Kizhpakkam to Kottai
()
About this ebook
கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட எத்திராஜ் தன் மகன் விச்சுவை மந்திரியாக்க வேண்டும் என்று பாடுபடுகிறார். அவரின் ஆசை நிறைவேறியதா? அமைச்சர் வேதநாயகம் பெண்ணின் திருமணத்தை நிறுத்த நினைப்பவர்களின் எண்ணங்கள் ஈடேறியதா? பலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்தால் கோட்டையை கைப்பற்றலாம் என்பதை காண வாசிப்போம்.
Read more from Thuglak Sathya
Sirippatharkku Sila Visayangal... Rating: 0 out of 5 stars0 ratingsNaiyandi Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsArasiyal Galatta! Rating: 0 out of 5 stars0 ratingsSarvam Comedy Mayam Rating: 0 out of 5 stars0 ratingsSir, Post...! Rating: 0 out of 5 stars0 ratingsManohara - Parasakthi Puthiya Kaappi Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsArasiyalum Nagaichuvaiyum Rating: 0 out of 5 stars0 ratingsSmile Please Rating: 0 out of 5 stars0 ratingsMadasamiyin Manasatchi Rating: 0 out of 5 stars0 ratingsArasiyal Kalaiyai Arinthu Kolvom Rating: 0 out of 5 stars0 ratingsHello, Arasiyalvaathiya...? Rating: 0 out of 5 stars0 ratingsPathavi Paduthum Paadu Rating: 0 out of 5 stars0 ratingsCho Sir Peatti Alithaal Rating: 0 out of 5 stars0 ratingsArasiyal Varungal Naguga! Rating: 0 out of 5 stars0 ratingsOozhal Nam Pirappurimai Rating: 0 out of 5 stars0 ratingsArasiyalvaathiyin Aavi Rating: 0 out of 5 stars0 ratingsNaadu Thazhuviya Nagaichuvai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kizhpakkam to Kottai
Related ebooks
Kavalai Neram Kaalai 10 Mani Rating: 5 out of 5 stars5/5Sattapadi Kutramillai! Rating: 0 out of 5 stars0 ratingsSingapore Sathi Rating: 0 out of 5 stars0 ratingsVazha Ninaithal Saagalam Rating: 0 out of 5 stars0 ratingsArasiyalum Nagaichuvaiyum Rating: 0 out of 5 stars0 ratingsO Pakkangal Part - 9 Rating: 0 out of 5 stars0 ratingsKolusu Satham Rating: 0 out of 5 stars0 ratingsAutograph Rating: 0 out of 5 stars0 ratingsVirpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Glucose Nathigal... Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattum Theriyum Rating: 0 out of 5 stars0 ratingsPrathamarudan Iru Payanangal Rating: 0 out of 5 stars0 ratingsAzhagiya Pizhaigal Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsNalla Manam Vazhga! Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Vidum Neram Rating: 5 out of 5 stars5/5‘Gopu’win Chinna Chinna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsIrattai Dhrogam Rating: 0 out of 5 stars0 ratingsOru Kappal Muthangal Rating: 0 out of 5 stars0 ratingsEntha Poovilum Vaasam Undu! Rating: 0 out of 5 stars0 ratingsMoolai Thanda Moolathanam Rating: 0 out of 5 stars0 ratingsKuttra Sangili Rating: 0 out of 5 stars0 ratingsUyire Urugathey Rating: 5 out of 5 stars5/5அக்மார்க் மர்டர் Rating: 0 out of 5 stars0 ratingsAgmark Murder Rating: 0 out of 5 stars0 ratingsMutham, Nizhal Mutham Rating: 5 out of 5 stars5/5Karuppu Thamarai Rating: 4 out of 5 stars4/5saagavaram Rating: 0 out of 5 stars0 ratingsSaagaavaram Rating: 4 out of 5 stars4/5Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Kizhpakkam to Kottai
0 ratings0 reviews
Book preview
Kizhpakkam to Kottai - Thuglak Sathya
https://www.pustaka.co.in
கீழ்ப்பாக்கம் டு கோட்டை
Kizhpakkam to Kottai
Author:
துக்ளக் சத்யா
Thuglak Sathya
For more books
https://www.pustaka.co.in/home/author/thuglak-sathya
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. முதல்வரின் கவலை
2. கல்யாண அமர்க்களம்
3. தலைவர் சிலை அவமதிப்பு
4. முதல்வர் ஆவேசப்பேட்டி
5. கூட்டணிக் கட்சிகளின் கூட்டம்
6. வீரவேங்கைகள் இயக்கம்
7. அனிருத் சிங் அட்வைஸ்
8. கவர்னரின் கண்டிப்பு
9. முருக விலாஸில் ரகளை
10. ஆளும் கட்சியில் சமரசம்
11. க.மு.க. ஆறுதல்
12. வீரவேங்கைகளின் எச்சரிக்கை
13. கவர்னருக்கு வந்த கஷ்டம்
14. ஸ்கூட்டர் விபத்து
15. சூல யாத்திரை
16. போலீஸ் விசாரணை
17. கூட்டணி அறிவிப்பு
18. குண்டு பசவப்பாவின் பேரம்
19. தெய்வீக மக்கள் கட்சி உதயம்
20. நடிகர் ஷங்கரின் பிரசாரம்
21. அ.க.மு.க. vs ஜெ.பா.க.
22. அரசியல் உபதேசம்
23. விச்சுவின் புதிய கட்சி
24. க.மு.க. மிரட்டல்
25. ஃப்ளாஷ் பேக் காட்சி
26. க.மு.க. தேர்தல் அறிக்கை
27. அ.க.மு.க.வில் அதிரடிக் குழப்பம்
28. ‘சுசீலா என்கிற நான்…’
29. ம.க.து.க-வின் ‘தேர்தல் அறிக்கை’
30. தடையை மீறி ஆர்ப்பாட்டம்
31. கட்சி மாறிய கமிஷனர்
32. தலைவர்களின் அறிவுரை
33. அமைச்சரின் டைரிக் குறிப்பு
34. ரெய்டுக்கு மேல் ரெய்டு
35. தேர்தல் கமிஷனர் பெருமிதம்
36. தனி மெஜாரிட்டி கிடைக்குமா?
37. ஓட்டு மெஷினுக்கு ஆபத்து…!
38. தயார் நிலையில் - க.மு.க, அ.க.மு.க
39. விச்சுவின் விரக்தி!
40. பைத்தியங்கள் பல வகை
1
முதல்வரின் கவலை
‘ஸார், உட்காருங்க. டாக்டர் வர்ற நேரம்தான்’ சேர் போட்டு எத்திராஜை அமர வைத்தான், கீழ்ப்பாக்கம் பைத்தியக்கார ஆஸ்பத்திரியின் பியூன்.
ஆஸ்பத்திரியை மேலும் கீழுமாகவும், உட்பக்கமாகவும் பார்வையிட்ட எத்திராஜ், ‘பாவம் நம்ம விச்சு, இங்கே எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறானோ?’ என்று நினைத்துக் கொண்டார். கண்களின் ஓரம் நீர் கசிந்தது.
எத்திராஜ் ஒரு முன்னாள் அரசியல்வாதி.
அ.க.மு.க-வில் நீண்ட காலம் இருந்தபின், அக்கட்சியாலேயே ஒதுக்கப்பட்டவர். இன்றைய அரசியல்வாதிகளுக்குத் தேவையான கோமாளித்தனங்களில் அவர் தேர்ச்சியடையாததால், கட்சிப்பணி ஆற்றும் தகுதி அவருக்கு இல்லை என்று கட்சி மேலிடம் முடிவெடுத்து அவரை அலட்சியப்படுத்தியது. அவரும் விரக்தியோடு ஒதுங்கிக்கொண்டார்.
ஆனாலும், அவரது அரசியல் ஆர்வம் தணியவில்லை. தன் மகன் விச்சுவுக்கு நடப்பு அரசியலின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுத் தந்தார். விச்சுவுக்கோ அரசியல் சற்றும் புரியவில்லை. ‘என்ன இழவு இது?’ என்றே தோன்றியது அவனுக்கு.
எத்திராஜ் விடவில்லை. இலங்கைப் பிரச்னையில் தமிழகக் கட்சிகளின் பங்கு, சட்டசபை உறுப்பினர்களின் பணி என்று ஒவ்வொன்றையும் ஆழமாக அலசி அரசியலைச் சொல்லிக் கொடுக்க, குழம்பிப்போன விச்சு வீட்டிலேயே தாறுமாறாகப் பேச ஆரம்பித்தான்.
அவன் தாய், என்னங்க? கொஞ்ச நாளா நம்ம விச்சு பேச்சே ஒரு மாதிரி இருக்குதே. உங்கள் அரசியல் உங்களோட போகட்டும். அவனையாவது டீசன்டான வேலையிலே சேர்த்து, நாலு பேர் மதிக்கிற மாதிரி வாழ விடுங்களேன்
என்று கெஞ்சினாள்.
எத்திராஜுக்குக் கோபம் வந்தது. அரசியல்னா உனக்கு அவ்வளவு அலட்சியமாப்போச்சா? நீ பாத்துக்கிட்டே இரு. கூடிய சீக்கிரம் விச்சுவை மந்திரியாக்கிக் காட்டறேன். அவன் கார், பங்களான்னு ஓஹோன்னு இருக்கப் போறான். நாலு சமையல்காரன், ஆறு டிரைவர், மூணு வேலைக்காரன்னு அரசாங்க செலவிலே வெச்சுக்கற நாள் வரத்தான் போகுது
என்று சீறினார்.
ஆனால் நடந்ததோ வேறு. அரசியலைப் புரிந்துகொள்ள முடியாத விச்சுவுக்கு, மனநிலை பாதித்துவிட்டது. வாசலில் நின்று, காரணமே இல்லாமல் தெருவில் போகிற வருகிறவர்களைக் கும்பிட ஆரம்பித்தான்.
ஒருநாள், ‘அப்பா, அண்ணா சமாதிக்குப் போய் ஆசிவாங்கப் போறேன்’ என்றான். இன்னொரு நாள், ‘தன் பிறந்த நாளுக்கு பேப்பரில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்க பணம் கேட்டான்’. மற்றொரு நாள், ‘டிகிரி முடிச்சு நாலு வருஷம் ஆகியும் வேலையே கிடைக்கலை. தலைவர் சமாதியிலே தியானம் இருக்கப் போகிறேன். அப்பதான் பெரிய்ய வேலையா கிடைக்கும்’ என்று கோபத்துடன் கிளம்பினான்.
அப்போதுதான் எத்திராஜுக்கு விபரீதம் புரிந்தது. உடனே இங்கு கொண்டுவந்து சேர்த்துவிட்டார். டாக்டர் ராமசாமி அவருடைய நெருங்கிய நண்பராக இருந்ததால், அவரிடமே மகனை ஒப்படைத்தார்.
புன்னகைத்த டாக்டர் அட்மிஷனுக்கு முன், சில கேள்விகள் கேட்டார்.
உன் பேர் என்னப்பா?
வீரவேங்கை விச்சு. பெயருடன் ஒரு பட்டத்தையும் சேர்த்துச் சொன்னான் விச்சு.
எங்கே வேலை செய்யறே?
பொது வாழ்க்கைக்கு என்னை அர்ப்பணிச்சுட்டேன்.
வேலை எதுவும் இல்லை என்று டாக்டர் புரிந்துகொண்டார்.
வீடு எங்கே?
வீட்டை 45 லட்சத்துக்கு விற்கத் தயார். நீங்கள் வாங்கத் தயாரா?
ஆரம்ப ஸ்டேஜ்தான். நான் பாத்துக்கறேன்
எத்திராஜிடம் உறுதியளித்த டாக்டர், விச்சுவை ஆஸ்பத்திரியில் சேர்த்துக்கொள்ள சம்மதித்தார். பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் தனக்கு வேலை கிடைத்துவிட்டதாக நினைத்து மகிழ்ந்தான் விச்சு.
ஒரு வருடத்திற்குப் பிறகு, எத்திராஜுக்கு நல்ல செய்தி கிடைத்தது.
‘உன் பையன் இப்போ பரவாயில்லை. வந்து கூட்டிட்டுப் போ’ என்று டாக்டர் ஃபோன் செய்ததால் ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்தார்.
‘இனிமேல் அரசியலே வேண்டாம். ஏதாவது ஒரு கம்பெனியில் சேர்த்துவிட வேண்டியதுதான்’ என்று நினைத்து பெருமூச்சு விட்டபோது, ஆஸ்பத்திரி ஊழியர்கள் பரபரத்தனர். டாக்டர் வந்துவிட்டார். எத்திராஜ் எழுந்து கொண்டார்.
ஹலோ எத்திராஜ்…
முதுகில் தட்டினார் டாக்டர்.
இங்கே அட்மிட் பண்ணும்போது, விடாம கிறுக்குத்தனமா பேசிட்டிருந்தான் இல்லே? இப்போ நடுநடுவே விவரமாவும் பேசற அளவுக்கு மாத்திட்டேன்
என்றார் பெருமையுடன். விச்சுவை அழைத்துவர பணியாளரிடம் உத்தரவிட்டார்.
அப்பாடா இப்பதான் உயிர் வந்தது. நல்லாயிருந்த பையனை என் பேராசையாலே நானே கெடுத்துட்டேன்; இப்பவாவது உன் புண்ணியத்திலே சரியாச்சே.
ஆனா ஒரு முக்கியமான விஷயம். விச்சு முழுசா குணமாயிடலை. நியாயமா இன்னும் ஒரு வருஷமாவது ட்ரீட்மென்ட் கொடுக்கணும். நீ ரொம்பக் கேட்டதாலே உன்னை நம்பித்தான் டிஸ்சார்ஜ் பண்றேன். எப்பவும் அவனை உன் பார்வையிலேயே வெச்சுக்கணும்.
ரொம்ப தேங்க்ஸ் ராமசாமி. நான் அவனை வெளியவே விடமாட்டேன் ஒரே பையன். அவனை எப்படியாவது கவுன்ஸிலராகவாவது ஆக்கணும்னு ஆசைப்பட்டேன். அது முடியலையேன்னுதான் வருத்தம்.
கவுன்ஸிலராகி என்ன பிரயோஜனம்? சொத்துதான் சேரும். யார்கிட்டேயும் நல்ல பேர் கிடைக்காது. சமூகத்திலே மரியாதைதானே முக்கியம்?
என்றார் டாக்டர்.
அப்படியில்லை. மொதல்லே கவுன்ஸிலராகி, அப்புறம் எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரின்னு படிப்படியா வளர்வான். அதுக்கப்புறம் அவன் வெச்சதுதானே சட்டம்னு நினைச்சேன்.
சரி, உன் ஆசையைக் கெடுக்கலை. ஆனா, இன்னும் ஒரு வருஷம் அரசியல் வேண்டாம்.
தலையாட்டினார் எத்திராஜ்.
உன் பையனுக்கு வந்திருக்கிறது ஒரு பெகூலியரான வியாதி. எப்ப புத்தி சுவாதீனத்தோட பேசுவான், எப்ப லூஸ் மாதிரி நடந்துக்குவான்னே சொல்ல முடியாது.
அந்த சோகத்திலும், அட! இது அரசியலுக்கு வேண்டிய தகுதியாயிற்றே
என்று தோன்றியது எத்திராஜுக்கு.
அதுக்காக நீ கவலைப்படாதே! இன்னைக்கு நாட்டுலே யாருக்கு பைத்தியம் இல்லே? நமக்கெல்லாம் சிம்டம் வெளியே தெரியலை. விச்சுவுக்கு வெளியே தெரியுது. அவ்வளவுதான்.
பணியாளர் விச்சுவுடன் வந்தான். அப்பாவைப் பார்த்ததும் கட்டிக்கொண்டான் விச்சு.
விச்சு, நீ வீட்டுக்குப் போகலாம். ஆனா, இன்னும் ஒரு வருஷம் வீட்டுலேயே இருக்கணும். அப்பாகிட்டே எல்லாம் சொல்லியிருக்கேன்
என்றார் டாக்டர்.
கும்பிட்டபடி விடைபெற்ற எத்திராஜ், விச்சுவின் கையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வெளியே வந்தார். இருவரும் கோட்டை செல்லும் பஸ்ஸை பிடித்தனர். வயதான காரணத்தால், தன் பிடியிலிருந்து விச்சுவைவிட்டு சிரமப்பட்டு ஏறினார் எத்திராஜ். ஆனால் விச்சு பஸ் ஏறவில்லை. வேகமாக ரோடை கிராஸ் செய்து வேறு திசையில் காணாமல் போனான்.
***
அ.க.மு.க. தலைவரும் முதல்வருமான மாணிக்கவேலு தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
அ.க.மு.க. என்பது அனைத்திந்திய கட்சிக்காரர்கள் முன்னேற்றக் கழகம். கட்சிக்காரர்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து (க.மு.க.) பிரிந்து, தனிக்கட்சி கண்டு ஆட்சியைப் பிடித்திருந்தது அ.க.மு.க… வேறு எந்தக் கட்சியையும் வளரவிடாமல், இவ்விரு கட்சிகளுமே மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருந்தன.
மாநிலத்தில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவு செய்தால்தான், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற கவலை முதல்வரை வாட்டியது.
அரசு நிதி நிலையை உயர்த்தி, அதன் மூலம் கட்சி பொருளாதாரத்தை வளர்த்து தேர்தலைச் சந்திக்கலாம் என்று ராஜதந்திரத்துடன் முடிவு செய்த முதல்வர், அது பற்றி விவாதிக்கவே அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார்.
முதல்வரின் முகத்தைப் பார்த்தபடி அமைச்சர்கள் காத்திருந்தனர்.
பெரிய மெஜாரிட்டி இல்லாததால், எந்த அமைச்சரையும் விரோதித்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்தார் முதல்வர். அவர்கள் தங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் க.மு.க-வுக்குப் போய்விட்டால் ஆபத்தாகிவிடும் என்பதால், சற்று பணிவாகவே முதல்வர் என்ற பந்தாவைக் காட்டிக் கொண்டிருந்தார்.
அமைச்சர்களோ, க.மு.க. கை ஓங்கினால் அங்கே போய்விடலாம் என்ற எண்ணத்தில், அடங்குவதுபோல் நடித்து வந்தனர்.
‘மாநில நிதிநிலை ரொம்ப மோசமா இருக்குது…’ என்று ஆரம்பித்தார் முதல்வர்.
அனைத்து அமைச்சர்களுக்கும் மதுக்கடை வருவாயை எப்படி அதிகரிப்பது என்ற எண்ணமே உடனே வந்தது. நிதித் தேவைக்கு அதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை என்று அமைச்சரவை ஏற்கெனவே ஏக மனதாக முடிவு செய்திருந்தது.
‘சைட் டிஷ் வியாபாரத்தையும் அரசே பார்க்கலாங்க’ என்றார் ஒரு அமைச்சர் முதல்வரின் பாராட்டை எதிர்பார்த்து.
‘மொபைல் மதுக்கடைகளை அறிமுகப்படுத்தலாம்’ என்றார் மற்றொரு அமைச்சர்.
தலைமைச் செயலகத்திலேயே கிளை திறக்கலாம், ஹோட்டல்களில் டீ, காபி மாதிரி மதுவையும் விற்கலாம் என்ற யோசனைகளும் பரிசீலிக்கப்பட்டன.
இப்படி பல யோசனைகள் தெரிவிக்கப்பட்ட பின், மது விற்பனை மூலம் கிடைக்கிற உபரி நிதியைக்கொண்டு, ஆதார் கார்டுக்கு தலா ஆயிரம் ரூபாய், பண்டிகை நாட்களில் இலவச உடை, இலவசப் பட்சணம் போன்ற மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.
ஆனாலும், பொருளாதாரத்தை உயர்த்த சரியான வழி தெரியாததால், நலத்திட்டப் பணிகளுக்கு உலக வங்கியிடமிருந்து ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி, அதிலேயே தேர்தல் செலவைச் சமாளித்துக்கொள்ள முதல்வர் திட்டமிட்டார்.
முதல்வரின் புத்திக் கூர்மையைப் பாராட்டி அமைச்சர்கள் கைதட்டிக் கொண்டிருந்தபோது, மூத்த அமைச்சர் வேதநாயகம் கையில் திருமண அழைப்பிதழ்களுடன் நுழைந்தார். ஜூனியர் அமைச்சர்கள் எழுந்து கொண்டனர்.
யாரெல்லாம் அவருக்கு வணக்கம் தெரிவிக்கிறார்கள் என்று முதல்வர் ஓரக்கண்ணால் கவனித்தார்.
வேதநாயகம், மாணிக்கவேலுக்கு சீனியராக இருந்தாலும், கட்சியில் மாணிக்கவேலுவின் கை ஓங்கியதால், அவர் முதல்வர் பதவியைப் பெற இவர் வழிவிட்டு, இரண்டாம் இடத்தைப் பிடித்துக்கொண்டார். அந்த ஏமாற்றத்தைக் காட்டிக்கொள்ளாமல், முதல்வரின் ஊழல்களையெல்லாம் குறித்துக்கொண்டு வந்தார் வேதநாயகம் பின்னால் பயன்படும் என்ற நம்பிக்கையோடு.
வணக்கம்ணே! அடுத்த மாசம் என் பொண்ணுக்கு கல்யாணம். இன்விடேஷன் கிடைக்க லேட்டாயிடுச்சு.
கல்யாணமா? தேர்தல் சமயத்திலே கல்யாணம் வெச்சா எப்படிண்ணே? தேர்தலை கவனிப்பீங்களா, கல்யாணத்தை கவனிப்பீங்களா?
என்று கேட்டார் முதல்வர், மொய் என்ற பெயரில் பெருமளவு நிதியை வசூலித்து விடுவாரே என்ற எரிச்சலில்.
என் ஐடியாவே வேறே
என்ற வேதநாயகத்தின் முகத்தை, அமைச்சர்கள் கவனமாகப் பார்த்தனர்.
இந்தக் கல்யாணத்தை வெச்சு எதிர்க்கட்சி கூட்டணியை உடைக்கப் போறோம். கல்யாண சாக்குலே அந்தக் கூட்டணித் தலைவர்களை நேரா சந்திச்சு அழைப்பு தருவேன். அவங்களை நெருங்கி நம்ம கூட்டணிக்கு இழுப்பேன். அதுக்காகத்தான் இந்தக் கல்யாணமே.
வேதநாயகத்தின் மதிநுட்பத்தை அவரது ஆதரவு அமைச்சர்கள் வியக்க, ஆசாமி வேறு ஏதாவது திட்டம் போடுகிறாரா என்று மாணிக்கவேலு குழம்பினார் எதற்கும் இருக்கட்டும் என்று அவரைக் கட்டிக்கொண்டபடியே.
அதே நேரத்தில், இந்தத் திருமணத்தை வைத்து க.மு.க. தரப்பு வேறு ஒரு வியூகம் அமைத்துக் கொண்டிருந்தது.
2
கல்யாண அமர்க்களம்
‘க.மு.க. என்பது வெறும் கட்சியல்ல; அது ஒரு சித்தாந்தம், சிராத்தம், வேதாந்தம், பரமானந்தம். தமிழ் நமது உயிர், தமிழகம் உயிர் மூச்சு, தமிழர்கள் உயிர் பேச்சு’ செயற்குழுவில் வாய்க்கு வந்தபடி வீரமாகப் பேசிக் கொண்டிருந்தார் எதிர்க்கட்சித் தலைவர் கரிகாலன்.
கட்சி முன்னணித் தலைவர்கள் சுரத்தின்றி உட்கார்ந்திருந்தனர். அனைவரும் பெருந்தன்மையோடு அவரை தலைவராக ஏற்றிருந்ததால், யாரிடமும் அதிகாரத்தைக் காட்ட முடியாத நிலையில் இருந்தார் கரிகாலன். கட்சிக்காரர்களின் முன்னேற்றமே கட்சியின் கொள்கை என்ற அடிப்படையில் கட்சிக்கு ‘கட்சிக்காரர்கள் முன்னேற்றக் கழகம்’ என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.
ஆட்சியை இழந்து பல வருடங்களாகியிருந்ததால் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறதே என்ற சோகத்தில் இருந்தனர் கட்சி முன்னணியினர். சிலர் ஆளும் கட்சியோடு தொடர்பு வைத்து சம்பாதித்துக்கொண்டும் இருந்தனர். தடுக்க முடியாததால், இரு கட்சித் தலைமையும் அதை கருணையோடு அனுமதித்திருந்தன. அதனால் தேர்தல் வியூகங்களை வகுக்க பல கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து ஆலோசகர் சந்தோஷ் கபூரை நியமித்திருந்தார் கரிகாலன்.
அவரது யோசனைப்படி செயற்குழுவில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ் மண்ணில் தமிழைத் தவிர வேறு எந்த மொழிக்கும் இடமில்லை. ஆகவே, ஒரு மொழித் திட்டம்தான் தேவை.
நீட் தேர்வில் ஜாதி அடிப்படையில் மார்க் வழங்க வேண்டும். தற்கொலை செய்து கொள்ளும் மாணவ மாணவியர் குடும்பத்தில் ஒருவருக்கு டாக்டர் ஸீட் வழங்க வேண்டும்.
மதநல்லிணக்கத்தைக் காக்க அனைத்து பிள்ளையார் கோவில்களையும் ஒரு வாரம் துணி போட்டு மூட வேண்டும்.
செயற்குழு முடிந்ததும் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார் கரிகாலன்.
ஒரு முக்கியமான தகவல் கிடைச்சிருக்குது. மூத்த அமைச்சர் வேதநாயகம் பொண்ணுக்கு கல்யாணம் நடக்கப்போகுது. இன்விடேஷன் கொடுக்க அவரே இங்கே வரலாம் அப்போ அவர்கிட்டே என்ன பேசறதுன்னு ஆலோசகர்கிட்டே கேட்டுடுங்க கமாண்டர்.
என்றார் சீனியர் தலைவர் சிங்காரமணி.
கமாண்டர் என்பது கட்சித் தலைவர் கரிகாலனுக்கு வைக்கப்பட்டிருந்த பட்டப்பெயர்.
அமைச்சர் வேதநாயகம் பெண் திருமண விஷயம் இவருக்கு எப்படித் தெரிந்தது என்ற யோசனையில் ஆழ்ந்தார் கரிகாலன். ‘இருவரும் ஒரே ஜாதிக்காரர்கள். தேர்தலுக்காக, ஏதாவது ரகசியத் திட்டம் போடுகிறார்களோ’ என்ற சந்தேகம் தோன்றியது அவருக்கு.
அ.க.மு.க-விலே இப்ப உட்கட்சிப் பூசல். வேதநாயகம் நம்ம பக்கம் வந்துட்டா, ஆளும் கட்சி கூடாரமே காலி ஆயிடும். அவர் ரேட் என்னன்னு விசாரிச்சு சொல்றேன். செலவைப் பாக்காதீங்க
என்றார் ஆலோசகர்.
ஆயிரம் கோடியோ, ரெண்டாயிரம் கோடியோ கேட்டாக்கூட தூக்கி எறிஞ்சுடலாம். துணை முதல்வர் பதவி கேட்டா ஒத்துக்காதீங்க கமாண்டர்
என்றார் சிங்காரமணி பதட்டத்துடன், அந்தப் பதவிக்காகக் காத்திருந்தார் அவர்.
மொதல்லே பேசுவோம். என்ன கேக்கறாருன்னு பாக்கலாம். அவர் வரும்போது, நல்ல வரவேற்பு கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க
உத்தரவிட்டார் கரிகாலன்.
அப்படி அவர் மசியலைன்னா விடக்கூடாது. அவர் பொண்ணு கல்யாணத்திலே குழப்பத்தை ஏற்படுத்தறோம். அவருக்கு ஏற்கெனவே ஹை பி.பி. கல்யாணம் நின்னா உடல்நிலை இன்னும் மோசமாயிடும். தேர்தல் வேலையை கவனிக்க முடியாது. அப்பவும் அ.க.மு.க. காலி
என்றார் ஆலோசகர்.
என்ன குழப்பம் ஏற்படுத்தலாம்?
தாலி கட்டற நேரத்திலே நம்ம மகளிர் அணித்தலைவி கையில் குழந்தையோடு அங்கே போகணும். ஐயோ, என்னை விட்டுட்டு, ஓடிட்டு, இன்னொருத்தியை கல்யாணம் பண்றீங்களே’ன்னு கதறியழணும். கல்யாணம் நின்னுடும்.
ஆலோசகரின் அரசியல் அறிவு கட்சியினருக்கு வியப்பை ஏற்படுத்தியது. அத்தனை கோடி கொடுத்தது வேஸ்ட் இல்லை என்று தோன்றியது. அதிகப்பட்சமாக அவரைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக, பாத்ரூம் போகக்கூட அவர் ஆலோசனையைப் பெற்று வந்தார் கரிகாலன்.
ஏங்க மூத்த அமைச்சர் வீட்டுக் கல்யாணம். அவர் சும்மா இருப்பாரா? மகளிர் அணித் தலைவியை போலீஸ் கைது பண்ணி விசாரிக்கும்லே?
ஒரு நிர்வாகி கேட்டார்.
அப்படி நடந்தா நாம விட்டுருவோமோ? மாணிக்கவேலு ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. போலீஸ் கைக்கூலிகளை ஏவி பொய் வழக்கு போடும் அடக்குமுறை ஆட்சி பாரீர்’னு போராட்டம் நடத்தறோம். மனித உரிமைக் கமிஷனுக்கு புகார் கொடுக்கறோம். டி.வி.யிலே ஆவேசமா வாதம் பண்ண வெக்கறோம். ஆட்சி பேர் கெடும்
என்றார் சந்தோஷ் கபூர்.
தேர்தலுக்காக எதையும் செய்யும் மனநிலையில் இருந்த க.மு.க. தலைவர்கள் இந்த திட்டத்துக்கு சம்மதித்தனர். வேதநாயகத்தின் வருகைக்காக காத்திருந்தார் கரிகாலன்.
***
மூத்த அமைச்சர் வேதநாயகத்தின் வீட்டில் கல்யாண அமர்க்களம் தொடங்கிவிட்டிருந்தது. அமைச்சரின் துறையிலிருந்து பாதிக்கு மேற்பட்ட அதிகாரிகள் திருமண வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். துறைக்குச் சொந்தமான சுமார் ஒரு டஜன் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. கோர்ட் கண்டித்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம் என்ற முடிவோடு, பிரம்மாண்டமான பேனர்கள், கட்-அவுட்கள் அமைக்கப்பட்டு வந்தன.
ஒரு அதிகாரி பரண் மீது ஏறி பழைய பொருட்களை இறக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார். மற்றொரு அதிகாரி தேங்காய்களை எண்ணிக் கொண்டிருந்தார். துறைச்செயலாளர், இன்விடேஷன்களின் மீது வி.ஐ.பி.க்களின் பெயரை எழுதிக் கொண்டிருந்தார். சீனியர் பி.ஏ. துறை அதிகாரிகளிடமிருந்து முன்கூட்டியே வசூலிக்கப்பட்ட மொய் தொகை கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்தார் அமைச்சரின் மனைவி ராஜம்மாளுக்கு கணக்கு காட்டுவதற்காக.
‘ஏம்பா, அங்கே என்ன பண்ணிட்டிருக்கே? பீரோவிலிருந்து புடவையெல்லாம் கீழே விழுந்திருக்கே. எடுத்து அடுக்கி வையேன்’ ஒரு அதிகாரிக்கு உத்தரவிட்ட ராஜம்மாள், ‘ஒரு வேலையும் ஒழுங்கா செய்யறதில்லை. தண்ட சம்பளம் வாங்கறாங்க’ என்று முணுமுணுத்தாள்.
மணப்பெண்ணும் அமைச்சரின் மகளுமான கல்பனா அசிரத்தையாக செல்ஃபோன் பார்த்துக் கொண்டிருந்ததால் கோபமடைந்தாள் ராஜம்மாள்.
ஏண்டி, என்ன பண்ணிட்டிருக்கே? சமையல் காண்ட்ராக்டருக்கு ஃபோன் பண்ணி வரச் சொன்னேனே சொன்னியா?
அதெல்லாம் வேண்டாம்மா.
என்ன வேண்டாம்? சமையலே வேண்டாமா?
கல்யாணமே வேண்டாம்.
திடுக்கிட்டாள் ராஜம்மாள்.
அடிப்பாவி, என்னடி சொல்றே? இவ்வளவு ஏற்பாடு நடந்திட்டிருக்கு. இப்ப போய் இப்படிச் சொல்றியே?
நான் எப்பவாவது கல்யாணத்துக்கு சரின்னு சொன்னேனா?
நாங்க பேசும்போது சும்மா தானே இருந்தே?
சும்மா இருந்தா சரின்னு அர்த்தமா? பிடிக்கலைன்னுதான் சும்மா இருந்தேன்.
ராஜம்மாளின் தம்பிக்குத்தான் கல்பனாவை கொடுக்க அமைச்சரும் அவர் மனைவியும் ஏற்பாடு செய்து வந்தனர்.
என்னடி? இப்படி குண்டைத் தூக்கிப் போடறியே? என் தம்பிக்கு என்ன குறை?
அதெல்லாம் தெரியாதும்மா. வேண்டாம்னா வேண்டாம்தான்
உறுதியாகச் சொன்னாள் கல்பனா.
அமைச்சர் வேதநாயகம் யாருடனோ செல்ஃபோனில் பேசிக்கொண்டே வந்தார்.
ஏங்க? இவ என்ன சொல்றா கேட்டீங்களா?
இப்பதானே வரேன்? அதுக்குள்ளே எப்படிக் கேக்க முடியும்? நீயே சொல்லு.
கல்யாணமே வேண்டாங்கறா.
வேதநாயகம் அதிர்ச்சியுற்றார்.
ஏம்மா?
எனக்கு மாப்பிள்ளை பிடிக்கலைப்பா.
அடி முண்டம். அப்படியே பிடிக்கலைன்னா என்ன? நானும், உங்கப்பாவும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சா குடும்பம் நடத்தறோம்? நீயும் அப்படி அட்ஜஸ்ட் பண்ணிக்கக் கூடாதா? ஏங்க, இடிச்சபுளி மாதிரி நிக்கறீங்கலே கொஞ்சம் புத்தி சொல்லுங்களேன்.
அமைச்சருக்கு தலை சுற்றியது. இந்தக் கல்யாணத்தை வைத்து அரசியல் ரீதியாகப் பல காரியங்களைச் செய்ய திட்டமிட்டிருந்தார் அவர். தவிர, ஆட்சியில் இருக்கும்போதே மகள் திருமணத்தை நடத்திவிட்டால், வசூல் பணத்தின் ஒரு சிறு பகுதியிலேயே கல்யாண செலவோடு தேர்தல் செலவையும் செய்துவிடலாம். பதவிபோன பிறகு நடத்தினால் சொந்தக் கட்சியிலேயே பாதிப் பேர் வரமாட்டார்கள். கோடிக்கணக்கில் நஷ்டமாகிவிடும் என்று நினைத்தார்.
ராஜம்மாளோ தன் குடும்ப சொத்தை கண்டவன் அனுபவிப்பதைவிட சொந்தத் தம்பி அனுபவிப்பதையே விரும்பினாள்.
அதனால்தான் மகள் திருமணத்திற்கு இருவரும் அவசரப்பட்டனர்.
இன்விடேஷன்கூட நிறைய பேருக்கு கொடுத்தாச்சு. மற்ற கட்சித் தலைவர்களுக்கு கொடுக்க கிளம்பிட்டிருக்கேன். இப்ப போய் இப்படிச் சொல்றியேம்மா?
மகள் மீதான பாசத்தில் அழாக்குறையாகக் கேட்டார் அமைச்சர்.
அவ கிடக்கறா! நீங்க வேலையைப் பாருங்க. நான் இவளை வழிக்குக்கொண்டு வரேன்
என்று கூறி அமைச்சரை அனுப்பி வைத்தாள் ராஜம்மாள்.
அந்த வீட்டில் ராஜம்மாள் வைத்ததுதான் சட்டம். நினைத்ததை முடித்துவிடுவாள். அப்பாவால் ஒன்றும் செய்ய முடியாது என்பதால், கல்பனா விபரீத முடிவெடுத்தாள்.
***
‘ஒரு வருடம் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது’ என்ற டாக்டரின் நிபந்தனை பிடிக்காததால், தந்தையை ஏமாற்றிவிட்டு தப்பிய விச்சு, கால்போன போக்கில் எங்கெல்லாமோ சுற்றினான். மளிகைக் கடை,