Nagavalli
By P.M. Kannan
()
About this ebook
நாகவல்லி
நாகவல்லி அழகி... சொகுசுக்காரி… அவளது தமக்கை நித்திய நோயாளி...
தன் அம்மாவை திருப்தி படுத்த நோயாளி அக்காவை மணக்கிறான் வேங்கடரமணி...
ஆசையின் இழை அவனை நாகவல்லியோடு பிணைக்கிறது... நாகவல்லிக்கும் திருமணம் ஆகிவிடுகிறது. ஆனால் அந்த இழை.... முடிவு வரை சுவாரஸ்யம் குறையாத கதை... இந்த நாவலின் முடிவு தான் இந்த எழுத்தாளரை குமுதம் ஆசிரியர் திரு.எஸ் ஏ பிக்கு அறிமுகப் படவைத்தது... அதன் காரணமாக குமுதம் ஆரம்பித்தது முதல் 1965 வரை குமுதத்தில் மட்டுமே இவர் கதைகள் வரக் காரணமானது...
இந்த நாவலில் அப்படி என்ன புரட்சி இருக்கிறது....படியுங்க புரியும்.
Read more from P.M. Kannan
Nilave Nee Sol Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakkavillai Rating: 0 out of 5 stars0 ratingsPennukku Oru Neethi Rating: 0 out of 5 stars0 ratingsAnnai Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsMannum Mangaiyum Rating: 0 out of 5 stars0 ratingsPavazha Maalai Rating: 0 out of 5 stars0 ratingsMalar Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Madhuvum Rating: 0 out of 5 stars0 ratingsKannigathaanam Rating: 0 out of 5 stars0 ratingsInba Puthaiyal Rating: 0 out of 5 stars0 ratingsThevaanai Rating: 0 out of 5 stars0 ratingsVazhvin Oli Rating: 0 out of 5 stars0 ratingsPenn Deivam Rating: 0 out of 5 stars0 ratingsInba Kanavu Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to Nagavalli
Related ebooks
Meetchi Rating: 0 out of 5 stars0 ratingsVizhuthugal Rating: 5 out of 5 stars5/5Vazhvin Oli Rating: 0 out of 5 stars0 ratingsAnjali Rating: 0 out of 5 stars0 ratingsNandhavana Poo Rating: 0 out of 5 stars0 ratingsNala Charitham Rating: 0 out of 5 stars0 ratingsGanga Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalna Enna Prakash? Rating: 0 out of 5 stars0 ratingsManas Rating: 5 out of 5 stars5/5Chinna Chellamey! Rating: 0 out of 5 stars0 ratingsIndha Nerathil Ival Rating: 0 out of 5 stars0 ratingsKaalam Rating: 0 out of 5 stars0 ratingsPralayam Rating: 5 out of 5 stars5/5Unmaiyin Darisanam Rating: 0 out of 5 stars0 ratingsApoorva Ramayanam : Volume 2 - Anuman Kadhaigal Rating: 5 out of 5 stars5/5Manithargal Paathi Neram Thoongukirargal Rating: 5 out of 5 stars5/5Azhagin Yathirai Rating: 0 out of 5 stars0 ratingsKaattrum Kathitavanum Rating: 0 out of 5 stars0 ratingsAayudham Unakkulle!... Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Vaanam Rating: 3 out of 5 stars3/5Aangal Sevvai Pengal Velli Rating: 0 out of 5 stars0 ratingsVanathil Oru Maan Rating: 4 out of 5 stars4/5Kilai Nila Rating: 0 out of 5 stars0 ratingsKarna Parambarai Rating: 5 out of 5 stars5/5Summa Irukkatha Pena Rating: 0 out of 5 stars0 ratingsSriman Sudarsanam Rating: 1 out of 5 stars1/5Jayakanthan Munnuraigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsSakkaram Nirpathillai Rating: 0 out of 5 stars0 ratingsOrey Urimai Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Payanam Rating: 5 out of 5 stars5/5
Reviews for Nagavalli
0 ratings0 reviews
Book preview
Nagavalli - P.M. Kannan
http://www.pustaka.co.in
நாகவல்லி
Nagavalli
Author:
பி.எம். கண்ணன்
P.M. Kannan
For more books
http://www.pustaka.co.in/home/author//pm-kannan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. பரிசு மோதிரம்
2. வேங்கடரமணி
3. இரு சகோதரிகள்
4. மண்டை இடி
5. அந்த நாளில்
6. ஜோடிக் கிளிகள்
7. என்ன சோதனை?
8. அன்புக் கோயிலில்
9. தாம்பத்ய வாழ்க்கை
10. உள்ளம் துள்ளியது!
11. உடல் சிலிர்த்தது!
12. நிழலின் நடுக்கம்
13. இருதயவீணையின் கீதம்
14. பாலும் பூனையும்
15. அந்தரங்கம்
16. இணைப்புச் சங்கிலி
17. 'சொப்பன வாஸவதத்தை'
18. சாவித்திரியின் சஞ்சலம்
19. வெறிபிடித்த மனம்
20. ஏன் இந்த உதாசீனம்?
21. அம்மா எங்கே?
22. முற்றுப் பெறாத சித்திரம்
23. தனிக்குடித்தனம்
24. அத்திம்பேர்!
25. உணர்ச்சிகளின் போராட்டம்
26. தந்தையின் உள்ளம்
27. புரியாத புதிர்
28. எதிரலைகள்
29. பெண்டாட்டி ஒரு புதிர்!
30. எதிர்பாராத சந்திப்பு
31. நிஜமான பேச்சு
32. பிரார்த்தனை
33. யாத்திரை
இந்த நாவல்
முந்நூறு பக்கம் நாவல் எழுதுவது கூடக் கஷ்டம் அன்று. மூன்று வரி முகவுரை எழுதுவதுதான் கஷ்டம். இந்தக் கஷ்டத்தை நான் இந்த நாவலுக்கு முகவுரை எழுத எண்ணிக் கிறுக்கிக் கிழித்த காகிதத்தைப் பார்த்தபோதுதான் உணர்ந்தேன். ஆம், இந்த நாவல் இத்தகைய தன்மை வாய்ந்தது. இதற்கு என்னால் முகவுரையே எழுத முடியவில்லை.
ஏன் முடியவில்லை என்பதைக் கூறிவிட்டால் போதும் என்று நினைக்கிறேன். ஒருகால் அதுவே இதற்கு ஒரு முகவுரையாக அமைந்துவிடட்டுமே.
எழுத உட்கார்ந்தபோதே எதிரே வந்து நின்றாள் நாகவல்லி. என்னைப்பற்றி எழுதியிருப்பது போதாதா? இன்னும் என்ன எழுதப்போகிறீர்கள்? உங்கள் உள்ளம் என்ன உருகாத கருங்கல்லா?
என்றாள்.
நான் என் உள்ளத்தைத் திறந்து பார்த்தேன். அங்கே இவள் தான் இருந்தாள். நாகவல்லி, உன்னைப்பற்றி இனி ஒரு வரிகூட எழுதவில்லை. உன்னைப்பற்றி எழுதினால் அது என்னைப்பற்றியே எழுதியதாக ஆகுமல்லவா? இல்லை; எழுதவில்லை
என்று பேனாவைக் கீழே வைத்தேன்.
ஆம், நானே நீங்கள்; நீங்களே நான். இது ஞாபகம் இருக்கட்டும்
என்று எச்சரிக்கை செய்து சென்றாள் அவள்.
முகவுரை எழுதிக் குட்டிச்சுவராகப் போயிற்று என்று தோன்றியது. ஆனால் அடுத்தாற்போலவே, 'நாகவல்லியைப் பற்றிக் குறிப்பிடாமல் எழுதினால் என்ன? வேறு விதமாக எழுத விஷயமா கிடைக்காது?' என்று எண்ணிக்கொண்டே மீண்டும் பேனாவை எடுத்தேன். இரண்டு வரி கிறுக்கினேன். எதிரே வந்து நின்றான் வேங்கடரமணி.
இதோ பார், என்னைப்பற்றி மாத்திரம் இனி ஒரு வரி எழுது; உன் மண்டையைப் பெயர்த்து விடுவேன்
என்றான் ஆத்திரத்துடன். அவனை நான் அப்படிப் படாதபாடு படுத்தி வைத்திருப்பதை மறந்துவிட முடியுமா என்ன அவனால்?
ஏன் அப்பா இத்தனை கோபம்?
என்றேன் நான்.
கோபமா? உன்னைக் கொலையல்லவா பண்ணவேண்டும்?
என்றான் அவன்.
என்னையா கொலை செய்யப் போகிறாய்? பேஷாகச் செய் அப்பா; பேஷாகச் செய். ஆனால் என்னைக் கொல்வதால் உன் நாகவல்லியையே கொன்று போடுகிறாய் என்பதை மாத்திரம் அறிந்து கொள்
என்று சொல்லி என் உள்ளத்தை அவன் முன் திறந்து காட்டினேன்.
அவன் தன் நாகவல்லியைக் கண்டான் என் உள்ளத்திலே. அப்படியே என்னை இறுகத் தழுவிக்கொண்டான். அவனது கர்வம் மிகுந்த அணைப்பிலே நான் திக்குமுக்காடிப் போனேன்.
வேங்கடரமணி, உன்னைப் பற்றியும் சரி. உன் நாகவல்லியைப் பற்றியும் சரி; இனி ஒரு வார்த்தைகூட மூச்சு விடவில்லை. தயவு செய்து என்னை விட்டுவிடு
என்று மன்றாடிக் கேட்டேன், அவன் என்னை விட்டுவிட்டான். சிரித்துக்கொண்டே வெளியேறினான். எனினும் கண்ணெதிரிலிருந்து மறைந்தானேயொழிய என் உள்ளத்தினின்றும் பிரியவில்லை. அங்கேதான் அவனது நாகவல்லி இருக்கிறாளே. அவளை விட்டு எப்படிப் பிரிந்து போக முடியும் அவனால்? அவள் தான் எப்படி அவன் பிரிவைச் சகிப்பாள்? பிரிக்க முடியாத அன்பை – பாசத்தைச் - சகிப்புத்தன்மையின் மூலம் பிரிக்க முயன்ற கூத்துத்தானே இந்த நாவலாக... ச்சு... நாகவல்லி வந்து விடப் போகிறாள் மறுபடியும்!
இந்த இரண்டு பேரையும் பற்றி எழுதவே கூடாது என்று முடிவாகிவிட்டது. இனிமேல் அந்தப் பேதை சாவித்திரிதான் இருக்கிறாள். அவளைப்பற்றி மாத்திரம் எதற்காக இங்கே குறிப்பிட வேண்டும்; பாவம்!
முழுவதும் கற்பனைப் பாத்திரங்களையே சிருஷ்டித்துக் கதை எழுதுவதானால் முகவுரை என்று எதை வேண்டுமானாலும் அளந்து கொட்டலாம். அப்போது அது சௌக்கியமாகவும் இருக்கும். இந்த நாவலில் அப்படி இல்லை. நாகவல்லியும் வேங்கடரமணியும் உயிரும் உடலும் உள்ள ஒரே கூட்டின் இரண்டு அம்சங்கள். ஒன்று உள்ளம்; மற்றொன்று உயிர். பெயரளவில்தான் இந்த நாவலில் அவர்கள் கற்பனையாக நடமாடுகின்றனர்.
அவர்களைப் பற்றி நான் எழுதத் துணிந்த போது, அவர்கள் என் திறமையைச் சந்தேகித்தார்களோ அல்லது நெஞ்சை இவ்வளவு உருக்கும் வண்ணம் எண்ணச் சித்திரங்களாக நான் அவர்களைத் தூக்கி ஆட்டி வைப்பேன் என்று அவர்கள் நினைக்கவில்லையோ தெரியவில்லை. அதனால்தான் அவர்கள் இருவருக்குமே இப்போது அத்தனை கோபம் வருகிறது. அவர்களது ஆத்திரத்துக்கும் உணர்ச்சிக்கும் நான் மதிப்புக் கொடுக்க வேண்டியவன்; மரியாதை செலுத்தக் கடமைப்பட்டவன். ஆகவே இங்கே அவர்களைப் பற்றி அதிகமாக ஒன்றும் குறிப்பிடாமல் வாசகர்களே நேரில் அவர்களைச் சந்தித்து அறிந்து கொள்ளும்படி விட்டுவிடுகிறேன். நிற்க.
இந்த நாவலை நான் தொடர்கதையாக எழுதிவந்தபோது, பல ரஸிகர்கள் இதைப் பாராட்டியும் இதன் மீது பதற்றப்பட்டும் எனக்குக் கடிதங்கள் வரைந்தனர். கடிதம் எழுதினவர்களில் பெரும்பான்மையோர், இந்த நாவல் இன்று வாழ்க்கையிலே பல குடும்பங்களில் நடைபெறும் உண்மை நிகழ்ச்சிகளை உள்ளபடியே உரைப்பதாக இருக்கிறது
என்றெல்லாம் அபிப்பிராயப் பட்டிருக்கின்றனர். மற்றும் பலர், என்னைப் பற்றித் தான் நீங்கள் நாவல் எழுதியிருப்பதாக என் மனைவி சண்டை போடுகிறாள். உங்கள் நாவலைப் படிப்பதால் எங்கள் குடும்பத்தின் அமைதியே குலைந்து விட்டது
என்றுகூட எழுதியிருக்கிறார்கள். நேரில்கூடச் சில நண்பர்கள் தங்கள் ஆத்திரத்தை என்முன் கொட்டித் தீர்த்துக்கொண்டார்கள். ஏன்? என் மனைவியேகூட ஒரு சமயம் என் மீது மனத்தாங்கல் அடைந்தாள் என்றால்...?
அவர்களுக்கெல்லாம் அப்போது தனித்தனியாகப் பதில் எழுத முடியவில்லை. இப்போது புத்தக வடிவில் இந்த நாவல் வெளியாகிறபடியால் நான் இன்னும் பல பேர்களுடைய பாராட்டுதல்களுக்கோ தாக்குதல்களுக்கோ பாத்திரமாகத் தயாராக இருக்கவேண்டும் அல்லவா? அவர்கள் எல்லோருக்குமாகச் சேர்த்து ஒரே ஒரு வார்த்தை சொல்லி முடித்து விடலாமென்று கருதுகிறேன். நாகவல்லியையோ வேங்கடரமணியையோ நான் சிருஷ்டித்து வளர்த்தபோது எந்தத் தனிநபரைப் பற்றியுமே மனத்தில் கொண்டு அவர்கள் கதையைச் சொல்ல நான் முன்வரவில்லை. என் உள்ளந்தான் நாகவல்லியின் உள்ளம்; என் உயிர் தான் வேங்கடரமணியின் உயிர். உள்ளத்தையும் உயிரையும் என் இஷ்டப்படி ஆட்டி அலைக்கழித்து வைத்து நாடகமாடியிருக்கிறேன், இந்த நவீனத்திலே. எனவே எந்தத் தனிநபரும் தம்மைப் பற்றி எழுதியிருப்பதாகவோ, இந்த நாவல் மூலம் தங்கள் குடும்ப வாழ்க்கையின் அமைதி குலைந்துவிட்டதாகவோ புகார் செய்தால், அதற்கெல்லாம் நான் பொறுப்பாளியல்ல என்று முன்கூட்டியே திட்டமாகத் தெரிவித்துவிடுகிறேன்.
இறுதியாக இரண்டு பேரிடம் மாத்திரம் கீழ்க்காணும் விதம் அநுமதி பெற்றுக்கொண்டால் போதும் என்பதே என் கருத்து. இந்தக் கருத்தை அவர்கள் தங்களுக்குச் சமர்ப்பணமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதும் எனது வேண்டுகோள்.
நாகவல்லி, நீயே நான், நானே நீ என்பதைத் தக்க தருணத்தில் நினைப்பூட்டினாய். இந்த நினைப்பு என் நெஞ்சாழத்தில் என்றும் வற்றாத தேன் ஊற்றாக விளங்கும். என் உள்ளம் உன் உறைவிடம். உனக்கு உரிய அன்பும் மதிப்பும் இங்கே எப்போதும் உண்டு.
வேங்கடரமணி, உன் உயிர் என் உயிர்! இதை நீ உணர்ந்திருப்பதால்தான் நான் இன்று உயிர்வாழ முடிகிறது. உன் நாகவல்லியின் உறைவிடமாகிய என் இருதயக்கோவிலில் உன் காதலுக்கும் உணர்ச்சிகளுக்கும் என்றும் கௌரவம் அளிக்கப்படும். இது உண்மை.
தீர்ந்தது! இந்த இரண்டு பேர்களுக்கும் தெரியாமல் ஒரே ஒரு வார்த்தை; அதோடு சரி!
மனத்தின் ஆசைகளையும் கனவுகளையும் கற்பனைத் தோணியில் ஏற்றி வாழ்க்கைக் கடலில் சஞ்சரிக்கும்போது தான் எத்தனை பெரிய பெரிய அலைகள் எழும்பித் தோணியை ஆட்டிப் படைக்கின்றன! எத்தகைய கொடூரமான புயல்காற்று அடித்து அந்தத் தோணியையே குப்புறக் கவிழ்த்து விடுகிறது! ஹும்... அப்போதுதானே வாழ்க்கை என்னும் வாரிதியின் சுய ரூபத்தைக் காண முடிகிறது!
பி.எம்.கண்ணன்.
தியாகராயநகர்,
2.4.48.
*****
1. பரிசு மோதிரம்
திரை விலகியது. வீணையும், பிடிலும், குழலும், கோலும், சாரங்கியும், ஸிதாரும், மிருதங்கமும், டோலக்கும் ஜாலராக்களும் இன்னும் அநேக வாத்தியங்களும் ஒரே சமயத்தில் ஒலித்து மதுர கானத்தை எழுப்பின. வானமண்டலத்திலே மேகங்களுக்கு இடையிலிருந்து காற்றில் சலனம் செய்து கொண்டே கீழிறங்குவது போல, கோகிலத் துவனி ஒன்று அந்த வாத்தியங்களில் எழும்பிய நாதத்துடன் இழைந்தது. எதிரே அமர்ந்திருந்தவர்களின் பேச்சுக்களும் கோஷங்களும் சரேலென்று ஓய்ந்தன. மந்திரத்தால் கட்டப்பட்டதுபோல் ஒவ்வொருவரும் தமது ஆசனத்தில் புதைந்து திரை விலகிய திசையிலேயே கண்களைச் செலுத்தினர்.
ஜல் ஜல் என்று சலங்கைகளின் சப்தம் கேட்டது. அடுத்த விநாடியே அவள் அரங்கத்தில் தோன்றினாள். பகைப்புலத்தில் இருந்த கறுப்புத் திரையின் முன்னர் மேகத்தைக் கிழிக்கும் மின்னல் போலத் தோன்றினாள் அவள். எல்லோர் கண்களும் அவள் மீதே சென்றன. வாத்தியங்களின் ஒலியும், பாட்டின் ஒலியும் அவளது கால்களில் அணிந்திருந்த 'கெஜ்ஜை' ஒலியுடன் கலந்தன. அரங்கத்திலே ஒரு பம்பரம் போலச் சுழன்றாள் அவள். அவளது நாட்டியத்தைக் கண்டு அந்தச் சபையே பிரமித்துப் போயிற்று.
ஐந்தே நிமிஷந்தான் ஆடினாள். ஆனால் அவள் அரங்கத்தை விட்டு மறைந்த பின்னரும் நெடுநேரம் வரையில் சபையில் பேச்சு மூச்சுக் கிளம்பவேண்டுமே! திரை கூட விழுந்துவிட்டது.
மறுபடியும் திரை விலகியபோது அவள் வரவில்லை. ஒரு ராஜா வந்தான். ஒரு மந்திரி வந்தான். இருவரும் பல விதமாக ஆடினார்கள். அவர்கள் ஆடி முடிந்தபோது இரண்டு முனிபுங்கவர்களுடன் அவளும் வந்தாள். மீண்டும் நடனம், பாட்டு. ஆனால் அந்த நடனத்தையும் பாட்டையும் இப்போது வர்ணிக்க வேண்டியதில்லை. சுருங்கச் சொன்னால், அந்த அரசன் தான் துஷ்யந்தன். அவள் சகுந்தலை. கணவரின் ஆசி பெற்று அவரது சீடர்களுடன் புக்ககம் வந்த சகுந்தலையை, துருவாசர் சாபத்தின் பலனாக ஞாபகமறதி ஏற்பட்ட துஷ்யந்தன் திரஸ்கரிக்கும் கட்டத்தைத்தான் அவர்கள் நாட்டியமாடினார்கள்.
இந்தக் கட்டத்தில் மறுபடியும் பரபரப்பு உண்டாயிற்று. ஆரம்பத்தில் அவளது தனி நடனத்தைக் கண்டு மெய்ம்மறந்து போன சபையோர், இந்தக் கட்டத்தில் துஷ்யந்தன் அவளை உதாசீனப்படுத்தி அவமதித்ததைக் கண்டு உள்ளம் கொதித்தனர். அவள் கண்களில் நீர் ததும்புகிறது. அவள் முகத்தில் ஏமாற்றம் பிரதிபலிக்கிறது. அவள் கைகளைப் பிசைகிறாள். அப்போதுதான் ஞாபகம் வருகிறது அவளுக்கு. ஆம்; அந்த மோதிரம். அவன் காதலின் சின்னமாக அவளைப் பிரிந்தபோது அவள் விரலில் இட்ட அந்த மோதிரம் இருக்கிறதல்லவா! சரேலென்று ஒரு பெண் நாகம்போல் சீறுகிறாள் அவள். இந்த நன்றி கெட்ட புருஷ உலகத்தையே சபித்து விடுவாள் போல் கூட இருக்கிறது. ஆனால் சற்றே சமாளித்துக்கொள்ளுகிறாள். அவளது பெண்மை அவள் உதவிக்கு வருகிறது. இதழ்க்கடையில் இளமுறுவல் அரும்ப, கண்களிலே காதல் மலர, அவள் அந்த மோதிரத்தைப் பற்றிப் பிரஸ்தாபிக்கிறாள்.
துஷ்யந்தன் உதடுகளிலிருந்து பரிகாசமும் கோபமும் கலந்த சிரிப்புச் சீறுகிறது. ஸ்திரீ சாகசத்தைக் கண்டு ஆச்சரியமடைகிறான் அவன். அந்த மோதிரத்தைக் காட்டும்படி கேட்கிறான் அவளை.
சகுந்தலையின் கண்கள் கைவிரல்களின் பக்கம் திரும்புகின்றன. மனம் துணுக்குறுகிறது. இமைகள் அகல விழிக்கின்றன. முகத்தில் இருள் சூழ்கிறது. விரலிலிருந்த மோதிரந்தான் வழியில் தடாகத்திற்குள் நழுவி விழுந்து மீன் வயிற்றுக்குள் போய்விட்டதே! அதை அறியாத பேதை துடிக்கிறாள். துருவாசரின் சாபம் நினைவுக்கு வருகிறது. ஆனால் அந்தச் சாபத்துக்கு இப்போது விமோசனம் ஏது? மோதிரந்தான் கெட்டுப் போய்விட்டதே!
அவள் தவிப்பைக் கண்டு கடகடவென்று நகைக்கிறான் மன்னன். அவன் சினம் எல்லை மீறுகிறது. அவள் துக்கமும் எல்லை மீறுகிறது.
இந்தக் கட்டத்தை ஆடும்போது துஷ்யந்தன் சகுந்தலை இருவருமே நடிப்பின் சிகரத்தை அடைந்துவிட்டனர். ஆனால் துஷ்யந்தனை யாராவது பாராட்டவேண்டுமே! அது தான் இல்லை. சபையோரின் இருதயங்களையெல்லாம் ஒரேயடியாகக் கவர்ந்துவிட்டவள் சகுந்தலை தான். அவன் எல்லோருடைய கோபத்திற்கும் பாத்திரனாக இருந்தான். எல்லோருடைய அநுதாபமும் அவள் பேரில்தான்.
துஷ்யந்தன் கடைசித் தடவையாகக் கூறுகிறான்; மோதிரம் என்று பசப்பி மோசம் செய்யவேண்டாம். உண்மையில் மோதிரம் இருந்தால் எடுத்துக் காட்டு அதை
என்கிறான் வெகு கண்டிப்புடன்.
மோதிரத்தைக் காண்பிக்காவிடில் அடுத்த விநாடி அவன் முன்னிலையிலிருந்து அகலவேண்டும். அத்துடன் அவளது வாழ்வுக்கு முற்றுப் புள்ளி.
இந்தக் கட்டம் வந்தபோது சகுந்தலையின் நடிப்பு, சபையோரின் கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றைப் பெருக வைத்துவிட்டது.
திடீரென்று சபையிலிருந்து ஒரு குரல் எழும்பியது. சகுந்தலா, இந்தா மோதிரம்! இதைக் கொடு அவனிடம்!
சபையோர் திடுக்கிட்டனர். எல்லோருடைய பார்வையும் அந்தக் குரல் வந்த பக்கம் திரும்பியது. சபை மத்தியில் அலங்காரமாகப் போட்டிருந்த ஆசனம் ஒன்றில் ரோஜாப்பூ மாலையும் கழுத்துமாக வீற்றிருந்த வாலிபன் தான் தன் இருக்கையை விட்டு எழுந்து நின்று கொண்டு அப்படி உரக்கக் கூவியவன்.
அவன் குரல் அரங்கமேடைக்கும் கேட்டது! என்ன காரணத்தாலோ சட்டென்று பின்னணி சங்கீதம் நின்றது. சகுந்தலை திரும்பிப் பார்த்தாள். சபை நடுவில் புது மாப்பிள்ளை மாலையும் கழுத்துமாக எழுந்து நின்று கொண்டு, கையில் ஒரு மோதிரத்தை வைத்துக்கொண்டு அவளுக்கு எதிராக நீட்டுவதைக் கண்டாள் அவள். அவள் கண்கள் புதுமாப்பிள்ளையின் கண்களைச் சந்தித்தன. மாப்பிள்ளையின் கண்களில் அவன் இருதயமே உருகி வடிந்திருந்தது. அதை அவள் உணர்ந்து கொண்டாளோ இல்லையோ தெரியாது. ஆனால் அவளது இரு கரங்களும், அவனது நீட்டிய கையிலிருந்த பொருளைப் பெற்றுக்கொள்ள விரும்புவனபோல இணைந்து குவிந்தன. அவளது உள்ளங்கைகள் ஒன்றின. அவன் நின்ற இடத்திலிருந்து சரேலென்று வந்தான்; அவள் கைகளில் ஒரு மோதிரத்தை வைத்தான். அடுத்த விநாடியே அந்த இடத்தில் நிற்க விருப்பமில்லாதவன் போல வேறு திக்கில் நடந்து அந்த ஹாலை விட்டே நீங்கினான்.
மாப்பிள்ளை, மாப்பிள்ளை!
என்று பல குரல்கள் அழைத்தன. மாமனார்க்காரர் தாம் உட்கார்ந்திருந்த மூலையிலிருந்து எழுந்து, என்ன, என்ன, எங்கே போகிறார் மாப்பிள்ளை?
என்று கேட்டுக்கொண்டே புது மாப்பிள்ளையைப் பின் தொடர்ந்தார்.
இதற்குள்ளாகச் சபையில் கூச்சல் அதிகரித்தது. அரங்கமேடையில் ஆட்டமும் பாட்டும் அரைகுறையாக முடிந்தன. சபையில் இருந்தவர்களும் கோஷத்துக்கு இடையே கலையலாயினர்.
சபை நடுவில் புது மாப்பிள்ளை என்று குறிப்பிடப்பட்டவரின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு பெண் - ஆம், கல்யாணப் பெண்தான் - மெல்ல எழுந்து தயங்கித் தயங்கி நடந்து கொண்டே ரோஜாப்பூ மாலையும் கழுத்துமாகப் பெண்கள் நின்றிருந்த பக்கமாகச் சென்றாள். அவளைப் பார்த்தவுடன் ஒரு குரல் உச்சஸ்தாயியில் பேசுவது கேட்டது: ஏண்டியம்மா, உன் தங்கை பலே கெட்டிக்காரிடீ! அத்திம்பேரை அரை நொடியில் மயக்கிவிட்டாளே!
ஐயோ பாவம்! ரொம்பக் கோழை மனசு போல இருக்கு போயும் போயும் இந்தச் சின்ன ஆட்டத்தைப் பார்த்தே மனம் உருகிப் போய்விட்டாரே!
என்றது மற்றொரு பெண் குரல்.
அதில்லேடி, எல்லோரும் சும்மா ஆட்டம் பாத்துண்டிருக்காளே ஒழியப் பிரஜண்டு கிரஜண்டு ஒண்ணும் கொடுக்கல்லையேன்னு தோணித்தோ என்னவோ அவருக்கு. சட்டுன்னு ஒரு மோதிரத்தை எடுத்துக் கொடுத்துவிட்டார்
என்றது இன்னொரு குரல்.
அதிலேயும் பாருங்கோ, பிரஜண்டு கொடுத்ததும் சமயமறிஞ்சுன்னா கொடுத்திருக்கார். சகுந்தலை மோதிரத்தைக் காணோமேன்னு தவிக்கிறத்துக்கும், இவர் கையிலிருந்த மோதிரத்தைக் கழட்டிக் கொடுக்கிறத்துக்கும் எசைஞ்சுன்னா இருந்தது?
என்றது வேறொரு குரல்.
ஆமாம், புது மாப்பிள்ளைக்கு மோதிரம் எங்கிருந்து வந்தது? வரபோது அவாள்ளாம் எங்களோடே தானே வந்தா? நான் பாத்தேனே. அவர் கையிலே மோதிரம் கீதிரம் ஒண்ணும் காணோமே அப்போ!
ஏண்டீ, தெரியாதா உனக்கு? முகூர்த்தப் பந்தலிலே மாங்கல்யம் முடிந்த விரலுக்கு மாமனார் மோதிரம் போட்டபோது நீ கவனிக்கல்லே போல் இருக்கு.
ஆமாம், நான் பார்க்கல்லே. அந்த மோதிரத்தையா கையைவிட்டுக் கழற்றிக் கொடுத்துவிட்டார்?
கல்யாணத்திலே சுபம்போலப் போட்ட மோதிரத்தையா கல்யாணம் முடியறத்துக்குள்ளே கழற்றித் தானம் கொடுத்து விட்டார்?
ஏண்டியம்மா, ஏன் இப்படி வாயில் வந்தபடியெல்லாம் பேசறக? கல்யாணக்காரா என்ன நெனச்சுக்குவா? உம், என்ன பண்ணறது? அவாவா வந்த வழி எப்படியோ அப்படித்தானே நடக்கும்? நானும் கிருஷ்ணமூர்த்திகிட்டே ஆயிரம் தடவை சொன்னேன். கல்யாணமும் அதுவுமா இந்தத் துஷ்யந்தன் சகுந்தலை ஆட்டமெல்லாம் வாண்டாண்டா - ஒரு ருக்மிணி கல்யாணம், பார்வதி பரிணயம் இப்படி ஏதாவது கதையை வையடான்னு முட்டிண்டேன். அவன் கேட்டாத்தானே? பொண் பள்ளிக் கூடத்திலே ஆடி, பிரஜண்டு வாங்கியிருக்காளோன்னோ! அதை இங்கே காட்டணும்னு பாத்தான். எனக்கென்னமோ சுத்தமாப் பிடிக்கல்லே
என்று பிறர் வாயை அடக்குவது போலத் தன் குறைகளுக்கும் இடமளித்துக் கொண்டாள் ஒரு பாட்டியம்மாள்.
அவர்களிடையே நின்றிருந்த கல்யாணப் பெண்ணுக்கு இந்தப் பேச்சுக்கள் நெஞ்சை அறுப்பது போல் இருந்தன. அவர்கள் அந்த மோதிரத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தபோது அவள் தன் விரலில் அணிந்திருந்த மோதிரத்தைப் பார்த்துக்கொண்டாள். அதைப்போலவே மத்தியில் ஒரு வைரக்கல் பதித்த ஷேக் - ஹாண்ட் (கை குலுக்கும் மோஸ்தர்) மோதிரம் ஒன்றைத்தான் மாமனார் அவள் கணவனுக்குப் பரிசளித்தார். அந்த மோதிரம் தட்டானிடமிருந்து பண்ணி வந்தபோதே அவள் தங்கை தனக்கும் அம்மாதிரி ஒரு மோதிரம் வேண்டுமென்று தந்தையிடம் கேட்டது நினைவுக்கு வந்தது. நாகவல்லி, நாளைக்கே உனக்கும் கல்யாணம் ஆகப்போகிறது. அப்போது உன் அகத்துக்காரருக்கு மோதிரம் வாங்கப்போகிறேன். கூட உனக்கும் வாங்கித் தருகிறேன்
என்று கிருஷ்ணமூர்த்தி ஐயர் சொன்னதும் இப்போதுதான் போலிருந்தது அவளுக்கு.
ஆனால் இப்போது நாகவல்லி விரும்பிய மோதிரம் எப்படியோ, அவளிடம் போய்ச் சேர்ந்துவிட்டது. இதைப் பற்றிப் பேச்சுகளும் வெவ்வேறு விதமாகக் கிளம்பிப் பலக்கத் தொடங்கின. அவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டு நிற்க அந்தப் புதுக்கல்யாணப் பெண்ணுக்கு என்னவோபோல் இருந்தது. மெல்ல அந்த இடத்தை விட்டு நழுவினாள். ஒரு தனி அறைக்குள் புகுந்து குப்புறப்படுத்துக் கொண்டாள். கழுத்திலிருந்த ரோஜாப்பூ மாலையைக்கூடக் கழற்றவில்லை. அவள் குப்புறப்படுத்த போது அந்த மாலை கசங்கி, இதழ்கள் உதிர்ந்தது கூடத்தெரியவில்லை அவளுக்கு.
சற்று முன்னால் அவள் மனத்தில் நிரம்பியிருந்த ஏதோ ஓர் உணர்ச்சி - அதைச் சந்தோஷம் என்று சொல்லுவதா பூரிப்பு என்று வருணிப்பதா, இல்லை, ஒருவிதத் திகில் கலந்த ஆனந்தம் என்று விஸ்தரிப்பதா? எதுவானாலும் சரி - இப்போது வறண்டுபோனாற் போல் தோன்றியது அவளுக்கு. அந்த உணர்ச்சி ஊறிக்கிடந்த உள்ளத்திலே இப்போது கவலை புகுந்து குழப்பியது. என்ன இருந்தாலும் அத்தனை பேருக்கு முன்னால் அவர் அப்படி வெறி பிடித்தவர்போல நடந்து கொண்டிருக்க வேண்டியதில்லை
என்று மனம் தனக்குள்ளேயே அங்கலாய்த்துக்கொண்டது.
அப்படி என்ன அதிசயமாக ஆடிவிட்டாள் அவள்! இவர் இப்படித் தன்னை மறந்து போக?
என்று அடுத்தாற்போலவே இன்னோர் எண்ணம் உண்டாயிற்று.
அவாவா வந்த வழி எப்படியோ அப்படித்தானே நடக்கும்னு அந்தப் பாட்டி சொன்னாளே, வாஸ்தவந்தான். நான் வந்த வழி இப்படியா? இல்லா விட்டால் எல்லோரையும் போல இந்தக் கல்யாணம் இரண்டு வருஷத்துக்கு முந்தியே நடந்திராதா?
உம். கண்ணகி வாழ்வுக்கு எதிராக ஒரு மாதவி வந்ததுபோல...
சீ! என்ன அசட்டு எண்ணங்கள் கூடப்பிறந்த தங்கையைப் பற்றியா இப்படியெல்லாம் நினைப்பது? அதுவும் அப்படி என்ன பிரமாதமான காரியம் நடந்துவிட்டது...? இந்த மனசு இருக்கிறதே, இதுதான் மனுஷ்யர்களுக்குப் பரம சத்துரு. கொஞ்சங்கூட விவஸ்தை இல்லாமல் என்ன என்ன எண்ணங்களுக்கு இடம் கொடுக்கிறது இது! அட மூட நெஞ்சே!
இதற்காகத்தானே அப்பா அப்படிக் கிளிப் பிள்ளைக்குச் சொல்லுவது போல ஆயிரம் தடவை சொல்லிச் சொல்லிப் பார்த்தார்: 'சாவித்திரி, இன்னும் நாலு வருஷமாவது நீ படித்தால்தான் நல்லது. அப்போதுதான் புத்தி விசாலமாகும்' என்று. எனக்குந்தான் படிக்க ஆசையாக இருந்தது. ஆனால் அந்தப் பாழும் படிப்பு ஆறு கிளாசுக்குமேலே ஏறவே மாட்டேன் என்றால் நான் தான் என்ன பண்ணுவது? அதற்கு ஏற்றாப் போல இந்தப் பாழும் நோவும் வரவர அதிகமாக ஆச்சு. இப்பக்கூட - அப்பா! மார்பைப் பிளக்கிறதே! ஏதாவது மனசுக்கு அதிகமாக வேலை கொடுத்து விட்டால் போச்சு. இந்த நாசமாய்ப் போகும் இரைப்பு
மணமாலையின்மீது அவள் மார்பு அழுந்தியது. வலி பொறுக்க முடியாமல் விம்மி விம்மித் துடித்தாள். புரண்டாள். படுத்திருக்கப் பிடிக்காமல் எழுந்து உட்கார்ந்தாள். புதுப் புடைவையின் மீது நறுமணம் வீசிக்கொண்டிருந்த ரோஜா மாலைக்குப் பதிலாக வெறும் நார் முறுக்கும், அதில் தொடுத்திருந்த கசங்கிப் போன மலர்க் காம்புகளும், உடம்பை உறுத்தும் ஜரிகைச் சரங்களும், வெளிப்பகட்டு மட்டுமே உள்ள காக்காய்ப்பொன் ரேக்குகளும் அவள் கண்ணுக்கு விகாரமாகத் தோன்றின. முன்பின் யோசியாமல் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி ஒரு மூலையில் எறிந்தாள். இதற்குள் அவளுக்கு இரைப்பும் அதிகமாக வந்துவிட்டது. தாங்கமுடியாமல் மார்பைப் பிடித்துக்கொண்டாள். மெல்ல நகர்ந்து சுவர் ஓரமாக உட்கார்ந்து சுவரில் சாய்ந்து கொண்டாள்.
இரைப்பு நின்று கொஞ்சம் சமாளித்துக் கொள்வதற்குச் சுமார் அரைமணி நேரத்திற்குமேல் ஆகிவிட்டது. அதுவரையில் அவள் இருந்த அறைக்குள் யாரும் வரவில்லை.
மெதுவாக எழுந்து அந்த அறையை விட்டு வெளியே கிளம்ப யத்தனித்தபோது அறை வாசற்படியில் ஒரு குரல் கேட்டது.
சாவித்திரி, நீ இங்கேயா இருக்கிறாய்?
என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தாள் நாகவல்லி.
நாகவல்லியைக் கண்டதும் சாவித்திரி சற்று அயர்ந்து போனாள். அந்த நேரத்திலே அந்த இடத்தில் அவள் தன் சகோதரியை எதிர்பார்க்கவே இல்லை. எனவே நாகவல்லி கேட்ட கேள்விக்குப் பதில் கூடச் சொல்லத் தெரியாமல் விழித்தாள் அவள்.
சாவித்திரி! என்ன இப்படிப் பயந்துபோனவள் போல நின்றுவிட்டாயே! நான்... இங்கே... வந்தது...
என்று ஏதோ சொல்ல வந்தவள் சட்டென்று நிறுத்தி விட்டு, அந்த அறையைக் கீழும் மேலுமாக ஏதோ ஆராய்வதுபோலப் பார்த்தாள். அவள் சுற்றுமுற்றும் பார்ப்பதைக் கண்ட சாவித்திரி, தன்னை ஏதோ பரிகாசம் செய்யத்தான் தன் தங்கை அத்தனை முஸ்தீபுகள் போடுகிறாள் என்பதைச் சுலபமாக உணர்ந்துகொண்டாள். மெல்லத் தலையை நிமிர்த்தி அவள் நாகவல்லியைப் பார்க்கும்போதே, அடி பெண்ணே, என்னைப் பரிகாசம் செய்யாதே. உனக்குக் கோடி புண்ணியம் உண்டு
என்று கெஞ்சுவதுபோல் இருந்தது அவள் முகம்.
சாவித்திரியின் முகத்தோற்றத்தைக் கண்டதும் நாகவல்லிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. எப்படியோ அடக்கிக் கொண்டு, அப்பாடா!
என்று ஒரு பெருமூச்சு விட்டு, நல்ல வேளை; அந்தமட்டும் இது உக்கிராண அறைதான்
என்று வாய்விட்டுச் சொன்னாள்.
இந்தக் கேலிப்பேச்சைக் கேட்டதும் சாவித்திரியின் முகம் சிவந்து போயிற்று. பின்னே என்ன அறை என்று பார்த்தாய்?
என்றாள் வெடுக்கென்று.
படுக்கை அறையோ என்னவோ என்று பயந்து போனேன். உம், இங்கே... உன்னைத் தவிர... வேறு யாரும்...
போதுமடி உன் பரிகாசம். இது நாட்டிய மேடை அல்ல. உன் நடிப்பையெல்லாம் அங்கே மட்டும் வைத்துக் கொள்.
அடே அப்பா! உனக்கென்ன இத்தனை கோபம் வருகிறது...? சாவித்திரி...! ஓ! இப்போதல்லவா தெரிகிறது! உன் அகத்துக்காரர் மோதிரத்தைப் பிடுங்கிக் கொண்டேனே என்கிற கோபம் போல் இருக்கிறது. அடியம்மா, உன் ஆஸ்தி பூராவையும் நான் அபகரித்துக் கொண்டது போல ஆத்திரப்படுகிறாயே. அந்த மோதிரம் ஒன்றும் எனக்கு வேண்டாமடி. இதோ அதைத் திருப்பிக் கொடுக்கத்தான் உன்னிடம் வந்தேன்.
நாகவல்லி பளிச்சென்று பேசியது சாவித்திரியின் இருதயத்தை நெகிழச் செய்துவிட்டது. 'எத்தனை வெள்ளை மனசுள்ள பெண் இவள்! சின்னக் குழந்தை போலப் பேசுகிறாளே. இவளைப்போய்க் கடிந்து கொள்ளவும் தோன்றியதே' என்று நினைத்தவண்ணம், நாகவல்லி, அசடு மாதிரி பேசாதே. அந்த மோதிரத்தைப் பற்றி நான் கேட்டேனோ உன்னை?
என்று உருக்கமான குரலில் பேசினாள்.
இல்லை; நீ கேட்காவிட்டாலும் நான் அதற்காகத் தான் உன்னிடம் வந்தேன். மோதிரம் எனக்கு எதற்கு? நீ ஆசை ஆசையாய் அத்திம்பேருக்கு வேண்டுமென்று அப்பாவிடம் சொல்லிப் பண்ணச் சொன்னாயே. இந்தா அவரிடமே திருப்பிக் கொடுத்து விடு.
ஊஹூம்.
அடே! ரொம்ப வெட்கப்படுகிறாயே. ஆமாம், இந்த அத்திம்பேரை முன்னே பின்னே தெரியவே தெரியாது. இதற்கு முன் கண்ணாலே கூடப் பார்த்ததில்லை இல்லையா? சபையில் பரிசாகக் கொடுத்ததாயிற்றே. நாமாகத் திருப்பிக் கொடுத்தால் நன்றாயிராதே என்று பார்க்கிறேன்.
அப்படியானால் பேசாமல் வைத்துக்கொள்ளேன். என்னை ஏன் உபத்திரவப்படுத்துகிறாய்?
ரொம்ப உபத்திரவந்தான் போ. இது உனக்கு உபத்திரவமாகத் தோன்றுகிறதாக்கும்? அப்படியானால் நானே கொண்டு போய்க் கொடுக்கிறேன். நீ கஷ்டப்பட வேண்டாம்
என்று கிண்டலாகக் கூறிவிட்டுக் கிளம்பினாள் நாகவல்லி.
நாகவல்லி அந்த அறையை விட்டுச் சென்றபின் சாவித்திரி யோசனையில் ஆழ்ந்துபோனாள். 'நீ கஷ்டப்பட வேண்டாம். நானே கொண்டுபோய்க் கொடுக்கிறேன். இந்த அத்திம்பேரை முன்னே பின்னே தெரியாது. கண்ணாலேகூட இதற்கு முன் பார்த்ததில்லை. இல்லையா?' என்பனபோன்ற நாகவல்லியின் வார்த்தைகள் அவளைப் பழைய நினைவுகளில் நிலை தடுமாறச் செய்தன.
இரண்டு வருஷங்களுக்கு முன் ஒரு நாள் மாலையில் தாயாரும் பிள்ளையுமாக வந்திருந்தார்கள். ஆம்; பெண் பார்க்கத்தான். முன் ஹாலில் ஒரு சோபாவில் அவர் உட்கார்ந்திருந்தார். அவர் தாய் எதிர் அறையில் பெண்களுடன் இருக்கிறாள். பரிபூர்ணமாகச் சிங்காரித்துக் கொண்டு வந்து பிதாவின் உத்தரவுப் பிரகாரம் சாவித்திரி நமஸ்காரம் செய்கிறாள் அவரை.
சாவித்திரி, டிபனும் காபியும் கொண்டுவா அம்மா!
என்கிறார் அப்பா.
சாவித்திரி சமையலறைப் பக்கம் போனபோது ஒரு வெள்ளித்தட்டில் பலகாரங்களும் ஒரு கூஜாவில் காபியுமாக எதிர்ப்படுகிறாள் நாகவல்லி. நாகவல்லி, அதைக் கொடு இப்படி.
பரவாயில்லை. நானே கொண்டுபோய்க் கொடுக்கிறேன். நீ சும்மா வா, போதும். புதுப்புடைவையையும் நகைகளையுமே உன்னால் சுமக்க முடியவில்லையே. நீ கஷ்டப்பட வேண்டாம்
என்றாள் நாகவல்லி.
பலகாரங்களையும் காபியையும் எடுத்துக்கொண்டு நாகவல்லி ஹாலுக்கு வந்தாள். அவளைப் பின் தொடர்ந்து வந்த சாவித்திரி எதிர்அறை வாசற்படியண்டையே நின்று விட்டாள்.
அவர் எதிரில் இருந்த மேஜையின்மீது பலகாரத் தட்டையும் கூஜாவையும் வைத்துவிட்டு, கூஜாவிலிருந்த காபியை ஒரு டம்ளரில் விட்டபோது அவர் நாகவல்லியைப் பார்ப்பதைக் கவனிக்கிறாள் சாவித்திரி; தான் நின்ற இடத்திலிருந்தே.
சில நாட்களுக்குப் பின் அவருடைய தாய் செய்தி சொல்லி அனுப்புகிறாள், தன் தகப்பனாருக்கு: 'பையன் இப்போது கல்யாணமே வேண்டாம் என்கிறான்' என்று.
என்ஜினீயரிங் காலேஜ் படிப்புச் செலவு பூராவையும் ஏற்றுக்கொள்வதாகப் பதில் விடுக்கிறார் அப்பா. ஆனால் அவரிடமிருந்தோ அவர் அம்மாவிடமிருந்தோ இரண்டு மூன்று நாட்கள் வரையில் எவ்விதமான பதிலும் இல்லை.
ஒரு நாள் அந்தச் சாஸ்திரி - ஆம், இந்தக் கல்யாணத்தை இரண்டு வருஷ காலமாகத் தலைபோட்டுக் கொண்டு முடித்து வைத்தாரே அவர் தாம் - வருகிறார் அப்பாவிடம். கூட அவர் தாயாரும் வருகிறாள். நெடுநேரம் வரையில் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குப்பின் ஒரு மாசங்கூட ஆகியிராது. அவர்கள் அந்தத் தெருவுக்கே குடித்தனம் வந்துவிட்டார்கள்.
அப்புறம் எத்தனையோ தடவை அந்தத் தெருவோடு அவர் நடந்து சென்றபோது அவள் அவரைக் காண நேரிட்டது. எத்தனையோ தடவை நாகவல்லியும் பார்த்திருக்கிறாள். ஆனால் ஒரு தரமாவது அவர் வீதியில் நடக்கும்