Irumbu Kuthiraigal
By Balakumaran
()
About this ebook
ஓர் நிறுவனத்தின் அதிகாரியாக பணிபுரிந்தாலும், தனக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் விஸ்வநாதன். அவன் அடுத்தடுத்து சந்தித்த பிரச்சினைகள், சந்தித்த புது மனிதர்கள் யார்? லாரிக் கம்பெனியில் நடக்கும் பிரச்சனைகள் என்ன? வாசிப்போம் இரும்பு குதிரை...
Read more from Balakumaran
Krishna Arjunan Rating: 0 out of 5 stars0 ratingsSwarna Vetkai Rating: 0 out of 5 stars0 ratingsSorgam Naduvile Rating: 0 out of 5 stars0 ratingsKadhalaagi Kanindhu... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solla Vanthen Rating: 0 out of 5 stars0 ratingsIdhu Pothum Rating: 0 out of 5 stars0 ratingsMouname Kaadhalaga... Rating: 0 out of 5 stars0 ratingsVellai Thuraimugam Rating: 0 out of 5 stars0 ratingsBalakumaran Sirukathaigal Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsMercury Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsSri Ramana Maharishi Rating: 0 out of 5 stars0 ratingsMahabharatham Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kavar Kalvan Rating: 0 out of 5 stars0 ratingsKalloori Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsMahabharatham Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsMannil Theriyuthu Vanam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Irumbu Kuthiraigal
Related ebooks
Balakumaran Sirukathaigal Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsMercury Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKalloori Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsSumma Irukkatha Pena Rating: 0 out of 5 stars0 ratingsBerovin Pinnal Rating: 0 out of 5 stars0 ratingsPutru Rating: 0 out of 5 stars0 ratingsPaarkadal Rating: 0 out of 5 stars0 ratingsPralayam Rating: 5 out of 5 stars5/5Vellai Thuraimugam Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Munnuraigal Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsSoundarya... Rating: 0 out of 5 stars0 ratingsLakshmi Kadatcham Rating: 0 out of 5 stars0 ratingsSakkaram Nirpathillai Rating: 0 out of 5 stars0 ratingsPanuval Pottruthum Rating: 0 out of 5 stars0 ratingsVaakkumoolam Rating: 0 out of 5 stars0 ratingsAatril Oru Kaal Setril Oru Kaal Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5Mannil Theriyuthu Vanam Rating: 0 out of 5 stars0 ratingsVadakku Veethi Rating: 5 out of 5 stars5/5Paathiramarinthu... Rating: 0 out of 5 stars0 ratingsMiss. Janaki Rating: 0 out of 5 stars0 ratingsAppavin Radio Rating: 0 out of 5 stars0 ratingsKamalam Solgiraal Rating: 0 out of 5 stars0 ratingsMouname Kaadhalaga... Rating: 0 out of 5 stars0 ratingsAmerica Payana Diary Rating: 0 out of 5 stars0 ratingsEnnarumai Thozhi..! Rating: 0 out of 5 stars0 ratingsSivasankari Sirukathaigal Irandam Thoguppu Rating: 5 out of 5 stars5/5Kaalavellam Rating: 0 out of 5 stars0 ratingsBharatha Dharisanam India Payanakathai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Irumbu Kuthiraigal
0 ratings0 reviews
Book preview
Irumbu Kuthiraigal - Balakumaran
http://www.pustaka.co.in
இரும்பு குதிரைகள்
Irumbu Kuthiraigal
Author :
பாலகுமாரன்
Balakumaran
For more books
https://www.pustaka.co.in/home/author/balakumaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
என்னுரை
ஒரு உரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
என்னுரை
என் சூழ்நிலையை, எனக்கு நேர்ந்தவற்றை, என் அநுபவத்தை மட்டும்தான் எழுதுவேன் என்பதை நான் கட்டளைக் கல்லாகவோ, சுமையாகவோ, சங்கல்பமாகவோ கொள்ளவில்லை.
ஆயினும் அவ்விதம் எழுதுவதில் ஒரு சந்தோஷம் இருக்கிறது. இயல்பு தெரிகிறது. இதைவிட என் சூழ்நிலையில், என் அநுபவங்களில் எழுத இன்னும் விஷயம் இருக்கிறது. பகிர்ந்துக் கொள்ள செய்தி இருக்கிறது.
எனக்கு சென்னையிலுள்ள டிராக்டர் கம்பெனியில் உத்தியோகம். பர்ச்சேஸ் உத்தியோகம், மனிதர்களை இங்கே சந்தித்த வண்ணமாகவே இருக்க வேண்டும்.
உத்தியோகம் வயிற்றுப் பிழைப்பு என்றாலும், கவிதைபோல இதுவும் எனக்கு சுவாரஸ்யம். களுத்துப்பட்டியும், பிளாஸ்டிக் பெட்டியுமாய் வரும் புதிய சேல்ஸ் இளைஞன், என்னவானாலும் சிரிப்பே காட்டாத வியாபாரிகள், இடைத்தரகர்கள், களைப்பும் சிவப்புமாய் வருகிற டிரைவர்கள் அல்லது க்ளீனர்கள், உன்னை மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருக்கேன் என்று முதல் த்வனிலேயே காட்டிவிடும் பெரிய மனிதர்கள் சகலரையும் தினசரி சந்திக்க வேண்டும்.
இவர்களின் பகல் வேஷம் தாண்டி இவர்களை உற்றுப்பார்ப்பது எனக்குப் பிடித்த விஷயம்.
அப்படி ஒவ்வொரு நெஞ்சாய் துருவ ஆரம்பித்தபோது உருவானது இரும்பு குதிரை.
என்னோடு உத்தியோகமாய் பேசின டிரைவரையும் கிளீனரையும் நேசிக்கத் துவங்கி, நானும் லாரிகளை நேசிக்கத் துவங்கினேன்.
போக்குவரத்து ஒருதனி உலகம். சேகரித்த தகவல்களில் நாற்பது சதவிகிதம்தான் நாவலில் வைக்க முடிந்தது. அவ்வளவுதான் முடியும். பொழுதுபோக்கு இலக்கியம் என்று கட்டம் கட்டி இலக்கியத்தை ஜாலியான விஷயமாக மாற்றிவிட்ட இந்த காலகட்டத்தில இப்படி ஒரு எண்ணெய் பிசுக்கும் டீஸல் நெடியும் கலந்த ஒரு நாவல் மையத்தைச் சொன்னதும், சந்தோஷமாய் தொடர் எழுத அனுமதித்த கல்கி ஆசிரியர் திரு. கி. ராஜேந்திரன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாற்பத்தியிரண்டு அத்தியாயம் எழுதத்தந்ததற்கு மறுபடி நன்றி சொல்கிறேன்.
இதைக் காட்டிலும் கடினமான விஷயங்களை, தொடராய், வெகுஜனப் பத்திரிகைகளில் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.
ஏனெனில் வாசகர் தரம் நாளுக்கு நாள் வளர்ந்து திடப்பட்டு வருவதைக் காண்கிறேன். புரிந்துகொள்ளும் ஆவலோடு அவர்கள் முன் வருவதை அறிகிறேன். தமிழ் நாவல் இலக்கியம் நல்ல உச்சிகளைத் தொடும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
என் நண்பர் திரு. மாலன் மிகச்சிறந்த முன்னுரை... இல்லை... உரை எழுதிக் கொடுத்திருக்கிறார். அவரின் அரசியல் கட்டுரைத் தெளிவுகளும் பத்திரிகை நடத்திய வித்தையும் உற்சாகமும் ஊரறிந்த விஷயம். அவருக்கு என் அன்பு.
என்றும் அன்புடன்,
பாலகுமாரன்
ஒரு உரை
பாலா,
நினைவு இருக்கிறதா உனக்கு.
உணக்கையாய் வெயில் அடித்துக்கொண்டிருந்த ஜுன் மாதம். நடுங்கி ஒடுங்குகிற குளிரோ, புழுங்க அடிக்கிற சூடோ இல்லாத இதம்.
நினைத்துக்கொண்டாற்போல் கிளம்பி நீ தஞ்சாவூர் வந்தாய், திடுமென்று என் ஆபீஸில் பிரசன்னமானாய். அந்த க்ஷணமே ஆபீஸை உதறினோம். அடுத்த நிமிஷம் பஸ்ஸில் ஏறிப் புறப்பட்டோம்.
நிசப்தம் இசையாய் பெருகி நதியாய் ஓடுகிற திருவையாறு.
‘க்ளுக் க்ளுக்’ என்ற பக்கத்தில் சுருள்கிற ஆற்றின் சிரிப்பிலும், பனித்தூளாய் பெய்கிற பலாப்பூவிலும், எங்கேயோ சோற்றுக்குக் கரைகிற காலத்தின் குரலிலும் சங்கீதம் கேட்டுக்கொண்டு உட்கார்ந்து இருக்கிற தியாகப் பிரம்மம்.
எத்தனை பெரிய உயிர் சங்கீதத்திலும் உருக்கத்தையும் தவத்தையும் ஒன்றாய் இணைத்த மனுஷன். ராகங்களுக்கு உடம்பு கொடுத்த மனுஷன், எளிமையும் இனிமையும் கலந்த வடிவம். சொல்கிற விஷயத்திற்கு ஏற்ற வடிவம். புரண்டு புரண்டு கற்ற கல்வி, உயிர்தொட்டுப் பெற்ற அநுபவம். மனம் குவித்துத் தேறிய சிந்தனை, அடிபட்டுத் துடித்த வலி எதுவுமில்லாது வெறும் பொழுது போக்காகவே வாழ்க்கையைக் கழித்துக்கொண்டிருக்கும் மூடனுக்குக்கூட, நாம்கூட பாடிவிடலாம் என நம்பிக்கையும், பிரமிப்பும், சந்தோஷமும் தருகிற உருவங்களைப் படைத்த கலைஞன்.
இவனை ராஜாக்கள் கும்பிட்டார்கள். வித்வான்கள் விற்றுப் பிழைத்தார்கள். வியாபாரிகள் கேட்டு இளைப்பாறினார்கள். ஜனங்கள் கேட்டு நெகிழ்ந்தார்கள். ஆனால் ஒரு தாஸி அல்லவோ கோவில் கட்டினாள்.
தாஸி மாதிரிதான் காவிரி புரள்கிறது. பூணூல் மாதிரி ஒடுங்கின காவிரியைப் பார்த்திருக்கிறோம். கணுக்காலை தொட்டு வணங்கிப்போன காவிரியைப் பார்த்திருக்கிறோம். பாலத்து முதுகின்மேல் சீற்றத்தோடு துப்பிவிட்டு விரைகிற காவிரியைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அன்றைக்குக் காவிரி புரள்கிறது தாஸி மாதிரி புரள்கிறது. காலை அகட்டி மல்லாந்து படுத்துக்கொண்டு வெட்கமில்லாமல் சிரிக்கிறது. மோகம்கொண்ட பொம்மனாட்டி காரணம் இன்றிப் பின்னலை முன் வீசி, பிரித்து கால் மாற்றிப் பின்னியதுபோல் சந்தேகம் பேசுகிறது. புத்திசாலிப் பெண்போல வதைக்கிறது. தொடுவாயோ என்று சீண்டுகிறது. தொட்டால் மாட்டிக்கொண்டாய் என மிரட்டுகிறது.
நமக்கு தாங்கவில்லை. இறங்கிவிட்டோம். உடுத்தின துணியை அர்ச்சகரிடம் கொடுத்துவிட்டு அவர் அகத்திலேயே துண்டு வாங்கிக்கொண்டு இறங்கிவிட்டோம்.
நெஞ்சுவரை இறங்கிவிட்டோம். காவிரிக்கு இணையாகத் துளைந்தோம். கையில் நீர் வாரி வான் நோக்கி இறைத்தோம். நாசித்துளையைப் பொத்தி தலை நனைத்து சிலும்பிச்சிலும்பி மூழ்கிக் களித்தோம். இடுப்புத் துண்டைக் காவிரி உருவிற்று. மனம்தளை அறுந்து காற்றில் மிதந்தது. நாம் கற்ற பாசுரங்களை இறைத்தோம். நெஞ்சில் இறங்கி ஊறிய பாரதியைத் துப்பினோம். முறைவைத்து கவிதை கட்டி காற்றில் ஊதினோம். மனசு அடங்கவில்லை. தமிழின் புதிய ருசி புரிந்தது. வழக்கமான வார்த்தைகளுக்கு வேறு புதிய அர்த்தங்கள் துலங்கின.
அன்றைக்குக் காவிரியின் சுழிகளை எனக்கு அடையாளம் காட்டினாய். அதன் நெளிவு சுளிவு பற்றி கற்றுக்கொடுத்தாய்.
காவிரியை விடப்பெரிய இன்னொரு நதியை அடையாளம் காட்டி சொல்லித் தந்தான் இன்னொருவன். அதுவும் மோகங்கொண்டு அழைக்கிற நதிதான். இறங்கினால் ஆளைப்புரட்டி விடுகிற நதிதான். இந்த வண்டல் சேர்ந்துவிட்டால் பிறகு எதை முழுங்கினாலும் பசேல் என்று கிளைத்து எழுந்து நிற்கும். புத்தகப்படிப்பு எழுத்து கவிதை, இலக்கியம் என்று சின்னசின்னதாய் ஓடைகள் சேர்ந்து பெருகின வாழ்க்கை நதி அது.
படிப்பை முடித்துக்கொண்ட கையோடு ஒரு வேலையை சம்பாதித்துக்கொண்டு சென்னை வந்த எனக்கு ஏற்பட்ட முதல் ஸ்நேகம் அவன்தான். அது அதிருஷ்டம்தான். அவன்தான் உன்னை எனக்குச் சொன்னான். என்னை உனக்குச் சொன்னான். சின்னப்பத்திரிகை. நல்ல சினிமா என்று ஒரு கதவை திறந்தான். புத்தகப் படிப்போடு நிறுத்திக்கொண்டு விடவில்லை. வெறுமனே பேசிக் களைத்து ஓய்ந்து விடவில்லை. தன் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் சுழல்கிறது என்ற பிரமையில் கிறங்கிப்போய் உட்கார்ந்து விடவில்லை. கற்றதை எழுத்தில் வடித்துக் காண்பித்தான்.
சுறுசுறுவென்று, ஆனால் உறுத்தாத கூர்மையும் ஒளியும்கொண்ட எழுத்து அவனுடையது. அவன் குரலைப்போலவே அவன் எழுத்தும் உரத்து நான் பார்த்ததில்லை. ஆனால் சொல்வதை அழுத்தமாக, தீர்மானமாக, நயமாகச் சொல்கிற எழுத்தாய் அது இருக்கும்; அரைப்பக்க சினிமா விமர்சனம் ஆனாலும் சரி... நாலு வரி கேள்வி பதிலானாலும் சரி... கவிதை, சிறுகதை, நாவல் என்று கனமான விஷயங்கள் ஆனாலும் சரி.
ஞாபகம் இருக்கிறதா? கணையாழி கடைசிப்பக்கத்தில் சுஜாதா ஒரு மானசீகத் தொகுப்பு வெளியிட்டார். கு.ப.ரா, லா.ச.ரா புதுமைப்பித்தன் என்று பெரிய பெயர்களோடு துவங்கியப் பட்டியலில் நம் தலைமுறையில் இருந்தது அவன் பெயர் ஒன்றுதான். தி. ஜானகிராமன் நன்றாய் எழுதுகிற புதியவர்கள் பற்றிய தில்லி இலக்கிய உரையாடலில் ஸ்டான்டேனியசாகச் சொல்லிய பெயர் அவனுடையதுதான்.
அவனை இன்று ஆபீஸ் தின்றுவிட்டது. லடக்ஸ் பீப்பாய்களுக்கும், கணக்குப் புத்தகங்களுக்கும் ஆபீஸ் ஃபைல்களுக்கும் நடுவே அவனுடைய கவிதையும் இலக்கியமும் விழுந்துவிட்டன. அவன் அந்தப்பெரிய ஆபீஸின் இன்னொரு இயந்திரம் ஆகிப்போனான். அவனைக் கண்டு வியந்துபோய் இங்கே நீ நாவலாக்கியிருக்கிறாய். அவனை நாயகனாக்கியிருக்கிறாய்.
கவிதையும் இலக்கியமும் வாழ்க்கையும் ஒன்றாக இருந்த காலங்கள் காணாமல் போய்விட்டன. வெகு வருடங்களுக்கு முன்னால் அம்மா அவளுக்கு வேண்டிய சாந்தை அவளே தயாரித்துக் கொண்டிருந்தாள். அதை வைப்பதற்கென்றே தனியாக பாத்திரங்கள்கூட இருந்தன. வெண்கலத்தில், வெள்ளியில், தேங்காய் சிரட்டையில் ஊற்றிவைத்த சாந்து முற்றத்தில் காய்ந்து கொண்டிருக்கும். மேலே பாத்திரம் ஜவ்வு கட்டியிருக்கிற அந்தச் சின்னச்சின்ன வட்டங்களில் ரேகை பார்த்தது மெத்தென்ற சுகமான அநுபவம். சின்ன வயதில் என் ரேகைகளின் அத்தனை அழகையும் பார்க்கக் கிடைத்த அந்தச் சிரட்டைகள்தான் எத்தனை விதம். இனிமேல் அந்த சாந்துச் சிரட்டைகள் நமக்குப் பார்க்கக்கூடக் கிடைக்காது.
இது பிளாஸ்டிக் குப்பிகள் யுகம். மாஸ் புரொடக்ஷன் யுகம். நம்முடைய கையின் பதிவுகள் நமக்குக் கவிதையாய் கிடைத்துக்கொண்டிருந்த காலங்கள் தொலைந்து போய்விட்டன.
திருநெல்வேலிக்குப் போயிருக்கிறாயோ, பாலா? டிங்கர் ஓகஸ், சா மில், ஸ்கூட்டர் ஒர்க் ஷாப், லாரி கம்பெனி என்று வரிசையாகப் பட்டறைகளாக இருக்கும். சத்தமும் குப்பையும் குவிக்கிற பட்டறைகள். இரும்புத்துரு வெட்டின தகடு, கிரீஸ் எண்ணெய் என்று அழுக்கும் பிசுக்குமாய் குவிந்துகிடக்கும் பட்டறைகள். இத்தனை குப்பைக்கு அடுத்தாற்போல் சட்டென்று பெரிய பெரிய வயல்வெளிகள் விரிந்திருக்கும். சதுரம் சதுரமாய் பச்சை தொலைவானம் வரை பரந்திருக்கும். இடைவெளி தெரியாமல் கிண்ணங்களாக இது நெருக்கியடித்து மண்டிக்கொண்டு நீரைப் போர்த்தியிருக்கிற ஒரு குளம் வரும். நெருக்கமான பச்சை நடுவில் குவளையா அல்லியா என்னதென்று தெரியாத நீலப்பூக்கள் பூத்திருக்கும். வெள்ளையாய் நாரையும் கொக்கும் குளத்தைச் சுற்றிவரும்.
இந்த ஊரைப் பார்க்கிற போதெல்லாம் எனக்கு நம் தலைமுறை ஞாபகம் வரும். கடை ஆபீஸ், ஃபாக்டரி, என்று அலைந்துவிட்டு அழுக்கும் பிசுக்குமாக வேலை செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி கவிதை எழுதுகிற காலம் நமக்குத்தான் வந்திருக்கிறது. ஸ்பானரை எடுத்து மிஷினை முடுக்குகிற கையில்தான் பேனாவையும் எடுத்துக் கதை, நாவல் எழுதுகிற காலம்.
இது முன்னேற்றமா? துரதிருஷ்டமா? இதைத் துக்கம் எனப் புரிந்து புலம்புவதா? சோகம் எனச் சுருண்டுகொள்வதா?
நம்முடைய இந்த நண்பன் சுப்ரமண்ய ராஜு இந்தக் கதையின் விஸ்வநாதன் தன்னுடைய அம்மா இறந்துபோன இரண்டாம் நாள், எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தான். படிக்கிறவனைக் கதற அடித்துவிடுகிற கடிதம் அது. தன் துக்கம் முழுக்கச் சொன்ன அந்தக் கடிதம் புலம்பவில்லை. எனக்கு வாழ்க்கையின் அபத்தம், குரூரம், irony எல்லாம் புரிந்துவிட்ட மாதிரி இருக்கிறது. மாலன், ஆனால் இது அல்ல சாஸ்வதம், எதுவுமே அல்ல.
உன்னுடைய நாவலும் இதைத்தான் சொல்கிறது. வாழ்க்கை என்பது யுத்தம் எதிர்கொள் என உன் பேயரசன் சொல்கிறான். இந்த யுத்தத்தில் எந்த துக்கமும் வலியும், அபத்தமும், தோல்வியும், சாஸ்வதம் அல்ல. அழ வேண்டாம். புலம்ப வேண்டாம். எதுவும் செய்ய வேண்டாம். முதலில் இது இயல்பு, இயற்கை, சுபாவம் எனப் புரிந்துகொள் என்று உன் நாவல் மன்றாடுகிறது. இலக்கியத்திற்கும் உத்தியோகத்திற்கும் உள்ள முரண்பாட்டை மட்டும் பெரிதாக எடுத்துக்கொண்டு பேசாமல் மொத்த வாழ்க்கையும் எடுத்துக்கொண்டு பேசுகிறது.
எடை போட்டு எழுபது ரூபாய்க்கு எடுத்த விரிசல் சக்கரத்தை இருநூறு ரூபாய்க்குத் தள்ளிவிடுவது அநியாயமா? வியாபாரமா? மூன்றுலட்ச ரூபாய் சரக்கை கிணற்றில் இறக்கிவிட்டு ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் ஓடிப்போவது தற்காப்பா? நம்பிக்கைத் துரோகமா? லட்சக்கணக்கில் வியாபாரம் செய்தவன் ஒரு ராத்திரியில் நொடித்துப்போவது துரதிருஷ்டமா? கடவுள் சித்தமா? விபச்சாரம் செய்த பணத்தில் லாரி வாங்குவதும் விபத்திற்கு ஈடாய் வந்த பணத்தில் விபச்சாரம் செய்வது வயிற்றுப் பிழைப்பா? வக்கிரமா? ப்ரியத்தின் நிமித்தம் கொடுத்த பிரிவு உபசாரப் பணத்தை கணக்குப் பார்க்கிற, விமர்சனம் செய்கிற வாத்தியார் ஞானியா? மூர்க்கனா? உதவி செய்தவனை முட்டாள் எனச் சொல்லும் பெண் அகங்காரியா? சத்தியவாதியாக கணவனின் கவிதையைப் பொறுத்துக்கொள்ளாத மனைவியும், மனைவியின் அவஸ்தையைப் புரிந்துகொள்ளாத கணவனும் குழந்தை பெற்றுக்கொள்வது காதலா? காமமா?
எல்லாமே இயற்கை. இயல்பு, சுபாவம். அதைப் புரிந்துகொள் முதலில் என்று உன் பாத்திரங்கள் சொல்கின்றன. சரி, இந்தப் பிரிவு இல்லை என்றால் என்ன கஷ்டம்?
புரிந்து கொள்ளாதவனுக்கு வலி நிச்சயம். வாழ்க்கையை இதன் இயல்பைப் புரிந்துகொள்ளாதவன் அதை ஜெயிப்பது எப்படி சாத்தியம்? இந்தக் கூரிய முரண்பாடுகள் விளங்காமல் முன்னேறுவது எப்படி? ஜெயிப்பது, முன்னேறுவது எல்லாம் இரண்டாம் பட்சம். இந்தப் பிரிவு இல்லாமல்போனால் இருத்தலே ஹிம்சையாகும். எதிலும் தெளிவற்று எப்போதும் சுலபமின்றி இருக்கிற வாழ்க்கை நரகமாகி விடாதா? தன்னையும் துன்புறுத்திக்கொண்டு உடன் வாழ்கிறவனையும் காயப்படுத்திக் கொண்டிருந்தால் ஒரு மொத்த சமூகமே நாசப்பட்டுப் போகாதா?
இந்த பிரிவு இல்லாமல்தான் நமது இளைஞர்கள் தலை கலைந்து போகிறார்கள். அந்நியமாதல் பற்றிப் பேசுகிறார்கள். எதிலும் நம்பிக்கையற்றுச் சிதைகிறார்கள். எதிர்மறையாய் யோசிக்கிறார்கள் எளிதில் கலங்குகிறார்கள். கவிதை எழுதி இலக்கியம் பேசி ஊர்விட்டு ஊர் போய் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இன்னொரு வகை இளைஞர்கள் இருக்கிறார்கள் இந்த முதல்படி தாண்டியவர்கள். இந்த வாழ்க்கையின் முரண்பாடுகள் பற்றித் தெரிந்தவர்கள். இது இயல்பு என விளங்கியவர்கள்.
சரி, புரிந்துவிட்டது. ஆனால் இந்த முரண்பாடுகளும் அநீதிகளும் வக்கிரங்களும் இப்படியே இருக்கத்தான் வேண்டுமா? இவற்றை என்ன செய்வது? சும்மாயிரு
என்கிறாய். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி Just be என்று சொன்ன த்வனியில், பொருளில் சும்மாயிருக்கச் சொல்கிறாய். காஞ்சிப்பெரியவர், மௌனமாய் இருப்பது என்றால் பேசாமல் மட்டும்தானா,
என்று கேட்ட அர்த்தத்தில் சொல்கிறாய்.
எனக்கு சும்மா இருப்பதில் விருப்பமில்லை. விருப்பமில்லை என்பதால் சாத்தியமில்லை. செயலற்றுச் சும்மா இருப்பது முறைதானா என்று எனக்குள் கேள்விகள் இருக்கின்றன. இவையெல்லாம் இங்கே புறம்பான விஷயங்கள், வேறு ஒரு சமயம் பேசித் தெளியவேண்டிய கேள்விகள், என்னைத் துலக்க இன்னொரு நாவல் எழுது.
இந்த நாவலை அற்புதமாக எழுதியிருக்கிறாய். ஒவ்வொரு வரியும் இழைத்து இழைத்துப் பூட்டின மணியாக விழுந்திருக்கிறது. அதே சமயம் மெருகு பொலிய எழுதுவது சாதாரணக் காரியம் இல்லை. இதற்குப் பக்கம் பக்கமாக நான் உதாரணம் காட்ட முடியும். வேண்டாம். தன் ரஸனையை மெய்ப்பிப்பதற்காகக் கம்பனை அக்கக்காக பிரித்த தமிழ் வாத்தியார் ஞாபகம் வருகிறது. சுயமாக ஒன்றினை அறிதலும் புரிந்துகொள்ளலும் ரஸிக்கக் கற்றலும் மகாபாக்கியம். உன் வாசகர்கள் ரஸனைக்கு நடுவே நான் குருவியாய்ப் பறக்க வேண்டாம். உன் எழுத்துகள் மறுபடி மறுபடி எனக்கு ஒன்றை நிச்சயிக்கின்றன. உள்ளத்தில் உண்மை உண்டாயின் வாக்கில் ஒளியுண்டாகும்.
எத்தனை காலமாய் உன் உரைநடையை நான் அறிவேன்! எதிரே உட்கார்ந்து பேசுகிற பேச்சாகப் பெருகுகிற நடை அது. உன்னைப்போல் ஒரு கம்பீரம்கொண்ட நடை. உன் கவிதைகளை நான் காதலிக்கிறேன். யாப்புதான் கவிதை என்கிற மௌடீகத்தையும், வார்த்தைகள்தான் கவிதை என்கிற ரொமான்டிஸத்தையும் தாண்டிய சரியான கவிதைகள். தி. ஜானகிராமன் சொல்கிற மாதிரி சரியான ஆண்பிள்ளை அல்லது பெண்பிள்ளைக் கவிதைகள். இந்த நாவலைக் கவிதையும், உரைநடையுமாக ஊடும் பாவுமாக நெய்திருக்கிறாய். ஆணும் பெண்ணும் புணர்தல்போல சரியான முறையில், சரியான இடத்தில், சரியான அளவில் உரைநடையும் கவிதையும் காத்திருக்கின்றன. முறையும், இடமும், அளவும் தவறினால் விகாரமாகும். மிகுந்தால் ஆபாசமாகும். குறைந்தால் நோய் காணும். கத்தியில் நடக்கிற வேலை. அற்புதமாகச் செய்திருக்கிறாய். தாம்பரத்தில் ஏறி கிண்டியில் இறங்குவதற்குள் அந்த வார அத்தியாயத்தைப் படித்து முடித்து ஜீரணமும் செய்துகொள்ள வாசகன் ஆசைப்படுகிற காலம் இது. இதில் கவிதையிலேயே ஒரு அத்தியாயம் எழுதியிருக்கிறாய். என்ன அற்புதம் இது!
ஒருமுறை ஒரு நண்பனைப் பார்க்க அரசூர் சென்றிருந்தேன். மெயின் ரோட்டில் இறங்கி பத்து நிமிஷம் கிளைச்சாலையில் நடக்க வேண்டும். மையிருட்டு, ஆங்காங்கே ஒன்றிரண்டு மின்மினி. தூரத்தில் ‘களக் களக்’ என்று சுண்ணாம்புக்காளவாய், நடக்கத் தயங்கி நின்றிருந்தபோது டயரைக் கொளுத்திக் கையில் பிடித்தபடி எதிரே ஒருவன், நின்று நிதானித்து எரிகிற ரப்பர் சுடர், லேசில் அணையாத ஜோதி.
இன்றைக்குச் சூழ்ந்திருக்கிற இருளுக்கு நடுவில் மொய்க்கிற மின்மினிகளுக்கு நடுவில் பயம் காட்டுகிற காளவாய்களுக்கு மத்தியில் இப்படி ஒரு வழிகாட்டுகிற சுடராகப் பொலிகிறது உன் நாவல். இருட்டு மண்டுகிறபோது வெளிச்சம்காட்ட வேண்டியது முக்கியம். இதற்கு நெய்ப்பந்தம்தான் சிலாக்கியம் என்று மரபு பேசுவது கால விரயம், எல்லா ரோடுகளுக்கும் எலக்ட்ரிக் பல்பு என்பது மிகுந்த யோக்கியமான சிந்தனை என்றாலும் உடனடியாக சாத்தியமாகாத காரியம். குழம்பிச் சோர்ந்து விடாமல் குதர்க்கம் பேசிச் சிரிக்காமல் ஒரு சுடரை ஏற்றியிருக்கிறோம் நீர்! உனக்குள்ளே ஆகுதி சொரிந்த காலங்காலமாய் வளர்ந்த யாகத் தீயில் ஏற்றிய சுடர்.
இதற்காக,
ஒரு தலைமுறை உனக்குக் கடன்பட்டிருக்கிறது.
மிகுந்த ப்ரியமுடன்
மாலன்
39, முதல் மெயின் ரோடு,
இந்திரா நகர், சென்னை -20
1
அமீதியா ஹோட்டலுக்கு எதிரே நின்று நடேச நாயக்கர் காலணிகளைக் கழற்றினார். கைகளைக் கூப்பினார். பிள்ளையாரே பிள்ளையாரே
என்று தலையில் குட்டி கொண்டார். எல்லாம் உன் செயல்
என்றார்.
தெருவில் போகிறவர்களுக்கு நாயக்கர், ஹோட்டல் அமீதியாவைத் தொழுவதுபோலத்தான் தெரியும். ஹோட்டலுக்கு இடப்புறம் சின்னதாய்ச் சித்திவிநாயகர் கோவில் இருந்தது. அந்தக் கோவிலுக்குப் பிறகு சாலை வளைந்து பெரிய தியேட்டர் ஆரம்பமாயிற்று.
கோவில் வடக்குப் பார்த்து இருந்தது. அமீதியா மேற்குப் பார்த்து இருந்தது. நாயக்கர் கிழக்கு நோக்கிப் போகவேண்டியிருந்தது. தெற்குப் பார்த்து வணங்கக் கூடாது. வடக்கே பார்த்தால் பிள்ளையாருக்கு முதுகுகாட்ட வேண்டி நேரிடும். நடந்து கோவில் தாண்டி மேற்குப் பக்கம் பார்ப்பது அனாவசியம். எனவே தினமும் அமீதியாவுக்கு எதிரே நின்று வணங்குவதுதான் நாயக்கர் வழக்கம்.
நாயக்கரின் கடவுள் வணக்கம் அதுதான். அவ்வளவுதான். பிள்ளையாரே எல்லாம் உன் செயல் என்பது சத்தியமான வார்த்தை.
இந்த உலகத்தில் எவனும் எந்தக் கொம்பனும் எல்லாம் நான்தான் என்று மார்தட்டிக்கொள்ள முடியாது. சகலமும் தெரியும் என்று அலட்டிக்கொள்ளக் கூடாது. அப்படி அலட்டிய நிறைய பேரை நாயக்கருக்குத் தெரியும். அவர்கள் மண்ணோடு மண்ணாய் போயிருப்பதும் தெரியும். நல்லதோ, கெட்டதோ நம் கையில் இல்லை. உயர்வோ தாழ்வோ நாம் தீர்மானிப்பதில்லை. அல்பம் என்று ஒரு பொருளும் இல்லை. நேற்றைய அல்பம் இன்றைய அற்புதம். இன்றைய அற்புதம் நாளைய அல்பம். ஆனால் எல்லாவற்றிற்கும் உலகில் விலை உண்டு. எச்சில் இலைக்கு விலைபோட்டு எடுத்துப் போகிறவர்கள் உண்டு. சாம்பல் காசு கொடுத்து வாங்குபவர் உண்டு.
மனுஷன் தலைமுடிக்குக்கூட விலை போடறதுண்டுங்க. உசிருன்னு சொல்றாங்களே அதுதாங்க வாங்கவும் முடியலை. விக்கவும் முடியலை. அப்படி அது எங்கேயாவது விக்கிற மாதிரி ஆயிட்டா கொண்டாந்து இந்தப் பாகல் தோட்டத்துல சரம் சரமா தொங்கவிட்டுருவானுங்க. விலை கேக்குற ஆளுக்கேத்த மாதிரி வித்துச் சம்பாதிப்பானுங்க.
‘அட இந்த இடம் இந்தப் பாகல் தோட்டம் முப்பத்திரெண்டுல புறம்போக்கு. தூறல் போட்டா முழங்கால் சேறு. அடிச்சுப்பேஞ்சா நடுமார் ஆழம். நான் இங்கே கைநீட்டி நீச்சப் போட்டிருக்கேன்னா நம்புவியா? சிரிப்பே! அப்போ பட்டணத்துல தென்னை மரம் சிரிப்பா சிரிக்கும். குலை அறுத்துப்போட்டு வண்டிபாரம் தாங்காத ஏத்தின காயைத் தள்ளிவுட்டுக்கினே போவானுங்க. கோவணம் கட்டின பசங்க எல்லாம் தேங்கா வாரிக்குவம். கல்லு வச்சு நெருப்பு மூட்டி, மரத்துல காயை நெத்தி ஓட்டை போட்டுக்குவம். ஒரு கைநாட்டுச் சர்க்கரை கடையிலே சும்மா குடுப்பான். ஓட்டை வழியா தேங்கா உள்ள போட்டுட்டு நெருப்புல சட்டிமாதிரி வச்சுடுவோம். பச்சை மட்டை நாறச் சொல்ல எடுத்துக் கையாலே பொளந்து ஒடச்சித் துண்ணுவோம். மூணு தேங்கா துண்ணா பொம்முன்னு பூடும். என்னா ருசி... என்னா ருசி... நாக்க அறுக்க அப்படி ஒரு ருசி.
முதல் வார் வந்தது. எல்லாம் பூட்சி. எல்லாத்துக்கும் துட்டு வெள்ளிப் பணம், ஆம்பளை வாங்கினான். பொம்பளை வாங்கினான். துணி வாங்கினான். துடப்பம் வாங்கினான். மந்தார இலை வாங்கினான்ய்யா துட்டுக் குடுத்து வெள்ளைக்காரன். கட்டுக்கட்டாப்போவும் கோட்டைக்கு. பட்டாளக்காரன், துண்ண துடைக்க எல்லாம் அதுதான் அப்போ புரண்டது. இந்த இடம் இராயப்பேட்டை முதலியாருங்க இங்கே குடிசை போட்டுக்கிட்டுச் சீமெண்ணெய் வித்தாங்க. கம்பெனியிலே எண்ணெய் வாங்கி கவர்மெண்டுக்கு வித்தாங்க. கவர்மெண்டுக்கு துட்டு குடுக்க முடியலை. குதிரையை எடுத்துக்க, கோச்சு வண்டியை எடுத்துக்கன்னான். கோட்டையிலேருந்து குதிரை வண்டி வாங்கி மயிலாப்பூர் ஐயருக்கு வித்தாங்க. அன்னிக்குப் புடிச்சுது வண்டி வியாபாரம். கீலு, சட்டம் கதவு ஆணின்னு வியாபாரம் புடிச்சுது. வார் முடிஞ்சு மிலிட்டிரி லாரி வித்தான் வெள்ளைக்காரன். அதுவும் வாங்கினான். ஒடச்சி வித்தாங்க. அன்னிலேர்ந்து இன்னி வரை பாகல் தோட்டத்துல ஒடசல் வியாபாரம்தான். காயல்பட்டணத்துத் துலுக்கருங்க இங்கே வந்து தெற்குப் பக்கத்துக்கு வாங்கிப் போவாங்க. மதுரை, திருநெல்வேலி வரை வியாபாரம். அப்புறம் காயல்பட்டணத்து ஆளே கடை போட்டான். காயலான் கடைன்னு பேரு வந்தது.
ஒண்ணு நினைப்புல வச்சிக்க. துலுக்கரு பூந்த வியாபாரம் தோற்றதே கிடையாது. ஏன் சொல்லு, கட்டுமானம் துட்டுவூட்டு உள்ளாற சுத்தும். வெளியே போவாது. அப்பாகிட்ட புள்ளை கடன் வாங்கும். தேதி சொல்லித் திருப்பிக் கொடுக்கும். பொண்ணு கட்ட சம்பாதிக்கணும். சம்பாதிக்கிற புள்ளைக்குத்தான் பொண்ணு கெடைக்கும்.
காயல் பட்டணக்காரன் வந்தப்புறம் நெருப்புப் புடிச்ச மாதிரி பாகல் தோட்டம், சிந்தாதிரிப் பேட்டை, கூவங்கரை ஓரமா இந்தக் கடைங்கதான்.
பென்ஸு வண்டி வாங்கிப் பிரிச்சுத்தான் விப்பாங்க இங்க. பிசிறு பிசிறா வியாபாரம். மூணு வண்டி விலைபோகும். பறந்து பறந்து விலை கேட்டியா பத்துரூபா ஒரு போல்ட். பறக்காத கேட்டியா ஒருரூபாய் அதே போல்ட். கேட்கறதைப் பொறுத்து விலை. பேசறதப் பொறுத்து வியாபாரம். சிரிச்ச மூஞ்சியா ஒரு ஆளைப் பார்த்துட முடியுமா? இங்க சிரிக்கமாட்டான். காக்கா இறக்கைல இடுப்பு மூட்டினாக்கூடச் சிரிக்க மாட்டான். சரிதான் போடான்னுதான் மூஞ்சி நிக்கும்.
நடேச நாயக்கருக்கு அறுபது வயது தாண்டிவிட்டது. அவர் சிரித்தும் யாரும் பார்த்ததில்லை. முகத்தில் ஒரு நிரந்தர சோகம். பொத பொத உடம்பு, வெளிறிய பின்னி நீலச்சட்டை. கரை வேட்டி, தோளில் துண்டு. குடை, மடித்த கரை வேட்டி தாண்டிக் காக்கி அரை நிக்கர்.
சென்னையைச் சுற்றியுள்ள தொழிற்பேட்டைகளில் நாயக்கரை எல்லோருக்கும் தெரியும். எல்லா தொழிற்சாலைகளிலும் இரும்புக்கழிவு இருக்கும். உடைந்த, உடைக்கப்பட்ட உதிரிபாகங்கள் இருக்கும். மாதம் ஒருமுறை அவைகளை இருந்த இடத்தில் கிடந்த நிலையில் விலை பேசி நாயக்கர் வாங்கி வருவார். எசமானே
என்று விற்பனை அதிகாரியைக் கால்தொட்டு வணங்குவார். அறுபது வயசுக் கிழவனை அதட்ட யாருக்கும் மனசு வராது. அதட்டினாலும் நாயக்கரை அனுப்பிவிட முடியாது.
அதே நாயக்கர் கடையில் வேறு முகம் காட்டுவார்.
நாயக்கரே, பென்ஸு பம்பர் இருக்கா?
எத்தினி வேணும்?
ஒண்ணுதான்
இல்லே.
இருக்கா, பாரேன்.
இல்லே. நாளைக்கு வா.
இன்னைக்கு இல்லைங்கற. நாளைக்கு மட்டும் எப்படி கிடைக்கும்?
எங்கனா பிராஞ்சு வைக்கிறேன் போ.
நாயக்கரிடம் பென்ஸ் பம்பர் இருக்கும். மறுநாள் அவன் பாகல் தோட்டத்துக்கு வந்தால் விலை சொல்லப்படும். அவனுக்கு பம்பர் மிக அவசியம் என்பது நாயக்கருக்குத் தெரிந்துவிடும்.
நாயக்கரிடம் தற்சமயம் பென்ஸ் லாரியின் சக்கரங்கள் இருந்தன. டயர் இல்லாத இரும்புச் சக்கரம் மட்டுமாய் இருந்தன. அவைகளில் மூன்று மோசமானவை, மெல்லிய விரிசல் உடையவை. நாயக்கர் அதைப் பற்றவைத்துத் தேய்த்து பெயிண்ட் அடித்து வைத்திருந்தார். எடைக்கு வாங்கியவை. தட்டிக்கொட்டிப் பற்றவைத்து பெயிண்ட் அடித்தபிறகு