Marubadiyum
By Gnani
()
About this ebook
ஞாநி 4.1.1954 அன்று செங்கற்பட்டில் எந்த பூர்விக சொத்துமில்லாத ஒரு கீழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கல்வி ஒன்றே தன் குழந்தைகளுக்குத் தரும் சொத்து என்ற பார்வையில் இயங்கிய தந்தை வேம்புசாமி 1935 முதல் 1975 வரை ஆங்கில இதழியலில் இயங்கியவர். மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இதழியலுக்கு வராத நிலையில் ஞாநி அதில் ஈடுபட்ட கடந்த 40 வருடங்களாக இதழியல், சமூக அரசியல் விமர்சனம், நாடகம், தொலைக்காட்சி, சிறுவர் வாழ்வியல் ஆகிய துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். எழுபதுகளில் மாணவராக சோஷலிச அரசியல் ஆதரவுபிரசாரத்தில் ஈடுபட்டார்.பின்னர் நெருக்கடி நிலையின்போது அதை கடுமையாக எதிர்த்த இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் பணியாற்றினார். எண்பதுகளில் மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்புடன் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டபோது அதை ஆதரித்து வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளராக 70க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களில் பணியாற்றினார். மேதா பட்கர், ஜார்ஜ் பெர்ணான்டெஸ், நிகில் சக்ரவர்த்தி கிருஷ்ணய்யர், அஸ்கர் அலி எஞ்சினீயர், நாகபூஷண் பட்நாயக், தீஸ்தா சேதல்வாட் ஆகியோரின் மேடைப் பேச்சுகளை நேரடியாக மொழிபெயர்த்தவர். அண்மைத் தேர்தலில் மாற்று அரசியலை முன்வைத்தமைக்காக மக்கள் நலக்கூட்டணியை தீவிர்மாக ஆதரித்தார்.எழுபதுகள் முதல் இன்று வரை மனித உரிமைகள், மகளிர் சமத்துவம், சாதி ஒழிப்புக்காகப் பணியாற்றும் பல்வேறு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மதவாத எதிர்ப்பில் தொண்ணூறுகளிலிருந்தே தீவிரமாக இயங்கி வருபவர்.
நாடக மேதையான பாதல் சர்க்காரால் பயிற்றுவிக்கப்பட்ட ஞாநி 1978 முதல் இன்றுவரை பரீக்ஷா என்ற நாடகக்குழுவை நடத்தி வருகிறார். சென்னையில் வீதி நாடக இயக்கத்தின் முன்னோடி. 40க்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார்.
பெரியார் வாழ்க்கை பற்றிய இரண்டரை மணி நேரப் படத்தை 'அய்யா என்ற தலைப்பில் 2003ல் உருவாக்கினார்.40க்கும் மேற்பட்ட ஆவணப்படங்களையும், ஐந்து கதைப் படத் தொடர்களையும் இயக்கியுள்ளார்.
இதழியலில் செய்தி விமர்சன இதழ்கள் உருவாகாத காலகட்டத்திலேயே 1982ல் தீம்தரிகிட என்ற இதழை நடத்தி முன்னேர் செலுத்தினார். ஜூனியர் போஸ்ட் இதழை ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்கும் தரமான இதழாக 1993ல் மாற்றிக் காட்டினார். சுமார் 30 வருடங்கள் முன்பே தொலைக் காட்சிக்கான முதல் இதழ் 'டி.வி.உலகம்' , சென்னை நகரத்துக்கான முதல் இதழ் 'ஏழு நாட்கள்' ஆகியவை இவர் முயற்சிகள். தேங்கிக் கிடந்த சிறுவர் இதழியலை மாற்றும் விதத்தில் 1999ல் சுட்டி விகடன் இதழை வடிவமைத்து உருவாக்கி வெற்றி பெறச் செய்தார்.2016ல் தமிழில் மாணவரகளுக்கான முதல் இதழாக தினமலர் வெளியிடும் பட்டம் இதழை வடிவமைத்து உருவாக்கி அதன் ஆலோசகராக இருந்து வருகிறார். சிறுவர்கள், இளைஞர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் வரையறுத்திருக்கும் பத்து வாழ்க்கைத்திறன்களைப் பயிற்றுவிக்கும் பணியில் கடந்த பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ளார். சிங்கப்பூர் கம்போடியா, பாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து,இத்தாலி, வியன்னா, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் பயணம் செய்துள்ளார். நாத்திகர். பகுத்தறிவாளர். சாதி மறுப்பாளர். ஞாநியின் குடும்பத்தினரும் அதே நிலையில் உள்ளவர்கள்.
Read more from Gnani
Ayogiyargalum Muttalgalum Rating: 0 out of 5 stars0 ratingsThavippu Rating: 0 out of 5 stars0 ratingsO Pakkangal Rating: 0 out of 5 stars0 ratingsKandathai Sollugirean Rating: 0 out of 5 stars0 ratingsParisukku Ponen Rating: 0 out of 5 stars0 ratingsArinthum Ariyamalum Rating: 5 out of 5 stars5/5Narendra Modi Atharavu Petra Oru Kaavi Bayangaravaathiyin Oppuhal Vaakkumoolam Rating: 0 out of 5 stars0 ratingsPazhaiya Paper Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 6 Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsO Pakkangal Part - 9 Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaazhkai En Kaiyil Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsChennai Nagara Anubavangal Rating: 0 out of 5 stars0 ratingsSankarachari Yar? Rating: 0 out of 5 stars0 ratingsSandaikarigal Rating: 0 out of 5 stars0 ratingsOozhale Un Ver Enge? Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Malargal Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 7 Rating: 0 out of 5 stars0 ratingsBalloon(Nadagam) Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsApple Desam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Marubadiyum
Related ebooks
Ashokamitran's Puthiya Tamil Sirukathaigal Rating: 0 out of 5 stars0 ratingsPirithoru Maranam Rating: 0 out of 5 stars0 ratingsUrangum Manasatchi Rating: 0 out of 5 stars0 ratingsNinaivu Naatkalum Nenjil Alaigalum Rating: 0 out of 5 stars0 ratingsPazhaiya Paper Rating: 0 out of 5 stars0 ratingsSuttachu Suttachu Rating: 0 out of 5 stars0 ratingsVisaranai Commission Rating: 3 out of 5 stars3/5Ivargal Paarvaiyil Cinnathirai Rating: 0 out of 5 stars0 ratingsNetaji Marma Maranam Rating: 0 out of 5 stars0 ratingsSakalakala Babu Rating: 0 out of 5 stars0 ratingsM.P.Nirmal – Oru Thani Mara Thoppu Rating: 0 out of 5 stars0 ratingsO! Pakkangal - Part 4 Rating: 0 out of 5 stars0 ratingsDinosaurgal Veliyeri Kondirukindrana Rating: 4 out of 5 stars4/5O! Pakkangal - Part 6 Rating: 0 out of 5 stars0 ratingsPatchai Kaali Rating: 0 out of 5 stars0 ratingsPathirigai Ulagam Pattriya Palveru Thagavalgal Rating: 0 out of 5 stars0 ratingsOru Sol Keeler! Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Malargal Rating: 0 out of 5 stars0 ratingsSuriya Vamsam - Part 2 Rating: 5 out of 5 stars5/5Paarthathu... Padithathu... Rasithathu... Rating: 0 out of 5 stars0 ratingsMalaichamy IAS (Retd) Rating: 0 out of 5 stars0 ratingsArumugasamiyin Adugal Rating: 0 out of 5 stars0 ratingsArubathu Moovarul Aivar Rating: 0 out of 5 stars0 ratingsEngengu Kaaninum... Rating: 0 out of 5 stars0 ratingsPuththaga Poonga Rating: 0 out of 5 stars0 ratingsCelluloid Chozhan! Rating: 0 out of 5 stars0 ratingsSuriya Vamsam - Part 1 Rating: 5 out of 5 stars5/5Rambaiyum Naachiyaaryum Rating: 0 out of 5 stars0 ratingsUdhayachandran Rating: 0 out of 5 stars0 ratingsDeva Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Marubadiyum
0 ratings0 reviews
Book preview
Marubadiyum - Gnani
http://www.pustaka.co.in
மறுபடியும்
Marubadiyum
Author:
ஞாநி
Gnani
For more books
http://www.pustaka.co.in/home/author/gnani
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
பழைய பேப்பர்’ முதல் தொகுதியின் முன்னுரை
1. மறுபடியும் (கலைஞர் பற்றி)
2. மறுபடியும் (ரஜினி பற்றி)
3. நான் ஆணையிட்டால்…
4. சாமியார் அரசியல்
5. அன்புள்ள ஜெயலலிதா அவர்களுக்கு வணக்கம்
6. மறுபடியும் (பா. ஜ. க. பற்றி)
7. தமிழன் பிரதமராவது எப்போது?
8. மறுபடியும் (எனர்ஜென்சி பற்றி)
9. கில்லாடிக் கிழவர்
10. ஏ.வி.எம்.பொன்விழா சர்ச்சைகள்
11. மறுபடியும் (காமராஜர் ஆட்சி பற்றி)
12. பெண்ணுக்கு எதிரி?
13. மறுபடியும் (சுதந்திரப் போராட்டம் பற்றி)
14. சும்மா?
15. வாரிசு?
16. பிநாமி?
17. அடி, உதை, குத்து!
18. மறுபடியும் (அழகிப் போட்டி பற்றி)
19. அண்ணாவின் அறப்போராட்டம்
20. மறுபடியும் (தி.மு.க. ஆட்சி பற்றி)
21. இருவர்
22. மறுபடியும் (பீரங்கி பேர ஊழல் பற்றி)
23. மறுபடியும் (தொழிற்சங்க இயக்கம் பற்றி)
24. இருவரின் வீழ்ச்சி
25. காலில் விழும் கலாசாரம்
26. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
27. டாக்டருக்குச் சிகிச்சை தேவை
28. அங்கிங்கெனாதபடி எங்கும் செல்லவேண்டாம்
29. பாத்திரமறிந்து…
30. நீதியா? அநீதியா?
31. ‘லெட்டர்பேட்’ கட்சிகள்
32. விபரீத விளையாட்டு
33. இதுவரை நீ….
34. கூடா நட்பு கூடாது
35. கனிமொழியின் கவனத்துக்கு
36. நாலாந்தரப் பேச்சு நாட்டுக்கு உதவுமா?
37. யார் பெயரை எதற்கு வைப்பது?
38. ஆபாசப் படத்தைவிட ஆபத்தானவை
39. நீங்கள் எப்படிப்பட்ட பெண்?
40. உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே
41. சினிமாவும் பெண்களும்
42. வீர விளையாட்டு
43. காதல் படிக்கட்டுகள் என்றும் தொடரும்…
சில குறிப்புகள்
இந்த நூல் பற்றி...
'மறுபடியும்' என்ற இந்தத் தொகுப்பு என் கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு. 1978 முதல் 1982 வரையிலான கட்டுரைகளை ‘பழைய பேப்பர்’ என்ற தலைப்பில் சக்தி பதிப்பகம், வேர்கள் இலக்கிய இயக்கத்தின் உதவியுடன் 1993ல் வெளியிட்டது. எனவே இந்தத் தொகுப்பை ‘பழைய பேப்பர் - இரண்டாம் தொகுதி’ என்றும் கொள்ளலாம்.
1982 முதல் 1996 வரையிலான கட்டுரைகள் - சுமார் பத்து நூல்கள் அளவுக்கு வரக்கூடியவை - இன்னமும் தொகுத்து வெளியிடப்படாத நிலையில், மார்ச் 1996 - மார்ச் 1997 வரையிலான கட்டுரைகள் மட்டுமாக இப்போது இந்தத் தொகுப்பாக வெளியிடப்படுகின்றன.
1993லிருந்து பெரிதும் வீடியோ ஜர்னலிஸ்ட்டாகவே இயங்கி வந்த நான் மறுபடியும் முழுநேர அச்சு சார்ந்த பத்திரிகையாளனாக செயல்பட்ட 1996 - 97ல் எழுதியவை இவை. இவற்றில் பலரும் வியப்போடு வரவேற்ற 'காதல் படிக்கட்டுகள்' கட்டுரை ஜூனியர் விகடன் இதழில் வெளியானது. மற்றவை எல்லாம் தினமணியின் மலர்கள், தினமணி கதிர் இதழ்களில் வெளியானவை.
ஐராவதம் மகாதேவன் ஆசிரியப் பொறுப்பில் இருந்த காலத்துக்குப் பிறகு, திசையும் தெளிவும் இன்றி புயலில் சிக்கிய கப்பலாக இருந்து வந்த ‘தினமணி’ நாளேடு, 1995ல் ‘ஆர்.எம்.டி.’ என்கிற இராம. திரு. சம்பந்தம் பொறுப்பேற்ற பிறகு ஓர் ஒழுங்குக்கு வந்தது. அனைத்துத் தரப்புச் செய்திகளும் இடம்பெறும் விதமாகவும், பொது நாகரிகத்துக்குட்பட்டு எந்தக் கருத்தையும் எவரும் தெரிவிப்பதற்கான களமாகவும் ‘தினமணி’ பரிணாம வளர்ச்சி பெற்றது.
நான் இளம் நிருபராகப் பத்திரிகைத் துறையில் பணியாற்றத் தொடங்கிய காலத்தில், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில் என் தலைமை நிருபராக இருந்தவர் சம்பந்தம். அதற்கு முந்தைய தலைமுறையில் என் அப்பாவின் தலைமையின் கீழ் அதே ஏட்டில் இளம் நிருபராக இயங்கியவர் அவர். கருத்து மாறுபாடுகளும் கால ஓட்டமும் எங்கள் உறவைப் பாதிக்கவில்லை. அவர் ‘தினமணி’ ஆசிரியர் பொறுப்பேற்ற பிறகு, அதனைத் தரமான, நேர்மையான, பொறுப்புள்ள ஏடாக ஆக்குவதற்கு அவர் மேற்கொண்டு வந்த முயற்சிகளில் உதவுவதற்கு அழைக்கப்பட்டேன். சிறப்பு மலர்களைத் தயாரிக்கும் பணியில் தொடங்கி, தினமணி இதழாசிரியர் பொறுப்பில் டிசம்பர் 1996 வரையில் முழுநேரம் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது.
மறுபடியும் எக்ஸ்பிரஸ் வளாகத்தில் பணியாற்றச் சென்றதைக் குறிக்கும் விதமாக, தினமணி கதிரில் ஏப்ரல் 96ல் என் முதல் கட்டுரைக்கு ‘மறுபடியும்’ என்று தலைப்பிட்டேன். அந்த ஆண்டு முழுவதும் ஏதோ ஒரு விதத்தில் இந்தத் தலைப்பு மறுபடியும் மறுபடியும் இடம் பெற நேர்ந்தது. ‘மறுபடியும்’ கட்டுரைகள் மட்டுமன்றி வம்பன், மனிதன், முனியன், துருவி, சின்ன சங்கரன் என்று என்னுடைய பல புனைப் பெயர்களில் நிறையவே எழுதும் சூழ்நிலை அமைந்தது. எனக்கு வாய்த்த பத்திரிகை ஆசிரியர்களில் என் கருத்துச் சுதந்திரத்தை முழுமையாக மதித்தவர்கள் வரிசையில் சம்பந்தமும் இடம் பெறுகிறார்.
மறுபடியும் நான் அச்சு சார்ந்த பத்திரிகைப் பணியில் ஈடுபட்ட காலகட்டம் எப்படிப்பட்டதாக இருந்தது என்று சொல்லியாக வேண்டும்.
தமிழக அரசியலும் இந்திய அரசியலும் ஜெயலலிதா, நரசிம்மராவ் ஆட்சிகளால் பெரும் சீரழிவுக்குள்ளாகியிருந்தன. நம்புதலுக்குரிய புதிய அரசியல் சக்திகள் எதுவும் வளர்ச்சியடையாத நிலையில், பழையனவற்றில் சிறந்தது எது என்று நாடும் வாய்ப்பே இருந்தது.
தொண்ணூறுகளில் கலை இலக்கிய நிலவரங்களும் சீரழிந்தே இருந்தன. வெகுஜன ஏடுகளில் தரமான கதைகள் படிக்கக் கிடைப்பது குறைவாக இருந்தது. முப்பது வயதுக்குக் கீழே, தரமாக எழுதும் ஆற்றலுள்ள இளைஞர்களைத் தேடித்தான் கண்டறிய வேண்டியிருந்தது. அரசுத் துறையிலும் அரசியலிலும் மட்டுமே உள்ளதாக சித்தரிக்கப்படுகிற லஞ்சமும் ஊழலும், முறைகேடுகளும் பத்திரிகைத் துறையிலும் கண்ணில் உறுத்துமளவுக்கு ஊடுருவி விட்டிருந்தன. நவீன நாடக முயற்சிகள் முற்றிலும் புரவலர் சார்ந்தவையாக மாறிவிட்டன. தமிழ்த் திரைப்படங்கள், பிரும்மாண்டம் என்ற புதிய வணிக உத்தியில் சிக்கியிருந்தன. எண்பதுகளில் எளிய, சாதாரண முயற்சிகளுக்கு தொலைக்காட்சியில் இருந்துவந்த வாய்ப்புகள் தொண்ணூறுகளில் சுருங்கிப்போய்விட்டன. தனியார் தொலைக்காட்சிகளின் வருகை, சூழலை மேலும் வணிகமயமாகவும், பெரும் முதலீட்டாளர்களுக்கானதாகவும் மாற்றியது. கல்லூரி வளாகங்களிலும் சரி, வெளியிலும் சரி, இளைஞர்கள் மத்தியில் லட்சிய தாகம் காணவில்லை. ‘நான் என் பொருளாதார முன்னேற்றம்’ என்ற பார்வை நடுத்தர வகுப்பை பீடித்த நோயாக மாறிற்று. சமூகப் பார்வை – லட்சியம் மனித நேயம் முதலியவற்றில் பிடிப்பு கொண்ட கடைசி தலைமுறையாக எழுபதுகளிலும் எண்பதுகளிலும் முகிழ்த்த இளைஞர்களேயாகிவிடுவார்களோ என்று அஞ்சத்தக்க அளவு ‘பிறர்நிலை நோக்காப் பெரும் சுயநலம்’ தொண்ணூறுகளின் வாழ்க்கை முறையாகிக் கொண்டிருந்தது.
திருத்த முடியாத நம்பிக்கைவாதி (Incorrigible optimist) என்று என் வட்டாரங்களில் அறியப்பட்டிருந்த என்னையும் இச்சூழல் விரக்தியாளனாக மாற்றவிடாமல் தடுத்துக் கொள்ள, குழந்தைகளுடன் பணியாற்றும் வாய்ப்புகள் உதவின.
மறுபடியும் பெரியவர்களுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யும் பணியை ‘கதிரில்’ கட்டுரைகள் வாயிலாக மேற்கொண்டபோது, கிடைத்த பிரதிபலிப்புகள் இங்கு குறிக்கத்தக்கன. ரஜினி காந்த், வைரமுத்து, ரேவதி, ஸ்டாலின், ஜெயலலிதா, அழகிப்போட்டி, இருவர் தொடர்பான கட்டுரைகள் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த ஆண்டு முழுவதும் வந்த விரிவான பாராட்டுகளும் சரி, ஆழமான விமர்சனத்தோடு வந்த மாற்றுக் கருத்துகளும் சரி, சமூக அக்கறை, மனித நேயம் இரண்டும் நம் சமூகத்தில் முற்றாக அழியவில்லை என்பதையும் அவை நீறுபூத்த நெருப்பாகத் தொடர்ந்து கனன்று கொண்டிருப்பதையும் எனக்கு உணர்த்தின.
தினமணியில் பணியாற்றுவதால் எனக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பின் சிறப்புகளையும் எனக்கு உணர்த்திவந்த என் சிநேகிதி பத்மாவுக்கும், நண்பர் ‘ஆர்.எம்.டி.’க்கும், ‘ஆலயம்’ வெங்கட்டுக்கும் இந்நூல் வெளிவருவதை சாத்தியப்படுத்தியமைக்காக என் நன்றி.
ஞாநி
மார்ச், 1997
‘பழைய பேப்பர்’ முதல் தொகுதியின் முன்னுரை
நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது பின்னாளில் ஒரு ரயில் எஞ்சின் டிரைவராகவோ, விமானியாகவோ, டாக்டராகவோ ஆக வேண்டும் என்றெல்லாம் விரும்பியதாகவே எனக்குத் துளியும் நினைவில்லை. பத்திரிகையாளனாக ஆகித்தீருவது என்ற தீர்மானத்துடன் அதை நோக்கியே இயங்கி வந்திருக்கிறேன். என் இன்னொரு காதலான நாடகத்தில் நான் பன்னிரண்டாவது வயதில் நுழைந்தபோது கூட எனக்குக் கிடைத்த முதல் வேடம் பத்திரிகை நிருபராகத்தான்.
ஆனால் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கிடைத்த முதல் வேலை – பத்திரிகை அலுவலகத்திலேயே என்றபோதும், பத்திரிகையாளனாக அல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்னைப் பதிப்பின் விளம்பரக் கணக்குப் பிரிவில் கடைநிலை ஊழியனாக பணியாற்றிய அந்த ஓராண்டு காலம் ஜர்னலிசத்தைப் புரிந்து கொள்வதை விட அதிகமாக வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவிற்று.
பத்திரிகையாளனாகவே வாழ்வது என்ற என் தீர்மானத்துக்கு ஓரளவு காரணம் என் அப்பா பத்திரிகையாளராக இருந்தது என்றாலும் என் மூன்று சகோதரர்களும் இருண்டு சகோதரிகளும் வேறு துறைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். என் அம்மா நான் பள்ளிக்கூட ஆசிரியனாக வேண்டுமென்று விரும்பினாள். நான் பத்திரிகை ஆசிரியனானதன் முழுத் துயரத்தையும் சுமந்தவள் அவள்தான். எப்போதும் யாரோடாவது பேசிக்கொண்டிருப்பது என்ற என் விருப்பம்தான் வெவ்வேறு கட்டங்களில் என்னை பத்திரிகை, மேடைப் பேச்சு, நாடகம், வீடியோ என்று மேலும் மேலும் அதிகமான பேச்சு சிநேகிதர்களைத் தேடிப் போவதாக பல சாதனங்களில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்.
நான் பத்திரிகை நிருபராகச் சேர்ந்த நேரம் என் தனி வாழ்க்கையிலும் இந்தியாவின் சமூக வாழ்க்கையிலும் நெருக்கடி நேரம். நிருபர் வேலை கிடைத்த சில மாதங்களிலேயே நானும் அம்மாவும் பெரியம்மாவும் அடங்கிய குடும்பத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் கொடுத்த 250 ரூபாய்களில் பராமரிக்க வேண்டியவனாயிருந்தேன். அதே சமயம் இந்திரா அரசாங்கத்தின் தணிக்கை கெடுபிடிகளை சகித்தும் சமாளித்தும் எங்கள் பத்திரிகைப்பணி நடந்து கொண்டிருந்தது. ஆங்கில ஏட்டில் பணியாற்றி வந்தபோதும் என் மனம் தமிழ்ப் பத்திரிகைத் துறையில் ஈடுபடுவதையே அவாவியது. அதற்கு வாய்ப்பாக 1980 ஜனவரியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகம், கணையாழி, கல்கி, குமுதம் ஆகிய ஏடுகளில் எழுதியதற்காக என்னை வேலை நீக்கம் செய்தது. அதே சமயத்தில் தான் கணையாழி நிறுவனர் – ஆசிரியர் கி.கஸ்தூரிரங்கனை எக்ஸ்பிரஸ் நிர்வாகம் தினமணியின் இணையாசிரியாராக நியமித்த விசித்திரமும் நடைபெற்றது! நான்காண்டுகளுக்குப் பிறகு வேலை நீக்கம் தவறு என்று என் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு வந்ததையடுத்து மறுபடியும் எக்ஸ்பிரஸில் பணியாற்றிய சில மாதங்கள் நீங்கலாக அடுத்து பதின்மூன்று வருடங்களாக நான் தமிழ்ப் பத்திரிகையாளனாகவே வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறேன். அஸ்வினி, எதிரொலி, ஜூனியர் விகடன், முரசொலி, ஜூனியர் போஸ்ட் ஆகிய இதழ்களில் முழுநேரப் பணியில் அவ்வப்போது இருந்தது தவிர பல தமிழ்ப் பத்திரிகைகளுக்குத் தொடர்ந்து எழுதிப் பிழைத்து வந்திருக்கிறேன்.
ஜீவனத்துக்கான வேலை வேறு; நம் சொந்த நெறிமுறைகள் நம்பிக்கைகள் வேறு என்று நான் ஒரு போதும் கருதியதில்லை. இரண்டையும் இணைத்து வாழ முற்படும் வாழ்க்கையில் ரத்தினக் கம்பளங்களை விடச் சரளைக் கற்களே அதிகம் தட்டுப்பட முடியும். என் பார்வையை எல்லாவிதத்திலும் ஏற்காதவர்களான போதும் ஏற்புடைய விஷயங்களில் அவர்களுடன் ஒன்றுபட்டும் பணிபுரியும் வாய்ப்பை எனக்குக் கொடுத்த பத்திரிகை ஆசிரியர்கள் பலர் உண்டு. குறிப்பாக ‘முரசொலி’ மாறனும், ‘ஆனந்தவிகடன்’ எஸ். பாலசுப்ரமணியனும் என் கருத்துச் சுதந்திரத்தைப் பெரிதும் மதித்தார்கள். நான் விரும்பிய சமயத்தில் வேலைக்குச் சேரவும் வெளியேறவும் மறுபடியும் சேரவும் அன்போடு என்னை அனுமதித்தவர் பாலசுப்ரமணியன். எந்த விஷயத்தையும் அவர் ஏற்கப் போதுமான காரணம் காட்டி விவாதித்து ஏற்கச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையைத் தரும் விதத்தில் ஆரோக்கியமான விவாதங்களை அவர் ஊக்குவித்தார்.
என்னிடம் உள்ளதைவிட கூடுதலான ஆற்றல் உள்ளது போல் எனக்கே பிரமையை ஏற்படுத்தும் வல்லமையுள்ள நண்பர் பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி, இலக்கியம் – ஜர்னலிசம் – ஆட்டோ ஓட்டுதல் – விவசாயம் எல்லாமே சம அந்தஸ்துக்குரியவை தான் என்ற நிதானத்தைத் தன்னிடமிருந்து எனக்கும் தொற்றவைத்த நண்பர், எழுத்தாளர் அசோகமித்திரன், எக்ஸ்பிரஸ் வழக்கு விசாரணை நாட்களன்று என்னைத் தேடி வந்து காலை உணவும் வாங்கித்தந்து நான்காண்டுகள் என் வழக்கை நட்பின் நிமித்தம் மட்டுமே நடத்திய வழக்கறிஞர் சந்துரு போன்ற சிநேகிதர்கள்தான் பத்திரிகைத் துறையில் எனக்கு சலிப்பு ஏற்பட்ட தருணங்களில் அதிலிருந்து மீள (அவர்களையறியாமலும்) உதவி இருக்கிறார்கள்.
இந்தப் பதினெட்டாண்டுகளில் மூன்றுமுறை நண்பர்களின் உதவியுடன் சொந்தமாகப் பத்திரிகை நடத்த முயற்சித்த அனுபவங்கள் என்னை வளப்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக முதல் முறையாக 1982-ல் வெளியிட்ட ‘தீம்தரிகிட’ பொருளாதார சிக்கல்களால் நின்று போகாமலிருந்தால் என்ற கற்பனை இப்போது கூட எனக்கு சுவாரசியமாக இருக்கிறது.
1975ல் இருந்தது போல் இன்று பத்திரிகைத் துறை இல்லை. நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. குறிப்பாகத் தமிழ்ப் பத்திரிகைகளிலும் சுமாரான சம்பளம் கிடைக்கும் நிலை பெருமளவு ஏற்பட்டிருக்கிறது. உறவினர்கள் – குடும்ப நண்பர்கள் வட்டாரத்தில் பல பெரியவர்கள் என்னைப் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் எக்ஸ்பிரஸில் இருந்தபோது ‘சம்பளம் மாசமாசம் ஒழுங்கா குடுக்கறானா’ என்று அக்கறையோடு கேட்பார்கள். என் அப்பா காலத்தில் நிலைமை அப்படி இருந்ததே காரணம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அவரால் தரமான நிருபராகவும் பொறுப்பான குடும்பத்தலைவராகவும் இருக்க முடிந்திருக்கிறது என்பதே எனக்கு இத்துறையில் ஈடுபட நம்பிக்கை ஊட்டியது.
இன்று நிறைய இதழியல் படிப்பு வசதிகள் ஏற்பட்டிருக்கின்றன. தொழில் நுட்பம் பல சாதனைகளை நிகழ்த்த வசதியாக இருக்கிறது. வாசகர் எண்ணிக்கை பல மடங்கு பெருகியிருக்கிறது. ஆயினும் தமிழ் இதழியல் விரிவு பெற்ற அளவுக்கு ஆழப்படவில்லை. துப்பறியும் ஜர்னலிசம் மதிப்பிழக்கும் அளவுக்கு நையப் புடைக்கப்பட்டுவிட்டது. துடிப்பும் ஆர்வமும் பரபரப்பும் உழைப்பும் அதிகரித்துள்ள போதும் தார்மிக மதிப்பு குறைந்திருக்கிறது.
மொத்த சமூகத்திலும் நெறிகள் பிறழ்வதும் மதிப்பீடுகள் குலைவதும் நடந்து கொண்டிருக்கிற பத்தாண்டுகளில் பத்திரிகைத்துறை மட்டும் எப்படி விலகி நிற்க முடியும்? சமூக சீர்குலைவை செய்திகளில் மட்டுமின்றித் தன் செயல்பாட்டிலும் அது பிரதிபலிக்கிறது என்றே கொள்ளத்தகும்.
இப்படிப்பட்ட தருணங்களில் எழுத்தாளனாயினும் வேறெந்தப் படைப்பாளியாயினும் சரி – இதுவரை நாம் செய்துவந்ததற்கெல்லாம் ஏதாவது அர்த்தம் இருந்திருக்கிறதா, இருக்க முடியுமா என்று பின்னோக்கிப் பார்ப்பது தவிர்க்க இயலாதது, நானும் அப்படித் திரும்பிப் பார்த்ததன் விளைவே இந்தத் தொகுப்பு.
அப்படிப்பட்ட அலசல்களை மேற்கொள்வது மனசுக்குள் பலமுறை நடப்பது தான் என்றாலும் அதை வாசகர்களுடனும் சஹிருதயர்களுடனும் பகிர்ந்து கொள்ளும் வடிவமாக இத்தொகுதியை சாத்தியப்படுத்தியிருப்பது பொன் விஜயனின் ஆர்வமும் அசைக்கமுடியாத பிடிவாதமும் அவையிரண்டுக்கும் அயராது ஆதரவளிக்கிற ‘வேர்கள்’ இயக்கமும் தான். நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்குமான வெளிச்சத்தைத் தொடர்ந்து தேடும் ஒரு பத்திரிகையாளனின் கடந்து போன காலங்கள் பற்றிய இந்தப் பதிவுகளிலிருந்து ஒரு சிறு பொறி கிட்டினாலும் நல்லதுதான் என்று அவர்களோடு சேர்ந்து நானும் நம்புகிறேன்.
பத்திரிகையாளர்கள் பலர் சுயசரிதைகள் எழுதியதுண்டு. ஆனால் அவர்கள் பத்திரிகைகளில் எழுதியவற்றின் தொகுப்புகள் தொகுக்கப்பட்டது மிகவும் அரிது. இன்றும் பல விஷயங்களில் எனக்கு ஆதர்சமாக விளங்கும் சிலரில் ஒருவனான பாரதியின் பத்திரிகைக் கட்டுரைகள் பெருமளவு தொகுக்கப்பட்டு நமக்குக் கிடைத்திருப்பது பெரும் பேறென்றே தோன்றுகிறது. இதுபோல் தமிழ் இதழியல் முன்னோடிகளான திரு.வி.க., டி.எஸ். சொக்கலிங்கம், ஏ.ஜி.வெங்கடாச்சாரி, கல்கி போன்ற பலரின் தினசரி, செய்திப் படைப்புக்கள் தொகுக்கப்பட்டிருந்தால் பல புதிய வெளிச்சங்கள் கிடைக்கக் கூடும். எழுத்தாளர் புதுமைப்பித்தன் தினசரிப் பத்திரிகையில் தினசரி என்ன எழுதினார், எப்படி எழுதினார், எந்த செய்தியை எப்படி வழங்கினார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும் என்றால் அது அன்றைய சமூகம் பற்றிய அவர் பார்வையை மட்டுமின்றி, ஒரு படைப்பாளி இன்னொரு துறையில் இயங்கும் விதத்திலிருந்து படைப்பு மனத்தின் செயல்பாடுகளை மேலும் விளங்கவும் உதவியிருக்கக் கூடும்.
தினசரி செய்தித் தாளில் நிருபராக ஐந்தாண்டுகள் பணியாற்றிய அனுபவங்கள் எனக்கு நான் இயங்கும் பிற துறைகளில் பெரிதும் பயன்பட்டிருக்கின்றன. நாடகத்திலும், வீடியோவிலும், புனைகதை எழுத்திலும் குழப்பமின்றித் தெளிவாக ஒன்றைத் தெரிவிப்பது என்ற வடிவ ரீதியான அம்சத்திலும் சரி, வாழ்க்கையின் பல்வேறு மட்டங்களில் வாழும் வெவ்வேறு மனிதர்களை சந்தித்து அவர்களை அறிகிற அரிய வாய்ப்பினால் என் சமூகப் பார்வையை – வாழ்க்கை பற்றிய தத்துவ தரிசனத்தை, செழுமைப்படுத்திக் கொள்ளவும் இந்த அனுபவங்கள் காரணமாய் இருக்கின்றன.
இந்த முதல் தொகுதியில் எழுபதுகளைப் பிரதிபலிக்கும் பல்வேறு கட்டுரைகளைத் தொகுக்கும் போது, 1982-ல் முதல் முறையாக வெளிவந்து, மூன்று இதழ்களோடு நின்றுபோன ‘தீம்தரிகிட’ இதழ்களின் கட்டுரைகளுடன் முடித்துக்கொள்ளக் கருதினோம். எனினும் அந்தக் காலகட்டத்தில் நான் கண்ட மூன்று மாறுபட்ட மனிதர்களின் – கமல்ஹாஸன், ரஜினி கோத்தாரி, வள்ளுவன் பேட்டிகளை மட்டும் நூல் நீளம் கருதி இதில் சேர்க்க இயலாமற் போயிற்று அவை எண்பதுகளின் தொகுதியில் இடம் பெறும். பின்னர் தொண்ணூறுகளின் தொகுதியும் வெளியாகும்.
நான் செயற்படும் சகல துறைகளிலும் என் அணுகுமுறை எப்போதுமே தீவிரமான, ஆழமான விஷயங்களை நிறையபேரிடம் எளிமையாக விளங்கும் விதத்தில் பகிர்ந்து கொள்ளவேண்டும். நிறைய பேரிடம் பகிர வேண்டும் என்பதற்காக விஷயகனம் லேசாகி விடத் தேவையும் இல்லை
என்பதற்காகவே இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாக வெகுஜன சாதனக்காரர்கள் மத்தியில் நான் சிறு பத்திரிகைக்காரனாகவும் சிற்றிதழ் வட்டாரத்தில் மாஸ்மீடியா ஆசாமியாகவும் கருதப்படுகிற நிலைமை உண்டென்ற போதும் அது எனக்கு ஒரு பிரச்னை அல்ல. தொகுதி நிமித்தம் மறுபடி படிக்கிற போது எனக்கு எல்லா கட்டுரைகளிலும் இந்த அணுகுமுறையை நான் பின்பற்றியிருப்பது தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
காலத்தை வென்று நிற்கும் எழுத்துக்களை உருவாக்குவது ஒருபோதும் ஒரு பத்திரிகையாளனின் நோக்கமாக இருக்க முடியாது. வாழ்கிற காலத்தில் நிலைமையைத் துல்லியமாகப் பிரதிபலிப்பதும் அதைப் புரிந்து கொள்ள எழுதுவதும் மட்டுமே தினசரி, வாராந்தர இதழியலில் சாத்தியம். அந்த விதத்தில் நானும் என் காலத்தைப் பிரதிபலிக்க முயன்றிருக்கிறேன். சில இடங்களில் சறுக்கியிருக்கக் கூடும் எனினும் அவையும் யானை பிழைத்த வேல்கள் என்றே நம்புகிறேன்.
ஏதோ ஒரு மூலையில் எங்கோ ஒரு ஊரில் என் கட்டுரையைப் படித்துவிட்டு, சந்திக்க நேர்ந்த அபூர்வதருணத்தில் அதைப் பற்றி ஞாபகமாகப் பேசுகிற, இன்னமும் பேச முடியாமல் இருக்கிற வாசகர்களின் அன்பை நம்பியே இத்தொகுதி வருகிறது, நன்றி.
சென்னை – 14
ஞாநி
1. மறுபடியும் (கலைஞர் பற்றி)
வெயில் சூட்டுக்கு போட்டியாகத் தேர்தல் சூடும் ஏற ஆரம்பித்துவிட்டது. இதுதான் நான் கருணாநிதியுடன் நடத்துகிற கடைசி அரசியல் யுத்தம்
என்று ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.
இதற்கு முன்பு கருணாநிதியுடன் ஜெயலலிதா இரண்டு முறை அரசியல் யுத்தம் நடத்தியிருக்கிறார். முதல் யுத்தம் 1989-ல். அப்போது எம்.ஜி.ஆர். வாரிசு யார் என்ற உப சண்டையும் இருந்ததால் ஜானகியோடும் மோத வேண்டியதாயிற்று. அந்தத் தேர்தல் யுத்ததில் கருணாநிதி ஜெயித்து விட்டார்.
அடுத்த யுத்தம் 1991-ல் நடந்த போது கருணாநிதிக்கு இரண்டு பேரோடு யுத்தம். ஒன்று ஜெயலலிதா, மற்றொன்று ராஜீவ்காந்தியின் ஆவி. இந்த முறை கருணாநிதி தோற்றுப்போனார். பகுத்தறிவு இயக்கத்துக்காரர் ஆவியோடு போட்டி போட்டு ஜெயிக்க முடியாதல்லவா!
பெரிய யுத்தங்களுக்கு நடுவே அவ்வப்போது சின்னச் சின்ன சண்டைகளும் உண்டு. மகாபாரதக் கதை என்று அ.தி.மு.க. வர்ணித்த சட்டசபைத் தலைவிரிகோலத் தகறாறு, சுப்ரமணியம் சுவாமி, சோ. ராமசாமி, சந்திரசேகர், ஆர். வெங்கட்ராமன் உதவியோடு கருணாநிதி அரசை ஜெயலலிதா டிஸ்மிஸ் ஆகச்செய்த வாலிவதம் போன்றவை.
இப்போது மறுபடியும் யுத்தகளம்.
இந்த ஐந்தாண்டுகளில் முதல் ஓராண்டுக் காலம் கலைஞர் கருணாநிதி வாய் திறக்கவே இல்லை. முக்கியமான காரணம் அப்போது ஒட்டு மொத்தமான சமூக மனநிலை தி.மு.க.வுக்கு எதிராக இருந்ததுதான். ‘விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தி.மு.க. செயல்பட்டதால்தான் ராஜீவ் கொலை சாத்தியமாயிற்று’ என்ற கருத்து பரவலாக நிலை பெற்றிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியப் பத்திரிகைகள். ஆதரவு கருணாநிதிக்கோ, தி.மு.க.வுக்கோ அப்போது