Kannigathaanam
By P.M. Kannan
()
About this ebook
திருமணத்தில் ஒரு முக்கியச் சடங்கு 'கன்னிகாதானம்'. உயிர்த்துடிப்புள்ள ஒரு கன்னிப்பெண், பெண்ணின் இதயத்தைப் பற்றி உணராத பூச்சி ஆராய்ச்சி மாணவன் ஒருவனுக்குக் கன்னிகாதானம் செய்யப்படுகிறாள். இந்தக் கட்டத்தில் துவங்கும் இந்த நாவல் மனித இயல்புக்கு உகந்த சிறு சிறு சிக்கல்களோடு வளர்ந்து பூச்சியை மறந்து பெண்ணை உணர்ந்து அவள் இதயத்தை மதிக்கும் நிலையில் முற்றுப் பெறுகிறது.
இடையே கதை வளரும் காலம் பெரிதல்ல. ஆனால் கதையை வளர்க்க உதவும் பாத்திரங்களில் தான் எத்தனை விதம்!
- பி. எம். கண்ணன்.
Read more from P.M. Kannan
Nagavalli Rating: 0 out of 5 stars0 ratingsInba Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Madhuvum Rating: 0 out of 5 stars0 ratingsPavazha Maalai Rating: 0 out of 5 stars0 ratingsNilave Nee Sol Rating: 0 out of 5 stars0 ratingsPenn Deivam Rating: 0 out of 5 stars0 ratingsVazhvin Oli Rating: 0 out of 5 stars0 ratingsMannum Mangaiyum Rating: 0 out of 5 stars0 ratingsMalar Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakkavillai Rating: 0 out of 5 stars0 ratingsInba Puthaiyal Rating: 0 out of 5 stars0 ratingsAnnai Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsPennukku Oru Neethi Rating: 0 out of 5 stars0 ratingsThevaanai Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to Kannigathaanam
Related ebooks
Thudippin Ellai Rating: 0 out of 5 stars0 ratingsVaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Kaadhal Yutham Rating: 0 out of 5 stars0 ratingsMaanikkap Pudhaiyal Rating: 0 out of 5 stars0 ratingsAnjali Rating: 0 out of 5 stars0 ratingsAakasa Veedugal Rating: 0 out of 5 stars0 ratingsMaanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Unnodu Irukkum Ponnaana Nimidangal Rating: 0 out of 5 stars0 ratingsAthirshtakkaatru Rating: 5 out of 5 stars5/5En Peyar Ranganayagi Rating: 0 out of 5 stars0 ratingsManaamiyangal Rating: 0 out of 5 stars0 ratingsUnarvin Vizhippu Rating: 0 out of 5 stars0 ratingsVasantham Varum Rating: 0 out of 5 stars0 ratingsApoorva Ramayanam : Volume 2 - Anuman Kadhaigal Rating: 5 out of 5 stars5/5Sundara Kaandam Rating: 0 out of 5 stars0 ratingsJaipur Necklace Rating: 0 out of 5 stars0 ratingsVazhvin Oli Rating: 0 out of 5 stars0 ratingsSanga Ilakkiya Kathaikal Rating: 1 out of 5 stars1/5Chola Ilavarasan Kanavu Rating: 4 out of 5 stars4/5Aagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsVasanthathai Thedum Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Kaattu Nila Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvan - Part 5 Rating: 5 out of 5 stars5/5Uravin Kural Rating: 0 out of 5 stars0 ratingsSwaroopa - Oru Vanna Kanavu! Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Varum Neram Rating: 5 out of 5 stars5/5Terror, Death, Devil Rating: 0 out of 5 stars0 ratingsVadakke Oru Pudhayal! Rating: 0 out of 5 stars0 ratingsAnaikka... Anaikka... Rating: 0 out of 5 stars0 ratingsKarai Thodatha Alai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kannigathaanam
0 ratings0 reviews
Book preview
Kannigathaanam - P.M. Kannan
http://www.pustaka.co.in
கன்னிகாதானம்
Kannigathaanam
Author:
பி.எம். கண்ணன்
P.M. Kannan
For more books
http://www.pustaka.co.in/home/author/pm-kannan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
இந்த நாவல்
திருமணத்தில் ஒரு முக்கியச் சடங்கு 'கன்னிகாதானம்'. உயிர்த்துடிப்புள்ள ஒரு கன்னிப்பெண், பெண்ணின் இதயத்தைப் பற்றி உணராத பூச்சி ஆராய்ச்சி மாணவன் ஒருவனுக்குக் கன்னிகாதானம் செய்யப்படுகிறாள். இந்தக் கட்டத்தில் துவங்கும் இந்த நாவல் மனித இயல்புக்கு உகந்த சிறு சிறு சிக்கல்களோடு வளர்ந்து பூச்சியை மறந்து பெண்ணை உணர்ந்து அவள் இதயத்தை மதிக்கும் நிலையில் முற்றுப் பெறுகிறது.
இடையே கதை வளரும் காலம் பெரிதல்ல. ஆனால் கதையை வளர்க்க உதவும் பாத்திரங்களில் தான் எத்தனை விதம்!
எனது அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான வாசகர்கள் என் எழுத்துக்களில் காணும் இன்பமே என் இன்பமும் மகிழ்ச்சியும். அவர்களுக்கு என் நன்றி.
தாம்பரம்
29-5-66
பி. எம். கண்ணன்.
*****
1
அகிலாவின் பாதத்தைப் பற்றி அம்மி மீது வைத்தான் அமரநாதன். பக்கத்தில் நின்றிருந்த புரோகிதர் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். அகிலா குனிந்த தலை நிமிராமல் தன் இரு கரு விழிகளாலும் தனக்குக் கீழாக மண்டியிட்டு உட்கார்ந்திருந்த கணவனின் வடிவத்தைப் பருகியவண்ணம் இருந்தாள். ஆனால் அவள் உள்ளத்தில் மாத்திரம் ஏனோ தெரியவில்லை, சிந்தனை ஊற்று அளவு மீறிச் சுரந்து கொண்டிருந்தது.
கைதேர்ந்த சிற்பி ஒருவன் செதுக்கிய சிலைபோலக் குந்தியிருந்தான் அமரநாதன். அவன் கைகள் எத்தனையோ நாள் பழக்கப்பட்டவைபோல் புரோகிதர் செய்யச் சொன்ன காரியத்தைத் துளி கூடப் பதற்றமோ பரபரப்போ இன்றிச் செய்து கொண்டிருந்தன. இடக்கை அம்மி மீதிருந்த அகிலாவின் பாதத்தைப் பற்றியிருந்தது. வலக்கையால் பீலி, சுற்று ஆகியவற்றை அவளது விரலில் பூட்டிக் கொண்டிருந்தான் அமரன்.
வாசல் பக்கத்திலிருந்து மேள வாத்தியத்தின் முழக்கம் கேட்டுக்கொண்டிருந்தது. உள்ளே புரோகிதரைத் தொடர்ந்து வைதிகர்கள் மந்திரங்களைக் கோஷிக்கும் தொனி பரவியிருந்தது. பின்கட்டில் எங்கிருந்தோ ஒரு குழந்தை வீரிடும் சப்தமும், புகை மண்டிக் கிடந்த கல்யாண மண்டபத்தில் புகுந்து கொண்டிருந்தது. அக்கினி குண்டத்தை அருகே இருந்த ஒருவர் விசிறியெடுத்து வீசிப் புகையை விரட்ட யத்தனித்துக் கொண்டிருந்தார். போவாரும் வருவாரும் போடும் நடையிலே புதுப்புடைவைகளும் வேஷ்டிகளும் சலசலக்கும் ஓசை ஓர் அலாதியான சூழ்நிலையைப் பிரகடனப்படுத்தியது.
தலையிலே பூ அவிழ்ந்து தொங்குகிறது பாரு, அகிலா! சரிப்படுத்திக்கொள்
என்று அடக்கமான, ஆனால் அழுத்தமான குரலில் பெண்கள் பக்கமிருந்து வந்த குரல் ஒன்று கல்யாணப் பெண்ணின் செவிகளில் இத்தனை சந்தடிக்கும் இடையே கேட்காமல் போகவில்லை. குனிந்த வண்ணமே அவள் தலைப்பூவைச் சரிப்படுத்திக் கொண்டாள். அவள் உடலும் உள்ளமும் வர்ணிக்க இயலாத ஒரு பூரிப்பைப் பெற்றிருந்தன. அதிகாலை முதலாகக் கல்யாண மண்டபத்தில் அடிக்கடி அவள் மீது அவன் கைகள் படுவதனால் உண்டாகும் ஒரு வித உணர்ச்சியில் அவள் உலகமே உருமாறிச் சுழன்று கொண்டிருந்தது.
இப்போதும் கூடத்தான் அவள் கண்கள் அவனைப் பூரணமாகத் தரிசித்துக் கொண்டிருந்தன. ஆனால் அவன் தான் குனிந்த தலை நிமிர்ந்து அவள் முகத்தை ஒரு தடவை கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அவள் பாதத்தைப் பற்றிய அவன் கரத்துக்கு எத்தகைய உணர்ச்சியுமே ஏற்படவில்லையோ? அல்லது அத்தனை பேர் மத்தியில் அவன் தன் மன உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாது என்று அடக்கமாக இருந்தானோ? இருந்த போதிலும் பக்கத்திலிருந்த புதுப்பெண்ணைப் பிறர் அறியாமல் கடைக்கண்ணால் பார்க்கக்கூடவா முடியாது அவனுக்கு? அதுதான் புரியவில்லை அகிலாவுக்கு.
அம்மி மீது தன் பாதத்தை இருத்தி அணிகலன்களைப் பூட்டியபோது கூட அதைப்பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தாள் அகிலா. அவன் கிராப்புத் தலை மீது அவள் பார்வை சென்று லயித்தது. நேர்க்கோடுபோல் நீண்டிருந்த வகிடும், இருபுறமும் பிரிந்து நின்ற தலை மயிரும், அவள் உள்ளத்திலே என்ன என்னவோ கற்பனைகளைப் பிறப்பித்தன. அவன் தலை வகிடு அவர்களது வாழ்க்கைப் பாதை போல் நீண்டிருந்தது. அந்த வகிட்டின் இடது புறத்தில் சுருள் சுருளாக வளைந்து வளைந்து தம் போக்கில் சென்று கவிந்திருந்த தலைமயிர் அவனது யதேச்சையான போக்கைத் தெளிவுபடுத்துவது போல் இருந்தது. வலப்பக்கத்தில் ஒதுக்கி விடப்பட்டு ஒரே ஒரு வளைவுடன் குறுகலாக முடிந்துவிட்ட கேசம் அவளது பெண்மை நிலையின் எல்லைக்கோடு இவ்வளவு தான் என்று அளவிடுவதுபோல் புலப்பட்டது அவளுக்கு. ஆனால் அந்த இரண்டு பேரும் சேர்ந்து செல்லவேண்டிய வாழ்க்கைப் பாதையில் எந்த இடத்தில் தான் இருவரும் சந்திக்க இடம் இருக்கிறது என்று சிந்தித்தாள் அவள். வகிடு முடியும் இடத்திலே ஒரு சுழி. அந்தச் சுழி ஒரே சிக்கலாகத், தோன்றியது அவள் கண்களுக்கு. அதுதான் சந்திக்கும் இடம். தாம்பத்திய வாழ்க்கையின் சம்மேளனம் அந்தப் பிரதேசத்தில் தான் இருந்தது. அங்கே வகிட்டுப் பிரிவினை இல்லை; தனித்தனியான போக்கு இல்லை. இரு உள்ளங்களும் ஒன்றுபட்டுப் பின்னிப் பிசிறிக்கொண்டு அடக்கத்துடனும் அமைதியோடும் வாழ்க்கையின் நீண்ட பாதையைப் பின்னோக்கிப் பார்க்கும் விஸ்தாரமான பிரதேசம் அது. அங்கேதான் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோ அல்லது சரிக்கட்டிக் கொண்டோ தங்கும் நிதானம் தெரிகிறது. அதுவரையில் அந்த நீண்ட பாதையில் தனித்தனியாகப் பிரயாணம் செல்லும் தன்மைதான் புலனாகியது அவளுக்கு.
அவள் கண்களுக்கு அந்தப் பாதை நேராகச் செல்வது போல்தான் தெரிந்தது. ஆனால் அவள் பார்வைக்குப் புலனாகாத எத்தனை மேடுகளும் பள்ளங்களும் அந்தப் பாதையில் இருந்தனவோ? யாருக்குத் தெரியும்?
அவள் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கையில் ஸயன்ஸ் வகுப்பில் பூதக்கண்ணாடி மூலம் பல பொருள்களைப் பார்த்திருக்கிறாள். அந்த ஞாபகம் ஏன் இப்போது உண்டாகவேண்டும் அவளுக்கு; அவள் சிந்தனைக் கண் முன்னால், அந்தப் பூதக்கண்ணாடி நிற்கிறது. அதன் வழியாக அவள், அவன் தலை வகிட்டைப் பார்க்கிறாள். அந்த வகிட்டுப் பாதை எத்தனை மடங்கு பெரியதாகவும், நெடியதாகவும் ஓடுகிறது? அந்தப் பாதையிலே ஊர்ந்து செல்லும் ஒரு சிற்றெறும்பு! அது கூட எத்தனை பெரிதாகத் தோற்றம் அளிக்கிறது. அதன் கால்கள் அந்தப் பாதையிலே விரையும்போது எத்தனை மேடுகளை ஏறிக் கடக்கின்றது? எத்தனை பள்ளங்களில் இழிந்து ஏறுகிறது? ஓரோர் சமயம் வகிட்டின் ஓரத்தில் ஒதுக்கப்பட்டிருக்கும் மயிர்க்கால்களின் இடையே அந்தச் சிற்றெறும் பின் கால்கள் சிக்கி, அதை முன்னேறவொட்டாமல் தடை செய்யும்போது அது முகத்தை இப்புறமும் அப்புறமும் திருப்பித் தான்படும் அவஸ்தையை என்னமாகத்தான் எடுத்துக்காட்டுகிறது?
வாழ்க்கைப் பாதையில் தனிப்பட்ட பிரயாணியின் சங்கடங்களைத் தான் அந்தச் சிற்றெறும்பு சித்திரிக்கிறதோ?
சீ, என்ன பயங்கரமான சிந்தனை; அதுவும் இப்படிப்பட்ட ஆனந்தமான நேரத்தில்! அகிலா தன்னைத் தானே திருத்திக்கொள்ள முயன்றாள். பள்ளிப் படிப்பும் புத்தகங்களிலிருந்து கிடைத்த அறிவும் இதற்குத்தானா பயன்பட்டன? 'சிந்தனையைப் பார் சிந்தனையை, அவலங்கெட்ட மனத்துக்கு' என்று சபித்தாள் மனத்தை.
பற்றியிருந்த பாதத்தை விட்டுவிட்டான் அமரநாதன். இப்போது புரோகிதர் சொன்னபடி அவள் கையைப் பிடித்துக்கொண்டான் அவன். கல்யாண மேடையைச் சுற்றி வலம் வந்தான் அவளுடன். பிறகு இருவரும் மணை மீது அமர்ந்தனர். மணைமேல் உட்கார்ந்த பிறகாவது தன் பக்கம் திரும்புகிறானா அவன் என்று கவனித்தாள் அவள்.
அமரநாதன் அகிலாவின் பக்கம் திரும்பவில்லை. புரோகிதர் பக்கந்தான் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான். அவர் போதிக்கும் மந்திரங்களை உச்சரிப்பதிலும் நெய்யை ஹோமத்தில் வட்டிப்பதிலுந்தான் அவன் தீவிரமாக இருந்தான். 'ஆகா! எத்தனை பயபக்தியுடன் மந்திரம் ஓதுகிறான்' என்று கூட எண்ணினாளோ என்னவோ அவள். இருந்தபோதிலும் ஒரு தடவையாவது அவள் பக்கம் அவனிடமிருந்து ஒரே ஒரு கடைக்கண் வீச்சுச் சென்றிருந்தால் கூடப் போதும். அவள் உச்சி குளிர்ந்து போயிருக்கும். ஆனால் அதுதான் இல்லை. அவன் எத்தனைக்கெத்தனை பிகுவுடன் இருந்தானோ, அத்தனைக்கத்தனை குழைந்து போயிருந்தாள் அகிலா. அவளே கூட நினைத்துக்கொள்வாள் அடிக்கடி; 'இப்படி அவரை நான் அடிக்கொரு தரம் கீழ்க்கண்ணால் பார்ப்பதை யாராவது கவனித்துவிட்டால் என்ன நினைப்பார்கள்?' என்று.
அதோ யாரோ கவனிக்கவே கவனித்துவிட்டார்கள் போல் இருக்கிறது. தலைக்கு மேலேயிருந்து கேட்கிறது அந்தக் குரல். கல்யாணப் பெண்ணைப் பார். கணவனை விட்டு முகம் வேறு பக்கம் திரும்பமாட்டேன் என்கிறதே?
எல்லோருக்கும் கிடைக்கக் கூடியவனா அமரன்? அகிலா பாக்கியசாலி. அவள் கண்கள் செய்த பாக்கியம், எப்போதும் அவனைப் பார்த்துக்கொண்டேதான் இருந்தாலும் தெவிட்டுமா என்ன அவளுக்கு?
ஆடை வாய்க்கிறதும் அகமுடையான் வாய்க்கிறதும் அதிருஷ்டம் என்பார்கள்."
அகிலா அதிருஷ்டசாலி.
அகிலா தன்னையும் மறந்து தலை நிமிர்ந்து பேச்சு வந்த திக்கில் பார்த்தாள். அமரநாதன் கூடப்பார்த்தான். பேச்சுக்கள் அத்தனை தெளிவாகவும் ஸ்பஷ்டமாகவும் கேட்டன. மேலே மாவிலைத் தோரணங்களுக்கு அப்பால் கல்யாணக் கூடத்தின் மாடியிலே ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்த சில யுவதிகளிடமிருந்து தான் கிளம்பின அந்தப் பேச்சுக்கள்.
'அகிலா அதிருஷ்டசாலி' என்று கூறியவளும் அங்கே தான் இருந்தாள். அவளைத்தான் கவனித்தான் அமரநாதன், அந்தக் குரலைக் கேட்டதும். மறு விநாடியே அவன் தலை குனிந்து கொண்டான். அகிலா தலை தூக்கிப் பார்த்தபோது அந்தப் பெண்ணின் கண்ணொளி அவளைத் திடுக்கிடச் செய்தது. அவனது தலை வகிட்டிலே ஊர்ந்து சென்ற அந்தச் சிற்றெறும்பைப் பற்றிய ஞாபகம் ஏனோ உண்டாயிற்று அவளுக்கு.
அவள் அவசரப்படவில்லை. கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று துடிக்கவும் இல்லை அவள். இன்னும் அதிகமாகப் படிக்கவே விரும்பினாள். ஆனால் மாமிதான் அவசரப்பட்டாள். கல்யாணம் செய்து கொடுத்து விட்டால் ஒரு பளு கழிந்து விடும் என்று கருதினாள் காமாட்சி. அவளுக்குந்தான் எத்தனை வருஷமாக இந்தப் பொறுப்பு ஏற்பட்டுப் போய் விட்டது! அகிலா அநாதை. குழந்தையிலேயே பெற்றோர் இருவரையும் இழந்து மாமன் வீட்டில் வளர வந்துவிட்டவள். காமாட்சியும் சோமப்பாவும் தங்களுக்குப் பிள்ளையில்லாத குறையைப் பாராட்டாமல் எத்தனையோ அருமையும் பெருமையுமாகத்தான் அகிலாவை வளர்த்து வந்தார்கள்.
சோமப்பா ரெயில்வே ஆபீஸில் குமாஸ்தா உத்தியோகத்தில் இருந்தார். சொற்ப சம்பளம் வாங்குகிறவர். சென்னை முத்தியாலுப்பேட்டை, தம்புச்செட்டித் தெருவிலே ஒரு பெரிய வீட்டிலே நாலைந்து குடித்தனங்களுக்கு மத்தியில் ஒண்டுக் குடியிருந்து காலக்ஷேபம் செய்துவந்தார். நாலைந்து குடித்தனக்காரர்களிடையே வயது வந்த பெண்ணையும் வைத்துக்கொண்டு ஒண்டுக் குடியிருந்து வாழ்வது, வயிற்றிலே நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பது போல் இருந்தது காமாட்சிக்கு. அதிலும் தன் சொந்தப் பெண்ணாக இருந்தாலும் நறுக்கென்று ஒரு குட்டு வைக்க உரிமை உண்டு. காலஞ்சென்ற நாத்தனார் பெண் அகிலா. சோமப்பா அவள் மீது உயிரையே வைத்திருந்தார். இந்த நிலையில், அவளை அதிகமாகக் கண்டிக்கச் சாத்தியப்படவில்லை காமாட்சிக்கு.
அகிலா அப்படியொன்றும் அசடல்ல. தன் காரியம் உண்டு, தன் படிப்பு உண்டு, பாட்டு உண்டு என்று தான் இருந்தாள். ஒருவர் தன்னைப் பற்றி ஒரு வார்த்தை பேசும்படியாக வைத்துக்கொள்ளவில்லை அவள். இருந்தாலும் நாலு பேர் சேர்ந்தால் வாய் சும்மா இருக்கிறதா? குதிர் குதிராகப் பெண்கள் வளர்ந்து போகிறதுகள். காலத்திலே ஒரு கல்யாணம் கார்த்திகை என்று செய்து வைக்காமல் என்ன படிப்பும் பாட்டும் வேண்டியிருக்கிறது?
என்று ஒருத்தி பேசுவாள்.
பெற்ற தாயாரும் தகப்பனாரும் இருந்தால், காலத்திலே கல்யாணம் செய்ய முயலுவார்கள். அநாதைக்குக் கல்யாணம் ஆகிற காலத்திலே தான் ஆகும்.
இப்படி ஒருத்தி கூறுவாள்.
சுளை சுளையாகப் பணத்தைப் பார்க்காமல் எண்ணி வைத்தால் தானே ஒரு பெரிய காரியத்தைச் செய்ய முடியும்?
என்று ஒரு பரிகாச வார்த்தை பிறக்கும்.
இப்போதுதான் பாட்டு, ஆட்டம் எல்லாம் நாகரிகமாக இருக்கிறதே. அகிலாவை ஆட விட்டு நாடகம் பார்க்கிறாள் காமாட்சி
என்று ஒரு குத்தல் பேச்சும் கிளம்பும்.
ரெயில்வே ஆபீஸிலே சம்பள உயர்வு ஏது, மண்ணேது? அகிலா படித்துப் பாஸ் பண்ணிவிட்டு ஆபீசுக்குப் போனால் மாமாவுக்கும் ஒத்தாசையாக இருக்கும். பெரிய குடும்பமோ இல்லையோ?
என்று ஒரு கிண்டல்.
இப்படிப் பொழுது விடிந்தால் பொழுது போனால் பேச்சுக் கேட்க முடியவில்லை காமாட்சிக்கு. அவளும் ஒரு பெண்தானே. எப்படியாவது அகிலாவைக் கட்டிக் கொடுத்து விட்டால் போதும் என்று தான் அவள் எண்ணினாள்.
சோமப்பா ஆரம்பத்தில் இந்தப் பெண்டுகள் பேச்சைப் பொருட்படுத்தவில்லை. அகிலாவுக்கு உயர்தரக் கல்வியும் நல்ல சங்கீத ஞானமும் ஏற்படும்படி செய்ய அவர் தம்மால் ஆனவரையில் முயன்றார். தமது சக்திக்கு மீறிச் செலவும் பண்ணினார். கடைசியில் காமாட்சியின் நச்சரிப்புத்தான் அவருக்குச் சகிக்க முடியாமல் போய்விட்டது.
அகிலாவின் கல்யாணம் காமாட்சியின் வெற்றிதான். அவளேதான் அந்த வரனையும் பார்த்து முடித்தாள். தன் பால்ய சிநேகிதி மரகதத்தின் ஒரே பிள்ளைக்கு அகிலாவைக் கன்னிகாதானம் பண்ணிக்கொடுக்கத் தீர்மானித்து விட்டாள் காமாட்சி.
அகிலாவைப் போலவேதான் அமரநாதனும் கல்யாணத்தைப் பற்றித் துளிகூடச் சிந்திக்கவில்லை. பாயும் படுக்கையுமாகக் கிடந்த தன் தாயாரின் உபத்திரவம் பொறுக்க முடியாமல் தான் அவன் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தான். தகப்பனும் பிள்ளையுமாகப் பெண் பார்க்கப் போனபோதுகூடப் பெண்ணைக் கண்ணெடுத்துப் பார்த்தவர் தகப்பனார்தான். பிள்ளை கூடத்தில் உட்கார்ந்தபடி, சோமப்பாவின் வீட்டு அலங்காரத்தைக் கண்டு, உதட்டுக்கு வெளியே வெடித்துக்கொண்டு கிளம்பிய சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கிக்கொள்வதில் தான் அதிகமான சிரத்தை காட்டினான்.
காமாட்சிதான் அகிலாவை மரகதத்திடம் அழைத்துக் கொண்டு போனாள். மரகதம் படுக்கையில் கிடந்தாள். காமாட்சி அவளை மெல்லப் பிடித்துத் தூக்கிச் சாய்ந்த வண்ணமாக உட்காரச் செய்தாள். அகிலா அவளை நமஸ்காரம் செய்தபோது, அவள் வாயில் தான் இரண்டு நல்ல வார்த்தைகள் வந்திருக்கக் கூடாதா? அம்மாடி, நீ எனக்கு மாட்டுப் பெண்ணாய் வருகிற வேளை, என் கஷ்டம் விடிந்து போகணும். இந்தக் கல்யாணத்தைப் பார்த்த கையோடு எனக்குக் கதிமோக்ஷம் கிடைத்தால் என் நெஞ்சு வேகும். எங்கேயாவது என் பெயரைச் சொல்லாமல் நீயாவது நன்றாயிருக்க வேணும்
என்று கண்களிலே வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மரகதம் பேசிய வார்த்தைகள், அகிலாவின் நெஞ்சிலே சிவுக்கென்று பட்டன.
சோமப்பாவும் காமாட்சியுமாகச் சேர்ந்து அகிலாவைக் கன்னிகாதானம் பண்ணிக் கொடுத்து விட்டார்கள். அமரநாதனும் அந்தக் கன்னிகையைக் கையேந்திப் பெற்றுக்கொண்டு விட்டான். தானமாக அவள் இரு கைகளாலும் போட்ட மாலையைக் கண்ணை மூடிக்கொண்டு குனிந்து, கழுத்திலே தாங்கிக்கொண்டான்.
மணமாலையும் கழுத்துமாக அமரநாதனும் அகிலாவும் சென்று மரகதத்தை வணங்கினர்.
அம்மா! இப்போது உன் மனசு குளிர்ந்துவிட்டதோ இல்லையோ?
என்று வெடுக்கென்று கேட்டான், அவன் தாயை வணங்கி எழுந்ததும்.
அந்தக் குரலில் தொனித்த ஏளனத்தைக் கண்டு திகைப்புற்றாள் அகிலா.
*****
2
சோமப்பாவும் காமாட்சியும் புது மணப்பெண்ணின் பின்னால் தான் நின்றிருந்தனர். தாயை வணங்கி எழுந்ததும் மணமகன் பேசிய பேச்சுக்கள் அவர்கள் இருவருக்கும்கூடச் சுருக்கென்றுதான் பட்டன. சோமப்பா காமாட்சியைப் பிரமிப்புடன் பார்த்தார். அந்தப் பார்வையில் இருந்த அர்த்தத்தைக் காமாட்சி எளிதில் உணர்ந்து கொண்டாள். உன் காரியத்தைப் பார்த்தாயா?
என்று கேட்பது போல் இருந்தது அவர் பார்வை. சட்டென்று ஏதாவது பதில் சொல்லி அவர் உள்ளத்தைத் திருப்ப வேண்டுமென்று தோன்றியது அவளுக்கு. ஆனால் நிதானித்துக்கொண்டாள். பதில் சொல்லப்போய் வார்த்தைகளை வளர்க்க அதுவா தருணம்?
பிள்ளையின் பேச்சு மரகதத்துக்கு மாத்திரம் பிடித்திருந்ததா என்ன? என்னவோ அப்பா, என் மனசு குளிர்ந்தாப்போல அந்தப் பெண்ணின் மனசும் குளிர்ந்து இருக்கவேண்டும்; அது தான் நான் வேண்டுவது
என்று விட்டுக் கொடுக்காமல் பதிலளித்தாள் மரகதம்.
அகிலாவின் நெஞ்சாழத்திலிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது. தன்னையும் மீறிக் கிளம்பிய உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அவள் குனிந்த தலை நிமிர்ந்து தன் நாயகனைப் பார்த்தாள். அப்போதும் அவன் அவள் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. வேறு எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தான் அவன். அவன் பார்வை சென்ற திக்கில் தான் அந்த யுவதிகள் இப்போது கூட்டமாக நின்றிருந்தனர். அவர்கள் நடுவே அவள் இருந்தாள்; அகிலா அதிருஷ்டசாலி என்று கூறினாளே, அந்தப் பெண்தான்.
அமரநாதன் அந்தத் திசையில் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தானே யொழிய அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான் என்று சொல்ல முடியாது; ஆனால் அகிலாவுக்கு அப்படித் தோன்றவில்லை.
அந்தப் பெண் அவளுக்குப் புதியவள் அல்ல. ஏற்கனவே பழக்கமானவள்தான். தனக்குக் கிடைக்கவிருந்த பதக்கத்தைத் தட்டிக்கொண்டு போய்விட்ட அந்தப் பெண்ணை அகிலாவா இந்த ஜன்மத்தில் மறப்பாள்? எங்கிருந்தோ வந்தாள் அவள். அகிலா படித்துக் கொண்டிருந்த பள்ளிக் கூடத்தில் அவள் வகுப்பிலேயே சேர்ந்து கொண்டாள். சில மாதங்களுக்குள்ளேயே படிப்பிலும் பாட்டிலும் நடனத்திலும் பிரசங்கம் செய்வதிலும் எல்லாவற்றிலுமே அகிலாவைப் பின்னடையச் செய்தாள். முன் வருஷத்தில் அகிலாவுக்குக் கிடைத்த பரிசுகளையெல்லாம் இந்த வருஷத்தில் அந்த லீலாவே தட்டிக்கொண்டு போய் விட்டாள்.
லீலாவின் திறமையையும் கூர்மையான புத்தியையும் அழகையும் அடக்கத்தையும் கண்டு அகிலாவுக்கே அவள் மீது ஒருவித வாஞ்சை ஏற்பட்டது. தன்னைவிட எந்த விதத்திலும் அவள் சிறந்து விளங்குகிறாள் என்பதனால் அகிலாவுக்கு அவளிடம் பொறாமையோ வெறுப்போ எற்படவில்லை. லீலாவின் அறிவைக் கண்டு வியந்தாள் அகிலா; மகிழ்ந்தாள் மனப்பூர்வமாக. ஆனால் அன்று லீலாவைக் கலாசாலையில் கண்டு மகிழ்ந்த உள்ளம் இன்று கல்யாணப் பந்தலில் கண்டு குமுறியது. நீண்ட வகிட்டுப் பாதையில் நெளிந்து ஊரும் சிற்றெறும்பு போல ஏனோ இவள் இங்கே வந்து முளைத்தாள் என்று கூட எண்ணினாளோ என்னவோ?
அகிலாவின் கல்யாணம் முடிந்தது. கல்யாணக் காரியங்களில் ஈடுபட்டு ஓடியாடி உழைத்த சோமப்பாவும் இரண்டு வாரகாலம் லீவு போட்டுவிட்டு, அப்பாடா
என்று கால்களை நீட்டிக்கொண்டு ஓய்ந்து உட்கார்ந்தார். காமாட்சிக்கும் தலைபாரம் விட்டது போல் இருந்தது. இனிமேல் அவர்களைப் பற்றி ஒருவர் ஒரு வார்த்தை சொல்ல இடமில்லை அல்லவா? கூட மரகதத்தின் பிள்ளைக்கு என்ன? மணிப்பிள்ளை. அழகிலே குறைவா? அந்தஸ்திலே குறைவா? படிப்பிலே சோடையா? பணத்திலேதான் முடையா? குணத்தில் மாத்திரந்தான் என்ன? யாராவது பல்லத்தனை வார்த்தை பதற்றமாகப் பேச முடியுமா? அவனைப் பற்றிக் குறைவாகப் பேச எண்ணினால் ஒன்று மட்டுந்தான் சொல்லலாம். ‘இந்தக் கல்யாணத்துக்கு அவன் இஷ்டப்படவில்லை. அவன் இப்போது கல்யாணமே வேண்டாம் என்று தான் சொன்னான். மரகதம் நோயாளி. அவள் நிர்ப்பந்தத்தான் இந்தக் கல்யாணத்துக்குக் காரணம்.' இப்படித்தான் கூறக்கூடும்.
அமரநாதன் அகிலாவை விரும்பி மணந்தான் என்று சொல்ல முடியாதென்றாலும் அவன் அவளை வெறுக்கவில்லை என்பதை மட்டும் நிச்சயமாகச் சொல்லலாம். கல்யாணம் நிச்சயமாவதற்கு முன் மரகதம் தன் புத்திரனைத் தன் அருகில் அழைத்து உட்கார வைத்துக்கொண்டு, அமரா, இந்தப் போட்டோவில் இருக்கும் பெண் உனக்குப் பிடிக்கிறதா பார். என்னோடு படித்த காமாட்சியின் மருமகள் இவள். பெண் புத்திசாலி. எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் பண்ணியிருக்கிறாள். அடக்க ஒடுக்கமாக இருக்கும் போல் தோன்றுகிறது. என் மூச்சுப் பிரிவதற்கு முன் உனக்கு இந்த மாதிரி ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிப் பார்த்து விட்டுப் போனால் தான் என் நெஞ்சு வேகும்
என்று சொன்னபோது, அமரநாதன் போட்டோவைப் பார்த்துவிட்டு, போட்டோ நன்றாகத்தான் எடுத்திருக்கிறார்கள். நீ சொன்ன வர்ணனைகளும் வாஸ்தவம் என்றே ஒப்புக்கொள்கிறேன். ஆனால் எனக்கு இப்போது கல்யாணத்தில் மனம் இல்லையே. நான் பண்ணிக்கொண்டிருக்கும் ஆராய்ச்சி முடிவு பெற்று, 'டிப்ளமா' வாங்குகிறவரையிலாவது கல்யாணத்தை ஒத்திப்போட வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். அப்புறம் உன் மனம்போல் கல்யாணம் பண்ணிவிடேன். நான் வேண்டாமென்று சொல்லவில்லை" என்று தான் இடைமறித்துப் பதில் சொன்னான்.
உன் ஆராய்ச்சி முடிவதற்குள்ளே, என் மூச்சு முடிந்துவிடும் போல் இருக்கிறதே. இப்போதே ஒவ்வொரு சமயம் ஒரு மூச்சு உள்ளேயிருந்து வெளியே வருவதற்குள் பிராணன் போய்விடும்போல் இருக்கிறது. எத்தனை காலமாகத்தான் வீட்டிலே ஒரு நல்லது கெட்டது என்று பார்த்து அநுபவிக்காமல் இப்படி யமனுடன் போராடிக் கொண்டிருப்பது? சட்டென்று பிராணன் போய்விட்டாலும் ஒரு வழியாகப் போகும். போகவும் தெரியாமல், இருக்கவும் பிடிக்காமல் கிடந்து தவிக்கவேண்டியிருக்கிறதே; அது தான் கஷ்டமாக இருக்கிறது. இந்த வீட்டிலே பச்சென்று ஒரு பெண் நடமாடுவதைக் கண்ணால் பார்க்கவேண்டுமென்று எத்தனை ஆசையாக இருக்கிறது தெரியுமா...? உன் அப்பா... பாவம்... ஒரு அப்பாவி! என்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு என்ன சுகப்பட்டார்? ஐந்து வருஷகாலம் வாழ்வு...! அந்த வாழ்வை நினைக்க நீ ஒரு குறுத்து. இதைத் தவிர, என்னால் அவருக்குத்தான் என்ன சுகம்? அவர் சொத்தும் சம்பாத்தியமும் என் மருந்துக்குத்தான் செலவாகிறது. ஏதோ நீ படிக்கிறாயே, அதைத் தவிர என்ன கண்டார் அவருந்தாம்? பிள்ளையின் போக்கிலே குறுக்கிட வேண்டாம் என்று இருக்கிறார் அவர். அவர் மனசுக்குத் தான் ஓர் ஆறுதல் வேண்டாமா? நிம்மதி வேண்டாமா? அவர் ஆயுளில் தான் கொடுத்து வைக்கவில்லை. பூமிக்குப் பாரமாக நான் இருந்து கொண்டிருக்கிறேன். அவர் கண்ணெதிரிலே, என் கண்ணெதிரிலேயாவது நீ குடியும் குடித்தனமுமாக வாழ்வதைக் கண்டு நான் சந்தோஷமாகச் சிலகாலம் இருக்கவேண்டாமா? அதற்குத்தான் கேட்கிறேன் உன்னை, அகிலாவைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறாயா என்று?
நீ இப்போது என்ன சொல்லுகிறாய்?
இன்னும் என்ன சொல்ல வேண்டும் நான்?
சரியம்மா.
அமரநாதன் அந்தச் சமயத்தில் தாயின் மனத்தைச் சுக்கு நூறாக உடைக்க விரும்பவில்லை. அவளது தாய்மை உணர்ச்சிக்குத் தலைவணங்க அவன் எப்போதுமே தயாராக இருந்தான். அவளது பெண்மையின் நிறைவேறாத இனிய வாழ்க்கைக் கனவுகளுக்குக் கௌரவமளிக்கத் தான் வேண்டும் என்பதை அவன் நன்றாக உணர்ந்திருந்தான். அவன் அவளை எதிர்த்துப் பேசவில்லை. அவள் உள்ளத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த உணர்ச்சி அலைகளின் பேரிரைச்சலை, அவள் வார்த்தைகளாகக் கொட்டினாள். அந்த இரைச்சலை எதிர்க்கத் தக்க பெருங்குரல் அவனுக்கு இல்லையோ அல்லது மரியாதைக்காக எதிர்க்க வேண்டாம் என்று நினைத்தானோ? அவன் வார்த்தையை வளர்க்கவில்லை, சரியம்மா
என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான். அந்த முற்றுப்புள்ளியின் அர்த்தந்தான் விபரீதமாக விளைந்து இப்போது கல்யாணத்தையும் முடித்துவிட்டது. சரி என்பதற்குச் சம்மதம் என்று யதார்த்தமாக அர்த்தம் பண்ணிக்கொண்டாள் மரகதம்.
அடிநாளில் அப்பாவும் அம்மாவும் வாழ்ந்த வாழ்க்கை அமரநாதனுக்கு இப்போது கூட ஏதோ கனவு காண்பது போல் அடிக்கடி நினைவில் தோன்றும். மரகதம் அடிக்கடி தன் நோயைப்பற்றி அலுத்துக்கொள்ளும் போதெல்லாம் அதைப்பற்றி எண்ணிப் பார்ப்பான் அவன். அப்போது ஒரு நாள், அப்பா அம்மாவை ஏதோ ஒரு நாடகம் பார்க்க அழைத்த ஞாபகம் வருகிறது, மரகதம், நாலு பேருக்குப் பாஸ் வந்திருக்கிறதாம், எதிர் வீட்டுச் சேஷாத்திரி நாதனிடம். அவனும் அவன் மனைவியும் போகப் போகிறார்களாம். நம் இருவரையும் வரமுடியுமா என்று கேட்டனுப்பியிருக்கிறான்
என்கிறார், அப்பா.
ஏன்? அவர்களாவது நிம்மதியாக நாடகம் பார்த்து விட்டு வரட்டுமே. நடுப்பாதியிலே இருமல் வந்து விட்டால் நமக்கு மாத்திரமின்றி அவர்களுக்குந்தானே தொல்லை? நான் எடுத்த ஜன்மத்துக்கு நாடகம் ஒன்றுதான் குறைச்சல்... உம், அதற்காக நீங்கள் என்ன பண்ணுவீர்கள் பாவம்...? வேண்டுமானால் அமரனைக் கூட்டிக்கொண்டு நீங்கள் மாத்திரம் போய்வாருங்கள்.
நான் போகவில்லை.
அப்பாவின் மனம், அம்மாவின் பதிலைக் கேட்டு என்ன பாடுபட்டிருக்கும்? எதிர் வீட்டிலிருந்து சேஷாத்திரி நாதனும் அவர் மனைவியும் ஜோடியாக நாடகம் பார்க்கப் போகிறார்கள். இவர்களையுந்தான் ஜோடியாக வரச் சொல்லிக் கூப்பிட்டிருக்கிறார் அவர். ஆனால் இடையிலே அம்மாவுக்கு நிச்சயமாக இருமல் வரத்தான் வரும்... இரண்டு மணி நேரம் நிம்மதியாக எங்கே விட்டு வைக்கிறது அந்தப் பாழாய்ப்போன