Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Soolamani Part - 1
Soolamani Part - 1
Soolamani Part - 1
Ebook421 pages2 hours

Soolamani Part - 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சூளாமணி என்ற சொல் காப்பியத்தின் உயிர்ச்சொல்லாக அமைந்துள்ளதால் அதுவே பெயராக அமைந்து விட்டது என்று வரையறுக்கப்படுகிறது.

தமிழ் காப்பியங்களின் பெயரில் பல்வேறு அணிகலன்கள் அமைந்திருப்பது போல சிலப்பதிகாரம் காலில் அணியும் சிலம்பு பற்றியும், மணிமேகலை இடையில் அணியும் மேகலை பற்றியும், சீவக சிந்தாமணி நெஞ்சில் அணியும் சிந்தாமணி பற்றியும், குண்டலகேசி காதில் சூடும் குண்டலம் பற்றியும், வளையாபதி கைகளில் அணியும் வளையல்கள் பற்றியும் சொல்வது போல சூளாமணி திருமுடியில் அணியும் ஓர் அணிகலன் பற்றி உரைக்கிறது.

கற்றோர்கள் சீவகசிந்தாமணி கவிதை அழகுடையது என்றும், சூளாமணி ஓசை அழகுடையது என்றும் கம்பராமாயணம் இவை இரண்டும் கலந்தது என்றும் கூறுவர்.

மேலும், இந்த நூல் வித்யாதாரர் உலகத்தையும் மண்ணுலகத்தையும் நினைப்பது போல காவியத் தலைவன் திவிட்டன் மண்ணுலக மன்னன் மகன். காவியத் தலைவி சுயம்பிரபை வித்யாதாரர் மன்னனின் மகள்.

இக்காவியத்தில் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் திருமணமே சிறப்புடையது என்பதை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதற்கு உவமையாக பொன்னில் பதிக்க வேண்டிய மாணிகத்தை ஈயத்தில் பதித்து வைத்தாலும் மாணிக்கம் மறுப்பதில்லை. அதுபோல, பெற்றோர் பார்த்து முடிக்கும் திருமணம் எத்தகையது என்றாலும் மணப்பெண் ஏற்றுக் கொள்கிறார் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.

இந்த நூலாசிரியர் 308வது பாடலில் தோலா நாவிற் சுச்சுதன் என்று தன் பெயரை குறிப்பிட்டுள்ளார். அவர் உளவியல் அறிவும், உலகியல் தெளிவும், அரசியல் ஞானமும் பெற்ற சமண சமயத் துறவியாவார்.

கார் வெட்டி அரசன் விஜயன் என்பவன் காலத்தில் வாழ்ந்தவர் என்றும், அவன் வேண்டுகோளை ஏற்று எட்டு வகை சுவைகளும் உறுதிப்பொருள் நான்கும் உள்ள இந்த நூலை இயற்றினார் என்றும் தெரிகின்றது.

சூளாமணி என்னும் இந்தக் காப்பியம், நாட்டுச் சருக்கம் தொடங்கி முக்திச் சருக்கம் வரை 12 சருக்கங்களையும் 2130 பாக்களையும் கொண்டுள்ளது. இந்நூலில் இக்கால நடைமுறைக்கு உகந்தது போல பெரும்பான்மையான நிகழ்ச்சிகளும், சம்பவங்களும் உள்ளதால் தமிழ் கூறும் நல்லுலகம் படித்து பயன் அடையத் தக்க நூலாக விளங்குகிறது.

Languageதமிழ்
Release dateJul 31, 2021
ISBN6580144206859
Soolamani Part - 1

Read more from Azhwargal Aaivu Maiyam

Related to Soolamani Part - 1

Related ebooks

Reviews for Soolamani Part - 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Soolamani Part - 1 - Azhwargal Aaivu Maiyam

    https://www.pustaka.co.in

    சூளாமணி – பாகம் 1

    Soolamani Part – 1

    Author:

    டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்

    Dr. S. Jagathrakshakan
    For more books

    https://www.pustaka.co.in/home/author/azhwargal-aaivu-maiyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கடவுள் வாழ்த்து

    1. நாட்டுச் சருக்கம்

    2. நகரச் சருக்கம்

    3. குமாரகாலச் சருக்கம்

    4. இரதநூபுரச் சருக்கம்

    5. மந்திர சாலைச் சருக்கம்

    6. தூது விடு சருக்கம்

    7. சீயவதை சருக்கம்

    8. கல்யாணச் சருக்கம்

    முன்னுரை

    சூளாமணி என்ற சொல் காப்பியத்தின் உயிர்ச்சொல்லாக அமைந்துள்ளதால் அதுவே பெயராக அமைந்து விட்டது என்று வரையறுக்கப் படுகிறது.

    தமிழ் காப்பியங்களின் பெயரில் பல்வேறு அணிகலன்கள் அமைந்திருப்பது போல சிலப்பதிகாரம் காலில் அணியும் சிலம்பு பற்றியும், மணிமேகலை இடையில் அணியும் மேகலை பற்றியும், சீவக சிந்தாமணி நெஞ்சில் அணியும் சிந்தாமணி பற்றியும், குண்டலகேசி காதில் சூடும் குண்டலம் பற்றியும், வளையாபதி கைகளில் அணியும் வளையல்கள் பற்றியும் சொல்வது போல சூளாமணி திருமுடியில் அணியும் ஓர் அணிகலன் பற்றி உரைக்கிறது.

    கற்றோர்கள் சீவகசிந்தாமணி கவிதை அழகுடையது என்றும், சூளாமணி ஓசை அழகுடையது என்றும் கம்பராமாயணம் இவை இரண்டும் கலந்தது என்றும் கூறுவர்.

    மேலும், இந்த நூல் வித்யாதாரர் உலகத்தையும் மண்ணுலகத்தையும் நினைப்பது போல காவியத் தலைவன் திவிட்டன் மண்ணுலக மன்னன் மகன். காவியத் தலைவி சுயம்பிரபை வித்யாதாரர் மன்னனின் மகள்.

    இக்காவியத்தில் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் திருமணமே சிறப்புடையது என்பதை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதற்கு உவமையாக பொன்னில் பதிக்க வேண்டிய மாணிகத்தை ஈயத்தில் பதித்து வைத்தாலும் மாணிக்கம் மறுப்பதில்லை. அதுபோல, பெற்றோர் பார்த்து முடிக்கும் திருமணம் எத்தகையது என்றாலும் மணப்பெண் ஏற்றுக் கொள்கிறார் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.

    இந்த நூலாசிரியர் 308வது பாடலில் தோலா நாவிற் சுச்சுதன் என்று தன் பெயரை குறிப்பிட்டுள்ளார். அவர் உளவியல் அறிவும், உலகியல் தெளிவும், அரசியல் ஞானமும் பெற்ற சமண சமயத் துறவியாவார்.

    கார் வெட்டி அரசன் விஜயன் என்பவன் காலத்தில் வாழ்ந்தவர் என்றும், அவன் வேண்டுகோளை ஏற்று எட்டு வகை சுவைகளும் உறுதிப்பொருள் நான்கும் உள்ள இந்த நூலை இயற்றினார் என்றும் தெரிகின்றது.

    அந்த மன்னன் தூமாண் தமிழ்க் கிழவன் எனப்படுவதால் தமிழ்ப் பற்று உள்ளவன் என்பதும் திவாகரம் என்னும் நிகண்டை வழங்கிய சேந்தன் இவனே என்பதும் இந்த இரு நூல்களும் சம காலத்தில் உள்ளது என்றும் கருத இடமுண்டு.

    தோலா மொழித் தேவரின் காலம் திருஞானசம்பந்தரின் காலத்திற்குப் பிற்பட்ட காலம் என்பதை அவர் எழுதிய பதிகம் ஒன்றில் உள்ள ஒரு பாடலை பின்பற்றுவது போல கீழ்க்கண்ட பாடலை பாடியுள்ளதன் மூலம் அறியலாம்.

    வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்

    வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக

    ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே

    சூழ்க வையகமும் துயர் தீர்கவே

    என்னும் சம்பந்தர் பெருமானின் திருப்பாடல்  போலவே

    வாழ்நகம் மன்னவன் வாழ்க வையகம்

    ஆழ்கநம் மரும்பகை யலர்க நல்லறம்

    வீழ்கதண் புனல்பயிர் விளைக மாநிலம்

    தாழ்கமற் றருந்துயர் சாற்றக் கேண்மினே

    சமண சமய நூலாகிய பிரதமாநுயோக மகாபுராணத்தில் கூறப்பட்டுள்ள பழைய கதையொன்றனை அடிப்படையாகக் கொண்டது இந்நூல் என்பர். ஆசிரியர் பாயிரத்தில்,

    விஞ்சைக் கிறைவன் விரைசூழ்முடி வேந்தன் மங்கை

    பஞ்சிக் கனுங்குஞ் சிலம்பாரடிப் பாவைபூவார்

    வஞ்சிக் கொடிபோல் பவள்காரண மாகவந்த

    செஞ்சொற் புராணத் துரையின் வழிச் சேறுமன்றே

    எனக் கூறுவதால் இது பழங்கதை என்பதை உணரலாம். இச்செய்யுளில் செஞ்சொல் புராணம் எனக் குறிக்கப்படுவது அருகனால் அருளிச் செய்யப்பட்ட மகாபுராணம் என்பர். இன்னும் சிலர் அருக சமய புராணங்களைத் தொகுத்துரைக்கும் ஸ்ரீபுராணம் என்கின்றனர். அப்புராணத்தில் கூறப்படும் 11ம் தீர்த்தங்கரரான சீசிரேயாமிச சுவாமி புராணத்தில் இக்கதை கூறப்பட்டுள்ளதை படிப்போர் காணலாம்.

    சூளாமணி என்னும் இந்தக் காப்பியம், நாட்டுச் சருக்கம் தொடங்கி முக்திச் சருக்கம் வரை 12 சருக்கங்களையும் 2130 பாக்களையும் கொண்டுள்ளது. இந்நூலில் இக்கால நடைமுறைக்கு உகந்தது போல பெரும்பான்மையான நிகழ்ச்சிகளும், சம்பவங்களும் உள்ளதால் தமிழ் கூறும் நல்லுலகம் படித்து பயன் அடையத் தக்க நூலாக விளங்குகிறது

    அன்புடன்

    டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்

    சூளாமணி

    கடவுள் வாழ்த்து

    வென்றான் வினையின் தொகையாய விரிந்து தன்கண்

    ஒன்றாய்ப் பரந்த வுணர்வின்னொழி யாது முற்றும்

    சென்றான் திகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி

    நின்றா னடிக்கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார்1

    வினைகளை வென்றவனும், தன் உள்ளத்தில் தோன்றிய கேவல ஞானத்தில் இருந்து பிரியாமல் மூன்று உலகத்தையும் உணர்கின்றவனும், ஒளி வட்டம் உடையவனாகவும் விளங்கும் அருகக் கடவுளின் திருவடிகளை வணங்கியவர்களே இரு வினையும் நீங்கி வீடுபேறு அடைவர்.

    நுதல் முதலிய பொருள்

    அங்கண் ணுலகிற் கணிவான்சுட ராகி நின்றான்

    வெங்கண் வினைபோழ்ந் திருவச்சரண் சென்ற மேனாள்

    பைங்கண் மதர்வைப் பகுவாயரி யேறு போழ்ந்த

    செங்கண் ணெடியான் சரிதம்மிது செப்ப லுற்றேன் 2

    பேரொளி பிழம்பாகத் தோன்றிய சிரேய தீர்த்தங்கரருடைய தறுகண்மையுடைய வினைகளைத் தீர்க்கும் அருளாட்சி, பழைய காலத்தில் செருக்கினையும் பிளந்த வாயையும் உடையதொரு ஆண் சிங்கத்தின் வாயைப் பிளந்து சிவந்த கண் களையும் உடையவனும் இசையில் சிறந்தவனுமான திவிட்டனின் வரலாறாகிய இந்த நூலைப் பாடு கின்றேன்.

    அவை அடக்கம்

    கொற்றங்கொ ணேமி நெடுமால்குணங் கூற விப்பால்

    உற்றிங்கொர் காதல் கிளரத்தமிழ் நூற்க லுற்றேன்

    மற்றிங்கொர் குற்றம் வருமாயினு நங்கள் போல்வார்

    அற்றங்கள் காப்பா ரறிவிற்பெரி யார்க ளன்றே3

    ஐம்படை கொண்ட திருமால் போன்ற திவிட்டனின் பண்பைத் தமிழகத்தில் சொல்வதற்கு ஆர்வம் மிகுந்ததால் இந்த தமிழ்க் காவியத்தைப் பாடுகின்றேன். இதில் குற்றம் இருந்தாலும் அறிவுடைய சான்றோர்கள் எம் பிழையைப் பொருத்தருள வேண்டும்.

    நூலரங்கேற்றிய களனும், கேட்டோ ரும்

    நாமாண் புரைக்குங் குறையென்னிது நாம வென்வேல்

    தேமா ணலங்கற் றிருமால்நெடுஞ் சேந்த னென்னும்

    தூமாண் தமிழின் கிழவன்சுட ரார மார்பின்

    கோமா னவையுட் டெருண்டார்கொளப் பட்ட தன்றே4

    வெற்றி வேலும், மலர் மாலையும் கொண்ட வனும், திருமாலின் அம்சமான நெடுந் சேந்தன் என்ற பெயர் உடையவனும், தமிழ் மொழிக்கு உரியவனும், மாலை அணிந்த மார்பை உடைவனும் மன்னாதி மன்னனாகி பாண்டியனின் அவையில் இருக்கும் கவிஞர்களே. இந்தப் பாடலில் குறைகாணா மாண்பு கண்டு மதிக்கக் கூடியவர்களே கேளுங்கள்.

    செங்கண் ணெடியான் றிறம்பேசிய சிந்தை செய்த

    நங்கண் மறுவும் மறுவன்றுநல் லார்கண் முன்னர்

    அங்கண் விசும்பி நிருள்போழ்ந்தகல் வானெ ழுந்த

    திங்கண் மறுவுஞ் சிலர்கைதொழச் செல்லு மன்றே5

    அறிஞர்கள் முன்னிலையில் திவிட்டனின் இயல்பைக் கூறுவதற்கு வந்த என்னுடைய குற்றத்தை பெரிதுபடுத்தாமல் இருளை நீக்கி வானத்தில் எழும் நிலவில் உள்ள களங்கத்தைப் போல உள்ள என் குறையை நீக்கி நிலவின் மாண்பைக் கருதும் இயல்பு போல இதை ஏற்கும்படி கைகுவித்துத் தொழு கின்றேன்.

    நூல் வந்த வழி

    விஞ்சைக் கிறைவன் விரைசூழ்முடி வேந்தன் மங்கை

    பஞ்சிக் கனுங்குச் சிலம்பாரடிப் பாவை பூவார்

    வஞ்சிக் கொடிபோல் பவள்காரண மாக வந்த

    செஞ்சொற் புராணத் துரையின்வழிச் சேறு மன்றே6

    மாலி காஞ்சனம் போன்ற வித்தைகளின் தலை வனும், மணிமுடி மன்னனுமாகிய சுவலன சதியின் மகளும், சிலம்பை அணிந்தவளும், கொள்ளிப் பாவை போன்றவளும், பூங்கொடி போன்றவளுமான சுயம்பிரபை என்பவள் முயற்சியால் தோன்றிய இறைவன் அருள் செய்த பிரதம நூல் யோக மகா புராணம் என்ற நூலில் இருந்து இந்த நூலைத் தமிழில் பாடியுள்ளோம்.

    1. நாட்டுச் சருக்கம்

    சுரமை நாட்டின் சிறப்பு

    மஞ்சுசூழ் மணிவரை யெடுத்த மாலமர்

    இஞ்சிசூ ழணிநக ரிருக்கை நாடது

    விஞ்சைந்ண ளுலகுடன் விழாக்கொண் டன்னது

    துஞ்சிநீள் நிதியது சுரமை யென்பவே.7

    மேகம் சூழ்ந்த கோடிக்குன்றம் என்னும் மலையைக் கையால் தூக்கிய திருமால் போன்ற திவிட்டன் ஆளும் நாடானாது வித்தியாதரர்களின் நாட்டைப் போல சிறப்பு மிக்க விழாக்கள் கொண் டாடுவது அந்த நாட்டின் சிறப்பாகும். அந்த விழா கொண்டாடுவதற்கு ஏற்ப அங்கு செல்வமும் மிகுந்து இருந்தது என்று உயர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

    கயல்களும் கண்களூம்

    பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம்

    செங்கய லினநிரை திளைக்குஞ் செல்வமும்

    மங்கையர் முகத்தன மதர்த்த வாளரி

    அங்கயர் பிறழ்ச்சியு மறாத நீரவே.8

    தாமரை மலர்ந்த நீர் நிலையில் சிவப்பு நிறம் உள்ள கயல் மீன்களின் கூட்டம் மகிழ்ச்சியுடன் இருக்கும் பெண்களின் முகத்தின் அருகே சென்று அவர்களின் கண் விழிகள் கயல் மீன்களைப் போல உள்ளதைக் கண்டு நீராடும் மங்கையர்களிடம் இருந்து பிரியாமல் நிற்கும்.

    வயல்களும் ஊர்களும்

    ஆங்கவ ரணிநடை யன்னத் தோட்டன

    தீங்குரன் மழலையாற் சிலம்புந் தண்பணை

    வீங்கிள முலையவர் மெல்லென் சீறடி

    ஓங்கிருஞ் சிலம்பினாற் சிலம்பு மூர்களே.9

    மருத நிலத்தில் உள்ள அன்னப் பறவைகள் அங்குள்ள பெண்களின் நடையைக் கண்டு தம் நடை போல இருப்பதாக நினைத்து ஆரவாரம் செய்யும் அந்த நாட்டில் உள்ள ஊர்களில் பருத்த கொங்கை களைக் கொண்ட பெண்களின் பாதங்களில் சிலம்புகளின் ஆரவாரம் கேட்டுக்கொண்டே இருக்கும்.

    பொழில்களிலும் வீடுகளிலும் இன்னிசை

    நிழலகந் தவழ்ந்துதே னிரந்து தாதுசேர்

    பொழிலகம் பூவையுங் கிளீ?யும் பாடுமே

    குழலகங் குடைந்துவண் டுறங்குங் கோதையர்

    மழலையும் யாழுமே மலிந்த மாடமே.10

    மலர்களில் உள்ள மகரந்தப் பொடிகள் நிரம்பியிருக்கும் சோலைகளில், அங்குள்ள பெண்களின் கூந்தலின் இடையே புகுந்த வண்டுகள் ஒலியும் உறங்கும் பெண்களின் மெல்லிய வார்த்தைகளும், வீனையின் இசைப் பாடல்களும் கேட்டுக் கொண்டு இருக்கும்.

    வண்டுகளுங் கொங்கைகளும்

    காவியும் குவளையு நெகிழ்ந்து கள்ளுமிழ்

    ஆவியுண் டடர்த்ததே னகத்து மங்கையர்

    நாவியுங் குழம்பு முண் ணகில நற்றவம்

    மேவிநின் றவரையு மெலிய விம்முமே.11

    நீல மலரும், குவளை மலரும் விரிந்து தேன் சொரிய அந்தத் தேன் துளிகளாகிய ஆவியை உண்டு வண்டுகள் மகிழப் பெண்களின் கஸ்தூரியும், குங்குமக் குழம்பும் அணிந்த கொங்கைகள் துறவிகளும் வருந்தும்படி பருத்து இருக்கும்.

    சுரமை நாட்டின் நானிலவளம்

    வானிலங் கருவிய வரையு முல்லைவாய்த்

    தேனிலங் கருவிய திணையுந தேரல்சேர்

    பானலங் கழனியுங் கடலும் பாங்கணி

    நானிலங் கலந்துபொன்னரலு நாடதே.12

    குறிஞ்சி நிலத்தையும், முல்லை மலரில் உள்ள தேன் நீலோத்பல மலரையும், நெய்தல் நிலத்தையும், மருத நிலத்தையும் கொண்டு நால்வகை நிலமும் கொண்டதாக அந்த நாடு விளங்கியது.

    குறிஞ்சி நிலம்

    முன்றி லெங்கு முருகயர் பாணியும்

    சென்று வீழரு வித்திர ளோசையும்

    வென்றி வேழ முழக்கொடு கூடிவான்

    ஒன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம்.13

    குறவர்கள் முருகனை வணங்கி வெறியாடும் பாட்டு இசையும், மலைப் பாறையில் விழும் அருவிகளின் ஒலியும், புலிகளை வென்ற யானைகளின் முழக்கமும் சேர்ந்து வானத்தில் சென்று தாக்கி எதிரொலியை உண்டாக்கும்.

    முல்லை நிலம்

    ஏறு கொண்டெறி யும்பணைக் கோவலர்

    கூறு கொண்டெழு கொன்றையந் தீங்குழல்

    காறு கொண்டவர் கம்பலை யென்றிவை

    மாரு கொண்டுசி லம்புமொர் மாடெலாம்.14

    ஏறு தழுவும் இடையர்கள் உண்டாக்கும் குழலோசையும், ஊது கருவியின் இசையும், ஏர் உழுகின்ற இடையர்களின் ஆரவாரமும் முல்லை நிலம் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும்.

    மருத நிலம்

    அணங்க னாரண வாடல் முழவமும்

    கணங்கொள் வாரணக் கம்பலைச் செல்வமும்

    மணங்கொள் வார்முர சும்வய லோதையும்

    இணங்கி யெங்கு மிருக்குமொர் பாலெலாம்.15

    அழகியப் பெண்கள் நடிக்கும், அடிக்கும் முரலோசையும், சேவல் சண்டையும் அங்கு உண்டாகும் ஆரவாரமும், முரசின் முழக்கமும், உழவர்களின் ஆரவாரமும் மருத நிலத்தில் கேட்டுக் கொண்டே இருக்கும்.

    நெய்தல் நிலம்

    கலவ ரின்னிய முங்கட லச்சிறார்

    புலவு நீர்ப்பொரு பூணெறி பூசலும்

    நிலவு வெண்மண னீளிருங் கானல்வாய்

    உலவு மோதமு மோங்குமொர் பாலெலாம்.16

    பரதவர்களின் இசைக் கருவி முழக்கமும், நெய்தல் நில சிறுவர்கள் நீரில் தன் அணிகலன்களை எறிந்து விளையாடும் ஆரவாரமும், கடல் அலைகளின் ஒலியும், நெய்தல் நிலம் எங்கும் கேட்டுக் கொண்டே இருக்கும்.

    குறிஞ்சி நிலம்

    கைவி ரிந்தன காந்தளும் பூஞ்சுனை

    மைவி ரிந்தன நீலமும் வான்செய்நாண்

    மெய்வி ரிந்தன வேங்கையும் சோர்ந்ததேன்

    நெய்வி ரிந்தன நீளிருங் குன்றெலாம்.17

    செங்காந்தள் மலர்கள் பெண்களின் கையைப் போல மலர்ந்திருக்கும். நீல மலர்கள் மை பரவியது போலவும், வேங்கை மரங்களும் மலர்ந்திருந்தன. இந்த மலர்களில் வடிந்த தேனாகிய நெய் குன்றுகள் வரை சென்று பரவியது.

    முல்லை நிலம்

    கொன்றை யுங்குருந் துங்குலைக் கோடலும்

    முன்றி லேறிய முல்லையம் பந்தரும்

    நின்று தேன்நிரந் தூதவி ரிந்தரோ

    மன்றெ லாமண நாரும ருங்கினே.18

    கொன்றை மரத்திலும், குருத்த மரத்திலும் காந்தள் செடிகளிலும், முல்லைக் கொடி களிடத்திலும் வண்டுகள் பரவி ஊத அந்த பூக்கள் மலர்ந்து அனைத்து இடங்களிலும் மணம் வீசிக் கொண்டிருக்கும்.

    மருதம்

    நாற விண்டன நெய்தலு நாண்மதுச்

    சேறு விண்டசெந் தாமரைக் கானமும்

    ஏறி வண்டின மூன்றவி ழிந்ததேன்

    ஊறி வந்தொழு கும்மொரு பாலெலாம்.19

    மருத நிலத்தில் கரு நெய்தல் மலர்களிலும் சேற்றில் உண்டானதிலிருந்து, தேன் தரும் தாமரைப் பூக்களின் கூட்டத்திலிருந்தும் வண்டுகள் தம் கால்களை ஊன்றுவதால் தேன் ஊற்றெடுத்து வழிந்து கொண்டிருக்கும்.

    நெய்தல்

    கோடு டைந்தன தாழையுங் கோழிருள்

    மோடு டைந்தன மூரிக் குவளையும்

    தோடு டைந்தன சூகமுங் கற்பகக்

    காடு டைந்தன போன்றுள கானலே.20

    சங்கு உடைந்தது போன்றிருக்கும் தாழை மலர்களும், இருள் உடைந்தது போல இருக்கும் கருங்குவலை மலர்களும், இதழ் விரித்த நீர்ப் பூக்களும் கடற்கரை சோலையில் கற்பக சோலைகள் போல விளங்கச் செய்து கொண்டிருந்தன.

    குறிஞ்சி

    நீல வால வட்டத்தி னிறங்கொளக்

    கோலும் பீலிய கோடுயர் குன்றின்மேல்

    ஆலு மாமழை நீள்முகி லார்த்தொறும்

    ஆலு மாமயி லாலுமொர் பாலெலாம்.21

    நீல நிறமுடைய ஆலவட்டத்தின் நிறமுடைய பீலியும் உடையதாகவும் உயர்ந்த உச்சியைக் கொண்ட குன்றின் மீது மழை மேகங்கள் முழங்கு வதால் மயில்கள் கூத்தாடும்.

    முல்லை

    நக்க முல்லையு நாகிளங் கொன்றையும்

    உக்க தாதடர் கொண்டொலி வண்டறா

    எக்க ரீர்மணற் கிண்டியி ளம்பெடைப்

    பக்க நோக்கும் பறவையொர் பாலெலாம்.22

    பக்கங்களில் முல்லைப் பூக்களும் கொன்றைப் பூக்களும் பூந்தாதுகளுடன் வண்டுகள் நீங்காமல் இருக்கும்படி அலைகளால் இடப்பட்ட மணலைக் கிளறி இரையை ஊட்டக் கருதி நீர்ப்பறவையின் சேவல்கள் தன்னுடைய பெண் பறவையைப் பார்க்கும்.

    மருதம்

    துள்ளி றாக்கவுட் கொண்டு சுரும்பொடு

    கள்ள றாதசெந் தாமரைக் கானகத்

    துள்ள றாதுதைந் தோகை யிரட்டுறப்

    புள்ள றதுபு லம்பின பொய்கையே.23

    அங்குள்ள தடாகங்கள் தாமரைப் பூக்களின் இடையே பறவைகள் இருந்து இறால் மீன்களைப் பிடித்துக் கொண்டு இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்.

    நெய்தல்

    வெண்மு ளைப்பசுந் தாமரை மென்சுருள்

    முண்மு ளைத்திர ளோடு முனிந்துகொண்

    டுண்மு ளைத்திள வன்ன முழக்கலால்

    கண்மு ளைத்த தடத்த கழியெலாம்.24

    தாமரையின் இலைச் சுருளை முள் பொருந்திய நாளங்களுடன் வெறுப்புக் கொண்டு நீருக்குள் மூழ்கி எழுந்து அன்னப் பறவைகள் கலக்குவதால் அங்கு தேன் தோன்றியது.

    குறிஞ்சி

    காந்த ளங்குலை யாற்களி வண்டினம்

    கூந்தி ளம்பிடி வீசக்கு ழாங்களோ

    டேந்து சந்தனச் சர லிருங்கைமா

    மாந்தி நின்றுறங் கும்வரை மாடெலாம்,25

    சந்தன மரங்கள் உள்ள சாரலில் களிறுகள் மதநீர் பெருகி மகிழ்கின்ற வண்டுக் கூட்டத்தைப் பிடி யானைகள் காந்தள் பூங்கொத்தினால் வீசி விரட்ட மற்ற யானைகளுடன் சேர்ந்து கொண்டு தினைகளை உண்டு உறங்கும்.

    முல்லை

    தார்செய் கொன்றை தளித்ததண் டேறலுண்

    டேர்செய் கின்ற விளம்பு லிருங்குழைக்

    கார்செய் காலை கறித்தொறு மெல்லவே

    போர்செய் மாவினம் பூத்தண்பு றணியே.26

    மாலை போல மலரும் கொன்றையில் தேனை உண்டு, இளமையான பசும் புற்களையும், தழைகளையும் கார் காலத்தில் மேயும்போது பசுக்கள் ஒன்றுடன் ஒன்று விளையாட்டாகப் போர் செய்யும்.

    மருதம்

    அள்ளி லைககுவ ளைத்தடம் மேய்ந்தசைஇக்

    கள்ள லைத்தக வுட்கரு மேதிபால்

    உள்ள லைத்தொழு கக்குடைந் துண்டலால்

    புள்ள லைத்த புனலபு லங்களே.27

    நீல மலர்களுடைய நீர் நிலையில் அவற்றை மேய்ந்தும் குவலைப் பூவில் தேன் வழியாக வாயை வைக்கும் எருமையின் உள்ளத்தில் தன் கன்றின் நினைவு வர அதன் பாலானது நீரிலே உருகி ஓட அதை அன்னப் பறவைகள் குடித்து மகிழும்.

    நெய்தல்

    கெண்டை யஞ்சினை மேய்ந் து கிளர்ந்துபோய்

    முண்ட கத்துறை சேர்ந்த முதலைமா

    வண்டல் வார்கரை மாமக ரக்குழாம்

    கண்டு நின்று கனலும் கழியெலாம்.28

    கெண்டை மீன்களையும், அவற்றின் முட்டை களையும் தின்று மகிழும் முதலைகள் கடற்கரை யோரத்தில் உள்ள சுறா மீன்களைப் பார்த்து எதிர்த்து நிற்கும்.

    குறிஞ்சி

    கண்ணி லாங்கழை யின்கதிர்க் கற்றையும்

    மண்ணி லாங்குரல் வார்தினை வாரியும்

    எண்ணி லாங்கவி ளைவன வீட்டமும்

    உண்ணி லாங்குல வாமை யுயர்ந்தவே.29

    மூங்கிலில் விளைந்த நெல்லும், மண்ணில் விளைந்த தினையும் மற்றைய பொருட்களும் பிறருக்குக் கொடுத்துத் தாம் உண்பதால் எந்தக் குறையும் வராதபடி செல்வம் மிகுந்தது அந்த நாடு.

    முல்லை

    பேழ்த்த காயின பேரெட் பிறங்கிணர்

    தாழ்த்த காயின தண்ணவ ரைக்கொடி

    சூழ்த்த காய்த்துவ ரைவர கென்றிவை

    மூழ்த்த போன்றுள முல்லை நிலங்களே.30

    எள்ளுச் செடிகளும், அவரைக் கொடியும், துவரைச் செடிகளும், வரகும், முல்லை நிலம் எங்கும் விளைந்து அந்தப் பகுதியை மூடி இருப்பது போல தோன்றும்.

    மருதம்

    மோடு கொண்டெழு மூரிக் கழைக்கரும்

    பூடு கொண்ட பொதும்பரொ டுள்விராய்த்

    தோடு கொண்டபைங் காய்துவள் செந்நெலின்

    காடு கொண்டுள கண்ணக னாடெலாம்.31

    கருப்பங்கழிகளைக் கொண்ட சோலைகளின் உள்ளே கதிர்களை ஈன்று தலை சாய்ந்த நெற் பயிர்களைக் கொண்டு இடம் முழுவதும் வெறுமை இல்லாமல் நிறைந்திருப்பது மருத நிலமாகும்.

    நெய்தல்

    சங்கு நித்தில முத்தவ ழிப்பியும்

    தெங்கந் தீங்குலை யூறிய தேறலும்

    வங்க வாரியும் வாரலை வாரியும்

    தங்கு வாரிய தண்கட னாடெலாம்.32

    முத்துக்களும், தென்னையின் பாளையில் மூழ்கிய கள்ளும், வெளி நாட்டுப் பொருட்களும் குவிந்து கிடந்து மிகுந்த வருவாயைக் கொண்டது நெய்தல் நிலமாகும்.

    திணை மயக்கம் [ மலர்]

    கொடிச்சியர் புனத்தயல் குறிஞ்சி நெய்பகர்

    இடைச்சியர் கதுப்பயர் கமழு மேழையம்

    கடைச்சியர் களையெறி குவளை கானல்வாய்த்

    தொடுத்தலர் பிணையலார் குழலுட் டோ ன்றுமே.33

    குறிஞ்சி மலர்கள் முல்லை நிலத்து பெண்களின் கூந்தல்களிலும் மணம் வீசும். பேதமையைக் கண்டு மருத நிலத்துப் பெண்கள் குவலை மலர்களால் தொடுக்கப்பட்ட மலர் மாலை அணிந்த நெய்தல் நிலத்துப் பெண்களின் கூந்தலிலும் விளங்கும்.

    திணை மயக்கம் [ ஒலி ]

    கலவர்தஞ் சிறுபறை யிசையிற் கைவினைப்

    புலவர்தேம் பிழிமகிழ் குரவை பொங்குமே

    குலவுகோற் கோவலர் கொன்றைத் தீங்குழல்

    உலவுநீ ளசுணமா வுறங்கு மென்பவே.34

    பரதவரின் சிறு பறையின் ஒலியால் மருத நிலத்து மக்களின் கைத்தொழில் தேர்ச்சியைக் கள்ளை உண்டு களிப்படையும் இடையர்களின் குழல் இசையால் குறிஞ்சி நிலத்தில் திரியும் அசுணாமா உறக்கம் கொள்ளும்.

    சுரமை நாட்டின் சிறப்பு

    மாக்கொடி மாணையு மௌவற் பந்தரும்

    கார்க்கொடி முல்லையுங் கலந்து மல்லிகைப்

    பூக்கொடிப் பொதும்பரும் பொன்ன ஞாழலும்

    தூக்கடி கமழ்ந்துதான் றுறக்க மொக்குமே. 35

    மாணைக் கொடியும், மல்லிகைப் பந்தலும், முல்லைக் கொடிகளும், மல்லிகைத் தொகுதியும், புலி நகக் கொன்றையும் மணம் வீசும் சுரமை நாடு தேவர் உலகத்தைப் போன்றதாகும்.

    முதலாவது நாட்டுச் சருக்கம் முற்றிற்று

    2. நகரச் சருக்கம்

    சுரமை நாட்டுப் போதனமா நகரம்

    சொன்னநீர் வளமைத் தாய சுரமைநாட் டகணி சார்ந்து

    மன்னன்வீற் றிருந்து வைக நூலவர் வகுக்கப் பட்ட

    பொன்னவிர் புரிசை வேலிப் போதனமென்ப துண்டோர்

    நன்னகர் நாக லோக நகுவதொத் தினிய தொன்றே 36

    முன்பு நாட்டுச் சருக்கத்தில் கூறிய நீர் வளமும், நிலவளமும் கொண்ட சுரமை நாட்டு அரசன் அமரும் அரியாசனம் சிற்ப நூல் வல்லுனர்களால் செய்யப்பட்டதும், கோதனம் என்று சொல்லப்படும் தேவலோகத்தை நகைப்பது போன்ற சிறப்பு மிக்க நகரமாகப் பூமியில் உள்ளது.

    நகரத்தின் அமைதி

    சங்கமேய் தரங்க வேலித் தடங்கடற் பொய்கை பூத்த

    அண்கண்மா ஞால மென்னுந் தாமரை யலரி னங்கேழ்ச்

    செங்கண்மால் சுரமை யென்னுந் தேம்பொகுட் டகத்து வைகும்

    நங்கையர் படிவங் கொண்ட நலத்தது நகர மன்றே 37

    சங்குகள் நிறைந்த பெரிய கடலான தடாகத்தில் மலர்ந்த பூமி என்னும் தாமரைப் பூவில் திவிட்டன் பிறந்த சுரமை நாட்டில் தங்கியிருக்கும் திருமகளின் வடிவத்தைப் போன்ற அமைப்பு உடையது போதன மாநகரம்.

    அகழியும் மதிலரணும்

    செஞ்சுடர்க் கடவு டிண்டே ரிவுளிகா றிவள வூன்றும்

    மஞ்சுடை மதர்வை நெற்றி வானுழு வாயின் மாடத்

    தஞ்சுட ரிஞ்சி , யாங்கோ ரழகணிந் தலர்ந்த தோற்றம்

    வெஞ்சுடர் விரியு முந்நீர் வேதிகை மீதிட் டன்றே 38

    சூரியனின் தேரில் பூட்டிய குதிரைகள் தனது கால்கள் மெலிந்து போகும்படி மேகத்தை உடைக்கின்ற முடிகளையும், வானத்தைக் கீறுகின்ற கோபுரங்களையும், மதில்களையும், அகழிகளையும் சூழப்பெற்று விளங்குவது அந்த நகரம்.

    அம்மதிற்

    Enjoying the preview?
    Page 1 of 1