Engirunthu Vatuguthuvo...
()
About this ebook
எங்கிருந்து வருகின்றன?
சில புத்தகங்களைப் பாராட்டும்போது, ‘ஒரு முறை கையில் எடுத்துவிட்டால் கீழே வைக்க மனம் வராது' என்று சொல்வதுண்டு. மார்க் ட்வைன் ஒரு புத்தகத்தை விமர்சனம் செய்யும்போது, 'ஒருமுறை இதைக் கீழே வைத்துவிட்டால் கையிலெடுக்க மனம் வராது' என்று நையாண்டி செய்தார்.
உங்கள் கையிலுள்ள இந்தத் தொகுப்பு முதல் வகையா, இரண்டாவது வகையா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அனேகமாக எல்லாக் கட்டுரைகளும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும் என்று மட்டும் சொல்வேன். காரணம், படிப்பவரைச் சிந்திக்க வைத்து, சமூகத்தைப் பற்றிக் கவலை கொள்ள வைக்கும் ஆற்றல் என் எழுத்துக்குக் கிடையாது. அப்படிப்பட்ட கட்டுரை இந்தத் தொகுப்பில் ஒன்றிரண்டு இருக்குமானால், அது வேறொருவர் சொன்னதாகவோ, வேறொரு பத்திரிகை அல்லது புத்தகத்தில் படித்ததாகவோ இருக்கும்.
ஒவ்வொரு வாரமும் கட்டுரை எழுத எங்கிருந்து ஐடியா கிடைக்கிறது என்று பலரும் என்னைக் கேட்கிறார்கள். எனக்கும் அது தெரியவில்லை. அதனால்தான் இந்தத் தொகுப்புக்கு 'எங்கிருந்து வருகுதுவோ' என்று தலைப்புக் கொடுத்திருக்கிறேன்.
- ரா.கி.ரங்கராஜன்
Read more from Ra. Ki. Rangarajan
23 - m Padi Rating: 5 out of 5 stars5/5Kudumba Kathaigal Rating: 5 out of 5 stars5/5Innoruthi Rating: 0 out of 5 stars0 ratingsOre Vazhi Rating: 5 out of 5 stars5/5Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsOlivatharkku Idamillai Part - 2 Rating: 5 out of 5 stars5/5Kannukku Theriyathavan Kaadhalikkiran Rating: 0 out of 5 stars0 ratingsPattampoochi Rating: 5 out of 5 stars5/5Olivatharkku Idamillai Part - 1 Rating: 5 out of 5 stars5/5Aangal Sevvai Pengal Velli Rating: 0 out of 5 stars0 ratingsHema! Hema! Hema! Rating: 0 out of 5 stars0 ratingsThirakkoodaatha Kathavu Rating: 0 out of 5 stars0 ratingsMarubadiyum Devaki Rating: 0 out of 5 stars0 ratingsHassya Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsRaathiri Varum Rating: 5 out of 5 stars5/5Viji - Adventure Naadgangal! Rating: 0 out of 5 stars0 ratingsKanna Pinna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thavira Rating: 5 out of 5 stars5/5Kai Illatha Bommai Rating: 0 out of 5 stars0 ratingsIthu Ungalukkaga! Rating: 0 out of 5 stars0 ratingsSumma Irukkatha Pena Rating: 0 out of 5 stars0 ratingsVayathu 17 Rating: 3 out of 5 stars3/5Houseful Rating: 5 out of 5 stars5/5Eppadi Kathai Ezhuthuvathu? Rating: 4 out of 5 stars4/5Adimaiyin Kaadhal Rating: 5 out of 5 stars5/5Thooran Endra Kalanjiyam Rating: 0 out of 5 stars0 ratingsJennifer Rating: 4 out of 5 stars4/5Twist Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kathaigal Rating: 5 out of 5 stars5/5Padagu Veedu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Engirunthu Vatuguthuvo...
Related ebooks
Sakkaram Nirpathillai Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Muzhakkam Rating: 4 out of 5 stars4/5Rangoon Periyappa Rating: 0 out of 5 stars0 ratingsElakkia Munnodigal Rating: 0 out of 5 stars0 ratingsBhoomikku Kidaitha Puthayal Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thavira Rating: 5 out of 5 stars5/5Athirum Uthiram Rating: 0 out of 5 stars0 ratingsSaagasa Mohini Rating: 2 out of 5 stars2/5Enna Thavam Seitheno! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Krishna Devarayan - Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsKandavar Vindilar! Vindavar Kandilar!! Rating: 0 out of 5 stars0 ratingsVillan Engira Kadhanayagan Rating: 0 out of 5 stars0 ratingsSwami Vivekanandar – 150: En Pangalippu Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Munnuraigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsPadikka... Rasikka... Sirikka... 200 Kubeer Jokkugal Rating: 0 out of 5 stars0 ratingsPoovil Oru Sooravali Rating: 0 out of 5 stars0 ratingsNaan Krishna Devarayan - Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsJanuary February Mortuary Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணை நம்பாதே Rating: 0 out of 5 stars0 ratingsKannai Nambathey Rating: 3 out of 5 stars3/5Ennakinaru! Rating: 0 out of 5 stars0 ratingsKanna Pinna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsThirumathi Thirupathi Crorepathi Rating: 0 out of 5 stars0 ratingsT. Kulashekar Stories Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaadhalin Climax Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsNadanthathu Nadanthapadiye! Rating: 0 out of 5 stars0 ratingsRasavadhi Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Mohini Rating: 5 out of 5 stars5/5Vidyasaagaram Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Engirunthu Vatuguthuvo...
0 ratings0 reviews
Book preview
Engirunthu Vatuguthuvo... - Ra. Ki. Rangarajan
http://www.pustaka.co.in
எங்கிருந்து வருகுதுவோ...
Engirunthu Vatuguthuvo…
Author:
ரா. கி. ரங்கராஜன்
Ra. Ki. Rangarajan
For more books
http://www.pustaka.co.in/home/author/ra-ki-rangarajan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. பிடிக்காதவர்களா! எங்கே இருக்கிறார்கள்?
2. தாண்டியா
3. ஐம்பது மணி நேரம்
4. பொய் சொல்லத் திறமை வேண்டும்
5. ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
6. விரதங்கள் பலவிதம்
7. இச்சைக்கினிய பச்சைக் கிளி
8. சட்டைப் பையில் சில்லறைகள்
9. தொடர்ந்து நூற்றைம்பது நாள்
10. ஓர் எபிசோட் சந்தோஷம்
11. ஒற்றை விரலால் கட்டிய ஒன்றேகால் மைல் பாலம்
12. சில சண்டைகள் சில தகவல்கள்
13. இப்படியா? அப்படியா?
14. கொசு புராணம்
15. உழைப்புக்குப் பரிசு உதைதான்
16. கமல்ஹாஸனின் அப்பா
17. உன் வீடும் என் வீடும்
18. உள்ளத்தில் நல்ல உள்ளம்
19. பப்ளிஷர் பார்த்தசாரதி
20. வேறொரு எலிசபெத்
21. எங்கேதான் ஊழல் இல்லை?
22. தீர்ப்புக்குப் பின்
23. எங்கே என் நாய்க் குட்டி?
24. இலவசமா? மூச்!
25. பெயரில் என்ன இல்லை?
26. ஏழு சப்பாத்தி, ஒரு ராஜ்யம்
27. எது நாகரிகம்? எது அநாகரிகம்?
28. ஞான ரதம்
29. ராஜு ஜோக்ஸ்
30. அயனாவரத்தில் நான்
31. ஜீவ்ஸ் என்ற தமிழன்
32. பிடியுங்கள் நூறு கோடி
33. நகை அணிந்த நங்கைகள்
34. இருபத்து மூன்று தீர்மானங்கள்
35. ஆண்டவன் ஒருவன் இருக்கிறான்
36. இப்படி ஒரு சாஸ்திரம்
37. பயணிகள் கவனிக்க!
38. குணமெனும் குன்றேறி நின்றார்
39. ஒரு பூங்கா உயிர் பெறுகிறது
40. சில சங்கீத சமாசாரங்கள்
41. தேவை: ரத்தினக் கம்பளம்
42. ஒரு கொடுமை, ஒரு நேர்மை
43. 'ராமாஞ்ச மாமா'
44. ஒண்டர்ஃபுல் நியூஸ்
45. மூன்று வடிகட்டிகள்
46. சகிக்க முடியாத தோல்வி
47. அவர்களைத் தூக்கில் போடுங்கள்!
48. உங்கள் அம்மா
49. அடுத்த ஜன்மத்தில் எருமை மாடு
50. ஸிட்னி ஷெல்டன்
51. சில இடங்களில் சில பண்பாடுகள்
52. கை ஒழிகிறபோது...
53. ஜி.என்.பி.
54. கல்லிபெடைரா
55. காணாமல் போன நதி
56. நேரத்தின் பெயர் பொன்
எல்லாம் இதயத்திலிருந்து...
வாசகர்கள் அறிந்த அனுபவமிக்க பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜன், தான் அறிந்த மனிதர்கள், படித்த விஷயங்கள், காதால் கேட்ட சுவையான தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளாக்கி எல்லோருக்கும் விருந்து படைத்து வருகிறார். அவர் எழுதிய சுவையான கட்டுரைகளின் தொகுப்பே, இந்த நூல்.
இந்த நூலில், அவருடன் பழகியவர்கள், அவர் அறிந்த மனிதர்கள், பத்திரிகையில் அவர் பணிபுரிந்தபோது நடந்த பல சுவையான விஷயங்கள் ஆகியவற்றைப் பற்றி அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் வித்தியாசமாகக் கூறியுள்ளார்.
ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்த அவருடைய அனுபவங்கள், வாசகர்களுக்கு நல்விருந்து. கார்டூனிஸ்டுகளான ராஜு, கோபுலு, மாலி போன்றவர்களோடு தனக்குள்ள அனுபவங்களைப் பற்றியும் எழுதியுள்ளார்.
அங்கங்கே குட்டிக் கதைகளுக்கும் பஞ்சமில்லை. நிறைய குட்டிக்கதைகள் மூலம்தான் சொல்ல வரும் கருத்துக்கு வலு சேர்த்திருக்கிறார். உலகம் அவர் பார்வையில் வித்தியாசமாகத் தெரிந்ததை இவருடைய கட்டுரைகளில் இருந்து நம்மால் உணரமுடிகிறது.
தொலைக்காட்சி செய்திகள், தொடர்கள் போன்றவற்றில் கண்ட நெருட வைத்த காட்சிகள், நெகிழச் செய்த காட்சிகள் ஆகியவற்றை விமர்சனப் பார்வையோடு தந்துள்ளார். சில செய்திகளுக்குப் பின்னுள்ள சுவாரஸ்யங்களையும் கதைகளையும் கொடுத்திருப்பது, பொது அறிவுக்கு விருந்து.
*****
எங்கிருந்து வருகின்றன?
சில புத்தகங்களைப் பாராட்டும்போது, ‘ஒரு முறை கையில் எடுத்துவிட்டால் கீழே வைக்க மனம் வராது' என்று சொல்வதுண்டு. மார்க் ட்வைன் ஒரு புத்தகத்தை விமர்சனம் செய்யும்போது, 'ஒருமுறை இதைக் கீழே வைத்துவிட்டால் கையிலெடுக்க மனம் வராது' என்று நையாண்டி செய்தார்.
உங்கள் கையிலுள்ள இந்தத் தொகுப்பு முதல் வகையா, இரண்டாவது வகையா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அனேகமாக எல்லாக் கட்டுரைகளும் படிக்க சுவாரஸ்யமாக இருக்கும் என்று மட்டும் சொல்வேன். காரணம், படிப்பவரைச் சிந்திக்க வைத்து, சமூகத்தைப் பற்றிக் கவலை கொள்ள வைக்கும் ஆற்றல் என் எழுத்துக்குக் கிடையாது. அப்படிப்பட்ட கட்டுரை இந்தத் தொகுப்பில் ஒன்றிரண்டு இருக்குமானால், அது வேறொருவர் சொன்னதாகவோ, வேறொரு பத்திரிகை அல்லது புத்தகத்தில் படித்ததாகவோ இருக்கும்.
ஒவ்வொரு வாரமும் கட்டுரை எழுத எங்கிருந்து ஐடியா கிடைக்கிறது என்று பலரும் என்னைக் கேட்கிறார்கள். எனக்கும் அது தெரியவில்லை. அதனால்தான் இந்தத் தொகுப்புக்கு 'எங்கிருந்து வருகுதுவோ' என்று தலைப்புக் கொடுத்திருக்கிறேன்.
- ரா.கி.ரங்கராஜன்
*****
இந்நூல்...
எனது தமையனார்
சம்ஸ்கிருதப் பேராசிரியரான
ஆர்.கே.பார்த்தசாரதி அவர்களுக்கு...
*****
1. பிடிக்காதவர்களா! எங்கே இருக்கிறார்கள்?
ரஷ்யாவில் (அதாவது சோவியத் ரஷ்யா என்று அப்போது அழைக்கப்பட்ட காலத்தில்) சர்வாதிகாரியாக ஸ்டாலின் அட்டகாசம் செய்து கொண்டிருந்தார். கம்யூனிஸ்ட் ஆட்சி என்ற பெயரில் அண்டை நாடான போலந்தும் அவருடைய ஆதிக்கத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தது.
அப்போது ஓர் அமெரிக்கப் பத்திரிகைக்காரருக்குப் போலந்தில் மக்கள் மனோபாவம் எப்படி இருக்கிறது என்பதை அறிய ஆவல் ஏற்பட்டது. போலந்து அதிகாரிகளிடம் தக்க அனுமதி பெற்று அந்த நாட்டுக்குச் சென்றார். இங்கிலீஷ் பேசத்தெரிந்த ஒரு வழிகாட்டியை அமர்த்திக் கொண்டார். தலைநகரமான வார்ஸாவுக்கும் மற்ற இடங்களுக்கும் அவன் அவரை அழைத்துச் சென்று காட்டினான். ஒரு வாரம் அவனுடன் சுற்றிப் பார்த்த பிறகு அமெரிக்கப் பத்திரிகையாளர் அவனிடம் ரொம்ப சினேகமாகிவிட்டார். அவனை ஒரு பெரிய ஓட்டலுக்குக் கூட்டிப் போய் வயிறு நிறைய சாப்பாடு போட்டார். இறுதியில் அவனிடம், 'ஸ்டாலினைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?' என்று கேட்டார்.
அவன் தாழ்ந்த குரலில், 'இங்கே பேசவேண்டாம். வெளியே போய்ப் பேசுவோம்' என்றான்.
சரியென்று அவனுடன் வாசலுக்கு வந்தார். ஸ்டாலின் என்று ஆரம்பித்ததும், 'உஷ்!' என்று சைகையால் அவரை அடக்கிவிட்டு, ஒரு பஸ்ஸில் ஏறிக்கொண்டு அவரையும் ஏற்றிக் கொண்டான். நீண்ட தூரம் பஸ் சென்றது. அவன் வாயே திறக்கவில்லை. இவர் ஸ்டாலின் என்று ஆரம்பிக்கும் போதெல்லாம், 'உஷ்! கம்முனு இருங்க' என்று கூறினான். பிறகு ஓரிடத்தில் இருவரும் இறங்கினார்கள். அங்கே ஒரு டிராம் வண்டி வந்தது. அதில் ஏறிக்கொண்டு இவரையும் அழைத்துக் கொண்டான்.
அதுவும் வெகுதூரம் சென்று டெர்மினலில் நின்றது. அமெரிக்கருக்கு ஒரே எரிச்சல். 'இப்போதாவது சொல்லித் தொலை! ஸ்டாலினை உனக்குப் பிடிக்குமா?’ என்றார் கோபமாக.
போலந்துக்காரன் சுற்றுமுற்றும் எச்சரிக்கையுடன் பார்த்துக் கொண்டான். அமெரிக்கரின் அருகே வந்தான். அவர் காதினருகே வாயை வைத்தான். ரொம்ப ரகசியமான குரலில், 'ஸ்டாலினை எனக்குப் பிடிக்கும்' என்றான்.
சர்வாதிகாரியைப் பிடிக்கும் என்று சொல்லவே அவன் அந்த நடுக்கம் நடுங்கினானென்றால், போலந்து மக்களின் மனோபாவம் எத்தகையதாக இருக்கும் என்று அமெரிக்கப் பத்திரிகையாளர் புரிந்து கொண்டார்.
நல்ல வேளையாக, சுதந்திர இந்தியாவில் நிலைமை அப்படி இல்லை. பிடித்தவரைப் பிடித்தவர் என்றும், பிடிக்காதவரைப் பிடிக்காதவர் என்றும் சொல்வதற்கு அஞ்ச வேண்டியதில்லை. என்ன முக்கியம் என்றால், பிடித்தவர்களைப் பற்றிப் பக்கம் பக்கமாக சொல்லலாம். பிடிக்காதவர்களைப் பற்றி அப்படி பகிரங்கமாக சொல்ல முடியாது. இலை மறைவு காய் மறைவாகக்கூட சொல்ல முடியாது. மலரும் நினைவுகள் எழுதும் எவருக்கும் இந்த சங்கடம் உண்டு.
ஆனால், அதென்னவோ தெரியவில்லை ஐம்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் அயனாவரத்தில் பழகியவர்களைக் குறித்து யோசிக்கும் போதெல்லாம் பிடிக்காதவர்கள் என்றோ பொல்லாதவர்கள் என்றோ யாருமே நினைவுக்கு வரவில்லை. (ஒரு வேளை நானும் அப்போது நல்லவனாக இருந்தேனோ என்னவோ!)
பத்துக் குடித்தனங்களுக்கும் சொந்தக்காரராக இருந்தவர் பெரம்பூரில் இருந்தார். சுண்ணாம்பு வியாபாரி. அதனால் சுண்ணாம்பு முதலியார் என்றே அவரை அழைப்பார்கள். பிரதி மாதம் முதல் வாரம் வருவார். முதல் வீட்டின் வாசலில் அவருக்கு ஒரு நாற்காலி போடுவார்கள். ஒவ்வொரு குடித்தனக்காரரும் அவரிடம் வந்து வாடகைப் பணத்தைக் கொடுப்பார்கள். பிரியமாக நாலு வார்த்தை பேசி அனுப்புவார். அவர் வரும்போது என் கையில் பணம் இருந்தால் நானே ரொம்ப ஜம்பமாகக் கொண்டுபோய்க் கொடுப்பேன். பணம் இல்லை என்றால் என் மனைவியைத் தூது அனுப்புவேன். அவள் என்ன சொல்வாளோ, எப்படி சொல்வாளோ, 'பரவாயில்லை. அடுத்த மாதம் சேர்த்துக் கொடுங்கள்' என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்.
ஸ்டாலின்
ஞாபகம் வருகிற இன்னொரு நல்லவர் டாக்டர் வேணுகோபால். (அப்பப்பா! என்னையும் என் குடும்பத்தாரையும் காப்பாற்றிய, காப்பாற்றி வருகிற டாக்டர்கள் எத்தனை எத்தனை பேர்! சொல்லி மாளாது!) அவர் அயனாவரம் ஜாயின்ட் ஆபீஸ் தெருவில் வைத்தியம் பார்த்து வந்தார். அப்போது என் பெண் குழந்தைக்கு இரண்டு வயது. மடியில் படுத்து விளையாடிக் கொண்டே இருக்கும். திடீரென்று கைகாலை விசித்துக்கொண்டு அலறும். உடம்பு நெருப்பாய்க் கொதிக்கும் (அந்த நாளில் அதற்கு மாந்தம் என்று பெயர். வேப்பெண்ணெய் தடவவேண்டும் என்பார்கள்.) என் தெருவிலிருந்து ஒன்றிரண்டு ஸ்டாப்பிங் தள்ளி டாக்டர் வேணுகோபாலனின் ஆஸ்பத்திரி. குழந்தையை மனைவியின் கையில் ஒப்படைத்துவிட்டு அவரிடம் ஓடிப்போய் சொல்வேன். உடனே சைக்கிளில் புறப்பட்டு வருவார். குழந்தைக்கு ஊசி போடுவார். கொஞ்ச நேரத்தில் ஜுரம் இறங்கி, குழந்தை சிரித்து விளையாடத் தொடங்கும்.
தெருவில் ஒரு சிவன் கோவில், ஒரு பெருமாள் கோவில் இரண்டும் அருகருகே இருந்தன. பெருமாள் கோவில் பட்டாச்சாரியார் எந்த நேரத்திலும் ஒடிந்து விழுந்து விடுகிறவர் போல ஒல்லியாக இருப்பார். வயதானவர். வைதிகக் காரியங்களுக்காகக் கூப்பிட்ட நேரத்தில் தவறாமல் வந்துவிடுவார். பெருமாள் கோயிலில் தாயாருக்குத் தனியான சந்நிதி கட்டவேண்டுமென்று நிதி வசூலித்தபோது, என் மனைவி இவரிடம் நூறு ரூபாய் கொடுத்தாள். பல ஆண்டுகள் கழித்து, அங்கே போனபோது தாயார் சந்நிதி பொலிவோடு தனியே கட்டப்பட்டிருந்தது. அது மட்டுமல்ல, கர்ப்ப கிரகத்துக்கு வெளியே நிதி கொடுத்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டில் இவளுடைய பெயர் முதலிடத்தில் இருந்தது! (இப்போதும் இருக்கிறதென்று நம்புகிறேன்).
பிறகு புரசைவாக்கம்.
ஓவியர் வர்ணத்தையும் அவரைப் போன்ற நல்லவர்களையும் பிரிந்து செல்கிறோமே என்ற வருத்தத்துடன் வண்டியில் மூட்டை முடிச்சுகளை ஏற்றிக் கொண்டிருந்தேன். எனக்கு விடை கொடுக்கிற மாதிரி வீட்டுச் சொந்தக்காரர் அப்போது வந்தார். 'புறப்படுகிறதுதான் புறப்படுகிறீர்கள், ஒரு காரியம் செய்யுங்களேன்' என்றார்.
'என்ன, சொல்லுங்கள்' என்றேன்.
'இதோ எதிரில் காலி மனை நிறைய இருக்கிறது பாருங்கள். ஒரு கிரவுண்டு ஐந்நூறு ரூபாய்தான். இரண்டு கிரவுண்டு வாங்கிப் போடுங்களேன்' என்றார்.
'ஆபீசுக்குப் பக்கமாக இருக்க வேண்டுமென்றுதான் புரசைவாக்கம் போகிறேன். இங்கே மனை வாங்கி என்ன செய்யப் போகிறேன்?' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன் (ஏதோ என் கையில் இருபது கிரவுண்டு வாங்கப் பணம் இருப்பதுபோல!)
இதற்குப் பிறகு புரசைவாக்கம் வந்து குப்பை கொட்டியதும், குவார்ட்டர்ஸ் என்ற பெயரில் கெல்லிஸ் பகுதிகளில் அலுவலகம் கொடுத்த போர்ஷன்களில் மாறி மாறிக் குடியேறியதும், ஒரு பக்கெட் தண்ணீருக்குத் தவித்ததும், சாலை இல்லாத தெருக்களில் முழங்கால் சேற்றில் மாட்டிக்கொண்டு திணறியதும், கடைசியாக இரண்டாம் முறையாக அயனாவரத்துக்கே திரும்பி, இருபது வருட காலம் ராஜாவாக வாழ்ந்ததும் தனிக் கதைகள். அப்புறம் சொல்கிறேன்.
*****
2. தாண்டியா
இது அசலாக நடந்ததா அல்லது கட்டிவிடப்பட்ட கற்பனையா? என்று தெரியவில்லை. ஆனால், சுவாரஸ்யமான கதை.
அறுநூறு எழுநூறு ஆண்டுகளுக்கு முன், குஜராத்தில் உன்ஸா என்ற கிராமத்தில் ஹேமலா என்று ஒருவர் இருந்தார். அவருக்கு கங்கா என்ற ஓர் அழகான பெண். அவளை ஒருநாள் ஒரு ராணுவ சுபேதார் கடத்திக்கொண்டு போய்விட்டான். ஹேமலாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அவருடைய குடும்பப் புரோகிதராக அசைத் தக்கார் என்று ஒருவர் இருந்தார். ஆசார அனுஷ்டானங்களைக் கண்டிப்புடன் கடைப்பிடிப்பவர். ஹேமலாவுக்கு உதவி புரிவதாக வாக்களித்து, நேரே சுபேதாரிடம் சென்றார். 'கங்கா என்னுடைய சொந்த மகள். அவளை விடுதலை செய்யவேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். சுபேதாருக்கு அவரிடம் மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால், கங்கா அவருடைய மகள் என்பதை நம்பத் தயாராயில்லை. எனவே, 'அவள் உன் பெண் என்றால் அவளுடன் உட்கார்ந்து ஒரே தட்டிலிருந்து உணவு அருந்து பார்க்கலாம்' என்று சவால் விட்டார். அவர் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார் என்பது சுபேதாரின் நினைப்பு. ஏனெனில், சாதி வேற்றுமைகள் உச்சத்தில் இருந்த காலம் அது. அசைத் தக்கார் 'மேல் சாதி’க்காரர். கங்காவோ தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவள்.
அசைத் தக்கார் இரக்க உள்ளம் படைத்தவர். ஏழைப் பெண் கங்காவை மீட்க வேண்டும் என்று உறுதி பூண்டவராக, சுபேதாரின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டதோடு அப்படியே சாப்பிடவும் செய்தார். சுபேதாரும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி கங்காவை அனுப்பிவிட்டார்.
ஆனால், தக்காருக்கு அதற்கப்புறம்தான் சோதனை ஏற்பட்டது. அதெப்படி, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்ணுடன் அமர்ந்து சாப்பிடலாம் என்று கோபித்த உயர் சாதிக்காரர்கள் அவரை ஜாதிப் பிரஷ்டம் செய்து ஊரை விட்டே விரட்டிவிட்டார்கள். ஜீவனத்துக்கு வழி செய்யவேண்டி நாட்டிய நாடகங்கள் இயற்றலானார் தக்கார். 'பவாயி' என்ற இந்த நாடகங்கள் 'அம்பாஜி' என்ற அம்மாவைப் போற்றுவதாகவும் ஜாதி சம்பிரதாயங்களைக் கண்டிப்பதாகவும் இருந்தன. நவராத்திரி சமயத்தில் தெருக்கூத்துப் போல் விடிய விடிய நடைபெற்றன (பவா என்றால் உலகம், ஆய் என்றால் அம்மா என்று அர்த்தம் சொல்கிறார்கள்.)
குஜராத்தின் நாட்டியக் கலைகள் மொத்தத்துக்கும் பவாய்தான் மூலம் என்று கருதப்படுகிறது. ராஸ், கர்பா, டிப்பானி முதலிய குஜராத் நடனங்கள் பவாயிலிருந்துதான் பிறந்தன என்கிறார்கள். நம்ம ஊர் கோலாட்டம், கும்மி போன்ற தாண்டியாவும் இதிலிருந்து வந்ததுதான்.
இந்தத் தாண்டியா பற்றி சமீபத்தில்தான் கேள்விப்பட்டேன்.
சென்ற மே மாதம் என் உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போயிருந்த சமயம், வரவேற்பின்போது 'தாண்டியா' என்று ஒரு நிகழ்ச்சி இருப்பதாக அழைப்பிதழில் போட்டிருந்தார்கள். 'இது என்ன, மெல்லிசையா, சங்கீதக் கச்சேரியா?' என்று விசாரித்த போது, 'இது கோலாட்டம், கும்மி மாதிரி குஜராத்தி நடனம். தற்சமயம் கல்யாண வரவேற்புகளில் இதுதான் கிரேஸ்' என்றார்கள். பள பளப்பான குஜராத்தி பாவாடை, தாவணி உடையும் ஜிலுஜிலுப்பான ஆபரணங்களும் அணிந்த ஏழெட்டுப் பெண்கள் வட்டமாக நின்று, ட்ரம்ஸும் இந்துஸ்தானி இசையும் பின்னணியில் ஒலிக்க, கோலாட்டக் குச்சியைத் தட்டியபடி, இரண்டிரண்டு பேராக சேர்ந்தும், கலைந்தும், பிறகு சேர்ந்தும் வட்டமாக நகர்ந்தவாறு ஆடியது கண்ணுக்கு ரம்மியமாக இருந்தது. ரொம்பவும் சாஸ்திரியமாக இல்லை. மெதுவாக ஆரம்பித்து வேகம் கூடியது. கும்மியடிக்கிற மாதிரி குனிவதும் வளைவதுமாக, ஆர்வத்துடன் நாமும் தாளம் போடுகிற மாதிரி ஆடினார்கள். இந்தத் தாண்டியாவில் ஒரு விசேஷம், ஆடியன்ஸிலிருந்து வந்து கலந்து கொள்ளும்படி அழைக்கிறார்கள். பையில் வைத்திருக்கும் குச்சிகளில் ஒன்றை எடுத்துக்கொண்டு யாரும் யாருடனும் ஆடலாம்.
சுதந்திர தினத்தன்று நடைபெற்ற அண்ணாநகர் 4- இஸட் சிவிக் எக்ஸ்னோராவின் பதினான்காவது ஆண்டு விழாவில் ஒரு பொழுது போக்கு அம்சமாக ஒரு, தாண்டியா நிகழ்ச்சியை நடத்தலாம் என்று யோசனை தெரிவித்தேன். சிலர் தாண்டியா பார்த்திருந்ததால் ஒப்புக் கொண்டார்கள். எனக்கு உள்ளூர உதறல் - நான் ரசித்ததை எல்லோரும் ரசிப்பார்களோ மாட்டார்களோ என்று. இந்த விழாவில் மாதாந்திர 'நியூஸ் லெட்டர்' (தமிழிலும் ஆங்கிலத்திலும்) வெளியிடப்பட்டது. முன்னாள் தலைவர்களுக்கு சால்வை போர்த்தினார்கள். அதிகப்படியாக ஒரு சால்வை வாங்கி விட்டார்கள் போலிருக்கிறது. அதை எனக்குப் போர்த்தினார்கள். அதற்குத் தகுதியாக நான் என்ன செய்தேன் என்று எனக்கு ஆச்சரியம். வந்திருந்தவர்களுக்கும் ஆச்சரியம்.
நகரில் 'தாண்டியா' குழுக்கள் பல இருந்த போதிலும் அன்பளிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று தெரிந்தது. கடைசியில், அண்ணா நகரிலேயே கமல் என்ற அன்பர் ஒரு குழு நடத்துவதாகத் தெரிந்து அவரை அணுக, அவரும் அன்புடன் ஏற்றுக் கொண்டார்.
அண்ணா நகர் 'லேடிஸ் கிளப்' கட்டடத்தின் வசதியான திறந்த வெளியில் தாண்டியா நிகழ்ச்சி நடைபெற்றது. குஜராத்தி மங்கைகளும் சில இளைஞர்களும் முதலில் 'கர்பா' என்ற நடனத்துக்கு ஆடிவிட்டு, பிறகு கோலாட்டக் குச்சியுடன் 'தாண்டியா' ஆடினார்கள். அவையினரின் இருக்கைகள் வட்டமாகப் போடப்பட்டதால் நடுவே தாராளமாக இடம் இருந்தது. கமல் நன்றாகப் பாடினார். ஒன்றிரண்டு பக்திப் பாடல். ஒன்றிரண்டு சினிமாப் பாடல். அவரும் நிர்வாகிகளும் பல முறை கேட்டுக் கொண்டும் கூட ஆடியன்ஸில் நாலைந்து பேர்தான் எழுந்து வந்து, உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள். மற்றவர்கள் 'ஐயையோ! நான் மாட்டேன்!' என்று முகத்தைப் பொத்திக் கொண்டு கூச்சத்துடன் ஒளிந்து கொண்டுவிட்டார்கள்.
இந்தத் தாண்டியா நிகழ்ச்சியை நடத்திய கமல் குஜராத்திக்காரர்.