Muransuvai
By Actor Rajesh
()
About this ebook
ஷேக்ஸ்பியரின் மேக்பத் என்னும் அவலச்சுவைமிக்க நாடகத்தில், மேக்பத் புலம்புவதாக ஒரு வசனம் வரும். அந்த வசனம் 'Life is nothing but a tale told by an idiot, full of sound and fury signifying nothing'. (வாழ்க்கை என்பது முட்டாள் ஒருவன் எழுதிய கதை; அது இரைச்சலிட்டுக் கத்தும் அர்த்தமில்லாத ஓசை போன்று; எந்தவித அர்த்தமுமின்றி இருக்கிறது என்பதுதான்.) ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையையும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் விமரிசித்தால் கிடைக்கும் விடையானது, ஷேக்ஸ்பியர் மேக்பத் என்னும் நாடகத்தில் கூறிய வசனத்தைப் போல்தான் இருக்கிறது. உலகப் புகழ்பெற்ற விமரிசகர்களின் விமரிசனங்களைப் படித்திருக்கிறேன். அதன் அடிப்படையிலேயே, 54 பேரின் வாழ்க்கை வரலாற்றை முடிந்தவரை எழுத முயற்சித்தேன்.
இந்தப் புத்தகத்தில் உள்ள ஏதாவது ஒரு செய்தி, இதைப் படிக்கின்றவர்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஓர் நிகழ்ச்சிக்கு ஒரு உந்து சக்தியாகப் பயன்பட்டால், அதுவே நான் அடைகின்ற மகிழ்ச்சியாகும்.
Read more from Actor Rajesh
Ulagam Pottrum Thirai Kaaviyangal Rating: 0 out of 5 stars0 ratingsJothidam - Puriyatha Puthir Rating: 4 out of 5 stars4/5Ulaga Thirai Padangal Rating: 4 out of 5 stars4/5Maaperum Cinema Iyakunargal Rating: 5 out of 5 stars5/5Naan Kanda China Rating: 0 out of 5 stars0 ratingsCommunisathirkku Pin Russia Rating: 0 out of 5 stars0 ratings
Related to Muransuvai
Related ebooks
Ariviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsOru Mahaanin Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsSwamy Ramatheethar Aathma Anubavam Rating: 0 out of 5 stars0 ratingsSanga Ilakkiyathil Anthanarum Vedhamum! Rating: 0 out of 5 stars0 ratingsDeivathin Kural - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsArutperunjothi Agaval Rating: 0 out of 5 stars0 ratingsC. K. Subramania Subramania Mudhaliyarin Periyapuranam Uraithiran Rating: 1 out of 5 stars1/5Aadhi Sankararin Aanma Bodham Rating: 0 out of 5 stars0 ratingsPirappum Sirappum Irappum Rating: 0 out of 5 stars0 ratingsArul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratingsTirupati Balaji Tamil Kadavul Murugan! Arunagirinathar Podum Puthir!! Rating: 0 out of 5 stars0 ratingsUlagin Oppattra Nool Yoga Vasishtam! Rating: 0 out of 5 stars0 ratingsCommunisathirkku Pin Russia Rating: 0 out of 5 stars0 ratingsஅருணகிரிநாதர் Rating: 0 out of 5 stars0 ratingsArputha - Athisaya Aalayangal Rating: 5 out of 5 stars5/5Engalin Ennangal Rating: 0 out of 5 stars0 ratingsயோகி, யோக சக்திகளைப் பெறுவது எப்படி? Rating: 0 out of 5 stars0 ratingsSikkal Singaravelava Jeevanai Sivanakkiduvai Rating: 0 out of 5 stars0 ratingsParanjothi Munivar Aruliya Thiruvilaiyadal Puranam Rating: 0 out of 5 stars0 ratingsOttangal Rating: 0 out of 5 stars0 ratingsMaranathirkku Appaal Rating: 0 out of 5 stars0 ratingsArutperunjothi Agavalil Ariyathakka 1000 - Thoguthi 4 Rating: 5 out of 5 stars5/5Vainavathin Perumaiyum Adiyargal Magimaiyum! Rating: 0 out of 5 stars0 ratingsValam Tharum Virathangal Rating: 0 out of 5 stars0 ratingsKantha Peruman Saritham Rating: 0 out of 5 stars0 ratingsS. Ve. Shekher Bathilgal Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsBala Thiripurasundari Rating: 0 out of 5 stars0 ratingsRamanarin Geethasaram Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Muthukal Rating: 0 out of 5 stars0 ratingsNatchathirangal – Part 2 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Muransuvai
0 ratings0 reviews
Book preview
Muransuvai - Actor Rajesh
http://www.pustaka.co.in
முரண்சுவை
Muransuvai
Author:
நடிகர் ராஜேஷ்
Actor Rajesh
For more books
http://www.pustaka.co.in/home/author/actorrajesh-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
ராஜாஜி என்ற ராஜதந்திரி
ஹிட்லரால் வளர்ந்த கம்யூனிசம்
மாணவரிடம் தோற்ற கல்வித்தந்தை
இங்கிலாந்து ராணியின் குதிரைகள்
தந்தையை மாற்றிய தத்துவ மேதை
பொம்மைத் துப்பாக்கியில் தொடங்கி
பிரபஞ்சப் புதிர்
காந்தியின் ஆயுதம்
என்ன எடிசன் எப்படி இருக்கிறீர்கள்?
ஆஸ்தி சேர்க்காத சாஸ்திரி
தாத்தா - பேரன் லிங்க்
சிறை என்ன செய்யும்?
இந்தியாவின் சொத்து
பிடித்தவாதம்... பிடிவாதம்
அன்னயாவினும் புண்ணியம் கோடி!
52 ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் போதும்
பந்தா இல்லாத நந்தா
வன்முறையல்ல தீர்வு
அந்தத் திருப்பூர் துணி
நிஜாம் மன்னரும், நிஜ மன்னரும்
இப்படி ஒருவர் இருந்தாரா?
ம.பொ.சி. என்ற மாமனிதர்
தமிழ்த் தாத்தா
வால்காவிலிருந்து கங்கைக்கு...
புள்ளிவிவரப் புலி
கண்டிப்பும் கருணையும் ஒரே இடத்தில்
வந்தால் வரவில் வை!
செல்லம்மா
முத்து.... பெண்கள் சொத்து!
அஞ்சா நெஞ்சன்!
ஹோ சி மின்னை சந்தித்த தலைவர்
கொடுமுடிக் கோகிலம்
வாஞ்சிநாதன் அய்யர், செங்கோட்டா
அருட்பெரும் ஜோதியும் அணையா அடுப்பும்!
அடிமைகளின் தலைவன்
நிபந்தனை நாயகன்
வங்கத்தின் சிங்கம்
கடன் வாங்கி பொதுக் கிணறு
நேருவுக்கு வளைந்து கொடுக்காத மருமகன்!
பாட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
காம்ரேட் தாதா!
ஸ்ரீ ரமண மகரிஷி
விடுதலைக்காக உயிரைத் தந்தவர்!
பறக்கும்போதே!
நிகரில்லா வழிகாட்டி
ஆயிரம் ஆண்டுகளாக வாழும் ராமானுஜர்
மே தினத்தை முதன் முதலாகக் கொண்டாடியவர்!
மனித நேயப் போராளி திரு. வி. க.
மோதிலாலின் புத்திரபாசம்
மார்க்ஸின் ஜென்னி!
மாதர் சங்கத்தின் மங்கா ஒளிவிளக்கு
நாணயம், நேர்மையே சொத்து
சுப்பிரமணிய சிவா
திலகர்
என்னுரை
எனக்குப் படிக்கும் பழக்கம் சிறுவயது முதல், அதாவது 6-வது வயதிலிருந்தே உண்டு. அந்தப் பழக்கத்தை உருவாக்கியவர் எனது தாயார். நான் முதலாம் வகுப்பில் தமிழ் அச்சரங்களைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே, பல்வேறு விதமான புத்தகங்களை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வார். நான் அந்தப் புத்தகங்களைப் படித்து முடித்தவுடன், அதில் பல கேள்விகளைக் கேட்பார். எனவே, நான் படித்து முடித்துவிட்டேன் என்று பொய் சொல்லி எனது தாயாரை ஏமாற்ற முடியாது. எனது தாயார் என்னிடம் அடிக்கடி கூறும் வாசகம் - எதைச் சம்பாதிப்பியோ எனக்குத் தெரியாது; ஆனால், அறிவையும் புத்தியையும் சம்பாதித்துக் கொள். அதன் தொடர்ச்சியாக, பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்பது, அவர்களது உரையாடல்களைக் கேட்பது, அவர்களை உற்று நோக்குவது போன்றவை சிறுபிள்ளையிலிருந்தே என்னிடமிருந்து வந்தது. என்னுடைய ஆறாவது வயதிலேயே, கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவுகளை கேட்பது வழக்கம்.
புத்தகங்கள்தான் வழிகாட்டிகள்
புத்தகங்கள்தான் என் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கான வழிகாட்டிகள், படிக்கட்டுகள் என்பதை உணர்ந்தேன். மனித வாழ்க்கைக்கும், சில எதிர்பாராத முடிவுகளுக்கும் அர்த்தம் காண முயல்வது வீண் முயற்சிதான் என்றாலும், ஓரளவாவது விடைகளைக் கண்டுபிடித்தால், அது நமது வாழ்க்கைக்குப் பயன்படும். பள்ளிப்படிப்பு மட்டும் வாழ்க்கையில் முன்னேறுவதற்குப் போதுமானதல்ல. வாழ்க்கை வரலாற்றைப் படித்துப் புரிந்து கொள்ள முயல வேண்டும். பெரும்பாலும், பல பெரிய சாதனையாளர்களின் அனுபவங்கள், நம் பாடப்புத்தகத்தில் இல்லாத பாடம்தான். அந்தப் பாடத்தை நன்றாகக் கற்றுக் கொள்ள வேண்டும். அது நம் வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கான படிக்கட்டாக அமையும் என்பதில் ஐயமில்லை. எனவேதான், 300-க்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தேன்; படித்துக் கொண்டிருக்கிறேன்.
இரண்டுவித வரலாறு தெரிந்திருக்க வேண்டும்
அவர்களது போராட்ட வாழ்க்கையையும், கஷ்டப்பட்ட விதங்களையும் நாம் படித்துத் தெரிந்து கொண்டால், நாமும் பல போராட்டங்களைச் சந்தித்து வெற்றி பல கண்டு, நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். மனிதனாகப் பிறந்தவன் இரண்டு வரலாறு தெரிந்திருக்க வேண்டும். ஒன்று, மனிதகுலம் தோன்றியதிலிருந்து இன்றுவரை அவன் வளர்ந்திருக்கும் பரிணாம வரலாறு. அடுத்து, அவன் தேர்ந்தெடுக்கும் தொழிலின் வரலாறு. இந்த இரண்டும் முறைப்படி தெரிந்திருந்தால்தான், அவன் தொழிலையும் வாழ்க்கையையும் நன்றாக அமைத்துக் கொள்ள முடியும் என்றார் விஞ்ஞானி ஐன்ஸ்டைன்.
சரியான முடிவு எடுக்க முடியும்
நாம் பிறப்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், வாழும் பொழுது சிறப்பாக வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தால்தான் மரணமும், மரணத்துக்குப் பிறகும் பெருவாழ்வும் வாழ முடியும். ஒரு மனிதனுக்கு நான்கு விதமான வழிகளில் அறிவு வர வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். 1. படித்த அறிவு; 2. நாம் நேரில் பார்த்த அறிவு: 3. பிறர் மூலம் கேட்ட அறிவு; 4. நாம் நேரடியாகப் பெற்ற அனுபவ அறிவு. இந்த நான்கு வழிகளில் வரும் அறிவால்தான் நம் வாழ்க்கையை ஓரளவுக்குச் சீராகக் கொண்டு செல்ல முடியும். எதிர்காலத்தில் எதிலும் ஒரு சரியான முடிவு எடுக்க முடியும்.
ஷேக்ஸ்பியரின் மேக்பத்
ஷேக்ஸ்பியரின் மேக்பத் என்னும் அவலச்சுவைமிக்க நாடகத்தில், மேக்பத் புலம்புவதாக ஒரு வசனம் வரும். அந்த வசனம் 'Life is nothing but a tale told by an idiot, full of sound and fury signifying nothing'. (வாழ்க்கை என்பது முட்டாள் ஒருவன் எழுதிய கதை; அது இரைச்சலிட்டுக் கத்தும் அர்த்தமில்லாத ஓசை போன்று; எந்தவித அர்த்தமுமின்றி இருக்கிறது என்பதுதான்.) ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையையும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் விமரிசித்தால் கிடைக்கும் விடையானது, ஷேக்ஸ்பியர் மேக்பத் என்னும் நாடகத்தில் கூறிய வசனத்தைப் போல்தான் இருக்கிறது. உலகப் புகழ்பெற்ற விமரிசகர்களின் விமரிசனங்களைப் படித்திருக்கிறேன். அதன் அடிப்படையிலேயே, 54 பேரின் வாழ்க்கை வரலாற்றை முடிந்தவரை எழுத முயற்சித்தேன்.
இந்தப் புத்தகத்தில் உள்ள ஏதாவது ஒரு செய்தி, இதைப் படிக்கின்றவர்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஓர் நிகழ்ச்சிக்கு ஒரு உந்து சக்தியாகப் பயன்பட்டால், அதுவே நான் அடைகின்ற மகிழ்ச்சியாகும்.
மேலும், இந்தப் புத்தகம் வெளிவர உதவிய எனது மகள் திருமதி. திவ்யா பிரதீப் மற்றும் எனது சகோதரன் சாம்ஸன் ராஜசேகரன் இருவருக்கும் மிக்க நன்றி.
அன்புடன்
ராஜேஷ்
*****
ரா. மோகன்,
தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
அரிய தகவல்களின் கருவூலம்
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி ஆகிய மூவரும், தமிழ்த் திரை உலகில் முடியுடை மூவேந்தர்களைப்போல் கோலோச்சிய பெருமை படைத்தவர்கள். அவர்களுக்கு அடுத்த அலைவரிசையில், தமிழக மக்களின் உள்ளங்களிலே தங்களது குணச்சித்திர நடிப்பாலும், தனிமனித ஒழுக்கத்தாலும் கொலு வீற்றிருப்பவர்கள் முத்துராமன், சிவகுமார், ராஜேஷ் ஆகிய மூவரும் ஆவர். அவர்களுள், அண்மைக் காலத்தில் தங்களது எழுத்தாற்றலால் தமிழ் கூறும் நல்லுலகைக் கலக்கி வருபவர்கள் சிவகுமாரும் ராஜேஷும் ஆவர். திரு. ராஜேஷ் முரண்சுவை
என்னும் தலைப்பில் தினமணி கதிர்
வார இதழில் ஓர் ஆண்டுக் காலத்துக்கு எழுதிய தொடர், அவரது படைப்புத் திறத்துக்குக் கட்டியம் கூறி நின்ற அற்புதமான தொடர் ஆகும்.
மனித வாழ்வில் - படைப்புலகில் - இரு அவைகளுக்கும் முக்கியமான இடம் உண்டு. ஒன்று இயைபு (concord). மற்றொன்று முரண் (contrast / irony). இவ்விரு சுவைகளுள், மனித மனங்களை ஈர்ப்பதில் - மனித மனங்களில் ஆழ்ந்த தாக்கங்களை ஏற்படுத்துவதில் முரணுக்குச் சற்றே கூடுதல் திறன் உண்டு. இதனை நன்கு உணர்ந்த ராஜேஷ், தனிமனிதர்களின் வாழ்வின் முலம் நான் தரிசித்த முரண் சுவைகளை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்
எனத் தம் தொடருக்கு எழுதிய அறிமுகக் குறிப்பில் ஒப்புதல் வாக்குமூலம் தந்திருப்பது மனங்கொளத்தக்கதாகும். ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியர் முதலாகக், கவிஞர் மீரா வரையில், முரண்சுவைக்கு ஆட்படாத படைப்பாளிகளே இல்லை என்பது முரண்சுவையின் தனித்தன்மையைப் பறைச்சாற்றுவதாகும்.
மிகைநாடி மிக்க கொளல்
என்னும் வள்ளுவர் அளவுகோளின்படி ஆராய்ந்தால், முரண்சுவை
யில் சிறந்து விளங்கும் கூறுகள் மூன்று:
நெஞ்சை அள்ளும் தலைப்பு
எடுப்பான தொடக்கம்
முத்தாய்ப்பான முடிப்பு
பிடித்தவாதம்.... பிடிவாதம்
! (இந்திரா காந்தி), அன்ன யாவினும் புண்ணியம் கோடி
(வள்ளல் அழகப்பர்), பந்தா இல்லாத நந்தா
, இப்படி ஒருவர் இருந்தாரா?
(தியாகி கக்கன்), மா.பொ.சி என்ற மாமனிதர்
, புள்ளிவிவரப் புலி
(பி. ராமமூர்த்தி), முத்து..... பெண்கள் சொத்து
(டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி), வங்கத்தின் சிங்கம்
(தோழர் ஜோதிபாசு), மாதர் சங்கத்தின் மங்கா ஒளிவிளக்கு
(பாப்பா உமாநாத்) போன்றவை, ராஜேஷ் என்ற எழுத்துக் கலைஞரின் கைவண்ணம் களிநடனம் புரிந்து நிற்கும் தலைப்புகள் இவற்றில் எதுகையும் மோனையும் இயல்பாகக் கைகுலுக்கி நிற்பது வெற்றித் திலகம்.
முரண்சுவை
யின் எடுப்பான தொடக்கத் திறனுக்குப் பதச்சோறு ஒன்று: தமிழுக்காகவே வாழ்ந்தவர்கள், தமிழை வைத்தே பிழைத்தவர்கள், தமிழை வியாபாரம் பண்ணியவர்கள், தமிழால் புகழ் பெற்றவர்கள், தமிழைத் தன்னுடைய வளர்ச்சிக்குப் பயன்படுத்தியவர்கள், மன மகிழ்ச்சிக்காகத் தமிழைப் படித்தவர்கள், இலக்கியச் சுவைக்காகத் தமிழை நேசித்தவர்கள் எனப் பலவிதத்தில் தமிழைப் பயன்படுத்திய மனிதர்களைக் கண்டு கொண்டிருக்கிறது தமிழகம்
. தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயரைப் பற்றிய முரண்சுவை
யின் தொடக்கம், அவரது ஆளுமைப் பண்பினையும் தமிழ்த் தொண்டினையும் ஒருசேரப் புலப்படுத்தி நிற்கின்றது. உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்ற வீர வரியைத் தாரக மந்திரமாகக் கொண்டு ஓயாது உழைத்த உத்தமத் தலைவர் ம. பொ. சி.
என்னும் ம. பொ. சி பற்றிய முரண்சுவை
யின் தொடக்க வரியும் நெஞ்சை அள்ளுவதாகும்.
படிப்பவர் சிந்தனையைத் தூண்டும் விதத்தில், தமது முரண்சுவை
யை முத்தாய்ப்பாக முடித்ததில் கை தேர்ந்தவராக விளங்குகிறார் ராஜேஷ். ஓர் உதாரணம்: அதிக காலம் வாழாதவருடைய (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தர) பாடல்கள் காலம் கடந்து நிற்கிறதே, அதுதான் மரணத்துக்கு அவர் தரும் தண்டனை
இருபத்தி ஒன்பது ஆண்டுகளே வாழ்ந்து, தமிழ்த் திரை உலகில் தடம் பதித்த ப(h)ட்டுக்கோட்டையாரைப் பற்றிய முரண்சுவை
யின் இம் முடிப்பு வரி, முத்தாய்ப்பானது.
மௌன குருவைப் பற்றி இன்று உலகே பேசுவது முரண்சுவை அல்லவா?
என்னும் பொருள் பொதித்த வினாவுடன் நிறைவடைகிறது, மகரிஷி
ரமணரைப் பற்றிய முரண்சுவை.
சொல்வதை எளிதாகவும், இனிமையாகவும், சுவையாகவும், தெளிவாகவும் சொல்லும் வல்லமை படைத்தவராக விளங்குகிறார் ராஜேஷ். ஒருமுறை படித்தாலே படிப்பவர், மனங்களில் கல்வெட்டுப் போலப் பதியவல்ல வாசகங்கள், முரண்சுவையில் மண்டிக் கிடக்கின்றன. ஒரு சில சான்றுகள் இதோ:
பெயர்தான் பாலன், அவரோ பெரிய அரசியல் மேதை.
ஜீவா என்றாலே அவர் இனிமையானவர். எனவே அவரை சர்க்கரை நோய் தொற்றிக் கொண்டது.
சிறிது காலம் வாழ்ந்தாலும், பெரிய மனிதராகப் போற்றப்படுகிறார் அழகப்பர்
எடிசனுக்கு அவர் வாழ்ந்த காலம் போதவில்லை. நம்மில் பல பேருக்குக் காலம் போகவில்லை.
அருளாளர்கள் (ரமணர், ராமானுஜர், வள்ளலார், வாரியார்), அரசியல் தலைவர்கள் (கக்கன், காமராஜர், ம. பொ. சி., ராஜாஜி). அறிவியல் அறிஞர்கள் (ஐன்ஸ்டைன், தாமஸ் ஆல்வா எடிசன்), சுதந்தரப் போராட்டத் தியாகிகள் (திருப்பூர் குமரன், பகத்சிங், வாஞ்சிநாதன்), பொதுவுடைமை கொள்கைக்காகவே வாழ்ந்த தலைவர்கள் (ஜீவா, பி. ராமமூர்த்தி, கே. பாலதண்டாயுதம், கே. டி. கே. தங்கமணி), மாதர் குல மாணிக்கங்கள் (பாப்பா உமாநாத், ஜென்னி மார்க்ஸ், கே. பி. சுந்தரம்பாள், முத்துலட்சுமி ரெட்டி, செல்லம்மா பாரதி, இந்திரா காந்தி), தமிழறிஞர்கள் (உ. வே. சா., திரு. வி. க.) உலகம் போற்றும் உத்தமத் தலைவர்கள் (ஆபிரகாம் லிங்கன், இங்கர்சால்), என்று உலகளாவிய நிலையில், இந்திய எல்லையில், தமிழ்நாட்டளவில் தடம் பதித்த ஆளுமையாளர்களின் வாழ்வில், தாம் தரிசித்த 52 அழகிய முரண்சுவைகளைப் பதிவு செய்துள்ளார் ராஜேஷ்.
இந்தியாவிலேயே ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் பெண் கே. பி. எஸ். (கே. பி. சுந்தரம்பாள்) தான். அதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம், நந்தனாராக அவர் ஆண் வேடமேற்று நடித்தார்
; சிறைக்குள் 64 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதுடன் சுமார் 150 புத்தகங்களைப் படித்துக் குறிப்பெடுத்து, 6 சிறு நூல்களை எழுதினார் (பகத்சிங்);
மார்க்ஸைவிட ஜென்னி 4 வயது மூத்தவர்
- என்பது போன்ற அரிய தகவல்களின் கருவூலமாக முரண்சுவை
திகழ்வது சிறப்பு.
தமிழ்த் திரை உலகில் தமது குணச்சித்திர நடிப்பால் முத்திரை பதித்துள்ள கெழுதகை நண்பர் ராஜேஷ், தமிழ் எழுத்துலகிலும், முரண்சுவை
போன்ற தமது திறமான படைப்புகளால் தடம் பதிப்பார், சாதனை படைப்பார் என நம்புகிறேன். தமிழ் எழுத்துலகில் தடம் பதிக்க, சாதனை படைக்க நெஞ்சார வாழ்த்துகிறேன், வாழ்த்தும் வயதினன் என்பதால்.
*****
முன்னுரை
சில ஆண்டுகளுக்கு முன்பு கலைஞன் பதிப்பக உரிமையாளர் மதிப்புக்குரிய நந்தன் அவர்களை தங்க காமராஜ் என்பவர் மூலம் சந்தித்தேன். அந்தச் சந்திப்புக்குப் பின் இருவரும் நெருங்கிய நண்பர்களானோம். அந்தச் சந்திப்புகளில், இருவரும் அரசியல், நாத்திகம், ஜோதிடம் மற்றும் பல்வேறு விதமான உலக நடப்புகள் பற்றிய விஷயங்களை மிக அழகாக விவாதித்துப் பேசினோம். அந்த உரையாடல்களை நந்தன் மிகவம் ரசிப்பார். ஒருநாள் பேசிக் கொண்டிருந்த பொழுது, இவ்வளவு படிப்பும், அறிவும், ஞானமும் அனுபவமும், ரசனையும் உள்ள நீங்கள் ஏன் பத்திரிகைகளில் எழுதக் கூடாது என்று நந்தன் என்னிடம் கேட்டார்.
நீங்கள் சொல்லுங்கள் நந்தன், நான் எழுதுகிறேன் என்றேன். உடனே அவர் தினமணி ஆசிரியர் திரு. வைத்தியநாதன் அவர்களிடம் உங்களை அறிமுகப்படுத்துகிறேன் என்றார்.
திரு.வைத்தியநாதனுடன் சந்திப்பு
அதன்படி, 2010-ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தகக் காட்சியில் திரு. வைத்தியநாதனிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார். அன்று நாங்கள் இருவரும் சுமார் அரை மணிநேரம் பேசினோம். உடனே அவர் தினமணிகதிரில் கடைசிப் பக்கத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு, கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஒருபக்கக் கட்டுரை எழுதினார். அதேபோல், நீங்களும் கடைசிப் பக்கத்தில் ஒருபக்கக் கட்டுரை எழுதுங்கள் என்றார். உடனே நான் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டேன். அந்தக் கட்டுரைக்கு என்ன தலைப்புக் கொடுக்கலாம் என்றார். அதற்கு நான் முரண்பாடுகள் அல்லது முரண்சுவை என்று இரண்டு தலைப்புகளைக் கூறினேன். தலைப்புகளைக் கேட்ட அவர், அடுத்த வாரமே நல்ல விளம்பரத்துடன் கூடிய அறிவிப்பையும் தினமணிகதிரில் கொடுத்துவிட்டார்.
200 பெரிய சாதனையாளர்களின் வாழ்க்கை
இதுவரை நன்றாகப் படித்த 200 பெரிய சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றையும், எழுதப்படாத அதேசமயம் கேள்விப்பட்ட 54 பேர்களின் வாழ்க்கை வரலாற்றையும், இலக்கிய சுவையோடும் அதே சமயம் விமரிசனக் கண்ணோட்டத்துடனும் நான் ஆய்வு செய்திருக்கிறேன். அதில் நான் கண்ட அனைத்து மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றில் ஆரம்பத்துக்கும், முடிவுக்கும் இடையே பல்வேறு விதமான ஏற்றத் தாழ்வுகள், முரண்பாடுகள், தலைகீழ் மாற்றங்கள் இருந்த இடத்துக்கே திரும்பிவந்து சேருவது, இருக்குமிடமே தெரியாமலே போவது, அல்லது முரண்சுவையில் அவர்களின் இறுதி வாழ்க்கை முடிவது போன்றவற்றை என்னால் காண முடிந்தது.
இப்படி முரண்சுவையில் முடிந்த 54 நபர்களைத் தேர்ந்தெடுத்தேன். சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும், மாநில அளவிலும், அரசியல், விஞ்ஞானம், ஆன்மிகம், நாத்திகம், இலக்கியம், வரலாறு, பொதுவாழ்க்கை போன்ற பல்வேறு பிரிவைச் சேர்ந்த அவர்களின் வாழ்க்கையை நடுநிலைக் கண்ணோட்டத்துடன் எழுத முயற்சித்தேன்.
தினமணி கதிரில் கட்டுரைகள் வந்த சில வாரங்களிலேயே எனக்கு அநேக பாராட்டுகள் வந்தன. சமுதாயத்தில் உள்ள பல்வேறு மனிதர்களின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் எனக்குக் கிடைத்தன. இவ்வளவு பாராட்டுகளும் எனக்கு கிடைக்கக் காரணமான கலைஞன் பதிப்பக உரிமையாளர் திரு. நந்தன் அவர்களுக்கும், தினமணி ஆசிரியர் திரு. வைத்தியநாதன் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
*****
ராஜாஜி என்ற ராஜதந்திரி
ராஜாஜி
நாணயம் நேர்மைக்கு எடுத்துக்காட்டு:
1952 - 53-ம் ஆண்டுகளில், முதலமைச்சராக இருந்த ராஜாஜி அவர்கள், ஒரு சமயம் விருதுநகருக்குப் பயணம் செய்தார். ராஜாஜி எப்பொழுதுமே பிரயாணத்துக்குச் சென்றால், தனக்கு என்ன வேண்டும் என்பதை, முறைப்படி டைப் செய்து அங்கு வருவதற்கு முன்பே கொடுத்துவிடுவாராம். அவர் திட்டமிட்டபடி விருதுநகருக்குச் சென்று, நகரில் பார்க்க வேண்டிய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, ஓய்வு எடுக்க அரசினர் பயணியர் மாளிகைக்கு வந்திருக்கிறார். அவர் எப்பொழுதும் கேட்பது ஒரு பிளாஸ்க் காபி, சுடு தண்ணீர், ஏதாவது சில மாத்திரைகள்; அதற்கு மேல் எதுவும் கேட்டு எழுதமாட்டார்.
கொசுவலை
பயணியர் மாளிகையில் புதிதாக கொசுவலை ஒன்று இருந்தது. கொசுவலையைப் பார்த்தவுடன் ராஜாஜி இது ஏது? யார் வாங்கியது? என்று தன் உதவியாளர்களைக் கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் இங்கு கொசுக்கள் அதிகம். எனவேதான், உங்களுக்குக்காக நாங்கள் கொசுவலையை புதிதாக வாங்கி வந்தோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ராஜாஜியிடம் நல்ல பெயர் வாங்கலாம் என்றுதான் அப்படிச் சொன்னார்கள். ஆனால், அதைக் கேட்ட ராஜாஜி. உங்களை யார் கொசுவலை வாங்கச் சொன்னது? நான் சொன்னேனா? நான் எழுதிக் கொடுத்த லிஸ்டில் கொசுவலை இல்லையே. இதற்கு ஏது பணம்? யார் வாங்கினது? எந்தக் கணக்கில் வாங்கினீர்கள் என்று பல கேள்விகள் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பயணியர் மாளிகையின் கணக்கில்தான் வாங்கினோம் என்று பதில் கூறியிருக்கிறார்கள்.
கொசுவலைக்குப் பணம் கொடுத்தார்
உடனே ராஜாஜி, அந்தக் கொசுவலையைப் பிரிக்காதீர்கள். நான் அதை சென்னைக்கு எடுத்துக் கொண்டு போய் என்னுடைய சொந்த உபயோகத்துக்கு வைத்துக் கொள்கிறேன். சென்னை சென்றவுடன், அதற்கான பணத்தை உடனே அனுப்பி விடுகிறேன் என்று சொல்லி அந்த ரசீதை வாங்கி வைத்துக் கொண்டார். விருதுநகரில் தங்கியிருந்த வரை கொசுவலையைப் பிரிக்கவே இல்லை. சென்னை சென்ற அவர், வாடகைக்குவிட்ட வீட்டுக்காரன் வாடகைப் பணம் கொடுத்தவுடன், அதை விருதுநகருக்கு, அனுப்பிவிட்டுத் தான் கொசுவலையைப் பிரித்து உபயோகித்தாராம்.
காந்தியின் நம்பிக்கை
இந்திய சரித்திரத்தில் காந்தி, நேரு, படேல் இவர்களோடு சமமாக மதிக்கப்படக் கூடியவர் ராஜாஜி என்று காந்திஜி கூறுவார்கள். 1940-ம் ஆண்டு வரை, தன்னுடைய மனசாட்சிப்படி நடக்கக் கூடியவர் ராஜாஜி என்று காந்திஜி கூறி வந்தார். அந்த அளவு, காந்திஜியிடம் நம்பிக்கை கொண்டவர் என்பதைக் காட்டிலும், காந்தி வழியில் நடந்தவர்; வாழ்ந்தவர் என்பதே பொருந்தும்.
1952 புயல்
1952 நவம்பர் 30-ம் தேதி தமிழகத்தில் ஒரு புயல் வந்தது. தஞ்சை மாவட்ட அதிகம் பாதிக்கப்பட்டது. சாலை ஓரங்களில் இருந்த மரங்களெல்லாம், பல சாய்ந்து விட்டன. அதனால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது. அரசின் தலைமை அலுவலகத்திலிருந்து நெடுஞ்சாலைத்துறைக்கு ஓர் அரசாணை அதாவது மரங்களின் கிளைகளை மட்டும் மக்கள் வெட்டி எடுத்துச் செல்லலாம். அடிமரம் மற்றும் பெருங்கிளைகளை சாலை ஓரமாகப் போட்டுவிட வேண்டும் என அந்த அரசாணை.
ராஜாஜி நேரில் வந்தார்
டிசம்பர் 2 - 3 தேதிகளில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் காண வந்தபோது சாலைகள் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் இருந்தன. வழக்கம்போல மரங்களை ஏலம் விட்டிருந்தால், குறைந்தது 15 நாள்கள் ஆகியிருக்கும். கிளைகளை மக்கள் வெட்டிக் கொண்டு சென்றதால், அரசுக்கு பெரிய நஷ்டம் எதுவும் இல்லை. இதுமக்கள் எல்லோருக்கும் தெரியும். தஞ்சை மாவட்டத்தை ராஜாஜி சுற்றிவந்தபோது எங்களது ஊருக்கப் பக்கத்து ஊரான முத்துப்பேட்டைக்கு வந்தார்.
1952-ல் லஞ்சம்
அந்த ஊர் மக்கள், முதலமைச்சர் காரை நிறுத்தினார்கள். அவர்கள் ராஜாஜியைப் பார்த்து குடிசை இழந்தவர்களுக்கு 30 ரூபாய் வழங்கி இருக்கிறீர்கள். ஆனால், அதைக் கொடுக்கும் அதிகாரி ரூபாய் 20தான் எங்களுக்குக் கொடுத்தார். பணம் சுரண்டப்படுகிறது என்று கூறினார்கள்.
அதைக்கேட்ட ராஜாஜி, எனக்குக் கீழே வேலை பார்க்கும் அதிகாரிகளை என்னால் குறை சொல்ல முடியாது. ஏனெனில், அவரும் நம்மில் ஒருவர்தானே. அயல் நாட்டார் இல்லையே. எனவே, தவறு நடக்காமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். அதற்கு, மக்களுக்குப் பணம் கொடுப்பவரை மேற்பார்வையிட, அவருக்கு மேலே சில அதிகாரிகளை அனுப்புங்கள் என்றனர். அதற்கு ராஜாஜி, அப்படியானால் 15 ரூபாய் தான் உங்களுக்கு வரும். ஏனெனில், அந்த மேலதிகாரிகளுக்குப் பங்கு போக வேண்டும் அல்லவா? என்றாராம். தனக்கு அரசாங்கப் பணத்தில் வாங்கிய கொசுவலைக்கு தானே பணம் கொடுத்த ராஜாஜிதான் இப்படியும் நடந்து கொண்டார். ராஜாஜியிடம் நாம் எதிர்பார்க்காத முரண் இது. இதைக்கேட்ட மக்கள் ஒன்றும் பேசமுடியாமல் நின்றனர்.
நேரு பாராட்டினார்
சுதந்திரம் வந்த பிறகு, பாராளுமன்றத்தில் ராஜாஜியின் படத்தைத் திறந்து வைத்தபோது, தன்னால் அப்போது ராஜாஜியைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று சொல்வதில் தான வெட்கம் கொள்ளவில்லை என்றும், ஏன் என்றால் ராஜாஜியால் பலன் தரும் எதிர்காலத்தைச் சிந்தனை செய்ய முடிந்தது
என்றும் நேரு கூறினார்.
பதவி விலகினார்
முதலமைச்சர் பதவிக்கு எதிர்ப்பு வந்தது. எனவே 1954-இல் ராஜாஜி பதவி விலகினார். அதன்பிறகு கடைசி நாள்களில் இலக்கியப் புத்தகங்கள் எழுதினார். வால்மீகி ராமாயணத்தை 'சக்கரவர்த்தித் திருமகனாக’வும், வியாசரின் மகாபாரதத்தை மகாபாரதமாகவும் தன் ஆற்றல் மிக்க பக்திபூர்வ எழுத்துகளில் எழுதினார்.
ராஜாஜியிடம் புத்திசாலித்தனமும், நடைமுறைப்படுத்தும் திறனும், சந்தேகிக்க முடியாத தன்னலமின்மையும் இருந்தன. எடுத்த எந்தக் காரியத்திலும் எவர் தயவையும் தேடாது பொதுமக்களின் நன்மையைக் கருதியே முடிவெடுத்தார். இவ்வளவு சிறந்த குணம் இருந்தும், தனக்கென்று ஒரு கூட்டத்தை தேடிக் கொண்டதில்லை. கட்சியுடன் ஒத்துப் போகும் தன்மை இல்லாமல் இருந்தார். சட்டசபையைத் தவிர்த்து அவசரச் சட்டத்தின் மூலமே ஆட்சி நடத்தினார். இவை எல்லாம், குடியாட்சிக்கு மாறுபட்ட செயலாகவே இருந்தன என்றே சொல்ல வேண்டும்.
யாரும் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது
1936-ம் ஆண்டு, தமிழக முதலமைச்சராக ராஜாஜி இருந்தார். அந்தச் சமயம், இந்து சமய அறநிலையத் துறையில் ஒரு இலாகா என்று ஒன்று இருந்தது. அதன் உறுப்பினர்களில் சிலர், அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களை, பெரிய பெரிய பணக்காரர்களும், பெரிய கம்பெனிகளும் தங்களுக்குள் வளைத்து போட்டு சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். எனவே, ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் அந்த நிலங்களை எல்லாம் கைப்பற்றி அரசுடமையாக்கினார் ராஜாஜி. அந்த இலாகாவில் 326 பேர்கள் வேலை பார்த்தார்கள். குறிப்பிட்ட அந்த வேலைகள் முடிந்த பிறகு, இனிமேல் அந்த இலாகா தேவையில்லை என்று கருதிய ராஜாஜி, அதை எடுத்துவிட்டார். அதனால் அந்த இலாகாவில் வேலை பார்த்த 326 பேர் வேலை இழந்தார்கள்.
நியாயமாகவே நடந்துகொண்டார்
அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, ராஜாஜியிடம் வந்து முறையிட்டனர். மனு ஒன்றைக் கொடுத்தார்கள். அதற்கு ராஜாஜி, இதுவே தாற்காலிக இலாகா. அதில் போய் வேலை பார்த்துவிட்டு, அது நிரந்தரமாகவில்லை என்று எப்படி அங்கலாய்க்கின்றீர்கள் என்பது எனக்கு விளங்கவில்லை.
இதில் 17 வருடங்கள் வேலை பார்த்திருக்கிறோம் என்று கூறுகிறீர்கள். தாற்காலிக இலாகாவில் 17 வருடங்கள் வேலை பார்த்ததே பெரிய விஷயம். அங்கு வேலை பார்க்கும் பொழுதே, இந்த இலாகா நிரந்தரமல்ல என்று எண்ணி, வேறு இலாகாவைத் தேர்வு செய்து அங்கு சென்று வேலை பார்த்திருக்கக் கூடாதா என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அந்த 326 பேரும் மௌனம் சாதித்திருக்கிறார்கள். உடனே ராஜாஜி, வேலை வாய்ப்பு அலுவலகத்துக்கும் மற்றுமுள்ள துறைகளுக்கும் அரசாணை ஒன்றை அனுப்பினார். அந்த அரசாணையில், அரசாங்கத்தின் அனுமதி கேட்டுத்தான் யாரையும் வேலைக்கு அமர்த்த வேண்டும். அரசாங்க அனுமதி இல்லாமல் யாரையும் வேலைக்கு அமர்த்தக் கூடாது என்பதுதான் அது.
அந்த 326 பேரையும் எந்தெந்தத் துறையில் அவர்களுக்குத் திறமையும், விருப்பமும் இருக்கின்றதோ, அந்தந்தத் துறைக்குப் பொருத்தமாக ஆட்களை வேலையில் அமர்த்தினார். இதற்கு முன் அவர்கள் வேலை பார்த்த வருடங்களும், இப்பொழுது பார்க்கப் போகும் வேலையின் நாள்களோடு சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் அறிவித்துவிட்டார்.
இது எந்த வகையில் நியாயம்
இந்த அறிவிப்பைப் பார்த்தவர்கள், நாங்கள் ஏற்கெனவே பல வருடங்களாக இங்கு வேலை பார்க்கின்றோம். இப்பொழுது வந்து புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள், எங்களைவிட அதிகமான் வருடங்கள் வேலை பார்த்தது போல அவர்களுடைய பழைய வருடக் கணக்கையும் சேர்க்கின்றீர்களே. அதனால் அவர்களுக்கு அந்த வருடங்களுக்கு ஏற்றபடி இன்கரிமெண்ட் கிடைக்கிறது. அதுபோக நாங்கள் அவர்களுக்குக் கீழே வேலை பார்க்க வேண்டியதாகிறது. இது எந்த வகையில் நியாயம் என்று கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு ராஜாஜி, ஏற்கெனவே அவர்கள் இங்கு வேலை பார்த்திருந்தாலும், இதே நிலை தான் உருவாகியிருக்கும். அப்படி நினைத்துக் கொண்டால், ஒன்றும் தவறில்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். ஒரு தவறைத் திருத்திக் கொள்வதிலும், யாரும் எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது என்பதிலும் ராஜாஜி அதிகக் கவனமாக இருப்பாராம்.
மனசாட்சியின் காவலர்
ராஜகோபாலாச்சாரியார் அவர்களை ராஜாஜி என்றும், சி. ஆர். என்றும் அழைத்தார்கள். அந்தக் காலத்தில் ராஜாஜியை சாணக்கியர் என்றும் சொன்னார்கள். காந்திஜி தன்னுடைய மனசாட்சியின் காவலர் என்று ராஜாஜியைக் குறிப்பிட்டார். ஆனால், அவரைத் தன்னுடைய அரசியல் வாரிசாக காந்திஜி குறிப்பிடவில்லை. ஜவஹர்லால் நேருவைத்தான் தன்னுடைய அரசியல் வாரிசாகக் குறிப்பிட்டார்.
ராஜிநாமாவை சட்டைப் பையில் வைத்துக் கொண்டுதான் பதவியிலிருக்கிறேன் என்று அடிக்கடி சட்டமன்றத்தில் சொன்ன ஒரே முதல்வர் ராஜாஜிதான். அதைப் போலவே.ராஜாஜி தாம் வகித்து வந்த எந்த ஒரு பதவியிலும், அதற்குக்குரிய காலம் முழுவதும் அமர்ந்து பதவி, சுகம், அதிகார சுகங்களை அனுபவித்ததில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் தலைமைப் பதவியில் தொடர்ந்து பல ஆண்டுகள் இருக்க விரும்பாதவர்.
பிரச்னைக்குரிய மனிதர்:
ராஜாஜி எப்பொழுதும் பிரச்னைக்குரிய மனிதராகவே இருந்தார். தனக்கு எது சரி என்று பட்டதோ அதையே சாதிக்க முயல்வார். எதையும் விட்டுக் கொடுத்துப் போகமாட்டார். அரசியலில், துறவிபோல வாழ்ந்த பெருமைக்குரியவர் ராஜாஜி. மக்களிடம் செல்வாக்குப் பெற வேண்டும் என்பதற்காக எதையும்