AV.M. Thantha SP.M.
By Ranimaindhan
()
About this ebook
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தன் வாழ்க்கைப் பாதை சினிமாதான் என்று தீர்க்கமாகவும் தெளிவாகவும் முடிவு செய்து தன் தந்தையிடமும் தெரிவித்தவர், தமிழ்த் திரையுலகில் சரித்திரம் படைத்த இயக்குநர் எஸ்பி. முத்துராமன். மகனின் குறிக்கோளை ஈடேற்ற முயன்றார் தந்தை இராம. சுப்பையா.
இராம. சுப்பையாவோடு நட்பு கொண்டிருந்த ஏவி. மெய்யப்பச் செட்டியார், எஸ்.பி.எம்மை தன்வளர்ப்பு மகனாகவே பாவித்து திரைத்துறையில் காலூன்றச் செய்தார்.
ஏவி.எம். நிறுவனத்தின் எடிட்டிங் பிரிவில் ஒரு சாதாரண பயிற்சியாளராகச் சேர்ந்து, படிப்படியாக முன்னேறி அனைவரும் பாராட்டும் இயக்குநராக உயர்ந்தார் எஸ்.பி.எம். அதற்கு உறுதுணையாக அமைந்தது ஏவி.எம். என்ற பயிற்சிக்களமும், மெய்யப்பச் செட்டியாரின் அன்பும்தான் என்பதை இந்த நூலின் மூலம் உணரமுடிகிறது.
படம்பிடித்து காட்டும் இயக்குநரின் வாழ்க்கை அனுபவங்களையே படம்பிடித்துக் காட்டும் சுவைமிகுந்த வாழ்க்கைச் சித்திரம் இந்த நூல்.
Read more from Ranimaindhan
R.M.V. - Oru Thondar Rating: 0 out of 5 stars0 ratingsMalaichamy IAS (Retd) Rating: 0 out of 5 stars0 ratingsKalaimamani V.C. Guhanathan Rating: 0 out of 5 stars0 ratingsOru Neethiyarasarin Nedum Payanam Rating: 0 out of 5 stars0 ratingsJustice Jegadeesan Rating: 0 out of 5 stars0 ratingsOodaga Theni Sridhar Rating: 0 out of 5 stars0 ratingsNirvaga Aalumai N. Ramdas Rating: 0 out of 5 stars0 ratingsM.P.Nirmal – Oru Thani Mara Thoppu Rating: 0 out of 5 stars0 ratingsElumboodu Oru Vazhkai Rating: 0 out of 5 stars0 ratingsTata Steel Rating: 0 out of 5 stars0 ratingsNairsan Rating: 0 out of 5 stars0 ratingsIBM – Vizhuntha Company Ezhuntha Varalaru Rating: 0 out of 5 stars0 ratingsRasaram - 60 Rating: 0 out of 5 stars0 ratingsPayanangal – Paadangal Rating: 0 out of 5 stars0 ratingsAdayaril Innoru Aalamaram Rating: 0 out of 5 stars0 ratingsMusthafa Rating: 5 out of 5 stars5/5Thadaigal Pala Thaandi... Rating: 0 out of 5 stars0 ratingsAppachi Rating: 0 out of 5 stars0 ratingsSulthana Rating: 0 out of 5 stars0 ratingsN. Krishnasamy Rating: 0 out of 5 stars0 ratings
Related to AV.M. Thantha SP.M.
Related ebooks
Sugamana Sumaigal Rating: 0 out of 5 stars0 ratingsNaan Sanditha Prabalangal Rating: 0 out of 5 stars0 ratingsKanneer Thuliyil Kadalosai Rating: 0 out of 5 stars0 ratingsKathaigalum Thiraippadangalum Rating: 0 out of 5 stars0 ratingsMuganoolil Mugam Paarkirean Rating: 0 out of 5 stars0 ratingsThiraichudargal Rating: 0 out of 5 stars0 ratingsVelai Paduthum Paadu Rating: 0 out of 5 stars0 ratingsM.G.R 100 Rating: 0 out of 5 stars0 ratingsAasai Rating: 0 out of 5 stars0 ratingsThiruppumunai Nayagan M.G.R Rating: 0 out of 5 stars0 ratingsJune 3 Rating: 0 out of 5 stars0 ratingsYenipadigal Rating: 0 out of 5 stars0 ratingsSi(ri)thralaya Rating: 0 out of 5 stars0 ratingsVanthaanga Jeichaanga… Rating: 0 out of 5 stars0 ratingsMr and Mrs Iyer Rating: 0 out of 5 stars0 ratingsFirst Teacher Rating: 0 out of 5 stars0 ratingsKathanayakigalin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsM.G.R.-in Success Formula Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Paravai Rating: 0 out of 5 stars0 ratingsOviyamai Oru Pen Rating: 0 out of 5 stars0 ratingsThiraiyulagai Thirumbi Paarkkirargal Rating: 0 out of 5 stars0 ratingsBoogola Rambai Rating: 0 out of 5 stars0 ratingsNindru Olirum Sudargal Rating: 0 out of 5 stars0 ratingsHands - Up Rating: 0 out of 5 stars0 ratingsMella Veesum Vasanthangal Rating: 0 out of 5 stars0 ratingsBerovin Pinnal Rating: 0 out of 5 stars0 ratingsEnakkagava Babu? Rating: 0 out of 5 stars0 ratingsCharulatha Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Uravadu... Rating: 5 out of 5 stars5/5Spring Autumn Winter Summer Spring Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for AV.M. Thantha SP.M.
0 ratings0 reviews
Book preview
AV.M. Thantha SP.M. - Ranimaindhan
https://www.pustaka.co.in
ஏவி.எம். தந்த எஸ்பி.எம்.
AV.M Thantha SP.M.
Author:
ராணிமைந்தன்
Ranimaindhan
For more books
https://www.pustaka.co.in/home/author/ranimaindhan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. பாரம்பரியம்
2. பள்ளி மாணவன் முத்துராமன்
3. ‘தென்றல் தந்த அனுபவங்கள்’
4. கதவு திறந்த ஏவி.எம்.
5. எடிட்டிங்கில் தொடங்கியது சினிமா வாழ்க்கை
6. எடிட்டிங் துறை நண்பர்கள்
7. கமலாவின் கரம் பிடித்து...
8. உதவி இயக்குநர்
9. நடிகர் எஸ்பி. முத்துராமன்
10. இப்படியும் பாடல் கிடைத்ததுண்டு
11. வந்தார் திருலோகசந்தர்
12. என்ன மிஸ்டர் செட்டியார், இப்படிச் செய்யலாமா?
13. ரங்காராவுக்கு ஒரு பாடம்
14. அந்த சிவகுமாரா இன்றைய சிவகுமார்?
15. ‘அன்பே வா’ அனுபவங்கள்
16. எம்.ஜி.ஆர். விட்ட சவால்
17. முதல்வர் எம்.ஜி.ஆரிடம் முத்துராமன் கேட்டது
18. ‘ராமு’வில் கற்றது
19. வாங்க பிரதர், ஏவி.எம்மே வந்த மாதிரி இருக்கு
20. சஸ்பென்ஸ் அதே கண்கள்
21. "முத்துராமன், நீ இங்கேயே
‘வொர்க்’ பண்ணு"
22. ராமாயணமும், மகாபாரதமும் சலிக்குதா?
23. நள்ளிரவு இரண்டு மணிக்கு போன்
24. வேகமாக கிருஷ்ணன் நாயர்
25. மெதுவாக புட்டண்ணா
26. ஏவி.எம்மை விட்டு...
27. டைரக்டர் எஸ்பி. முத்துராமன்
28. ‘முத்துராமன் எங்க வீட்டுப் பிள்ளை’
என்றார் கலைஞர்
29. செல்வி ஜெயலலிதா ஹீரோயின்
எஸ்பி. முத்துராமன் டைரக்டர்
30. சென்ஸார் போர்டின் கை குலுக்கல்
31. கவிஞர் வாலி இயக்குநர் எஸ்பி.எம்.
32. வண்ணப்பட இயக்குநர்
33. கண் சிமிட்டிய ஊதாப்பூ
34. கேள்விக்குறியில் சில
ஆச்சரியக் குறிகள்
35. தொடர்ந்து சில தோல்விகள்
36. ‘ப்ரியா’
37. சிவாஜி காட்டிய முக பாவம்
38. ஆறிலிருந்து அறுபது வரை
39. இந்த சீனை நான் காப்பியடிக்கப்போறேன்
- புட்டண்ணா
40. முரட்டுக் காளை பின்னணி
41. ‘கவிதாலயா’வின் முதல் படம்
42. ஆர்.எம்.வீ. அவர்களின் பாராட்டு
43. ராணுவ வீரன்
44. போக்கிரி ராதிகா ராணி ஸ்ரீதேவி
45. புதுக் கவிதை
46. நெகிழ்ச்சியாக ஒரு நினைவு
47. ரிஸ்க் எடுப்பது கமலுக்கு அல்வா
48. ‘சில்க்கின்’ துணிச்சல்
49. மரணத்தின் வாயிலுக்கு...
50. கிளைமாக்ஸுக்கு கிளைமாக்ஸ்
51. சென்ஸார் கத்திரித்த காட்சி
52. கண்ணை இழுத்து ஒட்டி...
53. வில்லன் கார்த்திக்
54. ஐம்பதாவது படம்
55. ரஜினி-100
56. ஜப்பான் தந்த அனுபவம்
57. என்னம்மா கண்ணு, சௌக்யமா?
58. ‘ராதா பொண்ணுன்னு நிரூபி’
59. தெலுங்கில் பெற்ற அனுபவம்
60. எஸ்பி.எம்முக்கு கே.பி. செய்த உதவி
61. ஏவி.எம்மின் பேர் சொன்ன பிள்ளை
62. தயாரிப்பாளர் - டைரக்டர் உறவு
63. 23 நாட்களில் ஒரு படம்
64. ‘மனிதரில் புனிதர்’
65. இது எனக்கு... இது முருகனுக்கு...
66. ரஜினியும், குழந்தைகளும்
67. ஸான்ட்விட்ச் வந்தால்...
68. காதில் பூ சுத்தராங்க...
69. ஏவி.எம்மின் சின்னத்திரை பிரவேசம்
70. அப்படியும் இல்லை... இப்படியும் இல்லை...
71. தன் யூனிட்டுக்காக...
72. ‘பாண்டியன்’ படத்துக்குப் பிறகு...
73. எஸ்பி.எம். குடும்பம்
74. எஸ்பி. முத்துராமன் இன்று...
திரைப்பட மூத்த இயக்குநர் எஸ்பி. முத்துராமன் அவர்களின் அனுபவங்கள்...
ராணிமைந்தன்
முதல் பதிப்புரை உழைப்பு தந்த பரிசு
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு தன் வாழ்க்கைப் பாதை சினிமாதான் என்று தீர்க்கமாகவும் தெளிவாகவும் முடிவு செய்து தன் தந்தையிடமும் தெரிவித்தவர், தமிழ்த் திரையுலகில் சரித்திரம் படைத்த இயக்குநர் எஸ்பி. முத்துராமன்.
மகனின் குறிக்கோளை ஈடேற்ற முயன்றார் தந்தை இராம. சுப்பையா. அதன் முதல்படியாக கண்ணதாசனின் ‘தென்றல்’ பத்திரிகையில் பணியாற்றும் வாய்ப்பை எஸ்பி.எம். பெற்றார்.
இராம. சுப்பையாவோடு நட்பு கொண்டிருந்த ஏவி. மெய்யப்பச் செட்டியார், எஸ்.பி.எம்மை தன்வளர்ப்பு மகனாகவே பாவித்து திரைத்துறையில் காலூன்றச் செய்தார்.
ஏவி.எம். நிறுவனத்தின் எடிட்டிங் பிரிவில் ஒரு சாதாரண பயிற்சியாளராகச் சேர்ந்து, படிப்படியாக முன்னேறி அனைவரும் பாராட்டும் இயக்குநராக உயர்ந்தார் எஸ்.பி.எம். அதற்கு உறுதுணையாக அமைந்தது ஏவி.எம். என்ற பயிற்சிக்களமும், மெய்யப்பச் செட்டியாரின் அன்பும்தான் என்பதை இந்த நூலின் மூலம் உணரமுடிகிறது.
திரைத்துறையில் கிருஷ்ணன் பஞ்சு, பீம்சிங், ரிஷிகேஷ் முகர்ஜி, திருலோகசந்தர், குகநாதன் போன்ற ஜாம்பவான்களோடு பணியாற்றிய அனுபவங்கள் குறித்து எஸ்பி.எம் கூறிய சுவையான செய்திகளை அழகாகத் தொகுத்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ராணிமைந்தன். எம்.ஜி.ஆர்., சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற பிரபலங்களோடு பணியாற்றிய அனுபவங்களையும், அவர்களின் குணநலன்களையும் பல இடங்களில் நினைவுகூர்ந்துள்ளார்.
படம்பிடித்து காட்டும் இயக்குநரின் வாழ்க்கை அனுபவங்களையே படம்பிடித்துக் காட்டும் சுவைமிகுந்த வாழ்க்கைச் சித்திரம் இந்த நூல்.
- ஆசிரியர்
M. SARAVANAN
அணிந்துரை
ஒரு டைரக்டரை - பல குதிரைகளையும் கன்ட்ரோல் செய்து தேரை ஓட்டிக்கொண்டு போகிற சாரதி, கப்பலின் கேப்டன், ரிங் மாஸ்டர் என்று பலவிதமாக வர்ணிக்கலாம்.
இவை எல்லாவற்றுக்கும் பொருத்தமானவர் டைரக்டர் எஸ்பி. முத்துராமன். எனவேதான் மிக அதிகமான எண்ணிக்கையில் வெற்றிப்படங்களைத் தர அவரால் முடிந்தது. இவருடைய வெற்றிப் பட சதவிகிதம் மற்றெந்த டைரக்டரை விடவும் அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சினிமா உலகில் அவரைப் பிடிக்காதவர் என்று யாருமே இருக்க முடியாது. விரோதிகள் இல்லாதவர். எல்லோருக்கும் நண்பர். மற்றவர்களுக்காக அவர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும், படும்சிரமங்களும் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
பலருக்கு நல்ல பேர், புகழ், வெற்றி எல்லாம் சேர்ந்திருக்கும். ஆனால், மனதில் நிம்மதி இருக்காது. ஆனால், முத்துராமன் அவர்கள் நல்ல பேரையும், புகழையும், வெற்றியையும் சேர்த்து வைத்திருக்கும் அளவுக்கு மனதில் நிம்மதியையும் சேர்த்து வைத்திருக்கிறார். திரையுலகில் இரண்டு பேரைப் பற்றி இதுவரை எந்த கிசுகிசுவும் வந்ததாக எனக்கு நினைவில்லை. ஒருவர் நடிகர் சிவகுமார், இன்னொருவர் எஸ்பி.எம்.
எங்கே உரையாற்றினாலும் பொருத்தமான ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டாமல் முத்துராமன் தன் உரையை முடிக்க மாட்டார். வெறுமனே குறளை சொல்வதோடு நிற்காமல் குறள் வழி வாழ்ந்து கொண்டிருப்பவர் எஸ்பி.எம். என்றால் அது மிகையில்லை.
இப்படி ஒரு மனிதர் திரையுலகில் இருந்தார் என்று எதிர்காலத்தில் சொன்னால் எத்தனை பேர் நம்புவார்களோ தெரியாது. அதனால்தான், அவரது வாழ்க்கை அனுபவங்கள் புத்தகமாக வரவேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன். இந்தப் புத்தகம் அவரைச் சரியாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
முன்பெல்லாம் ‘ஹோ அண்ட் கோ’ கம்பெனியின் டைரி ரொம்பப் பிரசித்தம். ஒவ்வோர் ஆண்டும் அந்த டைரியில் ‘ஜென்டில்மேன்’ என்ற வார்த்தைக்கு விளக்கம் கொடுத்திருப்பார்கள். அந்த விளக்கத்துக்கு வாழும் உதாரணம் எஸ்பி. முத்துராமன் அவர்கள்.
(மெ. சரவணன்)
EFFORTS NEVER FAIL
எல்லோருக்கும் நல்லவனாகயிருப்பது கடினம், அப்படியிருப்பவர்கள் சமரசவாதிகள், சந்தர்ப்பவாதிகள் என்ற கூற்றை, தான் வாழும் முறையால் பொய்ப்பித்துக் கொண்டிருப்பவர், திரு.எஸ்.பி. முத்துராமன் அவர்கள்.
மற்றவர்களுக்குச் செய்யும் அன்பையும், மரியாதையையும், ஏன் விமர்சனங்களையும்கூட நேர்மையாகச் செய்தால் எல்லோருக்கும் நல்லவனாயிருக்க முடியும் என்ற பாடத்தை நான் திரு. எஸ்.பி.எம். போன்றவர்களிடம்தான் கற்றேன்.
இந்த முன்னுரைகூட அந்த பாணியில் வந்ததுதான். முதல் பத்து பக்கங்கள், நடுவில் பத்து பக்கங்கள், கடைசியில் பத்து பக்கங்கள் என்று படித்துவிட்டு நான் முன்னுரை எழுதுவதே இல்லை. அதிலும் திரு. எஸ்.பி.எம். சார் அவர்களைப் பற்றிய இந்த வாழ்க்கைக் குறிப்புப் புத்தகத்தில் எழுதப்படாத பல பக்கங்கள்கூட எனக்குத் தெரியும். நான் நினைவு பெறுவதற்கு முன்னால் அவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்தான் எனக்கு செய்திகள், மற்றவை; அவர் வாயாலும், என் அனுபவத்தாலும் கேட்டு, கண்டு உணர்ந்த உண்மைகளே.
பழைய காழ்ப்புகள் எதையும் மனதிலும் புத்தகத்திலும் பதியாமல் செய்திருப்பது எஸ்பி.எம். யுக்தி அல்ல... அவர் புத்தியே அப்படிப்பட்டது. இந்தப் புத்தகத்தில் பதியாத, ஆனால் என் மனதில் பதிந்த ஒரு நிகழ்வை இங்கே நினைவுகூர்கிறேன்.
என் பகுத்தறிவுக் கொள்கையை நான் எப்போதும் மறைப்பதில்லை என்றாலும் யார் மீதும் திணித்ததில்லை. அதேசமயம், என் கொள்கையை கிண்டலடிப்பவர்களை நான் மன்னிப்பதில்லை. ஒரு முறை சினிமாவுக்கே உரித்தான மூட வழக்கங்களில் பங்குகொள்ள விரும்பாது ஒதுங்கி நின்ற என்னைப் பார்த்து, நெற்றியில் விபூதியுடன் திரு. எஸ்பி.எம். அவர்கள் புன்னகைத்தது கேலிச் சிரிப்பாகவே எனக்குப்பட்டது.
என்ன சார், அம்மாவும் நீயே அப்பாவும் நீயேன்னு நெற்றியில் திருநீரு துலங்க பாடிய பிள்ளை இப்படி ஆயிட்டானேன்னு சிரிக்கிறீங்களா?
என்றேன்.
அதுக்கு சிரிப்பாங்களாயா...? கவலையில்ல படணும்..!
என்றார்.
அப்போ சிரிப்புக்கு என்ன அர்த்தம்...? வயது வரும்போது ஆத்திகத்தை அரவணைப்பாய் பார் என்று மனதில் நினைத்துப் புன்னகையா?
என்றேன்.
நல்ல நடிகன் ஒனக்கே புரியலையே?
என்றார்.
சொல்லிப் புரிய வைங்க!
என்றேன்.
அவரது விளக்கத்தின் பொழிப்புரையின் சாரம் இந்தப் புத்தகத்தில் ‘பாரம்பரியம்’ என்ற தலைப்பிட்ட அத்தியாயத்தில் வருகிறது. ‘கடைந்தெடுத்த நாத்திகவாதியின் பிள்ளை நான் இப்படி இருக்க, பரம பக்தர் ஸ்ரீனிவாசனின் பிள்ளை இப்படி இருக்கிறதே’ என்ற அவர் எண்ணத்தின் எதிரொலிதான் அந்த சிரிப்பு என்பதை எனக்குப் புரிய வைத்தார்.
தந்தையிடம், தான் படிக்க விரும்பவில்லை; S.S.L.C., B.A.வை விட இரண்டெழுத்துக் கூடுதலான படிப்பு என்ற நகைச்சுவை கலந்த அழுத்தமான அவர் முடிவு போலவேதான், நான் ஆத்திகனாகவும் இருக்க விரும்புகிறேன் என்பதையும் தன் தகப்பனார் மனம் கோணாமல் சூசகமாக சொல்லி அனுமதியும் வாங்கியிருப்பார் திரு. எஸ்பி.எம். அவர்கள்.
ஏவி.எம்மிடம் அவருக்கு இருக்கும் விசுவாசம் வியாபாரயுக்தி அல்ல என்பதற்கு அவர் வாழ்க்கைக் குறிப்பே எடுத்துக்காட்டு. அவரது விசிட்டிங் கார்டில், ஒரு கை சினிமா view finderஐ பிடித்தபடி இருக்கும். அந்தப் படத்தின் கதைச்சுருக்கம் இந்தப் புத்தகத்தில் உள்ளது.
என்னை பல பெரியவர்கள் உள்ள கூட்டத்தில் பார்க்க நேர்ந்தால், என்ன கமல் சார் சௌக்கியமா?
என்று நலம் விசாரிப்பார். தனியறை சந்திப்புகளில் ஏகவசனத்தில் தன் அன்பையும், தேவைப்பட்டால் விமர்சனத்தையும் அள்ளித்தரும் அன்பு அண்ணன் திரு. எஸ்பி.எம். அவர்கள்.
பெரிய படத்துக்காகப் போடப்படும் பிரமாண்டமான அரங்குகள் பிற்பாடு வேறு கதைகளுக்கும் பயன்படும். அதுபோல், திரு. எஸ்பி.எம். அவர்களின் வாழ்நாள் குறிப்பு இடம்பெறும் முக்கிய அரங்கமான ஏவி.எம். என்ற அதே பிரமாண்டமான அரங்கில்தான் என் வாழ்க்கைக் குறிப்பின் ஒரு பகுதி அடங்கும். மனதால் அவர் என்னைவிட இளைஞர் என்பதனால் மட்டும் எனக்கு வாழ்த்தும் வயது வந்துவிட்டதாகாது. ஆகவே நல்லார் ஒருவருக்கும், நல்லதோர் வாழ்க்கைக்கும் என் வணக்கங்கள்.
அன்புடன்,
கமல்ஹாசன்
Rajinikanth
# 18, Raghavaveera Avenue, Poes Garden, Chennai - 600 086
Ph: 2499 278/ 2499 1291 Fax: 2499 7418
Date: 15.09.2009
எனக்குப் பிடிக்காத இடங்களில் நான் இருக்கமாட்டேன்; எனக்குப் பிடிக்காதவர்களிடம் அதிகமாகப் பேசமாட்டேன். அப்படி இருக்க, எஸ்பி. முத்துராமன் அவர்களின் இயக்கத்தில் 25 படங்களில் நான் நடித்திருக்கிறேன் என்றால் என்னுடைய 35 ஆண்டு சினிமா வாழ்க்கையில் கிட்டத்தட்ட பாதி சினிமா வாழ்க்கையை எஸ்பி. முத்துராமன் சாரோட கழித்திருக்கிறேன். இதிலிருந்து அவர் எனக்கு எவ்வளவு பிடித்தவர் என்று நீங்களே கணிச்சிக்கலாம்.
இவ்வுலகில் மகாத்மா காந்தியைகூட கெட்டவர்னு சிலர் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், சினிமா துறையில் முத்துராமன் அவர்களைப் பற்றி யாராவது கெட்டதாகப் பேசி யாரும் கேள்விப்பட்டதில்லை. சினிமா துறையில் எனக்குத் தெரிந்து அவர் ஒரு துறவி. உண்மையாய், நாணயத்துடன், நேர்மையுடன், விவேகத்துடன், தன்னடக்கத்துடன் உழைத்து உயர்ந்தவர்.
அவருடனான எனது நட்பு மற்றும் மறக்கமுடியாத சம்பவங்களை நான் சொல்ல இந்த முன்னுரையில் இடம் போதாது. அவருடைய வாழ்க்கை வரலாறு எழுதப்பட வேண்டும் என சொன்னவர்களில் நானும் ஒருவன். இப்போதாவது அதை எழுத ஒப்புக்கொண்டதற்கு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கண்டிப்பாக இது கோடம்பாக்கத்து மகாத்மாவின் சுயசரிதம்தான். இந்த ‘ஏவி.எம். தந்த எஸ்பி.எம்’ புத்தகத்தில் ஒரு வார்த்தைகூட பொய்யில்லை என்பதை நான் வாசகர்களுக்கு ஆணித்தரமாகச் சொல்ல விரும்புகிறேன்.
வாழ்க முத்துராமன் சார்!
இப்படிக்கு,
என்றும் உங்கள்
முதற்பதிப்பு - என்னுரை
இந்த புத்தகம் மகாத்மா காந்தி எழுதிய சுயசரிதை அல்ல, கவியரசர் கண்ணதாசன் எழுதிய ‘வனவாசம்’ அல்ல. தமிழ்த் திரையுலகில் எஸ்.பி. முத்துராமன் என்ற இயக்குநரின் ஐம்பதாண்டு கால அனுபவங்களின் தொகுப்பு. என் இளமைப் பருவத்தில் தொடங்கி, என் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துவிட்ட திரையுலகில் நான் பெற்ற அனுபவங்களில் தொடர்ந்து, இன்றைய என்னுடைய நிலைமை வரை இந்த நூல் சொல்கிறது.
எப்போதுமே என்னைப் பற்றி சொல்லிக்கொள்ள விரும்பாதவன் நான். விளம்பர வெளிச்சம் என்மீது விழுவதை விரும்பாத சினிமாக்காரன்.
என் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் என்று நண்பர் ராணிமைந்தன் கேட்டுக் கொண்டிருந்தார். ‘அவசியம்தானா?’ என்ற கேள்வி அடிக்கடி என்னுள் எழுந்து ‘வேண்டாமே, முடிந்தவரை தவிர்க்கப் பார்’ என்று என் மனதின் பதிலும் கிடைத்துக் கொண்டிருந்ததால் நான் தவிர்க்க முயன்றேன்.
ஆனால், என் மதிப்பிற்குரிய திரு. ஏவி.எம். சரவணன் சார் அவர்கள் ‘உங்கள் வாழ்க்கை அனுபவங்கள் புத்தகமாக வெளியாக வேண்டும். விளம்பரத்தை நாடாதவர் நீங்கள் என்பதால் மறுக்கிறீர்கள் என்றும் எனக்குத் தெரியும். உங்களுக்குக் கிடைத்திருக்கும் திரையுலக அனுபவங்கள் மற்ற எந்த இயக்குநருக்கும் கிடைத்திருக்காது. உங்கள் அனுபவங்களை மற்றவர்களும் படிக்க வேண்டும். இது என் விருப்பம். நான் ராணிமைந்தனை அனுப்பி வைக்கிறேன். நீங்கள் ‘மெமரி லேனி’ல் பயணம் செய்யுங்கள். மற்றதை அவர் பார்த்துக்கொள்வார்’ என்றார்.
சரவணன் சாரின் அன்புக் கட்டளையை எப்படி என்னால் மீற முடியும்?
நாங்கள் பெரிதும் மதிக்கும் பத்திரிகை ஆசிரியர் திரு. சாவி அவர்களின் சீடர் ராணிமைந்தன். அவர் எழுதிய பல வாழ்க்கை வரலாற்று நூல்களை நான் படித்து ரசித்திருக்கிறேன். ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ். விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் க. ராசாராம், அருளாளர் ஐயா ஆர்.எம். வீரப்பன், இசைமேதை டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா போன்ற பல்துறை பெருமக்களின் வாழ்க்கை வரலாறுகளை அவர் எழுதியிருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக எங்களை வளர்த்து ஆளாக்கிய, நாங்கள் தெய்வமாக வழிபடும் ஏவி.எம். அவர்களின் வாழ்க்கையையும் ‘அப்பச்சி’ என்ற தலைப்பில் நூலாக எழுதியவர் ராணிமைந்தன். ‘அப்பச்சி’யை எழுதியவர் ‘மகனை’யும் எழுதுகிறார். எனக்கு சரவணன் சார் தந்த பெருமைகளில் இதுவும் ஒன்று.
நானும், ராணிமைந்தனும் பல மணி நேரம் ஒன்றாக அமர்ந்து விவாதித்தோம். அன்று முதல் இன்று வரையிலான என் அனுபவங்களை நான் அசை போட்டு அவரிடம் சொல்ல, அவர் அந்த நினைவலைகளை ஒலிப்பதிவு செய்து பின்னர் அவற்றுக்கு எழுத்து வடிவம் தந்து அதை என்னிடம் கொடுத்து, நான் படித்துப் பார்த்து, சரவணன் சாருக்கும் படித்துக் காட்டி அவர் சொன்ன நல்ல யோசனைகளைச் செயலாக்கிய பின்னர் இறுதி வடிவம் பெற்றது இந்த புத்தகம்.
நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி இது ஏதோ ஒரு சாதனையாளரின் சரித்திரம் அல்ல. ஒரு சாமானியனின் வாழ்க்கை அனுபவங்கள். ஆனால் ஒன்று. காலம் எனக்குத் தந்த சில அரிய வாய்ப்புகள் மற்றவர்களுக்குக் கிடைக்காதவை. அந்த வாய்ப்புகள் மூலம் நான் பெற்ற அனுபவங்கள் ஏராளம். அந்த அனுபவங்களைப் படிக்கும் இளைய தலைமுறையினருக்கு வெற்றிக்கான சில ‘டிப்ஸ்’ கிடைக்கக்கூடும். அப்படிக் கிடைத்தால் அதுவே என் அனுபவங்களின் வெற்றி.
என் வாழ்க்கையில் நான் நன்றி சொல்ல வேண்டியவர்களின் பட்டியல் மிக நீளமானது. என் வாழ்க்கை அனுபவங்களில் பதிவு செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலும் நீளமானதே. இயன்றவரை அவர்களை நான் நினைவுகூர்ந்திருக்கிறேன். ஏதேனும் பெயர்கள் விட்டுப்போயிருந்தால் அதற்கு நினைவு மறந்தது காரணமே தவிர, நன்றி மறந்தது அல்ல. அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.
இந்த நூலுக்காக என்னைத் தூண்டிவிட்ட மதிப்பிற்குரிய திரு. சரவணன் சாருக்கும், பல புகைப்படங்களைத் தந்து உதவிய திரு எம். பாலசுப்ரமணியன் சார் அவர்களுக்கும், தன்னுடைய எழுத்தால் என் அனுபவங்களுக்கு மெருகேற்றியிருக்கும் என் இனிய நண்பர் திரு. ராணிமைந்தன் அவர்களுக்கும், தகவல் திலகம் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கும், ஏவி.எம். பப்ளிசிட்டி நிர்வாகி எஸ்பி. அர்ஜுனன் அவர்களுக்கும், சண்முகம் அவர்களுக்கும், செல்வி. ரம்யா அவர்களுக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றி.
இந்த நூலைப் படித்துவிட்டு, உங்கள் கருத்துகளை எனக்கு எழுதினால் மகிழ்வேன். இளம் இயக்குநர்களும், திரையுலக இளம் தலைமுறை கலைஞர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும், ரசிகர்களும், வாசகர்களும் என் அனுபவங்களிலிருந்து ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொண்டாலும் அதுவே என் நீண்டகால திரைப்பணிக்குக் கிடைத்த வெற்றி.
அன்புடன்,
எஸ்பி. முத்துராமன்
6/14, இரண்டாவது தெரு
ஏவி.எம். நகர், விருகம்பாக்கம்
சென்னை - 600 092
செல்பேசி: 94442 83290
முதற்பதிப்பு - வணக்கம்
ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்பது அவரது காலகட்டத்தின் கண்ணாடி; அனுபவங்களின் அணிவகுப்பு; நமக்குக் கிடைக்கின்ற பாடம்.
பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த பெருமக்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துக் கொண்டிருப்பது எனக்குக் கிடைத்த பெரும் பேறு.
தமிழ்த் திரையுலகில் மிகப் பெரிய சாதனைகளைச் செய்துவிட்டு ஒன்றுமே செய்யாதவர்போல அடக்கமாக இருக்கும் திரு. எஸ்பி. முத்துராமன் அவர்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தவர்.
ஏவி.எம். என்ற பிரமாண்ட உலகுக்குள் எடிட்டிங் அப்ரன்டிஸாகச் சேர்ந்து, தொழில் கற்று, அனுபவம் பெற்று உதவி இயக்குநராகி பின்னர் இயக்குநராகி சாதனை புரிந்த எஸ்பி.எம். அவர்களின் வாழ்க்கைப் பாதை காட்டும் பரிமாணங்கள் ஏராளம். அவரைப் பற்றிய விவரங்களை அவ்வப்போது பத்திரிகைகளில் படித்தபோது அவர் மீது நான் ஏற்கெனவே கொண்டிருந்த மதிப்பு மேலும் பெருகிற்று.
‘உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுத ஆசை’ என்றேன் அவரிடம்.
‘நான் ரொம்ப சின்ன ஆள் சார்... என்னை விட்டுடுங்க’ என்றார். இது நான் எதிர்பார்த்த பதில்தான்.
இப்படிச் சொல்லியே இவர் நழுவி விடுவார் என்பதும் புரிந்தது.
எந்த வலையில் இந்த விலாங்கு மீன் சிக்கும் என்று யோசித்தேன்.
நான் பெரிதும் மதித்துப் போற்றும் நண்பர் திரு. ஏவி.எம். சரவணன் அவர்களிடம் என் ஆசையைத் தெரிவித்தேன். ‘நிச்சயமாகச் செய்தாக வேண்டிய பணி இது. நான் ரொம்ப நாளாக எஸ்பி.எம்மிடம் எழுதச்சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவர் எதாவது காரணம் சொல்லித் தப்பிக்கிறார். இன்று உங்களுக்காக நான் பேசுகிறேன்’ என்று திரு.ஏவி.எம். சரவணன் அவர்கள் எஸ்பி.எம். அவர்களிடம் பேசினார்.
வலையில் மீன் சிக்கியது. எழுதுவது என்று முடிவான பிறகு, எஸ்பி.எம். அவர்கள் எனக்குக் கொடுத்த ஒத்துழைப்பு என்னை நெகிழ வைத்தது.
எனக்கு எப்போது நேரம் கிடைக்கும் என்று கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப அவர் நேரம் ஒதுக்கியதை நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
கிட்டத்தட்ட பதினாறு கேஸட்டுகளில் அவரது வாழ்க்கை அனுபவங்களை ஒலிப்பதிவு செய்தேன். நிறைய கேள்விகள் கேட்டேன். நட்போடு பதில் சொன்னார்.
எழுதி முடித்ததும் எஸ்பி.எம். அவர்கள் படித்துப் பார்த்து மகிழ்ச்சி தெரிவித்தார். திரு. ஏவி.எம். சரவணன் அவர்களிடம் ஒவ்வொரு பக்கமாகப் படித்துக் காட்டினேன். கவனமாகக் கேட்டு மிகச் சரியான திருத்தங்களையும், யோசனைகளையும் அவர் தந்தார்.
மிகத் தகுதியான ஒரு சாதனையாளரின் வாழ்க்கை அனுபவங்களை எழுதியிருக்கிறேன் என்ற திருப்தி ஏற்பட்டது.
‘எழுபதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்; அவற்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்கள் மட்டும் இருபத்தைந்து, கமல்ஹாசனை வைத்து ஒன்பது படங்கள், நடிகர் திலகம் சிவாஜி அவர்களோடு மூன்று படங்கள். அந்தக் காலகட்டத்தில் கதாநாயகனாக நடித்த அத்தனைக் கலைஞர்களும் இவரது இயக்கத்தில் நடித்தார்கள். போட்ட பட்ஜெட்டுக்கு மேல் எந்தப் படத்திலும் செலவு செய்யாதவர்!’ - இவையெல்லாம் சாதனை இல்லையென்றால் சாதனை என்ற வார்த்தைக்கு வேறென்ன அர்த்தம்!
இந்த நூலை நான் எழுத ஆதார சுருதியாக இருந்த என் மதிப்பிற்குரிய ஏவி.எம். சரவணன் சார், தன் வாழ்க்கையை எனக்காகத் திருப்பிப் பார்த்து அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, தோழமையுடன் என் பணியில் உதவிய, பல கதாநாயகர்களை இயக்கிய, இந்த நூலின் கதாநாயகனாகத் திகழும் திரு. எஸ்பி. முத்துராமன் அவர்கள், ஏவி.எம். நிறுவனத்தின் புத்தகப் பணிகளில் எதில் நான் ஈடுபட்டாலும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என்னுடைய மரியாதைக்குரிய நண்பர் ஏவி.எம். விளம்பரப் பிரிவு மேலாளர் திரு. எஸ்.பி. அர்ஜுனன் அவர்கள், கையெழுத்துப் பிரதியை கனிணியில் அச்சடித்துத் தந்த ஏவி.எம். விளம்பரப் பிரிவு ஊழியை அன்புக்குரிய செல்வி ரம்யா ஆகியோர் என் நன்றிக்குரியவர்கள்.
இந்த நூலுக்கு சூப்பர் ஸ்டார், உலக நாயகன் இருவருமே வாழ்த்துரை தந்திருப்பது என் எழுத்துக்குக் கிடைத்த பெருமையைவிட எஸ்பி.எம். அவர்களின் வாழ்க்கைக்குக் கிடைத்த பெருமை என்பதே உண்மை.
எழுத்தில் என்னைச் செம்மைப்டுத்திய திரு. சாவி அவர்களை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். மிக அழகாக படித்து விட்டு உங்கள் கருத்துகளை எஸ்பி.எம். அவர்களுக்கோ, அல்லது எனக்கோ எழுதினால் பெரிதும் மகிழ்வேன்.
- ராணிமைந்தன்
7, மணவாளன் தெரு
வெற்றி நகர் விரிவாக்கம்
சென்னை - 600 082
தொலைபேசி: 2671 3643
செல்பேசி: 93810 25834
1
பாரம்பரியம்
இது மகனுடைய வாழ்க்கை வரலாறு என்றாலும் தந்தையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. தன் குடும்பத்துக்கென தனியொரு பாரம்பரியத்தைத் தந்துவிட்டுப் போனவர் அவர்.
சமஸ்தானமாக புதுக்கோட்டை இருந்த காலம். புதுக்கோட்டை மன்னர் இருந்தார். பத்து மைல் தொலைவில் அரிமளம் என்றொரு கிராமம். மிகவும் தாழ்வான பகுதியில் அமைந்திருந்த அந்தக் கிராமத்தில் லேசான மழை பெய்தாலே ஊரே ஏரி மாதிரி நிரம்பிப் போய்விடும். ‘அரும் பள்ளம்’ என்ற பெயர்தான் பின்னாளில் அரிமளம் என்று மருவிப் போனதாகச் சொல்பவர்களும் உண்டு.
அந்தக் கிராமத்தில் பழனியப்ப செட்டியார் சிட்டாள் ஆச்சி தம்பதிக்கு 1908 நவம்பரில் பிறந்தார் சுப்பையா. மிகவும் சாதாரணக் குடும்பம்தான். சுப்பையாவைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். திண்ணைப் பள்ளிக்கூடம். அப்போதெல்லாம் முதல், இரண்டாம், மூன்றாம் வகுப்பு என்றெல்லாம் வகுப்புகள் இருந்ததில்லை. எண் சுவடி, கீழ்வாலக்கம், மூதுரை, நல்வழி என்று ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுப்பார்கள். அந்தக் காலத்தில் தமிழ், கணக்கு இரண்டும்தான் படிப்பாக இருந்தது.
செட்டிநாட்டுப் பக்கம் ஒரு வழக்கம் உண்டு. பையன்களுக்குப் பத்து வயது ஆகிவிட்டால் வெளிநாடுகளுக்கு ‘பொட்டியடியில் கை பழக’ அனுப்பி விடுவார்கள். பொட்டியடியில் கை பழகுவது என்றால் வட்டிக் கடையில் வரவு செலவு கணக்கு எழுதிப் பழகுவது என்று அர்த்தம்.
சுப்பையாவின் தாய்வழி உறவினர் சிதம்பரம் செட்டியார் ‘நான் சுப்பையாவை பர்மாவுக்குக் கூட்டிக் கொண்டு போகிறேன்’ என்றார். பெற்றோர்களும் சம்மதம் தந்தார்கள்.
முதலில் ரங்கூன் சென்று, பின் அங்கிருந்து ‘மைநாங்’ என்ற ஊரில் சுப்பையா ‘பொட்டியடியில் கை பழகினார்’. சம்பளம் என்று ஏதும் இல்லை. சாப்பாடு, துணிமணி, தங்கும் இடம் இலவசம். அவ்வளவுதான். மூன்று வருடம் ஒப்பந்தம்.
பின்னர் ‘பவுண்டே’ என்ற ஊரில் ஒரு வட்டிக் கடையில் சம்பளத்துடன் வேலை கிடைத்தது. அங்கே வேலை பார்த்து வந்தபோது அந்தக் கடை முதலாளி தாய் நாட்டுக்குத் திரும்ப வேண்டிய அவசரம் ஏற்பட்டது. தன் நம்பிக்கைக்குரியவராக இருந்த சுப்பையாவுக்கு ஏஜென்ட் பவர் கொடுத்து கடையையே அவர் பொறுப்பில் விட்டு விட்டு முதலாளி போய்விட்டார். சாதாரணமாக இப்படிப்பட்ட நல்ல வாய்ப்புக்காக சுப்பையாவுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் இல்லை. தொழில்மீது ஒரு பிடிப்புக்குப் பதில் வெறுப்புதான் ஏற்பட்டது. அதற்குக் காரணம் இருந்தது.
பர்மாவில் விவசாய மக்கள் அப்பாவிகள். விவசாயத்துக்காக வட்டியைப் பற்றி கவலைப்படாமல் கடன் வாங்குவார்கள். விவசாயம் அங்கே அமோகம். தண்ணீர்ப் பஞ்சம் இல்லை. கதிருக்கு மேலே தண்ணீர் நிற்கும். ‘படகில் போய் அறுவடை செய்யும் ஊர்’ என்று பர்மாவைச் சொல்வார்கள். அறுவடை முடிந்தவுடன் வாங்கிய கடனை வட்டியுடன் நேர்மையாகத் திருப்பித் தரும் விவசாயிகள். அவர்களிடம் அதிக வட்டி வாங்குவது சுப்பையாவுக்கு என்னமோ போல் இருந்தது. வட்டிக்குப் பணம் கொடுக்கும் சிலர் ஆடிக்குத் தை பன்னிரண்டு மாதம் என்று கணக்குப் போட்டு இரு மடங்கு பணம் வாங்குவதையெல்லாம் சுப்பையா பார்த்து மனம் நொந்தார்.
முதலாளி திரும்பி வந்ததும் வேலையை விட்டு விலகி அரிமளத்துக்குத் திரும்பினார்.
திரும்பிய பிறகு அவருடைய வாழ்க்கைப் பாதையே மாறிப் போனது. மாற்றியவர் சொ. முருகப்பா. காரைக்குடியில் ‘தன வைசிய இளைஞர் சங்கம்’ என்ற அமைப்பை அவர் அப்போது நடத்தி வந்தார். அந்தச் சங்கத்தின் மூலம் பகுத்தறிவு, சீர்திருத்தக் கருத்துகளை அவர் பல ஊர்களில் மேடை போட்டு முழங்கி வந்தார். அந்தப் பேச்சுகள் அன்று செட்டிநாட்டையே ஒரு கலக்கு கலக்கின. கூட்டங்களுக்குப் போகும்போது உற்சாக இளைஞர்களையும் உடன் அழைத்துப் போவது அவரது வழக்கம். அந்த இளைஞர்களில் சுப்பையாவும் ஒருவரானார்.
விசாலாட்சி, இராம. சுப்பையா
சாதாரண குடும்பங்களில் பிறந்த பையன்களை ஆண்பிள்ளை இல்லாத பணக்கார வீடுகளுக்குத் தத்து கொடுப்பது செட்டிநாட்டில் பரவலாக இருந்து வந்த பழக்கம்.
தாயார் விசாலாட்சி
இந்த வகையில் சுப்பையாவை சுவீகாரம் தரவும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இதைத் தெரிந்து கொண்ட சொ. முருகப்பா, சுப்பையாவை தன் மாமனார் வீட்டுக்கே ‘பிள்ளை கூட்ட’ ஏற்பாடு செய்தார். அந்த வீட்டில் மூன்று பெண்கள்தான். பையன் இல்லை. அதன்படி 1926 - 27- ல் சுப்பையா ‘புகுந்த வீடு’ சென்றார்.
பிறந்த வீட்டில் வைத்த பெயரைக்கூட புது வீட்டில் மாற்றி விடுவார்கள். சுப்பையாவின் பெயரும் முத்துராமன் என்று மாற்றப்பட்டது. இன்றுகூட பதிவேடுகளில் அழ.சா. ராம. மு. ராம். முத்துராமன் என்றுதான் சுப்பையாவின் பெயர் பதிவாகியிருக்கிறது. இதில் ‘ராம’ என்பது சுவீகாரம் எடுத்துக் கொண்ட அப்பாவின் பெயரான ராமசாமியைக் குறிக்கும். வழக்கத்துக்கு மாறாக முத்துராமன் என்ற புதிய பெயருக்குப் பதிலாக சுப்பையா என்ற பழைய பெயரே இவருக்கு நிலைத்துப் போனது. இதில் சுவீகார வீட்டு இனிஷியலும், பிறந்த வீட்டுப் பெயரும் சேர்ந்து இராம. சுப்பையா என்றானது.
1928 மே மாதம் சுப்பையாவுக்கும், ஷண்முகநாதபுரம் சாமிநாதன் செட்டியாரின் மகள் விசாலாட்சிக்கும் திருமணம் நடந்தது. அப்போது பெரியார் அவர்களுடன் தொடர்பு ஏற்படவில்லை. சீர்திருத்தக் கருத்துகள் சுப்பையாவின் மனதில் விதையாக விழுந்திருந்தபோதும் அவ்வளவாக தீவிரம் இல்லாத காரணத்தால் அந்தத் திருமணம் வழக்கமான செட்டிநாட்டு தடபுடலுடன் வைதீக முறைப்படியே நடைபெற்றது.
திருமணத்துக்குப் பிறகு ஒரு முறை சொ. முருகப்பா பெரியாரை அழைத்து வந்து காரைக்குடியில் ஒரு கூட்டம் போட்டார். அன்று பெரியாரின் பேச்சைக் கேட்ட சுப்பையா உடனே சுயமரியாதைக் கழகத்தில் உறுப்பினராகச் சேர்ந்துவிட்டார். இராம. சுப்பையா என்ற முழுநேர அரசியல்வாதி உதயமானார்.
சுப்பையாவின் அரசியல் ஈடுபாடு சுவீகாரம் போன வீட்டில் பிடிக்கவில்லை. கல்யாணத்துக்குப்பின் எல்லாம் சரியாகிப்போகும் என்று எதிர் பார்த்தவர்களுக்குப் பெரிய அதிர்ச்சி! காரணம் சுப்பையாவுடன் சேர்ந்து விசாலாட்சி ஆச்சியும் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டதுதான்.
தந்தை பெரியாரின் மடியில் குழந்தை
எஸ்பி. முத்துராமன்
பெண்கள் காலில் செருப்பு அணியக் கூடாது, குடை பிடிக்கக் கூடாது, ஆண்களோடு சமமாக அமரக் கூடாது போன்ற அடிமைத்தனங்கள் நிலவிய அந்த நாளில் அவற்றை துணிச்சலாக மீறி காலில் செருப்புடன் குடைபிடித்துக் கொண்டு விசாலாட்சி தெருவில் போவதை மக்கள் வியப்புடன் பார்த்தார்கள். மேலும், விதவை மறுமணம் ஒன்றை