O! Pakkangal - Part 3
By Gnani
()
About this ebook
வணக்கம்.
‘‘இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல்முறையாகத் திரைக்கு வந்து சில தினங்களே ஆன...‘ என்று அறிவிப்பதைப் போல நானும் தெரிவிக்க விரும்புகிறேன். இந்திய இதழியல் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு வார இதழில் வெளிவந்துகொண்டிருந்த ‘காலம்’ (கருத்துப் பத்தி), இன்னொரு வார இதழுக்கு இடம் மாறிய ‘பெருமை’க்குரியது என்னுடைய ‘ஓ’ பக்கங்கள். அதற்குக் காரணமான சில கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன.
இதழியல் வரலாற்றில் எனக்கு இன்னும் சில ‘பெருமைக’ளும்’ உண்டு. நான் வேலை பார்த்த பத்திரிகையிலேயே (முரசொலி) என்னை விமர்சித்து கார்ட்டூன் போடப்பட்டது. என் கட்டுரையைக் கண்டிப்பதற்காக பெரும் தொகை செலவிட்டு ஒரு பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தப் ‘பெருமை’களையெல்லாம் எனக்கு அளித்த தி.மு.கவை ஆதரித்து ஒரு காலத்தில் நான் தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறேன் என்பதும் நினைவுகூரத்தக்கது.
தி.மு.கவையும் கலைஞர் கருணாநிதியையும் விமர்சித்துத் தாக்குவதற்கு மட்டுமே நான் அதிகமான ‘ஓ’ பக்கக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன் என்று ஓர் அவதூறு தொடர்ந்து, குறிப்பாக இணைய வலைப்பூக்களில் பரப்பப்படுகிறது. அது பொய்யானது என்பதை இந்தத் தொகுப்பே நிரூபிக்கும். சமூகத்தைப் பாதிக்கும் சகல விஷயங்கள் பற்றியும் எனக்கு அக்கறை உண்டு என்பதற்கு அடையாளமாக இதில் பல துறை பற்றிய கட்டுரைகள் உள்ளன. தி.மு.க, கருணாநிதி பற்றிய கட்டுரைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். இவை அத்தனையும் ஓராண்டில் (2007) வாராவாரம் எழுதியவை.
எல்லா விஷயங்களும் விவாதிக்கப்படவேண்டும். எதுவும் புனிதமானதோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதோ அல்ல. எதற்கும் உணர்ச்சிவசப்படுவது, நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதை மட்டுமே காட்டும். ஆனால் அது மட்டுமே எந்தத் தீர்வையும் தராது. அறிவுப்பூர்வமான அணுகுமுறையில்தான் தீர்வை அடைய முடியும். பரஸ்பர அன்பும் மதிப்பும் சமத்துவமும் ஒருவருக்கொருவர் காட்டும் சமூகமே நமது கனவு. இதற்குத் தடையாக இருக்கும் எல்லாம் அடையாளம் காணப்படவேன்டும். என் ஒவ்வொரு எழுத்துக்கும் பின்னால் இருக்கும் என் பார்வையும் நோக்கமும் இதுவே.
பல விதமான அரசியல் நிர்ப்பந்தங்களை நீண்ட காலம் தாக்குப் பிடித்து என் கட்டுரைகளை வெளியிட்டு வந்த ஆனந்தவிகடன் இதழுக்கு என் நன்றி. இத்தொகுப்பின் மூலம் என் புத்தகங்களை வெளியிடத் தொடங்கியிருக்கும் கிழக்கு பதிப்பகத்துக்கு என் நன்றி. என் ஆதர்சங்களான பாரதி, பெரியார் ஆகியோருக்கும், என்னைத் தொடர்ந்து இயங்கவைத்திருக்கும் எண்ணற்ற வாசகர்களுக்கும் இந்தத் தொகுப்பைக் காணிக்கையாக்குகிறேன்.
-ஞாநி
Read more from Gnani
Ayogiyargalum Muttalgalum Rating: 0 out of 5 stars0 ratingsThavippu Rating: 0 out of 5 stars0 ratingsO Pakkangal Rating: 0 out of 5 stars0 ratingsKandathai Sollugirean Rating: 0 out of 5 stars0 ratingsParisukku Ponen Rating: 0 out of 5 stars0 ratingsArinthum Ariyamalum Rating: 5 out of 5 stars5/5Narendra Modi Atharavu Petra Oru Kaavi Bayangaravaathiyin Oppuhal Vaakkumoolam Rating: 0 out of 5 stars0 ratingsPazhaiya Paper Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 6 Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsO Pakkangal Part - 9 Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaazhkai En Kaiyil Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsChennai Nagara Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsMarubadiyum Rating: 0 out of 5 stars0 ratingsSandaikarigal Rating: 0 out of 5 stars0 ratingsOozhale Un Ver Enge? Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Malargal Rating: 0 out of 5 stars0 ratingsSankarachari Yar? Rating: 0 out of 5 stars0 ratingsBalloon(Nadagam) Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsApple Desam Rating: 0 out of 5 stars0 ratings
Related to O! Pakkangal - Part 3
Related ebooks
O! Pakkangal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsUrangum Manasatchi Rating: 0 out of 5 stars0 ratingsArasiyal Galatta! Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - August 2019 Rating: 0 out of 5 stars0 ratingsArul Vaakku Rating: 0 out of 5 stars0 ratingsDeivangal Ezhuga Rating: 0 out of 5 stars0 ratingsMarupadiyum Ninaithu Paarkirean Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - June 2019 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - December 2018 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - June 2021 Rating: 0 out of 5 stars0 ratingsOru Sol Keeler! Rating: 0 out of 5 stars0 ratingsThozhar P. Jeevanandham Padaippugal - Thoguthi 3 Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - November 2022 Rating: 0 out of 5 stars0 ratingsAnbulla… Ippadikku, Rating: 0 out of 5 stars0 ratingsSangeetha Yogam Rating: 0 out of 5 stars0 ratingsSatyajit Ray - Vaazhvum Vazhiyum Rating: 0 out of 5 stars0 ratingsArasiyalum Nagaichuvaiyum Rating: 0 out of 5 stars0 ratingsSarvam Comedy Mayam Rating: 0 out of 5 stars0 ratingsSakalakala Babu Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - April 2021 Rating: 0 out of 5 stars0 ratingsSindhikka Oru Nodi Rating: 0 out of 5 stars0 ratingsPon Vilangu Rating: 0 out of 5 stars0 ratingsAbusi - Thobasi Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsManohara - Parasakthi Puthiya Kaappi Rating: 0 out of 5 stars0 ratingsMarubadiyum Rating: 0 out of 5 stars0 ratingsPazhaiya Paper Rating: 0 out of 5 stars0 ratingsSabai Naduve Rating: 0 out of 5 stars0 ratingsMoondravathu Kann Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for O! Pakkangal - Part 3
0 ratings0 reviews
Book preview
O! Pakkangal - Part 3 - Gnani
http://www.pustaka.co.in
ஓ! பக்கங்கள் - பாகம் 3
O! Pakkangal - Part 3
Author:
ஞாநி
Gnani
For more books
http://www.pustaka.co.in/home/author/gnani
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்(
முன்னுரை
1. வைகோ ஒரு சைகோ அனாலிசிஸ்!
2. மகிழ்ச்சி! அதிர்ச்சி! கொண்டாட்டம்! வாசிப்பு!
3. எது நீதி, எது நியாயம்?
4. கண்டேன்…. கண்டேன்…. என் கண்களால் நான் கண்டேன்!
5. மூன்று பெண்கள்... மூன்று பாடம்!
6. காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!
7. ஏன் ஓட்டுப் போட வேண்டும்?
8. நீதி முழுமையாகக் கிடைத்துவிட்டதா?
9. உள்ளுக்குள் உறங்குவது எது?
10. ‘ஏ’... ‘யு’... ‘யு/ஏ’?
11. ஆஹா… அமெரிக்கா
12. நின்று சும்மா வேடிக்கை பாருங்கள்...!
13. விளையாட்டில் அரசியல்… அரசியலில் விளையாட்டு!
14. யாரை எதிர்க்க இந்த பந்த்?
15. அடுத்த குடியரசுத் தலைவர் - அம்மா!
16. இந்தக் கல்யாணத்துக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்?
17. ஏன் தமிழா, ஏன்?
18. ‘கோரம்’ இல்லாத கோரம்!
19. கலைஞர் அவர்களே, கழகத்தைக் காப்பாற்றுங்கள்!
20. எரிகிறது பஞ்சாப்!
21. தமிழுக்கு வெட்டு!
22. வேண்டும் இன்னொரு அண்ணா!
23. ஒரு டாக்டர்! ஒரு விவசாயி! ஒரு தேசம்!
24. குடியரசுத் தலைவருக்கு ஒரு ‘ஓ!’
25. வேண்டாம் சாதனை வெறி!
26. சில நேரங்களில், சில புதிர்கள்!
27. ரௌத்ரம் பழகு
28. எனக்கான தகவல் எங்கே?
29. கனவு காணுங்கள்!
30. ‘நல்ல வேளை என்னை இந்திய அரசு கைது செய்யவில்லை!’
31. அறுபது கொண்டாடுகிறது இந்தியா!
32. 1… 2… 3… ஷாக்!
33. 1… 2… 3… ஷாக்! [2]
34. குதர்க்கமும் நானே, குழப்பமும் நானே!
35. இதெல்லாம் இங்கே சாத்தியமா?
36. அட ராமா!
37. போலி பக்தர் VS போலி பகுத்தறிவாளர்!
38. விருப்பப்படி இருக்க விடுங்கள்
39. தேவை பன்முக கலாச்சாரம்
40. பாதுகாப்பு பயங்கரங்கள்
41. ஜாலியாக ஒன்று…. சீரியஸாக ஒன்று…..!
42. வேண்டும் மாற்றம்
43. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!
44. மருத்துவ மாணவர்கள் போராட்டம்... சரியா, தவறா?
45. ஒரு மகிழ்ச்சி... ஒரு கவலை!
46. ‘‘என் சினிமா கனவுகள்!"
47. மோடியின் வெற்றிக்குப் பின்னால்?
48. இவர்களின் அடுத்த வாரிசு!
49. எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
50. அலங்காநல்லூர் ‘வீரர்’களும் அறிக்கை வீரர்களும்
முன்னுரை
வணக்கம்.
‘இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதல்முறையாகத் திரைக்கு வந்து சில தினங்களே ஆன...‘ என்று அறிவிப்பதைப் போல நானும் தெரிவிக்க விரும்புகிறேன். இந்திய இதழியல் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு வார இதழில் வெளிவந்துகொண்டிருந்த ‘காலம்’ (கருத்துப் பத்தி), இன்னொரு வார இதழுக்கு இடம் மாறிய ‘பெருமை’க்குரியது என்னுடைய ‘ஓ’ பக்கங்கள். அதற்குக் காரணமான சில கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன.
இதழியல் வரலாற்றில் எனக்கு இன்னும் சில ‘பெருமைக’ளும்’ உண்டு. நான் வேலை பார்த்த பத்திரிகையிலேயே (முரசொலி) என்னை விமர்சித்து கார்ட்டூன் போடப்பட்டது. என் கட்டுரையைக் கண்டிப்பதற்காக பெரும் தொகை செலவிட்டு ஒரு பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தப் ‘பெருமை’களையெல்லாம் எனக்கு அளித்த தி.மு.கவை ஆதரித்து ஒரு காலத்தில் நான் தேர்தல் பிரசாரம் செய்திருக்கிறேன் என்பதும் நினைவுகூரத்தக்கது.
தி.மு.கவையும் கலைஞர் கருணாநிதியையும் விமர்சித்துத் தாக்குவதற்கு மட்டுமே நான் அதிகமான ‘ஓ’ பக்கக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன் என்று ஓர் அவதூறு தொடர்ந்து, குறிப்பாக இணைய வலைப்பூக்களில் பரப்பப்படுகிறது. அது பொய்யானது என்பதை இந்தத் தொகுப்பே நிரூபிக்கும். சமூகத்தைப் பாதிக்கும் சகல விஷயங்கள் பற்றியும் எனக்கு அக்கறை உண்டு என்பதற்கு அடையாளமாக இதில் பல துறை பற்றிய கட்டுரைகள் உள்ளன. தி.மு.க, கருணாநிதி பற்றிய கட்டுரைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். இவை அத்தனையும் ஓராண்டில் (2007) வாராவாரம் எழுதியவை.
எல்லா விஷயங்களும் விவாதிக்கப்படவேண்டும். எதுவும் புனிதமானதோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதோ அல்ல. எதற்கும் உணர்ச்சிவசப்படுவது, நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதை மட்டுமே காட்டும். ஆனால் அது மட்டுமே எந்தத் தீர்வையும் தராது. அறிவுப்பூர்வமான அணுகுமுறையில்தான் தீர்வை அடைய முடியும். பரஸ்பர அன்பும் மதிப்பும் சமத்துவமும் ஒருவருக்கொருவர் காட்டும் சமூகமே நமது கனவு. இதற்குத் தடையாக இருக்கும் எல்லாம் அடையாளம் காணப்படவேன்டும். என் ஒவ்வொரு எழுத்துக்கும் பின்னால் இருக்கும் என் பார்வையும் நோக்கமும் இதுவே.
பல விதமான அரசியல் நிர்ப்பந்தங்களை நீண்ட காலம் தாக்குப் பிடித்து என் கட்டுரைகளை வெளியிட்டு வந்த ஆனந்தவிகடன் இதழுக்கு என் நன்றி. இத்தொகுப்பின் மூலம் என் புத்தகங்களை வெளியிடத் தொடங்கியிருக்கும் கிழக்கு பதிப்பகத்துக்கு என் நன்றி.
என் ஆதர்சங்களான பாரதி, பெரியார் ஆகியோருக்கும், என்னைத் தொடர்ந்து இயங்கவைத்திருக்கும் எண்ணற்ற வாசகர்களுக்கும் இந்தத் தொகுப்பைக் காணிக்கையாக்குகிறேன்.
-ஞாநி
*****
1. வைகோ ஒரு சைகோ அனாலிசிஸ்!
மீடியா டிலைட் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது, செய்திகள் டல்லாக இருக்கக்கூடிய சூழலில்கூட, இவர்களின் பங்கேற்பு கலகலப்பை ஏற்படுத்திவிடும். அப்படிப்பட்ட மிகச் சிலரில் வைகோ என்று தன் பெயரைச் சுருக்கிக்கொண்ட வை. கோபால்சாமியும் ஒருவர்!
தமிழ்நாட்டில், கடந்த முப்பது வருடங்களில் அரசியல் மேடையில் சிறந்த பேச்சாளர் என்று பட்டியல் போட்டால், இரண்டே இரண்டு பேர்தான் தேறுவார்கள். ஒருவர் கருணாநிதி, இன்னொருவர் வைகோ.
இருவரும் ஒருவர் இன்னொருவரை அவுட் ஆக்க முயற்சிக்கும் அரசியல் விளையாட்டில் அடுத்த ரவுண்ட்தான் இப்போது நடந்து வருகிறது. சேம் சைட் கோல் போடக் கூடிய இரண்டு பேரை (எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன்) தன் அணியில் வைத்திருப்பதுதான் வைகோவின் பலவீனம்; கருணாநிதியின் பலம்!
வைகோ ஒரு சிறந்த உற்சவமூர்த்தி என்பதை கருணாநிதி முதல் செஞ்சியார் வரை, பிரபாகரன் முதல் நெடுமாறன் வரை எல்லோரும் அறிவார்கள். ஆனால், எப்போதுமே கோயில்களில் உற்சவமூர்த்தி வேறு; மூலவர் வேறு. மூலவர்களுக்குத்தான் பாலாபிஷேகம் முதல் உண்டியல் வசூல் வரை எல்லாமே! உற்சவர்கள் கற்பூர ஆரத்திகளுடன் திருப்தி அடைய வேண்டியது தான்!
வைகோவை மூலவராக்கிப் பார்க்கத் திட்டமிட்டவர்களில் ஒரு பிரிவினர்தான், இப்போது அவரால் வசூல் நடக்காது என்ற நிலையில் ‘சீச்சி, இந்தச் சாமிக்கு சக்தி இல்லை’ என்று வேறு கோயிலில் பூசாரி வேலைக்கு மனு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
அரசியலில் ஏன் இன்னும் வைகோவால் மூலவராக முடியவில்லை? காரணம் மிக எளிது. பக்தன்தான் உணர்ச்சிவசப்படலாமே தவிர, சாமியே உணர்ச்சிவசப்பட்டால் கோயில் தாங்காது. அவருடைய உணர்ச்சிப் பிரவாகத்தை மேடைகளில் பலர் பார்த்திருக்கலாம். தனியே நான் ஒரு முறை தரிசித்தேன்.
வி.பி.சிங், 1987ல் ராஜீவிடமிருந்து விலகியது முதல் 1990ல் அவர் மண்டல் கமிஷன் நிறைவேற்றத்துக்காக பி.ஜே.பியால் பிரதமர் பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்டது வரை, அவரைத் தீவிரமாக ஆதரித்து நான் செயல்பட்டு வந்தேன். ராஜீவ் எதிர்ப்புப் பிரசாரத்துக்கென்றே தொடங்கிய முரசொலியின் வார இணைப்பான ‘புதையல்’ இணைப்பின் தொகுப்பாசிரியனாக ஓராண்டு வேலை பார்த்தேன்.
வி.பி.சிங், தி.மு.க.வுடன் இணைந்து தேசிய முன்னணியை உருவாக்கியபோதும், தி.மு.க வுக்காகத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசியபோதும், பல மேடைகளில் நான் அவருடைய பேச்சை மொழிபெயர்த்து வந்தேன்.
பிரதமர் பதவியில் அமர்ந்த வி.பி.சிங், மண்டல் கமிஷனால் பதவி இழந்ததும், தமிழ் நாட்டில் ஒரு சூறாவளிச் சுற்றுப்பயணத்தை தி.மு.க ஏற்பாடு செய்தது. தன்னை முதல் முறை மத்திய அமைச்சராக்கிய வி.பி.சிங்குக்கு, தான் செலுத்தும் நன்றிக் கடனாக அவரது உரையைத் தானே மொழிபெயர்க்க விரும்பினார் மாறன். அவரை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நான் பார்த்தது அந்த ஒரு முறைதான்.
வி.பி.சிங்குக்கு, அந்தச் சுற்றுப்பயணத்தில் சென்ற இடமெல்லாம் எழுச்சியான வரவேற்பு. மதுரை வரை எல்லா கூட்டங்களிலும் முரசொலி மாறனே மொழிபெயர்த்தார். மற்ற தென் மாவட்டங்களில், தான் மொழிபெயர்க்கவேண்டும் என்று வைகோ விரும்பினார். ஆனால், மாறன் மொழிபெயர்ப்பே தொடர்ந்தது. தன் சொந்தச் சீமையான நெல்லையிலாவது தனக்கு வாய்ப்புத் தரப்படும் என்று வைகோ எதிர்பார்த்தார். அங்கேயும் அதற்கான வாய்ப்பு அமையாமல் போனது.
அங்கிருந்து அடுத்த ஊருக்கு வைகோவுடன் நான் ஒரே காரில் போக நேர்ந்தது. அடுத்த அரை மணி நேரம் அவர் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். தி.மு.கவிலிருந்து தன்னை ஓரங்கட்டுவது தொடங்கிவிட்டது என்ற கடும் கோபமும் வேதனையும் கொந்தளித்தது அவர் பேச்சில். ‘தனக்கு யார் நிஜமான தலைவன்’ என்று ஒரு குமுறல் குமுறினார்! அவரை அப்போது சமாதானப்படுத்துவது மிகக் கடினமாக இருந்தது.
வைகோவின் உணர்ச்சிவசப்படும் இந்த இயல்புதான் தி.மு.கவிலிருந்து பின்னர் அவர் வெளியேற்றப்பட்டபோது, அவருக்குப் பலமாகவும் இருந்தது; பலவீனமாகவும் இருந்தது. அவரோடு தி.மு.கவிலிருந்து வெளியேறிய தலைவர்களுக்கும் அவருக்கும் இருந்த ஒரே கொள்கை ஒற்றுமை, கருணாநிதி மீது ஏற்பட்டிருந்த வெறுப்பு மட்டும்தான்.
உண்மையில், வைகோவை தி.மு.கவிலிருந்து கருணாநிதி வெளியேற்றாமல் இருந்திருந்தால், இப்போது பத்தோடு பதினொன்றாக இன்னுமொரு மாநில அமைச்சராக இருந்துகொண்டு, தயாநிதி மாறனின் சிறப்பியல்புகளை உணர்ச்சி பொங்கத் தமிழக மக்களுக்கு அவர் எடுத்துச் சொல்லிக்கொண்டு இருக்கக்கூடும்.
வைகோவின் உணர்ச்சிகரமான அரசியலில் அவருடைய உழைப்பும் அதிகம்; பட்ட துயரங்களும் அதிகம். அடைந்த லாபங்கள் மிக மிகக் குறைவு. தி.மு.கவிலிருந்து வெளியேறி ம.தி.முகவை ஒரு கட்சியாக நிலைநிறுத்த பல தொண்டர்கள் செய்த தியாகத்தையும், தன் சுயமரியாதையையும் ஒதுக்கிவிட்டு, மீண்டும் தி.மு.க. அணியில் சேர்ந்த போதே அவருடைய அரசியல் நம்பகத்தன்மை அடிவாங்கிவிட்டது. அதிலிருந்து மீண்டு வரும் வேளையில் ஜெயலலிதாவுடன் திரும்பவும் கூட்டணி சேர்ந்தது மீண்டும் அவருடைய நம்பகத்தன்மையைக் குலைத்தது. பொடா சிறைவாசம், பாத யாத்திரைகள் எல்லாமே விழலுக்கு இறைத்த நீர்தான்!
ஆனால், தற்போது தி.மு.கவை எதிர்ப்பதைத் தவிர, வைகோவுக்குச் செய்வதற்கு வேறு அரசியல் ஏதும் இல்லை என்பதுதான் இத்தனை குழப்பத்துக்கும் காரணம். கருணாநிதிக்குப் பிறகு தி.மு.க. உடைந்தோ உடையாமலோ தன் வசம் வந்து விடும் என்று அவர் போட்ட கணக்குகள், தயாநிதி மாறனின் வருகைக்குப் பிறகு தவிடுபொடியாகிவிட்டன.
தி.மு.கவும் அ.தி.மு.கவும் ஒன்றுக்கொன்று மாற்றாகத் தங்களை அறிவித்து வருகிற வரையில், மற்றவர்கள் இதில் ஏதேனும் ஓரணியுடன் இணைந்து சிங்கம் சாப்பிட்டது போகச் சிதறியதைச் சாப்பிடும் நரிகளாக மட்டுமே இருப்பார்கள். இரு கழகங்களுக்கும் தானே மாற்று என்று தன்னை மூன்றாவது சக்தியாக அறிவித்துக்கொண்டு, அதற்கான தலைமையாகத் தன்னைக் காட்டிக்கொண்ட வரையில் வைகோவுக்கு நம்பகத்தன்மை இருந்தது. இரண்டில் ஒன்றுடன் சேரத் தொடங்கியதும், அவர் கட்சியின் நிலை இடதுசாரிகளின் நிலைக்குச் சமமாகிவிட்டது.
அதனால்தான், வைகோவுக்கு நிகரான பேச்சாற்றலோ, நாடாளுமன்றத் திறமையோ, கட்சி நடத்தும் முன் அனுபவமோ இல்லாத விஜயகாந்துக்கு எட்டு சதவிகித ஓட்டுகள் விழுந்தன. வைகோவின் ம.தி.மு.கவுக்கு அதை நெருங்கும் வாய்ப்புக்கூட இல்லை.
தமிழக அரசியலில் இருக்கும் வெற்றிடம் ஒன்றே ஒன்றுதான். தி.மு.கவுக்கு மாற்று அ.தி.மு.க; அதற்கு மாற்று தி.மு.க. இரண்டுக்கும் மாற்று யார்?
இதை நிரப்பும் அரசியல் பார்வை, இதற்கான வியூகம் அமைக்கும் ஆற்றல் அனைத்திந்தியக் கட்சிகளான காங்கிரஸுக்கும் இல்லை, பி.ஜே.பிக்கும் இல்லை. யாருக்கு உள்ளது என்ற கேள்வியுடன் சுமார் 15 ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள் மக்கள். வைகோ, ராமதாஸ், விஜயகாந்த் என்று வரிசையாக வந்து செல்லும் ஒவ்வொரு தலைமையும் இன்னும் தடுமாறிக் கொண்டேதான் இருக்கிறது.
இந்தத் தடுமாற்றத்தில் முதலிடம் வைகோவுக்கு! ‘எமோஷனல் பாலிட்டிக்ஸ் என்பது மேடைக்கு மட்டுமே சரி’ என்பதைத் தன் முன்னாள் தலைவரிடம் அவர் கற்கவே இல்லை!
பூச்செண்டு
‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண, நன்னயம் செய்துவிடல்’ என்னும் திருக்குறளைப் படிக்காமலேயே, ‘தங்கர்பச்சான் சிறந்த கேமராமேன். ‘பெரியார்’ படத்தில் தன்னை தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்ய மறுத்ததில் தனக்கு வருத்தம்’ என்று அவரும் இருந்த மேடையில் பேசியதற்காக குஷ்புவுக்கு இ.வா. பூச்செண்டு!
கேள்வி
ஒரு புத்தக விழாக் கூட்டத்தில் பேசிய உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன், முதலமைச்சர் கருணாநிதியை ‘தலைவர் கலைஞர்’ என்று வர்ணித்திருக்கிறார். வருங்காலத்தில் கருணாநிதிக்கு எதிரான வழக்கு ஏதேனும் நீதியரசர் முன் வந்தால், அவரிடமிருந்து வழக்கை மாற்றவேண்டும் என்ற கோரிக்கை எழுவதற்கு இது இடம் கொடுத்ததாக ஆகாதா?
*****
2. மகிழ்ச்சி! அதிர்ச்சி! கொண்டாட்டம்! வாசிப்பு!
கல்வித் துறையில் பெரும் புரட்சிக்கு வித்திடக்கூடிய ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
மழலையர் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பதில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதில் மிகவும் முக்கியமானவை இரண்டு. குழந்தைகளின் பெற்றோரிடம் நேர்காணல் செய்யக்கூடாது. பள்ளிக்கூடத்திற்கு அருகில் வசிக்கும் குழந்தைகளுக்கே முன்னுரிமை தரவேண்டும். பத்து கிலோமீட்டருக்கு அப்பால் வசிக்கும் குழந்தைகளைச் சேர்க்க முடியாது.
சி.பி.எஸ்.இ இயக்குநர் கங்குலி தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை டெல்லி மாநில அரசு ஏற்று அமல்படுத்தியது. அதை எதிர்த்து சில பள்ளி நிர்வாகங்கள் தொடுத்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்திருக்கிறது.
பள்ளியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கும் குழந்தைகளுக்கு முன்னுரிமை என்பதை ஒழுங்காக அமல்படுத்தினால், ஒவ்வொரு வட்டாரத்திலும் தரமான பள்ளிகள் அமைய வழி பிறக்கும். பள்ளிக்கூட வேன், பஸ் போக்குவரத்துகள் அவசியமற்றுப் போகும். தொலை நோக்கில் இந்தப் பரிந்துரைகளைப் படிப்படியாக பள்ளியிறுதிப் படிப்பு வரை விரிவுபடுத்தினால் இன்னும் நல்லது.
நீண்ட காலமாக நான் வலியுறுத்தி வரும் இன்னொரு கோரிக்கை... அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் அனைவரின் வீட்டுக் குழந்தைகளும் கட்டாயமாக அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வேண்டும் என்று விதி ஏற்படுத்துவதாகும். அவர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் படித்தாலாவது கல்வித்துறை அதிகாரிகள், அரசுப் பள்ளிகளின் வசதியையும் தரத்தையும் தனியார் பள்ளிக்கு நிகராக உயர்த்துவார்கள் அல்லவா?
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றி எனக்கு இரண்டே குறைகள். அது தற்போது டெல்லி மாநிலத்துக்கு மட்டும்தான். நமக்கு எப்போது?
குழந்தைகளின் பெற்றோரின் கல்வித் தகுதிக்கு வெயிட்டேஜ் தரவேண்டுமென்ற பரிந்துரையில் எனக்கு உடன்பாடில்லை. படிக்காத ஏழைகளின் குழந்தைகளுக்கு அல்லவா வெயிட்டேஜ் தரவேண்டும்.
எது வரதட்சணைக் கொடுமை அல்ல என்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் விளக்கம் அளித்திருப்பது அதிர்ச்சியைத் தருகிறது.
நிலத்துக்கு உரம் போடப் பெற்றோரிடம் பணம் வாங்கி வரும்படி தன் மனைவி பீமாபாயை கணவர் அப்பாசாஹிப் அனுப்பினார். பணம் கிடைக்காத சூழலில் பீமாபாய் தற்கொலை செய்து கொண்டார்.
அவசர வீட்டுத் தேவைக்காகவோ, பண நெருக்கடியைச் சமாளிக்கவோ மாமனார் மற்றும் மாமியாரிடம் பணம் கேட்டால் அது வரதட்சணை கேட்டதாக ஆகாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். பணம் கொண்டு வராததற்காக மனைவியை பீமாராவ் அடித்ததாக கூறப்படாததால், அவர் மனைவியை துன்புறுத்தியதாகாது என்பது நீதிமன்றத்தின் கருத்து.
ஒருவேளை இந்த வழக்குக்கு இந்த வியாக்யானம் பொருந்தலாம். ஆனால் மாமனாரிடம் ஸ்கூட்டர், கம்ப்யூட்டர், கார், கலர் டி.வி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் இத்யாதிகளைக் கேட்கும் மருமகன்கள்கூட, குடும்பத் தேவைக்காகத்தான் கேட்பதாக வாதாடமுடியும் அல்லவா. தவிர துன்புறுத்தல் என்பது உடலை மட்டுமல்ல, உள்ளத்தைத் துன்புறுத்துவதும் தான். சுண்டு விரல்கூட மனைவியின் மீது படாமல் மன உளைச்சல் ஏற்படுத்தினால், அதுவும் துன்புறுத்தல் ஆகாதா?
சென்னை மாநகரக் காவல் துறை, அது தான் தோன்றி 150 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே காவல் துறை அமைப்புக்கான சட்டத்துக்கு முன்னோடி 1856ன் சென்னை நகரக் காவல் சட்டம் என்பது சென்னை வாசிகளுக்குப் பெருமையே.
தொழில்நுட்ப வளர்ச்சியிலும் புலனாய்வுத் திறமையிலும் இந்தியாவின் இதர மாநிலக் காவல் துறைகளைவிட அதிக வளர்ச்சியில் தமிழகமும் சென்னையும் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் காவல் துறை மக்களின் சிநேகிதனாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இன்னும் நிறைய தூரம் போகவேண்டும்.
மும்பை, ஆட்டோ பயணிகளின் சொர்க்கமாக இருக்கிறது. இங்கே வேறு மாதிரி இருப்பதற்குக் காரணம் ஆட்டோக்காரர்கள் மட்டுமல்ல. போலீசும்தான். லஞ்சம் ஊழலில் ஈடுபடாமல் போலீஸ் இருந்தால், ஆட்டோக்காரரை மட்டுமல்ல அரசியல்வாதியைக்கூடத் திருத்திவிடலாம். இதற்கான முனைப்பு இப்போது பல உயர் அதிகாரிகளிடம் அரும்பியிருக்கிறது. அது கீழ் வரை பரவ வேண்டும்.
சென்னைப் புத்தகக் கண்காட்சி இந்த வருடம் நடைபெறும் புது இடம் 291 வருடங்களாக இயங்கிவரும் புனித ஜார்ஜ் அனாதை இல்லப் பள்ளி வளாகம். இந்தப் பள்ளியில் 1793லிருந்து 1798 வரை படித்த புகழ்பெற்ற அனாதை தஞ்சை சரபோஜி மன்னர். பழைய அரசர் துல்ஜியின் தத்துக் குழந்தையான சரபோஜியின் உயிருக்கு ஆபத்து இருந்ததையடுத்து தரங்கம்பாடியைச் சேர்ந்த பாதிரியார் ஸ்வார்ட்ஸ், சரபோஜியை இந்தப் பள்ளியில் சேர்த்து, பாதுகாப்பாகப் படிக்கவைத்தார். ஸ்வார்ட்ஸ் பாதிரியார் இறந்தபோது, ஆங்கிலத்தில் இரங்கல் கவிதை எழுதியிருக்கிறார் சரபோஜி.
பூச்செண்டு
பாகிஸ்தானின் போராளிப் பெண் முக்தார் மாய்க்கு இந்த வாரம் மட்டுமல்ல சென்ற வருடத்துக்கான பூச்செண்டையே கொடுக்கலாம். படிப்பறிவற்ற முக்தார் மாய் பாகிஸ்தானின் மீராவாலா கிராமத்தில் ஜாதிக் கொடுமைக்கு உள்ளானவர். அவர் தம்பி உயர் சாதிப் பெண்ணிடம் பேசியதற்கான தண்டனையாக, 300 கிராமவாசிகள் கூடி முக்தாரை நாலு பேர் பாலியல் பலாத்காரம் செய்யவேன்டும் என்று தீர்ப்பளித்தார்கள். தீர்ப்பு உடனே நிறைவேற்றப்பட்டது. முக்தார் நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு வரப்பட்டார். ‘மானமிழந்தவளே செத்துப் போ’ என்று கூடியிருந்தவர்கள் கத்தினார்கள். முக்தார் துவளவில்லை. உள்ளூர் காவல் நிலையம் தொடங்கி ஒவ்வொரு இடமாகப் புகார் கொடுத்தார். கடைசியில் உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு நீதி கிடைத்தது. ஆறு பேர் தண்டிக்கப்பட்டார்கள்.
தன் போராட்டத்துக்கு உலகம் முழுவதும் இருந்து வந்த பண உதவியைக் கொண்டு முக்தார் தன் கிராமத்திலேயே பெண்களுக்கான பள்ளிக்கூடம் அமைத்து நடத்துகிறார். அவரைக் கொடுமை செய்தவர்கள் வீட்டுக் குழந்தைகளும் அங்கே இப்போது படிக்கிறார்கள். முக்தாரின் வாழ்க்கை அனுபவம் ‘இன் தி நேம் ஆஃப் ஹானர்’ என்ற தலைப்பில் இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது.
*****
3. எது நீதி, எது நியாயம்?
எது நீதி, எது நியாயம் என்று சிந்தனையைத் தூண்டும் மூன்று செய்திகள் இந்த வாரம் வெளியாகியுள்ளன.
செய்தி 1: இது தேர்வு சம்பந்தப்பட்டது. அன்றாட வாழ்க்கையில் எப்போதும் எதையாவது தேர்வு செய்தே ஆகவேண்டிய நிலையில்தான் தனி மனிதர்களும் அமைப்புகளும் இருக்கின்றன. விகடன் இதழைக் கையில் எடுத்த உடன் ‘ஓ பக்கங்களை’ முதலில் படிப்பதா, அல்லது அதைக் கடைசியாகப் படிப்பதா அல்லது படிக்காமல் விட்டுவிடுவதா என்று மூன்றில் ஒரு தேர்வை வாசகரான தனி மனிதர் செய்தாக வேண்டும்.
எந்த சினிமா, எந்த ஓட்டல், என்ன டிபன், எந்தக் கடை, என்ன உடை இப்படிப்பட்ட தேர்வுகள் தனி நபரின் விருப்பு வெறுப்பு சார்ந்த ஓரளவு சுலபமான விஷயங்கள். ஆனால் அரசாங்கம் போன்ற அமைப்புகள் தேர்வு செய்யும் விஷயங்களும் தேர்வு முறைகளும் கடினமும் சிக்கலும் நிரம்பியவை. காரணம் அவற்றில் எல்லா மக்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, நீதி வழங்கப்பட்டிருக்கிறது என்ற தோற்றமும் புலப்படவேண்டும்.
அரசாங்க நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதற்காகத் தேர்வு செய்ய ஒரு குழுவை மூன்று மாதம் தாமதமாக இப்போது தான் தமிழக அரசாங்கம் நியமித்திருக்கிறது. இந்த நியமனம்தான் இப்போது கூர்மையாக கவனிக்கப்படவேண்டியதாகிறது.
ஏனெனில் இந்த முறை ஒவ்வொரு புத்தகத்திலும் வழக்கமான 600 பிரதிகளுக்கு பதில் ஆயிரம் பிரதிகளாக வாங்கப்படும். விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ ரவிக்குமாரின் வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் கருணாநிதி செய்த இந்த அறிவிப்பு பரவலான பாராட்டுகளை (என்னுடையத உட்பட!) பெற்றது.
அரசு அறிவித்துள்ள தேர்வுக் குழுவில் அதிகாரிகள் தவிர கட்சிக்காரர்கள், படைப்பாளிகள், கட்சிக்காரப் படைப்பாளிகள் பலரும் இடம் பெற்றுள்ளனர்.
குழு உறுப்பினர்களின் நூல்களும் கடந்த ஆண்டில் பதிப்பிக்கப்பட்டு தேர்வுக்கான விண்ணப்ப நிலையில் இருக்கின்றன என்பதுதான் நீதிநெறி பற்றிய சிக்கல்!
தங்கள் நூல்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வசதி அவர்களுக்குத் தரப்படலாமா? பட்டியலில் தங்கள் நூல் பரிசீலனைக்கு வரும்போது மட்டும் அவர்கள் ஒதுங்கி நின்று மற்றவர்கள் முடிவு செய்யட்டும் என்று நெறி வகுத்துக் கொண்டாலும், அதுவும் கண் துடைப்புதானே. எப்படியும் குழுவில் உள்ள ஒருவரின் நூலை மற்றவர்கள் நிராகரிக்கும் வாய்ப்பு மிகக் குறைவுதான். இத்தகைய குழுக்களில் ஒருவர் மற்றவருக்கு சாதகமாக செயல்படுவதும் வசதிகளை பங்கு பிரித்துக் கொள்வதுமே நடைமுறையில் அதிகம்.
தீர்வு என்ன? குழு உறுப்பினர்கள் நூல்கள் எதுவும் பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளப்படக் கூடாது என்று விதிக்கலாமா? குழு உறுப்பினரானதற்காக ஒருவரின் நல்ல படைப்புகளை நூலகம் இழப்பதும் நீதியாகாதே?
ஒரு தீர்வு இருக்கிறது. இப்படிப்பட்ட தேர்வுக் குழுவில் நல்ல ரசனை உடைய வாசகர்கள் மட்டும் இடம் பெற்றால் போதுமானது. பரிசீலனைக்கு தன் நூல் அனுப்பப்பட்டிருந்தால் அந்தப் படைப்பாளி தேர்வுக் குழுவில் இடம் பெறக் கூடாது.
இந்த முன்னுதாரணத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி சங்கீத நாடக அகாதமி தேர்வுக் குழுவில் இருந்த, மறைந்த மலையாள நாடகாசிரியர் கவிஞர் சங்கரப்பிள்ளை செய்து காட்டினார். நாடகத் தயாரிப்புக்கான நிதி உதவிக்காக விண்ணப்பித்திருந்த சில நாடகக் குழுக்கள் அவர் எழுதிய நாடகங்களுக்காக விண்ணப்பித்திருந்தது தேர்வுக் குழு கூட்டத்தில் தெரிய வந்ததும், அவர் குழுவிலிருந்து