Penn Deivam
By P.M. Kannan
()
About this ebook
சொந்தக் கற்பனையைக் கொண்டு ஒரு நாவல் எழுத வேண்டும் என்கிற ஆசைதான் இந்த நாவலுக்கு அஸ்திவாரம். இந்த அஸ்திவாரத்தின் மீது எழுப்பப்பட்டுள்ள கட்டிடம் எப்படியிருக்கிறது என்று நிர்ணயிக்க வேண்டிய வேலை என்னுடையதல்ல. கட்டிடத்தின் உள்ளே நுழைந்து பார்ப்பவர்களுடைய காரியம் அது.
விக்கிரமாதித்தனின் வேதாளம், கானன் டாயிலின் 'ஷெர்லாக் ஹோம்ஸ்', அல்லாவுத்தீனின் அற்புத தீபம், அலி பாபாவின் 'ஸெஸேமி' மந்திரம், ராபின் ஹுட்டின் தீரச் செயல்கள், பிராங்கன்ஸ்டீனின் பைசாசரூபம் இப்படிப்பட்ட அபூர்வங்களில் எதையாவது காண முடியும் என்கிற நம்பிக்கையுடன் இந்தக் கட்டிடத்துக்குள்ளே நுழைபவர் கட்டாயம் ஏமாற்றமே அடைவர். ஏனெனில் அப்பேர்ப்பட்ட அபூர்வங்களுக்கே இதில் இடம் இல்லை.
இந்தக் கட்டிடத்தில் வசிப்பவர் எல்லோருமே சாதாரண மனிதர்கள் தாம். தினசரி வாழ்க்கையில் நம் கண்ணெதிரே காணப்படும் பலதிறப்பட்ட மனிதர்களில் சிலரே இந்தக் கட்டிடத்தில் வசிக்கிறார்கள். அவர்களுடைய ஆசைகள், கனவுகள், மன நிகழ்ச்சிகள், இன்பங்கள், துன்பங்கள், லக்ஷ்யங்கள் - இவை யாவுமே இக்கட்டிடத்துக்குப் பலவிதமான வர்ணப் பூச்சுக்களாக விளங்குகின்றன. அவர்களது வாழ்க்கைதான் கட்டிடத்துக்குக் களை உண்டாக்குகிறது.
இதிலுள்ள ஆண்களைப்பற்றி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. பெண்களைப்பற்றி மாத்திரம் ஒரு வார்த்தை. ஏனெனில் இதற்குப் ‘பெண் தெய்வம்' என்று பெயரிட்டிருக்கிறேன் அல்லவா? அதனால் தான்.
கட்டிடத்தில் உள்ள பெண்களில் முக்கியமானவர்கள் விசாலாக்ஷி, லலிதா, ஜனகம், குண்டலப்பாட்டி, யமுனாபாய் இவர்களே. இவர்களில் ஒவ்வொருவரைச் சுற்றிலும் ஒரு தனி உலகமே சுழலுகிறது. இவர்களில் ஒருவரையும் கட்டிடத்தை விட்டு அகற்ற முடியாது. ஒருவரை விலக்கினாலும் கட்டிடத்தின் ஒரு பாகம் இருளடைந்து போகும். கட்டிடமும் நாவலாக அமையாது. எனவே, இவர்களில் ஒருவருக்கு மட்டும் விசேஷச் சலுகை காட்டுவதுபோல் அவரது பெயரை மகுடமாக இடுவது உசிதமல்ல என்று தோன்றியது. இதன் பயனாகத்தான் இந்த நாவலுக்குப் 'பெண் தெய்வம்' என்று நாமகரணம் செய்தேன்.
இந்தப் பெயர் அர்த்தபுஷ்டியுள்ளது. கட்டிடத்தில் நுழைந்து பார்ப்பவர்கள் தங்கள் மனப்போக்குப் பிரகாரம் இந்தப் பெயரைச் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற அர்த்தத்தில், இவர்களில் யாருக்கு வேண்டுமாயினும் சூட்டி ஆனந்தப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் இங்கே 'பெண் தெய்வம்' ஒருவரைத்தான் குறிப்பிடுகிறது. அவர் யார் என்பது உள்ளே நுழைந்து பார்ப்பவர் தாமாகக் கண்டு கொள்ளவேண்டிய விஷயம்.
கட்டிடம் கட்டி முடித்து இரண்டரை வருஷங்களுக்கு மேல் ஆயிற்று. அஸ்திவாரக்கல் நாட்டியதிலிருந்து கட்டிடம் முடிவதற்குச் சுமார் ஏழு மாசகாலம் ஆயிற்று.
பி. எம். கண்ணன்.
Read more from P.M. Kannan
Nagavalli Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Madhuvum Rating: 0 out of 5 stars0 ratingsPavazha Maalai Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakkavillai Rating: 0 out of 5 stars0 ratingsAnnai Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsMannum Mangaiyum Rating: 0 out of 5 stars0 ratingsInba Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsPennukku Oru Neethi Rating: 0 out of 5 stars0 ratingsNilave Nee Sol Rating: 0 out of 5 stars0 ratingsThevaanai Rating: 0 out of 5 stars0 ratingsInba Puthaiyal Rating: 0 out of 5 stars0 ratingsKannigathaanam Rating: 0 out of 5 stars0 ratingsMalar Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsVazhvin Oli Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to Penn Deivam
Related ebooks
Vaarisu Rating: 0 out of 5 stars0 ratingsUnakkey Uyiranen! Rating: 0 out of 5 stars0 ratingsPinangalin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsRamar Paatham Rating: 0 out of 5 stars0 ratingsNandu Rating: 0 out of 5 stars0 ratingsRangoon Periyappa Rating: 0 out of 5 stars0 ratingsKamadenuvin Mutham Rating: 0 out of 5 stars0 ratingsMeendu(m) Varuven Rating: 0 out of 5 stars0 ratingsOru Srirangathu Devathai Rating: 4 out of 5 stars4/5Kanavu Sumanthu Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsAdhu Mattum Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsLakshmi Kadatcham Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Kandean Drohi Rating: 0 out of 5 stars0 ratingsCycle Rating: 0 out of 5 stars0 ratingsSutri Sutri Varuvean Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Paravai Rating: 0 out of 5 stars0 ratingsUyiraith Thirudathey Rating: 5 out of 5 stars5/5Natchathira Iravu Rating: 0 out of 5 stars0 ratingsSaathi Malli Poocharame... Rating: 0 out of 5 stars0 ratingsPenn Manam Rating: 0 out of 5 stars0 ratingsArabu Desathil Thagappan Samy Rating: 0 out of 5 stars0 ratingsVelli Nilavey... Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Rating: 5 out of 5 stars5/5அது ஒரு நிலாக்காலம்! Rating: 0 out of 5 stars0 ratingsThaayar Sannathi Rating: 0 out of 5 stars0 ratingsKannellam Unnodudhaan Rating: 2 out of 5 stars2/5Irulai Virattu Rating: 0 out of 5 stars0 ratingsBrindhavanamum Premakumaranum Rating: 5 out of 5 stars5/5Oru Mul Oru Malar Rating: 1 out of 5 stars1/5Antha Onbathu Per Rating: 5 out of 5 stars5/5
Reviews for Penn Deivam
0 ratings0 reviews
Book preview
Penn Deivam - P.M. Kannan
http://www.pustaka.co.in
பெண் தெய்வம்
Penn Deivam
Author:
பி.எம். கண்ணன்
P.M. Kannan
For more books
http://www.pustaka.co.in/home/author/pm-kannan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. சோனிப் பூனை
2. தந்தியும் திகிலும்
3. இரண்டு கடிதங்கள்
4. பழைய போட்டோ
5. யமுனா பாய்
6. பூலோக நாகம்
7. இரகசியம்
8. ஆறுதல் எங்கே?
9. தாயக் கட்டம்
10. லலிதாவின் சிந்தனை
11. பிரளயம்
12. பரீக்ஷை முடிவு
13. அன்புள்ள அண்ணா
14. சேதுரத்தினம் ஐயர்
15. குண்டலப்பாட்டியின் கோபம்
16. கல்யாணப் பேச்சு
17. பகிரங்கம்
18. அன்பின் கனிவு
19. ஊர் வாய்
20. கலவரம்
21. சோதனை நாள்
22. பெண் தெய்வம்
23. சஞ்சலம்
24. ஜனகத்தின் கனவு
25. சித்தப் பிரமை
26. மணியோசை!
27. விசாரம்
28. கல்யாணக் கவலை
29. மலைப் பிரதக்ஷிணம்
30. ராஜாராம்
31. இடமாற்றம்
32. ‘சேதி வந்தது!’
33. மாமாவின் ஆசை
34. கல்யாணக் கடிதம்
35. பர்த்தாவின் ஆக்ஞை
36. இரண்டு ஜீவன்கள்
37. யார் அந்த ஸ்திரீ?
38. நிரபராதி
39. லலிதாவின் கவலை
40. பிராப்தம்
41. சாந்தி
42. ராஜாராம் செய்த காரியம்
43. வெற்றி
இந்த நாவல்
சொந்தக் கற்பனையைக் கொண்டு ஒரு நாவல் எழுத வேண்டும் என்கிற ஆசைதான் இந்த நாவலுக்கு அஸ்திவாரம். இந்த அஸ்திவாரத்தின் மீது எழுப்பப்பட்டுள்ள கட்டிடம் எப்படியிருக்கிறது என்று நிர்ணயிக்க வேண்டிய வேலை என்னுடையதல்ல. கட்டிடத்தின் உள்ளே நுழைந்து பார்ப்பவர்களுடைய காரியம் அது.
விக்கிரமாதித்தனின் வேதாளம், கானன் டாயிலின் 'ஷெர்லாக் ஹோம்ஸ்', அல்லாவுத்தீனின் அற்புத தீபம், அலி பாபாவின் 'ஸெஸேமி' மந்திரம், ராபின் ஹுட்டின் தீரச் செயல்கள், பிராங்கன்ஸ்டீனின் பைசாசரூபம் இப்படிப்பட்ட அபூர்வங்களில் எதையாவது காண முடியும் என்கிற நம்பிக்கையுடன் இந்தக் கட்டிடத்துக்குள்ளே நுழைபவர் கட்டாயம் ஏமாற்றமே அடைவர். ஏனெனில் அப்பேர்ப்பட்ட அபூர்வங்களுக்கே இதில் இடம் இல்லை.
இந்தக் கட்டிடத்தில் வசிப்பவர் எல்லோருமே சாதாரண மனிதர்கள் தாம். தினசரி வாழ்க்கையில் நம் கண்ணெதிரே காணப்படும் பலதிறப்பட்ட மனிதர்களில் சிலரே இந்தக் கட்டிடத்தில் வசிக்கிறார்கள். அவர்களுடைய ஆசைகள், கனவுகள், மன நிகழ்ச்சிகள், இன்பங்கள், துன்பங்கள், லக்ஷ்யங்கள் - இவை யாவுமே இக்கட்டிடத்துக்குப் பலவிதமான வர்ணப் பூச்சுக்களாக விளங்குகின்றன. அவர்களது வாழ்க்கைதான் கட்டிடத்துக்குக் களை உண்டாக்குகிறது.
இதிலுள்ள ஆண்களைப்பற்றி நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. பெண்களைப்பற்றி மாத்திரம் ஒரு வார்த்தை. ஏனெனில் இதற்குப் ‘பெண் தெய்வம்' என்று பெயரிட்டிருக்கிறேன் அல்லவா? அதனால் தான்.
கட்டிடத்தில் உள்ள பெண்களில் முக்கியமானவர்கள் விசாலாக்ஷி, லலிதா, ஜனகம், குண்டலப்பாட்டி, யமுனாபாய் இவர்களே. இவர்களில் ஒவ்வொருவரைச் சுற்றிலும் ஒரு தனி உலகமே சுழலுகிறது. இவர்களில் ஒருவரையும் கட்டிடத்தை விட்டு அகற்ற முடியாது. ஒருவரை விலக்கினாலும் கட்டிடத்தின் ஒரு பாகம் இருளடைந்து போகும். கட்டிடமும் நாவலாக அமையாது. எனவே, இவர்களில் ஒருவருக்கு மட்டும் விசேஷச் சலுகை காட்டுவதுபோல் அவரது பெயரை மகுடமாக இடுவது உசிதமல்ல என்று தோன்றியது. இதன் பயனாகத்தான் இந்த நாவலுக்குப் 'பெண் தெய்வம்' என்று நாமகரணம் செய்தேன்.
இந்தப் பெயர் அர்த்தபுஷ்டியுள்ளது. கட்டிடத்தில் நுழைந்து பார்ப்பவர்கள் தங்கள் மனப்போக்குப் பிரகாரம் இந்தப் பெயரைச் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற அர்த்தத்தில், இவர்களில் யாருக்கு வேண்டுமாயினும் சூட்டி ஆனந்தப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் என்னைப் பொறுத்தமட்டில் இங்கே 'பெண் தெய்வம்' ஒருவரைத்தான் குறிப்பிடுகிறது. அவர் யார் என்பது உள்ளே நுழைந்து பார்ப்பவர் தாமாகக் கண்டு கொள்ளவேண்டிய விஷயம்.
கட்டிடம் கட்டி முடித்து இரண்டரை வருஷங்களுக்கு மேல் ஆயிற்று. அஸ்திவாரக்கல் நாட்டியதிலிருந்து கட்டிடம் முடிவதற்குச் சுமார் ஏழு மாசகாலம் ஆயிற்று.
பி. எம். கண்ணன்.
தியாகராயநகர்
21-11- 43.
*****
1. சோனிப் பூனை
சந்திரன் ரேழித் திண்ணையில் படுத்துக்கொண்டிருந்தான். சாதாரணமாகப் பிரதிதினமும் அவன் மத்தியான்னச் சாப்பாட்டுக்குப் பின் ரேழித் திண்ணையில் போய்ப் படுத்துக் கொண்டானானால் சரியாக மாலை மூன்று அல்லது நாலு மணி வரைக்கும் தூங்கி விட்டுத்தான் எழுந்திருப்பான். இவ்விதம் சுமார் ஒரு வார காலம் மிக எளிதாகக் கழிந்து போயிற்று. ஆனால் அன்றைத் தினம் எவ்வளவு முயன்ற போதிலும், அவனுக்குத் தூக்கம் என்பதே வரவில்லை. முதல் நாள் மாலையில் குளத்தங்கரைக்கு அடுத்தாற்போல் உள்ள மைதானத்தில் நடந்த சம்பவம் அவன் மனத்தில் இடைவிடாமல் தோன்றி அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
என்ன தான் இருந்தாலும் ஒரு பெண் தன்னை அப்படிக் கேலி செய்வது போலக் கொக்கரித்துச் சிரிப்பதா? அதுவும், யாருக்காக அவன் தன் உயிரைக் கூட அளிக்கத் தயாராயிருந்தானோ, அவளா அப்படிச் செய்வது? அதுவும் அந்த மக்குப் பயல் ராஜாராம் முன்னிலையிலா?
சந்திரன் கிரிக்கட் புலியல்ல. ராஜாராமைப் போல அவனுக்குக் கிரிக்கட் ஆடத் தெரியாது. கிரிக்கட் மட்டையைக் கூட எப்படிப் பிடிப்பது என்று அவன் அறியான். ஆனால் படிப்பில் சந்திரன் புலி தான். இண்டர்மீடியட் பரீக்ஷையில் நிச்சயம் முதல் வகுப்புக் கிடைக்கும் என்று அவன் பந்தயம் கட்டுவான். ஆனால் ராஜாராம், பரீக்ஷையில் தேறிவிடுவேன்
என்றாவது தைரியமாகச் சொல்லுவானா?
இருவரும் பரீக்ஷை முடிந்து கிராமத்துக்கு வரும் போது கிராமத்தில் பொழுது போக்குக்காகக் கிரிக்கட் பந்து, மட்டை முதலியவற்றை ராஜாராம் கையோடு கொண்டு வந்திருந்தான். கிராமத்தில் அவனுக்கு இணையாக யார் கிரிக்கட் ஆட வருவார்கள்? கிரிக்கட் ஆடும்படியான அத்தனை நாகரிகம் கிராமத்தில் இன்னும் ஏற்படவில்லை. அங்கிருப்பவர்களில் அநேகம் பேர் கிரிக்கட் ஆட்டத்தைப் பார்த்துக் கூட இருக்கமாட்டார்கள். எனவே ராஜாராமுக்கு ஜோடியாகச் சந்திரனைத் தவிர வேறு யாரும் இல்லை. சந்திரனுக்குக் கிரிக்கட்டில் ஸ்வாரஸ்யம் இல்லை. அவன் சின்ன வயசில் கிட்டிப்புள் கூட ஆடினது இல்லை. இருப்பினும் கிராமத்தில் பொழுது போக வேண்டுமல்லவா? அதற்காகத்தான் அவன் ஆட முன் வந்தான்.
ஆட்டம் ஆரம்பமான முதல் நாளே அவனுக்கு அந்த அவமானம் ஏற்பட்டது. குளத்தங்கரைக்கு அடுத்தாற் போலுள்ள மைதானத்தில் கிரிக்கட் ஆடவேண்டிய முக்கியமான வசதிகளைச் செய்து கொண்டு இருவரும் ஆட்டத்தை ஆரம்பித்தனர். முதலில் ராஜாராம் மட்டையை எடுத்துக்கொண்டு சந்திரன் எறியும் பந்தை வெளு வெளுவென்று விளாசித் தீர்த்தான். சந்திரனுக்கு ஒவ்வொரு தரமும் நெடுந்தூரம் போய் விழும் பந்தை ஓடிப்போய் எடுத்து வருவதற்கே மேல் மூச்சு வாங்கத் தொடங்கிற்று. அதனால் அவனுக்கு ஆட்டத்திலும் உற்சாகமற்றுப் போயிற்று. இதைக் கண்டு கொண்ட ராஜாராம் அவனிடம் மட்டையைக் கொடுத்துவிட்டுத் தானே 'போல்' பண்ண முன் வந்தான்.
ராஜாராம் 'டூர்னமெண்டு' விளையாட்டுக்காரன். சந்திரனோ கற்றுக் குட்டிக்கும் கீழ் ஸ்தானத்தில் இருப்பவன்.
ராஜாராம் ஆரம்பத்தில் மெதுவாகப் பந்தைப் 'போல்' பண்ணினான். அதிருஷ்டவசமாக அது சந்திரனுடைய மட்டையில் தானாகவே மோதி வெளியேறி வேகமாகச் சென்றது. சந்திரனுக்குக் குஷி கிளம்பி விட்டது. 'பூ! இவ்வளவு தானா கிரிக்கட்?' என்று கூட நினைத்துக்கொண்டானோ என்னவோ? ராஜாராம் அடுத்த பந்தைச் சற்று வேகமாகக் கால் பக்கமாகப் போட்டான். அதைத் தாக்க உற்சாகத்துடன் முன்னேறி வந்தபோது அந்தப் பந்து சந்திரன் முழங்காலில் அதிக ஆக்ரோஷத்துடன் முத்திரை வைத்துவிட்டது. 'அப்பாடா' என்று காலைப் பிடித்துக்கொண்டு விழுந்தான் சந்திரன். உடனே பின்னால் கலகலவென்று உரக்கச் சிரிக்கும் சப்தம் கேட்டது. மெல்ல எழுந்திருந்து திரும்பிப் பார்க்கும் போது லலிதா இடுப்பில் குடத்தைத் தாங்கியவாறே இன்னும் சில பெண்களுடன் குலுங்கக் குலுங்கச் சிரித்துக்கொண்டு நிற்பதைக் கண்டான் அவன். அவர்கள் சிரித்தது கண்டு ராஜாராமும் சிரித்துவிட்டான். இதனால் தனக்குப் பெரிய மானபங்கம் ஏற்பட்டதுபோல எண்ணி விட்டான் சந்திரன். சட்டென்று கையிலிருந்த மட்டையைக் கீழே எறிந்து விட்டு நொண்டி நொண்டி நடந்தபடி அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.
இந்தச் சம்பவமே அவன் மனசைச் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. அவன் மாமன் மகள் தான் லலிதா. அவளைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்று சந்திரனுக்கு எண்ணம்; அவளே அவனை இளக்காரம் செய்வதுபோலச் சிரித்ததை அவனால் தாங்க முடியவில்லை.
ராஜாராமுக்கு லலிதா அத்தை பெண். ஆகவே அவனுக்கும் அவளைக் கல்யாணம் செய்து கொள்ள முறை உண்டு. அவன் சந்திரனைப்போல் படிப்பில் கெட்டிக்காரனல்லவாயினும் அழகில் பன்மடங்கு சிறந்தவன். அது சந்திரனுக்கும் தெரிந்தது தான்.
அன்றியும் லலிதாவின் கல்யாண விஷயமாக ஒரு சமயம் மாமாவும் அம்மாமியும் பேசிக்கொண்டிருந்ததிலிருந்து, மாமாவுக்குத் தன்பேரில் தான் அபிப்பிராயம் என்றும், ஆனால் அம்மாமிக்கோ ராஜாராமுக்குப் பெண்ணைக் கொடுப்பதிலே அக்கறையிருக்கிறதென்றும் தெரிந்து கொண்டான் சந்திரன்.
எனவே எப்படியாவது அம்மாமியின் மனசில் ராஜாராமைவிடத் தானே சிறந்தவன் என்று அபிப்பிராய மூட்ட வழியென்ன என்று ஆலோசித்துக் கொண்டிருந்தான் சந்திரன்.
அப்போது வாசல் பக்கத்தில் லலிதாவின் தம்பி பாலு ஏதோ எழுத்துக் கூட்டிப் படிப்பது அவன் காதில் விழுந்தது.
சோ...னி...சோனி...ப்...சோனிப்பூ...னை...சோனிப்பூனை...சந்...து...ரு...சோனிப் பூனை சந்துரு
என்று பாலு படித்து முடிந்ததும் ஆத்திரத்துடன் எழுந்து வெளியே வந்தான் சந்திரன். சுவரில் எழுதி இருப்பதைத்தான் பாலு படித்தான். எனினும் கோபத்துடன் பளீரென்று அவன் கன்னத்தில் ஓர் அறை விட்டு விட்டு, துண்டை உதறித் தோள்மேல் போட்டுக்கொண்டு வெளியே போனான். அவன் செவிகளில் மட்டும் 'சோனிப்பூனை சந்துரு, சோனிப் பூனை சந்துரு' என்று யாரோ பின்னால் கத்திக்கொண்டே வருவதுபோல ஒலித்துக்கொண்டிருந்தது.
வயல்வெளிகளில் அர்த்தமற்றட்டி கால் போனவாறு நடந்து சென்றான் சந்திரன். பொழுதும் சாய்ந்து கொண்டே வந்தது. அஸ்தமனமாகும் சமயத்தில் அவன் ஊருக்கு ஒரு மைல் தூரத்துக்கு அப்பால் இருந்த ஒரு துரவண்டை நின்று கொண்டு துரவிலிருந்து ஏற்றம் போட்டுத் தண்ணீர் இறைக்கும் செங்கான் என்னும் விவசாயியைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது வஜ்ர சரீரம் சந்திரன் மனசைக் கவர்ந்தது. ஏற்றத்தின் மேலிருந்தவன் நேரமாகி விடவே, ஏற்றத்தை விட்டுக் குதித்துக் கைகால்களை அலம்பிக்கொண்டான்.
ஏற்றச் சாலைப் பிடித்துத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த செங்கானும் சாலைக் கழற்றிவிட்டு ஏற்றத்தின் மேலிருந்த கூலியாளுக்குக் கூலி கொடுத்து அனுப்பினான்.
அப்போது இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. சந்திரன் அப்போதும் அங்கேயே செங்கானைப் பார்த்தபடி நின்றிருந்தான்; என்ன சாமி பாக்கறே?
என்று செங்கான் ஆச்சரியத்துடன் கேட்டான்.
இல்லை; உன் வேலையைப் பார்த்துத்தான் ஆச்சரியம் அடைந்தேன். இந்த ஏற்றச் சால் பிடித்தா உனக்குத் தேகம் இத்தனை கட்டுமஸ்தாச்சு?
என்று கேட்டான் சந்திரன்.
ஹூம்; இதை என்னான்னு நெனக்கிறீங்க? இந்தச் சால்பிடிச்சு எட்டு நாள் தண்ணி எறைச்சா யானை தான் என்ன செய்ய முடியும்?
என்று இறுமாப்புடன் பேசினான் செங்கான்.
சந்திரனுக்குப் பின்னும் ஆச்சரியம் ஏற்பட்டது. அப்படியா!
என்றான். அவன் மனசில் ஒரு வித நம்பிக்கை ஏற்பட்டது. அவன் படிப்பும், கலாசார அறிவும், இயற்கையான புத்திக் கூர்மையுங்கூட மங்கிப் போயின அந்த நேரத்தில். அவன் கொண்டிருந்த ஒரே எண்ணம் ஈடேற வழி ஏற்பட்டுவிட்டதுபோலத் தோன்றியது அவனுக்கு. செங்கானுடன் பேசிக்கொண்டே நடக்கலானான்.
சந்திரன் வீட்டுக்கு வரும்போது இருட்டி நெடு நேரமாகி விட்டது. மாமா சுப்பிரமணிய ஐயர் சாப்பிட்டு விட்டுப் படுத்துக் கொண்டு ஒரு தூக்கம் போட்டாயிற்று. லலிதா கூட ஒரு பக்கம் தூங்கி வழிந்து கொண்டிருந்தாள். மாமி விசாலாக்ஷியம்மாள் மாத்திரம் சாப்பாட்டை வைத்துக்கொண்டு முனகிக் கொண்டே காத்திருந்தாள். சந்திரன் சாப்பிடுவதற்கு இலையின் கீழ் வந்து உட்கார்ந்ததும், ஏண்டாப்பா! சாப்பிடக்கூட இல்லாமே எங்கே போயிருந்தே? இப்படி வேளையிலே சாப்பிடாமே போறது தான் உடம்பு நாளுக்கு நாள் சோனியாப் போறது
என்றாள் சிறிது குத்தலாக.
சந்திரன் இதற்கு ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தான்; ஆனால் சட்டென்று தன்னைத் தானே அடக்கிக் கொண்டு வாய் பேசாமல் சாப்பிட்டுவிட்டு எழுந்தான். கையலம்பிக்கொண்டு எழுந்து தாழ்வாரத்திற்கு வரும் போது தூங்கி வழிந்து கொண்டிருந்த லலிதா கண்ணைத் துடைத்துக்கொண்டு, வாசல் சுவரிலே சோனிப் பூனைன்னு யார் எழுதினா தெரியுமா?
என்று கிண்டலாகக் கேட்டாள்.
எல்லாம் தெரியும்; நான் இங்கே வந்ததே...
என்று வார்த்தையை முடிக்காமல் அங்கிருந்து போய் விட்டான் சந்திரன்.
அவன் சட்டென்று வார்த்தையை முடிக்காமல் போய்விட்டது அவளுக்கு என்னவோ போலிருந்தது. இப்படி ஏதாவது அவன் தப்பர்த்தம் செய்து கொள்ளப் போகிறானேயென்று தான் கேட்டாள். அவள் எதிர்பார்த்தபடிதான் இருந்தது அவன் பதிலும்.
அவள் உடனே அவனைப் பின்தொடர்ந்து சென்றாள். அவன் தன் அறைக்குள் போய்ப் படுக்கையை எடுத்துக்கொண்டு திரும்பிக் கதவண்டை வரும்போது அவள் இரு கைகளையும் நீட்டி வழி மறித்துக்கொண்டு புன்சிரிப்புடன் எதிரில் நின்றாள். சந்திரனுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது. தன் கையிலிருந்த படுக்கையைப் பொத்தென்று தரையில் போட்டுவிட்டு, வழி விடுகிறாயா? இல்லையா?
என்று இடியோசை போன்ற குரலில் கேட்டான்.
மாட்டேன்.
மாட்டாயா?
மாட்டேன்; உனக்கு ஏன் இத்தனை கோபம்?
அதெல்லாம் பற்றி உனக்கென்ன? நீ கேட்க வேண்டியதில்லை. வழியை விடு.
சரி, சரி; நீ நிஜமாகவே சோனிப் பூனை தான் போலிருக்கு. இல்லாவிட்டால் யாரோ கேலிக்காக அப்படி எழுதி வைத்தது போக என் பேரில் இப்படி எறிந்து விழுகிறாயே?
சந்திரன் சற்றே நிதானித்தான். பிறகு கீழே விழுந்திருந்த படுக்கையைக் குனிந்து எடுத்துக்கொண்டு சாவகாசமாக நிமிரும்போது அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்த்தான். அவள் கூறியதில் ஏதோ உண்மை இருப்பது போலத் தென்பட்டது அவனுக்கு. ஆனால் அதை எழுதினது நீயல்லவா?
என்று கொஞ்சம் கண்டிப்புடனே கேட்டான்.
இல்லை.
ஆனால் யார் எழுதினது? பாலுவா?
போதுமே! அவ்வளவு நீளம் எழுதப் பாலுவுக்கு என்ன தெரியும்? ஈ, படம், டம்பம் வேண்டுமானால் எழுதுவான்.
எழுத்தைப் பார்த்தால் கை படியாத கையெழுத்து மாதிரி இருக்கிறதே?
என்? அந்த மாதிரிக் கோணல் மாணலாய் எழுத உனக்குத் தெரியாதா?
சந்திரன் அதற்குமேல் பேசவில்லை. அவன் மனசில் ஒரு பெரிய சந்தேகம் உண்டாயிற்று. கிரிக்கட் பந்து பட்டுக் கீழே விழுந்தபோது, பெண்களுடன் சேர்ந்து ராஜாராமும் சிரித்த காட்சி அவன் மனக்கண் முன் பிரஸன்னமாயிற்று. பற்களை நற நறவென்று கடித்துக் கொண்டே, அப்படியா சமாசாரம்? ஹூம்!
என்று பெருமூச்செறிந்துவிட்டு, சடக்கென்று அவளை ஒரு புறமாக ஒதுக்கித் தள்ளிவிட்டுப் படுக்கையும் கையுமாய் வெளியேறி வாசலுக்கு வந்தான். அங்கே ஒரு ஹரிக்கேன் விளக்கடியில் ஏதோ ஒரு புஸ்தகத்தை விரித்தபடி ராஜாராம் திண்ணைமேல் படுத்துக்கொண்டிருந்தான்.
ராஜாராமைப் பார்த்ததும் சந்திரனுக்குக் கோபம் கோபமாய் வந்தது. கையிலிருந்த படுக்கை ஒரு பாறாங்கல்லாய் இருந்தால் கொஞ்சங்கூட யோசிக்காமல் அதை அவன் மேல் போட்டுவிட்டிருப்பான். ஆனால் அத்தனை பெரிய பாறாங்கல்லைத் தூக்க அவனால் முடியுமா என்பது வேறு விஷயம்.
ராஜாராம் படுத்திருந்த திண்ணையில் தான் தினமும் சந்திரனும் படுப்பது வழக்கம். எனினும் அப்போது ராஜாராமுக்கு அடுத்தாற்போல அங்கே படுத்துக் கொள்ள அவனுக்கு மனம் இல்லை. ஆகவே வாசற்படிக்கு இந்தப் பக்கமாக உள்ள சிறு திண்ணை மேல் படுக்கையை விரித்துப் படுத்துக் கொண்டான்.
எதிர்த் திண்ணையில் ராஜாராம் படுத்திருந்ததால், சந்திரனுக்கு இப்போது அவனைப் பார்க்கவே எரிச்சலாயிருந்தது. சுவர்ப்புறமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டான். விளக்கு வெளிச்சத்தில் சுவரில் கோணல் மாணலாகக் கொட்டை எழுத்துக்களில் 'சோனிப்பூனை சந்துரு' என்று எழுதப்பட்டிருந்தது அவன் கண்ணுக்குத் தெரிந்தது.
அந்த எழுத்துக்கள் அவனை வேண்டுமென்றே கேலி செய்வது போலத் தோன்றிற்று அவனுக்கு. அதை எழுதியவனை ஏன் ஒரே அறையில் கொன்று விடக்கூடாது என்று கூட நினைத்தான். ஆனால் அவனுக்கு அத்தனை தன்னம்பிக்கையில்லை. வேண்டுமானால் வந்த ஆத்திரத்தில் ராஜாராமை ஓங்கி ஒருதரம் அறைந்துவிடலாம். அந்த அறைக்குப் பதிலாக அவன் திருப்பிக் கொடுக்கத் தொடங்கினால், அதை வாங்கிக்கொள்ளச் சக்தி வேண்டுமே!
இந்த எண்ணம் சந்திரனுக்கு அவனையும் அறியாமல் அழுகையை உண்டாக்கிவிட்டது. அப்போது விளக்கு வெளிச்சத்தில் பறந்து கொண்டிருந்த ஒரு கொசு மார்பின் மேல் வந்து உட்கார்ந்து சுரீலென்று கடிப்பதை உணர்ந்தான் சந்திரன். அதை நசுக்க மார்பின் மேல் கையை வைத்தான். ஒரே எலும்புக் கூடாக, மார்க் கூடு பின்னிக்கொண்டு சதைப்பிடிப்பு என்பதே இல்லாமல் சொரசொரப்பாக இருந்த மார்பின் ஸ்பரிசம் அவன் உள்ளங்கையில் பட்டதும் அவன் மனசிற்கு ஒருவித வேதனையும் அருவருப்பும் உண்டாயின. தன் உடம்பின் மீதே அவனுக்கு வெறுப்பு உண்டாகும்படி அத்தனை விகாரப் பிராணியாயிருப்பதை நினைத்து மனம் கசிந்தான் அவன். இதனால் அரை குறையாக வரவிருந்த தூக்கமும் பறந்தோடிப் போயிற்று.
சிறிது நேரமாயிற்று. எதிர்த் திண்ணையில் படுத்திருந்த ராஜாராம் உரத்த குரலில் கொட்டாவி விட்டுக் கொண்டே ஹரிக்கேன் விளக்கை அணைத்து வாசற் சரப்பட்டையிலிருந்த ஓர் ஆணியில் மாட்டிவிட்டுப் படுத்தான். சில நிமிஷங்களுக்குள் தூங்கியும் போனான்.
சந்திரனுக்குத் தூக்கம் வரவில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தான். தூங்குவதற்குத் தன்னால் இயன்ற மட்டும் பிரயத்தனம் செய்து பார்த்தான்; பலனில்லை.
அன்று கிருஷ்ண பக்ஷத்து அஷ்டமி. நிலவு இல்லை. எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. காற்றுக் கூட இல்லை. நக்ஷத்திர ஒளியில் எதிர்வீட்டுக் கூரைமேல் பாம்பின் படம்போல அசைவற்றுத் தோன்றும் வடிவம் சந்திரன் கண்ணுக்குத் தெரிந்தது. முதலில் அவன் அதைக் கண்டு பயந்து போனான். ஆனால் அது ஒரு சப்பாத்திக்கள்ளி தான் என்று ஞாபகத்துக்கு வந்ததும் அவனுக்குச் சிறிது தைரியம் உண்டாயிற்று. 'சீ, லலிதா சொல்வதுபோல நான் சோனிப் பூனை தான். சந்தேகமேயில்லை' என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டான். 'இந்தக் கோழைத்தனத்தையும் பயங்கொள்ளித்தனத்தையும் அறவே ஒழிக்கவேண்டும். பிறகு தேகங்கூடத் திடகாத்திரமாகிவிடும்' என்று அவன் சங்கற்பம் செய்து கொண்டான்.
சந்திரன் எண்ணமிட்டுக்கொண்டே படுத்திருக்கும் போது பாதிராத்திரியாகிவிட்டது. வானத்தில் அர்த்த சந்திரன் உதயமாகி பூமியின் இருளைத் துடைத்துக் கொண்டே சென்றான். சுற்று வட்டத்தில் இருந்த மரங்கள், அசைந்தாடித் தென்றலடிப்பதை அறிவித்தன. சந்திரன் நெற்றியில் படிந்திருந்த வேர்வையைத் துடைத்துக்கொண்டு எழுந்து சோம்பல் முறித்துக்கொண்டே வாசலுக்கு வந்து தெருக்கோடிப் பக்கமாய்ப் பார்த்தான். தெருக்கோடியிலிருந்த கோவிலுக்கு அப்பால் களத்து மேட்டில் வெள்ளியை வாரி இறைத்தாற்போல நிலவு தோய்ந்து கிடந்தது. சந்திரன் மனசில் ஆனந்தம் பொங்கியது. தன் சிறு பிராயத்தில் அந்தக் களத்து மேட்டில் கழித்த காலமெல்லாம் நினைவுக்கு வந்தது. மெல்ல நடந்து களத்துமேட்டை அடைந்தான்.
அந்தக் களத்துமேட்டின் மேற்கு மூலையில் ஒரு வேப்பமரம். அதன் கீழே விசாலமான ஒரு கற்பாறை. அந்தக் கற்பாறை பனி விழுந்து சில்லிட்டிருந்தது. தோள் மேலிருந்த துண்டை அந்தப் பாறைமீது விரித்து விட்டுச் சந்திரிகையைப் பருகியவண்ணம் தலை சாய்த்தான் சந்திரன். அவன் மனம் எட்டு வருஷங்கள் பின்னோக்கிப் பாய்ந்தது.
அப்போது சந்திரனுக்குச் சுமார் பத்து வயசிருக்கும். களத்தூரிலேயே அவன் வசித்துவந்த காலம் அது. களத்தூர்த் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் நான்காம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு நாள் நடந்த சம்பவம் அவன் மனக்கண் முன் தோன்றிற்று.
சம்பா அறுவடை செய்யும் காலம். அந்தக் களத்து மேட்டில் மலை மலையாகத் தாளடிப்போர்களும், நெற் சுமைகளும் அடுக்கப்பட்டிருந்தன. அதன் மத்தியில் ஒரு வில் வண்டி விடப்பட்டிருந்தது. எதிரே சுமை அடித்து நெல் அம்பாரமாகக் குவிக்கப்பட்டு, வைக்கோல் கட்டுக்கள் போட்டு மூடியிருந்தது. மத்தியான்னம் சுமார் இரண்டு மணி இருக்கும். பண்ணையாட்கள் அம்பாரம் குவித்து மூடி விட்டுக் கஞ்சி குடிக்கப் போயிருந்தனர். அன்று சுப்பிரமணிய ஐயரும் அதுவரையில் சாப்பிடவில்லை. காலையில் ஏதோ சிற்றுண்டி அருந்திவிட்டு வந்தவர் தான். வேலை சரியாயிருந்தது. ஆகவே பண்ணையாட்கள் கஞ்சி குடிக்கப் போனதும், அவர்கள் வருவதற்குள் சாப்பிட்டுவிட்டு வந்து விடலாமென்று வீட்டுக்கு வந்து, சந்துரு, நீயும் லலிதாவும் போய்ச் சிறிது நேரம் வில் வண்டியிலே உட்கார்ந்திருங்கள்; நான் சாப்பிட்டுவிட்டு வந்து விடுகிறேன்
என்றார்.
சந்திரனும் லலிதாவும் களத்துமேட்டுக்கு வந்து வில்வண்டியில் உட்கார்ந்த சிறிது நேரத்துக்குள்ளாகப் பள்ளிக்கூடத்திலிருந்து சட்டாம்பிள்ளை அங்கே வந்தான். சந்திரனைப் பள்ளிக்கூடத்துக்குக் கூப்பிட்டான். சந்திரன் சிறிதுநேரம் பொறுத்து வருவதாகப் பதில் கூறினான். ஆனால், ஒரு கை நெல் கொடு. வாத்தியார் வாங்கிக் கொண்டு வரச் சொன்னார்
என்றான் சட்டாம்பிள்ளை.
சட்டாம்பிள்ளையென்றாலே அப்போது திண்ணைப் பள்ளிக்கூடத்துப் பையன்களுக்கெல்லாம் பயம். அவன் விருப்பப்படி நடக்காவிட்டால் ஏதாவது பொய் சொல்லி உபாத்தியாயரிடம் உதை வாங்கி வைப்பான் என்று பையன்கள் நன்றாக அறிவார்கள். அது சந்திரனுக்கும் நன்றாகத் தெரியும். ஆகவே அம்பாரத்திலிருந்து கொஞ்சம் நெல்லை எடுத்துச் சட்டாம்பிள்ளைக்குக் கொடுத்து விட்டான்.
சட்டாம்பிள்ளை அதை வாங்கிக் கொண்டு போனதும் சந்திரன், லலிதா, நான் சட்டாம்பிள்ளைக்கு நெல்லுக் கொடுத்தேன் என்று உங்க அப்பாகிட்டச் சொல்லாதே, தெரியுமா?
என்று சொல்லி எச்சரிக்கை செய்து வைத்தான்.
லலிதாவுக்கு ஐந்து வயசுதான் இருக்கும். 'சொன்னதைச் சொல்லும் சிளிப்பிள்ளை'யாக இருந்தாள் அவள். அவளிடம் சந்திரன் ஒன்றுமே சொல்லாமல் இருந்தால் அவள் அதைப்பற்றி மறந்தே போயிருப்பாள். அவன் எச்சரிக்கை செய்துவைக்கவே, அவள் குழந்தை மனசில், தான் ஏதோ சந்திரனுக்கு ஒரு பெரிய உதவி செய்யப்போகிறதாகவோ, அல்லது தன்னால் அவனுக்கு ஏதோ அநுகூலம் கிடைக்கப் போவதாகவோ எண்ணம் உண்டாயிற்று.
சுப்பிரமணிய ஐயர் வந்ததும் வராததுமாக அவள் சந்திரனைப் பார்த்து, ஏண்டா சந்துரு, சொல்லக் கூடாதே?
என்று கேட்டு நிச்சயம் செய்து கொண்டாள்.
என்னம்மா லலிதா?
என்றார் சுப்பிரமணிய ஐயர்.
சந்துருதான் சொல்லக் கூடாதுன்னு சொல்லியிருக்கானே. உம், சொல்லுவேனா?
என்றாள் லலிதா.
சந்திரனுக்குச் சுப்பிரமணிய ஐயரைப் பார்க்கும் போது ஒரு புட்டி விளக்கெண்ணெயைப் பார்ப்பது போல் இருந்தது.
என்னடா சந்துரு? என்ன சமாசாரம்?
என்றார் சுப்பிரமணிய ஐயர்.
இல்லை...
நான் சொல்லட்டுமாடா?
என்றாள் லலிதா.
சொல்லு!
என்று சிறிது அதட்டினாற்போலக் கேட்டார் சுப்பிரமணிய ஐயர்.
உடனே லலிதா நடந்த சமாசாரத்தைக் கண்டது கண்டவாறே சொல்லிவிட்டாள்.
திருட்டுக் கழுதை! காவலுக்கு உன்னை இங்கே இருக்கச் சொன்னால் அம்பாரத்திலே திருடிச் சட்டாம் பிள்ளைக்குக் கொடுக்கிறாயா?