Suriya Vamsam - Part 1
By Sivasankari
5/5
()
About this ebook
என்னுடைய வாழ்க்கையில் நடந்த, என்னைச் சிலிர்க்க வைத்த, என்னை நெகிழ வைத்த, என்னை அழவைத்த, என்னை அதிர வைத்த, என்னைக் கோபப்பட வைத்த, என்னைச் சிந்திக்க வைத்த, முக்கியமாக, எனக்கு ஒரு விழிப்புணர்வைத் தந்த பல விஷயங்களைப் பற்றி, மனிதர்களைப் பற்றி, சம்பவங்களைப் பற்றி இந்தப் புத்தகம் மூலமாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். கண்டிப்பாக, என்னுடைய நினைவலைகள் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்குள் தோன்றின விழிப்புணர்வுகளை உங்களுக்குள்ளும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது சரி, அதென்ன ‘சூரிய வம்சம்’ என்று நீங்கள் கேட்கலாம். தொடர்ந்து படியுங்கள், உங்களுக்கே புரியும்.
சிவசங்கரி
Read more from Sivasankari
Nappaasai Rating: 0 out of 5 stars0 ratingsMookkanaangayiru Rating: 5 out of 5 stars5/5Andhamma Romba Nallavanga Rating: 5 out of 5 stars5/5Aairam Kaalathu Payir Rating: 5 out of 5 stars5/5Overdose Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 5 out of 5 stars5/5Vetkam Kettavargal Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsThavam Rating: 5 out of 5 stars5/5Amma Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPayirai Meyum Veligal Rating: 5 out of 5 stars5/5Prayachchitham Rating: 4 out of 5 stars4/5Kuzhappangal Rating: 0 out of 5 stars0 ratingsNooleni Rating: 5 out of 5 stars5/5Paalangal Rating: 0 out of 5 stars0 ratingsIvalum Avalum Rating: 0 out of 5 stars0 ratingsAvargalukku Puriyathu Rating: 5 out of 5 stars5/5Athu Sari Appuram? Rating: 0 out of 5 stars0 ratingsOru Singam Muyalagirathu Rating: 4 out of 5 stars4/5Innoru Karanam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Suriya Vamsam - Part 1
Related ebooks
Suriya Vamsam - Part 2 Rating: 5 out of 5 stars5/5Vaakkumoolam Rating: 0 out of 5 stars0 ratingsIthu Sathiyam Rating: 5 out of 5 stars5/5Kaathirukkirean! Rating: 0 out of 5 stars0 ratingsSutri Sutri Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsShurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratingsPachonthigal Rating: 0 out of 5 stars0 ratingsNesathil Nanaintha Nenjangal Rating: 5 out of 5 stars5/5Raasi Rating: 5 out of 5 stars5/5Aasai Thee Valarthen Rating: 5 out of 5 stars5/5Hassya Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMogam Ennum Naadakam Rating: 0 out of 5 stars0 ratingsSivasankari Sirukathaigal Irandam Thoguppu Rating: 5 out of 5 stars5/5Kumbakonam Vakkil Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsNizhalukku Yengum Marangal Rating: 5 out of 5 stars5/5Irandu Pengal Rating: 0 out of 5 stars0 ratingsVaanathu Nila Rating: 5 out of 5 stars5/5Ganthimathiyin Kanavan Rating: 0 out of 5 stars0 ratingsEn Veedu Rating: 0 out of 5 stars0 ratingsIrandaavathu Amma Rating: 0 out of 5 stars0 ratingsVelli Kanavu Rating: 5 out of 5 stars5/5Rushi Kanda Poonai Rating: 0 out of 5 stars0 ratingsAppusamy Varisu Thedukirar Rating: 0 out of 5 stars0 ratingsVeli Rating: 0 out of 5 stars0 ratingsUravin Kural Rating: 0 out of 5 stars0 ratingsNooleni Rating: 5 out of 5 stars5/5Padagu Veedu Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Malathi Rating: 0 out of 5 stars0 ratingsVetti Vergal Rating: 5 out of 5 stars5/5Marumagal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Suriya Vamsam - Part 1
1 rating1 review
- Rating: 5 out of 5 stars5/5மறக்க முடியாத நினைவுகள் படிக்க படிக்க எனக்கு என் வாழ்க்கை அனுபவங்களும் இணைய சிந்தனை ஓட்டம் தனி ஆவர்த்தனமாக சென்று கொண்டு இருக்கிறது. தொடர்ந்து படிக்க வேண்டும் என்கிற ஆவல் தூண்டப் பட்டுக் கொண்டே இருக்கிறது என்பது நிஜம் தான். ஆசிரியர் அவர்களுக்கு அன்பார்ந்த வணக்கம்.
Book preview
Suriya Vamsam - Part 1 - Sivasankari
http://www.pustaka.co.in
சூரிய வம்சம்
(நினைவலைகள்)
பகுதி - 1
Suriya Vamsam
(Ninaivalaigal)
Part - 1
Author:
சிவசங்கரி
பதிவு - எழுத்து: ஜி. மீனாட்சி
Sivasankari
Transcriber: G. Meenakshi
For more books
http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
முன்னுரை
வணக்கம். 'சூரிய வம்சம்'. இது என்ன சரித்திரக் கதையா? என்று உங்களில் சிலர் நினைக்கலாம். ம்ஹூம், இல்லை. சமூகப் பார்வை கொண்ட கதையா? நாவலா? இல்லை, அதுவும் இல்லை. பயணக் கதையா? இல்லவே இல்லை. பிறகு இது என்ன? சொல்கிறேன். முதலில் இந்த 'சூரிய வம்சம்' என்கிற தொடரை எழுதுவதற்குக் காரணமாக இருந்த இரண்டு நபர்களைப் பற்றி முதலில் உங்களிடம் சொல்லியே ஆகவேண்டும்.
முதல் நபர் – லலிதா. என்னைத் தெரிந்தவர்களுக்கெல்லாம் லலிதாவைப் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். என்னுடனேயே நிழல்போல கிட்டத்தட்ட 41 வருடங்கள் அவள் வாழ்ந்திருந்தாள். நான் விழுப்புரத்தில் வசித்தபோது, ஒரு சாதாரண வாசகியாக, கல்லூரி மாணவியாக எனக்கு அவள் அறிமுகமானாள். 'உங்க எழுத்துக்கள் என்னை ரொம்பவும் வசீகரிச்சிருக்கு. உங்களை அம்மானுதான் கூப்பிடுவேன்' என்று சொன்னாள். ஆனால், நான் அவளிடம், நான் உனக்கு அம்மா இல்ல லலிதா. உனக்குனு அம்மா இருக்காங்க. உன்னை என்னோட ரசிகையா ஏத்துக்கறேன். நீ என்னோட நல்ல வாசகி
என்று சொல்லுவேன். அவள் என்னை 'அம்மா' என்று கூப்பிடுவதால், அவளைப் பெற்ற அம்மாவை நான் புண்படுத்திவிடுவேனோ என்ற ஜாக்கிரதை உணர்வில் நான் அவளது அன்பை ஏற்காமலேயே இருந்தேன்.
ஆனால், அவளது அன்பு மிகத் தீவிரமான அன்பு. Unconditional Love என்று சொல்லுவார்களே, அதைப்போல எதையும் எதிர்பார்க்காத அன்பு. பிடிவாதத்தோடு அவள், நீங்கதான் என் அம்மா
என்று சொல்லி என்னை அப்படியே கூப்பிட்டும் வந்தாள். பத்து வருஷங்கள் நான் அவளை ஒரு தோழியாகத்தான் நினைத்துப் பழகி வந்தேன்.
என் கணவர் சந்திரசேகர் - சந்திரா - இறந்தபோது, எனக்குள் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. எங்கள் சமூகத்தில் மகள் வந்து சடலத்தைக் குளிப்பாட்ட வேண்டும் என்கிற பழக்கம் இருந்தது. எனக்குக் குழந்தைகள் கிடையாது. அதனால், யார் அவரைக் குளிப்பாட்டப் போகிறார்கள் என்று அங்கு நின்று கொண்டிருந்த 100-க்கும் மேற்பட்ட ஜனங்கள் எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, அங்கே இருந்த லலிதா, சட்டென்று போய் குளித்துவிட்டு வந்து அந்த ஈரத்துடனேயே, குடத்தில் ஜலம் கொண்டு வந்து என் கணவரைக் குளிப்பாட்டினாள். அந்த இடத்தில் அவளது பெற்றோரும் நின்று கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோருமே நெகிழ்ந்துதான் போனார்கள், என்ன மாதிரியான அன்பு இது என்று! அந்தக் கணத்தில் இருந்து நான் மனப்பூர்வமாக அவளை என் மகளாக ஏற்றுக் கொண்டேன்.
லலிதா எனக்கு ஒரு மிகச் சிறந்த செகரட்டரியாக இருந்தாள். என்னுடைய எழுத்துக்களை கம்ப்யூட்டரில் அழகாக டைப் செய்து தருவாள். அவளுக்கும் இலக்கியத்தில் நல்ல ஆர்வம் இருந்தது. அதனால், நான் சொல்வதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு நான் நினைப்பது போலவே நேர்த்தியாகச் செய்து முடிப்பாள். அதுமட்டுமல்லாமல், எனக்கு ஒரு நல்ல கம்பானியனாகவும் (Companian) இருந்திருக்கிறாள். என்னுடன் கடைகளுக்கு, சினிமாவுக்கு, கோயிலுக்கு, கல்யாணங்களுக்கு, கூட்டங்களுக்கு, நண்பர்கள் இல்லங்களுக்கு என்று பல இடங்களுக்கும் வந்திருக்கிறாள். எல்லா விஷயங்களையும் ரசிக்கக்கூடிய நல்ல மனசு அவளுக்கு இருந்தது. மனசுவிட்டு நான் சில பிரச்னைகளையெல்லாம் விவாதிக்கக்கூடிய ஒரு நல்ல தோழியாக அவள் இருந்தாள். ஆக, செகரட்டரி, கம்பானியன், ஃப்ரெண்ட், மகள் என்று எல்லாமே ஒன்று சேர்ந்து உருவானவள்தான் லலிதா.
என்னுடைய முதல் வாசகி என்பதில் அவளுக்கு மிகப் பெரிய பெருமிதம் உண்டு. அம்மா உங்க எழுத்தை முதல் முதல்ல படிக்கிற வாய்ப்பு எனக்குத்தானே கிடைச்சிருக்கு பார்த்தீங்களா
னு சந்தோஷப்படுவாள். அப்படிப்பட்ட லலிதாவுக்கு ஒரு ஆசை இருந்தது. அவள் சில வருடங்களாக, அம்மா, நீங்க சுயசரிதை எழுதணும். உங்க அனுபவங்கள் என்னை மாதிரி பலருக்கும் பல விஷயங்களில் விழிப்புணர்வைத் தரும்
என்று அடிக்கடி என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தாள். "சுயசரிதை எழுதறதுங்கறது விளையாட்டில்ல லலிதா. அதுல சத்தியம் இருக்கணும். உண்மை இருக்கணும். நடந்ததை நடந்தபடி சொல்றதுதான் வாழ்க்கை வரலாறு. அந்தமாதிரி சொல்ல முற்பட்டா, பலரை நான் காயப்படுத்த வேண்டி வரலாம். சிலரது முகமூடிகளைக் கிழிக்க வேண்டி வரலாம். அது பலருக்கும் அதிர்ச்சியைத் தரலாம். யாரையுமே காயப்படுத்திட்டு ஒரு காரியம் செய்யணும்னு நினைக்கிறவ இல்ல நான். ஒருத்தருடைய காலை மிதிச்சிட்டு நடக்கணும்னு நினைக்கிறவ இல்ல ... அதனால சுயசரிதை எழுத முடியாது லலிதா என்று நான் சொன்னபோது, அவளுக்கு வருத்தம்.
சரி. சுயசரிதை எழுதாட்டா பரவாயில்லை. உங்க வாழ்க்கையில நடந்த பல சம்பவங்களைப் பற்றிய நினைவலைகளையாவது (Memoirs) எழுதலாமே அம்மா. அதுல வரிசைக்கிரமமாகப் போகவேண்டியதில்லையே. உங்களுக்கு எது சொல்லணும்னு தோணுதோ அதை மட்டுமே சொல்லலாமே. உங்களோட நிறைய அனுபவங்களைப் படிக்கறவங்க அதன் மூலமா விழிப்புணர்வு பெற முடியுமே
என்று கேட்டாள். பார்க்கலாம் லலிதா
என்று நானும் பிடிகொடுக்காமலே இருந்துவிட்டேன்.
அப்படிப்பட்ட லலிதாவுக்கு 2017-ம் வருஷம் ஃபோர்த் ஸ்டேஜ் கேன்சர், அதாவது, முற்றின புற்றுநோய் என்று டாக்டர்கள் சொன்னபோது நாங்கள் அதிர்ந்துதான் போனோம். உணவுக் குழாயில் வந்த புற்றுநோய் ஈரலுக்குப் பரவிவிட்டது. யாருமே எதிர்பார்க்காத பேரிடி அது. காரணம், லலிதா எப்போதுமே சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக இருப்பவள். எனக்குத் தேவையான வேலைகளையெல்லாம் செய்துகொடுத்துட்டு ராத்திரி பத்து மணிக்குக்கூட ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு தன் வீட்டுக்குப் போய்விட்டு, மறுநாள் திரும்பி வந்துவிடுவாள். அப்படிப்பட்ட லலிதாவுக்கா கேன்சர்? என்னால் நம்பவே முடியவில்லை. என்னைப் போன்ற எழுத்தாளர்கள் கதைகளில் எழுதுவோமே, 'விஷயத்தைக் கேட்டு உடைஞ்சு போயிட்டேன். இடிஞ்சு போயிட்டேன்' என்று… அப்படிப்பட்ட ஓர் உணர்வுதான் எனக்குள்ளேயும் ஏற்பட்டது.
ஆபரேஷன், கீமோதெரபி, ரேடியேஷன் என்று ஒன்று பாக்கியில்லாமல், அந்தப் பெண் அனுபவித்த வேதனைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்போதும், சிரித்த முகத்தோடு என்னைப் பார்த்து, எனக்கு சரியாயிடும்மா. திரும்பவும் நான் வந்துடுவேன்மா. நீங்க உயிரோட இருக்கற வரைக்கும் நானும் இருப்பேன்மா. நான் கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிறேன் தெரியுமா? உங்களை அனுப்பிச்சுட்டு மறு நாளே நான் வந்து சேர்ந்துடறேன்னுதான்
என்று மிகவும் நம்பிக்கையோடு சொல்வாள்.
ஆனால், அவ இருக்கப்போற நாட்கள் கொஞ்சம்தான். நீங்க என்ன ஏற்பாடு பண்ணணுமோ பண்ணிடுங்க
என்று டாக்டர்கள் சொன்னபோது, இடிந்து போனேன். கேன்சர் முத்திப்போய், 2018-ஆம் வருஷம் பிப்ரவரி 9-ஆம் தேதி லலிதா காலமானாள். இப்போது அவள் இல்லாத இந்த ஆறு மாத காலமாக, அவள் கேட்டது எனக்குள் சுழன்றுகொண்டே இருக்கிறது. 'மெமோயர்ஸ் எழுதுங்கள்' என்று அவள் ஆசையாகக் கேட்டதை, அவளது கடைசி ஆசையை நான் நிறைவேற்ற வேண்டாமா? என்று நினைத்துக் கொண்டு இருந்தபோதுதான், இந்தத் தொடரை நான் எழுதுவதற்கு இரண்டாவது காரணமான மீனாட்சி, மங்கையர் மலரின் பொறுப்பாசிரியர், என் வாழ்க்கைக்குள் வந்தார். என்னைப் பார்க்கும்போதெல்லாம் மீனாட்சி, "மேடம், மங்கையர் மலருக்கு என்ன எழுதப் போறீங்க? லலிதா மேடம் ஆசைப்பட்ட மாதிரி உங்களோட நினைவலைகளை எங்க பத்திரிகையில எழுதலாமே என்று கேட்பார்.
எனக்கு தமிழில் டைப் அடிக்கத் தெரியாது. எதையும் கைப்பட எழுதுவதுதான் வழக்கம். லலிதா உயிரோடு இருந்தவரை, நான் எழுதிக் கொடுப்பதை அப்படியே டைப் பண்ணி தந்துவிடுவாள். ஸ்பீடாக எழுதுவதால் சில நேரங்களில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பது எனக்கே புரியாது. லலிதாவுக்குத்தான் என்னுடைய கையெழுத்து புரியும். இந்த நிலையில, நான் எப்படி எழுத முடியும் என்று தயங்கினேன். அப்போது மீனாட்சி ஒரு ஐடியா சொன்னார். நீங்க எனக்குப் பேட்டி கொடுக்கறது போலவே பேசிடுங்க மேடம். நான் அதைக் கேட்டு, ரெகார்ட் பண்ணிட்டு போய் எழுதிட்டு வந்துடுறேன். அதுல ஏதாவது மாற்றம் செய்யணும்னா நீங்க திருத்தித் தந்துடுங்க மேடம் என்று சொன்னார். என் மனசுக்கும் அது சரி என்று பட்டது. லலிதாவின் ஆசைப்படியும், மீனாட்சியின் தூண்டுதல்படியும், என் மேல் அன்பு கொண்டு தொலைபேசி மூலமும், கடிதங்கள் மூலமும்,
எப்ப மறுபடியும் எழுதப் போறீங்க? என்று அடிக்கடி ஆர்வமாகக் கேட்கிற என்னுடைய பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்குக் கொடுக்கும் மரியாதையாகவும் நான் இந்த நினைவலைகளை எழுத முடிவு செய்தேன்.
என்னுடைய வாழ்க்கையில் நடந்த, என்னைச் சிலிர்க்க வைத்த, என்னை நெகிழ வைத்த, என்னை அழவைத்த, என்னை அதிர வைத்த, என்னைக் கோபப்பட வைத்த, என்னைச் சிந்திக்க வைத்த, முக்கியமாக, எனக்கு ஒரு விழிப்புணர்வைத் தந்த பல விஷயங்களைப் பற்றி, மனிதர்களைப் பற்றி, சம்பவங்களைப் பற்றி இந்தப் புத்தகம் மூலமாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். கண்டிப்பாக, என்னுடைய நினைவலைகள் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்குள் தோன்றின விழிப்புணர்வுகளை உங்களுக்குள்ளும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது சரி, அதென்ன 'சூரிய வம்சம்' என்று நீங்கள் கேட்கலாம். தொடர்ந்து படியுங்கள், உங்களுக்கே புரியும்.
சிவசங்கரி
சென்னை.
அக்டோபர், 2019.
***
அலைகள்
1. முன்னோர்கள்
2. சுப்புஸ்வாமி தாத்தா, சங்கரி பாட்டி
3. அப்பா, அம்மா, நாங்கள்
4. அந்த நாள் ஞாபகம்!
5. சங்கடமான சம்பவம்
6. பண்டிகை, பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
7. மணியான மான்குட்டி, அம்மா-அப்பா தாம்பத்யம்
8. வெளியூர்ப் பயணங்கள்
9. சிறு வயதுக் குறும்புகள், டெல்லி பயணம்
10. அம்முவும் நானும்
11. புரூட்டஸ், சபீனா
12. சந்திரா மனமாற்றம்
13. அதிசிய ரேடியோகிராம், அரங்கேற்றம்
14. எஸ்.ஐ.இ.டி. அனுபவங்கள்
15. நாத்தனாராக மாறிய மன்னி
16. திருமணம், போபால் வாழ்க்கை
17. தொடங்கியது எழுத்துப் பயணம்
18. வங்கி அனுபவங்கள்
19. முதல் நாவல்
20. விழிப்பைத் தந்த விழுப்புரம்
21. குழந்தைகள் வருகை, சிநேகிதி பிருந்தா
22. சந்திரா காட்டிய பாதை
***
லலிதா - நான்
மீனாட்சி - நான்
1. முன்னோர்கள்
1986-ல் அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அயோவாசிட்டியில் நடந்த சர்வதேச எழுத்தாளர்கள் முகாமில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மூன்று மாதங்கள் நடந்த அந்த முகாமில், 21 நாடுகளைச் சேர்ந்த 21 எழுத்தாளர்கள் பங்கேற்றார்கள். நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்து பல விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொண்டது ரொம்பவும் அற்புதமான அனுபவம். நிறைய எழுத்தாளர்களை அழைத்து வந்து எங்களைச் சந்திக்க வைத்தார்கள். அந்த முகாமில் ஒருமுறை அலெக்ஸ் ஹேய்லி என்கிற பிளாக் அமெரிக்கன் எழுத்தாளரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அவர் எழுதின 'ரூட்ஸ்' (வேர்கள்) என்கிற புத்தகம், உலக அளவில் பிரசித்தமாகிப் பாராட்டுப் பெற்றது.
கறுப்பு அமெரிக்க இளைஞர் ஒருவர் (அலெக்ஸ் ஹேய்லி தன்னையேதான் அப்படிச் சொல்லிக் கொள்கிறார்) தன்னுடைய மூதாதையர்கள் யார் என்று தேடிக்கொண்டு போகும் ஒரு தேடல்தான் அந்தக் கதை. அந்தப் புத்தகத்தை நான் அவரைச் சந்திப்பதற்கு முன்பே படித்திருந்ததால், அவரைச் சந்தித்தபோது அதைப் பற்றி ரொம்பவும் பாராட்டிப் பேசினேன். அப்போது அலெக்ஸ் ஹேய்லி சொன்ன வார்த்தைகள் இப்போதும் எனக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
"அமெரிக்காவிலிருந்த வெள்ளையர்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்து, அங்கே வேலை பார்த்திட்டிருந்த என்னுடைய மூதாதையர்கள் உள்ளிட்ட பலருக்கும் மயக்க மருந்து கொடுத்தோ, தலையில அடிச்சோ அவங்களை நினைவிழக்கச் செய்து, இழுத்துட்டுப் போய், அவங்க கையைக் காலைக் கட்டிப்போட்டு, மனிதத்தன்மையே இல்லாம, கப்பல்ல விறகுகளை அடுக்கறது போல அடுக்கி அமெரிக்காவுக்குக் கொண்டு போய் இறக்கினாங்க. அவங்களுக்குக் குடும்ப உறவு வரக்கூடாது, பந்தபாசம் வரக்கூடாதுங்கறதுக்காக மனைவியை ஒரு ஏலத்துலயும், கணவனை ஒரு ஏலத்துலயும், குழந்தைகளை ஒரு ஏலத்துலயும்னு வெவ்வேற ஏலத்துல போட்டு அவங்களைப் பிரிச்சிட்டாங்க. அப்படித்தான் எல்லோருக்கும் நடந்தது. நீங்க நம்பமாட்டீங்க, பலரும் எங்க அப்பா யாரு, தாத்தா யாரு, அம்மா யாருனு தெரியாமலேயே வளர்ந்தோம். இது என்னை ரொம்பவும் பாதிச்சது. என்னுடைய வேர்கள் என்ன? என்னுடைய தாத்தாவுக்கு தாத்தா யாரு, பாட்டியோட பாட்டி யாருன்னு எங்க மூதாதையர்களைப் பத்தி ஒரு தவிப்போடு நான் தேடின தேடல்தான் ரூட்ஸ் என்று சொன்ன அலெக்ஸ் ஹேய்லி தொடர்ந்து என்ன சொன்னார் தெரியுமா?
"சிவசங்கரி! எழுத்தாளர்களான நமக்கு ஒரு பொறுப்பு இருக்கு. நம்முடைய இளைய தலைமுறையினர் அவங்களோட மூதாதையர்களைப் பத்தியெல்லாம் தெரிஞ்சுக்காம இருக்காங்க. அது தவறு. நாம பட்ட வலியை, வேதனையை அவங்களுக்கு எடுத்துச் சொல்லணும். நாம அனுபவிச்ச கஷ்டம் அவங்க அனுபவிக்கக் கூடாது. அவங்க தாத்தா பாட்டி, அந்தத் தாத்தா பாட்டியோட தாத்தா பாட்டி பற்றியெல்லாம் அவங்க தெரிஞ்சுக்கணும். 'உங்க தாத்தா பாட்டிகளை அடிக்கடி போய்ப் பாருங்க. அவங்களுக்கு மரியாதை கொடுங்க. நான் உங்களை நேசிக்கறேன்னு சொல்லுங்க. அவங்களைக் கட்டி அணைச்சுக்கோங்க. உங்ககிட்டேயிருந்து வந்த மரபணுக்களுக்காக (ஜீன்) நன்றினு சொல்லுங்க'னு நாம அவங்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும்.
ஒரு பையன் மிகச் சிறந்த பாடகனா, கிடார் பிளேயரா இருக்கலாம். ஓட்டப் பந்தய வீரனா இருக்கலாம். அவன் குடும்பத்துல அம்மாவோ, அப்பாவோ, பாட்டியோ, தாத்தாவோ இசையிலோ, விளையாட்டிலோ ஆர்வமில்லாதவங்களாக இருக்கலாம். ஆனா, அவனோட மூணாவது தலைமுறையைச் சேர்ந்த ஒரு தாத்தா இசைக் கலைஞரா இருந்திருக்கலாம். அந்தத் தாத்தாகிட்டேயிருந்து மரபணு அந்தப் பையனுக்கும் வந்திருக்கலாம். உங்களோட திறமையும், அழகும் நேரடியா உங்க அப்பா அம்மாகிட்ட இருந்துதான் வரணும்கிறது கிடையாது. ரெண்டு தலைமுறை, மூணு தலைமுறைக்கு முந்தி இருந்தவங்ககிட்டே இருந்துகூட வரலாம். அதையெல்லாம் இளைய தலைமுறைக்குப் புரியவைக்கணும். இந்தப் பொறுப்பு நமக்கு இருக்கு. நீங்களும் இந்தியா போனதும், உங்க நாட்டு இளைய தலைமுறைக்கு இதைப் புரியவையுங்க, ஒரு விழிப்புணர்வைக் கொடுங்க என்று அவர் சொன்னபோது நான் நெகிழ்ந்து போய்விட்டேன். கூடவே, நம் மூதாதையர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள நாம் முயற்சி செய்யவில்லையே என்று ரொம்பவும் வருத்தப்பட்டேன். வெட்கப்பட்டேன்.
அலெக்ஸ் ஹேய்லி அனுபவித்த வலி, வேதனை, அவமானங்கள், பரிதவிப்பு... இவற்றையெல்லாம் நாம் அனுபவித்ததில்லை. நாமெல்லாம் நிழலிலேயே இருந்துவிட்டோம். வெயிலில் இருந்தால்தான் நிழலின் அருமை தெரியும். நாம் அதைப் போன்ற மண்டையைத் துளைக்கிற வெயிலில் இருந்ததில்லை. அதனால் நம் மூதாதையர்களின் அருமை நமக்குத் தெரியவில்லை. நம் அருகிலேயே இருக்கிற தாத்தா-பாட்டியை நாம் கண்டுகொள்வதே இல்லை. அவர்களுக்கு ஒரு மரியாதையை நாம் கொடுப்பதே இல்லை. இந்த விழிப்புணர்வு வந்தப்போது, 'ஆஹா... எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம்' என்று நான் ரொம்பவே தவித்துப் போனேன். நம் மூதாதையர்களைப் பற்றி இத்தனை நாள் தெரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டோமே என்கிற தவிப்போடுதான் இந்தியாவுக்குத் திரும்பி வந்தேன்.
1970-களின் இறுதியிலும், 1980-களின் ஆரம்பத்திலும் மிகப் பெரிய ஆய்வு செய்து நான் எழுதின புத்தகம் 'பாலங்கள்'. அதை உங்களில் பலர் படித்திருக்கலாம். அதில் முதல் தலைமுறையைப் பற்றி, மின்சாரம் இல்லாத நாட்களில், கூட்டுக் குடும்பமாக இருந்த நாட்களில் எப்படியெல்லாம் வாழ்க்கை முறை இருந்தது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக தஞ்சாவூர் பக்கத்தில் இருக்கிற சாத்தனூர் என்கிற கிராமத்தில் இருந்த பெரிய அத்தை மற்றும் பெரியவர்களையெல்லாம் போய்ப் பார்த்து, அவர்களிடம் மாதக் கணக்கில், வருஷக்கணக்கில் பேசி, ஒவ்வொரு விஷயமாக, அந்தந்த குடும்பச் சூழல்களைப் பற்றித் தெரிந்துகொண்டு வந்து 'பாலங்கள்' நாவலை எழுதினேன்.
ஒரு கதைக்காக இத்தனை மெனக்கெட்ட நான், அவர்களெல்லாம் உயிரோடு இருந்தபோதே என் மூதாதையர்களைப் பற்றி அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கலாமே? ஆனால், கேட்கவில்லையே. எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன். அதைப் பற்றின விழிப்புணர்வு வந்து நான் தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டபோது, எங்கள் வீட்டில் பெரியவர்கள் பலர் இல்லை. எல்லோருமே காலமாகிவிட்டார்கள். நான் யாரைப் போய்க் கேட்பது? அப்பாவின் அப்பாவைப் பற்றித் தெரியும். ஆனால், எங்கள் தாத்தாவின் அப்பாவைப் பற்றித் தெரியாது. அந்தப் பாட்டி பற்றித் தெரியவில்லை.
பேச்சுவாக்கில், ஒரே ஒரு முக்கியமான சம்பவம் பற்றி மட்டும் எனக்குத் தெரியவந்தது. எங்கள் குடும்பத்தில் நான்கு தலைமுறைக்கு முன்னே நடந்த சம்பவம் அது. நாங்கள் எல்லோரும் குழந்தைகளாக இருந்தபோது, அம்மாவும், சித்திகளும் ஒவ்வொரு வருஷமும் எங்கள் வீட்டில் ரொம்பவும் பய பக்தியுடன் ஒரு பூஜை செய்வார்கள். அதை 'பச்சை படைக்கிறது' என்று சொல்வார்கள். குளித்துவிட்டு ஈரத் துணியோடு, மடி ஆசாரத்தோடு உக்கிர காளிக்கும், மாரியம்மனுக்கும் செய்யும் பூஜை அது. அந்தப் பூஜை எங்கள் குடும்பத்தில் பழக்கத்துக்கு வர ஒரு சம்பவம்தான் காரணம். நான்கு தலைமுறைக்கு முந்தைய சம்பவம் அது. அதுபற்றி அம்மா, சித்திகளிடம் கேட்டபோது அவர்கள் சொன்ன தகவல்கள், எங்கள் குடும்பத்தின் முந்தின நான்காவது தலைமுறையைப் பற்றி ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமைந்தது.
எங்கள் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த தாத்தாவின் பெயர், காளஹஸ்தி. அவர் ஓர் அஷ்டாவதானி. அதாவது, இசை, வானசாஸ்திரம், கணக்கு, ஜோதிடம், அறிவியல் என்று எட்டு விதமான சப்ஜெக்ட்டுகளைப் பற்றியும் எட்டுப் பேர் சுற்றிலும் உட்கார்ந்துகொண்டு ஒரே நேரத்தில் கேள்விகள் கேட்பார்கள். அந்த எட்டுப் பேர் கேட்கும் கேள்விகளுக்கும் அதே வரிசையில் பதில் சொல்லக்கூடிய திறமை வாய்ந்தவராக இருந்தார் காளஹஸ்தி தாத்தா. தாத்தா அஷ்டாவதானியாக இருந்த காரணத்தால், மலையாள பிரதேசத்தில் கல்பாத்தி என்கிற கிராமத்தில் இருந்த சிற்றரசரின் சமஸ்தானத்தில் திவானாக இருந்தார். அங்கே தாத்தா ரொம்பவும் வசதியாக இருந்தார். அவரும், அவரது மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டு இருந்தனர். ஆனால், ஒரு விஷயம் மட்டும் சரியாக இல்லை.
தாத்தா, அந்த சமஸ்தானத்து சிற்றரசருக்கு நெருக்கமானவராக இருந்ததால், பிரபலமானவராக இருந்தார். அவரது பிரபல்யத்தைப் பிடிக்காத சிலர், பொறாமையால் அவருக்குக் கெடுதல் செய்துகொண்டே இருந்தார்கள். எப்படித் தெரியுமா?
ஒவ்வொரு முறை பாட்டி கர்ப்பமாகும்போதும் அதைக் கலைத்தார்கள். எப்படிக் கலைத்தார்கள்? அந்தக் கால வழக்கப்படி பெண்கள் வீட்டு விலக்காகும்போது வீட்டுக்குள் இருக்கமாட்டார்கள். வீட்டிற்கு வெளியே ஒரு கொட்டகையிலோ, மறைவிடத்திலோ தனியாக இருப்பார்கள். அவங்களுக்கென்று தனிச் சொம்பு, சாப்பிடத் தட்டு, துணிமணிகள் கொடுத்துவிடுவார்கள். வீட்டில் இருக்கும் வேறு யாரும் அவர்களது குரலைக் கேட்கக்கூடாது; அவர்களைப் பார்க்கக் கூடாது. வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டது போக மிச்சம் மீதி இருப்பதை, அவர்களுக்கு கொடுப்பார்கள். இப்படி ஒவ்வொரு மாதமும் பாட்டி சொம்பை எடுத்துக்கொண்டு போய் கொட்டகைக்குள் உட்காரும்போது, அவருக்குத் தீட்டு வந்துவிட்டதை ஊர் ஜனங்கள் புரிந்துகொள்வார்கள். ஒரு மாசம் எங்கள் பாட்டி சொம்பை எடுத்துக்கொண்டுபோய் தனி அறைக்குள் உட்காரவில்லையென்றால் அவர் கர்ப்பம் என்பதைப் புரிந்துகொண்டு, ஒரு வாரம், பத்து நாளைக்குள்ளாக பில்லி சூன்யம், மந்திரம், மாயம் என்று ஏதோ செய்து அந்தக் கருவைக் கலைத்துவிடுவார்கள். இப்படி மூன்று முறை பாட்டிக்கு அபார்ஷன் ஆனது.
ஆரம்பத்தில் தாத்தாவுக்கு இது புரியவில்லை. ஆனால், வெளியில் இதுபற்றிச் சிலர் கசமுசாவென்று பேசிக்கொண்டது தாத்தாவின் காதுகளுக்கு வந்தது. அதனால், அந்த முறை பாட்டிக்கு மாதாந்திரத் தீட்டு தவறிப்போனபோது தாத்தா ஒரு ஐடியா செய்தார். பாட்டி கையில் சொம்பைக் கொடுத்து, கொட்டகைக்குள் ஒதுங்கியிருக்கச் சொன்னார். இப்படி இரண்டு மாசம், தீட்டு ஆகாமலேயே தீட்டு ஆனதைப் போல பாட்டி தனியாக ஒதுங்கியிருந்தார். மூன்றாவது மாசம் முடிந்தபிறகு, அது நிச்சயம் கர்ப்பம்தான் என்பது உறுதியானவுடன், இந்தக் குழந்தையை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து, வீடு வாசல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கொஞ்சம் தங்கக் காசுகளை மட்டும் ஒரு தவிட்டுப் பானையில் போட்டு எடுத்துக்கொண்டு இரவோடு இரவாக தாத்தாவும் பாட்டியும் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஊரைவிட்டுக் கிளம்பினார்கள்.
யார் கண்ணிலும் படாமல் இரவு முழுவதும் நடந்தே செல்பவர்கள், விடிந்ததும் அந்தந்த ஊரில் இருக்கும் மாரியம்மன் கோயிலிலோ, காளியம்மன் கோயிலிலோ போய் தங்குவார்களாம். ஏன் அங்கே தங்கினார்கள் என்றால், எங்களைச் சார்ந்தவர்கள் யாரும் அதுமாதிரி கோயில்களுக்குப் போகமாட்டார்கள் என்பதால் அங்கெல்லாம் யாரும் இவர்களைத் தேடிக்கொண்டு வர மாட்டார்கள் என்கிற நம்பிக்கைதான். இப்படி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மறைந்து மறைந்து நடந்தே பயணம் செய்து, எப்படியோ பத்திரமாக மதுரையை அடைந்தார்கள். மதுரையில் எங்கள் பாட்டிக்கு நல்லபடியாகக் குழந்தை பிறந்தது. தங்களது கஷ்ட காலத்தில் ஆதரவு தந்த மாரியம்மனுக்கும், காளியம்மனுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, எங்கள் சமூகத்திலேயே இல்லாத பழக்கமாக தாத்தா 'பச்சை படைக்கிறது' என்கிற ஒரு பூஜையை ஆரம்பித்தார்.
இப்படி… காளஹஸ்தி தாத்தா ஆரம்பித்து வைத்த 'பச்சை படைக்கிற' பூஜையைத் தலைமுறைகளைக் கடந்து என் அம்மாவும், சித்திகளும் செய்து வரும் விவரத்தை நான் தெரிந்துகொண்டேன். 'பச்சை படைக்கிற' பூஜையில் மாரியம்மனுக்கும், காளியம்மனுக்கும் நைவேத்தியமாக சாப்பாட்டுப் பொருள்களுடன் சுருட்டு, சாராயம் போன்ற பல பொருட்களையும் வைப்பார்கள். எங்கள் வீட்டுப் பெரியவர்கள் யாரும் சுருட்டெல்லாம் புகைத்து நாங்கள் பார்த்ததில்லை. அதனால் எங்களுக்கு சுருட்டு, சாராயம் வைத்து பூஜை செய்யும்போது ஆச்சர்யமாயிருக்கும்.
காளஹஸ்தி தாத்தா பத்தின விவரங்களைச் சொல்றியே, அவங்களுக்கு அப்புறம் இருந்த மூணாவது தலைமுறையைச் சேர்ந்தவர்களைப் பத்தி, ரெண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர்களைப் பத்தின தகவல்களைச் சொல்லேன் என்று ஒருமுறை அம்மாவிடம் கேட்டபோது,
அவாளைப் பத்தியெல்லாம் எங்களுக்குத் தெரியாதே என்று சொன்னார். அப்போதுதான் நான் நினைத்துக்கொண்டேன், அப்பா உயிருடன் இருந்திருந்தால் அந்த விவரங்களைக் கேட்டிருக்கலாமே என்று.
ஆனால், சுப்பு சுவாமி தாத்தாவைப் பற்றி ஓரளவுக்கு அப்பா எனக்குச் சொல்லியிருக்கிறார்.
அப்பாவின் அப்பா (அதாவது எங்கள் தாத்தா) பெயர் சுப்பு சுவாமி. அம்மா (எங்கள் பாட்டி) பெயர் சங்கரி. எங்கள் குடும்பத்து பேரக் குழந்தைகளுக்குள் பாட்டியின் பெயரை வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததால், சங்கரி என்கிற பெயர் நிறைய இருக்கும். பாலா சங்கரி, சேது சங்கரி, சாந்தா சங்கரி, சிவசங்கரி... இப்படி.... சங்கரி என்கிற பெயரில் நிறையப் பேர் இருக்கிறார்கள்.
சுப்பு சுவாமி தாத்தா, அந்தக் காலத்திலேயே பி.ஏ. படித்தவர். பிரிட்டிஷ் இந்தியா கம்பெனியில் வேலை பார்த்தார். கல்வித் துறையிலும், தொழில் துறையிலும் நல்ல தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்ததால் அவருக்கு நிறைய டிமாண்ட் இருந்தது. தாத்தாவுக்கு சின்ன வயசிலேயே கல்யாணம் ஆகிவிட்டது. அவர் பி.ஏ. படித்து வேலையில் அமர்ந்தபோது நான்கு குழந்தைகள் பிறந்துவிட்டார்கள். மூத்த மகனுக்கு (என் பெரிய பெரியப்பா) காளஹஸ்தி தாத்தாவின் நினைவாக, காளஹஸ்தி என்ற பெயரை வைத்தார்கள். என் பெரிய அத்தை மீனாட்சி. அவருக்கு அடுத்தவர், சின்ன அத்தை சுப்புலட்சுமி. பிறகு, சின்ன பெரியப்பா கல்யாணசுந்தரம். இப்படி நான்கு குழந்தைகள் பிறந்த பிறகு சங்கரி பாட்டி, ஐந்தாவதாக கர்ப்பமானார். அப்போது அவருக்கு பதினெட்டோ, பத்தொன்பதோ வயதுதான். தாத்தாவுக்கு இருபத்தியேழு, இருபத்தியெட்டு இருந்திருக்கும்.
மின்சாரம் இல்லாத காலம் அது. ஒருநாள் சங்கரி பாட்டி, இரவு உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று 'சங்கரீ' என்று அவரது மாமியார் கூப்பிட்டதுபோல கேட்கவே, 'இதோ வந்துட்டேன்மா' என்று திடுதிப்பென்று படுக்கையிலிருந்து எழுந்து கதவைத் திறந்துக்கொண்டு மூன்று நான்கு கட்டுகளைக் கடந்து நேராக புழக்கடைப் பக்கம் போய், அந்தக் கதவையும் திறந்து அங்கிருந்த கிணற்றுக்கு அருகில் போய் நின்றாராம். சுற்றிலும் 'கும்'மென்ற இருட்டு. பக்கத்தில் யாருமே இல்லை. தனிமை. இதெல்லாம் பார்த்து பாட்டிக்கு மனசுக்குள் 'திக்'கென்று ஆகிவிட்டது. அந்தச் சமயத்தில் பாட்டியை பேய் பிடித்துவிட்டது என்று சொன்னார்கள்.
இது எப்படி எல்லோருக்கும் தெரியவந்தது என்றால், நாட்கள் போகப் போக பாட்டியின் நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிய ஆரம்பித்ததாம். பாட்டி பள்ளிக்கூடம் போகாதவர். ஆனால், பேய் பிடித்த பிறகு நிறைய ஸ்லோகங்கள், செய்யுள்கள், சம்ஸ்க்ருத பாட்டுகள் எல்லாம் பாடுவாராம். பத்து பேர் சாப்பிடும் சாப்பாட்டை அப்படியே குவித்து வைத்துக்கொண்டு சாப்பிடுவாராம். தரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டே இருப்பவர், திடீரென்று, பரண் மேல் ஏறி உட்கார்ந்து ஆம்பிளைத்தனமான குரலில் கடகடவென்று சிரிப்பாராம். இதையெல்லாம் பார்த்தவர்கள், 'ஐயோ! வாழ வேண்டிய பொண்ணுக்கு இப்படி ஆகிவிட்டதே!' என்று வருத்தப்பட்டார்களாம். குணசீலம் என்கிற ஊருக்கு அவரை அழைத்துக்கொண்டு போய் பேயை ஓட்டினால் நல்ல பலன் கிடைக்கும் என்று பலரும் சொல்லவே, சுப்பு சுவாமி தாத்தா, பாட்டியை அழைத்துக்கொண்டு குணசீலம் போயிருக்கிறார். அங்கே பாட்டியை உட்கார வைத்து பூஜை செய்தபோதுதான், அவர் மீது பிடித்திருந்த பேய் பற்றின விவரங்கள் தெரியவந்ததாம்.
பூஜை செய்த பூசாரி, பாட்டியைப் பிடித்திருந்த