‘Jaihind’ Shenbagaramanin Veera Varalaaru
()
About this ebook
முதல் உலகப் போர் உருவான விதம், கடலாதிக்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக பிரிட்டிஷ் அரசு வைத்திருந்த நிலையில் அவர்களது போர்க் கப்பல்கள் அங்கங்கே நிலை கொண்டிருந்த சூழ்நிலையில், அனைத்தையும் மீறி அந்தமான் சிறையைத் தாக்கி அங்கிருந்த இந்தியப் போராளிகளை விடுவிக்க மேற்கொண்ட முயற்சி, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் தாக்கி அவர்களைக் கலங்கடித்த தகவல்களை அருமையாகப் பதிவு செய்துள்ள நூலாசிரியரின் செயல் பாராட்டுக்குரியது.
டாக்டர் செண்பகராமன் பற்றிய ஏராளமான சிறு, குறுநூல்கள் மற்றும் செய்திகள் வெளிவந்திருப்பினும் சேதுசேஷனின் இந்த நூல் மிக விரிவான, துல்லியமான தகவல்களுடன் வெளிவந்திருக்கிறது.
Related to ‘Jaihind’ Shenbagaramanin Veera Varalaaru
Related ebooks
C.I.D Chandru Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsUshaar Ulavaali Rating: 0 out of 5 stars0 ratingsMannin Perumai Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Pakkam Rating: 0 out of 5 stars0 ratingsThiraichudargal Rating: 0 out of 5 stars0 ratingsSatyajit Ray - Vaazhvum Vazhiyum Rating: 0 out of 5 stars0 ratingsPaarthathil Rasithathu Padithathil Pidithathu - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsEngirunthu Vatuguthuvo... Rating: 0 out of 5 stars0 ratingsBookmarks Rating: 0 out of 5 stars0 ratingsAravinda Amudham Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 4 Rating: 0 out of 5 stars0 ratingsRasamadevi Rating: 0 out of 5 stars0 ratingsEzhuthin Kotpadu : Sujatha Rating: 5 out of 5 stars5/5Matrum Silar Rating: 0 out of 5 stars0 ratingsMadasamiyin Manasatchi Rating: 0 out of 5 stars0 ratingsW.P.A Soundrapandian Rating: 0 out of 5 stars0 ratingsOru Pen Thuraviyin Samaya Vazhvum - Samuthaya Vazhvum Rating: 3 out of 5 stars3/5Jayakanthan Munnuraigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsSakalakala Babu Rating: 0 out of 5 stars0 ratingsIndha Nool Vaangalam - Part 1 & 2 Rating: 0 out of 5 stars0 ratingsEnna Thavam Seitheno! Rating: 0 out of 5 stars0 ratingsNinaivu Naatkalum Nenjil Alaigalum Rating: 0 out of 5 stars0 ratingsJJ Sila Kuripugal Rating: 0 out of 5 stars0 ratingsOodaga Theni Sridhar Rating: 0 out of 5 stars0 ratingsSitha Yogigal Rating: 0 out of 5 stars0 ratingsThirumathi Thirupathi Crorepathi Rating: 0 out of 5 stars0 ratingsSarvadhesa Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPirithoru Maranam Rating: 0 out of 5 stars0 ratingsSuvadugalum Suvadigalum Rating: 0 out of 5 stars0 ratingsMuransuvai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for ‘Jaihind’ Shenbagaramanin Veera Varalaaru
0 ratings0 reviews
Book preview
‘Jaihind’ Shenbagaramanin Veera Varalaaru - P. Sethu Seshan
http://www.pustaka.co.in
'ஜெய்ஹிந்த்' செண்பகராமனின் வீர வரலாறு
‘Jaihind’ Shenbagaramanin Veera Varalaaru
Author :
பொ. சேது சேஷன்
P. Sethu Seshan
For more books
https://www.pustaka.co.in/home/author/p-sethu-seshan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அன்புப் படையல்
அணிந்துரை
கருத்துரை
முகவுரை
1. செண்பகராமனின் பள்ளிப் பருவம்
2. செண்பகராமனின் வாழ்க்கைத் துணைவி திருமதி. லட்சுமிபாய் அவர்களின் சிறப்பு
3. செண்பகராமன் - ‘ஸ்டிரிக்லாந்து’ வரலாற்று முக்கிய சந்திப்பு
4. செண்பகராமனின் அன்னிய நாட்டுப் பயணத் தொடக்கம்
5. செண்பகராமனின் அயல்நாட்டுப் பயணம்
6. செண்பகராமனின் அயல்நாட்டுப் பயணத் தொடர் நிகழ்வுகள் (திருவனந்தபுரம்)
7. செண்பகராமனின் இத்தாலிய வாழ்க்கை
8. செண்பகராமனின் மேல்படிப்பும், இந்திய விடுதலை வீரர்கள் சந்திப்பும்
9. ஜெர்மனி மன்னர் கெய்ஸர் சந்திப்பு
10. செண்பகராமனின் ‘பெர்லின்’ வாழ்க்கை முறை
11. முதல் உலகப்போர்
12. எம்டன் கப்பல்
13. செண்பகராமனின் எம்டன் பயணம்
14. எம்டன் சென்னைத் தாக்குதலும் அதன் நினைவுகளும்
15. செண்பகராமனின் இந்தியா விஜயம்
16. ஜெர்மனியில் செண்பகராமனுக்கு வெற்றிவிழா
17. செண்பகராமனின் இந்தியத் தொண்டர் படை
18. முதல் தற்காலிக இந்திய அரசு
19. செண்பகராமனின் அமெரிக்க - ஆப்பிரிக்க விஜயம்
20. செண்பகராமன் குடும்பத்தாருக்கு எழுதிய கடிதங்கள்
21. செண்பகராமன் - லட்சுமிபாய் திருமணம்
22. நண்பர் பத்மநாபனின் முடிவு
23. ஹிட்லரையே நடுநடுங்கவைத்த தமிழன் செண்பகராமன்
24. நாஜிக் கட்சியினரின் அபாயப் போக்கு
25. செண்பகராமன் - நேதாஜி வியன்னா சந்திப்பு
26. செண்பகராமனின் இறுதிக் கட்டம்
27. முப்பத்திரண்டு வருட லட்சுமிபாய் அவர்களின் தொடர் போராட்டம்
28. செண்பகராமனுக்கு அஞ்சலி
29. செண்பகராமன் அவர்களுக்கு ஓர் புஷ்பாஞ்சலி
(கம்பம் ‘பாரதி தமிழ் இலக்கியப் பேரவை’ 13-ஆம் ஆண்டு கட்டுரை நூலுக்கான முதல் பரிசு பெற்ற நூல்)
டாக்டர் பொ. சேதுசேஷன்
அன்புப் படையல்
இந்நூல், டெல்லியில் ‘தீன்மூர்த்தி பவனில்’ வைக்கப்பட்டிருக்கும் தனது மாமன் ‘செண்பகராமன்’ படத்திற்கு அருகில் நின்று அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கும் காலம் சென்ற என் அன்னை திருமதி. நாகம்மாள் அவர்களுக்கு சமர்ப்பணம்.
அணிந்துரை
‘ஜெய்ஹிந்த் செண்பகராமன் வீர வரலாறு’ நூலைப் படிக்கும் போது, செண்பகராமன் பேரனாக பொ. சேதுசேஷனை இறைவன் படைத்திருப்பது, அவர் தாத்தாவின் அரிய புகழை உலகத்திற்கு தெரியவைப்பதற்கே என்று சொல்லத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு உழைத்து உருவாக்கியிருக்கிறார் இந்த நூலை.
‘ஜெய்ஹிந்த்’ என்று பள்ளிப் பருவத்திலேயே ஒலித்த முழக்கத்தை செண்பகராமன், வியன்னாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை சந்தித்த போதும் முழங்கினார். அந்த ‘ஜெய்ஹிந்த்’ முழக்கம் நேதாஜியின் காதுகளில் மட்டுமில்லாமல் அவர் நாடி, நரம்புகளிலும் ஏறி நின்றுவிட்டது. இந்திய மக்களின் மனங்களையும் வென்று விட்டது. இதன் மூலவரான செண்பகராமன் பெயரோடு, ‘ஜெய்ஹிந்த் செண்பகராமன்’ என்று ஒன்றிவிட்டது.
உலகையே நடுங்க வைத்த ‘ஹிட்லர்’ இந்தியர்களை மட்டமாகப் பேசியதனை திரும்பப் பெறச் செய்தது மட்டுமில்லாமல் அதை எழுத்தாலும் பொறிக்கச் செய்தவன், அஞ்சா நெஞ்சன் ஜெய்ஹிந்த் செண்பகராமன்.
உலக வல்லரசு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடியது மட்டுமில்லாமல் அடிமைப்பட்டு கிடந்த கறுப்பு இன மக்களாகிய நீக்ரோக்களுக்கும் விடிவுகாலம் வர அறைகூவல் விடுத்தவர், வீரன் செண்பகராமன்.
வீர உரையாற்றுவதில் வல்லவராகத் திகழ்ந்ததோடு வேறு வேறு மாறுவேடங்களில், ஒற்றர்கள் கண்ணில் படாமல் இந்தியர் நலம் காக்க உலகை வலம் வந்தவர்.
1907-ஆம் ஆண்டு ஜெர்மனியில் ‘ஸ்டட்கார்ட்’ (Stuttgart) என்ற நகரத்தில் அகில உலக சோசலிஸ மாநாடு நடந்தபோது, தன் சேலை மடிப்பிற்குள் மறைத்துக் கொண்டு வந்திருந்த மூவர்ணக் கொடியை ஏற்றி, ‘இது இந்திய சுதந்திர நாட்டின் கொடி, வணக்கம் செய்யுங்கள்’ என்று கூறி அங்கிருந்த பிற தலைவர்களையும் வணங்க வைத்த வீராங்கனை மேடம் காமாவின் வளர்ப்பு மகள், லட்சுமிபாய் நமது மாவீரன் மனைவியாவார்.
கணவன் மனைவியாக மூன்றாண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்தார் செண்பகராமன். அவர் இறுதி மூச்சு விடும் போது, ‘சுதந்திர இந்தியாவின் போர்க்கப்பலிலேயே என் இறுதிப் பயணம் அமைய வேண்டும்’ என்ற கணவனின் வேண்டுகோளுக்கு ஏற்ப, 32 வருடங்கள் கணவர் அஸ்தியைப் பாதுகாத்து, இந்தியப் பிரதமர் அன்னை இந்திராவின் உத்திரவுபடி ‘இந்தியப் போர்க் கப்பல் ஐ.என்.எஸ்.’ மூலம் டெல்லி, பம்பாயிலிருந்து கொண்டுவந்து, செண்பகராமன் தாயார் அஸ்தி கரைக்கப்பட்ட கரமணையாற்றில் கரைத்த செண்பகராமன் மனைவி மாதர்குலத்தின் மணி விளக்கல்லவா?
நூலாசிரியர் பொ. சேதுசேஷன், எளியோன் என் தொண்டு பற்றியும் முகவுரையில் குறிப்பிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் செண்பகராமன் நினைவுகளை போற்றும் விதமாக, அரசுக்கு நான் முன்பு விடுத்த அனைத்து வேண்டுகோள்களும், விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன்.
இந்த அணிந்துரை, ஒரு சிறிய மற்றும் எளிய ஆபரணமே! மாவீரர் ஜெய்ஹிந்த் செண்பகராமனின் ‘விசுவரூபம்’ காண நூலின் உள்ளே செல்லுங்கள்.
அன்பன்,
19.11.2017
கருத்துரை
ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் உள்நாட்டில் நடத்தப்பெற்ற அறப்போராட்டங்களும் அங்கங்கே நடைபெற்ற ஆயுத, தீவிரவாதப் போராட்டங்களும் பல்வேறு வகைகளில் ஆங்கிலேயர்களுக்கு நெருக்கடிகள் கொடுத்து அவர்களை வெளியேறத் தூண்டின. அதே வேளையில் இந்தியாவிற்கு வெளியில் இருந்தும் பல்வேறு போராட்டக் குழுக்கள் இந்தியச் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல்வேறு நெருக்கடிகள் கொடுத்தன என்றால் அது மிகையல்ல.
உள்நாட்டில் நடந்த போராட்ட நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ஆவணங்களாக வெளிப்பட்டு அவை வரலாற்று ஆவணங்களாயின. ஆனால், வெளிநாட்டில் இருந்து சுதந்திரத்திற்கு உழைத்த பேராட்ட நிகழ்வுகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்படாமல் வெளியுலகிற்கு முழுமையாகத் தெரியவரவில்லை என்பதுதான் உண்மை.
ஆங்கிலேயர்கள் உள்நாட்டுப் போராட்டம் தங்கள் கையை மீறிப்போகாத வகையில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்திருந்தனர். அதையும் மீறி அறப்போராட்டமல்லாது தீவிரமாகப் போராடியப் போராளிகளைக் கொல்லவும், சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தவும் அவர்கள் தயங்கவில்லை. ஆனால், வெளிநாட்டில் இருந்து இந்தியச் சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை ஆங்கிலேயர்களால் அவ்வளவு எளிதாக நெருங்க முடியவில்லை.
அவ்வாறு இந்தியாவிற்கு வெளியே இருந்து சுதந்திரத்திற்குப் போராடியவர்களில் டாக்டர் செண்பகராமன் அவர்களும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களும் முக்கியமானவர்கள் ஆவர். இவ்விருவரில் செண்பகராமன் அவர்களின் வீரவரலாறு என்ற இந்நூல் அவரது குடும்ப வாரிசுகளில் ஒருவரான திரு. சேதுசேஷன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் செண்பகராமனுக்கு உதவியவர்கள், உடனிருந்து உழைத்தவர்கள் எனப் பட்டியலிட்டால் அது மிகப்பெரிய ஒரு புத்தகமாக விரியும். திரு. சேதுசேஷன் அவர்கள் செண்பகராமன் பற்றி தன் குடும்பத்தில் இருந்த ஆவணங்கள், அவருடைய கடிதங்கள், நண்பர்களிடம் இருந்து பெற்ற ஆவணங்கள் மற்றும் தகவல்களைத் திரட்டி இந்நூலை உருவாக்கியுள்ளார்.
முதல் உலகப் போர் உருவான விதம், கடலாதிக்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக பிரிட்டிஷ் அரசு வைத்திருந்த நிலையில் அவர்களது போர்க் கப்பல்கள் அங்கங்கே நிலை கொண்டிருந்த சூழ்நிலையில், அனைத்தையும் மீறி அந்தமான் சிறையைத் தாக்கி அங்கிருந்த இந்தியப் போராளிகளை விடுவிக்க மேற்கொண்ட முயற்சி, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையைத் தாக்கி அவர்களைக் கலங்கடித்த தகவல்களை அருமையாகப் பதிவு செய்துள்ள நூலாசிரியரின் செயல் பாராட்டுக்குரியது.
டாக்டர் செண்பகராமன் பற்றிய ஏராளமான சிறு, குறுநூல்கள் மற்றும் செய்திகள் வெளிவந்திருப்பினும் சேதுசேஷனின் இந்த நூல் மிக விரிவான, துல்லியமான தகவல்களுடன் வெளிவந்திருக்கிறது.
செண்பகராமன் அவர்கள் மனைவி திருமதி. லட்சுமிபாய் ஜெர்மனியில் இருந்து இந்தியாவுக்கு வந்து பம்பாயில் தங்கியிருந்து அவரது அஸ்தியைக் குமரிக்கடலில் கரைத்த பிறகு ஏதோ காரணத்தினால் செண்பகராமன் அவர்களுடைய உறவினர்களுடைய தொடர்பில்லாத நிலையில் இருந்துள்ளார். அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் இருந்து அவரைச் சந்திக்கச் சென்ற ‘கவிஞர் வானம்பாடி’ அவர்களிடம் லட்சுமிபாய், ‘டாக்டர் செண்பகராமன் பற்றிய விரிவான நூல் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதுபற்றி கவிஞர் அவரது தனது சிறு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆக, லட்சுமிபாய் அவர்களிடம் டாக்டர் செண்பகராமன் அவர்களின் பல ஆவணங்கள் இருந்துள்ளதை அறிய முடிகிறது. திருமதி. லெட்சுமிபாய் அவர்கள் காலமான பின்பு அவரது உடைமைகளும் ஆவணங்களும் அப்போதைய பாரதப் பிரதமர் திருமதி. இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. திருமதி. லட்சுமிபாய் மரணத்திற்குப் பிறகு அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு மத்திய அரசின் பொறுப்பில் உள்ள ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டால் அன்றைய காலகட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளை ஒளிவு மறைவின்றி அறிய வாய்ப்பு ஏற்படும்.
டாக்டர் செண்பகராமன் அவர்களின் வீர வரலாற்றை நாஞ்சில் மலர் மாத இதழில் மாதந்தோறும் வெளியிட்டு வாசகர்கள் அறிந்து கொள்ள வழிவகுத்த திரு. பொ. சேதுசேஷன் மற்றும் அவர் குடும்பத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாதவரம்
15-09-2017
கி. தானப்பன்
நாஞ்சில் மலர் மாத இதழ்
முகவுரை
ஒரு புத்தகம் வெளியிடுவதற்கு ‘ஆசிரியர் முகவுரை’ மிகவும் அவசியமான ஒன்று என்று எல்லா வாசகர்களும் நன்கு அறிவார்கள். ஆனால், என்னை ஆசிரியர் என்று அறிமுகப்படுத்திக்கொள்ள சிறிது தயக்கம். எனவேதான் இந்தப் பகுதிக்கு வழக்கமான ‘ஆசிரியர் முகவுரை’ என்று பெயரிடாமல் வெறும் ‘முகவுரை’ என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.
இந்தப் புத்தகம் என்னுடைய முதல் முயற்சி என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், இதுதான் என்னுடைய ‘கடைசி முயற்சி’ என்று இப்போது என்னால் கூற இயலாது. எனக்கு இப்போதெல்லாம் அதிக ஓய்வு நேரம் இருப்பதால் ஏதாவது கிறுக்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம், என்னையும் அறியாமல் என்னுள் எழுந்துள்ளது. எனவே, வாசகர்கள் அடுத்த அதிர்ச்சிக்குத் தயாராகிக் கொள்ளுங்கள்!
நான் (பொ. சேதுசேஷன்) இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியில் சுமார் 40 ஆண்டுகள் பணியாற்றி, உதவி பொது மேலாளராக (Assistant General Manager) 2004ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன். எனது வயது இப்போது 73. இந்தப் புத்தகத்தின் கதாநாயகன் மாவீரன் செண்பகராமன் எனது தாயாரின் தாய்மாமா ஆவார். அதாவது எனது தாய்வழிப் பாட்டனார். செண்பகராமன் குடும்பத்தாரின் வம்சாவழி பட்டியலை விளக்கமாக அடுத்த பக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
இப்போது எனக்கும், மாவீரன் செண்பகராமனுக்கும் உள்ள உறவுமுறை வாசகர்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
ஏன் இவ்வளவு காலம் அவரைப்பற்றி எழுதுவதற்கான எந்த முயற்சியும் நான் எடுக்கவில்லை என்ற வினா எல்லோர் மனதிலும் தோன்றியிருக்கும். நான் சிறுவனாக இருந்தபோது, என்னுடைய ஆச்சியும் (செண்பகராமனது தங்கை பாப்பாத்தி அம்மாள் அவர்களை நாங்கள் அப்படித்தான் அழைப்போம்.) என்னுடைய தாயார் நாகம்மாள் அவர்களும், எங்களுக்கு செண்பகராமனைப் பற்றி நிறைய விவரங்கள், சுவையாக எடுத்துச் சொல்வார்கள். அந்தச் செய்திகள் அனைத்தும் என் மனதில் பசுமரத்து ஆணிபோல் பதிந்து இருந்தது. ஆனால், எனது தந்தை பொன்னுசுவாமி பிள்ளை (கலால்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரி) அவர்கள், என் மனம் படிப்பில் மட்டுமே கவனமாக இருக்கவேண்டும் என்று அவ்வப்போது எடுத்துரைப்பார். பட்டப்படிப்பு முடித்த கையோடு வங்கிப் பணியில் அமர்ந்து என் முழுக் கவனத்தையும் வங்கியின் முன்னேற்றத்திற்கு செலவிட்டேன். எனவேதான் ஒரு சாதாரண எழுத்தராக (Clerk) வங்கியில் சேர்ந்த நான், 39 ஆண்டு காலம் படிப்படியாக முன்னேறி, உதவிப் பொது மேலாளராக (Asst. General Manager) ஓய்வு பெற்றேன். நான் பதவியில் இருந்த அந்நாட்களில் எனது மகனும், மகளும் எந்த வகுப்பில் படிக்கிறார்கள் என்று யாராவது கேட்டால், என் மனைவி விலாசினியிடம் கேட்டு அவர்களிடம் சொல்லும் அவலநிலையில் இருந்தேன்.
2004 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றவுடன், அமெரிக்காவில் குடும்பத்துடன் இருக்கும் என் மகன் வெங்கடகுமரன் மற்றும் என் மகள் ஜோதி மீனாட்சி ஆகியோருடன் சிறிது காலம் தங்கி, மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பினோம். இதற்கிடையில் தன் தாய்மாமன் செண்பகராமனைப் பற்றி அடிக்கடி பல நினைவுகளைக் கூறி வந்த எனது தாயார் நாகம்மாள் இயற்கை எய்தினார்கள். எனது தாயார் மறைந்ததும் அவர்கள் பொக்கிஷமாகப் போற்றிவைத்திருந்த பல பெட்டிகளில் மாவீரன் செண்பகராமன் பற்றிய பல செய்திகள் அடங்கிய பல தஸ்தாவேஜுகள் எனக்குக் கிடைத்தது. அவற்றையெல்லாம் படிக்கப் படிக்க என்னை அறியாமல் மாவீரன் செண்பகராமன் பற்றி ஒரு வரலாறு எழுதவேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது.
நான் இந்தியன் ஓவர்ஸிஸ் வங்கியில், தி.நகர் கிளையில் முதன்மை மேலாளராக (Chief Manager) பணியாற்றிக் கொண்டிருந்தபோது, எழுத்தாளர் ‘ரகமி’ அவர்கள் என் தாயாரை நாங்கள் குடியிருந்த ‘SAF Games Village’ குடியிருப்பில் (கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில்) அடிக்கடி சந்தித்து, எங்கள் செண்பகராமன் பற்றிய பல விவரங்களையும், அதற்கான ஆவணங்களையும் (Documents) வாங்கிச் சென்று, 1988 ஆம் வருடம், அக்டோபர் மாதம் முதல், அப்போது ‘தினமணி’ பத்திரிகையின் இணைப்பாக வெளிவந்த கொண்டிருந்த ‘திணமணிக் கதிர்’ என்ற வாரப் பத்திரிகையில் ‘ஜெய்ஹிந்த் செண்பகராமன்’ என்ற தலைப்பில், ஏறக்குறைய ஓர் ஆண்டு காலம் 47 அத்தியாயங்கள் கொண்ட வரலாற்றுத் தொடரை எழுதி, பல வாசகர்களின் பாராட்டைப் பெற்றார். பல அலுவல்களுக்கிடையே நானும் அப்போது படித்து என் தாயாரின் மகிழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டுள்ளேன்.
இதைத் தவிர என் தாயாரை, முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன் அவர்களும் பலமுறை சந்தித்து நமது செண்பகராமன் எழுதிய கடிதங்களின் நகல்களையும், பல புகைப்படங்களையும் பெற்றுச் சென்றுள்ளார். இவர் சட்டமன்றத்தில், செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, வீரன் செண்பகராமனுக்கு அரசு சார்பில் சிலை எடுக்கப்பட வேண்டும்; மேலும் அவருடைய வீர வரலாறு அரசு பாடப்புத்தகத்தில் இடம்பெற வேண்டும்; அதோடு எம்டன் போர்க்கப்பலில் வந்து சென்னைக் கோட்டையில் குண்டு வீசி, ஆங்கிலேயரைக் கலங்கடித்த செண்பகராமன் நினைவாக செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்ற பெயரை மாற்றி, ‘செண்பகராமன் கோட்டை’ என்று பெயரிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அவரது முதல் வேண்டுகோளின்படி செண்பகராமன் சிலை 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஏழாம் தேதி தியாகிகள் தினத்தன்று (மற்றும் 3 தியாகிகள் சிலைகளோடு) கிண்டி அரசினர் தோட்டத்தில் (காந்தி மண்டபம் அருகில்) அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அவரது இரண்டாவது வேண்டுகோளின்படி ஏழாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில், உரைநடைப் பகுதியில் மூன்றாவது பாடமாக 1992 ஆம் ஆண்டு அவரது உருவப்படத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டு, எக்காரணத்தினாலோ, இரண்டு ஆண்டுகளில் அப்பாடம் நீக்கப்பட்டுவிட்டது.
மூன்றாவது வேண்டுகோள், கோட்டையின் பெயர் மாற்றம் அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் அறிவிப்போடு நின்றுவிட்டது.
மேலும், திரு. குமரி அனந்தன் அவர்கள் என் தாயார் அவர்களை சென்னை காங்கிரஸ் அலுவலகம் (சத்தியமூர்த்தி பவன்) அழைத்துச் சென்று செண்பகராமன் நினைவுநாள் ஒன்றான ஓர் ஆண்டில், அப்போதைய மத்திய மந்திரி தலைமையிலான ஒரு நிகழ்ச்சியில் கௌரவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கு அருகே திரு. குமரி அனந்தன் அவர்களால் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள ‘குமரிக் கண்ட கண்காட்சி’யில் நமது செண்பகராமன் அவர்களுக்கு ஒரு தனியிடம் (Enclosure) அமைக்கப்பட்டு, அவர்கள் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை, புகழ்பெற்ற சித்திரக் கலைஞர்களால் சித்திரமாக தீட்டப்பெற்று, ஒரு ஒலி, ஒளி காட்சி போன்று சிறப்பாக அமைத்துள்ளார். அவருக்கு இந்த சந்தர்ப்பத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக, என் வாழ்க்கையின் திருப்புமுனையாக 2014 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி, திருமங்கலம் காவல்நிலையம் அருகில் இருக்கும் திருமண மண்டபத்தில் நடந்த ஒரு சமுதாயக் கூட்டத்தில் ‘நாஞ்சில் மலர்’ என்ற மாதப்பத்திரிகையின் திரு. கி. தானப்பன் அவர்களைச் சந்தித்தேன். ஒரு எண்ணெய் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற அவர், அன்றைய தினம் அந்த விழாவில் என் தாத்தா ஜெய்ஹிந்த் செண்பகராமன் திருவுருவப்படத்தை, ஏனைய தமிழகத் தலைவர்களின் படங்களோடு ஒன்றாக திறந்துவைத்து பாராட்டிப் பேசினார். எங்களுடைய முதல் சந்திப்பிலேயே, என் தாத்தா செண்பகராமனைப் பற்றி அவர் ‘நாஞ்சில் மலர்’ பத்திரிகையில் ஒரு வரலாற்றுத் தொடராக எழுதுமாறு வேண்டிக்கொள்ள, நானும் சம்மதித்து, அவருடைய அடுத்த மாத இதழிலேயே (ஜனவரி 2015) செண்பகராமன் தொடரை எழுத ஆரம்பித்தேன். அந்தத் தொடர் இன்றுவரை பல வாசகர்களின் பாராட்டுதலோடு வெளிவந்து கொண்டிருக்கிறது. என்னை இவ்வாறு எழுதத் தூண்டி, இன்றுவரை பெரும் ஆதரவை நல்கிவரும் திரு. தானப்பன் அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்கிடையில் 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், ஆறு மாத காலம் அமெரிக்காவில் என் மகள் ஜோதி மீனாட்சி வீட்டில் ‘ஸேன்ஹோஷே’ (Sanjoise) பகுதியில் தங்கியிருந்த சமயத்தில், நாஞ்சில் மலர் பத்திரிகையில் மாவீரன் செண்பகராமன் வீர வரலாறு தொடர்ந்து எழுதி வந்தேன். அச்சமயத்தில் பல வேலைகளுக்கிடையே என்னை அப்பகுதியிலிருந்த நூலகங்களுக்கு (ஸேன்ஹோஷே கூப்பர்டினோ Cupertino) அழைத்துச் சென்ற என் மருமகன் திரு. மூர்த்தி கார்த்திகேயனுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நூலகங்களிலிருந்த புத்தகங்களிலிருந்து திரட்டிய பல தகவல்கள் செண்பகராமன் தொடருக்கு மேலும் மெருகூட்டியது என்றால் அது மிகையாகாது.
‘புத்தக நண்பர்கள்’ சென்னைக் குழுவின் மாதந்தோறும் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அறிமுகமான ‘ரவி தமிழ்வாணன்’ (என் இளவயதில் என் தாய் தந்தை குரு அவர்களுக்கு அடுத்ததாக போற்றி வந்த ‘கல்கண்டு’ ஆசிரியர் தமிழ்வாணனின் மகன்) நான் எழுதும் வரலாற்றுத் தொடரை செண்பகராமனது 125 ஆவது பிறந்த தின விழாவில் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டுமென்று என்னுடைய விருப்பத்தைக் கேட்டு, உடனே புத்தகத்தை வெளியிட சம்மதித்து என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். எனவே, இத்தருணத்தில் அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடைய இந்தக் கன்னி முயற்சிக்கு ஊக்குவித்து, எனக்குப் பல உதவிகள் நல்கிய என் நண்பர் திரு. டி.வி. நாகராஜன் (இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி துணை பொது மேலாளர், ஓய்வு), எனது தம்பி திரு. ரமேஷ்பாபு ஷங்கர் (செண்பகராமனது மற்றொரு மருமகள் பேபி பொன்னம்மாள் அவர்களின் மகன்), ‘கேஜி குழு’ என்ற பெயரில் தகவல் பரிமாறிக்கொள்ளும் என் உறவினர்களுக்கும் நன்றி.
இந்த வரலாறு எழுதும்போது எனக்குள் உதித்த சில சந்தேகங்களைத் தீர்த்துவைத்து, ஆதரவு நல்கிய எனது மூத்த தமக்கை திருமதி. பாலமீனாட்சி அவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும் என் நன்றி.
ஆங்கிலத்தில் ‘Last but not the least’ என்று கூறுவார்களே, அதற்கு இணங்க எனக்குப் பலவித உதவிகளையும், ஆலோசனைகளையும் கூறி என்னை இவ்வாறு எழுத்தாளனாக்கிய என் மனைவி விலாசினி அவர்களுக்கு என் நன்றி.
இந்த நூலை மறைந்த என் தாயார் திருமதி நாகம்மாள் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
- பொ. சேதுசேஷன்
தமிழக அரசால் 17.07.2008 தியாகிகள் தினத்தன்று, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் நிறுவப்பட்ட ‘தியாகி செண்பகராமன்’ சிலை அருகில் நூலாசிரியர் திரு. பொ. சேதுசேஷன் அவர்களுடன், ‘நாஞ்சில் மலர்’ மாதப் பத்திரிகை ஆசிரியர் திரு. கி. தானப்பன் அவர்கள்.
1
செண்பகராமனின் பள்ளிப் பருவம்
திருவாங்கூர் சமஸ்தானம். திருவனந்தபுரத்தில் மஹாராஜா உயர்நிலைப் பள்ளியில் 1901ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 15ஆம் தேதி, மாலை நேரம், பள்ளி முடித்து மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் நேரம். ‘ஜெய்ஹிந்த்’, ‘பாரத் மாதாவுக்கு ஜெ!’ என்ற கோஷத்தைக் கேட்டு, அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தன் அறையை விட்டு வேகமாக கோபத்துடன், அந்த கோஷம் இட்ட மாணவர்கள் யாரென்று பார்த்தார்.
அந்த மாணவர்களை வழிநடத்திக்கொண்டு வருபவன் 10 வயது பாலகன். அந்த வருடம்தான் 6ஆவது வகுப்பில் சேர்ந்து, வகுப்பில் முதல் மாணவனாகத் திகழ்ந்து கொண்டிருப்பவன். அவனைக் கண்ட தலைமை ஆசிரியர் சிறிது கோபம் தணிந்து ராமா, இதெல்லாம் என்ன? என்று வினவ, அவன் ஐயா இன்று என்னுடைய 10 ஆவது பிறந்த தினம். இன்று என் நெருங்கிய மாணவ நண்பர்களோடு, பிறந்த தினத்தை கொண்டாடினோம். அப்போது நமது மக்களை அடிமைகளாக்கி நம் நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் இந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக, புதிய கோஷங்கள் சிலவற்றை முடிவு செய்தோம். அந்த கோஷங்களைத்தான் இப்போது, கூவிப்பார்த்து எங்கள் கூட்டத்தை முடித்தோம்
என்று கூறினார்.
அதை கேட்ட தலைமை ஆசிரியர் மிகவும் நடுக்கத்துடன் தம்பி, நமது திருவாங்கூர் சமஸ்தானம், ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கிக்கொண்டு வருகிறது. எனவே, நமது பள்ளியும் அவர்களின் கண்காணிப்பில் தான் இருக்கிறது. எனவே, இங்கு இவ்வாறு கூச்சலிடுவது இராஜாங்கக் குற்றமாகும்
என்று கூறி சிறுவனை எச்சரித்தார். சிறுவனும் சிரித்துக்கொண்டே, ‘சரி ஐயா’ என்று கூறி நண்பர்களுடன் பள்ளியை விட்டு வெளியே வந்தான்.
இந்தச் சிறுவன்தான் ‘ஜெய்ஹிந்த்’ செண்பகராமன். அதாவது நமது கதாநாயகன். இவர் 1891 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி பிறந்தார். அவர் தந்தை சமஸ்தானத்தில் பணியாற்றிவரும் தலைமைப் போலீஸ்காரர் சின்னசாமிப்பிள்ளை, தாயார் நாகம்மாள். தங்களுக்குப் பிறந்த தலைமகனுக்கு ‘செண்பகராமன்’ என்ற செண்பகப்பூவின் பெயரைச் சூட்டி செல்லமாக வளர்த்து வந்தனர்.
பிற்காலத்தில் பெரிய வீரராகத் திகழ்ந்தவர்கள், அவர்கள் இளம் பிராயத்தில் பயந்த சுபாவம் உடையர்களாக இருந்துள்ளார்கள் என்று பெரியவர்கள் கூறுவதுண்டு! அதன்படி எங்கள் ஆச்சி, அவர்கள் அண்ணன் செண்பகராமனுடன் திருவனந்தபுரத்தில் ஒன்றாக வளர்ந்தபோது சிறு வயது நிகழ்வுகளைச் சொல்வதுண்டு.
அந்த வகையில் சொன்ன ஒரு நிகழ்வு இதோ...
அந்தக் காலத்தில் எல்லா இல்லங்களிலும் கழிப்பறைகள் வீட்டிற்கு வெளியே பின்புறத்தில், தோட்டத்தில்தான் அமைந்திருக்கும். ஒரு சமயம் நமது சிறுவயது செண்பகராமன், இரவில் சிறுநீர் கழிக்க தனியே போவதற்கு பயந்து தன் தங்கையை (எங்கள் ஆச்சி) எழுப்பித் துணைக்கு வருமாறு அழைத்திருக்கிறார். இவரும் அதற்குச் சம்மதித்து வெளியே சென்றிருக்கிறார்.
செண்பகராமன் சிறிது தூர இடைவெளியில் இருந்த கழிவறைக்குச் சென்று, கதவைத் திறக்கும்போது, இவர் அண்ணா பேய்
என்று கத்திவிட்டு (சும்மாவே) உள்ளே ஓடி வந்து விடுவாராம். நமது செண்பகராமனும் அவர் பின்னாலேயே பயந்து ஓடிவந்து விடுவாராம்! அதன்பின் அவர் தாயார் எழுந்து எங்கள் ஆச்சியை கடிந்துவிட்டு செண்பகராமனுடன் துணைக்கு சென்று வருவாராம்.
சின்னசாமி (தந்தை), பாப்பாத்தி அம்மாள் (தங்கை), சோமசுந்தரம் (தம்பி)
இந்த பயந்த சுபாவம் உள்ள செண்பகராமன் தான் பிற்காலத்தில் உலகத்திலேயே கடல் ஆதிக்கத்தில் (Naval Supremacy) முதல்வர்கள் என்று பறைசாற்றிக் கொண்டிருந்த ஆங்கிலேயர்கள் நடுநடுங்க எம்டன் கப்பலை செலுத்திவந்து அவர்களது பல கப்பல்களை மூழ்கடித்து, இப்போதைய சென்னை என்றழைக்கப்படும் அப்போதைய மதராஸ் பட்டினத்தில் குண்டு வீசி வெள்ளையரின் பர்மா ஷெல் எண்ணெய்க் கிடங்குகளை பற்றியெரியச் செய்தார். எந்த ஒரு இந்தியனும் அந்தக் குண்டு வீச்சில் பாதிக்கப்படாதவாறு பார்த்துக் கொண்டார்.
அது மட்டுமல்லாமல், உலகையே கலக்கிக் கொண்டிருந்த ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர், இந்தியர்கள் சுய ஆட்சிக்கு அருகதை அற்றவர்கள் என்று கூறியதை ஆட்சேபித்து, மன்னிப்புக் கேட்க வேண்டும், அதுவும் எழுத்து பூர்வமாக மன்னிப்புக் கடிதம் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் எனக்கு வந்து சேரவேண்டும் என்று வீரமாக வாக்குவாதம் செய்து மன்னிப்புக் கடிதம் அவரிடம் இருந்து பெற்றார் என்று நினைக்கும் போது நாம் பெருமிதம் கொள்கிறோம்!
அவர் பள்ளியில் படிக்கும்போது நடந்த நிகழ்வைப் பார்த்தால் அவரது சமயோசித புத்தியைத் தெரிந்து கொள்ளலாம். அவர் பள்ளியில் படிக்கும்போது, ‘பாரத மாதா வாலிபர் சங்கம்’ என்ற ஒன்றினைத் தொடங்கி அதன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பெற்றார். ஒரு சமயம் அவர் பள்ளிக்கு ஆங்கிலேயக் கல்வி அதிகாரி ஒருவர் வருவதாக இருந்தது. இதனை அறிந்த நமது செண்பகராமன், வகுப்புகளுக்குச்