J.R.D. Tata
()
About this ebook
இந்நூல் நான்கு பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது: முதல் பகுதி ஜே.ஆர்.டி.டாடா பிறந்ததிலிருந்து 1938ம் ஆண்டு தமது முப்பத்து நான்காம் வயதில் ‘டாடா சன்ஸ்’ (Tata Sons) என்ற தாய் - நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றது வரை விவரிக்கிறது.
இரண்டாவது பகுதி ஒரு விமானியாகவும், விமான நிறுவனத்தை உருவாக்கி வளர்த்தவராகவுமான அவரது நாற்பத்தாறு ஆண்டுகால அனுபவங்களை விவரிக்கிறது.
1938 முதல் 1991 வரை ‘டாடா குழும நிறுவனங்களின்’ தலைவராக அவர் ஆற்றிய பணிகளையும் அக்குழுமத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் மூன்றாவது பகுதி விவரிக்கிறது.
நான்காவது பகுதியில் ஒரு குடும்பஸ்தராக, ஒரு கொடைவள்ளலாக, ஒரு மிகச்சிறந்த குடிமகனாக அவர் திகழ்ந்ததையும், நாட்டுத் தலைவர்களுடன் அவருக்கு இருந்த நெருங்கிய நட்பையும் அவரது இறுதிக் காலத்தையும் மறைவையும் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
Read more from Aranthai Manian
Thiraikathai Ezhutha Puthu Puthu Utthigal Rating: 0 out of 5 stars0 ratingsCarnataka Isaiyai Therinthu Kollungal Rating: 0 out of 5 stars0 ratingsYajnavalkyarin Vivaathangal Rating: 0 out of 5 stars0 ratingsYajnavalkyar Rating: 0 out of 5 stars0 ratingsYajnavalkyiya Smrithi Rating: 0 out of 5 stars0 ratingsTamil Isai Marabu Rating: 0 out of 5 stars0 ratingsTamil Cinemavin Oli Oviyargal Rating: 0 out of 5 stars0 ratingsBharatanatyam Rating: 0 out of 5 stars0 ratingsThiraichudargal Rating: 0 out of 5 stars0 ratingsRaagangalum Thiraipada Paadalgalum Rating: 0 out of 5 stars0 ratingsIsaiyin Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsYajnavalkyar – Janagamannar Urayadalgal Rating: 0 out of 5 stars0 ratingsTamil Nadaga Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsThiraipadangalana Ilakkiyangalum Naadgangalum Rating: 0 out of 5 stars0 ratingsChinnathirai Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsNaattiya Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsModern Theatres T. R. Sundaram Rating: 0 out of 5 stars0 ratingsHindustani Isaiyai Therinthu Kollungal Rating: 0 out of 5 stars0 ratingsAmateur Nadagangalin Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsPammal Mudhal Komal Varai Rating: 0 out of 5 stars0 ratingsUlaga Pugazh Petra Porgal Rating: 0 out of 5 stars0 ratings
Related to J.R.D. Tata
Related ebooks
Sarithira Nayakan Irandaam Serfoji Rating: 0 out of 5 stars0 ratingsPadaippu Kadavulin Parambaraiyil Vanthavargal Rating: 0 out of 5 stars0 ratingsஇராஜராஜ சோழன் பேசும் வரலாறு Rating: 3 out of 5 stars3/5Samskirutha Subhashitham 200! Rating: 0 out of 5 stars0 ratingsSiddha Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Athisaya Mahakavi Bharathiyar! Rating: 0 out of 5 stars0 ratingsHara Hara Sankara…. Rating: 0 out of 5 stars0 ratingsThadaigal Pala Thaandi... Rating: 0 out of 5 stars0 ratingsUlagam Muzhuthum Paambu Vazhipaadu! Rating: 0 out of 5 stars0 ratingsKarunaikku Marupeyar Kasaap Rating: 0 out of 5 stars0 ratingsIndia Naagar - South America Maya Naagariga Arputha Ottrumaigal Rating: 0 out of 5 stars0 ratingsMuthu Pandhal Rating: 5 out of 5 stars5/5Sumeriavil Tamil Yazh! Japanil Saama Vedha Isai!! Rating: 0 out of 5 stars0 ratingsSithargal Raajyam Rating: 5 out of 5 stars5/5Adharvana Vedha Bhoomi Suktham Sollum Viyappaana Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsVainava Amutha Thuligal Rating: 0 out of 5 stars0 ratingsMaanuda Thaagam Rating: 0 out of 5 stars0 ratingsSrimad Ramayana Kathapaathirangalin Deiveega Pinnani Rating: 0 out of 5 stars0 ratingsAthigaman Neduman anji Rating: 0 out of 5 stars0 ratingsDravidargal Yaar? Kumari Kandamum 3 Tamil Sangangalum Unmaiyaa? Rating: 5 out of 5 stars5/5Natrinai Rating: 0 out of 5 stars0 ratingsKadavulai Kandavargal Rating: 0 out of 5 stars0 ratingsNithilavalli Rating: 0 out of 5 stars0 ratingsMadurai Kaanji Rating: 0 out of 5 stars0 ratingsSiruvargalukkana Greekka Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - Septembet 2022 Rating: 0 out of 5 stars0 ratingsSamskirutha Ilakkiyathil Sila Puthir Kavithaigalum, Arivuraigalum! Rating: 0 out of 5 stars0 ratingsMuppathu Katturaigalil Hindu Madha Athisayangal! Rating: 5 out of 5 stars5/5ஜென் கதைகள் (Tamil) Rating: 4 out of 5 stars4/5Aadi Pattam Thedi Vithai... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for J.R.D. Tata
0 ratings0 reviews
Book preview
J.R.D. Tata - Aranthai Manian
http://www.pustaka.co.in
ஜே.ஆர்.டி.டாடா
வாழ்க்கை வரலாறு
J.R.D. Tata
Vazhkai Varalaru
Author:
அறந்தை மணியன்
Aranthai Manian
For more books
http://www.pustaka.co.in/home/author//aranthai-manian
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
முன்னுரை
பகுதி - 1
1. பாரம்பரியம்
2. ஜாம்ஷெட்ஜி நஸர்வான்ஜி டாடா
3. ரத்தன்ஜி தாதாபாய் டாடா
4. ஜாம்ஷெட்பூர் உருக்காலை உருவான வரலாறு
5. டாடா குழுமத்தின் பிற நிறுவனங்கள்
6. ஜே.ஆர்.டி.டாடாவின் இளமைக் காலம்
7. 1926 முதல் 1938 டாடா நிறுவன சேர்மன் ஆகும் வரை
பகுதி - 2
1. விமானப் பயணத்தின் தொடக்க ஆண்டுகள்
2. ‘டாடா ஏர்மெயில்’ - முதல் விமான தபால் சேவை
3. டாடா ஏர்லைன்ஸ் - விமான நிறுவனத்தின் தொடக்கமும் முதல் விமானப் பயணமும்
4. டாடா ஏர்லைன்ஸ் - 1933 - 1946
5. மாயக் கம்பளம்
6. தரத்திற்கு முதலிடம்
7. இரவு நேர விமானத் தபால் சேவை
8. விமான நிறுவனங்கள் தேசிய மயமாக்கல்
9. தலைமை ஏற்பதா வேண்டாமா?
10. ஏர் இந்தியாவின் வெற்றியும் சோகமும் (1948 - 1964)
11. அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவராக
12. ஜெட் விமானங்களின் சகாப்தம்
13. ஏர் இந்தியாவின் தலைமைப் பதவியிலிருந்து விலக்கப்பட்டது
பகுதி - 3
1. டாடா குழும நிறுவனங்களின் தலைவராக...
2. டாடா நிறுவனங்கள் - ஒரு பெரும் குடும்பம்
3. பம்பாய் - திட்டம்
4. மேற்கு நோக்கிப் பயணம்
5. தொழிலாளர்களுடன் நல்லுறவைப் பேணியது
6. பிரம்மாண்டப் பொறியியல் நிறுவனத்தின் தோற்றம்
7. டாடா குழுமத்தின் பிற நிறுவனங்கள்
8. மத்திய அரசுடன் நெருக்கமும் மோதலும்
பகுதி - 4
1. ஒரு பிரம்மாண்ட தொழில் குழுமத்தின் தலைவனாக...
2. கொடை வள்ளலாக
3. சிறந்த குடிமகனாக...
4. குடும்பத் தலைவனாக...
5. கடவுளும் மதங்களும்...
6. இறுதி ஆண்டுகள்!
இணைப்பு – 1. டாடா குடும்ப உறவு முறைகள்
இணைப்பு – 2. ஜே.ஆர்.டி.டாடா பெற்ற விருதுகள்
இணைப்பு – 3. ஜே.ஆர்.டி.டாடாவின் வாழ்க்கையில் முக்கிய மைல் கற்கள்
இணைப்பு – 4. துணை - நூல் பட்டியல்
முன்னுரை
"... அவர் விண்ணைத் தொட்டார்
விண் அவரைப் பார்த்து புன்னகைத்தது;
அவர் தமது கைகளை நீட்டி
விரித்து உலகைத் தழுவினார்!
அவர் தமது தொலைநோக்குப்
பார்வையால், மனிதர்களையும்
நிறுவனங்களையும் விஸ்வரூபம்
எடுக்கச் செய்தார்..."
1993ம் ஆண்டு நவம்பர் மாதம் ‘ஏர் இந்தியா’ நிறுவனம் வெளியிட்ட இரங்கல் செய்தியிலும், விளம்பரப் பலகைகளிலும் குறிப்பிடப்பட்ட அந்த ‘அவர்’தான் ஜே.ஆர்.டி.டாடா!
ஆனால், ‘பாரத ரத்னா’ ஜே.ஆர்.டி.டாடாவோ, தம்மை இந்த உலகில் ஒரு பயணியாகத்தான் கருதிக் கொண்டார்.
ஓர் ஆங்கிலக் கவிஞன் கூறினான்:
"... நாமெல்லாம் பயணிகள்
நாம் போக வேண்டிய தொலைவு
இன்னும் இருக்கிறது.
பனி மூடிய அந்தக் கடைசி
நீலமலைக்கு அப்புறமோ
அல்லது, கோபத்துடன்
மின்னிக் கொண்டிருக்கும்
அந்தக் கடலுக்கு அப்பாலோ?!..."
ஆனால், ஜே.ஆர்.டி.டாடாவின் பயணமோ நிறைவான ஒன்று. அடடா, எத்தகைய சாதனைப் பயணம் அது! கடப்பதற்கு இனி மலைகளோ, கடல்களோ மீதமில்லை என்று கூறுமளவிற்கு, அறுபத்தெட்டு ஆண்டுகள் நீண்ட பயணம் அல்லவா அது!
1925ம் ஆண்டில் தமது இருபத்தொன்றாம் வயதில், ஜாம்ஷெட்பூரில் ‘டாடா உருக்கு ஆலை’யில் ஒரு பயிற்சியாளராக ஜே.ஆர்.டி.டாடா, தமது பணியைத் தொடங்கிய போது, டாடா குழுமத்தில் மூன்று துணி ஆலைகளும், மும்பையில் ‘தாஜ்மஹல்’ ஹோட்டலும், ஜாம்ஷெட்பூர் உருக்காலையும் மட்டுமே இருந்தன.
1938ம் ஆண்டில் தமது முப்பத்து நான்காம் வயதில் அவர் ‘டாடா சன்ஸ் லிமிடெட்’ என்ற தாய்-நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டபோது அக்குழுமத்தில் இருந்த நிறுவனங்களின் எண்ணிக்கை பதினான்கு மட்டுமே! ஐம்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1991ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றபோது இருந்த நிறுவனங்களின் எண்ணிக்க தொண்ணூற்றைந்து!
1930ம் ஆண்டு இந்தியாவின் முதல் விமானியாக, கராச்சியிலிருந்து மும்பைக்கு ஒரு சிறிய விமானத்தை ஓட்டி வந்த ஜே.ஆர்.டி.டாடாதான் நமது நாட்டில், முதல் விமானப் பயணத்தையும் முதல் விமான நிறுவனத்தையும் தொடங்கி வைத்தவர். 1932ல் அவர் தொடங்கிய ‘டாடா ஏர்லைன்ஸ்’ நிறுவனம்தான் பின்னர் ‘ஏர் இந்தியா’ நிறுவனமாக வளர்ந்து உலகப் புகழ் பெற்றது.
1938ல் டாடா குழும நிறுவனங்களின் வரவு செலவு வெறும் பதினேழு கோடி ரூபாய்கள்தான்! 1991ல் அது பத்தாயிரம் கோடி ரூபாய்கள் என்ற அளவைத் தாண்டியதில் ஜே.ஆர்.டி.டாடாவின் பங்களிப்புதான் அதிகம்.
1990ல் இந்தியாவின் பத்து முதன்மை நிறுவனங்களில் மூன்று, டாடா குழும நிறுவனங்களாக இருந்தன. ‘டாடா ஸ்டீல்’ (Tata Steel) முதலிடத்தைப் பிடித்திருந்தது. ‘டெல்கோ’ (Telco) நான்காவது இடத்தையும், ‘டாடா கெமிக்கல்ஸ்’ (Tata Chemicals) பத்தாவது இடத்தையும் வகித்தன.
அந்நியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு நாட்டில், சுதந்திரப் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருந்த காலகட்டத்தில், இரண்டு உலகப் போர்களின் பின் விளைவுகளையும் தாங்கிக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனக் குழுமம் இத்தனை சாதனைகளைப் பட்டியலிட முடிந்திருக்கிறதென்றால், அக்குழுமத்தின் நிர்வாகிகளும், உழைப்பாளிகளும் எந்த அளவிற்கு ஆர்வத்தையும், முயற்சியையும், உழைப்பையும் கொண்டிருந்திருக்க வேண்டும்?! இத்தனைக்கும் அடிநாதமாக, வலுவான அஸ்திவாரமாக, வழிகாட்டியாக, தலைவனாக, நண்பனாக, கொடை வள்ளலாக, எல்லாவற்றிற்கும் மேலாக எல்லோராலும் போற்றப்பட்ட ஒரு கம்பீரமான மனிதராக வாழ்ந்து மறைந்தவர் ஜே.ஆர்.டி.டாடா!
ஜே.ஆர்.டி.டாடாவின் நூற்றாண்டு நிறைவு பெறும் இந்த 2004ல் இந்த வாழ்க்கை வரலாற்று நூல் தமிழில் வெளிவருவது அவருக்கு அளிக்கப்படும் அஞ்சலியாக அமைகிறது.
இந்நூல் நான்கு பகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளது: முதல் பகுதி ஜே.ஆர்.டி.டாடா பிறந்ததிலிருந்து 1938ம் ஆண்டு தமது முப்பத்து நான்காம் வயதில் ‘டாடா சன்ஸ்’ (Tata Sons) என்ற தாய் - நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றது வரை விவரிக்கிறது.
இரண்டாவது பகுதி ஒரு விமானியாகவும், விமான நிறுவனத்தை உருவாக்கி வளர்த்தவராகவுமான அவரது நாற்பத்தாறு ஆண்டுகால அனுபவங்களை விவரிக்கிறது.
1938 முதல் 1991 வரை ‘டாடா குழும நிறுவனங்களின்’ தலைவராக அவர் ஆற்றிய பணிகளையும் அக்குழுமத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் மூன்றாவது பகுதி விவரிக்கிறது.
நான்காவது பகுதியில் ஒரு குடும்பஸ்தராக, ஒரு கொடைவள்ளலாக, ஒரு மிகச்சிறந்த குடிமகனாக அவர் திகழ்ந்ததையும், நாட்டுத் தலைவர்களுடன் அவருக்கு இருந்த நெருங்கிய நட்பையும் அவரது இறுதிக் காலத்தையும் மறைவையும் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை
ஜூலை, 2004
- அறந்தை மணியன்
பகுதி - 1
1904 - 1938
1. பாரம்பரியம்
இன்றைய ஈரான் நாடு அன்று ‘பெர்ஷியா’ என்றழைக்கப்பட்டது. தமிழில் பாரசீகம் என்று குறிப்பிடப்படுவது அதுதான்! அந்நாட்டு மக்கள் பேசிய மொழி ‘பெர்ஷியன்’ அல்லது ‘பாரசீக மொழி’ ஆகும்.
கிரேக்க, ரோமானிய மற்றும் எகிப்திய கலாச்சாரங்களுக்கு எந்த விதத்திலும் குறைவுபடாத பழமையும், பாரம்பரியமும், வரலாறும் கொண்டது பாரசீகக் கலாச்சாரம்.
இன்றைக்கு மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘ஜரதுஷ்ட்ரா‘ (Zarathushtra) என்ற ஞானியின் போதனைகளே அன்றைய பாரசீகத்தின் வேதவாக்காகக் கருதப்பட்டன. அவரது போதனைகள் அடங்கிய ‘ஜந்தவஸ்தா’ (Zandavastha) என்ற நூல் இன்றளவும் ‘பார்சி’ மதத்தவரிடம் காணக் கிடைக்கிறது.
ஜரதுஷ்ட்ரரின் முக்கிய போதனையானது, ... நமது வாழ்க்கையே, நல்ல சக்திகளுக்கும் மோசமான சக்திகளுக்கும் இடையிலான போராட்டம்தான்; இறுதியில் நல்லதே தீயதை அழிக்கும்; தீயவற்றை அழிக்கும் போராட்டத்தில் ஒவ்வொரு மனிதனும் கடவுளுக்கு நெருங்கிய கூட்டாளியாக இருக்க வேண்டும்...
என்பதாகும்.
ஹுமத்தா
(உயர்ந்த எண்ணங்கள்)
ஹுக்தா
(இனிய சொற்கள்)
ஹ்வர்ஷ்தா
(அரிய செயல்கள்)
இவை மூன்றும் ஒவ்வொரு பாரசீகருக்கும் இருக்க வேண்டிய முக்கிய குறிக்கோள்கள் என்று ‘ஜரதுஷ்ட்ரர்’ போதித்தார்.
அவ்வாறே முதலாவது பாரசீகப் பேரரசை நிறுவியவர் ‘சைரஸ்’ (Cyrus) என்ற மாமன்னர். அவரது பரம்பரையினரை மாசிடோனிய இளவரசனான அலெக்ஸாண்டர் தோற்கடித்து பாரசீகத்தின் தலைநகரான ‘பெர்சிபோலிஸ்’ என்ற நகரைக் கைப்பற்றினான். (அந்த வெற்றியைத் தொடர்ந்துதான் பின்னர் பல நாடுகளைக் கைப்பற்றி ‘மாவீரன் அலெக்ஸாண்டர்’ என்றழைக்கப்பட்டான்). சைரஸ் மன்னன்தான் உலகின் ‘முதல் மனித உரிமைப் பிரகடனத்தை’ அறிவித்தவன்.
சைரஸுக்குப் பிறகு பல வம்சத்தினர் பாரசீகத்தை ஆட்சி செய்தாலும், ‘டேரியஸ்’ என்ற மன்னனே பெரும் புகழுடன் விளங்கினான். அவன் ‘பெர்சிபோலிஸ்’ (Persipolis) நகரை மீண்டும் உருவாக்கினான். (இன்னும் அந்நகரின் எஞ்சியிருக்கும் இடிபாடுகளை ஈரானின் தலைநகரான டெஹ்ரானுக்கு அருகில் காண முடிகிறது). டேரியஸ் ‘மன்னர்களின் மன்னன்’ என்றழைக்கப்பட்டான். அவன் தன்னை நல்லதின் நண்பன், அல்லதின் எதிரி; எது சரியானதோ அதுவே எனது விருப்பம்
- என்று அறிவித்துக் கொண்டான். அவனது ஆட்சியில் பாரசீகப் பேரரசு எகிப்தில் இருந்து, சிந்து சமவெளி வரை பரவியிருந்தது. மத்திய தரைக்கடல் பகுதிகளும், அரபிப் பெருங்கடலும் டேரியஸின் ஆதிக்கத்திலும், கட்டுப்பாட்டிலும் இருந்தன.
கிருத்துவுக்குப் பிறகு ஏழாம் நூற்றாண்டில், சைரஸும், டேரியஸும் ஆண்ட அந்தப் பேரரசை, அரேபியாவிலிருந்து ஒரு கையில் பச்சை வண்ணத்தில் பிறை பொறிக்கப்பட்ட கொடியையும், மறுகையில் வாளையும் ஏந்தி வந்த இஸ்லாமியப் படையினர் கைப்பற்றியதுடன் தலைநகர் ‘பெர்சிபோலிசை’யும் அழித்து ஒழித்தனர்.
பாரசீக மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். எஞ்சியவர்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்டனர். தப்பிப் பிழைத்தவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக நூற்றுக்கணக்கான படகுகளில் பயணித்து அரபிக் கடலில் நுழைந்து அன்றைய பாரத நாட்டின் ‘குர்ஜரம்’ என்றழைக்கப்பட்ட இன்றைய குஜராத் மாநிலக் கடற்கரையில் கரையேறினர். வந்தாரை வாழ வைக்கும் பாரத மக்கள் அவ்வாறு பாரசீகத்திலிருந்து வந்தவர்களுக்கும் எல்லாவித வசதிகளும் செய்து கொடுத்து அவர்கள் இங்கு அமைதியுடன் தொடர்ந்து வாழ வழியமைத்துக் கொடுத்தனர். ‘ஜொராஸ்ட்ரிய’ மதத்தைப் பின்பற்றிய அந்த பாரசீகர்களை, பாரத நாட்டு மக்கள் ‘பார்சி’கள் (Parsees) என்றழைக்கத் தொடங்கினர்.
குஜராத்தில் ‘பார்சி’கள் குடியேறிய சிற்றூர் ‘நாகமண்டல்’ என்பதாகும். பாரசீகத்தின் ‘சாரி’ என்ற ஊர் போலவே ‘நாகமண்டல்’ காட்சியளித்ததால், பாரசீகர்கள் அதை ‘நவ்சாரி’ (Navsari) என்றழைத்தனர். அதாவது ‘புதிய சாரி’. அடுத்த முன்னூறு ஆண்டுகளுக்கு, அதாவது பத்தாம் நூற்றாண்டு வரை ‘பார்சிகள்’ நவ்சாரியில் மட்டுமே வாழ்ந்து வந்தனர். அவர்களின் குருமார்கள் பாரசீகத்திலிருந்து கொண்டு வந்த ‘புனிதத் தீ’ நவ்சாரியில் தொடர்ந்து அணையாமல் பாதுகாக்கப்பட்டது.
அதன் பிறகே, அவர்கள் குஜராத்தின் பிற பகுதிகளிலும், மகாராஷ்டிரத்தின் மும்பை தீவிலும் சென்று வாழ தலைப்பட்டனர். (இன்று மும்பையில் மட்டுமே அதிக எண்ணிக்கையிலான பார்சிகள் வாழ்ந்து வருகின்றனர்).
பார்சிகள்தான் அனேகமாக வேதகால ஆரியர்கள் போன்றவர்கள். அவர்கள் ‘அக்னி’யை (தீயை) மட்டுமே தங்களின் ஒரே கடவுளின் உருவகமாகக் கருதி வணங்குகின்றனர். விதவிதமான கடவுளர்களையோ, சிலை வடிவங்களையோ ஏற்றுக்கொள்வதில்லை. அதேபோல வேறெந்த மதத்தைச் சேர்ந்தவர்களும் ‘பார்சி’யாக மதம் மாறுவதை அவர்கள் அனுமதிப்பதில்லை.
இதன்பொருட்டே ‘பார்சி’ மதமும், மக்கள் தொகையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
பார்சிகளின் ‘புனித தீக்கோயில்’ மும்பையில் இருக்கிறது. மதகுருமார்கள் அங்குள்ள நெருப்பை அணைந்து விடாமல் பாதுகாத்து வருகிறார்கள். ஒவ்வொரு பார்சிக் குடும்பத்தில் எரியும் அடுப்புத் தீயும் அந்தக் கோயிலில் எரிந்து கொண்டிருக்கும் புனிதத் தீயிலிருந்து கொளுத்தி எடுத்து வரப்பட்டதுதான்! (முன்னொரு காலத்தில் இதே போல ஹிந்துக்கள் தங்கள் வீடுகளுக்கு யாகத்தீயின் பகுதியையே கொண்டு வந்து அடுப்பேற்றினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது).
ஹிந்துக்கள் போலவே பார்சிகளிடையேயும் ‘முப்புரி நூல்’ (பூணூல்) அணிவிக்கும் பழக்கமுண்டு. ஒரே வேறுபாடு, பார்சிகளில் அனைவருக்கும் கட்டாயமாகப் பூணூல் அணிவிக்கப்பட்டது. அவ்வாறு அணியாதவர்கள் திருமணம் போன்ற எவ்வித மதச்சடங்குகளையும் மேற்கொள்ள முடியாது.
இது போன்ற கட்டுப்பாடுகளின் காரணமாக மத குருமார்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் இருந்தது; இன்னும் இருந்து வருகிறது.
அப்படியான ஒரு மதகுருவின் வம்சாவளியில் 1839ம் ஆண்டு பிறந்தவர்தான் இந்தியாவின் தொழிற்புரட்சிக்கு வித்திட்டவரும் கனரக இரும்புத் தொழிற்சாலையை உருவாக்க கனவு கண்டவருமான ‘ஜாம்ஷெட்ஜி நஸர்வான்ஜி டாடா’ (Jamshetji Nusserwanjee Tata).
2. ஜாம்ஷெட்ஜி நஸர்வான்ஜி டாடா
(JAMSHETJI NUSSERWANJEE TATA)
ஜே.என்.டாடா என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட ‘ஜாம்ஷெட்’தான் டாடா நிறுவனங்களை ஏற்படுத்தியவர். அக்குழுமத்திற்கும், அந்தப் பிரபலமான குடும்பத்திற்கும் பிதாமகர். பார்சிகளின் மதநம்பிக்கைக்கும் பாரம்பரிய கலாச்சாரத்திற்கும் கல்வி வளர்ச்சிக்கும் கேந்திரமாக விளங்கிய ‘நவ்சாரி’ என்ற நகரில் 1839ம் ஆண்டு பிறந்தார் ஜே.என்.டாடா.
பாரதத்தின் மிக நீண்ட வரலாற்றில் மிகவும் இருண்ட காலகட்டமாக விளங்கியது பத்தொன்பதாம் நூற்றாண்டு. நாடு அந்நியரிடம் அடிமைப்பட்டிருந்தது. வெள்ளையர் இந்தியக் கனிமச் செல்வங்களையும், பிற மூலப் பொருட்களையும் சுரண்டிக் கொண்டு, இங்கிலாந்திலிருந்தும் பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வணிகப் பொருட்களைக் கொண்டு வந்து குவித்து வந்தனர்.
இந்திய மக்கள் கல்வி கற்க விரும்பியதையோ, அவர்களின் ஆன்மிக, மத ஈடுபாடுகளையோ தடை செய்யாத வெள்ளையர் அரசு, இந்தியர்கள் அரசியல், சமூக, மற்றும் பொருளாதாரத் துறைகளில் வளர்ச்சி அடைவதை அனுமதிக்கவில்லை. ஒரு சிலர் மேற்கொண்ட முயற்சிகளையும் ஊக்குவிக்கவில்லை. வெள்ளையர்களுக்கு எதிரான முதல் சுதந்திரப் போராட்டம் என்று கருதப்படும் 1857ம் ஆண்டு நடந்த ‘சிப்பாய் கலகமும்’ தோல்வியுற்றதால் இந்தியா, இங்கிலாந்து மன்னராட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
ஆனால் அத்தகைய சூழ்நிலையிலும் ஐரோப்பியத் தொழில் புரட்சியின் தாக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டது. பருத்தித் துணி ஆலைகள் நமது நாட்டிலும் குஜராத், மற்றும் மகாராஷ்டிரப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டன. வங்காளத்தில் சணல் ஆலைகள் தோன்றின. அந்த ஆலைகள் எல்லாம் தொடக்கத்தில் நீராவியின் சக்தியினால் இயக்கப்பட்ட இயந்திரங்களைக் கொண்டிருந்தன. அந்த நீராவியை உருவாக்க ஏராளமான நிலக்கரியை எரித்து நீரைக் கொதிக்க வைக்க வேண்டியிருந்தது. பின்னர் மின்சக்தி கண்டுபிடிக்கப்பட்டு இயந்திரங்கள் செயல்படத் தொடங்கியதும், பருத்தித் துணி ஆலைகளிலும் ‘விசைத் தறிகள்’ பொருத்தப்பட்டதால் பெருமளவில் பருத்தித் துணி வகைகளை விரைவாக நெய்ய முடிந்தது.
ஆரம்ப ஆண்டுகளில் அத்தகைய மின்சக்தியால் இயங்கிய துணி ஆலைகளை வெள்ளையர்களே நிறுவினர். குஜராத்தில் ‘ஃபின்லே‘ (Finlay) நிறுவனம் அத்தகையது.
ஏற்கெனவே தொழிலார்வமும், சுயமுயற்சியும், உழைப்பும் கொண்டிருந்த ‘பார்சிகள்’ தாங்களும் துணி ஆலைகளை நிறுவத் தொடங்கினர். குஜராத்தின் ‘நவ்சாரி’, சூரத், அஹமதாபாத் ஆகிய ஊர்களில் அவர்களின் துணி ஆலைகள் எழும்பின.
‘பார்சிகள்’ ஹிந்துக்களாகவும் இல்லாமல், இஸ்லாமியர்களாகவும் இல்லாமல் இருந்ததால், வெள்ளையர்கள் பார்சிகளுடைய தொழில் முயற்சிகளுக்கு இடையூறு செய்யவில்லை. சொல்லப் போனால், பார்சிகளுடன் இணைந்து செயலாற்ற வெள்ளையர்கள் முன்வந்தனர்.
1857ல் நடந்த முதலாவது சுதந்திரப் போர் சமயத்தில் பதினெட்டு வயது மட்டுமே ஆகியிருந்த ஜே.என்.டாடா, சூழ்நிலைகள் பார்சிகளுக்கு சாதகமாக இருப்பதை உணர்ந்து கொண்டு, தாமும் பருத்தி ஆலைகளை நிறுவ உறுதி கொண்டார். அவ்வாறே அஹமதாபாத்திலும், மும்பையிலுமாக மொத்தம் மூன்று பருத்தித் துணி ஆலைகளை ‘டாடா டெக்ஸ்டைல் மில்ஸ்‘ (Tata Textile Mills) என்ற பெயரில் நிறுவினார். அவற்றின் வெற்றியின் காரணமாக அவர் மிகப் பெரிய செல்வந்தரானார்.
1900ம் ஆண்டு வெளிநாட்டு நண்பர் ஒருவர் ஜே.என்.டாடாவை சந்திக்க மும்பைக்கு வந்தார். வர்த்தக ரீதியான பேச்சுவார்த்தைகள் முடிந்ததும், நண்பரை ஒரு நல்ல உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று விருந்தளிக்க தீர்மானித்தார் ஜே.என்.டாடா! அந்தக் காலகட்டத்தில் மும்பையில் இயங்கி வந்த ஒரு சில தரமான உணவு விடுதிகளில் மேல்தட்டு மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அப்படிப்பட்ட ஒரு இடத்திற்கு தமது நண்பரை அழைத்துச் சென்றார். அந்த உணவு விடுதியின் வாயிற்காப்போன், டாடாவின் வெளிநாட்டு நண்பரை மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியுமென்றும், டாடாவை அனுமதிக்க இயலாதென்றும் மறுத்து விட்டான்.
அன்றே அங்கேயே ஜே.என்.டாடா ஒரு முடிவெடுத்தார். இந்த நாட்டின் கவுரவச் சின்னமாகவும் அதே நேரத்தில் யார் வேண்டுமானாலும் உள்ளே நுழைந்து உணவருந்தவும், தங்கவும் வசதி உள்ள ஒரு பிரம்மாண்டமான ஹோட்டலை மும்பையில் நிறுவ வேண்டும் என்று!
1900ம் ஆண்டு ‘இந்தியாவின் நுழைவாயில்’ என்று அழைக்கப்படுகிற ‘கேட்வே ஆஃப் இந்தியா’ (Gateway of India) தோரண வாயிலோ, வேறெந்தவொரு கட்டடமோ மும்பைத் துறைமுகத்தின் அருகில் இருக்கவில்லை. அந்த இடத்தை விலைக்கு வாங்கி அரபிக்கடலைப் பார்த்தவாறு தாம்