Ushaar Ulavaali
By Sudhangan
()
About this ebook
‘அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு நாட்டின் மூவரில் ஒருவர் வேறு ஒரு நாட்டின் அல்லது வேறு நாட்டு நிறுவனத்தின் உளவாளியாக இருப்பார்’ என்று சர்வதேச அறிக்கை ஒன்று அலறுகிறது. அப்படி உளவாளியாக இருப்பது அவருக்கே தெரியாது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் தலை சீவப்பட்டார், நம் ஆந்திராவைச் சேர்ந்த இன்ஜினீயர் சூர்ய நாராயணா. அவர் செய்த குற்றம் என்ன...’ அமெரிக்காவுக்காக எங்களை உளவு பார்த்தார்’ என்று சொல்கிறார்கள், தலிபான் தீவிரவாதிகள். சூர்யநாராயணா உளவு பார்த்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனால் உலகெங்கும் அப்பாவிகள் பலர் அவர்களுக்கே தெரியாமல் இப்படி உளவு வேலைகளில் இறக்கி விடப்பட்டுள்ளனர் என்பது மட்டும் உண்மை!
ஒரு நாட்டை அபகரிக்க அல்லது ஆக்கிரமிக்க யுத்தம் ஒன்றே வழி என்பது பழைய கோட்பாடாகி விட்டது. கடந்த கால சரித்திரங்களில் வேண்டுமானால் யுத்தத்தின் பங்கு இன்றியமையாததாக இருக்கலாம். எதிர்கால சரித்திரத்தில் யுத்தத்தின் பங்களிப்புக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.
இதை வைத்து, உலகின் வலிமை மிக்க நாடுகள் எல்லாம் சைவமாகி விட்டன என்று அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது. முந்தைய காலங்களைப் போல நோஞ்சான் நாடுகளைப் பிடிக்கும் ஆசை இல்லா விட்டாலும், அவற்றை அடிமைகளாக ஆட்டிப் படைக்கும் பேராசை எல்லா வலிய நாடுகளிடமும் இன்றைக்கும் இருக்கவே செய்கிறது. அந்த வகையில் அவை ருத்ராட்சப் பூனைகளாகத்தான் நாக்கைத் தொங்க விட்டுக் காத்திருக்கின்றன. ஆனால், தங்கள் ஆசையை அவை பூர்த்தி செய்து கொள்ள யத்தத்தை நம்பவில்லை. யுத்தத்துக்கு நிகரான, ஆனால் பேரழிவை உண்டாக்காத, மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன. அந்த மாற்றுப் பாதைதான் உளவு!
இனி உளவுதான் உலகம். ஒற்றர்கள்தான் அதன் உண்மையான தலைவர்கள். தன் எதிரியின் ரகசியங்களைத் தெரிந்துகொண்டு அவனை முன்கூட்டியே செயலிழக்கச் செய்கிற அரசும், நிறுவனங்களும் தான் இனி உலகை சர்வாதிகாரம் செய்யப் போகின்றன. ஒரு நாட்டை எதிரி யிடமிருந்து காக்க மட்டுமே முன்பு உளவு பயன்பட்டது. அந்த உளவாளிகள் வெளிச்சத்துக்கு வராத தேசத் தியாகிகளாகக் கருதப்பட்டார்கள். ஆனால், இனி காட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கிற எல்லாருக்குமே உளவு என்பது ஓர் அற்புதத் தொழில். முன்பு உளவு என்பது ஒரு அரசாங்கத்தின் சார்பான ரகசிய வேலை. இப்போது அதுவும் தனியார் மயமாக்கப்பட்டுவிட்ட து!
உங்கள் அலுவலகத்தில்... உங்கள் பயணத்தில்... இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே ஓர் உளவாளி நிச்சயமாக இருக்கக்கூடும், உஷார்!
சுதாங்கன்
Read more from Sudhangan
Sainthu Kolla Thol Vendum Rating: 0 out of 5 stars0 ratingsCelluloid Chozhan! Rating: 0 out of 5 stars0 ratingsSuttachu Suttachu Rating: 0 out of 5 stars0 ratingsPaarthathu... Padithathu... Rasithathu... Rating: 0 out of 5 stars0 ratingsThethi Illatha Diary Rating: 0 out of 5 stars0 ratings
Related to Ushaar Ulavaali
Related ebooks
Vadakku Veethi Rating: 5 out of 5 stars5/5Vaakkumoolam Rating: 0 out of 5 stars0 ratingsSakkaram Nirpathillai Rating: 0 out of 5 stars0 ratingsVelu Natchiyar Rating: 0 out of 5 stars0 ratingsPulariyin Muthangal Rating: 0 out of 5 stars0 ratingsMaayap Punnaigai Rating: 0 out of 5 stars0 ratingsTiruppur Kumaran Rating: 0 out of 5 stars0 ratingsOru Sol Keeler! Rating: 0 out of 5 stars0 ratingsKalveri Kolluthadi... Rating: 5 out of 5 stars5/5Aatril Oru Kaal Setril Oru Kaal Rating: 0 out of 5 stars0 ratingsPralayam Rating: 5 out of 5 stars5/5Maalai Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsPon Vilangu Rating: 0 out of 5 stars0 ratingsVaazhum Deivam Mahatma Rating: 5 out of 5 stars5/5Paarkadal Rating: 0 out of 5 stars0 ratingsPutru Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Naalai Varum Rating: 0 out of 5 stars0 ratingsZen Kaattum Vazhkai Neri Rating: 0 out of 5 stars0 ratings154 கிலோபைட் Rating: 4 out of 5 stars4/5Nirkka Nizhal Vendum Rating: 0 out of 5 stars0 ratingsKaaranamilla Kaariyangal Rating: 0 out of 5 stars0 ratingsAppavin Radio Rating: 0 out of 5 stars0 ratingsIlluminati Rating: 0 out of 5 stars0 ratingsKudumba Kathaigal Rating: 5 out of 5 stars5/5Enna Thavam Seitheno! Rating: 0 out of 5 stars0 ratingsMalargale Malarungal Rating: 5 out of 5 stars5/5Eezha Tamizhar Prachanai Rating: 0 out of 5 stars0 ratingsPallisaamyin Thuppu Rating: 0 out of 5 stars0 ratingsIndia Enum Aithegam Rating: 0 out of 5 stars0 ratingsShirdi Baba Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Ushaar Ulavaali
0 ratings0 reviews
Book preview
Ushaar Ulavaali - Sudhangan
http://www.pustaka.co.in
உஷார் உளவாளி
Ushaar Ulavaali
Author:
சுதாங்கன்
Sudhangan
For more books
http://pustaka.co.in/home/author/sudhangan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
சந்தேகம்தான் தெளிவின் தாய்
1. சபாஷ்... உளவாளி!
2. கறுப்பு ஒற்றன்!
3. உளவாளிகளின் வகை!
4. ஒரிஜினல் 007 உருவம்
5. ஜெகஜால கில்லாடி!
6. ஹிட்லரும் தப்பவில்லை!
7. டேஞ்சர் டெனியா!
8. டபுள் ஏஜென்ட்!
9. கறுப்புப் புள்ளி... சிவப்பு நட்சத்திரம்!
10. முதலிடத்தில் மொஸாட்!
11. சொல்லி சிரித்த சதாம்!
12. சாகசக்காரி ஜாக்குலீன்!
13. பணம் வந்தது... பயமும் வந்தது!
14. பணிந்தால் பணம்... மறுத்தால் மரணம்!
15. பெயர் புதிது... தொழில் புதிது... ஆள் மட்டும் பழசு!
16. ஆரம்பமானது விஷப் பயிற்சி!
17. வாசலில் இரு கொலையாளிகள்!
18. மொஸாட்டில் கானா ரசிகர்!
19. இலங்கைக்குள் நுழைந்தது மொஸாட்
20. கொல் அல்லது கொல்லப்படு!
21. ப்ளாக் செப்டம்பர் ஆபரேஷன்!
22. பெரிய பூச்சாண்டி
23. காஸ்ட்ரோவுக்கு எதிராக புரட்சி?
24. சுருட்டுக்குள் வெடிகுண்டு
25. அமெரிக்கர்களையே நடுங்க வைக்கும் சி.ஐ.ஏ.!
26. சி.ஐ.ஏ.வின் கண்களில் மண்ணைத் தூவிய இந்தியா
27. சதிகளுக்கு விசா
28. வளர்த்த கடா
29. ஆப்கன் மாமனார்
30. அமெரிக்காவில் இஸ்லாமிய ஆட்சி!
31. வெள்ளை மாளிகையின் மர்ம உத்தரவு
32. பின்லேடனை பிடிக்காதது ஏன்?
33. ரசாயன ராட்சதன்
34. தலிபான் உருவான கதை
35. விபரீத விளையாட்டு
36. வலையில் சிக்கிய பாகிஸ்தான்
37. ஜெகஜ்ஜால ஜியா!
38. பணம் கறக்கும் காமதேனு!
39. இந்தியாவின் வெற்றி... இஸ்லாத்தின் தோல்வி?
40. விலை போகும் இந்தியர்கள்!
எந்தப் பக்கம் திரும்பினாலும்...
பகையாளியை உறவாடிக் கெடு என்று ஒரு முதுமொழி உண்டு. இன்றைக்குப் பங்காளியைக் கூட உறவாடிக் கெடு என்று புதுமொழி உண்டாக்கும் அளவுக்கு உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது உளவு! நாடுகளுக்கு இடையே என்றில்லை... பெரும் நிறுவனங்களுக்கு இடையேயும் பெரிய பிரச்னையாக உருவெடுத்து நிற்கிறது உளவு!
அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு நாட்டின் மூவரில் ஒருவர் வேறு ஒரு நாட்டின் அல்லது வேறு நாட்டு நிறுவனத்தின் உளவாளியாக இருப்பார் என்று சர்வதேச அறிக்கை ஒன்று அலறுகிறது. அப்படி உளவாளியாக இருப்பது அவருக்கே தெரியாது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் தலை சீவப்பட்டார், நம் ஆந்திராவைச் சேர்ந்த இன்ஜினீயர் சூர்ய நாராயணா. அவர் செய்த குற்றம் என்ன... அமெரிக்காவுக்காக எங்களை உளவு பார்த்தார் என்று சொல்கிறார்கள், தலிபான் தீவிரவாதிகள். சூர்யநாராயணா உளவு பார்த்தார் என்பது நிரூபிக்கப்படவில்லை. ஆனால் உலகெங்கும் அப்பாவிகள் பலர் அவர்களுக்கே தெரியாமல் இப்படி உளவு வேலைகளில் இறக்கி விடப்பட்டுள்ளனர் என்பது மட்டும் உண்மை!
ஒரு நாட்டை அபகரிக்க அல்லது ஆக்கிரமிக்க யுத்தம் ஒன்றே வழி என்பது பழைய கோட்பாடாகி விட்டது. கடந்த கால சரித்திரங்களில் வேண்டுமானால் யுத்தத்தின் பங்கு இன்றியமையாததாக இருக்கலாம். எதிர்கால சரித்திரத்தில் யுத்தத்தின் பங்களிப்புக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவுதான்.
இதை வைத்து, உலகின் வலிமை மிக்க நாடுகள் எல்லாம் சைவமாகி விட்டன என்று அர்த்தம் செய்து கொள்ளக் கூடாது. முந்தைய காலங்களைப் போல நோஞ்சான் நாடுகளைப் பிடிக்கும் ஆசை இல்லா விட்டாலும், அவற்றை அடிமைகளாக ஆட்டிப் படைக்கும் பேராசை எல்லா வலிய நாடுகளிடமும் இன்றைக்கும் இருக்கவே செய்கிறது. அந்த வகையில் அவை ருத்ராட்சப் பூனைகளாகத்தான் நாக்கைத் தொங்க விட்டுக் காத்திருக்கின்றன. ஆனால், தங்கள் ஆசையை அவை பூர்த்தி செய்து கொள்ள யத்தத்தை நம்பவில்லை. யுத்தத்துக்கு நிகரான, ஆனால் பேரழிவை உண்டாக்காத, மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன. அந்த மாற்றுப் பாதைதான் உளவு!
இனி உளவுதான் உலகம். ஒற்றர்கள்தான் அதன் உண்மையான தலைவர்கள். தன் எதிரியின் ரகசியங்களைத் தெரிந்துகொண்டு அவனை முன்கூட்டியே செயலிழக்கச் செய்கிற அரசும், நிறுவனங்களும் தான் இனி உலகை சர்வாதிகாரம் செய்யப் போகின்றன. ஒரு நாட்டை எதிரி யிடமிருந்து காக்க மட்டுமே முன்பு உளவு பயன்பட்டது. அந்த உளவாளிகள் வெளிச்சத்துக்கு வராத தேசத் தியாகிகளாகக் கருதப்பட்டார்கள். ஆனால், இனி காட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கிற எல்லாருக்குமே உளவு என்பது ஓர் அற்புதத் தொழில். முன்பு உளவு என்பது ஒரு அரசாங்கத்தின் சார்பான ரகசிய வேலை. இப்போது அதுவும் தனியார் மயமாக்கப்பட்டுவிட்ட து!
உங்கள் அலுவலகத்தில்... உங்கள் பயணத்தில்... இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே ஓர் உளவாளி நிச்சயமாக இருக்கக்கூடும், உஷார்!
இப்படிப்பட்ட மாஃபியாக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் உளவு இலக்கிலிருந்து இன்றைக்கு ஒரு தேசத்தையோ அல்லது ஒரு பெரும் நிறுவனத்தையோ எப்படிக் காப்பாற்றுவது?
தலைவர்களிடமிருந்து ஒற்றர்களின் கைகளுக்குப் பல ராஜ்யங்கள் எப்படி மாறியிருக்கின்றன... இன்னும் பல தேசங்கள் எப்படியெல்லாம் உளவாளிகளின் கைகளில் வீழ்ந்து கொண்டிருக்கின்றன... இப்படிப்பட்ட திடுக்கிடும் உண்மைகளைக் கொண்ட விறுவிறுப்பான கட்டுரைகள்தான் உஷார், உளவாளி!
எழுத்தாளனின் எழுத்துக்கள் பரிமளிப்பது அந்தப் படைப்பு வெளியாகும் பத்திரிகையின் ஆசிரியர் குழுவின் கையிலிருப்பதாக நம்புபவன் நான். காரணம், நானும் ஒரு பத்திரிகையாளனாக இருந்ததுதான். அதுவும் எங்கள் எம்.டி. (திரு எஸ். பாலசுப்பிரமணியன்) கைவைத்தால் கட்டுத் தறி கவி பாடும். ஒவ்வொரு அத்தியாயத்திலும் அவர் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் தேடும் போது நாம் சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்ல வைக்கவே அந்தக் கேள்விகள் பிறந்தன என்பது நமக்குப் புரிய வரும். ஒரு எழுத்தாளனிடம் எப்படி எழுத்தை வரவழைப்பது என்பது அவருக்கே உரிய தனிக்கலை. இந்தக் கட்டுரைகள் பேசப்படும் என்றால் அதற்கு அவருடைய பங்கு மகத்தானது.
உட்கார்ந்து படிக்க முடியாத உடல்நிலை பாதிப்பிலும் எனக்காக மூன்று மணி நேரம் ஒரே மூச்சில் இந்த நூலைப் படித்து, அதே மூச்சில் அணிந்துரை எழுதிக் கொடுத்த, இந்த நூற்றாண்டின் கவிதை பிதாமகர் கவிஞர் வாலிக்கு என் இதயம் கலந்த நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன்.
சுதாங்கன்
சந்தேகம்தான் தெளிவின் தாய்
எதையும் சந்தேகப்படு! - இதுதான் கார்ல்மார்க்ஸ் இறுதியாகச் சொன்ன வாக்கியம் என்பார்கள்.
ஒரு பொருளைப் பற்றியோ - ஒரு செயலைப் பற்றியோ - ஒரு நபரைப் பற்றியோ - ஒரு தத்துவத்தைப் பற்றியோ -
ஆராய்ந்து அதன்பின் அதைக் கொள்ளல் வேண்டும்; அல்லது அதனைத் தள்ளல் வேண்டும்.
ஆறாம் அறிவை மானுடம் பெற்றிருப்பது அதன் பொருட்டுத்தான்.
மானுடம் தோன்றி அறிவுடன் செயல்படத் தொடங்கிய காலம் தொட்டே - பரஸ்பரம் ஐயுறுதல் ஏற்பட்டுவிட்டது - அது வீடாயினும் சரி, நாடாயினும் சரி!
சந்தேகம்தான் தெளிவின் தாய். தெளிவில்லாமல் தொடர்ந்து சந்தேகிப்பதுதான் நோய்.
சந்தேகம் சனித்தவுடன் - ஒரு தனி நபரோ, தேசமோ செய்யும் காரியம்தான் ஒற்றாடல். இது அநாதி காலமாக இருந்து வருவதை இந்நூல் தக்க சான்றுகளுடன் தெரிவிக்கிறது.
வேவு பார்த்தல் பற்றி வேதத்தில் வருகிறது; ஒற்றாடல் பற்றி வள்ளுவம் ஓதுகிறது; உளவு பார்த்தல் பற்றி அர்த்த சாஸ்திரம் அறிவிக்கிறது; துப்பறிதல் பற்றி மகாபாரதம் துல்லியமாகப் பேசுகிறது.
மேற்சொன்ன யாவையும் என்னளவில் ஓரளவு தெரிந்தவனாயிருப்பினும் - அவற்றினைச் சான்றுகளோடு அந்தந்த நூல்களிலிருந்து எடுத்துக்காட்டித் தொகுத்திருப்பதற்கு சுதாங்கன் அவர்களுக்கு நூறு சபாஷ் போடலாம்.
இது சாதாரணமான காரியம் அல்ல. நிறைய நூல்களை இடையறாது படித்திருக்க வேண்டும். அத்தகு நூல்களைப் பெற ஆயிரக்கணக்கில் செலவு செய்திருக்க வேண்டும். வேறு வேலைகளைச் சற்று ஓரங்கட்டி விட்டு - முழு மூச்சாக அந்த நூல்களில் முழுகி முக்குளித்திருக்க வேண்டும்.
இத்துணை பாடுகளையும் சுதாங்கன் பட்டிருப்பது நூலின்கண் வரிக்கு வரி தெரிகிறது. சுதாங்கனின் நுண்மாண் நுழைபுலம் கண்டு நான் வியந்து போனேன்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் ஓர் ஆளுமை இருந்தால் மட்டும் போதாது. உலக சரித்திரம் - சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்த இரு உலகப் போர்கள் - அதன் பொருட்டு ஒவ்வொரு யுத்தத்தின் போதும் மேற்கொள்ளப்பட்ட உளவுகள் - ஆகியவை பற்றி விரிவான வாசித்தலும், அதை நினைவு கொள்ளலும் மிக மிக அவசியம்.
சுதாங்கன் சிறந்த பத்திரிகையாளர், சிறந்த எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், சிறந்த பத்திரிகை ஆசிரியர், சிறந்த நாடக திரைப்பட நடிகர், நல்ல சங்கீத ரசிகர்.
அனைத்திற்கும் மேலாக, நிறைய கற்றிருந்தும் நிறை குடமாய் நின்றிலங்கும் பொறையைக் கற்றவர்.
எவரோடும் எளிமையாய்ப் பழகும் நல்ல பண்பாளர். திரையுலகமும், பத்திரிகையுலகமும், சுதாங்கனை நன்கு அறியும். நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
என்னளவில், அவர் எனக்கு மிகவும் இஷ்டமானவர். என்னைப் போலவே உள்ளத்தில் உள்ளதை ஒளியாது பேசுபவர், எழுதுபவர்.
உஷார்... உளவாளி எனும் சுதாங்கனின் இந்த நூலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். சுமார் மூன்று மணி நேரம் நான் உலக உலா வந்தேன் எனில் அது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை.
இப்புத்தகத்தை யார் படிக்கத் துவங்கினாலும் எடுத்த பின் கீழே வைக்கத் தோன்றாது என நான் உறுதியாகக் கூறுகிறேன்.
உலக உளவுகள் பற்றிய நிகழ்வுகளை ஒரு துப்பறியும் தொடர் போல அதற்குரிய விறுவிறுப்போடும் திருப்பங்களோடும் எழுதுவது இலேசான காரியமல்ல; சிரமமான காரியம்.
அந்தச் சிரமமான காரியத்தை - சிலாகிக்கும் வண்ணம் சிறப்புற ஆற்றியிருக்கிறார், நண்பர் சுதாங்கன்.
இந்த நூல், உலக உளவுகளைப் பார்க்க - ஓர் இனிய சாளரம். வாசித்து, நான் சொன்னவற்றை உண்மையென்று வாசகர்கள் வழிமொழிவார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.
அற்புதமான புத்தகம், நமக்கு அறிவு கொளுத்தும் புத்தகம், நம் அறியாமையைக் கொளுத்தும் புத்தகம்.
வாலி
***
இந்நூல் ஒரு தசாப்தத்தின் முன் காலமான என் தந்தை எஸ். பிச்சுமணிக்கும் தன் மாமனாருடன் அதற்கு அடுத்த ஆண்டு இறுதிப் பயணமான என் மனைவி திருமதி சாந்திக்கும்...
1. சபாஷ்... உளவாளி!
உன்னையும் தெரிந்துகொண்டு, உன் எதிரியையும் தெரிந்துகொண்டால், நூறு போர்களைச் சந்திக்க வேண்டியிருந்தாலும் கவலைப்பட வேண்டாம். உன்னைத் தெரிந்துகொண்டு, உன் எதிரியைத் தெரிந்துகொள்ளவில்லை என்றால், உன் ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் ஒரு தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும். உன்னையும் தெரிந்து கொள்ளாமல், உன் எதிரியையும் தெரிந்து கொள்ளாமல் இருந்தால், நீ ஒரு முட்டாள். ஒவ்வொரு போரிலும் நீ தோல்வியையே சந்திப்பாய்.
ஸன் ஸுய், முன்னாள் சீன ராணுவத் தளபதி, தி ஆர்ட் ஆஃப் வார் (The art of war) புத்தகத்தில். 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் தேதி பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்தது. பாகிஸ்தானிலுள்ள சிந்து பகுதியில் இந்திய உளவுத் துறையான ரா அமைப்பைச் சேர்ந்த ஐந்து உளவாளிகளை பாகிஸ்தான் கைது செய்திருக்கிறது. - இதுதான் அந்தச் செய்தி. இச்செய்தி மக்கள் மனதில் பதியவில்லை. அதே சமயம், தலைநகரான டெல்லியின் அரசியல் அதிகார பீடங்களில் இது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. செய்தியின் முக்கியத்துவம் உள்துறை அமைச்சரகத்தை வேறொரு வகையில் சுறுசுறுப்பாக்க, இந்தியாவில் ஊடுருவியிருக்கும் பன்னாட்டு உளவாளிகள் விஷயத்தில், தீவிரமான நடவடிக்கைகள் ஆரம்பமாயின.
வைக்கோல் போருக்குள் ஊசியைத் தேடுவது போல் இந்தத் தேடுதல் வேட்டை, எவ்வளவு தூரம் பலன் தரும் என்பதுதான் உளவுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளின் கேள்வி. கடந்த ஒரு வருட காலமாகவே இப்படி ஒரு மாரீசமான் வேட்டையைத் துவங்கியிருக்கிறது இந்தியா. இந்த மாரீசமான் வேட்டையைப் பற்றி எத்தனை இந்தியர்களுக்குத் தெரியும்? எங்கு நடக்கிறது இந்த வேட்டை? இந்த இரண்டாவது கேள்விக்கான பதில்தான் மிகவும் சுவாரசியமானது. ஆம், மத்திய அரசின் உளவுத் துறையான ரா (RAW - Research and Analysis Wing) அமைப்பில் தான் வேட்டை ஆரம்பமானது. அதன் பிறகு இந்தியத் தூதர்கள் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கும் கறுப்பு ஆடுகளைத் தேடி உலகமெங்கும் இருக்கும் இந்தியத் தூதரகங்களில் இந்த வேட்டை தொடர்கிறது.
இந்திய ஒற்றன் என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் அந்த அமெரிக்க சி.ஐ.ஏ. உளவாளிகள் அல்லது இஸ்ரேல் உளவு நிறுவனமான மொஸாட்டின் ஏஜன்ட்கள் யார்... கண்ணுக்குப் புலப்படாத அந்த மாரீசமான்கள் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்... இதுவரை இந்திய நாட்டின் பாதுகாப்பு ரகசியங்கள் எவ்வளவு வெளியே போயிருக்கிறது... எத்தனை அணு ஆயுத ரகசியக் குறிப்புகள் பல கோடி அமெரிக்க டாலர்களுக்காக கை மாறியிருக்கிறது... சி.ஐ.ஏ.வும், மொஸாட்டும் நம்மை அச்சுறுத்துவதற்காக நம் நாட்டுக்குள் ஊடுருவி இருக்கும் எந்த தீவிரவாத அமைப்பிடம் அந்த ரகசியங்களைக் கொடுத்திருக்கின்றன என்றபடி பதற்றத்தோடு தேடிக் கொண்டிருக்கிறது இந்தியா.
இந்தத் தேடுதல் நடக்கும் போதே 2003ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி, காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் தன் வாலை ஆட்ட ஆரம்பித்துவிட்டது இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பான அல்மன் சூரியன். அங்குள்ள வருமான வரித் துறை, பாஸ்போர்ட் அலுவலகங்களைக் குறி வைத்து மத்திய ரிசர்வ் காவல் படையினருடன் நேரடி மோதலில் இறங்கியது இந்த அமைப்பு.
தீவிரவாதிகளுடனான ஆயுதப் போராட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அதன் முதல் கட்டமாக ரா அமைப்பின் பல உயர் அதிகாரிகள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். ரா அமைப்பின் ஓர் உயர் அதிகாரி பல மாடிக் கட்டடத்தின் மேலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
ஏன் இந்த வேட்டை... ஏன் இந்த ரகசிய விசாரணைகள்?
காரணம் இதுதான்.
2004 ஜூலை மாதம் 14ம் தேதி ஒரு செய்தி பத்திரிகைகளில் வந்தது. பலரும் மறந்து போன அந்தச் செய்தி மிகவும் முக்கியமானது. நம் நாட்டு உளவுத் துறையின் ஒரு பிரிவான ரா அமைப்புதான், அந்நிய நாட்டில் உளவு வேலைகளைக் கவனிக்கும். இந்தப் பிரிவின் இணை இயக்குநராக இருந்தவர் ரபீந்தர் சிங். தென்கிழக்கு ஆசியப் பிரிவைக் கவனித்துக் கொண்டிருந்த இவர், திடீரென்று காணாமல் போனார். பின்னர் அமெரிக்காவுக்குச் சென்று விட்டதாகத் தகவல் கிடைத்தது. ரபீந்தர் சிங் தப்பி ஓடுவதற்கு முன்பே மத்திய அரசின் மற்றொரு உளவுத் துறையான ஐ.பி. (Intelligence Bureau) சந்தேகப்பார்வை இவர் மீது விழுந்துவிட்டது. ஆனால், ரபீந்தர் சிங் மீண்டும் இந்தியாவுக்கு வந்து விட்டார். சென்ற வருடம் ஏப்ரல் 19ம் தேதி இவரிடம் விசாரணை துவங்கியது. புலனாய்வுத் துறை இவரைக் குடைந்தெடுக்க ஆரம்பித்தது. தெற்கு டெல்லியில் உள்ள ரா வின் தலைமை அலுவலகத்திலிருந்து மிக முக்கிய கோப்புகள் காணாமல் போயிருந்தன. அல்லது ரபீந்தர் சிங்கினால் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன. அதற்குப் பின்னும் ரபீந்தர் சிங் சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருந்தார்.
அப்போது நாடாளுமன்ற தேர்தல் நேரம். தேர்தல் முடிந்ததும் தன் மீதான விசாரணை தீவிரமாகும் என்பதை உணர்ந்தே இருந்தார் ரபீந்தர் சிங். நாட்டை விட்டு உடனே வெளியேறுமாறு அவருடைய அந்நிய நாட்டு ஆலோசகர்கள் உத்தரவிட்டனர். மே 14ம் தேதி ஒரு வாடகைக் காரை அமர்த்திக்கொண்டார் ரபீந்தர் சிங். தனது குடும்பத்துடன் நேபாளம் சென்றார். அவருடன் அவருடைய மைத்துனர் மோண்டி சைகலும் அவர் மனைவியும் சென்றனர். மைத்துனரும் அவர் மனைவியும் நேபாள் கஞ்ச் வரை சென்று விட்டு, சில நாட்களில் தலைநகரான டெல்லிக்குத் திரும்பிவிட்டனர். ரபீந்தர் சிங்கும் மனைவி பம்மியும் சில நாட்கள் நேபாளத்தில் தங்கினார்கள்.
இப்போது அவர்கள் பெயர் ரன்வீர் சர்மா, தீபா. அவர்களது பாஸ்போர்ட் இந்தப் பெயர்களில்தான் இருந்தன. பாதுகாப்பான இந்தப் பெயர் மாற்றுப் போர்வையில்தான் அவர்கள் மிகச் சௌகரியமாக அமெரிக்காவுக்குப் பறந்தார்கள்.
சிங் தப்பிவிட்டார். அவரைப் பணியிலிருந்து நீக்கிவிட்டார்கள். ஆனால், இன்று வரை அவர் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. அதன் பிறகு பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தலைமையில் விசாரணை துவங்கியது. ஏறக்குறைய ரா அதிகாரிகள் எழுபது பேர் விசாரணைக்கு உள்ளானார்கள்.
ரபீந்தர் சிங் உட்பட யார் மீதும் இன்றுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அப்படிச் செய்தால் ரா என்கிற அமைப்பே பத்திரிகை, டி.வி.க்கள் மற்றும் காவல் துறையின் கண்காணிப்புக்கு உள்ளாகும். அதனால் வழக்குப் பதிவு செய்யவில்லை. ரா வின் உயர் அதிகாரிகள் கூட்டம் கூடி விவாதித்தது. சிங் மீது பணியாளர் ரகசியச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம். அப்படிச் செய்தால், அவருடைய சொத்துக்களை முடக்கி அவரை இந்தியாவுக்குள் வரச் செய்யலாம் என்று ஆலோசனை சொன்னார் ரா அமைப்பின் தலைவர்.
ஆனால், எதுவும் நடக்கவில்லை. விவகாரம் வெளியில் வராமல் இத்தனை சம்பவங்களையும் ரா தன் மிதியடிக்குக் கீழே அமுக்கிவிட்டது.
உளவுத் துறையின் வண்டவாளங்கள் தண்டவாளங்களில் ஏறி விடக்கூடாது என்பதைத் தவிர இதற்குப் பெரிதாக காரணம் எதுவும் இல்லை!