Nilavum Malarum
()
About this ebook
தனித்தனியாக ஒவ்வொரு கதையையுமே நுணுக்கமாக ரசிக்க அம்சங்கள் நிறைய இருக்கின்றன. இந்தத் தொகுப்புப் புத்தகம் தரமானது என்று உறுதியாகச் சொல்ல முடியும். சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தை வழங்கும் என்பதற்கு நான் உத்தரவாதம்.
- பட்டுக்கோட்டை பிரபாகர்
(பிரபல நாவலாசிரியர்)
Related to Nilavum Malarum
Related ebooks
Aranmanai Vanam - Sirukathai Thoguppu Muthal Paagam Rating: 0 out of 5 stars0 ratingsVeezhvenendru Ninaithayo Rating: 0 out of 5 stars0 ratingsSirukathaigal Patriya Sinthanai Chitharalgal Rating: 0 out of 5 stars0 ratingsAindhu Vazhi Moondru Vaasal Rating: 3 out of 5 stars3/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5T. Kulashekar Stories Rating: 0 out of 5 stars0 ratingsPoo Malarum Kaalam Rating: 2 out of 5 stars2/5Kinatrukkul Cauvery Rating: 0 out of 5 stars0 ratingsKurinji Malar Rating: 4 out of 5 stars4/5Deivam Nindru Kollum Rating: 0 out of 5 stars0 ratingsKadal Kozhigal Rating: 0 out of 5 stars0 ratingsNermai Oru Kuttrama? Rating: 0 out of 5 stars0 ratingsAinthum Moondrum Onpathu Rating: 1 out of 5 stars1/5Pon Magal Vanthal Rating: 5 out of 5 stars5/5Ragasiyamaga Oru Ragasiyam Rating: 4 out of 5 stars4/5Oru Mudivin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Nilavu Rating: 5 out of 5 stars5/5Ilakkilaatha Kirukkalgal Rating: 0 out of 5 stars0 ratingsKarthika Rajkumar Sirukathaigal: Thoguppu 2 Rating: 0 out of 5 stars0 ratingsGnabagam Varuthey Rating: 0 out of 5 stars0 ratingsIdukki Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Paravai Rating: 0 out of 5 stars0 ratingsOrupakka Kathaigal Ezhuthuvathu Yeppadi...? Rating: 0 out of 5 stars0 ratingsAathichoodi Kadhaigal Rating: 0 out of 5 stars0 ratingsKalveri Kolluthadi... Rating: 5 out of 5 stars5/5Virinthathor Samrajyathil Rating: 0 out of 5 stars0 ratingsJunior Tej Page – 3 Rating: 0 out of 5 stars0 ratingsOru Manithan Oru Veedu Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Thavira Rating: 5 out of 5 stars5/5Ithu Yengal Bharatham Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nilavum Malarum
0 ratings0 reviews
Book preview
Nilavum Malarum - Indiraneelan Suresh
https://www.pustaka.co.in
நிலவும் மலரும்
(சிறுகதை தொகுப்பு: 2)
Nilavum Malarum
Author:
இந்திரநீலன் சுரேஷ்
Indiraneelan Suresh
For more books
https://www.pustaka.co.in/home/author/indiraneelan-suresh
பொருளடக்கம்
நூலாசிரியர் பற்றி...
அணிந்துரை
வாழ்த்துரை
என்னுரை
1. அல்லது நீங்கும்
2. காட்சிப் பிழை
3. சற்று முன்...
4. மலர்கள் நனைந்தன பனியாலே...
5. பொய் வழிச் சாலை
6. துள்ளித் திரிந்த பெண்ணொன்று...
7. நிலவும் மலரும்
8. ஆசையே அலைபோலே...!!
9. ‘தலைப்பு’
10. டைகர் பட்டோடியைத் தெரியுமா...?
11. தன் நிலம் தேடி...!
12. இலக்கு...!
13. அது...!
14. ஒரு நாள் போதுமா?
15. மழை நாளில் ஒரு ரோசா
16. முனிப் பள்ளம்
17. கிளை
18. நிஜங்களின் தரிசனம்
19. காவாய் கனகத் திரள்
20. மாயன்
21. பூந்தொட்டி
சமர்ப்பணம்
பெய்யெனப் பெய்யும் மழைச் சாரல்!
ஸான்வி & ரித்விக்
நூலாசிரியர் பற்றி...
இந்திரநீலன் சுரேஷ் (சுரேஷ் குமார் அரங்கநாதன்), சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘மின் மற்றும் மின்னணுவியல்’ பயின்ற இவர், புகழ் பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில், பொறியாளராக, நிர்வாக மேலாளராக, இந்தியா, வளைகுடா மற்றும் ஐக்கிய ராஜ்யம் (UK) எனப் பல பகுதிகளில் பணிபுரிந்திருக்கிறார். அமெரிக்கா உள்ளிட்ட 30’க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்குப் பயணித்துள்ளார்
கலைமகள், கல்கி, கணையாழி, அமுதசுரபி, குங்குமம், ராணி, தினமணி கதிர், மஞ்சரி, ஸ்ரீராமகிருஷ்ண விஜயம், நவீன விருட்சம் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் கதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். பூபாளம் இலக்கிய சிற்றிதழின் வெள்ளி விழா மலருக்குச் சிறப்பாசிரியராக பணியாற்றியுள்ளார்.
கலைமகள் பப்ளிகேஷன்ஸ் வெளியீடான இவரது ‘அரண்மனை வனம்’ என்கிற சிறுகதைத் தொகுப்பு நூல் திருப்பூர் தமிழ்ச் சங்கம் நடத்திய இலக்கிய விருதுகள் போட்டியில் 2021-22 ஆம் ஆண்டு ‘சிறந்த சிறுகதைத் தொகுப்பு நூல் வரிசையில் ‘முதல் பரிசு’ பெற்றுள்ளது. பல உள்நாடு மற்றும் அயல்நாடு அமைப்புகளில் பேச்சாளராகவும், நெறியாளராகவும் இருந்து வருகிறார்
கலைமகள் 90 ஆவது ஆண்டு விழா, கா-ஸ்ரீ -ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டி, இலக்கியப்பீடம் வெள்ளிவிழா ஆண்டு சிறுகதைப் போட்டி, அமரர் சேஷசாயி நினைவு - உரத்த சிந்தனை சிறுகதைப் போட்டி, ‘கலைமகள் - சீனியர் சிட்டிசன் பீரோ’ வெள்ளிவிழா ஆண்டு சிறுகதைப் போட்டி, ஸ்வர்ண கமலம் இதழ் - அமரர் சுஜாதா சிறுகதைப் போட்டி, குவிகம் குறும் புதினம் - 2023 போன்ற பல போட்டிகளில் இவரது கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்றுள்ள.
அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் அளித்த ‘பன்னாட்டு தமிழுறவு’ விருது, உறவுச் சுரங்கம் & ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கிய தமிழ் விருது பெற்றவர்
அணிந்துரை
இந்திரநீலன் சுரேஷ் அவர்கள் எழுதியுள்ள இரண்டாவது சிறு கதைத் தொகுப்பு நூல் நிலவும் மலரும்
. இதில் அடங்கியுள்ள எல்லாக் கதைகளும் படிப்பதற்குச் சுவையானவை மட்டும் அல்ல நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தரக் கூடியவை!!
சுரேஷ்குமார் அவர்கள் அடிக்கடி விமானத்தில் பல நாடுகளுக்குப் பரப்பதால், விமானத்தளங்கள் கதைகளில் வராமல் இருப்பது இல்லை!! சில கதைகளுக்கு அவை தேவையானதாக கூட இருக்கிறது!
கிராமத்து வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவது ஒரு வகை! ஆனால் இவருடைய கதைகள் எல்லாம் படித்த வர்க்கம் எப்படி வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் கடக்கிறது? என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றன.
இவருடைய கதைகளில் பல இடங்களில் மெல்லிய காதல் உணர்வு ஆங்காங்கே தட்டுப்படுகிறது. வாழ்க்கை என்பது ஒரே நேர்கோட்டில் மட்டும் அமைவது அல்ல! சில நேரங்களில் வாழ்க்கைக் கோடுகள் வளைந்தும் நெளிந்தும் போக வேண்டி இருக்கும்.
ஆனால் இந்திரநீலன் சுரேஷ் கதைகளில் சில கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் சோகங்கள் அப்பி செய்து இருந்தாலும் முடிவு என்னவோ சுபமாகத்தான் இருக்கிறது...
The uniqueness of a human being is that he/she has an organic capacity to explore both the outer and inner worlds. Exploration in these two directions has its own respect towards the results obtained thus.
-எல்லாக் கதைகளையும் படித்த பின்பு இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது.
பொதுவாக சிறுகதைத் தொகுப்பு நூல்களுக்கு அணிந்துரை எழுதும் பொழுது எல்லா கதைகளையும் பற்றி நான் விமரிசனம் செய்வது இல்லை. எல்லா கதைகளையும் பற்றி நான் எழுதி விட்டால் அப்புறம் வாசகர்களுக்கு அக்கதைகளைப் படிக்கும் பொழுது என்னுடைய எழுத்தின் தாக்கம் ஏற்படக்கூடும். எல்லா கதைகளையும் நீங்கள் அவசியம் படித்தால்தான் கதாசிரியர் சுரேஷ் அவர்களின் வலிமை புரியும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இரண்டே இரண்டு கதைகளுக்கு மட்டும் என் அபிப்பிராயத்தை முன் வைக்கிறேன்.
கணவரிடம் மட்டுமே அந்தக் குழந்தை ஏன் ஒட்டிக் கொண்டது? ஏன் அதற்கு அவள் அனுமதித்தாள்? நிலவும் மலரும்
கதையைப் படிக்கும் வாசகர்களுக்கு இப்படி ஒரு எண்ணம் தோன்றலாம். கதையின் முடிவில் தான் அதற்கான விளக்கத்தை தருகிறார் கதாசிரியர். அதுதானே அவருடைய சாமர்த்தியமும் கூட!!
‘பானுமதி குழந்தையின் இரு பாதங்களையும் தன் கைகளால் எடுத்து தொட்டு வருடி தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். அது அவள் மானசிகமாக மன்னிப்பு கேட்பது போல் இருந்தது. நிலா வெண்மையாக வெளியில் ஒளி வீசிக் கொண்டிருந்தது...’ இப்படி கதையை முடிக்கும் பொழுது தான் எதற்காக கதாசிரியர் அந்த குழந்தையை அப்பாவிடமே ஒட்ட விடுகிறார் என்பது புரிகிறது!!
வெகு நாட்கள் குழந்தையிடம் இருந்து பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் அப்பா, அதற்கு முன்பாக அந்த குழந்தையிடம் நெருக்கம் காட்ட வேண்டும், அதுதான் நல்லது என்று நினைக்கும் அந்த உத்தமியை நினைத்து மனசு குளிர்கிறது!!
சின்ன சின்ன விஷயங்கள்தான் ஆனால், அந்த விஷயங்களை மிகச் சரியாக உள்வாங்கிக் கொண்டு சிலந்தி வலை பின்னுவதைப் போல மிக மிக அழகாக கதைகளை அமைத்திருக்கிறார், எழுத்துப் பின்னலின் மூலமாக இந்திரநீலன் சுரேஷ்.
தொன்மங்களைக் காட்சிகள் மூலம் காட்டும் ஒரு வகைக் கலை தமிழ் இலக்கியத்தில் உண்டு. தமிழில் அமைந்த திருத்தொண்டர் புராணம் சேக்கிழார் பெருமானால் பாடப் பெற்றதாகும். அந்த நூல் பற்றி அவர் கூறுமிடத்து,
இங்கிதன் நாமம் கூறின்
இவ்வுல கத்து முன்னாள்
தங்கிருள் இரண்டில் மாக்கள்
சிந்தையுட் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைப்
புறஇருள் போக்குகின்ற
செங்கதி ரவன்போல் நீக்கும்
திருத்தொண்டர் புராணம் என்பாம்
என்று அந்நூலின் பெயர் கூறியுள்ளார். அதாவது 63 நாயன்மார்கள் வரலாறு, திவ்ய சருதையில் கூறப்பட்டுள்ளது என்பதாகும். பல பாடல் பெற்ற ஸ்தலங்களுக்குச் சென்று வந்த சுரேஷ்குமார் அவர்கள் இதனை மனதில் கொண்டு, தான் செதுக்கிய ஒவ்வொரு கதைக்கும் சரியானபடி தலைப்பைக் கொடுத்து தலைப்பிலேயே விஷயத்தைப் புரிய வைக்கிறார்.
ஆசையே அலைபோலே...!! என்றொரு சிறுகதை. மெரினாவில் பஜ்ஜி சாப்பிடும் புராணம் இது. பஜ்ஜிக்காக அலைப்பாயும் மனிதன், கடைசியில் எப்படி வெற்றி வாகை சூடுகிறான்? என்பதுதான் கதை. நிச்சயமாக பஜ்ஜி சாப்பிட்டு இருப்பான் என்பதை யூகித்து விடலாம். ஆனால் தடங்கல் வரும் பொழுதெல்லாம் சுரேஷ்குமார் அவர்களுடைய பேனா கார்ப்பரேட் சிந்தனையில் மூழ்கி இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
குடைக்குள் மழையாக
இருந்த ஜோடியிடம் ‘சுண்டல் வாங்கிக்கங்க அக்கா’ என பையன் பேரம் செய்து கொண்டிருந்தான்...
இதனைப் பார்த்ததும் இக்கதையின் கதாநாயகனுக்கு என்ன தோன்றியது தெரியுமா? இந்தப் பையனை விட்டு நம் சேல்ஸ் டீமுக்கு இண்டக்ஷன் எடுக்க வைக்கணும். கிளைண்டு மூணு தடவை கதவை மூடினாலே, போய் கேக்குறதுக்கு மூக்கால அழுவானுங்களே நம்ப பசங்க
... இதுதான் கார்ப்பரேட் சிந்தனை என்பது...
ஒரு பஜ்ஜியை வைத்துக்கொண்டு கதை பண்ண முடியுமா? பஜ்ஜி சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். அதுவும் மழைக்காலத்தில் கத்திரிக்காய், வாழக்காய், வெங்காயம் என்று தினுசுதினுசாய் பஜ்ஜி போட்டுக் கொடுத்தால் ஜன்னல் ஓரமாக இருந்தபடி மழைக் கம்பிகளை ரசித்தபடி பஜ்ஜி சாப்பிடலாம். கதை முழுக்க பஜ்ஜியை வைத்துக்கொண்டு சுவைபட நகர்த்த முடியுமா? முடியும் என்று நிரூபித்து பாஸ் மார்க் இல்லை மொத்த மார்க்கையுமே அள்ளிக் கொண்டு செல்கிறார் கதாசிரியர்!!
துல்யநிந்தாஸ்துதிர் மௌனி
என்று பகவான் பகவத் கீதையிலே சொல்கிறார். உன்னை யாரும் புகழ்ந்தாலும், உன்னை யாரும் இகழ்ந்தாலும் ஒரே மன நிலையில் இருங்கள் என்பது இதன் உள் அர்த்தம். சுரேஷ்குமார் அவர்கள் பாராட்டும் பொழுது அந்தப் பாராட்டை வாங்கிக் கொள்வார். அதற்கென்று ஒரேடியாக அந்தப் பாராட்டில் மயங்கி கர்வம் கொள்ள மாட்டார். அதே போல் தான் விமர்சனங்களையும் சரியானபடி ஏற்றுக்கொண்டு தன்னை சரி செய்து கொள்வாரே தவிர துவண்டு விடமாட்டார். இதை நேரடியாகப் பார்த்தவன் நான்!
மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வேலை செய்த பக்குவம் அவருடைய கதைகளிலும், கதை அமைப்புகளிலும் தெரிகிறது. நல்லவர் எனவேதான் எப்போதும் நல்லதையே எழுதிக் கொண்டிருக்கிறார். கலைமகள் மனதார வாழ்த்துகிறது!
அன்புடன்
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர், கலைமகள்
வாழ்த்துரை
அன்புள்ள உங்களுக்கு...
வணக்கம்.
எனக்கு எழுதுவதானாலும், படிப்பதானாலும் கதைகளின் வடிவத்தில் பிடித்தது சிறுகதையே. தலைக்கு வைத்துப் படுத்துக்கொள்ளலாம் சைசில் வாங்கிவைத்த பல புத்தகங்கள் கொஞ்சம் பக்கங்களில் அடையாள அட்டைகள் துருத்த மனதை குற்ற உணர்ச்சிக்குள் மூழ்கடிக்கும். ஆனால் சிறுகதைத் தொகுப்புகள் என்றால் அவ்வப்போது ஒவ்வொரு சிறுகதையாக புத்தகம் முழுக்கப் படித்து முடித்துவிடுவேன்.
அத்தனைச் சிறுகதைகளையும் என்னைப் படிக்க வைக்கும் சாமர்த்தியம் முதல் சில கதைகளில் இருந்தாக வேண்டும். இரண்டு மூன்று கதைகளிலேயே தெரிந்துவிடும் எழுத்தின், எழுத்தாளனின் தரம்!
முன்னுரை எழுதித் தாருங்கள் என்று ஒப்படைக்கப்படும் புத்தகங்களில் ஈர்க்கிறதோ, இல்லையோ கடைசி கதை வரைப் படிக்காமல் முன்னுரையின் முதல் வரியைக்கூட எழுதுவதில்லை என்று ஒரு வைராக்கியம் உண்டு. சில சமயம் அது வரமாக அமையும். சில சமயம் அது சாபமாக அமையும்.
கலைமகள் ஆசிரியர் கீழாம்பூரார் சிபாரிசு செய்யாவிட்டாலும் இந்திர நீலன் சுரேஷின் சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை எழுத ஒப்புக்கொண்டிருப்பேன். காரணம்... அவரின் ஒன்றிரண்டு கதைகளை ஏற்கெனவே மேய்ந்திருப்பதால். தவிரவும் கலைமகளுக்காக என்னை விரிவானதொரு பேட்டி எடுத்து அதை மிக நேர்த்தியாகத் தொகுத்திருந்ததில் அவரின் எழுத்தின் மீதான நம்பிக்கைக் கூடியிருந்தது.
இந்த்த் தொகுப்பில் ஒவ்வொரு கதையாக அவசரமில்லாமல் வெவ்வேறு நாள்களில்தான் படிக்க முடிந்த்து. அதனாலேயே ரசித்து ருசித்து உள்வாங்கி அனுபவிக்க முடிந்தது. மொத்த கதைகளையும் படித்து முடித்ததும் மனதில் நிறைவும், ஒரு குற்ற உணர்ச்சியும் ஏற்பட்டது.
நிறைவுக்குக் காரணம்... கதைகளின் உள்ளடக்கமும், சொல்லப்பட்ட நேர்த்தியும், பக்குவமான சிந்தனைகளும், நடையழகும். குற்ற உணர்ச்சிக்குக் காரணம்... நான் சிறுகதை எழுதி பல மாதங்கள் ஆயிற்றே என்பதே. இந்தத் தொகுப்பு உடனே என்னை ஒரு சிறுகதை எழுதத் தூண்டி... நானும் ஆரம்பப்புள்ளி வைத்துவிட்டேன். விரைவில் கோலமாகிவிடும்.
இந்திர நீலனின் இந்தச் சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. குடும்பப் பாசம், காதல், விஞ்ஞானம், ஃபான்டசி, கிரைம், என்று எந்த வகையைத் தொட்டாலும் பொதுவான அம்சங்களான சுவாரசியமாக வாசிக்க வைக்கும் தன்மையும், கடைசி வரிகளில் அட என்று புருவம் உயர்த்த வைக்கும் தன்மையும் கண்டிப்பாக ஆஜராகின்றன.
ஒரு சில விஞ்ஞானக் கதைகளில் இவர் பெயரில்லாமல் வெளியிட்டு, இந்தக் கதையை எழுதியது யார் என்று போட்டி அறிவித்தால் வாசகர்களில் 50 விழுக்காடு சுஜாதா என்று பதில் அனுப்பக் கூடும்.
அந்த மேதைக்குப் பிறகு கிட்டத்தட்ட அதே மேதமையுடன் சில கதைகள் அசத்துகின்றன. கடைசி வரியில் திடுக்கிடல் அல்லது புன்னகை வரவழைக்கும் ஓ ஹென்றித்தனம் எனக்கும் பிடித்த உத்தி என்பதால் அட, நம்மாளு என்று கூடுதலாக ரசிக்க முடிந்தது.
2522 ஆம் வருடம் நிகழும் முதல் விஞ்ஞான கதையிலேயே தன் பாய்ச்சலைத் துவங்கிவிடுகிறார். முதல் டிஜிட்டல் மனிதன் தன் மரண நிகழ்வுகளைத் தானே பார்க்க முடிகிற கற்பனை விஷயங்கள் இதோ கொஞ்ச வருடங்களில் நிகழக்கூடியவைகளாகத்தான் தெரிகிறது.
புத்தகத்தின் தலைப்புக் கதையில் டூர் செல்லுமிடத்தில் ஒரு மனைவி தன் குழந்தையைக் கொஞ்சமும் கவனிக்காமல் முழுக்க தன் கணவனையே பார்த்துக்கொள்ளச் செய்யும்போது வாசகருக்கும் எரிச்சல் ஏற்படுத்தி கடைசியில் அழகான காரணம் சொல்லும்போது புன்னகைக்க வைக்கிறார்.
பொய்வழிச்சாலை கதையில் வெர்ச்சுவல் ரியாலிட்டி என்கிற புதை மணலில் சிக்கிக்கொள்ளும் ஒரு பெண் அந்த விளையாட்டில் தன்னைச் சிலர் கற்பழிக்க வருவதாகவே நினைக்கிறாள். சமீபத்தில் நிஜத்தில் இதைப் போலவே ஒரு பெண் கோர்ட்டில் மெய்நிகர் விளையாட்டில் தன்னைச் சிலர் கற்பழித்துவிட்டதாகவே புகார் கொடுத்திருக்கிறாள். அதை விசாரிக்கவும் கற்பனை பிம்ப போலீஸ்காரர்கள் வருவார்களோ என்னவோ...
டைகர் பட்டோடியைத் தெரியுமா? என்கிற கதை சாதாரணமாகத் துவங்கி அமானுஷ்யக் கதையாக முடியும்போது அடுத்தக் கதையைப் படிக்கும் முன்பாக கொஞ்ச நேரம் அந்த சுவாரசியத்தை அசை போட்டு ரசித்தேன்.
ஒரு கார்ப்பரேட் சிஈஓ மெரினா கடற்கரையில் பஜ்ஜி சாப்பிட மிகப் பெரிய திட்டம் போட வேண்டியிருப்பதில் நகைச்சுவை கொப்பளிக்கிறது.
தனித்தனியாக ஒவ்வொரு கதையையுமே நுணுக்கமாக ரசிக்க அம்சங்கள் நிறைய இருக்கின்றன. இந்தத் தொகுப்புப் புத்தகம் தரமானது என்று உறுதியாகச் சொல்ல முடியும். சுவாரசியமான வாசிப்பு அனுபவத்தை வழங்கும் என்பதற்கு நான் உத்தரவாதம்.
இந்திர நீலன் சுரேஷ் அவர்கள் தன் அடுதந்த் தொகுப்புக்கும் என்னிடம் முன்னுரை கேட்க வேண்டும். அப்போதும் அச்சுக்கு முன்னால் படித்துவிடலாம் அல்லவா?
வாழ்த்துகள் கூடை நிறைய!
பாராட்டுக்கள் இதயம் நிறைய!
பிரியங்களுடன்,
பட்டுக்கோட்டை பிரபாகர்
என்னுரை
வான் மேகங்கள் சூழ்ந்த ஒரு டெல்டா மழை நாளில், திருமங்கலக்குடி நோக்கி நண்பர்கள் சகிதம் பயணித்துக் கொண்டிருந்தோம். கிராமத்து குறுகிய சாலை ஒன்றில் வாகனம் சென்ற போது வழியில் திடீரென்று வண்டியை நிறுத்தினார் ஓட்டுநர். எட்டிப் பார்த்தால் ஒரு பசுமாடு சாவகாசமாக நடுரோட்டில் அமர்ந்து அசை போட்டுக் கொண்டிருந்தது.
டிரைவர் கார் கண்ணாடியை இறக்கி ஹோ...ஹோய் எனக் குரல் கொடுத்து நகரச் சொல்லிப் பார்த்தார். அது அசைந்து கொடுக்கவில்லை. வாகனத்தை நிறுத்திக் கீழிறங்கிக் குனிந்து அந்த பசுவின் நெற்றியை வருடி, கழுத்து பகுதியைச் செல்லமாகத் தடவிக் கொடுத்து தட்டி, ‘எழுந்திருமா...’ என்றார். அது மெதுவாக எழுந்து நகர்ந்து வழிவிட்டது.
வாகனத்திலிருந்த நண்பர், "ஏங்க ஒரு ஹாரன்