Inba Puthaiyal
By P.M. Kannan
()
About this ebook
பிரபாகரின் தங்கையின் தோழி வசந்தி...இவர்கள்
திருமணம் நடக்க இருக்கும் போது நின்று விடுகிறது.
பிரபாகருக்கும் திருமணம் ஆகிறது...
வசந்திக்கும் திருமணம்... ஹ்ம்ம் ஆகிவிட்டது..
எதிர்பாராத விதமாக இருவரும் மீண்டும் சந்திக்க நேர்கிறது.
முடிவு இன்பப் புதையலா.???
இல்லையா???
மனித மனங்களின் உணர்ச்சி போராட்டங்கள்....
Read more from P.M. Kannan
Nagavalli Rating: 0 out of 5 stars0 ratingsInba Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Madhuvum Rating: 0 out of 5 stars0 ratingsPavazha Maalai Rating: 0 out of 5 stars0 ratingsNilave Nee Sol Rating: 0 out of 5 stars0 ratingsPenn Deivam Rating: 0 out of 5 stars0 ratingsVazhvin Oli Rating: 0 out of 5 stars0 ratingsMannum Mangaiyum Rating: 0 out of 5 stars0 ratingsMalar Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakkavillai Rating: 0 out of 5 stars0 ratingsAnnai Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsKannigathaanam Rating: 0 out of 5 stars0 ratingsPennukku Oru Neethi Rating: 0 out of 5 stars0 ratingsThevaanai Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to Inba Puthaiyal
Related ebooks
Putham Puthu Malare! Rating: 3 out of 5 stars3/5Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Kaadhal Thisaigal Rating: 0 out of 5 stars0 ratingsAayul Dhandani Rating: 5 out of 5 stars5/5Thaaraa Thaaraa Thaaraa Rating: 3 out of 5 stars3/5Uyiril Kalantha Geetham! Rating: 0 out of 5 stars0 ratingsKanavu En Kanmani Rating: 0 out of 5 stars0 ratingsNeruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsIni Vazhkkai Inikkum! Rating: 0 out of 5 stars0 ratingsVelvom Rating: 0 out of 5 stars0 ratingsPillai Pulampal Rating: 0 out of 5 stars0 ratingsUchithanai Muharnthal Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Charanadainthen Rating: 5 out of 5 stars5/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Vasantham Varumaa? Rating: 0 out of 5 stars0 ratingsKonchi Pesak Koodaathaa Rating: 0 out of 5 stars0 ratingsகொஞ்சிப் பேசக் கூடாதா Rating: 0 out of 5 stars0 ratingsManasirai Rating: 0 out of 5 stars0 ratingsAnaikka... Anaikka... Rating: 0 out of 5 stars0 ratingsMaara Vendiya Paathaigal Rating: 0 out of 5 stars0 ratingsIrantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsUnakkena Vaazhum Idhayamadi... Rating: 4 out of 5 stars4/5Mana Kathavu Rating: 0 out of 5 stars0 ratingsVensangu Pennaval Rating: 3 out of 5 stars3/5Kaal Rasi Rating: 0 out of 5 stars0 ratingsDevil Score Rating: 0 out of 5 stars0 ratingsDeivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Abaaya Arivippu! Rating: 4 out of 5 stars4/5சினேகிதனே... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Inba Puthaiyal
0 ratings0 reviews
Book preview
Inba Puthaiyal - P.M. Kannan
http://www.pustaka.co.in
இன்பப் புதையல்
Inba Puthaiyal
Author:
பி.எம். கண்ணன்
P.M. Kannan
For more books
http://www.pustaka.co.in/home/author/pm-kannan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
1
அதிர்வெடி ஓசையில் உலகத்தின் ஒரு மூச்சு நின்றது.
வானம் நடுங்கியது. மாதரும் மக்களும் மோதியடித்துக்கொண்டு திசை தெரியாமல் ஓடினர். குழந்தைகளின் கூக்குரல்! பெரியவர்களின் பேரிரைச்சல். கோவிந்தா! எங்கே இருக்கிறாய்...?
சண்முகம்! குழந்தை எங்கேடா?
பாட்டியைக் காணோமே...!
ஐயோ! நசுக்கிவிடுகிறார்களே!
ஆண்டவனே காப்பாற்று...
சாமி! நீதான் துணை...!
இப்படிப் பல குரல்கள் கூட்டத்தின் நெரிசலிலிருந்து பெயர்ந்து வானத்தை அதிரச் செய்தன.
ஏன் இப்படி நெருக்கியடித்துக் கொண்டு மக்கள் ஓடி வருகின்றனர். சற்று முன்னர்தான் வாயில் நாமாவளியும், கையில் ஆரத்தித் தட்டுமாக நின்ற மக்கள் ஏன் இப்படி வெறிபிடித்தாற் போல மேலே மோதியடித்துக் கொண்டு ஓடுகின்றனர்? சே! நீ என்ன மனிதனா. மாடாய்யா?
இடையே ஒரு கிழக் குரல்.
பாட்டி! ஓடு, ஓடு! கோயில் யானை அதிர்வெடிக்குப் பயந்து கூட்டத்துக்குள் பாய்ந்து விட்டது...
-பதில் குரல். உடனே ஓட்டம். ஒரே குழப்பம். ஓட்டம், ஓட்டம், ஓட்டமேதான். குழப்பம், கலவரம், ஆரவாரம்; ஊழியின் இறுதி இதுதானோ?
அரைமணி முன்னர் எத்தனை அழகாக, எத்தனை அலங்காரமாக, எத்தனை கம்பீரமாக, எத்தனை குதூகலமாகத் தென்பட்ட திருவிழாக்கூட்டம் இது! இப்படிப் பேயாட்டம் ஆடுகிறதே!
இத்தனை அமளி துமளிக்கும் இடையே ஏதுமே அறியாதவர் போல மனித அலைகளுக்கு மேலே நிமிர்ந்து, வானத்திலே உயர்ந்து, ஆதவன் ஒளியிலே ஓர் அமுதப் புன்னகையை மலரவிட்ட வண்ணம், ஆண்டவன் பவனி புறப்பட்டிருக்கிறார், அலங்காரத் தேரிலேறி.
அதிர்வெடி ஒலி, புறப்பாட்டின் முன்னறிவிப்பு. கோவிலுக்குப் புதிதாகத் தருவித்திருந்த யானைக்குப் பழக்கம் இல்லையோ என்னவோ, வெடியோசையைக் கேட்டுப் பதறிப்போய்ப் பிளிறிக்கொண்டு பேய் பிடித்தது போலக் கூட்டத்தில் புகுந்து கும்மாளம் போட்டது.
சிதறியோடிய மக்களிலே தாய் எங்கே? சேய் எங்கே? கணவன் எங்கே? மனைவி எங்கே? அண்ணன் எங்கே? தம்பி எங்கே? பாட்டன் எங்கே? பேரன் எங்கே? உற்றம் எங்கே? சுற்றம் எங்கே? எல்லாம் பிரிவு, எல்லாம் சிதறல்!
மிதிபட்ட சேதங்களைக் கவனித்தவர் யார்? தன்னுயிர்தானே வெல்லமாயிருக்கிறது அந்த நேரத்திலே? அப்புறம் தானே. 'ஐயோ, அவனைக் காணோமே, இவனைக் காணோமே,' எல்லாம்?
ஐயோ! அவரைக் காணோமே! அவர் எங்கே?
வசந்திகூட அப்புறம் தான் அலறினாள். ஓடு ஓடென்று ஓடிவந்த பின்னும் மூச்சுத் துரத்தியது அவளை. அவள் அப்போது கூட்டத்திலிருந்து மீண்டு அந்த அகண்ட வீதியின் ஒரு திருப்பத்துக்கு வந்து விட்டாள். அப்புறம் தான் சற்றே நின்று நிதானித்துக் கொண்டு சுற்று முற்றும் பார்க்கத் தோன்றியது அவளுக்கு. பிறகுதான் அவர், அவளோடு வந்த அவர், அருகில் இல்லை என்கிற தெளிவு ஏற்பட்டது. 'எங்கே அவர்?'
அந்தக் கூட்டத்திலும், குழப்பத்திலும் எங்கு சென்றானோ அவன்? எப்படி மறைந்தானோ? தேடிக் கொண்டு வரமாட்டானா எப்படியும்?
ஊர் புதிது வசந்திக்கு. அதற்குமுன் அவள் அங்கே வந்ததில்லை. அப்போதுகூட அவளுக்கு வர விருப்பமில்லை. அவன் தான் அவளைக் கூட்டிவந்தான், வலுக்கட்டாயமாக. எனக்குத் திருவிழாக் கூட்டம் என்றாலே தலையை வலிக்கும். நான் வரவில்லை,
என்று இயன்ற வரை மறுத்துப் பார்த்தாள். அவன் விடவில்லை. ஒரே ஒரு முறை தான் வசந்தி. இது பெரிய திருவிழா. தேர் புதிதாகச் செப்பனிடப்பட்டிருக்கிறது. பெரிய தேர். கண் கொள்ளாக் காட்சியாயிருக்கும்
என்று என்னென்னவோ சொல்லிப் பார்த்தான் அவன்.
தேர்த் திருநாளும், வெயிலும் என் உடம்புக்கு ஆகாது.
பிடிவாதமாய்ச் சொன்னாள் அவள்.
அப்படி என்ன உடம்பு அது? நிறுத்து வைத்தா கொளுத்தப் போகிறார்கள்?
சிவுக்கிட்டது அந்தப் பேச்சைக் கேட்டதும் வசந்திக்கு. ஆம்! நிறுத்து வைத்துக் கொளுத்தினால் மட்டும் வெந்து விடுமா நெஞ்சம்? ம்... யாருக்காகப் பாதுகாக்க வேண்டும் இந்தப் பாழுடலை!
அவளும்தான் கேட்டுக் கொண்டாள் தன்னைத்தானே. அதற்கு மேலே மறுக்கவில்லை அவள். அவனுடன் மௌனமாகவே புறப்பட்டு விட்டாள்.
வீட்டைவிட்டு அவனுடன் அவள் புறப்பட்டது அதுவே முதல் தடவையாகும். அதுவே கடைசி தடவையாகவும் இருக்கும் என்பது தெரிந்திருந்தால் புறப்பட்டிருக்கவே மாட்டாள்.
அவனும், அவளும் கணவனும் மனைவியுமாகி ஓராண்டுக் காலம் ஆகிறது. இந்த ஓராண்டுக் காலத்திலே அவன் ஒரு முறையாவது அவளை அழைத்துக் கொண்டு ஒரு நல்லது கெட்டது என்று எதற்குமே போனதில்லை. அவளும் அதைப் பற்றிப் பொருட்படுத்தியதில்லை.
காலையில் எழுந்து காப்பி குடித்துவிட்டு வெளியே கிளம்பிவிட்டால் அவன் எப்போது வீடு திரும்புவான் என்பது யாருக்குமே தெரியாது. நடுப்பகல் சாப்பாட்டுக்கு வந்தாலும் வருவான்; இல்லாவிட்டாலும் இல்லை. இரவுச் சாப்பாட்டுக்கு மாத்திரம் எப்படியும் வந்துவிடுவான். சாப்பிட்டபின் வீட்டிலேயே தங்கி இரவைக் கழிப்பான் என்பதும் நிச்சயமில்லை. அவன் புத்தி எப்படிப் போகிறதோ அப்படியே அவனும் போவான். அவளும் சரி, அவள் தாயும் சரி, அதைப் பற்றி அவனைக் கேட்கக் கூடாது. கேட்டால் போச்சு. வாய்ப்பேச்சோடு நிற்பான் என்பது இல்லை; கை நீட்டி அடிக்கவும் முற்படுவான்.
அந்த ஓராண்டில் அவள் அவனிடம் வாங்கின அடிகள் அவள் மனத்தை மரக்கட்டை ஆக்கிவிட்டன. அவள் மட்டுமா? தடுக்க வந்த தாயும் அல்லவோ உதை பட்டாள்!
அண்டை அயலில் சொன்னார்கள் அவனைப் பற்றி அறிந்தவர்கள்: 'போயும் போயும் இந்த மூர்க்கனைப் பார்த்துக் கொடுத்தாளே பெண்ணை' என்று. அவள் காதிலும், அவள் தாயின் காதிலும் விழத்தான் செய்தது இந்தப் பேச்சு. ஹூம்...! இந்த அழகான மாப்பிள்ளை வாய்ப்பதற்கே அந்தத் தாய் பட்ட துன்பம்...?
கன்னியாகவே காலம் எல்லாம் கழிந்து போனால் கூடப் பரவாயில்லையே, என்று எண்ணிவிடப் போகிறாளே பெண் என்பதற்காகத்தான், அவ்வப்போது அந்தத் தாய் ஆறுதல் சொல்லுவாளோ என்னவோ! வசந்தி! காலம் இப்படியே போய்விடாது. மாப்பிள்ளையின் குணம் எப்படியும் சீர்பட்டு விடும், பார்,
என்று.
அந்தத் தாயின் ஆசையை ஏன் மறுக்க வேண்டும் என்று எண்ணியும்கூட வசந்தி அவனோடு திருவிழாவுக்கு வந்திருக்கலாம். அம்மணி பெண்ணின் காதோடு காதாகக் கூறினாள்: வசந்தி! ஒரு நாளும் கூப்பிட்டதில்லை, அவன். தேர்த் திருநாளுக்குக் கூப்பிடுகிறான். அந்த ஆண்டவன் தான் அவனுக்கு நல்ல புத்தி அளித்திருக்கிறாரோ என்னவோ. போ, மறுபேச்சுப் பேசாமல். நல்ல புத்தியளித்த தெய்வம் நல்ல எண்ணத்தையும் கொடுக்கட்டும்!
அன்னையின் நம்பிக்கையில் அவள் இன்பக் கனவு காணவில்லை; அன்புப் பிச்சை கேட்கவும், கிடைத்தால் ஏற்கவும்கூட அவள் நெஞ்சில் இடம் இல்லை. இருந்தாலும், அம்மாவின் ஆசையைக் கெடுப்பானேன் என்று தான் புறப்பட இசைந்தாள் புருஷனுடன். அதனுடன் அவன் சுடச் சுடப் பேசிய சொற்களும் சேர்ந்தன.
திருவிழாக் காட்சிகளும், தெய்வ சிந்தனையும் அவள் உள்ளத்தின் வேதனையைக் குறைக்கப் பெரிதும் உதவின. அவள் தன்னை மறந்தாள்; தன் துன்பத்தையும் சற்றே மறந்தாள்; பக்கத்தில் வந்த அவனையும் மறந்தாள். கற்பூரப் புகையும், சாம்பிராணி நெடியும், சந்தன மணமும், உடற் புழுக்கமும் கண்ணை மறைக்க, மூக்கைத் துளைக்க அவள் கூட்டத்தோடு கூட்டமாக நகர்ந்து கொண்டிருந்தாள்.
அப்போது தான் 'திமுதிமு'வென்று பூமியதிரும் ஓசையுடன் மக்கள் ஓடிவரும் ஆரவாரம் கேட்டது. முன்னே சென்றவர்மீது மோதியடித்துக்கொண்டு பின்னிருந்த மக்கள் விரைந்தனர். முன் கூட்டத்திலும் குழப்பம் தொத்திக் கொண்டது. எனவே, எல்லோரும் ஓடினர். திக்குத் தெரியாமல் ஓடினர். ஒருவர்மேல் ஒருவர் இடித்துக்கொண்டனர். எங்கே ஓடுகிறோம் என்று கருதாமல் எல்லோரும் ஓடினர். அவளும் ஓடினாள்.
ஓடிக் களைத்துத் தெருத் திருப்பத்தில் நின்ற பிறகு தான் அவளுக்கு அவனைப் பற்றிய நினைவு வந்ததோ என்னவோ, 'அவர் எங்கே!' என்று தேடலானாள்.
ஆயிரமாயிரம் மக்கள். அலையலையாக முன்னேறும் கூட்டம். ஒவ்வொரு 'பஸ்'ஸுக்கும் மேன்மேலும் மக்கள் வந்து குவிந்தனர். தேர்த் திருநாளுக்கென 'ஸ்பெஷல் பஸ்' வேறு விடுகிறார்கள். நிலைமை அமைதியாயிருந்தாலே அந்தக் கூட்டத்திலே தவறிப்போன ஆளைக்கண்டு பிடிப்பது எளிதல்ல. இப்போது சூறாவளியடிக்கும் கடல் போலக் கொந்தளிக்கும் கூட்டத்திலே எங்கே போய்த் தேடுவாள், அவனை அவள்?
நிலைமை கட்டுக்கடங்க ஏறக்குறைய ஒரு மணிநேரம் ஆயிற்று. அமைதியை வேண்டி அவள் காத்திருக்கவில்லை. அவனுக்காக அலைந்தாள். ஏன்? அத்தனை ஆயிரம் மக்களிலே அவன் ஒருவன் தானே அவளுக்குத் தெரிந்தவன்? அதனால் தானா? அல்லது கட்டின தோஷத்தினாலா? அல்லது அந்த நெருக்கடியின் நிலவரத்தினாலா? அவளைத்தான் கேட்க வேண்டும்.
அதோ போகிறாள் அவள் அந்தத் தெருத் திருப்பத்திலிருந்து. நின்று நின்று பார்த்து அவன் வரக்காணோம் என்று உணர்ந்து தேடிக்கொண்டு போகிறாள் அவனை. கூட்டத்திலே புகுந்து பார்க்கிறாள். கூட்டமில்லாத இடத்திலே நின்று கவனிக்கிறாள். மிதிபட்டு அடியுண்டவர்களைத் தூக்கிச் செல்லுகிறார்களே, அங்கெல்லாம் போய் ஆராய்கிறாள். எங்கேயும் காணோம் அவனை.
மைல் கணக்கில் நடந்து, மணிக்கணக்கில் தேடியது தான் மிச்சம். அவள் கால்களும் மனமும் தத்தளித்துத் தவித்தன. வெயில் உச்சிக்கு ஏறிச் சாயவும் தொடங்கியது. பசி ஒரு பக்கம். கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. அவளால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. ஏன்? நிற்கவும் முடியவில்லை. எதிரே வந்தது யாரென்று கூடத் தெரியாமல் அப்படியே நெடுமரமாய்ச் சாய்ந்தாள்.
எதிர்ப்பட்ட ஆள் எதிர்பாராத நிகழ்ச்சி அது. அவன் தன் போக்கில் வந்து கொண்டிருந்தான், பக்கவாட்டில் இருந்த திருவிழாக்கடைக் காட்சிகளைக் கண்ணுற்றபடியே. திடீரென்று யாரோ தன்மேல் மோதியது கண்டு, மிரண்டு போனான் அவன். ஆனால், அவன் கைகள் இயல்பாகவே எதிர்ப்பட்ட பொருளைப் பிடித்துக் கொள்ளவோ விலக்கித் தள்ளவோ அவனையுமறியாமல் முந்திக்கொண்டன. பலன், அடுத்த விநாடியில் அவன் மார்பின் மீது அவள் சாய்ந்திருந்தாள்.
அவன் நெஞ்சு துணுக்குற்றது. உடல் நடுக்கமுற்றது. முன்பின் அறியாத பெண்ணொருத்தி நடு வீதியிலே ஓர் ஆண் பிள்ளை மேலே வந்து விழுந்தால் என்னமாயிருக்கும் அவனுக்கு? அவன், சமாளித்துக்கொண்டு அவளைத் தடுத்து நிறுத்தி நேர்முகமாகப் பிடித்துக்கொள்ள முயன்றபோது, அவள் அப்படியே 'தொபீ’ரென்று தரையில் சாய்ந்தது. அவனுக்கே பீதியை அளித்தது. அவள் நினைவற்று வீழ்ந்து விட்டாள் என்பதை அறியவே சிறிது நேரம் பிடித்தது அவனுக்கு. அதற்குள் ஒரு சின்னக் கூட்டம் சூழ்ந்து விட்டது அந்த இடத்திலே.
ஐயையோ! யாரோ ஒரு பெண் பிள்ளை மயக்கம் போட்டு விழுந்து விட்டாளே
என்று குரல்கள் எழும்பின. மற்றவரோடு அவனும் - அவளைத் தன்மீது தன்னையறியாமலே தாங்கியவனும்-குனிந்து பார்த்தான்.
அவள் முகம் கவிழ்ந்திருந்தது. கூட்டத்தில் யாரோ ஒருவர் அந்த முகத்தை திருப்பித் தண்ணீர் தெளித்ததைக் கண்டான் அவன். அப்போதுதான் அவனும் அந்த முகத்தைக் கண்டான். துள்ளித் துடித்துப்போய், ஆ! வசந்தி! நீயா?
என்று தன்னையும் மீறிக் கூவி விட்டான்.
உங்கள் பெண்சாதியா ஐயா?
-கூட்டத்தில் ஒருவர் கேட்டது அவனுக்குச் சங்கடத்தைத் தந்தது. இல்லை
என்று தலையசைப்பால் மட்டுமே தெரிவித்ததாக நினைப்பு. ஆனால், அவன் தலை அசைத்ததை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.
உடம்பு சரியில்லை போலிருக்கிறது. இப்படிக் கூட்டத்திலே அழைத்து வரலாமா?
- அடுத்து வந்த இந்தக் கேள்விக்குப் பொருள் என்ன? என்னவாயிருந்தாலும் சரி, அவனை அந்தக் கேள்வி தூக்கிவாரிப் போடச் செய்தது மட்டும் உண்மை.
'இந்தப் பெண் எனக்குச் சொந்தக்காரி அல்ல என்று உரக்கக் கூவிவிடு' என்று அவன் உளைம் எடுத்துரைத்திருந்தால் அது உண்மைக்குப் புறம்பானதாயிருக்கும். ஆம். அவள் அவனுக்குச் சொந்தமில்லை. உலகறிந்த உண்மைதான். ஆனால், அவன் உள்ளம் கொண்ட உறவு முறிந்தபின் இந்த எதிர்பாராத சந்திப்பிலே அது நிலை தடுமாறிப் போயிற்றே! தெளிவிலே தோன்றும் உண்மை, குழப்பத்திலே மூழ்கி மறைவது இயல்புதானே?
கொஞ்சம் சோடாவாவது வாங்கிக் கொடு ஐயா! பசியோ, களைப்போ?
- மற்றொரு கட்டளை.
அவன் பதிலும் சொல்லவில்லை, சோடா வாங்கிவர ஓடவுமில்லை. அதற்குள் யாரோ சோடா புட்டியுடன் வந்து அதைத் திறக்கும் ஓசை கேட்டது. கூட்டத்திலே வேடிக்கை பார்க்கவும், கேள்விகள் கேட்கவும் பலர் இருந்தாலும் சமயசஞ்சீவிபோல் உதவி செய்யவும் சிலர் இருக்கத்தானே இருக்கிறார்கள்?
முகத்தில் நீர் தெளித்து, வாய்க்குள் கொஞ்சம் சோடாவைச் செலுத்திய பிறகு தான் அவள் கண் இமைகள் அசைந்தன.
மலர்ந்த கண்கள் முதல் முதலாக அவனைத்தான் தரிசித்தன, அத்தனை பேர்களுக்கும் இடையே. அவள் திகைப்புற்றாள். அவள் கண் பார்வையில் அவளுக்கு நம்பிக்கையில்லை. பார்ப்பது கண்ணா, உள்ளமா? அவளுக்கே விளங்கவில்லை. சுற்றுமுற்றும் சுழலவிட்டாள் விழிகளை. இந்தக் கூட்டத்திலே அவள் எப்படிச் சிக்கிக் கொண்டாள்?
தன் நினைவு சரியாக வரச் சிறிது நேரம் பிடித்தது அவளுக்கு. அதற்குள் சோடா வாங்கி வந்தவர் மெல்ல அவள் அதைக் குடிக்கும்படியாக இன்சொல் கூறினார். உடலில் தெம்பு ஏற்பட்டு, உள்ளமும் ஒரு நிலைக்கு வந்த பின் அவள் தன் சூழ்நிலையை முற்றும் உணர்ந்தாள். மெல்ல எழுந்து நின்று கொண்டாள். அப்போதும் அவள் எதிரே அத்தனை பேர்களுக்கும் நடுவே அவன் நின்று கொண்டிருந்த உண்மை கண்ணுக்குத் தெரிந்தது. 'நீங்கள்... நீங்கள்' சொற்கள் நெஞ்சிலே பிறந்து, நெஞ்சிலேயே மடிந்தன. உதடுகள் மட்டுமே அசைந்தன. ஒலியைக் காணோம்.
வசந்தி!
என்றான் மெல்ல அவன்.
அவள் அவனைப் பார்த்தாள். அவனும் அவளைப் பார்த்தான். இருவர் கண்களிலுமே திரை மூடியது. பெயரிட்டு அழைத்தவனுக்குப் பேசத் தெரியவில்லை.
இந்த மௌன நாடகத்தைக் கண்டு கூட்டத்திலிருந்த சிலர், கண்களைச் சிமிட்டிக் கதை பேசிக் கொண்டனர். நல்ல உள்ளம் படைத்தவர் ஒருவர், இந்த அம்மாள் உங்களுக்குச் சொந்தமா ஐயா?
என்று நல்ல முறையில் கேள்வி கேட்டார்.
இல்லை, எங்கள் ஊர்.
சமாளித்துக்கொண்டு பதில் சொன்னான் அவன்.
கூட வந்தார்களோ?
குறும்புத்தனமாக ஒரு கேள்வி பிறந்தது கூட்டத்திலே.
இல்லை, இல்லை.
அவள் பதில் சொன்னாள் பதற்றத்துடன்.
அப்போ தனியாகவா அம்மா வந்தாய்?
ஒரு முதியவர் குரல்.
இல்லை. அவரோடு வந்தேன். கூட்டத்திலே அவரைக் காணோம்.
காணோமா? உன் புருஷனைக் காணோமா?
துடித்துக்கொண்டே கேட்டான் அவன்.
ஆமாம். காலை முதல் தேடுகிறேன். இந்தக் கலவரத்திலே எங்கே போனாரோ தெரியவில்லை.
வசந்தி! வா. இரண்டு பேருமாகத் தேடலாம். எங்கேயும் போய்விட மாட்டார். அவரும் உன்னைத்தான் தேடிக்கொண்டிருப்பார்.
மளமளவென்று பேசி முடித்தான் அவன்.
சுற்றியிருந்த கூட்டமும் வழிவிட்டு விலகியது.
அவர்கள் இருவரும் அந்த இடத்தைவிட்டு நடந்தனர்.
அவளிடம் ஆயிரம் கேள்விகள் கேட்க வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. ஆனால், ஒரு கேள்வியைக் கூடக் கேட்க முடியாதபடி உணர்ச்சி நெஞ்சை அடைத்தது.
வசந்தி எப்படி இங்கே வந்தாள்? அவள் எங்கே இருக்கிறாள்? எப்போது திருமணம் ஆயிற்று அவளுக்கு? அவள் மனத்துக்குப் பிடித்தவனாக வந்து வாய்த்திருப்பானா கணவன்? அவன் எப்படி இருப்பான்? தான் இழந்த செல்வத்தை அவன் பத்திரமாகப் பாதுகாக்கிறானோ...? ஹும். பாதுகாக்கும் லட்சணம் தான் தெரிகிறதே இப்போது... சீ! இது அவன் தப்பல்ல. அவனும் அவளைப்போல் கூட்டத்தில் தவறிப் பிரிந்திருப்பான். அவளைத் தேடி எங்கெங்கே அலைகிறானோ அவன்!
ஊர் பெரிய ஊர். தேர் பெரிய தேர். மேலும் அதைப் புதுப்பித்துப் பிரமாதமாக அலங்கரித்துத் திருவிழாவை இந்த ஆண்டிலே முன்னைவிட வெகு சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள். ஏற்கனவே அந்த ஊரிலே தேர்த் திருநாள் என்றால் அமர்க்களப்படும். லட்சக்கணக்கில் மக்கள் பல ஊர்களிலிருந்து வந்து கூடுவார்கள். இந்த ஆண்டிலே இருமடங்கு, மும்மடங்கு கூட்டம். அந்தக் கூட்டத்திலே எங்கென்று தேடுவது அவனை?
எப்படியோ ஊர் முழுவதும், சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தாகி விட்டது. பகல் மறைந்து இரவும் வந்துவிட்டது. திருநாளுக்கு வந்த மக்களில் முக்காலுக்கு மேல் திரும்பியும் போய்விட்டார்கள். எஞ்சியவர்களும் இரவோடு இரவாகப் போய்விடுவார்கள். ஊரே 'ஜில்'லென்று போய்விட்டது. அவனும் திரும்பிப் போய் விட்டானோ?
எப்படிப் போயிருக்க முடியும் அவளை விட்டுவிட்டு? ஒருவேளை அவளும் போய் இருப்பாள் என்று எண்ணித் திரும்பியிருப்பானோ?
இருவருமே இத்தகைய சிந்தனைகளில் திளைத்தபடி தேடிக் களைத்து ஒரு மரத்தடியில் ஒதுங்கினர்.
வசந்தி உட்கார்ந்து விட்டாள். அவனும் மரத்தின் மேல் சாய்ந்து கொண்டு நின்றான்.
வசந்தி! இனி இங்கே தங்கிப் பயன் இல்லை!
என்றான் மெதுவாக.
உம்!
பெருமூச்செறிந்தாள் அவள்.
உன்னை உன் இருப்பிடம் கொண்டுபோய் விடுகிறேன். ஒருவேளை அவர் அங்கே இருந்தால்...?
வசந்தி உதட்டைப் பிதுக்கியது இருட்டில் அவன் கண்ணுக்குத் தெரியவில்லை.
நீ எங்கே இருக்கிறாய் வசந்தி?
சென்னையில்.
சரி, வா. உன்னைக் கொண்டுபோய் விடுகிறேன்.
பஸ் ஏற்றிவிட்டால் போதும். நானே போய் விடுவேன்.
அது சரியல்ல வசந்தி. இந்த இரவு நேரத்தில் நீ தனியாகப் பஸ் ஏறிச் சென்னைக்குப் போவது நல்லதல்ல. எப்படியும் நாலைந்து மணி நேரமாவது பிடிக்கும். உன் வீட்டை அடையும்போது பாதி ராத்திரி ஆகிவிடக் கூடும்,
என்று கவலையோடு கூறினான் அவன்.
உங்களுக்கு வீண் சிரமம்.
இது என்ன சிரமம் வசந்தி? புறப்படு, காரில் போகலாம்!
வசந்தி மறு பேச்சுப் பேசவில்லை. மரத்தடியை விட்டு எழுந்தாள்.
இருவரும் சென்னைக்குச் சென்று அவள் வசிக்கும் வீட்டை அடைந்தபோது இரவு பதினோரு மணிக்கு மேலாகி விட்டது.
வாசலிலேயே காத்திருந்தாள் அம்மணி; வசந்தியின் தாய். கார் ஒன்று வந்து வாசலில் நின்றபோது அவள் இதயம் 'தடக் தடக்'கென்று அடித்துக் கொண்டது. காரில் வரக்கூடியவர்கள் யார் இருக்கிறார்கள் அவளுக்கு? அதுவும் அந்த நேரத்திலே யார் வரக்கூடும்? வசந்திக்குத்தான் என்னமோ, ஏதோ என்று துடித்துப் போனாள் அவள்.
காரிலிருந்து முதலில் வசந்தி இறங்கியது தெரிந்தது அவளுக்கு. பிறகு அவன் இறங்கியதைக் கண்டாள். தெருவின் இருட்டிலே அவனை வசந்தியின் கணவன் என்று எண்ணிவிட்டாள். அதிசயமாயிருந்தது அவளுக்கு. அந்தக் காட்சி.
மாலையில் நேரிட்ட அதிர்ச்சிக்குப் பின்னர் இரவில் கண்ட அதிசயம் அவள் மனத்தின் மீதும் கண்களின் மீதும் நம்பிக்கை இழக்கச் செய்தன.
எது உண்மை? எது பொய்? அந்த அதிர்ச்சியா? அல்லது இந்த அதிசயமா? அவளுக்கே தெரியவில்லை.
வந்தவர்களை வா என்றுகூட அழைக்கத் தோன்றாமல் நிலைப்படியிலேயே நின்று விட்டாள் அம்மணி.
*****
2
நிலைப்படியில் நின்றுபோன தாயைக் காண ஆவலுடன் வந்தாள் வசந்தி. அவன் அவள் பின்னால் வந்தான்.
வசந்தி! நீதானா அம்மா?
தடுமாறும் குரலில் கேட்டாள் தாய்.
ஆமாம் அம்மா.
வசந்தியின் பதிலில் ஆச்சரியம் ததும்பியது. அம்மாவா இப்படிக் கேட்கிறாள்? அவளுக்கே தன்னை அடையாளம் தெரியவில்லை என்றால்
அவர்... அவர்...
வசந்தியின் சந்தேகத்தைப் பொருட்படுத்தாமல் அம்மணி அடுத்த கேள்வியில் திளைத்துத் திக்கு முக்காடினாள்.
அவர்... அவர்,
தாயின் கேள்வியையே பதிலாக அசைபோட்ட வசந்திக்கு அவரை
எப்படி இன்னார் என்று உறவு முறைமை கூறி அறிமுகப்படுத்துவது என்று தெரியவில்லை.
அவர்... அவர், அத்தனை ஆத்திரமாகச் செய்து விட்டு, உம்... அந்தமட்டும் நல்லபடியாகத் திரும்பி வந்து சேர்ந்தாரே! ஆண்டவன் ஒருவன் இல்லையா?
அம்மணியின் பேச்சு வசந்திக்கும் சரி, அவனுக்கும் சரி, புரிந்தும் புரியாததுமான புதிர் போலிருந்தது.
அம்மா! நீ என்னம்மா சொல்லுகிறாய்! இவர், அவர் இல்லை அம்மா.
அவர் இல்லையா? அப்படியானால்?
நமது பெரிய வீட்டுப்பிள்ளை...
என்ன? பெரிய வீட்டுப் பிள்ளையா? பிரபாவா?
ஆமாம் நானே தான்!
சட்டென்று பதில் சொன்னான் பிரபாகர்; வசந்தியை அழைத்து வந்தவன்; அவளால் பெரிய வீட்டுப்பிள்ளை என்று வர்ணிக்கப்பட்டவன்.
அப்படியானால் அவர் உன் கணவர்?
கூட்டத்தில் எங்கேயோ மறைந்து விட்டார் அம்மா. வசந்தி தேடியலைந்து கொண்டிருந்தபோது தற்செயலாக நான் அவளைச் சந்தித்தேன். இருவருமாகச் சேர்ந்து இருட்டும் வரையில் தேடிப் பார்த்தோம். திருவிழாக் கூட்டம் முழுவதும் திரும்பிப் போய்விட்டது. பிறகு ஒரு வேளை இங்கே அவர் தேடிக்கொண்டு வந்திருப்பாரோ என்று எண்ணி, வசந்தியை நான் அழைத்து வந்தேன்.
உனக்கு நன்றி அப்பா. இனி அவனைத் தேடி என்ன பிரயோசனம்?
சலிப்பும் துயரமும் நிரம்பிய குரலில் நிதானத்துடன் கூறினாள் அம்மணி.
'அவர்' என்று முதலில் மரியாதைச் சொல்லிட்டுக் கூறியவள் திடீரென்று 'அவன்' என்று துயரக் குரலில் சலித்துக் கொண்டதைக் கண்டு பிரபாகரே குழம்பினான். ஆனால், வசந்திக்கு ஏதோ புரிந்தது போலிருந்தது. 'அவள் வருமுன் ஒரு வேளை அவன் வந்து அவள் தாய் மனம் புண்படும்படி கூச்சல் போட்டுவிட்டுப் போயிருப்பானோ? அல்லது இனித் தேட இயலாதபடி ஏதாவது...’ நினைக்கவே நெஞ்சு நடுங்கியது. அம்மா! அவர் வந்திருந்தாரா என்ன அம்மா?
பயந்தபடியே கேட்டாள் வசந்தி.
இல்லை. உள்ளே வா.
மேலே ஒன்றும் பேசாமல் அம்மணி உள்ளே திரும்பினாள். நடுங்கும் உள்ளத்துடன் பின் தொடர்ந்தாள் பெண். பிரபாகரும் வேறொன்றும் செய்யத் தோன்றாமல் அவர்களைப் பின்பற்றினான். அவனை அவளும் சரி, அவள் தாயும் சரி வா
என்றுகூட அழைக்கவில்லை. எனினும் அவன் அதைப் பாராட்டவில்லை. அவர்கள் மீது தவறில்லை; சந்தர்ப்பம் அத்தகையது என்பது தெரியாதா என்ன அவனுக்கு! அவர்களோடு இன்று நேற்று ஏற்பட்ட பழக்கமா என்ன, துரும்பைத் தூணாக மதித்துக் குதிப்பதற்கு?
உள்ளே சென்றதும் அம்மணி விளக்கை ஏற்றிவிட்டு மாடத்திலிருந்து ஒரு கடித உறையை எடுத்து வசந்தியின் கையில் கொடுத்தாள். உறையிலிருந்த தாளை உருவி எடுத்து அவசர அவசரமாகப் படித்தாள் வசந்தி.
அட இழவே! இந்தத் தெருக்கூத்து நடத்தத் திருநாள் என்ன வேண்டிக் கிடக்கிறது
என்று வெறுப்புடன் கூறியபடியே கடிதத் தாளையும், மேலுறையையும் கை போன திக்கில் வீசியெறிந்தாள்.
அவள் செய்கை பிரபாகருக்கு வியப்பை அளித்தது. அத்தனை வெறுப்பு உண்டாகும்படி என்ன இருந்தது கடிதத்தில்? எப்படியும் அவள் கணவன் தான் எழுதியிருக்க வேண்டும் அதை. கணவனின் கடிதத்தைப் படித்து விட்டு ஒரு மனைவி பேசும் பேச்சா இது! பிரபாகருக்குச் சிறிது கோபம்கூட வந்தது. 'வசந்தி, எப்படி இருந்த பெண்! எப்படி ஆகிவிட்டாள்! ஏன்?' அவனது நெஞ்சக் குரலுக்கு மறுகுரல் கொடுப்பவர் யார்?
அம்மணிதான் கொடுத்தாள்; நீயும்தான் எடுத்துப் பார் அப்பா, அதை. தப்பு ஒன்றும் இல்லை அதனால்.
பிரபாகர் சற்றே தயங்கினான். வசந்திக்கோ, அவளது தாய் அம்மணிக்கோ எழுதப்பட்ட கடிதம் அது... யார் எழுதியதோ? வசந்தியின் கணவன் தான் எழுதியதாக இருக்கட்டுமே. அவர்கள் விஷயம் அது. அதை அவன் அறிந்து கொள்ள வேண்டும் என்பதென்ன? அம்மணி சொல்லிவிட்டாள், எடுத்துப் பார்க்கும்படி. ஆனால், அவனுக்கு விருப்பமில்லை.
அவன் தயக்கத்தை நொடிப்பொழுதில் உணர்ந்து கொண்டாள் வசந்தி. சற்று முன் அவன் முன்னிலையில் அவள் தன் கணவனைப்பற்றித் துடுக்காகப் பேசியது கூடத் தவறு என்பது இப்போதுதான் தெரிந்தது, அவளுக்கு உள்ளத்து உணர்ச்சிகளைச் சொல்லம்புகள் தொடுக்க அதுவா சமயம்? தனக்குத்தானே வருந்தியவாறு அவள் தன் தாயைப் பார்த்துக் கூறினாள்: அம்மா! அந்தக் கடிதத்தை அவர் எதற்குப் பார்க்க வேண்டும்? நம் கதை நம்மோடு இருக்கட்டுமே.
ஆமாம். இனி மூடிவைக்க என்ன இருக்கிறது? இன்றைக்குத் தெரியாவிட்டாலும் நாளைக்கே நாடு சிரிக்கப்போகிறது.
சிரிக்கட்டுமே! சிந்திக்கத் தெரியாதவர்கள் சிரித்து விட்டுப் போகிறார்கள்! அதற்காக நாம் என்ன பண்ணுவது?
என்று பேசும்போது வசந்திக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
நிலைமை பிரபாகரின் ஆவலையும், உணர்ச்சியையும் தூண்டுவதாக இருந்தது. தாயும், மகளும் பேசிய பேச்சுக்கள் அவர்களது வாழ்க்கையை, முக்கியமாக வசந்தியின் வாழ்க்கையைக் குறிப்பிடுவதாக இருந்தது. அவள் வாழ்க்கையில் அவன் தன்னை அறிந்தோ அறியாமலோ குறுக்கிட்டுவிட்டான். பழைய கதை மறைந்து மறந்திருக்கும் தருவாயில் அவளது புதிய கதை அவன் ஆவலையும் அக்கறையையும் அனுதாபத்தையும் தூண்டுவதாக அமையப்போகிறது என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை.
அம்மணி சொன்னாள், அடுத்தபடியாக: இவள் கணவனுக்கு இவளோடு வாழ விருப்பமில்லையாம். திருநாளுக்குப் போனவன் திரும்பி வரமாட்டானாம். பெண்ணைப் பெற்றவளுக்கு அக்கறையிருந்தால், திருநாள் கூட்டத்திலே போய்ப் பெண்ணைத் தேடிப் பிடித்துத் திருப்பி அழைத்துக்கொண்டு வரட்டும் என்று எனக்கு எழுதியிருக்கிறான்.
எப்போது வந்தது கடிதம்?
வேறு ஒன்றும் தோன்றாமல் பிரபாகர் கேட்ட கேள்வி இது.
கடிதம் தபாலில் வரவில்லை. வீட்டிலேயே என் பெட்டிக்குள் இருந்தது. முன்னேற்பாடாக எழுதி என் பெட்டிக்குள் வைத்து மூடிவிட்டுப் போயிருக்கிறான் பாவி! போவதுதான் போனானே, இந்தப் பெண்ணைக் கூட்டிக் கொண்டுபோய்த் திருநாள் கூட்டத்திலே திண்டாட வைக்க வேண்டுமோ?
என்று அங்கலாய்த்துக் கொண்டாள் அம்மணி.
நீ அதை எப்போது எடுத்துப் பார்த்தாய் அம்மா?
வசந்தி கேட்டாள்.
"மாலையில் தான். ராத்திரி பசியோடு இரண்டு பேரும் திருநாளிலிருந்து திரும்பி வரப்போகிறீர்களே,