Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iyarkai Vaithiyam
Iyarkai Vaithiyam
Iyarkai Vaithiyam
Ebook575 pages12 hours

Iyarkai Vaithiyam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தப் புத்தகத்தை வாங்கியவுடன், ஒரு குறிப்பிட்ட நோய்க்குக் கூறப்பட்டுள்ள சிகிச்சைகளை மட்டும் படித்துப் பார்த்துவிட்டு, அந்தச் சிகிச்சைகளைக் கையாளத் தொடங்கிவிடக் கூடாது. அப்படித் தொடங்கினால், சிகிச்சைகளின் முழுப் பயனையும் பெற முடியாது.

ஏனென்றால், மற்ற வைத்திய முறைகளைப் போன்றது அல்ல இயற்கை வைத்திய முறை. இந்த முறைப்படி ஏதாவது ஒரு நோய்க்கு சிகிச்சை செய்துகொண்டாலே, உடம்பில் உள்ள மற்ற நோய்களும் தாமாகவே குணமாகிவிடும். நமது பிராண சக்தி தேவையான அளவுக்கு ஆக்கம் பெறுவதற்கான வழிமுறைகள் இதில் கையாளப்படுகின்றன.

ஆகையால்,

அந்த வழிமுறைகள் யாவை, அவை எந்த அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டாலொழிய, இந்த நூலில் உள்ள எந்த ஒரு சிகிச்சையையும் செவ்வையான முறையில் கையாள இயலாது. அவற்றை அவ்வாறு தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், இந்நூல் முழுவதையும் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது (முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரையில்) படித்தே ஆகவேண்டும். அப்படிப் படித்துத் தெளிவுபெற்று, அதன்பின் சிகிச்சைகளில் இறங்கினால், இயற்கை வைத்தியத்தினால் குணமாக்க இயலாத வியாதி எதுவும் இல்லை என்பதை நீங்கள் உங்கள் அனுபவத்தாலேயே அறிந்துகொள்ளலாம்.

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580136606534
Iyarkai Vaithiyam

Read more from Tamilvanan

Related to Iyarkai Vaithiyam

Related ebooks

Reviews for Iyarkai Vaithiyam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iyarkai Vaithiyam - Tamilvanan

    https://www.pustaka.co.in

    இயற்கை வைத்தியம்

    Iyarkai Vaithiyam

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஒரு முக்கியமான குறிப்பு

    இந்தப் புத்தகத்தை வாங்கியவுடன், ஒரு குறிப்பிட்ட நோய்க்குக் கூறப்பட்டுள்ள சிகிச்சைகளை மட்டும் படித்துப் பார்த்துவிட்டு, அந்தச் சிகிச்சைகளைக் கையாளத் தொடங்கிவிடக் கூடாது. அப்படித் தொடங்கினால், சிகிச்சைகளின் முழுப் பயனையும் பெற முடியாது.

    ஏனென்றால்,

    மற்ற வைத்திய முறைகளைப் போன்றது அல்ல இயற்கை வைத்திய முறை. இந்த முறைப்படி ஏதாவது ஒரு நோய்க்கு சிகிச்சை செய்துகொண்டாலே, உடம்பில் உள்ள மற்ற நோய்களும் தாமாகவே குணமாகிவிடும். நமது பிராண சக்தி தேவையான அளவுக்கு ஆக்கம் பெறுவதற்கான வழிமுறைகள் இதில் கையாளப்படுகின்றன.

    ஆகையால்,

    அந்த வழிமுறைகள் யாவை, அவை எந்த அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டாலொழிய, இந்த நூலில் உள்ள எந்த ஒரு சிகிச்சையையும் செவ்வையான முறையில் கையாள இயலாது.

    அவற்றை அவ்வாறு தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், இந்நூல் முழுவதையும் குறைந்தபட்சம் ஒரு தடவையாவது (முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரையில்) படித்தே ஆகவேண்டும்.

    அப்படிப் படித்துத் தெளிவுபெற்று, அதன்பின் சிகிச்சைகளில் இறங்கினால், இயற்கை வைத்தியத்தினால் குணமாக்க இயலாத வியாதி எதுவும் இல்லை என்பதை நீங்கள் உங்கள் அனுபவத்தாலேயே அறிந்துகொள்ளலாம்.

    - தமிழ்வாணன்

    பொருளடக்கம்

    முன்னுரை

    எந்த டாக்டரும் நோயைக் குணப்படுத்துவதில்லை!

    அல்லோபதி டாக்டர்களும் போலி வைத்தியர்களே!

    மருத்துவ உலகப் பெரியோர்கள் மன்னிப்பார்களாக!

    டாக்டர் கொடுப்பது மருந்து அல்ல, நஞ்சு!

    சித்த, ஆயுர்வேத வைத்தியர்களின் வாதம்

    மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையான பலவீனம்

    டாக்டர்கள் விஞ்ஞானிகள் அல்லர்!

    பெர்னார்டுஷாவின் உவமானம்

    அற்புத மருந்துகளும் அற்புத நோய்களும்

    புதுப்புது நோய்கள் தோன்றுவதன் இரகசியம்

    நம் உடம்பினுள்ளே நிகழ்கிற இருவகை இயக்கங்கள்

    நம் உள்ளே இயங்கிக்கொண்டு இருக்கும் இயற்கையின் சக்தி

    நோய்கள் நமக்கு நண்பர்களே!

    மருந்துகள் நமக்குத் தீமை செய்கின்றனவே தவிர நன்மை செய்வது இல்லை!

    நோய் என்ற தேளும் மருந்து என்ற பாம்பும்!

    ஆரோக்கிய நிலையங்களா? நோய் வளர்ப்புப் பண்ணைகளா?

    டாக்டர்கள், பொறுப்பு அற்ற முறையில் பேசுகிறார்கள்

    மூர்ச்சையும் தொழுநோயும் போன்றவர்களே டாக்டர்கள்!

    நகர மக்களும் பணக்காரர்களும் பரிதாபத்துக்குரியவர்கள்

    டாக்டர்களைத் திணற வைக்கும் ஒரே கேள்வி!

    டாக்டர்கள் மூடநம்பிக்கை உடையவர்களே!

    நோய்கிருமிகள் என்பவை மனிதனின் நண்பர்களே!

    இயற்கை வைத்தியத்தின் வரலாறு

    ஹோமியோபதி தோன்றிய வரலாறு

    ‘ட்ரக்’குளால் விளையும் மூவகைத் தீங்குகள்

    நோயைத் தோற்றுவிக்கும் மருந்தே நோயைத் தீர்க்குமா?

    ஆரோக்கியம் என்றால் என்ன?

    நோய்கள் பல அல்ல; ஒரே நோய்தான் உள்ளது!

    உண்மையில் அடிப்படை நோய் ஒரு நோயே அல்ல!

    பிராணசக்தி ஏன் காலம் தாழ்த்தி வேலை செய்கிறது?

    நோய்க் கிருமிகளும் தடுப்பு ஊசிகளும்

    மருத்துவ விஞ்ஞானிகள் தாங்கள் விரும்புவதையே நம்புகிறார்கள்

    பாஸ்டியரின் மரண வாக்குமூலம்

    கிருமிகளைப் பற்றிய ஒரு முக்கியமான உண்மை

    கிருமிகளால் நமக்கு இடைஞ்சல் இல்லை டாக்டர்களால்தான் இடைஞ்சல்கள்!

    செல்கள் ஏன் நோயுறுகின்றன?

    சீரம்களும் வாக்ஸைன்களும்

    அம்மை குத்தும் பழக்கம் எப்படி ஐரோப்பாவில் பரவியது?

    ஒரு பேதைச் சிறுமியின் பிதற்றலை நம்புவதா?

    ராயல் கமிஷன் ஏற்பட்ட வரலாறு

    இது மோசடியா, பேதைமையா?

    மருத்துவ உலகின் மடத்தனத்தை மெய்ப்பிக்கும் சில புள்ளி விவரங்கள்

    வைசூரி நோயும் மாரியம்மனும்

    அம்மை குத்திக் கொண்டவர்கள்தாம் நோயைப் பரப்புகின்றனர்!

    கிருமி பரப்பிகள்!

    உணவு

    ஸாத்விக, இராஜஸ, தாமஸ உணவுகள்

    முதல்தர உணவுகளும் இரண்டாந்தர உணவுகளும்

    வைட்டமின்கள் தனியாகப் பயன்படுவதில்லை

    அமிலங்களும் ஆல்கலிகளும்

    பொருந்தாத உணவுகள்

    சமநிலை உணவு

    மனித உடம்பும் கலோரி மீட்டரும்

    புரதப் பொருள்களும் கொழுப்புப் பொருள்களும்

    எதை, எப்போது, எவ்வளவு சாப்பிட வேண்டும்?

    யார் யாருக்கு எந்த எந்த உணவு தேவைப்படுகிறது?

    டானிக்குகளால் ஏற்படும் தீமைகள்

    உணவுகளிலிருந்து நாம் சக்தியைப் பெறுவதில்லை!

    உண்ணாவிரதம்

    குஷ்ட நோய்க்கும் புற்று நோய்க்கும்கூட நாம் பயப்பட வேண்டியதில்லை!

    உண்ணாவிரதம் நம்முடைய பிராணசக்திக்கு ஆக்கம் அளிக்கிறது

    மிருகங்களிடமிருந்து நாம் பெற வேண்டிய பாடம்

    உண்ணாவிரதம் வேறு பட்டினி கிடப்பது வேறு

    நோய்கள் பின்வாங்கிச் செல்லும் முறைமை

    உண்ணாவிரதம் இருக்க வேண்டிய முறை

    உண்ணாவிரதத்தை முடிப்பது எப்படி?

    உண்ணாவிரதம் மூளைக் கோளாறுகளையும் குணப்படுத்தும்

    தோலைப் பற்றிய நோய்கள்

    கட்டிகள் (Abscesses)

    ஆக்னி (Acne)

    வழுக்கைத் தலை

    பிளவைகள், சிலந்திகள்

    பொடுகு

    டெர்மட்டிஸ் (Dermatitis)

    எக்ஸிமா (Eczema)

    எரிஸிப்பிலஸ் (Erysipelas)

    எரீத்தமா (Erythema)

    இக்தியோஸிஸ் (Icthyosis)

    இம்பெட்டிகோ (Impetigo)

    எச்சில் தழும்பு (Ring worm)

    ஸைக்கோஸிஸ் (Sycosis)

    ஷிங்கிள்ஸ் (Shingles)

    பிறநோய்கள்

    மூட்டுக்களைப் பற்றிய நோய்கள்

    கணைக்கால் நோய் (Ankle - Joint Disease)

    தோள், முழங்கை, மணிக்கட்டு நோய்கள்

    இடுப்பு மூட்டுநோய் (Hip - Joint Disease)

    முழங்கால் நோய் (Knee - Joint Disease)

    முதுகெலும்பு நோய் (Pott's Disease)

    கீல்வாயு (Rheumatism)

    முடக்குவாதம் (Rheumatoid Arthritis)

    பிற நோய்கள்

    இரத்தத்தைப் பற்றிய நோய்கள்

    சோகை (Anaemia)

    பக்கவாதம் (Paralytic Stroke)

    மிகுதியான இரத்த அழுத்தம்

    (High Blood - Pressure)

    குறைவான இரத்த அழுத்தம்

    (Low Blood Pressure)

    குறைவான இரத்த ஓட்டம்

    (Poor Circulation)

    நரம்புகளைப் பற்றிய நோய்கள்

    காக்கை வலிப்பு (Epilepsy)

    தூக்கம் இன்மை (Insomnia)

    ஒற்றைத் தலைவலி (Migraine)

    நரம்புத் தளர்ச்சி (Nervous Debility)

    சுரப்பிகளைப் பற்றிய நோய்கள்

    பிளேக்

    மண்ணீரல் வீக்கம் (Enlargement of the Spleen)

    கண் நோய்கள்

    கண்ணில் நீர் வடிதல் (Epiphora)

    கன்ஜங்க்டிவிடிஸ் (Conjunctivitis)

    ட்ரக்கோமா (Trachoma)

    மாலைக் கண் (Night Blindness)

    காடராக்ட் (Cataract)

    கண் வலி

    கண் ஒளி பெருக

    காது - மூக்கு - வாய் தொண்டை நோய்கள்

    மூக்கிலிருந்து இரத்தம் கொட்டுதல் (Epistaxise)

    வாய் வேக்காடு

    எயிறில் இரத்தம் வடிதல் (Bleeding Gums)

    வாய் நாற்றம்

    பயோரியா (Pyorrhoea)

    பல் வலி

    தொண்டை வலி

    காதுவலி, காதுமந்தம்

    நெஞ்சு நோய்கள்

    இருதய நோய்

    ஆஸ்மா

    ஜலதோஷம், இருமல், மார்ச்சளி

    க்ஷயரோகம் (Consumption)

    நிமோனியா

    வயிற்று நோய்கள்

    அஜீரணம்

    வயிற்றுக் கடுப்பு

    வயிற்றுப் போக்கு

    வயிற்றுப் புண்

    வாந்தி

    இரத்த வாந்தி

    வயிற்று வலி

    காலரா

    விக்கல்

    மலச்சிக்கல்

    கல்லீரல் - பித்தப்பை சிறுநீரக நோய்கள்

    மஞ்சள் காமாலை

    மகோதரம் (Ascities)

    கல்லடைப்பு (Stone in the Bladder)

    நீர் அடைப்பு

    நீர்க்கடுப்பு

    நீரிழிவு (Diabetes)

    புற்றுநோய் (Cancer)

    பித்த மயக்கம்

    மூர்ச்சை

    ஆண்குறி - பெண்குறி நோய்கள்

    வெள்ளை - வெட்டை

    சூதக நோய்கள் (Menstrual Disorders)

    ஓதம் (Hydrocele)

    காய்ச்சல்கள்

    தலைவலி

    குஷ்டம்

    வெண்குஷ்டம்

    கண்டமாலை

    பல்வலி

    அம்மை (Small Pox)

    மூலநோய்

    விஷக்கடிகள்

    அனுபந்தம் :

    முன்னுரை

    ‘உலகெலாம் வாழ்க’ என்பது நல்லோர்களின் உள்ளங்களிலே எழுகின்ற ஓர் உயரிய பிரார்த்தனை.

    இப்படிப் பிரார்த்தனை செய்யப்படுகின்ற இதே நேரத்தில், உலகின் மக்கள் தொகை பெருகிக்கொண்டு வருகிற வேகத்தைப் பார்க்கும்போது, இன்னும் சில ஆண்டுகளில் சமாளிக்க முடியாத ஜனநெருக்கடி ஏற்பட்டு விடுமோ, என்று அஞ்சுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

    இந்தியா, சீனா போன்ற பல்வேறு நாடுகள் பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன!

    ‘ஓர் அணுகுண்டு யுத்தம் வந்தால், அந்தப் பிரச்சனைகள் எல்லாம் ஒரே நாளில் தீர்க்கப்பட்டுவிடுமே!’

    என்றுகூட, சில சீனத்தலைவர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்களாம்!

    பைத்தியக்காரர்கள்! அணுகுண்டு ஒன்றினால்தான் மக்களைக் கொல்ல முடியுமா?

    இந்தக் காரியத்தை வைத்தியர்களால் செய்ய முடியாதா?

    வைத்தியர்களை மட்டும், அவர்களுடைய காரியங்களில் போய்க் குறுக்கிடாமல், இன்னும் ஓர் ஐம்பது ஆண்டுகளுக்கு நாம் சும்மாவிட்டு வைத்தால் போதும்! உலகின் மக்கள் தொகைப் பிரச்சனையை அவர்கள் உறுதியாகத் தீர்த்துக்கட்டி விடுவார்கள்.

    இப்போதே அவர்கள் அந்தக் குறிக்கோளை நோக்கித்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாம்தான் அதைப் புரிந்துகொள்ளவில்லை!

    நாம் மட்டும் அல்ல; அந்த வைத்தியர்களே தங்களுடைய மருந்துகளும் சிகிச்சை முறைகளும் மக்களுக்கு எவ்வளவு பெரிய தீங்குகளை விளைவிக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளவில்லை!

    உண்மையில், வைத்தியர்கள் மிகவும் நல்லவர்கள். அவர்கள் தங்களிடம் வரும் நோயாளியின் துன்பங்களைப் போக்குவதற்கு உளமார ஆசைப்படுகிறார்கள். அதற்காக எவ்வளவோ புத்தகங்களைப் படிக்கிறார்கள். ஆராய்ச்சி செய்கிறார்கள். இரவு - பகல் என்று பாராமல் அரும்பாடு படுகிறார்கள்.

    ஆனால் பலன் என்ன?

    அவர்களுடைய சிகிச்சை முறைகளால் நோய்கள் வளர்ச்சி அடைகின்றனவே தவிர, குறைவுபடுவது இல்லை!

    ஒரு சாதாரணத் தலைவலியே எடுத்துக்கொள்வோம்.

    டாக்டரிடம் போனால், அவர் மாத்திரையைத் தருகிறார். அந்த மாத்திரையைச் சாப்பிட்டால், தலைவலி மறைந்து விடுகிறது.

    அது மறைந்து விடுகிறதே தவிரக் குணமாகி விடுவது இல்லை என்பது, நம்மில் மிகப் பலருக்குத் தெரியாது!

    மாத்திரையைச் சாப்பிட்டதும், தலைவலி குணமாகி விட்டதாக நாம் எண்ணிக்கொள்கிறோம். இதைப் போன்ற தவறான எண்ணம் இன்னொன்று கிடையாது!

    மாத்திரை சாப்பிடுவதற்கு முன்பு இருந்த தலைவலி, மாத்திரை சாப்பிட்டவுடன் எங்கே போயிற்று?

    அது வேறு எங்கும் போகவில்லை. அது நம் உடலுக்குள்ளேதான் இருக்கிறது! ஆனால் அந்தத் தலைவலியைப்பற்றிய உணர்வு நமக்கு இருப்பதில்லை. அந்த உணர்வை நாம் இழந்துவிடுமாறு செய்துவிட்டது நாம் சாப்பிட்ட மாத்திரை!

    இதற்கே இன்னொரு எடுத்துக்காட்டு. நமக்குத் தேள் கொட்டிவிட்டால், உடனே அலறித் துடித்துக்கொண்டு டாக்டரிடம் ஓடுகிறோம். டாக்டர் ஓர் ஊசியைப் போடுகிறார். அடுத்த கணத்திலேயே வேதனை மறைந்துவிடுகிறது; நாம் மகிழ்ச்சி அடைகிறோம்.

    அப்படியானால், அந்தத் தேளின் விஷம் என்ன ஆயிற்று? டாக்டர் போட்ட ஊசி மருந்து அதன் விஷத் தன்மையை மாற்றிவிட்டதா? அல்லது அந்த விஷம் உடம்பினின்றும் வெளியேற்றப்பட்டு விட்டதா?

    இரண்டும் இல்லை. தேளின் விஷம் அப்படியே உடம்பில்தான் இருக்கிறது. ஆனால் அந்த விஷத்தினால் ஏற்பட்ட வேதனையின் உணர்வு நமக்கு இருப்பதில்லை. அந்த உணர்வை நாம் இழந்து விடுமாறு செய்துவிடுகிறது டாக்டரின் ஊசி மருந்து!

    எந்த டாக்டரும் நோயைக் குணப்படுத்துவதில்லை!

    தலைவலியும் தேள் விஷமும் மட்டும்தான் இவ்வாறு சிகிச்சை செய்யப்படுகின்றன என் எண்ணிவிடாதீர்கள். எல்லா நோய்களுக்குமே டாக்டர்கள் இத்தகைய சிகிச்சைகளைத்தாம் அளித்து வருகிறார்கள்!

    அதாவது, எந்த நோயையுமே டாக்டர்கள் குணப்படுத்துவது இல்லை. அதற்கு மாறாக, நோய்களினால் நாம் அடையக்கூடிய வேதனைகளையே அவர்கள் மாற்றுகிறார்கள். வேதனைகள் மறைந்தவுடன், நோய்களே நீங்கிவிட்டதாக நாம் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் நோய் நீங்குவதில்லை. நம் உடம்பினுள்ளேயே, நம் உணர்வுக்கு அப்பாற்பட்ட ஆழத்திலே போய்ப் பதுங்கிக்கொள்கின்றது. இவ்வாறு, கள்வனை வைத்துக் கதவை அடைக்கும் பாணியில்தான், டாக்டர்களின் சிகிச்சை முறைகள் பல இன்று அமைந்து இருக்கின்றன!

    ‘கதவு அடைக்கப்பட்ட கள்வன்’ உள்ளே சும்மா இருப்பானா? தன் கையில் கிடைத்ததையெல்லாம் சாவகாசமாகச் சுருட்டிக்கொண்டு, வீட்டுக்காரன் அயர்ந்து இருக்கும் சமயம் பார்த்து, மறுபடியும் வெளியே கிளம்புவான் அல்லவா?

    அதேபோல்தான், டாக்டர்களின் சிகிச்சையால் ஒளித்து வைக்கப்பட்ட நோய்களும், சிறிது காலம் கழித்து மறுபடியும் வெளிப்படுகின்றன!

    தேள் விஷத்தையே எடுத்துக்கொள்வோம்.

    டாக்டர் ஊசி போட்டவுடன் நம்முடைய வேதனை மறைந்து போய்விடுகிறது. விஷம் கடுமையானதாய் இருக்குமானால், ஒரு மணி நேரத்துக்குப் பின்னால் அந்த வேதனை மறுபடியும் சீறிக்கொண்டு எழும்புகிறது. நோயாளி மறுபடியும் துடியாய்த் துடிக்கிறான். இதிலிருந்தே, டாக்டருடைய ஊசி மருந்து விஷத்தைக் குணப்படுத்துவதில்லை என்பது விளங்குகிறது அல்லவா!

    டாக்டருடைய சிகிச்சையால் நம் உணர்விலிருந்து மறைத்து வைக்கப்பட்ட விஷவேதனை ஒரு மணி நேரத்தில் திரும்பி வருவது போல,

    டாக்டருடைய சிகிச்சையால் நம் உணர்விலிருந்து மறைத்து வைக்கப்படுகிற மற்ற நோயின் தன்மைக்குத் தக்கவாறு, ஒரு வாரத்தில் திரும்பிவரலாம்; ஒரு மாதத்தில் திரும்பி வரலாம்; ஓர் ஆண்டில் திரும்பி வரலாம்; அல்லது பல ஆண்டுகளுக்கு அப்பால் திரும்பி வரலாம்.

    எப்படியும் அது திரும்பி வந்தே தீரும்! வராமல் இருக்காது.

    அப்படி வரும்போது, அது தன் பழைய வடிவத்திலேயும் வரலாம்; முற்றிலும் புதிய ஒரு வடிவத்திலேயும் வரலாம்!

    தேள் விஷமும் தலைவலியும் சில மணி நேரங்களுக்குள்ளேயே திரும்பி வருவதால், அவை தங்களின் பழைய வடிவத்திலேயே காட்சி அளிக்கின்றன. ஆனால், நீடித்த காலத்துக்கு அப்பால் திரும்பி வரும் நோய்கள், பெரும்பாலும் தங்களின் பழைய வடிவத்தில் வருவது இல்லை.

    காரணம், தாங்கள் உள்ளே ஒளிந்துகொண்டிருக்கும் காலத்தில் அவை சும்மா செயல் அற்று இருப்பதில்லை.

    அதற்கு மாறாக, வீட்டினுள் அடைத்து வைக்கப்பட்ட திருடன். அங்கு உள்ள நகை நட்டுக்கள், வெள்ளிப் பாத்திரங்களையெல்லாம் கவர்ந்துகொள்வது போல,

    நமக்கு உள்ளே அடக்கி வைக்கப்பட்ட நோய்களும் நாளடைவிலே நம் உடம்பில் உள்ள ஜீவசக்திகளைப் பெரும் அளவில் கவர்ந்து விழுங்கி விடுகின்றன!

    அவ்வாறு விழுங்கிவிட்ட நிலையில், அவை முற்றிலும் ஒரு புதிய வடிவத்தில் வெளிப்படுகின்றன!

    டாக்டர்களும் அதை ஒரு புதிய நோயாகக் கருதுகின்றனர்!

    அதாவது, தங்களுடைய தவறான சிகிச்சையின் காரணமாக உடம்பினுள்ளே போய் ஒளிந்துகொண்ட அந்தப் பழைய நோய்தான், நீண்ட காலத்துக்குப் பிறகு வேறு ஒரு புதிய நோயாக வெளிப்பட்டிருக்கிறது என்னும் உண்மையை அவர்கள் உணருவதே இல்லை!

    இந்த அடிப்படை உண்மையைக்கூட அறியாதவர் கள்தாம் மருத்துவ நிபுணர்களாகவும், மருத்துவக் கலையின் மாமேதைகளாகவும் மக்களால் இன்று மதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    தவறு அந்த டாக்டர்கள் மீது இல்லை; அவர்களிடம் போய்ச் சிகிச்சை பெற்றுக்கொள்கிற நம்மீதுதான் இருக்கிறது.

    அல்லோபதி டாக்டர்களும் போலி வைத்தியர்களே!

    அல்லோபதி (Allopathy) என்னும் மேனாட்டு மருத்துவ முறையில் தேர்ச்சிபெற்ற டாக்டர்கள், மற்றைய சித்த வைத்தியர்கள் போன்றோரையெல்லாம் க்வாக்ஸ் (Quaks) என்று இழிவாகக் குறிப்பிடுவார்கள்!

    க்வாக்ஸ் என்றால் போலி வைத்தியர்கள் என்று பொருள். அதாவது மருத்துவக் கலையின் சாரமான உண்மைகளை அறியாமலே, அவற்றை அறிந்தவர் போல் நடிப்பவர்கள்.

    நாட்டு வைத்தியர்களாகிய சித்த வைத்தியர்கள், ஆயுர்வேத பண்டிதர்கள், யுனானி டாக்டர்கள், ஹோமியோபதி டாக்டர்கள் இவர்கள் எல்லோரும் போலி வைத்தியர்கள் என்றால்,

    இவர்களைப் போலி வைத்தியர்கள் என்று சொல்லுகிற அல்லோபதி டாக்டர்கள், இவர்களைக் காட்டிலும் பெரிய போலி வைத்தியர்கள் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்!

    ஏனென்றால், இந்த அல்லோபதி டாக்டர்களுக்கு நோயின் உண்மையான காரணங்கள் என்ன என்பதே தெரியாது. தெரிந்தாலும், அந்தக் காரணங்களை அகற்றுவதற்கு அவர்கள் முயற்சி செய்வதே கிடையாது. நோயின் வெளிப்படையான அடையாளங்களை அகற்றுவது ஒன்றேதான் அவர்களுடைய சிகிச்சை முறைகளின் குறிக்கோள்.

    ஆபரேஷன் (Operation) எனப்படும் அறுவை சிகிச்சையாகட்டும்; ஊசி போடுதல், மாத்திரை விழுங்குதல், மருந்து அருந்துதல் போன்ற நச்சுச் சிகிச்சைகளாகட்டும்; அம்மை குத்துதல் போன்ற தடுப்புச் சிகிச்சைகளாகட்டும்;

    எல்லாமே,

    ஒன்று, தோன்றிவிட்ட (நோயின்) அடையாளங்களை அகற்றி விடுவது!

    அல்லது, தோன்றக்கூடும் என்று அஞ்சப்படுகிற (நோயின்) அடையாளங்களைத் தோன்றாமலே அடக்கிவிடுவது!

    இந்த இரண்டில் ஒரு காரியத்தைத்தான் செய்கின்றன; அல்லோபதி என்கிற சொல்லுக்கே ஆங்கில அகராதியில் என்ன பொருள் கூறப்பட்டிருக்கிறது தெரியுமா?

    ஒரு மாறுபட்ட இயல்பைத் தூண்டிவிடுவதன் மூலம் நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையே (Treatment of disease by inducinga different tendancy) அல்லோபதி என்கிறது, பாக்கெட் ஆக்ஸ்ஃ போர்டு அகராதி (The Pocket Oxford Dictionary).

    ‘மாறுபட்ட இயல்பைத் தூண்டிவிடுவது’ என்றால் என்ன?

    ஒவ்வொரு நோய்க்கும் ஓர் இயல்பு உண்டு. எடுத்துக்காட்டாக, உடம்பில் மிகுதியான சூட்டைத் தோற்றுவிப்பது காய்ச்சல் நோயின் இயல்பு. அந்தச் சூட்டுக்கு மாறுபட்ட இயல்பான குளிர்ச்சியை உடம்பில் தோற்றுவிப்பதே அல்லோபதி சிகிச்சை முறை. வியர்வையைத் தூண்டி விடுவதன் மூலம், குளிர்ச்சி தோற்றுவிக்கப்படுகிறது. உடம்பில் குளிர்ச்சி தோன்றியதும், காய்ச்சல் குணம் ஆகிவிட்டது என்று டாக்டர் சொல்லுகிறார். நாமும் அதை உண்மை என்றே நம்பிக்கொள்கிறோம்.

    காய்ச்சலுக்கு டாக்டர் தரும் ‘மிக்ஸ்சரிலே’ எத்தனையோ மருந்து கலந்திருக்கலாம். ஒரே காய்ச்சலுக்கு வெவ்வேறு டாக்டர்கள் வெவ்வேறு வகையான மருந்துகளைக் கலந்து ‘மிக்ஸ்சர்’ தயாரித்துக் கொடுக்கலாம். ஆனால் எந்த டாக்டரால் தயாரிக்கப்பட்டதாய் இருந்தாலும், காய்ச்சல் மிக்ஸ்சருக்கு மருத்துவ பரிபாஷையில் ஒரே ஒரு பெயர்தான் உண்டு. அதுவே டையஃபரெட்டிக் (Diaphoretic) மிக்ஸ்சர் என்பது.

    ‘டையஃபரெட்டிக்’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு வியர்வையைத் தூண்டுவது என்று பொருள்.

    வியர்வையைத் தூண்டி விடுவதால் மட்டும் நோய் குணமாக்கப்படுவது இல்லை என்னும் மாபெரும் பெருண்மையை டாக்டர்கள் கருத்தில்கொள்வதே கிடையாது. அதைக் கருத்தில்கொண்டால் அப்புறம் தங்களுடைய அல்லோபதி முறைகளின் மூலம் சிகிச்சை அளிப்பதற்கு அவர்களுடைய மனச்சான்று இடம் கொடுக்காது.

    அதைத் தவிர வேறு சிகிச்சைகளும் அவர்களுக்குத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும், அவற்றை அவர்கள் கையாள முடியாது. மீறிக் கையாளத் துணிந்தால், மெடிக்கல் கவுன்சில் அவர்களைச் சும்மாவிடாது. அவர்களைச் ‘சாதி நீக்கம்’ செய்துவிடும்.

    அதாவது அது தன்னுடைய பதிவுப் புத்தகத்திலிருந்து (Register of Doctors), அந்த டாக்டரின் பெயரை அகற்றிவிடும். அப்புறம் அவர்களால் தொழில் நடத்தவே முடியாது!

    தொழில் நடத்த முடியாவிட்டால், பல ஆண்டுகளையும் பல ஆயிரம் ரூபாய்களையும் செலவிட்டு அவர்கள் வருந்திக் கற்ற மருத்துவக் கல்வி பயன் அற்றது ஆகிவிடுமே! இதற்குப் பயந்துதான், பல டாக்டர்களுக்கு உண்மை தெரிந்திருந்தும் அவர்கள், அதை வெளியே சொல்லத் துணிவது இல்லை.

    மிகப் பல டாக்டர்களுக்கு உண்மையே தெரியாது. வியர்வையின் காரணமாக, உடம்பின் சூடு இறங்கியதும், காய்ச்சல் மெய்யாகவே குணமாகிவிட்டது என்று அவர்கள் உளமார நம்புகிறார்கள். டாக்டர்களே அப்படி நம்பும்போது நோயாளியைக் குறை கூறுவதற்கு என்ன இருக்கிறது?

    உண்மையில் காய்ச்சல் என்பது ஒரு நோயே அல்ல. அது ஒரு நோயின் அடையாளம். மருந்து கொடுத்து வியர்வையைத் தோற்றுவிப்பதன் மூலம், அந்த அடையாளம்தான் நீக்கப்படுகிறதே தவிர, நோய் நீக்கப்படுவது இல்லை!

    மருத்துவ உலகப் பெரியோர்கள் மன்னிப்பார்களாக!

    ஒருவர் எவ்வளவு பெரிய டாக்டராய் இருந்தாலும், அவர் உலகு அனைத்தும் ஒளி வீசுகிற புகழ் படைத்தவராய் இருந்தாலும் சரியே, அல்லோபதி சிகிச்சைகளின் மூலம் அவரால் எந்த ஒரு நோயையுமே குணப்படுத்த முடியாது!

    டாக்டர்களிடத்தே நான் கொண்டுள்ள ஏதோ ஒரு வெறுப்பின் காரணமாக இவ்வாறு கூறுகிறேன் என்று எண்ணிவிடாதீர்கள்.

    டாக்டர்கள் மீது என் உள்ளத்திலே அணுவத்தனையும் வெறுப்புக் கிடையாது. டாக்டர்களில் பலர் எனது உயிருக்கு உயிரான நண்பர்களாய் இன்றும் இருக்கிறார்கள். டாக்டர்களின் சமுதாயமானது, மக்களின் துன்ப நீக்கத்திற்காகவே, மக்களின் இன்ப வாழ்வுக்காகவே தாங்கள் வாழ்வதாக எண்ணி அயராது உழைத்து வருகிற ஓர் உயரிய சமுதாயம். அவர்களுடைய நல்லெண்ணத்தைப் பற்றி எவரும் எள்ளத்தனையும் குறைகூற முடியாது. ஆனால் வெறும் நல்லெண்ணத்தால் மட்டுமே நோய்களைக் குணப்படுத்தி விடமுடியுமா? அந்த நல்லெண்ணத்தைப் பழுதின்றி நிறைவேற்றி வைக்கக்கூடிய சிகிச்சை முறைகள் அவர்களுடைய அல்லோபதியிலே இல்லையே! எனவே, அல்லோபதி என்கிற அந்த மருத்துவ முறையில்தான் குற்றம் இருக்கிறதே தவிர, அவர்களது மனப்பான்மையில் கிடையாது.

    மக்களின் நலனை முன்னிட்டு, அந்த மருத்துவ முறையில் உள்ள குறைபாடுகளை நான் தயக்கம் இன்றி எடுத்துக்கூற வேண்டியவனாய் இருக்கிறேன். அல்லோபதி மட்டும் அல்ல, சித்த வைத்தியம், ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற பிற மருத்துவ முறைகளுமே பெருங்குறைபாடு உடையனவாய்த்தாம் இருக்கின்றன. அவற்றை நான் இந்த நூலில் பல்வேறு இடங்களில் விளக்கிக் காட்டப்போகிறேன். அப்படி விளக்கிக் காட்டும்போது, அந்த மருத்துவ முறைகளைக் கையாளுகிற வைத்தியர்களையும், டாக்டர்களையும், பண்டிதர்களையும், கவிராஜர்களையும் நான் தாக்கி எழுதுவதாய்த் தவறாகக் கருதிவிடக்கூடாது. அத்தகைய தவறான கருத்துக்கு என்னையும் அறியாமல் என் எழுத்துக்கள் எங்கேயாவது இடம் கொடுத்து நிற்குமானால், அதுபற்றி மருத்துவ உலகப் பெரியோர்கள் என்னை மன்னித்து அருளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இப்போது, நாம் விட்ட இடத்துக்கு வருவோம்.

    ஒருவர் எவ்வளவு பெரிய டாக்டராய் இருந்தாலும், அல்லோபதி முறைகளின் மூலம் அவரால் நோய்களைக் குணப்படுத்த முடியாது என்று கூறினேன் அல்லவா!

    இந்தக் கூற்று, அல்லோபதி முறைகளுக்கு மட்டும் அல்ல; சித்த வைத்தியம், ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற மற்ற முறைகளுக்கும் பெரும் அளவில் பொருந்தும்.

    ஏனென்றால், இந்த வைத்திய முறைகளுக்கும் அல்லோபதிக்கும் அடிப்படையான வேறுபாடுகள் என்று சொல்லக்கூடியவை அவ்வளவாகக் கிடையாது.

    அல்லோபதி விஞ்ஞானிகள் கையாளுகிற மைக்ராஸ்கோப் (Microscope), எக்ஸ்ரே காமிரா போன்ற கருவிகளையும், அவர்களுடைய மருந்துத் தயாரிப்பு முறைகளையும் மறந்துவிட்டுப் பார்த்தால், ஆயுர்வேத முறை, யுனானிமுறை இவற்றின் மறுபதிப்பே அல்லோபதி முறை என்பது தெளிவாகத் தெரியவரும். அல்லோபதிக்கும் ஹோமியோபதிக்கும் மேல்பரப்பில்தான் வேறுபாடே தவிர, அடித்தளத்தில் வேறுபாடு கிடையாது. ஆயுர்வேதத்துக்கும் சித்த வைத்தியத்துக்கும் மேல் பரப்பில்கூட அவ்வளவாக வேறுபாடு கிடையாது. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வைத்திய முறைகள்தாம்.

    சுருக்கமாகச் சொன்னால், இந்த வைத்திய முறைகள் அத்தனையுமே நோயாளியின் உடம்பினுள்ளே நஞ்சைச் செலுத்தி, அவனுடைய நோயைக் குணப்படுத்த முயலுபவை!

    ஆகையால் அவை இயற்கையோடு இயைந்த வைத்திய முறைகள் அல்ல. இயற்கையின் நியதிகளுக்கு முற்றிலும் முரண்பாடான வைத்திய முறைகள்!

    எனினும் இந்த முறைகள்தாம் உலகில் நெடுங்காலமாக வழக்கிலிருந்து வருகின்றன. அதற்குக் காரணம். மக்களுடைய அறியாமையைத் தவிர, வேறு எதுவுமே இல்லை!

    டாக்டர் கொடுப்பது மருந்து அல்ல, நஞ்சு!

    கிறிஸ்து பிறப்பதற்கு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே, ஆரோக்கிய விஞ்ஞானத்தில் (The Science of Hygiene) இந்தியர்கள் மிகவும் சிறப்பான அறிவைப் பெற்றிருந்தார்கள் என்பதற்கு, மொகஞ்சதாரோவிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட புதை பொருள்களே சான்று கூறுகின்றன. அவ்வளவு மேலான ஆரோக்கிய அறிவு படைத்த இந்நாட்டு மக்கள், பிற்காலத்தில் எத்தனையோ விதங்களில் தங்கள் அறிவுத்திறனை இழந்து இழிநிலையை அடைந்தார்கள் அல்லவா? நச்சு மருத்துவ முறைகளில் அவர்கள் நம்பிக்கை வைத்ததும் கூட, அத்தகைய இழிநிலைகளில் ஒன்று என்றே சொல்ல வேண்டும்.

    பாதரசம் (Mercury) ஒரு விஷப்பொருள் என்பது விளையாட்டுப் பிள்ளைக்குக்கூடத் தெரியும். அதேபோல் எட்டிக்காய் ஒரு நச்சுப்பொருள் என்பதை, மாடு மேய்க்கும் சிறுவர்களும் அறிவார்கள். அந்தப் பாதரசத்தையும் எட்டிக் காயையும், இன்னும் அவற்றைக் காட்டிலும் கொடிய நஞ்சுகள் பலவற்றையும் மருந்துகளாக்கி, வைத்தியர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்குக் கொடுக்கிறார்கள்! அந்த வைத்தியர்களை நம்பி நோயாளிகளும் அவற்றை வாங்கிச் சாப்பிடுகிறார்கள்! இந்தக் கொடுமையையும் மடமையையும் என்னவென்று கூறுவது!

    நஞ்சை மருந்தாகக் கொடுப்பதில் பேர்பெற்றவர்கள் சித்த வைத்தியர்கள். அவர்களைக் காட்டிலும் ஒருபடி மேலே போனவர்கள் அல்லோபதி டாக்டர்கள். முழுக்க முழுக்க நஞ்சுகளையே கொடுப்பவர்கள் ஹோமியோபதி டாக்டர்கள். ஆனால் அவர்கள் கொடுக்கும் நஞ்சு, அளவில் மிகக் குறைவானதாக இருக்கும். ஆயுர்வேத டாக்டர்களும் யுனானி டாக்டர்களும் சிறிது குறைவான அளவிலோ கூடுதலான அளவிலோ நஞ்சுகளைக் கலந்து அல்லது நல்ல பொருள்களை நஞ்சு ஆக்கிக் கொடுக்கிறார்கள்.

    ஆக, எல்லார் கொடுப்பதும் நஞ்சுதான்! நஞ்சு அல்லாத நல்ல பொருள்களை மட்டுமே மருந்தாகக் கொடுப்பவர்கள் எவருமே இலர்!

    இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் சித்த வைத்தியர்கள் ஹோமியோபதி வைத்தியனுக்கு என்ன தெரியும் என்பார்கள்! ஆயுர்வேத வைத்தியர்கள் அல்லோபதி டாக்டருக்கு என்ன தெரியும் என்பார்கள்! அல்லோபதி டாக்டர்கள் மற்ற எல்லாரையும் போலி என்பார்கள்! இப்படி, ஒருவரை ஒருவர் குறை கூறுவதில்தான் இவர்கள் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர, தங்களுடைய முறைகளில் உள்ள குறைபாடுகளை அகற்றிக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதாய் இல்லை.

    ஏன் இல்லை என்றால்,

    தங்களுடைய முறைகளில் உள்ள குறைபாடுகளை அகற்றிக்கொள்ள முற்படுவார்களாயின், அவர்கள் அந்த முறைகளையே அழித்து ஒழித்தவர்கள் ஆகிவிடுவார்கள்.

    காரணம் அந்த முறைகள் அத்தனையுமே பிழைபாடு என்னும் அடிக்கல்லின் மீது எழுப்பப்பட்ட மாளிகைகளாய் விளங்குகின்றன.

    அவற்றுள், மற்ற எல்லாவற்றைக் காட்டிலும் அல்லோபதி மருத்துவத்துக்கு உலகு எங்கிலும் ஒரு தனி மதிப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அரசாங்கங்களும் அதைத்தான் ஆதரித்துப் போற்றுகின்றன. மற்ற மருத்துவ முறைகளுக்கு மக்களோ அரசாங்கமோ அவ்வளவாக மதிப்பு அளிப்பது இல்லை.

    சித்த, ஆயுர்வேத வைத்தியர்களின் வாதம்

    கடந்த நூறு ஆண்டுகளில், விஞ்ஞானம் (Science) பெரும் வளர்ச்சிகளை அடைந்திருக்கிறது. இரசாயனம், பௌதிகம், உயிரியல், தாவர இயல் இன்னும் இவை போன்ற பல்வேறு துறைகளில் புதிய புதிய உண்மைகளும் உத்திகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த உண்மைகளையும் உத்திகளையும் அவ்வப்போது பயன்படுத்திக்கொண்டு, அல்லோபதி மருத்துவம் தொடர்ச்சியான வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது. ஆனால், சித்த வைத்தியமும், ஆயுர்வேத வைத்தியமும், யுனானி வைத்தியமும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எந்த இடத்தில் நின்றனவோ அந்த இடத்திலேயே இன்னமும் நின்றுகொண்டு இருக்கின்றன, ஓர் அடிகூட முன்னேறி நகராமல்!

    இதற்குச் சித்த வைத்தியர்களும் ஆயுர்வேத வைத்தியர்களும் என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா?

    மேல் நாடுகளில் விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறியிருக்கலாம். ஆனால் மருத்துவக் கலையைப் பொறுத்தமட்டில், மேனாட்டவரிடமிருந்து நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது எதுவுமே இல்லை. ஏனென்றால் எங்கள் மருத்துவ முறைகளை உருவாக்கிய சித்தர்களும், முனிவர்களும், இன்றைய மேல்நாட்டு விஞ்ஞானிகளைக் காட்டிலும் மிகமிகப் பெரியவர்கள். அந்த விஞ்ஞானிகள் இப்போதுதான் கண்டுபிடித்து வருகிற பல உண்மைகளை, எங்களுடைய முன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே கண்டு அறிந்து எழுதி வைத்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லாத பலவற்றையும் இக்காலத்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள் என்பது மெய்தான். ஆனால், இவர்களுடைய இந்த நூதனமான கண்டுபிடிப்புகளையெல்லாம் உண்மையானவை என்று ஏற்றுக்கொள்ள முடியாது!

    ஏனென்றால், நேற்று உண்மை என்று சொல்லப்பட்ட பல விஞ்ஞானக் கோட்பாடுகள், அதே விஞ்ஞானிகளால் இன்று பொய்மை என்று தள்ளப்படுகின்றன. அதேபோல் இன்று உண்மையென்று கொள்ளப்படுகிற கோட்பாடுகள், எதிர்கால விஞ்ஞானிகளால் புறக்கணிக்கப்படமாட்டா என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது?

    எங்களுடைய வைத்திய முறைகளில் இத்தகைய உறுதியற்ற தன்மை கிடையாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு அப்பாலும்கூட, எங்களுடைய மருத்துவக் கோட்பாடுகள் மாறாமல் நிலைத்து நிற்கும் காரணம், அவை சாதாரண மனிதர்களால் வரையறுக்கப்பட்டவையல்ல. டெலஸ்கோப்பின் உதவியில்லாமலே நூறாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் சஞ்சாரம் செய்யும் கோள்களின் கதிகளைக் கணித்து அறிந்து, வான சாஸ்திரங்களை வகுத்துக் கொடுத்த மாமேதைகளான மகரிஷிகளால் உருவாக்கப்பட்டவை எங்கள் வைத்திய முறைகள். இவற்றிற்கு நிகராக உலகில் வேறு எதுவுமே கிடையாது!

    என்பது சித்த, ஆயுர்வேத வைத்தியர்களின் வாதம்!

    இந்த வாதத்தை அப்படியே முற்றிலும் உண்மை என்று ஏற்றுக்கொள்ளவும் இயலாது; முற்றிலும் பொய்மை என்று ஒதுக்கித் தள்ளவும் முடியாது.

    ஏனென்றால், மருத்துவ விஞ்ஞானம் (Science of Medicine) நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது என்று சொல்லும்போதே, அந்த விஞ்ஞானத்தில் உள்ள ஓர் அடிப்படை பலவீனத்தை நாம் ஒப்புக்கொண்டவர்கள் ஆகிறோம்.

    மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையான பலவீனம்

    வளர்ச்சி என்பது என்ன?

    வளர்ச்சி, தேய்வு இவ்விரண்டுமே ஒரு பொருளின் மாறுதலைக் குறிக்கும் சொற்கள். வளர்ச்சி என்பது முன்னோக்கிச் செல்லும் மாறுதல். தேய்வு என்பது பின்னோக்கி செல்லும் மாறுதல்.

    எனவே விஞ்ஞான வளர்ச்சி என்றால் விஞ்ஞானக் கோட்பாடுகளில் ஏற்பட்டு இருக்கிற மாறுதல்கள் என்பதுதான் அதற்கு பொருள்.

    அந்தக் கோட்பாடுகள் ஏன் மாற வேண்டும்?

    பொதுவாக ஒரு கொள்கையை நாம் எப்போது மாற்றிக்கொள்கிறோம்?

    அந்தக் கொள்கை முற்றிலும் சரியானது என்னும் நம்பிக்கை நமக்கு இருக்கும் வரையில், அதை நாம் மாற்றிக்கொள்ளவே மாட்டோம். நம் கொள்கை தவறு என்பதை உணரும்போதுதான் அதை நாம் மாற்றிக்கொள்கிறோம்.

    விஞ்ஞானக் கோட்பாடுகளும் அப்படித்தான் மாறுதல் அடைகின்றன. ஐன்ஸ்டீன் வந்து ஒரு புதிய கோட்பாட்டைக் கண்டுபிடித்தார். உடனே அதற்கு முன்னால் நியூட்டனால் கண்டுபிடிக்கப்பட்டு நெடுங்காலமாய் வழக்கிலிருந்து வந்த பழைய கோட்பாடுகள் தவறு என்று உணர்ந்து தள்ளப்பட்டுவிட்டன. நியூட்டன் கோட்பாடு தள்ளப்பட்டதுபோல, நர்லிகர் போன்றோரது ஆராய்ச்சிகளால் எதிர்காலத்தில் ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளும் தள்ளப்பட்டு விடுமோ என்று விஞ்ஞானிகளே ஐயம் கொள்கின்றனர்! இவ்வாறு ஒரு கோட்பாடு கொள்ளப்பட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1