Chithrai Nilave! Senbaga Malare!
()
About this ebook
ஜெய்ப்பூரில் ஆரம்பித்து, தில்லி, மதுரை, செண்பகக் கோட்டை என்று பயணிக்கும் த்ரில்லர் கதை. சிறிதளவு அமானுஷ்யம், சிறிதளவு ஆன்மிகம், சிறிதளவு வரலாறு என்று அனைத்து அம்சங்களும் கலந்த விறுவிறுப்பான கதை. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்ட வஞ்சகர்கள் தங்கள் சதிச் செயல்களால் நல்லவர்களை வீழ்த்துவதையும், நீதி இறுதியில் நிலைநாட்டப் படுவதையும் எனது கற்பனையில் கலந்து நிறைய திருப்பங்களுடன் சுவாரஸ்யமான கதையாக வடித்திருக்கிறேன். செண்பகக் கோட்டை ஜமீனின் பழைய வரலாற்றைத் தெரிந்து கொள்ளப் படித்துப் பாருங்கள்.
Read more from Puvana Chandrashekaran
Pasamulla Rojavey! Rating: 0 out of 5 stars0 ratingsBala Thiripurasundari Rating: 0 out of 5 stars0 ratingsNandhavanathil Oru Aandi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalagi Kasindhu Kanneer Malgi Rating: 5 out of 5 stars5/5Nesamulla Vaansudarey! Rating: 0 out of 5 stars0 ratingsUnarvugalin Holi Rating: 0 out of 5 stars0 ratingsMinnal Thoorikaigal Rating: 0 out of 5 stars0 ratingsParakkum Yanai Rating: 0 out of 5 stars0 ratingsKolai Kudil Rating: 0 out of 5 stars0 ratingsKaleidoscope Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsChithira Poovizhiyal Rating: 0 out of 5 stars0 ratingsVaira Oosi Rating: 0 out of 5 stars0 ratingsVasudeva Kudumbagam Rating: 0 out of 5 stars0 ratingsAbini Aaranyam Rating: 0 out of 5 stars0 ratingsAnuvin Attagasangal Rating: 0 out of 5 stars0 ratingsAlai Payuthey Kanna! Rating: 0 out of 5 stars0 ratingsKanney! Kalaimanaey! Rating: 0 out of 5 stars0 ratingsAambalin Pagal Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsTwinkle Twinkle Little Star Rating: 0 out of 5 stars0 ratingsSenthanalil Pootha Semparuthi Rating: 0 out of 5 stars0 ratingsAmmavin Meesai Rating: 0 out of 5 stars0 ratingsMarkazhi Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAmanushya Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsNugathadi Rating: 0 out of 5 stars0 ratingsKalinthiyin Kanneer Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Vanathil Vinotha Ilavarasargal Rating: 0 out of 5 stars0 ratingsVaana Prestham Rating: 0 out of 5 stars0 ratingsMouna Suvar Rating: 0 out of 5 stars0 ratingsMohini Vanthaal! Nindraal! Kondraal! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Chithrai Nilave! Senbaga Malare!
Related ebooks
Mudhal Kaadhal Rating: 5 out of 5 stars5/5Oonjaladum Ullangal Rating: 0 out of 5 stars0 ratingsUdhaya Geetham Rating: 0 out of 5 stars0 ratingsUruga Marukkum Mezhuguvarthi Rating: 5 out of 5 stars5/5Vaana Prestham Rating: 0 out of 5 stars0 ratingsSirukathai Thoguppu - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsAgayam Ullavarai Rating: 0 out of 5 stars0 ratingsNeelakkal Moothiram Rating: 0 out of 5 stars0 ratingsVennilavu Deepangal Rating: 0 out of 5 stars0 ratingsSathuranga Kuthiraigal! Rating: 0 out of 5 stars0 ratingsKadavulai Kandavargal Rating: 0 out of 5 stars0 ratingsKaathodu Oru Kaadhal Kathai Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsNaveena Navarasa Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsNeelanira Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsSoorya Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Vaibogame Rating: 2 out of 5 stars2/5Mazhaikaala Malligaigal Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Kalantha Uravugul Rating: 0 out of 5 stars0 ratingsKankal Solkindra Kavithai Rating: 5 out of 5 stars5/5Pavala Malli Rating: 0 out of 5 stars0 ratingsManathin Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsVenpura Nesam Rating: 0 out of 5 stars0 ratingsVaira Oosi Rating: 0 out of 5 stars0 ratingsIvarthan, Konjam Kavani... Rating: 0 out of 5 stars0 ratingsSherlock Holmessin Saagasa Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsMinnal Devathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAzhagiya Penney Rating: 0 out of 5 stars0 ratingsYudha Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsParavasamoottum Bakthi Kathaigal Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Chithrai Nilave! Senbaga Malare!
0 ratings0 reviews
Book preview
Chithrai Nilave! Senbaga Malare! - Puvana Chandrashekaran
https://www.pustaka.co.in
சித்திரை நிலவே! செண்பக மலரே!
Chithrai Nilave! Senbaga Malare!
Author:
புவனா சந்திரசேகரன்
Puvana Chandrashekaran
For more books
https://www.pustaka.co.in/home/author/puvana-chandrashekaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author. All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 1
இந்தியாவின் மேற்குப் பகுதியான இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமான ஜெய்ப்பூர் நகரம். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரம். கோட்டைகளும் அழகான கட்டிடங்களும் நிறைந்து இளஞ்சிவப்பில் மின்னும் அழகிய நகரம். வீரம் செறிந்த ராஜபுதனத்தின் சிறப்பான பூமி. இளஞ் சிவப்பு நிறக் கட்டிடங்கள் கொட்டிக் கிடப்பதால் பிங்க் ஸிட்டி என்று செல்லமாக அழைக்கப்படும் நகரம். இந்தியாவிற்குப் புகழ் சேர்க்கும் சுற்றுலாத் தளங்களில் இதற்கும் சிறப்பான இடம் உண்டு.
இங்கு இருக்கும் சில அழகான மாளிகைகள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களாக மாற்றப்பட்டு அதிக அளவில் வெளிநாட்டவரைக் கவர்ந்திழுக்கின்றன.
புழுதி படிந்த வறட்சியான பாலைவனத்தைத் தனக்குள் கொண்டிருக்கும் இந்த மாநிலம் வரலாற்றுச் சிறப்புக்கும் எழில் வாய்ந்த மாளிகைகளுக்கும் பெயர் போன ஜெய்ப்பூர், ஆஜ்மெர் போன்ற நகரங்களால் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறது.
இப்போது ஜெய்ப்பூர் நகரத்துக்குள் பிரவேசிப்போம்.
மலைகளாலும், கோட்டைகளாலும் சூழப் பட்ட இந்த நகரத்தில் வாழும் மக்கள் நட்பில் சிறந்தவர்கள். விலை உயர்ந்த நவரத்தினக் கற்களைச் சேர்த்து நகைகள் செய்வதிலும், மார்பிள் போன்ற கட்டுமானத் தொழில் சம்பந்தமான கற்களின் வியாபாரத்திலும் பேர் போன வியாபாரிகள் இங்கு அதிகம். பாரம்பரிய இசை, நடனக் கலைகளிலும் சிறந்தவர்கள் இவர்கள். தங்கள் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் பற்றிய பெருமிதம் இவர்களுக்கு அதிகம்.
இந்த ஊரில் தான் நமது கதை ஆரம்பம் ஆகிறது.
அனுகரண் தில்லியைச் சேர்ந்த தமிழ்ப் பையன். தமிழ்நாடு பூர்விகம் என்றாலும் பிறந்து வளர்ந்ததெல்லாம் தில்லி தான். அப்பா வழியில் மூன்று தலைமுறைகளாக டெல்லியில் வசித்து வருகிறார்கள். அம்மா வழிச் சொந்தங்கள் மட்டும் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில்.
எப்போதாவது விடுமுறைக்கு அம்மாவுடன் போவான். அப்பா வழிச் சொந்தங்கள் எல்லோரும் தில்லி, மும்பை, சண்டிகர் என்று இந்தப் பக்கம் தான். அப்பாவிற்கு அதிகம் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால் அம்மாவிற்குத் தாய்மொழியில் அதிக ஆர்வம். குழந்தைகள் அனுகரண் மற்றும் சிற்பிகா இருவருக்கும் இழுத்து வைத்து சிறு வயதில் இருந்தே தமிழ் கற்றுக் கொடுத்து இப்போது இருவருமே திருக்குறள், பாரதியார்,பாரதிதாசனார் கவிதைகள் அனைத்துமே படித்து இரசிக்கும் அளவு கற்றுக் கொண்டு விட்டார்கள்.
அனுகரண் தில்லி யூனிவர்சிடியில் பட்ட இளங்கலைப் படிப்பு வரலாறு பிரிவு எடுத்துப் படித்து முடித்து விட்டு, இப்போது இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன்
என்ற கல்வி நிறுவனத்தில் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் அதாவது புலனாய்வுப் பத்திரிகைத் துறை சார்ந்த படிப்பில் சேர்ந்திருக்கிறான்
அவனுக்குக் குழந்தையில் இருந்தே வரலாறு பற்றிய ஆராய்ச்சி மற்றும் பத்திரிகைத் துறையில் புலனாய்வு செய்வது இரண்டிலுமே ஆர்வம். வரலாறு பிரிவில் பி.ஏ.முடித்து விட்டு இப்போது பத்திரிகைத் துறையிலும் சேரத் தான் படித்துக் கொண்டிருந்தான். இந்தத் துறையில் மனது லயிக்கவில்லை என்றால் அடுத்துத் தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் அகழாய்வு போன்ற துறைகளிலும் கால் பதிக்க ஆசை. இந்தக் கால இளைஞர்களுக்குக் கல்வியில் புதிய துறைகளைத் தேர்ந்தெடுக்கும் துணிவும் ஆர்வமும் நிறையவே இருக்கின்றன. அதுவும் பெற்றோர் ஆதரவும் கிடைத்து விட்டால் கேட்கவே வேண்டாம். அந்த விதத்தில் அனுகரண் கொடுத்து வைத்தவன். நிறைய சுதந்திரம் கொடுத்துத் தன்னம்பிக்கையை ஊட்டியே வளர்க்கும் பெற்றோர் அவனுக்கு வாய்த்திருந்தார்கள்.
அனுகரண் டிசம்பர் லீவில் இன்ஸ்டிடியூட்டில்
கூடப் படிக்கும் பிரதீப்புடன் அவனுடைய ஊரான ஜெய்ப்பூருக்கு வந்திருக்கிறான்.
பிரதீப்பின் பெற்றோரின் அன்பான கவனிப்பு, விதவிதமான உணவு வகைகள், விருந்தோம்பல் எல்லோமே சேர்ந்து
ராஜஸ்தானியர் மேல் அவனுக்கு ஏற்கனவே இருந்த நன்மதிப்பை இன்னும் பல மடங்கு கூட்டின.
ஒரு வாரம் ஊர் சுற்றிப் பார்க்க வந்திருந்த அவனுடைய ஜெய்ப்பூர் விஸிட் அவனுடைய வாழ்க்கையையே புரட்டிப் போடப் போகிறதென்று அனுகரணுக்குத் தெரியாது. பல்வேறு புதிய அனுபவங்களையும் வாழ்க்கைப் பாடங்களையும் அவனுக்கு வழங்கப் போகிறதென்று பாவம் அவனுக்கு அப்போது தெரியாது.
அனுகரணின் நண்பன் பிரதீப்பின் தந்தை மார்பிள் தயாரித்து விற்பனை செய்யும் பிஸினஸ்மேன். பணக்காரக் குடும்பம். தனி வீடு மாளிகை போல பிரம்மாண்டமானது.
மாலை நேரம் வரவேற்பறையில் அமர்ந்து பிரதீப்பும் அனுகரணும் ப்ரதீப்பின் அப்பாவுடன் உட்கார்ந்து சாய் அருந்திக் கொண்டே பிரதீப்பின் அம்மா கொண்டு வந்து கொடுத்த சமோசாக்களைச் சுடச்சுட உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்கள்.
வாசலில் பெல் சத்தம் கேட்டு வேலைக்காரன் சென்று கதவைத் திறந்தான். பக்கத்து வீட்டுக் காரர் பரபரப்புடன் உள்ளே நுழைந்தார். முகத்தில் பயங்கரப் பதட்டம்.
க்யா ஹுவா சந்தீப்? க்யா பாத் ஹை? பரேஷான் க்யூம் லக்ரஹே ஹோ!
,
(என்ன ஆயிற்று சந்தீப்? என்ன விஷயம்? ஏன் இவ்வளவு கவலையுடன் இருக்கிறாய்?)
(இனி வரும் உரையாடல்களைத் தமிழிலேயே தருகிறேன்.இல்லையென்றால் கதையின் சுவாரஸ்யத்தைக் குறைத்து விடும்.)
என்று கேட்கப் பக்கத்து வீட்டு சந்தீப் அவர் அருகில் சென்று மெல்லிய குரலில் ஏதோ பேசி விட்டு, உடனே கிளம்பியும் போய் விட்டார்.
நேற்று தான் பக்கத்து வீட்டுத் தம்பதியை அவர்கள் குழந்தையுடன் அவர்கள் வீட்டுக் கதவுக்கருகில் பார்த்தார்கள். இருவரும் பிரதீப்பின் பெற்றோரை விட வயதிலும் கம்மி. ஆனால் ரொம்ப இளம் வயது என்றும் சொல்ல முடியாது. ஒரு பெண்குழந்தை அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருந்தது.
குண்டுக் கன்னங்கள். பளீரென்ற முகம். ஜில்லென்ற சிரிப்பு. கருவண்டுக் கண்கள். கருகருவென்ற அடர்த்தியான சுருட்டை முடி. கண்டோரை இழுக்கும் அழகு முகம். செம க்யூட். பார்த்தவுடன் தூக்கிக் கொஞ்ச வேண்டும் போலத் தான் தோன்றும் யாருக்கும்.
பிரதீப் அவர்களை அறிமுகம் செய்து வைத்தான். அனுகரணிடம் அவனுடைய சொந்த ஊரைப் பற்றி, பெற்றோர் பற்றி எல்லாம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பிரியத்துடன் விசாரித்தார்கள். தங்கள் வீட்டிற்குள் வரச் சொல்லி அழைப்பு விடுத்தார்கள். இன்னொரு நாள் வருவதாக அனுகரண் சொன்னான். ஆனால் அங்கே போக வேண்டிய சந்தர்ப்பம் அடுத்த நாளே அவனுக்குக் கிடைத்தது.
பக்கத்து வீட்டுக்காரர் போனதும் பிரதீப்பின் அப்பா அனுகரணிடம் சொன்னார்.
"பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு ஏதோ உடம்பு சரியில்லையாம். ஏதோ திடீரென்று புரியாத மொழியில் பேசுறாளாம்.தென்னிந்திய பாஷை போல அவருக்குத் தோணுதாம். நீ அவங்க வீட்டுக்குப் போய் அந்தக் குழந்தையைப் பார்த்து அவ பேசறது உனக்குப் புரியுதான்னு
பாக்கச் சொல்லிக் கேக்கறார். உனக்கு ஓகே என்றால் போய்ப் பார். இல்லைன்னா விட்டுறலாம்",
என்று பிரதீப்பின் அப்பா சொல்ல, அனுகரண் உடனே எழுந்தான்.
"இதிலென்ன அங்கிள் இருக்கு? எனக்குப் புரிந்தால் கண்டிப்பாக உதவி செய்கிறேன்.
வாங்க உடனே போகலாம்" என்று சொல்லிக் கிளம்பியும் விட்டான்.
பக்கத்து வீட்டில் பிரதீப், பிரதீப்பின் அப்பா,
அனுகரண் மூன்று பேரும் நுழைந்தார்கள். அவர்களும் நல்ல செல்வச்செழிப்புடன் தான் இருந்தார்கள். அவர்களுடைய வீட்டின் வசதிகளைப் பார்த்தால் நல்ல பணக்காரர்களாகத் தெரிந்தது.
குழந்தை நடு ஹாலில் கையில் ஒரு பொம்மையுடன் உட்கார்ந்திருந்தாள்.
வெறித்த பார்வை. முகம் கோபத்துடன் இருப்பது போலச் சிவந்திருந்தது. கண்களை உருட்டி உருட்டி யாரையோ
அதட்டுவது போல கைகளை ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தாள். குழந்தையின் பெற்றோர் கைகளைப் பிசைந்து கொண்டு, செய்வதறியாமல் திகைத்துப் போய் நின்றிருந்தார்கள்.
பக்கத்தில் போய் உன்னிப்பாகக் கேட்டான் அனுகரண். சுத்தத் தமிழில் மடமடவென்று நிறுத்தாமல் தெளிவாகப் பேசிக் கொண்டிருந்தாள். ஏதோ தேவி துதி போலத் தோன்றியது அனுகரணுக்கு.
அந்தக் குழந்தையின் அருகே உட்கார்ந்து அவளுடைய முதுகை ஆதரவாக வருடி விட்டு மென்மையாகத் தமிழில் கேட்டான்.
என்னம்மா ஆச்சு கண்ணா? என்ன வேணும் உனக்கு? ஏன் கோபமா இருக்கே?
அந்தக் கெட்ட மனுஷங்க எல்லோரையும் கொன்னுட்டாங்க அண்ணா. அம்மாவை எனக்குப் பாக்கணும்
, என்று சொல்ல அனுகரண் உடனே,
இதோ உன்னோட அம்மா எதிரிலே இருக்காங்களே?
என்று கேட்டான். அவள் உடனே,
இல்லை, இந்த அம்மா இல்லை. வேற அம்மா. என்னோட நெஜ அம்மா. அம்மாவைப் பாக்கணும் உடனே
என்று சொல்லி விட்டுப் பெருங்குரலில் அழ ஆரம்பித்தாள். உடனே அழுது கொண்டே மயங்கி விழுந்தாள்.
அத்தியாயம் 2
குழந்தை மயங்கி விழுந்ததும் பதறிப் போன
பெற்றோர் அவளை மடியில் போட்டு முகத்தில் தண்ணீர் தெளிக்கச் சிறிது நேரத்தில் அவள் கண் விழித்தாள்.
எழுந்த குழந்தை அஹானாவின் முகம்
இப்போது சாந்தமடைந்து முழுக்க முழுக்க மாறியிருந்தது. குழந்தைகளுக்கே உண்டான கள்ளமில்லா முகபாவம் திரும்பியிருந்தது. தன்னுடைய அம்மாவின் மடியில் போய்ப் படுத்துக் கொண்டு ஆயாசமாகக் கண்களை மூடிக் கொண்டாள்.
சந்தீப் தனது மனைவியைப் பார்த்துக்
கண்களைக் காட்ட, அவள் குழந்தையை அணைத்தபடி படுக்கையறையை நோக்கி நடந்தாள்.
என்ன பேசினாள் அஹானா? உங்கள் மொழி தானா இது?
என்று அனுகரணைப் பார்த்துக் கவலையுடன் கேட்டார் சந்தீப்.
ஆமாம் அங்கிள். எங்களுடைய மொழி தான். நல்ல தமிழில் தான் பேசினா. உங்களுடைய உறவினர் யாராவது தமிழ்நாட்டில் இருக்காங்களா? நீங்க அடிக்கடி தமிழ்நாடு போவீங்களா?
என்று கேட்க உடனே தலையசைத்து அவர் மறுத்தார்.
இல்லையே! அப்படி யாரும் இல்லையே. நாங்க சில வருஷங்களுக்கு முன்னால தமிழ்நாடு ஒரே ஒரு தடவை சுற்றுலா போனோம். அப்போ அஹானா கைக்குழந்தை. பேச்சுக் கூட வரலை. அந்தப் பயணத்தில் அவள் தமிழைக் கத்துட்டிருக்க முடியாது. அதுவும் நாங்க சில நாட்களிலேயே திரும்பிட்டோமே
என்று சொல்லி விட, அனுகரண் யோசித்தான்.
ஒருவேளை இவளுடன் பள்ளியில் படிக்கும் குழந்தைகளில் யாராவது தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இருக்காங்களா? குழந்தைகள் சுலபமா மொழியைக் கத்துக்குவாங்க. அதுவும் ஃப்ரண்ட்ஸ் கிட்டேயிருந்து ரொம்ப வேகமாகக் கத்துக்குவாங்க
என்று கேட்க அதற்கும் மறுப்புத் தெரிவித்தார் சந்தீப்.
எனக்குத் தெரிஞ்சு இவளுடைய கிளாஸில் தமிழ்க் குழந்தை யாரும் இல்லை. பேரண்ட் டீச்சர் மீட்டிங்கிற்கு மாசம் ஒருதடவை நாங்க கண்டிப்பாப் போறோம். இருந்தால் நிச்சயமா எங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஸ்கூல் பஸ்ஸில் போகும் போதும் பத்தே நிமிடங்களில் ஸ்கூல் வந்துடும். பத்து நிமிஷத்தில யார் கிட்டயிருந்தும் புது மொழியைக் கத்துக்கறது கஷ்டம். என்ன பேசினான்னு சொல்லு தம்பி. அதில் இருந்து யோசிச்சுக் கண்டுபிடிக்கலாம்
என்று கேட்டார்.
அதற்குள் அஹானாவின் அம்மாவும் அவளைப் படுக்கையறையில் தூங்க வைத்து விட்டுக் கணவரருகில் வந்து அமர்ந்தார். அவர் முகமும் கவலையால் வாடியிருந்தது.
அவள் முதலில் ஏதோ தேவியின் துதி அதாவது ஸ்லோகம் போல ஏதோ முணுமுணுத்துக்கிட்டிருந்தா. அதுக்கப்புறம், 'என் அம்மா கிட்டே போகணும்' ன்னு சொன்னாள். யாரோ கெட்டவர்கள் யாரையோ கொன்னதாச் சொன்னா. அப்ப நான், 'உன்னோட அம்மா இதோ எதிரில் தானே இருக்காங்க' ன்னு கேட்டேன். அப்ப, 'இவங்க இல்லை; என்னோட நெஜ அம்மா' ன்னு சொன்னா
என்றான் அனுகரண்.
இந்த வார்த்தைகளை அனுகரண் சொல்லி
முடித்ததும் அதிர்ச்சியுடன் சந்தீப்பும் அவருடைய மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
சந்தீப்பின் மனைவி அழுதுகொண்டே உள்ளே போய்விட்டாள். சந்தீப் ஒரு நிமிடத்தில் திரும்புவதாகச் சொல்லி விட்டு மனைவியின் பின்னால் சென்று அவளை சமாதானம் செய்து விட்டுத் திரும்பினார்.
படுக்கையறையில் இருந்து சந்தீப்பின் மனைவி துக்கத்துடன் விம்மும் சத்தமும் சந்தீப் அவளுடன் மெல்லிய குரலில் பேசிய சத்தமும் வெளியே கேட்க அனுகரணும், பிரதீப் மற்றும் பிரதீப்பின் தந்தையும் சங்கடத்தில் நெளிந்து கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்தில் சந்தீப் வெளியே வந்து அவர்களிடம் காக்க வைத்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போனதால என்னுடைய மனைவி கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டா. உங்களை கவனிக்காமல் தனியாக விட்டுட்டுப் போய்ட்டேன். தவறா நினைக்க வேண்டாம்
என்று சொல்லி விட்டு அவர்களைப் பார்த்துக் கை கூப்பினார் சந்தீப்.
ஸாரி எல்லாம் எதற்கு சந்தீப்? இது கூட எங்களால புரிஞ்சுக்க முடியாதா? சரி, நாங்க கிளம்பறோம். ஏதாவது உதவி தேவைன்னாத் தயங்காமக் கூப்பிடுங்க
என்று சொல்லி விட்டுப் பிரதீப்பின் அப்பா அங்கிருந்து கிளம்ப, அனுகரணும் பிரதீப்பும் அவருடன் கிளம்பினார்கள்.
வாசல் வரை வந்து அவர்களை வழியனுப்பி விட்டு விட்டு உள்ளே போனார் சந்தீப்.
அன்று இரவு அனுகரணுக்கு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை. பிறந்தது முதல் இராஜஸ்தானில் வளரும் குழந்தை எப்படி அவ்வளவு நல்ல தமிழில் பேச முடியும்? யாரும் தமிழ் தெரிந்த நண்பர்களும் இல்லை என்று சந்தீப் சொல்கிறார். எப்படி இது சாத்தியம்? ஆச்சர்யமான விஷயம் தான். ஒருவேளை பூர்வஜென்ம நினைவுகள் ஏதாவது இருக்குமோ? அனுகரணுக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது. ஏதாவது சினிமாவிலோ இல்லை டி.வி.ஸீரியல்களிலோ வந்தால் கேலி பண்ணிச் சிரித்து இரசிப்பான்.
ஆனால் இந்தக் குழந்தை நிஜ அம்மா என்று எதற்குச் சொன்னாள்? தேவி துதி மாதிரி வேறு ஏதோ முணுமுணுத்தாளே!
யாரோ யாரையோ கொன்றதாக வேறு சொன்னாளே!
ஊருக்குப் போனதும் அம்மாவிடம் தான் கேட்ட சில சொற்களைச் சொன்னால் என்ன ஸ்லோகம் என்று கரெக்டாகச் சொல்வாள்.
உடனே எழுந்து தான் கேட்ட சொற்களைத் தனது டைரியில் நோட் செய்து கொண்டான்.
தூக்கமே வராமல் நீண்ட நேரம் புரண்டு புரண்டு படுத்ததில் பயங்கரக் கனவு.
தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மலையடிவார கிராமம். ஓர் அம்மன் கோயில். நாக்கைத் தள்ளிக் கொண்டு கையில் வாளுடன்
அம்மன் சிலை பிரம்மாண்டமாக நின்றது. அதன் எதிரில் பலியிடப்பட்ட சில விலங்குகள் மற்றும் பறவைகளின் இரத்தம் சிதறிக் கிடந்தது. பயங்கரமான காட்சியாக இருந்தது. அங்கே அனுகரண் ஒரு தூணில் கட்டப்பட்டிருக்கிறான். அவன் எதிரே குழந்தை அஹானா பட்டுப் பாவாடை,சட்டை,நகைகள் எல்லாம் போட்டுக் கொண்டு கழுத்தில் மாலையுடன் சிரித்த முகத்துடன் தெய்வீகமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.
அங்கே ஒரு பூசாரி மஞ்சள் நீரை அஹானா மேல் கொட்டி விட்டுத் தன் கையில் இருந்த அரிவாளை அவள் கழுத்தை நோக்கி வீசுகிறார்.
வேண்டாம். வேண்டாம். அவளை விட்டுடுங்க…..
என்று கத்திக் கொண்டு அனுகரண் கண் விழிக்க, அதே அறையில் இன்னொரு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பிரதீப் எழுந்து லைட்டைப் போட்டு விட்டு அனுகரண் அருகில் வந்து உட்கார்ந்தான்.
ஹலோ அனுகரண். ஆர் யூ ஓகே? என்ன ஆச்சு? ஏதாவது பேட் ட்ரீமா?
என்று கேட்க, அனுகரண் தூக்கம் கலைந்து குழப்பத்துடன் எழுந்து உட்கார்ந்தான்.
ஸாரி பிரதீப். ஏதோ கெட்ட கனவு தான். உன்னையும் சேத்துத் தூங்கவிடாம டிஸ்டர்ப் செஞ்சுட்டேன்
என்று சொன்னான். பிரதீப் எழுந்து ஒரு கிளாஸில் தண்ணீர் குடிக்கக் கொண்டு வந்து கொடுத்தான். அதை வாங்கிக் குடித்து விட்டு அனுகரண் திரும்பவும் தூங்க முயற்சி செய்தான். ஆனால் தூக்கம் நன்றாகக் கலைந்து போய் விட்டது. அஹானா வீட்டில் நடந்ததை எல்லாம் மனது அசை போட, அந்தக் குழந்தையின் பெற்றோர் ஏதோ சில விஷயங்களை மறைப்பது போல அவனுடைய மனதிற்குப் பட்டது.
அடுத்த நாள் காலையில் எழுந்து குளித்து ரெடியாகி ஹவா மஹல் சுற்றிப் பார்க்க அனுகரண் பிரதீப்புடன் கிளம்பிக் கொண்டிருந்தான்.
ஹவா மஹல் என்பது ஒரு பிரம்மாண்டமான அழகு மாளிகை. ஹவா என்றால் காற்று என்பது பொருள். இந்த மாளிகை ராஜா ஜெய்சிங்கின் பேரனான
பிரதீப் சிங்கால் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. ஐந்து தளங்களையும்
953 ஜன்னல்களையும் கொண்டு சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறக் கற்களால் கட்டப்பட்டது. பல நுணுக்கமான வேலைப்பாடுகள் கலை ரசனையுடன் அமைக்கப் பட்டிருக்கின்றன. அரச குலப் பெண்டிர் திரை மறைவில் இருந்து தான் நகரத்தைப் பார்க்கும் வழக்கம் இருந்ததால் அவர்கள் தங்கள் முகத்தை மறைத்துக் கொள்ளாமல் ஜன்னல்கள் வழியாகத் தெருவில் நடக்கும் திருவிழாக்களையும் கொண்டாட்டங்களையும் இரசித்து மகிழ்வதற்காகவே கட்டப்பட்ட மாளிகை. ஜன்னல்களின் அமைப்பினால் நல்ல வெயில் காலத்திலும் காற்றோட்டமாகத் திகழ்வதால் தான் ஹவா மஹல் என்று அழைக்கப்படுகிறது.
ஹவா மஹலைப் பார்த்து விட்டு வெளியே ஒரு ரெஸ்டாரெண்டில் ராஜஸ்தானின் சிறப்பான மார்வாடி வகை உணவை உண்டு இரசித்துவிட்டு மாலையில் வீடு திரும்பினார்கள்.
வீட்டின் வெளிக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே போகும் சமயத்தில் தன்னுடைய வீட்டில் இருந்து வெளியே வந்த சந்தீப் அவர்களைத் தன் வீட்டிற்குள் அவசரமாக அழைத்துச் சென்றார்.
நடு ஹாலில் குழந்தை அஹானா தரையில் உட்கார்ந்து கொண்டு வெறித்த பார்வையுடன் கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தாள்.அஹானாவின் அம்மா அருகே கவலையுடன் நின்று கொண்டிருந்தாள்.
என்னை அம்மா கிட்டே கூட்டிப் போக மாட்டீங்களா? அவளோட உசுருக்கு ஆபத்து. அவளை யாராவது காப்பாத்துங்கடா
என்று கத்திக் கொண்டிருந்தாள்.
அனுகரண் அவள் அருகில் சென்று தரையில் அமர்ந்து கொண்டு,
உன் பேரென்னம்மா? நீ யாரும்மா? நீ யாருன்னு சொன்னாத் தானே எங்களால உதவி செய்ய முடியும்?
என்று பவ்யமாகக் கேட்க அஹானா அதற்கு,
நான் நான் செண்பகவல்லிடா
என்று சொல்லி விட்டு மயங்கி விட்டாள்.
அவளைத் தூக்கிக் கொண்டு அஹானாவின் அம்மா உள்ளே சென்று விட்டாள். சந்தீப் அவர்களுடன் பேச ஆரம்பித்தார். அதற்குள் பிரதீப்பின் அப்பாவும் அங்கு வந்திருந்தார்.
அனுகரண், சில விஷயங்களை நேத்து நான் உங்க கிட்டச் சொல்லாமல் மறைச்சுட்டேன். இன்னைக்கு எல்லாத்தையும் உங்க கிட்டச் சொல்லிடறேன். நீங்க தான் உங்களுடைய உறவினர்களோ நண்பர்களோ தமிழ்நாட்டில் இருந்தால் அவங்க மூலமாக விசாரிச்சுச் சில உண்மைகளைக் கண்டுபிடிச்சு எங்களுக்கு உதவணும். அப்பத் தான் இந்தப் பிரச்சினைகள் தீரும்
என்று சொல்லி விட்டுச் சில வருடங்களுக்கு முன்னால் அவர்கள் தமிழ்நாடு சென்ற போது நடந்த சில விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார். அதிர்ச்சியுடனும் ஆச்சர்யத்துடனும் மூன்று பேரும், சந்தீப் வாயிலிருந்து பழைய நிகழ்ச்சிகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
அத்தியாயம் 3
சந்தீப் தமிழ்நாட்டில் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களைச் சொல்லச் சொல்ல ஆச்சர்யத்துடன் மூன்று பேரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இனி வரும் பகுதியில் சந்தீப் சொன்ன விஷயங்களைத் தொகுத்து எனது நடையில் தருகிறேன்.
சந்தீப் அந்தப் பணக்கார பிஸினஸ் குடும்பத்தின் ஒரே வாரிசு. நவரத்தினங்கள் பதித்து வேலைப்பாடு செய்யப்படும் நல்ல கலைநயமுள்ள நகைகள் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் குடும்பம். அதைத் தவிர ஜெய்ப்பூரில் பெரிய நகைக்கடை. பணத்திற்கும் வசதிக்கும் குறைவே இல்லாத குடும்பம்.
சந்தீப்பின் தகுதிக்கும் செல்வச் செழிப்பிற்கும் ஏற்ற குடும்பத்தில் இருந்து ஏக்தா அவருடைய மனைவியாக வந்தார். இருவருக்கும் திருமணமாகி இல்லற வாழ்க்கை இனிமையுடன் கழிந்து கொண்டிருந்தது.
ஆனால் திருமணமாகிப் பத்தாண்டுகள் கழிந்தும் குழந்தைப் பேறு கிட்டவில்லை.
சந்தீப், ஏக்தாவுடன் சேர்ந்து வீட்டுப் பெரியவர்களும் கவலை அடைந்தனர்.
சாதாரணமாக எல்லாப் பணக்காரக் குடும்பங்களிலும் செய்கின்றபடி கோயில்களுக்குச் சென்று வேண்டிக் கொண்டார்கள். புகழ்பெற்ற ஜோசியர்களிடம் அவர்களுடைய குண்டலிகளைக் காட்டினார்கள். நாம் தென்னிந்தியாவில் ஜாதகம் என்று சொல்வதை, வடநாட்டில் குண்டலி என்று சொல்வார்கள். அதாவது ஜனம் குண்டலி அல்லது ஜன்ம குண்டலி. பிறந்த நேரத்தை
வைத்து கணிப்பது. அப்படியே நமது ஜாதகம் போலத் தான்.
சந்தீப், ஏக்தா இருவருடைய ஜாதகங்களையும் பார்த்த ஒரு பிரபல ஜோதிடர் அவர்களைச் சில பரிகாரங்களைச் செய்யச் சொன்னார். அந்தப் பரிகாரங்களைச் செய்ததற்குப் பிறகு தென்னாட்டிற்குச் சென்று இராமேஸ்வரம் தலத்தில் சில விசேஷ