித்த குளிர் நீரல்ல; பொங்கி வந்த சுடு நீர், அதையெல்லாம் அவரே நேரில் சொல்லிக் கொள்கிறேன் என்றார். அதற்குள் நீங்கள் வந்தால், விஷயம் தெரிவதற்காக ஒரு கடிதம் கூட எழுதி வைத்திருக்கிறார்.
எங்கே?
என்று ஆவலுடன் சுற்று முற்றும் பார்த்தான் தியாகு.
அங்கேதான் மேஜை மீதோ எங்கேயோ வைத்திருப்பதாகச் சொன்னார்.
தியாகு அவசர அவசரமாக மேஜையைக் கலைத்தான். புதிய மேஜையாகையால், செருகு, அறையில் அதிகப்படி களேபரமும் இல்லை. இருந்த இரண்டொரு பத்திரிகைகளை உதறியதில் ஒரு கடிதமும் தட்டுப்படக் காணோம்.
விசாரணை ஆரம்பமான போதே சித்ரா ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு விட்டாள். கேள்விகளாகட்டும், பதில்களாகட்டும் அவளுக்குத் துளிக்கூடப் பிடிக்கவில்லை என்பதை அவளுடைய சுளித்த முகம் காட்டிற்று. இப்போது, தியாகு ஏமாற்றமாகக் கையை உதறிக் கொண்டு நின்றபோது அவள் பேசத் தொடங்கினாள்
இதோ பாருங்கள், உங்களை எங்களுக்குத் தெரியாது யாரோ உங்களை இங்கே அழைத்து வந்ததாகச் சொல்லுகிறீர்களே, அவரையும் எங்களுக்குத் தெரியவில்லை. அவர் உங்கள் புருஷனல்ல என்று வேறே சொல்லுகிறீர்கள். பின்னே வெறும் பழக் - ரொம்ப நாளாய்த் தெரிந்தவரா?
இல்லை, தற்செயலாய் என்னை ஒரு ஆபத்திலிருந்து காப்பாற்றி இங்கே அழைத்து வந்தார், அன்றைக்குத் தான் அவரை முதல் தடவையாகப் பார்த்தேன்.
அடேயப்பா! அப்படி என்ன ஆபத்து? நீங்கள் உங்கள் அண்ணாவுடன் தானே இருந்தீர்கள்?
ஆமாம்.
அண்ணா உங்களை அடித்து உதைத்து வெளியே விரட்டினாரா?
இல்லை,
அப்புறம் என்ன ஆபத்து? யாருக்காவது உங்களைக் கட்டாயக் கல்யாணம் பண்ணி வைக்கப் பார்த்தாரா
ஊஹூம்.
நன்றாயிருக்கிறது கதை!
என்று ஒரு திடீர்ச் சீறலுடன் எழுந்து கொண்டாள் சித்ரா. ஐந்து நிமிஷம் அவகாசம் தருகிறேன். உன் புடவையோ, துணியோ இருப்பதைச் சுருட்டி எடுத்துக் கொண்டு மரியாதையாய் வெளியேறு! இல்லாவிட்டால் போலீசைக் கூப்பிடுவோம்.
வேண்டாம், வேண்டாம்! நான் சொன்னது அத்தனையும் உண்மை. என்னை நம்புங்கள்!
என்று சிற்றாடைத் தலைப்பால் வாயைப் புதைத்தபடி விம்மினாள் அந்தப் பெண்.
பொறு சித்ரா
என்று சங்கடத்துடன் மன்றாடினான் தியாகு. பிறகு அந்தப் பெண்ணிடம், கொஞ்சம்கூட நம்ப முடியாத விஷயமாயிருக்கிறது நீங்கள் சொல்லுவது. உங்களை இங்கே அழைத்து வந்தவர் எப்படி இருந்தார்?
என்று கேட்டான்.
சிவப்பாய், உயரமாய்... நான் நிமிர்ந்து சரியாய்ப் பார்க்கவில்லை...
இப்போது எங்கே அவர்?
ஊருக்குப் போயிருக்கிறார். இரண்டு நாளில் வந்துவிடுவதாகச் சொன்னார்.
வீட்டை எப்படித் திறந்தார்? பூட்டை உடைத்தாரா?
இல்லை. கொத்துச்சாவி வைத்திருந்தார்.
சிவப்பாய், உயரமாய், துணிச்சலான பல நண்பர்கள் உண்டு தியாகுவுக்கு. ஆனால் யாராயிருக்கும் என்று யோசிக்க விடவில்லை சித்ரா.
உங்களுக்கென்ன பைத்தியம் கியித்தியம் பிடித்து விட்டதா, ஆற அமரக் கேள்வி கேட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள்! அனுப்புங்கள் இவளை, சொல்கிறேன்
என்று இரைந்தாள்.
வந்து சித்ரா...
நீங்கள் தயங்கத் தயங்க எனக்குச் சந்தேகம்தான் வலுப்படுகிறது.
தியாகு துணுக்குற்றவனாய், என்ன சந்தேகம் என் மீது?
என்றான்.
வேறென்ன சந்தேகப்பட முடியும்?
என்று பல்லைக் கடித்தாள் சித்ரா. ஒரு வாரம் கழித்துப் புறப்படலாம் என்று ஊரில் திருப்பித் திருப்பித் சொல்லிக் கொண்டிருந்தீர்களே, அதற்குக் காரணம் புலப்படுகிறது! வேறு ஏற்பாடுகள் செய்வதற்குள் எதிர்பாராமல் நான் வந்து குறுக்கிட்டுவிட்டேன் போலிருக்கிறது.
சித்ரா! என்ன உளறுகிறாய்?
என்று தியாகு அதட்டிய அதே சமயம், அந்தப் பெண் அடுத்த அறைக்கு ஓடிச் சென்று விட்டாள், ஈரப் புடவையை மாற்றிக் கொள்வதற்காக, ஆனால் விம்மல் ஒலி விட்டு விட்டு வந்தது.
சற்று நேரத்தில் அவள் மீண்டும் வெளிப்பட்டாள். கலங்கிச் சிவந்திருந்தாலும் கண்களில் அமைதி ஏற்பட்டிருந்தது. நெற்றியில் பளிச்சென்று சிவப்புச் சாந்து துவங்கியது. தலையை அடக்கி வாரி விட்டுக் கொண்டிருந்தாள்.
கெளரவமான நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, போதுமான அளவு படிப்பும் பெற்றவள் என்பதை அவளுடைய தோற்றம் எடுத்துக் காட்டியது.
தியாகு பிரமிக்கும் விதத்தில் அவள் புன்னகை செய்தாள், சித்ராவைப் பார்த்து, குரலிலிருந்த கரகரப்பைக் கனைத்துச் சரிப்படுத்திக் கொண்ட பிறகு, நீங்கள் எவ்வளவு தப்பாக நினைத்துக் கொண்டாலும் நான் குற்றம் சொல்ல முடியாது. என் பேச்சை நிரூபிக்கவும் யாரும் இப்போதில்லை. இரண்டு நாளில் அவர் வந்து கட்டாயம் உங்கள் சந்தேகத்தைப் போக்குவார். அதுவரை நான் இங்கேயே இருக்கிறேன். உங்களுக்கு வேலைக்காரி போல் ஒத்தாசையாயிருப்பேன். என்னைப் பாரமாக நினைக்க வேண்டாம். எழுந்து பல் விளக்கி விட்டு வாருங்கள். அதற்குள் காப்பி தயாரிக்கிறேன்.
திரும்பவிருந்த அவளை நில்!
என்ற அதட்டலுடன் வழி மறித்தாள் சித்ரா. என் வீட்டில் எனக்கு உபசாரம் செய்கிறாயா? அழகுதான்! உன்னைக் காப்பாற்றிய உத்தமர் வந்தால் நாங்கள் சொல்லிக் கொள்கிறோம். அதுவரை பழையபடி, உன் அண்ணா வீட்டிலேயே போய் இரு!
அண்ணா வீட்டுக்கா!
தீயை மிதித்த மாதிரி அவள் துடித்துப் போனாள். தன்னையறியாமல் நாலைந்தடி பின்வாங்கியும் விட்டாள்.
ஏன், அந்த விலாசமும் மறந்து விட்டதா இப்போது?
இல்லை, தெரியும்... ஆனால் நான் அங்கே போக மாட்டேன்!
கீச்சென்று அவள் கத்தியே விட்டாள்.
தியாகுவுக்கும் அவள் தன் பழைய இடத்துக்கே - அப்படியொன்று இருந்தால் - போய்விடட்டுமே என்று தான் தோன்றியது.
ஒரு பயமும் வேண்டாம். உங்கள் அண்ணா வீடு எங்கே இருக்கிறது? டாக்ஸியில் நானே அழைத்துக் கொண்டு போய் விடுகிறேன்...
என்றான்.
மாட்டேன், மாட்டேன்! என்னை மறுபடி அங்கே தள்ளி விடாதீர்கள்!
என்று வீரிட்டாள் அவள்.
சித்ரா பெட்டி படுக்கைகளைப் பிரித்து, ஒழுங்கு படுத்துவதில் முனைந்தாள். எப்படி வேண்டுமானாலும் ஒழிந்து போ! உன்னைப் போல விலாசமில்லாத பெண்ணைக் கெளரவமான குடும்பத்தில் சேர்க்க முடியாது. நீ நிற்கிற இடத்திலிருந்து இரண்டங்குல தூரம் இந்தண்டைப் பக்கம் வராதே. சொல்லி விட்டேன்! நான் பொல்லாதவள்!
தலை நிமிர்தாமலே மெல்லப் பார்த்தான் தியாகு. வாசல் பக்கத்துக் கதவுக்கு அப்பால், அவள் சுவரில் தலையைப் புதைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.
வேலையைப் பாருங்கள்! பிளாஸ்கைக் கழுவி, ஓட்டலுக்குப் போய்க் காப்பி வாங்கி வாருங்கள். நல்ல கூத்து. நாம் நுழைந்ததும் நுழையாததுமாய்!
என்று அந்தச் சம்பவத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு, சமையல் கட்டுக்குச் சென்றாள் சித்ரா.
அசையவும் துணிவில்லாதவனாகத் தியாகு தவித்தான். யோசித்து யோசித்து மூளை குழம்பியதுதான் மிச்சம், சலிப்பாக, வெளியே நீண்டு கிடந்த மேஜை டிராயரை ஒரு தட்டுத் தட்டி உள்ளே தள்ளினான். இழுப்பறை உள்ளே போக மறுத்தது. அசைத்தான். எதுவோ சிக்கிக் கொண்டிருந்தது. கையை நுழைத்து இடுக்கில் துழாவியபோது ஒரு காகிதம் தட்டுப்பட்டது. முதல் தடவை வெளியே இழுக்கும்போது, அந்த வேகத்தில் மறுபுறம் மாட்டிக் கொண்டிருந்தது போலும்.
கிழியாமல் வெளியே எடுத்தான், ஒரு காகிதம் - கடிதம்.
சரேலெனத் திரும்பி நோக்கினான். அவளைக் காணோம்.
ஒரே எட்டில் தெருவையடைந்து இருபுறமும் நோக்கினான்.
உரித்தெறிந்து உலர்ந்து போன பழத்தோல் மாதிரி உயிரற்றுக் கிடந்தது தெரு.
2
சென்னை - திருச்சி சாலை.
மின் விளக்குகள் சாலையில் ஒளிப்பாய் விரிக்க விரிக்க அதன்மீது தாவித் தாவிப் பறந்து கொண்டிருந்தது லாரி.
என்ன சாரு, கையிலே கட்டு?
என்று கிளீனர் ஜேசு ரொம்ப அக்கறையாகக் கேட்டான்.
மணிக்கட்டு,
என்று செளரி பதிலளித்தது டிரைவர் வெங்கடராசுவுக்கு மகா பெரிய ஹாஸ்யமாய் இருந்தது. அவன் சிரித்த சிரிப்பில், லாரி, சாலைப் புளிய மரமொன்றை என்ன சேதி என்று விசாரித்தது.
அதில்லே சாரு, மணிக்கட்டு மேலே துணி சுத்திட்டிருக்கீங்களே அந்தக் கட்டு,
என்று ஜேசு விடாமல் குடைந்தான்.
ஓ, இதுவா? இது துணிக்கட்டு.
போ சாரு.
ஒரு பூப் பறித்தேன். முள் குத்தி விட்டது.
என்று செளரி தானாகவே முன் வந்து விளக்கம் கொடுத்தான்.
ங்கம்மாடி! பெரிய முள்ளுதான்,
என்று ஜேசு கிண்டல் செய்ய, வெங்கடராசுவும் தன் பங்குக்கு, பூவும் பெரிய பூவாத்தான் இருக்கனும்!
என்றான்.
வெங்கடராசு! உன்னைப் பற்றி முன்னே ரொம்பத் தப்பாய் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டு விட்டது.
என்று செளரி பேசியபோது அந்த டிரைவருக்கு உடம்பெல்லாம் கிளுகிளுத்தது.
என்ன சார்?
என்று கேட்டான்.
ஆள் மேலே லாரியை ஏற்றி விட்டு நீ திரும்பிப் பார்க்காமலே போய்விடுவாய் என்று நினைத்திருந்தேன். இப்போதுதான் தெரிகிறது, லாரியை விட்டு இறங்கி வந்து அவர்களுடைய எலும்புகளைப் பொறுக்கி, ஸீட்டுக்கு அடியிலே போட்டு வைக்கிறாய் போலிருக்கிறதே?
ஜேசுவும், வெங்கடராசும் கடகடவென்று ஆனந்தமாய்ச் சிரித்தார்கள்.
சற்றுப் பொறுத்து வெங்கடராசு, எல்லா வண்டியும் சுல்தான் சர்வீஸ் வண்டி மாதிரி இருக்குமா சார்? ச்சூ. அந்த நாளு போச்சுது. நீங்களும் பம்பாய் போயிட்டீங்க. நாங்களும் போயிட்டோம்.
‘சுல்தான் சர்வீசும் போயிட்டுது." என்று ஜேசு முத்தாய்ப்பு வைத்தான்.
வெங்கடராசு தொடர்ந்தான், ஜெம்னியாண்டை என்னை அடையாளம் கண்டுக்கினு நீங்க கையைக் காட்டி நிறுத்தினீங்களே, நான் ஒரு மினிட் முழிச்சுப் போயிட்டேன். ஏன் சார், திரும்பவும் நம்ம லயனுக்கே வந்திடறீங்களா?
வந்துவிடலாமென்றுதான் பார்க்கிறேன்.
என்றான் செளரி. பம்பாய் பிடிக்காமல், போன வாரம்தான் மெட்ராஸ் வந்தேன். அம்மாவைப் பார்ப்பதற்காகக் கிராமத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது தான் நீ லாரி ஓட்டிக்கொண்டு வருவது கண்ணில் பட்டது.
உங்க அப்பாரு...
என்று தொடங்கிய ஜேசு, ஆ! ஸ்ஸ்!
என்று கத்தி விட்டான்.
சும்மா கேட்கட்டும், அவனை ஏன் கிள்ளி அடக்குகிறாய்?
என்று டிரைவரைக் கடிந்து கொண்ட செளரி, என் அப்பாதானே? எப்போதும் போல் செளக்கியமாய் அம்மாவோடு இருக்கிறார் - அதாவது அவரோட அம்மாவுடன்
என்று கூறினான்.
வெங்கடராசு பேச்சை மாற்ற விரும்பினான்.
திண்டிவனம் தாண்டிட்டோம். காசிமேடு வருது சார்
என்றான் அவன்.
சாமியார் மடத்தண்டை நிறுத்திக்க,
என்று செளரி தெரிவித்தான்.
இருட்டிலே தனியாவா போகப் போகிறீங்க சாரு?
என்றான் ஜேசு.
கவலைப்படாதே. வழியிலே ஏதாவது பிசாசு கிடைத்தால் துணைக்குக் கூட்டிக் கொண்டு போகிறேன்.
என்று சொல்லிவிட்டு, செளரி மடி - யிலிருந்த தோல் பையைத் தோள்மீது வீசிப் போட்டுக் கொண்டு இறங்கினான்.
நம்ம சர்வீசுக்கே வந்திருங்க சார். பெயரு தெரியுமோ? இண்டர நாசம்.. என்னடா இழவு பேரு? வருசம் ஒண்ணாகுது. கம்பெனி பேரு மட்டும் வாயிலே நுழைய மாட்டேங்குது.
என்ற வெங்கடராசு இறங்கி வந்து, சட்டைப் பையிலிருந்த டார்ச் விளக்கை லாரியின் நெற்றிக்கு நேராக அடித்துக் காட்டினான்.
இண்டர்நேஷனல் கூட்ஸ் டிரான்ஸ்போர்ட்
என்று செளரி சிரித்துக் கொண்டே படித்தான். சென்னையிலிருந்து திருச்சி இண்டர்நேஷனலாமா! ரைட்டோ! ரொம்பத் தாங்க்ஸ்.
கிராமத்தின் நள்ளிரவு அமைதியை ராக் அண் ரோல் சீட்டியால் குலைத்துக்கொண்டே நுழையும் அந்த இளைஞனுக்கு மங்கலான மின்சார விளக்குகள் முணு முணுப்புத் தெரிவித்தன.
பம்பாய்க்குப் போகுமுன்னால் இங்கே வந்தது. அம்மா இப்போது எப்படியிருக்கிறாளோ என்று நினைத்துக் கொண்டே நடந்தான் செளரி.
கிருஷ்ணன் கோவில்; மிராசு தர்மலிங்கத்தின் மாட்டுக் கொட்டில், சொர்ணம் வெற்றிலை பாக்குக் கடை; எம்.ஜி.ஆர். படிப்பகம் -
அம்மா!
என்று கூப்பிட்டு விட்டுக் கதவைத் தட்டக் கையை ஓங்கினான் செளரி.
கையிலிருந்த வெள்ளைச் கட்டு கண்ணில் பட்டதும் ஒரு வினாடி கீழுதட்டைப் பற்கள் கடித்தன. அடுத்த கணம் பரபரவென்று கட்டைப் பிரித்து, துணியைத் தெருவோரத்தில் எறிந்தான். முற்றும் உலராத காயத்தில், மஞ்சள் நிறமேறிவிட்ட பஞ்சு ஒட்டிக் கொண்டிருந்தது. மெள்ளப் பிரித்தெடுத்து அதையும் எறிந்தான்.
பின்னரே அவன் உதட்டில் புன்னகை அரும்பிற்று.
அம்மா
என்று மறுபடியும் குரல் கொடுத்து விட்டுப் பட படவென்று தட்டினான் கதவை.
யாரது?
திடுக்கிட்டான் செளரி. ஆண் குரலா!
நான்தான் செளரி.
என்ன இழவு நட்ட நடு ராத்திரியில்!
கதவைத் திறந்து கொண்டு வெளிப்பட்டவரின் கையில் ஒரு சிறு ‘பெட் ரூம்’ விளக்கு இருந்தது. அவருக்கு நாற்பத்தைந்து வயதிருக்கலாம். முண்டா பனியனை வேட்டிக்குள் செருகி விட்டுக் கொண்டு பெல்ட்
கட்டியிருந்தார் இறுக்கமாக.
கனகம்மா இல்லை?
இல்லை, அப்புறம்?
என்று அந்த மனிதரின் குரலில் தூக்கம் கலைந்த சினம் வெளிப்பட்டது.
நான் அவருடைய பிள்ளை. அவர் இப்போது...
அடுத்த தெரு, கடைசி வீட்டில் குடியிருக்கிறார்கள்.
குடி?
என்று செளரி திகைத்தபோது, விளக்கின் சிற்றுயிரைப் பெரும் காற்றொன்று குடித்துவிட்டு ஓடியது.
தீப்பெட்டி தரட்டுமா?
என்ற செளரியின் உதவியை அவர் ஏற்கவில்லை, இருட்டில், கதவு சாத்தப்படும் சத்தம் மட்டுமே கேட்டது.
ஆகா! போச்சு! போச்சு!
என்று சிரித்துக் கொண்டே கூவினான் செளரி. வீட்டுக்குள் நுழைந்ததும் அம்மாவிடம் பேசிய முதல் வார்த்தை அதுதான்.
என்னடா செளரி? என்ன போச்சு?
உன் தலை அம்மா, தலை! நடுத் தலையில் ஏகப்பட்ட நரை தெரிகிறது! நாற்பது வயதாகியும் தலை நரைக்காத ஒரே பெண்மணி என்ற பெயரும் புகழும் போயே போய்விட்டது.
கனகம்மா மகனின் தலையில் செல்லமாய் ஒரு குட்டுக் குட்டினாள். உன்னைப் போல் அழகான பிள்ளையைப் பெற்றதற்கு, தலை பூரா நரைத்துப் பத்து பருவமாகியிருக்க வேண்டும். போகட்டும், அம்மா தலை நரைத்திருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்கத் தான் பம்பாயிலிருந்து வந்து, ராத்திரி ஒரு மணிக்குக் கதவைத் தட்டினாயா?
வேறே காரியமாய் வந்தேன். காலையில் சொல்லுகிறேன், மகா கிழிசவாய் ஒரு பாய் வைத்திருப்பாயே, மாடுத்துப் போடு அதை.
தான் படுத்திருந்த பாயையும் தலையணைக் சுட்டையையும் அவன் பக்கமாய்த் தள்ளிய கனகம்மா, தன் பழைய புடவையொன்றை நாலாய் மடித்துப் பாயின் மீது மெத்தென்றிருக்க விரித்தாள்.
ஏனம்மா, வீட்டை விற்ற சமாசாரம் எனக்குத் தெரிவிக்கவில்லையே?
கோபிக்கப் போகிறாயே என்றுதான்.
இப்போது மட்டும் கோபமில்லையா? விற்றாயே, எனக்கு ஒரு நூறு ரூபாய் அனுப்பினாயா? நான் உனக்கு எவ்வளவு பணம் அனுப்பியிருக்கிறேன்? போன வருஷமோ மூன்றாவது வருஷமோ கூட ஐந்து ரூபாய் மணியார்டர் பண்ணினேனே பம்பாயிலிருந்து?
அதென்ன அத்தனை பணம் அனுப்பி விட்டாய் ஒரே சமயத்தில்? முழி முழியென்று முழித்து விட்டேன். பத்து ஏக்கரா நிலமும் நாலு மாடி வீடும் வாங்கியும் கூட மிச்சத்தை என்ன செய்வதென்று தெரியவில்லை,
என்றாள் கனகம்மா சிரிக்காமல்.
பொல்லாத கனகம்மா!
என்றான் செளரி. அது தான் உன்னை டி. எஸ். கோபாலசாமி அவர்களுக்கும், ராஜலக்ஷ்மி அம்மாள் அவர்களுக்கும் பிடிக்காமலே போய்விட்டது!
பெரியவர்களைப் பற்றிக் கண்டபடி பேசாதே,
என்ற கனகம்மா, உனக்கு ஒன்று காட்ட வேண்டும்,
என்று சொன்ன படி எழுந்து சென்று, மரப்பெட்டிக்குள்ளிருந்து ஒரு கடிதத்தை எடுத்து வந்து தந்தாள்.
கடிதத்தைப் பிரித்ததுமே உதட்டைச் சுழித்தான் செளரி. ஒ! டி.எஸ். கோபாலசாமி எழுதியிருக்கிறார்! ராஜலஷ்மி அம்மாளிடம் அனுமதி வாங்கிக் கொண்டாராமா? இல்லையா?
பரிகாசம் இருக்கட்டும். படி.
கனகத்துக்கு ஆசீர்வாதம். ஒரு முக்கிய விஷயமாகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். அம்மாவுக்கு - உன் மாமியாருக்கு - வர வர உடம்பு ரொம்பத் தள்ளாமையாகி வருகிறது. இந்தச் சமயத்தில் செளரி இங்கே வருவது பல விஷயங்களுக்கு நல்லது. உனக்கே தெரியும். கொஞ்ச நாளாய் என் மீதே அம்மாவுக்குச் சந்தேகம் ஏற்பட்டு வருகிறது. கோபத்தில், தாறுமாறாக ஏதாவது செய்து விடுவாளோ என்று பயமாயிருக்கிறது. செளரி இப்போது எங்கே இருந்தாலும் அவனுக்கு எழுதி இங்கே வரச் சொல். ரொம்ப முக்கியம். இப்படிக்கு, கோபால்சாமி.
கடிதத்தைப் பழையபடி உறைக்குள் போட்டுத் தாயிடம் திருப்பிக் கொடுத்து விட்டுப் படுத்துக் கொண்டான் செளரி.
என்ன, ஒன்றுமே சொல்லவில்லையே? அப்பா அவ்வளவு தூரம் எழுதியிருக்கிறாரே?
என்று கனகம்மா மகனைக் கேட்டாள் - சிறிது அச்சத்துடன்தான்.
ராஜலஷ்மி அம்மாளின் தலையில் அணுகுண்டு விழுந்தால், அணுகுண்டுக்குத்தான் காயம் ஏற்படும். கவலைப்பட வேண்டாம். டி.எஸ். கோபாலசாமி அவர்களுக்கும் ஒரு பயமுமில்லை. தாயாரின் முந்தானைக்குள் பத்திரமாய் ஒளிந்து கொள்வார். அலட்டிக் கொள்ளாமல் படுத்துக் கொள்.
செளரி...
அம்மா! ஏனம்மா பழைய வயிற்றெரிச்சலையெல்லாம் திரும்பத் திரும்பக் கிளப்புகிறாய். சும்மா இரு,
என்று லேசான கடுமை காட்டினான் சௌரி. அப்பா என்று சொல்லிக் கொள்கிற டி.எஸ். கோபால்சாமியை அடையாளம் காணக் கூடத் தெரியாது எனக்கு, பாட்டி என்கிற அந்த ராஜலஷ்மியைப் பார்த்தால் பற்றிக் கொண்டு வரும்.
கன்னாபின்னாவென்று பேசாமலிரேன் செளரி,
என்றாள் கனகம்மா. ‘எனக்கு மட்டும் யாரை அடையாளம் தெரியப் போகிறது’ என்று அவள் மனம் சொல்லிக் கொண்டது. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் பார்த்த உருவங்கள்...
ம்ம்மா!
என்று கொல்லைப் பக்கத்திலிருந்து ஓர் உறுமல் கேட்டது.
மாட்டை மட்டும் வைத்துக் கொண்டிருக்கிறாயா, என்ன?
என்று கேட்டான்.
ஆமாம், ஆனால் இது பழைய மாடில்லை. புதுசு.
அண்டை அயலுக்கெல்லாம் இப்போதும் பால் விற்கிறாயா?
பின்னே?
உன்னைப் பார்த்தால் எத்தனை பொறாமையாய் இருக்கிறது! மஞ்சள் காணியாக வந்த நிலம், கை நிறைய நகைநட்டை விற்று வைத்துக் கொண்டிருக்கும் ரொக்கம், பசு மாடு, பால் வியாபாரம்...
என்று அடுக்கிக் கொண்டே போனான் செளரி.
ஆமாம். மகாராணி வாழ்க்கை! நடுநடுவில் நீ கப்பல் கப்பலாய் அனுப்புகிற தொகைகளைச் சேர்க்க ஏன் மறந்து விட்டாய்?
என்று சிரித்துக் கொண்டே திரும்பிப் படுத்தாள் சுனகம்மா.
அவள் கண் விழித்த போது பக்கத்தில் மகனைக் காணோம்.
செளரி
என்று கூப்பிட்டாள்.
இன்றைக்கு நான் பால் கறக்கிறேன் அம்மா!
என்று பின்புறத்திலிருந்து பதில் வந்தது.
வேண்டாமடா! அது சுத்த முரடு!
என்று அவசரமாகச் சொல்லிக் கொண்டே விரைந்து சென்ற கனகம்மா ஒரு நிமிடம் தாமதித்து விட்டாள்.
மாட்டின் பின்னங்கால்கள் தூக்கிய நிலையில் இருப்பதையும், செளரி மல்லாந்தவாக்கில் எகிறி விழுவதையும் தான் கண்டாள் அவள்.
பாவிப் பிள்ளையே! ஏண்டா இப்படி என்னை வதைக்கிறாய்? எனக்கு இருக்கிற துக்கமெல்லாம் போதாதா?
என்று பதறிய வண்ணம், குமாரனைக் கை கொடுத்துத் தூக்கி விட்டாள்.
அம்மாவின் கைத்தாங்கலில் நொண்டிக் கொண்டே முன் கூடத்துக்கு நடந்து வந்தபோது, ரொம்ப ஆச்சரியம் அம்மா! அவ்வளவு வலு ஏற்படுகிற பசுவுக்கு எப்படி உன்னால் அந்த மாட்டுக்கு அத்தனை தீனி போட முடிகிறது!
என்றான் செளரி.
கனகம்மா அடுப்பு மூட்டி வென்னீர் கொண்டு வந்தாள்.
முழங்காலுக்கருகே சிறு சிராய்ப்புக்கள் தெரிந்தன. அங்கே அவள் அமுக்கிப் பார்த்ததும் இஸ்ஸ்...
என்று கத்தினான் செளரி.
ஐயையோ! நரம்பு ஏதாவது பிசகியிருக்குமோ செளரி
என்று அம்மா கவலையுடன் கேட்டாள்.
இருக்கும், ஒரு கரண்டி இருக்கிறதா உள்ளே? நான் பார்த்துக் கொள்கிறேன், நீ வாசலில் போய் இரு.
என்றான் செளரி.
என்ன செய்யப் போகிறாய்?
போய் இரேன்.
சமையலறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக் கொண்டான் செளரி.
படபடவென்று இதயம் அடித்துக் கொள்ளப் பல நிமிடங்களை வாசலில் நின்று தவித்தபடி கழித்தாள் தாய்.
வரலாம்!
என்று செளரி அறிவித்தான்.
ஈரமான ஒரு முலையில், கரண்டியொன்று சொய்யென்று சப்தத்துடன் கடப்பதொன்றுதான் அவள் கண்டது.
என்ன செய்தாய் செளரி?
என்று தாயின் பதற்றத்துக்கு நேர் எதிரான நிதானத்துடன் செளரி, பம்பாயில் ஒரு மராத்தியரிடம் கற்றுக் கொண்ட முரட்டு வைத்தியம். சொன்னால் பயப்படுவாய்!
என்றான்.
பயப்படவில்லை. சொல்லு,
என்று கனகம்மா வற்புறுத்தினாள்.
ஒன்றுமில்லை யம்மா, நரம்பு கொஞ்சம் க்யூவை விட்டு நகர்ந்து கொண்டிருந்தால், இரும்புக் கரண்டியைப் பழுக்கக் காய்ச்சி ஒரு சூடு இழுக்க வேண்டியது. அந்த அதிர்ச்சியில் ஒரு உதறல் உதறுவோமில்லையா? நகர்ந்திருந்த நரம்பு க்யூவில் ஒழுங்காகச் சேர்ந்து கொண்டு விடும்!
வாயடைத்து நின்றாள் கனகம்மா. பொங்கி வந்த கண்ணீரைச் சுரண்டியெறியக்கூடத் தோன்றவில்லை அவளுக்கு.
என்ன முரட்டு வைத்தியமானாலும் இன்னும் இரண்டு நாளாவது படுத்துக் கிடக்க வேண்டியது தான்! ஹூம்!
என்று முனகினான் செளரி. நான் வந்த காரியமென்ன, இப்படிப் படுத்துக் கொண்டிருப்பதென்ன!
அதைக் கேட்பதற்குள்தான் இத்தனை ரகளையும் செய்து கொண்டு நிற்கிறாய், என்ன, சொல்லு.
ஒரு பெண் அனாதையாய் நிற்கிறாள். அவளைக் காப்பாற்றுவதற்காக இங்கே ஏதானும் பணம் புரட்ட முடியுமா என்று பார்க்கத்தான் வந்தேன்.
அனாதைப் பெண்ணா? என்ன செளரி?
என்று கனகம்மா திகைத்தாள். விவரமாய்த்தான் சொல்வேன்.
செளரி அவளை உற்று நோக்கினான். அம்மா, குருத்து வாழையிலை மாதிரி என் உள்ளம் மென்மையானதாக இருக்கிறது. அதிலே எத்தனையோ பேர் எத்தனையோ பதார்த்தங்களைக் கொதிக்கக் கொதிக்கக் கொட்டி, கருக்கி வதக்கிக் கன்றிப் போகும்படி செய்தாகி விட்டது. நம்ப முடியாத கோரக் கதைகளை நான் வேறு சொல்ல வேண்டுமா அம்மா? அது ஒரு தாயிடம் மகன் சொல்லக் கூடிய விஷயமுமில்லை. அவளுடைய அண்ணனிடமிருந்து அவளை மீட்டு அழைத்து வந்தேன். அவ்வளவுதான்.
இப்போது அந்தப் பெண் எங்கே இருக்கிறாள்?
ஒரு சினேகிதனின் வீட்டில். அவள் அங்கே இருப்பது அவனுக்கே கூடத் தெரியாது.
அத்தனைக் கொடியவன் அந்த அண்ணன் என்றால் அந்தப் பெண்ணைப் பட்டணத்தில் விட்டு வைப்பதே தப்பாயிற்றே? நீ வரும்போது அவளையும் இங்கே அழைத்துக் கொண்டு வருவதற்கென்ன? பரவாயில்லை. விலாசத்தைச் சொல்லு. நானே போய்க் கூப்பிட்டுக் கொண்டு வருகிறேன்.
அடேயப்பா! பெண் என்றதும் எத்தனை பரிவு வந்து விட்டது! இந்த நொண்டிப் பிள்ளையைப் பட்டினி போட்டு விட்டுப் பட்டணம் போகிறேன் என்கிறாயே!
என்று செளரி கேலி செய்தான்.
சரி, நான் போகவில்லை. பக்கத்து வீட்டுப் பையன் நாராயணன் ரொம்ப ஒத்தாசையான சுபாவம், அவனை அனுப்புகிறேன். விலாசத்தைச் சொல்லு.
கே. தியாகராஜன், தியாகு என்று கூப்பிடுவது. பதின்மூன்று ஆறுமுகம் காலனி, மந்தைவெளிப்பாக்கம், சென்னை,
என்றான் செளரி.
‘அந்தப் பெண்ணின் பெயர்?"
அதைக் கேட்டு வைத்துக் கொள்ளவில்லை, அம்மா,
என்று செளரி கூறினான்.
மகனை