Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mandhira Muzhakkam
Mandhira Muzhakkam
Mandhira Muzhakkam
Ebook297 pages2 hours

Mandhira Muzhakkam

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Pushpanathan Pillai alias Kottayam Pushpanath is a famous Malayalam author. He wrote many detective novels, mainstream novels, science fiction,
and horror fiction. He has translated Bram Stoker's Dracula into Malayalam. He created two two fictional detective characters - Marxin and Pushparaj.
Now he lives in Kottayam, Kerala. He had published many books on tourism and other India-related subjects. Many of his books are translated by Sivan to
Tamil language.
Languageதமிழ்
Release dateSep 9, 2016
ISBN6580103801493
Mandhira Muzhakkam

Read more from Kottayam Pushpanath

Related to Mandhira Muzhakkam

Related ebooks

Related categories

Reviews for Mandhira Muzhakkam

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mandhira Muzhakkam - Kottayam Pushpanath

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    மந்திர முழக்கம்

    Mandhira Muzhakkam

    Author:

    கோட்டயம் புஷ்பநாத்

    தமிழில்: சிவன்

    Kottayam Pushpanath

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kottayam-pushpanath-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    முன்னுரை

    கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் மற்றொரு மாந்திரீக நாவல் இது. இதுவரை அவரது நாவல்களில் ஏறத்தாழ இருபத்தைந்தை மொழிபெயர்த்திருக்கிறேன். கடந்த பதின்மூன்று ஆண்டுகளில் வெளியாகியுள்ள என் மொழிபெயர்ப்பு மற்றும் எழுத்துப்பணியில் இது கால்பாகம். மொழிபெயர்க்கும் நோக்கத்துடன் அவர் என்னிடம் வழங்கியுள்ள நூல்களின் எண்ணிக்கை சுமார் அறுபதுக்குமேல். தொடர்ந்து செய்தால் என் வாழ்நாள் முழுக்க மொழிபெயர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

    ருசிபேதம் தேடியலையும் வாசகன் நான். எனவே, என்னைப்போன்ற வாசகர்களின் மனத்திருப்திக்காகவேனும் பிற எழுத்தாளர்கள் மற்றும் பிற பாணியிலான நூல்களை மொழிபெயர்க்கும் அவசியம் உள்ளது.

    மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபடாமலோ, ஈடுபட்டுத் தோல்வியடைந்தோ, அல்லது அதில் மனம் விரக்தியுற்றோ விமரிசகர்களான ஒரு சிலர், என்னுடைய இந்தக் கூற்றை உணர வேண்டும் என்பது என் ஆசை!

    கோட்டயம் புஷ்பநாத் அவர்களின் நாவல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தும் அதற்கு அடையாளமாக இருபத்தைந்து நாவல்களை மொழிபெயர்ப்புச் செய்து, அதில் வெற்றியடைந்து, அவை நன்றாக விற்பனையாகிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், கோட்டயம் புஷ்பநாத்தின் நாவல்களை வேறு சிலரும் விரும்பிக் கேட்கும் சூழ்நிலையில்தான் மலையாளத்தின் வேறு நாவலாசிரியர்களின் நூல்களை தமிழில் மொழிபெயர்க்கிறேன்.

    இதுவரை அவரது பதினெட்டு நாவல்கள் தமிழ்ப் பத்திரிகைகளில் தொடராக வெளிவந்துள்ளன. ஆகவே, இவரைவிட வியாபார மதிப்புள்ள வேறொரு எழுத்தாளரின் நாவலை வியாபார நோக்கத்தின் பொருட்டு மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை!

    எடுத்ததற்கெல்லாம் ‘வியாபார நோக்கம்’ என்று முத்திரை குத்தும் விமரிசகர்கள், ‘இலக்கிய உலகிலும்’ அப்படி எதையும் சாதித்ததாக எனக்குத் தெரியவில்லை. பொதுவாக விற்பனைக்கு வரக்கூடிய, அதற்குத் தகுதி உள்ள எல்லாப் பொருட்களும் விற்பனைக்காகவே தயாரிக்கப்படுகின்றன. மேற்படி விமரிசகர்களின் விமரிசனங்களைத் தாங்கிவரும் பத்திரிகைகளும் வியாபார நோக்கத்துடன்தான் பிரசுரிக்கப்படுகின்றன. எனவே, அவர்கள் ‘வியாபார நோக்கம்’ என்று எதைக் குறிப்பிடுகிறார்கள் என்று தெரியவில்லை. இப்படிப்பட்டவர்கள் மூன்றாம்தர அரசியல்வாதிகள் மாதிரி இலக்கியத்துக்குக் கொடிபிடிப்பதை ஒரு ஃபேஷனாக வைத்திருக்கிறார்கள் என்று கருதுகிறேன். இந்தக் கபடவேடதாரிகள் ஒரு ஜோல்னாப்பை, குறுந்தாடியுடன் காஃப்கா வான்கா, ஆண்டன் செக்காவ் போன்ற பெயர்களைப் பயன்படுத்துவது உண்மையிலேயே அவற்றின் பொருள் உணர்ந்துதானா என்பதும் விளங்கவில்லை.

    பார்களிலும், மதுவிருந்துகளிலும் இத்தகைய பேர்வழிகளுக்கு முகிழ்க்கும் ‘ஞானோதயம்’ விடிந்த பிறகு, நிதர்சனத்துக்குத் திரும்புமா என்பதும் சந்தேகமே. இன்னொரு விஷயம், விற்பனைக்கு அல்லாமல், நான் எந்த ஒரு புத்தகத்தையும் இலக்கிய சேவையின் பொருட்டு மொழிபெயர்ப்பதில்லை.

    அதனால்தான், தகழி சிவசங்கரபிள்ளை, சி. ராதாகிருஷ்ணன், எம்.டி. வாசுதேவன் நாயர், புனத்தில் குஞ்ளுப்துல்லா, உறூபு, எம்.எம். மேனோன், எம். சுகுமாரன், பி.வி. தம்பி,

    எஸ். ராமகிருஷ்ணன் போன்றோரின் நாவல்களை இதுவரை எந்தவிதமான சட்டச்சிக்கல்களோ, தடைகளோ இல்லாமல் மொழிபெயர்க்க முடிந்திருக்கிறது. நன்றி.

    சென்னை, 600028

    தொலைபேசி: 24837681

    தோழமையுடன்

    சிவன்

    1

    உண்ணி, கொஞ்சம் இப்படி வா… இதைப் படிச்சுப் பாரு! பத்ரன் நம்பூதிரி கையிலிருந்த பேப்பர் துண்டை நீட்டியபடி சொன்னார்.

    பழங்காலத்தில் ஏழீக்கரை கிராமத்தில் கொடிகட்டிப் பறந்த ஒரு குடும்பம் பொன்னாட்டு மனை. காரணவர்களின் (குடும்பத் தலைவர்கள், பரம்பரையின் மூத்த ஆண் வாரிசு) சுகபோகமான வாழ்க்கைமுறைகளும், புதிய நிலச் சீர்திருத்தச் சட்டங்களும் இன்று அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடுதுணிக்கு மாற்றுத்துணி இல்லாமல் செய்திருக்கிறது. இதுதான் அந்தக் குடும்பத்தின் இன்றைய நிலை!

    ஆகமொத்தம் இன்று அந்தக் குடும்பத்தில் இருப்பவர்கள் பத்ரன் நம்பூதிரியும், அவர் மகன் கிருஷ்ணன் உண்ணியும்தான். அவர் மனைவி இறந்துபோய் வருடம் எட்டுத் தாண்டிவிட்டது. இப்போது அந்த வீட்டில் சமையல் செய்வது பார்க்கவிக்குட்டி வாரஸ்யார் தான். (கோயிலுக்குப் பூ கட்டிக் கொடுப்பவர்கள் வாரஸ்யார் எனப்படுவர்.)

    ஒரு காலத்தில் நாட்டின் முக்கால் பங்கு பூமியைக் கையடக்கி வைத்திருந்த பொன்னாட்டு மனையின் மொத்தச் சொத்தும் இன்று ஒன்றேகால் ஏக்கர்தான்! அதுவும் சில கொன்றைமரங்கள் மற்றும் புதர்களும், சர்ப்பக்காவும் (பாம்புக் கோயில்) மட்டுமாக மீந்திருக்கிறது.

    தலைமுறை தலைமுறையாக எல்லா விஷயங்களிலும் கெட்டிக்காரர்களாக இருந்தனர். பொன்னாட்டு மனையைச் சேர்ந்த திருமேனிகள் (மதிப்புக்குரியவர்கள், மேல்ஜாதி மற்றும் மேன்மையானவர்களைக் குறிக்கும் வார்த்தை) வேத சாத்திரங்களில் தேர்ந்தவர்களாக இருந்தனர். மாந்திரீக வித்தைகளிலும் மேம்பட்டவர்களாயிருந்தனர். அம்மை நோய் பரவிப் படர்ந்திருந்த காலத்தில் யாராவது மரணம் அடைந்தால், அந்தச் சேதியை இல்லத்துக்கு (நம்பூதிரிகளின் மனைக்கு) தெரிவித்தால் போதும். அவர்கள் ஒரு பிரம்பை மந்திரித்துக் கொடுப்பார்கள். அதை இறந்துபோனவரது கையில் வைத்துவிட்டால், இறந்தவர் சுடுகாடுவரை தானே நடந்து சென்று வெட்டி வைத்துள்ள குழியில் விழுந்துவிடுவார். அதேபோல் ருத்ர (கடுமையான, துர்) மந்திரங்களிலும் அவர்கள் புகழ்பெற்று விளங்கவே செய்தனர்.

    அப்பா கூப்பிடுவதைக் கேட்டு, கிருஷ்ணன் உண்ணி (உண்ணி என்ற சொல்லுக்கு சிறிய, குழந்தை என்பது பொருள்) அவரிடம் வந்தான். இருபத்தேழு வயதைக் கடந்த கிருஷ்ணன் உண்ணி அழகான இளைஞன். பக்கத்திலிருக்கிற நகரிலுள்ள கல்லூரிக்கு நடந்து சென்று படித்து எம்.ஏ. பட்டம் பெற்றவன். எவ்வளவோ இடங்களில் வேலைக்கு முயற்சி செய்தும் எதுவும் சரியாகவில்லை. கடைசியில் வீட்டில் சும்மா இருந்தபோது, பொழுதுபோகாமல் அங்கிருந்த பழைய ஓலைச்சுவடிகளைப் புரட்டத் தொடங்கினான்.

    ஓரளவுக்கு அவை புரிய ஆரம்பித்ததும், இல்லத்தைச் சேர்ந்த பூர்வ பிதாமகன்களின் நினைவு எழுந்தது. அதனால் அவர்களைவிடக் கெட்டிக்காரனாக வேண்டும் என்கிற ஆசையும் அவனிடம் எழுந்தது.

    என்னப்பா? அவன் கேட்டான்.

    இந்தத் துண்டு பேப்பர்ல என்ன எழுதியிருக்குன்னு படிச்சுப் பாரு… ஆச்சரியமா இருக்கு! அப்பா சொன்னார்.

    கிருஷ்ணன் உண்ணி அதை வாங்கிப் பார்த்தான்.

    நான்கு நாட்களுக்கு முந்தைய செய்தித்தாளின் ஒரு துண்டு. மளிகைக்கடையிலிருந்து என்னவோ பொட்டலம் கட்டிவந்த பேப்பர்.

    காகிதத் துண்டுடன் தன் அறைக்குத் திரும்பினான்.

    ‘துரதிர்ஷ்டசாலியான மணப்பெண்!’ செய்தியின் தலைப்பு இதுதான்.

    வாசித்துப் பார்த்தான். இரண்டு தடவை வாசித்தும் திருப்தி ஏற்படவில்லை. விசித்திரமாக உள்ளது.

    புகழ்பெற்ற நம்பூதிரிக் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருத்தியின் திருமணம் மூன்றாவது தடவையாகத் தடைப்படுகிறது என்பதுதான் செய்தியின் உள்ளடக்கம். திருமணத்துக்கு முன்பே மூன்று மணமகன்களும், துர்நிமித்தங்கள் மூலம் மரணம் அடைந்தனர். ஒருவர் திருமணத்துக்கு முந்தைய நாள்; மற்ற இருவரும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தினத்தில் இறந்தனர்.

    இந்தச் சம்பவங்களின் பின்னணியைத் தெரிந்துகொள்வதற்காக, அந்தப் பெண்ணின் வீட்டார் பிரஸ்னம் (சோழி சோதிடம்) பார்க்கத் தீர்மானித்திருப்பதாகவும் செய்தி தெரிவித்தது.

    படித்து முடித்தவுடன், கிருஷ்ணன் உண்ணி அப்பாவிடம் வந்தான்.

    படிச்சிட்டியா? பத்ரன் நம்பூதிரி கேட்டார்.

    படிச்சிட்டேம்பா!

    ஒரு தடவை முயற்சி பண்ணிப் பார்த்தா என்ன?

    பார்த்துடலாம்!

    இப்படிச் சொன்னாப் போதாது… கண்டுபிடிக்கணும். அந்தத் தறவாட்டின் (குடும்பத்தி) பெயர் எனக்குத் தெரியும். கேள்விப்பட்டிருக்கிறேன். வடக்கு மலபாரில் புகழ்பெற்ற ஓர் இல்லம். (மனை, இல்லம் என்பதெல்லாம் நம்பூதிரிகளின் வீடுகளைக் குறிக்கும்.) இந்தக் காரியம் மட்டும் வெற்றி பெற்றுவிட்டால், தற்போதைய சூழ்நிலையில் நமக்கு அது பெருமளவில் உதவியாகவும் இருக்கும்! அப்பா ஞாபகப்படுத்தினார்.

    குடும்பநிலையை மனத்தில் வைத்துக்கொண்டு அப்பா பேசுகிறார் என்பது கிருஷ்ணன் உண்ணிக்குப் புரிந்தது.

    ஏராளமானவர்கள் செய்தி தெரிந்து வந்துசேரலாம். அப்படி வரும் பிரஸ்னக்காரர்கள் மோசமானவர்களாகவும் இருக்க முடியாது. தோல்வியடையக் கூடாது; வெற்றி பெறுவது நீயாகத்தான் இருக்க வேண்டும்! பேசியபடி அப்பா, சர்ப்பக்காவை ஒட்டியுள்ள சிறிய அஸ்தித் தரையை (தகனம் முடிந்து நெருப்பில் வெந்த குடும்பப் பெரியவரின் எலும்புகளைக் கலசத்தில் போட்டு, பத்திரப்படுத்தி அதன் நினைவாகக் கட்டியுள்ள மாடம், அஸ்தித்தரை எனப்படும்.) நெருங்கினார். அங்குதான் பூர்வ பிதாமகன்களின் சக்தி நிலைபெற்றிருந்தது.

    சரி அப்பா! உண்ணி, அப்பாவின் முகத்தைப் பார்த்தபடி தன் அறைக்குச் சென்றான்.

    அந்தப் பெரிய நாலுகெட்டில் (நான்கு புறமும், நான்கு அறைகளுடன் நடுவில் முற்றம் உள்ள வீடமைப்பு) தென்புறம் உள்ளது கிருஷ்ணன் உண்ணியின் படுக்கையறை. அங்குதான் அவன் புத்தகங்கள் படிப்பது. ராசிப்பலகை, சோழிகள், பகடைக்காய்கள் போன்றவற்றைப் போட்டுவைத்துள்ள பையும் அங்குதான் இருந்தது.

    அவையெல்லாம், அந்தக் குடும்பத்தின் முந்தைய தலைமுறையினர் பயன்படுத்திய பொருட்கள்.

    தேவதாரு மரத்தில் செய்யப்பட்ட ராசிப் பலகையுள்ள, பையை மேஜை மீது கவிழ்த்தான். சோழிகள், பகடைக் காய்களைச் சரிபார்த்தான். எல்லாம் சரியாக இருந்தன.

    அப்பாவின் அனுக்கிரகம், பூர்வீகர்களின் ஆசி, பரதேவதைகளின் வாழ்த்துக்களுடன் தனக்குத் துணையாக உள்ள நம்பிக்கையுடனும் கிருஷ்ணன் உண்ணி அன்று வீட்டிலிருந்து புறப்பட்டான்.

    கண்ணூரி (கண்ணனூர், கேன்னனூர் என்று ஆங்கிலத்தில் வழங்கப்படும் வட கேரளத்திலுள்ள வியாபார நகர். விடுதலைப் போராட்ட காலத்தில் இங்குள்ள மத்திய சிறையில் ஏராளமான தலைவர்களிலிருந்து சிறைவைக்கப்பட்டிருந்தனர்.) எழுபது கிலோமீட்டர் பயணம் செய்து கிள்ளிக்காட்டு மனையை அடைந்தான்.

    தன்னுடைய கற்பனையில் உருவாகியிருந்த ஓர் இல்லமாக இருக்கவில்லை அது.

    மாளிகை போன்ற பிரமாண்டமான ஒரு கட்டடமாக இருந்தது கிள்ளிக்காட்டு மனை. ஒரு பெரும் வெளிச்சுவருக்குள் இருந்தது மனை. ஏறத்தாழ இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் கட்டடம் எழும்பியிருந்தது. கோயில் வாசல் போன்ற தெருவாசல்படி, அதைத் தாண்டினால் விசாலமான முற்றம்.

    முற்றத்தை முழுவதுமாக மறைத்துப்போட்டிருந்த பந்தல் இன்னும் பிரிக்கப்படாமல் இருந்தது.

    கிருஷ்ணன் உண்ணி தெருவாசல்படியைத் தாண்டி முற்றத்தில் கால் பதித்தபோது நீண்டுகிடந்த வரவேற்பறையில் ஏராளமானவர்கள் உட்கார்ந்திருந்தனர்.

    அவர்களில் சாய்வு நாற்காலியில் சாய்ந்து படுத்திருப்பவர்தான் அந்த வீட்டின் காரணவர் (குடும்பத்தலைவர்) ஆக இருக்க வேண்டுமென்று நினைத்தான் கிருஷ்ணன் உண்ணி.

    அவரருகில் சென்று கைகூப்பி வணங்கிய கிருஷ்ணன் உண்ணி, சற்று விலகி நின்றான்.

    அங்கிருந்த மற்றவர்கள் யாரும் அவனைக் கவனித்ததாகத் தெரியவில்லை. காரணம், இளைஞனான அவனை ஒரு ஜோதிடராக யாரும் கருதாததுதான்.

    எங்கேருந்து வர்ற தம்பி? காரணவர் கேட்டார்.

    தெற்குப் பகுதியில் ரொம்பத் தொலைவிலிருந்து. திருவாங்கூர் கோட்டயம் பக்கத்திலிருந்து. பூஞ்ஞார் ஊர்ப்பேரு. பொன்னாட்டுமனை என்பது எங்கள் வீட்டுப்பெயர் கிருஷ்ணன் உண்ணி தாழ்ந்தகுரலில் பதிலளித்தான்.

    பொன்னாட்டுமனை… அப்படியொரு பெயரைக் கேள்விப்பட்டிருப்பதாக ஞாபகமில்லை! என்ன விஷயம்? காரணவர் நெற்றியைச் சுளித்தபடி கேட்டார்.

    ஒரு காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் புகழ்பெற்றதாக விளங்கிய தன்னுடைய தறவாடு (பரம்பரை) குறித்து அந்த ஊரிலுள்ளவர்களுக்குத் தெரியவில்லை என்பது அவனுக்குப் புரிந்தது.

    பத்திரிகையில் செய்தி படித்தேன்… கிருஷ்ணன் உண்ணியின் குரல் மிகவும் தாழ்ந்து ஒலித்தது.

    அதுக்கு? காரணவர், கிருஷ்ணன் உண்ணியை தலையிலிருந்து பாதம்வரை பார்த்தபடி கேட்டார்.

    பிரஸ்னம் பார்ப்பவர்கள். வரவேற்கப்படுகிறார்கள் என்ற செய்தியைப் படித்தேன்…

    ஓகோ… அதுக்காகத்தான் வந்திருக்கீங்களா தம்பி. பரவாயில்லையே… நாங்க சொல்லி இன்றைக்கு நாலாவது நாள். இதுவரை எட்டுப்பேர் வந்திருக்காங்க. யாரும் எதையும் சொல்லலை. எல்லாருமே புகழ் பெற்றவங்கதான் காரணவர் ஏமாற்றத்துடன் பேசினார்.

    நானும் பிரஸ்னத்தை ஓரளவுக்குக் கற்றிருக்கிறேன். விவரம் சொன்னால் பார்க்க முயற்சி செய்வேன்…

    என்ன விவரம்?

    அவங்க எப்படி இறந்தாங்கன்னு…

    ஓகோ… அதுதான் தேவையா? ராமன் குட்டி… இங்கே வா! காரணவர் யாரையோ அழைத்தார்.

    நடுவயது மனிதர் ஒருவர் அவரருகே வந்தார்.

    வந்தவர் கிருஷ்ணன் உண்ணியைச் சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டு நின்றார்.

    இதோ இந்தத் தம்பியை நம்ம சவுக்கைக்குக் கூட்டிட்டுப்போங்க. நல்லா உபசரிங்க… என்ன கேட்கிறாரோ சொல்லி விளக்குங்க காரணவர் உத்தரவிடும் தொனியில் பேசினார்.

    ராமன்குட்டி, கிருஷ்ணன் உண்ணியைச் சவுக்கைக்கு அழைத்துப் போனார்.

    எல்லா விதமான சௌகரியங்களும் இருந்த விசாலமான ஓர் அறைதான் சவுக்கை. ஒரு கட்டில், மேஜை, இரண்டு நாற்காலிகள்… சுவர், அலமாரி எல்லாம் வெகு நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டிருந்தன.

    உட்காருங்க தம்பி! ராமன்குட்டி கூறினார்.

    ஒரு விஷயம். உங்களை நான் என்னன்னு கூப்பிடணும்? கிருஷ்ணன் உண்ணி கேட்டான்.

    ராமன்நாயருன்னு கூப்பிடலாம். இந்த வீட்டுக் காரியஸ்தன்.

    அப்படிங்களா? என் பேரு கிருஷ்ணன் உண்ணி தெற்குப்பகுதியில் இருந்து வர்றேன். பிரஸ்னம் பார்க்கிறவன்.

    ரொம்பச் சின்ன வயசா இருக்கிங்க? ராமன்நாயர் கேட்டார்.

    அது கிடக்கட்டும். அப்புறம் வந்த வரனுங்க (மாப்பிள்ளைகள்) எப்படி இறந்தாங்க? சுருக்கமாச் சொன்னாப் போதும். கிருஷ்ணன் உண்ணி தன்னுடைய தோள்பையை மேஜை மீது வைத்துவிட்டுக் கட்டிலில் உட்கார்ந்தான்.

    ராமன்நாயர் தரையில் சப்பணமிட்டு அமர்ந்தார். பிறகு பேசத்தொடங்கினார்: முதன்முதலாக நிச்சயித்த வரன் கல்யாணத்துக்கு இரண்டு நாளுக்கு முன்னால் ஸ்கூட்டர் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். மற்ற இரண்டுபேரும் கல்யாணம் நடக்கவிருந்த அன்றைக்கு காலையில இறந்தாங்க. இந்த கடைசி ரெண்டும் அடுத்தடுத்து நடந்தது. அதுதான் வேதனையான விஷயம். இங்கே கல்யாணத்துக்கு எல்லா ஏற்பாடுகளையும் பண்ணியாச்சு. வரன்கள் அதோ தெரிகிறதே அந்தத் தெருவாசற்படியைத் தாண்டும் முன்பாகவே பொத்தென்று தரையில் விழுந்தனர். அதன் பிறகு அந்த ரெண்டுபேருமே மூச்சு விடவில்லை!

    கிருஷ்ணன் உண்ணி தன்னையும் மீறித் தெரு வாசற்படியை ஒரு தடவை பார்த்தான். அங்கு நாகஸ்வர மேளங்களின் நடுவே நடந்து வந்த அழகான இளைஞன் ஒருவன் மணக்கோலத்தில் துடிதுடித்து விழுவதை அவனின் அகக் கண்கள் பார்த்தன.

    இந்த வீட்டுக் காரணவருக்கு எத்தனை குழந்தைகள்? கிருஷ்ணன் உண்ணி கேட்டான்.

    ஒரே ஒரு பொண்ணுதான்! எல்லா சொத்துக்குமான ஒரே வாரிசு, லட்சக்கணக்கான சொத்துக்குச் சொந்தக்காரி அந்த தம்புராட்டி (தம்புரான், தம்புராட்டி என்ற சொற்கள் மேற்குலத்து உயர்ந்தோரைக் குறிக்கும் மரியாதையான வார்த்தைகள்). வயசு இருபத்தொண்ணு!

    செவ்வாய் தோஷம் இருக்கிற ஜாதகமா?

    எந்தக் குறையும் இல்லாதது!

    நிச்சயமாத் தெரியுமா?

    அப்படிங்கிறதுதான் என் நம்பிக்கை. ஜாதகத்தைத் துல்லியமாக் கணிச்சுதான், கல்யாணம் நிச்சயம் பண்ணினாங்க. அதுலயும் ரெண்டாவது, மூணாவது வரனுங்க ரொம்பவும் பொருத்தமா இருந்தாங்க! ராமன்நாயர் உறுதியான குரலில் கூறினார்.

    குடும்பத்தில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா, பிரஸ்னம் பார்த்தவங்க யாராவது சொன்னாங்களா? கிருஷ்ணன் உண்ணி கேட்டான்.

    இல்லை. இதுவரைக்கும் யாரும் அப்படி எதையும் சொல்லலை.

    இந்தத் தறவாட்டின் பரதேவதை யார்?

    துர்க்காவை, இந்த இல்லத்தைச் சேர்ந்த கோயிலில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். அதுவும் சுயம்பு என்பது ஐதீகம். கூப்பிட்டா கூப்பிட்ட குரலுக்கு வர்ற தெய்வம். ராமன்நாயர் பக்திபூர்வமாகப் பேசினார்.

    ஏதாவது குறைகள் தட்டுப்பட்டிருக்கிறதா?

    அதைப்பத்தி எனக்கு எதுவும் தெரியாதூங்களே. ராமன்நாயர் சந்தேகத்துடன் கிருஷ்ணன் உண்ணியைப் பார்த்தான்.

    "முதல்ல நான் குளிக்கணும்.

    Enjoying the preview?
    Page 1 of 1