Pira Maanila Apoorva Koyilgal!
By J.V. Nathan
()
About this ebook
தமிழகம் அறிந்த சிறந்த எழுத்தாளர், 400 சிறுகதைகள், ஏராளமான ஆன்மிகக் கட்டுரைகள், ஆலய தரிசனம் ஆகியவற்றைப் பல இதழ்களில் எழுதியவர், ‘ஆனந்த விகடன்’ ஆசிரியர் இலாகாவின் செயல் அலுவலராகவும், விகடன் சேர்மன் திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்களின் நேர்முக உதவியாளராகவும் பணியாற்றியவர், திரு.ஜே.வி.நாதன். அவர் எழுதியுள்ள இந்த நூலில் தமிழகம் தாண்டி அமைந்துள்ள சிறப்பான 50 ஆலயங்களின் தரிசனம், தல வரலாறு, ஆலயச் சிறப்புகள், ஆலயம் மற்றும் இறைத் திருவுருவங்களின் புகைப்படங்கள் ஆகியவை கட்டுரைகளுக்குக் கனம் சேர்க்கின்றன.
சக்தி விகடன், இந்து தமிழ் திசை, குமுதம் பக்தி ஸ்பெஷல், கல்கி குழும ஆன்மிக இதழான தீபம், ஜன்னல் மாதமிருமுறை எனப் பல இதழ்களில் எழுத்தாளர் ஜே.வி.நாதன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வட இந்தியாவின் சில மாநிலங்களில் சிறப்பாகப் பக்தர்கள் வழிபடக்கூடிய புகழ்பெற்ற கோயில்களைத் தரிசிக்க, இந்த நூலின் ஆசிரியர் நம் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறார்.
தமிழகத்தைத் தாண்டி சிறப்பாக விளங்கும் பிற மாநில ஆலயங்களுக்குச் சென்று வழிபட, ஆன்மிக அன்பர்களுக்கு இந்த நூல் ஓர் பொக்கிஷ வழிகாட்டியாக உதவும் என்பதில் ஐயமில்லை.
Read more from J.V. Nathan
Ammavin Petti Rating: 0 out of 5 stars0 ratingsSingapoorukku Sila Kazhuthaigal Rating: 0 out of 5 stars0 ratingsArockkiyam Arulum Aalaya Virutchangal! Rating: 0 out of 5 stars0 ratingsMouniyin Marupakkam Rating: 0 out of 5 stars0 ratingsKerala Divya Desangal Rating: 0 out of 5 stars0 ratingsThirunaangur Divya Desangal Rating: 0 out of 5 stars0 ratingsKadavul Thondriya Kathai Rating: 0 out of 5 stars0 ratingsBoodha Kannadi Samy! Rating: 0 out of 5 stars0 ratingsEzhuthapadatha Theerpugal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Pira Maanila Apoorva Koyilgal!
Related ebooks
Kerala Koyilgal Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKerala Manilathin 108 Pugazh Pettra Kovilgal Rating: 0 out of 5 stars0 ratingsAalayam Arivom! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsMaharashtra Maanilathin 108 Punitha Thalangal Rating: 0 out of 5 stars0 ratingsKarnataka Maanilathin Pugazhpetra Kovilgal Rating: 0 out of 5 stars0 ratingsAalayam Arivom! Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsMaha Periyavaa - Part 8 Rating: 0 out of 5 stars0 ratingsKongu Nattu Koilgal Rating: 0 out of 5 stars0 ratingsKoyil Ula Rating: 0 out of 5 stars0 ratingsVeppanjselai Amman Thiruvizha Rating: 0 out of 5 stars0 ratingsThirukkoyilgal - Varalarum Magimaiyum Rating: 0 out of 5 stars0 ratingsIlangai Theevin 108 Pugazh Pettra Hindhu Aalayangal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKongu Mandala Chithargal, Pulavargal, Thalangal!! Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsThirukkoyil Tharisanam Rating: 0 out of 5 stars0 ratingsAvasiyam Tharisikka Vendiya Navagraha Aalayangal Rating: 0 out of 5 stars0 ratingsThalangalin Tharisanam Rating: 0 out of 5 stars0 ratingsGangai Karai Ragasiyangal Rating: 0 out of 5 stars0 ratingsEzhilmigu Ilangai Koyilgal Rating: 0 out of 5 stars0 ratingsSankadangalai Theerthu Soubakkiyam Alikkum Sakthi Sthalangal! Rating: 0 out of 5 stars0 ratingsSirappana Vazhuvu Tharum Siva Thalangal Rating: 0 out of 5 stars0 ratingsThondai Naattu Divya Desangal Rating: 0 out of 5 stars0 ratingsKanchi Thalaivan Karunai Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsKerala Koyilgal Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsVainavathin Perumaiyum Adiyargal Magimaiyum! Rating: 0 out of 5 stars0 ratingsNonbugal Arivom Rating: 0 out of 5 stars0 ratingsKadaloora Koyilgal Rating: 0 out of 5 stars0 ratingsAalaya Dharisanam Part-1 Rating: 0 out of 5 stars0 ratingsVendiyana Arulum Thiruthalangal Rating: 0 out of 5 stars0 ratingsPandaripurathu Mahaangal Rating: 0 out of 5 stars0 ratingsMannadi Sri Mallikeshwarar Koyil Thiruththala Varalaaru Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Pira Maanila Apoorva Koyilgal!
0 ratings0 reviews
Book preview
Pira Maanila Apoorva Koyilgal! - J.V. Nathan
https://www.pustaka.co.in
அற்புத நலன்களை வாரி வழங்கும்
பிற மாநில அபூர்வக் கோயில்கள்!
Pira Maanila Apoorva Koyilgal!
Author:
ஜே.வி. நாதன்
J.V. Nathan
For more books
https://www.pustaka.co.in/home/author/jv-nathan
பொருளடக்கம்
என்னுரை
1. ஆந்திரா: காணிப்பாக்கம் - அரிய பேறுகளை வாரி வழங்கும் வரசித்தி விநாயகர்!
2. கேரளா: திருவனந்தபுரம் - ஆற்றுகால் பகவதி.
3. கர்நாடகா: அந்தர கங்கா (ஆகாச கங்கை)
4. கர்நாடகா: பங்காரு திருப்பதி
5. கர்நாடகா: பேளூர்-ஹளபேடு
6. கேரளா: திருவனந்தபுரம் - நீதியரசி ஸ்ரீசாமுண்டி!
7. கர்நாடகா: ஹிரே மகளூர் - கல்யாண வரம அருளும் கோதண்டராமர்!
8. கர்நாடகா: ஹொரநாடு - பக்தர்களின் பசி தீர்க்கும் அன்ன பூர்ணேஸ்வரி!
9. ராஜஸ்தான்: ஜெய்ப்பூர் - ஸ்ரீ லட்சுமி நாராயணர் ஆலயம்!
10. இமாச்சலப் பிரதேசம்: சிம்லா - மூலிகை மலை உச்சியில் 108 அடி உயர ஆஞ்சநேயர்!
11. கேரளா: கல்பாத்தி - காசியில் பாதி ‘கல்பாத்தி’!
12. கர்நாடகா: கட்டீல் - ஸ்ரீதுர்கா தேவி
13. கேரளா: அனந்தபுரா - அருளை வாரி வழங்கும் ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமி!
14. கேரளா: கேரளப்புரம் - அற்புத விநாயகரின் அருளைப் பெறுவோம்!
15. கேரளா: கொடும்பு - தம்பதியர் மனக் கவலை போக்கும் ‘கொடும்பு’ ஸ்ரீசுப்ரமணியர்!
16. கர்நாடகா: கோலார் - கோடிப் புண்ணியம் கொடுப்பாள், கோலாரம்மா!
17. கர்நாடகா: கொல்லூரு - நினைத்ததை முடித்து வைப்பவள், தாய் மூகாம்பிகை!
18. கர்நாடகா: கோலார் – கூடுமலை - கோரிக்கைகளை நிறைவேற்றும் கூடுமலை கணபதி!
19. கர்நாடகா: கூடுமலை – சோமேஸ்வரர் - பிழைகள் பொறுக்கும் அம்பாள்!
20. கோலார் - கம்ம சமுத்திரம் - கேட்பன எல்லாம் தருவார் ஸ்ரீகோடிலிங்கேஸ்வரர்!
21. கர்நாடகா: குக்கே - சகல வினைகளையும் தீர்க்கும் ‘குக்கே’சுப்ரமணியர்!
22. வட கேரளம்: குமாரமங்கலம் - குழந்தை வரம் அருளும் ஸ்ரீ குமாரமங்கல க்ஷேத்திரம்!
23. கர்நாடகா: மாதேஸ்வரன் மலை - மனதுக்கு இதம் அளிக்கும் மாதேஸ்வர ஸ்வாமி!
24. கர்நாடகா: மங்களூர் ஸ்ரீ மஞ்சுநாதர். - மனக் கவலை போக்கும் ஸ்ரீ மஞ்சுநாத ஸ்வாமி!
25. வட கேரளம்: மத்தூர் - சுபகாரிய சித்தியளிக்கும் மத்தூர் சித்தி விநாயகர்!
26. கேரளா: பல்லசேனா - கேட்ட வரம் கொடுப்பாள், கேரள மீனாட்சி!
27. கர்நாடகா: திருநாராயணபுரம் (மேலுகோட்டை) - புத்திர பாக்கியம் அருளும் மேலுகோட்டை பெருமாள்!
28. கர்நாடகா: முல்பாகல் - கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆஞ்சநேயர் ஆலயம்!
29. கர்நாடகா: மைசூரு - குழந்தைக்காக ஒரு அவதாரம்!
30. கர்நாடகா: மைசூரு - ஸ்ரீரங்க பட்டினம் - காவிரிக் கரையில் பள்ளி கொண்ட அரங்கன்!
31. கர்நாடகா: நெல்லி தீர்த்தம் - நாக தோஷம், வெண் குஷ்டம் போக்கும் குகைக் கோயில்!
32. கர்நாடகா: குண்டல்பேட்டை - ‘ஹிமவத் கோபால் ஸ்வாமி கோயில்’ பகவானின் கருவறையில், எந்நேரமும் பனித்துளிகள்...
33. கேரளா: திருச்சூர் - கேட்டனவற்றைக் கொடுக்கும் தாய்... பரமேக்காவு ஸ்ரீ பகவதி!
34. கேரளா: திருவனந்தபுரம் – திருவல்லம் - ஆறாவது அவதாரம் ஸ்ரீபரசுராமர்!
35. கர்நாடகா: பிலிகிரி - புத்திர பாக்கியம் அருளும் ஸ்ரீநிவாசப் பெருமாள்!
36. கர்நாடகா: பொலாலி - சர்வ மங்களம் நல்கும் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி!
37. கேரளா – திருவனந்தபுரம் - ஐஸ்வர்யத்தை வாரி வழங்கும் ஸ்ரீலட்சுமி வராக ஸ்வாமி!
38. கேரளா – திருவில்வமலை - விமோசனமும் முக்தியும் அருளும் ஸ்ரீ வில்வாத்ரி நாதர்!
39. கர்நாடகா – நாகமங்கலா - ராகு, கேது தோஷங்கள் போக்கும் ஸ்ரீசௌம்ய கேசவப் பெருமாள்!
40. கேரளா – கல்குளம் - நம்பினோர் பாவம் போக்கும் நயினார் ஸ்ரீ நீலகண்ட ஸ்வாமி!
41. கர்நாடகா: சகடபுரம் - நினைத்ததை நிறைவேற்றும் ஸ்ரீசந்தான வேணுகோபால கிருஷ்ணன்!
42. இமாச்சலப் பிரதேசம்: சிம்லா - நினைத்ததை அருளுவாள் குஃப்ரீ மலை மகேஸ்வரி!
43. கேரளா: திருவனந்தபுரம் - பழவங்காடி ஸ்ரீமகா கணபதி!
44. கர்நாடகா: தொண்டனூர் - ஸ்ரீநம்பியை நம்பினால், கோரியது கிடைக்கும்!
45. கேரளா: திருவனந்தபுரம்... - உலக மகா பணக்கார ஸ்வாமி!
46. கர்நாடகா: உடுப்பி - கேட்டதைக் கொடுப்பவன் ஸ்ரீகிருஷ்ணன்!
47. கேரளா: திருவம்பாடி - வறுமையைப் போக்கும் ஸ்ரீஉண்ணிகிருஷ்ணன் - ஸ்ரீ பகவதி அம்மை!
48. கேரளா: திருச்சூர் - நம் பாவங்கள் அனைத்தையும் அகற்றும் ஸ்ரீவடக்குநாதன்!
49. கர்நாடகா: சிருங்கேரி - அஞ்ஞானத்தை அழித்து, ஞானத்தை அளிப்பவள்!
50. கேரளா: திருக்காட்கரை - உலகளந்த பெருமாள்!
என்னுரை
தமிழ்நாட்டைத் தாண்டி, பிற மாநிலங்களில் அமைந்திருக்கும் அபூர்வக் கோயில்களைத் தரிசித்து அவற்றைப் பற்றி விவரமாக விளக்கி, வாசகர்களுக்கு வழங்க வேண்டும் என்ற என் அவா, ‘புஸ்தகா’ மூலம் இப்போது நிறைவேறுவது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது.
தமிழகம் தாண்டி அமைந்துள்ள 50 ஆலயங்களின் தரிசனம் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. ஆலயங்களின் சூழல், தல வரலாறு, ஆலயச் சிறப்புகள், ஆலங்கள் மற்றும் இறைத் திருவுருவங்களின் புகைப்படங்கள் ஆகியவை, கட்டுரைகளுக்குக் கனம் சேர்க்கின்றன.
‘சக்தி விகடன்’, ‘இந்து தமிழ் திசை’, ‘குமுதம் - பக்தி ஸ்பெஷல்’, ‘நெல்லை தினமலர்’, ‘கல்கி’ குழும ஆன்மிகப் பத்திரிகையான ‘தீபம்’, ‘ஜன்னல்’, மாதமிருமுறை - இப்படிப் பல இதழ்களில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.
என் கட்டுரைகளை வெளியிட்ட இதழாசிரியப் பெருந்தகைகளுக்கு என் நமஸ்காரம்.
திருவனந்தபுரத்தில் இருக்கும் ஸ்ரீஅனந்த பத்மநாப ஸ்வாமி ஆலயம், பழவங்காடி மகா கணபதி ஆலயம், ஆற்றுகால் பகவதி ஆலயம், பரசுராமர் கோயில், நீதியரசி சாமுண்டி ஆலயம், லட்சுமி வராக ஸ்வாமி கோயில் மற்றும் கல்குளம் நயினார் நீலகண்ட ஸ்வாமி கோயில் ஆகியவற்றுக்கு நான் செய்தி சேகரிக்கச் சென்றபோது, நட்பு ரீதியாக உடன் வந்து உதவிகள் பல செய்த உலகப் புகழ் பெற்ற வி.ஐ.பி.யும், இந்திய ராக்கெட் விஞ்ஞான வளர்ச்சிக்கு மிக ஆதாரமானவருமான ‘இஸ்ரோ’ விஞ்ஞானி திரு நம்பி நாராயணன் அவர்களுக்கு என் நமஸ்காரமும் நன்றிகளும்.
கர்நாடகாவில் உள்ள பொலாலி, கட்டீல், உடுப்பி, குக்கே, நெல்லி தீர்த்த குகைக் கோயில் போன்ற பல ஆலயங்களுக்கு என்னுடன் வந்து செய்தி சேகரிக்கப் பெருமளவில் உதவி செய்த மங்களூர் தமிழ்ச் சங்க அப்போதையப் பொறுப்பாளர் திருமதி தேன்மொழி ரவிக்குமார், அவர்களுக்கும் என் நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.
இந்த நூல் வெளிவரக் காரணமாக இருக்கும் ‘புஸ்தகா’ இயக்குநர் திரு ராஜேஷ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
- ஜே.வி.நாதன்
1. ஆந்திரா: காணிப்பாக்கம் - அரிய பேறுகளை வாரி வழங்கும் வரசித்தி விநாயகர்!
ஆந்திர மாநிலம், சித்தூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில், அழகிய பாதையில் பயணித்தால், அருள்மிகு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலை அடையலாம். திருப்பதி-திருமலை தேவஸ்தான போர்டுக்கு உட்பட்ட இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.
புதிதாக வாகனங்கள் வாங்கினால், பூஜை போடுவது இந்தக் கோயிலில்தான் என, ஆந்திராவிலும், ஆந்திர எல்லையில் அமைந்துள்ள வேலூர் உள்ளிட்ட பகுதிகளின் மக்கள், லாரி, கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் என்று பலதரப்பட்ட வாகனங்களை இந்தக் கோயிலுக்குக் கொண்டு வந்து முதல் பூஜை போடுவது வழக்கமாக உள்ளது.
வாகன பூஜை மட்டுமல்ல, இந்தக் காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர், பக்தர்களுக்கு வேண்டியதைக் குறைவின்றித் தருபவர் என்கிற நம்பிக்கையும் மக்களிடையே முழுவீச்சில் நிலவுகிறது.
குறைவில்லாத உடல்நலம், வற்றாத செல்வம், வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றி ஆகியவற்றை அருளுவதால்தான், இந்தக் கோயிலில் குடிகொண்டிருக்கும் விநாயகர், ‘வரசித்தி விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார்.
‘காணி நிலம் வேண்டும் பராசக்தி!’ என்று மகாகவி பாரதியார் பாடினாரே, அதே காணிதான்! ‘பாக்கம்’ என்றால், விவசாயத்துக்குப் பாயும் நீர் என்று பொருள்.
இந்தக் கோயில் உருவானதற்குப் பின்னால், சுவையான கதை ஒன்று இருக்கிறது.
வாய் பேச முடியாத, காது கேளாத, பார்வை இல்லாத மூன்று சகோதரர்கள் ஒரு குடும்பத்தில் வசித்து வந்தனர். மூவரும் தங்கள் பூர்வீகமான ஒரே நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். இருவர் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து ஊற்ற, மூன்றாவது நபர் கால்வாய் வழியே பயிருக்கு நீர் பாய வழி வகுப்பது வழக்கம்.
ஒருமுறை, கிணற்றிலிருந்த தண்ணீர் முழுவதுமாக வற்றி விட்டது.
ஒரு சகோதரர் கடப்பாரையுடன் கிணற்றில் இறங்கி, அதன் அடியில் இருந்த கல்லையும் மண்ணையும் வெட்டி அகற்றி, கிணற்றை ஆழப்படுத்தத் தொடங்கினார்.
கடப்பாறை, கிணற்றுக்குள் இருந்த ஒரு பாறையில் பட்டு, அதிலிருந்து ரத்தம் வருவதையும், கிணற்றில் தேங்கியிருந்த கொஞ்ச நீர் முழுவதும் செந்நிறமாகியதையும் அவர் கண்டார். மூன்று சகோதரர்களும் அந்த ரத்தத்தைப் பார்த்து, இது ஏதோ தெய்வ காரியம் போலத் தெரிகின்றதே என்று நினைத்து, அக்கல்லைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினர்.
அடுத்த நொடியே, அவர்ளுக்கு இருந்த வாய் பேச முடியாத, காது கேளாத, பார்வை இல்லாத குறைகள் அனைத்தும் மறைந்து போயினவாம்!
இந்த அற்புதச் செய்தி கிராமம் பூராவும் பரவ, மக்கள் கூட்டமாக அங்கு வந்து கூடினார்கள். கிணற்றில் மேலும் தோண்டியபோது கிடைத்ததுதான், சுயம்பு வரசித்தி விநாயகர் திருவுருவச் சிலை!
விநாயகரை மேலே எடுத்து, கற்பூர ஆரத்தி காட்டி, ஏராள இளநீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்ய, அந்த அபிஷேக நீர், வாய்க்கால் வழியே ஒரு காணி நில அளவுக்கு ஓடி நின்றதாம்!
‘காணிப்பாக்கம்’ என்று பெயர் வந்ததற்கு இப்படியொரு காரணம் கூறப்படுகிறது.
அருள்மிகு வரசித்தி விநாயகரை மேலே எடுத்த ஊர் மக்கள், கிணற்றுக்கு நடுவில், அதை ஸ்தாபிதம் செய்தார்கள். அதனால், எப்போதும் விநாயகரைச் சுற்றி நீர் ததும்பிக் கொண்டே இருக்கிறது. மழைக் காலத்தில் நீர் அதிகமாக ஊறிப் பெருக்கெடுத்து வழியும் நிலை!
விநாயகரைச் சுற்றிப் பொங்கும் நீர், ‘பவித்ர தீர்த்தப் பிரசாதம்’ என்கிற பெயரில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். 1947-ஆம் ஆண்டு, அரகொண்ட கொல்லப்பள்ளி என்னும் கிராமத்தில் வசித்த பெஜவாடா சித்தையா என்பவரின் மனைவி லட்சுமியம்மா என்பவர், இந்த விநாயகருக்கு ஒரு வெள்ளிக் கவசத்தைக் காணிக்கையாக அளித்தார். சுமார் 70 ஆண்டுகள் தாண்டிய நிலையில் அந்தக் கவசம் இப்போது சிறியதாகக் காட்சியளிப்பதையும், தற்போதுள்ள விநாயகர் உருவுக்கு அதன் அளவு போதவில்லை என்பதையும், வரசித்தி விநாயகர் வளார்ந்து வருவதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்!
ஆலயத்துக்கு அருகில் பகூதா ஆறு ஓடுகிறது. பக்தர்கள் பகூதா நதியைப் புனித நதியாகப் போற்றி வழிபட்டு வருகிறார்கள்.
காணிப்பாக்கம் விநாயகர் ஆலயத்துக்குள் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர், மற்றும் நவக்கிரகங்களுக்குத் தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன.
கோயிலை ஒட்டி ஒரு சிவன் கோயில் உள்ளது. ஸ்ரீமரகதாம்பிகை சமேத, ஸ்ரீமணிகண்டேஸ்வரர் இங்கு உறைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அருகிலேயே ஸ்ரீவரதராஜ ஸ்வாமிக்கும் ஒரு தனிக்கோயில் கட்டப்பட்டுள்ளது.
இதன் அருகில் ஒரு அழகிய பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் இறைவன் இறைவியரின் அற்புதமான சுதைச் சிற்பங்கள் அழகிய வண்ணங்களில் காட்சியளிக்கின்றன. இதற்குச் சற்று அருகில் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய மரங்கள் வளர்க்கப்பட்டு, ‘நட்சத்திர வனம்’ என்ற பெயரில் பராமரிக்கப் படுகிறது.
ஆந்திராவில், சித்தூர் அருகில் உள்ள காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகரைத் தரிசித்து மனமாற வழிபட்டால், அரிய பெரும் பேறுகளை நிச்சயம் அடையலாம் என்பது பக்தர்களின் பெரும் நம்பிக்கை!
***
வரசித்தி விநாயகர் பிரம்மோற்சவம் இங்கு விநாயகர் சதுர்த்தி தொடங்கி, 21 தினங்கள் நடத்தப்படுகிறது. தெப்ப உற்சவம், தேர்த் திருவிழா என்று மிகவும் அமர்க்களப்படும் திருவிழா இது. இது தவிர, ஜனவரி முதல் தேதியும் இங்கு விசேஷம்.
லட்சோப லட்சம் மக்கள் இந்த முக்கிய தினங்களில் இங்குக் கூடுவது கண்கொள்ளாக் காட்சியாகும். தினமும் அதிகாலை நான்கு மணிக்குத் திறக்கப்படும் ஆலய நடை, இடைவேளையின்றி இரவு 9-30 மணிக்குத்தான் சாத்தப்படுகிறது. தர்ம தரிசனம், 10 ரூபாய் டிக்கெட்டில் சிறப்பு தரிசனம், சிறப்பு டிக்கெட் ரூ.100-ல் அதிவேக தரிசனம் ஆகியவற்றுக்கு இங்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
தினமும் மதியம் 1000 பக்தர்களுக்கு இங்கு அன்னதானம் போட்டு, பிரசாதங்களும் இலவசமாக அளிக்கப்படுகிறது. பசுக்கள், எருமைகள், கன்றுகள் என சுமார் 200 கால்நடைகள் இங்கு ‘கோசாலா’வில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன.
வெளியூர் பக்தர்கள் தங்குவதற்காக 240 அறைகள் கொண்ட விடுதி, கோயில் தேவஸ்தானக் கட்டுப்பாட்டில் உள்ளது. குளிர் சாதன வசதி கொண்ட அறைகளும் இவற்றில் அடங்கும். முதலுதவி மையம், பக்தர்களுக்கு மினரல் வாட்டர் வசதி மையம் ஆகியவையும் இங்கு உள்ளன.
2. கேரளா: திருவனந்தபுரம் - ஆற்றுகால் பகவதி.
கண்ணகிக்கு பிரும்மாண்ட ‘பொங்கலா’ திருவிழா!
ஆற்றுகால் பகவதி அம்மன்
‘கின்னஸ்’ உலக சாதனைச் சான்றினை ஒருமுறை பெறுவதே பெரும் கஷ்டம்... ஆனால், கேரளாவில் உள்ள இக்கோயிலின் பிரும்மாண்டத் திருவிழா, இரண்டுமுறை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.! திருவனந்தபுரத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ள ஆற்றுகால் பகவதி அம்மனின் ‘பொங்கலா’ என்று கூறப்படும் பொங்கல் திருவிழாதான் அது!
ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலி
கோயிலைச் சுற்றி 8 கி.மீ. சுற்றளவில், ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், கடைகள் சாலைகள், அலுவலக வளாகக் காலியிடங்கள், தோப்பு, துரவுகள் என எல்லா இடங்களையும் சில நாட்களுக்கு முன்பே வந்து பொங்கல் வைக்க இடம் பிடிக்கிறார்கள், உலகெங்குமிருந்து வரும் பெண்கள்.
1997 ம் ஆண்டு விழாவில் 15 லட்சம் பெண்கள் வந்து பொங்கல் வைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறார்கள். 2009-ம் ஆண்டு நடைபெற்ற விழாவில் 25 லட்சம் பெண்கள் பங்கு பெற்றிருக்கிறார்கள். இரு வருடங்களிலும் இது ‘கின்னஸ்’ உலக சாதனையாகப் பதிவாகியிருக்கிறது!
திருவிழாவுக்கு வருகிற லட்சக்கணக்கான பெண்கள் எங்கே தங்குவார்கள்? எங்கே காலைக் கடன்களைக் கழிப்பார்கள், குளிப்பார்கள்? - இப்படிக் கேட்கத் தோன்றுகிறதல்லவா? திருவனந்தபுரம் நகர் முழுவதும் ஜாதி மத பேதங்களின்றி, கிறித்தவர்கள், முஸ்லீம்கள் உட்பட அனைத்து மதத்தினரும் தங்கள் வீடுகளில், பொங்கலா விழாவுக்கு வருகிற முன் பின் தெரியாத பெண்களுக்கு இடம் அளிக்கிறார்கள் என்பது நெஞ்சை நெகிழ்விக்கும் செய்தி!
‘பெண்களின் சபரிமலை’ என்று திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மனின் ஆலயத்தைக் குறிப்பிடுகிறார்கள். திருவனந்தபுரம் கோட்டைக்குள் இருக்கும் ஸ்ரீஅனந்த பத்மநாப சுவாமி ஆலயத்துக்குச் செல்பவர்கள், ஆற்றுகால் அம்மா கோயிலுக்கும் செல்லாவிட்டால் அவர்களின் ஆன்மிகப் பயணம் நிறைவுறுவதில்லை என்பது ஓர் நம்பிக்கை!
ஆற்றுகால் பகவதி வேறு யாருமில்லை; சாட்சாத் தமிழ்நாட்டுக் கண்ணகியேதான்!
கணவன் கோவலன் அரசியின் சிலம்பைத் திருடினான் என்ற பொய்ப்பழி சுமத்தப்பட்டு, அதனை விசாரியாமல் பாண்டிய மன்னன் கோவலனுக்குக் கொலைத் தன்டனை வழங்குகிறான். சினம் அக்கினியாய் எழ, கண்ணகி அரசவை மண்டபம் சென்று தன் கணவன் கள்வன் அல்லன் என்று நிரூபித்து, மதுரையைத் தன் கற்புக் கனலால் எரித்தாள். பின், கன்யாகுமரி வழியாகக் கேரள மாநிலம் கொடுங்கல்லூருக்குச் செல்லும் வழியில், ஆற்றுகாலில் தங்கினாள். சினம் அடங்கி, சாந்த ஸ்வரூபிணியாக பக்தர்களுக்குக் காட்சி தந்தாள் என்பது வரலாறு.
இந்த ஆலயத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படும் 10 நாள் பொங்கலா விழாவில் தினமும் கண்ணகி வரலாறு கொஞ்சம் கொஞ்சமாகப் பாடி முடிக்கப்படுகின்றது. ஒன்பதாம் நாளில்தான் பொங்கல் வைக்கும் வழிபாடு.
பகவதி கோயில் முன்னால் உள்ள அடுப்பில் முதலில் கோயில் தலைமை அர்ச்சகரான மேல்சாந்தியால் தீ வைக்கப்படுக்றது. பின் அந்த அடுப்புத் தீ பல்வேறு திசைகளில் கைமாற்றி அனுப்பப்பட்டு, 8 கி.மீ. சுற்றளவில் பொங்கல் வைக்கக் காத்திருக்கும் லட்சக் கணக்கான பெண்களின் திறந்தவெளி அடுப்புக்குத் தீயாகிறது...
ஆலய சிற்பங்கள்
ஆற்றுகால் பகவதி கோயில் கோபுரங்களில் உள்ள சிற்பங்களில் சிலப்பதிகாரக் கதைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. காலடி க்ஷேத்திரத்தில் தோன்றிய ஆதிசங்கரருக்குப் பிறகு, கேரளாவில் பிறவியெடுத்த மாமுனிவர்களில் முதன்மையானவர் ஸ்ரீ வித்யாதி ராஜ சட்டம்பி சுவாமி. இவர் ஆற்றுக்கால் பகவதி கோயிலிலும் சுற்றுப்புறத்திலும் வாழ்ந்த செய்தி, கோயிலின் பெருமையை இன்னும் உயர்த்தி நிற்கிறது.
ஆற்றுக்கால் பகுதியில் பிரபலமான முள்ளுவீடு குடும்பத்தைச் சேர்ந்த முதியவர், பார்வதி தேவியின் அதி தீவிர பக்தர். ஒருநாள் மாலை கிள்ளி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த அவர் முன் ஓர் சிறுமி தோன்றினாள். ஏராள நகைகளுடனும், அபரிமித அழகுடனும் ஜொலித்த சிறுமி தன்னை நதியின் அக்கரைக்குக் கொண்டு சேர்க்குமாறு வேண்டினாள். சிறுமியைத் தன் தோள் மீது தூக்கி ஆற்றைக் கடந்த முதியவர், அவளைத் தன் வீட்டுக்கும் கூட்டிப் போய் விருந்தோம்பல் செய்தார். ஆனால், சிறுமி திடுமென்று மாயமாய் மறைந்து விட்டாள். அன்றிரவு - சிறுமி, தேவியாக அவருடைய கனவில் தோன்றினாள். அருகாமையில் உள்ள தோப்பில் மூன்று கோடுகள் தென்படும் இடத்தில் தனக்கு ஒரு கோயில் கட்டுமாறு தெரிவித்தாள். மறுநாள் தோப்புக்குச் சென்ற முதியவர், கனவில் தேவி தெரிவித்தவாறு அங்கிருந்த மூன்று கோடுகளைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தார். அந்த இடத்தில் பார்வதியின் அவதாரமான பகவதி தேவிக்குக் கோயில் கட்டத் தொடங்கினார். சில ஆண்டுகாலம் சென்ற பின் ஊர் மக்கள் கோயிலைப் புதுப்பித்தனர். வாள், சூலாயுதம், கங்காளம் (எலும்புக் கூடு), கேடயம் ஆகியவற்றை ஒவ்வொரு கையிலும் ஏந்தியுள்ள தேவி விக்கிரகத்தைச் செய்து, பதரிநாத்திலிருந்து பிரதம புரோகிதரை வரவழைத்து மங்கள முகூர்த்தத்தில் பிரதிஷ்டை செய்தார்கள்.
இன்னொரு வரலாறும் கூறப்படுகிறது...
கிள்ளி ஆற்றை ஒட்டிய வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயப் பெண்கள் அங்கு ஆற்றின் கரையோரம் ஓர் அழகான பெண் அமர்ந்து ஆற்றின் நீரில் நனையுமாறு தன் காலைத் தொங்கவிட்டு ஆட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். திடுமென அந்தப் பெண் எழுந்து தனக்குப் பசிக்கிறது என்றும் சாப்பிட ஏதாவது தாருங்கள் என்றும் விவசாயப் பெண்டிரிடம் கேட்டாளாம். அந்தப் பெண்கள் உடனே, வெட்ட வெளியில் கற்களை வைத்துத் தீ மூட்டி, பானையில் அரிசி, வெல்லம் போன்றவற்றை இட்டுச் சர்க்கரைப் பொங்கல் தயாரித்துக் கொடுத்தார்களாம். பொங்கலை ஆசையோடு வாங்கிச் சாப்பிட்ட அந்த இளம் பெண் சட்டென்று மாயமாய் மறைந்து