Vasudeva Kudumbagam
()
About this ebook
வசுதேவ குடும்பகம் என்று மகா உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ள இந்த வார்த்தை பிரயோகம், வள்ளுவரின், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கருத்தோடு ஒத்துப் போகிறது. உலகம் ஒரே குடும்பம் என்பது இதன் பொருளாகும். சங்கமம் தளத்தில் நடந்த கதை சங்கமம் 2022 போட்டியில் காதல், சமூகம், குடும்பம் என்ற பிரிவில் முதல் பரிசை வென்ற கதை இது.
தனது பிறப்பில் இருக்கும் இரகசியத்தை அறியத் துடிக்கும் இளம் பத்திரிகையாளரான வன்யாவின் கதை. கதையின் ஊடே சில சமூக பிரச்சினைகளை அலசி அவற்றிற்கான தீர்வுகளையும் தந்திருக்கிறேன். வன்யாவுடைய கனவுகள் கதையின் ஊடே பயணித்துக் கதைக்கு வலு சேர்க்கின்றன. படித்துப் பாருங்கள்.
Read more from Puvana Chandrashekaran
Bala Thiripurasundari Rating: 0 out of 5 stars0 ratingsNandhavanathil Oru Aandi Rating: 0 out of 5 stars0 ratingsUnarvugalin Holi Rating: 0 out of 5 stars0 ratingsMinnal Thoorikaigal Rating: 0 out of 5 stars0 ratingsPasamulla Rojavey! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalagi Kasindhu Kanneer Malgi Rating: 5 out of 5 stars5/5Amanushya Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsMohini Vanthaal! Nindraal! Kondraal! Rating: 0 out of 5 stars0 ratingsKanney! Kalaimanaey! Rating: 0 out of 5 stars0 ratingsParakkum Yanai Rating: 0 out of 5 stars0 ratingsOonaagi Uravaagi Uyiraagi! Rating: 0 out of 5 stars0 ratingsAlai Payuthey Kanna! Rating: 0 out of 5 stars0 ratingsAganaga Natpathu Natpu Rating: 0 out of 5 stars0 ratingsChithrai Nilave! Senbaga Malare! Rating: 0 out of 5 stars0 ratingsNugathadi Rating: 0 out of 5 stars0 ratingsVaana Prestham Rating: 0 out of 5 stars0 ratingsKaleidoscope Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsSenthanalil Pootha Semparuthi Rating: 0 out of 5 stars0 ratingsKalinthiyin Kanneer Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Vanathil Vinotha Ilavarasargal Rating: 0 out of 5 stars0 ratingsAbini Aaranyam Rating: 0 out of 5 stars0 ratingsTwinkle Twinkle Little Star Rating: 0 out of 5 stars0 ratingsMarkazhi Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsVaira Oosi Rating: 0 out of 5 stars0 ratingsMouna Suvar Rating: 0 out of 5 stars0 ratingsAambalin Pagal Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsAmmavin Meesai Rating: 0 out of 5 stars0 ratingsAnuvin Attagasangal Rating: 0 out of 5 stars0 ratingsKolai Kudil Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vasudeva Kudumbagam
Related ebooks
Kottaipurathu Veedu Rating: 5 out of 5 stars5/5Kannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Unnodu Irukkum Ponnaana Nimidangal Rating: 0 out of 5 stars0 ratingsMoovidathu Vanaratham Rating: 3 out of 5 stars3/5Sarithira Nayagi Rajanandhini - Sirukathai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsMaayak Kottai Rating: 0 out of 5 stars0 ratingsCheraman Vanchi Rating: 0 out of 5 stars0 ratingsNandhipurathu Naayagi Part - 2 Rating: 3 out of 5 stars3/5Inbangal Ilavasam Rating: 4 out of 5 stars4/5Maanikkap Pudhaiyal Rating: 0 out of 5 stars0 ratingsVanadeviyin Maindhargal Rating: 0 out of 5 stars0 ratingsNatpirkku Veettrirukkai Yathenin Rating: 0 out of 5 stars0 ratingsThevar Koyil Roja! Rating: 0 out of 5 stars0 ratingsPallavan Pandiyan Baskaran Rating: 0 out of 5 stars0 ratingsMullai Paattu Rating: 0 out of 5 stars0 ratingsShshsh… Rating: 0 out of 5 stars0 ratingsVallathu Ilavarasi Rating: 0 out of 5 stars0 ratingsKaaviyama Nenjin Ooviyama Rating: 0 out of 5 stars0 ratingsChola Ilavarasan Kanavu Rating: 4 out of 5 stars4/5Vennilave… Vennilave! Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Oru Gramathu Pennin Thalai Prasavam - Kavithai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsThinai Maalai Nootraimbathu Rating: 0 out of 5 stars0 ratingsPakkathil Paruva Nila Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Guru Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Varum Neram Rating: 5 out of 5 stars5/5Paranjothi Munivar Aruliya Thiruvilaiyadal Puranam Rating: 0 out of 5 stars0 ratingsApoorva Ramayanam : Volume 2 - Anuman Kadhaigal Rating: 5 out of 5 stars5/5Oodathey Karuppu Rating: 5 out of 5 stars5/5Maha Periyavaal Virundhu Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vasudeva Kudumbagam
0 ratings0 reviews
Book preview
Vasudeva Kudumbagam - Puvana Chandrashekaran
https://www.pustaka.co.in
வசுதேவ குடும்பகம்
Vasudeva Kudumbagam
Author:
புவனா சந்திரசேகரன்
Puvana Chandrashekaran
For more books
https://www.pustaka.co.in/home/author/puvana-chandrashekaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
ஆசிரியர் குறிப்பு
முன்னுரை
அத்தியாயம் - 1
அத்தியாயம் - 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் - 4
அத்தியாயம் - 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் - 10
அத்தியாயம் - 11
அத்தியாயம் - 12
அத்தியாயம் - 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் - 15
அத்தியாயம் - 16
அத்தியாயம் - 17
அத்தியாயம் - 18
அத்தியாயம் - 19
அத்தியாயம் - 20
அத்தியாயம் - 21
அத்தியாயம் - 22
அத்தியாயம் - 23
ஆசிரியர் குறிப்பு
கனவுப் பகுதியைக் கதையின் நாயகி வன்யா பார்க்கும் விதத்தில் அப்படியே எழுதாமல், வன்யா தனது டைரியில் குறித்து வைக்கும் கதையாகத்தான் எழுதியிருக்கிறேன். கனவாக எழுதினால் நிறைய காட்சிகளை வர்ணிக்க முடியாது என்ற காரணத்தால், கதையின் விறுவிறுப்பைக் கூட்ட ஒரு கதை போலவே தான் அந்தப் பகுதியை எழுதி இருக்கிறேன். வாசகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
- புவனா சந்திரசேகரன்.
நன்றி.
முன்னுரை
வசுதேவ குடும்பகம் என்று மகா உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ள இந்த வார்த்தை பிரயோகம், வள்ளுவரின், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
என்ற கருத்தோடு ஒத்துப்போகிறது. உலகம் ஒரே குடும்பம் என்பது இதன் பொருளாகும்.
சங்கமம் தளத்தில் நடந்த கதை சங்கமம் 2022 போட்டியில் காதல், சமூகம், குடும்பம் என்ற பிரிவில் முதல் பரிசை வென்ற கதை இது.
தனது பிறப்பில் இருக்கும் இரகசியத்தை அறியத் துடிக்கும் இளம்பத்திரிகையாளரான வன்யாவின் கதை. கதையின் ஊடே சில சமூக பிரச்சினைகளை அலசி அவற்றிற்கான தீர்வுகளையும் தந்திருக்கிறேன். வன்யாவுடைய கனவுகள் கதையின் ஊடே பயணித்துக் கதைக்கு வலு சேர்க்கின்றன. படித்துப் பாருங்கள்.
தொடர் ஆதரவுடன் அச்சில் ஏற்கனவே வெளிவருகின்ற எனது எட்டாவது நாவல் இது.
- புவனா சந்திரசேகரன்.
அத்தியாயம் - 1
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
(திருக்குறள்)
மெய் நிகர் மாயை
விழித்திரை மூடியதும்
நினைவுகளின் மைதானத்தில்
மனக்குதிரை பதிக்கின்ற
காலடித் தடங்கள் தானோ
கனவுகள்!
மரங்கள் நிறைந்திருந்த அடர்வனப் பகுதி. கதிரவன் எவ்வளவோ முயற்சித்தும் தனது கதிர்களை உள்ளே அனுப்ப முடியவில்லை. வண்டுகளின் ரீங்காரமும், பூச்சிகளின் கொல்லென்ற சத்தமும், எங்கிருந்தோ வந்த பறவைகளின் கீச் கீச் சத்தமும் செவிகளை நிறைத்தன.
பல்வேறு மலர்களின் நறுமணம் கலந்து நாசியில் துளைத்தது. மகிழம்பூ, கொன்றைப் பூ, செண்பகப் பூ, மனோரஞ்சிதம், அரளி, சம்பங்கி என்று பல்வேறு வண்ணங்களில் மரங்களிலும், செடி, கொடிகளிலும் பூத்துக் குலுங்கிய பூக்கள், ஒரு தனி அழகை அந்த வனப்பகுதியில் அள்ளித் தெளித்தன. புதர்களில் தாழம்பூக்கள் மண்டிக் கிடந்தன. அந்த மலர்களின் மணத்தை ரசித்துக்கொண்டு கிறங்கிக் கிடந்தன பூ நாகங்கள்.
வெடித்துச் சிதறியும், மரங்களில் பழுத்துத் தொங்கிக்கொண்டும், செடி, கொடிகளில் கொத்துக்கொத்தாகக் காற்றில் அசைந்துக்கொண்டும் கண்களைக் கவரும் வண்ணம் தீஞ்சுவைக் கனிகள் காட்சி தந்தன. அந்தக் கனிகளும் சுவை கலந்த இனிமையான வாசனையைக் காற்றில் பரப்பிக்கொண்டு, பசி நரம்புகளைத் தூண்டின. நாவில் உமிழ்நீரைச் சுரக்க வைக்கும் ருசி கலந்த வாசனை.
குரங்குகள் மரங்களில் அங்குமிங்கும் தாவி மந்திகளுடன் கனிகளை வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்க, எங்கோ யானையின் பிளிறல், நரிகள் ஊளையிடும் சத்தம், புலியின் உறுமல் கேட்கத் தொடங்கியது. அருகில் அருவி நீர் கீழே பாறைகளில் மோதி வீழ்கின்ற கொல்லென்ற சத்தமும், அப்படி வீழ்ந்த நீர் சலசலவென்று நதியாக ஓடும் சத்தமும் தெளிவாகக் காதில் விழுந்தன.
அந்த வனத்தில் தன்னைச் சுற்றிப் பரவியிருந்த இயற்கையின் பவித்திரமான அழகை இரசித்துக்கொண்டு, வெள்ளை நிறப் புரவியில் வீற்று கம்பீரமாகப் பயணித்து வந்த அந்த இளம்பெண், குதிரையின் பிடரியில் மென்மையாகத் தட்டி அதனை நிறுத்தினாள். கண்களைச் சுற்றிலும் குடை ராட்டினத்தைப்போலச் சுழற்றி, உன்னிப்பாக கவனித்தாள்.
அவள் வதனத்தில் அழகும், அறிவும், வீரமும் கை கோர்த்துத் தாண்டவமாடின. ஆடைகளும், ஆபரணங்களும் எளிமையாக இருந்தாலும் அவற்றில் இருந்த நேர்த்தி அவளுடைய செல்வச் செழிப்பைப் பறைசாற்றியது. கலைமகளும், அலைமகளும், மலைமகளும் சேர்ந்து அவளுக்குப் பரிபூரண அருள்பாலித்திருந்ததை அவளுடைய தோற்றம் உள்ளங்கை நெல்லிக்கனியாகக் காட்டியது.
அவள் மனதில் எழுந்த ஐயத்தை உறுதிப்படுத்துவதுபோல, அவளெதிரே ஒரு மான் மருண்டுபோய் ஓடி வந்து கொண்டிருந்தது. அதனைத் துரத்திக்கொண்டு அடர்மஞ்சள் நிறத்தில் ஒரு வேங்கை.
தனது இடுப்பில் சொருகி இருந்த குறுவாளைக் கையில் எடுத்துக்கொண்டு குதிரையில் இருந்து குதித்து இறங்கினாள்.
புலி ஒரு நொடி தடுமாறியது. ஓடிக் கொண்டிருக்கும் மானைத் தொடருவதா, இல்லை கண்ணெதிரே மான் சென்ற வழியை மறைத்துக்கொண்டு நிற்கும் மங்கையின் மீது பாய்வதா என்று குழம்பிப்போய் நின்றது. உடனே சமாளித்துக்கொண்டு உறுமியபடி கண்ணெதிரே நின்ற மங்கையின் மீது பாய முடிவு செய்து சற்றே பின்வாங்கிப் பதுங்கியது. அதே சமயம் அந்த வீரமங்கை, கையில் குறுவாளுடன் வேங்கையின் மீது தாவி, அதனை அடக்க முயற்சி செய்தாள்.
சீற்றத்துடன் திரும்பித் தாக்கியது வேங்கை. வீரத்துடன் கூடிய மங்கையின் சீற்றமிகு குரலும், வேங்கையின் வெறித்தனமான உறுமலுமாகச் சேர்ந்து அங்கே பயங்கரமான சூழ்நிலையொன்று உருவானது. மேலே பறவைகள் அச்சத்துடன் சிறகுகளை அடித்துக்கொண்டு அங்குமிங்கும் பறந்தன. குரங்குகள், மந்திகளைக் கொஞ்சுவதை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்க்கத் தொடங்கின. கழுகுகள் வட்டமிடத் தொடங்கின.
குறுவாளால் அந்தப் பெண், புலியின் உடலில் பல காயங்களை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டாள். அந்தப் புலியின் நகங்களும், கூரிய பற்களும் மங்கையின் உடலில் கீறல்களை உருவாக்கக் குருதி கசியத் தொடங்கியது. குருதியின் மணத்தை முகர்ந்த வேங்கை, இன்னும் அதிக ஆக்ரோஷத்துடன் அவளைத் தாக்கத் தொடங்கியது. நீண்ட நேரம் நடந்த போரில் மங்கையும், வேங்கையும் சேர்ந்தே களைத்துப் போயினர். மங்கையின் கண்கள் சொருக, அவள் மயங்கி வீழ்ந்தாள். அவள் அருகே வேங்கையும் சோர்ந்து கிடந்தது.
சிறிது நேரம் கழித்து, உடலில் எரிச்சலை உணர்ந்து விழிகளை மெல்ல விரித்தாள் அந்தக் காரிகை. எதிரே வனத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவன், அவளெதிரே மண்டியிட்டு அமர்ந்துக்கொண்டு, அவளுடைய உடலில் இருந்த காயங்களைத் துடைத்து சுத்தம் செய்து மூலிகைச் சாறைப் பூசிக் கொண்டிருந்தான். ஒரு குகையின் வாயிலின் அருகே ஒரு பாறையில் கிடத்தப்பட்டிருந்த மங்கை மெல்ல எழுந்து உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்தாள்.
அந்த மான் பிழைத்ததல்லவா?
என்று தனது வலியையும் பொறுத்துக்கொண்டு வினாக்களை எழுப்பியவளைப் புன்முறுவலுடன் எதிர்கொண்டான் அந்த இளைஞன்.
தன்னுயிரைத் துச்சமெனக் கருதி, மானைக் காப்பதற்காக வேங்கையுடன் போர் செய்யும் வீரத்தமிழ்ப் பெண் இருக்கும்போது மான் தப்பித்துத்தானே இருக்க முடியும்?
என்றான் அவன்.
அந்த வேங்கை?
தெரியவில்லை. அநேகமாக இவ்வளவு நேரம் மடிந்து போயிருக்கும். எல்லாம் தங்களுடைய வீரத்தாக்குதலின் மகிமைதான்.
நீங்கள் யார்? இங்கே வனத்தில் என்ன செய்கிறீர்கள்?
நான் இந்த வனத்தின் அழகை இரசித்துக்கொண்டு, இயற்கைத் தாயின் மடியில் கிறங்கிக் கிடக்கும் ஒரு வனவாசி. எனது பெயர் நீலன்
என்றான்.
எனது பெயர் வானதி. அருகிலிருக்கும் நாட்டில் வசிக்கும் ஒரு சாதாரணப் பெண்
என்று சொன்னதும், அந்த இளைஞன் மீண்டும் புன்முறுவல் பூத்தான்.
வனத்தை அடுத்திருக்கும் நாட்டின் இளவரசி வானமாதேவிக்கு இந்த அடியேனின் வணக்கம்
என்று சிரம் தாழ்த்தி வணங்கியவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள், வானதி என்றழைக்கப்பட்ட வானமாதேவி.
வியப்பாக இருக்கிறதா? வனத்தில் கிடைக்கும் தேனையும், சில அபூர்வமான மூலிகைகள், வேர்கள் மற்றும் கனிகளையும் விற்பதற்குத் தங்களுடைய நகரத்துக்கு அடிக்கடி அடியேன் வருகை தருவதுண்டு. அப்படி ஒருமுறை வந்தபோது, சிவாலயத்துக்குப் பல்லக்கில் சென்று கொண்டிருந்த நீங்கள், பல்லக்கின் திரையை விலக்கி முகத்தை வெளியே காண்பித்தீர்கள். அப்போது கண்ட முழுமதி போன்ற முகம் மனதில் சித்திரமாகப் பதிந்துவிட்டது. ஆலோனின் அமைதியை அன்று கண்டேன். வெய்யோனின் வெம்மையை இன்று கண்டேன்
என்றான் நகைப்பினூடே.
தமிழ்ப் புலவரோ தாங்கள்?
தமிழை இரசிக்கும் வனமகன் இந்த எளியவன்
என்று சொல்லி மீண்டும் நகைத்தான். அவன் முகத்தில் ஏதோ ஒரு சோகம், மறைந்து ஒளிந்திருப்பதாக வானதியின் மனதில் தோன்ற, அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தாள்.
உங்களுடைய கூற்று பாதி மெய். மீதி நீங்களாகப் புனைந்தது. நான் இளவரசி அல்ல. அன்று பல்லக்கில் வந்தது மெய். எனது தந்தையின் கட்டளைப்படி பல்லக்கில் செல்ல வேண்டிய கட்டாயம். எனது தந்தை வனத்திற்கு அனுப்பத் தயங்குவதில்லை. ஆனால் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களுக்கு என்னை எளிதில் அனுப்பவதில்லை. ஆலயங்களுக்குச் செல்ல நான் விழைந்தால், அதிகம் மக்கள் நடமாடாத நாளாகப் பார்த்து இந்த மாதிரித்தான் பல்லக்கில் அனுப்புகிறார். ஏனென்று எனக்குப் புரிவதில்லை. அவரை நான் எதிர்த்துக் கேள்வி எழுப்புவதுமில்லை. எனது பெயர் வானமாதேவிதான். தந்தை சில சமயங்களில் என்னை இளவரசி என்று செல்லமாக அழைப்பதுண்டு. அதனால்தான் தாங்கள் இளவரசி என்று என்னை விளித்தபோது என் தந்தையின் நினைவு வந்தது.
உங்கள் தந்தை அரண்மனையில் பணியாற்றுகிறாரோ?
இல்லை. அவர் ஒரு வணிகர். நகரத்து வீதியில் ஒரு கடை வைத்து ஆடைகளை விற்பனை செய்கிறவர். ஆனால் கல்வியில் சிறந்தவர் என்பதால் பல செல்வந்தர்கள் வீடுகளுக்குச் சென்று, அவர்களுடைய குழந்தைகளுக்கும் மற்றும் உயர்பதவி வகிக்கும் அரசு அதிகாரிகளின் குழந்தைகளுக்கும் கல்வி கற்பித்து வருகிறார். தான் ஒரு வணிகன் என்பதைவிட, ஆசான் என்பதில் அதிகப்பெருமை கொள்வதாக அடிக்கடி சொல்வார். தாயை இளம்வயதில் இழந்த எனக்கு அந்தக் குறையே தெரியாதபடி வளர்த்த தாயுமானவர் எனது தந்தை
என்று தந்தையைப் பற்றிப் பேசிய அந்த இளநங்கையின் முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்தது.
அவளுடைய சொற்களைக் கேட்ட அந்த இளைஞனின் முகத்தில் முதலில் வியப்பு தோன்றியது; பின்னர் ஒரு நிம்மதி தோன்றியது.
அருகில் இருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த அவளுடைய புரவி கனைக்கும் ஒலி கேட்க, அதைத் திரும்பிப் பார்த்தாள்.
தேவி, தங்களுடைய உடலில் மிக அதிகமாகக் காயங்கள் இருக்கின்றன. குருதியையும் இழந்திருக்கிறீர்கள். இப்போது புரவியில் அமர்ந்து பயணம் செய்யும் அளவு உங்கள் உடலில் வலுவில்லை. இன்று ஒருநாள் ஓய்வெடுத்துக்கொண்டு நாளை பகலில் நீங்கள் பயணிக்கலாம்
என்றான்.
இல்லை இல்லை. என்னைக் காணாமல் எனது தந்தை கவலைக்கொண்டு பதட்டமடைவார். எப்படியாவது கிளம்பி விடுகிறேன்
என்று தடுமாறிக்கொண்டு எழுந்தவளால் ஓரடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. தள்ளாடியவளை, நீலன் வந்து தாங்கிக்கொண்டான்.
பார்த்தீர்களா? அதற்காகத்தான் நான் சொன்னேன். வாருங்கள். குகையின் உள்ளே படுத்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்
என்று உள்ளே அழைத்துச் சென்று ஒரு துணியை விரித்துப் படுத்துறங்க இடத்தைத் தேர்வு செய்தான்.
நீங்கள் பருகுவதற்கு மருந்தும், உணவும் கொண்டு வருகிறேன்
என்று சொல்லிவிட்டு வெளியே சென்றவன், உண்பதற்குச் சில கனிகளையும், குடிப்பதற்கு மூலிகைச் சாறையும் தந்தான். மலர்களைப் போன்ற மென்மையான மெத்தையில் நித்தமும் துயில்கின்ற அந்த தேவதைப் பெண், கற்களின் மீது சாய்ந்ததும் உறங்கிப் போனாள்.
மாயை சூழ் பொய் வாழ்க்கை
காலையில் கதிரவனின் கதிர்கள் வெளிச்சத்தைப் பரப்பியபடி, பூமிக் கோட்டையை முற்றுகையிட்ட இருளெனும் அரக்கனை விரட்டி வெற்றிக்கொடி நாட்டின. கண்களைக் கசக்கிக்கொண்டே எழுந்தாள் அவள். புலி, புலி, குதிரை எங்கே? மான் பிழைத்துவிட்டதா?
என்று கேள்விகளை அடுக்க,
என்னம்மா? இன்னைக்கும் ஏதாவது கனவா? கனவில ஏதாவது புலி, மான், குதிரையெல்லாம் வந்துச்சா? இதே வேலையாப் போச்சு ஒனக்கு? ராத்திரி ஏதாவது பொஸ்தகத்தைப் படிச்சுட்டே தூங்க வேண்டியது. காலையில எந்திரிச்சு இப்படியே ஒளற வேண்டியது? விளையாட்டுப் புள்ளையா இருக்கியேம்மா இப்படி?
என்று அவளைக் கடிந்து கொண்டார் ஆறுமுகம்.
இல்லைப்பா, நான் நேத்து புக் எதுவும் படிக்கவேயில்லைப்பா. நேத்து வேலை நெறைய இருந்துச்சா, ரொம்பக் களைப்பா இருந்தேனே? உங்களுக்கும் தெரியுமே? படுத்ததும் தூங்கிப் போயிட்டேன். அப்படியே நெஜமா நடந்த மாதிரியே இருந்துச்சுப்பா
என்றாள் வன்யா, ஆமாம். வன்யாதான் அவளுடைய பெயர்.
அதெல்லாம் சில சமயம் கனவு அப்படித்தாம்மா வரும். நான்கூட மகாராஜாவா ஆட்சி செய்யற மாதிரி, இந்த நாட்டோட ஜனாதிபதி ஆற மாதிரின்னு எவ்வளவோ கனவு கண்டுருக்கேன். கனவுலகம் வேற. நனவுலகம் வேற. கனவை மறந்துட்டு இந்த நனவுலகத்துக்கு வா. இன்னைக்கு என்னவோ நிறைய வேலையிருக்கு. சீக்கிரமாக் கிளம்பிப் போகணுமின்னு சொன்னயே? குளிச்சுட்டு மடமடன்னு கெளம்பு. வெண்பொங்கலும், சட்னியும் செஞ்சு வச்சிருக்கேன். நீ குளிச்சிட்டு வந்ததும் சேர்ந்து சாப்பிடலாம்
என்றார்.
என்னப்பா இது? இன்னைக்கும் நான் எழுந்திருக்கறதுக்குள்ள நீங்களே டிஃபன் செஞ்சுட்டீங்களே? இப்படியே தினமும் செஞ்சீங்கன்னாக் கூடிய சீக்கிரம் எனக்கு சமையலே மறந்து போயிடும். என்னை ஒரு வேலையும் செய்யவிடாம இப்படி சோம்பேறியா மாத்திடாதீங்கப்பா, ப்ளீஸ்
என்றாள். நிஜமாகவே அப்பா இந்த வயசான காலத்தில் வீட்டு வேலைகள் அத்தனையையும் நிர்வாகித்துக்கொண்டு சமையலையும் முக்கால்வாசி நாட்கள் செய்துவிடுகிறாரே என்ற குற்ற உணர்வு அவளுடைய மனதில் தோன்றியது.
அதுனால என்னம்மா? நான் வீட்டில சும்மா போரடிச்சுட்டுத் தானேம்மா இருக்கேன்? சுவத்தைப் பாத்துக்கிட்டே எவ்வளவு நேரத்தைக் கழிக்கிறது? டி.வி-யிலயும் ரொம்ப நேரம் மனசு லயிக்கலை. ஏதாவது வேலை செஞ்சு சுறுசுறுப்பா இருந்தாத்தானே மனசுக்கும், உடம்புக்கும் நல்லது.
அதுக்காக இவ்வளவு தூரம் ஸ்ட்ரெயின் பண்ணிக்கணுமா? வேலையில் இருந்து ஓய்வு கெடைக்கற வரைக்கும் ஓடியாடி உழைச்சது போறாதா? ரிடயர்டு லைஃபை நல்லா என்ஜாய் பண்ணுங்கப்பா.
அட போம்மா. எனக்கென்ன என்ஜாய் பண்ண வேண்டிக் கெடக்கு? எங்கையில உன்னைக் கொடுத்துட்டு உங்கம்மா கனகா எப்பவோ போய்ச் சேந்துட்டா? காலாகாலத்துல உனக்கொரு கல்யாணத்தை செஞ்சு வச்சுட்டா நானும் நிம்மதியாக் கண்ணை மூடுவேன். அவ இருக்கற இடத்துக்குப் போயி அவளோட சேந்துக்குவேன்.
என்னப்பா இது? காலங்காத்தால அபசகுனமாப் பேசாதீங்க? அம்மாவைத்தான் சின்ன வயசிலயே இழந்துட்டேன். நீங்க தானேப்பா எனக்கு எல்லாமே? நீங்க இப்படிப் பேசலாமா? எனக்குக் கல்யாணமெல்லாம் வேணவே வேணாம். உங்க கூடயே இப்படியே இருந்துடறேன். இனிமே இந்த மாதிரி பேசக் கூடாது
என்று சொன்னவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
அடடா, ஏதோ உணர்ச்சிவசப்பட்டுப் பேசி உன்னோட மனசையும் வருத்தப்பட வச்சுட்டேனே? நாள் பூரா வேலை பாக்கப்போற பொண்ணைக் காலையில எழுந்திருச்சதும் அப்ஸெட் ஆக்கிட்டேனே இப்படி? கண்ணைத் தொடைச்சுக்கிட்டு எழுந்து குளிக்கப் போம்மா. எனக்குப் பசிக்குது. சீக்கிரமாத் தயாராகிச் சாப்பிட வா
என்று சொல்லி அவளுடைய மனநிலையை வெற்றிகரமாக வேறு திசையில் திருப்பி விட்டுவிட்டு, அந்த அறையில் இருந்து வெளியே போனார்.
"கொஞ்ச நாளா ஏதோ மனசு சரியா இருக்கறதில்லை. உடம்பு ஒண்ணும் இப்போதைக்குப் பிரச்சினை இல்லை. இருந்தாலும் நெஞ்சில திடீர் திடீர்னு முணுக்முணுக்னு ஒரு வலி வருது. இப்ப சொன்னா வன்யா பயந்துருவா. கொஞ்சம் வன்யாவுக்கு வேலை குறைச்சலா இருக்கும்போது சொல்லி, ஒரு மெடிக்கல் செக்-அப் செஞ்சுக்கணும். ஏதோ சொல்லத் தெரியாத பயம் ஒண்ணு மனசுக்குள்ள எட்டிப்பாக்கற மாதிரி இருக்கு.
ஏதாவது உடம்புக்கு வரதுக்கு முன்னால சில உண்மைகளைப் பக்குவமா வன்யாகிட்ட எடுத்துச் சொல்லணும். சொல்லவும் பயமா இருக்கு. படிச்ச பொண்ணுதானே? புரிஞ்சுக்குவா நிச்சயமா. தெரிஞ்சதும் ஒருவேளை என்மேல பயங்கரக் கோபம் வந்து என்னை வெறுத்துடுவாளோ? அதுவும் பயமாத்தான் இருக்கு. இப்போதைக்குக் கொஞ்ச நாளைக்குத் தள்ளிப் போடுவோம். உடம்புக்கு ஏதாவது வந்தாப் பாத்துக்கலாம்" என்று முடிவு செய்து தற்காலிகமாக மனதை அமைதிப்படுத்திக் கொண்டார்.
அவரது முடிவு தவறாகப் போகிறதென்று அவருக்குப் புரியவில்லை. நாளை நடக்கப்போவது நம் கையில் இல்லை. நேற்று முடிந்ததும் கையைவிட்டுப் போய்விட்டது. நடந்தவற்றை எண்ணிக் கவலை கொள்வதில் அர்த்தமில்லை என்பது உண்மைதான். ஆனால் இன்று நடந்து கொண்டிருப்பது நம் கையில்தான் இருக்கிறது. எந்தச் செயலையும் நாளை என்று தள்ளிப் போடாமல் இன்றே இப்பொழுதே செவ்வனச் செய்வது சாலச் சிறந்தது. இந்த உண்மை ஆறுமுகத்துக்குப் புரியவில்லை.
வன்யா குளித்துத் தயாராகி, அலுவலகத்துக்குக் கிளம்பினாள். வன்யா ஒரு பத்திரிகை நிருபர். அதாவது அவள் ஒரு ஜர்னலிஸ்ட். ஒரு பெண்கள் பத்திரிகையில் வேலை பார்க்கிறாள். படிக்கும்போது எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது என்று மனம் அலைபாய்ந்தபோது கூடப்படித்த தோழிகள் அனைவரும் மருத்துவம், பொறியியல், சட்டம், வணிகவியல் என்று தேர்ந்தெடுக்க, வன்யாவின் மனம் பத்திரிகைத் துறையில் திரும்பியது.
இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸம் அதாவது புலனாய்வு இதழியல், சமுதாயப் பிரச்சினைகளை ஆணி வேரில் இருந்து அலசி, நடக்கும் அவலங்களைச் சுட்டிக்காட்டி, அவற்றிற்குத் தீர்வு காணும் முயற்சி. இந்தத் துறை தனக்கு வேலையின் பரிபூரண மனநிறைவைத் தரும் என்று வன்யா நினைத்தாள். இயற்கையிலேயே துணிச்சல் நிறைந்த வன்யா சாகசங்களுக்கு ஏங்குபவள். சவால்களுக்கு அஞ்சமாட்டாள்.
எண்ணியது போலவே அவளுடைய வேலையும் அவளுடைய பசிக்கு நல்ல தீனியாகவே இருந்தது. சவால்களும், சாகசங்களும் அவளைத் தேடி எதிர்கொண்டன. முன் வைத்த காலை வன்யா, பின் வைக்கவேயில்லை.
அவளுக்கு மனதுக்குப் பிடித்த வேலை, இந்த மகளிர் இதழான ‘மனிதி’யில் கிடைத்துவிட்டது. மனிதியின் ஆசிரியரான முக்தா மேடம், துணிச்சலும், அறிவும் நிறைந்த அற்புதமான பெண். முக்தா மேடம், வன்யாவைத் தன் இளவயது பிரதிபிம்பமாகவே பார்த்தாள். வன்யாவிற்கு ஒரு நல்ல தோழியாகவும், வழிகாட்டியாகவும், ஆசானாகவும் இருந்தாள்.
குட் மார்னிங் மேடம்
என்று முக்தா மேடத்தின் அறையில் நுழைந்து குரல் கொடுத்துத் தன் வருகையைப் பதிவு செய்தாள் வன்யா.
வா வன்யா, குட்மார்னிங். இந்தத் திருநங்கை பத்தி நீ எழுதியிருக்கற ஆர்ட்டிகிள் ரொம்ப நல்லா வந்திருக்கு. இன்னும் சில பாயிண்ட்ஸ் நான் சேத்துட்டிருக்கேன். முடிச்சதும் உனக்கு அனுப்பறேன். இந்த மாச இஷ்யூல போட்டுரலாம்
என்றாள்.
ஓகே மேடம். சில திருநங்கைகளை இந்த ஆர்ட்டிக்கிளுக்காகப் பேட்டி எடுத்தபோது மனசுக்குக் கஷ்டமான நிறைய விஷயங்களைச் சொன்னாங்க. அவங்களோட சொந்த அம்மா, அப்பா, கூடப்பொறந்தவங்களே அவங்களை அருவருப்போட பாத்து ஒதுக்கறதுனாலே தானே அவங்க இந்த மாதிரி மோசமான நிலைமைக்குத் தள்ளப் படறாங்க? ஆண்டவனால் வஞ்சிக்கப்பட்ட இந்தப் பிறப்புகள் சொந்தங்களாலயும் வஞ்சிக்கப்படும்போது தானே தப்பான செயல்களைச் செய்யறாங்க? அடாவடியாப் பொது இடங்களில் நின்று பணம் பிடுங்கறது, பாலியல் தொழிலில் தவறாகப் பயன்படுத்தப்படறது எல்லாமே சாபங்கள்தான்.
ஆமாம். ஆனால் வெகு சிலர் இந்த அவமானங்களைச் சகிச்சுக்கிட்டுத் தங்கள் கல்வித் தகுதிகளை மேம்படுத்திக்க முன் வராங்க. ஆனால் வேலை கொடுக்க எல்லாரும் தயங்கறாங்களே? சமுதாயம் அவங்களைப் பாக்கற பார்வையும் மாறணும். அவங்களுக்குக் கல்வியும், வேலைவாய்ப்பும் கெடைக்கற மாதிரி சட்டங்களை நிறைவேத்தணும். அப்பத்தான் நல்லது நடக்கும். நாமாவது முடிஞ்ச அளவு அவங்களை ஆதரிக்கணும்
என்று சொன்ன முக்தா,
என்ன இப்பயும் நீளமாக் கனவு வருதா இல்லை குறைஞ்சிருக்கா?
என்று வன்யாவை அக்கறையுடன் பார்த்தபடி கேட்டாள்.
இல்லை மேடம் குறையவே இல்லை. நேத்துகூட நீளமாக் கதை மாதிரி ஒரு கனவு வந்தது. பழைய கால மன்னர் ஆட்சி, இளவரசி, புலியோட சண்டைன்னு என்னல்லாமோ கனவில வந்தது
என்றாள்.
அப்படியா, இன்ட்ரஸ்டிங். அந்தக் கனவை அப்படியே டைரியில் நோட் பண்ணி வச்சுக்கோ. ரெண்டு காரணங்கள். ஒண்ணு அடுத்த தடவை கவுன்சிலிங்குக்குப் போகும்போது டாக்டர்கிட்டக் கேக்கலாம். இன்னொண்ணு என்னன்னா, இந்தக் கனவை பேஸ் பண்ணி நீ கதை எழுதலாம்
என்றாள் முக்தா.
என்ன மேடம்? நீங்களும் கேலி பண்ணறீங்களா? கதையா? நானா?
என்றாள் வன்யா சிரித்துக்கொண்டே.
நெஜமாத்தான் சொல்லறேன். என்னோட சில ரைட்டர் ஃப்ரண்ட்ஸ் சொல்லுவாங்க. புதுக்கதைகளுக்கான ஐடியாக்கள் பலமுறை கனவுகளில் இருந்து கிடைக்குமாம். சில சமயம் முழுக்கதை; சில சமயம் கொஞ்ச பார்ட்; சில சமயம் கதைக் கரு, இந்த மாதிரி நிறைய தடவைக் கனவுகளில் வந்த கதைகளை எழுதிப் பரிசுகளே வாங்கியிருக்கறதாச் சொல்லிருக்காங்க. தூங்கும்போதுகூட ஆழ்மனதில் கதைகள் பத்தின யோசனைகள் ஓடிக்கிட்டே இருக்கும் இல்லையா? அதனோட விளைவுதான் இது
என்றாள் முக்தா.
ஓகே மேடம். முயற்சி செய்யறேன். கதை எழுதற அளவு பொறுமை இருக்குமான்னு தெரியலை. முயற்சி செய்யறேன். அடுத்த இஷ்யூக்கான தீம் ரெடி பண்ணனும். நான் ரெண்டு, மூணு சஜஷன்ஸ் உங்களுக்கு அனுப்பியிருந்தேன். பாத்தீங்களா?
என்று கேட்டாள்.
பாத்தேன். அந்த விருந்தாவன் பத்தி எழுதியிருந்தயே? அதை மொதலில ப்ரொஸீட் பண்ணலாம். நாளைக்கே தில்லி போக டிக்கெட் ரிசர்வ் பண்ணு. தில்லியில் இருந்து விருந்தாவன் போக ஒரு மூணு அல்லது மூன்றரை மணி நேரம் ஆகலாம். ஒரு நாள் அங்கேயே தங்கி வேலையை முடிச்சிட்டு வா. இந்த ஆர்ட்டிகிள் வேலையை இன்னைக்கே முடிக்கலாம். நாளை போறது ஓகே தானே உனக்கு?
ஓகே தான் மேடம். நான் போய் என்ன தகவல்கள் சேகரிக்கணும்னு ஒரு லிஸ்ட் தயார் செய்யறேன்
என்று சொல்லிவிட்டு எழுந்தாள்.
குட்லக். மறக்காம நல்ல ப்ரொஃபஷனல் கேமரா கொண்டு போ. நீயே மேனேஜ் பண்ணிடுவே இல்லையா? வெளியூர் ப்ராஜெக்ட்னால கேமராமேன் வேறத் தனியா எதுக்குன்னு நினைச்சேன். நீயே தேவையான படங்களை க்ளிக் பண்ணிட்டு வா
என்று சொல்லி வன்யாவிற்கு விடை கொடுத்தாள். தான் செய்து கொண்டிருந்த வேலையில் மனதைத் திருப்பினாள்.
‘முக்தா மேடம் சொன்ன மாதிரி செஞ்சா என்ன? நம்ம கனவில வர விஷயங்களோட இன்னும் சில விஷயங்களைக் கற்பனையாச் சேத்து ஒரு நல்ல கதையா எழுதலாமே? இன்னைக்கு ராத்திரியே எழுத ஆரம்பிக்கிறேன். இல்லைன்னா கனவு மறந்துடும்’ என்று முடிவு செய்துவிட்டு வேலையைத் தொடங்கினாள்.
சிலசமயம்
கனவுகள் புதிய வினாக்களை
எழுப்பித் திகைக்க வைக்கின்றன!
சிலசமயம்
ஏற்கனவே எழுந்த வினாக்களுக்கு விடைகள் தந்து மகிழ்விக்கின்றன!
அத்தியாயம் - 2
கனவுகள்
காலக் கண்ணாடியில்
பார்த்த
பார்க்கின்ற
பார்க்கப் போகின்ற
பிரதிபிம்பங்கள்!
வன்யாவின் அன்றைய தினம் பரபரப்பாக ஓடி மறைந்தது. அடுத்த நாள் தில்லி போவதற்காக விமானத்தில் பயணச்சீட்டு, தில்லியில் தங்குவதற்கு கெஸ்ட் ஹவுஸில் புக்கிங் எல்லாம் முடித்து அன்று வீட்டுக்குக் கிளம்பும்போது மாலை ஆறுமணி ஆகிவிட்டது.
அவளுடைய வீடு இருந்தது சென்னையின் ஷெனாய் நகரில். தனி வீடு. அதிகமாகப் பெரியது இல்லை. ஆனால் அவர்கள் இரண்டு பேருக்கும் போதுமான அளவுக்கு வசதிகளுடன் இருந்தது. அந்தக் காலப் பழைய வீடு. அப்பா வேலை பார்த்த பள்ளி அருகில் சேத்துப்பட்டில் இருந்ததால், பல வருடங்களுக்கு முன்னால் இங்கே வந்து குடிபுகுந்தார்கள்.
அடுத்த நாள் காலையில் எட்டு மணிக்கு விமானத்தைப் பிடிக்க வேண்டியிருந்ததால் வீட்டிலிருந்தே கிளம்பத் திட்டம் போட்டுத் தேவையான சாமான்களைத் தனது பையில் எடுத்து வைத்துக் கொண்டாள் வன்யா.
அப்பா, இன்னைக்குச் சீக்கிரமே வந்துட்டேன். நான்தான் டின்னர் செய்யப் போறேன்
என்று அலறிக்கொண்டே உள்ளே நுழைந்தாள் வன்யா.
சரி சரி, முதலில் முகம் கழுவிட்டு வா. ரெண்டு பேருக்கும் காஃபி கலக்கறேன்
என்று சொல்லிவிட்டு சமையலறைக்குள் புகுந்தார் ஆறுமுகம்.
இந்தா காஃபி, இதோ பாரு பக்கத்து வீட்டில் இருந்து திருப்பதி பிரசாதம் லட்டுவும், இன்னைக்கு அவங்க வீட்டில் செஞ்ச வாழைப்பூ வடையும் கொடுத்திருக்காங்க. இப்போத்தான் கொடுத்திட்டுப் போனாங்க. சூடா இருக்கு. எடுத்துக்கோ
என்று தட்டை அவள் பக்கம் நகர்த்தினார்.
ஸுப்பரா செய்யறாங்க ஆன்ட்டி. இந்த வடை எப்படி செய்யறதுன்னு ஆன்ட்டி கிட்டக் கேக்கணும். ஒரு லீவு நாளில நானும் செய்யப் போறேன்.
"அவங்க கிட்டக் கேக்கவே வேணாம். எனக்கே நல்லாத் தெரியும். சாதாரண பருப்பு வடை மாதிரிதான். என்ன, இந்த