Puthuputhu Anubavangal Part - 1
By Sivasankari
()
About this ebook
She has many novels, novellas, short stories, travelogues, articles and biographies to her credit. Her works have been translated into several Indian languages, English, Japanese and Ukrainian. Eight of her novels have been made into films, having directed by renowned directors like K. Balachander, SP Muthuraman and Mahendran. Her novel 'Kutti' on girl child labour, filmed by the director Janaki Viswanathan, won the President's Award. Sivasankari's novels have also been made as teleserials, and have won the national as well as regional 'Best Mega Serial' awards.
As a multi-faceted personality, she has won many prestigious awards including Kasturi Srinivasan Award, Raja Sir Annamalai Chettiyar Award, Bharatiya Bhasha Parishad Award, 'Woman of the year 1999-2000' by the International Women's Association, and so on.
'Knit India Through Literature' is her mega-project involving intense sourcing, research and translations of literature from 18 Indian languages, with a mission to introduce Indians to other Indians through culture and literature.
Read more from Sivasankari
Mookkanaangayiru Rating: 5 out of 5 stars5/5Nappaasai Rating: 0 out of 5 stars0 ratingsThavam Rating: 5 out of 5 stars5/5Andhamma Romba Nallavanga Rating: 5 out of 5 stars5/5Aairam Kaalathu Payir Rating: 5 out of 5 stars5/5Amma Rating: 5 out of 5 stars5/5Amma Sonna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsVetkam Kettavargal Rating: 0 out of 5 stars0 ratingsOverdose Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Rating: 0 out of 5 stars0 ratingsSuriya Vamsam - Part 1 Rating: 5 out of 5 stars5/5Verillatha Marangal Rating: 5 out of 5 stars5/5Paalangal Rating: 0 out of 5 stars0 ratingsKuzhappangal Rating: 0 out of 5 stars0 ratingsAvargalukku Puriyathu Rating: 5 out of 5 stars5/5Ivalum Avalum Rating: 0 out of 5 stars0 ratingsVimochanam Rating: 4 out of 5 stars4/5Oru Singam Muyalagirathu Rating: 4 out of 5 stars4/5Payirai Meyum Veligal Rating: 5 out of 5 stars5/5Nooleni Rating: 5 out of 5 stars5/5
Related to Puthuputhu Anubavangal Part - 1
Related ebooks
Naveena Gnana Mozhigal – Part 1 Rating: 0 out of 5 stars0 ratings47 Natkal Rating: 4 out of 5 stars4/5Nesangaludan Rating: 0 out of 5 stars0 ratingsSuttaman Rating: 5 out of 5 stars5/5China Pona Pena! Rating: 0 out of 5 stars0 ratingsMeenottam Rating: 0 out of 5 stars0 ratingsAvan Rating: 3 out of 5 stars3/5Puthuputhu Anubavangal Part - 4 Rating: 0 out of 5 stars0 ratingsOru Poongavanam... Puthu Manam... Rating: 0 out of 5 stars0 ratingsManam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Brindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Mella Mella Oru Thigil Rating: 0 out of 5 stars0 ratingsUngal Uyarvu... Ungal Kaiyil... Rating: 0 out of 5 stars0 ratingsNinaivu Saaviyaal Manathai Thirakkirean Rating: 0 out of 5 stars0 ratingsOru Manithanin Kathai Rating: 4 out of 5 stars4/5Kaakka Kadi Rating: 0 out of 5 stars0 ratingsKutty Ilavarasi Rating: 0 out of 5 stars0 ratingsKal Vaazhai Rating: 0 out of 5 stars0 ratingsEnna Valam Illai Nam Thirunattil? Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Karanam Rating: 0 out of 5 stars0 ratingsNee Pathi... Naan Pathi...! Rating: 4 out of 5 stars4/5Thinnai Vaitha Veedu Rating: 5 out of 5 stars5/5Kaadhalinal Kathaiyumundaam-Sirukathai Thoguppu-2 Rating: 0 out of 5 stars0 ratingsParisukku Ponen Rating: 0 out of 5 stars0 ratingsOru Kappal Muthangal Rating: 0 out of 5 stars0 ratingsBuddharin Bothanaigalum Zen Kutty Kathaigalum Rating: 0 out of 5 stars0 ratingsPrachanaigal... Theervugal Rating: 0 out of 5 stars0 ratingsOodaga Theni Sridhar Rating: 0 out of 5 stars0 ratingsAathara Sruthi Rating: 0 out of 5 stars0 ratingsDevi Sridevi Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Puthuputhu Anubavangal Part - 1
0 ratings0 reviews
Book preview
Puthuputhu Anubavangal Part - 1 - Sivasankari
http://www.pustaka.co.in
புதுப்புது அனுபவங்கள் தொகுதி – 1
(அமெரிக்கப் பயணங்கள்)
Puthuputhu Anubavangal Part - 1
(America payanangal)
Author:
சிவசங்கரி
Sivasankari
For more books
http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1.புதுமையான அனுபவங்கள்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
2.அனுபவங்கள் தொடருகின்றன
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
3.புதிய சுவடுகள்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
4.ஆஹா, அலாஸ்கா!
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
என்னுரை
நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன், அமெரிக்கா சென்று வருவதென்பது, ஓர் அபூர்வமான, அதிசயமான நிகழ்வாகப் பரவலாக சமுதாயத்தில், முக்கியமாய் மத்திய வகுப்பினரிடையே கருதப்பட்டது. யார் வீட்டிலோ ஒருவர் மேல்படிப்பிற்காக அங்கு சென்று திரும்பி வந்து, அந்த நாட்டின் மேன்மையை விவரிப்பதை, பலரும் சூழ்ந்து நின்று வியப்போடு கேட்பதுண்டு. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி; வானைக் கிழித்துக் கொண்டு நின்றிருந்த கட்டடங்கள்; பட்டனைத் தட்டினால் வீட்டை சுத்தம் செய்து, துணிகளைத் தோய்த்து, பாத்திரங்களைத் தேய்த்துத் தரும் வீட்டு இயந்திரச் சாதனங்கள், இலை போட்டுச் சாப்பிடலாம் போன்று சுத்தமாய் இருந்த சாலைகள், இதர இடங்களின் நேர்த்தி-கேட்பவரின் கண்களில் வெளிச்சம் போட்டு, மனசில் மயக்கத்தை உண்டு பண்ணவே செய்தன.
ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. வீட்டுக்கு இரண்டு குழந்தைகளாவது, படித்து, நல்ல வேலையில் ஏதோவொரு அமெரிக்க நகரில் சௌக்யமாய் வாழ்ந்து கொண்டு, பெற்றோரை வருடத்திற்கு ஆறு மாதம் போல் அங்கு அழைத்துக் கொள்வது சர்வசகஜமாய் நாம் எங்கும் காணும் நிலை. தவிரவும், விஞ்ஞான, பொருளாதார மேம்பாட்டின் காரணமாய் அன்று நாம் கண்டு மலைத்த பல விஷயங்களையும், இன்று வெகுசாதாரணமாய் இந்தியாவிலேயே பெற்று அனுபவிக்க முடிகிறது. குடிசைகளில் டி.வி., ஓட்டு வீடுகளில் வாஷிங் மெஷின், தொழிலாளிகளின் கைகளில் செல்போன்-என்று, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா ரொம்பவும்தான் மாறிவிட்டது. இனி அமெரிக்காவைக் கண்டு வாயைப் பிளப்பதற்கோ, பொறாமைப்படுவதற்கோ எதுவுமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது.
1970 முதல் இன்று வரை பல முறைகள் அமெரிக்கா சென்று வந்துள்ளதில், நான்கு பயணங்களை நான் பயணக் கதைகளாக எழுதியவை, இத்தொகுப்பில் உங்கள் பார்வைக்காகக் காத்திருக்கின்றன. அன்றிலிருந்து இன்று வரை அமெரிக்கா எனக்குள் உண்டாக்கிய வியப்பை, எரிச்சலை, மகிழ்ச்சியை, வேதனையை உங்களுக்குள்ளும் இப்பயணக் கதைகள் தோற்றுவித்தால் சந்தோஷிப்பேன்.
- சிவசங்கரி.
1.புதுமையான அனுபவங்கள்
1970
1
உலக ஃபெடரலிஸ்டுகள் சபையின் உலக மாநாடு சமீபத்தில் 1970 ஆகஸ்ட் இருபத்தியிரண்டிலிருந்து இருபத்தெட்டு வரை கானடாவின் தலைநகரான ஆட்டவாவில் நடந்தபோது, அதில் பங்கெடுத்துக்கொள்ள எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. உலக ஃபெடரலிஸ்டுகள் சபை என்றால் என்ன, எப்படி நான் அதனுடன் சம்பந்தப் பட்டேன், என் பிரயாண ஏற்பாடுகள் என்னென்ன என்பதைப்பற்றியெல்லாம் பிறகு சொல்கிறேன்.
ஒரு கதை ஆரம்பத்தைப் போல ஆரம்பிக்காமல், நான் மேலைநாட்டில் அடியெடுத்து வைத்த ஒருசில நாட்களுக்குள் என் மனதில் ஆழமாகப் பதிந்து, முதல்முறையாக, ‘ஓ! இப்படியும் எண்ணக்கூடுமா!’ என்று என்னைச் சிந்திக்கவைத்த, இன்னும் சிந்திக்கவைக்கும் ஓர் அனுபவத்துடன் இத்தொடரை ஆரம்பிக்கிறேன்.
அலெக் க்ராஸ் தம்பதியர், இளம் வயதினர். அலெக்கிற்கு முப்பத்தைந்து வயது, அவர் மனைவி டொரீனுக்கு முப்பத்தியிரண்டு வயது. அலெக், ஒரு பிஸினெஸ்மேன். ஆட்டவாவில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில், செளகர்யங்கள் நிறைந்த அழகான வீடு. இரண்டு வண்டிகள், சமர்த்தான இரண்டு குழந்தைகள்... மூத்தவன் ராபிக்கு பதிமூன்று வயதாகிறது, சின்னவள் ஸாண்டிக்கு ஐந்து வயது. நிறைந்த குடும்பம்.
இவர்களுடன்தான், மாநாட்டுக்கு வந்திருந்த என்னை எட்டு நாட்களுக்குத் தங்கவைத்திருந்தார்கள் நிர்வாகிகள்.
மான்ட்ரீயலிலிருந்து ஆட்டவாவில் இறங்கிய என்னிடம் நிர்வாகிகள், உங்களை ஹோட்டலில் இறக்கப் போவதில்லை. கானடியர் ஒருவர் இல்லத்தில் இறக்க உத்தேசம். உங்களுக்குச் சம்மதம்தானே?
என்று கேட்டவுடன், எனக்கு ஒரே சந்தோஷம். கானடியர் ஒருவருடைய குடும்பச் சூழ்நிலை, அன்றாட பழக்கவழக்கங்கள் இவற்றை நன்கு அறிய இதைவிடச் சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது, அல்லவா? அதனால்தான்.
இன்னும் இரண்டு இந்தியர்களும் (பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்) நானும் அலெக் க்ராஸ் வீட்டிற்குச் சென்றோம். முதல் பார்வையிலேயே எங்களுக்கு ஒருவரை ஒருவர் பிடித்துப்போய்விட்டது. குழந்தை ஸாண்டியும் சட்டென்று ஒட்டிக்கொண்டுவிட்டாள். துருதுருவென்று சதா அலையும் அவள், ஒரு நிமிஷம் சும்மா இல்லாமல் ஏதாவது செய்து கொண்டே இருப்பாள். விஷமம் சற்று அதிகம்தான். இருந்தாலும், அடம் இல்லாத புத்திசாலித்தனத்துடன் கூடிய விஷமங்களாதலால், நாங்கள் அவள் நடவடிக்கைகளை மிகவும் ரசித்தோம்.
க்ராஸ் தம்பதியரையும், அவர்கள் குடும்பத்தையும் பார்க்கும்போது, எனக்குப் பாதிநேரம் மேலைநாட்டுக் குடும்பமாகத் தோன்றவில்லை. எனக்கு மிகவும் பழக்கப்பட்ட, தெரிந்த ஒரு குடும்பத்துடன் இருப்பதாகவே இருந்தது. எதற்காக இப்படிச் சொல்கிறேன் என்றால், மேற்கும் கிழக்குமாக இருந்தாலும், இரண்டு இடங்களிலும் ஒரு மத்திய தரக் குடும்பத்தில் உள்ள பிணைப்பு, அன்றாட வாழ்க்கை, நிறைய விதங்களில் ஒன்றுபோலவே இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக.
இவர்களுடன் தங்கி இரண்டு நாட்கள் சென்றுவிட்ட சமயத்தில், மூன்றாம் நாள் டொரினும் நானும் சமையலறையில் ஏதோ செய்தவாறே நின்றிருந்தபோது, புல்வெளியில் ஸாண்டி லூட்டியடித்துக் கொண்டிருந்தபோது, நான் டொரீனிடம், ஸாண்டி முகஜாடை உங்களுடையதைப் போல இல்லை... அவள் ரொம்ப வித்தியாசமாக இருக்கிறாள்...
என்றேன்.
செய்துகொண்டிருந்த கைக்காரியத்தைச் சற்றும் நிறுத்தாமல் டொரீன் சொன்னாள், இயற்கை தானே! ஸாண்டி எங்கள் குழந்தை இல்லையே! தத்தெடுத்தவளுக்கு எங்கள் ஜாடை எப்படி இருக்க முடியும்?
தத்தெடுத்துக்கொள்வது மேலைநாடுகளில் ரொம்பப் பழக்கமான விஷயம்தான் என்பதை நான் அறிந்திருந்தாலும், முன்பின் அறியாத என்னிடம் துளியும் சங்கோஜமோ தயக்கமோ இல்லாமல் டொரீன் வெளிப்படையாகச் சொன்னது, எனக்குச் சற்று வியப்பாக இருந்தது.
உண்மையாகவா! அப்போது, ராபி?
என்று என் வியப்பைத் தெரிவித்துக் கேட்டதும் டொரீன், ராபி எங்கள் பையன்தான். அவன் பிறந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு எனக்கு உடல்நலம் கெட்டுப்போய் கர்ப்பப் பையை எடுக்கவேண்டி வந்துவிட்டது. சில வருடங்கள் கழித்துப் பெண்குழந்தை இருந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் நினைத்தோம். ஒரு அஸோஸியேஷன் மூலமாக ஸாண்டியைத் தத்தெடுத்துக்கொண்டோம்...
என்றாள்.
மூத்த பையன் தன் ரத்தத்தில் ஊறி வளர்ந்த பையன்; இரண்டாமவளோ, எங்கோ, யாராலோ பெற்றெடுக்கப்பட்டவள். இரண்டு பேருக்கும் தன் இதயத்தில் ஒரே மாதிரியான இடம் கொடுத்து, சந்தோஷமாக இருந்து வரும் க்ராஸ் தம்பதியர், ஒரே கணத்தில் என் மதிப்பில் உயர்ந்துவிட்டார்கள்.
ஸாண்டிக்கு இது தெரியுமா?
மெல்லிய குரலில், புல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்குக் காதில் விழாதபடி நான் இந்தக் கேள்வியைக் கேட்டதும், டொரீனுக்குச் சிரிப்பு தான் வந்தது.
இது ரகசியம் இல்லை. ஸாண்டிக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் இது தெரியும். இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது? மேலும், பெரியவளாகி தனக்கென்று விருப்பு வெறுப்புகளை வகுத்துக்கொண்ட பிறகு, திடீரென்று யார் மூலமாகவோ ஓர் அதிர்ச்சி தரும் விஷயமாக உண்மை தெரிவதற்கு முன்னால், நம்மிடமிருந்தே குழந்தைக்கு முதலிலேயே தெரிவது நல்லதுதானே! வயிற்றில் பிறந்தாலும், தத்தெடுத்துக்கொண்டாலும், ஒரே மாதிரியான வளர்ப்பை நாம் அந்தக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது! ஏன், உங்களுக்கே நான் சொல்லும்வரை ஸாண்டி தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்பது தெரியவில்லை, இல்லையா? அதனால், இதில் சங்கோஜப்படவோ தயக்கப்படவோ என்ன இருக்கிறது?
டொரீன் பேசிக்கொண்டேபோனாள். நான் முடிவில், எனக்கு இதெல்லாம் ரொம்பப் புதிதான விஷயங்கள். இந்தியாவில் குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொள்வோரே குறைவு. அப்படி எடுத்துக்கொண்டாலும், உறவுக்காரர்கள் நடுவிலேயேதான் எடுத்துக்கொள்வார்கள். நான் உங்கள் ஸ்தானத்தில் இருந்தால், ராபி ஒருவனே போதுமென்று இருந்திருப்பேனோ என்னவோ..
என்று சொன்னேன்.
அதோடு அன்றைய பேச்சு முடிந்தது.
ஆனால், ராபி, ஸாண்டி இவர்கள் இருவர் மேலும் க்ராஸ் தம்பதியர், அவர்களுடைய மற்ற உறவினர்கள், நண்பர்கள் செலுத்தும் அப்பட்டமான அன்பை உணரும் போது, ‘இது சாத்தியமா?’ என்ற கேள்வி எனக்குள்ளேயே உழன்றுகொண்டிருந்தது.
டொரீன் இந்தப் பேச்சை மறந்திருப்பாள் என்றே நினைத்தேன். ஆனால், இரண்டு நாட்கள் கழித்து மாலையில் தன் சினேகிதி மிஸஸ் ஸ்மித்தைக் கூட்டிக் கொண்டு வந்து, நீங்கள் அன்று குழந்தை தத்துபற்றிப் பேசும்போது, தெளிவில்லாமல் இருந்தீர்கள். மிஸஸ் ஸ்மித்துடன் பேசினால், ஓரளவிற்கு எங்கள் கண்ணோட்டம் உங்களுக்குப் புரியுமென்று நினைக்கிறேன்...
என்று சொன்னபோது, அவளும் எங்கள் உரையாடலை மறக்கவில்லை என்பது புரிந்தது.
மிஸஸ் ஸ்மித்துக்கு முப்பது வயதாகிறது. அவள் கணவரும் ஆட்டவாவிலேயே ஒரு நல்ல உத்தியோகத்தில் இருப்பவர். பேச்சினூடே, தன் குடும்பத்தைப்பற்றிய ஒரு சில அந்தரங்கமான விஷயங்களையும் கூறினாள் மிஸஸ் ஸ்மித்.
ஸ்மித் தம்பதிக்குத் திருமணமாகி பத்தாண்டுகள் ஆகின்றன. ஒரு பையன் எட்டு வயதில், பெண் ஐந்து வயதில் இருக்கிறார்கள். சென்ற ஆண்டு, எதிர்பாராத வகையில் ஸ்மித்திற்கு அவர் கம்பெனியில் டைரக்டர் உத்தியோகம் கிடைத்துவிடவே, பண ஓட்டம் குடும்பத்தில் அதிகமாயிற்று. மூன்றாவது குழந்தையைப் பெற்று வளர்க்கும் சக்தி இருந்ததால், மூன்றாவதைப் பெற்றுக் கொள்ளத் தீர்மானித்தார்களாம். ஆனால், ஓர் இரவு, உலகத்திலுள்ள அனாதைக் குழந்தைகளைப் பற்றி, முக்கியமாக இந்தியாவின் வறுமைச் செல்வங்களைப்பற்றி ஒரு கட்டுரையில் படிக்க நேர்ந்தபோது, தம்பதி தங்கள் முடிவை மாற்றிக்கொண்டார்கள். எப்படி?
தங்கள் பணவசதி மூன்றாவது குழந்தைக்கு இட மளிப்பதால், பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக ஓர் அனாதைக் குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்ள வேண்டுமென்று. அதுவும் எங்கிருந்து? பன்னிரெண்டாயிரம் மைல் தள்ளியிருக்கும் இந்தியாவிலிருந்து!
ஓரளவுக்கு விவேகத்தோடு யோசித்துச் செயல்பட்டோ மானால், குழந்தை வேண்டுமென்று நாம் நினைத்த பிறகு, ‘பெற்றால் என்ன? பத்து நாட்களிலிருந்தோ, இல்லை ஒரு மாதத்திலிருந்தோ நம் அன்பையெல்லாம் கொட்டி வளர்த்தால் என்ன?’ என்றுதான் தோன்றிவிடுகிறது. வாஸ்தவமாகச் சொல்கிறேன்... என் மூன்று குழந்தைகளும் எனக்கு ஒன்றுதான்!
மிஸஸ் ஸ்மித் பேசப்பேச, எனக்கு சிலிர்த்துப்போனது, இப்படியும் ஓர் உயர்ந்த எண்ணமா என்று!
இது மட்டுமல்ல, இன்னும் கேளுங்கள்... மிஸஸ் ஸ்மித்தின் அக்காவிற்குக் கல்யாணமாகி ஐந்து ஆண்டுகள் வரை குழந்தைகளே பிறக்கவில்லையாம். டாக்டர்களிடம் காண்பித்துப் பரிசோதித்து, ஒன்றும் கோளாறு இல்லை என்றும் அறிந்துகொண்டார்களாம். ஆனால், குழந்தை வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகிவிடவே, அந்த ஊரிலேயே உள்ள அனாதைக் குழந்தைகள் சங்கத்திலிருந்து ஒரு பையனைத் தத்தெடுத்துக்கொண்டார்களாம். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அவர்களுக்கே ஒரு பையனும் பிறந்துவிட்டானாம். இரண்டு குழந்தைகளுடன் அக்கா நிம்மதியாக இருப்பதை மிஸஸ் ஸ்மித் கூறியதும், நான் உண்மையாக பிரமித்தே போய்விட்டேன்.
நீங்கள் சொல்லும் கண்பார்வை (கோணம்) ரொம்பப் புதியதுதான்!
என்று உணர்ச்சிவசப்பட்டு நான் சொன்னபோது, நாம் உலகத்தைத் துறந்த ஞானிகளாக இருக்கவேண்டாம், மிருக உணர்ச்சிகளுக்கு அடிமையான மிருகமாக இருக்கவேண்டாம். ஒரு மனிதாபிமானம் கொண்ட மனிதராக இருந்தால் போதும். பிறகு, தூய அன்பை யாரிடமும் செலுத்துவது கடினமே இல்லை!
என்றாள் மிஸஸ் ஸ்மித்.
வாஸ்தவம்தான்.
அன்றிரவு முழுவதும் நான் கண் இமையோடு இமை சேர்க்கவில்லை... மிஸஸ் ஸ்மித்தும் டொரீனும் என்னுள் விஸ்வரூபமெடுத்து என்னை ஆட்கொண்டிருந்தார்கள். யோசித்தேன், யோசித்தேன், அப்படி யோசித்தேன்.
நம்மில் எத்தனை பேர்கள், மிஸஸ் ஸ்மித் செய்த மாதிரி மூன்றாவது குழந்தை வளர்க்கத் தங்களால் முடியும் என்பதை உணர்ந்து, ஓர் அனாதைக் குழந்தையை, அதுவும் கண்காணாத தேசத்திற்கு வந்து தத்தெடுத்துக் கொள்வோம்?
இல்லை, அவளுடைய அக்கா செய்த மாதிரி, திருமணமாகி ஐந்து ஆண்டுகளில், தம்பதியிடம் ஒரு குறையும் இல்லாதபோது, ஓர் அனாதைக் குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்வோம்?
‘நாம் இன்னும் இளவயதினர்தானே, என்ன அவசரம்!’ என்றுதானே, நம்மில் நூற்றில் எழுபத்தைந்து பேர்கள் நினைப்போம்!
முதல் குழந்தை தத்தெடுத்த பிறகு இரண்டாவதாக சொந்தக் குழந்தை பிறந்தால், அதைச் சாதாரணமாக பாவிக்கும் மனப்பான்மை நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது?
இந்தியாவின் வறுமையைப் பற்றியும், அதில் உழலும் பிஞ்சுக் குழந்தைகளைப் பற்றியும், உலகமே அறிந்திருக்கிறது.
இங்கிருக்கும் எத்தனை மத்தியதரக் குடும்பங்களில், பணக்காரக் குடும்பங்களில், வாரிசு இல்லாமல் தவித்து, காசி ராமேஸ்வரம் போவோர் இருக்கின்றனர். இவர்களில் சிலராவது, ஏன் ஒருசில அனாதைக் குழந்தைகளுக்குப் பெற்றோராகக் கூடாது?
நின்று நிதானித்து யோசித்தால், எனக்கு ஒன்று புரிந்தது. தம்பதிகள் முன்வந்தாலும், அவர்கள் தத்தெடுத்துக்கொள்ளும் குழந்தையிடம், முக்கியமாக அது ஊர் பேர் தெரியாத அனாதைக் குழந்தையாக இருந்தால், எத்தனை உறவுக்காரர்கள், சினேகிதர்கள், ஆசையாக, மட்டம் தட்டாமல் நடந்துகொள்வார்கள்?
ஊரார் என்ன சொல்வார்களோ என்றுதானே நம்மில் பலர் பல காரியங்களைச் செய்கிறோம்! அப்படியிருக்கையில், நம் கண்ணோட்டம் சில விஷயங்களில் மாறுவது புரிந்திருந்தும்கூட, செயல்பட நம்மில் எத்தனை பேர்களுக்குத் துணிவு இருக்கிறது?
உங்கள் நாட்டிற்கு நல்லதுதானே, அனாதைக் குழந்தைகளை வசதியுள்ள பெற்றோர் தத்தெடுத்துக் கொண்டால்?
என்று மிஸஸ் ஸ்மித் என்னைக் கேட்டாள்.
சிந்தித்த பிறகு, அது உண்மைதான் என்று எனக்குத் தோன்றியது.
உங்களுக்கு?
2
நேரம் சரியாக இருந்தால் வாக்குப் பலிக்கும் என்பார்கள் சிலர். உங்களில் யாருக்காவது இதில் நம்பிக்கை உண்டோ இல்லையோ, எனக்குக் கிடையாது... சென்ற ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி வரை. இப்போது? ஏதோ கொஞ்சம் வந்திருக்கிறது என்று கூறலாம்.
ஜூலை பதினெட்டாம் தேதியன்று, அருமை நண்பர் ஒருவரை விமானத்தில் டெல்லிக்கு வழியனுப்ப விமானக் கூடம் சென்றிருந்த என் மனதில், ‘நான் விமானத்தில் பயணம் செய்து எவ்வளவு நாட்களாயின! திரும்ப எப்போது போவேனோ!’ என்ற ஏக்கம் எழுந்தது.
என் கணவரிடம் இந்தக் குழந்தைத்தனமான ஆசையைக் கூறியதும், அவர் சிரித்தார். பிறகு, இவளைப் பேச்சால் சமாதானப்படுத்தலாமென்று நினைத்தார் போலும்! இவ்வளவுதானே? பாரேன், கூடிய சீக்கிரம் நீ பல விமானங்கள் ஏறிப்போகும் சந்தர்ப்பம் வரப்போகிறது! உன் அண்ணாதான் அமெரிக்காவிலிருந்து உன்னை அழைத்துக்கொண்டே இருக்கிறான். (என் சின்ன அண்ணா லஷ்மணன், திருமணம் செய்துகொண்டு ஷிகாகோவில் இருக்கிறான்). ஜம்மென்று போய்விட்டு வா... உனக்கென்ன!
என்று பாதி கேலி, பாதி நிஜமாகக் கூறினார்.
ஆனால், அவர் வாக்கு அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாகவே பலித்துவிடுமென்று நான் சற்றும் நினைக்கவில்லை.
ஆகஸ்ட் பத்தாம் தேதி...
ஆட்டவா, கானடாவில், உலக ஃபெடரலிஸ்டுகள் மாநாடு நடக்கப் போகிறதாம்! அதற்குப் போக உங்களுக்கு விருப்பமா?
என்று எனக்கு அழைப்பு வந்தது.
எனக்கு உண்மையாகத் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. உலக ஃபெடரலிஸ்டுகள் மாநாட்டுக்கு, நான் எப்படி, என்ன... என்று ஏதேதோ ஓராயிரம் கேள்விகள் என்னுள். என் கணவர் ஒரேயடியாக, போய்விட்டு வா... இது நல்ல சந்தர்ப்பம். மேலும், நீ அப்படியே அமெரிக்கா போய் உன் அண்ணாவுடன் இருந்துவிட்டு வரலாம்!
என்று கூறியதோடு நிற்காமல், பாஸ்போர்ட் முதலியவற்றை உடனடியாக வாங்கியும் விட்டார்.
ஒருவழியாக எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டு, இருபத்தைந்து பவுண்டு அதிகக் கனத்துடன் (என் பெட்டிகளைத்தான் சொல்கிறேன்!) பதினைந்தாம் தேதி டெல்லிக்குக் கிளம்பினேன்.
என் உறவுக்காரர்கள், சினேகிதர்களுக்கு என்மேல் ரொம்பக் கோபம்... நான் சொல்லாமல் கொள்ளாமல் கானடா சென்றுவிட்டேன் என்று. நான் என்ன செய்ய? பத்தொன்பதாம் தேதிவரை எனக்கு விசாக்கள் வழங்கப் படவில்லை. டெல்லிக்குப் போய் ஓரிரு நாட்கள் வரைக்கும்கூட, நான் இருபதாம் தேதி கிளம்புகிறேன் என்பது எனக்கே தெரியவில்லை. இப்படியிருக்கையில், இங்கு எல்லோரிடமும், ‘நான் மேலை நாடுகள் போகிறேன்’ என்று தம்பட்டம் அடித்துவிட்டுப் போன நான்காம் நாளே, ‘ஹிஹி, எனக்கு விசா கிடைக்கவில்லை, அது இது’ என்று அசடு வழிய நின்றால் எப்படியிருக்கும்! அதனால்தான்.
பத்தொன்பதாம் தேதி டெல்லியிலிருந்து பம்பாய்க்குச் சென்ற என்னிடம் என் கணவர் கேட்ட முதல் கேள்வி, என்ன, நீ போவது நிச்சயம்தானே?
எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் நடுவில், எப்படியோ கிளம்பினேன், போங்கள்!
டெல்லியில் எக்ஸ்சேன்ஜ் ஒரு முப்பத்தாறு டாலர்கள் வாங்குவதற்குள் என் வாழ்நாளில் பாதி நாட்களை அங்கே கழித்துவிட்டேனோ என்றுகூடத் தோன்றியது... அவ்வளவு கஷ்டம். இதைப்பற்றி நான் அதிகமாக விவரிக்கப் போவதில்லை. ஏனென்றால், நம் அரசாங்கம் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு எந்த மாதிரியான ‘ட்ரீட்மெண்ட்’ கொடுக்கிறது என்பதை, நீங்கள் நிச்சயமாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேலும், ‘நம் கவர்மெண்ட் நமக்குத் தெரியாதா!’ என்று நீங்கள் கேட்பதும் என் காதில் விழுவதால், ‘ஆறிய கஞ்சி எதற்கு!’ என்று விட்டு விடுகிறேன்.
போயிங்-707இல், இருபதாம் தேதி இந்தியாவை விட்டுக் கிளம்பியபோது, என் மனதில் என்னவென்று சொல்லத்தெரியாத குறுகுறுப்பு. ‘வெளிநாடு போகிறோம், அதுவும் தனியாக’ என்ற எண்ணமோ, என்னவோ!
முதலில் குவெய்த்தில் எங்கள் விமானம் இறங்கிய போது, கண்ணுக்கெட்டியவரை ஒரே மணற்பரப்புதான்.
போகும்போது குவெய்த்தில் சுற்றிலும் பரவிக்கிடக்கும் பாலைவனத்தைப் பார்த்துவிட்டு, ‘அம்மாடி, இந்த இடத்தில் ஒருநாள் கூட என்னால் இருக்க முடியாது! என்று நினைத்தேன்.’ சரியாக மூன்று மாதங்கள் கழித்து அங்கேயே ஒரு நாள் தங்க நேர்ந்தபோது, ‘அட்டா, இன்னும் இரண்டு நாட்கள் தங்கமாட்டோமா!’ என்றும் நினைத்தேனே, அது வேடிக்கை இல்லையா?
வேறு ஒன்றுமில்லை...
குவெய்த், உலகத்திலேயே மலிவாகச் சாமான்கள் கிடைக்கும் இடங்களில் ஒன்று என்று பிறகுதான் தெரிய வந்தது. தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து இறங்கி, பத்தடி நடந்தாலே, ஒரே பஜார்கள்தான்.
எந்த மாதிரிக் கடைகள்?
அசல் சொக்கத் தங்கம், இருபத்து நான்கு காரட்டில் செய்யப்பட்டிருந்த கிழங்குகிழங்கான நகைகளை, குப்பை மாதிரி போட்டுவைத்திருக்கும் கடைகள். சவரன் விலை ரூ. 72 தான்! படிக்கும்போதே, அங்கு போய்விட வேண்டும் என்றும் தோன்றுகிறதல்லவா!
இருங்கள், இன்னும் சொல்கிறேன்.
சாரி சாரியாய் எலெக்ட்ரிக் சாமான்கள் விற்கும் கடைகள்... டேப் ரெகார்டர் முதல், எந்த ரேடியோ வேண்டுமென்றாலும் பொறுக்கிக்கொள்ளலாம்.
ஜப்பான் நைலக்ஸ் சேலைகளா? எத்தனை விதங்கள் வேண்டும்?
பார்த்துக்கொண்டே, வயிற்றெரிச்சல் பட்டுக் கொண்டே போனேன்.
ஏன்? சாமான்களைப் பார்த்து ஆசைப்பட்ட என்னிடம், டாலர்கள் இல்லையே! பிறகென்ன செய்வது?
சீச்சி, இந்தப் பழங்கள் புளிக்கும் என்னும் கதைபோல, ‘நம்ம ஊரில் கிடைக்காத சாமான்களா!’ என்று என்னைத் தேற்றிக்கொண்டு வந்துவிட்டேன்.
முதல் தடவை அந்த ஊர் வழியாகச் சென்றபோது சிலமணிநேரம் கூட இருக்கப் பிடிக்காதவள், அடுத்த முறை, இன்னும் இருக்க முடியவில்லையே என்று வருத்தப் பட்டேனே, இது ‘பெண்மனம் பித்து’ என்பார்களே, அதனாலா?
பம்பாயிலிருந்து புறப்பட்ட விமானம் துபாய், குவெய்த்தில் சிலமணிநேரம் தங்கிவிட்டு ரோமாபுரியை அடைந்தது. ரோமில் ஒரு நாள் தங்கினோம். இதற்கு விசா, விமானக்கூடத்திலேயே நான்கு பேர்களுக்கு ஒரு விசா என்று எங்கள் குழுவிலிருந்த பதிமூன்று பேர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்கள். மறுநாள் பாரிஸுக்குச் செல்லும் போது எங்கள் விசா காகிதங்களைத் திருப்பிக் கொடுத்து விட்டு விமானம் ஏறவேண்டும். நான் இருந்த நான்கு பேர் குழுத் தலைவர், ஜம்மென்று விசா காகிதத்தைத் தொலைத்துவிட்டார். கடைசி நிமிடத்தில், விமானம் கிளம்ப இருபது நிமிடங்கள் இருக்கின்றன, கேட்டில் எங்களை கஸ்டம்ஸ் ஆபீஸர் விடமாட்டேன் என்கிறார்.
ஒரே அமர்க்களம்!
எப்படியோ, யாரையோ கெஞ்சிக் கூத்தாடி, விமானம் புறப்பட ஐந்து நிமிடங்கள் இருக்கும்போது, இந்த இந்தியர்களே இப்படித்தான்... ஒரு காரியத்திலும் ஒழுங்கு கிடையாது!
என்ற பட்டத்தையும் வாங்கிக்கொண்டு ஓடினோம்.
பாரிஸில் ஒருநாள் இருந்தாயே, என்னென்ன பார்த்தாய்?
என்று ஊர் திரும்பிய என்னை என் கணவர் கேட்டார். என்ன பார்த்தேன்? ‘ஸிடிராமா’ என்ற பஸ்ஸில் 20 டாலர்கள் கட்டினால், ஊரைக் காட்டிவிட்டு, பாரிஸில் சிறந்த நைட் கிளப் இரண்டிற்கும் கூட்டிக்கொண்டு போவார்கள் என்று நாங்கள் இறங்கியிருந்த ஹோட்டலில் சொன்னார்கள். நாங்களும் ஆளுக்கு 20 டாலர்கள் (ரூ 150) போட்டு டிக்கெட் வாங்கினோம்.
ஆனால்...
யாரோ எவரோ செய்த தாமதத்தால், பஸ்ஸைக் கோட்டைவிட்டுவிட்டோம். தவறு எங்களுடையதுதான். பாரிஸ் பார்க்காவிட்டாலும் போகிறது, பணமாவது திரும்பி வருமா என்று முயற்சி செய்தோம்.
இந்த இந்தியர்களே இப்படித்தான்! ஒன்றிலும் ஒரு ஒழுங்கு கிடையாது. சொன்னால் சொன்னபடி நடக்க மாட்டார்கள்!
என்ற பட்டத்தைக் கொடுத்துவிட்டு, பணத்தைக் கொடுத்தார் ஹோட்டல்காரர்.
‘இந்த இந்தியர்களே இப்படித்தான்’ என்னும் பட்டத்தை, என் சமீபத்திய பயணத்தில் நான் பல தடவைகள் கேட்க நேர்ந்தது.
ஷிகாகோவில் ஒரு சமயம் மழையில் நின்றிருந்தேன். குளிர் வேறு. ஒரு டாக்ஸியாவது நிற்கவில்லை. எப்படியோ ஒரு டாக்ஸியைப் பிடித்தேன், உடல் குளிரால் விறைத்த பிறகு. ஏன் ஐயா, ஒரு டாக்ஸிக்காரரும் ஒரு பெண் தனியாக நிற்பதைக் கண்டு நிறுத்தவில்லை?
என்று டாக்ஸி டிரைவரைக் கேட்டேன். இந்த இந்தியர்கள் ‘டிப்ஸ்’ கொடுக்கவே மாட்டார்கள், அதனால்தான்...
என்றார்.
மற்றுமொரு முறை, நியூயார்க்கில் இருக்கும்போது, ஐ.நா. சபையின் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு ஓரிடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, ‘இந்த இந்தியர்களே இப்படித்தான்’ என்ற அடை மொழியைப்பற்றிப் பேச்சு வந்தபோது ஓர் இந்திய அதிகாரி சொன்னார், சமீபத்தில் அகில இளைஞர் மாநாடு யு.என்.இல் நடந்தது. எல்லா நாடுகளிலிருந்தும் சரியான தினத்திற்கு பிரதிநிதிகள் வந்துவிட்டார்கள். நம் நாட்டிலிருந்தும் பிரதிநிதிகள் வருவதாக நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நம் பிரதிநிதிகள் எப்போது வந்தார்கள், தெரியுமா? மாநாடு ஆரம்பித்து மூன்று நாட்கள் கழித்து! அந்த மூன்று நாட்களும் நாங்கள் திண்டாடிப் போய்விட்டோம். இப்படியே நாம் ஒவ்வொன்றிலும் அசிரத்தையாக இருந்தால், ‘இந்தியர் என்றால் இப்படித்தான்’ என்ற இந்த எண்ணம் ஏன் வராது!
மேற்கண்ட சில செய்திகளைக் கொண்டு யாரும், ‘ஐயோ, நம் நாட்டைப் பற்றியும் நாட்டினரைப் பற்றியும் பிற நாட்டவர் இப்படியா நினைக்கிறார்கள்!’ என்று பதற வேண்டாம். எங்கோ ஒன்றாகச் சிதறிக் கிடப்பவற்றைத் திரட்டி நான் மேலே எழுதியிருக்கிறேன். அவ்வளவுதான்.
நம்மைப்பற்றி மோசமாகப் பத்து பேர்கள் எண்ணினால், உயர்வாக எண்ண தொண்ணூறு பேர்கள் இருக்கிறார்கள். அதனால் கவலை வேண்டாம். ஆனால், எங்கோ, யாரோ செய்யும் சில அசட்டுத்தனமான காரியங்கள், நம்மை, நம் நாட்டை மொத்தமாகப் பாதிக்கிறது என்பது உண்மை. நாம் செய்யும் எந்தக் காரியத்திலும் ஒரு சிரத்தை இல்லாமல் போவதால்தான், இந்த மாதிரிக் குறைகள் நம்மிடம் இருக்கின்றன என்று பலர் எண்ணுகிறார்கள். அதுவும் சரிதான் என்றே எனக்குத் தோன்றுகிறது.
‘எதற்காக நல்ல விவரங்களைப்பற்றி எழுதாமல் இந்தக் குறைகளையெல்லாம் எழுதுகிறாள்?’ என்று யாராவது நினைத்தால், ‘வெயிலில் இருந்தால்தான் நிழலின் அருமை தெரியும். அதுபோல, கசப்பான செய்திகளை விழுங்கி விட்டால், பிறகு நல்ல விஷயங்கள் இன்னும் சிறக்கும்’ என்று சொல்லிவிட்டு மேலே தொடர்கிறேன்.
3
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆறாம் தேதி.. விடியும் நேரம்... ஒன்றுமே அறியாத ஹிரோஷிமா மக்கள் மேலும், அதையடுத்து நாகசாகி மேலும், அணுகுண்டுகள் வீசப்பட்டன. எங்கோ அப்பாவிகளாக உறங்கிக் கொண்டிருந்த லட்சோபலட்ச ஜப்பானியர்கள், இருந்த இடத்திலேயே, என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே, உருத்தெரியாமல் போனார்கள். அணு குண்டு வெடித்ததனால் எழுந்த புகைமண்டலம், பல மைல்கள் தூரம் வானில் பரவியதென்றும்; மலைகளாக மனிதப் பிணங்கள் சிதறிக்கிடந்தன என்றும்; ஆகாயமும் காற்றும் கடலும் தாவரங்களும், அணுகுண்டு எழுப்பிய கிரணங்களால் முற்றும் ஆலகால விஷமாக மாறின என்றும்... அடுத்துவந்த பல நாட்களில், மாதங்களில், வருடங்களில், ஏன் இன்றும்கூட-ஜப்பானிய ஏடுகள் வர்ணித்தன, எழுதுகின்றன.
கொதித்து எழுந்தார்கள் உலக மக்கள். ‘இது அநியாயம்! மனித குலத்துக்கே மாபெரும் துரோகம்!’ என்று அவர்கள் இதயங்களெல்லாம் ஒன்றுசேர்ந்து அலறின. ‘இதை இப்படியே விடக் கூடாது, உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று பல தேசத்து அறிவாளிகள் தீவிரமாக நினைத்தார்கள்.
விளைவு?
1946 ஆம் ஆண்டு ‘லக்ஸம்பர்க்’கில் பதினோரு தேசங்களின் மக்கள் பிரதிநிதியாக வந்த அறுபத்தொன்பது பிரதி நிதிகளால், ‘உலக ஃபெடரலிஸ்டுகள் அவை’ நிறுவப்பட்டது.
உலக ஃபெடரலிஸ்டுகள் என்றால் யார்? இவர்களுடைய குறிக்கோள், கொள்கை என்ன?
‘உலக சமாதானத்தை நிலைநாட்ட, உலக அரசாங்கத்தை ஏற்படுத்துவோம்’ என்று முழங்கி, அதற்காக இருபத்தி நான்கு வருடங்களாக அல்லும் பகலும் பாடு பட்டு அச்சபையை ஆலமரமாக வளரச் செய்து, அதன் விழுதுகளை உலகமெங்கும் பரவச் செய்தவர்கள் தாம் ‘உலக ஃபெடரலிஸ்டுகள்’.
இந்த உலக ஃபெடரலிஸ்டுகளின் பதினான்காவது மாநாடு அண்மையில் ஆட்டவாவில் கோலாகலமாக நடந்தபோது, அதில் பங்கெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
ஆட்டவா முழுவதும் கல்யாணக் கோலம்... எழுநூறு பிரதிநிதிகள் 30 தேசங்களிலிருந்து வந்திருக்கிறார்கள் என்றால், சும்மாவா!
மாநாடு நடந்த கூடத்தை இன்றைக்கெல்லாம் வர்ணிக்கலாம். பெரிய கூடம்... ஆயிரம் பேர்கள் தாராளமாய் உட்காரலாம். செளகரியமான நாற்காலிகள். ஒவ்வொரு நாற்காலியிலும், காதில் பொருத்திக்கொள்ள ‘இயர் ஃபோன்’. அதனருகிலேயே ஒரு பட்டன், மூன்று பக்கம் திருப்பக்கூடியது. ஒருவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கையிலேயே, அவர் உரையை ஆங்கிலத்திலோ, ஜப்பானிய மொழியிலோ, ஃப்ரெஞ்சிலோ கேட்கத்தான் இத்தனை ஏற்பாடுகளும்.
‘என் பெயர்...’, ‘என் ஊர்...’ என்று அச்சடிக்கப்பட்ட சிறு அட்டையை, முதல் நாள் எல்லோருக்கும் கொடுத்து விட்டார்கள் நிர்வாகிகள். தோள்பட்டையில் அதைக் குத்திக்கொண்டு நாம் வலம்வரும்போது, முன்பின் சற்றும் தெரியாத ஆணோ பெண்ணோ நம் கையைப் பிடித்துக் குலுக்கி, ‘மிஸஸ் சேகர், எப்படி இருக்கிறீர்கள்? மெட்ராஸ் அழகான ஊரா?’ என்றெல்லாம் கேட்பார்கள். முதல் நாள் கொஞ்சம் புதுமையாக இருந்தாலும், மறுநாள் முதற்கொண்டு நாமே அப்படிப் பிறரைக் கேட்க ஆரம்பிக்கும்போது பழகிவிட்டது.
மாநாட்டின் 700 பிரதிநிதிகளை திரு. நார்மன் கஸின்ஸ், அமெரிக்காவின் தலைசிறந்த பத்திரிகைகளுள் ஒன்றான ‘ஸாடர்டே ரெவ்யூ’வின் எடிட்டர் பிரஸிடெண்ட்-எங்கள் சபையின் தலைவர், தன் சிறப்புரையுடன் வரவேற்றார்.
உலக அரசாங்கத்தை நிர்மாணிப்போம். சமாதானத்தை நிலைநாட்டி, உலக மக்கள் அனைவரும் ஒன்று என்று நிரூபிப்போம். இது நடக்கக்கூடிய காரியமா என்று யாராவது கேட்டால், ‘நிச்சயமாக!’ என்று நாம் முழு நெஞ்சுடன் கூறுவோம். அல்லும் பகலும் முழு சிரத்தையுடன் நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாட்டின் மக்களும் பாடுபட்டால், ஏன் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியாது! மரம் வைத்தவன் பழத்தை அனுபவிக்க முடியா விட்டாலும், அவன் சந்ததியாவது அனுபவிப்பதைப் போல, நம் வாரிசுகளாவது ‘போர்’ என்ற பயங்கரமான அபாயம் தங்களைச் சூழாது என்ற தைரியத்துடன் வாழ, நாம் வழிசெய்வோம். ஐ.நா. சபையை மேலும் வலுப்படுத்துவோம். அது ஆணையிடும் விதிகளையே ஒவ்வொரு தேசமும் தங்கள் ராணுவத்தைப் பொறுத்த வரை கேட்டு நடக்க, ‘உலக விதி’யைக் கொணர்ந்து உலக சமாதானத்தை நிலைநாட்டுவோம்..
என்று சிங்கம் போல வீரமுழக்கம் செய்து, கூடியிருந்த ஒவ்வொருவருடைய மனதிலும் உலக சமாதானம் எத்தனை அத்தியா வசியமானது என்பதை உணரச் செய்தார் திரு. கஸின்ஸ்.
ஐ.நா. சபையின் தலைவர் திரு. ஊதாண்ட் அவர்கள், இந்த வைபவத்திற்கு முதல்நாள் தலைமை தாங்கினார்.
அமைதியான முகம்; சற்றே உதடுகள் விரிய ஓடும் புன்னகை; சாந்தமான கண்கள்; ஆனால், உறுதியான குரல். திட எண்ணத்துடன் திரு. ஊதாண்ட், உலக மக்களின் அமைதியான வாழ்க்கைக்குச் சமாதானம் தேவை என்பதை மிகத் தெளிவாகக் கூடியிருந்தோருக்கு உரைக்கும்படி பேசினார்.
முதல்நாள் விழா முடிந்து வரவேற்பறையில், ‘பிரதி-நிதிகள் ஒருவருடன் ஒருவர் பழக...’ என்பதற்காகத் தேநீர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
ஆஹா, எத்தனை நளினமான உடை உங்களுடையது! பெண்களுக்கேற்ற விதத்தில் அழகாகவும், பெண்மையை இன்னும் உயர்த்தி எடுத்துக்காட்டுவதாகவும் உங்கள் புடவைகள் இருக்கிறதே! எங்கள் நாட்டுப் பெண்களைப் பாருங்கள்... ஆண்கள் போல பேண்ட்ஸும் ‘டைட்ஸும்’, தொடைகள் தெரிய! இந்நாட்டில் பெண்மையே இல்லாமல் போய்விட்டது!
என்று பலர், இந்தியப் பிரதிநிதிகளான எங்களிடம் கூறிய போது, எங்களுக்குப் பெருமை தாங்கவில்லை!
ஒவ்வொரு நாளும் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் மாநாடு முடிய, மாலை ஐந்து ஆகிவிடும். பொறி பறக்கும் வார்த்தைகளில் உலகத்தின் பல சிறந்த பேச்சாளர்கள், அணுசக்தியினால் உலகிற்கு விளைய விருக்கும் ஆபத்துக்களையும்; சில தேசங்கள் மட்டும் வலுப்பெற்று, சில வலுவிழந்து இருப்பதனால் உண்டாகக்கூடிய தீமைகளையும் விளக்கி, இவற்றைத் தவிர்க்க ஐ.நா. சபையை வலியுறுத்துவது எத்தனை அவசியம் என்பதையும் விளக்கும்போது, நாங்கள் அனைவரும் ஆடாது அசங்காது, உள்ளம் உணர்ச்சிக்கடலாக இருக்க கேட்டுக் கொண்டிருப்போம்.
மாலை நித்தமும் ஏதேதோ நிகழ்ச்சிகள்.
கடைசி தினத்தில், இருபத்தியெட்டாம் தேதியன்று, ஆட்டவாவிலேயே சிறந்ததெனக் கருதப்படும் ஹோட்டலில் அனைவருக்கும் விருந்து இருந்தது.
‘இந்தியா, கலைநிகழ்ச்சியைக் கவனித்துக்கொள்ளும்’ என்று அறிவித்துவிட்டு, என்னை அரைமணிநேரம் நடனமாடச் சொன்னார்கள். தெளிவான ஆங்கிலத்தில் ஒவ்வொரு நடனத்தையும் விளக்கிவிட்டு ஆடியபோது, வெளிநாட்டவர்கள் நம் கலையை எத்தனை ரசித்தார்கள் என்பது எனக்கு நன்றாகப் புரிந்தது. எல்லாவற்றையும்விட, நிகழ்ச்சி முடிந்த பிறகு, ஜப்பானியக் குழுவின் தலைவர் எழுந்து என்னருகே வந்து தன் மொழியிலேயே ஏதோ கூறிவிட்டு, தான் அணிந்திருந்த ஃபெடரலிஸ்டுக் ‘கோட்டை, ஹிரோஷிமா என்ற பதக்கம் பொருந்திய ‘கோட்டைக் கழற்றி எனக்கு அணிவித்தார். பிறகு ஒருவர், அவர் சொன்னதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார். நான் ஹிரோஷிமா குண்டுவீச்சில் தப்பித்ததே, உங்களுடைய இந்த நடனத்தைப் பார்க்கத்தானோ என்னவோ! அந்தக் கடவுளுக்கு என் நன்றி!
என்று அவர் சொன்னதைக் கேட்டு எனக்குப் புல்லரித்துவிட்டது.
அந்த நிகழ்ச்சி முடிந்தவுடனேயே எனக்குக் கானடாவில் மேலும் நான்கு முழுநேரக் கச்சேரிகள் ஏற்பாடாகி விட்டன. ‘கானடாவை நன்கு பார்க்க இது ஒரு சந்தர்ப்பம்’ என்று எனக்கு ஒரே சந்தோஷம்.
மாநாடு முடிந்து வீடு திரும்பியதும் நாங்கள் நித்தமும், அலெக், டொரீன் மற்றும் சில நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்போம்.
இந்தப் பேச்சினூடே எனக்கு எத்தனையோ விவரங்கள், ஒன்றுக்கொன்று முரண்பாடான பல விஷயங்கள் தெரிய வந்தன. உதாரணத்திற்குச் சொல்கிறேன்... பேசப்பேச ஆழ்கடலாக இருந்த அலெக்கின் அறிவைக் கண்டு நான் வியக்காத நாளில்லை. காந்தி, நேரு போன்ற தலைவர்களிலிருந்து, வேதாந்தியான அரவிந்தர்வரை எழுதிய புத்தகங்களை வாங்கி அடுக்கியிருக்கிறார்.
ஒரு சமயம் ஒரு சிறு கூட்டத்தில் என்னை யாரோ பாடச் சொன்னார்கள். ஸ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் எழுதி, திருமதி எம்.எஸ். சுப்புலக்ஷமி ஐ.நா. சபையில் பாடிய ‘மைத்ரீம் பஜத’ என்ற பாட்டைப் பாடி அவர்களுக்கு அர்த்தத்தை விளக்கினேன். ‘தாம்யத் தத்த’ என்ற வரிகள் வரும்போது, இவை உபநிடதத்திலிருந்து எடுக்கப் பட்டவை தானே?
என்று அலெக் கேட்டார். எனக்கு ஆச்சர்யம்!
உங்களுக்கு எப்படித் தெரியும்?
என்றேன்.
டி.எஸ். எலியட்டின்
வேஸ்ட் லாண்ட்ஸ் இல் இந்த வார்த்தைகள் வருகின்றன. மேகங்கள் முழங்குவது போல்...
என்றார். எப்படி! பார்த்தீர்களா?
இந்த மாதிரி பல வெளிநாட்டவர்களை இந்த மூன்று மாதங்களில் நான் சந்தித்தேன். ஆனால், நம்மைப்பற்றி எத்தனையோ தெரிந்துகொண்டிருக்கும் அலெக் போன்றவர்களுடே, நீங்கள் டொமாட்டோவைப் பார்த்திருக்கிறீர்களா? ஆப்பிள் என்றால் என்னவென்று தெரியுமா? பாம்பு பிடிக்கத் தெரியுமா?
என்றெல்லாம் பல இடங்களில் என்னிடம் கேட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்ய!
ஒரு மாது என்னைக் கேட்டார், நீங்கள் அடிக்கடி புலிகளைப் பார்ப்பீர்களா?
எனக்கு இந்த மாதிரிக் கேள்விகளைக் கேட்டு அலுத்துவிட்டது. கோபமும் வந்தது.
ஓ, பார்ப்பேனே! மிருகக்காட்சிசாலைக்குப் போகும் போதெல்லாம் பார்ப்பேன்!
என்றேன்.
பிறகு அவர் என்னிடம் பேசவேயில்லை!
ஆட்டவாவில் ஒரு சமயம் ஊர்சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம், நாங்கள் ஏழு பேர்கள்.
ஒரு கடையின் முன் ஒரே அலங்காரம். என்னவென்று பார்த்தால், ‘கானடாவில் சென்ற வருடம் மிக அதிகமாக கோதுமை விளைந்துவிட்டதால், அந்த உபரியைச் சிறு மூட்டைகளாகக் கட்டி, வந்திருக்கும் வெளிநாட்டவருக்கு கானடாவின் ஞாபகார்த்தமாகக் கொடுக்கிறோம்’ என்ற பலகை இருந்தது.
எங்கள் கூட்டத்தில் ஒருவர் அதை வாங்க முற்பட்ட போது, கூட இருந்த ஒரு கானடியர், இந்தியா போன்ற எத்தனையோ நாடுகளில் லட்சோபலட்சம் மக்கள் உண்ண உணவின்றி தவிக்கும்போது, எங்களுக்கு இருக்கும் திமிரைப் பார்த்தீர்களா? உபரி கோதுமையை கானடாவின் ஞாபகார்த்தமாகக் கொடுக்கிறார்களாம். இந்த மாதிரி நடத்தைகளில் மனிதாபிமானமே செத்துவிடுகிறதே! இந்தப் பகட்டு தேவையா?