Nilave Nee Sol
By P.M. Kannan
()
About this ebook
கல்லூரி வாழ்வில் மாணவ மாணவியருக்கு இடையே ஏற்படும், நட்பு, போட்டி, பொறாமை, காதல் இவற்றை படம் பிடித்து காட்டும் கதை.
நன்கு படிக்கும் ஏழை மாணவனுக்கு , அரசியல் நிகழ்வும் அதன் பின்விளைவுகளையும் பற்றியது.
தமிழக அரசியலில் மாணவர்கள் செயல் பட ஆரம்பித்த சமயம் வெளிவந்த புதினம்.
பாலகுமார், பட்டாபி, வேங்கடாத்ரி, நிகிலா, ரமா சாந்தி இவர்களையும் பட்டாபி குடும்ப மர்மத்தையும் இறுதி வரை விறு விறுப்பாக எடுத்துச் செல்லும் நாவல்.
Read more from P.M. Kannan
Annai Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsMannum Mangaiyum Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakkavillai Rating: 0 out of 5 stars0 ratingsPennukku Oru Neethi Rating: 0 out of 5 stars0 ratingsPavazha Maalai Rating: 0 out of 5 stars0 ratingsKannigathaanam Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Madhuvum Rating: 0 out of 5 stars0 ratingsInba Puthaiyal Rating: 0 out of 5 stars0 ratingsMalar Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsThevaanai Rating: 0 out of 5 stars0 ratingsPenn Deivam Rating: 0 out of 5 stars0 ratingsNagavalli Rating: 0 out of 5 stars0 ratingsVazhvin Oli Rating: 0 out of 5 stars0 ratingsInba Kanavu Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to Nilave Nee Sol
Related ebooks
Poojaikku Vantha Malarey Vaa...! Rating: 0 out of 5 stars0 ratingsMaanbumigu Maapillai Rating: 0 out of 5 stars0 ratingsSollamale Naan Ketkirean Rating: 5 out of 5 stars5/5Thayumanavan Rating: 0 out of 5 stars0 ratingsSippikkul Muthu Rating: 5 out of 5 stars5/5Oru Naal Pothuma? Rating: 0 out of 5 stars0 ratingsKaathil Sollu Kaadhale Rating: 0 out of 5 stars0 ratingsAnge Sendru Anbai Sollu Rating: 0 out of 5 stars0 ratingsNilave, Nil! Rating: 5 out of 5 stars5/5Kanavu Kaadhalan Rating: 0 out of 5 stars0 ratingsNaalaikum Nilavu Varum! Rating: 0 out of 5 stars0 ratingsVaasamilla Malarithu Vasanthathai Thediyathu Rating: 0 out of 5 stars0 ratingsNeeye.. Neeye.. Kadhal Theeye.. Rating: 4 out of 5 stars4/5Amma Kaadhalikkirean Please... Rating: 0 out of 5 stars0 ratingsKanney, Nerungathey! Rating: 0 out of 5 stars0 ratingsSollamal Kol Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naanariven Rating: 5 out of 5 stars5/5Innoru Karanam Rating: 0 out of 5 stars0 ratingsAdhu Mattum Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsPiragu Naan Varuven Rating: 0 out of 5 stars0 ratingsPencil Meesai Rating: 5 out of 5 stars5/5Yamunai Aatriley… Era Kaatriley… Rating: 4 out of 5 stars4/5Adimaadugal Rating: 0 out of 5 stars0 ratingsPani Malaigal Rating: 0 out of 5 stars0 ratingsThavamirunthean! Varam Tharuvai… Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vamsam Rating: 0 out of 5 stars0 ratingsNizhalodu Nizhalaga Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsநிறம் மாறும் பூக்கள் Rating: 0 out of 5 stars0 ratingsIniya Unarvey Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nilave Nee Sol
0 ratings0 reviews
Book preview
Nilave Nee Sol - P.M. Kannan
http://www.pustaka.co.in
நிலவே நீ சொல்
Nilave Nee Sol
Author:
பி.எம். கண்ணன்
P.M. Kannan
For more books
http://www.pustaka.co.in/home/author//pm-kannan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
1
வீட்டுக்குள் நுழைந்த பாலகுமார், நெற்றி வியர்வையைச் சுண்டிவிட்டான். பகலெல்லாம் தாம்பரத்தில் பட்ட அலைச்சல் அவன் முகத்தில் நன்றாகத் தெரிந்தது.
சாந்தி நடுக்கூடத்தில் இருந்தாள். பட்ட கஷ்டத்துக்குப் பலன் கிடைத்தது என்று சொல்ல ஆவலோடு சென்றவன், தங்கையின் முகத்தில் சூழ்ந்திருந்த கலக்கத்தைக் கவனித்தான். அவன் நெஞ்சு சிவுக்கிட்டது.
சாந்தி ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாள்?
அந்தக் கவலை ஒரு கேள்வியாக வெளிப்படுமுன், கூடத்து அறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்த வேங்கடாத்ரி குரல் எழுப்பினார்.
யார், உன் அண்ணனா?
ஆம் அப்பா,
என்ற சாந்தி, காப்பி கொடுக்கும் சாக்கில் தமையனைச் சமையலறைக்கு அழைத்துச் சென்று, தாழ்ந்த குரலில் கேட்டாள்: செல்லப்பா ஸிண்டிகேட் விளம்பரம் ஒன்று பத்திரிகையில் வந்திருந்ததே, பார்த்தீர்களா அண்ணா?
இல்லையே. இரண்டு நாளாக வேலை சரியாக இருந்தது. பேப்பரே பார்க்கவில்லை. ஏன் கேட்கிறாய்?
ஆமாம், உன் அண்ணனுக்கு ஓயாத வேலை!
என்று உறுமிக்கொண்டே அங்கே தோன்றினார் வேங்கடாத்ரி. காலையில் எழுந்தது முதல் பகல் பன்னிரண்டு மணிவரையில் கெடியாரக் கடைப்பக்கம் கூடப் போகாமல் நாயலைகிற மாதிரி அலைந்து கொண்டிருந்தான் பார்! வேலை... சரியாயிருந்தது! பெரிய வேலை...! எந்தத் தடியனாவது ரோட்டிலே நடக்கத் தெரியாமல் காரிலே பஸ்ஸிலே மாட்டிக் கொண்டிருப்பான். இந்தப் பரோபகாரிக்கு மூக்கிலே வியர்த்திருக்கும்...
விமரிசனம் செய்த வேங்கடாத்ரி, சாய்வு நாற்காலியில் போய்ச் சாய்ந்துகொண்டார்.
அமைதியாக இருக்கும்படி அண்ணனுக்கு ஜாடை காட்டிவிட்டுச் சென்ற சாந்தி, தந்தையிடம் மெதுவாக ஆரம்பித்தாள்.
அப்பா!
ம்!
அண்ணா பாவம்... எஸ்.எஸ்.எல்.சி. முடித்த பிறகு, மூன்று வருஷமாகக் கெடியாரக் கடையில் உழைத்து உழைத்துக் களைத்திருக்கிறார்...
போதும் போதும். அண்ணன் மேலே காற்றடிக்கக் கூடாது என்கிறாய் நீ!
- வேங்கடாத்ரி இருமினார். கெடியாரக் கடைக்குப் போகவேண்டியவன் ஊர் சுற்றிக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? நான் அவன் கெட்டுப்போக வேண்டுமென்றா சொல்லுவேன்? சம்பாதிக்கிற காலத்திலே சம்பாதித்தால்தானே பின்னால் நிம்மதியாக இருக்கலாம்?
அதற்குத்தான் அப்பா சொல்ல வந்தேன்... பத்திரிகையிலே போட்டிருந்தது...! செல்லப்பா ஸிண்டிகேட்டிலே வேலைக்கு ஆள் தேவையாம்.
தயங்கித் தயங்கிப் பேசியவள், முடிக்கத் தெரியாமல் தவித்தாள்.
ஏன்? இப்போது 'குரு ரிப்பேர்ஸ்'ஸிலே பார்க்கிற வேலைக்கு என்ன குறைவாம்? நேற்று சாயந்தரம்கூட குருசாமி சொல்லிக் கொண்டிருந்தாரே வேங்கடாத்ரியிடம் பாலகுமார் வந்ததிலிருந்து மூன்று வருட காலமாகக் கெடியாரக் கடை ரொம்ப முன்னேறியிருக்கிறதாம். அடுத்த மாதத்திலேயிருந்து பத்து ரூபாய் கூடுதலாகச் சம்பளம் போட்டுத் தரப்போகிறாராம். கேட்க மகிழ்ச்சியாயிருந்தது வேங்கடாத்ரிக்கு. இப்போது திடீர் என்று ஒரு வெடி குண்டைத் தூக்கிப் போடுகிறாளே சாந்தி?
மென்று விழுங்கினாள் சாந்தி. அப்பா, 'செல்லப்பா ஸிண்டிகேட்' வேலை அண்ணாவுக்கு அல்ல.
சொல்லி முடிப்பதற்குள் உடல் முழுவதும் 'குப்’பென்று வியர்த்துவிட்டது அவளுக்கு.
பின்னே யாருக்கு?
எனக்குத்தான்.
சொற்கள் தயங்கிக் குரலெடுத்து வெளியே வந்தன.
உனக்கா? வேலையா?
சீறிக்கொண்டு நிமிர்ந்தார் வேங்கடாத்ரி. சாந்தி! உனக்கென்ன பைத்தியமா? நாளை மறுநாள் உன்னைப் பெண் பார்க்க அவர்கள் வருவதாகக் கடிதம் வந்திருக்கிறது...
சாந்தியின் முகம் வெளிறிற்று. பாலகுமாரின் நெற்றி நரம்புகள் புடைத்தெழுந்தன. பெண் பார்க்க வரப்போகிறவர் யாராக இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும்.
அப்பா! சாந்திக்கு இப்போது கல்யாணத்துக்கு என்ன அவசரம்?
உணர்ச்சி தெறித்தது பாலகுமாரின் குரலில்.
ஆமாம். சாந்திக்கு அவசரமில்லை. உனக்குத்தான் அவசரம்.
இரண்டு பேருமே அதைப்பற்றி இப்போது யோசிக்கவில்லை.
இரண்டு பேருக்குமாகச் சேர்த்து நானே யோசித்து முடிவு பண்ணிவிட்டேன். இனி நீங்கள் யோசிக்க ஒன்றுமில்லை.
அழுத்தமாகப் பேசிவிட்டு எழுந்து நடந்தார் வேங்கடாத்ரி.
என்ன முடிவு அப்பா அது?
கற்பனையில் மிதந்தார் தந்தை. அவருக்கு எப்படியும் சாந்தியைப் பிடித்துவிடும்.
பிடிக்காமலிருக்குமா?
பல்லைக் கடித்தான் பாலகுமார்.
நாளைக்கே உனக்கும் அவர் சிபார்சிலே இன்னும் நல்ல வேலையாகக் கிடைக்கும்.
அப்படியானால் அண்ணாவின் படிப்பு?
குறுக்குக் கேள்வி எழுப்பிய சாந்தியை எரித்து விடுபவர்போல் நோக்கினார் தந்தை.
படிப்புக்கு ஒரு முழுக்குப்போட்டு மூன்று வருஷம் ஆகிறது. இன்னும் என்ன படிப்பு, படிப்பு? நான் இந்த எஸ்.எஸ்.எல்.ஸி. கூடப் படிக்கவில்லை. என்ன கெட்டுப் போயிற்று அதனால்? முப்பத்தைந்து வருஷ காலம் சர்வீஸிலே ஒரு தப்பு தண்டா உண்டா? இதோ நிம்மதியாக அறுபது ரூபாய் பென்ஷன் வாங்குகிறேன்.
காலம் மாறிப்போச்சு அப்பா. நான் மேலே படிக்க அனுமதி கொடுங்கள்
என்றான் பாலகுமார்.
மகனை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தார் வேங்கடாத்ரி. மூன்றாண்டுக் காலத்துக்கு முன்னர் ஒரு நாள் மாலை அதே நிலையில் அவன் தம்முன் நின்ற காட்சி அவர் கற்பனையில் மிதந்தது. அன்றும் அவன் தன் பிடிவாதத்தையே சாதித்துக் கொண்டது நினைவுக்கு வந்தது. ஆனால் இன்றைக்கோ, விட்டுக்கொடுக்க அவர் தயாராக இல்லை.
டே பாலு! நீ கல்லூரிக்குப் போய்ப் படிக்க என்னிடம் பணம் கிடையாது
என்று இரைந்தார் வேங்கடாத்ரி.
என் கல்யாணத்துக்கு மட்டும் பணம் வேண்டியிருக்காதா அப்பா?
என்று இழுத்தாள் சாந்தி.
அதற்கு என்னமோ பண்ணிக் கொள்கிறேன்.
அந்த என்னமோ பண்ணுவதைத்தான் அண்ணா படிப்புக்குப் பண்ணுங்களேன். எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாமே?
வேங்கடாத்ரி எகத்தாளமாகச் சிரித்தார். மாப்பிள்ளை கல்யாணச் செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வார். ‘என் பெண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டாம்; என் பிள்ளையின் படிப்புச் செலவை ஏற்றுக்கொள்' என்றால் சம்மதிப்பாரா?
பாலகுமாரின் முகம் சிவந்தது. அப்பா! என் படிப்புக்காக நீங்கள் ஒரு செப்புக் காசு செலவழிக்க வேண்டாம்.
போதும் நிறுத்தடா! அப்படி மானமுள்ளவனாயிருந்தால் உன் தங்கைக்கு மாப்பிள்ளை செலவில் கல்யாணம் வேண்டாம். உன் செலவிலேயே நடத்திவிடு!
எனக்கு இப்போது கல்யாணம் வேண்டாம் அப்பா!
டே பாலு...! ஏ சாந்தி...!
இருவருமே எதிரில் இல்லை. வேங்கடாத்ரியின் மோவாய்க் கட்டை முழ நீளம் நீண்டது. ஒரு முறை தடவி விட்டுக் கொண்டார். பிறகு ஏதோ முணுமுணுத்துக் கொண்டே எழுந்து நடந்தார்.
***
குருசாமி, கடையில் உட்கார்ந்திருந்தார். வேங்கடாத்ரி சற்றுத் தொலைவில் வருவதைப் பார்த்ததும், வாருங்கள் வாருங்கள்! இப்பத்தான் உங்களை நினைத்தேன்,
என்று மலர்ச்சியுடன் வரவேற்றார். இருவரும் இணை பிரியாத தோழர்கள். குருசாமியின் ரிப்பேர் கடைதான் வேங்கடாத்ரியின் பொழுதுபோக்கும் இடம்.
ஆலந்தூர் கடைத்தெருவிலே குருசாமி ஒரு கடியார ரிப்பேர் கடை வைத்திருந்தார். அண்மையிலுள்ள ஒரு சின்னத் தெருவிலே வேங்கடாத்ரி வசித்து வந்தார்.
தம்பி கல்லூரியிலிருந்து திரும்பி வந்துவிட்டானா?
என்று விசாரித்தார் குருசாமி.
கல்லூரியா? எந்தக் கல்லூரியிலிருந்து?
நாற்காலியை இழுத்தவர் உட்காராமலேயே நின்றுவிட்டார்.
கல்லூரியிலே சேர 'அப்ளிகேஷன்' வாங்கவேண்டும், அரை நாள் லீவு கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டு போனானே?
வேங்கடாத்ரியின் நெஞ்சு வரண்டது. குருசாமி தம் போக்கில் தொடர்ந்தார்.
வேங்கடாத்ரி நீங்கள் கொடுத்து வைத்தவர். எனக்கும் தான் இருக்கிறதே ஒன்று. பணத்தைக் கொட்டிக் கொடுத்துப் படிக்கச் சொன்னால் பந்தயத்தில் ஓடப்போகிறது...! ம்...
வேங்கடாத்ரி அவர் சொல்லிக் கொண்டிருந்ததைக் கவனிக்கவில்லை. கல்லூரியில் சேர்வதென்று தீர்மானித்து, அதற்கான நடவடிக்கையும் எடுத்துக்கொண்டுவிட்டு ஒப்புக்கல்லவா பாலகுமார் அவரிடம் கேட்டிருக்கிறான்! அவருக்கு ஆத்திரம் மேலிட்டது. குருசாமி! எனக்கு இனிமேல் இங்கே வேலை இல்லை. நான் எங்கேயாவது தொலைகிறேன்...
என்னங்க அது?
குருசாமி திடுக்கிட்டார். என்ன சொல்கிறீர்கள்?
திருமகள் டிராவல்ஸ் யாத்திரை ஸ்பெஷல் விடுகிறார்களாம். காசி, ராமேசுவரம் என்று நாலு இடங்களுக்குப் போய்த் தரிசனம் பண்ணி, போகிற வழிக்காவது புண்ணியம் தேடிக்கொள்ளலாம் என்று பார்க்கிறேன்.
குரலில் தெரிந்த கசப்பும் கோபமும் குருசாமியைத் திகைக்க வைத்தன.
வேங்கடாத்ரி! என்ன உங்களுக்குப் புத்தி இப்படிப் போகுது! மணி மணியாகப் பிள்ளையும் பெண்ணும்! என் பிள்ளையைப்போல இருந்தால் நீங்கள் இன்னும் என்ன பண்ணுவீர்களோ?
பாலகுமாரிடம் வேங்கடாத்ரிக்குக் கோபம் ஏற்பட்டிருந்ததை ஊகித்துவிட்ட குருசாமி, அவர் மனத்தை மாற்றும் நோக்கத்துடன் தன் பிள்ளையைப் பற்றிச் சற்று மிகையாகவே வசை புராணம் பாடினார். பாருங்கோ... ஒழுங்காகப் படித்துப் பாஸ் பண்ணுடா என்றால் புத்தகத்தையே தொடமாட்டேன் என்கிறான். பாலகுமாரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளடா. எத்தனை கஷ்டத்திலேயும் எப்படிப் படிக்கிறான். எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்கிறான். அவனைப்போல இந்த ரிப்பேர் வேலைகளையாவது கற்றுக்கொள்ளடா என்றால் இந்தப் பக்கமே திரும்புகிறதில்லை. கெடியாரத்தின் முள்ளைச் சுற்றிச் சுற்றி ஓட்டிக்கொண்டிருக்க மாட்டானாம் அவன். மைல் கணக்கில் ஓடிக் கோப்பைகள் பரிசு பெறுவானாம். பைத்தியக்காரப் பிள்ளை! பந்தயத்தில் ஜெயித்த வெள்ளிக் கோப்பைகளா நாளைக்குச் சோறு போடப்போகின்றன?
குருசாமி, உங்கள் பையனுக்குச் சம்பாதித்துச் சாப்பிடவேண்டும் என்கிற தேவையில்லையே, நீங்கள் சம்பாதித்து வைத்திருப்பதே நாலு தலைமுறைக்குக் காணுமே!
காணும், காணும்! பையன் இப்போது செலவு பண்ணுகிற விதத்தைப் பார்த்தால் நான் சம்பாதித்து வைத்தது நாலு தலைமுறைக்கா காணும்! நாற்பது தலைமுறைக்குக் காணும்! வேங்கடாத்ரி! ஏதோ தூரத்துப் பச்சை என்கிற போக்கிலே நீங்கள்கூடப் பேசுகிறீர்களே!
எது எப்படி இருந்தால் என்ன? நான் காசிக்குப் போயாக வேண்டும்!
வேங்கடாத்ரி! இன்னும் நாலு வருஷம் சும்மா பொறுத்துக் கொள்ளுங்கள். தம்பி தலையெடுக்கட்டும் பாவம். அப்புறம் காசியும் ராமேசுவரமும் மட்டும் என்ன? அமெரிக்காவுக்குக்கூடப் போகலாம்.
கோபத்தில் வேங்கடாத்ரிக்கு மூச்சு வாங்கிற்று. அவன் என்ன செய்தாலும் சரி உங்களுக்கு. இல்லையா?
சந்தேகமென்ன? இதோ நீங்களே பாருங்கள். இரண்டு நாளைக்கு முன்னே நம்ம பிள்ளையாண்டான் கடை மூடுகிற சமயத்திலே திடும் என்று வந்து நுழைந்தான். தம்பிதான் அன்றைய ரொக்கத்தை எண்ணிக் கணக்கு வைத்துக் கொண்டிருந்தான். 'அப்பா!' என்றான் நம்ம பையன். 'ஒரு ஐம்பது ரூபாய் வேண்டுமப்பா. நாளைக்கு ஒரு சின்ன பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். நேற்று ஒரு மைல் ஓட்டத்தில் 'ஸ்டேட் ரிகார்டை பிரேக்' பண்ணிவிட்டேன் தெரியுமா? அதற்காகத்தான் பார்ட்டி' என்றான். என் மண்டையைப் ‘பிரேக்' பண்ணின மாதிரி இருந்தது. அதற்குள் உங்கள் பிள்ளை, அதான் நம்ம தம்பி பாலு, 'ஐம்பதும் நூறும் எதற்கு? சும்மா ஸ்லைட்டாய்க் காப்பி கொடுத்துச் சமாளிக்கலாம்,' என்று நல்ல தனமாய்ச் சொலி அனுப்பினான் அவனை. ஏதடா, அப்பன் கடையொன்று வைத்து நடத்துகிறானே, நம்மைப்போல பையன் ஒருவன் உடனிருந்து வேலை செய்துகொண்டிருக்கிறானே என்கிற எண்ணம் ஏதாவது இருந்தால் தானே என் பையனுக்கு. பணம் எப்படிக் குட்டி போடுகிறது என்றுகூடக் கருதியிருக்கமாட்டான். 'ட்ராலாலல்லல்... லா...!' என்று பாடிக்கொண்டே மண் அதிர நடந்து மறைந்து போகிறான்! என்னத்தைப் பண்ணுவது? சொல்லுங்கள் வேங்கடாத்ரி!
குருசாமி எவ்வளவு தான் முயன்றும் வேங்கடாத்ரியின் மனத்தை வேறு திசையில் திருப்ப முடியவில்லை.
ம்... சொல்வதற்கு என்ன இருக்கிறது?
குருசாமி நண்பரைத் தேற்றினார். சும்மா மனசைப் போட்டு அலட்டிக் கொள்ளாதீர்கள். தம்பியையும் தான் மூன்று வருடமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேனே கடையிலே? நல்ல பிள்ளையின் மனசைப் புண்படுத்தாதீர்கள்,
என்று புத்திமதி கூறினார்.
வேங்கடாத்ரியின் முகத்தில் ஏற்கனவே இலேசாகப் படர்ந்திருந்த தோல்வியின் சாயை இப்போது அழுத்தமாகக் கன்னங் கரேலென்று கரி பூசியது போலக் கப்பிக் கொண்டது.
தமக்கு ஆறுதலும் ஆதரவும் தேடிவந்த இடத்தில் இரண்டுமே கிடைக்கவில்லை. ஆத்திரம் அதிகப்பட்டது தான் மிச்சம்.
***
பதைபதைக்கும் உள்ளமும் பதற்றம் காட்டும் கால்களும் பாலகுமாரைக் குறுக்கும் நெடுக்குமாக நடைபோடச் செய்தன.
ஒருமுறை நின்று அவன் தன் தங்கையைப் பார்த்த பார்வையில் தெரிந்தது அன்பினால் ஏற்பட்ட அனுதாபமா? ஆழ்ந்த அதிருப்தியா?
என்னை மன்னியுங்கள் அண்ணா! தெரியாமல் செய்து விட்டேன்,
என்று குழறினாள் தங்கை.
சாந்தி! அப்பாவுக்குத் தெரியாமல் அவர் ரகசியமாகச் சேர்த்து வைத்திருந்த தொகையைக் களவாடிக் கொண்டு போய்ப் பணம் கட்டி வேலை பெறுவதா?
பாலகுமாரின் குரலில் கண்டிப்பு இருந்தது. இப்போது ஆச்சரியமும் சேர்ந்து கொண்டது. நீ சொல்லுகிற வரையில் அப்பாவிடம் அவ்வளவு பணம் இருந்தது என்று எனக்கே தெரியாதே.
எனக்கும் நாலு நாட்களுக்கு முன்புதான் தெரியும் அண்ணா! பெட்டியில் வைத்தபோது தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. உங்கள் நன்மையைக் கருதித்தான் செய்தேன் அண்ணா!
அண்ணனிடம் உள்ள அன்பு அவள் தவறை மறைக்க முயன்றது.
இப்போது என்ன பண்ணுவது சாந்தி?
அடுத்த பென்ஷன் தினத்துக்கு முன் அப்பா பெட்டியைத் திறக்கமாட்டார். அதற்குள் எப்படியாவது அந்தத் தொகையைத் திரும்பவும் பெட்டியில் வைத்துவிடலாம்.
யோசனை சொன்னாள் சாந்தி.
எப்படி முடியும் சாந்தி? ஐநூறு ரூபாய்! அடுத்த மாதத்திற்குள் எப்படிப் புரட்ட முடியும்?
நீங்கள் படிக்க வேண்டுமே அண்ணா! நான் உத்தியோகம் பார்த்துச் சம்பாதித்தால் தானே நீங்கள் படிக்க முடியும்?
நடந்த காரியம் நடந்துவிட்டது. எப்படியும் பணத்தைத் திருப்பி வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் அப்பாவுக்கு என்ன நேரிடும் தெரியுமா?
நினைக்கவே நடுங்கிற்று, சாந்தியின் நெஞ்சம்.
பயமுறுத்தாதீர்கள் அண்ணா. நடக்கவேண்டியதைச் சொல்லுங்கள்.
எப்படியும் பணத்தைத் திருப்பிப் பெட்டியில் வைத்தாக வேண்டுமே?
சாந்தியின் இதயத்திலிருந்து ஒரு நெடுமூச்சு வெளியேறியது. தன் மனப்பளுவில் பாதியை அவள் தன் அண்ணன் மனத்துக்குள் ஏற்றிவிட்டாள். அப்போது அவள் நெஞ்சிலிருந்து இன்னொரு குரல் கேட்டது: 'அதையும் சொல்லிவிடு!'
அதைச் சொல்வதற்கு அவள் தயங்கவேண்டாம். முன் போலத் தவிக்கவும் வேண்டாம். அண்ணனுக்கு எத்தனை மகிழ்ச்சி ஏற்படும் அந்தச் செய்தியைக் கேட்கும்போது?
அண்ணா!
என்றாள் ஆர்வம் ததும்பும் குரலில். இன்னொரு விஷயம் அண்ணா.
இன்னும் என்ன?
அம்மா படத்தைப் பார்த்தேன், அப்பா பெட்டியில்.
என்ன! அம்மா படமா? அப்பா பெட்டியிலா? என்ன அதிசயம் இது சாந்தி?
பாலகுமாரால் நம்பமுடியவில்லை. அம்மாவைப் பற்றி இதுவரையில் அப்பா மூச்சுகூட விட்டதில்லையே நம்மிடம்? அப்பேர்ப்பட்டவர் அம்மா படத்தைப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கிறாரா?
பூமாலையுடன் பட்டுத் துணிப்பை தைத்துப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் அண்ணா!
அப்படியா?
என்னைப் பார்த்தால் அம்மாவைப் பார்க்க வேண்டாம். அசல் என் அச்சேதான் அம்மா! அவள் அச்சேதான் நான்.
சாந்தியின் குரலில் கனிந்திருந்த நெகிழ்ச்சி பாலுவின் உள்ளத்தைத் தொட்டது.
படம் பெட்டியிலா இருக்கிறது?
இல்லை. நான் தனியாக எடுத்து வைத்திருக்கிறேன்.
எங்கே, பார்க்கலாம்,
என்று சொல்லியவாறே சாந்தி முன் நடக்கத் தொடர்ந்தான் பாலகுமார். சின்னம் சிறு வயதில், நினைவு தெரியாத காலத்தில் பார்த்தது. அம்மா எப்படி இருப்பாள்? ஆவலோடு நடந்தான்.
வாசலில் காலடியோசை கேட்டது.
*****
2
அன்றிரவு வேங்கடாத்ரி தூங்கின பிறகுதான் பாலகுமாருக்கு அந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
அம்மா! படத்தையும் சாந்தியையும் மாறி மாறிப் பார்த்துப் பிரமித்துப் போனான் பாலகுமார். சாந்தி கூறியது உண்மையே. அவளைப் பார்த்தால் அந்தப் படத்தில் இருக்கும் உருவத்தைப் பார்க்க வேண்டாம். ஒரே அச்சு. ஒரே வார்ப்பு.
அம்மாவுக்கும் தங்கைக்கும் இடையே இருந்த முக ஒற்றுமை பாலகுமாரை நெகிழ வைத்தது. சாந்திக்குத்தான் அவனிடத்தில் எவ்வளவு பாசம். அவன் மேல்படிப்புப்படித்து முன்னுக்கு வரவேண்டும் என்பதில் எத்தனை அக்கறை. 'அம்மா! நீ எனக்கு இல்லாத குறையைப் போக்க உன் மகள் இருக்கிறாள் அம்மா!' என்று அவன் நெஞ்சு நன்றி கூறிற்று.
அண்ணா! மாதாமாதம் பென்ஷன் வாங்கிக்கொண்டு வரும்போது அப்பா இரண்டு முழம் பூ வாங்கி வருவாரே, அதில் ஒரு முழம் கிள்ளி சுவாமி படத்துக்கு வைப்பார். ஒரு சாண் என்னிடம் கொடுப்பார். இன்னொரு சாண் பூவை எடுத்துக் கொண்டு உள்ளே போய்விடுவார். இல்லையா? இப்போது தான் தெரிகிறது, அப்பா அந்தப் பூவை என்ன பண்ணுகிறார் என்பது!
என்று சாந்தி அண்ணன் காதில் கிசுகிசுத்தாள்.
சாந்தி. நான்கூடக் கவனித்திருக்கிறேன். ஆனால் அதைப்பற்றி இதுவரை எண்ணிப் பார்த்ததில்லை. பணத்தைப் பெட்டியில் வைக்கிறபோது பூவோடு வைக்கிறார், அது அவர் பழக்கம் என்று நினைத்தேன்,
என்று பதிலளித்தான் பாலகுமார். தாயின் நினைவுக்குத் தந்தை ரகசியமாகச் செய்து வந்திருக்கும் மரியாதையை நினைக்கும்போது அவன் கண்கள் பனித்தன.
மாதச் செலவுக்கு வேண்டிய பணத்தை வேங்கடாத்ரி அவ்வப்போது எண்ணிக் கொடுப்பார். அப்போதெல்லாம் அவர் பெட்டி திறக்காது. அறையிலிருந்த அலமாரிக் கதவு தான் திறக்கும். அந்த 'அப்பா அலமாரி’யையும் பாலுவோ சாந்தியோ திறந்து பார்த்தது கிடையாது. அவர் பெட்டியையும் மனத்தையும் போல அதுவும் பூட்டிக்கிடப்பது வழக்கம்.
பெட்டிக்குள் பணமும் படமும் இருந்ததை நீ எப்படிக் கண்டுபிடித்தாய், சாந்தி?
என்றான் பாலகுமார்.
அவள் பெட்டியைத் திறந்து பார்க்க நேர்ந்ததே எதிர்பாராத நிகழ்ச்சி.
செல்லப்பா ஸிண்டிகேட் விளம்பரத்தைப் பார்த்து விட்டு அவள் அண்ணனுக்கும்கூடத் தெரியாமல் அதற்கு ஒரு மனு எழுதிப் போட்டுவிட்டாள். அண்ணன் படிப்புக்கு அவள் உதவியாயிருக்க முடியும், உதவி செய்தாக வேண்டும் என்கிற நோக்கமே காரணம். சில நாட்களுக்கு முன் பேட்டிக்கு அழைப்பு வந்தது. சாந்தி போய்ப் பேட்டி கண்டு திரும்பி விட்டாள். அங்கே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவள் அளித்த பதில்கள் திருப்திகரமாக அமைந்துவிட்டன. அவளுக்கு எப்படியும் வேலை கிடைக்கும் என்பதும் தெரிந்துவிட்டது. ஆனால் ஒரு நிபந்தனை. பொறுப்பு மிக்க அந்தப் பணியை ஏற்க ஐந்நூறு ரூபாய் டிபாஸிட் கட்டவேண்டும்.
பேட்டியிலிருந்து திரும்பியவளுக்கு அன்றிரவு உறக்கம் வரவில்லை. அண்ணன் பாலு அன்றைய உழைப்புக்குப் பிறகு அலுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறான். அப்பாவின் குறட்டையும் பலமாகக் கேட்கிறது. சாந்தி தவிக்கிறாள். ஐந்நூறு ரூபாய்க்கு எங்கே போவேன்? எப்படி டிபாஸிட் கட்டுவேன்? நல்ல வேலையாயிற்றே? மாதம் நூற்றிருபது ரூபாய் சுளையாக கிடைக்குமே! அண்ணனும் கல்லூரியில் சேர்ந்து நிம்மதியாகப் படிக்க முடியுமே! என்ன பண்ணுவேன்?
திடும் என்று ஓர் குழறல்! ழா... ழா... யா... ரா... டேய்... ழேய்...
பொட்டென்று நின்றுபோன குறட்டையொலியும், உடனடியாக எழும்பிய குழறல் ஒலியும் அப்பாதான் வாய் பினாத்துகிறார் என்று கட்டியம் கூறுகின்றன. அந்த ஓசை கூடக் கேட்கவில்லை பாலுவுக்கு. அத்தனை அயர்ச்சி அவன் உடலில். சாந்திக்குத் திகைப்பும் பயமும் ஏற்பட்டுப் புரளவொட்டாமல் தடுக்கின்றன. திக்திக்கென்று நெஞ்சு அடித்துக் கொள்கிறது. அப்பா ஏன் இப்படிக் கூவினார்? எதையாவது பார்த்துப் பயந்திருப்பாரா? சாந்திக்கு நினைக்கக்கூட நேரமில்லை. அதோ அப்பா படுக்கையில் இருந்து எழுந்துவிட்டார். ஒரு வினாடி நேரம் நின்று சுற்றுமுற்றும் பார்க்கிறார். பிறகு மெல்ல அடியோசை கேட்காமல் நடந்து சென்று கூடத்து அறைக்குள் போகிறார். மறுவினாடி அவருக்குப் பின்னால் கதவு சாத்தப்படுகிறது.
சாந்திக்கு நெஞ்சு ‘பக்பக்' என்று அடித்துக்கொள்கிறது. அவள் உடல் படுக்கையில் நிலை கொள்ளவில்லை. நடுநிசிக்கு மேலிருக்கும். எங்கிருந்தோ ஓர் ஆந்தை கிளை காட்டும் சத்தம் 'சளக்சளக்' என்று கேட்கிறது.
துள்ளி எழுந்தவள் விலவிலத்து நின்றே போகிறாள் கணநேரம். உள்ளே ஏதோ உருளும் ஓசை. மெல்ல நிதானித்துக் கொண்டு அடிமேலடி வைத்து நடந்து அறைக்கதவை அடைகிறாள் சாந்தி! கதவு ஒருக்களித்தாற்போல் சாத்தியிருக்கிறது. இடுக்கின் வழியாகப் பார்வையைச் செலுத்துகிறாள். உள்ளே விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. திறந்திருந்த பெட்டியின் எதிராகச் சிலையடித்தாற்போல அப்பா குந்தியிருக்கிறார். அவர் கையிலே என்ன? கண்களைக் கூராக்கிக் கொண்டு பார்க்கிறாள் சாந்தி. அத்தனையும் நோட்டுகள்! அவள் கண்களையே சாந்தி நம்பவில்லை. அப்பாவுக்கு ஏது இத்தனை பணம்? எண்ணிப் பார்க்கிறாரே அவர் இந்த வேளையில்? இரண்டும் மூன்றுமாகச் சேர்த்து வைத்த பணம் போலும். திருடன் வந்துவிட்டான் போலிருக்கிறது அவர் கனவிலே. அதுதான் வாய் குழறி விழித்துக் கொண்டு எழுந்துபோய்ப் பணம் பத்திரமாய் இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்கிறார்!
உண்மையில் திருடன் அல்லது திருடி இதுவரையில் வரவில்லை. இப்போதுதான் உளவு கண்டு கொண்டாள், கதவிடுக்கின் வழியாக! வேங்கடாத்ரி பெட்டியைப் பூட்டி, விளக்கை அணைத்து விட்டுத் திரும்பி வந்து படுத்தபின் சிறிது நேரத்தில் தூங்கியும் போகிறார். அவரது குறட்டையொலி ஒரே நிதானத்துடன் கேட்கிறது. அப்பா திரும்பிப் படுக்கும்போது அவர் கால்பட்டுக் கிணிக் என்று ஏதோ ஓசை கேட்கிறது. சாந்திக் கழுகுக்கு மூக்கிலே வியர்க்கிறது. அவள் ஓசைப்படாமல் எழுந்து போய்ப் பார்க்கிறாள். அப்பாவின் இடுப்பில் செருகியிருந்த சாவி வளையம் அவர் காலடியில் கிடக்கிறது. டெபாஸிட்... உத்தியோகம்... அண்ணா படிப்பு... நெஞ்சில் புடைத்துக்கொண்டு எழுப்பிய திகில், பயம், கேள்வி, பதில் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டுச் செயலில் இறங்குகிறாள் சாந்தி. இதையெல்லாம் விவரித்துவிட்டு, அப்பா ஏன் அண்ணா அம்மா படத்தை அப்படி இரகசியமாகப் பூட்டி வைக்கவேண்டும்?
என்றாள்.
பாலகுமார் பெருமூச்சு விட்டான். அதுதான் எனக்கும் தெரியவில்லை.
கூடத்தில் மாட்டி வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நாம் தினம் விளக்கேற்றி வைத்துப் பூப்போட்டு வணங்கலாம் இல்லையா?
பாலகுமார் புன்சிரிப்புடன் அவளை எச்சரித்தான். பேராசைப் படக்கூடாது, சாந்தி. இந்த அளவில், திருட்டுத்தனமாகவாவது அம்மா முகத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்ததே என்று திருப்திப்படுவோம்.
பாலகுமார் வெகுநேரம் வரை படுக்கையில் யோசனை செய்தான்.
எப்படி அந்தப் பணத்தைச் சமாளித்துத் திரும்பவும் பெட்டிக்குள் வைப்பது என்கிற கேள்வி அவனைக் குடைந்தது.
மூன்றாண்டுக் காலமாகவே அவன் 'குரு ரிப்பேர்ஸ்' வேலையில் சம்பாதித்த பணத்தில் மாதா மாதம் குடும்பச் செலவு, சாந்தியின் கல்விச் செலவு முதலியவை போக ஒரு சிறுபகுதியை மிச்சம்பிடித்துத் தனியாக சேவிங்ஸ் பாங்கியில் கட்டி வைத்திருந்தான். கல்லூரியில் இடம் கிடைத்ததுமே முதல் மூன்று மாதச்சம்பளம் கட்டிப் புத்தகங்களும் வாங்கி விட்டான். பாங்கி இருப்பு நூறு ரூபாய்தான் என்று காட்டியது. அதனுடன் இன்னும் நானூறு ரூபாய் கூட்டினால் தான் மொத்தம் ஐந்நூறு ரூபாயாகி அப்பா பெட்டிக்குள் அடைக்கலம் புகமுடியும். அந்த நானூறு ரூபாய்க்கு எங்கே போவது? மூளையைக் குழப்பிக் கொண்டான் பாலகுமார். அவனுக்குத் தெரிந்த வழி ஒன்றுதான். குருசாமியிடம் கடன் கேட்பது. கல்லூரியில் சேர்ந்த பிறகு மாலை நேரத்தில் வேலை செய்து வாங்கின கடனைக் கழிப்பது. அப்பா சாதாரணமாக அடுத்த பென்ஷன் தினத்தன்றுதான் பெட்டியைத் திறப்பார். அதற்குள் எப்படியேனும் ஐந்நூறு ரூபாயைப் பெட்டிக்குள் வைத்து விடவேண்டும். திடீரென்று மீண்டும் அன்றிரவு போலக் கனவுகண்டு விழித்துச் சோதனை செய்தாரென்றால் குட்டு வெளிப்பட்டுப் போகும். சாந்தி சாகசம் செய்து காரியத்தைச் சாதித்துவிட்டாள். ஆனால் அப்பா சந்தேகப்பட்டுக் கேட்கிறபோது பொய் சொல்ல வராது அவளுக்கு. எனவே, அந்த நிலை வருமுன் காரியத்தை முடித்தாக வேண்டும்.
***
முந்தின மாதக் கணக்குகளைக் குருசாமி பரிசீலனை செய்து கொண்டிருந்தபோது, 'கிறீங், கிறீங்' என்று டெலிபோன் மணி அடித்தது.
கணக்குப் புத்தகத்தை அப்படியே மேஜைமேல் வைத்து விட்டு, ரிஸீவரை எடுத்தார்.
ஹலோ, குரு ரிப்பேர்ஸ்...
சிறிய கடையானாலும் டெலிபோன் உண்டு என்ற பெருமை அந்த 'ஹலோ குரு ரிப்பேர்ஸ்'ஸில் சந்தேகமற ஒலித்தது.
கடைக்குள் நுழைந்தான் பாலகுமார். டெலிபோன் பேச்சை நிறுத்தாமலேயே அவனது வணக்கத்தை ஏற்றுக் கொண்ட குருசாமி, அவனை அமரும்படி குறிப்புக் காட்டினார்.
வழக்கமாக உட்காரும் இடத்தில் அமர்ந்தவன், மேஜை மேல் அரை குறையாகப் பிரித்து வைக்கப்பட்டிருந்த கைக்கெடியாரம் ஒன்றில் கவனத்தைச் செலுத்தலானான்.
தம்பி, ரிப்பேர் சாமான்களை எடுத்துக் கொண்டு புறப்படு,
என்றார் குருசாமி. ரிஸீவரைப் பொருத்தியவுடன், நல்ல கிராக்கி ஒன்று கிடைத்த உற்சாகம் அந்தப் பரபரப்பில் புலப்பட்டது.
நாற்காலியை விட்டு எழுந்தவாறே, சற்று வியப்புடன், எங்கே மாமா?
என்றான் பாலகுமார். வெளியில் போய்ப் பழுது பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் சாதாரணமாக நேருவதில்லை.
போனில் பேசிக் கொண்டிருந்தபோதே நீ வந்துவிட்டாய், உன்னை அனுப்பி வைக்கிறதாகச் சொன்னேன்,
என்ற குருசாமி, மேஜைமீது வைக்கப்பட்டிருந்த கைக்கெடியாரத்தின் மேல் அவன் பார்வை செல்வதைக் கண்டு, அதை நான் கவனித்துக் கொள்கிறேன். நீ போ,
என்று காதில் வைத்திருந்த பென்ஸிலை எடுத்து ஒரு துண்டுக் காகிதத்தில் முகவரி எழுதித் தந்தார்.
ஏமாற்றத்தை அடக்கிக் கொண்டு, பாலகுமார் கிளம்பினான். பண விஷயத்தைப் பற்றி மற்றொரு சமயம் பேசிக் கொள்ள வேண்டியதுதான்.
அவன் தலை மறைந்த பிறகுதான், தம்பி கல்லூரியில் சேர்ந்துவிட்டானா என்றுகூட விசாரிக்க மந்துவிட்டேனே!
என்ற நினைப்பு குருசாமிக்கு வந்தது.
***
நைலெக்ஸ் சேலை. காதில் முத்துத்தோடு. கழுத்தோடு கழுத்தாக ஒரு சின்ன முத்தாரம். ஒரு கையிலே இரண்டு முத்து வளையல்கள். ஒரு சின்னக் கெடியாரம். மின் விசிறிக் காற்றில் அலையும் குழல் கற்றைகள், நெற்றியிலே பொட்டு இருக்கிறதா இல்லையா என்பதையே மறைத்தன.
பாலகுமாரை நேரடியாக விசாரிப்பது கேவலம் என்று கருதுபவள்போல், சோபாவில் இருந்தபடியே, தம்புசாமி! யாரோ வந்திருக்கிறாற் போலிருக்கிறது. என்னவென்று கேள்,
என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டு, மீண்டும் பத்திரிகையில் மூழ்கிவிட்டாள் அந்த அழகி.
தம்புசாமித் தடியன் எங்கே இருக்கிறான்? காலை முதல் அவனைக் கண்ணிலேயே காணோமே!
உள்ளேயிருந்து பங்களா சொந்தக்காரியின் குரல் வந்தது. பிறகு அவளே வந்துவிட்டாள்.
குருசாமி அனுப்பினார்,
என்றான் பாலகுமார்.