Kaadhal Solla Vanthen
By Balakumaran
()
About this ebook
'உயர்ந்த கதை' என்பது படிப்பவரின் மனதில் புகுந்து சிந்தனை கிளறி ஆக்க சக்திகளை போக்கி எண்ணங்களில் இனிமையும், இயல்பும், ஒழுக்கமும் ஏற்படுத்தி அவர்களை ஒரு மேல் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதுபோலத்தான் அன்னபூரணி என்ற பெண்மணியின் நேர்மறையான எண்ணங்கள் அவளையும், அவரை சுற்றியுள்ள மனிதர்களையும் எப்படியெல்லாம் வாழ வைக்கிறது என்பதுதான் காதல் சொல்ல வந்தேன். வாருங்கள் நாமும் நேர்மறையான எண்ணங்களுடன் பயணிப்போம்...
Read more from Balakumaran
Kadhalaagi Kanindhu... Rating: 0 out of 5 stars0 ratingsSwarna Vetkai Rating: 0 out of 5 stars0 ratingsSorgam Naduvile Rating: 0 out of 5 stars0 ratingsVellai Thuraimugam Rating: 0 out of 5 stars0 ratingsKrishna Arjunan Rating: 0 out of 5 stars0 ratingsEzhavathu Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsBalakumaran Sirukathaigal Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsIdhu Pothum Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kavar Kalvan Rating: 0 out of 5 stars0 ratingsMouname Kaadhalaga... Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Kuthiraigal Rating: 0 out of 5 stars0 ratingsMahabharatham Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsMercury Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsKalloori Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsMannil Theriyuthu Vanam Rating: 0 out of 5 stars0 ratingsMahabharatham Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsSri Ramana Maharishi Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kaadhal Solla Vanthen
Related ebooks
Ezhavathu Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsKadaisiyil Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsOlivatharkku Idamillai Part - 1 Rating: 5 out of 5 stars5/5Vaakkumoolam Rating: 0 out of 5 stars0 ratingsKangal Sollum Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsAakasa Veedugal Rating: 0 out of 5 stars0 ratingsPalaivanathil Oru Roja Rating: 0 out of 5 stars0 ratingsBakkiyam Ramasamyin Nagaichuvai Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsEnnodu Vaa Rating: 5 out of 5 stars5/5Kaadhal Neram Rating: 5 out of 5 stars5/5Uyarndhavargal Rating: 5 out of 5 stars5/5Mouname Kaadhalaga... Rating: 0 out of 5 stars0 ratingsAbitha Rating: 0 out of 5 stars0 ratingsAppusamyin Colour TV Rating: 0 out of 5 stars0 ratingsMarma Veedu Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kavar Kalvan Rating: 0 out of 5 stars0 ratingsKamalam Solgiraal Rating: 0 out of 5 stars0 ratingsSembulapeyal Neer Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsKalloori Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsAgayam Ullavarai Rating: 0 out of 5 stars0 ratingsMythili Rating: 0 out of 5 stars0 ratingsKaaviyama Nenjin Ooviyama Rating: 0 out of 5 stars0 ratingsNeengatha Nila Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsUravu Sonnavan Rating: 0 out of 5 stars0 ratingsIrandaavathu Amma Rating: 0 out of 5 stars0 ratingsKudumba Kathaigal Rating: 5 out of 5 stars5/5Kozhaigal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kaadhal Solla Vanthen
0 ratings0 reviews
Book preview
Kaadhal Solla Vanthen - Balakumaran
http://www.pustaka.co.in
காதல் சொல்ல வந்தேன்
Kaadhal Solla Vanthen
Author :
பாலகுமாரன்
Balakumaran
For more books
https://www.pustaka.co.in/home/author/balakumaran
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
வாழ்த்துரை
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
வாழ்த்துரை
பொய்மான், அருகம்புல், ஏழாவது காதல் என சமூக நாவல்கள் தொடர்கிறது. காதல் பற்றிய பார்வை மாற்றப்பட்டு விட்டது புரிகிறது. காதலை ஒரு பலமாக, ஆயுதமாக கிரியா ஊக்கியாக மாற்றிக்கொண்டேயிருக்கிறீர்கள். 18-21 வயது இளைஞர்களுக்கு இது புரிய வேண்டுமே என்று கவலை வருகிறது. புரியாமல் போனதால் படும் அவஸ்தைகளை யாருக்குச் சொல்ல. ‘கடைவிரித்தேன் கொள்வாரில்லை’ கணக்காக காதல் பற்றி யோசிக்க இங்கே யாரும் வரவில்லை. சுட்ட பிறகு தீயை தெரிந்துகொள்ள வேகம், வேகம், வேகம். அது போகட்டும், இன்னும் சியாமளி தொடர்கின்றாளே ஆச்சர்யமாக இருக்கிறது. காதல், காம உணர்வுகளின் பதிவுகளைப்பற்றி பிரமிப்பு ஏற்படுகிறது. எது, எப்படியிருப்பினும் நீங்கள், ‘அகல்யா’ பாலகுமாரன் செத்துவிட்டதாகச் சொன்னது பொய். இலேசான மறைவாட்டம் அது. பொய் மானிலும், ஏழாவது காதலிலும் அந்த பழைய பாலகுமாரன் நுழைந்து பார்த்துவிட்டு ஓடிப் போயிருக்கிறார் என்பதே நிஜம். மற்றபடி குடும்பத்தாருக்கும் உங்களுக்கும் என் பணிவான, அன்பார்ந்த வணக்கங்கள்.
பெ. நாகமாணிக்கம்,
ஆணைக்கல்லானூர்.
என் வயது எழுபது கருதி ஆசீர்வாதம். உங்கள் திறமை கருதி நமஸ்காரம். நான் பெங்களூர் ஆசாமி. தமிழ் புத்தகங்கள் அவ்வப்போது படிப்பேன். உங்களுடைய ஒன்றிரண்டு நாவல்களை முன்பு படித்திருந்தேன். எழுத்தாளர்களின் பல்வேறு கதைகளை அவகாசம் கிடைத்தபோதெல்லாம் படிப்பதுண்டு. சில சமயம் சில கதைகள் படித்தபின் எழுத்தாளர்களை பாராட்டுவது உண்டு. எழுத்தாளர்களுக்கு என்று இதுவரை ஒரேயொரு கடிதம்தான் எழுதியிருக்கிறேன். பல பல வருடங்களுக்கு முன் தமிழ்வாணன் என்கிற லெ. ராமநாதன் என்ற எங்கள் ஊரான தேவகோட்டை இளைஞர் எழுதிய கதையும், என்னுடைய முதல் கதையும் ‘மதுரமித்திரன்’ என்ற பத்திரிகையில் வெளிவந்தபோது, அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். என்னுடைய இரண்டாவது கதையை இதுவரை எழுதவில்லை. ஆனால் எழுத்தாளருக்கு என்று எழுதும் என்னுடைய இரண்டாவது கடிதம் இதோ.
தமிழ்நாட்டிலிருந்த போது பாலகுமாரன் நாவல்களைப் படிக்க வேண்டுமென்று அவ்வப்போது நினைத்துக் கொள்வேன். இந்த ஊரில் வாசக சாலையில் விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் (Bay Area Tamil Manram) தமிழ் புத்தகங்களை அன்பளிப்பாக அளித்து தனது நற்பணிகளில் ஒன்றாக இதை செய்து வருகிறது. அதிலிருந்து தங்கள் நாவல்களை பெற்று படிக்க ஆரம்பித்தேன். முதலில் பாலகுமாரனைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது. பின் பாலகுமாரனையே படிக்க வேண்டும் என்று ஆகிவிட்டது. நேற்றுப்படித்து முடித்தது இனிய யட்சினி
ஐயா, அது கதையா, காவியம் அல்லவா. அதைப் படிக்க நேர்ந்தவர்கள் பாக்கியசாலிகள், விரிவாக விவரிக்க எனக்கு தகுதி போதாது. ஆனால் இலக்கண வழியாக கதை எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு அவரவர்கள் தங்கள் சௌகரியப்படி இலக்கணம் கற்பித்து கொள்வார்கள். உயர்ந்த கதை என்பது படிப்பவரின் மனதில் புகுந்து, சிந்தனையை கிளறி, ஆக்க சக்திகளை ஊக்கி, எண்ணங்களில் இனிமையும் இயல்பும், ஒழுக்கமும் ஏற்படுத்தி, அவனை ஒரு மேல்நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது என்னை பொறுத்தமட்டில் இலக்கணம் ஆகும்.
இது தங்களது உயர்ந்த கதை மட்டுமல்ல, மிக உயர்ந்த கதை. அவரவர் செய்கைகளை அவரவரின் மூலமே எண்ணப்படுத்தி, முன்னிலையில் பேச வைத்து வார்த்தைகளை சுவையுறச் சேர்த்து, எழுத்தில் ஆளுமை சேர்த்து, ஆண், பெண் கலவியை கொச்சைப்படுத்தாது, அது ஒரு இனிய அனுபவம் என்கிற உண்மையை விபரப்படுத்தி, பெண்மைக்கு உயர்வும், ஆணுக்கு கம்பீரமும் கொடுக்கும் தங்கள் எழுத்துத் திறனை நினைத்து நினைத்து மகிழ்கிறேன்.
தாங்கள் நீடு வாழ்ந்து இன்னும் எழுதிக் கொண்டே இருக்கவும், அவைகளை நான் படித்துக் கொண்டேயிருக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.
தாங்கள் எப்படி எழுதுகிறீர்கள் என்பதே ஒரு அதிசயம். இந்தியா வரும்போது தங்களை எங்காவது சந்திக்கக் கூடுமென்று எண்ணுகிறேன். சந்தித்தோமானால் நான் ஒன்றும் சொல்லமாட்டேன். ஒன்றே ஒன்றைத் தவிர, தங்கள் எழுத்துக்கு தலை வணங்குகிறேன். தங்கள் திறமை வளர்க.
என். நாகரத்னம்,
SAN JOSE-CA 95116, U.S.A.
1
மழை வலுத்துப் பெய்யத் துவங்கியது. அன்னபூரணியம்மாள் மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டே புடவைத் தலைப்பில் உடம்பை போர்த்திக் கொண்டாள். மழையால் ஏற்பட்ட குளிரை அனுபவிக்க, அனுபவிக்க சந்தோஷமாக இருந்தது. அந்தக் குளிரை போர்த்திக்கொண்டு அனுபவிப்பது இன்னும் ஆனந்தமாக இருந்தது.
நல்ல மழையில் வேண்டுமென்றே நனைவது ஒரு முரட்டுத்தனம். தீ மிதிப்பது போன்ற ஒரு பதற்றம். மழையில் நனைந்து ஓடக்கூடாது. ஒதுங்கி நின்று மேலே சாரல் படாமல் பாதுகாப்பு செய்துகொண்டு, நாலாபக்கமும் சுற்றிச்சுற்றி மழை பெய்வதைப் பார்க்க வேண்டும். மரங்கள் நனைவதை, பூமி நனைவதை, பறவைகளும் மிருகங்களும் ஒண்டிக் கொள்வதைப் பார்த்து ரசிக்க வேண்டும். மழை பெய்யத் துவங்கியதும் சில ஆண்கள் வேட்டியை மடித்துக்கொண்டு தெருவில் இறங்கி வேண்டுமென்றே அலைவதைப் பார்த்திருக்கிறாள்.
மழையில நனையிற மாதிரி சுகம் உலகத்துல எதுவும் இல்லை
என்று அவர்கள் உரக்க அழுத்தந்திருத்தமாய்ப் பேசுவதைக் கேட்டு வியந்திருக்கிறாள். அப்படி அலைபவர்களை உற்றுப் பார்த்திருக்கிறாள். அவர்கள் மழையை அனுபவிப்பதாய் சொல்லுகிறார்களே தவிர, ஒரு பொழுதும் மழையை அனுபவிக்கவில்லை என்பது வெகு சீக்கிரம் புரிந்துவிட்டது.
மழைக்கு எதிரே ஒரு முரட்டுத்தனம் காட்ட அவர்கள் முயல்கிறார்கள். மழை பூமியில் ஒரு முரட்டுத்தனம் காட்ட பதிலுக்கு மழையை எதிர்த்துப் போராட முடிவு செய்கிறார்கள். அதனால்தான் தெருவில் இறங்கி முன்னும், பின்னும் அலைந்து தன் பலத்தைக் காட்டிக் கொள்கிறார்கள்.
மழையை அப்படி வரவேற்கக் கூடாது. எதிர்த்து உரக்க கூச்சலிடக் கூடாது. ராஜா வர, அவர் எதிரே கம்பு சுழற்றலாம். அது வரவேற்புதான். ஆனாலும், இரண்டு புறமும் உப்பரிகையில் நின்றுகொண்டு, அரசர் மீது பூ தூவுவது எத்தனை அழகு. அதில் அரசருக்கு எத்தனை சந்தோஷம். தூவுகிற பெண்களுக்கு எத்தனை சந்தோஷம். எவ்வளவு பெரிய சுகமான மரியாதை அது. மழையை அப்படித்தான் வராண்டாவிலோ, ஜன்னல் அருகிலோ, நான்கு புறமும் திறந்த கூரைக் கொட்டகையிலோ அமர்ந்து வேடிக்கை பார்க்க வேண்டும்.
இந்த வீட்டு மாடியில், மாடியைச் சுற்றி ரேழி இருக்கிறது. மிக பழங்கால அமைப்பு இது. அப்பாவின், தாத்தா கட்டிய வீடு இது. அந்த மனிதன் நல்ல ரசிகன். மழையை, வெய்யிலை, காற்றை அனுபவிக்க மாடியெழுப்பி, மாடியில் இரண்டு அறைகளும், ஒரு பெரிய கூடமும் கட்டி, அதைச்சுற்றி சிகப்பு சிமெண்ட் தளம் போட்டு, அந்தச் சிமெண்ட் தளத்திற்கு கூரைபோட்டு ரேழியாக மாற்றி விட்டார். பின்புறம் சற்று இன்னமும் இடம் விட்டு திறந்தவெளி அமைத்து, வற்றல் உலர்த்திக் கொள்ளவும், துணி உலர்த்திக் கொள்ளவும் வகைகள் செய்திருக்கிறார்.
பகலில் மழை பெய்கிறபோது, இரவில் காற்று வேண்டுமென்று உடம்பு கேட்கிறபோது இப்படி இந்த ரேழியைச் சுற்றி மெல்ல நடந்தால் போதும். இயற்கையோடு ஒட்டி உறவாட முடியும்.
நகரின் நடுமையத்தில் சிந்தாதிரிப்பேட்டையில் இப்படியொரு வீடு கிடைத்திருப்பது மிகப் பெரிய பாக்கியம். மூத்தவர்களுடைய ஆசீர்வாதம்.
ஆனால், இந்த வீட்டை விற்று விடவேண்டுமென்று வீட்டிலுள்ள சிலர் விரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
வேற இடத்துக்குப் போயிடுவோம். வீடு நல்லாயிருந்தா போதுமா சிந்தாதிரிப்பேட்டையை பார். குப்பைமேடு மாதிரி இருக்கு. எனக்குப் பிடிக்கவேயில்லை. பெசன்ட் நகர் போயிருக்கியா. தெருவும் மரமும் பார்த்தா மூச்சு முட்டி செத்துருவோம் போல ஆயிப்போச்சி. வீடுன்னா அங்க இருக்கணும். தெருவுன்னா அப்படி இருக்கணும். வா... உன்னை ஒரு தடவை மெட்ராஸ் சுத்திகாமிக்கிறேன். ஒவ்வொரு இடமும் என்னமா இருக்குன்னு பார்த்துக்க. அப்பதான். சிந்தாதிரிப்பேட்டை சாக்கடையை விட்டு வெளியே வருது. வெறும் மீன் மார்க்கெட் இது.
பிள்ளை கத்தினான். மகன் சுகுமாருக்கு மெல்ல பேசவே தெரியாது. தான் சொன்னதை உடனடியாக எல்லோரும் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும் என்பது போல், வேகமாய் உத்தரவாய்ப் பேசுவான். இப்படிப் பேசாதே என்று பலமுறை சொல்லியும் அந்தப் பழக்கம் அவனிடமிருந்து போகவேயில்லை.
சுகுமார் மிக நல்லவன்தான். அம்மாவுக்கு சின்ன தொந்தரவு ஏற்பட்டாலும் ஓடிப்போய் என்ன வேண்டுமென்று உடனே விசாரிக்கிறவன்தான். ஆனால், பேச்சு மட்டும் தான் கூரையைப் போய் இடிக்கிற வண்ணம் உரத்த குரலில் இருக்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ‘சுகுமாரன் ஏதோ சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான்’ என்றே நினைத்துக் கொள்வார்கள்.
சுகுமாரன் மனைவி அவனுக்குப் பரிமாறிக் கொண்டே அவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.
என்னம்மா உனக்கு இந்த வீடு புடிக்கலையா. நீதான் வேண்டாம்னு சொன்னியா.
மெல்ல அன்னபூரணி மருமகள் பக்கம் திரும்ப, கலாவதி கரண்டியைக் குழம்பில் போட்டு விட்டு ஐயையோ... நான் இல்லை. மாமி
என்று கைகூப்பினாள்.
இந்த விஷயத்தை இவர் பேச ஆரம்பிச்சவுடனேயே தெரியும். உடனே நீங்க என் பக்கம்தான் திரும்புவீங்க; என்னைத்தான் கேள்வி கேட்பீங்கன்னு. நான் வாயே திறக்கலை மாமி
என்று சொன்னாள்.
ஏன், ஏன் பயப்படற எங்கம்மா என்ன புலியா, சிங்கமா உன்னை அடிச்சே தின்னுடுவாங்களா பெசன்ட் நகர் புடிச்சிருக்குன்னு நீ சொல்லலியா. காந்திநகர், அடையார், திருவான்மியூர் இதெல்லாம் உனக்குப் புடிச்சிருக்குன்னு சொல்லலியா. அம்மா கேட்டவுடனே நான் சொல்லலை... நான் சொல்லலைன்னு எல்லாரும் ஓடிப்போயிடறீங்களே என்ன விஷயம் நீ சொன்னன்னு சொல்லு. என்னா பண்ணிருவாங்கன்னு பார்த்துவிடலாம்.
மறுபடியும் மகன் கத்தினான்.
மருமகள் பின்வாங்குவதும் மகன் முன்னேறுவதும் பார்த்து அன்னபூரணி வாய்விட்டுச் சிரித்தாள்.
பெசன்ட் நகர் பத்தி என்னா சொன்னேன்னு சொல்லேண்டி நான் என்ன அவன் சொன்னா மாதிரி அடிச்சி தின்னுடவா போறேன்
மருமகளைப் பார்த்து சாதாரணமாகப் பேசினாள்.
நான் அந்த இடமெல்லாம் போனேதே இல்லை மாமி. நான் மெட்ராஸுன்னு வந்தா, எங்க சித்தப்பா இருக்கற வண்ணாரப்பேட்டையில் தங்குவேன். ஐலேண்ட் கிரவுண்டு எக்ஸிபிஷன் போவேன். சாந்தி தியேட்டர், கேஸினோ தியேட்டர், சித்ரா தியேட்டர்னு மூணுதான் போயிருக்கறேன். ஏதோ ஒரு தடவை மயிலாப்பூர் திருவிழாவுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. உள்ள போக முடியலைன்னு ஒரு நாலு மூலை ரோடுக்குப் போய் நின்னுட்டு, அப்படியே திரும்பி வந்துட்டோம்.
அதனால... என்னா... அதைச் சொல்லு.
பிள்ளை மனைவிக்கு எடுத்துக் கொடுத்தான்.
அவர்கள் இரண்டு பேரையும் அன்னபூரணி ஆச்சரியத்துடன் பார்த்தாள். மழை இன்னும் அதிகமாயிற்று.
முந்தாநேத்து பெசன்ட் நகருக்குள்ள இவர் அழைச்சிட்டுப் போனவுடனே அப்படியே திகைச்சு போயிட்டேன். ‘மெட்ராஸ்ல இப்படியொரு இடம் இருக்கா. ஃபாரின் மாதிரி இருக்கே’ அப்படின்னு சொன்னேன். நான் சொன்னது இவருக்குப் புடிச்சுப் போச்சு. தெருத் தெருவா ஸ்கூட்டர்ல சுத்துனாரு. அங்கேயிருந்து அடையார் போனோம். திருவான்மியூர் போனோம். அப்படியே கிண்டி பக்கம் இருக்கற இடத்துக்குப் போனோம். எல்லா இடமும் ரோடு முழுக்க மரமுமா, வீடு முழுக்க செடியுமா, பெரிய பெரிய பங்களாவா, அதிகமா ஆள் நடமாட்டம் இல்லாம இருந்தது. திரும்ப சிந்தாதிரிப்பேட்டைக்குள்ள நுழையும் போது ஐயோ... மறுபடியும் இங்க வரவேண்டியிருக்கேன்னு ஒரு நோவு இருந்தது நிஜம்தான்.
அதனாலத்தான் சொல்றேன். இந்த வீட்டை அப்படியே சப்ஜாடா சேட்டுக்கு வித்துட்டு பெசன்ட் நகர் பக்கம், திருவான்மியூர் பக்கம் போயிடலாம். இந்த வீடு எழுவத்தஞ்சு எண்பது ரூபாய்க்குப் போகும். பெசன்ட் நகர்ல நாப்பது, அம்பது ரூபாய்க்குத் தோட்டம் தொறவோட நல்ல வீடு வாங்கி நிம்மதியா செட்டில் ஆயிடலாம்.
அதுக்கப்புறம்...?
அன்னபூரணியம்மாள் நிதானமாகக் கேட்டாள்.
என்னா... அப்புறம்.
சாப்பாட்டுக்கு என்ன வழி.
எங்கனா... எதுனா... வேலை பார்த்துக்க வேண்டியதுதான்.
எங்கனா... எதுனா... இதுவரைக்கும் நீங்க ஏன் வேலை பார்க்கலை.
கடைசியில... உடனே அதைக் குத்தி காமிச்சிடுவீங்களே
சோற்றிலிருந்து பிள்ளை சுகுமார் கை உதறினான். மருமகள் கலாவதி அவன் தோளில் கைவைத்து அமைதியாக இருங்கள் என்பது போல சொன்னாள். உடனே அமைதியானான்.
மருமகள், மகனை - விரல் நுனியில் வைத்திருக்கிறாள் என்பது தெளிவாகப் புரிந்தது. மெல்லியதாய் சிரிப்பும் வந்தது.
நான் டயர் கம்பெனியில வேலை பார்க்கலையா. அச்சாபீஸ்ல வேலை பார்க்கலையா. மகாராணி தியேட்டர்ல மூணு வருஷம் வேலை பார்க்கலையா. நாலு மாசம் சும்மா இருந்தா குத்தலாப் பேசறீங்களே.
அம்மா எங்க குத்தலா பேசினாங்க. ஏன் இத்தனை நாள் வேலை பார்க்கலேன்னுதான் கேட்டாங்க. அதுக்குக் காரணம் சொல்லுங்களேன்
மருமகள் எடுத்துக் கொடுத்தாள்.
இனிமே வேலைக்குச் சேர்ந்தா வுட்டுட்டு வராத வேலையா, நல்ல வேலையா சேரணும். அதனாலதான் நான் எல்லா இடமும் ஒத்துக்கலை.
என்னிக்கு கிடைக்கும் நல்ல வேலை.
எப்ப வேணா கிடைக்கும். ஆறேழு இடத்துல சொல்லி வச்சிருக்கேன்.
ரொம்ப சந்தோஷம். வேலை கிடைக்கட்டும். சம்பளம் வரட்டும். உன் சம்பளத்து யோக்கியதை வச்சுட்டு வீடு விக்கறத பத்தி தீர்மானம் பண்ணலாம்.
விலைக்கு வரபோது வித்துடலாமே.
டேய்... இது எப்பவுமே விலைக்குத் தயாரா இருக்கற பொருள். விக்கறேன்னு சொன்னா போதும் நாலா பக்கத்துலேர்ந்தும் ஜனங்கள் வந்து நின்னு என்னா விலை... என்னா விலைன்னு கேட்பாங்க. இது விக்க முடியாத விஷயம் இல்லை
ஆனா... இப்படியே போட்டு வச்சிருந்தீங்கன்னா கட்டடம் பாழாபோயி விலை மட்டமா போவும்.
இந்தக் கட்டடம் பாழாகறதுக்கு இன்னும் இருவது வருஷம் ஆகும். அதுக்கு முன்னாடி வித்துடலாம் கவலைப்படாத.
மெல்லிய குரலில், ஆனால், உறுதியான முறையில் அன்னபூரணியம்மாள் மகளிடம் பேச, மகனும், மருமகளும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஏன்தான் இப்படிக் கோவிச்சுக்கறியோ தெரியலை
மகன் சட்டென்று அலுத்துக் கொண்டான்.
யாராவது உறுதியாக, நிறைவாகப் பேசினால் சுகுமாரன் பயந்து விடுகிறான். எப்படி மாற்றுவது என்று தெரியாமல், எப்படி எதிர்ப்பது என்று புரியாமல் தடுமாறி விடுகிறான்.
இதுதான்... இதுதான்... கொட்டுகிற மழையில ஆடுகிற புத்தி. மழையோடு பேசத் தெரியாத புத்தி. மழையை எப்படி வரவேற்பது என்று அறியாத முட்டாள் தனம்.
நீ வேகமாக பூமியைத் தாக்குகிறாயா, நான் நடுவே நின்று உன்னை விட வேகமாக ஆடுகிறேன் பார். என்னைத் தாக்கிப்பார் என்று மழையை தேவையற்று சவாலுக்கு அழைக்கும் தெளிவற்ற குணம். மழை மனிதரைத் தாக்க வரவில்லை என்பது புரியாத புத்தி.
உலகத்தில் ஒவ்வொரு விஷயத்தோடும், ஒவ்வொரு விதமாகத் தொடர்புகொள்ள வேண்டும். எதனோடு எப்படித் தொடர்புகொள்ள வேண்டும் என்று தெரிந்தவர்கள் மிகச்சிலரே.
தனக்கு மட்டும் இந்த நிதானம் எப்படி வந்தது.
மழையை ரசிக்கின்ற புத்தி, கடலோடு பேசுகின்ற புத்தி, மணலில் அழுந்த நடந்து, அதை அனுபவிக்கிற புத்தி, காற்றை ஆழ இழுத்து நிதானமாய் சுவாசிக்கிற புத்தி, மேகங்களுக்கு நடுவே மிதக்கின்ற நிலவை குளிரக்குளிர பார்க்கின்ற புத்தி, சூரியனை வணங்குகின்ற புத்தி, காடுகளுக்கும், மலைகளுக்கும் ஊடே போகும்போது அவைகளை அதிசயமாய்க் காணுகிற புத்தி தனக்கு மட்டும் எப்படி வந்தது.
தன்னுடைய புருஷனால் ஏற்பட்ட புத்தி இது. புருஷன் கற்றுக் கொடுத்து வரவில்லை. புருஷனுக்கு இந்தப் புத்தி இல்லை என்று தெரிந்ததும், புருஷன் இதற்கு எதிர்ப்பதமாய் இருக்கிறான் என்று தெரிந்ததும், புருஷனை விட்டு மனம் விலகி, புத்தி இப்படி இயற்கையை ஸ்நேகம் கொள்வதில் அதிகப்படுத்திக் கொண்டு விட்டது.
‘ஆஹா... ஆஹா... என்னா தொடை... என்னா தொடை... எழுந்து நின்னா ஏழு அடி இருப்பா போலிருக்கு. எப்படித் தின்னாலும், எவ்வளவு தின்னாலும் போறாது" என்று இருட்டு அறையில் சின்னத் திரையில் அவிழ்த்துப் போட்டு ஆடும், மெத்தையில் புரளும் ஐரோப்பிய பெண் பிள்ளைகளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, தன் புத்தி திசை மாறிவிட்டது.
எதுனா டிரிபிள் எக்ஸ் இருக்குதா.
கடையில் ஏறினவுடன் கூச்சமில்லாமல் விசாரிக்க, அவள் புருஷனால்தான் முடியும்.
கடைக்காரர் ரகசியமாய் எடுத்துக் கொடுக்க இதுதானே... இதைப் பார்த்திருக்கேன். எங்கிட்டயே இருக்குது. மொத்தம் நாப்பது கேசட் வச்சிருக்கேன்
பல் தெரிய அந்த வியாபாரி கூச்சப்பட, உரத்த குரலில் பேச அன்னபூரணியின் புருஷனுக்கு இயல்பாய் வரும்.
என்னா தப்பு. மனுஷாளா பொறந்தவன் நாலு விதத்தையும் அனுபவிக்கதான் செய்யணும். நம்ம என்னா அடுத்தவன் பொண்டாட்டியையா கைய புடிச்சி இழுத்தோம். இதுக்குன்னு ஆடறவங்களை ஆடவுட்டு வீடியோ போட்டு விக்கறான். நாம துட்டை போட்டு வாங்கறோம். இதை ஏம்ப்பா... அரசாங்கம் தடை பண்ணியிருக்குது நம்மூர் சினிமால துணி போட்டுட்டு ஆடறாங்க. வெளியூர் சினிமால துணியில்லாத ஆடறாங்க. அவ்ளோ தானே வித்தியாசம். நான் மட்டும் சட்டசபையில நுழைந்தேன்னு வச்சுக்க நாக்கைப் புடிங்கிக்கற மாதிரி கேள்வி கேட்பேன்.
ஆனால், நாக்கைப் பிடுங்கிக் கொள்வது போல் சாவு வந்துவிட்டது.
வயிற்றுவலி, மூச்சிரைப்பு, தலைசுற்றல், பசியின்மை, கடும் அயர்ச்சி, கைகால் அரிப்பு என்று பலவித காரணங்களுக்காக டாக்டரிடம் போக, எல்லாவற்றுக்கும் மருந்து எழுதி இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கிவிட்டு, ரத்தப் பரிசோதனையும் செய்துவிட்டு திரும்பி வரும் போது, டாக்டர் அவளைத் தனியே கூப்பிட்டு, உங்க புருஷனுக்கு எய்ட்ஸ் இருக்கும்மா. நீங்களும் தயவுசெய்து செக் பண்ணிக்கோங்க
என்று எச்சரித்து அனுப்பினார்.
அவளுக்கும் உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. வியாதி இல்லை என்று சொல்லப்பட்டது. இதைச் சொல்வதா வேண்டாமா என்று வீடு தவித்தது.
சொல்வதில்லை என்று முடிவு செய்து சில காலம் காத்திருந்தது.
ப்ளட் டெஸ்ட் ரிப்போர்ட் வரவில்லையே என்று அவனாக சோதனைச் சாலைக்கு போன் செய்து ‘ராமலிங்கம் ப்ளட் ரிப்போர்ட் வரலீங்களே’ என்று கேட்க சொல்லிட்டோமே எய்ட்ஸ் இருக்குதே
என்று அவர்கள் குரல் கொடுத்து விட்டார்கள்.
சமையல் அறைக்கு அருகேயுள்ள நாற்காலியில் அமர்ந்து ஆனால், அவன் முகத்தில் அறைந்துகொண்டு அழுதான். குப்புறப்படுத்துக் கொண்டான். யாராவது அருகில் வந்தால் தள்ளிப் போங்கள் என்று கத்தினான். கொன்னுட்டீங்களே... என்னைக் கொன்னுட்டீங்களே என்று உரக்கக் கூவினான்.
யார் கொன்றது என்று கடைசிவரை சொல்லாமல் இருந்தான். எதனால் ஏற்பட்டது என்பதை வாய் திறந்து பேசாதிருந்தான். கதறி அழுதான். அவள் காலைப் பிடித்துக்கொண்டு விக்கினான். உனக்குத் துரோகம் பண்ணிட்டேன்டி என்றான்.
டிரிபிள் எக்ஸ் கேசட்டையும் டி.வி.யையும் கல்லால் உடைத்து நாசமாக்கினான்.
விபூதி இட்டுக் கொண்டான். பூஜை அறைக்குப் போய் உட்கார்ந்து கைகூப்பி கைத்தல நிறைகனி... என்று இரண்டு வரி பாடினான். மூன்றாம் வரி பாட முடியாமல் அழுதான். மறுநாள் காலை டைனிங் டேபிள் மீது சேர் போட்டு, சேர் மீது ஏறி நின்று, மேலே இரண்டு உத்திரங்களுக்கு நடுவே மின்விசிறி மாட்டுவதற்காக இருந்த இரும்புக் கழியில் கயிறு போட்டு இறுக்கி இழுத்து மறுமுனையில் மாட்டிக்கொண்டு வெகுநேரம் நின்றபடி இருந்து பிறகு பளிச்சென்று உதைத்து இறந்து போனான்.
இரவு, நாற்காலி உருண்டு விழும் சத்தம் கேட்டு, எல்லோரும் எழுந்து கொண்டார்கள். என்னா... என்னா... சத்தம் என்று படுக்கையை விட்டு எழுந்திருக்காமல் கேட்டார்கள்.
அன்னபூரணி மட்டும் கதவு திறந்து எங்கே சப்தம் என்று பார்க்க, புருஷன் தொங்கி ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அலறினாள். ஓடிப்போய் காலைத் தூக்கினாள். ஆனால், அதற்குள் கழுத்து உடைந்துவிட்டது. இறக்கி தரைக்குள் படுக்க வைப்பதற்குள் பிராணன் போய்விட்டது.
மருந்து மாத்திரை சீட்டின் பின்பக்கத்தில் இரண்டே வரி எழுதி கையெழுத்து போட்டிருந்தான். அதன் மீது மருந்து மாத்திரை டப்பாவைக் கனமாக வைத்திருந்தான்.
நான் மறுபடி பிறப்பேன் நல்லவனாய்
ராமலிங்கம் தேதி, நேரம் எழுதியிருந்தான்.
அந்தத் தேதியும், நேரமும்தான் அவன் மரணத்தில் உறுதியாயிருப்பதை அவளுக்குத் தெரிவித்தது.
அந்தக் காகிதத்தை அவள் ஃப்ரேம் செய்து தன் அறையில் மாட்டிக் கொண்டிருக்கிறாள்.
மகன் புருஷனைப் போலவே எல்லாவற்றையும் பற்றிப் பேசுவதை அடிக்கடி வியப்போடு கவனிப்பாள். புருஷனைத் தவறவிட்டதுபோல், மகனைத் தவறவிட அவள் தயாராக இல்லை. அதே நேரம் இந்த வீட்டின் மேன்மைக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
ஏதேனும் செய்ய வேண்டும், மிக நிச்சயம் செய்ய வேண்டும். என்ன செய்யவேண்டும் என்று யோசிக்கத்தான் அடிக்கடி ரேழிக்கு வந்து விடுகிறாள்.
இப்போது ரேழிக்கு வந்தபோது, மழை கனத்துப் பெய்தது. மழை அதிகரிப்பில் ஏதோ தவறாகி மின்சாரம் சட்டென்று நின்றது. இருள் அடர்ந்து சுற்றிக் கொண்டது.
மருமகள் மெழுகுவர்த்தியோடு ரேழிக்கு வந்து மர ஸ்டூலில் நிற்க வைத்தாள். அவள் அருகே வந்து நாற்காலியில் உட்கார்ந்தாள்.
‘வீடு விக்க வேணாங்கறியா’ மிருதுவான குரலில் கேட்டாள்.
ஆமாம்
அன்னபூரணி பதில் சொன்னாள்.
வேற என்ன பண்ணலாங்கற
இப்போது அவன் குரல் மெதுவாக இருந்தது.
இருட்டும், மழையும் அவளை மென்மைப்படுத்தியிருக்க வேண்டும்.
இயற்கை மனிதர்களுக்கு நல்ல குணங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. வெகு சிலர்தான் கற்றுக்கொள்கிறார்கள். இருட்டிலிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய இருக்கிறது. ஒருவேளை மகன் சுகுமாரன் இப்பொழுதுதான் கற்றுக்கொள்ளத் துவங்கியிருக்கிறானோ தெரியவில்லை.
அவள் சுகுமாரனைப் பார்த்துத் திரும்பினாள்.
கொஞ்ச நேரம் சும்மாயிரு.
எதுக்கும்மா. எதுக்கு சும்மாயிருக்கறது.
நல்லா யோசிக்கறத்துக்கு.
அன்னபூரணி பதில் சொன்னாள்.
அவனுக்கும், மருமகளுக்கும் அவள் பேச்சு புரியவில்லை. ஆனாலும், அவர்கள் மௌனமாக இருந்தார்கள்.
2
ஆனாலும் அவளும் இப்படித்தான் புலம்பிக் கொண்டிருந்தாள்.
"புருஷனா நீ, வெட்கமா