Nairsan
By Ranimaindhan
()
About this ebook
எனது நினைவுகளை நான் எழுத வேண்டும் என்று என் நண்பர்கள் பல காலமாக என்னைக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். ஜப்பானில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களில் மூத்தவன் என்ற முறையிலும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமானதொரு காலகட்டத்தில் கிழக்கு, தென்கிழக்கு ஆசியாவில் அந்தப் போர் சம்பந்தமாக என்ன நடந்தது என்பதை அந்நிகழ்ச்சிகளோடு தொடர்பு கொண்டவன், நேரில் பார்த்தவன் என்ற முறையிலும் அவற்றை எழுத்தில் வடித்து வைப்பது பின்னால் வருகிறவர்கள் உண்மை நிலையை உணர்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர்கள் சொன்னார்கள். இந்த நூலை நான் எழுதியதே ஒரு விபத்தினால்தான். அதுவும் உண்மையான விபத்து. இதுவரை பல புத்தகங்களில் வாசகர்கள் படித்திருக்கும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளாத வகையில் விலகிப்போய் இந்தப் புத்தகம் பல சம்பவங்களை விசாரிக்கிறது. எனது கணிப்புகளைப் படித்துவிட்டுப் பலர் புருவங்களை உயர்த்தக் கூடும். பாரபட்சமான அரசியல் விளம்பரங்களையும், பிரசாரங்களையும் நம்பிப் பழக்கப்பட்டவர்கள் அவர்கள்.
Read more from Ranimaindhan
Oru Neethiyarasarin Nedum Payanam Rating: 0 out of 5 stars0 ratingsR.M.V. - Oru Thondar Rating: 0 out of 5 stars0 ratingsMalaichamy IAS (Retd) Rating: 0 out of 5 stars0 ratingsJustice Jegadeesan Rating: 0 out of 5 stars0 ratingsElumboodu Oru Vazhkai Rating: 0 out of 5 stars0 ratingsOodaga Theni Sridhar Rating: 0 out of 5 stars0 ratingsKalaimamani V.C. Guhanathan Rating: 0 out of 5 stars0 ratingsAV.M. Thantha SP.M. Rating: 0 out of 5 stars0 ratingsThadaigal Pala Thaandi... Rating: 0 out of 5 stars0 ratingsM.P.Nirmal – Oru Thani Mara Thoppu Rating: 0 out of 5 stars0 ratingsIBM – Vizhuntha Company Ezhuntha Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsAdayaril Innoru Aalamaram Rating: 0 out of 5 stars0 ratingsAppachi Rating: 0 out of 5 stars0 ratingsSulthana Rating: 0 out of 5 stars0 ratingsMusthafa Rating: 5 out of 5 stars5/5Tata Steel Rating: 0 out of 5 stars0 ratingsPayanangal – Paadangal Rating: 0 out of 5 stars0 ratingsNirvaga Aalumai N. Ramdas Rating: 0 out of 5 stars0 ratingsN. Krishnasamy Rating: 0 out of 5 stars0 ratingsRasaram - 60 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nairsan
Related ebooks
Jawaharlal Nehru Manavargalukku Sonnathu Rating: 0 out of 5 stars0 ratingsUlagam Muzhuthum Paambu Vazhipaadu! Rating: 0 out of 5 stars0 ratingsSarvadhesa Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsManimudiyum Udaivaalum Rating: 0 out of 5 stars0 ratingsTajmahal Hindu Kovila? Yesu Kristhu India Vandhara? Rating: 0 out of 5 stars0 ratings120 Vayathu Vaazhntha Athisaya Bhuddha Thuravi Xuyun! Rating: 0 out of 5 stars0 ratings‘Jaihind’ Shenbagaramanin Veera Varalaaru Rating: 0 out of 5 stars0 ratingsSumeriavil Tamil Yazh! Japanil Saama Vedha Isai!! Rating: 0 out of 5 stars0 ratings100 Thalaivargal 100 Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsTamil, Samskirutha Kalvettugal Tharum Suvaiyana Seithigal Rating: 0 out of 5 stars0 ratingsArumugasamiyin Adugal Rating: 0 out of 5 stars0 ratingsVidyasaagaram Rating: 0 out of 5 stars0 ratingsIlakkiyam Moolam India Inaippu-Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsMulvelikku Pinnal Rating: 0 out of 5 stars0 ratingsPuththaga Poonga Rating: 0 out of 5 stars0 ratingsMenaka Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsVasantha Mallika Rating: 0 out of 5 stars0 ratingsEngirunthu Vatuguthuvo... Rating: 0 out of 5 stars0 ratingsIlangai Theevin 108 Pugazh Pettra Hindhu Aalayangal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsThooran Endra Kalanjiyam Rating: 0 out of 5 stars0 ratingsIlakkiyam Moolam India Inaippu - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsPatchai Kaali Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2020 Rating: 0 out of 5 stars0 ratingsMaamannan Rajarajan Rating: 0 out of 5 stars0 ratingsRambaiyum Naachiyaaryum Rating: 0 out of 5 stars0 ratingsSumeriar - Indiyar Thodarpu Rating: 0 out of 5 stars0 ratingsDiwan Lodabadasingh Bahadhoor Rating: 0 out of 5 stars0 ratingsMannin Perumai Rating: 0 out of 5 stars0 ratingsTheppo 76 Rating: 0 out of 5 stars0 ratingsSwami Vivekanandar – 150: En Pangalippu Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nairsan
0 ratings0 reviews
Book preview
Nairsan - Ranimaindhan
https://www.pustaka.co.in
நாயர்ஸான்
(ஏ.எம். நாயர் அவர்களின் சுயசரிதை)
Nairsan
(A.M. Nairsan Avargalin Suyasarithai)
Author:
ராணிமைந்தன்
Ranimaindhan
For more books
https://www.pustaka.co.in/home/author/ranimaindhan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. நான் பிறந்த மண்ணைப் பற்றி...
2. இளமைப் பருவம்
3. திருப்பு முனை
4. சமூக சீர்திருத்த இயக்கம்
5. குழப்பங்களுக்கு மத்தியில்
6. ஜப்பான் போனேன்
7. கியோட்டோ பல்கலைக் கழகத்தில்
8. ராஷ்பிகாரி போஸுடன் சந்திப்பு
9. சக்கரவர்த்தியின் முடிசூட்டு விழா
10. கியோட்டோவில் எனது மாணவப் பருவம்
11. 1932 - 33 புதிய திருப்பு முனை
12. ‘மஞ்சுகூ’வில்...
13. மங்கோலியாவிலும் ஸின்கியாங்கிலும்...
14. டோக்கியோவில்...
15. மறுபடியும் மங்கோலியாவுக்கு...
16. மீண்டும் மஞ்சுகூ...
17. என் திருமணம்
18. கடைசியாக மஞ்சுகூவில்...
19. இரண்டாம் உலகப் போரும் தென் கிழக்கு ஆசியாவில் இந்திய விடுதலை லீக்கும்
20. இந்திய விடுதலை லீக்கின் டோக்கியோ மாநாடு
21. பாங்காக் மாநாடு
22. இந்திய தேசிய ராணுவம்
23. பாங்காக்கிலிருந்து சிங்கப்பூருக்கு லீக்கின் மாற்றம்
24. சுபாஷ் சகாப்தமும் இரண்டாவது ஐ.என்.ஏவும்
25. இம்பால் தாக்குதல்
26. சுபாஷ் சகாப்தத்தின் முடிவு
27. ஜப்பான் சரணடைந்தது
28. சுபாஷ் சந்திரபோஸின் மறைவு
29. இந்தியாவும் போருக்குப் பிந்தைய ஜப்பானும்
30. இந்திய - ஜப்பான் சமாதான ஒப்பந்தம்
அறிமுகம் கிம்ப்பி ஷிபா
இன்று ஜப்பானில் வாழும் இந்தியர்களில் மிகவும் பிரபலமான, மிகவும் நேசிக்கப்படுகின்ற நண்பர் ஏ.எம். நாயர். நாயர்ஸான் என்று மரியாதையுடன் அழைக்கப்படுபவர். தம் வாழ்க்கையில் ஐம்பத்து நான்கு வருடங்களை ஜப்பானிலேயே கழித்துவிட்ட நாயருக்கு இப்போது வயது எழுபத்தாறு.
உண்மையிலேயே விரும்பத்தக்க ஒரு மனிதர் அவர். மற்றவர்களோடு பேசும் போது அவர் காட்டும் புன்முறுவல் மேகம் மூடிய வானத்தில் சூரிய ஒளி இழையோடுவது போல இருக்கும்.
இன்று, ஜப்பானின் இளைய தலைமுறையினருக்கு தமது வியாபார நிறுவனத்தை கொண்டே நாயர்ஸான் அறிமுகமாகி இருக்கிறார். நாயர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற அந்த நிறுவனம் பல்வேறு வகையான இந்தியப் பொருட்களை ஜப்பானில் விநியோகிக்கிறது. அற்புதமான இந்திய உணவு விடுதி ஒன்றை நாயர்ஸான் நடத்தி வருகிறார். ஆனால் என்னைப்போல வயதான மனிதர்களுக்கு அவரைப் பற்றி மிக நிறையவே தெரியும்.
அவர் மிகச் சிறந்த தேசபக்தர். தமது ஐம்பத்தைந்து கால ஜப்பான் வாழ்வில் பாதியை தூரக்கிழக்கு மற்றும், தென்கிழக்கு ஆசியாவில் இந்திய விடுதலை இயக்கத்தோடு இணைத்துக் கொண்டவர்.
தமது வாழ்க்கை அனுபவங்களைத் தொகுத்து அவர் எழுதிய நானூற்று அறுபது பக்கக் கையெழுத்துப் பிரதி என் அறிமுகத்துக்காக என்னிடம் வந்து சேர்ந்த போது நான் ஆச்சரியப்பட்டேன். இந்நூல் ஒரு குறிப்பிடத்தக்க வாழ்க்கையுடன் கலந்துவிட்ட முக்கியமான நிகழ்ச்சிகளின் அருமையான தொகுப்பு.
நாயர்ஸான் ஓர் உயர்ந்த குடும்பத்தை சேர்ந்தவர். ஸப்பாரோ இம்பீரியல் பல்கலைக் கழகத்தில் பயின்ற அவரது சகோதரரின் அறிவுரையின் பேரில் நாயர் ஜப்பானுக்கு 1928ல் வந்தார். கியாட்டோ பல்கலைக் கழகத்தில் பொறியியல் படித்தார். மிகச் சரளமாக உரையாடவும் விரிவுரை செய்யவும் தம்மை ஜப்பானில் புலமை மிக்கவராக ஆக்கிக் கொண்டார். இரண்டாம் உலகப் போரின் போதும் அதற்குப் பின்னரும் இந்தியாவைப் பற்றி ஜப்பான் வானொலியில் ஜப்பானிய மொழியில் ஒலிபரப்புகள் செய்தார். அந்த வானொலியில் அவருக்குத் தனி மதிப்பு இருந்து வந்தது.
ஜப்பானுக்கு வந்ததும் நாயர்ஸான் ராஷ்பிகாரி போஸைச் சந்தித்தார். இந்தியாவின் சிறந்த தேசபக்தரும் நாயரைவிட பதின்மூன்று வருடங்கள் மூத்தவருமான போஸுக்கும் நாயர்ஸானுக்குமிடையே உடனடியாக நட்பு மலர்ந்தது.
எனக்கு ராஷ்பிகாரி போஸையும் நன்கு தெரியும். அவரும் நாயர்ஸானும் இரட்டைப் பிறவிகள் போலவே காணப்படுவார்கள். அவ்வளவு ஒற்றுமை இருவருக்கும் உண்டு. அப்படிப்பட்ட ஒரு கருணை மிக்க மனிதர் எப்படி ஒரு புரட்சிக்காராக இருக்க முடியும் என்று நான் ஆச்சரியப்பட்டது உண்டு. அதே போலத்தான் நாயரின் இந்த சுயசரிதையும். துணிச்சல் மிக்க ஒரு விடுதலை வீரரின் உன்னதமான ஒரு கால கட்டத்தை இந்த நூல் விவரிக்கிறது.
வலுவானதொரு புரட்சி விடுதலை இயக்கத்தை போஸ் இந்தியாவில் நடத்தி வந்தார். பிரிட்டிஷ் அதிகாரத்துக்குச் சங்கடமான நிலையைத் தோற்றுவித்தார். அவர் தலைக்கு விலை வைக்கப்பட்டது. எப்படியோ இந்தியாவிலிருந்து தப்பி 1515-ல் ராஷ்பிகாரி போஸ் ஜப்பான் வந்து சேர்ந்தார். அவரைக் கண்டுபிடித்து, கைது செய்து மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு ஜப்பானின் வெளியுறவு அலுவலகத்தை ஆங்கில ஜப்பானின் உறவு அடிப்படையில் இங்கிலாந்து கேட்டுக் கொண்டது.
ஜப்பான் அரசு எவ்வளவு முயன்றும் ராஷ்பிகாரியைக் கைது செய்ய முடியவில்லை. காரணம் போஸ் தம்மை செல்வாக்கு மிகுந்த, ராணுவத்தோடு மிகநெருங்கிய தொடர்பு கொண்ட மிட்ஸீரு டொயாமா என்கிற தேச பக்தரின் கண்காணிப்பில் வைத்துக் கொண்டதுதான்.
ஷிஞ்சுகூவில் நகாமுரா பேக்கரி என்ற வளமான ரொட்டிக் கம்பெனியின் சொந்தக்காரரான ஐஸோ ஸோமா என்ற செல்வந்தரின் கட்டிடத்தில் போஸ் மறைத்து வைக்கப்பட்டார். ஸோமா, டொயாமாவுடன் எப்போதும் இணைந்திருப்பவர். இந்திய உணவு வகைகளைச் செய்யும் முறைபற்றி ஸோமாவுக்கு ராஷ்பிகாரி போஸ் கற்றுத் தந்தார். அது பெருமளவுக்கு வெற்றி பெற்றது.
ஸோமா தம்பதியரின் மகளையே போஸ் மணந்து கொண்டார். அதேபோல நாயர்ஸானும் ஒரு உயர் குடும்ப ஜப்பானியப் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இதில் ஒரு சுவையான வித்தியாசம் உண்டு. தம் கடைசி மூச்சுவரை இந்திய விடுதலைக்கு போஸ் பாடுபட்டாலும், உயிர் வாழ்வதற்காக அவர் ஜப்பான் குடியுரிமையைப் பெற்றிருந்தார். ஏ. எம். நாயரின் மனைவியோ இந்தியக் குடிமகள் ஆவதற்காக இந்தியா விடுதலையடையும்வரை காத்திருந்தார். இதற்கு அவரது பெற்றோர்களும் அனுமதி தந்தார்கள். நாயர் தம்பதிக்கு இரண்டு மகன்கள். இருவரும் தந்தையின் தேச அந்தஸ்தையே பெற்றுக் கொண்டனர். மூத்த மகன் மீன்வள விஞ்ஞானத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்று இப்போது ஆசிய அபிவிருத்தி வங்கியில் உயர் பதவியில் இருக்கிறார். இளைய மகன் தந்தையின் வியாபார நிறுவனத்தில் ஓர் இயக்குநராக இருக்கிறார்.
அந்த காலத்தில் ஆங்கில ஆட்சியாளர்களின் வலை வீச்சுக்கு உள்ளானவராக நாயர் இருந்தார். கியோட்டோவில் படிப்பு முடிந்ததும் இந்தியா திரும்பக்கூட முடியாத நிலை. இந்திய மண்ணில் காலடி வைத்த மறுவினாடி அவர் கையில் பூட்டுவதற்கு விலங்கு தயாராக வைக்கப்பட்டிருந்தது. எனவே அவர் ஜப்பானிலேயே தங்கித் தாய்நாட்டின் விடுதலைக்கான பணிகளில் ஈடுபட்டார்.
அது தொடர்பாக அவருக்கு ஜப்பானின் உயர்மட்ட அரசியல்வாதிகளுடனும், பிரமுகர்களுடனும் நெருங்கிய பரிச்சயம் ஏற்பட்டது. பிளாக் டிராகன் ஸொஸைட்டியைச் சேர்ந்த மிட்ஸுரு டொயாமா, குஸு சென்ஸாய், டாக்டர் ஷீமி ஒகாவா மற்றும் பலர் நாயருக்கு நண்பர்களானார்கள். ராணுவத்துடனும் அவர் நெருக்கமானார்.
மஞ்சூரியாவை வெற்றி கொண்ட பிறகு 1931-ல் ஜப்பான் மஞ்சுகூ நாட்டை உருவாக்கியது. கியோட்டோவில் நாயருடன் படித்த குன்ட்டா நகாவ் என்பவர் அப்போது மஞ்சுகூ அரசாங்க முக்கிய அதிகாரியாக இருந்தார். அவரது அழைப்பின் பேரில் அரசாங்க விருந்தாளியாக நாயர் மஞ்சுகூவுக்கு விஜயம் செய்தார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அங்கேயும் இந்திய விடுதலை இயக்க அமைப்பு ஒன்றைத் தொடங்கி ஆசிய மாநாடு ஒன்றையும் நாயர்ஸான் நடத்தினார். அங்கே பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததால் அவரது நெருங்கிய நண்பர்கள் அவரை மஞ்சுகூ நாயர்
என்று வேடிக்கையாகக் கூப்பிடக்கூட ஆரம்பித்தார்கள்.
மங்கோலியாவிலும், சீனாவிலும் நாயர் விரிவாகப் பயணம் செய்தார். அங்கேயும் ஆங்கிலேய எதிர்ப்பு வேலைதான். அந்தப் பயணத்தின் போது கடுமையான மலைப்பிரதேசங்களையும், மிக வறண்ட பாலைவனங்களையும் நாயர் கடக்க வேண்டி வந்தது. அவரது துணிச்சலையும், சாதனைகளையும் கண்ட உள்ளூர் அரசர்களும், தலைவர்களும் மிகவும் வியந்து நாயர்ஸானைப் போற்றியதுண்டு.
மங்கோலியாவிலும், ஸின்கியாங்கிலும் அவர் புரிந்துள்ள சாகசங்களைப் பற்றி அறிந்துகொள்ளும்போது ஆச்சரியமாக இருக்கிறது. ஸின்கியாங்கில் அவருக்கு கொள்ளைக்காரன் ஒருவனால் சங்கடம் ஏற்பட்டது. மாறுவேடங்களைக் கூட நாயர் போட்டிருக்கிறார். வாழுகின்ற புத்தராகவும், முஸ்லிம் மத குருவாகவும் அவர் உருமாறியிருக்கிறார்.
இரண்டாம் உலகப் பேர் ஆரம்பமான பிறகு ராஷ்பிகாரி போஸீம், நாயர்ஸானும் ஜப்பானிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் இந்திய விடுதலை லீக்கை உருவாக்கி வளர்த்தனர். லீக்குக்கும் ஜப்பானிய அரசுக்கும் இணைப்பாக இருந்தவர் நாயர்தான். ஜப்பான் கைப்பற்றிய பகுதிகளிலோ, அல்லது ஜப்பானின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பகுதிகளிலோ இந்திய விடுதலை இயக்கத்தைத் தீவிரப்படுத்த வேண்டுமென்றால் அதற்கு டோக்யோவிலிருந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதேச கமாண்டுகளின் ஒத்துழைப்பு அவசியம் தேவை என்பதை போஸீம். நாயரும் நன்குணர்ந்திருந்தனர்.
ஜப்பானின் உதவி தேவைதான் என்றாலும் கூட, இந்திய விடுதலை இயக்கம் இந்திய மண்ணில் வேரூன்றி, இந்தியா வாழ் மக்களாலேயே பராமரிக்கப்பட்டு பலப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாயர் மிகவும் தெளிவான கருத்து கொண்டிருந்தார்.
ஏதோ அவர் ஜப்பானின் நன்மைக்காக ஜப்பானுடன் தொடர்பு வைத்துக் கொண்டார் என்று சில பேர் சொன்னதை நாயர் நினைவு கூர்கிறார். ... இந்திய விடுதலைப் போருக்கு உதவ வேண்டும் என்கிற எனது அடிப்படை லட்சியத்திலிருந்து நான் சிறிதும் விலகிப் போனதில்லை. இன்னும் சொல்லப் போனால் என்னுடன் சேர்ந்து இந்திய விடுதலைக்குப் போராடப் பல உயர்மட்ட ஜப்பானியர்கள் முன்வந்த ஒரு நிலையை என்னால் ஏற்படுத்த முடிந்தது என்பதுதான் உண்மை...
என்று தம் புத்தகத்தில் அவர் குறிப்பிடுகிறார்.
1943 ஆரம்பத்தில் ராஷ்பிகாரி போஸின் உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டபோது, சுபாஷ் சந்திரபோஸை தென்கிழக்கு ஆசியாவுக்கு வரவழைக்க வேண்டும் என்று தாம் ஏற்கனவே தெரிவித்த யோசனையைச் செயல்படுத்துவதில் நாயர் ஈடுபட்டார். 1941ல் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவிலிருந்து தப்பியோடி பெர்லினில் போய்த் தங்கியிருந்தார். ராஷ்பிகாரிக்குப் பின்னர் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தகுதியானவர் என்று சுபாஷ் சந்திரபோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜெர்மனியிலிருந்து சுமத்ராவுக்கு சுபாஷ் சந்திரபோஸ் வந்து சேர்ந்த விதமே துணிச்சலானது. கொஞ்ச தூரம் ஒரு படகிலும், மீதியை ஒரு ஜப்பானிய நீர் மூழ்கிக் கப்பலிலும் அவர் பயணம் செய்தது ஜெர்மனி, ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் கப்பற்படைகளுக்கிடையே இருந்த திறமையான இணைப்புக்கு ஓர் உதாரணம். சுமத்ராவிலிருந்து டோக்கியோவுக்குப் பறந்து வந்து, ஜெனரல் டோஜோவைச் சந்தித்து பின்னர் ராஷ்பிகாரியுடன் சிங்கப்பூர் போனார் சுபாஷ். தன் தலைமைப் பதவியை ராஷ்பிகாரி, சுபாஷ் சந்திரபோஸுக்கு ஒப்படைத்த அந்த விழாவைப் பற்றி இந்தப் புத்தகத்தில் நாயர் விவரித்துள்ள பாங்கு மனதை நெகிழ வைக்கிறது.
ஆயுத பலத்தின் மூலம் இந்தியாவை விடுவிப்பது சுபாஷின் குறிக்கோளாக இருந்தது. ஐ.என்.ஏ. உதவியுடன் ஜப்பானிய ராணுவத்தின் மூலம் பர்மா எல்லையைத் தாண்டி இந்தியா மீது படையெடுத்துப் போக ஒப்புக்கொள்ளும்படி அவர் ஜெனரல் டோஜோவைக் கேட்டுக் கொண்டார். ஜப்பான் ராணுவம் ஏற்கனவே பல இடங்களில் பல்வேறு சங்கடங்களுக்குள்ளாகி இருந்த நேரம். மேலும் இம்பால் தாக்குதலில் அது மிக மோசமான தோல்வியை அடைந்தது.
மீண்டும் இந்தியா மீது படையெடுக்க சுபாஷ் முயன்றார். அதற்காக ஐ.என்.ஏவுக்கு மேலும் ஆயுத உதவியை நாடினார். ஆனால் ஜப்பான் அப்போது எங்கும் தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தது. தென்கிழக்கு ஆசிய நேசப்படைகளில் ஜப்பானின் பர்மாப் பகுதி ராணுவம் சிதறடிக்கப்பட்டது. இறுதியில் நிபந்தனையின்றி ஜப்பான் சரணடைய நேரிட்டது. இந்திய விடுதலை லீக்கும் ஐ.என்.ஏவும் உடைந்து போயின.
இந்த நிகழ்ச்சிகளை மிகவும் சோகத்தோடு நாயர்ஸான் இந்நூலில் விவரிக்கிறார். ஜப்பான் தோல்விக்கு முன் இருந்த நிலையையும், அது சரணடைந்த விதத்தையும் தமக்கே உரிய பாணியில் தெரிவிக்கிறார்.
தென் கிழக்கு ஆசியாவிலிருந்து ரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள்ளான ஒரு பகுதிக்குத் தப்பிப் போகும்போது வழியில் தைப்பேயில் விமானம் நொறுங்கிப் போய் சுபாஷ் மரணம் அடைந்தார் என்று பொதுவாக நிலவி வரும் கருத்திலிருந்து நாயர் மாறுபடுகிறார். பலர் அபிப்ராயப்படுவது மாதிரி சுபாஷ் விமான விபத்தில்தான் கொல்லப்பட்டார் என்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை. இச்சம்பவச் சூழ்நிலை குறித்து தமது ஆழ்ந்த சந்தேகங்களை நாயர்ஸான் வெளிப்படுத்துகிறார். உண்மை இன்னும் வெளிப்படவில்லையென்றும், வெளிவரும் என்ற நம்பிக்கையும் இல்லை எனவும் அவர் கருதுகிறார். எனவே இந்த விஷயத்தில் இன்னும் நேரம் செலவிடுவது வீண் என்பது நாயரின் முடிவு.
சுபாஷ் பற்றிய இந்த வேதனை மிக்க கருத்து வேறுபாடு முடிந்து போகட்டும். நடந்து போனவை நடந்து போனவையாகவே இருக்கட்டும்
என்று அவர் எழுதுகிறார்.
ஒவ்வொரு வருடத்திலும் அங்கே நாயர்ஸான் தம் தாய் நாட்டுக்குச் சென்று சில காலம் அங்கே தங்கிவிட்டு வருகிறார். தன் சொந்த மாநிலமான கேரளாவையும் அதன் பசுமையையும், எழிலையும் நாயர் இப்புத்தகத்தில் அழகுற வர்ணிக்கிறார்.
அதேசமயம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் வெறுத்துப்போய் இனி எது வந்தாலும் சரியே என்ற எண்ணத்தில் கேரள மக்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்ததையும், பின் இரண்டு வருடங்களுக்குள் கம்யூனிஸ கருத்துக்களுடன் உடன்பட முடியாமல் ஆட்சி கவிழ்க்கப்பட்டதையும், அதிலிருந்து தனியாக எந்தக் கட்சியாலும் பெறும்பான்மை பலத்துடன் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்கப்படாமல் இருப்பதையும் நாயர் மிகத்தெளிவாக இந்த நூலில் சொல்லியிருக்கிறார்.
கேரளாவின் பொருளாதாரச் சூழ்நிலையையும், மற்ற சில அம்சங்களையும் விவரிக்கும்போது அதில் நாயரின் நகைச்சுவை வெளிப்படுகிறது. ‘மனமிருந்தால் மார்க்கமுண்டு’ என்ற பழமொழியிலும், கேரளாவை ஒரு சொர்க்க பூமியாக மாற்ற முடியும் என்பதிலும் நாயர்ஸானுக்கு நம்பிக்கை இருக்கிறது.
ஜப்பானிலும் மற்ற நாடுகளிலும் தமது அனுபவங்களை வைத்துத் தம் சொந்த மாநிலத்தை அபிவிருத்தி செய்யப் புதிய யோசனைகளையும் தெரிவிக்கிறார். அவரது அணுகுமுறை ஆக்கபூர்வமானது.
பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே நெருங்கிய உறவு ஏற்படும் வாய்ப்புகள் குறித்து இந்நூல் ஆசிரியரின் கண்ணோட்டம் குறிப்பிடத்தக்கது. இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவிக்க மிகப் பொருத்தமானவர் நாயர்ஸான்தான். இந்திய - ஜப்பான் சமாதான ஒப்பந்தத்துக்கான பேச்சு வார்த்தை நடைபெற்றபோது நாயர் இந்தியத் தூதருக்கு ஆலோசகராக இருந்தார். ஒப்பந்தத்திற்குப் பின்னும், நல்லுறவை வளர்க்கும் பல்வேறு அமைப்புகளில் நாயர்ஸான் தொடர்பு கொண்டிருந்தார்.
இரு நாடுகளுக்கிடையே நிலவிவரும் உறவு பற்றி ஒரு நெருங்கிய பார்வை இப்போது அவசியம் என்று அவர் தெரிவிக்கும் கருத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்துவார்கள் என்று நம்புவோம். அரை நூற்றாண்டு காலமாக இருநாடுகளின் நட்பு குறித்து இடைவிடாமல் சிந்தித்துச் செயலாற்றிய ஒரு அனுபவஸ்தரின் கருத்து அது என்பதை மறந்துவிடக் கூடாது.
இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போதும் அதற்கு முன்னும் நடைபெற்ற பல முக்கிய (வேதனையான) சம்பவங்களை நாயர்ஸான் மிக ஆழமாக இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார். பூஜ்யத்திலிருந்து தொடங்கி – இன்று மிகப் பலமானதொரு சாம்ராஜ்யமாக ஜப்பான் வளர்ந்துள்ள விதத்தையும் அனுபவபூர்வமாய் விளக்கியிருக்கிறார். கேள்விப்பட்டதை எழுதாமல் சம்பவங்களின்போது உடனிருந்து பார்த்தவர் என்ற முறையில் இவரது எழுத்துக்களுக்கு ஓர் அதிகாரபூர்வத் தன்மை உண்டு.
இந்திய விடுதலையை விரைவாக்க தென்கிழக்கு ஆசியாவில் ஒரு துணிச்சல்மிக்க இந்தியக் குழுவினரின் முயற்சிகளை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது இப்புத்தகம். ஆனால் அவர்களின் நாடு அவர்களுக்குத் தரப்படவேண்டிய மரியாதையையும், அங்கீகாரத்தையும் அளிக்காதது வேதனைக்குரியது.
இது ஒரு விறுவிறுப்பான நூல். வாழ்க்கைச் சரிதமாக இருந்தாலும் உலக சரித்திரத்தோடு சம்பந்தப்பட்டது. அறிஞர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நூற்றாண்டில் நடைபெற்ற புதிய விஷயங்களைத் தெரியப்படுத்தும் பணியை இப்புத்தகம் செய்கிறது.
என்னைப் போலவே மற்றவர்களும் இந்நூலை விரும்பிப் படிப்பார்கள் என்று நம்புகிறேன். இந்திய - ஜப்பான் நல்லுறவுக்கு இப்புத்தகம் தனது இனியதொரு பங்கை நிறைவேற்றும். அதன் மூலம் எதற்காகத் தமது அசாதாரண வாழ்க்கையின் பெரும்பகுதியை நாயர்ஸான் செலவிட்டாரோ அந்த லட்சியம் நிறைவேறும்.
நாயர்ஸானுக்கும் அவரது வாசகர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்.
அஸாஹி ஈவினிங் நியூஸ்,
டோக்கியோ, டிசம்பர் 1, 1981
முன்னுரை
தற்கால சரித்திரத்தின் சில முக்கியமான இராணுவ அரசியல் விளைவுகளை இந்த நூற்றாண்டின் முற்பகுதி சந்திக்க நேர்ந்தது. ஒரு தலைமுறை காலத்துக்குள்ளாகவே இருபெரும் உலகப் போர்கள் நடந்து முடிந்தன. அதிலும் அணுகுண்டு எனப்படும் படு பயங்கரமான ஆயுதத்தை ஜப்பானுக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்திய யுத்தம் என்ற முறையில் இரண்டாவது உலகப் போருக்கு ஒரு முக்கியத்துவமும் உண்டு. 1945 வரை விஞ்ஞானம் கண்டுபிடித்த உயிர் நாச ஆயுதங்களில் அணுகுண்டுதான் மிக பயங்கரமானது. இரண்டு முக்கியமான அரசியல் புரட்சிகள் ஏற்பட்டன. அணு ஆயுதப் போட்டியில் யார் பலசாலி என்று நிரூபிக்க ஒன்றையொன்று அழித்துக்கொள்வது மட்டுமின்றி உலகம் முழுவதையுமே அழித்துவிடும் பயங்கரத்தை ஏற்படுத்தும் விதத்தில் இரண்டு இராணுவ வல்லரசுகள் உருவாயின.
இந்தக் காலகட்டத்தில்தான் ஆசியாவின் மிகப் பலம் பொருந்திய நாடாக ஜப்பான் மாறியது. மேற்கத்திய காலனி ஆதிக்க நாடுகள் ஏற்கனவே காட்டியிருந்த சில உதாரணங்களைப் பின்பற்றி ஜப்பானும் தனது ‘எல்லை விஸ்தரிப்புப் போக்கை’ வளர்த்துக் கொண்டது. 1941ல் ஏற்கனவே சியாங்-கே. ஷேக்கின் சீனாவுடன் போர் புரிந்து கொண்டிருந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் இவற்றின் கூட்டு பலத்துக்குச் சவால்விட வேண்டிய நிலைக்கு ஜப்பான் போயிற்று. ஆரம்ப காலத்தில் அதற்குச் சில அரிய வெற்றிகள் கிட்டின. ஆனால் பிறகு தன் முதல் தோல்வியையும், தனது மண் அந்நியர் ஆக்ரமிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலையையும் சந்திக்க வேண்டி வந்தது. அதன்பின் பத்தாண்டுகளுக்குக் குறைவான காலத்தில் தனக்கேற்பட்ட சோதனைகளிலிருந்து அற்புதமாக ஜப்பான் மீண்டு வந்தது. சாம்பலிலிருந்து அது உருவாக்கிக் காட்டிய சரித்திரம் இந்த உலகம் கண்டறியாத அதிசயம். ஆசியாவின் மிகப் பலம் பொருந்திய நாடு என்ற தனது முந்தைய நிலையை திரும்பவும் எட்டியது மட்டுமன்றி உலகின் பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக அது வளர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பூமியின் இணையற்ற காலனி அரசு என்று கருதப்பட்ட பிரிட்டனின் காலனி ஆதிக்கம் அழிய எப்போது ஆரம்பித்ததோ, அந்தக் காலகட்டத்தோடுதான் ஜப்பானின் வாழ்வும் தாழ்வும் இணைந்திருந்தது. இரண்டு நூற்றாண்டு காலமாக அடிமை விலங்கில் அகப்பட்டுக் கொண்டிருந்த இந்தியா 1947 ஆகஸ்ட்டில் அதை முறியடித்து வெளிவந்தது.
இந்தியாவை இழந்துவிட்டால் பிரிட்டன் ஒரு சிறுபான்மை சக்தியாகி விடும் என்று 1931ல் வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னது கிட்டத்தட்ட உண்மையாகிவிட்டது. இந்திய விடுதலையைத் தொடர்ந்து ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலுமிருந்த காலனிகள் ஒன்றன்பின் ஒன்றாக விடுதலை அடைய ஆரம்பித்தன.
இந்த நூற்றாண்டின் முதல் பத்து வருடங்களில் நான் பிறந்தேன். உலக முக்கியத்துவம் பெற்றுவிட்ட பல நிகழ்ச்சிகளை என் தலைமுறையைச் சேர்ந்த மற்றவர்களோடு நேரில் பார்த்தவனாகவோ அல்லது அந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றவனாகவோ நான் இருக்கிறேன். இவ்வனைத்திலும் இந்திய விடுதலையையே என் இதயத்துக்கு இதமான உன்னத நிகழ்ச்சியாக நான் உணர்கிறேன். இருநூறு ஆண்டுகளாக விடுதலைப் போராட்டம் நீண்டு வந்தது என்றாலும்கூட அப்போராட்டம் வலுவடைந்து செயல்பட்டது என் அரசியல் வாழ்க்கையின் சுறுசுறுப்பான நாட்களில்தான் என்பதாலேயே ஒரு வேளை எனது அந்த உணர்ச்சிக்குக் காரணமாயிருக்கலாம்.
கொடுமையும், கண்ணீரும் ஒரு புறமும், வீரமும், தியாகமும் இன்னொரு புறமுமாக அந்தப் போராட்டக் கதை விளங்கியது. பாரத மண்ணிலிருந்து கொண்டே பகைவனை எதிர்த்துப் போராடியவர்கள்தான் பெரும்பாலோர். இன்னும் பலர் வெளி மண்ணில் இருந்து கொண்டு வெள்ளையனை எதிர்த்து இந்திய விடுதலைக்காகப் போராடினார்கள். நான் இரண்டாவது பிரிவைச் சேர்ந்தவன்.
இந்நூலின் முதல் சில அத்தியாயங்கள் இந்தியாவில் என் ஆரம்ப நாட்கள் பற்றியும், ஜப்பான், சீனா, உட்புற மங்கோலியா, பசிபிக்கில் கிரேட்டர் ஈஸ்ட் ஏஷியா யுத்தம் என்று கூறப்பட்ட போரில் ஜப்பான் நுழைவதற்கு முன்பு மஞ்சுகூ என்று அழைக்கப்பட்ட நாடு ஆகியவற்றிலிருந்து இந்திய விடுதலைக்குப் போராடிய என் நடவடிக்கைகள் பற்றியும் தெரிவிக்கின்றன. பின்னால் வரும் அத்தியாயங்கள் இந்திய தேசபக்தரும், புரட்சிக்காரருமான ராஷ்பிகாரி போஸும், நானும் சேர்ந்து உருவாக்கிய இந்திய விடுதலை லீக்கோடு நான் சம்பந்தப்பட்டிருந்த நாட்களை முக்கியமாக விவரிக்கின்றன. 1943ம் ஆண்டு தொடக்கத்தில் ராஷ்பிகாரி போஸ் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த போது என் ஆதரவுடன் அப்போது ஜெர்மனியிலிருந்த சுபாஷ் சந்திர போஸை வரவழைத்து இந்திய விடுதலை லீக்கின் தலைமைப் பொறுப்புக்குத் தன் வாரிசாக நியமித்தார்.
நேசப் படைகளின் ஆக்ரமிப்புக்கு ஜப்பான் உட்பட்ட இறுதிக் காலங்களில் ஜப்பானிலிருந்த அப்போதைய இந்தியத் தூதரின் அதிகாரபூர்வமான அறிவுரையாளராகப் பணியாற்றும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் பற்றிய பேச்சு வார்த்தைகளையொட்டியே என் பணி அப்போது தீவிரமாக இருந்தது. 1952க்குப் பின் ஜப்பான் நாட்டின் சரித்திரம் மாறியது போலவே என் வாழ்க்கையிலும் திருப்பம் ஏற்பட்டது. நான் வியாபாரத்தில் ஈடுபட்டேன். ‘வீரனாக இருந்தவன் வியாபாரியாகி விட்டாயே’ என்று எனது நெருங்கிய நண்பர்கள் என்னைக் கேலி செய்வதுண்டு.
இப்புத்தகத்தில் எனது அந்த நாளைய அரசியல் நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் தந்துள்ளேன். இந்திய ஜப்பான் சமாதான ஒப்பந்தம் முடிந்த பிறகு இரண்டு நாடுகளுக்கிடையே நல்லுறவை வளர்க்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் பல அமைப்புகளோடு நான் தொடர்பு கொண்டிருந்தேன். இன்றும் இருக்கிறேன். அதுவும் டோக்கியோவில் இயங்கிவரும் இந்தியச் சங்கத்தின் தலைவன் என்ற முறையில் செவ்வனே அப்பணி தொடர்கிறது. எனது தற்போதைய வியாபார வாழ்க்கை பற்றி நான் இந்தப் புத்தகத்தில் ஏதும் குறிப்பிடவில்லை. அது அவசியம் என்று நான் கருதாததே காரணம்.
எனது நினைவுகளை நான் எழுத வேண்டும் என்று என் நண்பர்கள் பல காலமாக என்னைக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். ஜப்பானில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியர்களில் மூத்தவன் என்ற முறையிலும், இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கியமானதொரு காலகட்டத்தில் கிழக்கு, தென்கிழக்கு ஆசியாவில் அந்தப் போர் சம்பந்தமாக என்ன நடந்தது என்பதை அந்நிகழ்ச்சிகளோடு தொடர்பு கொண்டவன், நேரில் பார்த்தவன் என்ற முறையிலும் அவற்றை எழுத்தில் வடித்து வைப்பது பின்னால் வருகிறவர்கள் உண்மை நிலையை உணர்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்று அவர்கள் சொன்னார்கள். இந்த நூலை நான் எழுதியதே ஒரு விபத்தினால்தான். அதுவும் உண்மையான விபத்து.
1980-ல் திருவனந்தபுரத்தில் ஒரு நண்பரின் இல்லத்திற்குப் போயிருந்த போது பாலிஷ் செய்யப்பட்டிருந்த அந்த வீட்டு மொஸைக் தரையில் வழுக்கி விழுந்து விட்டேன். உடலின் பின்புறம் பலமான காயம் ஏற்பட்டதன் விளைவாக நான் டோக்கியோவில் பல வாரங்களுக்கு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறவேண்டி வந்தது. வலுக்கட்டாயமாக என் மீது திணிக்கப்பட்ட ஓய்வின் போது அந்தக் கால நினைவுகளை மனது அசைபோட ஆரம்பித்தது. அவற்றை அப்படியே ஒரு டேப்ரிகார்டரில் பதிவு செய்து கொண்டேன். இப்புத்தகத்துக்கு அவையே முக்கிய மூலப்பொருள்.
மருத்துவமனையிலிருந்து வெளிவந்ததும் மீண்டும் என் வழக்கமான தினசரி நடவடிக்கைகளில் ஈடுபட்டேன். ஒலிப்பதிவு செய்த நாடாக்களை அடுத்த ஒரு வருட காலத்துக்கு லாக்கரில் வைத்திருந்தேன். 1981 மத்தியில் நான் மீண்டும் விடுமுறைக்கு கேரளா வந்திருந்த போது அவற்றை வெளியில் எடுத்து எழுதி எடிட் செய்தேன். சில குறிப்புகளை சரித்திர தஸ்தாவேஜுகளோடு சரிபார்த்துக் கொண்டேன். என் எழுத்துக்களில் எந்தவிதமான தவறும் வந்துவிடக் கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தினேன். அவற்றின் விளைவே நான் இப்போது மக்கள் முன்பாகப் பணிவோடு சமர்ப்பித்திருக்கும் இந்தப் புத்தகம்.
இந்தியர்களையும் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்கள் ஜப்பானைப் பற்றியும் இரண்டாம் உலகப் போரைப் பற்றியும் நிறைய எழுதியிருக்கிறார்கள். இந்திய விடுதலை லீக், தென்கிழக்கு ஆசியாவில் ஐ. என்.ஏ., மற்றும் சுபாஷ்சந்திரபோஸைப் பற்றியும் இவர்கள் ஏராளமாய் எழுதியது உண்டு. ஆனால் இவர்கள் விவரித்திருக்கும் பெரும்பாலான விஷயங்களோடும் சம்பவங்களோடும் இவர்களுக்கு எந்தவிதமான சம்பந்தமும் இருந்ததில்லை. பல புத்தகங்களில் உண்மை திரிக்கப்பட்டுள்ளதற்கு அறியாமை காரணமாக இருக்கலாம். அல்லது வேண்டுமென்றே சிலர் எழுதியதாகவும் இருக்கலாம்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கிய காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை உண்மை மாறாமல் வெளியிட வேண்டும் என்பது இப்புத்தகத்தின் பல நோக்கங்களில் ஒன்று. இந்நூலில் சில இடங்களில் நான் என் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறேன். அப்படி வெளியிடும் போது நேர்மையுடன் என் நெஞ்சில் தோன்றியவற்றையே தெரிவித்திருக்கிறேன். நான் சொல்லியிருக்கும் அத்தனைக்கும் தனிப்பட்ட முறையில் நான் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். அந்தச் சம்பவங்களோடு நான் சம்பந்தப்பட்டிருக்கிறேன். சில நிகழ்ச்சிகளை அருகிலிருந்து கண்ணால் கண்டிருக்கிறேன். மாபெரும் தலைவரான ராஷ்பிகாரி அவர்களோடு இணைந்து இந்திய விடுதலை லீக்கை உருவாக்கிய பெருமையும், லீக்கிற்கும் ஜப்பானிய அரசாங்கத்துக்குமிடையே நெருங்கிய இணைப்புப் பாலமாக இயங்கியவன் என்ற தகுதியும் எனக்குண்டு. சுபாஷ் தலைமை ஏற்ற பின்னர் சூழ்நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் இறுதிவரை நான் களத்தில் இருந்திருக்கிறேன்.
இதுவரை பல புத்தகங்களில் வாசகர்கள் படித்திருக்கும் விஷயங்களை ஏற்றுக்கொள்ளாத வகையில் விலகிப்போய் இந்தப் புத்தகம் பல சம்பவங்களை விசாரிக்கிறது. எனது கணிப்புகளைப் படித்துவிட்டுப் பலர் புருவங்களை உயர்த்தக் கூடும். பாரபட்சமான அரசியல் விளம்பரங்களையும், பிரசாரங்களையும் நம்பிப் பழக்கப்பட்டவர்கள் அவர்கள்.
சுபாஷ் சந்திர போஸ் சந்தேகமில்லாமல் ஓர் உன்னத தலைவர்தான். அவர் உறுதிமிக்க விடுதலைப் போர் வீரர், தேசபக்தர்தான். ஆனாலும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு உயர்ந்த கௌரவமான இடத்தைப் பெற வேண்டியவர் ராஷ்பிகாரி போஸ். அதற்கு என்ன காரணம் என்பதை நான் இந்த நூலில் விவரித்திருக்கிறேன். படித்தவுடன் உணர்ச்சி அலைகளுக்கு உள்ளாகிவிடாமல் அமைதியாக ஆராய்ந்து பார்த்து ஒரு சரியான முடிவுக்கு வாசகர்கள் வரவேண்டும்.
இதுவரை உண்மை என்று கருதப்பட்டு வந்த மேலும் சில விவகாரங்களையும் நான் அம்பலப்படுத்தியிருக்கிறேன். இந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தியவர் கேப்டன் மோகன் சிங்தான் என்பது அத்தகைய விவகாரங்களில் ஒன்று. அவர் நிறைய சுய விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார். உண்மையைச் சொல்லப்போனால் மோகன் சிங் தனக்குத்தானே ‘ஜெனரல்’ பட்டத்தைக் சூட்டிக் கொண்டவர். ஜப்பான் ராணுவத்தைச் சேர்ந்த ஒரு மேஜரைத் தவிர வேறு யாரும் அவரை ஜெனரல் என்று அங்கீகரித்ததில்லை. ஓர் அமைப்பையே உடைத்து அலங்கோலமாக்கி, ராஷ்பிகாரியோடு வலுச்சண்டைக்குப் போய் அதன் மூலம் இந்தியப் போர்க் கைதிகளிடையே குழப்பத்தை உண்டாக்கியவர்
இன்னைாரு பொய்யும் உண்மை என்று உலாவந்து கொண்டிருக்கிறது. ஐ. என்.ஏவை மோகன் சிங் அழித்துவிட்ட பிறகு சுபாஷ் சந்திர போஸ்தான் அதை மீண்டும் உருவாக்கியவர் என்று இன்னும் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் அதைச் செய்தவர் ராஷ்பிகாரி போஸ்தான். அவர்தான் அதற்கு மறுபிறவி கொடுத்து திறமையாக வளர்த்து சுபாஷின் கைகளில் ஒப்படைத்தவர். அந்த ஐ.என்.ஏவை இந்தியாவுக்காக ஒரு போரில் ஈடுபடுத்தி அதன் மூலம் அழிவு தரக்கூடிய விளைவுக்குக் காரணமாய் இருந்தவர் சுபாஷ். சரித்திரத்தை மிக ஊன்றிப் படிக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு இது தெரியும்.
சுபாஷையும், இந்திய தேசிய ராணுவத்தையும் தூற்றுவது இப்புத்தகத்தின் நோக்கம் அல்ல. எந்தச் சம்பவமும் சரியான கண்ணோட்டத்தில் காணப்பட வேண்டும். உண்மையான உழைப்பாளிகளுக்கு உரிய இடம் சரித்திரத்தில் கொடுக்கப்பட்டே ஆக வேண்டும். இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் ராஷ்பிகாரி போஸும், அவரது சகாக்களும் மிக உயரிய இடத்தைப் பெற வேண்டியவர்கள். விடுதலை என்னும் கனி ஏதோ ஓரிரு தனி நபர்கள் அல்லது அமைப்புகளின் முயற்சியில் விளைந்ததல்ல. பல மேதைகளின் தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் உழைப்பிலும், பலவிதமான சூழ்நிலைகளின் ஒத்துழைப்போடும்தான் பாரதத் தாயின் அடிமை விலங்கு உடைக்கப்பட்டது.
ஜப்பான் ஆரம்பித்த கிரேட்டர் ஈஸ்ட் ஏஷியா யுத்தம் அத்தகையச் சூழ்நிலைகளில் ஒன்று. இதில் ஜப்பான் தோல்வியைத் தழுவியது உண்மை. ஆனாலும், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ஜப்பான் ஆரம்பித்து வைத்த இந்தப் போர் உலக சரித்திரத்தின், குறிப்பாக கிழக்கு மேற்கு நாடுகளின் உறவு வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்தது என்று பிரபல பிரிட்டிஷ் சரித்திர ஆராய்ச்சியாளரான சர் ஆர்னால்ட் டோயன்பி அவர்களே குறிப்பிட்டிருக்கிறார். கிழக்கை வெறும் கிள்ளுக்கீரையாக மேற்கு இனிமேலும் நினைத்துக்கொள்ள முடியாது என்பதை அப்போர் உறுதிப்படுத்தியது.
பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்தபோது ஆங்கிலேயர்களை மொத்தமாகத்தான் என்னால் வெறுக்க முடிந்ததே தவிர தனிப்பட்ட ஆங்கிலேயரின் மீது கோபம்கொள்ள முடியவில்லை. என் தாய் நாடு விடுதலையடைந்ததும் எந்தக் குழுவினர் அல்லது தனியார் மீதும் துவேஷமில்லாமல் போனது. என் நண்பர்கள் வட்டத்தில் இந்தியர், ஜப்பானியர் என்று மட்டுமல்லாமல் எல்லா தேசத்தவர்களும் இருக்கிறார்கள். யார் மீதும் எந்தவித வெறுப்பும் கொள்ளாமல்தான் நான் என் கடந்தகால அனுபவங்களை இந்நூலில் நினைவு கூர்ந்திருக்கிறேன். உபயோகமான யோசனைகளை எனக்குத் தந்தவர்களுக்கும் சரித்திரத்தின் ஓர் உன்னதமான காலகட்டத்தில் தமது அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
குறிப்பாக, தமது பல்வேறு முக்கிய பணிகளுக்கிடையே இந்தப் புத்தகத்துக்கான கையெழுத்துப் பிரதியை முழுவதுமாகப் படித்து ஓர் அறிமுக உரை எழுதிக்கொடுத்து உதவிய என் அருமை நண்பர் திரு. கிம்ப்பி ஷிபா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அவரது அறிமுக உரையை இந்நூலின் ஆரம்பத்தில் பிரதானமாகச் சேர்ப்பது ஒன்றே அவருக்கு என்னால் செய்ய முடிந்த நன்றிக் கடனாகும்.
ஆங்கிலத்தில் வெளியான எனது நூலைத் தமிழில் மிகச் சிறப்பாகக் கொண்டு வரவேண்டுமென்று எண்ணியபோது நண்பர் சாவி அவர்கள்தான் என் நினைவுக்கு வந்தார். இப்புத்தகத்தை மிக அழகாக வெளியிட்டிருக்கும் திரு. சாவி அவருக்கும் அவரது நிறுவனத்திற்கும் என் சிறப்பு நன்றி.
ஏ. எம். நாயர்
ஏ.எம். நாயர்.
ராஷ்பிகாரி போஸ்.
1944 நவம்பரில் சுபாஷ் சந்திர போஸ் டோக்கியோவுக்கு விஜயம் செய்தபோது... நாயர்ஸானுக்கு வலது புறம் இருப்பவர் திரு. கோனோ, டொமி நியூஸ் ஏஜென்ஸியின் தலைவர். டொமியின் தென்கிழக்கு ஆசியப் பிரிவுத் தலைவர் திரு. ஃபகூடாவும் உடன் இருக்கிறார். இவர்களுக்குப் பின்புறத்தில் திரு. ஸி. லிங்கமும் நாயர்ஸானும்.
நாயர்ஸானின் தாயார் திருமதி லட்சுமி அம்மாள்
தமது எண்பதாவது வயதில்.
ஹர்பின் (மஞ்சுகூ) என்ற இடத்தில் (1933) இடமிருந்து வலம். கொரியாவைச் சேர்ந்த கர்னல் லீ. ராஜா மகேந்திர பிரதாப், நாயர்ஸான்.
1948-ல் முதன் முதல் நாயர்ஸான் மஞ்சுகூவிலிருந்து
டோக்கியோ வந்தபோது.
மனைவி இகு அஸாமியுடன்
நாயர்ஸான் தம் மனைவியுடனும்
இரண்டு மகன்களுடனும்.
அன்ஸானில் எடுக்கப்பட்ட படம். இடமிருந்து வலம்.
நிச்சிரன் கோவிலைச் சேர்ந்த பிரதான பாதிரி காகே,
ராஷ்பிகாரிபோஸ், நாயர்ஸான்.
மஞ்சூரியாவில் நாயர்ஸானுக்குத் தரப்பட்ட பிரிவு உபசார விழாவில்.
நடுவில் அமர்ந்திருப்பவர் லெப்டினன்ட் ஜெனரல் தனாகா.
பா-டாவ் மகுதியில் ஏ.எம். நாயர் ஒரு முஸ்லிமாக
மாறுவேடத்தில் இருக்கிறார்.
இடமிருந்து வலம்: லெப்டினண்ட் நாகஷிமா,
நாயர்ஸான். ஒரு பத்திரிகை நிருபர்.
ராஷ்பிகாரி போஸின் மறைவு குறித்து பௌத்த முறையில் அலங்கரிக்கப்பட்ட ஓர் அமைப்பு. வலதுபுறம் இருக்கும் பதக்கம் ராஷ்பிகாரிக்கு ஜப்பான் சக்கரவர்த்தி அளித்த ‘ஸெகன்ட் ஆர்டர் ஆஃப் மெரிட் ஆஃப் தி ரைஸிங் ஸன்.’
ராஷபிகாரி போஸின் அஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்ற பிரபலஸ்தர்கள்: வலதுபுறமிருந்து: ‘குஸு சென்ஸாய்’, திரு. கோஹீரோட்டோ (வலது புறமிருந்து மூன்றாவது) இறுதிச் சடங்குத் தலைவர்; ஜெனரல் அரகி. இடது கோடியில் ஜெனரல் டோஜோ.
ராஷ்பிகாரி போஸின் அஞ்சலிக் கூட்டத்தில் ஜெனரல் டோஜோ
அனுதாபச் செய்தியைப் படிக்கிறார்.
நாயர்ஸானின் சகோதரர் திரு. நாராயணன் நாயருக்கு ஓசாகாவில்
அளிக்கப்பட்ட வரவேற்பின் போது. (1936) இடமிருந்து வலம்: சோஷலிஸ்டு தலைவர் திரு. கோய்ச்சி ஃபுகூடா, நாராயணன் நாயர், நாயர்ஸான், உயர் மத குருவான செங்கி.
ராதா பினோத் பால் (ஹிரோஷிமாவில்)
எலிசபெத் ராணிக்கும், எடின்பரோ கோமகனுக்கும் 1974-ல் டோக்கியோ விஞ்ஜுகு தோட்டத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு. படத்தில் ராணியை திருமதி. நாயர்ஸான் வாழ்த்துகிறார். அவர் பக்கத்தில் நாயர்ஸான். ராணிக்கு அடுத்து இருப்பவர் இந்தியத் தூதர் திரு தான்.
மிட்ஸுரு டொயாமாவின் வலதுகரமாய் விளங்கிய
யோஷி ஹிஸா குஸு (குஸு ஸென்ஸய்).
பிளாக் டிராகன் ஸொஸைட்டியைச் சேர்ந்த
மிட்ஸுரு டொயாமா.
இந்தியப் பிரதமர் இந்திராகாந்திக்கு அளிக்கப்பட்ட டோக்கியோ
வரவேற்பின்போது ராஷ்பிகாரி போஸின் மகளுக்குப் பிரதமரை
நாயர்ஸான் அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
பால்-ஷிமோனகா நினைவு மண்டபத்தில் நடைபெற்ற விழா
ஒன்றில். முதல் வரிசை இடமிருந்து வலம்: இந்தியத் தூதர் திரு. எரிக்கான்ஸல்வஸ், திருமதி கோரா, நாயர்ஸான், திரு தனாகா.
1978-ல் டோக்கியோ விஜயம் செய்த தமிழக முதல்வர் மாண்புமிகு எம்.ஜி ராமச்சந்திரனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பின் போது எடுக்கப்பட்ட படம். முதல்வருக்கு அருகில் இருப்பவர் இந்தியத் தூதர் திரு. அவ்தார் சிங்.
நாயர்ஸானுடன் அமைச்சர் கை குலுக்குகிறார். அருகில் திரு செக்போஸ்ட், இந்தியத் தூதரகத்தைச்