Inba Kanavu
By P.M. Kannan
()
About this ebook
இன்பக் கனவு
பணக்கார அத்தை ராஜேஸ்வரி, தன் மருமகள் நிர்மலாவை மருத்துவராக்கி வெளி நாட்டில் பயின்று வந்த மகன் ரகுனாத்திற்கு மணமுடிக்க திட்டமிடுகிறார்..டாக்டர் நிர்மலாவோ சேவை மனப்பான்மை மிகுந்தவள் .கிராம வாழ்க்கையில் நாட்டம் உள்ளவள்...அவள் தோழி டாக்டர் மல்லிகா ரகுனாத்திற்கு அறிமுகமாகிறாள்..
கிராம நகர வாழ்க்கையின் இரு பக்கங்களையும் நாவல் அலசுகிறது… தொழிற்சாலை வேலை நிறுத்தத்தை 1940 களிலேயே எழுதி இருக்கிறார்....தொழிலாளர்கள் வாழ்க்கை நிலை, முதலாளியம்மா மனப்போக்கு என மனங்களை அலசுகிறது இந்த நாவல்.
Read more from P.M. Kannan
Nilave Nee Sol Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakkavillai Rating: 0 out of 5 stars0 ratingsPennukku Oru Neethi Rating: 0 out of 5 stars0 ratingsAnnai Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsMannum Mangaiyum Rating: 0 out of 5 stars0 ratingsPavazha Maalai Rating: 0 out of 5 stars0 ratingsMalar Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Madhuvum Rating: 0 out of 5 stars0 ratingsKannigathaanam Rating: 0 out of 5 stars0 ratingsInba Puthaiyal Rating: 0 out of 5 stars0 ratingsThevaanai Rating: 0 out of 5 stars0 ratingsVazhvin Oli Rating: 0 out of 5 stars0 ratingsPenn Deivam Rating: 0 out of 5 stars0 ratingsNagavalli Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to Inba Kanavu
Related ebooks
Ingeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsOru Kulir Kaala Kutram Rating: 5 out of 5 stars5/5Valampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsKolai Express Rating: 0 out of 5 stars0 ratingsKannale Oru Kaadhal Kavithai! Rating: 0 out of 5 stars0 ratingsSodukkinal Sorgam Rating: 5 out of 5 stars5/5Netru Varai Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Thisaigal Rating: 5 out of 5 stars5/5Valampuri Sangu Rating: 0 out of 5 stars0 ratingsMattroru Naal Rating: 4 out of 5 stars4/5Kadal Viralgal Rating: 0 out of 5 stars0 ratingsEn Mel Vizhuntha Mazhai Thuliye Rating: 0 out of 5 stars0 ratingsEn Varna Nila Rating: 0 out of 5 stars0 ratingsAvan Aval Theevu Rating: 0 out of 5 stars0 ratingsIsai Kolai Rating: 5 out of 5 stars5/5Vadikaal Rating: 0 out of 5 stars0 ratingsNila Magan Rating: 4 out of 5 stars4/5நில் கவனி கொல் Rating: 0 out of 5 stars0 ratingsNil Kavani Kol Rating: 0 out of 5 stars0 ratingsKavya Endroru Devathai Rating: 4 out of 5 stars4/5Aravinthin Arputha Thiyagam Rating: 0 out of 5 stars0 ratingsUyirodu Uravadu... Rating: 5 out of 5 stars5/5Maayak Kottai Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Rating: 0 out of 5 stars0 ratingsUyir Urugum Sattham Rating: 0 out of 5 stars0 ratingsAasai Kodi Sumanthu! Rating: 0 out of 5 stars0 ratingsVelvet Kuttrangal Rating: 0 out of 5 stars0 ratingsKangal Mayangiya Pothu... Rating: 0 out of 5 stars0 ratingsEn Priyasakhi Rating: 2 out of 5 stars2/5Kannadi Kalvettugal Rating: 2 out of 5 stars2/5
Reviews for Inba Kanavu
0 ratings0 reviews
Book preview
Inba Kanavu - P.M. Kannan
http://www.pustaka.co.in
இன்பக் கனவு
Inba Kanavu
Author:
பி.எம். கண்ணன்
P.M. Kannan
For more books
http://www.pustaka.co.in/home/author/pm-kannan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
1
பட்டமளிப்பு விழா நடைபெறும் பல்கலைக்கழக மண்டபம் பால் நிலவில் குளித்துப் பூரித்து உயர்ந்து பெருமிதத்துடன் நிமிர்ந்து நின்றது. எதிரே ஆர்ப்பரிக்கும் அலைகடல்; மேலே மெல்லத் தவழும் முழுமதி; சுற்றிலும் விண்மீன்களுக்குப் போட்டியாகக் கண் சிமிட்டும் சாலை விளக்குகள்; கடற்கரைச் சாலையில் பாம், பாம் என்று முழங்கியபடி வழுக்கியோடும் நூற்றுக்கணக்கான வண்ண மோட்டார்கள்; புதுப்புது மோஸ்தர், புதுப்புது வடிவம், எல்லாம் புதுமை; என்றும் புதுமை தரும் இன்பச் சூழ்நிலை.
இந்தச் சூழ்நிலைக்கு இடையே இனிது முடிந்தது பட்டமளிப்பு விழா. அதுவரையில் மண்டபத்திற்குள் ஊசி விழுந்தால்கூட உலக்கை விழுந்தது போல ஓசை கேட்டிருக்கும். அவ்வளவு அமைதி நிலவியிருந்தது. ஆனால் விழா முடிந்த மறுவிநாடியே கலகலப்பான ஒலிகள் கேட்டன. பட்டமளிப்பு விழாப் பிரசங்கத்திலே பட்டம் பெற்ற மாணவர்களின் வருங்காலத் திட்டத்தைப் பற்றி நீளநெடுக நெடுநேரம் போதனை புரிந்தார் விழாத் தலைவர். அந்த நெடிய உரை முடிந்து, பட்டம் பெற்று, விழாவிலிருந்து விடுதலை பெற்ற மாணவர் கூட்டம் தனக்கே இயல்பான குதூகலக் குரல்களுடன் அலைகடலின் ஆர்ப்பரிப்புக்கு எதிர்மடை போடுவதுபோன்ற ஆரவாரத்தோடு மண்டபத்தை விட்டு வெளியேறியது.
முன்வாயிலிலும் படிக்கட்டுகளிலும் நடைபாதைகளிலும் எங்கே பார்த்தாலும் நிலவொளியிலும் மின்விளக்கிலும் பளபளக்கும் கறுப்புக் கௌன்கள், சிவப்பு ரிப்பன்கள், வெள்ளை ரிப்பன்கள்; இன்னும் பலவித வர்ண ரிப்பன்கள் அவரவர்கள் வாங்கிய பட்டங்களை உணர்த்தும் அலங்காரச் சின்னங்கள்; மாணவர்கள் கைகளில் அவரவர் பெற்ற பட்டத்தாள்களின் சுருள்கள் இவைகள் இருந்தன. எம்.எல்., பி.எல்., எம்.ஏ., பி.ஏ., பி. ஏ. ஆனர்ஸ்., பி.ஈ., எம். பி. பி. எஸ்., ஓரியன்டல் டைட்டில்கள் இப்படிப் பல்வேறு பட்டங்கள் பெற்ற மாணவர் கூட்டம் பல்கலைக்கழக மண்டபத்தினின்றும் குபுகுபுவென்றும் வெளியேறியது.
அன்று கிட்டத்தட்ட மூவாயிரம் பேர்களுக்கு மேல் பட்டம் பெற்றார்கள் முன்னூறு பேர்களுக்கு மேல் பெண்களும் டிகிரி வாங்கினார்கள். பெண்களின் கூட்டத்தோடு கூட்டமாக வந்தாள் டாக்டர் நிர்மலா எம். பி. பி. எஸ். அவள் அணிந்திருந்த அலங்கார உடைகளைப் போர்த்திருந்தன கறுப்புக் கௌனும், சதுர மேல்மூடி போட்ட கறுப்புக் குல்லாயும் அசப்பில் பார்த்தால் ஷேக்ஸ்பியர் நாடகமாகிய வெனிஸ் வர்த்தகனில் நீதிமன்றத்தில் தோன்றும் 'போர்ஷியா'வைப் போலத் தோற்றமளித்தாள் டாக்டர் நிர்மலா. அன்றுதான் அவள் டாக்டரானாள். அவள் பெற்ற எம். பி. பி. எஸ். பட்டம் அவள் கையில் பிடித்திருந்த பட்டத்தாளுக்குள் சுருண்டு மறைந்திருந்தது.
அவளுடன் கூட வந்த அவள் தோழியொருத்தி சிரிக்கச் சிரிக்கப் பேசினாள். எனினும் டாக்டர் நிர்மலாவின் முகத்தில் சிந்தனை தோய்ந்திருந்தது. அவ்வப்போது அவள் இதழ்க்கடையில் இன்முறுவல் அரும்பியது. தோழி பார்த்தாள்; நிர்மலா தன் பேச்சில் கவனம் செலுத்தவில்லை என்பதை உணர்ந்தாள்.
நிம்மி!
என்றாள் கணீரென்று, நிர்மலா திரும்பிப் பார்த்தாள்.
நிம்மி! நான் பாட்டுக்கு, வளவளவென்று பேசிக்கொண்டு வருகிறேன். நீ பதில்கூடச் சொல்லாமல் ஏதோ மௌனச் சிலை போல நகர்ந்து வருகிறாயே?
என்றாள் ஒரு போலி ஆத்திரத்தை அபிநயித்த வண்ணம்.
மல்லி! சிலை எங்கேயாவது நகருமா? உன் உதாரணம் எனக்குச் சிரிப்பைத்தான் உண்டாக்குகிறது
என்று சொல்லிச் சிரித்து விட்டாள் நிர்மலா.
சிலை நகராவிட்டால் போகிறது. நீ சிரித்தாயே, அதுவே போதும். என்னடியம்மா அத்தனை யோசனை? இப்போதுதான் பட்டம் வாங்கிக்கொண்டு வருகிறாய். இதற்குள்ளாகவே மனசில் திட்டம்போட்டுப் பார்க்கிறாயாக்கும்
என்று டாக்டர் மல்லிகா எம். பி. பி. எஸ்., தன் தோழியைப் பார்த்துக் கிண்டல் செய்தாள். அவளும் நிர்மலாவுடன் பட்டம் பெற்றவள் தான். ஆறுவருஷ காலம் நிர்மலாவுடன் நெருங்கிப் பழகிய பள்ளித்தோழி.
உம். ஆறு வருஷம் எப்படியோ ஓடிப் போய்விட்டது; இன்னும் அறுபது வருஷம் கழிய வேண்டுமே. அதுதான் யோசித்தேன்
என்று சற்றே சலித்தவள் போலப் பேசினாள் நிர்மலா.
அட! பெரிய பாட்டிக் கிழவி போல இப்போதே ஆரம்பித்து விட்டாயே. உனக்கு ஜோஸ்யம் கீஸ்யம் தெரியுமா? ஆயுசைக் கூட அளந்து கண்டவள் போல அறுபது வருஷம் என்கிறாயே! அதெல்லாம் கிடக்கட்டும். நீ நாளைக்கு என்ன பண்ணப்போகிறாய்? அதைச் சொல்லு. ஏதாவது முன்னாடியே 'எங்கேஜ்மென்டு' வைத்துக் கொண்டிருக்கிறாயா...? இல்லையே! நாளை உன் வீட்டிலேயே உன்னைச் சந்திக்கலாமா? அல்லது நீ என் வீட்டுக்கு வருகிறாயா...?
மல்லிகா விடாமல் பேசிக்கொண்டே போனாள். சுற்றிச் சூழ்ந்து வரும் மாணவியர் கூட்டம் ஆங்காங்கே, கலைந்து தத்தம் வழியே சென்றதைக்கூடக் கவனியாமல் இந்த இரண்டு டாக்டர் பட்டதாரிகளும் வராந்தாவில் நடந்து சென்று, படிக்கட்டுகளில் இறங்கினர். எதிரே விசாலமாக வியாபித்திருந்த மைதானத்திலே வளைந்து ஓடிய தார்போட்ட சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக மோட்டார் வண்டிகள் வந்து நின்றபடியும், யாரோ சிலரை ஏற்றிக்கொண்டு சென்றபடியும் இருந்தன. எத்தனையோ மாணவர்கள் நடந்தும் பஸ் ஏறியும் செல்லலாயினர்.
நிர்மலாவும் மல்லிகாவும் படிக்கட்டிகளில் இறங்கியபோது சரேலென்று அவர்கள் முன் இருந்த 'டிரை'வில் ஒரு புத்தம் புதிய கார் கம்பீரமாக வந்து நின்றது. மேல் மூடி ஒரு நிறம், கீழே, 'பாடி' மற்றொரு நிறமாகப் பார்ப்பவர் கண்களைப் பறிப்பதாக இருந்தது அந்தப் புதுமாடல் கார். டிரைவர் ஆசனத்திலிருந்து ஓர் இளைஞன் கதவைத் திறந்துகொண்டு இறங்கினான். உள்புறக் கதவைத் திறந்தது, அவன் இடது கை வலதுகையை நீட்டிய வண்ணம், கம் ஆன் நிர்மல்! ஏறிக்கொள் புறப்படலாம்
என்றான் புன்சிரிப்புடன்.
அடேடே! நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள்? எத்தனை சிரமம் உங்களுக்கு?
என்று லஜ்ஜையுடன் பேசினாள் நிர்மலா.
இது ஒரு சிரமமா நிர்மலா? பொழுது போகாமல் காரை எடுத்துக்கொண்டு மரீனாவுக்கு வந்தேன். சிறிது நேரம் காற்று வாங்கினேன்; பல நாட்களாகச் சந்திக்காத அநேக நண்பர்களைச் சந்தித்துப் பேசினேன். பிறகு வீடு திரும்பும்போது சட்டென்று உன் நினைவு வந்தது. இத்தனை நேரம் விழா முடிந்திருக்குமே; போகிற போக்கில் உன்னையும் கூட்டிக்கொண்டு போய்விடலாமே என்று எண்ணிக்கொண்டே வந்தேன். நான் இங்கே வந்து சேருவதற்கும் விழா முடிவதற்கும் சரியாக இருந்தது
என்று பெரிய இடத்துப் பிள்ளைகளுக்கே இயல்பான ஓர் அலட்சிய தோரணையுடன் பட்டதும்படாததுமாகப் பேசினான் அந்த இளைஞன்.
ஓ அப்படியா! எங்கே ரொம்ப நேரமாக இங்கே வந்து கொட்டுக் கொட்டென்று காத்திருக்கிறீர்களோ என்று கருதிவிட்டேன்
என்றாள் நிர்மலா ஒரு நமுட்டுச் சிரிப்புடன்.
என்ன நிர்மலா! அத்தனை முட்டாள் என்றா நினைத்துவிட்டாய் என்னை? ஐந்து வருஷத்திற்கு முன்னே இதே மண்டபத்திலே 'ஆனர்ஸ்' பட்டம் வாங்குவதற்கு ஐந்து மணி நேரம் நாற்காலியோடு நாற்காலியாக அடைகாத்துக் கிடந்தது. இதற்குள்ளே எனக்கு மறந்து போயிருக்கும் என்று நினைத்துவிட்டாயோ?
என்று சொல்லிக் கலகலவென்று சிரித்தான் அவன்.
ஏன் மறந்து போயிருக்கக்கூடாது? ஐந்து வருஷத்திலே, ஐந்து கடல்களைத் தாண்டி ஐயாயிரம் மைல்களுக்கு அப்பால் சென்று வாழ்ந்து வந்தீர்களே; அந்த அனுபவத்திலே இதெல்லாம் மறந்து போயிருந்தாலும் ஆச்சரியம் இல்லையல்லவா?
என்று உட்பொருள் வைத்துப் பேசினாள் நிர்மலா.
அவள் பேச்சைக் கேட்டு, மேலும் சிரித்தான் அவ்விளைஞன். பலே கெட்டிக்காரி நீ! உன்னுடன் பேசி என்னால் ஜயிக்க முடியாது. நேரமாகிறது. ஏறு வண்டியில்; போகலாம்
என்றான்.
நிர்மலா சற்றே தயங்குவதுபோல் இருந்ததைக் கண்டு அவள் தோழி மல்லிகா, குட் நைட் நிம்மி...! நாளைய தினம்... சந்திக்கலாம் அல்லவா?
என்று விடைகொடுத்தாள்.
காரைப் பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் அப்போதுதான் நிர்மலாவின் தோழியைக் கவனித்தான். அடடே! என்ன மடையன் நான்! உன்னுடன் வந்த உன் தோழியைப் பார்க்கவில்லையே! உன்னை மாத்திரம் அழைத்துக்கொண்டு போக இருந்தேனே
என்று சங்கடப்படுபவன் போல் பேசினான்.
தப்பு என்மேல்தான். ஆரம்பத்திலேயே நான் உங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தி இருக்கவேண்டும். மறந்து போனேன். மன்னிக்க வேண்டும். ரகு! இவள் டாக்டர் மல்லிகா, எம். பி. பி. எஸ். என் பள்ளித் தோழி. மல்லி! இவர் என் அத்தை மகன் மிஸ்டர் ரகுநாத். ஆனர்ஸ் பட்டம் பெற்ற பிறகு மேலே படிக்க ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் திரும்பியிருக்கிறார்
என்று நிர்மலா அவர்கள் இருவரையும் பழக்கப்படுத்தி வைத்தாள்.
தங்களைக் காண மகிழ்ச்சி!
என்று முகமன் கூறினான் ரகுநாத்.
தங்களைத் தெரிந்துகொண்டது என் பாக்கியம்!
என்று பதிலளித்தாள் மல்லிகா.
மல்லி! நீயும் என்னோடு வாயேன். உன் வீட்டிலே உன்னை இறக்கிவிடுகிறேன்
என்று அன்போடு அழைத்தாள் நிர்மலா.
ஆமாம்; பஸ் கிடைக்க நேரமாகும். கூட்டம் அதிகம்; நீங்களும் நிர்மலாவுடன் வந்துவிடுங்கள்!
என்று உபசாரமாகக் கூப்பிட்டான் ரகுநாத்.
அவர்கள் அழைப்பை மறுப்பது நாகரிகம் அல்ல என்பது மல்லிகாவுக்கா தெரியாது? உங்களுக்கு வீண் சிரமம்
என்று சொல்லியவண்ணம் ஒப்புக்கொண்டாள்.
ஆமாம், எங்களுக்குச் சிரமம் தான், உன்னைச் சுமந்துகொண்டு போகப் போகிறாமோ இல்லையோ?
என்று நையாண்டி பண்ணியபடியே தன் தோழியை காரில் போய் அமரும்படி கை காட்டினாள் நிர்மலா.
மல்லிகா ஏறி உட்கார்ந்துகொண்டாள். அவளுக்குப் பின்னால் நிர்மலாவும் ஏறி ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டாள். காரின் கதவைச் சாத்திவிட்டு முன்புறம் சென்று ஏறிக்கொண்டு பாம் பாம் என்று ஹாரனை ஒலிக்கச் செய்து, காரை நகர்த்தினான் ரகுநாத். மைதானத்திலே செல்லும் வளைவைச் சுற்றிக்கொண்டு அந்தப் புதுமாடல் கார் கடற்கரைச் சாலையில் கம்பீரமாகச் சென்றது. சில விநாடிகளில் கார்களோடு காராக ஒன்றுக்கொன்று ஓர் இனம் தெரியாத ஒற்றுமையுடன், ஒன்றன் பின் ஒன்றாகச் செல்லும் கார்களின் வரிசையில் கலந்து மறைந்தது.
அந்தப் புதுமாடல் கார் இப்போது ஒரு பெரிய பங்களாவின் வாசல் 'போர்ட்டிக்கோ'வில், தன் நீண்ட பிரயாணத்தை முடித்துக் கொண்டு நிம்மதியாக நின்றுகொண்டிருக்கிறது. 'போர்ட்டிகோ'வில் தொங்கும் வட்டவடிவமான குழல் விளக்கின் ஒளிதான் அதன் வண்ண வடிவத்தை அழகுறச் செய்கிறது. சற்று முன் அது ஓடிக் கொண்டிருந்தபொழுது தெரிந்த முன் வெளிச்சமும் பின் ஒளியும் உள் ஒளியும் அதில் இல்லை. அதைச் செலுத்தி வந்த செல்வனும், அலங்கரித்து அமர்ந்திருந்த அழகு சுந்தரிகளும் அதில் காணப்படவில்லை.
அந்தக் கார் இளைப்பாறியது போலவே அவர்களும் இளைப்பாறிக் கொண்டிருந்தனர். பங்களாவின் உள்ளேயிருந்த ஒரு விசாலமான ஹாலில் ஒரு சோபாவில் நிர்மலாவும் மல்லிகாவும் உட்கார்ந்து எதிரே இருந்த தேநீர் மேஜையிலிருந்து தேநீர்ப்பானம் பருகிக்கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் ஆவலோடு பார்த்த வண்ணம் பக்கவாட்டத்தில் இருந்த மற்றொரு சிறிய சோபாவில் ஒரு நடுத்தர வயதுள்ள பெண்மணி உட்கார்ந்திருந்தாள். சற்றே தள்ளி சுவர் ஓரமாக இருந்த உயர்ந்த ஆசனத்தின்மீது வைத்திருந்த ரேடியோ 'ஸெட்டை' இயக்கிய வண்ணம் சாய்ந்த நிலையில் நின்றிருந்தான் ரகுநாத்.
அந்த வயதான பெண்மணிதான் பேசினாள்: இந்த வேளையிலே டீ குடித்தால் தூக்கம் கெட்டுப்போகாதா? அப்புறம் பசி எப்படி எடுக்கும்? இப்போதே மணி ஒன்பதுக்கு மேல் ஆகிறது. எல்லோரும் உட்கார்ந்து, சாப்பிடலாமே?
சாப்பாடா? வீட்டிலே காத்திருப்பார்கள் அம்மா. இல்லாவிட்டால் உங்கள் வீட்டிலே சாப்பிடமாட்டேன் என்று சொல்லுவேனா?
என்று பதிலளித்தாள் மல்லிகா, தேநீர்க் கோப்பையை மேஜைமீது வைத்துக்கொண்டே.
டீ குடித்தால் தூக்கம் கெட்டுப்போகும் என்று யாரம்மா சொன்னது? நான் பரீட்சைக்குப் போகிறபோதெல்லாம் நீங்கள் டீ போட்டுக் கொடுப்பீர்களே. அதைக் குடித்துவிட்டு என்ன தூக்கம் தூங்கினேன் தெரியுமா நான்?
என்று பின்னாலிருந்து சொல்லிச் சிரித்தான் ரகுநாத்.
இவ்வளவு நேரம் கையையும் காலையும் முடக்கி உட்கார்ந்திருந்துவிட்டு, வந்ததும் வராததுமாகச் சாப்பாட்டுக்கு உட்காருவது எனக்குங்கூடக் கஷ்டமாகவே இருக்கிறது. இந்த டீ எவ்வளவு இன்பமாக இருக்கிறது. கொஞ்ச நேரம் கழித்துத்தான் சாப்பிடுகிறோமே அத்தை!
என்று கொஞ்சலும் சுவாதீனமும் ததும்பும் குரலில் பேசினாள் நிர்மலா.
உடம்பு கெட்டுப் போகுமே, நிம்மி. அதனால் தான் சொன்னேன். வேளை விட்டு வேளை சாப்பிட்டால் ஜீரணமாகுமா?
என்று நிர்மலாவின் அத்தையான அந்த நடுத்தர வயதுப் பெண்மணி தன் மருமகளைப் பார்த்துச் சொன்னாள்.
நீங்கள் என்ன அம்மா, டாக்டரின் உடம்பைப் பாதுகாத்துக் கொள்ளும்படி டாக்டருக்கே சொல்லிக் கொடுக்கிறீர்கள்!
என்று ரகுநாத் தன் தாயைக் கிண்டல் பண்ணினான்.
ராஜேசுவரி அம்மாள் தன் மகனுடன் சேர்ந்துகொண்டு அந்தக் கிண்டலை ரஸித்துச் சிரித்தாள். சிரித்துக்கொண்டே, டாக்டர் நிர்மலா எம். பி. பி. எஸ்., ஊருக்கெல்லாம் இனி டாக்டர் தான். இல்லை என்று சொல்லவில்லை. இருந்தாலும் அவள் என் ஆசை மருமகள் நிம்மிதானே எனக்கு. அதனால் தான் அவள் உடம்பைப்பற்றி நான் கவலைப்படுகிறேன்
என்றாள் அந்த மாது.
நல்ல வேடிக்கை இது! 'டில்லிக்கு ராஜாவானாலும் தல்லிக்குப் பிட்டதானே' என்று ஒரு பழமொழி சொல்வது உண்டு. அதுபோல் தான் இருக்கிறது இது
என்று சொல்லிக்கொண்டே சோபாவை விட்டு எழுந்தாள் மல்லிகா. எனக்கு நேரமாகிறது, அத்தையம்மா! நான் கிளம்பவேண்டும்
என்றாள் அவள்.
அந்த மட்டும் பழைய சிநேகத்தை மறந்து போகாமல், டீ சாப்பிடவாவது வந்தாயே அம்மா. நீங்கள் பட்டம் வாங்கியதற்கு ஒரு விருந்தே வைக்கவேண்டும் என்று நினைத்தேன். நடுவே இந்தப் பிள்ளையாண்டான் ஐரோப்பாவிலிருந்து திமுதிமுவென்று திரும்பிவந்து என் திட்டங்களையே மாற்றிவிட்டான். இந்த நாலு நாட்களாக இந்த வீட்டில் யாருக்குமே ஓய்ச்சல் ஒழிவு கிடையாது. இல்லாவிட்டால் நிம்மியும் நீயும் எம். பி. பி. எஸ். பட்டம் வாங்கியது இப்படிக் காதும் காதும் வைத்ததுபோலவா இருந்துவிடும்? அமர்க்களப்படுத்தியிருக்கமாட்டேனா?
என்று ராஜேசுவரி சொன்னதைக் கேட்டு, அந்த மட்டும் தகுந்த சமயத்தில் வந்து சேர்ந்து காப்பாற்றினாரே. அவருக்கு முதலில் நன்றி கூற வேண்டும். இல்லாவிட்டால் அத்தை கையிலே ஒரு 'சின்னிப் பொம்மை' போல அல்லவா ஆடி இருக்கவேண்டும்?
என்று நிர்மலா கூறினாள்.
ஆமாம் சொல்ல மாட்டாயோ நீ? அத்தை இல்லாவிட்டால் நீ எங்கேயோ ஒரு குப்பைக்காட்டுப் பள்ளிக்கூடத்திலே வாத்தியாரம்மாளாகத்தான் இருந்திருக்க வேண்டும். தெரிந்துகொள்
என்றாள் அத்தை.
என்ன அத்தை, அதற்குள் கோபித்துக்கொள்கிறீர்களே! நீங்கள் இல்லாவிட்டால் கல்லூரிப் படிப்பு எனக்கு எப்படி வந்திருக்கும்? அதுவும் வைத்தியக்கல்லூரியில் படிக்க வசதி எங்கிருந்து இருக்கப்போகிறது? அதெல்லாம் தெரியாதா எனக்கு? ஆனால் இந்தப் பட்டம் பெற்றதற்குப் பெரிய விளம்பரம் செய்ய வேண்டும் என்கிறீர்களே, அதுதான் எனக்கு என்னவோபோல் இருக்கிறது
என்று கூச்சத்துடன் கூறிய நிர்மலாவை இடைமறித்து, அசட்டுப் பெண்ணே! நாளைக்கே போர்டு போட்டுக் கொண்டு தொழில் நடத்தப் போகிறாயே. அதற்கு விளம்பரம் இல்லாமல் ஆகுமா? இங்கே ஒரு டாக்டர் இருக்கிறார் என்று நாலு பேருக்குத் தெரிந்தால்தானே நாலு பேர் நம்மைத் தேடி வருவார்கள்? அதையெல்லாம் உத்தேசித்துத்தான் நான் ஒரு பெரிய விழாவையே நடத்திவிடுவதென்று தீர்மானித்தேன்.
இப்போதுதான் என்ன பிரமாதம்! நாளைக்கே நான் ஏற்பாடு செய்துவிடுகிறேன் அம்மா. இந்த வாரக் கடைசியிலேயே ஒரு மகத்தான விருந்து நடத்த முடியாதா என்ன!
என்று தன் தாயின் பேச்சைத் தொடர்ந்து பேசினான் ரகுநாத்.
முடியாது என்று யார் சொன்னது? முடியாது என்கிற பேச்சே என் ஜாதகத்தில் எழுதவில்லை
என்றாள் ராஜேசுவரி அழுத்தந் திருத்தமாக.
அவளது தன்னம்பிக்கையையும் ஆர்வத்தையும் கண்டு பிரமித்துப் போய் நின்றுவிட்டாள் மல்லிகா, கணநேரம். அதற்குள் ராஜேசுவரியே மல்லிகாவின் பக்கம் திரும்பினாள். மல்லிகா! உன்னை ரொம்பநேரம் காக்க வைத்துவிட்டேன். மன்னித்துக்கொள். போய் வருகிறாயா? இந்த நேரத்திலே நீ தனியாக அவ்வளவு தூரம் போக வேண்டாம். ரகுவைத் துணைக்கு அனுப்புகிறேன்; காரிலேயே கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பிவிடுவான்
என்றாள் அவள்.
எதற்கு அத்தையம்மா, அவருக்குக் கஷ்டம் கொடுக்கிறீர்கள்? பக்கத்திலேயே பஸ் ஸ்டாண்டு இருக்கிறது. நான் போய்வருகிறேன்
என்று கூறிவிட்டுக் கிளம்பினாள் மல்லிகா.
நன்றாயிருக்கிறது; எனக்கு என்ன கஷ்டம்? உங்களைக் கொண்டுபோய் விட்டுவிட்டு இருபது நிமிஷத்திலே திரும்பிவிட மாட்டேனா? போய் வந்தால் நன்றாகப் பசிகூட எடுக்கும். உங்களோடு டீ சாப்பிட்டது எனக்குங்கூடப் பசியைக் குறைத்துவிட்டது
என்று கூறியபடியே ரேடியோஸெட்டை மூடிவிட்டுக் கிளம்பினான் ரகுநாத்.
மல்லிகா சற்றே தயங்கினாள்; ரகுவுடன் தனியாகக் காரில் போக அவள் யோசிப்பதுபோல் இருந்தது ராஜேசுவரிக்கு. 'நல்ல குணமுள்ள பெண்; அந்தத் தயக்கமே சொல்லுகிறதே' என்று பெருமைப்பட்டுக் கொண்டது அவளது உள்ளம். அந்த நிலையை நீடிக்கவிடாமல், நிம்மி, நீயுந்தான் போய் வாயேன். டீ சாப்பிட்டு விட்டு ஒரு ரவுண்டு போய்வந்தால் நல்ல பசியெடுக்கும்
என்றாள்.
அத்தையின் பேச்சைப் புரிந்துகொண்டு, புன்சிரிப்புடன் எழுந்தாள் நிர்மலா. சரோ எங்கே அத்தை? அவளையும் கூப்பிடேன்; வேடிக்கையாகப் போய்வருகிறோமே
என்றாள் அவள்.
அவள் எங்கே வரப்போகிறாள்? பரீட்சைக்கு இன்னும் இரண்டு வாரந்தான் இருக்கிறது? இந்தத் தடவையாவது அவள் பரீட்சையில் தேற வேண்டுமே
என்று ஒரு தாய்க்கு உரிய அங்கலாய்ப்புடன் பேசினாள் ராஜேசுவரி.
ஸரோ கிடக்கிறாள், எம். எஸ். எம்; நீ வா போகலாம் நிர்மல்
என்று கேலியாகப் பேசினான் ரகுநாத்.
அது என்னடா அது, எம். எஸ். எம்.? எம். பி. பி. எஸ். மாதிரி அதுவும் ஒரு பட்டமா, என்ன?
என்று கேட்டாள் ராஜேசுவரி.
ஆமாம், ஆனால் அதைக் கொடுக்க ஒரு பல்கலைக் கழகம் தேவையில்லை. பரீட்சையில் கோட் அடிக்கும் மாணவ மாணவியருக்கு அது தானாகவே கிடைத்துவிடும்
என்று வியாக்கியானம் பண்ணினான் ரகுநாத்.
நிர்மலாவும் மல்லிகாவும் சிரிக்காமல் இருக்கப் பெரு முயற்சி செய்தனர்.
நீ சொல்லுவது புரியவில்லையே
என்றாள் ராஜேசுவரி.
எம். எஸ். எம். என்றால், 'மார்ச்சு, செப்டம்பர், மார்ச்சு' என்று அர்த்தம். மார்ச்சிலே கோட் அடித்தால் செப்டம்பர், செப்டம்பரிலே கோட் அடித்தால் மார்ச்சு; அதிலும் கோட்டானால் அப்புறம் வரும் செப்டம்பர். இப்படிச் சங்கிலித் தொடர்போல எம். எஸ். எம். ரயில் வண்டிகளைப் போல வந்துகொண்டே இருக்கும். அதனால் தான் அப்படிச் சொன்னேன்
என்று சொல்லி விளங்க வைத்தான் ரகுநாத்.
ராஜேசுவரிக்குக் கோபம் கோபமாக வந்தது. நன்றாயிருக்கிற தப்பா உன் பேச்சு! உன் தங்கை காதிலே விழுந்தால் உன்னை என்ன சொல்லுவாள் தெரியுமா? ஏதோ குழந்தை, பரீட்சையில் இரண்டு தடவை தவறிவிட்டாள் என்றால் இப்படியா கேலி பண்ணுவது? அதிலும் நீயே இப்படிச் செய்தால் வேறு யார்தான் என்ன சொல்லமாட்டார்கள்?
என்று கண்டிக்கும் தொனியில் பேசினாள் அவள்.
நீங்கள் எவ்வளவுதான் பரிந்து பேசினாலும் உண்மையை மறைக்க முடியுமா அம்மா? சரோ சுத்த மக்குத்தான். சின்ன வயசிலேகூட ஒரு வகுப்பிலே இரண்டு வருஷமாவது இருந்து பார்த்துவிட்டுத்தான் மேலே போவது அவள் வழக்கம். இல்லாவிட்டால் நிர்மலாவுடன் அவளும் இன்று படிப்பை முடித்துவிட்டிருக்க வேண்டுமே?
ரகு! நீங்கள் இப்படிப் பேசுவது தவறு. ஐந்து வருஷ காலமாக நீங்கள் ஊரிலேயே இல்லை; சரோ, பாவம்! சாகப் பிழைக்கப்படுத்துக் கொண்டிருந்தாள். கடிதத்தில் எழுதினால் நீங்கள் கவலைப்படப் போகிறீர்களே என்று, இங்கிருந்து ஒன்றும் எழுதவில்லை. அவள் பிழைத்து எழுந்து ஒரு பெண்ணாக நடமாடினால் போதும் என்று அத்தையும் மாமாவும் பட்ட கவலை உங்களுக்கு எப்படித் தெரியப்போகிறது? நீங்கள் இப்போது திடீர் என்று வந்து குதித்து, பாவம்! சரோஜினிக்கு மக்குப் பட்டம் கட்டுகிறீர்கள் என்னைக் கேட்டால் இந்த வருஷங்கூட அவளுக்குப் பூர்ண ஓய்வு கொடுத்திருக்க வேண்டும். அவள் உடம்பு இன்னும் சரியாகத் தேறவில்லை
என்று நிலைமையைச் சாமர்த்தியமாகச் சமாளித்துப் பேசி, ராஜேசுவரியின் முகத்தைப் பார்த்தாள் நிர்மலா.
நீதான் சொல்லம்மா நிம்மி! அவனுக்கு எங்கே தெரியப் போகிறது அதெல்லாம்? பாவம்! குழந்தை பட்ட கஷ்டத்தை நினைத்துக்கொண்டால் இப்போது கூட...
மேலே பேச முடியாமல் வார்த்தைகள் தடைப்பட்டன. ராஜேசுவரி புடைவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டாள். நெஞ்சிலே அடைத்துக் கொண்ட ஏதோ ஒன்றை அகற்ற முடியாமல் திண்டாடுவது போல் இருந்தது அவள் முகத்தோற்றம்.
சரி சரி! பழங்கதை இருக்கட்டும். சரோ ரொம்ப கெட்டிக்காரி தான். நான் சொன்னது தப்பாயிருந்தால் கன்னத்தில்கூடப் போட்டுக்கொள்ளத் தயார். புறப்படுங்கள் போகலாம்
என்று சொல்லி இரண்டடி எடுத்துவைத்தான் ரகுநாத்.
போய் வருகிறேன் அத்தையம்மா!
என்று வேறொன்றும் சொல்லத் தெரியாதவளாக விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டாள் மல்லிகா. மௌனமாகவே தலையசைத்து விடை கொடுத்தாள் ராஜேசுவரி.
அடுத்த சில விநாடிகளில் பங்களாவில் அன்றைய வேலை முடிந்ததென்று ஹாய்யாகத் தூங்கிக்கொண்டிருந்த புது மாடல் மோட்டார் வண்டி தட்டியெழுப்பப்பட்டுத் தஸ்புஸ் என்று சீறியது. அதன் கண்கள் இரண்டும் சுடர் விட்டு எரிந்தன. நல்ல தூக்கத்தில் எழுப்பியதால் ஏற்பட்ட சீற்றத்தில் அது பாம் பாம் என்று கதறியது. பிறகு போர்ட்டிகோவை விட்டுப் புறப்பட்டுப் பங்களா கேட்டைக் கடந்து சாலையில் பாய்ந்து மறைந்தது.
ராஜேசுவரி சலிப்புடன் ஒரு பெருமூச்சு விட்டபடியே சோபாவோடு சோபாவாகப் புதைந்து போய்விட்டாள். ஐரோப்பா முழுவதும் சுற்றி உயர்தரக் கல்வி பயின்று திரும்பி இருக்கும் அவளது ஒரே மகன் ரகுநாத் பழையபடியே இன்னும் சிறுபிள்ளைத்தனமாகக் கேலியும் குறும்பும் கும்மாளமுமாக இருக்கிறானே என்று எண்ணியபோது அவள் உள்ளம் சற்றே வேதனைப்படத்தான் பட்டது. அன்று போலவே இன்றும் தன் ஒரே தங்கையைப் பிறர் முன்னிலையில் தாழ்வாகப் பேசிக் கிண்டல் பண்ணியதைக் கேட்டு அவளது தாய் உள்ளம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுப் போயிற்று. அந்த உள்ளத் திணறலோடு போராடிய வண்ணந்தான் உட்கார்ந்து போனாள் ராஜேசுவரி. வேறோர் அறையில் சரோஜினி ஏதோ ஒரு பாடத்தைச் சற்றே கெட்டியான குரலில் நெட்டுருப் போடுவது அவள் காதில் விழுந்தது. ‘ஏனோ இந்தப் பெண் இப்படி உரக்கப் படித்துத் தொண்டையைப் புண்ணாக்கிக் கொள்கிறது. ரகுவுந்தான் படித்தான்; அடுத்தாற்போல் நிம்மியுந்தான் படித்தாள். அவர்கள் இரண்டு பேருமே இவ்வளவு கத்திப் படிக்கவில்லையே. அதைச் சொல்லப்போனால், எனக்கு மனசோடு படித்தால் புரியமாட்டேன் என்கிறது
என்று சொல்லுகிறது. அது என்ன படிப்போ என்னவோ! இந்த இன்ட்ர் பாஸ் செய்துவிட்டால் போதுமென்று நினைத்தால் அதற்கே கஷ்டமாயிருக்கிறதே. இன்டர் கூடத் தேறாமல் நாலுபேர் பெரிய மனிதர்கள் முன்பு எப்படிச் சரிக்குச் சரியாக நடமாட முடியும்?' என்று எண்ணமிட்ட வண்ணம் உட்கார்ந்திருந்த ராஜேசுவரிக்குச் சட்டென்று தன்னைப் பற்றிய சிந்தனை வந்தது. 'உம்... நான் எந்தக் கல்லூரியிலே படித்துத் தேறினேன். அவர் தான் என்ன படித்துப் பட்டம் பெற்றார்? எங்கள் வாழ்க்கை நன்றாக இல்லையா? படிப்புக்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அந்தக் காலத்தில் கிராமப் பள்ளிக்கூடத்திலே ஐந்து வகுப்புப் படித்தேனே. அதற்குப்பிறகு படிப்பினாலே என்ன தெரிந்தது? அநுபவத்தில் அறிந்துகொண்டது தானே எல்லாம்? இப்போது இவர்கள் எல்லாம் இங்கிலீஷிலே பேசினால் கூட ஏதோ கொஞ்சம் புரிகிறதே. அதெல்லாம் படித்துக் கற்றுக்கொண்ட பாடமா...? உம்... ஆனால் இருந்திருந்து ஒரு பிள்ளை; ஒரு பெண்; இரண்டு பேரும் நன்றாகப் படித்து முன்னுக்கு வர வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இராது...?"
வாசல் போர்ட்டிகோவில் வந்து நின்ற காரின் சப்தம் ராஜேசுவரியின் சிந்தனையைக் கலைத்தது. சில விநாடிகளில் நிர்மலாவும் ரகுவும் உள்ளே வந்தனர்.
*****
2
இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு மூவரும் படுக்கைக்குச் சென்றபோது மணி பதினொன்றுக்குமேல் ஆகிவிட்டது. ராஜேசுவரி படுத்த சிறிது நேரத்துக்குள் குறட்டைவிடத் தொடங்கினாள். ரகுவும் தன் அறையில் சென்று படுத்தவன் தான். ஆனால் நிர்மலாவால் மட்டும் நிச்சிந்தையாகத் தூங்க முடியவில்லை. அவள் அறைக்கு அடுத்த அறையில்தான் சரோஜினி பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தாள். சரோஜினிக்கு எப்போதுமே சற்று உரக்கப் படித்துத் தான் வழக்கம். அவள் படிக்கும் குரல் வேறு நிர்மலாவுக்குக் கொஞ்சம் நஞ்சம் வரக்கூடிய நித்திரையையும் விரட்டுவதாக இருந்தது. அதுமட்டும் அல்ல. அன்று காலையிலிருந்து அவள் மனம் ஒரு நிலையில் இல்லாமல் சுற்றி அலைந்து கொண்டிருந்தது. மாலையில் பட்டமளிப்பு விழாவின்போது, தலைமை வகித்த பிரமுகர், வருங்காலத்தில் பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் எத்தகைய கடமைகளை நாட்டின் நன்மையைக் கருதி நிறைவேற்ற வேண்டியிருக்கும்; எப்படியெல்லாம் நாட்டின் விவசாயம், தொழில், வியாபாரம், பொது நலத்திட்டங்கள் ஆகியவற்றில் பங்கெடுத்துக்கொண்டு உருப்படியான வேலைகள் செய்யவேண்டி இருக்கும் என்பது பற்றிய கருத்துக்களைத் தெளிவாக விளக்கி விஸ்தாரமாக எடுத்துரைத்தது நிர்மலாவின் உள்ளத்தில் கிளர்ச்சியை உண்டாக்கி இருந்தது. ஏற்கனவே இதுபோன்ற கருத்துக்கள் அவள் எண்ணத்திரையில் எத்தனையோ விதமான உருவங்கள் பெற்று வளர்ந்திருந்தன. இப்போது அந்த உருவங்களுக்கு உயிர் ஊட்டியதுபோல் இருந்தது அன்றைய பட்டமளிப்பு விழாப் பேருரை.
நிர்மலா, படுக்கையில் புரண்ட வண்ணமே எண்ணத்திரையில் நீந்திக் கொண்டிருந்தாள். ஜன்னலுக்கு அப்பால் வானக்கடலில் மோனச் சந்திரன் முழு நிலவை வாரி வீசியபடி நீந்திக்கொண்டிருந்தான். அந்தத் தண்மதியின் குளிர்ச்சிகூட அவள் உடலில் உரைத்ததாகத் தெரியவில்லை. ‘அடுத்தபடி என்ன?' என்ற கேள்விதான் ஆயிரக்கணக்கான எண்ணங்களைக் கொண்டுவந்து கொட்டி அவள் மூளையைச் சிதறடித்துக் கொண்டிருந்தது.
அத்தை ராஜேசுவரிக்கு, நிர்மலா சென்னையிலேயே போர்டு போட்டுக்கொண்டு டாக்டர் தொழில் நடத்தவேண்டுமென்று ஆசை. அதோடு அவளைத் தன் மகன் ரகுநாத்திற்குத் திருமணம் செய்து தன்னிடமே வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆவல் நெடுநாட்களாக இருந்து வந்திருக்கிறது என்பது நிர்மலாவுக்குத் தெரிந்ததே. ஆனால் அத்தையின் ஆசையைப் பூர்த்திசெய்வதானால் அவள் தன் தாயை விட்டுப் பிரிந்துதான் வசிக்கவேண்டும். தன் பெண் மணம்புரிந்துகொண்டு பட்டணத்தோடு இருந்துவிட்டால் தாயால் பெண்ணுடன் வந்து