Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kadavulai Kandavargal
Kadavulai Kandavargal
Kadavulai Kandavargal
Ebook313 pages4 hours

Kadavulai Kandavargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 30, 2017
Kadavulai Kandavargal

Read more from Indira Soundarajan

Related to Kadavulai Kandavargal

Related ebooks

Related categories

Reviews for Kadavulai Kandavargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kadavulai Kandavargal - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    கடவுளைக் கண்டவர்கள்

    Kadavulai Kandavargal

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    நூல் ஆசிரியர் உரை

    உலகின் மில்லியன் டாலர் கேள்வியே கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது தான்... கேள்வி அப்படியே இருக்கிறது. ஆனால் பதில்கள் தான் பலவாக உள்ளன.

    முதலில் கடவுள் என்றால் அது யார் என்பதில் தொடங்கி, ‘உள் கட’ எனும் நமக்குள் கிடக்கும் உயிரும், உணர்வுமே கடவுள் என்னும் பதிலாக விரிந்து, பல விளக்கங்கள் இதற்கு பதிலாகி விட்டன.

    உலகில் கோடானு கோடி உயிரினங்கள்!

    மனித இனம் மட்டும் தான் இந்த கேள்வியைக் கேட்டுக் கொண்டு இருக்கிறது.

    ஒரு நாற்காலி இருக்கிறது என்றால் அதைச் செய்த தச்சர் என்று ஒருவர் இருப்பது போல, ஒரு வீடு இருக்கிறது என்றால் அதைக் கட்டிய மேஸ்திரி ஒருவர் இருப்பது போல இந்த பிரபஞ்சத்தின் பின்புலத்தில் ஒருவர் இருக்க வேண்டுமல்லவா?

    அது தானே லாஜிக்!

    ஆனாலும், தச்சரையும், மேஸ்திரியையும் நாம் பார்க்க முடிவது போல, கடவுளை ஏன் காண முடியவில்லை…? ஏன் எப்போதும் புலப்படாதவராகவே இருக்கிறார்? என்று கேள்விகள் விரிகின்றன.

    இந்த சிருஷ்டி கர்த்தாவை கடவுள் என்கின்றனர் ஆத்திகர்கள்! இயற்கை என்கின்றனர் நாத்திகர்கள்!

    இந்து மதமோ கடவுளை, குடும்ப பாவனையில் கணவன், மனைவி, பிள்ளைகள் என்று சிவ குடும்பத்தையும், அவதார சொரூபங்களில் விஷ்ணு குடும்பத்தையும், படைப்பாளியாக பிரம்ம குடும்பத்தையும் காட்டி தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், நாகர்கள் என்று பெரும் கூட்டத்தையே நம் முன்னால் நிறுத்துகிறது.

    இவைகளைக் கடந்து தன்னை அறியும் சித்தம், தனக்குள் தேடும் பவுத்தம், சமணம் என்று கடவுள் விஷயத்துக்குத் தான் எத்தனை வழிகள்.

    இந்த வழியில் நடந்தோ, இல்லை இந்த வழி சார்ந்த மந்திர மொழியாலோ, இல்லை இன்ன பிறவற்றாலோ இந்து மதத்தில் சிலர் கடவுள் கருத்தை உறுதிபட நிறுவியுள்ளனர்.

    இவர்கள் பொய்யானவர்களோ, மலிவானவர்களோ, ஏமாற்றுபவர்களோ இல்லை. முட்டாள்தனமான பலவீனர்களும் இல்லை. இவர்களின் அனுபவங்களைச் சொல்வதே 'கடவுளைக் கண்டவர்கள்’ என்னும் இந்த புத்தகம்.

    இவர்கள் அனுபவங்களை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பம். ஒரு நீண்ட கால அளவில் இங்கு அங்குமாக வாழ்ந்த இவர்களைப் பற்றிய செய்திகளும், குறிப்புகளுமே நான் எழுத பெரிதும் துணை செய்தது.

    ஞான ஆலயம் இதழில் 'இறைவனோடு உரையாடிய உத்தமர்கள்’ என்ற தலைப்பில் எழுதியதே 'கடவுளைக் கண்டவர்கள்’ எனறாகி நூல்வடிவம் கண்டு உங்களின் கைகளை அடைந்துள்ளது. வாசியுங்கள். நன்றி.

    பணிவன்புடன்

    இந்திரா செளந்தர்ராஜன்

    ***

    பொருளடக்கம்

    தெய்வப்பிறவிகள்

    அவ்வையார்

    பத்ராசலம் ராமதாசர்

    கோமாபாய்

    அருணகிரிநாதர்

    அபிராமி பட்டர்

    துளசிதாசர்

    பிராந்தர்

    ஜெயதேவர்

    திரிபுரதாசர்

    முத்துசுவாமி தீட்சிதர்

    திரிலோசனதாசர்

    வியாசஹரி

    பிம்பாஜி

    தெய்வப்பிறவிகள்

    கோடானு கோடி உயிர்களை இந்த உலகம் பார்த்து விட்டது. பார்த்தும் வருகிறது. இதில் தன் ஆறாம் அறிவால் தேர்ந்து, தெளிந்து, ஏழாகிய சூட்சுமத்தால் எட்ட வேண்டியதை எட்டி, ஒன்பதாம் பதம் எனும் இறை நிலையை உணர்ந்தும், அடைந்தும் திகழ்ந்தவர்களையே தெய்வப்பிறவிகள் என்கிறோம்.

    இவர்கள் தங்கள் வாழ்க்கையை இறைபக்தியில் ஆரம்பித்து, இறை அனுபவத்தில் தோய்ந்து, அந்த இறைவனோடேயே உரையாடும் பாக்கியம் பெறும் அளவு உயர்ந்தனர்.

    ஆதிசங்கரர் நம் மதவழிப் பாதையை ஆறாகப் பிரித்து அவைகளே இறைவனை அடையும் வழிகள் என்கிறார். வைணவம், சைவம், சாக்தம், காணாபத்யம், கவுமாரம், சவுரம் என்னும் வழிகளே இவை!

    இதில் வைணவம் திருமாலிடம் சென்று சேரும் பாதையாக உள்ளது. சைவமோ ஆதி சிவனுக்கான பாதையாகத் திகழ்கிறது. சாக்தம் சக்தியான தேவியிடம் சென்று சேர்க்கிறது. காணாபத்யம் கணபதியை அடையும் வழி. கவுமாரம் முருகப் பெருமானிடம் நம்மைக் கொண்டு விடுகிறது. சவுரம் கண்கண்ட கடவுளான சூரிய பகவானுக்கான மார்க்கம்.

    இந்த ஆறு வழித்தடங்களிலும் பயணித்த பெருமைக்குரியவர்கள் பலர். ஆனால் இலக்கை அடைந்து அந்த தெய்வங்களோடு கலந்து விட்டவர்களைத் தான் வரலாறு குறித்து வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் வைணவத்தில் பன்னிரு ஆழ்வார்கள், சைவத்திற்கோ அறுபத்து மூன்று நாயன்மார்களும், அதற்கப்பாலும் அடி சேர்ந்தவர்கள் என்று ஒரு பட்டியல் காணக் கிடைக்கிறது.

    சாக்தம் என்ற உடனேயே அபிராமி பட்டரும், அவருடைய அந்தாதியும் நினைவுக்கு வருகின்றன. காணாபத்யம் என்னும் கணபதியை நினைத்த உடன் அவ்வைப் பாட்டியே நினைவில் முந்துகிறாள். கவுமாரக் கடவுளாம் முருகப் பெருமானுக்கோ அருணகிரிநாதர் கை குவிக்கிறார். சவுரம் எனும் சூரிய வழிபாடு பாரதத்து பாஞ்சாலியை நினைவுபடுத்துகிறது. கூடவே அவள் சூரியனிடம் வேண்டிப்பெற்ற அட்சயப் பாத்திரமும் நினைவுக்கு வருகிறது. இவர்கள் அனைவருமே இறைவனை 'நேர்க்கு நேர் கண்டவர்கள், பேசியவர்கள்.

    இவ்வளவுதானா பட்டியல் என்றால் அது தானில்லை. மானிடராய்ப் பிறந்து வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்தை அறிந்து அவர்களோடு உறவாடி, உரையாடி, கலந்து தாம் பெற்ற இன்பத்தை உலகத்தவர் பெற்றிட வேண்டி தம் அனுபவங்களை நமக்காக விட்டுச் சென்றுள்ள இவர்களின் பட்டியலோ மிகப் பெரியது.

    நாம் பார்க்க நம் கண் எதிரில் வாழ்ந்து மறைந்த ஷீரடி சாய்பாபா, புட்டபர்த்தி சாய்பாபா, சேஷாத்ரி சுவாமிகள், வள்ளலார், அகோபில மடம் ஜியர், பகவான் ரமணர், காஞ்சி முனிவர் என்று தெய்வப்பிறவிகளின் பட்டியல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இப்பட்டியலில் தன் வாழ்நாள் எல்லாம் அருட்தொண்டாற்றிய திருமுருக கிருபானந்தவாரியாருக்கும், முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் போன்றோருக்கும் இடம் உண்டு. இவர்களுக்காக தெய்வங்கள் மேலிருந்து கீழ் இறங்கி வந்தன. இவர்கள் வேண்டியதைத் தந்து இவர்களோடு நட்பும் பாராட்டின.

    தெய்வம் ஒன்றென்று காண் என்று நம் சான்றோர் பெருமக்களின் ஒருவரே சொன்ன நிலையில், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திருமூலரும் வழி மொழிந்த அளவில், இங்கே தெய்வங்கள் என்று நான், பன்மையில் உரைப்பதை தவறாகப் பொருள் கொள்ள வேண்டாம். இந்து மதத்தைப் பொறுத்த அளவில் ஒன்றான பரம்பொருளே ஒன்பதான பல வடிவமாய் திகழ்கிறது என்பதே அடிப்படையான உண்மை.

    அப்படி தெய்வங்களோடேயே வாழ்ந்த தெய்வப் பிறவிகளின் அனுபவங்களை, தெய்வங்களுடனான அவர்களின் உரையாடலை நம்மால் முயன்றவரை அறியவும், புரியவும் முற்படுவோம்.

    ***

    அவ்வையார்

    சீர்மிகு இந்த அவனியின் நாயகனாய், அனைத்திலும் முதல்வனாய் திகழ்ந்திடும் ஆனைமுகனாம் விநாயகப் பெருமானின் பெரும் கருணையாலே தன்னையறிந்து, தெளிந்து, பின் தன் தெளிவை தன் தனிப் பெரும் பாடல்களால் உலகிற்கும் அளித்த அவ்வைப் பாட்டியே நாம் உணரப் போகும் முதல் தெய்வப்பிறவி ஆவாள்.

    ஒரு ஆச்சரியம் என்னவென்றால் தெய்வப் பிறவிகளின் பட்டியலில் பெண்களின் எண்ணிக்கை என்பது மிகமிகக் குறைவாகவே உள்ளது.

    வைணவத்துக்கு ஒரே ஒரு ஆண்டாள். சைவத்துக்கோ காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார், குலச்சிறையாரும் தான், கவுமாரத் தெய்வமான முருகனையும், காணாபத்ய கணபதியையும் அவ்வைப் பாட்டி ஒருத்தியே அதிகம் நெருங்கியுள்ளாள். சவுரத்தின் வழிக்கு திரவுபதியை சொன்னாலும் அவளை தீயிலே பூத்த ஒரு தெய்வப்பெண், வைணவக் கண்ணனை அண்ணனாகவே பெற்று விட்டவள்.

    கூட்டிக் கழித்தால் நான்கு பேர் தான் தேறி நிற்கிறார்கள். இவர்களில் ஆண்டாளும் சரி, அவ்வையும் சரி, தங்கள் சிந்தனைகளை பாடல்களாக்கி, இந்த சமுதாயத்துக்குத் தந்து விட்டுச் சென்றுள்ளது தான் சிறப்பு. இதில் ஆண்டாளின் வழி வேறானதாக, காதல் மிக்கதாய் உள்ளது.

    ஓர் எழிலார்ந்த பெண்மகளாய் அந்தத் திருமால் மேல் காதல் கொண்ட, அந்தக் காதலில் வெற்றியும் பெற்றவளாய்த் திகழ்கிறாள். அதனால் இல்வாழ்வில் ஈடுபட விரும்புவோர்க்கு இவள் பெரிய வழிகாட்டியாகவும் விளங்குகிறாள்.

    இவளது திருப்பாவைப் பாடல்கள் நம் பாவையர்களை, அவர்களின் வினைப்பாடுகளிடம் இருந்து மீட்டுக் கரை சேர்ப்பதாக உள்ளது. இவளுக்கு நேர் எதிர்த்திசையில் நிற்கிறாள் நம் அவ்வைப் பாட்டி!

    ஆண்டாள் தெய்வக் காதலினால் கவர்ந்தாள். அவ்வையிடம் சமூகப் பார்வையும் அறக்கோட்பாடுகளும் மிகுந்து காணப்படுகிறது. இவளும் இறைவனை அடைய விரும்புகிறாள்… அது காதல் வழி அல்ல. தவத்தின் வழி..!

    அவ்வைப் பாட்டியின் பூர்வீகம் சோழ நாட்டு உறையூர். அந்தண குலத்திலே ஒரு தாய் தகப்பனுக்கு மூத்த பெண்ணாகப் பிறந்தவர். எப்படி குழந்தைப் பருவத்திலேயே ஞானசம்பந்தர் கோபுரத்து தெய்வச் சிலையைப் பார்த்து, தோடுடைய செவியன்…. என்று தொடங்கும் பாடலைப் பாடி தன் ஞானத்தை உலகறியச் செய்தாரோ அதே போலவே அவ்வையும் பிள்ளையாக இருந்த போதே தான் ஒரு தெய்வக் குழந்தை என்பதை உணர்த்தி விட்டாள்.

    இட்டமுடன் என் தலையில் இன்னபடியென்று எழுதிவிட்ட

    சிவனுஞ் செத்து விட்டானோ? முட்ட முட்டப்

    பஞ்சமேயானாலும் பாரம் அவனுக்கன்னாய்!

    நெஞ்சமே அஞ்சாதே நீ

    என்று அவ்வை பாடியதைக் கேட்டு வியக்காதவர்கள் இல்லை. குறிப்பாக அவ்வையின் தாய் தந்தையர்கள் இவரைப் பற்றிய கவலையை விட்டொழித்தனர்.

    குழந்தைப் பிராயத்திலேயே, அவ்வையின் மனம் கவர்ந்த கடவுள் பிள்ளையார் தான். யானை உம்மாச்சி என்று நம் பிள்ளைகளின் மனங்களையும் வேகமாகக் கவர்பவர் இந்த கணபதி தானே? இந்தப் பிள்ளையார் ஆகமத்துக்கு அடங்குவது போலவே வெறும் அன்புக்கும் அடங்குபவர். நல்ல நிலம் பார்த்துக் கோவில் கட்டி அங்கே தான் இவரை குடியமார்த்த வேண்டும் என்றில்லை. கட்டிக் களிமண்ணை எடுத்துக் கையாலேயே உருவம் அமைத்து ஒரு மரத்தடியில் உட்கார்த்தி வைத்து இரண்டு அருகம்புல்லைக் கிள்ளிப் போட்டாலே போதும். அகம் மகிழ்ந்து அருளை வாரி வழங்கி விடுபவர் இவர்.

    அவ்வை வாழ்ந்த உறையூரிலும் இவருக்குத் திரும்பிய பக்கமெல்லாம் வானம் பார்த்த கோவில்கள், ஆற்றுப்பக்கமாய் குடம் எடுத்துச் செல்லும்போதெல்லாம் அவ்வையின் பார்வையில் படும் இவர் தான் முதல் இஷ்ட தெய்வம். ஆற்று நீரை குடத்தில் கொண்டு வந்து அபிஷேகம் செய்து விட்டு அப்படியே பிரதட்சணமாய் வந்து மனமுருக வணங்கிடும் போது அவ்வைக்குள்ளே இனிய தமிழில் பல துதிப் பாடல்கள் தோன்றின. அதில் ஒன்று தான்

    பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

    நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்

    துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு

    சங்கத் தமிழ் மூன்றும் தா.

    என்னும் பாடல். அவ்வையின் காலம் மதுரையில் கடைச்சங்கம் இருந்த காலம். இந்த காலத்தில் தான் சோழ நாட்டில் கம்பரும், ஒட்டக்கூத்தரும், புகழேந்தியார் என்னும் புலவரும் வாழ்ந்து வந்தனர்.

    இவர்களில் கம்பருக்கும், ஒட்டக்கூத்தருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். புகழேந்தியார் வழியோ தனி வழி. இப்படிப் பெரும் புலவர்கள் வாழ்ந்த நாளில் தான் காலம் அவர்களோடு அவ்வையையும் கொண்டு சேர்த்தது.

    முன்னதாக அவ்வைத் தன் வாழ்வில் ஒர் அதிசயத்தையும் கேட்டு நிகழ்த்திக் கொண்டதை அனைவரும் அறிந்து கொண்டாக வேண்டும்.

    அவ்வை ஒரு பெண்ணாக இருந்தும் பெண்களுக்கேயுரிய அழகுணர்ச்சிக்கும் அலங்காரத்திற்கும் முக்கியத்துவம் தரவேயில்லை. வாலிபப் பிராயத்தை எட்டும் நிலையில் தானொரு ஆணுக்கு வாழ்க்கைப்பட்டு இல்வாழ்வு எனும் இல்லறத்தில் செல்ல ஏனோ விரும்பவில்லை. இல்லறத்தில் செல்ல விரும்பாத நிலையில் நல்லறமாக அவ்வை கருதியது இறையறத்தைத்தான். அதாவது தவத்தை…

    குழந்தைப் பிராயத்திலேயே சிவபெருமான் மேல் பாரத்தைப் போட்டு விட்டேன் என்று பாடிய மனம், இல்லறம் எனும் பெரும்பாட்டை, பிள்ளைகள் உறவுகள் என்று வழிவழியாய்த் தொடரும் ஒரு பந்தத்தை எப்படி விரும்பும் ?

    அதையே விரும்பாதபோது இளமைதான் எதற்கு?

    இந்த இளமை, பெண்கள் வரையில் சற்று போகமும் மோகமும் சார்ந்தது. நாம் அதைக் கொண்டாடாவிட்டாலும் பிறர் கண்களுக்கு அது விருந்தாகி விடும் ஆபத்தும் அதிகம். தோற்றம் என்பது ஏற்றம் தருவதாக இருக்க வேண்டும். எனவே அவ்வை தனது மனதிற்கிசைந்த கணபதியிடம் தனக்கேற்ற விதமான உடம்பைக் கேட்கிறாள். கணபதியும் அந்த இளமையான தெய்வக் குழந்தைக்கு முதிர்ந்த வைரம் பாய்ந்த ஞானம் மிக்க தேகத்தை வழங்கி அருளுகிறான்.

    உலகிலேயே இளமையைத் துறந்து முதுமையை வேண்டிய பெற்றவர்கள் இருவர். ஒருவர் காரைக்காலம்மையார், அடுத்து, அவ்வைப் பாட்டி மட்டுமே. இங்கேயிருந்து தொடங்குகிறது அவ்வையின் பவித்ரமான பயணம்.

    முதுமையை வேண்டிய பெற்றபின் அவ்வை ஒரு பெண் துறவியாய் அதே சமயம், கவியரசியாய் நாடு முழுவதும் வலம் வரத் தொடங்கினாள். பொதுவாக துறவிகளுக்கு ஒரு ஊரோ, ஒரு நாடோ, ஒரு வீடோ சொந்தமென்று ஆகி விடக் கூடாது. எங்கேயும் பற்றுதலோடு, நீண்ட நாட்கள் தங்கி விடுவதும் ஆகாது. அது துறவறத்துக்கே உண்டான தர்மம். எனவே அவ்வையும் ஒரு யாத்ரீகன் போல பயணம் மேற்கொண்டபடியே இருந்தாள்.

    தோளிலே தொங்கும் ஒரு துணிப்பை. அதில் மாற்று உடுப்பாக ஒரு காவிப் புடவை. நிறைய பனை ஓலைகள், எழுத்தாணிகள் இதுதான் அவ்வையின் தனிப் பெரும் சொத்து. அந்த வேழமுகத்தோன் அவ்வை கேட்ட முதுமையோடு அறிவிற் சிறந்த ஞானத்தையும் ஒரு சேர வழங்கியிருந்ததால் தீதும் நன்றும் அவ்வையால் மிக்க சிறப்புடன் விளங்கிக் கொள்ளப்பட்டது. அறமும் தருமமும் அவ்வையின் பாடல்களில் அழுத்தமாய் வெளிப் பட்டது. வாழ்வின் மீது நிலவும் ஆசாபாசங்களும், அச்சமும், அவ்வையிடம் துளியும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், அவ்வையின் சொற்களில் மந்திர சக்தி குடி புகுந்து கொண்டது.

    பொதுவில் கவிதையும், புலமையும் வயப்பட்டவர்களுக்கு அருட் சக்தி அதிகம் இருக்கும். ஏன் என்றால், அருள் நிதி கொண்டவர்களையே மொழியின் இந்த அறிவு நிதி சென்று சேரும். அப்படிப்பட்டவர்களின் வாயில் நாம் விழுந்து விடக் கூடாது என்று பெரியவர்கள் எச்சரிக்கையாகக் கூறுவார்கள்.

    மொழி புலமைமிக்க அக்கவிஞன் வறுமையில் இருக்கலாம். ஆனால் அவன் சொல்லுக்கு வலிமை அதிகம். எனவே, கவிஞர்கள், புலவர்களிடம் வாழ்த்துப் பெறுவது மிகுந்த வலிமையை நமக்குத் தரும். அவர்களை கோபத்துக்கு ஆளாக்குவது நமக்குத் தீராத பழி பாவத்தை ஏற்படுத்தி விடும்.

    அவ்வையின் வாழ்விலும் அதற்கு நிறைய சான்றுகள் உண்டு. அவ்வை கவிதாயினியாக வலம் வந்த நாளில், பெரும் கவிச் சக்ரவர்த்தியாக திகழ்ந்தவர் கம்பர் பிரான் இவரிடம் ஒருவர் வாழ்த்துப் பாவினை பெற்று விட்டால், அவர்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பதோடு வறுமையும் அவர்களுக்கு இருக் காது என்றும் ஒரு கருத்து அந்த நாளில் இருந்தது. இது கருத்து மட்டுமல்ல ஒரு நிதர்சனமான உண்மையும் கூட!

    இதைக் கேள்விப்பட்ட சிலம்பில் என்கிற ஒரு தாசி, கம்பரைச் சந்தித்து தன் மேல் வாழ்த்துப் பா பாடும்படி வேண்டி நின்றாள். கம்பேரா இதுபோல நான் பாட வேண்டுமென்றால் நீ எனக்கு ஆயிரம் பொன் தர வேண்டும் உன்னால் தர முடியுமா? என்று கேட்டார்.

    சிலம்பியும் ஆயிரம் பொன்னுடன் வருவதாகக் கூறிப் புறப்பட்டாள். ஆனால் அவளால் ஐநூறு பொன்னைத்தான் திரட்ட முடிந்தது. அதோடு கம்பரிடம் வந்து இவ்வளவுதான் என்னால் முடிந்தது. எனவே இதை ஏற்றுக் கொண்டு என்னை வாழ்த்திப் பாடியருள வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டு நின்றாள். ஆனால் கம்பர் பிடிவாதமாக மறுத்ததோடு, ஆயிரம் பொன்னுக்குத்தான் முழுப்பாடல், ஐநூறு பொன் அதில் பாதி. எனவே பாடலிலும் பாதியைத்தான் பாடுவேன் என்று கூறிய வராக அரைப் பாட்டை மட்டும் பாடினார்.

    அந்தப் பாடலே…

    "தண்ணீரும் காவிரியே; தார் வேந்தன் சோழனே…

    மண்ணாவதுஞ் சோழ மண்டலமே!"

    என்று இரண்டு வரிகளில் பாடி முடித்துவிட்டு, அதை அந்த தாசி வீட்டு வாயிற் சுவரிலும் எழுதி விட்டு, புறப்பட்டுப் போய் விட்டார். அவரோடு தாசியின் ஐநூறு பொன்னும் போயிற்று. தாசி முழுப்பாடலும் கிடைக்காது, தன் சம்பாத்யம் அவ்வளவையும் இழந்து, கண்ணீரோடு நின்றாள். ஆனால் அந்த சிலம்பிக்கு நல்ல விதியமைப்பு இருந்தது. அன்றே அவள் வீட்டுத் திண்ணை மேல் வந்து அமர்ந்தாள் அவ்வைப் பாட்டி.

    நெடுந்தூரம் நடந்து வந்த களைப்பு, மாலைப்பொழுதிலேயும் வெம்மை. எனவே பாட்டியிடம் களைப்பும் பசியும் போட்டி போட்டது. ஏற்பது இகழ்ச்சி என்று பாடிய பாட்டிக்கு, தன் பசியின் பொருட்டு யாசிக்கப் பிடிக்கவில்லை. குளத்து நீர் குடித்து, எங்காவது பழ மரங்கள் கண்ணில் பட்டால், அதில் பழங்களைப் பறித்து உண்டு பசியாறுவது தான் பாட்டிக்கும் இசை வானதாக இருந்தது. ஆனால் பழ மரம் கண்ணில் படவில்லை. தாசியின் வீடுதான் கண்ணில் படவும் அங்கே திண்ணையில் பசியோடும், களைத்து அமரவும், தாசியும் வெளியே எட்டிப் பார்த்தாள். தாசியின் முகமும் கம்பரால் இருளடைந்து தான் போயிருந்தது. இதை அவ்வைப் பாட்டியும் கண்டாள். இருவருக்கும் இடையே உரையாடல் தொடங்கியது.

    அம்மா, தாங்கள் யார் என நான் அறியலாமா?

    நானொரு தமிழ்த்துறவியம்மா… என் பேர் அவ்வை.

    ஆஹா... அவ்வைப் பாட்டியா? அறிவேனம்மா... தங்களை நான் அறிவேன்…

    இந்தக் கிழவியை அறிந்தவளா நீ… அடடே... ஆமாம் நீ யார் என்று கூறவில்லையே?

    என் பெயர் சிலம்பி. நானொரு தாசியம்மா! என்றாள்.

    அதைக் கேட்டு அவ்வைப் பாட்டி அதிர்ந்தாள். இருந்த போதிலும் "ஹூம்… குலவிளக்காய் திகழ வேண்டிய பெண் இப்படி பொது மகளாகலாமா? பாதகமில்லை. நீ உண்மையைப் பேசியதால் அதன் பொருட்டு உன்னை நான் மதிக்கச் சித்தமாய் உள்ளேன் என்றாள்.

    மிக்க மகிழ்ச்சியம்மா! இப்படி ஒரு வாழ்க்கை வாழ யாருக்குத்தான் பிடிக்கும்? விதி வறுமையின் காரணமாக என்னை மட்டு மல்ல என் குலத்தவர் அனைவரையும் என்றோ இந்தப் படுகுழியில் தள்ளி விட்டது. இதிலிருந்து மீளுவதற்கு, நானும் என்னென்னவோ செய்து பார்த்தேன். முடியவில்லை. போகட்டும். உங்களைப் பார்த்தால், பசியோடும், களைப் போடும் இருப்பது நன்கு தெரிகிறது. என் வசம் பசியை போக்கிக் கொள்ள கூழ் உள்ளது. நான் தரும் கூழைப் பருகி, உங்கள் பசியைப் போக்கிக் கொண்டு என்னையும் உங்கள் வாக்கினால் வாழ்த்துவீர்களா?

    சிலம்பி மிகுந்த கரிசனத்தோடு கேட்டாள். அவ்வைக்கு அவள் மேல் பரிவு தோன்றியது. உடனேயே சரி என்று சம்மதித்திட, அந்த தாசியும், தான் உண்ண வைத்திருந்த கூழினை எடுத்து வந்து தந்து, அவ்வைப் பாட்டியின் பசியைத் தணித்தாள். உண்டு பசியாறியபின், அவள் வீட்டுச் சுவற்றில் கம்பரால் எழுதப் பட்டு சென்ற அந்த ஐநூறு பொன் பாடல் வரிகள் கண்ணில் பட்டது.

    என்ன இது... பாடல் இப்படிப் பாதியில் நிற்கிறதே?

    ஆம் தாயே… இது கவிச் சக்கரவர்த்தி கம்பர் பாடியது .

    அடடே… கம்பன் பாட்டா இது? பலே… ஏன் பாதியில் நிற்கிறது?

    பாட்டி கேட்க, தாசி சிலம்பியும் நடந்து முடிந்த சகலத்தையும் கூறினாள். நிறைவாக,

    தாயே... இந்த தாசித் தொழிலில் இருந்து விடுபட்டு ஒரு நல்ல வாழ்க்கை வாழ விரும்பியே கம்பரிடம் வாழ்த்துப் பாடல் கேட்டேன். ஆனால் அவரோ, எனது பொன்னுக்கு ஏற்ப பாதிப் பாடல் பாடி விட்டுப் போய் விட்டார். அவருடைய வாழ்த்துப் பாடலுக்கு ஆசைப்பட்டதாலேயே நானும் என் சேமிப்பை எல்லாம் இழந்து நிற்கிறேன்

    என்று கண்ணீர் விட்டாள். அடுத்த நொடியே பாட்டி எழுந்தாள். ஒரு கரித்துண்டைக் கொண்டு வரச் சொல்லி கம்பரின் பாடலை தான் முடிக்கச் சித்தமானாள்.

    "அம்பர்ச்சிலம்பி யரவிந்தத் தாளணியும்

    செம்பொற் சிலம்பே சிலம்பு!" என்று இரு வரிகளை எழுதி அந்த வாழ்த்துப் பாவை பூர்த்தி செய்தாள். அவ்வை வாழ்த்தியது சத்திய வாக்கானது. அந்த சிலம்பி என்னும் தாசியும், காலில் செம்பொன் சிலம் பணியும் அளவுக்குப்

    Enjoying the preview?
    Page 1 of 1