Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Suriya Vamsam - Part 2
Suriya Vamsam - Part 2
Suriya Vamsam - Part 2
Ebook538 pages4 hours

Suriya Vamsam - Part 2

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

என்னுடைய வாழ்க்கையில் நடந்த, என்னைச் சிலிர்க்க வைத்த, என்னை நெகிழ வைத்த, என்னை அழவைத்த, என்னை அதிர வைத்த, என்னைக் கோபப்பட வைத்த, என்னைச் சிந்திக்க வைத்த, முக்கியமாக, எனக்கு ஒரு விழிப்புணர்வைத் தந்த பல விஷயங்களைப் பற்றி, மனிதர்களைப் பற்றி, சம்பவங்களைப் பற்றி இந்தப் புத்தகம் மூலமாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். கண்டிப்பாக, என்னுடைய நினைவலைகள் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்குள் தோன்றின விழிப்புணர்வுகளை உங்களுக்குள்ளும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது சரி, அதென்ன ‘சூரிய வம்சம்’ என்று நீங்கள் கேட்கலாம். தொடர்ந்து படியுங்கள், உங்களுக்கே புரியும்.

சிவசங்கரி

Languageதமிழ்
Release dateAug 3, 2020
ISBN6580101805769
Suriya Vamsam - Part 2

Read more from Sivasankari

Related to Suriya Vamsam - Part 2

Related ebooks

Reviews for Suriya Vamsam - Part 2

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Suriya Vamsam - Part 2 - Sivasankari

    http://www.pustaka.co.in

    சூரிய வம்சம்

    (நினைவலைகள்)

    பகுதி - 2

    Suriya Vamsam

    (Ninaivalaigal)

    Part - 2

    Author:

    சிவசங்கரி

    பதிவு - எழுத்து: ஜி. மீனாட்சி

    Sivasankari

    Transcriber: G. Meenakshi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    வணக்கம். 'சூரிய வம்சம்'. இது என்ன சரித்திரக் கதையா? என்று உங்களில் சிலர் நினைக்கலாம். ம்ஹூம், இல்லை. சமூகப் பார்வை கொண்ட கதையா? நாவலா? இல்லை, அதுவும் இல்லை. பயணக் கதையா? இல்லவே இல்லை. பிறகு இது என்ன? சொல்கிறேன். முதலில் இந்த 'சூரிய வம்சம்' என்கிற தொடரை எழுதுவதற்குக் காரணமாக இருந்த இரண்டு நபர்களைப் பற்றி முதலில் உங்களிடம் சொல்லியே ஆகவேண்டும்.

    முதல் நபர் – லலிதா. என்னைத் தெரிந்தவர்களுக்கெல்லாம் லலிதாவைப் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். என்னுடனேயே நிழல்போல கிட்டத்தட்ட 41 வருடங்கள் அவள் வாழ்ந்திருந்தாள். நான் விழுப்புரத்தில் வசித்தபோது, ஒரு சாதாரண வாசகியாக, கல்லூரி மாணவியாக எனக்கு அவள் அறிமுகமானாள். 'உங்க எழுத்துக்கள் என்னை ரொம்பவும் வசீகரிச்சிருக்கு. உங்களை அம்மானுதான் கூப்பிடுவேன்' என்று சொன்னாள். ஆனால், நான் அவளிடம், நான் உனக்கு அம்மா இல்ல லலிதா. உனக்குனு அம்மா இருக்காங்க. உன்னை என்னோட ரசிகையா ஏத்துக்கறேன். நீ என்னோட நல்ல வாசகி என்று சொல்லுவேன். அவள் என்னை 'அம்மா' என்று கூப்பிடுவதால், அவளைப் பெற்ற அம்மாவை நான் புண்படுத்திவிடுவேனோ என்ற ஜாக்கிரதை உணர்வில் நான் அவளது அன்பை ஏற்காமலேயே இருந்தேன்.

    ஆனால், அவளது அன்பு மிகத் தீவிரமான அன்பு. Unconditional Love என்று சொல்லுவார்களே, அதைப்போல எதையும் எதிர்பார்க்காத அன்பு. பிடிவாதத்தோடு அவள், நீங்கதான் என் அம்மா என்று சொல்லி என்னை அப்படியே கூப்பிட்டும் வந்தாள். பத்து வருஷங்கள் நான் அவளை ஒரு தோழியாகத்தான் நினைத்துப் பழகி வந்தேன்.

    என் கணவர் சந்திரசேகர் - சந்திரா - இறந்தபோது, எனக்குள் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. எங்கள் சமூகத்தில் மகள் வந்து சடலத்தைக் குளிப்பாட்ட வேண்டும் என்கிற பழக்கம் இருந்தது. எனக்குக் குழந்தைகள் கிடையாது. அதனால், யார் அவரைக் குளிப்பாட்டப் போகிறார்கள் என்று அங்கு நின்று கொண்டிருந்த 100-க்கும் மேற்பட்ட ஜனங்கள் எல்லோரும் யோசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, அங்கே இருந்த லலிதா, சட்டென்று போய் குளித்துவிட்டு வந்து அந்த ஈரத்துடனேயே, குடத்தில் ஜலம் கொண்டு வந்து என் கணவரைக் குளிப்பாட்டினாள். அந்த இடத்தில் அவளது பெற்றோரும் நின்று கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லோருமே நெகிழ்ந்துதான் போனார்கள், என்ன மாதிரியான அன்பு இது என்று! அந்தக் கணத்தில் இருந்து நான் மனப்பூர்வமாக அவளை என் மகளாக ஏற்றுக் கொண்டேன்.

    லலிதா எனக்கு ஒரு மிகச் சிறந்த செகரட்டரியாக இருந்தாள். என்னுடைய எழுத்துக்களை கம்ப்யூட்டரில் அழகாக டைப் செய்து தருவாள். அவளுக்கும் இலக்கியத்தில் நல்ல ஆர்வம் இருந்தது. அதனால், நான் சொல்வதையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு நான் நினைப்பது போலவே நேர்த்தியாகச் செய்து முடிப்பாள். அதுமட்டுமல்லாமல், எனக்கு ஒரு நல்ல கம்பானியனாகவும் (Companian) இருந்திருக்கிறாள். என்னுடன் கடைகளுக்கு, சினிமாவுக்கு, கோயிலுக்கு, கல்யாணங்களுக்கு, கூட்டங்களுக்கு, நண்பர்கள் இல்லங்களுக்கு என்று பல இடங்களுக்கும் வந்திருக்கிறாள். எல்லா விஷயங்களையும் ரசிக்கக்கூடிய நல்ல மனசு அவளுக்கு இருந்தது. மனசுவிட்டு நான் சில பிரச்னைகளையெல்லாம் விவாதிக்கக்கூடிய ஒரு நல்ல தோழியாக அவள் இருந்தாள். ஆக, செகரட்டரி, கம்பானியன், ஃப்ரெண்ட், மகள் என்று எல்லாமே ஒன்று சேர்ந்து உருவானவள்தான் லலிதா.

    என்னுடைய முதல் வாசகி என்பதில் அவளுக்கு மிகப் பெரிய பெருமிதம் உண்டு. அம்மா உங்க எழுத்தை முதல் முதல்ல படிக்கிற வாய்ப்பு எனக்குத்தானே கிடைச்சிருக்கு பார்த்தீங்களானு சந்தோஷப்படுவாள். அப்படிப்பட்ட லலிதாவுக்கு ஒரு ஆசை இருந்தது. அவள் சில வருடங்களாக, அம்மா, நீங்க சுயசரிதை எழுதணும். உங்க அனுபவங்கள் என்னை மாதிரி பலருக்கும் பல விஷயங்களில் விழிப்புணர்வைத் தரும் என்று அடிக்கடி என்னிடம் கேட்டுக்கொண்டே இருந்தாள். சுயசரிதை எழுதறதுங்கறது விளையாட்டில்ல லலிதா. அதுல சத்தியம் இருக்கணும். உண்மை இருக்கணும். நடந்ததை நடந்தபடி சொல்றதுதான் வாழ்க்கை வரலாறு. அந்தமாதிரி சொல்ல முற்பட்டா, பலரை நான் காயப்படுத்த வேண்டி வரலாம். சிலரது முகமூடிகளைக் கிழிக்க வேண்டி வரலாம். அது பலருக்கும் அதிர்ச்சியைத் தரலாம். யாரையுமே காயப்படுத்திட்டு ஒரு காரியம் செய்யணும்னு நினைக்கிறவ இல்ல நான். ஒருத்தருடைய காலை மிதிச்சிட்டு நடக்கணும்னு நினைக்கிறவ இல்ல... அதனால சுயசரிதை எழுத முடியாது லலிதா என்று நான் சொன்னபோது, அவளுக்கு வருத்தம்.

    சரி. சுயசரிதை எழுதாட்டா பரவாயில்லை. உங்க வாழ்க்கையில நடந்த பல சம்பவங்களைப் பற்றிய நினைவலைகளையாவது (Memoirs) எழுதலாமே அம்மா. அதுல வரிசைக்கிரமமாகப் போகவேண்டியதில்லையே. உங்களுக்கு எது சொல்லணும்னு தோணுதோ அதை மட்டுமே சொல்லலாமே. உங்களோட நிறைய அனுபவங்களைப் படிக்கறவங்க அதன் மூலமா விழிப்புணர்வு பெற முடியுமே என்று கேட்டாள். பார்க்கலாம் லலிதா என்று நானும் பிடிகொடுக்காமலே இருந்துவிட்டேன்.

    அப்படிப்பட்ட லலிதாவுக்கு 2017-ம் வருஷம் ஃபோர்த் ஸ்டேஜ் கேன்சர், அதாவது, முற்றின புற்றுநோய் என்று டாக்டர்கள் சொன்னபோது நாங்கள் அதிர்ந்துதான் போனோம். உணவுக் குழாயில் வந்த புற்றுநோய் ஈரலுக்குப் பரவிவிட்டது. யாருமே எதிர்பார்க்காத பேரிடி அது. காரணம், லலிதா எப்போதுமே சுறுசுறுப்பாக, ஆரோக்கியமாக இருப்பவள். எனக்குத் தேவையான வேலைகளையெல்லாம் செய்துகொடுத்துட்டு ராத்திரி பத்து மணிக்குக்கூட ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு தன் வீட்டுக்குப் போய்விட்டு, மறுநாள் திரும்பி வந்துவிடுவாள். அப்படிப்பட்ட லலிதாவுக்கா கேன்சர்? என்னால் நம்பவே முடியவில்லை. என்னைப் போன்ற எழுத்தாளர்கள் கதைகளில் எழுதுவோமே, 'விஷயத்தைக் கேட்டு உடைஞ்சு போயிட்டேன். இடிஞ்சு போயிட்டேன்' என்று… அப்படிப்பட்ட ஓர் உணர்வுதான் எனக்குள்ளேயும் ஏற்பட்டது.

    ஆபரேஷன், கீமோதெரபி, ரேடியேஷன் என்று ஒன்று பாக்கியில்லாமல், அந்தப் பெண் அனுபவித்த வேதனைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அப்போதும், சிரித்த முகத்தோடு என்னைப் பார்த்து, எனக்கு சரியாயிடும்மா. திரும்பவும் நான் வந்துடுவேன்மா. நீங்க உயிரோட இருக்கற வரைக்கும் நானும் இருப்பேன்மா. நான் கடவுள்கிட்ட என்ன வேண்டிக்கிறேன் தெரியுமா? உங்களை அனுப்பிச்சுட்டு மறு நாளே நான் வந்து சேர்ந்துடறேன்னுதான் என்று மிகவும் நம்பிக்கையோடு சொல்வாள்.

    ஆனால், அவ இருக்கப்போற நாட்கள் கொஞ்சம்தான். நீங்க என்ன ஏற்பாடு பண்ணணுமோ பண்ணிடுங்க என்று டாக்டர்கள் சொன்னபோது, இடிந்து போனேன். கேன்சர் முத்திப்போய், 2018-ஆம் வருஷம் பிப்ரவரி 9-ஆம் தேதி லலிதா காலமானாள். இப்போது அவள் இல்லாத இந்த ஆறு மாத காலமாக, அவள் கேட்டது எனக்குள் சுழன்றுகொண்டே இருக்கிறது. 'மெமோயர்ஸ் எழுதுங்கள்' என்று அவள் ஆசையாகக் கேட்டதை, அவளது கடைசி ஆசையை நான் நிறைவேற்ற வேண்டாமா? என்று நினைத்துக் கொண்டு இருந்தபோதுதான், இந்தத் தொடரை நான் எழுதுவதற்கு இரண்டாவது காரணமான மீனாட்சி, மங்கையர் மலரின் பொறுப்பாசிரியர், என் வாழ்க்கைக்குள் வந்தார். என்னைப் பார்க்கும்போதெல்லாம் மீனாட்சி, மேடம், மங்கையர் மலருக்கு என்ன எழுதப் போறீங்க? லலிதா மேடம் ஆசைப்பட்ட மாதிரி உங்களோட நினைவலைகளை எங்க பத்திரிகையில எழுதலாமே என்று கேட்பார்.

    எனக்கு தமிழில் டைப் அடிக்கத் தெரியாது. எதையும் கைப்பட எழுதுவதுதான் வழக்கம். லலிதா உயிரோடு இருந்தவரை, நான் எழுதிக் கொடுப்பதை அப்படியே டைப் பண்ணி தந்துவிடுவாள். ஸ்பீடாக எழுதுவதால் சில நேரங்களில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பது எனக்கே புரியாது. லலிதாவுக்குத்தான் என்னுடைய கையெழுத்து புரியும். இந்த நிலையில, நான் எப்படி எழுத முடியும் என்று தயங்கினேன். அப்போது மீனாட்சி ஒரு ஐடியா சொன்னார். நீங்க எனக்குப் பேட்டி கொடுக்கறது போலவே பேசிடுங்க மேடம். நான் அதைக் கேட்டு, ரெகார்ட் பண்ணிட்டு போய் எழுதிட்டு வந்துடுறேன். அதுல ஏதாவது மாற்றம் செய்யணும்னா நீங்க திருத்தித் தந்துடுங்க மேடம் என்று சொன்னார். என் மனசுக்கும் அது சரி என்று பட்டது. லலிதாவின் ஆசைப்படியும், மீனாட்சியின் தூண்டுதல்படியும், என் மேல் அன்பு கொண்டு தொலைபேசி மூலமும், கடிதங்கள் மூலமும், எப்ப மறுபடியும் எழுதப் போறீங்க? என்று அடிக்கடி ஆர்வமாகக் கேட்கிற என்னுடைய பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்குக் கொடுக்கும் மரியாதையாகவும் நான் இந்த நினைவலைகளை எழுத முடிவு செய்தேன்.

    என்னுடைய வாழ்க்கையில் நடந்த, என்னைச் சிலிர்க்க வைத்த, என்னை நெகிழ வைத்த, என்னை அழவைத்த, என்னை அதிர வைத்த, என்னைக் கோபப்பட வைத்த, என்னைச் சிந்திக்க வைத்த, முக்கியமாக, எனக்கு ஒரு விழிப்புணர்வைத் தந்த பல விஷயங்களைப் பற்றி, மனிதர்களைப் பற்றி, சம்பவங்களைப் பற்றி இந்தப் புத்தகம் மூலமாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். கண்டிப்பாக, என்னுடைய நினைவலைகள் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன். எனக்குள் தோன்றின விழிப்புணர்வுகளை உங்களுக்குள்ளும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது சரி, அதென்ன 'சூரிய வம்சம்' என்று நீங்கள் கேட்கலாம். தொடர்ந்து படியுங்கள், உங்களுக்கே புரியும்.

    சிவசங்கரி

    சென்னை.

    அக்டோபர், 2019.

    ***

    அலைகள்

    1. குரு வந்தனம்

    2. என் செல்லங்கள்

    3. அரிய வாய்ப்புகள்

    4. சோ செய்த மாயம்

    5. என் உயிர் பிரிந்தது

    6. இதுவும் கடந்து போகும்

    7. எனக்குக் கிட்டிய கௌரவம்

    8. டானிக் மனிதர்கள்

    9. சிலீர் அனுபவங்கள்

    10. நண்பர்கள்

    11. ஜி.கே.எம்.

    12. ஐவர் படை

    13. பதினாறு வருஷ தவம்

    14. நம்பிக்கைத் துரோகம்

    15. முகமும், அகமும்

    16. சுவாமிஜி தந்த சிந்தனைகள்

    17. இரு மரணங்கள்

    18. வானப்பிரஸ்தம்

    லலிதா - நான்

    மீனாட்சி - நான்

    1. குரு வந்தனம்

    1971-ல் நாங்கள் விழுப்புரம் போனோம். 1984-ல் என் கணவர் மறைந்தபிறகு, நான் திரும்பவும் சென்னைக்குக் குடிபெயர்ந்தேன். விழுப்புரத்தில் இருந்த அந்த 13 வருஷங்களில்தான், நான் ஏற்கெனவே பல முறை சொன்னதுபோல, எனக்குள் metamorphosis நிகழ்ந்தது. metamorphosis என்பதற்கு தமிழில் பரிணாம வளர்ச்சி என்று பொருள். ஒரு அவலட்சணமான புழு கொஞ்சம் கொஞ்சமாக மாறி, மிக அழகான பட்டுப்பூச்சியாக உருமாறுவதைத்தான் பரிணாம வளர்ச்சி என்பார்கள். நான் அவலட்சணமான புழுவாக இருந்தேன் என்றும் சொல்லமாட்டேன், அழகான பட்டுப்பூச்சியாக மாறிவிட்டேன் என்றும் சொல்லமாட்டேன். ஆனால், கண்டிப்பாக எனக்குள்ளே மிகப் பெரிய பரிணாம வளர்ச்சி வந்தது அந்த 13 வருஷங்களில்தான்! அதற்காக விழுப்புரம் வாழ்க்கைக்கு எப்போதுமே நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

    அந்த 13 வருஷங்களில் என்னுடைய மிக முக்கியமான நாவல்கள் என்று கருதப்படும் பல புதினங்களை எழுதியிருக்கிறேன். திரிவேணி சங்கம், மெள்ள மெள்ள, பாலங்கள், ஏன், ஒரு மனிதனின் கதை, 47 நாட்கள் போன்றவற்றையெல்லாம் தினமணி கதிர், விகடன், மங்கை போன்ற பல பத்திரிகைகளில் எழுதினேன். வித்தியாசமான கதையம்சம், உத்தி கொண்ட (theme and craft) சிறுகதைகள், தொடர்களை அப்போதுதான் எழுதினேன்.

    மனுஷி சிவசங்கரி வளர வளர, என் சிந்தனையில் ஒரு தாக்கம் வரவர, சமுதாயப் பிரச்னைகளையும், இன்டர் பர்ஸனல் ரிலேஷன்ஷிப் என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அதாவது, மனித உறவுகளுக்குள்ளே நிலவும் மேடுபள்ளங்களையும் மிக அதிகமாக என் நாவல்களில் கையாண்டிருக்கிறேன். உதாரணமாக, 'ஏன்' என்ற நாவலை ஒரு மனோதத்துவ நிபுணரின் உதவியுடன், எழுபதுகளின் துவக்கத்திலேயே எழுதினேன். இன்றைக்கும் பல கவுன்சிலர்கள் அந்த நாவலில் குறிப்பிட்டுள்ள சில நிகழ்ச்சிகளைத் தங்களது பேச்சிற்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறார்கள் என்பதைச் சொல்ல விரும்புகிறேன். இவை நான் தேடிக்கொண்ட அறிவுதானேயல்லாமல், பிறவியிலேயே வாய்த்த அறிவு என்று சொல்லமாட்டேன். சரியான நபர்கள், சரியான விவரங்களை, சரியான நேரங்களில் எனக்குள் புகுத்தியதால், நான் அவற்றை என் கதைகளில் கொண்டுவர முடிந்தது.

    என்னிடம் பலரும் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி, 'உங்கள் நாவல்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த நாவல் எது?' என்பதுதான். பிடிக்காதது என்று எதுவுமே கிடையாது. எல்லாமே பிடித்ததுதான். எனக்குப் பிடிக்காத எதையுமே நான் செய்ததில்லை. எழுத்தாகட்டும், தனிப்பட்ட வாழ்க்கையில் செய்யும் செயல்களாகட்டும், எடுக்கும் முடிவுகளாகட்டும், எனக்குப் பிடிக்காத எதையுமே செய்ததில்லை. எனக்குப் பிடித்ததை, மனசுக்கு சரி, நியாயம் என்று பட்டவைகளை மட்டுமே செய்து வருகிறேன். எழுதி வருகிறேன்.

    பணத்துக்காகவோ, புகழுக்காகவோ நான் என்றைக்குமே எழுதியதில்லை. சரி, பிறகு எதற்காக எழுதுகிறேன்? என்றால், என் மூளையை, என் ஐம்புலன்களை பாதித்த விஷயங்களை, என்னைச் சிந்திக்க வைத்து, நான் நல்ல மனுஷியாக வளர உதவிய விஷயங்களை என்னுடைய வாசகர்களோடு உண்மைப்பூர்வமாக (Authentic) பகிர்ந்துகொள்வதுதான் என் நோக்கம்.

    நான் ஒரு அறுசுவை விருந்தை சமைத்து வைத்துவிடுகிறேன். அதைச் சாப்பிடுவதா வேண்டாமா, நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்யவேண்டும். என்றைக்குமே தீர்வு சொல்வதாக நினைத்து நான் எழுதியது கிடையாது. என்னை பாதித்த பிரச்னைகளை அலசியிருக்கிறேன் அவ்வளவுதான்!

    அந்தமாதிரி நான் எழுதிய நாவல்களிலேயே எந்தெந்தக் கதைகளுக்காக மிகவும் உழைத்தேன், அதிகம் களப்பணி (field work) செய்தேன், களப்பணியே அதிகம் செய்யாமல், ஆனாலும் பெருத்த வரவேற்பைப் பெற்ற நாவல்கள் எவை என்பதையெல்லாம் சொல்ல முடியுமே தவிர, பிடிக்கும் பிடிக்காது என்று சொல்ல முடியாது.

    'பாலங்கள்', 'மனிதனின் கதை', 'அவன்' போன்ற கதைகளுக்கெல்லாம் சில வருஷங்கள், அதாவது 3 முதல் 7 வருஷங்கள் வரை உழைத்திருக்கிறேன். 'மனிதனின் கதை'க்காக கள்ளச்சாராயம் காய்ச்சும் இடத்திற்கே போயிருக்கிறேன். 'அவன்' கதைக்காக கொடைக்கானலில் இருந்த 'ட்ரக் டென்'னுக்குப் (drug den) போயிருக்கிறேன். மாஜிக் மஷ்ரூம் எனப்படும் போதைக் காளானை வெளிநாட்டவர்கள் உட்கார்ந்து சாப்பிடும் இடத்திற்கு நான் மாறுவேஷத்தில் போய்ப் பார்த்திருக்கிறேன். இவையெல்லாம் களப்பணி செய்து, நான் அவர்களாக, அந்தக் கதாபாத்திரங்களாக மாறி எழுதியவை. கடவுள் ஆசிர்வாதத்தால் வாசகர்கள் மத்தியில் மிக நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தவை.

    ஆனால் '47 நாட்கள்' புதினத்தை, நான் முதன்முதலில் 1970-ல் அமெரிக்கா சென்றபோது எனக்குக் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் எழுதினேன். அமெரிக்க வாழ்க்கையின் வேகமும், எந்திரகதியும் என்னை பிரமிக்க வைத்தன. அங்கெல்லாம் சாலைகளில் மனிதர்களைவிட, கார்கள்தான் அதிகம். நின்று பேச யாருக்கும் நேரமிருக்காது. ஏதாவது தகவல்கள் புரியாமல் யாரிடமாவது கேட்கப் போனால், ஒருதடவைதான் சொல்வார்கள். புரியாவிட்டால், இரண்டாவது முறை மீண்டும் போய் சந்தேகம் கேட்க முடியாது. 'உனக்குப் படிக்கத் தெரியாதா? போர்டை படித்துப் பார்' என்பார்கள். அந்தமாதிரி, எல்லாமே வேகமாக நடந்த காலகட்டம் அது. படித்து நன்றாகப் புரிந்துகொள்ளும் நமக்கே இவ்வளவு தடுமாற்றம் என்றால், இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் படிக்காத பெண் ஒருத்தி வந்தால், எப்படி எல்லா விஷயத்தையும் புரிந்துகொள்வாள் என்ற சந்தேகம் வந்தது. அது எனக்குள் உண்டாக்கிய தாக்கத்தை அந்த நாவலில் பதிவு செய்திருந்தேன்.

    அத்துடன், ஏற்கெனவே அமெரிக்காவில் வெள்ளைக்கார மனைவி இருக்க, இங்கிருக்கும் பெண்ணை திருமணம் செய்து அழைத்துப்போய், 'தங்கை' என்றோ, 'வேலைக்காரி' என்றோ கூறி குடித்தனம் நடத்துபவர்கள் பற்றி இங்கேயும் அங்கேயுமாகச் சில தகவல்களை நான் கேள்விப்பட்டேன். அதையும், இதையும் இணைத்துதான் '47 நாட்கள்' நாவலை எழுதினேன். அந்த நாவலுக்குக் கிடைத்த வரவேற்பு, எதிர்பார்க்காத வரவேற்பு.

    இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். சந்துரு அண்ணா அந்த சமயத்தில் கல்கத்தாவில் ஒரு நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருந்தார். அண்ணாவின் வீட்டுக்கு என் அம்மா போயிருந்தபோது, வீட்டிற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் வந்தாராம். பேச்சுவாக்கில், என் பெண்ணுக்கு அமெரிக்காவிலிருந்து நல்ல வரன் வந்திருக்கு. ரொம்ப நல்ல பையன். நல்ல குடும்பம். பையனுக்கு நல்ல வேலை. ஆனா, கொஞ்சம் யோசிச்சிட்டிருக்கிறோம் என்றாராம். உடனே என் அம்மா, ரொம்ப நல்ல பையன், நல்ல குடும்பம்கறீங்க... கல்யாணம் பண்ண வேண்டியதுதானே என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பெண்மணி, சிவசங்கரியோட 47 நாட்கள் தொடர்கதை எப்படி முடியறதுன்னு பார்க்கப் போறோம். அதுக்கப்புறம்தான் நாங்க தீர்மானம் எடுக்கப் போறோம் என்று சொன்னாராம். அந்தப் பெண்மணிக்கு என் அம்மாதான் எழுத்தாளர் சிவசங்கரியின் அம்மா என்பது தெரியாது.

    அமெரிக்காவில் பிள்ளைகளை வைத்திருந்த சில அம்மாக்களுக்கு அப்போது என் மீது கோபம்கூட ஏற்பட்டது. இந்தியாவிலிருந்து போய் அமெரிக்காவில் வசிக்கும் எல்லா பிள்ளைகளையும் நான் குற்றம் சொல்லவில்லை. 'இப்படியும் சிலர் இருக்கிறார்கள்... கவனமாக இருங்கள்' என்று எச்சரிக்கவே அந்தக் கதையை எழுதினேன். பலரிடமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நாவல் '47 நாட்கள்'.

    விதவிதமான கருத்துக்களை, சமுதாயப் பிரச்னைகளை, மனித உறவுகளுக்கிடையேயான பிரச்னைகளை அடிப்படையாக வைத்து ஒவ்வொன்றாக நான் எழுதுவதற்கு களமமைத்துக் கொடுத்த ஆசிரியர்களை, பத்திரிகைகளை நன்றியோடு இந்தக் கட்டத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

    எனக்கு முதன்முதலாக பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தது 'கல்கி' ராஜேந்திரன் சார்தான் என்பதை ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். 1969, 1970-ஆம் ஆண்டுகள் முழுவதும் ஆனந்த விகடனில் தொடர்ந்து சிறுகதைகள், கட்டுரைகள் எழுதுவதற்குக் காரணமாக இருந்தவர் அப்போது விகடனில் பணியாற்றிக் கொண்டிருந்த மணியன் சார்தான். 'உங்களால் முடியும், உங்களால் முடியும்' என்று ஊக்குவித்தவர் அவர். அப்பா இறந்த துக்கத்தில் இருந்த என்னை, அதிலிருந்து மீளும் வகையில் வற்புறுத்தி 'எதற்காக?' என்ற தொடர்கதை எழுத வைத்ததும் மணியன் சார்தான். 'முடிஞ்சிடுச்சா முடிஞ்சிடுச்சா' என்று விரட்டி விரட்டி என்னிடம் கதை எழுதி வாங்குவார். அவர் விகடனைவிட்டு வெளியேறி 'இதயம் பேசுகிறது' ஆரம்பித்தபோது, அதில் நான் எழுதிய தொடர்கதைதான் '47 நாட்கள்'.

    மணியன் சார் பல நிகழ்ச்சிகளில் என்னை உயர்வாக கௌரவப்படுத்தியிருக்கிறார். எழுத்துலகில் நான் 25-ஆவது ஆண்டை நிறைவு செய்தபோது, பெரிய பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது முன்னணியில் இருந்த கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் அழைத்து கூட்டத்தை வெகு விமரிசையாக நடத்தினார். அந்தக் கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் சுஜாதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    அப்போது வேடிக்கையாக ஒரு சம்பவம் நடந்தது. கூட்டத்தில் பேசிய எழுத்தாளர் சுஜாதா, நான்கூடத்தான் 25 வருஷங்களாக எழுதிட்டு வர்றேன். ஆனா, எனக்கு யாரும் விழா எடுக்கலையே என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய கவிஞர் வைரமுத்து, சுஜாதா அவர்களே, பெண்களுக்குத்தான் தலை நரைப்பதற்கு முன்பு விழாக்கள் எல்லாம் எடுக்க வேண்டும். ஆண்களுக்கு எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம் என்றார்.

    நான் சும்மா இருப்பேனா? ஏற்புரையாற்ற மேடையேறியபோது, வைரமுத்து அவர்களே, நீங்கள் மிகப் பெரிய கவிஞர். ஏராளமான கவிதைகளையும், பாடல்களையும் எழுதியிருக்கிறீர்கள். ஆனால், ஒரு சின்ன விஷயம் உங்களுக்குத் தெரியாமல் போய்விட்டதே! எனக்கு 50 வயசு ஆகிவிட்டது. தலைமுடி நரைத்துத்தான் போய்விட்டது. அதை மறைக்க, எல்லோரையும் போல நானும் தலையில் சாயம் பூசியிருக்கிறேன் என்று பேசினேன். மேடையில் இருந்தவர்கள் ரசித்துச் சிரித்தார்கள். இதை இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், எழுத்தாளர்களான எங்களுக்குள் இருந்த இணக்கத்தை விளக்கத்தான்.

    மணியன் சார் செய்த மற்றுமொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? நான் 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' எழுத ஆரம்பித்தபோது, மணியன் சார் மிகவும் பெருமைப்பட்டார். அதுபற்றி 'இதயம் பேசுகிறது' புத்தகத்தில் தலையங்கமே எழுதினார். 'சிவசங்கரி எப்பேர்ப்பட்ட முயற்சியை எடுத்துக்கொண்டிருக்கிறார்!' என்று பாராட்டியிருந்தார். ஒரு எழுத்தாளரைப் பற்றி இதுபோன்று யாராவது தலையங்கம் எழுதியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை! அதுமட்டுமல்லாமல், இந்தியன் வங்கியுடன் இணைந்து எனக்கு தேசிய ஒருமைப்பாட்டு விருதும் வழங்கினார்.

    1971-ல் இருந்து தொடர்ந்து நான் 'தினமணி கதிரி'ல் எழுத ஆரம்பித்தேன். அமெரிக்க பயணக்கட்டுரை, 'ஏன்?', 'திரிவேணி சங்கமம்' போன்ற தொடர்கதைகளை எழுதி முடித்தேன். 1971- ம் வருஷம் டிசம்பர் மாசம் பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசம் (பங்களாதேஷ்) விடுதலையடைந்தது. அதற்கு மூலகாரணமாக இருந்தவர் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி. வங்கதேசம் விடுதலையடைந்தது பற்றி வானொலியில் அறிவிக்கப்பட்டபோது, என் உடம்பு சிலிர்த்துப் போனது. எல்லோரும் இந்திரா காந்தியை அண்ணாந்து பார்த்த காலம் அது! இரும்புப் பெண்மணி என்று கொண்டாடப்படும் இந்திரா காந்தி எப்படிப்பட்ட மனுஷியாக இருப்பார்? ஒரு தாயாக, ஒரு மகளாக, பேத்தியாக, மருமகளாக, மாமியாராக, பாட்டியாக... அவர் எப்படிப்பட்ட மனுஷியாக இருப்பார் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் எனக்கு ஏற்பட்டது.

    அதன் விளைவுதான் நான் டெல்லிக்குச் சென்று தங்கியதும், இந்திரா காந்தி பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்ததும், அவரை தனிப்பட்ட முறையில் பேட்டி எடுத்ததும், பின்னர் அந்த பேட்டியையும், 'இந்திராவின் கதை' என்ற அவரது வாழ்க்கை வரலாற்றையும் 'தினமணி கதிரில்' ஒரு தொடராக எழுதியதும்!

    பிரதமர் இந்திரா காந்தியுடனான சந்திப்புகள் குறித்து பிறிதொரு அத்தியாயத்தில் விளக்கமாகக் கூறுகிறேன்.

    வங்கதேசத்தைப் பற்றிச் சொல்லும்போது, ஒரு முக்கியமான நிகழ்ச்சியை குறிப்பிடவேண்டும். நான் விழுப்புரத்தில் இருந்தபோது, 1971-ஆம் ஆண்டு இறுதியிலோ அல்லது 1972 துவக்கமோ சரியாக நினைவில் இல்லை, சாவி சார் எனக்கு போன் செய்திருந்தார். சிவசங்கரி, நீங்க ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சிருக்கீங்க. இந்திய அரசாங்கம் தமிழ்நாட்டிலேருந்து இரண்டு பத்திரிகையாளர்களை வங்கதேசத்துக்குச் செல்ல தேர்ந்தெடுத்திருக்கிறது. அதுக்கு நான் போகப்போறேன். என்கூட நீங்களும் வரப்போறீங்க என்றார். அதைக் கேட்டதும் எனக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. துள்ளிக் குதிக்காத குறைதான்! முக்கியமான பத்திரிகையாளர்களுக்குத்தானே இதுபோன்ற வாய்ப்புக் கிடைக்கும். சாவி சாருடன் போகும் சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைத்துவிடுமா என்ன?

    என்னுடைய மகிழ்ச்சி, ஆட்டம் பாட்டம், துள்ளல் எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் சந்திரா. எல்லாம் ஓய்ந்து, பதினைந்து நிமிஷங்களுக்குப் பிறகு,வங்கதேசத்துக்குப் போக உன்னை அவங்க தேர்ந்தெடுத்தது ரொம்ப சந்தோஷமான விஷயம்தான். ஆனா, இப்போ நீ அங்கே போகறது சரியில்லைனு நினைக்கிறேன் என்றார். எனக்கு, 'தொப்'பென்று எதையோ கீழே போட்டு உடைத்தது போல இருந்தது. ஏன் அப்படிச் சொல்றீங்க? என்றேன் ஏமாற்றத்துடன். அதற்கு சந்திரா நிதானமாக, அங்கே இப்போதான் யுத்தம் முடிவுக்கு வந்திருக்கு. சீரமைப்பு வேலைகள் இன்னமும் தொடங்கல. கட்டுப்பாடில்லாம தாறுமாறா இருக்கற இடத்தில் எங்கே பாரு ராணுவத்தினர் இருப்பா, புரட்சியாளர் இருப்பா. பெண்களுக்குத் தனியா அறை ஒதுக்கித் தருவதும், வசதி செய்து கொடுப்பதும் கஷ்டம்! ஆண்கள்னா, ஒரு மரத்தடியிலகூட உடை மாத்திக்கலாம். உன்னால அப்படி முடியுமா? உனக்குச் சின்ன வயசு. உன்னைப் பாதுகாக்கறதே சாவி சாருக்கு பெரிய பொறுப்பா இருக்கும். அவருக்கு நீ அஸெட்டா (asset) இருக்கறதவிட லயபிலிட்டியாயிடுவேன்னு (liability) நான் நினைக்கிறேன் என்று அவர் சொன்னபோது, எனக்கு ரொம்பவும் வருத்தமாக இருந்தது. ஆனால், அவரது பேச்சில் இருந்த நியாயம் புரிந்தது. ஒன்றும் பேசாமல் அமைதியாக சாவி சாருக்குப் போன் செய்தேன். சார், சந்திரா இப்படிச் சொல்றார் என்றவுடனே, அரை நிமிஷம் மௌனமாக இருந்த சாவி சார், சந்திராவுக்குத் தோணினது எனக்குத் தோணவே இல்லையே அம்மா. அவர் எவ்வளவு கரெக்ட்டா சொல்லியிருக்கிறார் என்றார்.

    சாவி சாருடன் அவரது எடிட்டோரியல் டீமைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் விழுப்புரம் வீட்டிற்கு வருவார்கள். ஸ்டோரி டிஸ்கஷன், எடிட்டோரியல் மீட்டிங் நடத்துவார்கள். மனம்விட்டுப் பேசுவார்கள். சிவசங்கரி எப்போ புதிய தொடர் எழுதப் போறீங்க? தீபாவளி இதழ்ல இருந்தா? இல்ல பொங்கலுக்கா? புத்தாண்டுல இருந்தா? என்று கேட்பார் சாவி சார். நாம் ஒரு தேதியைக் குறிப்பிட்டதும், உடனே தலைப்பைக் கேட்பார். தலைப்பைச் சொன்னால், தொடர் ஆரம்பிப்பதற்கு நான்கைந்து வாரங்களுக்கு முன்பிருந்தே தலைப்பைப் போட்டு விளம்பரம் செய்ய ஆரம்பித்துவிடுவார். கதை கேட்க வேண்டாமா சார்? என்றால், நான் ஏன் கேட்கணும்? இது உங்க கதை. உங்க பொறுப்பு என்பார்.

    அதேபோல விழுப்புரத்திலிருந்து நான் கதை எழுதி எடுத்துக்கொண்டு போயிருப்பேன். எனக்கு முன்பாகவே உதவியாளரை அழைத்து கம்போசிங்கிற்குக் கொடுப்பார். சார் படிச்சுப் பார்க்கலையா? என்றால், உங்க எழுத்து மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கணும். உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்பார். இதெல்லாம் ரொம்பவும் நெகிழ வைக்கும் அனுபவங்கள்.

    சாவி சாருக்கு 80 வயது ஆனபோது, சென்னையிலிருக்கிற முக்கியமான நபர்களை அழைத்து ஒரு விழா எடுக்க நான் ஏற்பாடு செய்தேன். அவருக்கு பட்டு வேஷ்டி, அங்கவஸ்திரம், அவரது மனைவிக்கு பட்டுச் சேலை எடுத்து, இரண்டு வெள்ளித்தட்டுகளை வாங்கி அதில் தங்க நாணயம் பதித்து இருவருக்கும் பரிசாக அளித்தேன். 'வெள்ளித் தட்டில் தங்கம் பதித்து சாப்பிட்டால், நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள்' என்று யாரோ சொன்னதால், அப்படிச் செய்து அதை மேடையிலேயே சாவி சாருக்கும், அவரது மனைவிக்கும் கொடுத்து அவர்களது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினேன். 'எங்க வயித்துல பிறந்த பெண்ணாட்டம் இதையெல்லாம் செய்யறயேம்மா நீ' என்று அவர் நெகிழ்ந்து போனார். குருவிடமிருந்து இதைவிடப் பெரிய ஆசிர்வாதம் யாருக்குக் கிடைக்கும்?

    சில வருஷங்கள் கழித்து மிகவும் வருந்தக்கூடிய ஒரு சம்பவம் நடந்தது. சாவி சாருக்கு 85 வயதானபோது, ராணி மைந்தன் அவரைப் பற்றி எழுதிய புத்தக வெளியீட்டு விழா நாரத கான சபாவில் நடந்தது. நிறையக் கூட்டம். ஹால் நிரம்பி வழிந்தது. நான்தான் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். சாயங்காலத்துல இருந்தே அப்பா சரியில்லை. ஒரே படபடப்பா இருக்கார். ஒருதடவை போட்டுக்க வேண்டிய மாத்திரைய இரண்டு தடவை போட்டுக்கறார் என்றார்கள் சாவி சாரின் மகள்கள். அதேபோல ஸ்டேஜுக்கு வந்தபோது சாவி சார் ரொம்பவும் தவிப்புடன் இருந்தார். கலைஞரை அழைத்து வந்து உட்கார வைத்துவிட்டு, தானும் உட்கார்ந்தார். மற்ற பேச்சாளர்கள் எல்லோரும் வந்தபிறகு, முதலில் அவர் பேச வந்தார். ஆனால் அவரால் பேச முடியவில்லை. நீங்க உட்காருங்கோ சார். அப்புறமா பேசலாம் என்று உட்காரச் சொன்னபோது, இல்லம்மா நான் பேசறேன் என்று எழுந்துவந்தார்.

    ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியவர், எப்படி துரியோதனன் கர்ணனுக்கு அங்கதேசத்தைக் கொடுத்து மிகப் பெரிய கௌரவத்தைத் தந்தாரோ, அதைப்போல கலைஞர் எனக்கு குங்கும தேசத்தைக் கொடுத்தார் என்று கலைஞர் குங்குமம் பத்திரிகை பொறுப்பை தனக்கு அளித்ததை பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோதே அப்படியே மயங்கிச் சரிந்தார். அவரை நான் தாங்கிப் பிடித்துக்கொண்டேன். எல்லோரும் மேடைக்கு ஓடி வந்தார்கள். உடனடியாக சாவி சாரை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துப்போய் மிகச் சிறந்த சிகிச்சை அளித்தும்கூட, நினைவு திரும்பாமலேயே அவர் இறந்து போனார்.

    எழுத்துலக ஜாம்பவான்களோடு நெருங்கிப் பழக முடிந்தது எனக்குக் கிடைத்த கௌரவம் என்றுதான் சொல்லவேண்டும்.

    அடுத்து, ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த பாலசுப்பிரமணியன். அவர் சிறந்த ஆசிரியர். சிறந்த நண்பர். குடும்ப சிநேகிதர். அவரை நான் பாலன் என்றுதான் அழைப்பேன். பெரிய உயரத்துக்கு என்னைக் கொண்டுபோய் வைத்ததில் அவருக்குப் பெரும் பங்கு இருக்கிறது. விகடனில் 'மனிதனின் கதை'யை எழுத விரும்பி, கதை முழுவதையும் அவரிடம் சொன்னேன். ஆறு ஏழு வருஷங்கள் ஆராய்ச்சி, களப்பணி செய்து எழுதிய கதை அது. சாப்ட்டர் சாப்ட்டராக ஒவ்வொரு அத்தியாயத்தையும் அவருக்கு அனுப்புவேன். அதைப் படித்துவிட்டு தினமும் எனக்கு போன் செய்வார். கடைசி சாப்ட்டரை அனுப்பியவுடன், அவரிடமிருந்து போன் வந்தது. நீங்க உங்க சிந்தனைகள்ல எவ்வளவு தெளிவா இருந்திருக்கறீங்கன்னு தெரியுது. எங்கிட்ட கதை சொல்லும்போது என்ன வார்த்தைகளை உபயோகிச்சீங்களோ, அதே வார்த்தைகளைத்தான் இந்த அத்தியாயத்திலயும் எழுதியிருக்கீங்க என்றார். ஒரு கதாசிரியருக்கு இது மிகப் பெரிய பாராட்டு!

    மூன்று தலைமுறைகளைப் பற்றின 'பாலங்கள்' என்ற தொடர்கதை எழுத விரும்புவதாகக் கூறியவுடன், யாருமே செய்யாத விஷயம் இது. எழுதுங்கோ என்று ஊக்குவித்தார். அந்தத் தொடருக்கு அவர் எப்படி சிறப்புச் சேர்த்தார் தெரியுமா? ஒவ்வொரு தலைமுறையையும் வித்தியாசப்படுத்திக் காட்டும் விதமாக, மூன்று ஓவியர்களை வைத்து மூன்று தலைமுறைகளை ஓவியம் வரையச் செய்தார். முதல் தலைமுறைக்கு ஓவியர் கோபுலுவும், இரண்டாவது தலைமுறைக்கு ஓவியர் மணியன் செல்வனும், மூன்றாவது தலைமுறைக்கு ஓவியர் ஜெயராஜும் ஓவியம் தீட்டியிருந்தனர். அந்தக் கதை பலரது பாராட்டுகளையும் குவித்து, கஸ்தூரி ஸ்ரீனிவாசன் அறக்கட்டளையின் சிறந்த தமிழ் நாவல் விருதையும் பெற்றது.

    இவை தவிர, எனக்கு மிகப் பெரிய சுதந்திரம் அளித்து விகடனில் அட்டைப்படக் கட்டுரைகள் (கவர் ஸ்டோரி) எழுதும் வாய்ப்பையும் தந்தார். அதற்கு நான் புனைகதைகள் எதையுமே எழுதவில்லை. எல்லாமே உண்மைச் சம்பவங்கள் மற்றும் விழிப்புணர்வு கட்டுரைகளாகவே அமைந்தன.

    கண் தானத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் நான் எழுதிய 'ஒளி படைத்த கண்ணினாய் வா... வா... வா...' என்ற கட்டுரையைப் படித்துவிட்டு சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் தலைவரும், கண் மருத்துவத்தில் உலகப் புகழ் பெற்றவருமான டாக்டர் பத்ரிநாத் என்னைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதியிருந்தார். நான் 25 வருஷங்களாகச் செய்துகொண்டு வரும் பணிகளை உங்கள் கட்டுரை தூக்கி அடித்துவிட்டது. கண் தானம் பற்றி நான் கொடுக்க முடியாத விழிப்புணர்வை உங்கள் கட்டுரை கொடுத்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார். என் கட்டுரையைப் படித்துவிட்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையிலும், இதர இடங்களிலும் கண் தானம் செய்வதற்காகப் பதிவு செய்ய முன்வந்தனர். 1982-களில் பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்திய கட்டுரை அது.

    'உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்' என்ற தலைப்பில் கழுத்துக்குக் கீழே முழுவதும் செயலிழந்து போனாலும்கூட, பெரிய நிறுவனம் ஒன்றை மாற்றுத் திறனாளிகளுக்காக ஆயக்குடியில் நடத்தி வரும் ராமகிருஷ்ணனைப் பற்றிய கட்டுரை, 'என் அன்னை செய்த பாவம்' என்ற தலைப்பில் திருநங்கைகளைப் (அப்போதெல்லாம் அவர்களை அலிகள் என்றுதான் அழைப்பார்கள்) பற்றி எழுதிய கட்டுரை போன்றவை விகடனின் அட்டைப்படக் கட்டுரைகளாக வெளியாகி பலரது புருவங்களை உயர்த்த வைத்ததோடு, பாராட்டுகளையும் பெற்றன. கூவாகத்தில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கூடுகிறார்கள் என்பதை அறிந்து அங்கு நேரில் போய்ப் பார்த்து, டெல்லி, பம்பாய் போன்ற இடங்களிலிருந்து வந்திருந்த திருநங்கைகளைச் சந்தித்து பேட்டி எடுத்து எழுதினேன். அந்தக் காலகட்டத்தில் அது புது முயற்சி. முதியோர் பிரச்னை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விச்ராந்தி முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த பாட்டிமார்களைச் சந்தித்து அவர்களது துயரம் மிகுந்த கதைகளைக் கேட்டு எழுதினேன்.

    அந்தச் சமயத்தில் ஒரு துயரமான சம்பவமும் நடந்தது. பாண்டிச்சேரிக்கு அருகேயிருந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் என்னை வந்து சந்தித்தார். 'பாம்பு கடித்தவர்களை மூலிகை மருந்தால் காப்பாற்ற முடியும். அதை நிரூபித்துக் காட்டுகிறேன்' என்று சொன்னார். அவரைப் பற்றிய செய்திகள் வந்திருந்த நியூஸ் பேப்பர் கட்டிங்குகளையெல்லாம் என்னிடம் காட்டினார். அதனால் நான் பாலன் சாருக்குப் போன் செய்து, இதைப்பற்றி கட்டுரை எழுதலாமா? என்று கேட்டேன். அவரும், தாராளமா பண்ணலாம்மா என்றார். போட்டோகிராபரையும், ரிப்போர்ட்டரையும் அனுப்பி வைத்தார். குறிப்பிட்ட நாளன்று பாண்டிச்சேரிக்கு அருகே இருந்த அந்த கிராமத்துக்குப் போனோம்.

    அங்கு எட்டடிக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1