Mannum Mangaiyum
By P.M. Kannan
()
About this ebook
மங்கை மோகத்தினால் மண்ணை இழக்கும் காவியக் கதையை விட்டு, மண் மோகத்தினால், காதலித்த மங்கையைத் துறக்கும் வாழ்க்கைக் கதையை எழுதவே சிந்தனை கிளர்ந்தெழுந்தது.
எனக்கு எப்போதுமே என் பாத்திரப் படைப்புக்களின் வாழ்க்கையில், அவர்களது ஆசைகளில், கனவுகளில், நம்பிக்கைகளில், சாதனைகளில், தவறுகளில், எல்லாவற்றிலுமே அநுதாபமும் அக்கறையும் உண்டு. அதனால் தான் என் நளினி, சுசீலா இருவருமே அநுதாபத்திற்குரிய பாத்திரங்களாக அமைந்து விட்டனர். என் கதாநாயகன் ரவிசந்திரனைப் பற்றியும் நீங்கள் குற்றம் காண மாட்டீர்கள். அவனிடம் எனக்கு உள்ள அநுதாபம் உங்களுக்கும் உண்டாகும்.
கோபாலபுரம் பண்ணை முதலாளி கோபாலரத்னம் சாமர்த்தியமாகத் தம் காரியத்தைச் சாதித்துக்கொள்கிறார். அவரது பண்ணை மானேஜர் குமாரசாமி, எசமானர் சாதனைக்கு எதிராகத் தமது தோல்வியை மௌனமாகவே ஏற்றுக் கொண்டு விலகித் துன்புறுகிறார். ஆனால் கோபாலரத்னத்தின் மீது ஆத்திரம்கொள்ளத் தோன்றாது. குமாரசாமியிடம் ஒரு விதமாக இரக்கம் கொள்ளும் உள்ளம் கோபாலரத்னத்தின் மீதும் வேறுவிதமாக அநுதாபமே அடையும்.
மற்றும் இந்த நாவலில் வரும் மங்களம், பலராம், புவனேசுவரி, தண்டபாணி போன்றவர்கள் தனித்தனி இயல்பு உடையவர்கள். ஒவ்வொருவரிடமும் ஒரு குணம் காண்கிறோம் என்றால் உடனடியாகவே ஒரு குறையும் காண்கிறோம். குணத்தைக் கண்டு புகழவோ, குறையைக் கண்டு இகழவோ தோன்றாது. இரண்டையும் சீர் தூக்கி ஆராயும்போது அவர்களிடம் நமக்கு இரக்கமே ஏற்படும். அதில் தான் நமது மனித உள்ளத்தை நாம் உணரமுடிகிறது.
எல்லோருமே ஏதாவது தவறு செய்து விட்டுத் திண்டாடுகிறார்கள். அவர்களது தவறுகளை நாம் உணருகிறோம். நாம் கூட அந்த நிலையில் அப்படித்தானே தவறு செய்வோம் என்று நமக்குத் தோன்றுகிறது. இந்த எண்ணம் நமக்கு அவர்களிடம் இரக்கத்தை அளிக்கிறது.
முழுக்க முழுக்க மனித இயல்பை ஒட்டிய பாத்திரங்களுக்கு இடையே இரண்டு பேர் தமக்கென்று தனிப்பாதை வகுத்துக் கொண்டு வாழ்கின்றனர் இந்த நாவலில். தருமலக்ஷ்மியம்மாள் மக்கள் பணியே குறிக்கோளாகக் கொண்டவள். நாகராஜன் தியாகத்தின் சிகரத்தில் நிற்பவன். இவர்கள் இருவரும் இந்த நாவலில் இரண்டு இலட்சியங்களாக விளங்குகின்றனர்.
தவறு செய்வது மனித இயல்பு; அந்தத் தவறைத் தெரிந்து கொண்டு திருத்திக் கொள்வது மனிதத் தன்மை. காதல் ஒன்று; குறிக்கோள் மற்றொன்று. குறிக்கோளை நோக்கிச் சென்று வெற்றி பெறுவதற்குக் காதலைப் பலியிட வேண்டி வந்தால் - தவறுகள்...! தவறுகள்...!! தவறுகள்...!!! போராட்டம்...! போராட்டம்...!! போராட்டம்!!!
எல்லையற்ற போராட்டம். அந்தப் போராட்டத்தின் முடிவு தான் என்ன? இடையே கடமை உணர்ச்சி கூட மறந்து போகிறது. காதல் எப்படிப் போராடுகிறதோ, அப்படியேதான் வாழ்க்கையும் போராடுகிறது!
போதுமே! இதோ நாவல் பிறந்து விட்டது.
- பி. எம். கண்ணன்
Read more from P.M. Kannan
Penn Deivam Rating: 0 out of 5 stars0 ratingsMalar Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsVazhvin Oli Rating: 0 out of 5 stars0 ratingsKannigathaanam Rating: 0 out of 5 stars0 ratingsInba Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsThevaanai Rating: 0 out of 5 stars0 ratingsNagavalli Rating: 0 out of 5 stars0 ratingsInba Puthaiyal Rating: 0 out of 5 stars0 ratingsNilave Nee Sol Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakkavillai Rating: 0 out of 5 stars0 ratingsAnnai Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsPavazha Maalai Rating: 0 out of 5 stars0 ratingsPennukku Oru Neethi Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Madhuvum Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to Mannum Mangaiyum
Related ebooks
Kannadi Rating: 0 out of 5 stars0 ratingsThavam Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Kuthiraigal Rating: 0 out of 5 stars0 ratingsMundhirikaattu Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsPudhumaipithan Short Stories - Part 11 Rating: 0 out of 5 stars0 ratingsOrey Urimai Rating: 0 out of 5 stars0 ratingsUdaintha Nilakkal - Part 1 Rating: 4 out of 5 stars4/5Nandhavana Poo Rating: 0 out of 5 stars0 ratingsUnnidam Oru Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsOru Kavirajanin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsNenjin Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsKolaikku Oru Passport Rating: 0 out of 5 stars0 ratingsSherlock Homes Jamesbondagirar Rating: 0 out of 5 stars0 ratingsPanakkaranai Kaadhalikathea Rating: 0 out of 5 stars0 ratingsVaakkumoolam Rating: 0 out of 5 stars0 ratingsTheekkul Viralai Vaithal Rating: 0 out of 5 stars0 ratingsSundarakaandam Rating: 0 out of 5 stars0 ratingsMuganool Kavithaigal Rating: 5 out of 5 stars5/5Kaadhalum Veeramum Rating: 0 out of 5 stars0 ratingsAlaigal Rating: 0 out of 5 stars0 ratingsKadhamba Vanam Rating: 0 out of 5 stars0 ratingsInaiyumo Iruthayam? Rating: 0 out of 5 stars0 ratingsAmmavukku Piditha Paadal Rating: 0 out of 5 stars0 ratingsNeengalum Ambani Thaan Rating: 0 out of 5 stars0 ratingsVirpanai Pookal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsNizhalgalai Thedi Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Varum Neram Rating: 5 out of 5 stars5/5Anjali Rating: 0 out of 5 stars0 ratingsInnum Konjam Manithargal... Rating: 0 out of 5 stars0 ratingsOorpidaari Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Mannum Mangaiyum
0 ratings0 reviews
Book preview
Mannum Mangaiyum - P.M. Kannan
http://www.pustaka.co.in
மண்ணும் மங்கையும்
Mannum Mangaiyum
Author:
பி.எம். கண்ணன்
P.M. Kannan
For more books
http://www.pustaka.co.in/home/author/pm-kannan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
இந்த நாவல்
மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை பொல்லாது...?
ஒரு கவளம் சோற்றுக்கோ, ஒரு பிடி அரிசிக்கோ பாடி விட்டுப் போய்விட்டான் தெருப்பிச்சைக்காரன்.
தெரிந்த பாட்டுத்தான். எத்தனையோ முறை கேட்டும் இருக்கிறேன்; ஆனால் அன்று அந்த ஒரு அடி ஏனோ என் சிந்தனையைக் கிளறிவிட்டது. காரணம் எனக்கே தெரியாது. ஒருகால் இந்த நாவலின் கரு என் உள்ளத்தில் உதிக்கத்தானோ?
மண், பெண், பொன் இம்மூன்றின் ஆசையும் பொல்லாதவைதான். ஆனால் இவற்றைத் துறந்தவர் யார்? இந்த உலகவாழ்க்கையில் ஒட்டுதல் இல்லாத துறவியாக இருக்கலாம். ஆனால் அவரைப்பற்றி நான் சிந்திக்கவில்லை. மண், பெண், பொன் இவற்றின் ஆசையிலே திளைத்துத் திண்டாடும் கோடானு கோடி பேர்களைப் பற்றியே என் சிந்தனை சுழன்றது. அதனுடன் இந்த மூன்றிலே மண்ணை முதலில் வைத்து, பெண்ணைப் பிறகு வைத்து, இறுதியாகப் பொன்னை வைத்தது தான் எத்தனை கருத்து நிரம்பியதாக இருக்கிறது! மண்ணுக்கும் பெண்ணுக்கும் பின்னர்தான் பொன்.
மண்ணில் பிறக்கும்போதே மண்ணாசை ஏற்பட்டு விடுகிறது. மண்ணைத் தின்னும் குழந்தையைப் பாருங்கள்! மண்ணில் பிறந்தவுடன் குவா குவா
என்று முதல் குரல் எழுப்பும் பச்சைக் குழந்தையின் குரலைக் கேளுங்கள்! தாயின் வயிற்றிலே கப் சிப்
என்று கிடந்த குழந்தை, மண்ணிலே தன் சின்ன உடல் தீண்டியதுமே மகிழ்ச்சிக் குரல் எழுப்புகிறது, மண்ணாளப் பிறந்துவிட்டோமே என்று. ஆம், அப்படித்தான் நினைக்கிறேன் நான்.
மண்ணிலே பிறந்து வளர்ந்து மனிதனாகும்போது பெண்ணாசை ஏற்படுவது இயல்பு. பெண்ணுக்குப் பிறகு பொன். ஆனால் இந்தப் பெண்ணாசை, மண்ணாசையையும் பொன்னாசையையும் கூட மறக்கச் செய்து விடுகிறது மனிதனை. பெண்ணுக்காக மண்ணையும் பொன்னையும், ஏன் இம்மாநிலம் முழுவதையுமே துறந்தவர்கள் தான் எத்தனை பேர்! அவர்கள் வரலாறுகள் நமக்குப் புராணங்களையும் இதிகாசங்களையும் அளித்திருக்கின்றன. அழகழகான காதல் காவியங்களை மலரச் செய்திருக்கின்றன.
மங்கையின் காதல் மணிமுடியைத் துறக்கச் செய்திருக்கிறது. மாநிலத்தையே போர்க்களத்தில் துடிக்கச் செய்திருக்கிறது. ஏன்? உயிரையே கூட உறிஞ்சிக் குடித்திருக்கிறதே! வரலாறுகள் சான்று.
சிந்தனைத் தேன் இனிக்கத்தான் செய்கிறது. இல்லாவிடில் அருமையான காதல் காவியங்கள், காதலின் சோக கீதங்கள் நம் புலன்களின் அனுபவத்திற்குக் கிடைக்காமற் போயிருக்கும்.
ஆனால்...
இங்கே தான் நெஞ்சிலே முள்போல ஏதோ ஒன்று நெருடுகிறது. காதலுக்காக மனிதன் மற்ற உலக இன்பங்கள் அனைத்தையும் துறப்பது என்றால், வாழ்க்கை என்ன ஆகும்? நம் கண்ணெதிரே கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றனரே; அந்த வாழ்க்கை பொய்யா? வெறும் கனவா? அல்லது உப்புச் சப்பற்ற வெறும் உலக இயக்கம் தானா?
இந்த மூளைக்குச் சில சமயம் இப்படிக் குயுக்தியாகச் சிந்திப்பதில் தான் என்ன ஆசையோ?
பெண்ணுக்காக மண்ணைத் துறப்பது என்பது காவியக் கதையாகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தக் கதையின் நாயகன் காவிய நாயகனாகி விடுகிறான். ஏன்! நம் கண்ணெதிரே ஒருவன் அப்படி நடந்தாலும் அவனைச் சுற்றி ஒரு காவியத்தைப் புனைந்து விடுகிறான் கவி. அவன் கதை நமக்கு வேண்டாம். கவியோடு உறவாடட்டும் அவன்.
மண்ணுக்காகப் பெண்ணைத் துறக்கிறான் ஒருவன் என்று வைத்துக்கொள்வோம். ஏன்? இந்த இனத்தில் ஒருவன் என்ன? ஆயிரமாயிரம் பேரை நாம் வாழ்க்கையில் காணமுடியும். மண்ணோ, பொன்னோ நிறையக் கிடைக்கிறது என்றால், எந்த மாப்பிள்ளை தான் பெண்ணைப் பற்றிப் பிரமாதமாகக் கவலைப்படுகிறான்?
இந்த ஆயிரமாயிரம் பேர்களில் ஒருவனைக் கதாநாயகனாக வைத்துக்கொண்டு அவன் காதலையும், வாழ்க்கையையும் கதையாக எழுதவேண்டும் என்கிற முடிவுக்கு வரச்செய்தது அந்தத் தெருப்பிச்சைக்காரனின் பாட்டு. அந்தப் பாட்டில் மண்ணும், பெண்ணும், பொன்னும் வரிசையாக அமைந்திருந்தன. மண் என்பது தனி; பெண் என்பது தனி. ஆனால் பொன் மண்ணில் கிடைப்பது. எனவே அதை மண்ணுக்குள் அடக்கமாக்கி, 'மண்ணும் மங்கையும்' என்று பெயரிட்டுத் தொடங்கினேன்.
மங்கை மோகத்தினால் மண்ணை இழக்கும் காவியக் கதையை விட்டு, மண் மோகத்தினால், காதலித்த மங்கையைத் துறக்கும் வாழ்க்கைக் கதையை எழுதவே சிந்தனை கிளர்ந்தெழுந்தது.
எனக்கு எப்போதுமே என் பாத்திரப் படைப்புக்களின் வாழ்க்கையில், அவர்களது ஆசைகளில், கனவுகளில், நம்பிக்கைகளில், சாதனைகளில், தவறுகளில், எல்லாவற்றிலுமே அநுதாபமும் அக்கறையும் உண்டு. அதனால் தான் என் நளினி, சுசீலா இருவருமே அநுதாபத்திற்குரிய பாத்திரங்களாக அமைந்து விட்டனர். என் கதாநாயகன் ரவிசந்திரனைப் பற்றியும் நீங்கள் குற்றம் காண மாட்டீர்கள். அவனிடம் எனக்கு உள்ள அநுதாபம் உங்களுக்கும் உண்டாகும்.
கோபாலபுரம் பண்ணை முதலாளி கோபாலரத்னம் சாமர்த்தியமாகத் தம் காரியத்தைச் சாதித்துக்கொள்கிறார். அவரது பண்ணை மானேஜர் குமாரசாமி, எசமானர் சாதனைக்கு எதிராகத் தமது தோல்வியை மௌனமாகவே ஏற்றுக் கொண்டு விலகித் துன்புறுகிறார். ஆனால் கோபாலரத்னத்தின் மீது ஆத்திரம்கொள்ளத் தோன்றாது. குமாரசாமியிடம் ஒரு விதமாக இரக்கம் கொள்ளும் உள்ளம் கோபாலரத்னத்தின் மீதும் வேறுவிதமாக அநுதாபமே அடையும்.
மற்றும் இந்த நாவலில் வரும் மங்களம், பலராம், புவனேசுவரி, தண்டபாணி போன்றவர்கள் தனித்தனி இயல்பு உடையவர்கள். ஒவ்வொருவரிடமும் ஒரு குணம் காண்கிறோம் என்றால் உடனடியாகவே ஒரு குறையும் காண்கிறோம். குணத்தைக் கண்டு புகழவோ, குறையைக் கண்டு இகழவோ தோன்றாது. இரண்டையும் சீர் தூக்கி ஆராயும்போது அவர்களிடம் நமக்கு இரக்கமே ஏற்படும். அதில் தான் நமது மனித உள்ளத்தை நாம் உணரமுடிகிறது.
எல்லோருமே ஏதாவது தவறு செய்து விட்டுத் திண்டாடுகிறார்கள். அவர்களது தவறுகளை நாம் உணருகிறோம். நாம் கூட அந்த நிலையில் அப்படித்தானே தவறு செய்வோம் என்று நமக்குத் தோன்றுகிறது. இந்த எண்ணம் நமக்கு அவர்களிடம் இரக்கத்தை அளிக்கிறது.
முழுக்க முழுக்க மனித இயல்பை ஒட்டிய பாத்திரங்களுக்கு இடையே இரண்டு பேர் தமக்கென்று தனிப்பாதை வகுத்துக் கொண்டு வாழ்கின்றனர் இந்த நாவலில். தருமலக்ஷ்மியம்மாள் மக்கள் பணியே குறிக்கோளாகக் கொண்டவள். நாகராஜன் தியாகத்தின் சிகரத்தில் நிற்பவன். இவர்கள் இருவரும் இந்த நாவலில் இரண்டு இலட்சியங்களாக விளங்குகின்றனர்.
தவறு செய்வது மனித இயல்பு; அந்தத் தவறைத் தெரிந்து கொண்டு திருத்திக் கொள்வது மனிதத் தன்மை. காதல் ஒன்று; குறிக்கோள் மற்றொன்று. குறிக்கோளை நோக்கிச் சென்று வெற்றி பெறுவதற்குக் காதலைப் பலியிட வேண்டி வந்தால் - தவறுகள்...! தவறுகள்...!! தவறுகள்...!!! போராட்டம்...! போராட்டம்...!! போராட்டம்!!!
எல்லையற்ற போராட்டம். அந்தப் போராட்டத்தின் முடிவு தான் என்ன? இடையே கடமை உணர்ச்சி கூட மறந்து போகிறது. காதல் எப்படிப் போராடுகிறதோ, அப்படியேதான் வாழ்க்கையும் போராடுகிறது!
போதுமே! இதோ நாவல் பிறந்து விட்டது.
பி. எம். கண்ணன்
தாம்பரம்,
28-1-59.
*****
1
இமயத்தின் உச்சியில் ஏறி நிற்கும் மணிக்கொடிக்குக் குமரிமுனையில் குனிந்து நின்று கும்பிடு செலுத்துகிறாள் ஒரு பெண். இமை கொட்டும் நேரத்தில் எங்குப் பார்த்தாலும் சர விளக்குகள் ஒளிவிடுகின்றன. கணகணவென்று மணியோசை கேட்கிறது. மேளமும் வாத்தியமும் முழங்குகின்றன. மங்கள ஆரத்திகள் சுழலுகின்றன. 'தாயே! வணங்குகின்றோம். எங்கள் மாநிலத்தாயே! நின் திருவடி பணிகின்றோம்!' என்னும் குரல்கள் ஒரே கோஷமாக வானை நோக்கிச் செல்லுகின்றன.
அன்னை பாரதி கம்பீரமாகக் காட்சி தருகிறாள். அவள் கரத்திலே பிடித்துள்ள வண்ணக் கொடி உயரப் பறந்து பட்டொளி வீசுகிறது. அவள் கழலிணைகளைப் பற்றியுள்ள கன்னித் தமிழ்க் குமரி தாவி எழும்பித் தாயின் மடிக்கு ஏறி அவள் கையில் பிடித்துள்ள மணிக்கொடியோடு விளையாடத் துடிக்கிறாள். அந்தத் துடிப்பு அவள் கண்களிலே ஒளிச் சுடர்களாகத் துள்ளுகிறது. அந்த ஒளிச் சுடர்கள் சம தொலைவிலே மேல் நோக்கி விரைகின்றன. அவை இருப்புப் பாதைகளாக அமைகின்றன! நீண்ட சாலைகளாக உருப்பெருகின்றன! ஆழமும் அகலமும் கொண்ட வாய்க்கால்களாக வடிவெடுக்கின்றன! விமானங்களாக உயர்ந்து விண்ணிலே பறக்கின்றன இப்படி இன்னும் எத்தனையோ பல புதுமைகள்.
இதெல்லாம் என்ன அதிசயம்? ஏதோ கோவில் மாதிரி இருந்தது. கோபுரம் தெரிந்தது என்று பார்த்தால் ரயில் வண்டியும் மோட்டாரும் கப்பலும் விமானமுமாக மாறிவிட்டதே!
என்று ஆச்சரியத்தால் அகல விரித்த கண்களுடன் பக்கத்தில் நின்ற தன் கணவனைப் பார்த்துக் கேட்டாள் ஒரு பெண்மணி!
ஓகோகோ! புவனம்! நீ இங்கே ஏதோ திருவிழாவுக்கு வந்திருப்பதாக எண்ணியிருக்கிறாய் போலிருக்கிறது. இது கோவில் திருவிழா இல்லை; கண் காட்சித் திருவிழா,
என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னார் அவள் கணவன்.
பரந்த கண்காட்சி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கடை வரிசையைப் பார்த்தபடியே கோபாலரத்னம் தம் மனைவியோடும், அருமை மகளோடும் நடந்துகொண்டிருந்தார். குழல் விளக்குகளும், வர்ணத் தோரணங்களும், மின் ஒளி பொறித்த எழுத்துப் பலகைகள் தாங்கிய கடைகளும், காட்சிச் சாலைகளும் அந்தி மயக்கத்தில் தேசோமயமாய்த் திகழ, கண்காட்சி மைதானம் முழுவதும் திருவிழாவாகவே தென்பட்டது. மக்கள் திரண்டு பார்ப்பதும், பல பொருள்களை வாங்குவதுமாக இருந்தனர். பற்பொடி பொட்டலமானாலும் சரி, பவுடர் டப்பாவானாலும் சரி, கண் காட்சியிலே வாங்குவதென்றால் அதன் பெருமையே தனியல்லவா?
புவனேசுவரிகூட ஒரு எவர்ஸில்வர் டிபன் செட் வாங்கிக் கொண்டாள். படம் போட்ட பெரிய காலண்டர் ஒன்று இனாமாகக் கிடைக்கிறதே என்று.
கோபாலரத்னம் கடை கடையாக, காட்சி காட்சியாகப் பார்த்துக்கொண்டே நடந்தார்.
அப்பா! இதோ எதிரிலே மின்சார இலாகா இருக்கிறதே, போய்ப் பார்க்கலாமா!
என்றாள் சுசீலா, தந்தையைப் பார்த்து.
அங்கே நிற்கும் க்யூ வரிசையைப் பார் சுசி! என்னால் நிற்க முடியாது அம்மா!
என்று பதில் சொன்னார் கோபாலரத்னம்.
அப்பாவுக்கு உடம்புக்கு ஆகாது சுசி! அன்றியும் இன்னும் நன்றாய் இருட்டவில்லை. கண்ணுக்கு இருட்டின பிறகு பார்த்தால்தான் மின்சார இலாகாக் காட்சிகள் நன்றாயிருக்கும். நாம் இந்தப் பக்கமாகப் போய்த் திரும்புவோம். அப்புறம் அங்கே போகலாம். உன் அப்பா வேண்டுமானால் கொஞ்ச நேரம் மணலில் உட்கார்ந்து களைப்பாற்றிக் கொள்ளட்டும்.
என்றாள் புவனேசுவரி தன் கணவனை ஆதரிக்கும் குரலில்.
அப்படியானால் அதோ விவசாய இலாகா தெரிகிறது பார் அம்மா! அங்கே போய்ப் பார்க்கலாமா?
போகலாம் வா!
விவசாய இலாகாவா? நானும் வருகிறேன் சுசி!
என்று கிளம்பினார் கோபாலரத்னம்.
வேண்டாம் அப்பா, உங்களுக்கு ரத்த அழுத்தம் ஏறிப் போகும். நீங்கள் இங்கேயே இருங்கள், நாங்கள் போய் வருகிறோம்.
இல்லை அம்மா! விவசாய இலாகாவில் இந்த ஆண்டு பல புதிய அம்சங்கள் இருப்பதாக மானேஜர் சொன்னார். நானும் வருகிறேன். இப்போது அப்படி உடம்புக்கு ஒன்றும் இல்லை,
என்று சொல்லியபடியே அவர்களுடன் நடந்தார் கோபாலரத்னம்.
விவசாய இலாகாப் பகுதியில் அப்படியொன்றும் கூட்டம் நெருக்கித் தள்ளவில்லை. பல்கலைக் கழகத்தில் பயிற்சி பெறும் ஆராய்ச்சி மாணவிகளும், கோவை விவசாயக் கல்லூரி மாணவர்களும், அரசாங்க விவசாய இலாகா ஆராய்ச்சியாளர்களும் அந்த இலாகாவைக் கவனித்து வந்தனர். கூட்டம் அதிகமில்லாதபடியால் அவர்கள் தங்களது காட்சிப் பொருள்களைப் பற்றி மக்களுக்கு நிதானமாக எடுத்துக் கூறிவந்தனர்.
கோபாலரத்னமும் புவனேசுவரியும் மெல்ல நடந்து சென்றனர். கோபாலரத்னம் ஆங்காங்கு நின்று புதுமாதிரியான கலப்பைகளைப் பார்வையிட்டார்; டிராக்டர்களைக் கண்ணுற்றார்; நெல் விதைகளை ஆராய்ந்தார்; ரசாயன உரங்களைப் பற்றிக் கேட்டார், புவனேசுவரி ஒரு கடோற்கஜ கத்தரிக்காயைப் பார்த்துப் பிரமித்துவிட்டு, அந்த இனத்தில் கத்தரி விதையோ, நாற்றோ இருக்கிறதா என்று கேட்கலானாள். சுசீலா அதையெல்லாம் கவனியாமல் அண்மையிலிருந்த மண் ஆராய்ச்சிப் பகுதியிலே ஒரு மாணவன் யாரோ ஒரு கிராமத்தாரிடம் மண் வளத்தைப் பற்றிச் செய்யும் ஒரு குட்டிப் பிரசங்கத்தின்மீது கருத்துச் செலுத்துவது போன்ற பாவனையுடன் அந்த மாணவனின் தோற்றத்திலும் பேச்சிலும் உள்ளத்தைப் பறிகொடுத்தவளாக நின்றுவிட்டாள்.
அவனும் அவ்வப்போது அவள் பக்கம் பார்வையைச் செலுத்தியபடியே பேசிக்கொண்டு போனான்.
புவனேசுவரியும் கத்தரி விதைப்பொட்டலம் ஒன்று வாங்கிக் கொண்டு அந்தப் பகுதிக்கு வந்தாள்; கோபாலரத்னமும் வந்து சேர்ந்தார்.
அந்த மாணவன் தன் எதிரில் இருந்த கிராமவாசிக்கு இன்னமும் சொல்லிக்கொண்டிருக்கிறான், இந்த மண்ணிலே களிப்பு காண்கிறது, செம்மை செழித்திருக்கிறது, மணல் பளபளக்கிறது, நான் சொல்லுகிறபடி உரம் இட்டுப் பதமாக்கிச் சாகுபடி செய்தால் இந்த மண்ணிலிருந்து பெண்ணை எடுக்கலாம்!
என்ன? என்ன சொன்னீர்கள்? மண்ணிலிருந்து பெண்ணை எடுக்கலாமா?
- திடுக்கிட்டுக் கேட்டார் அந்தக் கிராமவாசி.
அதற்குள் 'களுக்' என்று ஒரு சிரிப்பொலி கேட்டது. திரும்பிப் பார்த்தான் அந்த மாணவன். சுசீலா தன் கையிலிருந்த கைக்குட்டையை வாயில் அடைத்துக்கொண்டிருந்தாள்.
மாணவனுக்குக் கூச்சமாயிருந்தது. எனினும் சட்டென்று சமாளித்துக்கொண்டு, இல்லை, இல்லை, மன்னிக்க வேண்டும், வாய் தவறிவிட்டது, மண்ணிலிருந்து பொன்னை எடுக்கலாம் என்று சொல்ல வந்தேன்
என்று திக்கித் திணறிக் கொண்டே பேசி முடித்தான்.
பிள்ளையாண்டான் அழகாகப் பேசுகிறான்!
என்று தன் கணவனிடம் விமரிசனம் செய்துவிட்டு, அந்தக் கிராமவாசியின் மனைவி, என்ன அப்பா! உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?
என்று விசாரிக்கத் தொடங்கினாள் அந்த மாணவனைப் பார்த்து.
என்ன அம்புஜம்? வந்த இடத்திலே...
என்று கிராமவாசி பதில் வெட்டியதைத் தடுத்து நிறுத்தி, அதனால் என்ன? அம்மாள் என் தாய்க்குச் சமானம், கேட்டுவிட்டுப் போகிறார்கள்!
என்று சொல்லிக்கொண்டே சற்றே தள்ளி நிற்கும் சுசீலாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, இள நகையைச் சிதறவிட்டபடி, இன்னும் இல்லை அம்மா
, என்று அந்தக் கிராமப் பெண்மணிக்குப் பதில் சொன்னான் மாணவன்.
சுசீலாவின் கண்களில் ஒரு புதிய ஒளி படர்ந்தது. அவள் செவ்விதழகளில் புன்முறுவல் பூத்தது. அவள் கன்னங்களில், குப்பென்று செம்மை முலாம் பூசியது. அவள் நெற்றியில் பள பளவென்று வைரத்துளிகள் மின்னின.
சுசீலா தலை குனிந்தாள். அவள் கையிலிருந்த கைக்குட்டை அவளையறியாமல் அவள் நெற்றியிலும் கன்னங்களிலும் ஒத்தடம் கொடுக்கலாயிற்று.
கோபாலரத்னம் அந்த மாணவனை ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு அங்கிருந்து மெல்ல நகர்ந்தார்.
பையன் நல்ல குணசாலி போலிருக்கிறது. அந்த அம்மாள் அப்படி வெடுக்கென்று கேட்டதற்கு வேறொருவனாயிருந்தால் கோபித்துக்கொண்டிருப்பான்,
என்று தன் கருத்தைத் தெரிவித்தபடி பின்னால் நடந்தாள் புவனேசுவரி.
அவர்களுக்கு எத்தனை பெண்களோ? அதனால் தான் அப்படி விசாரித்தாள் அந்த அம்மாள்!
என்று விளக்கம் கூறினாள் சுசீலா தன் பெற்றோர்களைத் தொடர்ந்தவண்ணம்.
ஒரே பெண்ணாய்த்தான் இருக்கட்டுமே நம்மைப்போல. கண்ட இடத்திலும், வேளை சமயம் தெரியாது இப்படித்தான் கேட்பார்களா...? ம்... சில பேர் இப்படித்தான்,
என்றார் கோபாலரத்னம்.
ஒரு பெண்ணில்லை; நாலு பெண்ணாய்த்தான் இருக்கட்டுமே, கண்ட இடத்திலும் கண்ட வேளையிலும் இப்படியெல்லோரும் கேட்கமாட்டார்கள், வேண்டுமானால் இது ஒரு சுபாவம் என்னலாம்,
என்று பேசினாள் புவனேசுவரி.
அது சரி, நாம் ஏன் இதற்காக இத்தனை தர்க்கம் பண்ண வேண்டும்?
என்று சிரித்துக்கொண்டே கேட்டார் கோபால ரத்னம்.
நமக்கு ஒரு பெண் இருக்கிறாளே; அதனால் தானோ என்னவோ!
என்று பதில் சொன்னாள் புவனேசுவரி.
போ அம்மா! உங்களுக்கு எப்போதும் இந்தப் பேச்சுத் தான். எனக்குக் கல்யாணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம், நான் கல்லூரியில் சேரப் போகிறேன்.
ஆமாம், உன் அப்பா உடம்பு இருக்கிற நிலையிலே நீ நாலு ஆண்டு, ஐந்து ஆண்டு என்று கல்லூரியிலே சேர்ந்து படி, நான் மடியிலே நெருப்பைக் கட்டிக்கொண்டு நிம்மதியாக இருக்கிறேன்...!
அவர்கள் இப்போது விவசாய இலாகாவைவிட்டு வெளியேறிப் பல இடங்களைப் பார்த்துவிட்டு, மின்சார இலாகாப் பக்கம் வந்துவிட்டனர்.
கண்ணுக்கு இருட்டி வெகு நேரம் ஆகிவிட்டது. மாலை நாலு மணி முதல் சுற்றிச் சுற்றி எல்லோருக்கும் கால்கள் தள்ளாடின. கோபாலரத்னத்திற்கு எங்காவது ஓரிடத்தில் உட்கார்ந்தால் போதும் என்று இருந்தது.
சுசி, நான் இப்படி மணலில் உட்கார்ந்துகொண்டிருக்கிறேன், நீயும் அம்மாவும் மட்டும் போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்,
என்று சொல்லி எதிரேயிருந்த ஒரு தூங்குமூஞ்சி மரத்தடியில் துண்டை விரித்துப் படுத்தார் அவர்.
புவனேசுவரியும் சுசீலாவும் போய்க் 'க்யூ' வரிசையில் நின்றுகொண்டனர்.
இந்த ஆண்டு கண்காட்சி பிரமாதம்! எல்லாமே நன்றாயிருக்கின்றன. பார்க்கவேண்டியவை நிறைய இருக்கின்றன!
என்று யாரோ ஒருவர் தம் நண்பருடன் சொல்லிக்கொண்டே கோபாலரத்னம் படுத்திருந்த மரத்தடி மணலுக்கு வந்து உட்கார்ந்துகொண்டார்.
அவர்கள் பேச்சைப் படுத்தபடியே கேட்டார் கோபாலரத்னம். இருவரும் மின்சார இலாகாவைப்பற்றி வெகுவாகப் புகழ்ந்து பேசலாயினர். கோபாலரத்னத்திற்குப் படுக்கப் பிடிக்கவில்லை; எழுந்து உட்கார்ந்தார்.
எல்லாவற்றையும் பார்த்தாயிற்று, மின் இலாகாவையும் தான் பார்த்துவிடுவோமே,
என்று எழுந்தார்.
அவர் கால்கள் கெஞ்சின. இதயம் இரும்பாய்க் கனத்தது. இரத்த அமுக்கம் ஏறிக் கண்களில் தெறித்தது. க்யூ வரிசையில் நிற்க உடல் நிலை ஒத்துக்கொள்ளாது என்று உணர்ந்தார் அவர். இருப்பினும் மெல்லப் பெருமூச்சு விட்டுக்கொண்டே க்யூ வரிசையில் போய் நின்றுகொண்டார்.
அவர் க்யூவில் வந்து நின்றபோது புவனேசுவரியும் சுசீலாவும் க்யூவின் முன்னணியில் இருந்தனர். நாகப்பாம்பு வளைந்து வளைந்து ஊர்ந்து செல்வதுபோல, அந்தக் க்யூ வரிசையும் நாலைந்து வளைவுகளாக வளைந்து ஊர்ந்து நகர்ந்துகொண்டிருந்தது. க்யூ நாகத்தின் கழுத்தில் இருந்தார்கள் புவனேசுவரியும் சுசீலாவும்; வாலில் இருந்தார் கோபாலரத்னம்.
ஐந்து நிமிஷம் கழிந்தது; பத்து நிமிஷம் கழிந்தது; பதினைந்து நிமிஷமும் கழிந்தது. புவனேசுவரியும் சுசீலாவும் க்யூவின் தலைப்பிலிருந்து பிரிந்து மின் இலாகாவுக்குள் நுழையும் தருணம் - பின்புறமிருந்து கூக்குரல் கேட்டது.
ஐயோ! யாரோ விழுந்துவிட்டாரே... யாரோ தெரியவில்லையே... விழுந்துவிட்டாரே பாவம்!
அடுத்த விநாடியே க்யூ கலைந்தது. விழுந்த மனிதரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டனர் மக்கள். புவனேசுவரியும் சுசீலாவும் அப்போதுதான் மின் இலாகாவுக்குள் நுழைந்தனர். அவர்களுக்கும் கூக்குரல் காதில் விழுந்தது; ஆனால், யாரோ என்னவோ என்று அவர்கள் தங்கள் கருமமே கண்ணாயினர்.
அவர்கள் இருவரும் மின் இலாகாவைச் சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பி மரத்தடி மணலுக்கு வந்தபோது அங்கே கோபாலரத்னத்தைக் காணவில்லை.
எங்கே போயிருப்பார் அப்பா? காணோமே!
என்றாள் சுசி.
எங்கேயும் போகமாட்டாரே? ஒரு வேளை...
புவனேசுவரி பேச்சை முடிக்கவில்லை, வானொலி அறிவிப்பு கேட்டது. புவனேசுவரியம்மாள்! சுசீலா! இருவரும் கண்காட்சிக் காரியாலயத்துக்கு வாருங்கள். கோபாலரத்னம் உங்களுக்காக அங்கே காத்திருக்கிறார்.
அம்மா! அப்பா கண்காட்சி காரியாலயத்தில் இருக்கிறாராமே!
வா போகலாம் சுசி!
இருவரும் காரியாலயத்தை நோக்கி நடந்தனர்.
காரியாலயத்தில் இருந்த ஒரு சோபாவில் கோபாலரத்னம் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தார். அவருக்கு மூச்சு முட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தது.
எதிரே ஒரு நாற்காலியில் ஒரு டாக்டர் இஞ்செக்ஷன் ஊசியில் மருந்தை ஏற்றிக்கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் ஓர் இளைஞன் நின்றுகொண்டிருந்தான். காரியாலயச் சிப்பந்தி ஒருவர் வாசல் பக்கம் நின்றுகொண்டிருந்தார். புவனேசுவரியும் சுசீலாவும் வந்ததைப் பார்த்ததும், அம்மா! நீங்கள் தான் கோபாலரத்னத்தின் மனைவியும் மகளுமா?
என்று கேட்டார்.
ஆமாம், அவர் எங்கே இருக்கிறார்?
என்றனர் இருவரும் திகிலோடு. சிப்பந்தி கேட்ட கேள்விதான் அவர்களைத் திகிலடையச் செய்தது.
உள்ளே இருக்கிறார், வாருங்கள்,
என்று அழைத்துச் சென்றார் அவர்.
தந்தை படுத்திருந்த நிலையையும், பக்கத்தில் டாக்டர் ஒருவர் நின்ற நிலையையும் பார்த்த சுசீலா பதறிப்போனாள், அப்பா! என்ன அப்பா உங்களுக்கு?
என்று உணர்ச்சி மேலிட்டுக் கத்திவிட்டாள்.
பிரமை பிடித்தவள் போல நின்றுபோனாள் புவனேசுவரி.
ஒன்றுமில்லை அம்மா! உன் அப்பாவுக்குக் கால்மணி நேரத்தில் நினைவு திரும்பிவிடும். களைத்துப்போய் மூர்ச்சையாகியிருக்கிறார், கவலைப்பட ஒன்றும் இல்லை,
என்று தைரியம் கூறினார் டாக்டர். பிறகு ஊசியில் ஏற்றிய மருந்தை கோபாலரத்னத்தின் கையில் இஞ்செக்ஷன் பண்ணினார்.
இந்த மனிதர் சமயத்தில் பார்த்துத் தூக்கிக்கொண்டு வந்திராவிட்டால் நிலைமை ஆபத்தாய்ப் போயிருக்கும்
என்று டாக்டர் தம் பக்கத்தில் இருந்த இளைஞனைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.
சுசீலா உடனே அந்த இளைஞனைப் பார்த்தாள்; அவள் உடலில் மின்னல் பாய்ந்தது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. அவள் அவனை அடையாளம் தெரிந்துகொண்டாள். புவனேசுவரிக்கும் அவனை எங்கோ பார்த்திருப்பதுபோலத் தோன்றியது.
உங்களை எங்கே பார்த்திருக்கிறேன்?
என்று கேட்டாள் புவனேசுவரி.
விவசாய இலாகாவில்,
என்றான் இளைஞன்.
எங்கள் நன்றி,
என்றாள் சுசீலா.
எனக்கு 'ஷிப்ட் டியூடி' முடிந்து வந்துகொண்டிருந்தேன்; மின்சார இலாகா க்யூ வரிசையில் திடீரென்று கூக்குரல் கேட்டது. ஓடிப்போய்ப் பார்த்தபோது கூட்டம் சூழ்ந்துகொண்டது. இவர் பேச்சு மூச்சில்லாமல் விழுந்துகிடந்தார். நான் உடனே கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே போய்ப் பிரதம சிகிச்சை செய்து, களைப்புத் தெளியவைத்தேன். அப்போதுதான் இவர் உங்கள் பெயரைச் சொல்லித் தெரிவிக்கும்படி என்னிடம் சொன்னார். ஆனால் நான் இவரைத் தூக்கிக் கொண்டுவந்து இங்கே டாக்டரிடம் விடுவதற்குள் மறுபடியும் மூர்ச்சை போட்டுவிட்டது இவருக்கு. நான் உடனே காரியாலய அதிகாரியிடம் உங்கள் இருவர் பெயரையும் சொல்லி ஒலிபரப்பி மூலம் தெரிவிக்கச் சொன்னேன்...
சிறு பிள்ளையாயிருந்தாலும் சமயத்தில் உதவி செய்தீர்கள், உங்களுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்ய முடியும்?
என்று நன்றிக் குரலில் பேசினாள் புவனேசுவரி.
அம்மா! அவர் பெயரைக்கூடத் தெரிந்துகொள்ளவில்லையே?
என்று நாணம் கலந்த முறுவலுடன் சுசீலா சொன்னாள்.
என் பெயர் ரவிசந்திரன். அரசாங்கச் சலுகை பெற்று விவசாய ஆராய்ச்சி செய்து வருகிறேன். பல்கலைக் கழகத்தில் தான் பயிற்சி.
அம்மா! உங்கள் தந்தை கண் விழித்துவிட்டார்,
என்றார் டாக்டர்.
அப்பா!
என்று தந்தையை நோக்கிப் பாய்ந்து அவரை இறுகத் தழுவிக்கொண்டாள் சுசீலா.
உங்களுக்கு எப்படி இருக்கிறது அப்பா?
இப்போது ஒன்றும் இல்லை அம்மா!
என்று அடக்கமான குரலில் கூறிவிட்டுச் சுற்றி வளைத்துப் பார்த்தார் கோபாலரத்னம்.
அவர் கண்கள் யாரையோ தேடுவதுபோலத் தோன்றின. ஆம்! தேடிப் பிடித்துவிட்டன அவர் கண்கள்! அவர் முகத்தில் நன்றியின் நிறைவு ஒளி விடுகிறது. கண்களில் நீர் தளும்புகிறது. கைகள் இரண்டும் குவிகின்றன. உங்கள் உதவியை என்றும் மறக்கமாட்டேன்
என்ற சொற்கள் தழுதழுக்கும் நாவினின்றும் குளறி வருகின்றன.
விவசாய இலாகாவில் பார்த்தோமே; அந்தப் பிள்ளையாண்டான் தான் இவர்,
என்று தெரிவித்தாள் புவனேசுவரி.
கோபாலரத்னத்தின் கையைப் பிடித்துப் பார்த்தார் டாக்டர். இதயத்தில் குழல் வைத்துப் பார்த்தார். இனி ஒன்றும் கவலையில்லை. நீங்கள் நிம்மதியாக வீட்டுக்குப் போகலாம்,
என்றார்.
வீடா? இருபது மைலுக்குமேல் போகவேண்டுமே! அப்பாவுக்குத் தாளுமா?
எப்படிப் போகப்போகிறீர்கள்? சென்னையை விட்டுப் போகவேண்டுமா?
ஆமாம், காரில் வந்தோம், காரிலேயே தான் திரும்பிப் போகவேண்டும்.
சரி, போகலாம், இனி அவருக்குப் பயமில்லை. ஆனால் நீங்கள் இருவரும் பெண் பிள்ளைகள். இருபது மைல் போக வேண்டும் என்கிறீர்கள்; இரவு ஒன்பது மணியாகிவிட்டது. யாராவது ஆண்பிள்ளை ஒத்தாசைக்கு இருந்தால் நல்லது. நான் ஒரு மருந்து கையோடு கொடுத்தனுப்புகிறேன்,
என்றார் டாக்டர்.
டிரைவர் இருக்கிறான்,
என்றாள் புவனேசுவரி.
போதாது அம்மா; இந்த ரவிசந்திரனைப்போல் பிரதம சிகிச்சை தெரிந்தவராக இருப்பது நல்லது...
ஏன் டாக்டர்! நானே கொண்டுபோய் விட்டுவருகிறேன்!
என்று முன்வந்தான் ரவிசந்திரன்.
உங்களுக்கு வீண் சிரமம்!
என்றார் கோபாலரத்னம்.
போய் இரவோடு இரவாகத் திரும்ப முடியாதே உங்களுக்கு
என்றார் டாக்டர்.
ஏன் டாக்டர்? ராத்திரி எங்கள் வீட்டில் இருக்கட்டுமே, காலையில் எழுந்து வருகிறார்,
என்று புவனேசுவரி கூறினாள்.
எனக்கு நாளைய மாலையில்தான் மறுபடியும் டியூடி, நான் அதற்குள் எட்டுத் தடவை திரும்பிவிடலாம். நான் துணையாகப் போகிறேன் டாக்டர், எனக்கு எவ்வித சிரமமும் இல்லை
என்று முகமலர்ச்சியுடன் சொல்லிக் கொண்டே புறப்பட்டான் ரவி.
கோபாலரத்னத்தின் மோட்டாரைத் தருவிக்கத் தகவல் விடுக்கப்பட்டது. சில நிமிஷங்களில் மோட்டார் வந்து கண் காட்சிச்சாலையின் தலை வாயிலில் நிற்பதாகச் செய்தி கிடைத்தது.
கோபாலரத்னம் மனைவியோடும் மகளோடும் புறப்பட்டார். ரவிசந்திரன் அவர்களுக்குத் துணையாகப் புறப்பட்டான்.
அவர்கள் எல்லோரும் இரண்டடி எடுத்து வைத்திருக்க நேரமில்லை; காரியாலய வாசலில் கூச்சல் கேட்டது.
அட வா அப்பா சும்மா! இங்கே வரமறுத்தால் நேரே போலீஸ் லாக்கப்புக்குத்தான் போகவேண்டும்!
என்று ஒரு குரல்.
விடுடா கையை!
திமிராதே சும்மா!
ஓர் இளைஞன் மற்றோர் இளைஞனைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான்.
இவனை முதலில் போலீஸில் ஒப்படைக்க வேண்டும். பெரிய 'பிக்பாக்கெட்' இந்தப் பேர்வழி!
அடடே! நாகராஜனா? நீ எப்படி இங்கே வந்தாய்? கட்சி, சேவை இதையெல்லாம் விட்டுவிட்டு, ஸி. ஐ. டி. இலாகாவில் எப்போது சேர்ந்தாய் நீ?
என்று 'பிக்பாக்கெட்' பேர்வழியைத் தள்ளிக்கொண்டு வந்த இளைஞனைப் பார்த்துக் கேள்வி எழுப்பினார் கோபாலரத்னம்.
எங்கள் சமூக நலக் கழகத்தின் ஸ்டால் இங்கே இருக்கிறது. நான் அங்கே இருந்தேன், எதிரே இருந்த தூங்குமூஞ்சி மரத்தடியிலிருந்து இந்த அழகுப் பையைத் தூக்கிக்கொண்டு கம்பி நீட்டப் பார்த்தான் இந்தப் பேர்வழி. நான் தற்செயலாகக் கவனித்தேன். தப்பி ஓடுமுன் கையும் களவுமாகப் பிடித்து வந்தேன். ஆமாம், நீங்கள் எல்லோரும் இங்கே எப்போது வந்தீர்கள்? நமது ஸ்டால் பக்கம் வரவே இல்லையே?
என்று பதில் கேள்வி போட்டான் நாகராஜன் என்ற அந்த இளைஞன்.
அதற்குள் சுசீலா அவன் கையிலிருந்த அழகுப் பையைப் பார்த்துவிட்டாள், இது என் அழகுப்பை அல்லவா? அப்பா காணவில்லையே என்ற அலைச்சலில் அழகுப் பையை மரத்தடியில் விட்டுவிட்டேன் போலிருக்கிறது
என்றாள் அவள்.
அழகுப் பை உன்னுடையது என்பதற்கு அடையாளம் என்ன?
பிக் பாக்கெட் பேர்வழியின் திமிர் கலந்த வீறாப்புக் குரல்!
ரவிசந்திரன் அப்பொழுது தான் அந்தப் பேர்வழியை நன்றாகப் பார்த்தான்.
ஏ! பலராம்! நீயா பிக் பாக்கெட் அடித்தாய்?
என்று உரத்த குரலில் கூவிவிட்டான்.
*****
2
பலராம் என்று அழைக்கப்பட்ட இளைஞன் தன்னைப் பெயர் சொல்லி அழைத்தது யார் என்று தெரிந்துகொள்ள ரவிசந்திரனை ஒருமுறை தன் உருளும் விழிகளால் உற்று நோக்கினான். துளிர்விட்டிருந்த அவனது அரும்பு மீசைக்குக் கீழே ஒரு கேலிச் சிரிப்புத் தோன்றியது.
ஓ! தாங்கள் தானா? நான் பிக்பாக்கெட் அடித்தேன். தாங்கள் என்ன அடித்தீர்கள்? பெரிய கொள்ளையே நடத்தி வந்தீர்களோ?
என்று எகத்தாளமாகப் பேசிவிட்டுப் பக்கவாட்டில் திரும்பி, சுசீலாவை ஓரக் கண்களால் பார்த்தான்.
அவளுக்கு அவன் பார்வையும் பேச்சும் பிடிக்கவில்லை. ஆனால் அவள் கண்களில் ஒரு கேள்விக்குறி தோன்றியது. ரவிசந்திரனுக்கும் இந்தப் பலராம் என்னும் பேர்வழிக்கும் இப்படிப் பேசும்படியாக என்ன உறவுமுறை இருக்கக்கூடும்? எடுத்த எடுப்பிலே ரவிசந்திரன் பலராமைப் பார்த்து 'நீயா பிக்பாக்கெட் அடித்தாய்?' என்று கேட்கவும், அவன் இப்படிப் பதில் சொல்லவும் அப்பேர்ப்பட்ட நெருக்கம் என்ன இருக்கக்கூடும்? விடை தெரியாமல் தவித்தாள் அவள்.
பலராமின் பேச்சைக் கேட்டுச் சிறிது அயர்ந்து விட்டான் ரவிசந்திரன், அவன் சமாளித்துக் கொண்டு பேசச் சிறிது நேரம் பிடித்தது.
பலராம்! ஏளனம் இருக்கட்டும், கேட்டதற்குப் பதில் சொல்,
என்றான் சற்றே கண்டிப்பான குரலில்.
ரவி! நான் சொன்னதில் ஏளனம் என்ன இருக்கிறது? உண்மையைத் தானே சொன்னேன்? நான் பிக்பாக்கெட் அடிக்கிறேன், ம்... வெறும் சில்லறைத் திருட்டு, நீ பெரிய கொள்ளையே நடத்தத் திட்டம் போடுகிறாய். எனக்கு நாலு காசு கிடைத்தால் போதும், திருப்தி அடைந்து விடுகிறேன். நீ ஊரையே சுருட்டப் பார்க்கிறாய்! உன் அப்பன் இழந்த சொத்தை எப்படித் திரும்பப் பெறுவது என்று ஆகாசக் கோட்டை கட்டுகிறாய். நான் சின்னப் பாக்கெட்டில் கையை நுழைக்கிறேன்; காசு கிடைப்பதும் கசையடி கிடைப்பதும் வேளையைப் பொறுத்திருக்கிறது. நீ பெரிய தலையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறாய், கையை வைத்து ஒரே அமுக்காக அமுக்க...
போதும் நிறுத்து, யாரைப் பார்த்து உளறுகிறாய் இப்படி? பலராம்! சின்ன வயதில் ஏதோ விளையாட்டுத்தனமாய்த் திருடினாய் என்று பார்த்தேன், வயது வளர்ந்தும் நீ மனிதனாகாமல் இப்படி நடந்துகொள்வது நன்றாயில்லை.
எனக்குப் புத்திசொல்ல வந்த குருவே! நன்றி! முதலில் உன் ஜோலியைப் பார்த்துக்கொண்டு போகிறாயா இல்லையா? ஊரிலே தான் எனக்கு எதிராக இருந்தாய் என்றால் இங்கேயும் வந்து விட்டாயா?
பலராம்! உன் பேச்சு யாருக்கும் பிடிக்காது!
தேவையில்லை, ஒருவருக்குப் பிடிக்கவேண்டும் என்பதற்காக நான் பேசுவதில்லை.
உனக்கு நல்லதுதான் சொல்கிறேன்.
உன் உபதேசம் வேண்டாம்! முதலில் என் வழியை விட்டு விலகு!
திருட்டுப் பயலே! நானும் பார்க்கிறேன். அந்த மனிதர் பாவம், உனக்கென்று என்னென்னவோ புத்தி சொல்லுகிறார்; திமிர்ப்பேச்சுப் பேசுகிறாயா,
என்று உரத்த குரலில் சொல்லிப் பளீர் என்று ஓர் அறைவிட்டான் நாகராஜன் பலராமின் கன்னத்தில்.
அப்பா!
என்று கன்னத்தைக் கையால் தடவிக் கொண்டே நாகராஜனை முறைத்துப் பார்த்தான் பலராம்.
முறைக்கிறாயா? முழியைப் பெயர்த்துவிடுவேன்!
வேண்டாம் ஸார்! பாவம்! ஏழைப் பையன், எங்கள் ஊர்க்காரன். சின்ன வயது முதலே கொஞ்சம் கை நீளம் தான். ஆனாலும் நல்ல குடும்பத்தில் பிறந்தவன். அவன் மாமாவை எனக்குத் தெரியும். கண்ணியமான மனிதர். இந்தச் சங்கதி தெரிந்தால் ரொம்பவும் குன்றிப் போவார். விட்டுவிடுங்கள் பாவம்!
என்று இரக்கம் ததும்பும் குரலில் எடுத்துரைத்தான் ரவிசந்திரன்.
இந்தப் பயல்களிடத்தில் எல்லாம் பச்சாத்தாபம் காட்டக் கூடாது ஸார்! நேற்றைய தினமே இவன் கைக்குக் கொலுசு போட்டு உள்ளே தள்ள ஏற்பாடு செய்திருப்பேன். எங்கள் ஸ்டாலிலேயே இவன் கைவரிசையைக் காட்டிவிட்டான். ஒரு கனவான் பாக்கெட்டில் இருந்த பர்சைத் தட்டிவிட்டான். இவன் சகா ஒருவன் கைக்குப் பர்ஸ் மாறியபோது சட்டென்று பிடித்துக்கொண்டேன். அந்தப் பயல் எப்படியோ தப்பிவிட்டான் பர்ஸைப் போட்டுவிட்டு. இவன் வசமாகச் சிக்கிக்கொண்டான். ஆளுக்கு ஒரு போடாகப் போட்டு மொத்திவிட்டோம். நான் அப்போதே போலீஸில் விடவேண்டும் என்றேன். அந்தக் கனவான் தான் சொன்னார், 'போகட்டும், விட்டு விடுங்கள், பர்ஸ் என்னவோ போகவில்லை, சக்கையாக உதைத்தாயிற்று, அது போதும் இவனுக்கு' என்று. இன்று மரத்தடியில் கிடந்த அழகுப் பையைத் தூக்கிக்கொண்டு நழுவப் பார்த்து மாட்டிக்கொண்டான். போலீசில் ஒப்படைத்து விட்டால் இனி அவர்கள் பாடு அவன் பாடு, வெளியே விட்டிருந்தால் நாளைக்கும் தொல்லை கொடுப்பான்,
என்று நாகராஜன் சொன்னான்.
நாகராஜன்! போகட்டும் விட்டுத் தள்ளப்பா! ரவிசந்திரனுக்காக இல்லாவிடினும் எனக்காகவாவது விட்டு விடு அந்தப் பயலை. போலீசில் ஒப்படைத்தால் நான் சாட்சி சொல்ல வேண்டும். சுசீலா சாட்சியம் கூறவேண்டும். இதெல்லாம் எதற்கு? நமது பை நம்மிடம் சேர்ந்துவிட்டது. என் உடல் நிலையும் சரியாயில்லை...
என்று கோபாலரத்னம் சொன்ன போது, டாக்டர் குறுக்கிட்டு, இப்போது உள்ள இவரது உடல் நிலையில் இன்னும் ஒரு வார காலமாவது பரிபூரண ஓய்வுவேண்டும் இவருக்கு
என்று பேசினார்.
ஆமாம்... உங்கள் உடம்புக்கு என்ன?
என்று அப்புறம் தான் கேட்டான் நாகராஜன்.
புவனேசுவரி சொன்னாள் நடந்த கதையை. அதிலிருந்துதான் ரவிசந்திரன் அவர்களுக்கு அறிமுகமானதும் நாகராஜனுக்குத் தெரியவந்தது.
ஏன்? நான் வருகிறேனே உங்களுக்குத் துணையாக?
என்றான் நாகராஜன் கோபாலரத்னத்தைப் பார்த்து.
பேஷாய் வாயேன். நீ நம் வீட்டுப்பக்கம் வந்தே ஒரு மாதத்திற்கு மேலாகிறது,
என்றாள் புவனேசுவரி தன் கணவன் பதில் சொல்லுவதற்கு முன்.
நாகராஜன்! நீயும் தான் வா அப்பா! ரவிசந்திரனும் வரட்டும்,
என்று சொல்லிவிட்டு, கோபாலரத்னம் ரவிசந்திரனைப் பார்த்து, நாகராஜன் எனக்கு மைத்துனன் முறை ஆகவேண்டும், புவனேசுவரிக்குச் சித்தப்பா மகன்,
என்று அவர்கள் இருவரையும் பழக்கம் பண்ணி வைத்தார்.
ரவிசந்திரன் நாகராஜனைப் பார்த்து, சரியான சமயத்தில் நீங்கள் வந்து சேர்ந்தீர்கள். இவர்களுக்கு உற்ற துணை கிடைத்துவிட்டது. டாக்டர் ஸார்! இனிமேல் இவர்கள் நிம்மதியாகப் புறப்படலாமல்லவா?
என்றான்.
கார் வாசலில் காத்திருக்கிறது,
என்று காரியாலயச் சிப்பந்தி நினைப்பூட்டினார்.
சரி, புறப்படுங்கள்,
என்றார் டாக்டர்.
நான் விடைபெற்றுக் கொள்கிறேன்,
என்றான் ரவிசந்திரன் எல்லோரையும் பார்த்து.
என்ன? நீங்கள் வரவில்லையா
தன்னையும் மீறி வாய் விட்டே கேட்டுவிட்டாள் சுசீலா. கேட்டபின் சட்டென்று நாக்கைக் கடித்துக்கொண்டாள். அவளுக்கு வெட்கமாயிருந்தது.
வரவில்லையா? யார் சொன்னது? ரவிசந்திரனும் நம்மோடு வருகிறார்
என்றார் கோபாலரத்னம்.
இல்லை. மன்னிக்கவேண்டும். உங்களுக்குத் தகுந்த துணையில்லாதபடியால் நான் வருவதாக ஒப்புக்கொண்டேன். நாகராஜன் நல்ல துணையாக வருகிறார், நான் எதற்கு...?
இல்லை இல்லை, நாகராஜன் எங்கள் வீட்டுப் பிள்ளை, நீங்கள் விருந்தினர். நீங்கள் இன்று செய்த உதவிக்கு, எங்கள் வீட்டுக்கு வந்து ஒரு குவளை தண்ணீராவது என் கையால் வாங்கிக் குடித்துவிட்டுப் போகவேண்டும். அப்போது தான் எங்களுக்குத் திருப்தி ஏற்படும்
என்று அன்பும் கனிவும் நிறைந்த குரலில் புவனேசுவரி கூறினாள்.
ரவிசந்திரனுக்கு அவர்கள் பேச்சைத் தட்டமுடியவில்லை. நீங்கள் இத்தனை அன்போடு அழைக்கும்போது நான் எப்படி மறுக்க முடியும்?
என்று சொல்லிப் புறப்பட்டான்.
எல்லோரும் காரியாலய அறையை விட்டுக் கிளம்பியபோது தான் சுசீலாவுக்குத் தன் அழகுப் பையின் நினைவு வந்தது. அது தன் கையில் இல்லை என்பதையும் உணர்ந்தாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். எங்கும் காணவில்லை.
என்ன பார்க்கிறாய் சுசி?
என்றாள் புவனேசுவரி.
என் அழகுப் பை அம்மா.
"அடடே! அந்தத்