Porul Tharum Kural
By Padman
()
About this ebook
திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு இந்த நூலைப் படைத்திருக்கும் ஆசிரியர், பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்வதற்கு முன்பு முதலீட்டாளர்கள் கவனமாக இருப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்திருக்கிறார். பிரித்து முதலிடுதல் என்ற கொள்கையின் அடிப்படையில் முதலீடு செய்வதே, ஒருவர் கவனத்துடன் முதலீடு செய்கிறார் என்பதை உணர்த்துகின்ற செயல் என்பதை விவரித்துள்ளார்.
முதலீடு குறித்த முடிவுகளை எடுக்க விரும்புவோருக்கு இந்த நூல் மிகச் சிறந்த வழிகாட்டி. இந்த நூலில் அனைத்துவித முதலீடுகள் குறித்தும் விவரிப்பதற்கு நூலாசிரியர் கடினமாக உழைத்திருக்கிறார். வீட்டு வசதிக் கடனுதவிக்கான மாதாந்திர தவணை செலுத்துவதற்கும், வாடகைக்குக் குடியிருப்பதற்குமான ஒப்பீடு உள்ளிட்ட மிக நுணுக்கமான விஷயங்களைக்கூட மிகுந்த முயற்சி எடுத்து விவரித்திருக்கிறார்.
முதலீட்டு அம்சங்கள் சார்ந்த ஒவ்வொரு விஷயத்தையும் திருக்குறளை மேற்கோள்காட்டி நூலாசிரியர் விளக்கியிருப்பது இதன் சிறப்பம்சம்.
Read more from Padman
Thathuva Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsThikkettum Thiru Murugan Rating: 0 out of 5 stars0 ratingsAarumuga Aravam Rating: 0 out of 5 stars0 ratingsYaarum Sollatha Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAandavan Maruppum Aanmeegamey! Rating: 0 out of 5 stars0 ratingsSiva Kali Peralai Rating: 0 out of 5 stars0 ratingsKarunaikku Marupeyar Kasaap Rating: 0 out of 5 stars0 ratingsMoondravathu Kann Rating: 0 out of 5 stars0 ratingsMudiyatha Mudivu Rating: 0 out of 5 stars0 ratings
Related to Porul Tharum Kural
Related ebooks
Silapathigarathil Ara Kotpaadu Rating: 0 out of 5 stars0 ratingsKesari + Poori = Magizhchi Rating: 0 out of 5 stars0 ratingsVetri Muzhakangal Rating: 0 out of 5 stars0 ratingsMuthumozhi Kaanji Rating: 0 out of 5 stars0 ratingsVazhkai Nalam Rating: 0 out of 5 stars0 ratingsPirappum Sirappum Irappum Rating: 0 out of 5 stars0 ratingsSittha Jaalam Rating: 0 out of 5 stars0 ratingsAlla Alla Panam 3 (Pangusanthai Futures and Options) Rating: 0 out of 5 stars0 ratingsEngey Pogirom? Rating: 0 out of 5 stars0 ratingsIniyavai Narpathu Rating: 0 out of 5 stars0 ratingsNallavai Naarpathu Rating: 0 out of 5 stars0 ratingsKatturai Kothu 50 Rating: 0 out of 5 stars0 ratingsKirupanandha Variyar Maanavargalukku Sonnathu Rating: 0 out of 5 stars0 ratingsAasarakovai Rating: 5 out of 5 stars5/5Vetrikku 16 Rating: 5 out of 5 stars5/5Kaalam Thorum Narasingam Rating: 0 out of 5 stars0 ratingsPutham Puthu Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsEnnangalai Uzhaippakku Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Oru Idam Undu Rating: 0 out of 5 stars0 ratingsKaana Mudiyathathil Unarapadubavare Kadavul! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkul Pudhayal Rating: 0 out of 5 stars0 ratingsThirukkuralum Vettriyalarkalum Rating: 0 out of 5 stars0 ratingsThedalgal Rating: 0 out of 5 stars0 ratingsSharegalil Panam Pannalam Rating: 0 out of 5 stars0 ratingsMuraipadi Kural Padi - X Std Rating: 0 out of 5 stars0 ratingsJeyippatharkku Mattumey Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsKaasu, Panam, Dhuttu, Money Rating: 0 out of 5 stars0 ratingsOttangal Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsMuppathu Katturaigalil Hindu Madha Athisayangal! Rating: 5 out of 5 stars5/5
Reviews for Porul Tharum Kural
0 ratings0 reviews
Book preview
Porul Tharum Kural - Padman
https://www.pustaka.co.in
பொருள் தரும் குறள்
Porul Tharum Kural
Author:
பத்மன்
Padman
For more books
http://www.pustaka.co.in/home/author//padman
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. தேடுவது பொருள் பாடுவது குறள்
2. பணம் செய்ய விரும்பு
3. அறிவே துணை
4. முதல் செலவு சேமிப்பு
5. பிரித்து முதலிடு
6. பாத்திரமறிந்து பணம் போடு
7. அஞ்சல் இருக்க அஞ்சேல்
8. வளம் பெருக்கும் வளர்வீதம்
9. ஷேரிடம் அறிந்து சேர்
10. ஊகத்துக்கு முன் ஊக்கம்
11. பரஸ்பர நிதியிருக்க பயமேன்?
12. பொன்னான முதலீடு
13. பொருள்படுத்தும் முதலீடு
14. நலம் தரும் நிலம்
15. உங்க வீடு உள்ள வாங்க
16. காக்க காக்க காப்பீடு காக்க
17. வருமுன் காத்திடு வசதியாய் ஓய்வெடு
18. வரிக்குப் பயந்திடேல்
19. காகிதம் கடந்து செல்
20. உலகம் உணர்ந்து செய்
21. மாயவலையில் சிக்காதீர்
22. சமூகம் காத்திடு
முதலீட்டாளர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டி
திரு. ஏ.கே. நாராயணன், முன்னாள் தலைவர்,
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சங்கம்
திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு இந்த நூலைப் படைத்திருக்கும் ஆசிரியர், பல்வேறு சொத்துகளில் முதலீடு செய்வதற்கு முன்பு முதலீட்டாளர்கள் கவனமாக இருப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்திருக்கிறார். பிரித்து முதலிடுதல் என்ற கொள்கையின் அடிப்படையில் முதலீடு செய்வதே, ஒருவர் கவனத்துடன் முதலீடு செய்கிறார் என்பதை உணர்த்துகின்ற செயல் என்பதை விவரித்துள்ளார்.
முதலீடு குறித்த முடிவுகளை எடுக்க விரும்புவோருக்கு இந்த நூல் மிகச் சிறந்த வழிகாட்டி. இந்த நூலில் அனைத்துவித முதலீடுகள் குறித்தும் விவரிப்பதற்கு நூலாசிரியர் கடினமாக உழைத்திருக்கிறார். வீட்டு வசதிக் கடனுதவிக்கான மாதாந்திர தவணை செலுத்துவதற்கும், வாடகைக்குக் குடியிருப்பதற்குமான ஒப்பீடு உள்ளிட்ட மிக நுணுக்கமான விஷயங்களைக்கூட மிகுந்த முயற்சி எடுத்து விவரித்திருக்கிறார்.
முதலீட்டு அம்சங்கள் சார்ந்த ஒவ்வொரு விஷயத்தையும் திருக்குறளை மேற்கோள்காட்டி நூலாசிரியர் விளக்கியிருப்பது இதன் சிறப்பம்சம்.
நிலத்தை விற்பனை செய்யும் இடைத்தரகர்கள் நமது கவனத்தை ஈர்க்க என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை விளக்கியிருக்கும் நூலாசிரியர், நிலத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் இதுபோன்ற இடைத்தரகர்களுக்கு இரையாகிவிட வேண்டாம் என்பதையும் எச்சரிக்கிறார். முதலீட்டுக்கு மிகச் சிறந்த சாதனமாக நிலம் விளங்குகின்றது என்பதைக் கூறுகின்ற அதேநேரத்தில், இதில் உள்ள அபாயங்கள் குறித்து முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் விவரிக்கிறார். கண்ணைக்கட்டிக் கொண்டு முதலீடு செய்யும் மனநிலை வேண்டாம் என்கிறார்.
இதேபோல், பயணக் காப்பீடு (டிராவல் இன்சூரன்ஸ்) போன்ற விஷயங்களின் தேவைகளையும் பயன்பாடுகளையும் எடுத்துரைத்திருக்கிறார். பயணத்தின்போது காப்பீடு நமக்கு எவ்விதம் கைகொடுக்கிறது என்பதை சுட்டிக்காட்டியிருக்கும் நூலாசிரியர், முதலீடுகளின்போது முதலீட்டாளர்கள் என்னென்ன தவறுகள் செய்வார்கள் என்பதையும் விளக்கியிருக்கிறார். முதலீடு செய்யும்போது படித்தவர்கள்கூட தவறிழைக்கிறார்கள் என்கிறார் நூலாசிரியர். கல்வியறிவு என்பது வேறு, நிதிசார்ந்த விழிப்புணர்வு என்பது வேறு என்பதை இந்த நூல் சிறப்பாக விண்டுரைக்கிறது.
பணம் ஈட்டுவதற்கும், செல்வத்தை உருவாக்குவதற்கும் சோம்பலே பெரும் தடையாக இருக்கிறது என்பதை நூலாசிரியர் எடுத்தியம்பியுள்ளார். ஆர்வத்துடன் தொடர்ந்து கற்றல், கடின உழைப்பு ஆகிய இரண்டும் இல்லாமல்போவதே பணம் படைக்க முடியாமல்போவதற்குக் காரணம் என்பதை விளக்கியிருக்கிறார். செல்வம் படைக்க வேண்டுமெனில் கடின உழைப்பு அவசியம் என்கிறார்.
பணம் தோன்றிய வரலாற்றை ஆய்ந்தறிந்து, பல பயனுள்ள தகவல்களை நூலில் தந்துள்ளார். பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதற்கு முன்னர், பல்வேறு திட்டங்கள் குறித்து கவனத்துடன் ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும் என்று எச்சரிக்கிறார். இதேபோல், பரஸ்பர நிதியில் முதலீடு செய்வதற்கு முன்பே அதில் உள்ள இடர்பாடுகள், அபாயங்கள் குறித்துப் புரிந்துகொண்டிருக்க வேண்டும் என்கிறார்.
விஷயங்களைப் படித்தறிந்து கொள்வதோடு, அனுபவம் வாய்ந்தவர்களிடம் கேட்டறிந்து கொள்ளவும் வேண்டும் என்கிறார் நூலாசிரியர். ஆதாயம் கருதி முதலீடு செய்யும்போது அதுசார்ந்த படிப்பறிவும் விழிப்புணர்வும் அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார். முதலீடுகளில் அனுபவம் வாய்ந்தவர்களைச் சந்திப்பதும், விவாதிப்பதும் கூடுதல் பயன் தரும் என்கிறார்.
சாதாரண வட்டி மற்றும் கூட்டு வட்டி ஆகியவற்றின் அடிப்படைகளும் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது. வங்கிகளின் நிரந்தர வைப்பு நிதித் திட்டங்களில் முதலீடு செய்வது குறித்த அறிவுரைகளையும் நூலாசிரியர் தந்துள்ளார். கூட்டு வட்டி என்பதன் பொருளை பல முதலீட்டாளர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்ற குறை இந்த நூலால் நீங்கும்.
இந்த நூலில் முதலீட்டு ஆதாயங்களை மட்டுமின்றி, பணத்தைச் சேமிப்பதற்கான எளிய வழிமுறைகளையும் ஆசிரியர் உரைத்திருக்கிறார். காப்பீடு என்பது பாதுகாப்புக்கான வழிவகை என்பதை நன்கு விவரித்திருக்கிறார். காப்பீட்டையும் முதலீடுகளையும் ஒன்றாகக் கருதி குழம்ப வேண்டாம் என்பதையும் எடுத்துரைத்திருக்கிறார். சில முதலீட்டாளர்கள் எடுத்துக்கொள்ளும் காப்பீட்டுத் திட்டங்கள் அவற்றை விற்கும் முகவர்களுக்கே பயன் தருபவையாக இருக்கின்றன என்பதையும், தேவையற்ற பணவிரயம் ஏற்படுவதையும் விவரித்திருக்கிறார்.
முதலீடு செய்யும்போது நல்ல திட்டங்களையே தேர்ந்தெடுக்க வேண்டும், அவற்றின் மூலம் நமது வருவாய் அதிகரிக்க வேண்டும் என்பதை நூலாசிரியர் விளக்கியுள்ளார். கட்டுக்கோப்பான முறையில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும், அத்துடன் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தமது முதலீடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை நன்கு எடுத்துரைத்துள்ளார். தங்கத்தில் இடப்படும் முதலீடுகள் குறித்தும் அலசியுள்ளார். தங்கத்தில் நேரடியாகவோ அல்லது தங்க முதலீட்டுப் பத்திரங்களாகவோ அல்லது இணையவழித் தங்கமாகவோ முதலீடு செய்வது குறித்து விளக்கமாகக் கூறியுள்ளார்.
ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் போன்ற சிக்கலான முதலீட்டு அம்சங்களைக்கூட எளிமையாக எடுத்துரைத்துள்ளார்.
முதலீடு குறித்த முழுமையான நூலை, மிகுந்த முயற்சியோடு மிகச் சிறந்த முறையில் எழுதியிருப்பதற்காக இந் நூலாசிரியர் பத்மனை உண்மையிலேயே மெச்சுகிறேன். முதலீடு குறித்த எந்த விஷயத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை. நூலாசிரியருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
முதலீடு குறித்த இந்த முழுமையான நூலைப் படிக்கும் வாசகர்கள் நிச்சயம் மிகவும் பயனடைவார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை. அதேநேரத்தில் மேம்போக்காக அன்றி, மிகுந்த முயற்சியோடு படித்து, உள்வாங்கிக்கொள்ள வேண்டிய நூல் இதுவென்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தோரணவாயில்
நமது முன்னோர்கள் முதலில் அறவழிகளில் நிற்கச் சொன்னார்கள். பின்னர் அந்த அறவழியிலேயே பொருளை ஈட்டச் சொன்னார்கள். அதன் பிறகு அந்தப் பொருளைக் கொண்டு அறவழியிலேயே உலக இன்பங்களை அனுபவிக்கச் சொன்னார்கள்.
திருவள்ளுவப் பெருந்தகை படைத்த மாபெரும் இலக்கியமான திருக்குறள், இந்த மூன்றையும் சிறப்புற எடுத்துரைப்பதால் முப்பால் என்று போற்றப்படுகிறது. அப்பாலைப் பற்றி (மோட்சம் குறித்து) நேரடியாகச் சொல்லாமல் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் முழுமையாய் மொழிந்து அப்பாலுக்கு நம்மை அரவணைத்து அழைத்துச் செல்கிறது.
அறச் செயல்கள் புரிவதற்கும், இன்பங்களைத் துய்ப்பதற்கும் பொருளே ஆதாரம் என்பதால் அது குறித்த இயலுக்குப் பொருளாதாரம் என்றே பெயர். தனியொரு வீட்டு நிர்வாகத்திலும் சரி, சமூகத்துக்கான நாட்டு நிர்வாகத்திலும் சரி, பொருளியல் முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஆக பொருளை ஈட்டுவதற்கு மட்டுமல்ல, அதனை முறையாகச் செலவழிப்பதற்கும் ஓர் கோட்பாடு வேண்டும், நெறிமுறை வேண்டும். இத்தகு கோட்பாட்டை, இன்று பொருளாதார வல்லரசுகளாகத் திகழும் மேலைநாடுகளில் மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்திலேயே, மிக நுணுக்கமாக ஆராய்ந்து விரிவாக எடுத்துரைத்த பெருமை நமது பாரதத்துக்கு உண்டு.
அந்த வகையில், கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கௌடில்யர் எனப்படும் சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரம்தான் பொருளியல், அரசாட்சி முறை குறித்த நூல்களுக்கெல்லாம் முன்னோடி. ஏறத்தாழ அக்காலகட்டத்திலேயே வாழ்ந்த நம் தமிழகத்தைச் சேர்ந்த திருவள்ளுவர், தமது திருக்குறளின் நடுமையமாகிய பொருட்பாவில் 700 குறட்பாக்கள் மூலம் பொருளியலை அலசி ஆராய்ந்துள்ளார்.
அக் குறட்பாக்கள் தரும் பொருளாதார நுணுக்கங்களை இக்காலகட்டத்தோடு பொருத்திப் பார்த்து, எவ்வகையில் அவற்றைப் பொருள் கொண்டால் தற்போது பொருள் ‘கொள்’வதற்குப் பேருதவியாக இருக்கும் என்ற நோக்கில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இதனைப் பொருள்படுத்துவோர் மேற்கொண்டு பயணத்தைத் தொடரலாம்...
1. தேடுவது பொருள் பாடுவது குறள்
வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோம் என்று வாழ்வது வாழ்க்கையல்ல. அதற்கு ஓர் அர்த்தம், பொருள் இருக்கிறது. வாழ்க்கை ஓர் அனுபவமாக இருக்கலாம், ஆனால் அதனை அனுபவிக்க சில அடிப்படை லட்சியங்கள் உள்ளன. பாரத மெய்ஞான மரபின்படி, வாழ்வின் புருஷார்த்தங்கள், அதாவது அடிப்படை நோக்கங்கள்- தர்மம் (அறம்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்) மற்றும் மோட்சம் (வீடு).
இதில் முதல் மூன்றான அறம், பொருள், இன்பம் இது மூன்றும் முறையாக இருந்தால்தான் இறுதி இலக்காகிய வீடு (விடுதலை) கிடைக்கும். முக்தி என்பது, இறப்புக்குப் பின் அடைவது மட்டுமல்ல, இருக்கும்போதும் அனுபவிக்கக் கூடியதுதான். அறத்தைப் பின்பற்றி, அறத்தோடு பொருள் ஈட்டி, வாழ்க்கையின் இன்பங்களை அறத்தோடு அனுபவிக்கும்போது, தீமை, வறுமை, ஆசை முதலிய தளைகளில் இருந்து தானாகவே விடுதலை கிடைத்து விடுகிறது.
அதனால்தான் தமிழகத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவர், அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் மொழியும் முப்பாலாகிய திருக்குறளைப் படைத்தார். இந்த முப்பாலிலேயே அப்பாலும் (வீடுபேறும்) அடங்கிவிடுகிறது. இதைத்தான் திருவள்ளுவர்,
"வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்"
(- குறள் 50)
என்று ஒரே குறளில் எடுத்துரைத்துள்ளார். இந்த உலகத்திலேயே வாழும் முறைப்படி வாழ்ந்துவிட்டால், வானில் உறைகின்ற தெய்வத்துக்கு இணையான நிலையைப் பெற்றுவிடலாம் என்கிறது திருக்குறள்.
மனிதனை தெய்வ நிலைக்கு உயர்த்தும் இந்த அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றில் மையமாக இருக்கும் பொருள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இறைவனையே ஈஸ்வரன் என்றுதான் அழைக்கிறோம். இதன் பொருள், அனைத்து ஐஸ்வர்யங்களையும், அதாவது பொருள் வளங்களையும் உடையவன் என்பதே. ஆக, வாழ்க்கைக்கு பொருள் அவசியமாகிறது. அதனைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது.
பர உலக வாழ்விற்கு, அதாவது இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறுவதற்கு, மோட்சப் பெருவாழ்வு வாழ்வதற்கு, அறப்பண்புகளாகிய அருள் எவ்வாறு அவசியமோ, அதேபோல, இந்த மண்ணுலகில் இக வாழ்வை நன்கு வாழ்வதற்கு பொருள், அதாவது செல்வம் அவசியமாகிறது என்கிறார் திருவள்ளுவர். பொருளின் இந்தப் பெருமையை, அறத்துப்பாலில் துறவறவியலுக்குக்குக் கீழே அருளுடைமை என்ற அதிகாரத்தில் அவர் கூறியிருப்பது கூடுதல் சிறப்புடையது. அந்தக் குறள்:
"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு."
(குறள் 247)
ஆகையால், பொருள் செல்வத்தைத் தேடுவதை வாழ்வின் லட்சியங்களில் ஒன்றாகக் கருதி, கடைப்பிடிக்க வேண்டும். பொருள்சார் விழிப்புணர்வு (financial awareness) அவசியம் என்பதை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது பாரதம் முழங்கியிருக்கிறது. உலகின் முதல் பொருள் நூல் என்று வர்ணிக்கப்படும் அர்த்த சாஸ்திரம், நம்நாட்டு அறிஞர் சாணக்கியரால்தான் படைக்கப்பட்டது.
ஆயினும் ஒருகாலத்தில் பொருளாதார வல்லரசாகத் திகழ்ந்த இந்தியா, இன்று செல்வவளம் மிகுந்த நாடாக இல்லை. இதனை ஏழைநாடு என்று சொல்வதைவிட ஏழைகள் மிகுந்த நாடு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஏழ்மை நிலையில் இருந்து விடுபட ஒவ்வொருவரும் தமது பொருள்வளத்தைப் பெருக்கிக் கொள்வது அவசியம். இதனை, அர்த்த சாஸ்திரத்திற்கு இணையான பழந்தமிழ் இலக்கியமான திருக்குறள் இவ்விதம் எடுத்துரைக்கிறது.
"பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்."
(குறள் 751)
அதாவது, ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும், பொருள்படுத்தக் கூடியவராக, மதிக்கப்படக் கூடியவராக மாற்றக் கொடிய சிறப்பு, பொருளை (செல்வத்தை) தவிர வேறு எந்தப் பொருளுக்கும் இல்லை. எவ்வளவு அழகான குறள்!
இன்னொரு குறளில், பொருள் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை,
"இல்லாரை எல்லோரும் எள்ளுவர், செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு."
(குறள் 752)
என்று சற்று அதிரடியாகவே கூறுகிறார் திருவள்ளுவர். இதன் பொருள், ஏழைகள் அவமதிப்புக்கு உரியவர்கள் என்பது அல்ல. செல்வம் இருப்போரை வாழ்த்திப் போற்றுவதும், இல்லாதவரை எள்ளி நகையாடுவதும் உலக மக்களின் இயல்பு. ஆகையால் அதனைச் சுட்டிக்காட்டி, அனைத்து மக்களையுமே செல்வத்தைச் சேர்க்க வேண்டும் என்று தூண்டுகிறார் தெய்வப்புலவர்.
பொருளியல் நோக்கில், உலகில் உள்ள மனிதர்களை சில பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. பொருளைப் பொருள்படுத்தாதோர், 2. பொருள் திரட்டும் திறனற்றோர், 3. பொருள் ஈட்டுவதில் தயக்கமுள்ளோர், 4. பொருளைப் பொறுப்புடன் சேர்ப்பவர், 5. பொருளை எவ்வழியிலும் குவிப்பவர், 6. பொருளைச் சேர்த்தும் முறையாகப் பயன்படுத்தாதவர், 7. பொருளின் மதிப்பறியாமல் செலவழிப்பவர், 8. பொருளைச் சேர்ப்பதிலும், செலவழிப்பதிலும் திட்டமிட்டுச் செயல்படுபவர், 9. பொருளை மேலும் பல ஆக்கங்களுக்குப் பயன்படுத்துவோர் என வகைப்படுத்தலாம்.
பொருளைப் பொடுள்படுத்தாத துறவிகளுக்குக் கூட பொருள் ஒருவகையில் தேவையாக இருக்கிறது. ஆகையால் அதனை முழுமையாக யாரும் ஒதுக்கிவிட முடியாது. ஆனால் பலருக்குப் பொருளை எவ்வாறு ஈட்டுவது என்ற பொருள் சார்ந்த அறிவு, திறமை இருப்பதில்லை. அவ்வாறு திறமை இருந்தாலும்கூட சிலருக்கு, பொருள் சேர்ப்பது என்பது ஏதோ பாவச் செயல் என்பதுபோன்ற வீண் அச்சத்தாலோ அல்லது மிகவும் கடினமான செயல் என்பதுபோன்ற தேவையற்ற மலைப்பு அல்லது சோம்பலாலோ தயக்கம் ஏற்படுகிறது.
இந்த அச்சம், மலைப்பு, சோம்பலைக் களைந்து பொறுப்புடன் பொருளைச் சேர்ப்பவர்கள் ஓரளவிலேயே இருக்கின்றனர். எனினும் பொருளைச் சேர்ப்பவர்களில் கணிசமானோர் தீய வழிகள் உட்பட எந்த வழியிலும் அதைச் சேர்க்கலாம் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர். இது மாபெரும் சமூகத் தீங்கு. மறுபுறத்தில் கஷ்டப்பட்டு ஈட்டும் செல்வத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் அதாவது முறையாகச் செலவழிக்காமல் கருமித்தனமாக பலர் வைத்திருக்கின்றனர். செல்வம் என்பது ஆற்றைப்போல வருவதும் போவதுமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஒரே இடத்தில் செல்வம் தேங்கி வெளியேற வழி தெரியாதபோது அது சாக்கடையாக மாறிவிடுகிறது. ஆற்றால் பலருக்குப் பயன், சாக்கடையால் யாருக்குப் பயன்?
இதற்கு நேர்மாறாக வேறு சிலர், தங்கள் மூதாதையர் சேர்த்து வைத்த செல்வத்தை மட்டுமன்றி கஷ்டப்பட்டு உழைத்து ஈட்டும் செல்வத்தைக் கூட கண்மூடித்தனமாக ஊதாரியாய் செலவழிக்கிறார்கள். இது அவருக்கும், அவரைச் சார்ந்துள்ள குடும்பத்தாருக்கும் தீங்கை இழைக்கக்கூடியது. செலவழிப்பது அவசியம் என்றாலும் வகை தெரியாமல் செலவாய் அழிப்பது ஏற்புடையதல்ல. மிகச் சிலரே பொருளை ஈட்டுவதிலும், அதனைச் செலவழிப்பதிலும் ஒரு வழிமுறையை வைத்துக்கொண்டு திட்டமிட்டுச் செயல்படுகின்றனர். இவர்கள் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.
மிக மிகச் சிலரே தம்மிடமுள்ள செல்வத்தை மேலும் பெருக்கி, பல்வேறு ஆக்கங்களுக்கு உதவும் வகையில் அதனைப் பயன்படுத்தும் நுட்பங்களை கைக்கொள்கின்றனர். இவர்கள் போற்றத் தக்கவர்கள். இதுபோன்றோர் மூலம்தான் அவர்கள் சார்ந்துள்ள குடும்பம் மட்டுமின்றி, சமூகமும் நன்கு பயன்பெறுகிறது.
இவ்வாறாக, பொருளை நேர்மையான வழிமுறைகளில் ஈட்டுவதற்கும் பெருக்கிக் கொள்வதற்கும் தூண்டுகோலாகவும், அவற்றை முறையாகச் செலவழித்தல், சமூகத்தில் தேவைப்படுவோருக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு வழிகாட்டியாகவும் அமைந்துள்ள பல்வேறு யோசனைகளை, வழிமுறைகளை, அறிவுரைகளை மிக அருமையாக சின்னஞ்சிறு குறள் பாக்களில் எடுத்தியம்பியுள்ளார் திருவள்ளுவர்.
‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி
குறுகத் தறித்த குறள்’
என்று திருக்குறளைப் புகழ்ந்துரைக்கிறார் சங்ககாலப் பெண்பாற் புலவரான ஔவையார்.
அணு என்பது மிகவும் நுண்ணியது, அதனையும் துளைத்து அதற்குள் ஏழு கடல் கொள்ளளவுள்ள விஷயங்களைப் புகட்டி நிற்கிறது குறள் என்று புகந்துரைக்கிறார் ஔவையார். அணுவைத் துளைத்துப் பகுக்க முடியும் என்பது மட்டுமல்ல, அதற்குள்ளே பல விஷயங்களைப் புகுத்தி செறிவூட்டவும் முடியும் என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தெரிந்துவைத்துள்ளனர் என்பதற்கு குறள் குறித்த ஔவையின் இந்தக் குறளே சான்று.
அந்த வகையில் அணு போன்ற சிறு வடிவில் இருந்தாலும் கடல் போன்ற பெரும் தகவல்களைத் தருகின்ற பொருள்
நிறைந்த அந்தக் குறள்களை உங்களுடன் இனி வாரந்தோறும் பகிர்ந்து கொள்கிறேன்.
துணைத் தகவல்
சாணக்கியரும் வள்ளுவரும்
அர்த்தசாஸ்திரம் என்ற பொருளியல் நூலைப் படைத்த சாணக்கியருக்கும், பொருட்பாலை உள்ளடக்கிய திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு.
இருவருமே பொதுவாக கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இருவருமே இன்றைய தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்கள் என்பது சில ஆய்வாளர்களின் கருத்து. சாணக்கியர் தமது நூலில் குமரி வழிபாடு பற்றிக் கூறுவதால் அவர் கன்னியாகுமரியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பது சிலரது கூற்று. இதேபோல் உயர்திணையாகிய மனிதரைக் குறிப்பிடுகையில் அஃறிணைக்குரிய பேசுவார், செய்வார் என்று கூறாமல் பேசும், செய்யும் என்று குறிப்பிடுவது குமரி வட்டார மக்களின் பேச்சு வழக்கு. இதுபோல் திருக்குறளில் இடம்பெற்றுள்ளதால் திருவள்ளுவரை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பார் உள்ளனர்.
விஷ்ணுகுப்தர் என்றும் கௌடில்யர் என்றும் அழைக்கப்படும் சாணக்கியர், தட்சசீலம் (இன்றைய பாகிஸ்தானில் உள்ள டாக்ஸிலா என்ற நகரம்) பல்கலைக்கழகத்தில் படித்தவர், அங்கேயே ஆசானாகவும் உயர்ந்தவர். இவர் தனது அர்த்த சாஸ்திரம் நூலில் தம்மை திரமிள என்று குறிப்பிடுகிறார். அக்காலத்தில் திரமிள என்ற சொல் தமிழரையே குறிக்கும் என்பதால் இவர் தமிழ்நாட்டுப் பிராமணர் என்பது சிலரது கருத்து. எனினும் தற்போது கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியைச் சேர்ந்தவர் இவர் என்பது வேறு சில ஆய்வாளர்கள் கருத்து. மலையக மக்களின் தமிழோடு சம்ஸ்கிருதம் கலப்புற்றதே இக்கால மலையாள மொழி. இம்மொழி தோன்றுவதற்கு முன்னர் கேரளத்தில் தமிழே பேசினர். மேலும், தஞ்சாவூர் உள்ளிட்ட சோழர் பகுதியில் இருந்து பிராமணர் உள்ளிட்ட தமிழர்கள் அக்காலத்திலேயே கொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வசித்தனர். அவர்கள் சோழியர்கள் எனப்பட்டனர். நந்த வம்சத்தைப் பூண்டோடு அழிக்கும் வரையில் அவிழ்த்த குடுமியை முடியமாட்டேன் என்று வஞ்சினம் பூண்ட சாணக்கியர், சோழியர் என்று கருதப்படுகிறார். இதைத்தான் ‘சோழியன் குடுமி சும்மா ஆடுமா?’ என்ற பழமொழி நினைவூட்டுகிறது.
அதேநேரத்தில் கொச்சி, மலபார் உள்ளிட்ட கேரளப் பிரதேசங்கள் அதர்வண வேதத்தில் குறிப்பாக மந்திர-தந்திர வித்தைகளில் சிறந்து விளங்கின. ஆகையால் மந்திர-தந்திர வித்தைகளிலும் சோதிடம் பார்ப்பதிலும் சோழியர்கள் கைதேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. இதேபோல் திருவள்ளுவர், வள்ளுவர் குலத்தைச் சார்ந்தவர். இந்த வள்ளுவர் குலத்தினர், மந்திர-தந்திர வித்தைகளிலும் சோதிடம் பார்ப்பதிலும் கைதேர்ந்தவர்கள். குறி சொல்லுவதில் இவர்கள் வல்லவர்கள் என்பதை ‘வள்ளுவன் வாக்கு பொய்க்காது’ என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.
இதேபோல் சாணக்கியர் பிகார் மாநிலம் பாட்னா அருகே பிறந்தவர் என்று ஆய்வாளர்களின் மாற்றுக் கருத்து இருப்பதைப் போலவே, திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூரில் (திருமயிலையில்) பிறந்தவர் என்ற மாற்றுக் கருத்தும் உள்ளது.
எது எப்படியோ, சாணக்கியரும் திருவள்ளுவரும் உலகின் முன்னோடி பொருளியல், அரசியல் நிபுணர்கள் - ஆசான்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் திருக்குறள் எந்நாட்டவர்க்கும் ஏற்ற பொதுமறையாய் இருப்பதைப்போலவே, அர்த்தசாஸ்திரத்தை பாடலிபுத்திர மௌரியப் பேரரசுக்கு மட்டுமின்றி உலகுக்குப் பொதுவாகவே சாணக்கியரும் படைத்துள்ளார்.
2. பணம் செய்ய விரும்பு
‘பணம் பத்தும் செய்யும்’ என்பார்கள். பலவற்றையும் ஆக்க உதவும் இந்தப் பணத்தை ஆக்குவதற்கு, அதாவது பணம் சேர்ப்பதற்கு முதலில் நாம் விரும்ப வேண்டும். அந்த விருப்பம் நெறி சார்ந்ததாக இருக்க வேண்டும், வெறி சார்ந்ததாக இருக்கக் கூடாது. முதலில் அறத்தைக் கூறிவிட்டு, இரண்டாவதாகத்தான் பொருளைக் கூறுகிறது நமது பண்பாடு. ஆகையால் பேராசையால் எவ்வழியிலும் பொருள் சேர்க்க விரும்பாமல், அறத்தில் இருந்து வழுவாமல் பொருள் ஈட்ட விரும்ப வேண்டும்.
அதேநேரத்தில் முதலீடு, தொழில் செய்தல், பணத்தைப் பெருக்குதல் இவையெல்லாம் ஒரு சிலருக்கு மட்டுமே வரும், நமக்கெல்லாம் அது ஒத்துவராது என்ற அரைகுறை துறவு மனப்பான்மை பலருக்கு உண்டு. இவர்களுக்கு பணம் தமக்கு வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும்கூட, அதனை உருவாக்குகின்ற செயலில் விருப்பம் இல்லாமல் இருப்பார்கள். இதற்கு அச்சம், தயக்கம், பொருளியல் சார்ந்த அறிவின்மை, முயற்சியின்மை ஆகியவையே காரணங்கள்.
இதுபோன்றவர்களுக்காகத்தான் மகாகவி பாரதியார் தனது புதிய ஆத்திசூடியில் பணத்தினைப் பெருக்கு என்ற அறிவுரையைக் கூறியுள்ளார். ‘ஈசன் மனிதருக்கு இட்டுள்ள இரண்டாவது கட்டளை பொருள். ஆகையால் பொருளை ஈட்ட அதாவது பணத்தைச் சேர்க்க மனிதர்கள் முயற்சி எடுக்க வேண்டும்’ என்கிறார் பாரதியார்.
இதுதொடர்பாக யேசு கிறிஸ்துவின் வார்த்தை என்ற தலைப்பிலான கட்டுரையில் பாரதி விளக்கமாகவே கூறுகிறார் - தெய்வமில்லை என்று எந்தத் தவறு செய்தாவது பணந்தேடுவோர், பணத்தையே தெய்வமென்று கொண்டோர், இவ்வினத்தார் எல்லாத் தேசங்களிலும் இருக்கிறார்கள். இவர்கள் மனத்திலே தம்மை மேதாவிகளாக நினைத்திருக்கிறார்கள். இவர்களுடைய மேதாவித்தனம் மடத்தனம்... தெய்வத்தை எதிர்த்து செல்வம் தேடுதல் தீமை என்பதை நான் ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் தெய்வத்தை நம்பி உடனே செல்வம் சேர்க்க வேண்டும். இது என்னுடைய கொள்கை. எனக்குத் தெரிந்தவரை, ருக் வேதம் இதுபோலவே சொல்கிறது
என்கிறார்.
ஆக, தீமையற்ற வழிகளிலே பணத்தைச் சேர்ப்பதற்கு நாம் விரும்ப வேண்டும். இதுகுறித்து திருக்குறள் என்ன கூறியிருக்கிறது என்பதை இனி காண்போம்-
செல்வம் சேராமைக்கு முதல் காரணம், சோம்பல். இதற்குத் தூய தமிழில் மடி என்று பெயர். திருவள்ளுவர் மடியின்மை என்ற தலைப்பிலே சோம்பலை ஒழிப்பதற்கான 10 குறள்களை மொழிந்துள்ளார். அதிலே சோம்பல் கொண்டவனுக்கு ஏற்படும் தீங்கை