Pennukku Oru Neethi
By P.M. Kannan
()
About this ebook
கடைசி பந்தில் சிக்சர்... .இது தான் ஆரம்பம் இந்த கதையில். எழுதப்பட்ட ஆண்டு 1960.
கிரிக்கெட் வீரன் முரளிதரனும் திரைத் தாரகையாக ஆகும் ராகினியைப் பற்றிய கதை..
இந்த கதை பட்டோடி நவாப்-ஷர்மிளா தாகூர், விராட் கோலி அனுஷ்கா ஷர்மா ஜோடிகளுக்கு முந்தைய காலம்..
முரளிதரனின் தங்கையாக வரும் மீரா-ஹரிராஜாவின் காதலை ஏற்கிறார்களா பெற்றோர்கள்..
ஆணுக்கு ஒரு நீதி..பெண்ணுக்கு ஒரு நீதியா ...???முடிவு வரை கீழே வைக்க முடியாத T20 கிரிக்கெட்டின் வேகம்....
Read more from P.M. Kannan
Vazhvin Oli Rating: 0 out of 5 stars0 ratingsInba Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsKannigathaanam Rating: 0 out of 5 stars0 ratingsMannum Mangaiyum Rating: 0 out of 5 stars0 ratingsAnnai Bhoomi Rating: 0 out of 5 stars0 ratingsNesam Marakkavillai Rating: 0 out of 5 stars0 ratingsNagavalli Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Madhuvum Rating: 0 out of 5 stars0 ratingsThevaanai Rating: 0 out of 5 stars0 ratingsMalar Vilakku Rating: 0 out of 5 stars0 ratingsPavazha Maalai Rating: 0 out of 5 stars0 ratingsNilave Nee Sol Rating: 0 out of 5 stars0 ratingsInba Puthaiyal Rating: 0 out of 5 stars0 ratingsPenn Deivam Rating: 0 out of 5 stars0 ratings
Related authors
Related to Pennukku Oru Neethi
Related ebooks
Kilai Nila Rating: 0 out of 5 stars0 ratingsAinthum Moondrum Onpathu Rating: 1 out of 5 stars1/5Kurinji Malar Rating: 4 out of 5 stars4/5Anjangal Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Mel Aanai Rating: 3 out of 5 stars3/5Dhinam Oru Uyir! Rating: 5 out of 5 stars5/5Uyir Kaadhalil Or Kavithai! Rating: 4 out of 5 stars4/5Kanaiyazhi - October 2021 Rating: 0 out of 5 stars0 ratingsIndha Nerathil Ival Rating: 0 out of 5 stars0 ratingsAnaikka... Anaikka... Rating: 0 out of 5 stars0 ratingsPetha Manam Rating: 0 out of 5 stars0 ratingsMr and Mrs Iyer Rating: 0 out of 5 stars0 ratingsPennukku Urimai Thareer! Rating: 0 out of 5 stars0 ratingsOrey Urimai Rating: 0 out of 5 stars0 ratingsKuliratha Margazhi Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsVaazhvil Vetri Rating: 0 out of 5 stars0 ratingsPennodu Oru Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsWhite Nights - Venmayamana Iravugal Rating: 0 out of 5 stars0 ratingsBommai Siragugal Rating: 0 out of 5 stars0 ratingsKavithaiyai Meeri Nindru Rating: 0 out of 5 stars0 ratingsJanuary February Mortuary Rating: 0 out of 5 stars0 ratingsPesum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsSollathan Ninaikkirean! Rating: 0 out of 5 stars0 ratingsMathilukal Rating: 0 out of 5 stars0 ratingsSakkaram Nirpathillai Rating: 0 out of 5 stars0 ratingsManithargal Paathi Neram Thoongukirargal Rating: 5 out of 5 stars5/5Devadas - Azhiyaa Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsJodi Sera Aasai Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Naan Santhithen Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Pennukku Oru Neethi
0 ratings0 reviews
Book preview
Pennukku Oru Neethi - P.M. Kannan
http://www.pustaka.co.in
பெண்ணுக்கு ஒரு நீதி
Pennukku Oru Neethi
Author:
பி.எம். கண்ணன்
P.M. Kannan
For more books
http://www.pustaka.co.in/home/author//pm-kannan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
அத்தியாயம் 32
அத்தியாயம் 33
அத்தியாயம் 34
அத்தியாயம் 35
அத்தியாயம் 36
அத்தியாயம் 37
அத்தியாயம் 38
அத்தியாயம் 39
அத்தியாயம் 40
அத்தியாயம் 41
அத்தியாயம் 42
அத்தியாயம் 43
அத்தியாயம் 44
அத்தியாயம் 45
அத்தியாயம் 46
அத்தியாயம் 47
அத்தியாயம் 48
அத்தியாயம் 49
அத்தியாயம் 50
அத்தியாயம் 51
அத்தியாயம் 52
அத்தியாயம் 53
அத்தியாயம் 54
அத்தியாயம் 55
அத்தியாயம் 56
அத்தியாயம் 57
அத்தியாயம் 58
அத்தியாயம் 59
அத்தியாயம் 60
அத்தியாயம் 61
அத்தியாயம் 62
அத்தியாயம் 63
அத்தியாயம் 64
அத்தியாயம் 65
அத்தியாயம் 66
அத்தியாயம் 67
இந்த நாவல்
இந்த நாவல் எனக்கு ஒரு புதிய சோதனையைத் தந்தது. இந்தச் சோதனையில் வெற்றி பெறுவேனோ மாட்டேனோ என்கிற திகிலும் ஐயப்பாடும் கடைசி அத்தியாயத்தை எழுதி 'முற்றும்' போடும் வரையில் தொடர்ந்தன. ஏன்? பிறகுகூட நெடுநாள் வரையில் முழு நாவலையும் தொடக்கத்திலிருந்து முடிவு மட்டும் கோவையாகச் சேர்த்துப் படித்துப் பார்க்கப் பயந்தேன். காரணம் இந்த நாவலை எழுதும் முறையில் புதிய பாணியைக் கையாண்டது தான்.
சாதாரணமாக, பாத்திரப் படைப்பிலே பெரிதும் கவனம் செலுத்தி, கதையை அமைத்துக் கொண்டதும் பாத்திரங்களுக்கெனவே நிகழ்ச்சிகளைக் கதைக்கு முரண்படாமல் சிந்தித்துத் தெளிந்து மனித இயல்பையும், மனிதப் பண்பையும் ஒட்டி வாழ்க்கைக்கு ஒத்த முறையில் எழுதுவது என் வழக்கம். அதை என் வாசகப் பெருமக்களும் நன்குணர்ந்திருக்கின்றனர்.
இந்த நாவலில் நிகழ்ச்சிகளை முக்கியமாக வைத்து அவற்றை நடத்தி வைக்க, பாத்திரங்களைப் படைத்துக் கதையை ஓட்டியிருப்பதாக வாசக அன்பர்கள் கருதினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் நான் செய்தது அதுவல்ல. கதையையும் பாத்திரங்களையும் வழக்கம் போலவே நன்றாகச் சிந்தித்து அமைத்துக் கொண்டு, நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்துக் கதைக்கு அதிக ஓட்டம் ஏற்படுத்தியிருக்கிறேன்.
இதைப் பாராட்டிப் பல வாசகப் பெருமக்கள் எனக்குக் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். பாத்திரப் படைப்பும் கதையோட்டமும் ஒன்றையொன்று மிஞ்சுகிறது என்று ஓர் அன்பர் எழுதுகிறார்.
நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்ததில் பாத்திரப் படைப்பு முழுமை பெறுமோ பெறாதோ என்கிற அச்சம் தேவையில்லை என்று அக்கடிதங்களின் வாயிலாகவும், இலக்கிய அன்பர்கள் இந்த நாவலைப் படித்து விட்டு எடுத்துரைத்த கருத்துக்களினின்றும் அறிந்தேன். பிறகுதான் நாவலை முழுமையாகப் படித்துப் பார்த்தேன்.
படித்துப் பார்த்த பின்னரே வாசகர் கூற்றும், இலக்கிய அன்பர்கள் கூற்றும் உண்மை என்கிற தெளிவு ஏற்பட்டது எனக்கு. என் பயமும் நீங்கிற்று.
முரளீதரன், விஜயகுமார், ராகினி, மீரா, லதா, சூடாமணி, ஹரிராஜா, கௌசல்யா, ஜனார்த்தனம், ஏன் டைரக்டர் கோரக்நாத் உள்பட எல்லாப் பாத்திரங்களுமே நன்றாகத் தான் அமைந்திருக்கின்றனர் என்று அவர்கள் கருதுகின்றனர். என் நன்றி கலந்த வணக்கம் அவர்கள் எல்லோருக்கும்.
பி. எம். கண்ணன்.
தாம்பரம்.
3-3-62
*****
1
டப்!
ஐம்பதினாயிரம் இதயங்கள் ஆகாயத்தில் எழும்பின.
ஒரு லட்சம் கண்கள் உச்சிவானத் தொட்டு இறங்கி ஒரே திசையை நோக்கின.
அதே லட்சம் கால்கள் ஆசனங்களை விட்டு எழுந்து ஆனந்தத் தாண்டவம் புரிந்தன.
வாத்தியங்கள் ஊதின. டமாரங்கள் முழங்கின. தாளங்கள் இரைந்தன. தொப்பிகள் வானத்தில் கிறு கிறுவென்று சுழன்றன. கைக்குட்டைகள் காற்றில் மிதந்தன. கமலாப் பழங்களும், வாழைப்பழங்களும், பூப்பந்துகளும் பறந்தன.
அகில இந்தியாவிலும் உள்ள ஆயிரக்கணக்கான ரேடியோ செட்டுகள் ஆரவாரம் செய்தன. அவற்றைச் சூழ்ந்திருந்த ஆயிரமாயிரம் மக்களின் செவிகள் மகிழ்ச்சிக் கடலில் கப்பலோட்டின.
கடிகார முட்களும் மணி ஐந்து காட்டின.
வேண்டியது இரண்டு; கிடைத்தது ஆறு. கேட்கவா வேண்டும் மகிழ்ச்சிக்கு?
ஒரு நிமிஷம் முன்பு தான் -
ஒன்றாவது கிடைக்காதா என்று ஒடுங்கி நடுங்கிக் கொண்டிருந்த உள்ளங்கள் அவை! ஒன்று கிடைத்தாலும் வெற்றி தோல்வி இன்றிச் சமமாக முடியுமே! ஒன்றுமே கிடைக்கா விட்டாலும் போதும், அந்த அணுகுண்டு அந்த ஒருவனைக் கொல்லாமலிருக்க வேண்டுமே!
அந்தக் கடைசி விநாடியிலே, அந்தக் கடைசி பந்தின் கருணையில்தான் அத்தனை உயிர்களும் ஊசலாடிக் கொண்டிருந்தன. அது கொல்லுமா, வெல்லுமா, அல்லது ஒன்றுமே செய்யாமல் வெறும் புஸ்வாணமாகப் போய்விடுமா?
வெற்று வேட்டாகப் போனாலும் பரவாயில்லை; வெல்லாவிட்டாலும்கூடப் பாதகமில்லை. ஆனால் கொல்லாதிருக்க வேண்டுமே! இதுதான் எல்லா இதயங்களின் பிரார்த்தனையும்.
அந்தக் கெடுபிடி நேரத்திலே, அத்தனை இதயங்களையும் துள்ள வைத்து அபாரமாக மட்டையை வீசி, கொல்ல வந்த பந்தை வெல்லக் கட்டியாக்கி வெற்றிச் சின்னமாக மாற்றி, ஆறு ஓட்டங்கள் எடுத்து ஜயக்கொடி நாட்டிவிட்டான் அவன்.
மலர் மாலைக்குன்றுகளுக்கிடையே தலைகாட்டும் மாலைக்கதிரவன் போல் நின்ற அவனைக் காமிராக் கண்கள் சூழ்ந்து கொண்டன. கையெழுத்துப் பட்டாளம் வேறு கப்பிக் கொண்டது!
எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்து ஏறுநடை நடந்து அவன் மைதானத்தை விட்டுப் 'பெவிலிய’னில் நுழைந்தபோது காப்டன் கை குலுக்கினார். காத்திருந்த மங்கை ராகினி கண்ணீர் உகுத்தாள்.
பலேடா முரளி! அடித்த 'வின்னிங் ஷாட்', இந்த நாட்டின் கிரிக்கெட் வரலாற்றுக்கே ஒரு புதிய திருப்பம் அளித்து விட்டது!
என்று பாராட்டுக் கூறினான் பக்கத்தில் நின்ற நண்பன் விஜயகுமார்.
விஜி!
என்றான் முரளி வெள்ளைப் பற்கள் தெரிய முறுவலித்துக்கொண்டே. அதற்குமேல் பேச வாய் வரவில்லை அவனுக்கு. எதிரே நின்ற மங்கையின் கண்ணீரைக் கண்டு விட்டான். ஏற்கெனவே வெற்றிப் பெருமிதம் நிரம்பி வாய் பேச வராமல் தடுமாறும் உள்ளத்தை அந்தக் கண்ணீர் மேலும் விம்மச் செய்துவிட்டது.
அது வெறும் கண்ணீர் அல்ல; அவள் இதயத்தினின்றும் ஊற்றெடுத்துப் பெருகும் இன்பத்தேன், அவள் எத்தனை பரவச நிலையில் இருந்தாள் என்பதைக் காட்டியது.
அவளை ஒரு பார்வை பார்த்தான் முரளி. அந்தப் பார்வையில்தான் எத்தனை பொருட்செறிவு இருந்தது!
அவள் தலை குனிந்தாள். அவள் கண்களில் மிதந்த தேன் துளிகள் அவள் மார்பில் பட்டுத் தெறித்தன.
அவள் பக்கத்தில் நின்றிருந்த நடுத்தர வயதுப் பெண்மணியொருத்தியால் தான் அந்த நிலையில் பேச முடிந்தது.
முரளி! உங்கள் வெற்றியை எங்கள் வீட்டிலே ஒரு விருந்து வைத்துக் கொண்டாடப் போகிறேன்,
என்றாள் அந்தப் பெண்மணி மகிழ்ச்சிக் குரலில்.
விருந்தா. பேஷ் பேஷ்! எப்போது அம்மா?
என்றன் முரளியின் நண்பன் விஜயகுமார்.
இன்று இரவேதான்!
என்று அழுத்தமாகக் கூறினாள் அந்தப் பெண்மணி.
இன்றிரவா? முடியாதே,
என்றான் முரளி தடுமாற்றம் தென்படும் குரலில்.
இன்று இரவு எங்கள் இரு கட்சியினருக்கும் கவர்னர் மாளிகையில் விருந்து. நாளைக்காலையிலேயே எதிர்க் கட்சிக்காரர்கள் புறப்படுகிறார்கள். நாளை பகலுக்குமேல் தான் உங்கள் முரளீதரனுக்கு என்னிடமிருந்து விடுதலை,
என்று சிரித்துக்கொண்டே சொன்னார் கிரிக்கெட் காப்டன்.
காத்திருந்த மங்கையின் கண்களில் ஏமாற்றம் தெரிந்தது. ம்... நாளை மாலைவரையில் என் முரளி என்னைப் பார்க்கக்கூட நேரம் இருக்காது
என்று அவள் உள்ளம் தனக்குத்தானே தேற்றிக் கொள்ளலாயிற்று.
அதற்குள் இரண்டு கட்சியினரையும் சேர்த்துப் பெவிலியன் வாயிலில் படம் எடுக்க ஏற்பாடாகியிருந்தது. தகவல் தெரிந்ததும் காப்டன், முரளீதரனுக்குச் சமிக்ஞை காட்டினார்.
நான் வருகிறேன் அம்மா, நாளை மாலையில் பார்க்கிறேன் ராகினி!
என்று முரளீதரன் அந்தப் பெண்மணியிடமும் இளமங்கையிடமும் விடை பெற்றுக்கொண்டு தன் நண்பனைப் பார்த்து, விஜி! இவர்களைப் பத்திரமாக அழைத்துச் செல்,
என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
அப்படியானால் நாளை இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யலாமா?
என்றாள் அந்தப் பெண்மணி.
மாலை தேனீருக்கே வந்து விட வேண்டும்,
என்று இளநங்கை ராகினி இன்பமொழி பகர்ந்தாள்.
சரி என்று ஒப்புக்கொண்டு தலையாட்டினான் முரளி.
விஜயகுமார் ராகினியையும் அந்தப் பெண்மணியையும் கூட்டிக்கொண்டு பெவிலியன் விட்டுப் புறப்பட்டான்.
‘குரூப்' போட்டோவுக்குத் தன்னைத் தயார் பண்ணிக் கொள்ள, காப்டனுடன் சென்றான் முரளி.
*****
2
கவர்னர் மாளிகையிலிருந்து திரும்பி அவன் தன் அறைக்கு வந்து சேர்ந்தபோது இரவு பதினோரு மணியாகிவிட்டது. அறைக்கதவைத் திறந்து மின் விசையைத் தட்டினான். விளக்கு ஒளியில் அவன் கண்களில் முதலில் பட்டது அறை நடுவே இருந்த இரு தபால் கார்டின் துண்டு.
அதை எடுத்துச் சுவர் ஓரமாக இருந்த மேஜை மேல் வைத்துவிட்டுத் தன் உடைகளைக் கழற்றியவாறே அந்தக் கடிதத்துண்டின் மேல் கண்ணோட்டம் செலுத்தினான்.
எத்தனை நாட்கள் காத்திருப்பது! நீ எப்போது வந்து அழைத்துப் போகிறாய்...
என்னும் வரிகள் தான் சட்டென்று கண்ணில் பட்டன.
கழற்றிய கால்சராயை அப்படியே விட்டுவிட்டுக் கடிதத்துண்டை எடுத்து திருப்பிப் பார்த்தான். அவன் இதயம் ஒரு முறை எழும்பித் தணிந்தது.
எப்போதோ, எத்தனையோ மாதங்களுக்கு முன் வந்த கடிதம். கிழிபட்டுக்கூடப் போயிற்று. இந்த நேரத்தில் திடீரென்று தோன்றிக் கண்ணை உறுத்துவானேன்? உள்ளத்தையும் கூடத்தான் தொட்டதோ அது?
இன்னொரு பெருமூச்சுடன் உடைகளைக் களைந்துவிட்டு மாற்றுடை தரித்துக்கொண்டு ஒரு மூலையில் கிடந்த படுக்கையை எடுத்து அதை நடுவே விரித்தான் முரளி.
எதிரே அலமாரியில் இருந்த 'ஓவல்’ டப்பா 'என்னைக் கவனிக்கமாட்டாயா?’ என்று கெஞ்சியது. அதன் பக்கத்தில் பிளாஸ்கில் இருந்த பால் ‘என்னை மறந்துவிட்டாயே!' என்று மன்றாடியது. பிளாஸ்குக்குப் பக்கத்தில் இருந்த புட்டியிலே சர்க்கரை தான் இருந்ததா? அல்லது உப்பா?
வழக்கமாகப் படுக்கப் போகும்போது அருந்தும் ஓவல் பானத்தைப் பற்றிய நினைவே மறந்துபோயிற்று அவனுக்கு.
கவர்னர் மாளிகை விருந்தின் சுவையும், நண்பர்கள் பாராட்டும், பிரமுகர்கள் பேச்சம்கூடக் கனவுதானோ என்று கருதும்படி இருந்தது.
எதிரே அந்த ஏழைத்தாயின் உருவம் தெரிந்தது. நாளைக்கே என் முரளி கைகையாய்ச் சம்பாதிக்கப் போகிறான். அப்புறம் என்னைக் கட்டிப் பிடிக்க முடியுமா?
என்று எங்கிருந்தோ ஒரு குரல் ஒலித்தது.
அந்தக் குரல் தான் அந்தத் துண்டுக் கடிதத்தில் ‘எத்தனை நாட்கள் காத்திருப்பது' என்று கேட்டிருந்தது.
உயரத்திலிருந்து தொங்கிய மின் விளக்கின் ஒளி மங்கியது. கண்களைத் துடைத்துக்கொண்டே படுக்கையில் சாய்ந்தான் அவன். எதிர்ச் சுவரில் தொங்கிய போட்டோ அவனைப் பார்த்துப் பல்லிளித்தது.
'ஏ முரளி! இப்படிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பவன் ஒரு நாளும் பெரிய மனிதனாக முடியாது. பெரிய இடத்து நட்பு, பெரிய மனிதர் பழக்கம், பெரிய பெரிய நினைவுகள், பெருமை தரும் சாதனைகள், பெரிய மனிதருக்கே உரித்தான சிந்தனைகள், பெருமை தரும் வட்டாரங்களிலேயே பழக்கம் இதெல்லாம் தானப்பா மனிதனை வாழவைக்கும் முன்னேறச் செய்யும். மூக்கைச் சிந்திக்கொண்டு முந்தாநாளைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பவன் சறுக்கு மரத்தின் மேல்தான் குந்தியிருக்க வேண்டும். அவன் பாதை கீழ்நோக்கித்தான் இருக்கிறது,' என்று அந்தப் புகைப்படத்திலிருந்த ஓர் உருவம் அழுத்தத் திருத்தமாக எடுத்துக் கூறுவது முரளியின் காதில் விழுகிறது.
அந்த உருவத்தை உற்று நோக்குகிறான் அவன். அதன் பக்கத்தில் அவனும்தான் இருக்கிறான். இருவருமாக எடுத்துக் கொண்ட படம் அது.
விஜி! சமயத்தில் உதவும் உன் பொன்மொழிகளுக்குத் தான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?
என்று முரளியின் வாய் தன்னையுமறியாமல் பிதற்றிக்கொண்டது. அதனுடன் அவன் இதயத்தினின்று பெயர்ந்த மூன்றாவது பெருமூச்சு அவன் சிந்தனைத் தேக்கத்தைச் சிதறடித்தது.
எழுந்து விளக்கை அணைத்து விட்டுத் திரும்பிப் படுத்தான் முரளி. விரைவிலேயே தூங்கியும் போனான்.
எத்தனை இன்பக் கனவுகள் தான் அவன் நித்திரையில் நீந்தி மறைந்தன! ஐந்து நாட்களாக ஆடிய ஆட்டத்தின் நினைவு அலை அலையாகப் பாய்ந்தது. புல் தரையைப் பிய்த்துக்கொண்டு 'விர்' என்று விரைந்த பந்து எத்தனை கோடுகள் தான் கிழித்தது! எத்தனை ஆயிரம் மக்களின் கரகோஷம்! அடுத்தாற்போல எத்தனை ஆயிர மக்களின் மௌனக் கண்ணோட்டம்! எல்லாம் அவன் மீதுதான்! அவன் இதயத்தில் தான் என்ன உணர்ச்சி! அவன் தலைமீது தான் எவ்வளவு பொறுப்பு! கடைசி கடைசியாக அந்த இறுதிக் கட்டத்தில் அவனை வீழ்த்த வந்த பந்து... ஆ ஆ... அடித்து விட்டானே அவன் 'ஸிக்ஸர்...! ஸிக்ஸர்!’
...அவன் செவிகள் செவிடாகின்றன! அத்தனை ஆயிரம் மக்களோடு சேர்ந்து அவனும் தான் பார்க்கிறான் தான் அடித்த பந்தின் பிரயாணத்தை! ஸிக்ஸர்! ஸிக்ஸரேதான்...! ஆனால்... ஆனால் அந்தப் பந்து எங்கே போய்த் தரை தட்டுகிறது? ‘டபார்!' என்ன ஓசை அது... எதிர்ச் சுவரில் இருந்த படம் தூள் தூளாக உடைந்து சிதறுகிறது. ஐயோ! அவன் அடித்த பந்து அந்தப் படத்தின் மீதல்லவோ தாக்கிவிட்டது! பதைபதைப்புடன் படத்தை எடுத்துப் பார்க்கிறான் அவன்! படத்திலே அவனைக் காணோம்; அவன் நண்பன் விஜியையும் காணோம். அவன் அன்னை வீற்றிருக்கிறாள். அவள் மடியில் ஒரு குழந்தை, ஒரு பக்கத்தில் அவன் பன்னிரண்டு வயது பாலகனாக நிற்கிறான். மறு பக்கத்தில் அவன் தங்கை மீரா, ஏழு வயதுச் சிறுமி. அவன் கைகள் நடுங்குகின்றன. ‘ஐயோ' என்று விடுகிறான்!
கனவு கலைந்து விட்டது முரளிக்கு, சுற்றிலும் ஒரே இருள். திறந்திருந்த சாளரத்தின் வழியாகக் காற்று மட்டும் வீசிக் கொண்டிருந்தது.
அவன் கண் விழித்துக்கொண்டான். எதிர்ச் சுவரில் இருட்டிலே கூடப் போட்டோ படம் தொங்குவதைத் தெரிந்து கொண்டான். ஆனால் படத்திலே யார் இருந்தது? உள்ளமும் கண்களும் சலனத்தில் ஊசலாடின. எதிரே தாயும் தங்கைகளும்தான் படத்தில் இருப்பதாகத் தென்பட்டது. உடல் உள்ளுக்குள்ளேயே கிடு கிடுவென்று ஆடியது. மெல்ல எழுந்து விளக்கைப் போட்டான். கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தான். எதிரே சுவரில் அவனும் விஜியும் தான் படத்தில் இருந்தனர். ‘சீ! என்ன பயங்கரக் கனவு இது? நான் அடித்த பந்து என் தாயையும் தங்கைகளையும் என்னேயுமே அல்லவோ தாக்கி வீழ்த்திவிட்டது!’
எண்ணம் ஒரு விநாடிதான்! எதிரே நின்று விஜயகுமார் ‘ஹ... ஹஹ்... ஹா!' என்று கைகொட்டிச் சிரிக்கிறான்.
ஐயோ போதுமே! புத்தி புத்தி!
கன்னத்தில் போட்டுக் கொண்டு விளக்கை அணைத்தான் முரளி.
மீண்டும் தூங்கவே முயன்றான். ஆனால் இம்முறை லேசில் தூக்கம் வரவில்லை.
அம்மாவின் படம் எதிர்ச் சுவரிலிருந்து எடுக்கப்பட்ட நிகழ்ச்சி ஏனோ அவன் கண்முன் காட்சி தந்தது.
விஜயகுமார் அவனுக்கு நண்பனான புதிதில் ஒரு நாள். அந்த அறையிலே அவனோடு அவனது பழைய நண்பன் ஹரிராஜாவும் வசித்து வந்தான். அப்போது அந்தச் சுவரிலே அந்தப் பழைய படம் தான் இருந்தது.
விஜியின் பேச்சுக்கள் எல்லாம் புதுமையாகவும் புதிராகவும் போதை தருவதாகவும் இருந்த காலம். விஜி ஒரு சமயம் பேச்சோடு பேச்சாக முரளியைப் பார்த்துக் கேட்கிறான். முரளி இதென்ன இன்னும் பழைய பசலிச் சாமான்களை வைத்துக் கொண்டு காலம் தள்ளுகிறாயே. இந்த அறைக்குப் புதிய 'பர்னிசர்’ வேண்டும் அப்பா! சுவர்கள் கூடிய மட்டில் சுத்தமாயிருக்க வேண்டும். ஒன்றிரண்டு படங்கள், இயற்கைக் காட்சிகள் சிறந்த ஓவியங்கள் இப்படி மாட்டலாம் ஆ...! அதோ அதென்ன கண்ணே உறுத்துகிறதே, எந்தத் தலைமுறையைச் சார்ந்தது அந்தப் படம்...
என் குடும்பம்
முரளியின் பதில்.
குடும்பமா? உனக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா
இல்லை.
அப்படியானால் குடும்பம் எங்கே வந்தது?
அதிலிருப்பவர்கள் என் தாய் தங்கைகள்...
ஓ! உன் தகப்பனாரின் குடும்பம் என்று சொல்!
எனக்குத் தந்தை இல்லை. இறந்து விட்டார்.
அது உன் தவறல்ல தம்பி!
திடுக்கிட்டுப் போனான் முரளி விஜயகுமார் விளையாட்டுத்தனமாகப் பேசுகிறானோ என்று கூடத் தோன்றியது அவனுக்கு.
ஹரிராஜா ஒரு மூலையில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான். விஜயகுமாரின் பேச்சு அவன் காதிலும் விழுந்தது. விஜயகுமாரின் நட்பு ஆரம்ப முதலாகவே வேம்பாய்க் கசந்தது ஹரிராஜாவுக்கு. அவன் சட்டென்று புத்தகத்தை மூடிவிட்டுக் குறுக்கிட்டுப் பதில் அளித்தான்.
விஜயகுமார்! உன் பேச்சு கொஞ்சம் கூட நன்றாயில்லை.
"சரி சரி. நீ படிக்கும் புத்தகங்களிலே என் பேச்சுக்களுக்கு அர்த்தமே போட்டிருக்காது ஹரி! நீ படிக்கிற பிள்ளை. என்னோடு சேர்ந்து கெட்டுப் போகாதே. உனக்குப் படிப்பதும்