Azhagiya Pizhaigal
()
About this ebook
"பிழைகள் இல்லாத மனிதன் இல்லை" நம்முடைய வாழ்க்கையில் சிறு சிறு பிழைகள் செய்து அவற்றின் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் அறிவோடு தான் நம் பயணத்தை தொடங்குகிறோம். இந்த பிழைகளினால் கற்றுக்கொண்ட பாடங்கள் அனைத்தும் மிகவும் சுவாரஸ்யம் மிகுந்தது. அந்த சுவாரஸ்யத்தை சிறு சிறு பகுதிகளாக பிரித்து தொகுக்கப்பட்டதே இச்சிறுகதை தொகுப்பு.
சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்ட பிழைகளை கண்டறிந்து அவற்றை களையும் போது வாழ்வு சிறக்கும். இந்த பிழைகள் நமக்கு உணர்த்தும் பாடங்களை வாசிக்கலாம் இந்திரா சௌந்தர்ராஜனின் அழகிய நடையில்...
Read more from Indira Soundarajan
Rajathanthiran Rating: 5 out of 5 stars5/5Dhinam Oru Uyir! Rating: 5 out of 5 stars5/5Pei... Pisasu... Bootham Rating: 4 out of 5 stars4/5Sivaragasiyam Rating: 5 out of 5 stars5/5Asura Jathagam Rating: 5 out of 5 stars5/5Kannip Parunthu Rating: 5 out of 5 stars5/5Ezhavathu Jenmam Rating: 4 out of 5 stars4/5Nandhi Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Chidambara Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Mandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Aranmanai Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Thiruvannamalai Rating: 3 out of 5 stars3/5Kaatru… Kaatru... Uyir Rating: 3 out of 5 stars3/5Manam Oru Marmadesam Rating: 5 out of 5 stars5/5Yandhira Jaalam Rating: 5 out of 5 stars5/5Sivam Rating: 4 out of 5 stars4/5Thottathellam Pon Rating: 5 out of 5 stars5/5Kaatthiruntha Naagam Rating: 5 out of 5 stars5/5Aval Oru Savithri Rating: 5 out of 5 stars5/5Maayamaai Silar Rating: 5 out of 5 stars5/5Markazhi Roja Rating: 5 out of 5 stars5/5Sathiyai Santhippom! Rating: 5 out of 5 stars5/5Kannan Ennum Mannan! Rating: 5 out of 5 stars5/5Rudhra Veenai - Part 3 Rating: 4 out of 5 stars4/5Nooravathu Kadathal Rating: 5 out of 5 stars5/5Mandhira Valai Rating: 5 out of 5 stars5/5Neela Neela Oodi Vaa Rating: 5 out of 5 stars5/5Sithargal Raajyam Rating: 5 out of 5 stars5/5Oru April Puthisaali Rating: 5 out of 5 stars5/5Ennodu Vaa Rating: 5 out of 5 stars5/5
Related to Azhagiya Pizhaigal
Related ebooks
Thanga Thamarai Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Thoranangal Katti Rating: 0 out of 5 stars0 ratingsMathana Moga Rooba Sundara!! Rating: 0 out of 5 stars0 ratingsRajamadhangi Rating: 5 out of 5 stars5/5Mayavanam Rating: 5 out of 5 stars5/5Maane Maane Maane Kollathane Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Megam Rating: 0 out of 5 stars0 ratingsSorna Jaalam Rating: 5 out of 5 stars5/5Poruthathu Pothum Vivek Rating: 5 out of 5 stars5/5காகித இருதயங்கள் Rating: 0 out of 5 stars0 ratingsKaagitha Iruthayangal Rating: 5 out of 5 stars5/5Sattapadi Kutramillai! Rating: 0 out of 5 stars0 ratingsInba Athirchi Nilayam Rating: 5 out of 5 stars5/5Puthu Vasantham Thedi Varum Rating: 0 out of 5 stars0 ratingsMaayaman Rating: 0 out of 5 stars0 ratingsVaira Pommai Rating: 0 out of 5 stars0 ratingsTheepantham Edu! Theemaiyai Sudu Rating: 0 out of 5 stars0 ratingsVaira Bommai Rating: 0 out of 5 stars0 ratingsPanam Pagai Paasam Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Anandha Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Rating: 5 out of 5 stars5/5Veduk Veduk Vekulamba Rating: 0 out of 5 stars0 ratingsMaalaiyil Solkiren Vaa Rating: 0 out of 5 stars0 ratingsNeeye.. Neeye.. Kadhal Theeye.. Rating: 4 out of 5 stars4/5Koottirkkul Puhuntha Uyir Rating: 5 out of 5 stars5/5Dheetchanya Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Anuradha Ramananin Sirukathaigal Collection - 5 Rating: 5 out of 5 stars5/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Azhagiya Pizhaigal
0 ratings0 reviews
Book preview
Azhagiya Pizhaigal - Indira Soundarajan
https://www.pustaka.co.in
அழகிய பிழைகள்
Azhagiya Pizhaigal
Author:
இந்திரா சௌந்தர்ராஜன்
Indira Soundarajan
For more books
https://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. ராஜநடை
2. வைரத்தோடு
3. அரைக்கை சட்டை ஆபீஸர்!
4. டோலி டோலி டோலி
5. பாம்புகளாகும் தவளைகள்
6(1) காதல் நதி!
6(2) காதல் நதி
7. மன் மக்கள்
8. பறவைக்காரம்மா!
9. காத்திருந்த மேகங்கள்!
10. மானுடம்
11(1) ஆத்ம ரகசியம்
11(2) ஆத்ம ரகசியம்
12. அத்திவரதா அருளை நிதம் தா...
13. ஆபீசர் அம்மாச்சி
14. அழகிய பிழைகள்
15. யதார்த்தங்கள்
16. சடகோபனும் ஸ்ரீநகரும்
17. கடமையே தவம்
18. இப்படியும் மனிதர்கள்
19. அந்திமம்
20. ராமகிருஷ்ண மாமாவும்
21.நல்ல வேளை
1. ராஜநடை
விடிந்துவிட்டது!
கண்களை மலர்த்திய தாமோதரனுக்குள் அன்றைய நடைப்பயிற்சிக்கு செல்லத்தான் வேண்டுமா என்கிற கேள்வி எழும்பி நின்றது. நடைப்பயிற்சியில் அவருக்கு நாற்பது வருட அனுபவம்! ஷாட்ஸ் டீ ஷர்ட், கேன்வாஸ் என்கிற சரியான ஆயத்தங்களுடன் ஆறு மணிக்கு புறப்பட்டால் எட்டு மணிக்கு திரும்பி வருவார். ஒரு நிமிடம் கூட முன்பின் இராது.
மிகச் சரியாக எட்டு கிலோ மீட்டர் தூரம்!
வரும்போதே கீரை, தினசரி பேப்பர், காய்கறி என்றுதான் வருவார். இந்த இரண்டு மணி நேரத்தில் சில நண்பர்களின் சந்திப்பும் நாட்டு நடப்புகளும் கூட பேசப்படும்.
இவருக்கு எல்லா வகையிலும் நேர் எதிர் இவரது புத்ரசிகாமணியான கௌதம்! 26 வயதாகிறது... ஆனால் இப்போதே நாப்பது வயதை நெருங்கிவிட்டவன் போல் பொதபொதவென்று இருக்கிறான். ஒரே பிள்ளை! வற்றாத பாக்கெட்மணி அதன் காரணமாக எப்போதும் நொறுக்குத் தீனி! தெரு முக்கில் உள்ள பெட்டிக் கடைவரை போக நேரிட்டாலும் மோட்டார் பைக்தான். கால்கள் என்பது வீட்டுக்குள் நடமாடித் திரிய மட்டுமே பயன்படுவதால் சதைப் போட்டு பீமசேனனாகி ஆரம்பித்து விட்டான். தட்டுத் தடுமாறி டிகிரி முடித்து விட்டான்.
நடப்பில் இருப்பது பிளேஸ்மென்ட்டுகளின் காலம்.
அதற்கு 90க்கு மேல் மதிப்பெண்கள் வேண்டும்.
கௌதமுக்கு 60 மதிப்பெண்ணே நூறுக்கு சமம்.
அப்புறம் எங்கிருந்து வேலை கிடைக்கும்?
தாமோதரனுக்கும் அவனை என்ன செய்வதென்று தெரியவில்லை. வேலை வாய்ப்புகளும் மிக துக்கடாவாகவே கிடைக்கின்றன. சூப்பர் மார்க்கெட்டில் பில் கிளார்க், பெட்ரோல் பங்க்கில் ஆப்பரேட்டர், பிரபலமான பைனான்ஸ் கம்பெனியில் கலெக்ஷன் இன்சார்ஜ் இப்படி நிறைய வேலைகள் கிடைக்கப் பார்த்தன. சம்பளம் தொடக்கத்தில் ஏழாயிரமோ எட்டாயிரமோ... போகப்போக உயர்த்துவோம் என்றார்கள்.
கௌதமோடு படித்த பெண்கள் எல்லாம் ஐ.டி. கம்பெனியில் ஐம்பதாயிரத்துக்கு மேல் வாங்குவதால் இந்த வேலைகளையும் சம்பளத்தையும் கௌதமால் நினைக்கக்கூட முடியவில்லை. யாராவது லட்சரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு அழைத்தால் பார்க்கலாம் என்று சொல்லும் மனநிலையில்தான் இருக்கிறான். அப்படி எல்லாம் நடக்கப் போவதில்லை என்பதும் நிதர்சனம்.
இவனை எப்படி ஆளாக்குவது?
இதுதான் தாமோதரனின் இப்போதைய பிரதான கவலை. அன்று காலை கண்விழிக்கவும், அந்த கவலையும் விழித்துக் கொண்டது. ஆனால் கௌதம் குறட்டையில் இருந்தான். சன்னமாய் ஒற்றை இழையில் வயலின் கம்பியில் சப்தமெழுப்பினாற்போல் ஒரு வினோத சப்தம்!
அவனைப் பார்த்தபடியே எழுந்த தாமோதரன், அநிச்சையாய் கழிவுக் கர்மங்களைச் செய்து முடித்தார். பல் துலக்கச் சென்ற வேளையில் அங்கே அவனுக்கென்று தனியே பேஸ்ட்! கூடவே வாய் கொப்பளிக்க, கைகழுவிட என்று தனித்தனியே சானிடைசர்ஸ்! இதுபோக முகம் பார்க்கும் டிரெஸ்சிங் டேபிள்மேல் பலவித க்ரீம்கள், வாசனை ஸ்ப்ரேயர், ஒவ்வொன்றுமே யானை விலை, குதிரை விலை...!
இன்று இதற்காக எல்லாம் கடைகடையாக ஏறி இறங்கத் தேவையே இல்லை. கைபேசி இருந்தால் போதும் முதுகு கொள்ளாத சுமையோடு டூவீலரில் ஒருவன் வீடு தேடி வந்து கொடுத்துவிட்டுப் போய் விடுகிறான்.
சாப்பாடெல்லாம் கூட இப்படி வர ஆரம்பித்துவிட்டது. அடுத்த கட்டம் வீட்டுக்கே வந்து ஊட்டி விடுவது மட்டும்தான். வீதியில் இறங்கி நடக்கத் தொடங்கவும், மனம் நடப்புகளை எண்ணி கலங்கத் தொடங்கி விட்டது. தனக்கு வயதாகி வருவதற்காக வருந்துவதா? இல்லை நாட்டு நடப்புகளுக்காக வருந்துவதா? அதுவும் இல்லை இந்த குண்டுப்பிள்ளைக்காக வருந்துவதா?
கூடுதலாய் போகும் வழியெங்கும் எது எதற்கோ தோண்டிப் போட்டிருந்தார்கள். அது ஏனோ தோண்டத் தெரிந்தவனுக்கு மூட மட்டும் தெரிவதேயில்லை. அவர் வாழ்க்கையைப் போலவே சொல்ல முடியாத அளவு மேடு பள்ளங்கள் அந்த சாலையில்...! யாருக்குமே ஐய்யோ இப்படி இருக்கிறதே என்கிற கவலை இல்லை. தான் மட்டும் கவலைப்படுவதால் ஆகப் போவதென்ன? வழியில்தான் கவுன்சிலர் வீடு...! மாஜி கவுன்சிலர்... அவரிடம் சில சமயங்களில் சாலை இப்படி இருக்கிறதே என்று சொன்னதுண்டு. அது அப்படி இருக்கக் காரணமே அவர்தான் என்பது தாமோதரனுக்கு தெரியாததுதான் ஒரு பெரிய கொடுமை!
யாரோ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி பார்த்ததில் அந்தச் சாலை நான்கு முறை புதுப்பிக்கப்பட்ட தகவலை அது சொல்லிற்று. ஆனால் நிஜத்தில் அது எப்போதுமே பல்லாங்குழிச்சாலையாக, இலவச பிரசவ ஆஸ்பத்திரியாகத்தான் இருந்து வருகிறது.
நடைப்பயிற்சியில் இந்த கவலைகளை எல்லாம் தடுக்கவே முடிவதில்லை. வீட்டில் பிள்ளை வெளியே சூழலே! முன்பெல்லாம் கடவுள் நம்பிக்கை இருந்து கடவுளே இப்படி இருக்கிறதே என்று மனம் அவரிடமாவது முறையிடும். இப்போது அந்த நம்பிக்கையும் போய்விட்டது.
ஒரு புறம்போக்கில் ஒரு துக்கிரி திரிசூலம் ஒன்றை நட்டு மெல்ல அதை கோவிலாக்கி கட்டிடமும் எழுப்பி அப்படியே டேரா போட்டு தர அந்த அம்மனுக்கு ‘ஆபத்து காத்த அம்மன்’ என்கிற பெயரையும் வைத்துவிட்டான். இப்போதெல்லாம் புதிதாக டூவீலர் யார் வாங்கினாலும் ஆபத்து காத்த அம்மனிடம்தான் முதல் பூஜை? அம்மனை உத்தேசித்து பூக்கடை, பழக்கடை என்று கடைகண்ணிகளும் முளைத்து, வாழத் தெரிந்தவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்தக் கோவிலைத் தாண்டி நடக்கும் போதெல்லாம் தாமோதரன் மனம் குமுறும். நல்லவேளை இப்படி எல்லாம் குறுக்கில் பிழைக்க கௌதம் ஆசைப்படவில்லை.
அது மட்டும் தான் ஒரே ஆறுதல்! வழக்கம் போல சாலையோரம் கடைவிரித்திருந்த மங்கம்மா கிழவியிடம் கீரை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய போது ஒரு ஆச்சரியம் காத்துக் கொண்டிருந்தது. கௌதம்கூட எழுந்திருந்து தலையெல்லாம் வாரிக்கொண்டு முகத்தில் திருநீறு துலங்க காட்சி தந்தான். அவனுக்கும், தாமோதரன் மனைவி சகுந்தலாவுக்கும் எதிரில் ஒரு மிடுக்கான மனிதர்.
வெளியே அவர் வந்திருந்த படகு கார்!
தாமோதரன் உள் நுழையவும் அவர் கைகூப்பி வணங்கினார். நீங்க?
என்பேர் முத்துவடுகன். சிட்டில நாலு பெட்ரோல்பங்க் வெச்சிருக்கேன். இதுபோக ஒரு ஷாப்பிங்மாலும் எனக்கு சொந்தம்.
நல்லது... என்ன பாக்க வந்தது எதுக்குன்னு...?
என தாமோதரன் கேட்க, அவரோ கௌதமைப் பார்த்தார். பதிலை கௌதம் சொல்ல ஆரம்பித்தான்.
அப்பா... ஒரு நாள் சார் கார் பிரேக்டவுனாகி அவுட்டர் டவுன்ல டென்ஷனோட நின்னுக்கிட்டிருந்தார். நான் ஃப்ரெண்டு வீட்டுக்குப் போய்ட்டு வந்துக்கிட்டிருந்தேன். ரொம்ப அவசரம் கோர்ட்டுக்குப் போகணும் ஹெல்ப் பண்ண முடியுமான்னு கேட்டார். என் பைக்லயே கொண்டு போய்விட்டேன். அப்படியே மெக்கானிக்க பிடிச்சி கூட்டிக்கிட்டு போய் காரையும் ரிப்பேர் பண்ணி கோர்ட்டுக்கு எடுத்துட்டு வந்து சார்கிட்ட ஒப்படைச்சேன். அப்படித்தான் பழக்கமானார்!
அதுக்குப் பிறகு நான் என் விசிட்டிங் கார்டைக் கொடுத்து என்னை வந்து பார்க்கச் சொன்னேன். கௌதமும் வந்து பார்த்தார். வேலை தேடிக்கிட்டிருக்கறது தெரிஞ்சது. இதெல்லாம் நடந்து ஒரு அஞ்சாறு மாசம் இருக்கும்...
அவரும், அவனும் மாறிமாறிப் பேசினர். கௌதம் ஒரு உதவி செய்யப்போக ஒரு பணக்கார சிநேகம் கிடைத்திருப்பதை தாமோதரனால் புரிந்து கொள்ள முடிந்தது.
இந்த சிநேகம் இப்போது எதற்கு தனக்குத் தெரியவர வேண்டும்? அதற்கான பதிலை தாமோதரன் மனைவி சகுந்தலா சொல்ல விரும்பி, அவரைத் தனியே அழைத்துச் சென்றாள்.
இவருக்கு ஒரே ஒரு பொண்ணுங்களாம்! கல்யாணமாகி டைவர்சும் ஆயிடிச்சாம். அந்த டைவர்ஸ் மாப்ளை ஒரு குடிகாரனாம். அதான் வெட்டிவிட்டுட்டாராம். இப்ப நம்ம கௌதமுக்கு தன் பெண்ணை கொடுக்க விரும்பறாரு. எதுக்கு வெளிய வேலை தேடிக்கிட்டு.... என் பெட்ரோல் பங்குகளை பாத்துக்கிட்டு சந்தோஷமா உள்ளூர்லயே இருக்கலாமேங்கறாரு...
சகுந்தலா சொல்லும்போதே முகப்பிரகாசங்களோடு தான் சொன்னாள். அதுவே அவளுக்கு அதில் சம்மதம் என்று சொல்லிவிட்டது. ஆனால் தாமோதரனுக்கு மட்டும் பகீர் என்றது. அந்த மனிதர் ஒரு உறவையே விலைக்கு வாங்க ஆசைப்படுவது பளிச்சென்று புரிந்தும் விட்டது.
என்னங்க யோசிக்கிறீங்க?
ஏன் சகுந்தலா... யோசிக்க எதுவுமே இல்லைங்கறது உன் நினைப்பா?
இல்ல, வேலை, பொண்ணு இரண்டும் ஒண்ணா வருது.
அந்த மனுஷன் வீட்டோட மாப்ளையா இருக்கச் சொல்றாண்டி.
இங்க வீட்டோட தெண்டச் சோறால்லா இருக்கான்?
அது சரிதான்... இதுக்கு அவன் கூட சம்மதிக்கலாம். நீயும் நானும் சம்மதிக்கலாமா?
நம்ம பையன் நல்லா இருக்கணும்னா சம்மதிக்கறதுல தப்பு இல்லைங்க....
இவன் அங்க போய் நல்லா இருப்பான்னு நம்பறியா?
நம்புவோம்... இப்படியே அவன் இருந்தாத்தான் அது நல்லா இருக்குமா?
இல்ல சகுந்தலா... இதெல்லாம் சரியா வராது.
என்னங்க நீங்க... வீடு தேடி ஒரு நல்ல விஷயம் வந்திருக்குது. நீங்க இப்படிச் சொல்றீங்க?
இவன் இங்கையே இப்படி இருக்கான். அங்க போய் முதலாளிங்கற திமிரோட இன்னும் மோசமா நடந்துக்குவான். அந்த ஆள் இவனை நல்ல வண்டி மாடுன்னு நினைக்கறாரு. நமக்குல்ல தெரியும் இது ஒரு சண்டி மாடுன்னு...
ஏன் எதிர்ப்பதமாவே நினைக்கறீங்க. அந்தப் பொண்ணு ஒரு டைவர்ஸ் கேஸ்னு சொன்னது உங்களுக்குப் பிடிக்கலியா?
அது ஒண்ணுதாண்டி எனக்கு இதுல பிடிச்ச விஷயமே... மற்ற எதுவுமே சரியில்லை. அது ஏற்கனவே ஒருத்தன்கிட்ட ஏமாந்துடிச்சி... இரண்டாவதா இந்த சோம்பேறிகிட்ட வேற ஏமாறணுமா அது?
நீங்க இப்ப சம்மதிக்காட்டி எதுவும் நின்னுடப் போறதில்லீங்க...
புரியுது... நாம சம்மதிச்சாலும் சம்மதிக்காட்டியும் அவங்க முடிவு செய்துட்டாங்க. அப்படிதானே?
அப்படியேதான்... நமக்கு என்னங்க பெருசா பலம் இருக்கு? உங்க பென்ஷன் தான் நமக்கான சோறு... அதுவும் கொஞ்ச காலத்துக்கு... அந்திமத்துல எப்போவேணா எமன் வருவான்கற நிலைல இருக்கோம்?
சகுந்தலாவோடு பேசியதில் ஒரு சன்னமான ஞானோதயம் ஏற்பட்டு அந்த திருமணத்திற்கு சம்மதித்தார் தாமோதரன்!
எதையும் வாங்கவேண்டும் விற்கக் கூடாது என்கிற கொள்கை கொண்டவர். பெற்ற பிள்ளையையே விற்று விட்டார்!
ஊஹும்... விற்க வைக்கப்பட்டார்!
ஆறு மாதங்கள் கழிந்த நிலையில்... நடைப்பயிற்சியின் போது மங்கம்மா கிழவியிடம் கீரை வாங்காமல் போனவரை கிழவி தடுத்துக் கேட்டாள்.
என்ன சாமி கீரை வாங்காம போறே?
சமைக்க ஆள் இருந்தாத்தானே வாங்கணும்?
ஏன் சாமி... அம்மா ஊர்ல இல்லையா?
என்கூட இல்ல... அவ்வளவு தான்!
என்ன சாமி சொல்றே?
மருமக முழுகாம இருக்கா... அவளைப் பாத்துக்கப் போயிருக்கா
இது என்ன கொடுமை... அதுல்ல தாய் ஊட்டுக்குப் போகும்?
அதுக்குத் தாய் இல்ல... அதான் இவ அவ வீட்டுக்கே போய்ட்டா...
நீயும்கூட போய் சந்தோசமா இருக்க வேண்டியதுதானே?
வீட்டோட மாப்ளைன்னு கேள்விப்பட்ருக்கோம். ஆனா வீட்டோட சம்பந்தின்னு கேள்விப்பட்டதில்லையே...? அப்படி ஒரு புது பந்தத்தை உருவாக்கவும் நான் விரும்பல...
சோகமான புன்னகையோடு அவர் சொல்லியபடி நடந்தார். ஆனால், அவர் நடைதான் கிழவிக்கு ராஜ நடையாகத் தோன்றியது!
2. வைரத்தோடு
பொழுது விடிந்துவிட்டது! ஆனால் எழுந்திருக்கத் தோன்றவில்லை ராமநாதனுக்கு. அவன் மனைவி விசாலமும் அவன் எழுந்திருக்காததைப் பற்றிக் கவலைப்படவில்லை. மதியம்வரை கூட அவன் தூங்குவது நல்லது என்றே கருதினாள்!
எழுந்தால் காபி கேட்பான்... குடித்துக்கொண்டே போய் டி.வி. முன்னால் உட்கார்ந்து விடுவான். சப்தமாய் டி.வி. பார்ப்பதும் கேட்பதும்தான் அவன் வழக்கம். எவ்வளவு முகம் சுளித்தாலும் சவுண்டைக் குறைக்கமாட்டான்.
காபிக்குப் பிறகு டிபன். அதற்குப் பிறகு இடுப்பில் துண்டோடு குளிக்கப் போகிறேன் என்று ஒரு அரைமணியாவது வீடு முழுக்க நடப்பான். அப்படி இப்படி என்று மதியம் வந்துவிடும். அப்புறமென்ன? வக்கனையாக சாம்பார், ரசம் என்று ஒரு கட்டு... திரும்ப டி.வி.! டி.வி. பார்த்தபடியே தூங்கிப் போவதும், அப்போது விசாலம் வந்து டி.வி.யை அணைப்பதும் அந்த வீடு வரையில் இப்போது அது ஒரு அன்றாடம்! இந்த டி.வி. இல்லை என்றாலோ அது இன்னும் மோசம்.
நேற்று பவர் ஷட்டவுன்! காலை 9 மணிக்குப் போன கரண்ட் மாலை 6 மணிக்குத்தான் வந்தது. இன்வெர்ட்டர் ரிப்பேர்! எனவே ஒரு விசிறி எடுத்து விசிறிக்கொண்டு ராமநாதன் பட்டபாடும் அதனால் விசாலம் பட்டபாடும் மிகவே ருசிகரம்!
இன்னிக்கு என்ன சமையல்?
என்று ஆரம்பித்த பேச்சு... இனிமே நான் உன்கூட பேசினா நான் என் அப்பனுக்கே பொறக்கலன்னு அர்த்தம்...
என்கிற வீரசபதத்தில் வந்து முடிந்திருந்தது.
இன்னிக்கு என்ன சமையல்?
என்கிற வழக்கமான கேள்விக்கு விசாலம் அதற்கான பட்டியலைப் போட்டிருந்தால் சிக்கல் வந்திருக்காது. எதுவா இருந்தா என்ன... நீங்க என்ன ஒத்தாசையா கறிகாய் நறுக்கித் தரப்போறிங்களா... இல்லை பாத்திரம்தான் தேச்சு தரப்போறீங்களா? எல்லாம் பண்ணி முடிச்சிட்டு கூப்பிடறேன். வந்து தின்னுட்டுப் போங்க!
என்றால் எந்த ஆண்பிள்ளைக்குத்தான் கோபம் வராது?
நீ பண்றதே இந்த ஒரு வேலைதான்... இதுல உனக்கு ஒத்தாசை வேணுமோ ஒத்தாசை...
என்று ஆரம்பமானது சண்டை. அதுதான் அப்படிச் சொல்ல வைத்து, அவனும் அவள் முகம் கூட பார்க்காமல், எழுந்து என்ன செய்யப் போகிறோம் என்று படுக்கைப் புழுவாகி சுருண்டு விட்டான்.
விசாலத்துக்கும் அவன் அப்படி கிடப்பது நல்லதாகத்தான் தோன்றியது. கடந்த ஒரு மாதமாகவே இதுதான் நிலை! எல்லாம் கொரோனா என்கிற முள்ளுருண்டைக் கிருமியால் வந்த வினை!
ராமநாதனுக்கு ஒரு பிரபல நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை. டை கட்டிக் கொண்டு மெஜஸ்டிக்காக கஸ்டமர்களைச் சந்தித்து ஆங்கிலமும் தமிழுமாய் அளந்து கொட்டி, தங்கள் ப்ராடக்டை எப்படியாவது தலையில் கட்டுவதுதான் அவனது அன்றாடம்.
கொரோனாவால் நிறுவனமே இழுத்து மூடிக்கொண்டு விட, ராமநாதனுக்கும் தூங்குவதும் டி.வி. பார்ப்பதும் வாழ்க்கை என்றாகிவிட்டது. சமையல் முடிந்துவிட்டது! கீரைக் கடைந்து பருப்பு ரசம் வைத்து, வடாம் பொரித்தாகி விட்டது. காய்களில்லை! அதை வாங்கி வருவதற்காக இருதினம் முன்பு ராமநாதன் போனபோது எல்லாமே விற்றுத் தீர்ந்து விட்டது. மளிகைக்கடை லட்சுமண சாமி வரையில் கொரோனா அவர் குலதெய்வத்துக்கும் மேலாகி விட்டது. எப்போதும் ஈ ஓட்டிக் கொண்டிருப்பார். இப்போது எப்பொழுதும் ஒரு பத்து பேர் வரிசை கட்டி நிற்கின்றனர். விற்காமல் கிடந்த அவ்வளவு பழைய சரக்கும் விற்றாகிவிட்டது. புது வரவுக்கும் அவர் சொல்வதுதான் விலை.
‘கொரோனா கொரோனா... நீ தித்திக்கின்ற தேனா!’ என்று ரஜினி ஸ்டைலில் முணுமுணுத்தபடி தான் வியாபாரம் நடக்கிறது. ராமநாதன் ஒரு பிரட் பாக்கெட் வாங்க முயல... 25 ரூபாய் பாக்கெட்டை 40 ரூபாய் என்றிட தகராறாகிவிட்டது. அதனால் நொறுக்குத்தீனியும் அவ்வளவாய் இல்லை. விசாலம் இருப்பதை வைத்து ஒப்பேற்றி விட்டாள்!
நாளைய பொழுதை நினைத்தபோது தான் சற்று மருகலாக இருந்தது. மகள் ரமாவுக்கு நாளைதான்