Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mahabharatham Part - 1
Mahabharatham Part - 1
Mahabharatham Part - 1
Ebook805 pages5 hours

Mahabharatham Part - 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இராமாயணமும், மகாபாரதமும் ஒவ்வொரு இந்தியனும் நிச்சயம் படிக்க வேண்டியவை. இந்த காப்பியங்கள் எல்லா இடத்து மக்களின் நல்லது, கெட்டதுகளை வெகு துல்லியமாக காட்டுகிறது. இந்த இதிகாசங்கள் மனிதர்களை மனிதர்களாக பார்க்கிறது. நமக்கு பார்க்க கற்றுக் கொடுக்கிறது. மகாபாரதம் ஒரு புதினம் அல்ல. புதினத்தின் கூறுகளெல்லாம் இருந்தாலும் அடிப்படையில் அது ஒரு நீதி நூல். வேத வாக்கியங்களாக நீதியை சொல்வதற்கு பதிலாக சிலர் வாழ்க்கையைச் சொல்லி, சம்பவங்களைச் சொல்லி அதன் மூலம் ஏற்படுகின்ற விளைவுகளைச் சொல்லி நீதியை உள்ளுக்குள் புகுத்தி விடுகிறது. அந்த கருத்துகளையும் உணர்வுகளையும் திரு. பாலகுமாரன் அவர்களின் பார்வையில் கம்பீரமாகவும், தெளிவாகவும் வாசித்து உணரலாம் வாருங்கள்.

Languageதமிழ்
Release dateJan 28, 2023
ISBN6580156808789
Mahabharatham Part - 1

Read more from Balakumaran

Related to Mahabharatham Part - 1

Related ebooks

Reviews for Mahabharatham Part - 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mahabharatham Part - 1 - Balakumaran

    A picture containing icon Description automatically generated

    https://www.pustaka.co.in

    மகாபாரதம் பாகம் – 1

    Mahabharatham Part – 1

    Author:

    பாலகுமாரன்

    Balakumaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/balakumaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    முன்னுரை

    பகவான் யோகி ராம்சுரத்குமார் வாழ்க. அவர் கட்டளையால் இந்த இதிகாசத்தை நான் எழுதத் துவங்கினேன். எப்படி எழுதப்போகிறேன் என்ற கவலை ஆரம்பத்தில் இருந்தாலும் திரும்பத்திரும்ப மகாபாரதத்தை படிக்கபடிக்க அதை எப்படி எழுத வேண்டும் என்ற ஒரு எண்ணம் உள்ளுக்குள் சுடர்விட்டது.

    மகாபாரதம் ஒரு புதினம் அல்ல. புதினத்தின் கூறுகளெல்லாம் இருந்தாலும் அடிப்படையில் அது ஒரு நீதி நூல். வேத வாக்கியங்களாக நீதியை சொல்வதற்கு பதிலாக சிலர் வாழ்க்கையைச் சொல்லி, சம்பவங்களைச் சொல்லி அதன் மூலம் ஏற்படுகின்ற விளைவுகளைச் சொல்லி நீதியை உள்ளுக்குள் புகுத்திவிடுகிறது. நீதிதான் முக்கியம் என்கிறபோது வர்ணனைகளை அதிகம் எழுதக்கூடாது. காற்று வீசியதும், கடல் பொங்கியதும், மரங்கள் அசைந்ததும் எழுதினால் ஒரு களம் தெரியுமே தவிர, சொல்லப்பட வேண்டிய விஷயம் இந்த வர்ணனைகளில் மறைந்துபோக வாய்ப்பிருக்கிறது.

    மகாபாரதத்தில் விதம்விதமான குணமுடைய மனிதர்கள் ஒன்றோடொன்று மோதுகிறார்கள். அதாவது பேசுகிறார்கள். விவாதிக்கிறார்கள். இரண்டுபேர் விவாதத்தை மூன்றாவது ஆள் முறியடிக்கிறார். ஆதரிக்கிறார். இப்படி தொடர்ந்து பேச்சுக்கள் தான் இந்த இதிகாசத்தினுடைய அடிநாதமாக இருக்கிறது. என்னுடைய புதின நடை இயல்பு இம்மாதிரி வசனங்களில் தான் இருக்கிறது. என்று அவன் கோபப்பட்டான், என்று அவள் மனம் மகிழ்ந்தாள் என்று நான் எழுதுவதேயில்லை. அவனோ, அவளோ பேசுகின்ற அந்த வசனங்களில் கோபமும், சந்தோஷமும் இருக்கும். உண்மையில் ஆச்சரியக்குறி போடுவதைக்கூட நான் விரும்புவதேயில்லை. என்னுடைய வேண்டுகோளை மீறி பிழை திருத்துபவரும், அச்சடிப்பவரும் அந்த குறி போட்டுவிடுகிறார்கள். ஆச்சரியம் அந்த வசனத்திலே, அந்த சொல்லிலே, அந்த எழுத்திலே இருக்க வேண்டும். என் எழுத்து அந்த உணர்வுகளை கம்பீரமாகவும், தெளிவாகவும் சொல்லும். அப்படி இருக்கையில் அதிகம் பேச்சுக்கள் நிறைந்த இந்த மகாபாரத இதிகாசத்தை நான் ஒன்றன் பின் ஒன்றான வசனத்திலேயே விவரிக்கத் துவங்கினேன். காட்சி பற்றி ஆசிரியர் கூற்றாக என் அபிப்ராயங்களை அங்கங்கே வைத்தேன். அப்பொழுது புதினம் சுவைபட வந்திருப்பது நன்றாகத் தெரிகிறது.

    வனம் எப்படி இருக்கும். அவரவர் பார்த்த வனத்தை மனதில்கொண்டு வனத்தை சித்தரித்துக்கொள்ள வேண்டும். அரக்கு மாளிகை எரிந்தது. இதற்கு படம்போட முடியுமா அல்லது சடபடவென்று எழுத முடியுமா. அவரவர் பார்த்த நெருப்புகள்தான் ஒட்டுமொத்தமாக மனதிற்குள் இறங்கும். அரக்கு மாளிகை எரிந்ததைவிட எரிக்கச்சொல்லுகின்ற அந்த வசனங்கள்தான் அந்த சூட்சும வாக்கியங்கள்தான் எனக்கு முக்கியமாக இருந்தது. அவளுடைய மார்பகங்கள் வினோதமாக இடதும், வலதும் அலைந்தன. பிருஷ்டம் குழைந்தது என்று நான் எழுதுவதேயில்லை. அவள் மிக அழகாக இருந்தாள் என்பதை எழுதுவதில் வாசகனுக்கு என்ன வந்து சேரும் என்ற பெரும் கேள்வி எனக்கு உண்டு. அவள் எப்படி அழகாக இருந்தாள் என்று விவரிக்க அது கோரமாகி விடக்கூடும். திரௌபதியை ஒவ்வொரு வாசகனும் தனித்தனியாக மனதிற்குள் படம் வரைந்துகொள்ள வேண்டும். எங்கோ பார்த்த படமும் இதற்கு உதவி செய்யலாம். அர்ஜுனன் அழகை, பீமனின் உடற்கட்டை வர்ணிக்கவே முடியாது. சித்திரத்தில் காட்டவும் இயலாது.

    மகாபாரதம் என்ன சொல்கிறது. யாருக்கு என்ன நோக்கம். இந்த மிகப்பெரிய யுத்தம் நடப்பதற்கு என்ன காரணம் என்கிற அலசல்தான் இந்த இதிகாசத்தின் முக்கிய விஷயங்கள் என்று எனக்குப்பட்டது. அதை நிறைவேற்றியிருக்கிறேன். அடுத்த பாகங்கள் எழுதுவதற்கு என் மனம் தயாராக இருக்கிறது. இந்த முதல் பாகம் எழுதியதும் மிகப்பெரிய ஆனந்தம் என்னுள் குடிகொண்டது. வழக்கம்போல் அல்லாது இந்த முறை என்னை நானே பாராட்டிக்கொண்டேன். நீங்கள் பாராட்டுவீர்கள் என்று நிச்சயம் நம்புகிறேன்.

    தர்மத்தை சொல்ல இன்றைய நிலையில் இதிகாசங்கள்தான் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. வேத வியாக்கியானங்கள் மனதில் தைக்க, உணர முடியா கனமாக போய்விட்டன. குழைத்து கொடுத்த இதிகாசம் ஓரளவு ஜீரணம் செய்ய முடிகிறது. இராமாயணமும், மகாபாரதமும் ஒவ்வொரு இந்தியனும் நிச்சயம் படிக்க வேண்டியவை. இந்த காப்பியங்கள் எல்லா இடத்து மக்களின் நல்லது, கெட்டதுகளை வெகு துல்லியமாக காட்டுகிறது. ஏமாற்றுபவரும், பொய் சொல்பவரும், சத்தியம் தவறாதவரும், தான தர்மம் செய்பவரும், எல்லா இடத்திலும், எல்லா வகுப்பிலும் இருக்கின்றார்கள். இந்த இதிகாசங்கள் மனிதர்களை மனிதர்களாக பார்க்கிறது. நமக்கு பார்க்க கற்றுக்கொடுக்கிறது.

    இதை எழுத உதவி செய்த என் இரண்டு மனைவியருக்கும் என் நன்றி. கமலாவும், சாந்தாவும் இல்லாமல் என் வாழ்க்கை சுகமாக இருக்கவே இருக்காது. அவர்கள் என்னை மிக கவனமாக பார்த்துக்கொள்கிறார்கள். என் உதவியாளர் பாக்கியலக்ஷ்மி சேகர் தன் கடும் உழைப்பை என் எழுத்துப்பணிக்கு மனம் உவந்து தருகிறார். நான் அவருக்கு கடன்பட்டிருக்கிறேன். பல ஜென்மங்களுக்கு அதை நான் திருப்பித் தரவேண்டியிருக்கும். இந்த இதிகாசத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிழை திருத்தம் செய்கின்ற எனது வாசகர் நண்பர் ஹரிஹரனுக்கு என் நமஸ்காரம். என்னை கௌரவப்படுத்திக் கொண்டிருக்கும் மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கத்திற்கு என் நமஸ்காரம்.

    இதை எழுத வேண்டும் என்று எனக்கு கட்டளையிட்டு அதற்குண்டான வசதிகளை சூட்சமாக எனக்கு செய்து கொடுக்கும் எனது சத்குரு பகவான் யோகி ராம்சுரத்குமார் அவர்களுக்கு என் நமஸ்காரம். அந்த திருவண்ணாமலை மகான் இல்லையெனில் என் வாழ்வு இத்தனை உயர்வாக இருந்திருக்காது. உள்ளும் புறமும் என்னை பலப்படுத்தி சமுதாயத்தில் ஒரு கம்பீரமான இடத்தை அவர் கொடுத்திருக்கிறார்.

    இந்த இதிகாசம் குறித்து பல்வேறு முறை, பல்வேறு சமயங்களில் என்னிடம் விரிவாக பேசியிருக்கிறார். இப்பேர்பட்ட காப்பியங்கள் இருந்தும் நாட்டில் தர்மம் குறைந்து இருக்கிறதே இதற்கு என்ன காரணம். இதை படிக்காததா, அல்லது படித்தும் புரிந்துகொள்ளாததா என்று நான் வினவ, ஏதோ கொஞ்சம் தர்மம் இருக்கிறதல்லவா, எங்கோ நல்லவர்கள் வாழ்கிறார்களல்லவா, எங்கோ தான தர்மங்கள் நடக்கின்றன அல்லவா, எங்கோ தீயவர்களை விரட்டி நல்லவர்கள் நிமிர்ந்து நிற்கிறார்கள் அல்லவா, எங்கோ கோவில்களும், பாடசாலைகளும் பாதுகாக்கப்படுகின்றன அல்லவா, அதற்கு இந்த இதிகாசங்கள் காரணமாக இருந்திருக்குமல்லவா. தர்மம் தழைவதும், உயர்வதும் காலத்தின் கோலம். காணாமல் போய்விடுமோ என்ற நேரம் வரும்போது கடவுள் அவதாரம் ஏற்படுகிறது. அதைத்தான் இந்த இதிகாசங்கள் சொல்லுகின்றன. ‘தர்மத்தின் வாழ்வுதனை சூதுகௌவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்’ என்று தமிழ்நாட்டு மகாகவி பாடியிருக்கிறானே அது சத்திய வார்த்தை.

    இந்த உலகம் இரண்டானது. இருட்டு நேரம் அதிகமா, வெளிச்ச நேரம் அதிகமா என்று பார்த்தால், இது மாறிமாறி வந்து கொண்டிருக்கும் என்று புரியவரும். இது இடையறாத போராட்டம் அல்லது இறைவனின் விலை என்று வைத்துக்கொள்ளலாம் என்று பதில் சொன்னார். வாழ்வின் பிரம்மாண்டம் புரிந்தது. நான் தூசிலும் தூசு என்பதை உணர முடிந்தது. வெறுமே வார்த்தையில் சொல்லாது என்னுள் உள்ள உயிர்சக்தியை தூண்டிவிட்டு என்னை காணாமல் அடித்து என்னை யார் என்று காண்பித்து. நான் எந்தவித அடையாளமும் இல்லாதவன் என்பதை உறுதிப்படுத்தினார். அடையாளம் இருக்கும் பொழுதுதான் உரு கிடைக்கிறது. அடையாளம் அழிந்து போவதுதான் தூசிலும் தூசான விஷயம். நான் இருக்கிறேன். ஐ எக்ஸிஸ்ட் என்பதே மிஞ்சுகிறது. இதுவும் காணாமல் போகும் என்பதும் தெரிகிறது.

    மகத்தான ஒரு குருவின் அண்மையை மன நெருக்கத்தை இந்த ஜென்மத்தில் அடைந்தது என் மூத்தோர் புண்ணியம். என் தாயார் ப.சு. சுலோச்சனாவின் ஆசி. படிப்பில் மிகச்சுமாராக இருந்த என்னைக்கண்டு அவர் கவலைப்பட்டு என் மேன்மையை விரும்பினார். அது இன்று பலித்திருக்கிறது. அவர் வாழ்நாளின் கடைசி காலத்தில் என் மிகச்சிறந்த வாசகியாக அவர் இருந்தார். மறைந்த என் தாயாருக்கு என் நமஸ்காரம். அவர் ஆன்மா குளிரும்.

    இதிகாசப் புராணங்களை தாம் தோளில் சுமந்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு போகவேண்டும். இது நம் வாழ்நாள் கடமை. இதை மறுத்தவருக்கு வாழ்க்கை புரியவில்லை என்பதே அர்த்தம். இந்த முதல் பாகம் தொடர்ந்து மற்ற பாகங்களையும் வேகமாக கொடுப்பதற்கு முயற்சி செய்வேன். குரு காப்பார். நமஸ்காரம்.

    மயிலை

    23.5.2016

    என்றென்றும் அன்புடன்,

    பாலகுமாரன்

    1

    ‘உங்களுக்கு நான் ஒரு கதை சொல்லட்டுமா.’ பாரத கண்டத்தின் மிகச்சிறந்த காவியம் இப்படித்தான் துவங்குகிறது. உங்களுக்கு நான் ஒரு கதை சொல்லட்டுமா?

    சூதர் என்ற முனிவர், நைமிசாரன்யம் என்ற இடத்தில் சௌனகர் என்ற ரிஷி மிகப்பெரிய யாகம் செய்து கொண்டிருந்தபோது, அன்றைய யாகத்தை முடித்துவிட்டு மற்ற எல்லா ரிஷிகளும் ஓய்வாக அமர்ந்திருந்தபோது அவர்களுக்கு நடுவே வந்து நின்று பேச ஆரம்பித்தார். உங்களுக்கு நான் ஒரு கதை சொல்லட்டுமா.

    பரதகண்டம் கதை சொல்லிகளின் உலகம். தர்மத்தை அழுத்தமான வாக்கியங்களாக சொல்லியிருப்பினும் வேத விஷயமாக போற்றியிருப்பினும் எல்லோருக்கும் மனதில் பதியும் வண்ணம் அந்த தர்மத்தை கதைகளின் மூலம் சொன்னார்கள். இதிகாசம் என்றால் எங்கோ என்றோ நடந்தது என்று அர்த்தம். ஆக, இது வெறும் கற்பனை கதையாக இல்லாது ஏதோ ஒரு காலத்தில் எங்கோ சில மனிதர்களுடைய நடவடிக்கையால் ஏற்பட்ட விஷயங்கள் என்பதால் செய்திகள் தெள்ளத்தெளிவாக மனதில் பதிகின்றன.

    அந்த முனிவரை ரிஷிகள் வரவேற்று நல்ல ஆசனம் கொடுத்து, சௌகரியமாக உட்காரவைத்து, எங்கிருந்து வருகிறீர்கள். என்ன கதை சொல்லப்போகிறீர்கள் என்று வினவினார்கள்.

    நான் குரு வம்சத்து அரசனான ஜனமேஜயன் நடத்திய சர்ப யாகத்திலிருந்து வருகிறேன். அங்கிருந்து பல இடங்கள் போய்விட்டு இப்பொழுது இங்கு யாகம் நடப்பதை கேள்விப்பட்டு இங்கு வந்திருக்கிறேன். நான் உங்களுக்கு மகான்களின் கதைகள் பற்றி சொல்லட்டுமா அல்லது மகாபாரதத்தைப் பற்றி சொல்லட்டுமா என்று வினவினார்.

    வியாஸரால் எழுதப்பட்டதும், நல்ல தர்ம நெறிகளை உள்ளடக்கியதும், வேத சம்மந்தம் உள்ளதுமான, சரித்திரத்தில் இடம்பெற்றதுமான மகாபாரதக் கதையை கேட்க விரும்புகின்றோம். ஜனமேஜயன் சர்ப யாகம் நடத்தியதாக கூறினீர்கள். அது என்ன விஷயம் என்று ரிஷிகள் ஆவலாகக் கேட்பார்கள்.

    குரு வம்சத்து அரசனாகிய ஜனமேஜயன் மிகப்பெரிய சர்ப யாகம் நடத்தினான். அந்த இடத்தில் வைசம்பாயனர் என்கிற ஒரு ரிஷி ஜனமேஜயனுக்கு மகாபாரதக்கதையை சொன்னார். நான் அருகேயிருந்து கேட்டதால் அதை உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன்.

    வியாஸர் மகாபாரதத்தை எழுதினார். அவர் தன்னுடைய மகனான சுகபிரம்மரிஷிக்கு உபதேசித்தார். மற்ற சீடர்களுக்கும் சொன்னார். வியாஸருடைய சீடர்களில் ஒருவரான வைசம்பாயனர் என்பவர்தான் இந்த கதையை ஜனமேஜயனுக்கு எடுத்துரைத்தார்.

    அதென்ன சர்ப யாகம் ரிஷிகள் ஆவலோடு கேட்டார்கள்.

    ஜனமேஜயனுடைய தகப்பன் பரீஷித். பரீஷித் அபிமன்யுவின் பிள்ளை. இளம்பிராயத்தில் பரீஷித் இறந்துபோனதால் குழந்தையாக இருந்த ஜனமேஜயனை அரசனாக்கினார்கள். தன் தகப்பனைப்பற்றிய அதிக விவரங்கள் தெரியாது ஜனமேஜயன் ஆண்டு வந்தான். அப்போது உத்தங்கர் என்கிற முனிவர் ஜனமேஜயனிடம் வந்து, எல்லாம் வல்ல அரசனாகிய நீ ஏன் இன்னும் யாகம் செய்யாமல் இருக்கிறாய். உன் தந்தை மிக அநியாயமாக தட்சன் என்கிற பாம்புகளின் அரசனால் கடிக்கப்பட்டு உயிர் துறந்ததை உனக்கு எவரும் சொல்லவில்லையா? எந்த பாவமும் அறியாத உன் தந்தை விபரீதமாக மரணம் அடைந்ததை யாரும் உனக்கு விளக்கவில்லையா? தட்சனை கொல்வதற்காக நீ யாகம் செய்ய வேண்டாமா? எனவே உடனடியாக யாகம் செய் என்று கோபத்தோடு கண்களில் நீரோடு கூறினார்.

    உத்தமமான அந்த முனிவரை பார்த்து ஜனமேஜயன் திகைத்தான். தன் மந்திரிகளிடம் தன் தந்தையைப் பற்றி விசாரித்தான்.

    உத்தங்கர் சொல்வது உண்மை. உன் தந்தை மிகச்சிறிய ஒரு குற்றத்திற்காக தட்சன் என்ற பாம்பு கடித்து இறந்தார். நடந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. எல்லா அரசர்கள் செய்வதுபோல உன் தந்தையும் காட்டிற்கு வேட்டையாடப் போக, அங்கு ஒரு மானைக்கண்டு வளைத்து அம்பால் அடிக்க, அம்பு தைத்த மான் வேகமாக ஓடியது. காணாமல் போனது. மானைத்தேடி இங்கும் அங்கும் ஓடிய அரசன் களைப்புற்றான். காட்டுப்பசுக்களின் கன்றுகளின் வாய் நுரையிலுள்ள பாலை அருந்தி சோர்வு நீக்கிக்கொண்டான். பசுக்கள் நிறைந்த ஒரு பர்ணசாலைக்கு அருகே போனான். அங்கு சமிகர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். அவருக்கு அருகே போய் நான் அடித்த மான் இந்த பக்கம் வந்ததா என்று பலமுறை கேட்டார். ஆனால் சமிகர் எந்த பதிலும் சொல்லாது இருந்தார். அதனால் எரிச்சலுற்ற அந்த மன்னன் அருகில் இருந்த செத்த பாம்பை எடுத்து அவர் கழுத்தில் போட்டுவிட்டு போனான்.

    சமிகருடைய மகன் சிருங்கி நல்ல தபஸ்வி. கூர்ந்த மதியாளர். கடுமையான வார்த்தைகளுடையவர். அவர் பர்ணசாலைக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது அவருடைய சினேகிதன் ஒருவன் அவரைப்பார்த்து வாய்விட்டுச் சிரித்தான். சிரித்ததன் காரணத்தை கேட்க, உன் தந்தை பிணத்தை தூக்கிக் கொண்டிருக்கிறார். நீ மிகப்பெரிய அறிவாளி என்றும் கோபக்காரன் என்றும் அலட்டிக் கொண்டிருக்கிறாய். ஆனால் உன் தந்தையோ பிணந்தூக்கி. இப்பேர்பட்ட தந்தைக்கு பிறந்தவனுக்கு கோபம் என்ன வேண்டிக்கிடக்கிறது என்று கேலி பேசினான். சிருங்கி நடந்ததைச் சொல் என்று அதட்ட, அவருடைய நண்பன், பரீஷித்து என்ற ராஜா மானை அடித்து அதை தேடி வந்து அதைப்பற்றி உன் தந்தையிடம் விசாரித்து அவர் பதில் சொல்லாமல் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தபடியால் அவர் கழுத்தில் செத்த பாம்பை போட்டுவிட்டு போனான். பதில் சொல்லாத ரிஷியும் செத்த பாம்பும் ஒன்றே என்று காட்டிவிட்டு போனான் என்று நடந்ததை விவரித்தான்.

    சிருங்கி கோபம்கொண்டார்.

    நிஷ்டையில் உள்ளவர் பதில் சொல்லவில்லை என்றால் கழுத்தில் இறந்த பாம்பை போட்டுவிடுவதா? என்ன திமிர் அந்த க்ஷத்திரியனுக்கு என்று கோபத்தால் கால் உதைத்தார். முஷ்டி மடக்கினார், பல் கடித்தார். தந்தை அவ்விதமே அசையாமல் இருப்பதைக்கண்டு கண்களில் நீர் பொங்கியது. உட்கார்ந்து ஆசமனம் செய்தார். மனம் குவித்தார். எவனொருவன் இந்த படுபாதகச் செயலைச் செய்தானோ அவன் இன்றிலிருந்து ஏழு நாட்களுக்குள் மிகக்கொடிய விஷமுள்ள பிழைக்கவே முடியாத சக்தியுள்ள தட்சன் என்கிற பாம்பால் கொத்தப்பட்டு அகால மரணம் அடைவான் என்று சபித்தார்.

    கண் விழித்த சமிகர் தன்னுடைய மகன் சிருங்கி செய்த கடுமையான சாபத்தைக் கேட்டு மனம் வருத்தப்பட்டார். இப்பொழுது என்ன நடந்துவிட்டது என்று நீ இவ்வளவு கோபப்படுகிறாய். ஒருவன் கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்றால் அவன் ஆத்திரப்படுவது இயல்புதானே. அதுவும் சத்திரியன் போன்றவர்கள் உடனடியாக கோபத்தில் இறங்குவது இயல்பு தானே. சத்ரியனை தண்டித்துவிட்டால் நீ உத்தமன் ஆகிவிடுவாயா? ஒரு தேசத்திற்கு சத்ரியன் எவ்வளவு முக்கியம் என்பதை நீ உணரவில்லையா? சத்ரியன் வலிமையுள்ளவனாக இருந்தால் தானே எதிரிகளிடமிருந்து மக்களை காப்பாற்ற முடியும். மக்கள் பயமின்றி சௌகரியமாக இருந்தால் தானே விவசாயம் போன்ற நல்ல விஷயங்கள் நடைபெறும். அவைகள் சிறந்த முறையில் நடைபெற்றால்தானே உணவு தட்டுப்பாடு இல்லாது உயர்ந்த நாகரீகம் வரும். அப்படி இருந்தால்தானே மகான்களும், ரிஷிகளும் கொண்டாடப்படுவார்கள். அப்பொழுதுதானே தர்மம் நிலைக்கும். எனவே தர்மத்தின் காவலன் அரசன் என்பதை நீ புரிந்துகொள்ளவில்லை. அவனை சபிப்பதின் மூலம் தர்மத்திற்கு எதிரான ஒரு விஷயத்தை நீ செய்துவிட்டாய். இப்படிப்பட்ட கோபங்கள் யாருக்கும் உபயோகம் இல்லாதவை. எனவே நீ காடுகளுக்குள் போய் கிழங்குகளையும், காய்களையும் உண்டு உன் கோபத்தை குறைத்துக்கொள் என்று அறிவுறுத்தினார். பரீட்சித்திற்கு இந்த சாபம் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. அவன் பயந்தான்.

    மிக உயரமான ஒரு தூண் எழுப்பி அதன் மீது ஏழு மாளிகைகள் கட்டி ஏழாவது மாளிகையில் அவன் பாம்பிற்கு பயந்து குடியிருந்தான். சுற்றிலும் முள்வேலிகள் போடப்பட்டிருந்தன. வலிமை வாய்ந்த வீரர்கள் காவல் இருந்தார்கள். விஷத்தை இறக்கக்கூடிய வைத்தியர்களும், மந்திரவாதிகளும் உடன் இருந்தார்கள். மந்திரிகளும், அந்தணர்களும், விவரம் அறிந்த முனிவர்களும் அந்த வளையத்திற்குள் இருந்தார்கள்.

    இதற்கிடையே காசியபர் என்ற பண்டிதருக்கு அரசருக்கு ஏற்படும் வேதனை குறித்த செய்தி வந்தது. எந்தவித விஷத்தையும் முறிக்கக்கூடிய வல்லமை பெற்ற அவர் அரசனை நோக்கி நடந்தார். அவரிடம் தன் பலத்தைச் சொல்லி, வேண்டுமென்ற திரவியம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருந்தார். தட்சன் ஒரு அந்தணர் வடிவத்தில் அவரை வழிமறித்தான்.

    நீர் யார்? எங்கு போகிறீர்? என்று கேட்க, அவர் விவரம் சொன்னார். தட்சன் என்ற நாகத்தால் அரசன் மரணமடையப் போகும் சாபத்தைச் சொன்னார். தட்சன் சுய உருவம் எடுத்தான். நான்தான் அந்த தட்சன். உம்மால் என்னுடைய விஷத்தை இறக்க முடியாது. அதோ அங்கு ஒரு உயர்ந்த ஆலமரம். இதை நான் விஷமேற்றி தீய்த்து விடுவேன். உம்மால் அதை துளிர்க்க வைக்க முடியுமா? என்று தட்சன் கேட்க, முடியும் என்று காசியபர் பதில் சொன்னார்.

    ஆலமரத்தில் தட்சனுடைய விஷம் இறக்கப்பட்டது. மரம் விஷம் தாங்காமல் பொசுங்கி சாம்பலாயிற்று. அந்த சாம்பலை ஒன்று திரட்டிய காசியபர் மந்திரங்கள் சொல்லி புடம் போட்டு அதை உயிர்ப்பித்தார். மரம் சிறு செடியாகி, மெல்ல வளர்ந்து கிளைகள் பரப்பி இலைகள் விட்டு பெரும் மரமாக மாறிற்று. பழைய நிலைக்கு வந்தது. தட்சன் திகைத்தான்.

    பரீஷித்தின் ஆயுள் முடியப்போகிறது அதை யாராலும் நீடித்து வைக்க முடியாது. பரீஷித்து தருகின்ற திரவியத்தை நான் தருகிறேன். திரும்ப உன்னுடைய இடத்திற்கு போய்விடும் என்று சொல்லி, காசியபரிடம் திரவியம் கொடுத்து விலகியிருக்க தட்சன் சொன்னான். பரீட்ஷித்தின் ஆயுள் முடியப்போவதை ஞான திருஷ்டியால் அறிந்த காசியபர் திரவியம் வாங்கிக்கொண்டு வெளியேறினார். பரீட்ஷித்தின் மரணம் உறுதியாயிற்று.

    நாகங்களை அந்தணர்கள் உருவத்தில் அனுப்பி, உள்ளே காவல் இருப்பவர்களுக்கு பழங்கள் கொடுத்தனுப்புவதற்காக தட்சன் ஏற்பாடு செய்தான். பழங்கள் கூடை கூடையாக உள்ளே போயின. அதில் ஒரு பழத்தில் தட்சன் அமர்ந்துகொண்டான். சிறு புழுவாக நெளிந்தான். பழங்கள் வினியோகிக்கப்பட்டன. விதிவசத்தால் புழுவாக இருந்த தட்சன் இருந்த பழம் பரீட்ஷித்திடம் போயிற்று. பரீட்ஷித்து பழத்தை பிளந்தார். உள்ளேயிருந்து புழு வெளியே வந்தது. அட பழத்திற்குள் புழு இருக்கிறதே. இது ருசியாக இருக்குமே. ஆனால் இந்த புழுதான் தட்சன். இன்று ஏழாவது நாள். அந்தி சாயப்போகிறது. தட்சனை இன்னும் காணோம். எனவே இந்த புழுவையே தட்சன் என்று நினைத்து என் மீது விட்டுக்கொள்கிறேன், என்று விளையாட்டாகச் சொல்லி, புழுவை எடுத்து தன் நெஞ்சில் விட்டுக்கொண்டான். தட்சன் உடனே சுயரூபம் எடுத்து பரீட்ஷித்தின் நெற்றியில் கொட்டினான். பரீட்ஷித்து அந்த கணமே இறந்து போனான்.

    ஜனமேஜயனுக்கு இந்தக்கதை சொல்லப்பட்டது. ஜனமேஜயன் துக்கப்பட்டான். கண்ணீர் பெருக்கினான். கோபம் அடைந்தான். உத்தங்கர் அவன் கோபத்தைத் தூண்டிவிட்டார். தட்சன் முதற்கொண்டு சகல சர்பத்தையும் நீ பொசுக்கி விடு. பூமியிலிருந்து இந்த பாம்புகள் மரணமடையட்டும். பூமி சௌக்கியமடையட்டும் என்று அவனுக்கு அறிவுரைச் சொன்னார். அந்தணர்களையும், முனிவர்களையும் அழைத்து மிகப்பெரிய சர்ப யாகத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார்.

    யாகத்திற்கு உண்டான குண்டங்கள் அமைக்கப்பட்டன. மிகப்பெரிய யாகசாலை உயரமாக நிறுவப்பட்டது. அந்த யாக சாலையை சுற்றி வந்த ஸ்தபதியில் ஒருவன் அதை கூர்ந்து கவனித்துவிட்டு, இந்த யாகம் பூர்த்தி அடையாது. இந்த கட்டமைப்பில் ஒரு குறை இருக்கிறது. இது ஒரு அந்தணரால் நிறுத்தப்படும் என்று தெரிவித்தான். ஆனால் காலம் கடந்துவிட்டது. வேறு வழியில்லை. யாகசாலையை திருத்தி அமைக்க முடியாது. எனவே. குறிப்பிட்ட நேரத்தில் யாகம் ஆரம்பிக்கும்படி ஜனமேஜயன் கட்ளையிட்டான்.

    மகாபாரதம் வெறும் கதையல்ல. அது நீதி சாஸ்திரம். எப்பேர்பட்ட சக்தியுள்ள முனிவராக இருந்தாலும் ஒரு அரசனுக்கு எதிராக இயங்கக்கூடாது என்பதை மிகத்தெளிவாக சமிகர் மூலம் சொல்லப்பட்டது. நீ எவ்வளவு கவனமாக இருந்தாலும் விதி உனக்கு முடிவு தருமாயின் எப்படியாவது உன் முடிவு வந்துசேரும். ஏனெனில் விதி வலியது என்று நிலைநிறுத்தப்பட்டது.

    அரசனுக்கு பொறுமை முக்கியம். மௌனமாகவும், அமைதியாகவும் இருந்த ஒரு முனிவரை வலிவுள்ள ஒரு அரசன் அவமானப்படுத்தியதால் மோசமான ஒரு மரணத்தை அடைந்தான் என்று பல்வேறு விதமான விஷயங்களை மகாபாரதம் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் மகாபாரதம் தர்மத்தைச் சொல்கிறது.

    மந்திரங்கள் சொல்லச்சொல்ல ஜனமேஜயன் யாகத்தில் பாம்புகள் ஊர்ந்து வந்து தீயில் விழுந்து கருகின. இடையறாது நெய் வார்க்கப்பட்டு பெரும் தழல் எரிக்கப்பட்டது. தட்சன் வர வேண்டும் என்று மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டது. தட்சன் பயந்துபோய் இந்திரனை சரணடைந்தான். இந்திரன் தட்சனை அழைத்து அடைக்கலம் கொடுத்தான். இந்திரன் அடைக்கலம் கொடுத்தது தெரியவந்தது. இந்திரனோடு வந்து தட்சன் விழட்டும் என்று மந்திரங்கள் ஓதப்பட்டன. இந்திரன் தட்சனை விலக்கினான். தட்சன் தலைகீழாக யாகத்தீயை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

    அப்போது ஆஸ்தீகர் என்ற முனிவர் அங்கு வந்தார். ஜனமேஜயனிடம் கைகூப்பி தனக்கு வேண்டுவன தரவேண்டும் என்று வினவினார். நிச்சயம் தருகிறேன் என்று வாக்கு கொடுத்த ஜனமேஜயன் தொடர்ந்து யாகத்தை நடத்தும்படி சொன்னான். இன்னும் விரைவாக தட்சன் யாகத்தீயை நோக்கி வந்து கொண்டிருந்தான். யாகம் முடியப்போகிறது என்பதால் ஆஸ்தீகர் கேட்ட தட்சணையை கொடுக்கும்படி அந்தணர்கள் அரசனுக்குச் சொன்னார்கள். என்ன வேண்டும் என்று ஜனமேஜயன் கேட்டபோது, இந்த யாகத்தை உடனடியாக நிறுத்தும்படி ஆஸ்தீகர் சொன்னார்.

    தன்னுடைய தாய் நாககன்னியின் விருப்பத்திற்கேற்ப மீதியுள்ள சர்பங்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்விதம் கேட்டார். ஜனமேஜயன் வேறு ஏதேனும் கேளுங்கள் என்று வற்புறுத்த, இதுவே இதுவே வேண்டும் என்று உறுதியாக நின்றார். ஜனமேஜயன் யாகத்தை நிறுத்தினான். தட்சன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினான். தன்னுடைய வேண்டுகோளுக்கேற்ப ஜனமேஜயன் யாகத்தை நிறுத்தியதால் ஆஸ்தீகர் என்ற ரிஷி அவனுக்கு அஸ்வமேதயாகம் நடத்தித் தர சம்மதித்தார்.

    ஜனமேஜயனுடைய இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மகாபாரதம் அதனுடைய ஆரம்ப கட்டத்தை தொட்டுக் காண்பிக்கிறது. அதாவது Flash Back சொல்கிறது.

    2

    மகாபாரதத்தை பல்வேறு கிளைக்கதைகள் அலங்கரிக்கின்றன. ஒரு விஷயத்திற்கு எதிரொலியாக இன்னொரு விஷயம் நடக்கிறது என்பதைச் சொல்லி, எதனால் இவ்விதம் நடந்தது அப்படி நடக்காதிருக்க என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணங்களையும் நமக்குள் தோற்றுவிக்கிறது. இதையெல்லாம் விட இந்த பரதகண்டத்தில் மிக ஆச்சரியமான மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். விதவிதமான வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறார்கள் என்கிற திகைப்பையும் நமக்கு கொடுக்கிறது. பரத கண்டத்தின் கலாச்சாரம் மிக நீண்டது. இவையெல்லாம் விவாதத்திற்கான விஷயங்களா என்று யோசிப்பதைவிட, இப்படி நடந்தது என்பதாகவே சொல்லப்படுகிறது.

    ஜனத்காருர் என்கிற முனிவர் தன்னுடைய உடம்பின் சக்தியை ஒன்று திரட்டி அதை உச்சிக்கு ஏற்றி மனிதருள் மிகச்சிறந்த ஒரு நிலையை அடைய வேண்டும் என்று கடுமையான விரதங்கள் மேற்கொண்டிருந்தார். கிடைத்ததை உண்டார். எந்த இடத்தில் இரவு வந்துவிட்டதோ, எந்த இடத்தில் மேற்கொண்டு பயணம் செய்ய முடியாதோ அது என்ன இடமாக இருந்தாலும் தங்கினார். வீடோ, மாளிகையோ, கிராமமோ, நகரமோ, அடர்ந்த வனமோ, பாலையோ, ஆற்றங்கரையோ, மலை உச்சியோ எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி கவலையில்லாது இரவு நேரத்தை அவரால் அமைதியாக கழிக்க முடிந்தது. விடிந்ததும் பயணம் தொடர்ந்தது. எந்த இலக்கும் இன்றி அலைந்தார். எந்த தொடர்பும் இன்றி சுற்றி வந்தார்.

    ஒரு மலை உச்சியிலிருந்து கீழே இறங்கும்போது தீனமான குரல்கள் கேட்டன. என்ன என்று அந்த சரிவில் எட்டிப்பார்த்தபோது ஒரு மிகப்பெரிய பள்ளத்தாக்கில் விளாமிச்சை வேரை பிடித்தபடி சிலர் தொங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த வேரை அதன் ருசிக்காக ஒரு எலி தன் கூரிய பற்களால் அரித்துக்கொண்டிருந்தது. எந்த நேரம் வேண்டுமானாலும் அவர்கள் அதள பாதாளத்தில் விழுந்து விடுவார்கள் என்று தோன்றியது. நல்லவரான ஜனத்காருர் பதறினார்.

    யார் நீங்கள்? எதற்காக இப்படி ஒரு வேரை பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த வேரும் ஒரு எலியினால் அரிக்கப்பட்டிருக்கிறதே. எப்பொழுது வேண்டுமானாலும் அதள பாதாளத்தில் விழுந்து விடுவீர்களே. மிகவும் இருட்டாக அல்லவா இருக்கிறது. உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும். இது ஏதேனும் புதியவகை தவமா? அல்லது விதியா? என்னுடைய தவத்தின் பாதியை உங்களுக்கு தரட்டுமா. அல்லது முழுவதையும் கொடுத்துவிடட்டுமா. உங்களது நிலைமையை பார்க்க எனக்கு பதறுகிறது. பயமாக இருக்கிறது. நான் கவலையோடு இதை உங்களிடம் கேட்கிறேன். தயவுசெய்து சொல்லுங்கள். ஏன் இது? யார் நீங்கள்?

    ஐயா, நாங்கள் பித்ருக்கள். அழகான வார்த்தை சொல்லுகின்ற உத்தமரே, நாங்கள் வம்சவிருத்தி இல்லாத பித்ருக்கள். இந்த ஒரே ஒரு வேர்தான் எங்களுக்கு பிடிமானம். ஒரே ஒரு மகன்தான் எங்கள் வம்சத்தை சேர்ந்த ஒரே ஒரு மனிதன்தான் எங்கள் பிடிமானம். அவனுடைய ஆயுளும் மெல்லமெல்ல காலத்தால் அரித்துக்கொண்டிருக்கிறது. அதுதான் அந்த எலி. அந்த மனிதன் தான் இந்த வேர். காலம் அவனை அழித்து சாய்த்துவிட நாங்கள் இந்த பெரிய நரக குழியில் விழுந்து விடுவோம். எங்களுக்கு நீர் வார்க்க யாரும் இல்லாது மிக மோசமான நிலையை அடைவோம்.

    இதை தடுக்க என்ன வழி.

    இதோ இந்த விளாமிச்சை வேருக்கு சொந்தக்காரரான எங்கள் சந்ததியை கண்டுபிடித்து அவரை திருமணம் செய்துகொள்ளச் சொன்னால் நாங்கள் மேலேறுவோம். இல்லையெனில் நரகம்தான்.

    அப்படியா? யார் அவர்? இவ்வளவு தீனமான நிலையில் உங்களை விட்டுவிட்டு போன மனிதன் யார்? எனக்கு சொல்லுங்கள். அவரை நான் தேடி கண்டுபிடித்து திருமணம் செய்விக்கிறேன்.

    அவர் பெயர் ஜனத்காருர். மிக சந்துஷ்டியான மனிதன். கடுமையான விரதங்கள் உள்ளவன். உத்தமமானவன். ஞானவான். ஆனால் அவர் திருமணம் செய்துகொள்ளாமல் போவதால் நீர் வார்க்க வழியில்லாது எங்களுடைய பித்ரு வாழ்க்கை மோசமான இடத்திற்கு போகப்போகிறது. சுபீட்சமான இடத்தை நாங்கள் தொடப்போவதேயில்லை. முடிந்தால் அந்த ஜனத்காருவை சந்தித்து அவனை திருமணம் செய்துகொள்ளச் சொல்லுங்கள். சந்ததியை வளர்க்கச் சொல்லுங்கள். இது போதும் எங்களுக்கு.

    ஜனத்காருர் திகைத்துப்போனார். பித்ருக்களுக்கும் வேதனை உண்டு என்பது அதிர்ச்சியாக இருந்தது.

    "ஐயன்மீர் உங்களுக்கு என் நமஸ்காரம். என் பித்ருக்களே உங்களை நான் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குகிறேன். நான்தான் அந்த ஜனத்காருர். நான் நைஷ்டிக பிரம்மச்சாரியாக இருந்து என் ரேதஸை உச்சிக்கு ஏற்றி மிக உன்னதமான நிலையை அடைய வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்ந்து வருகிறேன். ஆனால் உங்கள் நிலைமை இப்படி இருக்கும் என்று தெரிகிறபோது என் விரதம் முக்கியமில்லை என்று தோன்றுகிறது. உங்களை கரையேற்றுவது தான் உத்தமம் என்றுபடுகிறது. உங்களை அழவைத்துவிட்டு நான் மட்டும் மனிதனில் சிறந்தவனாக வேண்டும் என்று ஆசைப்படுவது மிகப்பெரிய தவறு.

    பித்ருக்களே, வெகு நிச்சயமாக என் பிரம்மச்சாரிய விரதத்தை நீக்கி நான் திருமணம் செய்துகொள்வேன். ஆனால் தயை செய்யுங்கள். என் பெயர்கொண்ட பெண்ணாக இருக்க வேண்டும். எனக்கு ஏற்ற துணையாக இருக்க வேண்டும். எனக்கு எதிராக பேசக்கூடாது. நான் எது செய்கிறேனோ அதை மறிக்கக்கூடாது. என்னை என் சுபாவத்தோடு விட்டுவிட வேண்டுமே தவிர எனக்கு போதனை செய்யக்கூடாது. இப்படிப்பட்ட பெண்ணாக இருந்தால் சொல்லுங்கள். நான் திருமணம் செய்து வம்சத்தை விருத்தி செய்கிறேன்" என்று சொன்னார்.

    அவர்கள் விதியின் மீது பாரத்தை போட்டு மௌனமாக இருந்தார்கள்.

    ஜனத்காருர் அந்த இடம் விட்டு நீங்கினார். ஆனால் உள்ளுக்குள் அவரின் பித்ருக்களின் நிலைமை அவரை தொந்தரவு செய்துகொண்டே இருந்தது. வயதானதால் அவருக்கு பெண் கொடுக்க யாரும் முன் வரவில்லை. ஒரு நாள் நடு வனத்தில் அவர் நின்று வாய்விட்டு புலம்பினார்.

    மரங்களே, செடி கொடிகளே, வனத்தின் தெய்வங்களே, உங்கள் எல்லோரையும் கைகூப்பி வேண்டி கேட்டுக்கொள்கிறேன். எனக்கு ஏற்ற கன்னிகையை நீங்கள் தயவுசெய்து தாருங்கள். என் வம்சத்தை விருத்தி செய்ய வேண்டும். எனக்கென்று சுகத்தை நாடாது வம்ச விருத்திக்கென்று நான் கேட்கும் லட்சணங்களையுடைய பெண்ணை எனக்குத் தரவேண்டும். தயவுசெய்யுங்கள் என்று கைகூப்பி கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார். அந்த நல்ல மனிதருக்கு தன் விரதத்தை காட்டிலும், தான் மேன்மை அடைவதை காட்டிலும் தவித்துக்கொண்டிருந்த தன்னுடைய பித்ருக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கமே பெரிதாக இருந்தது.

    அவர் குரலை கேட்டு வாசுகி என்ற நாகராஜன் அங்கு வந்தான். அவரை வணங்கினான்.

    தவத்தில் சிறந்த முனிவரே, உங்களுக்கு என் வம்சத்திலிருந்து நான் பெண் கொடுக்கத்தயாராக இருக்கிறேன். என்னுடைய சகோதரியின் பெயர் ஜரத்காரூ. அவள் மிகச்சிறந்த குணவதி, அமைதியானவள், பண்பானவள், அறிவானவள். உங்களைப் போன்ற ஞானவான் எங்களோடு சம்பந்தம் வைத்துக்கொள்வது எங்கள் வம்சத்தை பலப்படுத்தும். ஆபத்திலிருந்து காப்பாற்றும். எனவே, எங்கள் சகோதரி ஜரத்காரூவை ஏற்றுக்கொண்டு உங்கள் பிரம்மச்சாரிய விரதத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனால் உங்கள் பித்ருக்களும் பயனடைவார்கள். என் குலமும் பலமடையும் என்று பணிவாகச் சொன்னான்.

    நாகராஜனே உன்னுடைய சகோதரியை நான் கஷ்டப்பட்டு உழைத்து போஷிக்க மாட்டேன். அவளை காப்பாற்ற மாட்டேன். எனக்கு எதிராக அவள் பேசினால் அவளை விட்டு நீங்கிவிடுவேன். என்னுடைய சுகத்தை கெடுத்தால் அது எனக்கு கடுங்கோபத்தை கொடுக்கும். நான் என்ன செய்வதென்று எனக்குத் தெரியும். அவளுடைய போதனைகள் தேவையில்லை. எனவே, எந்தவித எதிர்ப்பும் இல்லாது உன்னுடைய சகோதரி எனக்கு வாழ்க்கைப்பட்டால் அவளை திருமணம் செய்துகொள்ள எனக்கு சம்மதம் என்று தன் பக்கத்து நியமங்களைச் சொல்ல,

    ஆஹா, அதற்கென்ன. என் சகோதரியை நான் காப்பாற்றுகிறேன். நான் போற்றுகிறேன். நான் கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் விருப்பம்போல் இருங்கள். உங்களுடைய வாழ்க்கைத்தான் தவ வாழ்க்கை. அதனால்தான் மிகச்சிறந்த ஞானியாக இருக்கிறீர்கள். உங்கள் ஞான வளர்ச்சிக்கு இடையூறாக ஒருநாளும் என் சகோதரி இருக்கமாட்டாள் என்று நான் உத்தரவாதம் தருகிறேன். மிகுந்த வணக்கத்துடன் என் சகோதரியை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன் என்று சொல்லி, ஜரத்காரூ என்ற தன் சகோதரியை அங்கு வரவழைத்து அந்த வனத்திலே அவருக்கு திருமணம் செய்வித்தான்.

    அழகும், அமைதியும், அன்பும், பண்பும் நிறைந்த அந்த நாக கன்னிகையை ஜனத்காருர் மணந்து நல்லபடியாக குடித்தனம் நடத்தினார். காலங்கள் உருண்டன, முனிவருடைய ரேதஸ் அந்த நாககன்னிகையின் வயிற்றில் வந்து நின்றது. அவள் மடியில் தலை வைத்து படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது மாலை நேரம் வர, இனிய குரலில் அந்த நாககன்னிகை அவரை எழுப்பினாள்.

    அன்பரே எழுந்திரும். அஸ்தமனத்திற்கு உண்டான நேரம் வந்துவிட்டது. எழுந்திருந்து ஆசனம் செய்து சந்தியாவந்தனத்தை நடத்துங்கள். நீங்கள் விரதம் பிறழாத பிராமணர். நல்ல குணம் உடையவர். உங்கள் உறக்கத்தினால் இந்த நியமம் தடைபடக்கூடாது. எனவே, மெல்ல கண் விழிப்பீராக என்று அமைதியாக அவர் தூக்கத்தை நிறுத்தினாள். ஜனத்காருர் திடுக்கிட்டு எழுந்தார்.

    நான் உறங்கிக்கொண்டா இருந்தேன். இல்லையே. இது ஒரு நிஷ்டை என்று தெரியாதா. உன் மடியில் தலைவைத்து படுத்ததாலேயே இது உறக்கம் என்ற நினைப்பா. நான் கண்விழிக்காது அஸ்தமனம் முடிந்து விடுமா? அல்லது அஸ்தமனத்திற்கு முன்பு கண்விழிக்க எனக்குத் தெரியாதா? எனக்கு ஏன் போதனை? எனக்கு ஏன் உத்தரவு? நான் இதை செய்யக்கூடாது என்று தெளிவாகச் சொல்லியிருந்தும் இதை செய்திருக்கிறாயே. ஆழ்ந்து எனக்குள்ளே இருந்த தவம் கலைந்ததே. இது மறுபடியும் கோர்ப்பதற்கு எவ்வளவு நாளாகும். என்னுடைய வார்த்தையை நீ மீறிவிட்டாய். நாககன்னிகையே உன்னிடமிருந்து நான் விடைபெறுகிறேன். என்னுடைய வாழ்க்கைக்கு நீ சரியாக வரமாட்டாய் என்று உரத்த குரலில் சொல்ல, அந்த நாககன்னிகை கண்ணீர் சிந்தினாள்.

    எந்த காரியத்திற்காக ஒன்று சேர்ந்தோமோ அது நடைபெறவில்லையே. உங்கள் வம்சம் வளர வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் திருமணம் செய்தீர்கள். உங்கள் குரல் கேட்டுத்தானே என்னுடைய தமையன் என்னை உங்களுக்கு திருமணம் செய்வித்தான். எங்கள் குலமும் பலப்படும் என்றுதானே நான் உங்களை திருமணம் செய்து கொண்டேன். ஞானவானான நீங்கள் இப்படி கோபித்துக்கொண்டு விலகலாமா. இங்கே நல்ல குழந்தை பிறக்காது நான் விலகுவதில் என்ன லாபம் என்று கேட்க.

    நீ கர்ப்பமாயிருக்கிறாய் பெண்ணே. என்னுடைய ரேதஸ் உன்னுடைய உடம்பில் இருக்கிறது. சரியான காலத்தில் நீ ஒரு மகனை பெறுவாய். அவனுக்கு ஆஸ்தீகன் என்று பெயர் வை. பிதா அஸ்தி. அப்பன் இருக்கிறான் என்ற அர்த்தத்தில் ஆஸ்தீகன் என்ற பெயரோடு அவன் துலங்கட்டும் என்று சொல்லி, எந்த பதிலும் எதிர்பார்க்காது அவளை விட்டு பிரிந்தார்.

    ஜரத்காரூ என்ற அந்த நாககன்னிகை தன்னுடைய சகோதரனை அடைய அவன் அவளை மகிழ்ச்சியுடன் வரவேற்றான்.

    நீ கர்ப்பமாய் இருக்கிறாய் என்பதை கேட்க சந்தோஷமாய் இருக்கிறது. நம் குலம் நிச்சயமாக இதனால் நன்மை அடையும். எதற்காகவும் கவலைப்படாதே. உனக்கு எல்லாவிதமாகவும் போஷிக்க நான் இருக்கிறேன். எந்த குறையும் இல்லாது உன்னை காப்பாற்றுவேன். நல்லபடி கர்ப்பத்தை வளர்த்து சரியான காலத்தில் குழந்தையை ஈன்றெடுப்பாய் என்று ஆசீர்வதித்தான்.

    அந்த நாககன்னிகைக்கும், ஜனத்காருருக்கும் பிறந்த குழந்தை தான் ஆஸ்தீகன். அவருடைய வம்சம் அழியக்கூடாது என்றுதான் தட்சனை அந்த யாகத்திலிருந்து காப்பாற்றினார். குறிப்பிட்ட சில பாம்புகள் இறந்தனவே தவிர, பாம்புகள் வம்சம் அற்றுப்போகவில்லை. இன்றுவரை தொடர்கிறது.

    ஆஸ்தீகருடைய கதையை கேட்டால் பாம்பின் பயம் இருக்காது. அவர் பெயரைச் சொன்னால் பாம்பினுடைய தாக்குதல் இருக்காது என்றும் இந்த புராணம் சொல்லுகிறது.

    சரி. யாகத்தை தடுத்து நிறுத்திய ஆஸ்தீகரைப் பற்றிச் சொன்னீர்கள். சூதரே, உத்தங்கர் ஏன் ஜனமேஜயனை தூண்டினார். அவர் பாம்புகள் மீதுகொண்ட கோபத்திற்கு என்ன காரணம். நைமிசாரண்யத்து ரிஷிகள் வினவ, சூதர் உற்சாகத்துடன் சொல்ல ஆரம்பித்தார்.

    தன்னுடைய குருவிற்கு பணிவிடை செய்து நல்ல விஷயங்களை அடைந்த பிறகு குரு அவருக்கு விடை கொடுத்தார். உங்களுக்கு தட்சணையாக நான் என்ன தரவேண்டும் என்று உத்தங்கர் கேட்டபோது அந்த குரு, எனக்கு எதுவும் தேவையில்லை. ஒருவேளை என் மனைவிக்கு தேவைப்படலாம். நீ பலமுறை கேட்டதால் உன்னை அவளிடம் அனுப்புகிறேன். அவளிடம் விசாரித்து அவளுக்கு வேண்டியது கொடு என்று ஆசீர்வதித்தார்.

    குருவின் மனைவி, இங்குள்ள அரசியரிடம் மிக அழகிய குண்டலங்கள் இருப்பதை கவனித்திருக்கிறேன். விரதகாலம் வரப்போகிறது. அந்த விரதத்தை இந்த குண்டலங்கள் அணிந்துகொண்டு வருகின்ற ரிஷிகளுக்கு நான் பரிமாற விரும்புகின்றேன். நீ கேட்டதால் சொல்கிறேன். அந்த குண்டலங்கள் வேண்டும் என்று கேட்டாள். மிகுந்த மகிழ்ச்சியோடு உத்தங்கர் அந்த அரசனிடம் போய் பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு அவன் மனைவியிடம் யாசித்து வந்த குண்டலங்களை பெற்றார். அவைகளை குளக்கரையில் வைத்துவிட்டு குளிக்கச் சென்றபோது தட்சன் என்ற பாம்பு வெகுகாலமாக அந்த குண்டலங்களை விரும்பியதால் அவைகளை சன்னியாசி போல வந்து கவர்ந்துபோனான்.

    யாரோ காவி உடை அணிந்தவர் அதை கவர்ந்துபோனதை கண்டு உத்தங்கர் அவரை தொடர்ந்து போனார். தட்சகன் பாம்பு உருவெடுத்து ஒரு பெரிய புற்றுக்குள் நுழைந்துகொண்டான். கையால் அந்த புற்று மண்ணை தோண்ட முயற்சித்து உத்தங்கர் சோர்ந்து போனார். குறிப்பிட்ட காலத்திற்குள் குண்டலங்களை எப்படி எடுத்து வருவது என்று கவலைப்பட்டார். இந்திரனை துதித்தார். இந்திரன் வந்து நின்றான்.

    என்ன வேண்டும் உங்களுக்கு.

    என்னுடைய குண்டலங்களை தட்சகன் என்ற நாகராஜன் கவர்ந்துகொண்டு போய்விட்டான். என் குருவின் பத்தினிக்கு கொடுக்க வேண்டும். இந்த புற்றுக்குள் அவன் இருக்கிறான். அதைகொண்டு வந்து தரவேண்டும் என்று சொல்ல,

    என் குதிரையின் அபானத்தில் ஊதும் என்று இந்திரன் கட்டளையிட, அவ்விதமே அவர் செய்ய, அந்த குதிரையின் மல துவாரத்திலிருந்து தீ ஜ்வாலை வந்து அந்த புற்றை தகித்தது. தட்சகன் பயந்துபோய் குண்டலங்களை கொடுத்துவிட்டு போனான்.

    குண்டலங்களை எடுத்துக்கொண்டு மிக விரைவாக ஓடி அந்த குறிப்பிட்ட காலத்தின் எல்லை முடிவதற்குள் குரு பத்தினியிடம் கொடுத்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். கேட்டபடி குண்டலங்கள் வரவில்லை என்ற கோபத்தில் இருந்த குரு சாந்தமானார். நல்லவேளை வந்துவிட்டாய் என்று ஆறுதல் கூறினார். மேலும் ஆசீர்வதித்தார். குரு பத்தினியின் ஆசியும் அவருக்கு கிடைத்தன.

    மிகுந்த சந்துஷ்டியுடன் அவர் வெளியேறியபோது, தன்னை இப்படி கொடுமைபடுத்திய தட்சகனை பழிக்குப்பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. ஞானதிருஷ்டியால் தட்சகன் செய்த காரியங்களை அறிந்து பரிட்சித்துவை கொன்றதை உணர்ந்து பரிட்சித்துவின் மகன் ஜனமேஜயனிடம் போய் சர்பயாகம் செய்யும்படி தூண்டினார். இதுவே சர்பயாகம் செய்ய தூண்டுதலாய் ஆயிற்று.

    துவங்கியதும் நின்றதும் நீங்கள் கேட்டீர்கள் என்று சூதர் கை கூப்பினார்.

    உலகில் பல காரியங்கள் ஏதோ ஒரு இடத்திலிருந்து எங்கோ போய் விடிகிறது. ஒவ்வொரு மனிதனுடைய சிறிய செய்கையும் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்துகிறது. தட்சகன் என்ற அந்த நாக அரசனுடைய திருட்டு அவன் வம்சத்தை அழித்தது. அதே நேரம் அவனை காப்பாற்றவும் ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் பிறப்பிற்கும் ஒரு காரணம் இருந்தது. எதற்காக ஏன் நடந்தது என்ற கேள்வி உலகத்தில் இடையறாது நிற்கும். இதை விசாரிக்க ஒன்றன் பின் ஒன்றாக பலதும் தொடரும். அன்றிலிருந்து இன்றுவரை மனித வாழ்க்கை ஒன்றின் விளைவாக மற்றொன்று என்று நடப்பதுதான். எல்லாமுமே எதிர்வினைதான்.

    மகாபாரதத்தின் இந்த இடத்திற்குப் பிறகு சூதர் யயாதி என்பவருடைய கதையை சொல்லத் தொடங்கினார். யயாதியின் கதையை சொல்லுவதற்கு முன்பு சுக்ராச்சாரியாருடைய கதையையும் விவரித்தார்.

    பிரகஸ்பதி தேவர்களுடைய குரு. சுக்ராச்சாரியார் அசுரர்களுடைய குரு. சுக்ராச்சாரியாருக்கு தேவயானி என்ற மகள் இருந்தாள். அவளுக்கு தந்தையின் மீது மிகுந்த பாசம். சுக்ராச்சாரியாரோ மகள் மீது உயிரையே வைத்திருந்தார். அந்த ஊரின் மன்னன் விருபாட்சன் சுக்ராச்சாரியாரை தன் குருவாக கொண்டிருந்தான். அவனுக்கு சர்மிஷ்டை என்ற மகள் இருந்தாள். தேவயானியும், சர்மிஷ்டையும் சினேகிதிகள். ஒருமுறை அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது பேச்சு விவாதமாகப்போயிற்று.

    நீ யார் தேவயானி.

    சுக்ராச்சாரியாருடைய மகள்.

    சுக்ராச்சாரியார் யார்? என் தந்தைக்கு கீழே வேலை செய்கிறவர். அவரிடம் யாசித்து செல்வம் பெறுகிறவர். அவர் பிச்சைக்காரர். நீ பிச்சைக்காரனின் மகள்" என்று கேலியாகச் சொல்ல, தேவயானி அழுதபடி தன் தந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேட்டாள்.

    இல்லை. நீ யாசிப்பவனின் மகள் இல்லை. விழுந்து யாசிக்கும்படியான நிலையில் உள்ளவன் உன் தந்தை. என் அன்பால் அசுரர்களை போற்றி பாதுகாக்கிறேன். நான் இல்லையெனில் இந்த அசுரர் குலம் இல்லை. அது சர்மிஷ்டைக்குத் தெரியாது. எனவே சண்டை போட வேண்டாம் என்று சமாதானம் செய்ய, தேவயானி சர்மிஷ்டையை தண்டிக்க வேண்டும் என்று வீம்பாக இருந்தாள். அரசனிட்ட இதைச்சொல்ல அசுர அரசன் சுக்ராச்சாரியாரின் காலில் விழுந்தான்.

    நீங்கள் இல்லாவிட்டால் எங்களுக்கு ஏது போக்கிடம். உங்களிடம் இருக்கின்ற அற்புதமான சக்தியால்தானே எங்கள் குலம் தழைத்துக் கொண்டிருக்கிறது. பிரகஸ்பதியிடம்கூட இல்லாத அந்த சஞ்சீவினி வித்தையை நீங்கள் கற்றிருப்பதால் தானே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் குலம் என் மகளால் அழியக்கூடாது. அவள் பேச்சு கர்வமானது. எனவே நீங்கள் என்ன சொன்னாலும் அதற்கு நான் கட்டுப்படுகிறேன். என் மகளை இழக்கத் தயாராக இருக்கிறேன் என்று பணிவாகச் சொன்னான்.

    தன்னுடைய மகளைவிட தன்னுடைய வம்சம் உயர்ந்தது என்று திடமாக இருந்தான். சுக்ராச்சாரியார் மனம் நெகிழ்ந்தார்.

    என் மகளுக்கு உன் மகளை பணிவிடை செய்யச் சொல். வேலைக்காரியாக இருக்கச் சொல் என்று கட்டளையிட, அரசன் அவ்விதமே தன் மகள் சர்மிஷ்டையை தேவயானிக்கு வேலைக்காரியாக அனுப்பினான்.

    இந்த சண்டை இவ்வாறு இருக்க பிரகஸ்பதி கீழே உள்ள சீடன் கசனை இந்திரன் அழைத்து, நீ கெட்டிக்காரன். சூட்சுமம் உள்ளவன். நீ சுக்ராச்சாரியாரிடம் போய் தந்திரமாக சேர்ந்து அவரிடம் இந்த சஞ்சீவினி மந்திரத்தை தெரிந்துகொண்டு வா என்று உத்தரவிட்டான்.

    கசன் சுக்ராச்சாரியாரிடம் சீடனாக வந்து சேர்ந்தான். சுக்ராச்சாரியாருக்கு சீடன் எங்கிருந்து வருகிறான் என்று தெரியவில்லை. தெரியும் முனைப்பு இல்லை. ஆனால் அசுரர்கள் கண்டு கொண்டார்கள். கசன் தேவயானிக்கு பிரியமுள்ளவனாக இருந்தான். அவளை மயக்கித்தான் சுக்ராச்சாரியாரிடம் சேர்ந்தான். அசுரர்கள் கசனை தனியே மடக்கி அடித்துக்கொன்றார்கள். தேவயானி பதறிப்போய் தந்தையிடம் தெரிவிக்க, அவர் சஞ்சீவினி மந்திரத்தை உச்சரித்து அவனை உயிர்ப்பித்தார். மறுபடியும் அசுரர்கள் அவனை கொன்றார்கள். திரும்பவும் உயிர்ப்பித்தார்.

    நானா சொல்லித்தருவேன். நானா அசுரர்களுக்கு எதிராக செயல்படுவேன். என்னை இந்த அசுரர்கள் நம்பமாட்டேன் என்கிறார்கள் என்று சுக்ராச்சாரியார் மனதிற்குள் வேதனைப்பட்டார். அடுத்தமுறை அசுரர்கள். கசனை கொன்று எரித்து சாம்பலாக்கி அந்த சாம்பலை மதுவில் கலந்து ஒவ்வொரு மாலையும் சுக்ராச்சாரியார் மது அருந்துகிறபோது அவரிடம் அந்த குடுவையை வைத்துவிட்டார்கள். சுக்ராச்சாரியார் அந்த மதுவை குடித்துவிட்டார்.

    தேவயானி கசனை தேடினாள். தந்தையிடம் வந்து முறையிட்டாள். கசன் எங்கிருக்கிறான் என்று அவர் தேட, தன் வயிற்றுக்குள் இருக்கிறான் என்று அவருக்குத் தெரியவந்தது.

    அம்மா தேவயானி, அவனை உயிர்ப்பித்துவிடுவேன். ஆனால் நான் இறந்து விடுவேன். தேவயானி அவன் வந்து நான் இறந்தால் பரவாயில்லையா என்று பிரியமுடன் கேட்டார்.

    இல்லை தந்தையே. எனக்கு நீங்களும் வேண்டும். கசனும் வேண்டும் என்று அவள் கைகூப்பினாள்.

    என்ன செய்வதென்று யோசித்து கசனுக்கு சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்து, உன்னை உயிர்ப்பிக்கிறேன். என் வயிற்றை கிழித்துக்கொண்டு வெளியே வா, வந்தபிறகு என்னை உயிர்ப்பித்துவிடு என்று சொன்னார். அவ்விதமாகவே நடந்தது. கசன் சஞ்சீவினி மந்திரத்தை உபயோகித்து அவரை உயிர்ப்பித்தான். தேவயானி கசனை தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியபோது, உன் தந்தையின் வயிற்றிலிருந்து வந்தவன் நான். உனக்கு சகோதரனாகிறேன். எனவே உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று விலகினான். தேவயானி அந்த நியாயத்தை ஏற்றுக்கொண்டாள்.

    தேவயானி செய்யும் அட்டகாசங்களை தாங்கமுடியாத சர்மிஷ்டை அவளை ஒரு பாழும் கிணற்றில் தள்ளினாள். அப்பொழுது அங்கு வந்த யயாதி என்கிற மன்னன் அழுகுரல் கேட்டு கிணற்றில் எட்டிப்பார்த்து அங்கு தவித்துக்கொண்டிருந்த தேவயானியை நோக்கி குனிந்து தன் வலக்கையை நீட்டி அவள் வலக்கையை பற்றி மெல்ல மெல்ல முழு பலத்தோடு மேலேற்றி அவள் உயிரை காப்பாற்றினான்.

    என் வலக்கையை பற்றி என்னை காப்பாற்றிய நீங்களே எனக்கு புருஷனாவீர். உங்களை என் மனதால் வரித்துவிட்டேன். எந்த கணம் என்னைத் தொட்டீரோ அப்பொழுதே உங்களை புருஷனாக கொண்டுவிட்டேன். தயவுசெய்து என்னை ஏற்க வேண்டும் என்று பணிந்து நின்றாள். தன் தந்தையிடம் போய் யயாதியைப் பற்றிச்சொன்னாள்.

    நீ அரசன் என்பது எனக்கு சந்தோஷம். என் மகளை திருமணம் செய்துகொள் என்று கேட்டபோது, எப்படி உங்கள் மகளை திருமணம் செய்துகொள்வேன். நீங்கள் பலம் மிகுந்த ஒரு அந்தணன். மனோபலம் மிக்கவர். நான் உடல் பலம் மிக்கவன். உங்கள் மனோபலத்திற்கு முன்பு என் உடல் பலம் எதுவும் இல்லை. வெகுநிச்சயமாக விரதங்களை காக்கும் ஒரு அந்தணன் சத்ரியனைவிட உயர்ந்தவன். எவரொருவர் நியமத்தோடு வாழ்கிறாரோ அவர் எல்லாவற்றிற்கும் தலைவராகிறார். விரதத்தால் ஜொலிக்கின்ற உங்கள் கோபத்தை என்னால் தாங்க முடியாது. நான் சத்திரியன். சத்திரியனாக இருக்க விரும்புகின்றேன். ஒரு அந்தணப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள நான் தகுதியற்றவனாகிறேன் என்று பணிவாக மறுத்தான்.

    உண்மை. ஆனால் நீ கைப்பற்றி தூக்கியதால் அது காந்தர்வ விவாகமாக மாறியது. அவள் உயிரை காப்பாற்றியதால் அவள் இருப்பதே உனக்காகத்தான் என்ற நியமம் வந்துவிட்டது. நீ காப்பாற்றவில்லையென்றால் அவள் இறந்திருப்பாள். உயிர்கொடுத்த உனக்கு அவள் தன்னை கொடுக்கிறாள். இதில் குலம் கோத்திரம் எதுவும் வரவில்லை. இது மன உணர்வோடு சம்பந்தப்பட்டது. மிக உற்சாகமாக அவள் உன்னை விரும்புகின்றாள். அவளை திருமணம் செய்துகொள். அவள் குணவதி. மிகச்சிறந்த பண்டிதை. உனக்கு அவளால் தர்மம் உபதேசிக்க முடியும். உன் ராஜ்ய பரிபாலனங்களில் அவள் உதவிசெய்ய முடியும். யயாதி அவள் உனக்கு தக்க மனைவியாவாள் என்று வற்புறுத்தினார்.

    சுக்ராச்சாரியாருக்கு பயந்து யயாதி சம்மதித்தான்.

    ஒரு விஷயம். தேவயானியைத் தவிர வேறு எந்த பெண்ணையும் நீ மனதாலும் நினைக்கக்கூடாது. தேவயானியோடு சர்மிஷ்டை என்ற அவளுடைய வேலைக்காரி வருவாள். அவள் அசுரகுலப் பெண். அவளோடு நீ பழகக்கூடாது. அவளை நீ தொடக்கூடாது. இது என் கட்டளை. மீறினால் என் கோபத்திற்கு ஆளாவாய் என்று சாந்தமாக எச்சரித்தார். யயாதி சம்மதித்தான்.

    ஆனால் வாழ்க்கை வேறுவிதமாக இருந்தது.

    தேவயானிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சர்மிஷ்டை தனக்கு குழந்தை இல்லாதது கண்டு வருந்தினாள். வனத்தில் தனியாக இருந்த யயாதியை அணுகி நமஸ்கரித்தாள்.

    என்னை நீங்கள் மனைவியாக ஏற்க வேண்டும். உங்கள் மூலம் எனக்கு குழந்தை பிறக்க வேண்டும். அடிமையாக, திருமணம் ஆகாதவளாக, குழந்தையில்லாதவளாக நான் இருக்கிறேன். நாம் இரகசியமாக சந்திப்போம். இரகசியமாக வாழ்வோம் என்று உற்சாகப்படுத்தினாள். சர்மிஷ்டையின் அழகில் ஆசைகொண்ட யயாதி சம்மதித்தான்.

    உன்னை பார்த்த நேரத்திலேயே எனக்கு ஆசை வந்துவிட்டது. ஆனால் முனிவருக்கு பயந்து விலகியிருந்தேன். நீயாக கேட்கிறபோது மறுக்க முடியவில்லை. நீ சொன்னது போல இரகசியமாக இருப்போம் என்று அவளை காந்தர்வ விவாகம் செய்துகொண்டான்.

    தேவயானிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. சர்மிஷ்டைக்கு யயாதி மூலம் மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தன. மிகக்கவனமாக இருந்தும் அந்த விஷயம் வெளிப்பட்டுவிட்டது. ஏது இந்த குழந்தைகள். யார் இவர்களுக்குத் தாயார் என்று தேவயானி வினவும்போது, இந்த வனத்தில் உள்ள ஒரு தேவதையினால் எனக்குத் தரப்பட்டது என்று சர்மிஷ்டை பொய் சொன்னாள். ஆனால் அந்த குழந்தைகள் தங்களுக்கு தந்தை யயாதி என்று சொல்லிவிட்டன. தேவயானி கோபமடைந்தாள். இந்த விஷயத்தை தந்தையிடம் எடுத்துப்போனாள். தந்தை கோபமடைந்தார்.

    தெளிவாகச் சொல்லியிருந்தேன். காரணத்தோடு சொல்லியிருந்தேன். கோபம் இல்லாமல் உனக்கு எச்சரித்தேன். இருந்தும் முட்டாளைப்போல் காமவசப்பட்டு என் பெண்ணுக்கு எதிரான பெண்ணோடு நீ வாழ்ந்திருக்கிறாய். எவ்வளவு பெரிய மன வேதனை என் பெண்ணுக்கு வரும். தனக்கு சற்றும் பிடிக்காத ஒரு பெண்ணை நீ நேசிக்கிறாய் என்ற தெரிந்தால் அவள் எவ்வளவு துன்புறுவாள். அவள் வேதனைப்படவா உனக்கு திருமணம் செய்து வைத்தேன். இதுவா நீ எனக்கு செய்யும் உதவி. என்னைப்பற்றிய பலம் தெரிந்தும் மிக அடக்கமாகப் பேசியும், என்னுடைய கோபத்தை தாங்கமுடியாது என்று விவரித்தும் நீ பேசினாய். ஆனால் மாறாக நடந்துகொண்டாய். இளைஞன் என்பதால்தானே இது நடந்தது. வலுவுள்ள ஆண் என்பதால்தானே இது ஏற்பட்டது. யயாதி உன்னை முதுமை வந்து சேரட்டும். இப்பொழுதே இந்த கணமே நீ கிழத்தனம் பெறுக. அப்பொழுதுதான் வாலிப சேட்டைகளெல்லாம் எவ்வளவு அபத்தம் என்று தெரியும். பெறுவாய். முதுமை அடைவாய் என்று ஆக்ரோஷமாக சபித்தார். அந்த கணமே யயாதி கிழவனானான்.

    இதற்கு மாற்று உண்டா அவன் மன்றாடி கேட்டான்.

    எவனொருவன் மனப்பூர்வமாக உன்னுடைய முதுமையை ஏற்று தன் இளமையை தருகிறானோ அவனுக்கு உன் முதுமையை கொடுத்துவிட்டு நீ இளைஞனாக வாழலாம் என்று அதற்கு பரிகாரமும் தன் மருமகனுக்குச் சொன்னார். தேவயானிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்விதம் நடந்துகொண்டார்.

    Enjoying the preview?
    Page 1 of 1