Thathuva Darisanam
By Padman
()
About this ebook
இறைவன் எங்கோ வானில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. நம்மோடும், நாம் காணும் அனைத்திலும் கலந்திருக்கிறார். ஆண்டவன் உண்டு என்றால், அது நமக்குள்ளே உண்டு என்று பொருள் – இவ்வாறாக பல்வேறு தத்துவார்த்தங்களை விளக்கிக் கூறும் இந்நூல், பாரத ஆன்மிக அகநோக்கிற்கான ஓர் ஆராய்ச்சிக் களம். சாதாரண நம்பிக்கை முதல் சசஸ்தவாதம், ஆஜீவகம் போன்ற பலர் அறியா தத்துவங்களையும் விளக்கிச் சொல்கிறது இந்நூல்.
Read more from Padman
Yaarum Sollatha Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAarumuga Aravam Rating: 0 out of 5 stars0 ratingsAandavan Maruppum Aanmeegamey! Rating: 0 out of 5 stars0 ratingsThikkettum Thiru Murugan Rating: 0 out of 5 stars0 ratingsMudiyatha Mudivu Rating: 0 out of 5 stars0 ratingsPorul Tharum Kural Rating: 0 out of 5 stars0 ratingsMoondravathu Kann Rating: 0 out of 5 stars0 ratingsKarunaikku Marupeyar Kasaap Rating: 0 out of 5 stars0 ratingsSiva Kali Peralai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thathuva Darisanam
Related ebooks
Arutperunjothi Agavalil Ariyathakka 1000 - Thoguthi 4 Rating: 5 out of 5 stars5/5Swamy Ramatheethar Aathma Anubavam Rating: 0 out of 5 stars0 ratingsAriviyal Nokkil Aanmeega Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsUlagin Oppattra Nool Yoga Vasishtam! Rating: 0 out of 5 stars0 ratingsSri Hayagreevar Sthothiram Rating: 0 out of 5 stars0 ratingsNeengalum Vallalar Aaga... Rating: 4 out of 5 stars4/5Aasarakovai Rating: 5 out of 5 stars5/5Aanmeega Muthukal Rating: 0 out of 5 stars0 ratingsOru Mahaanin Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsVainavathin Perumaiyum Adiyargal Magimaiyum! Rating: 0 out of 5 stars0 ratingsSri Paramacharya Swamigal Aruliya Arputha Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsSiddha Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Thelivu Peru Om Rating: 0 out of 5 stars0 ratingsArutperunjothi Agaval Rating: 0 out of 5 stars0 ratingsSoolamani Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsVerena Neeirunthai! Rating: 0 out of 5 stars0 ratingsHindu Madham Bathilalikkirathu Rating: 0 out of 5 stars0 ratingsSitha Yogigal Rating: 0 out of 5 stars0 ratingsNalam Tharum Naayagiyin Naamangal Rating: 0 out of 5 stars0 ratingsKannigal Ezhu Per Rating: 4 out of 5 stars4/5ஸ்ரீ லலிதா (ஸஹஸ்ரநாமம் - விளக்கவுரை) Rating: 5 out of 5 stars5/5Aanmeega Tips Rating: 0 out of 5 stars0 ratingsChandhira Sekaram! Rating: 0 out of 5 stars0 ratingsPanmuga Nokkinil Vaniyal Sinthanaigal Rating: 0 out of 5 stars0 ratingsSaathaga Alangarathil Chiththar Karuthukkal Rating: 5 out of 5 stars5/5ஸ்ரீ விஜயேந்திர வாணி Rating: 0 out of 5 stars0 ratingsSri Shiva Puranam Rating: 0 out of 5 stars0 ratingsSankarar Endra Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsDevarathinul Varum Jothida Karuthukal Rating: 0 out of 5 stars0 ratingsAvasiyam Tharisikka Vendiya Navagraha Aalayangal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thathuva Darisanam
0 ratings0 reviews
Book preview
Thathuva Darisanam - Padman
https://www.pustaka.co.in
தத்துவ தரிசனம்
Thathuva Darisanam
Author:
பத்மன்
Padman
For more books
https://www.pustaka.co.in/home/author/padman
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. நம்பிக்கை தாண்டிய உண்மை
2. இந்திய மரபில் நாத்திகம்
3. லோகாயதமும் வைதீகமும்
4. காப்பியங்களில் லோகாயதம்
5. சிவஞான சித்தியாரில் உலகாயதன் மதம்
6. உலகாயதன்மதம் மறுதலை
7. ஊழ்வினையை வலியுறுத்தும் ஆஜீவகம்
8. ஆஜீவகம் குறித்த வரலாற்று, இலக்கியச் சான்றுகள்
9. அணுவியல் பேசும் வைசேஷிகம்
10. வைசேஷிக பதார்த்தங்கள்
11. வைசேஷிகம் கூறும் அதிருஷ்டம்
12. இறைவனின் இருப்பைக் கூறும் நியாயம்
13. கடவுளுக்கு நியாயம் கூறும் 9 சான்றுகள்
14. மோட்சமே ஜீவன்களின் உயர் இலக்கு
15. அறிவும் பொருளும் இணைந்த தத்துவம்
16. சாங்கியத்தின் 25 தத்துவங்கள்
17. புருஷ தத்துவம்
18. சஷ்டி தந்திரமும் சாங்கிய காரிகையும்
19. புருஷனும் முக்தியும்
20. தவறான ஞானமும் மெய் ஞானமும்
21. நிறை ஞானமே முக்தி
22. பூஜ்யத்தின் ராஜ்யம்
23. இல்லாமைக்குள் இருப்பு
24. ஆதி மனதும் ஆண்டவனும்
25. உயிர்ப்பின் உரை
26. புருஷனும் வருணமும்
27. ஆய்வுக்குப் பின் பயிற்சி
28. யோக சூத்திரம்
29. சித்தத்தைக் கட்டு; வழிமுறைகள் எட்டு
30. சித்திகளைத் தாண்டினால் முக்தி
31. கர்மமே பிரதானம்
32. சொர்க்கமே இலக்கு, சடங்குகளே கடமை
33. துன்புறுத்தாமையே மாபெரும் அறம்
34. முரண்களில் இணக்கம்
35. வினைகளை அறு, தத்துவங்கள் ஏழு
36. அறமே உருவெடுத்த ஆசான்
37. ஆரிய சத்தியங்கள்
38. நடுவில் வாழ்
39. அதுவின்றி வேறில்லை
40. நீயே அது
41. ஒன்றுதான் ஆனாலும்...
42. துதியே கதி
43. பார்வைகள் பலவிதம்
44. சைவ விசிஷ்டாத்வைதங்கள்
45. முடிந்த முடிவு
46. வாழ்வை நிறைவு செய்
47. அடக்கு, ஆற்றல் பெறு
48. ஆண்டவனின் சீடர் நாம்
49. சமய சஞ்சீவிகளான சமாஜங்கள்
50. விவேக நாதம்
51. பாரதி தரிசனம்
52. நிறை நோக்கு
அணிந்துரை
ஆன்மிகக் கருத்துக் களஞ்சியம்
ஒவ்வோர் ஆன்மாவும் உள்ளடங்கிய தெய்வீகம் நிறைந்தது. புற மற்றும் அக இயற்கையை அடக்குவதன் மூலம் இந்த அக தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே நோக்கம். செயல் அல்லது வழிபாடு அல்லது பிராணனைக் கட்டுப்படுத்தல் அல்லது தத்துவ ஆராய்ச்சி - இவற்றுள் ஒன்றாலோ பலவற்றாலோ எல்லாவற்றாலுமோ இதனைச் செய்து சுதந்திரனாக இரு! இதுவே மதத்தின் முழு உண்மை என்றார் சுவாமி விவேகானந்தர்.
ஆன்மிகம் என்பது சுயத்தின் தேடல், நமது இருப்பின் ஆதாரத்தைக் காண முனைதல். இதற்கான அழகான விளக்கத்தைத் தரும் தத்துவ விசாரணையே இந்த நூல். இதில் ஆசிரியர் காட்டும் தத்துவங்களுக்குச் சில உதாரணங்கள்...
உண்மை ஒன்றுதான் என்ற போதிலும் அது எல்லாவித நம்பிக்கைகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கிறது. எனவே, நம்முடைய கருத்தில் நாம் உறுதியாக இருந்தாலும், மாற்றுக் கருத்து உடையவரின் கருத்தையும் நாம் மதித்தாக வேண்டும். ஏனெனில், உள்ளது உள்ளபடி உண்மை இதுவரை முழுமையாக விளங்கிக் கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. அதனால்தான் நமது முன்னோர்கள் ஏகம் சத், விப்ரா பஹுதா வதந்தி. அதாவது உண்மை ஒன்றுதான், அறிஞர்கள் அதனைப் பல விதங்களில் சொல்கிறார்கள் என்று நூலின் தொடக்கத்திலேயே ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.
ஆஜீவகம் எனப்படும் தத்துவப் பிரிவு ஆண்டவனை மறுக்கின்றபோதிலும், ஆன்மாவையும், தேவர்கள் போன்ற மனிதருக்கு மேம்பட்ட உயிரினங்களையும் ஏற்பவர்கள்; பாவ-புண்ணியங்களில் நம்பிக்கை இல்லாத போதிலும் அஹிம்சை நெறியைக் கடைப்பிடிப்பவர்கள் ஆஜீவகர்கள். தனக்கென எந்த உடைமையையும் வைத்துக் கொள்ளாததால் பிச்சை எடுப்பதற்குத் திருவோடுகூட இன்றி வெறும் கைகளிலேயே உணவு வாங்கிப் புசித்தனர் ஆஜீவகத் துறவிகள்.
இன்றைக்கு ஏறத்தாழ வழக்கொழிந்துபோன இந்த மதம் அல்லது தத்துவம், ஒருகாலத்தில் இந்தியாவில் பெரும் செல்வாக்கு படைத்ததாகத் திகழ்ந்ததுடன், கி.பி.14-ஆம் நூற்றாண்டுவரை பின்பற்றுபவர்களைக் கணிசமாகக் கொண்டிருந்தது – என ஏறத்தாழ மறைந்துபோன ஆஜீவகத்தைப் படம்பிடித்துக்காட்டுகிறார்.
இதேபோல் இதர பல தத்துவங்களையும், ஆன்மிக மரபுகளையும் நூலாசிரியர் விவரித்திருப்பதை அவரது வார்த்தைகளிலேயே காண்போம்:
பாரதம் தெய்வத்தைத் தாயாகக் காணும் தத்துவத்தை உலகுக்கு அளித்துள்ளது. அதுவே, தாந்தீரிக பக்தி அதாவது தாய்த் தெய்வம், பெண் தெய்வம் எனப்படும் சக்தியை வழிபடுகின்ற முறைகளாகும். இந்த வழிபாட்டு முறையில் பூஜைகள், வீட்டுச் சடங்குகள், விரதங்கள், பக்திப் பாடல்கள் என அனைத்தும் அடங்கும். சாக்த ஆகமங்களில் இதுகுறித்த உபாசனைகளும், விரதங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. ராஜராஜேஸ்வரி, பரமேஸ்வரி, லலிதாம்பிகை வழிபாடு, ஸ்ரீவித்யா உபாசனை உள்ளிட்டவை தந்திர பக்தி மார்க்கம் சார்ந்தவையே. பழந்தமிழ்நாட்டின் கொற்றவை, பழையோள், நீலி வழிபாட்டு முறைகளும் இப்படிப்பட்டவையே.
உடலை இறைவன் வாழும் கோவிலாக சித்தர்கள் உணர்ந்தனர். ஆகையால் உடலாகிய கோவிலுக்கு உரிய திருப்பணிகள் அதாவது கட்டுப்பாடு, தியானம், யோகப் பயிற்சிகள் ஆகிய திருப்பணிகளைச் செய்து, உள்ளிருக்கும் இறையை உய்த்துணர்ந்து ஆராதித்தனர். உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
என்றும் உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானுக்கு வாய்கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே
என்றும் திருமூலர் பாடியிருப்பது இங்கே நோக்கத் தக்கது.
அன்னியப் படையெடுப்புகள் பாரதத்துக்குப் புதியதல்ல. ஆனால் மத்திய ஆசிய முகமதியர்களும், ஐரோப்பிய கிறிஸ்தவர்களும் படையெடுப்பு மேற்கொண்டதன் நோக்கங்களும் விளைவுகளும் புதியவை.
இத்தகைய சூழலில்தான் பாரதத்துக்கு வியாபாரம் என்ற பெயரில் வந்த ஐரோப்பியர்கள், இங்குள்ளவர்களுக்கு உலகச் சிந்தனை இருக்கின்ற அளவுக்கு தேசச் சிந்தனை இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, தங்களது அரசியல், மத விஸ்தரிப்பு வேலைகளையும் தொடங்கினர். அதுவரை ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்று வாழ்ந்துவந்த பாரதத்தின் பொதுமக்கள் சமுதாயம், ஐரோப்பியர்கள் குறிப்பாக, ஆங்கிலேயர்கள் இங்கு வேரூன்றிய பிறகு மிகப் பெரிய தாக்குதலைச் சந்தித்தது. இதுவரை காணாத வரி வசூல் கொடுமையையும், வறுமையையும் பொதுமக்கள் அனுபவிக்கத் தொடங்கினர்.
இந்தச் சூழலில் பாரதம் முழுவதும் ஆரியசமாஜம், பிரம்மசமாஜம், சமரச சுத்த சன்மார்க்க சங்கம் போன்ற பல தத்துவ அமைப்புகள் தோன்றி மக்களுக்கு ஆறுதலை அளித்துத் தற்கால நிலைமையைப் புரிய வைத்தன.
செப்டம்பர் 11 - அமெரிக்காவின் வாயிலாக அகிலத்தைப் புரட்டிப் போட்ட அற்புத தினம். உலக மக்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர் (வசுதைவ குடும்பகம்) என்ற பாரதத்தின் அதி உன்னத சகோதரத்துவ தத்துவத்தை உலகம் உணர்ந்துகொண்ட தினம். பாம்பாட்டிகளின் தேசம் என்று அதுவரை பரிகசித்து வந்த பாரதத்தை மேலைநாட்டினர், பாருக்கே வழிகாட்டி என்று கொண்டாடத் தொடங்கியதற்கு பிள்ளையார் சுழி போட்ட தினம் செப்டம்பர் 11, 1893 (அன்றைய தினமே விநாயக சதுர்த்தி நாள்தான்). 1893-ஆம் ஆண்டின் அன்றைய தினத்தில்தான் கீழைநாட்டின் ஞானசூரியன் மேலைநாட்டில் உதயமானது. ஆம்! சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் அன்றைய தினம் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில்தான், தனது நாவசைவால் பாரதத்தின் ஞானக்கதிர்களை உலகெங்கும் பாய்ச்சினார்.
ஹிந்து மதத்தின் பெருமையை உலகறியச் செய்தவர் சுவாமி விவேகானந்தர் என்றால், அவரை உலகுக்கு வழிகாட்டும் துறவியாக அறிமுகம் செய்தவர் அவரது குருவும் மாபெரும் ஞானியுமான ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். பாரதத்தின் குரு-சிஷ்ய பரம்பரை எப்படி இருக்கும் என்பதற்கு உன்னத எடுத்துக்காட்டு இவர்கள் இருவரும். குருவால் சீடருக்குப் பெருமை, சீடரால் குருவுக்கு மகிமை. சிவ-சக்தியின் வித்தியாசமான வெளிப்பாடுகள் இவர்கள் இருவரும்.
வேத புராணங்களில் சொல்லப்படும் மூர்த்திகளெல்லாம் ஒரே பரமாத்மாவின் கலைகள் (அம்சங்கள்) என்பதை ஹிந்துக்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது என்று மகாகவி பாரதியார் அறிவுறுத்துகிறார்.
ஹிமாலயம் சமாரம்ப யாவத் இந்து ஸரோவரம் யம் தேவம் நிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் பிரசக்ஷதே என்கிறது பழங்கால சம்ஸ்கிருத சுபாஷிதம் நம்மைக் கலாச்சார ரீதியாக ஒன்றுபடுத்துகிறது.
இறைவன் எங்கோ வானில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. நம்மோடும், நாம் காணும் அனைத்திலும் கலந்திருக்கிறார். ஆண்டவன் உண்டு என்றால், அது நமக்குள்ளே உண்டு என்று பொருள் – இவ்வாறாக பல்வேறு தத்துவார்த்தங்களை விளக்கிக் கூறும் இந்நூல், பாரத ஆன்மிக அகநோக்கிற்கான ஓர் ஆராய்ச்சிக் களம். சாதாரண நம்பிக்கை முதல் சசஸ்தவாதம், ஆஜீவகம் போன்ற பலர் அறியா தத்துவங்களையும் விளக்கிச் சொல்கிறார் நூலாசிரியர்.
இந்தப் பிரபஞ்சத்திற்கான ஆதார சக்தி எதுவோ அதுவாகவே நீ இருக்கிறாய் என்ற வேத வாக்கியத்தை நிறைவாக முன்நிறுத்துகிறார்.
இந்திய மரபு நம்பிக்கை, நாத்திகம் எனத் தொடங்கி மனிதர்கள் எத்தனையோ மதங்கள் அத்தனை என்ற ஸ்ரீராமகிருஷ்ணரின் சுருக்கமான விளக்கமான வாக்குடன் தமது தத்துவ தரிசனமாகிய ‘பாரத தரிசன’த்தை நிறைவு செய்கிறார் நூலாசிரியர்.
ஆசிரியர் திரு. அனந்தபத்மநாபன் (பத்மன்) பொருளாதாரம், இலக்கியம், ஆன்மிகம், சமூகம், அரசியல் தொடர்பாக ஏராளமான கட்டுரைகளை எழுதியவர்.
அவற்றையெல்லாம் கடந்த ஓர் ஆன்மிக கருத்துக் களஞ்சியமாக இந்த நூலை யாத்துள்ளார்.
இந்த நூல் ஆன்மிக அன்பர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இதைப் பலரும் படித்து ஆன்மிகத் தெளிவு பெற பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பிரார்த்திக்கிறேன்.
இறைவன் தொண்டில்
சுவாமி விமூர்த்தானந்தர்
மேலாளர், ஸ்ரீராமகிருஷ்ண மடம்
நுழைவாயில்
ஆன்மீகம் என்றதும் பெரும்பாலானோர் நினைப்பதும், பின்பற்றுவதும் பக்தி சார்ந்ததாகவே இருக்கிறது. உண்மையை நோக்கிய வழிகாட்டுதலான ஆன்மீகம், வெறும் வழிபாட்டோடு சுருங்கிவிடுவதில்லை. நம்மை வழிபடுத்துவதற்கான தொடக்கம் மாத்திரமே பக்தி.
உண்மையில் ஆன்மீகம் என்பது சுயத்தின் தேடுதல், இருப்பின் ஆதாரத்தை
அறிய முனைதல். இதற்கான விடையை முழுமையாகத் தருவது ஞான மார்க்கமாகிய தத்துவ விசாரணையே. விடை ஒன்றுதான். ஆனால் அதனை அடைவதற்கான வழிமுறைகளும், சூத்திரங்களும் வேறுபடுகின்றன. விடைக்கான விளக்கங்களும் வித்தியாசப்படுகின்றன. அனுபவமே சிறந்த ஆசான். அந்த அனுபவம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுவதால்தான் அதற்கேற்ப தத்துவங்களும் மாறுபடுகின்றன.
உலகின் ஆன்மீகத் தொட்டிலாகிய நமது பாரதத்தில் தோன்றியுள்ள எண்ணற்ற தத்துவங்கள் மீது எனக்கு எப்போதுமே ஓர் ஆச்சர்யம் கலந்த ஆர்வம் உண்டு. இதன் மாறுபட்ட சுவைகளால் ஏற்படும் வியப்பைவிட, முரண்படும் இவற்றுக்குள்ளே இயல்பாக அமைந்துள்ள இணக்கமே எனக்கு மிகப் பெரிய வியப்பாக அமைந்துள்ளது.
இந்த வியப்பையும் வியத்தகு தத்துவங்களையும் வாசகர்களுடன் வாராவாரம் பகிர்ந்துகொள்வதற்கான நல்லதொரு வாய்ப்பை வழங்கிய தினமணி டாட் காம் இணையதளத்துக்கும், இக் கட்டுரைத் தொடரை எழுதுமாறு என்னை ஊக்குவித்த அதன் பொறுப்பாசிரியரான நண்பர் திரு. பார்த்தசாரதிக்கும் நன்றிகள் பல.
தத்துவ தரிசனம் நூலுக்கு மிகச் சிறந்த ஆசியுரை வழங்கியுள்ள சென்னை ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தஜி மஹராஜ் அவர்களுக்கும் எனது பணிவன்புடன் கூடிய நன்றிகள். இணையத்தில் வெளியான கட்டுரைத் தொடரை வாசித்து பாராட்டுகளும், விமர்சனமும் உடனுக்குடன் அளித்ததுடன் இத்தொடர் நூலாக வெளிவர வேண்டும் என்று ஆர்வத்துடன் வாழ்த்திய வாசக அன்பர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
நமது ஆன்மீகப் பயணத்துக்காக நமது முன்னோர்கள் வகுத்தளித்துள்ள பல்வேறு பாதைகளை என்னால் இயன்றவரை இதன்மூலம் எடுத்துரைத்துள்ளேன். இந்நூல் மூலம் பல்வேறு தத்துவப் பாதைகளை உங்களுக்கு இனங்காட்டுவது மட்டுமே எனது வேலை. இதில் எந்தப் பாதையில் பயணிப்பது என்பதோ அல்லது இது ஏதும் அல்லாமல் புதிதாக ஒரு பாதையைப் படைத்துக்கொள்வதோ உங்கள் விருப்பம்.
அன்புடன் பத்மன்
1. நம்பிக்கை தாண்டிய உண்மை
ரத்தம் செத்தவன் தத்துவம் பேசுவான் என்றொரு சொலவடை உண்டு. ரத்தம் சுண்டிப்போன வயதான நபர்களின் அங்கலாய்ப்புதான் தத்துவம் என்பதான பொருளில் இந்தச் சொலவடை உருவாகியிருக்கிறது. இது மிகவும் தவறான கருத்து.
ரத்தம் சுண்டிப்போனவர்களின் கையாலாகாத போதனைகள் அல்ல தத்துவம். வேறுசிலர் நினைப்பதைப்போல ரத்தத்தைச் சூடாக்கி ரணகளப்படுத்தும் தந்திர உபாயங்களும் அல்ல தத்துவம். ரத்தினச் சுருக்கமாகச் சொன்னால், நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளிவிளக்குகளே தத்துவம். வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வைக்கும் அதிஅற்புத சாதனமே தத்துவம்.
தத்துவம் என்பதன் பொருள், தத் துவம் என்று பிரித்து நோக்கினால் அதன் தன்மை என்பதாகும். தத் என்றால் அது என்று பொருள். துவம் என்பது தன்மை என்பதைக் குறிக்கும் பின்னொட்டு. அதனுடைய தன்மை, அதாவது இந்த உலகின் தன்மை, இதில் வாழுகின்ற வாழ்க்கையின் தன்மை, அதை அனுபவிக்கின்ற நான் என்பதன் தன்மை ஆகிய அனைத்து அதுக்களின் தன்மைகளையும் ஆராய்ந்து அறிந்த கோட்பாடுகளே தத்துவம்.
இதே தத் துவம் என்பதற்கு வேறு வகையிலும் பொருள் காட்டப்படுகிறது. தத் என்றால் அது, துவம் என்றால் நீ என்று பொருள். ஆக, அதுவே நீ என்று அர்த்தம். இதில் இருந்துதான் வேத மகாவாக்கியமாகிய தத்வமஸீ –‘நீயே அதுவாக இருக்கிறாய்’ – உருவானது. ஒவ்வொரு நானும் இங்கே நீ என்று சுட்டப்படுகிறது.
நீ எதுவாக இருக்கிறாய்? ‘இந்தப் பிரபஞ்சத்தின் ஆதார சக்தி எதுவோ அதுவாகவே அதன் பகுதியாகவே நீ இருக்கிறாய்’ என்பது இதன் பொருள். ‘அண்டத்தில் உள்ளதை பிண்டத்தில் காண்பாய்’ என்பது முன்னோர் வாக்கு. இந்தப் பேரண்டத்தின் தன்மை, அது இயற்கையோ, இறைவனோ அதன் சாரம், இதில் உருவாகியுள்ள அனைத்து வஸ்துக்களிலும் உள்ளது. நவீன விஞ்ஞானமும் அதைத்தான் சொல்கிறது.
அனைத்து வஸ்துக்களிலும் உள்ள அது, நமக்குள்ளும் இருக்கிறது. நம்மைச் சுற்றிலும் இருக்கிறது. நம்மில் இருந்து வெளியிலும் இருக்கிறது. அந்த அது எது? அதைப் பற்றிய நமது முன்னோர்களின், முனிவர்களின், சித்தர்களின், ஞானிகளின் ஆய்வுகளில் விளைந்தவையே தத்துவங்கள்.
இந்த உலகில் மிகப் பெரிய இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று உண்மை, மற்றொன்று நம்பிக்கை. உண்மை என்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்படுவது. அது நிரந்தரமானது, மாறுபாடு இல்லாதது. நம்பிக்கை என்பது ஆய்வுகளுக்கு உட்படுத்தாமல் நாம் ஏற்றுக்கொள்வது. அது நிரந்தரமற்றது, மாறுபடக்கூடியது.
ஆனால் விசித்திரம். மாறுபடக்கூடிய நம்பிக்கையில் நாம் விடாப்பிடியான உறுதி காட்டுகிறோம். மாற்றம் இல்லாத உண்மையோ, பல மாறுபாடுகளோடு நம் முன் காட்சி தருகிறது. ரயிலில் நாம் வேகமாகப் பயணம் செய்யும்போது, ஜன்னல் வழியே பார்த்தால், வெளிப்புறத்தில் நிலையாக நிற்கும் மரங்களும், கட்டடங்களும் வேகமாகப் பின்னோக்கிச் செல்லும். வேகமாக முன்செல்லும் ரயிலோ ஒரே இடத்தில் நிலையாக நிற்பதுபோல் தோன்றும்.
இது தோற்ற மயக்கம். இந்தத் தோற்ற மயக்கத்தை நாம் உண்மை என்று கொள்வோமோ? இல்லையே! அதுபோல்தான் உண்மையை ஆராயப் புகும்போது பல தோற்ற மயக்கங்கள் தோன்றுகின்றன. இந்த மயக்கங்களை விடுத்து உண்மையை ஊடுருவிப் பார்ப்பதே தரிசனம். கண்களுக்குத் தென்படும் காட்சிகளை நம்புவதல்ல தரிசனம், காட்சிகளைக் கடந்து அதன் உட்பொருளை உய்த்துணர்வதே தரிசனம்.
நமது பாரத தேசத்தின் ஆன்றோர்கள், வெறும் நம்பிக்கையின் பாற்பட்டு தத்துவங்களை தரிசிக்கவில்லை. உண்மையை உய்த்துணர்ந்தே உரைத்திருக்கிறார்கள். வெளிநாட்டு மதங்கள், தத்துவங்களைப் போல இதைத்தான் நீ நம்ப வேண்டும், இதுமட்டுமே உண்மை, பெரியவர் ஒருவர் சொல்லிச் சென்ற கருத்தில் எந்த மாற்றத்துக்கும் இடமில்லை
போன்ற சர்வாதிகாரம், வறட்டுப் பிடிவாதத்துக்கு அவர்கள் இடம் தரவில்லை. மாறாக, மாறுபடு அனுபவங்கள், மாறுபடு கோணங்கள் உள்ளிட்டவற்றால் ஒற்றை உண்மையே பல்வேறு மாற்று வடிவங்களில் காட்சி தருவதை அவர்கள் உணர்ந்து ஏற்றுக்கொண்டார்கள்.
ஏனெனில் உண்மை ஒன்றாக இருந்தபோதிலும் அதன் தோற்றங்கள், அதனைப் பற்றிய புரிந்துகொள்ளல்கள் வேறானவை. உதாரணத்துக்கு, ஒரு மனிதர் அவருடைய பெற்றோருக்கு மகன், மனைவிக்கு கணவன், பிள்ளைகளுக்குத் தகப்பன், ஆசிரியருக்கு மாணவன், மேலதிகாரிக்கு ஊழியன், சக ஊழியர்களுக்கு நண்பன், பிடிக்காதவர்களுக்கு எதிரி என்று பல்வேறு பாத்திரங்களைத் தாங்கி நிற்கிறார். இதில் ஏதேனும் ஒன்று மட்டுந்தான் உண்மை என்று கொள்ள முடியுமா? இவை அனைத்தும் அந்த ஒற்றை மனிதரின் பல்வேறு தோற்றங்கள்தானே! இதைப்போல்தான் உண்மையும், பல்வேறு தோற்றங்களில் உள்ளது.
இது ஒருபுறம் இருக்கட்டும். வேறு ஓர் உதாரணத்தைக் காண்போம். ஒருவர் நடுவீதியில் விழுந்து மயங்கிக் கிடக்கிறார். அவர் பசியில் மயங்கிக் கிடப்பதாக ஒருவர் நினைக்கிறார். வேறு ஒருவர் அவரை யாரோ அடித்துப் போட்டுவிட்டுச் சென்றிருப்பதாக எண்ணுகிறார். மற்றொருவர் அவர் குடித்துவிட்டு விழுந்து கிடப்பதாகக் கருதுகிறார். யாரும் அருகில் சென்று பார்க்க இயலாத சூழ்நிலை. அத்தகு சூழ்நிலையில் யாருடைய எண்ணம், கருத்து அல்லது நம்பிக்கை உண்மையானது. உறுதிப் படுத்தப்படும்வரை எல்லாவற்றுக்குமே வாய்ப்புள்ளது. இந்தச் சிறிய விஷயத்தில் உண்மையை அறிவதற்கே பல்வேறு ஊகங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் சம வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், பேருண்மையை அறிவதற்கு அதனை மறுதலிக்க முடியுமா?
ஆக, உண்மை ஒன்றுதான் என்ற போதிலும் அது எல்லாவித நம்பிக்கைகளுக்கும் சமவாய்ப்பு அளிக்கிறது. எனவே, நம்முடைய கருத்தில் நாம் உறுதியாக இருந்தாலும், மாற்றுக் கருத்து உடையவரின் கருத்தையும் நாம் மதித்தாக வேண்டும். ஏனெனில், உள்ளது உள்ளபடி உண்மை இதுவரை முழுமையாக விளங்கிக் கொள்ளப்படவில்லை என்பதே உண்மை. அதனால்தான் நமது முன்னோர்கள் ‘ஏகம் சத், விப்ரா பஹுதா வதந்தி’ என்றார்கள். அதாவது உண்மை ஒன்றுதான், அறிஞர்கள் அதனைப் பல விதங்களில் சொல்கிறார்கள்
என்றனர்.
ஒற்றை உண்மையை அவரவர் கண்ணோடத்தில், அவரவர் அனுபவத்துக்குத் தகுந்தபடி உரைக்கிறார்கள் என்று அனைத்து கருத்தாக்கங்களுக்கும் சம வாய்ப்பு, சம மதிப்பு தந்து ஏற்றுக்கொண்டனர் பாரதத்தின் சான்றோர்கள். நமது முன்னோர்களின் இந்தப் பண்பட்ட எண்ணம்தான், வேற்றுமையில் ஒற்றுமை என்ற மகத்தான தத்துவத்தை உலகுக்குத் தந்தது. தத்துவப் பெருக்கங்கள் இங்கே தழைத்தோங்கியதற்கு அதுவே காரணம்.
வெளிநாட்டு அறிஞர்களைப்போல பாரதத்தின் முனிவர்களும் யோகிகளும் இதுதான், இதுதான் என்று தாங்கள் கண்டறிந்த உண்மையின் ஓர் துளியை வைத்துக்கொண்டு திருப்திப்படவில்லை, பிறருக்கு வலியுறுத்தவில்லை. மாறாக, ந இதி எனப்படும் நேதி, நேதி (அதாவது இதுவன்று இதுவன்று) என்று தேடலை விரிவுபடுத்தி, மெய்ஞான ஆய்வை மென்மேலும் விரித்துக்கொண்டே சென்றார்கள். இது அவநம்பிக்கை அல்ல. நம்பிக்கைச் சிறைக்குள் சிக்கிக் கொள்ளாமல் உண்மையை தரிசிப்பதற்கான முயற்சி, தவம்.
மாற்றுக் கருத்துகளைப் பேசக்கூடாது என்று நம் முன்னோர்கள் தடை செய்யவில்லை. மாறாக, விவாதித்தார்கள். விவாதத்தில் வெற்றி பெற்ற தத்துவம் அதற்குரிய காலம் வரை கோலோச்சியது. அதற்குப் பின் மாற்றுத் தத்துவம் மேலோங்கியபோது தன்னை சுயபரிசோதனை செய்துகொண்டு மேம்படுத்திக்கொண்டது. புதிய பொலிவுடன் போட்டியைத் தொடர்ந்தது.
இந்தியாவில் தோன்றிய எந்தவொரு தத்துவமும் போதிய ஆதரவாளர்களின்றி நசிந்து போயிருக்கலாம், திரிந்து போயிருக்கலாம் ஆனால் முற்றிலுமாக அழிந்து போய்விடவில்லை. கண்டிப்பாக, அழிக்கப்படவுமில்லை.
ஆகையால் தான், கடவுளோ ஆன்மாவோ இல்லை என்று கூறும் நாத்திகமான சார்வாகம், பொருள்களின் சேர்க்கைதான் உலகம் என்று கூறும் லோகாயதம்; ஆன்மா உண்டு ஆண்டவன் இல்லை என்று கூறும் சமணம், ஆண்டவனைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் வாழ்வியலை போதிக்கும் பௌத்தம்; பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஆராய்ந்து ஆன்மாவை வலியுறுத்தி ஆண்டவனை மறுக்கும் சாங்கியம், அணுக்களின் சேர்க்கைதான் உலகம் என்று கூறும் வைசேஷிகம், காரண – காரிய வாதங்களை அலசி ஆராயும் நியாயம், உடல்-மன கட்டுப்பாடுகள், பயிற்சிகள் மூலம் உண்மையை அறிய முயலும் யோகம், வேள்விகள் உள்ளிட்ட கடமைகளைச் செய்வதை வலியுறுத்தும் மீமாம்சை, தத்துவ விசாரணையையும் கடவுளையும் வலியுறுத்தும் வேதாந்தம் அதன் உட்பிரிவுகளான அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம், துவைதாத்வைதம், அபேதபேதவாதம்; இந்த வேதாந்தத்தில் இருந்து வேறுபட்டு சிவமே பரம் என்றுகூறும் சித்தாந்த சைவம்; சித்தாந்த சைவத்தோடு முரண்பட்ட பாசுபதம், காளாமுகம், காபாலிகம்; மந்திர-தந்திர-யந்திர வழிபாட்டை முன்னிறுத்தித் தோன்றிய தாந்திரீகம்; வழிபடு கடவுளை வரித்துக்கொண்டு எழுந்த சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம், சௌரம், ஐந்திரம்; பிற்காலத்தில் தோன்றிய சீக்கியம், பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், ராமகிருஷ்ண இயக்கம், வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம் உள்ளிட்ட பல்வேறு தத்துவங்கள் இந்தியாவில் பல்கிப் பெருகின, பெருகி வருகின்றன.
இதுபோன்ற தத்துவங்களை ஒவ்வொன்றாகக் காண்போம். இதில் முதலாவதாக, நாத்திக தரிசனத்தை அடுத்த அத்தியாயத்தில் காண்போம்.
2. இந்திய மரபில் நாத்திகம்
கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்
என்பது மிகச் சிறந்த சொலவடை. ‘உண்மையைக் கண்டவர்கள் இதுவரை அதுபற்றிச் சொன்னதில்லை, கண்டதாக எடுத்துரைப்பவர்கள் கண்டதில்லை’ என்பது இதன் பொருள். சற்று விளக்கமாகப் பார்த்தால், உண்மை யாது என்பதை ஆராய்ந்து அறிந்தவர்கள் அதுபற்றி அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முழுமையாக விளக்கிச் சொல்லவில்லை; அதேபோல் உண்மை பற்றிய வியாக்கியானங்களைக் கொடுப்பவர்கள் அனைவராலும் ஏற்கும் வகையில் அதனைக் கூறாததால் அவர்களும் முழுமையாகக் கண்டதில்லை என்று இதனைப் புரிந்து கொள்ளலாம்.
ஆக, உண்மை இதுவரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவாக இல்லாததால், ஆய்வுகளும் தொடர்கின்றன. தத்துவ மோதல்களும் நீடிக்கின்றன. இந்த மோதல்களில் முதன்மையானது’ கடவுள் இருக்கிறதா? இல்லையா? என்பதே. பெரும்பாலானவர்கள், இந்தப் பிரபஞ்ச சக்தியின் ஆதாரமாக இருப்பது, இதையெல்லாம் ஆட்டுவிப்பது ஆண்டவன் என்று கருதுகிறார்கள். இந்தக் கடவுள் கோட்பாட்டைத்தான் அவர்கள் உண்மை என்று கருதுகிறார்கள். ஆனால் அவ்வாறாகிய கடவுளை மறுத்து, அனைத்தும் இயற்கையே என்று வாதிப்போரும் உண்டு. இவ்வாறான கடவுள் மறுப்பாளர்கள், நாத்திகர்கள் என்று பொதுவாகக் கூறப்படுகிறார்கள்.
ஆங்கிலத்தில் ‘எத்திஸ்ட்’ என்ற சொல், கடவுள் மறுப்பாளர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது… ஆங்கிலச் சொல்லான THEE (தீ) ஆண்டவனைக் குறிக்கிறது. அதுபற்றிய இஸம், அதாவது கோட்பாடு தீயிஸம் ஆகும். அதற்கு எதிர்மறையான எத்திஸம், ஆண்டவன் இல்லை என்று கூறுவது.
ஆனால், பாரதத்தின் விசேஷ குணம் இந்தப் பிரபஞ்ச உண்மையை அதாவது உட்பொருளை கடவுள்தான் என்று அடித்துச் சொல்லவில்லை. ஏனெனில் இதுவரைக்குமான ஆய்வுகளில் முடிவான முடிவு என்று எதுவும் கிடைக்கவில்லை என்பதை பாசாங்கு செய்யாமல் பக்குவமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். ஆகையால் பாரதப் பாரம்பரியத்தில் நாத்திகம் என்று கூறுவது ஆண்டவனை மறுப்பது அல்ல. ஆண்டவனை மறுப்பதற்கு நிரீஸ்வரவாதம் என்று பெயர்.
அப்படியானால், இந்தியத் தத்துவ மரபில் நாத்திகம் என்பதன் பொருள் என்ன? நாத்திகம் என்ற சொல், ந அஸ்தி என்ற இரண்டு சொற்களின் கூட்டில் உருவானது. பின்னொட்டான இகம் என்பது இஸத்தைக் குறிக்கிறது. முன்குறிப்பிட்ட இரண்டு சொற்களில், அஸ்தி என்பது இருக்கிறது என்பதையும், ந என்பது இல்லை என்பதையும் குறிக்கிறது. என்ன இருக்கிறது? என்ன இல்லை?
இந்திய ஆன்மிகத் தத்துவங்கள், இந்த உடலையே நான் என்று கருதுவதில்லை. நமது உடலில் இருந்து வேறுபட்ட ஓர் தன்மையின் இருப்பை அவை கூறுகின்றன. அதுதான் ஆத்மா. இந்த ஆத்மா அதாவது ஆன்மாவின் பயணமே வாழ்க்கை. அந்த வாழ்க்கை மரணத்தோடு முடிந்துவிடவில்லை. மரணத்துக்குப் பின்பும் தொடர்கிறது. ஏன்? அதற்கு ஓர் இலக்கு, இலட்சியம் இருக்கிறது. அந்த இலக்குதான் முக்தி (விடுதலை). ஆன்மா முக்தியடைவதே வாழ்க்கையின் மிகச் சிறந்த பேறு. அதுவே வீடு பேறு.
அந்த வீடு என்பது இறைவனின் பாதார விந்தமா, இறைவனோடு ஒன்றிணைவதா, அல்லது இயற்கையோடு கலந்துவிடுவதா என்பது வேறு ஆய்வுக்கான விஷயங்கள். ஆயினும் உடலில் இருந்து வேறுபட்ட ஓர் சக்தி, தன்மை இந்த உடலுக்குள் உறைகிறது. அந்த ஆன்மா எனப்படும் ஆத்மாவை உண்டு என்று ஏற்பதே ஆத்திகம். அவ்வாறு ஆத்மா ஏதும் இல்லை என்று மறுப்பதே நாத்திகம். மேலைநாட்டுத் தத்துவங்கள் அல்லது வெளி மதக் கோட்பாடுகளைப்போல் இந்தியாவில் ஆண்டவனை மறுப்பதற்குப் பெயர் அல்ல நாத்திகம், ஆன்மாவை மறுப்பதே நாத்திகம் எனப்படும். அதனால்தான் ஆண்டவனை மறுக்கின்ற அல்லது உறுதிப்படுத்தாத சமணம், பௌத்தம் ஆகிய இந்தியச் சமயத் தத்துவங்கள் தங்களை ஆத்திகவாதிகள் என்றும் லோகாயதம் அல்லது சார்வாகக் கருத்தைச் சார்ந்தவர்களையே நாத்திகவாதிகள் என்றும் கூறுகின்றன.
லோகாயதமும் சார்வாகமும் வேறு வேறா அல்லது ஒன்றா? என்பதில் குழப்பம் நிலவுகிறது. தொடக்கத்தில் இரண்டும் வேறு வேறாக இருந்திருக்கலாம் என்றும் ஆண்டவன் மறுப்பு, ஆன்ம மறுப்பு, இன்பவியல் கோட்பாடு ஆகிய ஒத்த கருத்துகளால் காலப்போக்கில் இரண்டும் ஒன்று கலந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சரி, ஆண்டவனை ஏற்பவர்களோடு ஆண்டவனை மறுக்கின்றவர்களும் நாத்திகம் என்று கூறுகின்ற லோகாயதம் அல்லது சார்வாகம் என்பது என்ன? லோகாயதம் என்ற சொல், லோகம் ஆயதம் என்ற இரண்டு சம்ஸ்கிருதச் சொற்களின் கூட்டுச் சொல்லாகும். லோகம் என்பது பொருட்களால் ஆன இந்த உலகத்தைக் குறிப்பது. ஆயதம் என்றால் நடைமுறை, சார்ந்தது என்று பொருள். ஆக, லோகாயதம் என்பது, பொருள் சார்ந்ததே உலகம் என்று கூறுகிற தத்துவமாகும். உலகில் முதன்முதலில் பொருள்முதல் வாதம் பேசிய தத்துவம் இதுவாகத்தான் இருக்கும். இது இன்றைய கம்யூனிஸத்துக்கு முன்னோடியாகும்.
சார்வாகம் என்ற சொல் சாரு வாக் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டாகும். சாரு என்றால் கவர்ச்சிகரமான, கவரக்கூடிய வகையில் என்றும் வாக் என்றால் வார்த்தைகள் என்றும் அர்த்தம். ஆக, சாருவாகம் என்றால் கவர்ச்சிகரமான வார்த்தைகளைப் பேசுகின்ற தத்துவம் என்று பொருள். இன்றுவரை கடவுள் இல்லை என்று கூறுபவர்களின் வார்த்தைகள் கவர்ச்சிகரமாகத்தானே இருக்கின்றன. லோகாயதம், சார்வாகம் ஆகிய பெயர்களிலே சுட்டப்படுகின்ற நாத்திக வாதத்தின் சாரம், உலகின் தோற்றம் இயற்கையானது, உடலைத் தாண்டி ஆன்மா என்று எதுவுமில்லை, உலகைத் தாண்டி சொர்க்கம் - நரகமோ ஆண்டவனோ எதுவுமில்லை
என்பதே.
இந்த உலகில் உள்ள எல்லாமே பொருட்களால் ஆனவை. ஆகையால் பொருட்களின் சேர்க்கையே இந்த உலகுக்கும், பிரபஞ்சத்துக்கும் இதில் காணப்படும் உயிரினங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் காரணம்
என்கிறது லோகாயதம்.
நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு பூதங்கள் (அதாவது பொருள் மூலங்கள்) சேர்ந்து உருவானதே இந்த உலகம். இந்த உடல், உலகில் தோன்றிய பொருட்களின் சேர்க்கையால் உருவாகிறது. இதில் ஏற்படும் புத்தி, ரசாயனங்கள் போன்ற பொருட்களின் சேர்க்கையால் உருவாவது. இதைத் தாண்டி உயிர் என்றோ ஆன்மா என்றோ எதுவும் இல்லை. உடல்தான் உயிர். உடல் அழிந்ததும் உயிரும் அழிந்துவிடுகிறது. அது ஆன்மா என்ற பெயரில் தனியாகப் பிரிந்து மறு பிறப்பையோ முக்தியையோ அடைவதில்லை. உடல் அழிந்தால் உயிரும் அழியும் அவ்வளவே என்கிறது லோகாயதம்.
இதனை தேகாத்மவாதம், பூதசைதன்யவாதம் என்றும் கூறுவார்கள். தேகமே ஆத்மா என்று வாதிடுவதால் தேகாத்மவாதம் என்றும், பொருள்களின் மூலங்களான பூதங்களின் சேர்க்கையால் சைதன்யம் எனப்படும் அறிவு தோன்றுவதாக வாதிடுவதால் பூதசைதன்யவாதம் என்றும் இதற்குப் பெயர்கள் அமைந்தன.
ஆகாயம் என்ற ஐந்தாவது பூதத்தை லோகாயதர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஏனைய இந்திய தத்துவங்கள், பிரத்யட்சம் (கண்ணால் காண்பது அல்லது நேரடியாக உணர்வது), ஊகம், ஆப்த வசனம் (நம்பத் தகுந்தவர்கள் கூறுகின்ற வாக்கு அல்லது ஏற்கெனவே ஆய்ந்து அறிந்தவர்கள் கூறுகின்ற வாக்கு) ஆகிய மூன்றையும் எந்தவொரு விஷயத்தையும் நிரூபிப்பதற்கான பிரமாணங்களாக (அடிப்படைகளாக) ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் லோகாயதம் என்றும் சார்வாகம் என்றும் சுட்டப்படுகின்ற நாத்திகம், பிரத்யட்சத்தை மட்டுமே பிரமாணமாக எடுத்துக்கொள்கிறது. ஆகையால் கண்ணால் காண முடியாத ஊகத்தால் அறியக்கூடிய, உடல் அற்றது என்று பொருள்படக்கூடிய ஆகாயத்தை ஐம்பெரும் பூதங்களில் ஒன்றாக லோகாயதர்கள் ஏற்பதில்லை. (அவர்களுக்கு காயமே (உடலே) உயிர் எனும்போது, ஆகாயம் எப்படி ஏற்புடையதாக இருக்கும்?) எனினும், உண்மையை நிரூபிக்க பிரத்யட்சம் மட்டுமே போதாது, ஊகமும், ஆப்தவசனமும் அதற்குத் தேவை என்று பிற தத்துவங்கள் வாதிட்டு, தங்களை நிலைநிறுத்திக்கொள்கின்றன.
வாழ்வது ஒருமுறை வாழுங்கள் கவர்ச்சியாய்
என்றொரு ஆடை விளம்பரம் சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பிரபலம். அதேபோல்தான் லோகாயதர்களும் வாழ்வது ஒருமுறை அதனை இன்பமாகக் களியுங்கள், இதில் லட்சியம் (அதாவது முக்தியை அடைவது) என்று எதுவுமில்லை
என்று கூறுகிறார்கள். அந்த வகையில் இதனை இன்பவியல் கோட்பாடு, நுகர்வுக் கோட்பாடு என்றும் கூறலாம்.
நன்கு புசியுங்கள், மது குடித்துக் களியுங்கள், வேண்டுமளவுக்கு கலவியின்பம் புரியுங்கள் என்று வரையில்லா இன்ப நுகர்வை லோகாயதம் வலியுறுத்துவதாக சமணம், பௌத்தம், வைதீகம் (வேதம் சார்ந்த தத்துவங்கள்) உள்ளிட்ட இதர சமயங்கள், தத்துவங்களை எடுத்துரைக்கும் நூல்களின் வாயிலாக அறிய முடிகிறது. இந்த வரையற்ற இன்ப விழைவு காரணமாக, லோகாயதர்கள் ஒழுக்கமற்றவர்களாக இருந்தார்கள் என்றுகூறி பிற மத நூல்கள் இவர்களைக் கண்டிக்கின்றன.
லோகாயதத்தைப் பின்பற்றுபவர்களின் தவறான நடத்தை காரணமாக அவர்கள் கண்டிக்கப்பட்டாலும்கூட, லோகாயத தத்துவத்தை முற்றிலுமாக பாரதீய மெய்ஞானம் புறக்கணித்துவிடவில்லை. முக்கிய இடம் தந்து கௌரவித்துள்ளது. முற்காலத்தில் வேதங்களைப் படித்து தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் முக்கியமான மூன்று தத்துவங்களைப் படித்திருக்க வேண்டும். த்ரையீ என்றழைக்கப்படும் அந்த மூன்று தத்துவங்கள் லோகாயதம், சாங்கியம், நியாயம் (லாஜிக்) ஆகியவையே. ஆன்வீக்ஸி எனப்படும் தர்க்கவாதக் கலையில் இந்த மூன்றும் கற்றுக்கொடுக்கப்பட்டதாக சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் எடுத்துரைக்கிறது.
இக்காலத்தில் நாத்திகமும் பிராமணீயமும் இருவேறு துருவங்களாக இருக்கின்ற நிலையில், முற்காலத்தில் நாத்திகத்தை வளர்த்தெடுத்தவர்கள் பிராமணர்கள் என்பது ஆச்சர்யகரமான உண்மை. இந்த முரண் சுவையை அடுத்த அத்தியாயத்தில் ருசிப்போம்...
3. லோகாயதமும் வைதீகமும்
பொருள் முதல் வாதம், கருத்து முதல் வாதம் ஆகிய இரண்டின் அடிப்படையில் தத்துவங்கள் ஜனித்தன. இதில் பொருள் முதல் வாதம் சார்ந்தவையே லோகாயதம், ஆசீவகம் (அஜீவகம்) ஆகியவை. வைதீக (வேத நெறியிலான) ஷட்தரிசனங்களில் (ஆறு கண்ணோட்டங்களில்) ஓரளவு வைசேஷிகமும், பூர்வ மீமாம்சையும் பொருள் முதல் வாதத்தை ஒப்புக்கொள்கின்றன.
பிற்காலத்தில் வைதீக முறையைக் கடுமையாக எதிர்த்த லோகாயதம், தொடக்கத்தில் பிராமணர்களால் ஆதரிக்கப்பட்டதாக உபநிஷதங்களும், பண்டைய பௌத்த, சமண இலக்கியங்களும் தெரிவிக்கின்றன. பிராமண ரிஷிகளில் முக்கியமானவர் பிருகஸ்பதி. தேவர்களின் (அமரர்களின்) குல குருவாகவும் ஒரு பிருகஸ்பதி சுட்டப்படுகிறார். வேதங்களில் வழிபடப்படும் தெய்வ வடிவங்களில் பிருகஸ்பதி பிராமணஸ்பதி என்று போற்றப்படுகிறார். பிராமணஸ்பதி என்றால் பிராமணர்களின் தலைவர் என்று பொருள். (பிராமணம் என்றால் பிரும்ம சக்தி, தத்துவக் கோட்பாடு என்றும் பொருள் உள்ளதால் தத்துவக் கோட்பாட்டைத் தந்தவர்களில் உயர்ந்த தலைவர் என்றும் பொருள் கொள்ளலாம்.)
பொருள்களால்தான் உலகம் தோன்றியது என்ற கொள்கையை வலியுறுத்தும் லோகாயதக் கொள்கையைப் படைத்தவர் பிருகஸ்பதி என்று கூறப்படுகிறது. லோகாயதம் பற்றி எடுத்துரைக்கும் நூல், அவரது பெயரால் பாருஹஸ்பத்ய சூத்திரம் (பிருகஸ்பதியால் செய்விக்கப்பட்ட கோட்பாட்டு நூல்) என்றும் அழைக்கப்படுகிறது. வரலாற்று ரீதியில் கி.மு. 6-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் இந்நூலின் முழுமையான மூலவடிவம் தற்போது கிடைக்கப் பெறவில்லை. பிற சமய, தத்துவ நூல்களின் விமர்சனங்கள் மூலமாகவே இதனை பெரும்பாலும் அறிய நேர்கிறது.
ரிக் வேதத்திலேயே லோகாயதக் கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக தத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். வேதங்களிலும் முற்கால உபநிஷதங்களிலும் குறிப்பிடப்படும் ஸ்வபாவ வாதம் (இயற்கைக் கோட்பாடு) என்ற தத்துவமே பிற்காலத்தில் லோகாயதமாக மலர்ச்சி பெற்றது என்றும் கூறப்படுகிறது.
மைத்ரேயனீய உபநிஷதம், பிருகஸ்பதியால்தான் லோகாயதக் கொள்கை படைக்கப்பட்டதாகக் கூறுகிறது. ஆனால் அதற்கான காரணத்தை வேறு விதமாகக் குறிப்பிடுகிறது. தேவர்களின் குருவாகிய பிருகஸ்பதி, அசுரர்களை மயக்குவதற்காக அசுர குருவான சுக்ராசார்யரின் வேடம் பூண்டு உபதேசித்ததே லோகாயதம் என்கிறது மைத்ரேயனீய உபநிஷதம்.
(தேவ குரு பிருகஸ்பதியைப் போல அசுர குரு சுக்ரரும் பிராமணரே. இதில் நாம் அறிய வேண்டிய முக்கிய விஷயம், தற்போது உள்ளதைப்போல பிறப்பின் அடிப்படையில் அன்றி, அக்காலத்தில் கற்றறிந்த அறிஞர்களே பிராமணர்கள் எனப்பட்டனர். யார் வேண்டுமானாலும் பிராமணர் ஆகலாம், அது அடையக் கூடிய தகுதிதான் என்று முற்காலத்தில் இருந்த நிலை, பிற்காலத்தில் மெள்ள மெள்ள அழிந்து பிறப்பின் அடிப்படையிலாக மாறிவிட்டது.)
உயிர்களைப் படைத்த பிரஜாபதியால் (பிரும்மன் என்றும் பொருள் கூறுவர், வேறு சிலர் மக்கள் குழுவின் தலைவர் என்றும் பொருள் சொல்லுவர்), விரோசனன் என்ற அசுர குல அரசனுக்கு உபதேசிக்கப்பட்டதுதான் லோகாயதம் என்றும், அவன் மூலம் அவனது சந்ததியினர் இந்தத் தத்துவத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்றும் சாந்தோக்ய உபநிஷதம் தெரிவிக்கிறது.
ராமாயண காவியத்தில், தந்தை தசரதனின் ஆணையை ஏற்று கானகம் செல்லும் ராமரைச் சந்திக்கும் ஜாபாலி என்ற முனிவர், உலகியல் இன்பங்களைத் துய்ப்பதே வாழ்க்கை என்றும், ஆகையால் அரச பதவியைத் துறந்து கானகம் செல்வது சரியல்ல என்றும் வாதிடுவதாகவும், முன்னோர்களுக்கு திதி கொடுத்தல் போன்ற வைதீகச் செயல்களில் அர்த்தம் இல்லை என்று போதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஜாபாலி முனிவர், லோகாயதவாதி என்று கூறப்படுகிறது.
கன்வ மகரிஷியின் ஆசிரமத்தில் மற்ற தத்துவங்களைவிட லோகாயதம் மிகுந்த செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்ததாக மகாபாரதம் கூறுகிறது. மகாபாரதப் போருக்குப் பின்னர், வேள்வி ஒன்றை நடத்திய தர்மரைச் சந்தித்த சாருவாகன் என்ற பிராமணத் துறவி ஒருவர் (பிராமணர் தோற்றத்தில் வந்த அசுரன் என்றும் விமர்சிக்கப்படுகிறது), போரினால் ஏற்பட்ட அழிவுக்காக பாண்டவர்களைச் சாடுவதுடன், வேள்விச் சடங்குகளால் ஒரு பயனும் இல்லை என்று வாதிடுவதாகவும் மகாபாரதம் சாந்தி பர்வத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்காவதார சூத்திரம் என்ற பௌத்த இலக்கியம், மஹாமதி என்ற லோகாயத பிராமணன் கௌதம புத்தரிடம் விவாதம் செய்ததாகக் கூறுகிறது. இதேபோல், சம்யுக்த நிகாய, அங்குத்தர நிகாய ஆகிய இரு பௌத்த நூல்களில் கௌதம புத்தருடன் இரண்டு லோகாயத பிராமணர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.
இயற்கை வாதம் பேசும் லோகாயதம், பிராமணர்களின் தத்துவங்களில் ஒன்றாகவே மதிக்கப்பட்டது என்பதை கி.மு. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்த ஞானி புத்தகோசர் குறிப்பிடுகிறார். வானவியல், பிரபஞ்சவியல், உலோகவியல், உடல்கூறு ஆகியவற்றை உள்ளடக்கிய லோகாயதம் பிராமணர்களின் ஒரு பிரிவினர் இடையே வழிவழியாகப் பயிற்றுவிக்கப்பட்டது என்பதையும், இதனை பிராமணர்கள் கற்பது வேதக் கல்விக்கு ஒவ்வாதது இல்லை என்று கருதப்பட்டதாகவும் புத்தகோசரின் வாயிலாக அறிய முடிகிறது. லோகாயதம் உச்சதி விதண்டாவாத சத்தம்
என்கிறார் புத்தகோசர்.