O Pakkangal Part - 9
By Gnani
()
About this ebook
தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தருமம் மறுபடியும் வெல்லும். கட்டுண்டோம்; பொறுத்திருப்போம். காலம் மாறும் என்று பாரதியின் பாண்டவர்கள் நம்பிக்கையுடன் பேசுவார்கள். அதே போலத்தான் இந்த சமூகத்தில் எண்ணற்ற மக்கள் இப்போது அவர்களைச் சூழ்ந்திருக்கும் அரசியல், சமூக, கலாசார இருளிலும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் என் ஓ பக்கங்கள். அவர்களுக்கான ஒரு சிறு மெழுகுவத்தி, என் பார்வையுடன் உடன்பட்டாலும் உடன்படாவிட்டாலும், நான் எழுப்பும் விஷயங்கள் சிந்திக்கவும் விவாதிக்கவும் அவசியமானவை என்ற என் உறுதியான நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்கிறேன்.
Read more from Gnani
Ayogiyargalum Muttalgalum Rating: 0 out of 5 stars0 ratingsBalloon(Nadagam) Rating: 0 out of 5 stars0 ratingsO Pakkangal Rating: 0 out of 5 stars0 ratingsKandathai Sollugirean Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Malargal Rating: 0 out of 5 stars0 ratingsNarendra Modi Atharavu Petra Oru Kaavi Bayangaravaathiyin Oppuhal Vaakkumoolam Rating: 0 out of 5 stars0 ratingsArinthum Ariyamalum Rating: 5 out of 5 stars5/5O! Pakkangal - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsParisukku Ponen Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsSankarachari Yar? Rating: 0 out of 5 stars0 ratingsThavippu Rating: 0 out of 5 stars0 ratingsOozhale Un Ver Enge? Rating: 0 out of 5 stars0 ratingsMarubadiyum Rating: 0 out of 5 stars0 ratingsApple Desam Rating: 0 out of 5 stars0 ratingsPazhaiya Paper Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsChennai Nagara Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaazhkai En Kaiyil Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 6 Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsSandaikarigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to O Pakkangal Part - 9
Related ebooks
Sarvam Comedy Mayam Rating: 0 out of 5 stars0 ratingsKizhpakkam to Kottai Rating: 0 out of 5 stars0 ratingsEn Kural (Twitter Pathevukalin Thoguppu) Rating: 0 out of 5 stars0 ratingsTamilaga Gramangalil Pen Sisu Kolaigal! Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Vanthaan Rengu Rating: 0 out of 5 stars0 ratingsUratha Sindhanai Rating: 0 out of 5 stars0 ratingsIyandhira Ithayangal Rating: 0 out of 5 stars0 ratingsPoruthathu Pothum Vivek Rating: 5 out of 5 stars5/5O! Pakkangal - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsSingapore Sathi Rating: 0 out of 5 stars0 ratingsMenmaiyaai Oru Vanmurai Rating: 0 out of 5 stars0 ratingsKarippu Manikal Rating: 0 out of 5 stars0 ratingsகோலம் இடும் மயிலே! Rating: 0 out of 5 stars0 ratingsOozhal Nam Pirappurimai Rating: 0 out of 5 stars0 ratingsSindhikka Oru Nodi Rating: 0 out of 5 stars0 ratingsArinthum Ariyamalum Rating: 5 out of 5 stars5/5‘Gopu’win Chinna Chinna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsOli Pookkum Malai... Rating: 0 out of 5 stars0 ratingsNaiyandi Katturaigal Rating: 0 out of 5 stars0 ratingsGlucose Nathigal... Rating: 0 out of 5 stars0 ratingsKavalai Neram Kaalai 10 Mani Rating: 5 out of 5 stars5/5Marupadiyum Oru Thadavai Rating: 0 out of 5 stars0 ratingsOru Sol Keeler! Rating: 0 out of 5 stars0 ratingsSirippatharkku Sila Visayangal... Rating: 0 out of 5 stars0 ratingsVirpanaiku Alla Rating: 5 out of 5 stars5/5Thirumbi Paar Rating: 0 out of 5 stars0 ratingsThottu Vaa Thendraley Rating: 5 out of 5 stars5/5Thittamitta Thiruppam Rating: 5 out of 5 stars5/5Vedikkai Manithargal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for O Pakkangal Part - 9
0 ratings0 reviews
Book preview
O Pakkangal Part - 9 - Gnani
https://www.pustaka.co.in
ஓ! பக்கங்கள் - பாகம் 9
O! Pakkangal - Part 9
Author:
ஞாநி
Gnani
For more books
https://www.pustaka.co.in/home/author/gnani
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
காணிக்கை
விரக்தியும் ஆற்றாமையும் கோபமும் மாறி மாறிக் கொப்பளிக்கச் செய்யும் சமூக அரசியல் கலாசார சூழலில் என் வாழ்நாள் முழுவதும் வெவ்வேறு விதங்களில் என் வாழ்க்கையை இனிமையாக்கிக் கொண்டிருக்கும் எண்ணற்ற நண்பர்களுக்கு
பொருளடக்கம்
1. ஆர் யூ தேர், மேடம் சி.எம்.?
2. ஸ்டாலினால் தி.மு.கவைக் காப்பாற்ற முடியுமா?
3. ஒரு முத்தமும் பல கேள்விகளும்
4. ராகுல் காந்தியால் காங்கிரசைக் காப்பாற்றமுடியுமா?
5 மெஹருனிசாவிடமிருந்து ஒரு கடிதம்
6. யாருக்கும் வெட்கமில்லை
7. இன்னும் 15 நாட்கள்
8. பாலியல் குற்றத்துக்கு என்ன தண்டனை தரலாம்?
9. பரதேசியின் ஒய்யாரக் கொண்டைகளுக்குள்ளே
10. இரண்டு குறும்(பு) நாடகங்கள்
11. ஏன் எனக்கு பரதேசி படம் பிடிக்கவில்லை?
12. பதினாறு வயதினிலே
13. போராட்டமும் போதைகளும்
14. திருப்பிக் கட்டமுடியுமா?
15. பாதகம் செய்பவரைக் கண்டால்
16. நீதிபதிகளுக்கும் ராமதாசுக்கும் இரு கடிதங்கள்
17. சினிமா 100 எதைக் கொண்டாட?
18. கலைஞர் 90
19. இரண்டு கவலைகள்
20. அத்வானி X மோடி முகமூடிகளின் கதை
21. மூன்றாவது அணி எங்கே?
21. அவதார அரசியல் (மூன்றாவது அணி எங்கே? பகுதி - 2)
23. காதல் செய்யின் சாதலா?
24. பிரதமர் வேட்பாளர் என்று உண்டா?
25. பிஞ்சிலே பழுப்பது ஏன்?
26. நோட்டா என்ற தோட்டா
27. ராமதாசும் தமிழருவி மணியனும் திருந்துவார்களா?
28. பேரிடர்! மேலாண்மை?
29. எல்லை கடந்த பயங்கரம்
30. காவல் துறைக்கு விடுதலை வருமா?
31. நண்பர், நல்லாசான், வழிகாட்டி
32. ஒரு டிராஜெடி பற்றிய காமெடி
33. பாரத் ரத்னா படும் பாடு
34. கென்னடி, சே குவேரா காஸ்ட்ரோ , டி.வி.
35. ஆவண அரசியல்
36. கூரை ஏறி வைகுண்டம்
37. தப்புக் கணக்கா? தப்பாத கணக்கா?
38. இரண்டு புதுவரவுகள் வளருமா தேயுமா?
39. ஜெயலலிதா பிரதமர் ஆகமுடியுமா? ஆகவேண்டுமா?
40. ஆம் ஆத்மிக்கு பயப்படுவது பி.ஜே.பியா, காங்கிரசா?
41. ஆம் ஆத்மி கட்சி அல்ல கருத்து...!
1. ஆர் யூ தேர், மேடம் சி.எம்.?
இதுவரையில் நான் வாசகர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள் சொன்னதில்லை. காரணம் வாழ்த்து சொன்னால், வாராவாரம் இந்த சமூகத்தின் மோசமான நிலைமைகளைப் பற்றி எழுதிவிட்டு, இதில் வாழும் எங்களுக்கு என்ன வாழ்த்து வேண்டிக் கிடக்கிறது என்று சிலர் கோபித்துக் கொள்வார்களோ என்ற தயக்கம்தான். இதையெல்லாம் மீறி வாழ, உங்களுக்கும் எனக்கும் மன வலிமை வேண்டும் என்று ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வோம்.
இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் சமயத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் முடிந்து போயிருக்கும். டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு தினங்களில் டாஸ்மாக் விற்பனை எவ்வளவு, திருப்பதி கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை எவ்வளவு, சாலை விபத்துகள் எத்தனை என்ற புள்ளிவிவரங்கள் வெளிவந்திருக்கலாம்.
டிசம்பர் 30 அன்று திடீரென்று வந்த உத்வேகத்தில் ஃபேஸ்புக் சமூக வலைத் தளத்தின் மூலம் ஒரு புரட்சி செய்ய முடியுமா என்று பார்த்தேன். எகிப்திலே செய்தார்கள், டெல்லியிலே செய் தார்கள் என்றெல்லாம் படிக்கிறோமே. சென்னையில் செய்தால் நடக்காதா என்ன என்று பார்க்கத் தோன்றியது.
புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி தமிழகத்தில் உடனடியாக பாலியல் குற்றங்கள், சாலை விபத்துகளைக் கணிசமாகக் குறைக்க உதவும் விதத்தில் டிசம்பர் 31, ஜனவரி 1, 2 ஆகிய மூன்று தினங்களும் டாஸ்மாக் கடைகளை மூடும்படி முதலமைச்சரைக் கோருகிறேன். தாங்களும் கோர விரும்புவோர் கீழ்வரும் மின்னஞ்சலுக்குக் கோரிக்கையை அனுப்பலாம். cmcell@tn.gov.in
என்று ஒரு வேண்டுகோளை பேஸ்புக் நேயர்களுக்கு எழுதினேன். நான் எதிர்பார்த்தமாதிரியெல்லாம் உடனே ஆயிரக் கணக்கானோர் அனுப்பிவிடவில்லை. என்னையும் சேர்த்து ஏழெட்டு பேர் அனுப்பியிருப்பார்கள் என்று நினைக்கிறேன், ஆனால் அனுப்பினோர் அனுப்பாதோர் என்று பலர் பதில் கமெண்ட் போட்டார்கள்.
அதில் கிடைத்த முக்கியமான செய்தி - இந்த சி.எம் செல் மீது யாருக்கும் நம்பிக்கையில்லை என்பதுதான். சி.எம். செல்லுக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அதை யாரும் பார்க்கப் போவதில்லை என்றே பொதுமக்கள் நினைக்கிறார்கள். யாராவது ஒரு அதிகாரி பார்த்தாலும் அதற்கப்புறம் அவரும் எதுவும் செய்யப் போவதில்லை என்றே பொதுமக்கள் நம்புகிறார்கள்.
ஆற்காடு சாலையில் இருக்கும் மெகா குப்பைத் தொட்டியை அகற்றச் சொல்லி இதுவரை ஐயாயிரம் பேர் சிஎம் செல்லுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டோம். சாலை நடுவே அமர்ந்து போராட்டம் கூட நடத்தி விட்டோம். ஒரு சாதாரண குப்பைக் கிடங்கு. பல ஆயிரம் கோடி பணம் வர்ற கடைகளையா மூடப் போறாங்க?
என்று கேட்கிறார் ஒருவர். ஐந்தாயிரம் பேர் மின்னஞ்சல் அனுப்பியும் சி எம் செல் கவனிக்கவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
விபத்தாக சித்தரிக்கப்பட்ட ஒரு கொலை என்று அவரது குடும்பத்தாரால் இன்றும் நம்பப்படும் விஷயம் சி.எம்.செல்லுக்கு தான் முதலில் அனுப்பப்பட்டது. அதிகாரிகளால் அது கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பி பல நாட்கள் கடந்தும் ஒரு துரும்பும் அசையவில்லை. அந்த கேஸ் மூடப்பட்டது. ஒரு வருடம் முன்னால் அவர் மீண்டும் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது, அது முடிந்து போன விஷயம் என புகாரையே எடுக்கவில்லை. நான் கமிஷனரிடம் நேரில் அழைத்துச் சென்று புகாரைப் பதிவு செய்தேன். ஒரு வருடம் தாண்டியும் இன்னமும் விசாரணை நிலைமையிலேயே உள்ளது
என்கிறார் ஒரு சக பத்திரிகையாளர்.
சி.எம்.செல் செய்யும் அதிகபட்ச வேலை அங்கு வரும் மனுவை உரிய துறைக்கு அனுப்புவதுதான் போலிருக்கிறது. அதையும் எப்போதாவது ரேண்டம் அடிப்படையில் செய்வார்கள் என்று நினைக்கிறேன். சூளைமேடு மாநகராட்சிப் பள்ளியில் புகைப் படக் கல்வி தி.மு.க ஆட்சியில் நிறுத்தப்பட்டதை மறுபடியும் தொடங்கும்படி கோரி ஒரு வருடம் முன்பு நான் சி.எம்.செல்லுக்கு அனுப்பிய மனுவை மாநகராட்சிக்கு அனுப்பிவிட்டார்கள். ஆம். நிறுத்திவிட்டோம் என்று ஒரு பதிலை மாநகராட்சி எனக்கு அனுப்பியது. அதுதான் எனக்கே தெரியுமே!
சென்னை மேயர் சைதை துரைசாமியின் பேஸ்புக் தளம் பற்றி ஆஹா ஓஹோ என்றார்கள். இப்பொது பார்த்தால் அந்தத் தளத்தில் எதுவும் உருப்படியாக நடப்பதாகவே தெரிய வில்லை. ஒரு கிறித்துவ பிரசாரகர் தன் செய்திகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார். மாநகராட்சி, மின்வாரியம், குடிநீர் வாரியம் எல்லாம் இணையம் மூலம் நம்மிடம் வசூல் செய்யும் தளங்களை சிறப்பாக நடத்துகின்றன. ஆனால் புகார் தெரிவிப்பதற்கானவை எதுவும் ஒழுங்காக இயங்குவதில்லை.
சரி, நேரில் போய் முதலமைச்சர் அலுவலகத்திலேயே மனு கொடுத்தால் கவனிப்பார்கள் என்று நம்பினால் அதுவும் மூட நம்பிக்கைதான். சாகித்ய அகாதமி விருது பெற்ற நான்கு தமிழ் எழுத்தாளர்கள் உள்ளிட்ட ஒரு குழு, அணு உலை பிரச்சனை தொடர்பாக முதல்வரை சந்திக்க விரும்புவதாகவும் நேரம் ஒதுக்கும்படியும் கோரி பிப்ரவரி 2012 இல் நானே நேரில் சென்று முதல்வரின் செயலாளரிடம் கடிதம் கொடுத்தேன். ரொம்ப வேலை பளு. நேரம் ஒதுக்குவதற்கில்லை
என்று கூட இன்று வரை அதற்கு பதில் கிடையாது. சமூகப் பிரச்சனையைப் பற்றி தன்னிடம் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் வந்து பத்து நிமிடம் பேச நேரம் ஒதுக்க முடியாதவர், தனக்கு டெல்லி கூட்டத்தில் போதிய நேரம் ஒதுக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்கிறார்! என்ன கொடுமை இது!
சி.எம்.செல் வேஸ்ட். சி.எம். ஆபீசில் மனு கொடுத்ததும் வேஸ்ட். நேரில் தெருவில் இறங்கிப் போராடினால்தான் ஒரு வேளை கவனிப்பார்களா என்றால்...? இதோ இன்னொருவர் பேஸ்புக்கில் பகிர்ந்த அனுபவம்: சில நாட்களுக்கு முன்பு மோகன் ப்ரூவரீஸ் என்ற மதுபான உற்பத்தி ஆலையில் மிக மோசமான தீ விபத்து ஏற்பட்டது. இருபதுக்கும் மேற்பட்ட தீ அணைக்கும் வண்டிகள் வந்து தீயை அணைத்தன. இந்த ஆலை ஆற்காடு சாலையில்தான் இருக்கின்றது. ஊருக்குள் ஒரு மதுபான உற்பத்தி ஆலையே இருக்கின்றது. இதை அகற்றச் சொல்லி பலமுறை மனுக்கள் கொடுத்து விட்டோம். சம்பவம் நடந்த அன்று இரவு பெண்கள் குழந்தைகள் எல்லாரும் வீதியில்தான் உறங்கினார்கள். ஆலையின் சிலிண்டர் இருக்கும் இடம் வெடித்து இருந்தால் வளசரவாக்கம், போரூர், மேற்கு கே.கே நகர் வரை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும். மறுநாள் விடிந்ததும் முதல் வேலையாக ஆற்காடு சாலையில் அமர்ந்து பேருந்து மறியல் செய்தோம். எங்களை போலீஸ் வைத்து அடித்தார்கள். குழந்தைகள், பெண்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் இன்னமும் ஒரு மதுபான ஆலை சென்னையின் மையப்பகுதிக்குள் இயங்கி வருகின்றது.
தெருவில் இறங்கிப் போராடினால் போலீசை வைத்து அடி உதை மிரட்டல்... சுதந்திர இந்தியாவின் 65 வருட வரலாற்றி லேயே இருந்திராத மாபெரும் அகிம்சைப் போராட்டத்தை நடத்தும் இடிந்தகரை மக்களை சொந்த ஊரிலேயே சிறை வைத்திருக்கிறது தமிழக அரசு. கூடங்குளத்துக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து யார் போனாலும் தடுத்துத் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தது. தகவல் அறியும் உரிமை சட்டத் தின் கீழ் கூடங்குளம் செல்ல யாரிடமேனும் முன் அனுமதி பெற வேண்டுமா என்று மனு போட வேண்டிய நிலைமை. சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டதும் யாரிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று பதில் தருகிறது போலீஸ். ஆனால் வருடம் முழுவதும் அமைதியாகப் போராட்டம் நடக்கும் இடத்தில் வருடம் முழுவதும் 144 தடை உத்தரவைப் போட்டு வருகிறது அரசு. அதை மீறித்தான் உலகப் புகழ் பெற்ற மனித உரிமைப் போராளி டாக்டர் விநாயக் சென் முதல் யாரானாலும் இடிந்தகரைக்குச் செல்ல முடியும். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த நாள் முதல் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே போராடி வருகிறார்கள். இதுவரை அவரோ அவருடைய எந்த ஒரு அமைச்சரோ அந்த அமைதியான மக்களை சந்திக்கக்கூட முன்வரும் துணிச்சல் இல்லாமல் இருக்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்த புதிதில் வாராவாரம் பத்திரிகையாளரை சந்திப்பேன் என்று சொல்லி, சொன்ன வாக்குறுதியை சில வாரங்களிலேயே மீறிவிட்ட முதலமைச்சரை, இப்போது யார் சந்திக்க முடியும், யாரெல்லாம் சந்திக்க முடியாது என்றே தெரிய வில்லை. நான் விரும்பினால் அமெரிக்க அதிபர் ஒபாமாவை எளிதில் சந்தித்துவிடலாம் போலிருக்கிறது. ஊழல், அராஜகம், குடும்ப சுயநலம், என்று எத்தனையோ கோளாறுகள் நிரம்பிய ஆட்சியை அளித்தவரென்றாலும் கலைஞர் கருணாநிதியை எந்தப் பிரஜை விரும்பினாலும் சந்திக்க முடியும் என்ற நிலை எப்போதும் இருந்திருக்கிறது. சந்திக்க முடியாவிட்டாலும் கூட ஒருவர் தன் குறையை, அவர் தீர்க்கிறாரோ இல்லையோ, அவருக்குத் தெரியப்படுத்தவாவது முடியும் என்ற நிலை இருந்திருக்கிறது.
இப்போது முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவின் காதுக்கும் கண்ணுக்கும் ஒரு விஷயத்தை எடுத்துச் செல்ல என்ன வழி என்று அரசு ஊழியர்கள் மத்தியிலேயே தெரியாத நிலை. மின்வெட்டு முதல், சென்னை குப்பை நகரமாக இருப்பது வரை, திருப்பூர் சாயப்பட்டறை சிக்கல் முதல், வருடக்கணக்கில் நூலகங்களுக்கு புத்தகமே வாங்காதது வரை எதுவானாலும் முதலமைச்சர் கவனத்துக்குப் பிரச்சனையை எடுத்துச்செல்வது எப்படி என்று ஒவ்வொரு துறையினரும் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.
தன் குடிமக்களுடன் எந்தத் தகவல் தொடர்பும் இல்லாமல் இருக்கும் ஒருவர் எப்படி ஆட்சி நடத்த முடியும்? என்ன நிர்வாகம் செய்ய முடியும்? அமைச்சர்கள் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை முதல்வரை அணுகி சங்கடமான செய்திகளைப் பேசத் தயங்கும் சூழலில் தன் மக்களின் நிலை பற்றி நிர்வாகத்தின் குறைகள் பற்றி யார் அவருக்குத் தகவல் சொல்வார்கள்? உளவுத் துறை மட்டும்தானா? இப்படிப்பட்ட முதலமைச்சர் நமக்கு எதற்கு என்பதுதான் என் கேள்வி. முதுகில் கொட்டும் குளவியை அடிப்பதற்காகக் கொள்ளிக்கட்டையை எடுத்து சொறிந்து கொண்டது போன்ற நிலையில் இருக்கிறோம்.
இப்படி தன்னைத்தானே ஒரு இரும்புக் கோட்டைக்குள் வைத்துப் பூட்டிக் கொண்டு வாழ்வது அவருக்கு சிக்கல் இல்லாமல் இருக்கலாம். அதற்கான நியாயமான காரணங்கள் கூட அவருக்கு இருக்கலாம். அவற்றையாவது நமக்கு சொல்லவேண்டும். தனி நபராக இருந்தால் அவர் தனிமைச் சிறையில் தன்னைத்தானே பூட்டிக் கொள்வதைப் பற்றி நமக்கு ஒரு பொருட்டுமில்லை. ஒரு முதலமைச்சர் இப்படி இருப்பது ஜனநாயகத்துக்குப் பொருத்தம் இல்லாதது. தெருப் போராட்டம் முதல் மின்னஞ்சல் வரை எதுவும் அவர் கவனத்துக்குச் செல்ல முடியாது என்றால், எப்படி ஆட்சி நடக்கிறது, யார் நடத்துகிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் தேவை.
கடந்த ஆண்டில் பல முறை முதல்வருக்கு பகிரங்கக் கடிதங் களையும் பல தமிழகப் பிரச்சனைகளைப் பற்றியும் இந்தப் பகுதியில் எழுதியிருக்கிறேன். அவையெல்லாம் முதல்வர் கண்ணுக்குப் போயிற்றா என்று தெரியாது. இந்தப் புத்தாண்டில் முதுகெலும்புள்ள எந்த அரசு அதிகாரியாவது இந்தக் கட்டுரையை முதலமைச்சருக்குக் காட்டி பதில் பெற்றுத் தந்தால் அதையே நமக்கான புத்தாண்டுப் பரிசாகக் கருதுவேன்,
கல்கி
5.1.2013
*******************************
2. ஸ்டாலினால் தி.மு.கவைக் காப்பாற்ற முடியுமா?
அடுத்த ஆட்சியை தி.மு.க அமைப்பதை விரும்புகிறேனா என்றால் நிச்சயம் இல்லை. தி.மு.க, அ.இ.அ.தி.மு.க இரு கட்சிகளுமே மீண்டும் ஆட்சிக்கு வருவதை நான் விரும்ப வில்லை . அதே சமயம் மக்கள் தி.மு.கவை ஆள்வதற்குத் தேர்ந் தெடுப்பார்களானால், தி.மு.கவின் முதலமைச்சராக ஸ்டாலின் வருவதையே நான் விரும்புகிறேன். அப்பாவின் எல்லா பாவங் களுக்கும் இல்லாவிட்டாலும் பல பாவங்களுக்குப் பரிகாரம் செய்யக்கூடியவராகச் செயல்படும் வாய்ப்புள்ள ஒரே வாரிசு அந்தக் குடும்பத்தில் அவர் ஒருவர்தான்.
ஆகஸ்ட் 2010இல் நான் எழுதிய இந்த வரிகளைத்தான் இப்போதும் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். ஒரு வழியாக கலைஞர் கருணாநிதி தான் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைத் தாமதமாகவேனும் உணர்ந்து, அடுத்த தி.மு.க தலைவர் பதவிக்கு ஸ்டாலினைத்தான் முன்மொழிவேன் என்று பகிரங்கமாக உறுதியாகச் சொல்லிவிட்டது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதை அவர் 1996இல் தி.மு.க தேர்தலில் ஜெயித்தபோதே செய்திருக்க வேண்டும். அப்போதே அவருக்கு வயது 72. ஸ்டாலினுக்கு அன்று வயது 43. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சரானவர். அந்த வாய்ப்பை அன்றே மகனுக்குக் கொடுத்துவிட்டு தான் கட்சித் தலைவர் பதவியை மட்டும் வைத் திருந்தால், மூப்பனார் மறுத்ததால், தேவ கவுடாவுக்குச் சென்ற பிரதமர் பதவியைக் கூடக் கலைஞர் அடைந்திருக்கலாம்.
ஸ்டாலினை தி.மு.கவின் தலைவராக்குவதற்கோ, முதலமைச்சராக்குவதற்கோ தி.மு.க கட்சிக்குள்ளிருந்து பெரும் எதிர்ப்பு எப்போதும் வந்ததில்லை. ஒரே எதிர்ப்பு வைகோவுடையது. அதைக் கையாளத் தெரியாமல் கலைஞர் கையாண்டதில் வைகோவை ஸ்டாலினுக்கு சமமான தலைவராக்காமல் தனக்கு சமமான தலைவர் அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டார். (அந்த வாய்ப்பைக் கையாளத் தெரியாமல் வைகோவும் வீணடித்தது இன்னொரு தனிக் கதை.) அப்படியே ஸ்டாலினுக்கு சம்மான தலைவர்தான் ஜெயலலிதா என்று ஆக்கும் வாய்ப்பையும் நழுவ விட்டு தன்னை ஜெயலலிதாவுக்கு சம்மாகத் தானே கலைஞர் குறுக்கிக் கொண்டார்.
ஸ்டாலினுக்கு வந்த எதிர்ப்பெல்லாம் கருணாநிதியின் குடும்பத்துக்குள்ளேயிருந்து அழகிரி வடிவில் வந்த எதிர்ப்பு மட்டும்தான். கட்சித் தலைவராக பல சிக்கல்களை சமாளிக்கத் தெரிந்த கலைஞர் குடும்பத் தலைவராக எப்போதுமே ஒரு ஃபெயிலியர்தான். அவரது மருமகன் முரசொலி மாறன் ஒரு மிடில் க்ளாஸ் வங்கி அதிகாரி குடும்பத்தில் செய்வது போல தன் பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைத்து பத்திரிகைத் தொழிலைக் கற்றுக் கொடுத்து தொழிலதிபர்களாக வருவதற்கு ஊக்குவித்தது. போல கருணாநிதி தன் பிள்ளைகளை வளர்க்கவில்லை. முத்து முதல் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு வரை எல்லாரையும் தன் அரசியல் பணிக்கு ஊழியர்களாகப் பயன்படுத்தியதைத் தாண்டி அவரால் சிந்திக்க முடியவில்லை.
எம்.ஜி.ஆருக்கெதிராக முத்துவை நடிகனாக வளர்த்து எம்.ஜி.ஆரை ஒழித்துக் கட்ட முயற்சித்தார். முத்துவின் பலம் நடிப்பு அல்ல. இசைதான். பாடுவதுதான். தன் தாய்மாமா இசைச் சித்தர் சிதம்பரம் ஜெயராமனைப் போல கர்நாடக இசையில் பேர் எடுக்காவிட்டாலும், முத்து சினிமா இசையில் ஒரு பி.பி. ஸ்ரீநிவாஸ், ஏ.எம். ராஜா, எஸ்.பி.பி, வரிசையில் வந்திருக்க முடியும். கலைஞர் அவரை எம்ஜிஆரின் க்ளோனாக்க முயற் சித்துத் தோற்றதில் அவர் வாழ்க்கையே வீணாகிப் போயிற்று.
அந்தக் காலகட்டத்தில் ஸ்டாலினை விட மூத்தவரான அழகிரியோ, இளையவரான தமிழரசோ அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. சொந்தமாகத் தொழில் செய்யும் முயற்சிகளில் இருந்தார்கள். ஸ்டாலின்தான் மாணவராகவே கட்சியில் இறங்கி வேலை செய்தவர். அதனால்தான் 1976இல் நெருக்கடி நிலையின் போது மிசாவில் கைது செய்யும்போது கலைஞர் குடும்பத்தில் அவரை மட்டுமே கைது செய்தது அன்றைய அரசியல் எதிரியான காங்கிரஸ்.
ஸ்டாலின்தான் அடுத்த கட்டத்தில் கலைஞரின் இடத்துக்குக் கட்சியில் வரக்கூடியவர் என்ற நிலை எண்பதுகளிலேயே வந்துவிட்டது. அதை முரசொலி மாறனும் ஆதரித்தார். அவர் தன் மகன்களைக் கட்சிப் பதவிகளுக்குக் கொண்டு வர முயற்சித்ததே இல்லை. பேராசிரியர் அன்பழகனும் ஸ்டாலினை ஆதரித்தார். கட்சிக்குள் ஸ்டாலின் ஆதரவு நிலைதான் பெரும்பான்மை.
ஆனால் சொந்த தொழில் முயற்சிகளில் தோற்றுப் போன அழகிரி அரசியலுக்குள் தாமதமாக நுழைந்தார். குடும்பத்துக்குள் இருந்துவந்த இந்த நெருக்கடியைத்தான் கலைஞரால் சுமார் 1.5 வருடங்களாக சமாளிக்க முடியாமல் இருந்திருக்கிறது. அழகிரி அரசியலுக்குள் நுழையாமல் இருந்திருந்தால் கனிமொழி கூட நுழையாமல் இருந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்ல லாம். கலைஞரின் இலக்கிய கலாசாரத்துறை ஆர்வங்களுக்கு குடும்பத்தில் ஒரே வாரிசான கனிமொழி அதே துறையில் தொடர்ந்திருக்கக் கூடும். அழகிரிக்கு அரசியல் செல்வாக்கு, கட்சி, ஆட்சி பதவிகள் தரப்படவேண்டுமென்று கலைஞரின் ஒரு குடும்பத்துக்குள்ளிருந்து நிர்பந்தங்கள் தொடங்கியபிறகு கனிமொழிக்காகவும் இன்னொரு குடும்பத்தின் நிர்பந்தங்களை கலைஞர் சந்திக்க வேண்டியதாயிற்று.
தங்கள் பிள்ளைகளுக்காக அன்பால் செய்த நிர்பந்தங்கள் இரு பிள்ளைகளுக்கும் உண்மையில் பயன் தரவில்லை. தி.மு.கவின் மத்திய அமைச்சர்களிலேயே கட்சிக்கு மோசமான பெயரை டெல்லியில் சம்பாதித்துக் கொடுத்திருப்பது அழகிரிதான். நிர்வாகத் திறமையற்றவர் என்று அவர் பழிக்கப்படுவதுதான் மிச்சம். கனிமொழியோ ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குப் போக வேண்டியதாயிற்று.
குடும்ப நிர்ப்பந்தங்களை நம்பியிராமல் சொந்த அரசியல் செயல்பாட்டால் கட்சிக்குள் தன் செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டு இன்று இருக்கும் இடத்தை அடைந்த கலைஞரின் ஒரே பிள்ளை ஸ்டாலின்தான். ஆனால் கட்சித் தலைவர் கலைஞர் அவரை ஆதரித்தபோதும் குடும்பத் தலைவர் கருணாநிதியின் பலவீனங்களால் தனக்கான இடத்தை அடைய முடியாமல் ஸ்டாலினுக்கு சுமார் 14 வருடங்கள் வீணாகியிருக்கின்றன.
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஸ்டாலினுக்குப் பொது மக்களிடம் பெரிய நற்பெயர் இருந்ததாகச் சொல்ல முடியாது. பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் ஆடம்பரமும், ஷோக்கும் அதிகார மையத்தில் இருப்பதால் வரும் அகங்காரமும் உடைய வராகவே அவர் அன்று கணிக்கப்பட்டார். அப்போது அவர் தன்னை டிவி நடிகராக இலக்கிய கலையார்வம் உடையவராக காட்ட எடுத்த முயற்சிகளெல்லாம் படு தோல்வி அடைந்தன. ஆனால் ஸ்டாலின் அதே பாதையைத் தொடராமல், வெளியே வந்து தப்பித்து விட்டார். தொண்ணூறுகளின் இறுதியில் சென்னை மேயர் பதவிக்கு வந்தபோது புதிய இமேஜ் அவருக்கு உருவாயிற்று. நகரப் பிரச்சனைகளில் நேரடி அக்கறை காட்டி நடுத்தர வர்க்கத்தின் கவனத்தைக் கவர்ந்து நல்ல நிர்வாகியாக இவர் இருப்பார் என்ற நம்பிக்கையை அப்போது அவர் ஏற் படுத்த முயற்சித்தார்.
இப்போது ஒரு வழியாக அவரைத்தான் தி.மு.கவின் அடுத்த தலைவராகத் தானே முன்மொழிவேன் என்று கலைஞர் சொல்லிவிட்டதால், அவர்தான் இனி தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதல்வராகவும் இருப்பார் என்பதில் எந்த