Kaatrinile Varum Thendral
4.5/5
()
About this ebook
Read more from Lakshmi Sudha
Saaral Sollum Sangeetham! Rating: 5 out of 5 stars5/5Ennai Mayakkiya Poongatre Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Raagam Rating: 5 out of 5 stars5/5Natchathira Poonthottathil Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogiraai Rating: 1 out of 5 stars1/5Oru Murai Sollividu Rating: 5 out of 5 stars5/5Sagiye Snegithiye Rating: 0 out of 5 stars0 ratingsMalargal Malarkindrana! Rating: 0 out of 5 stars0 ratingsAzhagiya Maalaiyil Rating: 0 out of 5 stars0 ratingsIthu Mounamana Neram! Rating: 4 out of 5 stars4/5Paarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsThullatha Manamum Thullum Rating: 2 out of 5 stars2/5Pookkalin Punnagai Nee...! Rating: 1 out of 5 stars1/5Pookkal Paadum Boopalam... Rating: 0 out of 5 stars0 ratingsPookkale Oivedungal! Rating: 5 out of 5 stars5/5Poo Vasam Purapadum Neram Rating: 0 out of 5 stars0 ratingsSolai Malaroliyoo! Rating: 4 out of 5 stars4/5Urugiyathey En Ullam! Rating: 0 out of 5 stars0 ratingsKaattrukku Thoothu Vittu...! Rating: 0 out of 5 stars0 ratingsPoo Mazhai Ennul...! Rating: 0 out of 5 stars0 ratingsUn Thanimai Sugamaa? Rating: 5 out of 5 stars5/5Nee Pogum Paathaiyil... Rating: 0 out of 5 stars0 ratingsRoja Poonthottam Nee... Rating: 3 out of 5 stars3/5Manathil Pathintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsAthu Oru Mazhai Kaalam Rating: 4 out of 5 stars4/5Paniyil Nanaintha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsMayam Seithayo... Rating: 4 out of 5 stars4/5Panneeril Nanaintha Pookkal Rating: 3 out of 5 stars3/5En Swasakaattru Nee...! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kaatrinile Varum Thendral
Related ebooks
Tholai Thoora Velicham Nee! Rating: 4 out of 5 stars4/5Paarthirunthaal Varuven Vennilaviley... Rating: 0 out of 5 stars0 ratingsSugamana Puthu Raagam Part - 1 Rating: 5 out of 5 stars5/5Naaliley Nalla Naal Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsIdhayathukkul Irunthukol… Rating: 2 out of 5 stars2/5Aagayam Bhoomiyil... Rating: 5 out of 5 stars5/5Un Thanimai Sugamaa? Rating: 5 out of 5 stars5/5Thoongatha Vizhigal Irandu Rating: 0 out of 5 stars0 ratingsKaattrukku Thoothu Vittu...! Rating: 0 out of 5 stars0 ratingsIthu Mounamana Neram! Rating: 4 out of 5 stars4/5Poovil Thoongum Panithuli Rating: 5 out of 5 stars5/5Roja Poonthottam Nee... Rating: 3 out of 5 stars3/5Vaanmathiye Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsKannoramai Kathai Pesu! Rating: 5 out of 5 stars5/5Thullatha Manamum Thullum Rating: 2 out of 5 stars2/5Poongatru Sangeetham Aanathu! Rating: 0 out of 5 stars0 ratingsPaniyil Nanaintha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsMayam Seithayo... Rating: 4 out of 5 stars4/5Malargal Malarkindrana! Rating: 0 out of 5 stars0 ratingsVanavillai Vandhavale! Rating: 3 out of 5 stars3/5Vaanamenum Veedhiyiley...! Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Ponnena Kanda Pozhuthile! Rating: 4 out of 5 stars4/5Ithu Irulalla! Rating: 5 out of 5 stars5/5Idhayam Meviya Kaadhalinaaley Rating: 5 out of 5 stars5/5Manathil Pathintha Oviyam Rating: 0 out of 5 stars0 ratingsUyir Unarum Va(li)zhiyo Kaadhal Rating: 3 out of 5 stars3/5Santhithome Kanakkalil...! Rating: 3 out of 5 stars3/5Naan Thediya Vanavil Rating: 0 out of 5 stars0 ratingsOru Murai Sollividu Rating: 5 out of 5 stars5/5
Reviews for Kaatrinile Varum Thendral
3 ratings0 reviews
Book preview
Kaatrinile Varum Thendral - Lakshmi Sudha
https://www.pustaka.co.in
காற்றினிலே வரும் தென்றல்
Kaatrinile Varum Thendral
Author:
லட்சுமி சுதா
Lakshmi Sudha
For more books
https://www.pustaka.co.in/home/author/lakshmi-sudha
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 1
உன்னைப் பார்த்த
அந்த முதல் நொடி
என் நெஞ்சப் பெட்டகத்தில்
இன்றும் பத்திரமாய்
உள்ளது.
ஆனால் நிஜமான நீ
எப்போது வரப் போகிறாய்?
விடிகாலைப் பொழுது. சூரியன் தன் வரவால் உலகை தன்வசப்படுத்திக் கொண்டிருந்தான்.
பேர் தெரியாத பறவைகள் ஏதேதோ சப்தம் போட்டபடி புது இசையைப் பரப்பிக் கொண்டிருந்தன. இயற்கை அழகை ரசித்தபடி எழுந்தாள் நிவேதா.
சுவரில் இருந்த கடிகாரத்தில் மணி என்ன என்று லைட்டைப் போடாமல் உற்றுப் பார்த்தாள்.
ஐந்து மணி ஆகிவிட்டது. இப்போது எழுந்தால் இருக்கும் சமையல் வேலை முடித்து குளித்து விட்டு ஆபீஸ் கிளம்ப சரியாக இருக்கும் என்று நினைத்தவாறே சோம்பல் முறித்தபடி எழுந்தாள்.
சித்தி கட்டிலில் குறட்டைவிட்டுத் தூங்கும் சப்தம் கேட்டது. பாவம் சித்தி என்று நினைத்தாள்.
சித்திக்கு தன்னைவிட கூட பத்து வயதுதான். அப்பாவுக்கும், சித்திக்கும், கிட்டத்தட்ட இருபது வயசு வித்தியாசம்.
சித்தியின் குடும்பம் ரொம்ப ஏழ்மையானது. அப்பா அம்மா இருவரும் சிறு வயதிலேயே ஒரு விபத்தில் இறந்துவிட, பாட்டிதான் சித்தியை வளர்த்து ஆளாக்கினார்களாம்.
தூரத்து சொந்தம் அப்பாவிற்கு, ‘சித்தி’ என்று எப்படியோ ஒரு கல்யாணத்தில் தெரிய வந்தது. தன் மனைவி நோய் வாய்ப்பட்டு இறந்த பின் வேறு வழி இன்றி குழந்தைக்காக, மறுமணத்திற்கு ஒத்துக் கொண்டார் நிவேதாவின் அப்பா.
கல்யாணத்தின் போது நிவேதாவுக்கு வயது பத்து. சித்தி மடியில் உட்கார்ந்தபடிதான் இருந்தாள், அவள் தாலி கட்டும்போது கூட.
கல்யாணம் முடிந்த நாள் முதல், சித்திதான் அவளுக்கு நல்ல தோழி. கதை சொல்வது, பாட்டுப் பாடுவது என நிவேதாவுடன் இணையாக அவளோடு சேர்ந்து நன்றாக விளையாடுவாள்.
டீன் ஏஜில் அவளுக்கு ஆதரவாக அனுசரணையாக இருந்தாள் சித்தி. அப்பா இறந்துபோய் ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன.
அந்த இழப்பிலிருந்து வெளியே வருவதற்கு, சித்தி ரொம்ப உதவி புரிந்தாள். அவள் வேலைக்குப் போவதால், அவளால் அந்தக் கவலையை, அப்பாவின் இழப்பை மறப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. வேலையில் மூழ்கிப்போனால் நிவேதாவிற்கு அப்பாவின் இழப்பு ஒரு மூலையில் இருக்கும்.
ஆனால் பாவம் சித்தி, வீட்டிலேயே அதே சூழலில் இருந்து கொண்டு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என நினைத்து வருந்தினாள்.
வாசலில் அழகாக கோலம் போட்டு முடித்த பின் நிவேதாவுக்கு மனம் லேசானது. பக்கத்து வீட்டு மாமி அவள் கோலத்தைப் பார்த்து ரொம்ப அழகா இருக்குடி. கிளி ரெண்டு கொஞ்சறது ரொம்ப நல்லா இருக்குடி
என்று மனமாரப் பாராட்டினார்.
தேங்க்ஸ் மாமி
என்று மெதுவாக புன்னகைத்தாள் நிவேதா.
நீதான்டி இதெல்லாம் செய்யற எப்பவும். உன் சித்தி ஒரு நாள்கூட இந்த மாதிரி கோலம் போட்டு நான் பார்த்ததில்லை.
உன் சுறுசுறுப்பு யாருக்கும் வராதுடி
என்றார் மாமி.
மாமி, ஏற்கனவே மார்கழி மாதம் ரொம்ப குளிருது. நீங்க வேற ஐஸ் வைக்கறீங்க
என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றாள்.
குளித்துவிட்டு, சமையல் அறை சென்றாள். விளக்கேற்றி சுலோகம் சொல்லிவிட்டு தோசை வார்த்தெடுத்தாள்.
இன்னொரு அடுப்பில் காப்பி கலப்பதற்கு பாலைக் காய்ச்சி, டிகாஷன் கலந்து ப்ளாஸ்கில் சித்திக்கு ஊற்றி வைத்துவிட்டு தானும் ஒரு டம்ளர் கலந்து குடித்தாள்.
லன்ஞ்சுக்கு, சாம்பார் சாதமும், கீரை கூட்டும் தயார் செய்து முடிக்கும்போது மணி எட்டேகால் ஆகிவிட்டிருந்தது.
டிபன் சாப்பிட்டு முடித்த பின், லஞ்ச், பேக் செய்து பாக்ஸில் வைத்து, ஒரு சல்வார் அணிந்து ஆபீஸ் செல்லத் தயாரானாள் நிவேதா.
சித்தி சோம்பல் முறித்தபடி நிவேதா, ஆபீஸ் கிளம்பறியா கண்ணு, சாரிடி என்னால எந்த வேலையும் வரவர செய்ய முடியலை.
உங்கப்பா போன பின் என் உயிரே போய்விட்டது போல் இருக்கு. என்ன செய்வது உனக்காக நான் உயிர் வாழ வேண்டியிருக்கு
என்று புலம்பினாள்.
சித்தி கவலைப்படாதீங்க. நான் இருக்கற வரைக்கும் உங்களை பத்திரமா, ஒரு குறையும் இல்லாம பார்த்துப்பேன்.
உங்களை விட்டா, எனக்கு இந்த உலகத்துல யாரும் இல்லை
என்றாள் கரிசனமாக.
சரிடா கண்ணு. நீ ஆபீஸ் போம்மா. நேரம் ஆகுது பாரு
என்று நிவேதாவை அவசரப்படுத்தினார்.
ஆமாம், சித்தி, அப்புறம் பஸ் மிஸ் பண்ணிட்டேன்னா, போய் சேர பத்தாயிடும். சாப்பிடுங்க சித்தி. நான் போய்ட்டு வரேன்
என்று சொல்லி விட்டு வேகமாக நடந்தாள் நிவேதா.
வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்ட் ஐந்து நிமிட நடை. பல்லாவரத்திலிருந்து ‘இருபத்தி ஒண்ணு ஜி’ நேர் பஸ் அவளுக்கு. மயிலாப்பூர் பேங்கில் இறங்கினால் அங்கிருந்து பத்து நிமிடத்தில் நடந்து போய்விடலாம் ஆபீஸிற்கு.
அவள் வேலை பார்ப்பது ஒரு துணிக்கடையில், பெண்களுக்கான ஆடை அணிகலன்கள் அங்கே விற்பனை செய்வதுண்டு. மொத்தம் மூன்று சேல்ஸ் பெண்கள், இவளையும் சேர்த்து. அப்பா அந்தக் கடையில்தான் கணக்கெழுதிக் கொண்டிருந்தார்.
அதனால் அப்பா இறந்த பின், அவர்களே அவளை வேலைக்கு வருமாறு கேட்டுக் கொண்டனர். வேலை செய்பவர்கள் எல்லாருமே பெண்கள் என்பதால் பிரச்சினையும் ஏதும் இல்லை.
மாதச் சம்பளம் மூவாயிரம் ரூபாய். பஸ் சீசன் தவிர மீதி ரூபாயை, அப்படியே சித்தியிடம் கொடுத்துவிடுவாள் நிவேதா. வீடு சொந்த வீடு என்பதால், அந்த சம்பளம் இருவருக்கும் போதுமானதாக இருந்தது.
இதையெல்லாம் நினைத்துக் கொண்டே பஸ்ஸில் உட்கார்ந்திருந்த நிவேதா கண்டக்டர் குரல் இறங்கலியாம்மா
என கேட்டவுடன் அவசர அவசரமாக பஸ்ஸிலிருந்து இறங்கினாள்.
மனதுக்குள் கண்டக்டருக்கு நன்றி செலுத்திக் கொண்டு கடை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். நல்ல காலம் டெய்லி பாக்கற கண்டக்டர் என்பதால் ஞாபகம் வந்து இறங்கலியா, அப்படின்னு கேட்டார், இல்லேன்னா திரும்பி அடுத்த ஸ்டாப்பிலிருந்து இன்னொரு பஸ்ஸில் வரவேண்டியிருந்திருக்கும் என்று நினைத்தவாறே வந்தவள், கடை முன்னால் பெரிய கூட்டம் இருக்கவே என்னவாகயிருக்கும் என்று யோசித்தபடியே வேகமாக நடக்கத் தொடங்கினாள்.
கூட்டத்தில் போலீஸ் தலைகள் பல தெரியவும் மிரண்டாள் நிவேதா. அவள் வருவதைப் பார்த்ததும், அவள்கூட வேலை பார்க்கும் தாமரை அவளை நோக்கி வேகமாக ஓடிவந்தாள்.
நிவி, நேத்து ராத்திரி, நம்ம கடையில இருந்த துணிமணியெல்லாம் யாரோ கொள்ளை அடிச்சுட்டாங்கடி. ஒரு துணி பாக்கி இல்லாம எல்லாம் போச்சுடி.
பூட்டை உடைச்சு சத்தம் வராம, எப்படியோ, நேக்கா ராத்திரியோட ராத்திரியா எல்லாத்தையும் தூக்கிட்டுப் போய்ட்டாங்கடி.
இன்ஷூரன்ஸ்கூட இல்லை போல இருக்குடி. சாரைப் பார்த்தா பாவமா இருக்கு. நம்மள எல்லாம் வேற எங்காவது வேலை தேடச் சொன்னார்டி
என்று மூச்சு வாங்க கடகடவென சொல்லி முடித்தாள்.
அச்சச்சோ, பாவம்டி நம்ம முதலாளி, எவ்வளவு நல்லவர். நல்லவங்களுக்குதான் கடவுள் சோதனை ரொம்பக் கொடுப்பார். சார் எங்கடி இப்ப?
என்றாள் நிவேதா.
போலீஸ் அவரை விசாரிப்பதற்கு ஸ்டேஷன் கூட்டிச் சென்றிருக்காங்க நிவி. ம்ம், நான் வீட்டைக் காலி செஞ்சுட்டு ஊருக்குப் போகப்போறேன்டி, ஊரில போய் பி.எட். படிச்சு முடிச்சேன்னா, அங்கேயே ஏதாவது பள்ளிக்கூடத்துல டீச்சர் வேலை கிடைக்கும்.
நீ என்ன செய்யப் போறடி?
என்றாள் அக்கறையாக.
தெரியலை தாமரை. எனக்கு என்ன செய்யறது அப்படின்னே புரியலை. வீட்டுக்குப் பக்கத்திலேயே ஏதாவது வேலை கிடைக்குமா, அப்படின்னு தெரியலை. நான் படிச்சது வெறும் பி.எஸ்ஸிதான். இதுக்கு என்ன வேலை கிடைக்கும் அப்படின்னு தெரியலைடி
என்றாள் கவலையாக.
கவலைப்படாத நிவி, உனக்கு கண்டிப்பா, நல்ல வேலை ஏதாவது கிடைக்கும். நீ நல்லா அழகா இருக்கடி, நல்ல சிவப்பு நிறம், களையான முகம், நல்ல பிகர்டி நீ. அதனால ஏதாவது ரிசப்ஷனிஸ்ட் போன்ற வேலைக்குக்கூட டிரை பண்ணுடி
என்றாள்.
தெரியலடி, யோசிக்கணும், சித்திகிட்ட பேசி முடிவு செய்யணும். உன்னோட போன் நம்பர் இருந்தா குடுடி. வாரம் ஒரு தடவையாவது பேசலாம்
என்றாள் நிவேதா.
இந்தாடி
என்று ஒரு சிறிய வெள்ளைத்தாளை அவளிடம் நீட்டினாள், தாமரை.
தேங்க்ஸ்டி, இந்தா என்னோட நம்பர்
என்று தன்னுடைய நம்பரை ஒரு சின்ன பேப்பரில் எழுதி அவளிடம் கொடுத்தாள் நிவேதா.
சரிடி, நிவி. நான் கிளம்பறேன். உனக்குப் போய்ட்டு நான் போன் பண்றேன். நீயும் நேரம் கிடைக்கும் போது பண்ணுடி. வரேன்
என்று நிவேதாவின் கைகளைப் பிடித்து வாஞ்சையோடு சொல்லிவிட்டுக் கிளம்பினாள் தாமரை.
அவள் போவதையே பெருமூச்சு விட்டபடி பார்த்துக் கொண்டே நின்றாள் நிவேதா. வாழ்க்கை ஒரு போராட்டக்களம், எவ்வளவு நாள் போராட முடியும்
என்று நினைத்தவாறே மெதுவாக நடந்தாள்.
அத்தியாயம் 2
இந்த உலகில்
ஏதும் நிரந்தரமில்லைதான்
ஆனால்
உன் பெயரை
எப்போது உச்சரித்தாலும்
ஒரு மயக்கம் வருகிறதே
அது எப்படி?
சித்தி என்னால இந்த மாதிரி டிரெஸ் எல்லாம் போட முடியாது. வேண்டாம். சித்தி, நான் அந்த மாதிரி பணக்கார பார்ட்டிக்கெல்லாம் வரலை.
உங்க பிரண்டு வீட்டு பார்ட்டி, நீங்க மட்டும் போங்க, ப்ளீஸ்
என்றாள் நிவேதா.
இங்க பார் நிவேதா, என்னை திருப்பித் திருப்பிச் சொல்ல வைக்காதே. உன் கல்யாணத்துக்கு உன் அப்பன் நகை நட்டு ஏதும் சேர்த்து வைக்கலை.
இந்த மாதிரி நாலு இடம் போனாத்தான் உனக்கு எவனாவது மாட்டுவான். காலம் முழுக்க என்னால உனக்கு பொங்கிப்போட முடியாது, புரிஞ்சுக்கோ
என்று வெறி பிடித்தவள் போல் கத்தினாள், சித்தி.
வேலை போன பின்புதான் நிவேதாவுக்கு சித்தியின் இன்னொரு முகம் கொஞ்சம் கொஞ்சமாக பிடிபடத் தொடங்கியது. பேச்சுக்கு பேச்சு நிவி குட்டி, கண்ணு என கொஞ்சுபவள், சனியனே, தரித்திரமே அப்படின்னுதான் இப்போதெல்லாம் கூப்பிடுகிறாள்.
அப்பா வீட்டை அவள் பேரில் எழுதி வைக்காத கோபம், வார்த்தைகளாக சித்தியின் வாயிலிருந்து ஒரு வாரமாக, கொட்டுகிறது.
சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மனிதர்கள் எப்படி மாறி விடுகிறார்கள். சே, சித்தியை எவ்வளவு நம்பினேன். எவ்வளவு அன்பாக அவர்களிடம் நடந்து கொண்டேன். அதற்கெல்லாம் இதுதான் எனக்குக் கிடைத்த பலன் என தன்னையே நொந்தாள் நிவேதா.
‘என்னுடைய சம்பளப் பணம் அப்படியே சித்தியிடம் ஐந்து வருடங்களாக குடுத்து வந்தேனே, அதெல்லாம் என்ன ஆச்சு? அப்பா நைட் செக்யூரிடி வேலை பார்த்து சம்பாதித்தது என்ன ஆச்சு? பகலில் முதுகு ஒடிய துணிக் கடையில் அப்பா கணக்கு பார்த்து வந்த சம்பளம்’ என எல்லாமே சித்தியிடம்தான் போனது.
அதில் கொஞ்சம் கொஞ்சம் மிச்சம் பிடித்திருந்தால்கூட இப்போது, இந்த மாதிரி நிலைமையை சமாளிக்க உதவுமே என எண்ணி குமைந்தாள்.
‘ஒருவேளை சித்தியின் சுபாவம் தெரிந்துதான் அப்பா, வீட்டை அவர்கள் பேரில் எழுதாமல் தன் பேரில் எழுதி வைத்தாரோ’ என நினைத்தாள் நிவேதா.
சித்தியின் தோழி ஒருத்தி வீட்டில் இன்று ஒரு பிறந்தநாள் பார்ட்டியாம். அதற்கு நிவேதா இந்த சல்வாரை போட்டுக் கொண்டு கண்டிப்பாக வர வேண்டும், என்று சித்தி காளியாட்டம் ஆடுகிறாள்.
வேறு வழியின்றி அழுது கொண்டே, அந்த சல்வாரைப் போட்டுக் கொண்டு சித்தியின் ரூமிலிருந்த முழு நீள கண்ணாடியில் தன்னைப் பார்த்தபோது, நிவேதாவுக்கு உடல் கூசியது.
வெங்காயத்தாள் போல் உள்ளே இருந்த எல்லாவற்றையும் கண்ணாடியாகக் காட்டியது அந்த சல்வார். துப்பட்டா இருந்தாலாவது ஓரளவு சமாளிக்கலாம் என்றால் அதுவும் இல்லை. ஷேப் தெரியுமாறு டைட்டாக இருந்த அந்த சல்வாரைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு எரிச்சல் வந்தது. எப்படி இதைப் போடாமல் தப்புவது என யோசித்தவளுக்கு சட்டென ஒரு யோசனை தோன்றியது.
ரூமில் இருந்த கத்திரிக்கோலால் சல்வார் பேண்டின் ஒரு கால் பாகத்தை முழங்கால் வரை கீழேயிருந்து கிழித்தாள்.
சித்தி இந்த சல்வார் துணி சரியில்லை. பாருங்க, போடும்போது எப்படி கிழிஞ்சிடுச்சு
என்று ரூமிலிருந்து கத்தினாள்.
உன்னோட ஒரே தொல்லைடி, இரு வர்றேன்
என்று முணுமுணுத்தவாறே சித்தி ரூமிற்கு வரும் சத்தம் கேட்டது.
கால் பாதத்திலிருந்து முழங்கால் வரை கிழிந்திருந்த பேண்ட்டைப் பார்த்த சித்தி ஏய் இதுவே ஒரு புது ஃபேஷன் மாதிரி இருக்குடி. இருடி ஒரு நிமிஷம்
என்று கப்போர்டிலிருந்த கத்திரிக்கோலை எடுத்து இன்னொரு பேண்டின் காலையும் அதே போல் சட்டென கத்தரித்தார்.
வேண்டாம் சித்தி, ரொம்ப அசிங்கமா இருக்கு. காலெல்லாம் தெரியுது. ப்ளீஸ், நான் வேற டிரெஸ் போடறேன் சித்தி
என்று கதறினாள்.
வாயை மூடிகிட்டு வா என்னோட. ஆட்டோ வாசல்ல நிக்குது. வா போலாம்
என்ற சித்தியை எதிர்க்க வழியின்றி அழுதவாறே சென்றாள் நிவேதா.
அப்பா இறந்த பிறகு சித்தியின் புடவைகளும் மாறிவிட்டன. உடலைக் காட்டும், மெல்லிய புடவை, சைனா சில்க் என விலையுயர்ந்த புடவைகளே பெரும்பாலும் சித்தி அணிகிறாள்.
இதற்கெல்லாம் ஏது பணம், என்று வாய்வரை வரும் கேள்வியை கஷ்டப்பட்டு நிவேதா அடக்கிக் கொள்வாள்.
இளமையில் அணிய முடியாததை இப்போது அணிகிறாள் என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொள்வாள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை சித்தி ஆக்ரமிப்பதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஆட்டோவிலிருந்து இறங்கி அந்தப் பெரிய கேட் போட்டிருந்த பங்களாவிற்குள் செல்லும்போது நிவேதாவிற்கு அவமானமாக இருந்தது.
ஆடை என்பது உடலை மறைப்பதற்கு, ஆனால் இப்பொழுது நான் அணிந்திருக்கிற டிரெஸ்ஸைப் பார்த்தால் ‘சே, என்மேலேயே எனக்கு அருவருப்பாக இருக்கிறது. என்னைப் பார்ப்பவர்கள் என்னைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பார்கள்’ என வருந்தினாள்.
சித்தியின் தோழி சித்தியைப் பார்த்தவுடன் வேகமாக ஓடி வந்தாள்.
வாடி, கீதா. எங்க வராமப் போயிடுவியோ அப்படின்னு நினைச்சேன். இதான் உன் பொண்ணா, ம்ம், குதிரையாட்டம் நல்லா இருக்கா. அண்ணனுக்கு கண்டிப்பா பிடிக்கும்
என்று கண்ணடித்தாள்.
நிவி குட்டி. வணக்கம் சொல்லும்மா. இவதான் என் ஸ்கூல்மேட் சரளா
என்று அறிமுகப்படுத்தினாள் சித்தி.
வேண்டாவெறுப்பாக கரம் குவித்த நிவேதாவின் மூளையை அண்ணனுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் என்று சரளா சொன்னதே அரித்துக் கொண்டிருந்தது.
சரி வா கீதா. உள்ள போகலாம், எல்லாரும் வெயிட் பண்றாங்க
என்றாள்.
உள்ளே இருந்த பெரிய ஹால் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாக இருந்தது. ஆண்களும் பெண்களுமாக, கூட்டம் கூட்டமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்த அந்த இடத்தைப் பார்க்கவே நிவேதாவுக்குப் பிடிக்கவில்லை.
சித்தி, வீட்டுக்குப் போகலாம், ப்ளீஸ்
என்று மெதுவாகச் சொன்னாள்.
பல்லைக் கடித்த சித்தி வாயை மூடிக் கொண்டு முகத்தை சிரித்தாற்போல் வைத்துக் கூடவே வா
என்று சுள்ளென்று சொன்னாள்.
கீதா, இதான்டி என் அண்ணன், பேர் செல்லதுரை. நிவி மாப்பிள்ளையை நல்லா பார்த்துக்கோ
என்று சரளா அவளைப் பார்த்துக் கண்ணடித்தாள்.
செல்லதுரையைப் பார்த்தவுடன் நிவேதாவுக்கு அடி வயிறு கலங்கியது. கிட்டத்தட்ட அவனுக்கு நாற்பது வயதிருக்கும். குண்டாக, தலைக்கு டை அடித்துக் கொண்டு இளித்துக் கொண்டே அவளருகே வந்தான்.
நிவி குட்டி, டிரெஸ் ரொம்ப ஜோரா இருக்கே. இங்கே என்னடா அழுக்கு
என அவள் தோளை அவன் கைகள் தடவியவுடன் கம்பளிப் பூச்சி ஊர்வது போல் உணர்ந்தாள் நிவேதா.
வேகமாக அவன் கையைத் தட்டி விட்டாள்.
என்னடி ரொம்ப அலட்ற? கல்யாணம் கட்டப் போற பெண்ணாச்சேன்னு பார்க்கறேன்
என்று கோபமாகக் கத்தினான்.
மாப்பிள்ளை அவ கொஞ்சம் கூச்ச சுபாவம். கல்யாணம் வரை பொறுத்துக்கோங்க. அப்புறம் நீங்க சொன்னதெல்லாம் கேக்கப் போறா
என்று சித்தி குறுக்கே வந்து சமாதானப்படுத்தினாள்.
நிவேதாவுக்கு அவமானம் பிடுங்கித் தின்றது. ‘இவன் எனக்கு மாப்பிள்ளையா? சே. இந்த சித்திக்கு மூளை குழம்பி விட்டது போல. வீட்டுக்குப் போய் பேசிக் கொள்ளலாம்’ என்று அங்கிருந்த சேரில் உட்கார்ந்தாள்.
***
ப்ரணவிற்கு இந்த மாதிரி பார்ட்டிக்கு செல்வதற்கெல்லாம் எப்போதும் விருப்பம் இருந்ததில்லை. ஆனால் அப்பாவும் சோமசுந்தரமும் நல்ல நண்பர்கள். அப்பா இறந்து ஒரு வருடம் ஓடிவிட்டது.
‘ப்ரணவ் கண்டிப்பாக வரவேண்டும்’ என்று சோமசுந்தரம் அங்கிள் வற்புறுத்தியதால் ஹாஸ்பிடல் வேலையை அன்றொரு நாள் பார்த்துக் கொள்ளுமாறு ரஞ்சனிடம் ஒப்படைத்துவிட்டு பெங்களூரிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தான்.
சோமசுந்தரம் அங்கிள் எங்கே என்று அவன் கண்கள் தேடும் போது சேரிலிருந்து ரெஸ்ட் ரூம் சென்று