Pathavi Paduthum Paadu
()
About this ebook
அரசியலே தெரியாத ஒரு கிரிமினல், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று உண்மையிலேயே ஆசைப்பட்டு இறங்கினால், ஏற்கனவே அரசியலில் இருப்பவர்கள் அவனை என்ன பாடுபடுத்துவார்கள் - என்பதை இக்கதையின் வாயிலாக வாருங்கள் வாசிப்போம்...!
Read more from Thuglak Sathya
Sarvam Comedy Mayam Rating: 0 out of 5 stars0 ratingsSirippatharkku Sila Visayangal... Rating: 0 out of 5 stars0 ratingsArasiyal Galatta! Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsArasiyal Varungal Naguga! Rating: 0 out of 5 stars0 ratingsKizhpakkam to Kottai Rating: 0 out of 5 stars0 ratingsOozhal Nam Pirappurimai Rating: 0 out of 5 stars0 ratingsNaadu Thazhuviya Nagaichuvai Rating: 0 out of 5 stars0 ratingsArasiyalum Nagaichuvaiyum Rating: 0 out of 5 stars0 ratingsMadasamiyin Manasatchi Rating: 0 out of 5 stars0 ratingsArasiyal Kalaiyai Arinthu Kolvom Rating: 0 out of 5 stars0 ratingsManohara - Parasakthi Puthiya Kaappi Rating: 0 out of 5 stars0 ratingsSir, Post...! Rating: 0 out of 5 stars0 ratingsSmile Please Rating: 0 out of 5 stars0 ratingsArasiyalvaathiyin Aavi Rating: 0 out of 5 stars0 ratingsHello, Arasiyalvaathiya...? Rating: 0 out of 5 stars0 ratingsNaiyandi Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsCho Sir Peatti Alithaal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Pathavi Paduthum Paadu
Related ebooks
Kavalai Neram Kaalai 10 Mani Rating: 5 out of 5 stars5/5Vazha Ninaithal Saagalam Rating: 0 out of 5 stars0 ratingsKaruppu Thamarai Rating: 4 out of 5 stars4/5En Kural (Twitter Pathevukalin Thoguppu) Rating: 0 out of 5 stars0 ratingsGlucose Nathigal... Rating: 0 out of 5 stars0 ratingsThoodhu Sellaayo Thuppakkiye Rating: 5 out of 5 stars5/5Maalaiyil Solkiren Vaa Rating: 0 out of 5 stars0 ratingsPachai Kan Devathai Rating: 0 out of 5 stars0 ratingsTharangini Rating: 0 out of 5 stars0 ratingsKizhpakkam to Kottai Rating: 0 out of 5 stars0 ratingsRoja Malare... Rajakumari Rating: 0 out of 5 stars0 ratingsSingapore Sathi Rating: 0 out of 5 stars0 ratingsPoruthathu Pothum Vivek Rating: 5 out of 5 stars5/5Virpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Neelavan Rating: 0 out of 5 stars0 ratingsInnum Konjam Manithargal... Rating: 0 out of 5 stars0 ratingsThedathey Tholayathey! Rating: 5 out of 5 stars5/5Arasiyalum Nagaichuvaiyum Rating: 0 out of 5 stars0 ratingsNee Mattum Rating: 0 out of 5 stars0 ratingsSila Ragasiyangal Ragasiyamanavai Rating: 0 out of 5 stars0 ratingsThee... Deepa... Deepavali Rating: 5 out of 5 stars5/5Sattapadi Kutramillai! Rating: 0 out of 5 stars0 ratingsManakkadhavu Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Oru Indian Rating: 0 out of 5 stars0 ratingsவெல்வெட் குற்றம் Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Kutram Rating: 0 out of 5 stars0 ratingsKuttra Sangili Rating: 0 out of 5 stars0 ratingsNaangavathu Kuranku Rating: 0 out of 5 stars0 ratingsVizhven Endru Ninaithayo? Rating: 0 out of 5 stars0 ratingsKuri Ondru Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Pathavi Paduthum Paadu
0 ratings0 reviews
Book preview
Pathavi Paduthum Paadu - Thuglak Sathya
https://www.pustaka.co.in
பதவி படுத்தும் பாடு
Pathavi Paduthum Paadu
Author:
துக்ளக் சத்யா
Thuglak Sathya
For more books
https://www.pustaka.co.in/home/author/thuglak-sathya
பொருளடக்கம்
மலையப்பனின் கோபம்
முதல்வரின் மகிழ்ச்சி
மலையப்பனின் கேசட்
மாநிலச் செய்திகள்
புலனாய்வுக் கட்டுரைகள்
கூட்டணிக் கட்சிகளின் கூட்டம்
முதல்வர் எடுத்த முடிவு
தமிழரசனின் தந்திரம்
பிரதமருக்கு ஒரு மிரட்டல்
ஜனநாயகத்தின் பெருமை
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
சட்டசபை விவாதம்
தீவிரவாதியின் பதில்கள்
மலையப்பனின் ஆசை!
அருள் வாக்கு பலித்தது!
தூதுவர் வந்தார்!
ஆட்சி டிஸ்மிஸ்!
ஒரு விருந்து
தமிழரசன் விடுதலை
நாற்பெரும் விழா
மலையப்பனின் நடைப்பயணம்
தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கை
கொள்கைப் புரட்சி
மத்திய அரசின் திணறல்
ஸி.பி.ஐ. விசாரணை
ஆஸ்பத்திரியில் அரசியல்
உறவு முறிந்தது
தனித்துப் போட்டி
மலர்ந்தது மலையப்பன் ஆட்சி!
தமிழரசன் தந்த நெருக்கடி
கூட்டணித் தலைவர்களின் நிர்ப்பந்தம்
மலையப்பன் கேட்ட கேள்வி!
சட்டசபை மோதல்
சத்தியம் நிறைவேறியது
கதையை படிப்பதற்கு முன்...
வணக்கத்திற்குரிய வாசகர்களே...!
இக்கதையின் மூலம் உங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள கிடைத்த வாய்ப்புக்கு நன்றி. ‘மாடசாமியின் மனசாட்சி’க்கு அடுத்தபடியாக ‘துக்ளக்’கில் வெளியான எனது தொடர் ‘பதவி படுத்தும் பாடு’. கதையைப் படிக்கத் தொடங்குவதற்கு முன்பாக, இது பற்றிய அறிமுகமாக ஓரிரு தகவல்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
அரசியலே தெரியாத ஒரு கிரிமினல், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று உண்மையிலேயே ஆசைப்பட்டு அரசியலில் இறங்கினால், ஏற்கெனவே அரசியலில் இருப்பவர்கள் அவனை என்ன பாடுபடுத்துவார்கள் - என்பதே கதையின் ‘ஒன் லைன்’.
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி வைத்துக் கொண்டு நாட்டையே அதிர்ச்சியுறச் செய்த சந்தனக் கடத்தல் வீரப்பனை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அச்சம்பவத்தை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் இக்கதை.
இத்தொடர் துக்ளக்கில் வெளியானபோது வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. கதையைப் படித்த வாசகர்கள் தாங்களாகவே எதை எதையோ நினைத்துக்கொண்டு ரசித்து சிரித்தார்களே தவிர, மற்றபடி இக்கதையும் சரி கதையில் வரும் சம்பவங்களும் சரி முற்றிலும் கற்பனையே.
இத்தொடர் சுமார் 15 அத்தியாயங்கள் எழுதப்பட்டிருந்த நிலையிலேயே, தயாரிப்பாளர் திரு. ஜி. மூர்த்தி அவர்களும் டைரக்டர் திரு ராமலிங்கம் அவர்களும் என்னை அணுகி இதனை சினிமாவாக எடுக்க விரும்புவதாகத் தெரிவித்தார்கள். கதையை எழுதி முடிக்கும் வரை பொறுத்திருக்கும்படி நான் கேட்டுக் கொண்டும், உடனேயே படப் பிடிப்பைத் துவங்கிவிட விரும்பினார்கள்.
படத்தைத் துவக்கிய பிறகு துக்ளக்கில் வெளியான கதையைப் பற்றி அவர்கள் எந்த ஆர்வமும் காட்டாமல், தங்கள் விருப்பப்படி அவசரம் அவசரமாக படத்தை எடுத்து முடித்தும் விட்டார்கள். அந்த அவசரத்தின் விளைவாக, ‘துக்ளக்கில் படித்தது போல சினிமா இல்லை’ என்ற பரவலான பாராட்டு இக்கதைக்குக் கிடைத்தது. அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
பொதுவாக அரசியலில் ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் பதவி ஆசையின் காரணமாக எப்படியெல்லாம் கூத்தடிக்கின்றன என்பதை இக்கதையின் வாயிலாக எடுத்துச் சொல்ல முயன்றிருக்கிறேன்.
நான் அதை சரியாகச் சொல்லியிருக்கிறேனா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீங்களே.
நட்புடன்,
துக்ளக் சத்யா
பதவி படுத்தும் பாடு
அத்தியாயம் - 1
மலையப்பனின் கோபம்
அமாவாசை இருள் அந்தக் காட்டுப் பகுதியைச் சூழத் தொடங்கியிருந்தது. பிரபல கடத்தல்காரன் மலையப்பனும் அவனது சகா செங்காளியும், தாங்கள் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.
அயோக்கியனுங்க. ஒரு வாக்கு கொடுத்தா அதைக் காப்பாத்த வேண்டாம்? ஒண்ணா ரெண்டா? 25 கோடி! யார் அப்பன் வீட்டுப் பணம்? வயிறு எரியுது
- பொருமினான் மலையப்பன்.
அண்ணே...! உங்க நல்ல மனசுக்கு எல்லாரையும் நம்பிடறீங்க. பேச்சு வார்த்தைக்கு வந்தவங்க மூஞ்சியைப் பார்த்ததுமே, இவனுங்க ஃப்ராடுப் பசங்கன்னு நான் கண்டு பிடிச்சுட்டேன். இப்படி ஏமாத்துவாங்கன்னு எனக்கு முதல்லேயே தெரியும்
என்றான் செங்காளி.
ஒரு வியாபாரம்னா ஒருத்தரை ஒருத்தர் நம்பித்தானே ஆகணும் செங்காளி? அதனாலே நம்பிட்டேன். இப்படி ஏமாத்துவாங்கன்னு தெரிஞ்சிருந்தா அன்னைக்கே அந்த சினிமாக்காரன் தலையை வெட்டி கூரியர்லே கவர்மெண்டுக்கு அனுப்பியிருப்பேன்.
அந்த டைரக்டரை நாம இங்கே பிடிச்சு வெச்சிருந்தப்போ எத்தனை பேர் எத்தனை தடவை தூது வந்தானுங்க? தினமும் ரேடியாவிலே ஆள் ஆளுக்கு அழுதானுங்க. இப்ப பாத்தீங்களா அண்ணே? நாலு வருஷம் ஆச்சு. நம்மை மதிச்சு ஒரு பயலாவது எட்டிப் பார்த்தானா?
அதை விடு செங்காளி. முன்னே தினத்துக்கும் பேப்பர்லே என் கலர் ஃபோட்டோவோட முதல் பக்கத்திலேயே நியூஸ் போடுவானுங்க. இப்ப கடைசிப் பக்கத்திலே கூட ஒரு வரி எழுதமாட்டேன்றானுங்களே. அவ்வளவு கேவலமா போயிட்டேனா நான்?
நான்கு ஆண்டுகளுக்கு முன் பிரபல சினிமா டைரக்டர் ஷ்யாம் சுந்தரைக் கடத்திச் சென்று, தமிழகத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்திருந்தான் மலையப்பன். சுமார் மூன்று மாதங்கள் அவரை காட்டுக்குள்ளேயே வைத்துக் கொண்டு அரசுத் தூதுவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினான். அப்போது நடந்த பேச்சு வார்த்தைகள் இன்னும் அவன் நினைவில் இருந்தன.
ஆல மர நிழலில் பெரிதாக ஜமுக்காளத்தை விரித்து நடுநாயகமாக டைரக்டர் உட்கார்ந்திருக்க, மலையப்பனும் செங்காளியும் ஒரு பக்கமாகவும், அரசு அதிகாரிகள் மற்றும் தூதுவராக வந்திருந்த பத்திரிகையாளர் முத்துவேலு ஆகியோர் மற்றொரு பக்கமாகவும் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியது - நேற்று நடந்தது போல்தான் இருந்தது.
நான் ஒண்ணும் ஜாஸ்தியா கேக்கலை. நியாயமாத்தான் கேக்கறேன். 75 கோடி கொடுத்துட்டு டைரக்டர் ஸாரை மீட்டுக்கிட்டுப் போங்க
என்றான் மலையப்பன்.
எழுபத்தஞ்சு கோடியா? அவ்வளவு பணம் கேட்டா எப்படிங்க? இதுக்கு முன்னாலே கடத்தினப்போ, ஒரு கோடி, ஒன்றரை கோடி கொடுத்து மீட்டுகிட்டுப் போயிருக்கோமே
என்றார் அரசு அதிகாரி, பழைய ஃபைலை ஆதாரத்துடன் காட்டியபடி.
செங்காளிக்கு ‘சுர்’ரென்று கோபம் வந்தது. அதான் நாங்க பண்ண தப்பு. அதே மாதிரி இப்பவும் இளிச்சவாயனா இருக்கச் சொல்றீங்களா?
என்று சீறினான்.
செங்காளி...! பெரியவங்க பேசும்போது குறுக்கே பேசாதே
என்று அவனை அடக்கிய மலையப்பன், இதுக்கு முன்னாலே நான் கடத்தினது சாதாரண ஆளுங்க. இவர் பெரிய டைரக்டர் ஆச்சுங்களே. எவ்வளவு கஷ்டப்பட்டு கடத்திட்டு வந்திருக்கேன்? இவருக்கும் அதே ரேட் போட்டா எப்படி?
என்றான்.
தனக்கு இவ்வளவு மதிப்பா என்று நினைத்து தேவையில்லாமல் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தார் டைரக்டர் ஷ்யாம் சுந்தர்.
இருந்தாலும் எழுபத்தஞ்சு கோடின்னா கவர்மெண்ட்லே நம்ப மாட்டாங்க. நாங்க ஏதோ நடுவிலே பூந்து கொள்ளை அடிக்கிறோம்னு நினைப்பாங்க
என்றார் மற்றோர் அதிகாரி.
காட்டுலே மிருகங்கள் கிட்டேயிருந்து மூணு மாசமா டைரக்டர் அண்ணனை, மலையப்பன் அண்ணன் காப்பாத்திட்டு வராரு. அதையும் நாம பாக்கணும். மத்த மாநில கொள்ளைக்காரங்க இதை விட அதிகமா கேக்கறாங்க
- அரசுத் தூதுவரும் பத்திரிகையாளருமான முத்துவேலு இடைமறித்துக் கூறினார்.
மலையப்பனுக்கு அரசால் கொடுக்கப்படும் பணத்தில், மலையப்பனிடமிருந்து பத்து சதவிகித கமிஷனும், அரசு தரப்பிலிருந்து ஐந்து சதவிகித கமிஷனும் கிடைக்கும் என்பதால், வியாபாரம் பெரிய அளவில் இருப்பதே தனக்கு நல்லது என்று நினைத்து அப்படிக் கூறினார் அவர்.
தன் பக்கமாக முத்துவேலு பேசியதால், அடுத்த கடத்தலுக்கும் முத்து வேலுவையே தூதுவராக வரச்சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் மலையப்பன்.
75 கோடின்னு பாக்காதீங்க. எனக்கும் வயசாயிடிச்சு. இனிமே வருஷத்துக்கு, ஒரு கடத்தலுக்கு மேலே நான் பண்ண மாட்டேன். இதனாலே கவர்மெண்டுக்கு எவ்வளவு நல்ல பேரு, எவ்வளவு லாபம்னு கணக்கு போட்டுப் பாருங்க. நான் ஒண்ணும் சும்மா கேக்கலை
உங்களுக்கும் வேணாம். எங்களுக்கும் வேணாம். பத்து கோடி தரோம். டைரக்டரை விட்டுருங்க
என்றார் அரசு அதிகாரி.
அதென்னங்க அப்படிப் பேசறீங்க? ஏன் வேணாம்னு சொல்றீங்க? உங்களுக்கும் வேணும். எனக்கும் வேணும். அதானே வியாபாரம்? கடத்தல் வியாபாரம் இத்தோட முடிஞ்சுடவா போவுது? நாளைக்கு மக்கா நாள் நீங்களும் இங்கே வரணும் இல்லே? அறுபது கோடி கொடுத்துட்டு டைரக்டர் ஸாரை கூட்டிட்டுப் போங்க.
மலையப்பண்ணே! அடுத்த கடத்தல்லே சேர்த்து வாங்கிக்குங்க. நீங்க எங்கே போகப் போறீங்க? நாங்க எங்கே போகப் போறோம்?
- நடு நிலையாகப் பேசினார் முத்துவேலு.
தேர்தல் சமயத்தில் தொகுதி ஒதுக்கீட்டுக்கு பேரம் பேசுவதைப் போல பேச்சு வார்த்தை தொடர்ந்து, இறுதியில் ஐம்பது கோடிக்கு முடிவாயிற்று.
இப்ப 25 கோடி கொடுக்கறோம். உங்களுக்குத் தெரியாதது இல்லே. நிதி நிலைமை ரொம்ப மோசமா இருக்குது. அடுத்த மாசம் இன்னொரு 25 கோடி கொடுத்துடறோம்
என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
அதை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்ட மலையப்பன், டைரக்டருக்கு சால்வை போர்த்தி, ஒரு மூட்டை பனங் காய்களைப் பரிசாகக் கொடுத்து டைரக்டரை விடுவித்தான்.
ஆனால் நான்கு வருடங்களாகியும் அந்த பாக்கிப் பணம் 25 கோடி ரூபாய் வந்து சேரவில்லை. மாறாக, ஆட்சி மாறிப் போய், புதிய ஆட்சி மலையப்பனைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருந்தது.
அதனால்தான், மலையப்பனும் செங்காளியும் கடும் கோபத்தில் இருந்தனர்.
இப்ப என்ன அண்ணே பண்றது?
உத்திரவை எதிர் நோக்கிக் கேட்டான் செங்காளி.
தீவிரமாக யோசித்த மலையப்பன், இன்னிக்கு அமாவாசை, நல்ல நாள். நம்ம ஆளுங்களைக் கூட்டிகிட்டு உடனே கிளம்பு. கவர்மெண்டுகாரனுங்க கண்ணுலே விரலை விட்டு ஆட்டறேன். பாரு வேடிக்கையை...
என்றான்.
***
சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார் எதிர்க் கட்சித் தலைவர் தமிழரசன். அவரது தமிழ் சமுதாய முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்கள் அறிவுமணி, கோலப்பன், மருதநாயகம் ஆகியோர் அவர் முன் அமர்ந்திருந்தனர். தமிழரசன் எங்கு சென்றாலும் உடன் செல்பவர்கள் அவர்கள். சட்டசபை இல்லாததால், அனைவரும் ஓய்வுக்காக ஆனைமலை வந்து தங்கியிருந்தனர்.
முதல்வர் வீரபத்ரனின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு எவ்வளவோ முயன்றும் முடியாததால், வெறுத்துப்போய், ‘ஜனநாயக முறைப்படி ஐந்தாண்டுகள் ஆட்சி செய்யும் உரிமையைத் தடுக்க நான் விரும்பவில்லை’ என்று ஆத்திரத்துடன் அன்று காலைதான் அறிக்கைவிட்டிருந்தார், தமிழரசன்.
அடுத்த வருஷம், சட்டசபைத் தேர்தல் வரப்போகுதுங்க. ஆட்சியைப் பிடிக்க வியூகம் அமைச்சுக் கொடுத்தீங்கன்னா இப்பவே பணியைத் தொடங்கிடலாம்
- முன்னாள் அமைச்சர் கோலப்பன் கூறினார்.
அதைத்தான் நானும் யோசிச்சுக்கிட்டிருக்கேன். ஆட்சிக்கு பெரிய அளவிலே கெட்ட பேர் வர்ற மாதிரி ஏதாவது நடந்தா நமக்கு நல்ல பேர் கிடைக்கும். ஒண்ணும் நடக்க மாட்டேங்குதே
- அலுத்துக் கொண்டார் தமிழரசன்.
தானா கெட்ட பேர் வரும்னு நினைச்சுத்தான் நாலு வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டோம். இனிமே அப்படி விட்டுடக் கூடாதுங்க. நாமும் அதுக்காக கொஞ்சம் நடவடிக்கை எடுக்கணும்
என்றார் கட்சியின் மூத்த தலைவர் அறிவுமணி.
தலைவரே சொல்றேன்னு கோவிச்சுக்காதீங்க. இப்பல்லாம் உங்களுக்கு ஜனநாயகத்திலே நம்பிக்கை போயிடிச்சு.
என்ன அப்படிச் சொல்றீங்க கோலப்பன்? போன மாசம் கூட சட்டசபையிலே என் தலைமையிலே பயங்கரக் கலவரம் நடந்ததே. ஜனநாயகத்திலே நம்பிக்கை இல்லாமயா கலவரம் பண்ணோம்?
அது வழக்கமா செய்யறதுங்க. முன்னே மாதிரி சட்டத்தை மீறி நீங்க செயல்படறதில்லை. நீங்க சட்டத்தை மீறினா, வீரபத்ரன் போலீஸ் உங்களை கைது பண்ணும். அந்த காட்டுமிராண்டித் தனத்துக்கு எதிரா தமிழகத்தைப் பொங்கி எழ வெச்சுடலாம்.
கோலப்பனின் ஆக்கபூர்வமான ஆலோசனை தமிழரசனைக் கவர்ந்தது. கோலப்பனை மிஞ்ச நினைத்த மருத நாயகம், தலைவர் மேலே எவனும் கையை வெக்க நான் விடமாட்டேன். என் பிணத்தை தாண்டித்தான் தலைவரைத் தொட முடியும்
என்று சீறினார்.
அறிவுமணிக்கு திக்கென்றது. கோலப்பனையும் மருதநாயகத்தையும் மிஞ்சும் வகையில் தானும் ஏதாவது கூற வேண்டுமே என்று படபடத்தார். உடனே சுதாரித்துக் கொண்டு, தலைவர் மேலே தூசு பட்டாக் கூட அதுக்கு காரணமானவங்களை அங்கேயே கண்டதுண்டமா வெட்டிப் போடுவேன். தலைவருக்குப் பயன்படாத இந்த உயிரும் உடம்பும் எனக்குத் தேவையில்லை. யார் வேணாலும் எடுத்துக்கட்டும்
என்று உறுமியபடியே, தமிழரசன் மகிழ்ச்சி அடைகிறாரா என்று கவனித்தார் அறிவுமணி.
கட்சிப் பிரமுகர்களின் பாச உணர்வு கண்டு பெருமிதம் அடைந்தார் த.ச.மு.க. தலைவர்.
டி.வி.யில் செய்தி ஆரம்பித்தது.
கொஞ்சம் இருங்க. டி.வி.யிலே நியூஸ் ஆரம்பிக்குது. ஏதாவது நல்ல செய்தி சொல்றானா பார்ப்போம்
என்றார் தமிழரசன் - ஏதாவது கெட்ட செய்தி வருகிறதா என்ற ஆவலுடன்.
‘கள்ளச் சாராயம் குடித்து 35 பேர் சாவு... தமிழகத்தில் ஜாதிக் கலவரம் வெடித்தது... போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் உயிர் ஊசல்...’
இப்படி ஏதாவது செய்தி வருகிறதா என்று எதிர்பார்த்தார் தமிழரசன்.
‘தேக்கு மரக் கடத்தல்காரன் மலையப்பனை விரைவில் பிடித்தே தீருவோம் - அதிரடிப் படைத் தலைவர் சபதம்’ - என்றது முதல் தலைப்புச் செய்தி.
நன்றி கெட்டப் பய
என்றார் தமிழரசன் எரிச்சலுடன். தன்னைத் தான் குறிப்பிடுகிறாரோ என்ற அதிர்ச்சியில் கட்சிப் பிரமுகர்கள், தலைவரை கலக்கத்துடன் பார்த்தனர்.
இந்த மலையப்பன் நம்ம ஆட்சியிலே எவ்வளவு ஆட்டம் போட்டான்? எவ்வளவு பணத்தைப் புரட்டிக் கொடுத்தோம்? இப்படி ஏமாத்திட்டானே!
ஏங்க, மலையப்பன் கிட்டேயிருந்து நமக்கு வர வேண்டியது ஏதாவது பாக்கி இருக்குதுங்களா?
பணத்தை விடுய்யா! பணம் இன்னைக்கு வரும். நாளைக்கு ஆட்சியைப் பிடிச்சா எவ்வளவு வேணாலும் வரும். அதுவா முக்கியம்? நம்ம ஆட்சியிலே ஆளுங்களைக் கடத்தி நமக்கு அவ்வளவு தொந்திரவு கொடுத்தவன்; வீரபத்ரன் ஆட்சிக்கு வந்து நாலு வருஷமாகியும் யாரையும் கடத்தாம கழுத்தறுக்கிறானே. அயோக்கியன்
பொருமினார், தமிழரசன்.
தலைவரின் சிந்தனையில் இருந்த நியாய உணர்வு கட்சிப் பிரமுகர்களுக்கு அப்போதுதான் புரிந்தது.
நம்ம ஆட்சி மாதிரி இல்லைங்க இப்போ. போலீஸ் அராஜகம், சொல்ல முடியாத அளவுக்கு இருக்குது. அதனாலேதான் மலையப்பனாலே யாரையும் கடத்த முடியலை. மத்தபடி அவன் மேலே ஒண்ணும் தப்பு இல்லே
என்றார் அறிவுமணி.
தேர்தலுக்கு முன்னாலே பெரிய ஆள் யாரையாவது கடத்திட்டான்னு வெச்சுக்குங்க. சூப்பரா இருக்கும். வீரபத்ரன் பேரு நாறிடும். தமிழ்நாடே சுடுகாடாப் போயிடிச்சுன்னு சொல்ற அருமையான வாய்ப்பு கிடைக்கும். பாவிப் பய யாரையும் கடத்தாம காலத்தை கடத்திக்கிட்டிருக்கானே
- தமிழரசன் கூறினார்.
நினைச்சாவே தமாஷா இருக்குதுங்க. மலையப்பன் முக்கியமான ஆளை கடத்தினா மட்டும் போதாது. விடவே மாட்டேன்னு கடைசி வரைக்கும் கொள்கை உறுதியோட இருக்கணும். அப்பதான் பிரச்சாரத்துக்கு நமக்கு வசதியா இருக்கும்
என்றார் கோலப்பன்.
அதிர்ஷ்டவசமா கொலை கிலைன்னு நடந்துட்டா அவ்வளவுதான். வீரபத்ரன் ஆட்டம் க்ளோஸ். அடுத்த ஆட்சி நம்ம ஆட்சிதான்
- தமிழரசன் உற்சாகமாகக் கூறிக் கொண்டிருந்த போது, கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது.
யாரது இந்த நேரத்திலே? போய்ப் பாருங்க.
தமிழரசன் உத்திரவிட்டார்.
கதவு திறக்கப்பட்டதும், திபுதிபுவென மலையப்பனும் அவனது ஆட்களுமாக ஒரு டஜன் பேர் உள்ளே நுழைந்து சூழ்ந்து கொண்டனர்.
ஐயா நீங்க மட்டும் புறப்படுங்க
– தமிழரசனைப் பார்த்து பவ்யமாகக் கூறினான் மலையப்பன்.
அத்தியாயம் - 2
முதல்வரின் மகிழ்ச்சி
திடீரென்று தங்களைச் சூழ்ந்து கொண்ட கொள்ளைக் கூட்டத்தினரைப் பார்த்ததும், த.ச.மு.க. தலைவர் தமிழரசனும் அவரது கட்சிப் பிரமுகர்களும் வெலவெலத்துப் போனார்கள்.
ஏய்... யாருப்பா நீங்க?
என்று தமிழரசன் கேட்க முயன்றாலும், வார்த்தைகள் உருப்படியாக வெளிவரவில்லை. அவரே எதிர்பார்க்காத சப்தங்கள்தான் வெளி வந்தன.
மலையப்பன் துப்பாக்கியைத் தூக்கி, தமிழரசனைப் பார்த்து மரியாதையாகக் கும்பிட்டான்.
ஐயா வணக்கம்ங்க! நான்தானுங்க மலையப்பன். இந்த கவர்மெண்டு எனக்கு துரோகம் பண்ணிடிச்சுங்க ஐயா. அதுக்கு பழி தீர்த்தாத்தான் என் மனசு ஆறும்ங்க, அதுக்காகத்தான், ஐயா இங்கே வந்திருக்கிறதைக் கேள்விப்பட்டு, கடத்திட்டுப் போலாம்னு வந்தேனுங்க
என்றான் மிகப் பணிவோடு.
மலையப்பனின் மாபாதகச் செயல்கள் பற்றி த.ச.மு.க. பிரமுகர்கள் பத்திரிகைகளில்தான் படித்திருந்தனர். அவன் ஃபோட்டோவையும் பத்திரிகைகளில் தான் பார்த்திருந்தார்களே தவிர, இப்படி நேருக்கு நேர் துப்பாக்கியுடன் வந்து நிற்பான் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.
மலையப்பன், பிணைக் கைதிகளை கொதிக்கும் வெந்நீரில் போட்டு கொலை செய்தது; கையை காலைக் கட்டி ஓநாய்க் கூட்டத்திற்குத் தீனியாகப் போட்டுக் கொன்றது; தலை கீழாகத் தொங்க விட்டு கீழே நெருப்பு மூட்டியது - போன்ற பத்திரிகைச் செய்திகள் அவர்கள் நினைவுக்கு வந்தன... பயத்தால் உடல் வியர்த்து, நிற்க முடியாமல் தடுமாறினர்.
மலையப்பன் துப்பாக்கியை அவர்கள் பக்கம் திருப்பி எச்சரித்தான்.
யாராவது அசைஞ்சீங்கன்னா சுட்டுப்புடுவேனுங்க. தலை எகிறிடும்ங்க. அப்புறம், என்னடா மலையப்பன் இப்படி பண்ணிப்புட்டானேன்னு வருத்தப்படாதீங்க ஐயா...
என்றான். த.ச.மு.க. பிரமுகர்கள் தட தடவென நடுங்கினார்கள். நடுக்கத்தை அசைவு என்று அவன் நினைத்து விடக் கூடாதே என்று பயந்ததன் காரணமாக அவர்கள் நடுக்கம் மேலும் அதிகமாகியது.
...இது... வந்து... நாங்க ஒண்ணும் அசையலையே! இங்கேயேதானே நிக்கறோம். இல்லே கோலப்பா?
என்றார் மருதநாயகம்.
கோபலப்பனோ, அரை மணி நேரத்துக்கு முன்பே பாத்ரூம் போக நினைத்திருந்தார். தலைவருடன் பேசிக் கொண்டிருந்த சுவாரஸ்யத்தில், பாத்ரூம் பக்கத்தில்தானே இருக்கிறது; அப்புறம் போய்க்கொள்ளலாம் – என்று அலட்சியமாக இருந்து விட்டார். அதன் காரணமாக, மலையப்பனின் மிரட்டல் அவருக்கு இருமடங்கு பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
இந்த கவர்மெண்டு உங்களுக்கு துரோகம் பண்ணதுக்கு எங்களை எதுக்கு கடத்தறீங்கன்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா?
என்று தட்டுத் தடுமாறி கேட்டார் அறிவுமணி - தான் தைரியமாகக் கேட்டதை தமிழரசன் எப்படி மெச்சுகிறார் என்று பார்த்தபடியே.
எல்லாத்தையும் கேசட்லே சொல்லியிருக்கேனுங்க. இப்ப தமிழரசன் ஐயாவை மட்டும் கடத்திகிட்டுப் போறேனுங்க. இந்த கேசட்டை காலையிலே கவர்மெண்டுலே சேர்த்துடுங்க. அதுக்கு முன்னாலே இந்த விஷயம் யாருக்கும் தெரியக் கூடாதுங்க. தெரிஞ்சதுன்னா எல்லாரையும் சுட்டுப் போடுவேனுங்க. தலை எகிறிடுங்க
என்றான் மலையப்பன் துப்பாக்கியால் கும்பிட்டபடியே.
மலையப்பன், தங்கள் தலைவரை மட்டும்தான் கடத்த திட்டமிட்டிருக்கிறான் என்று தெரிந்ததும், மூன்று பிரமுகர்களும் பெரும் நிம்மதி அடைந்தனர். அவன் மனம் மாறி, நம்மையும் வரச் சொல்லி விடக்கூடாதே; நல்லபடியாக தலைவரை மட்டும் கடத்திக் கொண்டு சீக்கிரம் போக வேண்டுமே - என்று நினைத்தனர்.
சரி... கேசட்டை நான் கொடுத்துடறேன்
என்று உற்சாகமாக தலையாட்டியபடியே வாங்கிக் கொண்டார் அறிவுமணி.
தலைவரே...! இதுலே உங்களுக்கு வேண்டிய மாத்திரை எல்லாம் இருக்குது. வேளா வேளைக்கு சாப்பிடுங்க
அக்கறையுடன் பொட்டலம் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார் மருதநாயகம்.
கோலப்பனின் கண்களில் நீர் பெருகியது. அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தன் மகளின் திருமணத்திற்கு, தலைவரிடம் ஐந்து லட்சம் கேட்கலாம் என்று நினைத்திருந்தார் அவர். தலைவரின் மூடு பார்த்து கேட்க வேண்டும் என்று தயங்கியது எவ்வளவு தவறாகப் போய் விட்டது! தலைவர் எப்போது திரும்பி வந்து, எப்போது அவரிடம் பணம் கேட்பது என்று நினைக்க, துக்கம் பொங்கியது கோலப்பனுக்கு!
அழாதீங்க கோலப்பன். என் உயிருக்கு ஒண்ணும் ஆகாது
கோலப்பனுக்கு ஆறுதல் கூறும் சாக்கில் தன்னைத்தானே தேற்றிக் கொண்டார் தமிழரசன்.
ஐயாவுக்கு ஒரு கஷ்டமும் வராம நான் பாத்துக்கறேனுங்க. நான் கேக்கறதை எல்லாம் கவர்மென்ட்டு கொடுத்துட்டா, ஐயாவை நல்லபடியா திருப்பி அனுப்பிடறேன். என் கோரிக்கையை கவர்மெண்ட்டு மதிக்கலைன்னாத்தான், தமிழரசன் ஸார் தலையை வெட்டி பார்சல் பண்ணுவோம்
என்றான் மலையப்பன் புன்னகையுடன்.
என்னது தலையை வெட்டுவீங்களா?
பதறினார் மருதநாயகம்.
"எடுத்தவுடனே தலையை