Thikkettum Thiru Murugan
By Padman
()
About this ebook
காதல், வீரம், ஞானம் ஆகிய மூன்றுக்கும் அதிபதியாகப் போற்றப்படும் இறைவன் முருகப் பெருமான். காதல் அதாவது இச்சா சக்திக்கு வள்ளி, வீரம் அதாவது கிரியா சக்திக்கு தேவசேனா ஆகியோர் சமேதனாய் ஞான சக்தியாக திருமுருகன் வீற்றிருக்கிறான்.
முருகன் ஒரு வித்தியாசமான கடவுள். அவன், ஒரு கலவை. பெயரே ஸ்கந்தன் அல்லவா? ஸ்கந்தம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு ஒன்றான கலவை, இணைப்பு என்று அர்த்தம் உள்ளது. அவன் ஒரு சுயம்பு.
மலைக் குகைகளிலும் மனக் குகைகளிலும் வாழும் குகப் பெருமானான முருகனை முழுமையாக உணர்ந்து உரைக்க யாராலும் இயலாது. இருப்பினும், பரந்து விரிந்துபட்ட முருக வழிபாட்டை அவனருளால் என்னால் இயன்ற அளவுக்கு இந்நூலில் எடுத்துரைக்க முயன்றுள்ளேன்.
Read more from Padman
Thathuva Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsAarumuga Aravam Rating: 0 out of 5 stars0 ratingsAandavan Maruppum Aanmeegamey! Rating: 0 out of 5 stars0 ratingsMudiyatha Mudivu Rating: 0 out of 5 stars0 ratingsYaarum Sollatha Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsKarunaikku Marupeyar Kasaap Rating: 0 out of 5 stars0 ratingsSiva Kali Peralai Rating: 0 out of 5 stars0 ratingsPorul Tharum Kural Rating: 0 out of 5 stars0 ratingsMoondravathu Kann Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thikkettum Thiru Murugan
Related ebooks
Aanandham Arulum Arupadai Veedu Annal! Rating: 0 out of 5 stars0 ratingsAzhagu Muruganin Aalayangal Rating: 0 out of 5 stars0 ratingsKandan Pugazh Padum Kandar Alangaram Rating: 0 out of 5 stars0 ratingsதிருக்குமரனடியார்கள் Rating: 0 out of 5 stars0 ratingsDevarathinul Varum Jothida Karuthukal Rating: 0 out of 5 stars0 ratingsNavagrahangal Rating: 1 out of 5 stars1/5Mahabharatham Rating: 0 out of 5 stars0 ratingsTirupati Balaji Tamil Kadavul Murugan! Arunagirinathar Podum Puthir!! Rating: 0 out of 5 stars0 ratingsThithikkum Thiruppugazh Nayagan Rating: 0 out of 5 stars0 ratingsதெய்வத்தின் குரலமுதம் (பகுதி-2) காமாக்ஷி மந்திர விளக்கம் Rating: 0 out of 5 stars0 ratingsBhavishya Puranam Rating: 2 out of 5 stars2/5Yajnavalkyar Rating: 0 out of 5 stars0 ratingsThiruvadi Saranam - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsMultifaceted Bhakthi Rating: 0 out of 5 stars0 ratingsNavagiragangal Rating: 0 out of 5 stars0 ratingsதெய்வத்தின் குரலமுதம் Rating: 0 out of 5 stars0 ratingsVainava Amutha Thuligal Rating: 0 out of 5 stars0 ratingsDeivathin Kural Part - 5 Rating: 0 out of 5 stars0 ratingsParavasamottum Kandhapurana Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsValamana Vaazhvu Tharum Vainava Thalangal Rating: 0 out of 5 stars0 ratings6 Padai Veedugal Rating: 0 out of 5 stars0 ratingsMahabharatha Marmam! Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsSoolamani Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Payanangal Rating: 0 out of 5 stars0 ratingsPongalo Pongal…! Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Manimaalai Rating: 2 out of 5 stars2/5Thalangalin Tharisanam Rating: 0 out of 5 stars0 ratingsAnbe Sivam Rating: 0 out of 5 stars0 ratingsVerena Neeirunthai! Rating: 0 out of 5 stars0 ratingsPurana Thuligal Part - 3 Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thikkettum Thiru Murugan
0 ratings0 reviews
Book preview
Thikkettum Thiru Murugan - Padman
https://www.pustaka.co.in
திக்கெட்டும் திருமுருகன்
Thikkettum Thiru Murugan
Author:
பத்மன்
Padman
For more books
https://www.pustaka.co.in/home/author/padman
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
உள்ளடக்கம்
I அனைத்திந்திய ஆண்டவன்
1. வேத, உபநிஷதங்களில் ஸ்கந்தன்
2. இதிகாசங்களில் கார்த்திகேயன்
3. புராணங்கள் போற்றும் சுப்ரஹ்மண்யன்
4. சிந்துச் சமவெளி நாகரிகத்தில் சிங்காரவேலன்
5. குப்தர்கள் போற்றிய குமரன்
6. காளிதாசரின் கதாநாயகன்
7. பழந்தமிழ் இலக்கியங்களில் பாலன்
8. ஒரிசாவில் ஓங்காரரூபன்
9. வங்காளத்தில் வடிவேலன்
10. அண்டை மாநிலங்களில் அருள்முருகன்
11. மற்ற மாநிலங்களில் மயில்வாகனன்
12. வரலாற்றுச் சின்னங்களில் வள்ளிநாயகன்
II வெளிநாடுகளில் வேலவன்
1. ஈரானின் ஸ்ரௌசா
2. சீனாவின் மஞ்சுஸ்ரீ
3. ஜப்பானின் இதாடென்
4. கிரேக்கத்தின் டயனைசஸ்
5. இலங்கையின் கதிர்காமர்
6. இலங்கைத் தமிழர்களின் வேலாயுதன்
7. மலேசியாவில் முருகன் வழிபாடு
8. சிங்கப்பூரில் முருகன் வழிபாடு
9. ஆஸ்திரேலியாவில் முருகன் வழிபாடு
10. மொரீஷஸில் முருகன் வழிபாடு
11. ஃபிஜி தீவில் முருகன் வழிபாடு
12. பிற நாடுகளில் முருகன் வழிபாடு
தோற்றுவாய்
காதல், வீரம், ஞானம் ஆகிய மூன்றுக்கும் அதிபதியாகப் போற்றப்படும் இறைவன் முருகப் பெருமான். காதல் அதாவது இச்சா சக்திக்கு வள்ளி, வீரம் அதாவது கிரியா சக்திக்கு தேவசேனா ஆகியோர் சமேதனாய் ஞானசக்தியாக திருமுருகன் வீற்றிருக்கிறான்.
முருகன் ஒரு வித்தியாசமான கடவுள். அவன், ஒரு கலவை. பெயரே ஸ்கந்தன் அல்லவா? ஸ்கந்தம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு ஒன்றான கலவை, இணைப்பு என்று அர்த்தம் உள்ளது. அவன் ஒரு சுயம்பு. அதேநேரத்தில் அவனுக்குத் தாய் தந்தையும் பலர். சிவன் - பார்வதி, அக்னி - ஸ்வாஹா, பிரும்மா, கங்கை, கார்த்திகைப் பெண்கள் என அவனது பெற்றோர் ஏராளம். இவ்வளவு ஏன்? முருகன் ஒருவனா, இருவனா, நூறு பேரா, ஆயிரம் பேரா என மகாபாரதம் மலைக்கிறது.
நாகரீகம் மிகுந்த தேவர்களின் படைத்தலைவன் முருகன். காட்டுவாசிகளான வேடுவர்களுக்கும் அவனே தலைவன். ப்ரஹ்மண்யம் அதாவது அறிவொளியாக, வேதரூபமாக காட்சி தருபவன் முருகன். இந்த வார்த்தைக்கு முன்னர், அழகிய, சிறந்த என்ற பொருள்தரும் ‘சு’ என்ற எழுத்து சேர்வதன் மூலம் சுப்ரஹ்மண்யம் ஆகினான். வேதத்தின் உட்பிரிவுகளுக்கு பிராமணங்கள் என்று பெயர் இருப்பதை நோக்க வேண்டும். சில வேதச் சடங்குகளில் சுப்ரஹ்மண்யோம் என முருகன் பெயருக்குப் பின்னர் பிரணவ மந்திரம் சேர்த்து மூன்று முறை உரைப்பது வழக்கம். அதேநேரத்தில் தூர்த்தன் அதாவது மூர்க்கன் என்றும் வேதங்களில் சில இடங்களில் அழைக்கப்படுகிறான்.
தமிழில்கூட முருகு என்ற சொல்லுக்கு அழகு என்று பொருள் இருப்பது போலவே, முரடு என்ற மற்றோர் அர்த்தமும் இருக்கிறது. முருகுதல் என்றால் இறுக்கமடைதல், உறுதியாகுதல் என்று பொருள். முறுக்கு, முரட்டு, முரண்டு ஆகிய சொற்களை நோக்க வேண்டும். வேத வழியிலான தூய வழிபாட்டை ஏற்கும் அதே முருகன், குறிஞ்சி நிலத்தில் வெறியாட்டுச் சடங்குகளையும், தினையுடன் கலந்த ஊண் உணவையும் ஏற்பதை சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை விளக்குகிறது.
முருகன் குழந்தைக் கடவுள். பார்த்தாலே பரவசமூட்டும் அழகன். மென்மையானவன். அதேநேரத்தில், அசுரர்களை அழித்த இளைஞன், போராளி. அவனது வீரத்துக்கு அடையாளமாகத்தான் வேல் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த வேல், சக்தி வேலாக மட்டுமின்றி ஞானவேலாகவும் இருந்து மோட்சத்துக்கு வழிகாட்டுகிறது.
ஸ்வாமி என்ற சொல்லுக்கு இறைவன், கடவுள் என்று பொருள். தமிழில் சாமி. ஆனால், எந்தச் சாமிக்கும் இல்லாத வகையில், முருகன் மட்டுமே ஸ்வாமி என்று சிறப்புப் பெயர் பெற்றுள்ளான். தந்தை சிவனாருக்கு ஈஸ்வரப் பட்டம் இருப்பதுபோல், மகனுக்கு ஸ்வாமி என்ற சிறப்புப் பட்டம். அதிலும், தகப்பனுக்கே பிரணவ மந்திரப் பொருள் உரைத்ததால் தகப்பன்சாமியாகவும், குருநாதனாகவும், ஸ்வாமிநாதனாகவும் போற்றப்படுகிறான்.
இன்றைய குழந்தைகள் ராமர், கிருஷ்ணர் கதைகளைக் கேட்டு வளர்கின்றன. ஆனால், ராமனும், கிருஷ்ணரும் வீரம் நிறைந்த குமரனின் கதைகளைக் கேட்டு வளர்ந்ததை ராமாயணமும், மகாபாரதமும் எடுத்துரைக்கின்றன. பாகவதம் உள்ளிட்ட சில புராணங்களில் முருகன், விஷ்ணுவின் அவதாரமாகக் கூறப்படுகிறான்.
தமிழ்க் கடவுள் என்று சிறப்பித்துக் கூறப்படும் முருகன், ஒருகாலத்தில் இந்தியா முழுவதிலும் முக்கியமாக வணங்கப்பட்ட கடவுள். வேதங்கள், உபநிஷதங்கள், புராணங்களில் துதிக்கப்பட்டவன். குப்தர்கள், குஷாணர்கள், யௌதேயர்கள் உள்ளிட்டோரால் வணங்கப்பட்டவன். இன்றும்கூட வடமாநில நாட்டுப்புற வழிபாடுகளில் முருகன் முக்கிய இடம்பெற்றுள்ளான். சிந்துச் சமவெளி அகழ்வாய்வில் கிடைத்துள்ள முத்திரைகளில் உருவங்களாகவும், சித்திர எழுத்து வடிவங்களாகவும் முருகன் இடம்பெற்றுள்ளான்.
சீனா, ஜப்பான், இந்தோசீனா உள்ளிட்ட நாடுகளில் அக்காலத்திலேயே முருகன் வழிபாடு, பௌத்த மத தாக்கத்திற்கு உட்பட்டு நடந்திருக்கிறது. இதற்கான வரலாற்று ஆதாரங்கள் இன்றும் உள்ளன. இலங்கையில் தமிழர்கள் மட்டுமின்றி சிங்கள பௌத்தர்களும் வழிபடும் கதிர்காமராக முருகன் திகழ்கிறான். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் அலகு குத்தியும், காவடி தூக்கியும் அந்நாட்டு முருக பக்தர்கள் நடத்தும் தைப்பூச வழிபாடு உலகப் பிரசித்தி பெற்றது.
பாரசீகர்களின் ஜென்ட் அவெஸ்தாவில் கூறப்படும் ஸ்ரௌசா என்ற கடவுளும், கிரேக்கப் புராணங்களில் கூறப்படும் டயனைசஸ் என்ற கடவுளும் முருகனோடு நெருங்கிய தொடர்புடையவர்களாக உள்ளனர்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் மொரீஷியஸ், ஃபிஜி, செஷல்ஸ் ஆகிய நாடுகளில் தமிழர்களை இணைக்கும் வீரிய சக்தியாக முருகன் விளங்குகிறான். மேலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட மேலைநாடுகளில் புதிய முருகன் கோவில்கள் தற்போது தோன்றியவண்ணம் உள்ளன.
சிவபெருமானைப் போலவே முருகப் பெருமானும் உருவம், அருவுருவம் (வேல்) மற்றும் அருவமாக (விரதம், தவம், தியானம் முதலியன) வணங்கப்படுகிறான். சிவபெருமான் - உமையம்மையின் குமாரனாக, விநாயகரின் தம்பியாக (வடமாநிலங்கள் சிலவற்றில் அண்ணனாக), மகாவிஷ்ணுவின் மருமகனாக (தங்கை மகனாக), இந்திரனுக்கு மாப்பிள்ளையாக, சில புராணங்களில் பிரும்மாவின் மகனும் ரிஷியுமான சனத்குமாரனாக, அக்னியின் புதல்வனாக இவ்வாறு அனைத்துக் கடவுள்களையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக முருகப் பெருமான் விளங்குகிறான்.
பிராமணர்களுக்கு வேத வடிவமாகவும், போராளிகளுக்கு வீரம் நிறைந்த தலைவனாகவும், வேடர்கள், குறவர்கள் உள்ளிட்ட பழங்குடியினருக்கு காவல் தெய்வமாகவும், பெண்கள் விரும்பும் காதல் தெய்வமாகவும், குழந்தைக் கடவுளாகவும், ஞானியர், முனிவர்களுக்கு ஆசானாகவும் ஒருசேர அருள் பாலிப்பவன் முருகப் பெருமான்.
மலைக் குகைகளிலும் மனக் குகைகளிலும் வாழும் குகப் பெருமானான முருகனை முழுமையாக உணர்ந்து உரைக்க யாராலும் இயலாது. இருப்பினும், பரந்து விரிந்துபட்ட முருக வழிபாட்டை அவனருளால் என்னால் இயன்ற அளவுக்கு இந்நூலில் எடுத்துரைக்க முயன்றுள்ளேன்.
நன்றி, வணக்கம்
பத்மன்
I அனைத்திந்திய ஆண்டவன்
1. வேத, உபநிஷதங்களில் ஸ்கந்தன்
வேத காலத்தில் கடவுளர்கள், இப்போது இருப்பதைப் போன்ற உருவத்தில் வணங்கப்படவில்லை. உருவகங்களாகத்தான் துதிக்கப்பட்டார்கள். வேதம் என்றால் அறிவு என்று பொருள். அறிவாற்றலின் உருவகமாக சூரியன் மதிக்கப்பட்டான். இயற்கையின் நாயகனாக வணங்கப்பட்டான். ஞானம் அதாவது முதிர்ந்த அறிவு, ஒளி ரூபமாக கருதப்பட்டது. சூரியனைப் போன்றே ஒளி ரூபமான அக்னியும் தேவனாகத் துதிக்கப்பட்டான். சூரியனை மாபெரும் அக்னி தேவனாக வேதம் வர்ணிக்கிறது. அக்னி போர்க்கடவுளாகவும், சூரியன் வீரத்தின் இருப்பிடமாகவும் மதிக்கப்பட்டனர். சூர்ய என்ற சொல்லிலிருந்து கிளைத்த சௌர்யம் என்ற சொல்லுக்கு வீரம் என்று அர்த்தம்.
சூரியன், அக்னி எனப்படும் தெய்வங்களோடு நெருங்கிய தொடர்புடையவன் ஸ்கந்தன். அவன், நூறு கோடி சூரியர்களுக்கு ஒப்பான மகா தேஜஸ் உடையவன் (ஆதித்ய சதசங்கஸோ மஹாதேஜ பிரதாபவான்) என்று வாயு புராணம் புகழ்கிறது. ரிக் வேதத்திலேயே அக்னியின் அம்சமாக ஸ்கந்தன் கூறப்பட்டுள்ளான். பொன்னிற மேனியும், பொன்னிறப் பற்களும் கொண்ட குமாரன், அக்னி பகவானின் மகன் என்றும், ஒரு குகைக்குள் அவன் ரகசியமாக அவனது தாயால் மறைத்து வைக்கப்பட்டான் என்றும் ரிக் வேதம் (5.2.1-3) கூறுகிறது. ரிக் வேதத்தில் அக்னிக்கு 7 தாய்மார்கள் என்று கூறியிருப்பதும், ஸ்கந்தனுக்கு 6 தாய்மார்கள் என்று கூறப்படுவதும் ஒப்பிடத்தக்கது. ரிக் வேதத்தில் கூறப்படும் போர்க்கடவுளான அக்னியின் ஓர் அம்சம் ஸ்கந்தன் என சதபத பிராமணம் கூறுகிறது.
ஸ்கந்த் என்றால் குதித்தல், சிந்துதல், ஒன்றிணைதல் என்று பொருள். சிவபெருமானிடமிருந்து சிந்திய வீர்யம் அல்லது ஒளியை அக்னி, வாயு ஆகிய தேவர்கள் சுமந்து சென்று கங்கையிடம் சேர்ப்பித்து அதன்மூலம் பிறந்தவனாதலால் ஸ்கந்தன் என்று பொருள் கூறுவர். (கங்கையின் மகன் ஆதலால், காங்கேயன் என்ற பெயரும் முருகனுக்கு உண்டு.) ஆறு குழந்தைகளாகப் பிறந்து, அன்னை பார்வதி வாரி அணைத்ததும் ஆறு தலை கொண்ட ஒரே குழந்தையாக ஒன்றிணைந்தவன் என்பதாலும் ஸ்கந்தன் ஆனான்.
பிரும்மஞானத்தின் உருவகமாக, உறைவிடமாகக் கருதப்படுவதால் முருகன், சுப்ரஹ்மண்யன் என்று அழைக்கப்படுகிறான். பிரணவ மந்திரத்துக்கு விளக்கம் உரைத்தவன், வேத வழி வாழ்வையும், வேள்விச் சடங்குகளையும் காப்பாற்றுபவன் என்ற பொருளிலும் சுப்ரஹ்மண்யன் என்று பெயர் வந்தது. இதனால்தான் பல வேள்விச் சடங்குகளில் சுப்ரஹ்மண்ய என்ற பெயருடன் ஓம் என்ற பிரணவத்தைச் சேர்த்து சுப்ரஹ்மண்யோம் என்று மூன்று முறை உரைக்கப்படுகிறது. இதனை சாயனாசார்யார் ஆதரார்த்தம் என்று விளக்குகிறார். ஸ்கந்தனுக்கான சடங்குகள் மட்டுமின்றி இந்திரன், அக்னி ஆகிய தெய்வங்களுக்கான சடங்குகளிலும் சுப்ரஹ்மண்யோம் என்ற மந்திரம் ஒலிக்கப்படுகிறது. மேலும் பிராமணங்களில், (ப்ராஹ்மணங்கள்) இந்த மந்திரம் பல முறை இடம்பெற்றிருக்கிறது.
சாம வேதத்திலும் ஸ்கந்தனுக்கு சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சாம வேத கானங்களைக் கூறி தணிக்கப்பட வேண்டிய (சாந்தப்படுத்தப்பட வேண்டிய) கடவுள்களில் ஸ்கந்தன் முக்கியமானவன் என சாமவிதான பிராமணம் கூறுகிது. அந்த சாம வேத மந்திரங்கள், இதி த்வே ஏஷா ஸ்கந்தஸ்ய சம்ஹிதா என்றும், ஏதாம் ப்ரயுஞ்ஜன் ஸ்கந்தம் ப்ரினதி என்றும் குறிக்கப்படுகின்றன.
கிருஷ்ண யஜுர் வேதத்தைச் சேர்ந்த காதக சம்ஹிதையில் அக்னியிலிருந்து குமாரன் தோன்றியதாகக் கூறப்படுகிறது. சதபத பிராமணம் குமரனின் பிறப்பை கவித்துவமாக வர்ணிக்கிறது. ஆறு பருவங்களை ஆறு பூதங்களாகவும், வருடத்தை (சம்வத்ஸரம்) அவற்றின் தலைவனாகவும் உருவகப்படுத்தி, அவை அனைத்தும் விடியலில் தங்கள் விதையை முளைக்கவிட்டதாகவும், ஓராண்டு கழித்து அந்த வித்து குமாரனாகப் பிறந்தது என்றும், அவன் ருத்ரனுக்கு இணையானவன் என்றும் சதபத பிராமணம் கூறுகிறது. குமாரனாகப் பிறந்த அக்னிக்கு ஒன்பது பெயர்கள் இருப்பதாகவும் அதில் ஒன்பதாவது பெயர் ஸ்கந்தன் என்றும் இதே சதபத பிராமணத்தில் வேறோரிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ண யஜுர் வேதத்தைச் சேர்ந்த மைத்ராயனி சம்ஹிதையில் ஸ்கந்த காயத்ரி இடம் பெற்றுள்ளது. அதில், முருகனின் பெயர்களான குமாரன், கார்த்திகேயன், ஸ்கந்தன் ஆகியன கூறப்படுகின்றன. தத் குமாராய வித்மஹே கார்த்திகேயாய தீமஹி தன்ன: ஸ்கந்த: ப்ரசோதயாத் என்பதே அந்த காயத்ரி மந்திரம். இதிலிருந்து சற்றே மாறுபட்ட வேறொரு ஸ்கந்த காயத்ரியை தைத்திரீய ஆரண்யகம் உரைக்கிறது - தத் புருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி தன்னோ சண்முக ப்ரசோதயாத்.
வேத கால ரிஷியும், பிரும்மாவின் மைந்தனாக கருதப்படுபவருமான சனத்குமாரனே ஸ்கந்தன் என சாந்தோக்ய உபநிஷதம் கூறுகிறது. சனத்குமாரர் மிகச் சிறந்த ஞானாசிரியர். ஸ்கந்தனை பகவான் என்றும் ஆசான் என்றும் சித்தாந்தஷிகோபநிஷதம் புகழ்கிறது. அதர்வசிர உபநிஷதத்தில் ஸ்கந்தன் ஒரு ருத்ரனாகப் போற்றப்படுகிறான். சிவலிங்கத்தின் அருகிலேயே ஸ்கந்தன் மற்றும் உமையம்மையின் விக்ரகங்களை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று சிவோபநிஷதம் தெரிவிக்கிறது.
அதர்வண வேதத்தின் துணைப் பிரிவுகளான அதர்வண பரிஷிஷ்டங்களில் ஒன்றான சண்முக கல்பத்தில் (ஸ்கந்தயாகத்தில்) ஸ்கந்தனுக்குச் செய்ய வேண்டிய ஹோமம் (வேள்வி) பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்கந்தன் உருவத்துக்கு மலர்தூவி, தீப தூபாராதனை காட்டி, சந்தனம் முதலியன சாற்றி நைவேத்தியம் (படையல்) செய்ய வேண்டும் என்று கூறும் சண்முக கல்பத்தில் முருகன் - ஸ்கந்தன், ஷடானனன் (ஆறுமுகன்), கார்த்திகேயன், ப்ரஹ்மண்யன், ஸ்வாமி ஆகிய பெயர்களோடு தூர்த்தன் என்றும் கூறி அர்ச்சிக்கப்படுகிறான். இதில் கடைசியில் இடம்பெற்றுள்ள தூர்த்தன் என்ற பெயருக்கு முரடன், போக்கிரி, கள்ளர்களின் தலைவன் என்று பொருள். அதர்வண வேதம் காலத்தால் பிந்தையது. முற்காலத்தில் ஸ்கந்தனைத் தங்கள் தலைவனாகக் கொண்ட பழங்குடி அரச மரபினர், தங்கள் ஆட்சியை இழந்து வழிப்பறிக் கொள்ளையர்களாக மாறிய காலத்தும் ஸ்கந்தன் வழிபாட்டை கைவிடாமல் தொடர்ந்ததால், ஸ்கந்தனும் தூர்த்தன் ஆகியிருக்கலாம்.
முருகனை மயில்வாகனனன் (யம் வாஹன்தி மாயூர:), மணிகளாலும் பதாகைகளாலும் அலங்கரிக்கப்பட்டவன் (கண்டா - பதாகினீ), தாய்த் தெய்வங்களால் சூழப்பட்டவன் (யஷ் சா மாத்ருகணைர் நித்யம் சதா பரிவ்ருதோ யுவா) என்றெல்லாம் சண்முக கல்பம் வர்ணிக்கிறது. அக்னியோ, கார்த்திகைப்பெண்டிரோ, இந்திரனோ, பசுபதியோ அல்லது ருத்ரனோ யாருடைய குழந்தையாக நீ இருந்தாலும் உனக்கு நமஸ்காரம் என்றும் கூறப்படுகிறது.
முருகனை இன்னாருடைய குழந்தை என்று கூறுவதில் வேதங்கள், உபநிஷதங்கள், இதிகாசங்கள் மற்றும் புராணங்களில் குழப்பம் உள்ளது. இந்திரனின் மகன் ஜெயந்தனைக்கூட ஸ்கந்தன் என்று கூறுவதுண்டு. ஆனால், அக்னியின் மகனான ஸ்கந்தன்மீது இந்திரன் பொறாமை கொண்டு அவனை வஜ்ராயுதத்தால் அடிக்க, ஸ்கந்தன் இரண்டு துண்டாகி, ஸ்கந்தன் - விசாகன் என இரண்டு தெய்வங்களாக வந்தான் என்றும் கூறப்படுகிறது. ஸ்கந்தன், விசாகன் ஆகிய இரட்டைத் தெய்வங்களுக்கான வேள்வி வழிபாடு பற்றி சாம வேதத்தின் வம்ச பிராமணம் விளக்குகிறது.
போதாயன தர்மசூத்திரத்தில் சண்முகன், ஜெயந்தன், விசாகன், மஹாசேனன் என்று ஸ்கந்தன் போற்றப்படுகிறான். ஸ்கந்தன் மிகச்சிறந்த போர்க்கடவுளாக வர்ணிக்கப்படுகிறான். ஹவிஷ்ய கல்ப வேள்விச் சடங்குகளில் ஸ்கந்தன், விசாகன், சஷ்டி ஆகிய தெய்வங்களுக்கு புனிதத் தீயில் ஆகுதி அளிக்க வேண்டும் என காதக க்ருஹ்யசூத்திரம் தெரிவிக்கிறது. இதில் சஷ்டி என்பது ஸ்கந்தனின் இணை. பாரத்வாஜ க்ருஹ்யசூத்திரம், ஹ்ரண்யகேசி க்ருஹ்யசூத்திரம் ஆகியவற்றிலும் ஸ்கந்தனுக்கு தனி ஆசனம் அளித்து படையலிட வேண்டியது பற்றி குறிப்பிடப்படுகிறது. சஷ்டி தேவிக்கான தனிச் சடங்குகள் குறித்து மானவ க்ருஹ்யசூத்திரம் எடுத்துரைக்கிறது.
பொதுவாக, சிவபெருமான் - உமையம்மையின் மைந்தனாகவே ஸ்கந்தன் கருதப்படுகிறான். சிவமே சத் (உண்மை), சக்தியே சித் (அறிவு), ஸ்கந்தனே ஆனந்தம் (பேரின்பம்) - இவை ஒன்றிணைந்ததே சச்சிதானந்தம். அதுவே ப்ரும்மம். ஸ்கந்தப் பெருமான், பரப்ரும்ம வடிவான சுப்ரஹ்மண்யன். அவனது வாகனமான மயில், சப்த வடிவமான வேதத்தின் குறியீடு. அவனது கையில் உள்ள சேவல் கொடி, மோட்சத்தின் பாதையான சுய பிரக்ஞை விழித்துக்கொண்டதன் அடையாளம். அவனது கையில் உள்ள வேல், பரிபூர்ண ஞானமாகிய ப்ரும்ம வித்யா அதாவது ஞான சக்தி. வேத, உபநிஷதங்கள் போற்றும் அந்த வேல்முருகனை வணங்குவோம்.
2. இதிகாசங்களில் கார்த்திகேயன்
இதிகாசம் என்றால், இவ்வாறு நிகழ்ந்தது என்று பொருள். ராமாயணமும், மகாபாரதமும் மாபெரும் இதிகாசங்களாகப் போற்றப்படுகின்றன. ராமாயண காலத்தில் ஸ்கந்தன் வழிபாடு மிக முக்கிய இடம் வகித்திருந்தது. ராம-லட்சுமணர்களுக்கு ஸ்கந்தன் கதையை விசுவாமித்திரர் கூறியதன் மூலமும், ராமர் வனவாசம் சென்றபோது தனது மகனை மலைகளுக்கும், காடுகளுக்கும் தெய்வமான ஸ்கந்தன்தான் காப்பாற்ற வேண்டும் என கோசலை (கௌசல்யா) வழிபட்டதிலிருந்தும் இதனைத் தெரிந்துகொள்ளலாம்.
அசுரர்களை அழித்து மூவுலகங்களுக்கும் நன்மை செய்யுமாறு பிரும்மா தலைமையில் அனைத்து தேவர்களும் சிவபெருமான்-பார்வதியம்மையை வணங்கிக் கேட்டுக்கொண்டதன் தவப்பயனாக உதித்தவனே ஸ்கந்தப் பெருமான் (திரைலோக்ய ஹிதகாமார்த்தம் தேஜதேஜஸி தாரய) என ராமாயணத்தின் பாலகாண்டம் தெரிவிக்கிறது. தாடகையை வதம் செய்வதற்காக ராமனையும், லட்சுமணனையும் அழைத்துச் செல்லும்போது குமரனின் பிறப்பையும் அவனது வீரதீரச் செயல்களையும் விசுவாமித்திர ரிஷி எடுத்துரைக்கிறார்.
பிரும்மாதி தேவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிவபெருமானும், பார்வதி தேவியும் கடுந்தவத்தில் வீற்றிருக்க, அப்போது சிவபெருமானிடமிருந்து வீரியம் (அதாவது ஒளிக்கீற்று) வெளிப்பட, அதனை அக்னி பகவான் தாங்கிக் கொள்கிறார். சிவபெருமானிடமிருந்து கிளம்பிய தீப்பிழம்பு மூவுலகங்களையும் வியாபித்த தருணத்தில், பூமியில் வெள்ளிப்பனிமலையும் (இமயம்), அதில் அடர்ந்த தர்ப்பைப் புதர்க்காடுகளும் தோன்றின. அந்த தர்ப்பை புதர்க்காட்டில்தான் ஸ்கந்தப் பெருமானின் பிறப்பு நிகழ்ந்தது. தர்ப்பைக் காட்டுக்கு சம்ஸ்கிருதத்தில் சரவன என்று பெயர். அதனால்தான் முருகனுக்கு சரவணன் என்ற பெயர் ஏற்பட்டது.
இமயமலைப் பகுதியில் நதியாகப் பிரவாகித்த கங்கையிடம் (கங்கை, பார்வதியின் தமக்கையாகக் கருதப்படுகிறாள்) சிவபெருமானின் ஒளியை அக்னி பகவான் சேர்ப்பிக்கிறார். வாயு பகவான் (காற்று) இதற்கு உதவுகிறார். இவ்வாறாக சிவபெருமானின் ஒளியைச் சுமந்த கங்கை, இமயமலைச்