Cycle
By Ekadasi
()
About this ebook
என் நினைகளுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடமாடுபவர்கள், 22 ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வரும்போது எங்கள் கிராமத்திலிருந்து எனக்குத் துணைக்கு வந்தவர்கள். துணைக்கு வந்தவர்கள்தான் அப்படியே எனக்குள் தங்கியும் விட்டார்கள். பாவம் என்னுடன் இத்தனை வருடங்களாகத் தங்கியிருக்கிறார்கள், ஒருவேளை எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் இந்த சென்னைக்குள் அவர்கள் எங்கு போவார்கள், அதற்காகத்தான் அவர்களையும் அவர்களின் வாழ்வையும் ஒரு நாவலாக எழுதிவிட எண்ணினேன்.
Read more from Ekadasi
Avalukkum Nilavukkum 6 Vidhyasangal Rating: 0 out of 5 stars0 ratingsVanamalli Rating: 0 out of 5 stars0 ratingsOoradangu Uyiradangu Rating: 0 out of 5 stars0 ratingsEkadasi Paadalgal - 3 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Cycle
Related ebooks
Vandhana Oru Kelvikuri! Rating: 0 out of 5 stars0 ratingsPinangalin Kathai Rating: 0 out of 5 stars0 ratingsUyarndhavargal Rating: 5 out of 5 stars5/5Uravugal Thodarkathai Rating: 0 out of 5 stars0 ratingsKamadenuvin Mutham Rating: 0 out of 5 stars0 ratingsManjal Nilavugalai Choodu! Rating: 0 out of 5 stars0 ratingsMaayak Kottai Rating: 0 out of 5 stars0 ratingsOru Pattampoochiyin Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solla Vanthen Rating: 0 out of 5 stars0 ratingsNadana Nila Rating: 0 out of 5 stars0 ratingsOru Kodi Lottery Rating: 0 out of 5 stars0 ratingsOrey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Vidiyum, Velicham Varum Rating: 0 out of 5 stars0 ratingsOru Maalai Nera Maranam Rating: 5 out of 5 stars5/5Devasundari Rating: 1 out of 5 stars1/5Nallathor Veenai Seithe… Rating: 2 out of 5 stars2/5Ettu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Kannan Malar Kalvanadi Rating: 3 out of 5 stars3/5Dhivya Roja Thottam Rating: 0 out of 5 stars0 ratingsEnnavarey Mannavarey Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Mazhai Megam Rating: 0 out of 5 stars0 ratingsIngeyuma Nee? Rating: 0 out of 5 stars0 ratingsIravin Kural Rating: 0 out of 5 stars0 ratingsAranmanai Kudumbam Rating: 0 out of 5 stars0 ratingsNenjodu Than Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratingsAagayam Kaanatha Natchathiram Rating: 0 out of 5 stars0 ratingsEzhuthoor Kolai Case Rating: 0 out of 5 stars0 ratingsKollimalai Kiss Rating: 0 out of 5 stars0 ratingsGanga Nathi Theerathile Rating: 0 out of 5 stars0 ratingsஆரியம் , திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே .. Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Cycle
0 ratings0 reviews
Book preview
Cycle - Ekadasi
https://www.pustaka.co.in
சைக்கிள்
Cycle
Author:
ஏகாதசி
Ekadasi
For more books
https://www.pustaka.co.in/home/author/ekadasi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
பீடி குடித்துக் காய்த்த உதடுகள்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 26
அத்தியாயம் 27
அத்தியாயம் 28
அத்தியாயம் 29
அத்தியாயம் 30
அத்தியாயம் 31
என்றும் மறக்க இயலாத
சின்னம்மா ரஞ்சிதம் அவர்களுக்கு...
நன்றி...
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்
கவிஞர் சைதை ஜெ
நடிகர் குண்டு சேகர்
பாறைப்பட்டி க. சிவமணி
எழுத்தாளர் மதுரைபாலன்
வழக்குரைஞர் கண்ணதாசன்
வழக்குரைஞர் மு. ஆனந்த்
கவிஞர் மா. காளிதாஸ்
கவிஞர் மாராணி
முனைவர் பி. பாலசுப்பிரமணியன்
கவிஞர் கவிமுத்து
ஷியாம் பிரசாத்
சக்கரவர்த்தி மோகன்.
பீடி குடித்துக் காய்த்த உதடுகள்
உருப்படியாய்ச் சிறுகதைகளே ஓர் இருபது கூட எழுதாத நிலையில் நாவலொன்றை எழுதக் காரணமாக இருந்தது இந்த ‘சைக்கிள்’ நாவலுக்குள் வரும் மாந்தர்கள்தான். அவர்கள் இந்த நாவலுக்காக உருவாக்கப்பட்டவர்கள் அல்லர், என் நினைவுகளுக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடமாடுபவர்கள். 22 ஆண்டுகளுக்கு முன் நான் சென்னைக்கு வரும்போது எங்கள் கிராமத்திலிருந்து எனக்குத் துணையாய் வந்தவர்கள். துணைக்கு வந்தவர்கள்தான் அப்படியே எனக்குள் தங்கியும்விட்டார்கள். பாவம் என்னுடன் இத்தனை வருடங்களாகத் தங்கியிருக்கிறார்கள், ஒருவேளை எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் இந்த சென்னைக்குள் அவர்கள் எங்கு போவார்கள், அதற்காகத்தான் அவர்களை எழுதிவிட எண்ணினேன்.
ஆட்கள் குறைந்த ஊர்களுக்குக் கதைகளே பக்கபலமாக இருந்திருக்கின்றன. கதைகளும் பாடல்களும் அந்த மக்களுக்குள் ஆற்று மீன்களாய்த் துள்ளி விளையாடியிருந்திருக்கின்றன. அந்த கதைகள் அனைத்தும் அவர்களின் முன்கால வாழ்வில் பிறந்தவையும் அதற்கு முன்னுமானவைகளாகும். கதைகளின் ஊற்று கிராமங்கள்தான். என் இரவுகளையெல்லாம் செவி வழிக் கதைகளால் நிரப்பியவள் என் அம்மத்தா. உதிர்ந்திடும் சாணித் தாள்களிலிருந்து விக்கிரமாதித்தன் கதைகளை வாசித்துக் காட்டி என் பகல்களையெல்லாம் நிரப்பியவர் அவளது கணவர் என் சியான். அவர்களால் வளர்க்கப்பட்ட நான் இன்று திரைப்படங்களிலும் நூல்களிலும் கதை சொல்லிக் கொண்டிருக்கிறேன். இவை பெரும்பாலும் சமகால மானுடத்தின் விளிம்பு நிலை மக்களின் கதைகளாகும். இந்த ‘சைக்கிள்’ அப்படி ஓர் உருவாக்கம்தான். எண்ணெய் தேய்க்காத சிறார்களின் தலைச் சிக்கும், துவைக்காத புடவை வேட்டிகளின் அழுக்கும் ஆடு மாடுகளின் கழிவுகள் நிறைந்த தெருக்களும் பீடி புடித்துக் காய்த்த உதடுகளும், பித்துக் கால்களும் சதை வற்றிய மேட்டுக் கன்னப் பெண்களும், முதுகுத் தண்டின் முதுகில் இறங்கும் வியர்வை உப்பும் கோவில் சிலைகளில் படிந்திருக்கும் பிசுபிசுப்பாய் என் நெஞ்சாங்கூட்டில் தங்கியிருக்கின்றன.
இந்த நாவலை எழுதிவிட்டு நான் என் ஊருக்குச் சென்றிருந்தபோது என் கதையில் வரும் குடும்பங்களின் வீட்டிற்குச் செல்லத் தோன்றியது. நான் கடந்த ஆறு மாதங்களாக அவர்களோடுதான் வாழ்ந்து வந்திருக்கிறேன். ஓர் எழுத்தாளனால் ஓர் ஊரை உருவாக்க முடிகிறது. அங்கே தனக்குப் பிடித்த முகங்களையும் பிடிக்காத முகங்களையும் உருவாக்க முடிகிறது. பசித்த உயிர்களையும் வசதி படைத்தோரையுமென நம் விருப்பம்போல் எதையும் அல்லது எப்படிப்பட்ட முன் மாதிரியையும் உருவாக்க முடிகிறது.
இத்தனை ரணத்தோடு ஏழை, எளியவர்களின் வாழ்வுச் சித்திரம் இருந்திருக்க வேண்டாமென எப்போதும் எனக்குள் தோன்றிக் கொண்டேயிருக்கும். மனித வாழ்வில் வறுமையை, விருந்தாளிபோல் வந்துபோக அனுமதித்திருக்கலாம். ஆனால் சிறுகுடல் பெருங்குடலாய் உடலுக்குள் நுழைந்து கண்களைப் பிதுக்கித் துப்பும் கொடுமையை ஏற்று நகரும் வாழ்வு பழங்கதைகளில் வரும் நரகம் போன்றதாகும். சோற்றுக்குள்ளும் குரோதங்களுக்குள்ளும் புதைக்கப்பட்ட வாழ்வில், கனவு என்கிற சொல் அந்நியமாக்கப்பட்டுவிட்டது. விசத்துக்குச் சாகாத எலிகளின் ஆசனவாய்த் தைக்கப்பட்டு மலத்தொல்லை தாங்காமல் அவை சுற்றியுள்ள மற்ற எலிகளையெல்லாம் கடித்துக் குதறிக் கொல்லச் செய்வதுபோல் ஆளும் வர்க்கம் கடவுள் சாதி, மத பேதங்களுக்குள் நம்மைச் சிக்க வைத்து ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள வைக்கும் சூதாட்டத்தைக் காலகாலமாக நிகழ்த்திய வண்ணம் இருக்கிறது. இதற்கும் அதற்கும் என்ன தொடர்பிருக்கிறது என்பது போலத்தான் தெரியும். ஆனால், தொடர்பில்லாமல் இல்லை. இந்த பூமியே ஒரு சங்கிலித் தொடர்தான். ஒருவரின் உழைப்பு, சுரண்டல் வர்க்கத்தால் உருமாற்றம் செய்யப்பட்டுப் புன்னகையோடு வாசல் கடக்கிறதுபோது நாம் ஏமாற்றப்படுகிறோம். கடைக்கோடி குக்கிராமத்தில் வசிக்கும் ஒரு கோவணம் கட்டிய மனிதரின் ஓட்டுக்கும் ஒரு நாட்டின் பிரதமருக்கும் தொடர்பிருக்கும்போது பணக்காரர்களின் விலை உயர்ந்த ஒயினுக்கும் மிகக் குறைந்த கூலிக்குக் கணக்கற்ற மணி நேரம் உழைக்கும் ஏழைகளின் வியர்வைக்கும் எப்படி தொடர்பில்லாமல் போகும். இந்த நாவல் மேற்கூறிய விசயங்களுக்குத் தீர்வு சொல்லுமா என்றால் இல்லை. காயங்களைக் காட்டும், காரணங்களை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும்.
நன்றி!
நிறைந்த அன்புடன்
ஏகாதசி
ekadasidirector@gmail.com
1
வெயில் மதம் பிடித்து அலைந்து திரிந்த நேரம். தார் பெயர்ந்த சாலையொன்றில் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை சகிதம் சைக்கிளில் சென்று கொண்டிருப்பவரின் பெயர் கணேசன். முழுக்கறுப்பென சொல்லிவிட முடியாதபடி ஒரு நிறத்தில் இருந்தார். மொத்த முடியில் ஆறு சதவீதம் வெள்ளை முடி. முகத்துக்கேற்ற தாடி. ஒரு வாடகை சைக்கிளை செக்கானூரணியில் எடுத்துக்கொண்டு வெயில் அளப்பவருக்கு இந்த மண் 14 ஆண்டுகள் பழையது.
இருபத்தாறு வயதில் கொலைகாரப் பட்டம் பெற்று ஆயுள் தண்டனை முடித்து மனிதர் விக்கிரமங்கலம் நோக்கி ஒரு செம்மண் சாலையில் சைக்கிள் மிதிக்கிறார். வெளிறிக் கிடந்தது வெளி. ஒரு பன்னிரண்டு வயதுச் சிறுமி உடசாலி மரக் கொப்பை பரபர
வென்று இழுத்துக்கொண்டு முன்னால் வேகமாகப் போயிக் கொண்டிருப்பதைப் பார்த்து ஓரமாகச் சென்று கடந்தார். அந்தக் கொப்பு முடி வெட்டாத சுருட்டை முடிக்காரனின் தலைபோல் இருந்தது. பழுக்கக் காய்ச்சிய இரும்பின் அனலாய் நினைவுகள் சுட்டன. சைக்கிள் டயரின் மீது பட்டுத் தெறித்தன சிறு சிறு கற்கள். நீண்ட பிரிவின் துயரக் கதகதப்பை மனம் உணர்ந்தது.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை காய்ந்து கிடந்தது நிலம். பச்சை நிறத்தைக் கானல் குடித்து நெளிந்து கிடந்தது. ஒரு ‘பைக்’ குக்காரன் கணேசனை ஒரு நொடியில் தாண்டிச் சென்றான். இதுமாதிரியான ரோட்டில் வண்டி ஓட்டுவதற்கு சர்க்கஸ் தெரிந்திருக்க வேண்டும். மேடு பள்ளங்களுக்கு ரோடு என்று பெயர் வைத்திருந்தார்கள்.
கடலையும் துவரையும் மணத்துக் கிடந்த மண், தட்டாங்காயும் மொச்சைக்காயும் காய்த்துக் குலுங்கிய மண். கம்பு, கேழ்வரகு சொங்குச் சோளம் என்று பயிறு பச்சைகளுக்குப் பஞ்சமில்லாத மண். கல்லுப் பயறும் காணையும் விதைக்க வேண்டாமென்று விட்டெறிந்தாலே முளைத்து விளைந்து வீடு சேரும் மண். கம்மங்கதிர் காயப்போட்டிருந்த களத்தில் காக்கையும் குருவியும் கலாச்சேபம் செய்துகொண்டிருந்த மண். இப்போது வெயிலுக்குள் முங்கிக் கிடக்கிறது. செத்துக் காய்ந்துபோன காக்கையொன்றின் மேல் ஏற்றி விடாமல் சைக்கிள் ஹேன்பாரை இடப்பக்கம் ஒடித்துத் திருப்பினார் கணேசன்.
ஒருவன் தூரத்தில் பொத்தக் கள்ளியைத் தீ வைத்துக் கொண்டிருந்தான். ஒருவேளை தேன் எடுக்கக் கூடும். மரங்கள் மூடியிருந்த ஊர்கள், இப்போது கட்டடங்களுக்கு வழிவிட்டு நிற்கின்றன. சிமெண்ட் விளம்பரமொன்று ஒரு கார வீட்டின் பின் சுவரில் பெரிதாக எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தார். இந்த வீடு வந்துவிட்டால் ஊர் வந்தாற்போல் என்பார்கள். அடுத்து அரை பர்லாங்தான் விக்கிரமங்கலம். அங்கே அய்யாவு வீடு. அங்கு செல்லத்தான் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறார். ஆனால் அய்யாவு வீட்டிற்கும் இவருக்குமான தூரம் குறையக் குறைய அத்தனை இலகுவானதாக இல்லாமல் போனது கணேசனுக்கு. அந்த விளம்பரம் செய்யப்பட்ட வீட்டின் பின்னால் அதாவது விளம்பரத்தின் எதிரே ஒரு மஞ்சனத்தி மர நிழலில் சைக்கிளை நிறுத்திவிட்டு அமர்ந்தார். நாம் போவது சரிதானா, போனால் என்ன நடக்கும் என இத்தனை அருகில் வந்த பின்னும் எடுத்த முடிவை மனம், கீற்றுக் கீற்றாய் அறுத்து ஆராய்ச்சி செய்தது.
அய்யாவு என்பவர் கணேசனின் நண்பர். நண்பர் என்றால் இவர் வயதொத்தவர் இல்லை. கணேசனுக்கொரு சித்தப்பன் இருந்தால் என்ன வயதிருக்குமோ அந்த வயது அய்யாவுக்கு, ஆனால் நண்பர். அய்யாவுவைப்போல் அடுத்தொரு மூன்று நண்பர்கள் இருந்தார்கள் கணேசனுக்கு. தங்கையா பெரியவர், பவுன்ராஜ், சீனு. இவர்களில் தங்கையா புளியங்குளம். பவுன்ராஜ் கரடிக்கல். சீனு கருமாத்தூர். இந்த நால்வரும் வியாபாரிகள். வேப்பமுத்து வாங்கி விற்கும் தொழில் தங்கையாவிற்கு. பாத்திர வியாபாரி அய்யாவு. ஐஸ் விற்பவன் பவுன்ராஜ். வளையல் வியாபாரம் செய்பவன் சீனு. இதில் கணேசனுக்கு என்ன தொடர்பென்றால், நால்வருக்கும் இவர் நண்பர். மற்றபடி வியாபார ரீதியாக ஒரு தொடர்புமில்லை. மற்ற நால்வரைப்போல் இவர் வியாபாரியுமில்லை.
கணேசனின் ஊர் பணியான். இந்த நான்கு வியாபாரிகளும் மாதத்தில் இரண்டு நாட்களாவது ஓரிடத்தில் மொத்தமாகச் சந்தித்துக் கொள்கிறார்கள் என்றால் அது கணேசனின் ஊரான பணியானில்தான். அவர்களுக்கு அந்த ஊர் மந்தையின் நிழலில் அத்தனை விருப்பம். அவர்களுக்கு எல்லாமாவும் கணேசன் இருந்தார். கணேசனுக்கும் அவர்கள் அப்படித்தான். பதினான்கு ஆண்டுகளுக்கு முன் பிணைந்து கிடந்த நட்பு. நல்லது கெட்டதில் பங்கெடுத்துக்கொண்ட மேன்மைமிகு நட்பு. உறவுக்காரர்களாலும் தர முடியாத உன்னத நட்பு. சிறையில் நாளொரு பொழுதுமாய்க் கணேசன், முள்ளும் இதழுமாய்த் தொடுக்கப்பட்ட கடந்த காலத்து வாழ்வை ஒரு படம்போல் ஓட்டிப் பார்த்து அழுது கிடந்தவர் நினைவில் வந்து போன மண்ணின் மீது நிசமாய் உட்கார்ந்தபோது ஈரக்கொலை நடுங்கியது.
***
தண்டந்தட்டி... தண்டந்தட்டி... தண்டத்தட்டி... தண்டத்தட்டி... தண்டந்தட்டி... தண்டத்தட்டி... தண்டந்தட்டி... தண்டந்தட்டி...
யப்பா... இன்னைக்கு ராத்திரி மாரியம்மன் கோயில் பேச்சுப் பேசப் போறாக சின்னவுக பெரியவுக எளந்தாரி எளவட்டம் எல்லாரும் மந்தைக்கு வந்து சேந்துருங்கப்போ...
தோட்டி அழகர் சாட்டினார்.
சாயங்காலம் என்பதால், காடுகரைபோன சனமெல்லாம் வீடு திரும்பியிருந்தது. எட்டுக் கட்டையில் எழுந்த சத்தம் சுற்றியுள்ள காதுகளுக்கெல்லாம் எட்டியது. ஆனால் ஒவ்வொருவருக்கும் பிய்ந்து பிய்ந்துதான் கேட்டிருக்கும். அந்த நேரம் பார்த்து ஒரு வீட்டில் குழந்தை அழுதிருக்கும், இன்னொரு வீட்டில் எதையோ சமையற்கட்டில் டொர்று... டொர்று
வென சட்டியில் வறுத்துக் கொண்டிருந்தால்கூட சரியாய் கேட்காதுதான். அவ்வளவு ஏன் அவர் சாட்டிய சத்தம் புரியாமல் போக ஒரு மாடு ம்மா...
போட்டாலே போதுமானது. அதற்காகத்தான் அழகர் ஒரு கணக்கு வைத்திருப்பார். ஒரு தெருவை இரண்டாகப் பிரித்து இரண்டு சத்தம். கொஞ்சம் நீண்ட தெருவென்றால் மூன்றாகப் பிரித்து மூன்று சத்தம். இதில் காரியக்காரர்களின் வீட்டு வாசலில் நின்று கூவுவது கணக்கில் சேராது. எத்தனை விதமாகப் பிரித்து எத்தனை தினுசாகக் கத்தினாலும் சிலருக்கு ஸ்பெசல் ஓதல் நடத்தினால்தான் காதிலேறும், அதில் ராமாயி கிழவி முக்கியமானவள். இவளுக்கு ஸ்பீக்கர் கொஞ்சம் அவுட்டு.
ஏலே அழகரு என்னாடா சாட்டுற ஒன்னும் புரியல.
கோயில் பேச்சுப் பேசப் போறாகலாம்த்தா...
கிழிச்சாய்ங்க... எத்தன கெடுவு செவ்வா சாட்டுறது இவிய்ங்களுக்கு வேற வேலப் பொச்சுல்ல... பதிமூணு வருசமா இந்தக் கூத்துத்தான்... கூடிப் பேச வேண்டியது கூத்தடிக்க வேண்டியது, அப்பறம் எந்தப் பெயலாச்சும் எடக்கு வச்சுப் பேசி ஔச்சு விடவேண்டியது. மல்லுக்கட்டி மண்ணள்ளி எறிஞ்சுபிட்டு, பேச்சுத் தெகையாம எந்திரிச்சுப் போயிறது...
நீள் வசனம் பேசி முடித்த ராமாயி கிழவி இந்தப் பேச்சை இன்னும் நீட்டிக்க ஒரு கம்பெனி கிடைக்காதா என்பதுபோல் சுற்றிலும் கண்களை வீச, எதிர் வீட்டுக்காரி குஞ்சுத்தாக் கோழியைப் பஞ்சாரத்தில் ஒரு குஞ்சு வெளியேயிருக்கும்படியாக, அவசரத்தில் கவிழ்த்துவிட்டு, அடுப்பில் சோறு கிடந்து குழையப் போகிறது என்பதுபோல் ஓடி, ராமாயிடமிருந்து தப்பித்தாள்.
அது சாயங்காலம் என்பதால் எல்லாரும் வீடு திரும்பும் அவசரத்தில் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு திரிந்ததால் கிழவியால் யாரிடமும் அத்தனை சுலபமாகப் பேச்சைத் தொடர முடியவில்லை. இருப்பினும், தனக்கு ஏதுவான ஆள் ஒருத்தன் சிக்க மாட்டானாவெனத் தேடினாள்.
ஒரு நாளைக்கு கண்ணமிட்டு பீய் தின்னலன்டா நாயிக்கு மண்ட வெடிச்சுப் போகுமாம் என்பார்கள். அது போலத்தான் ராமாயி கதையும். கடையில் நல்லெண்ணை வாங்கிய சரடுக்காது போட்ட சீசாவை கையில் பிடித்தபடி புளியுருண்டை முதலான குழம்புச் சாமான்களையும் வைத்துக்கொண்டு நாற்பத்தைந்து வயதுக்காரர், ராமாயி நம்மகிட்ட பேச்சப் போட்றக் கூடாதென்று இருக்கிற சாமியெல்லாம் மனதில் வேண்டிக் கடந்து சென்றார். தோட்டி அழகரின் குரல் அடுத்த தெருவிலிருந்து சன்னமாகக் கேட்டது. ராமாயி வாசலில் கிடந்த ஆட்டுரலில் உட்கார்ந்தாள். ராமாயி வீட்டிற்குள் லேசில் போகப் போறதுமில்லை. கோழிக்காரி வெளியே வரப்போவதுமில்லை. பாவம், பஞ்சாரத்திற்குள் செல்லாத எதிர்வீட்டுக்காரியின் கோழிக்குஞ்சுக்கு இன்றைக்கு சிவராத்திரிதான். பஞ்சாரத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கப்போகிறது.
பணியானில் 930 வீடு. 2100 ஓட்டு. வடக்கே நாகமலை. மேற்கு பூராவும் விதைக்காமல் முளைத்த பொத்தக் கள்ளிகள். மிச்சமுள்ள இருபுறமும் வெள்ளாமை. எருக்கஞ்செடியில் நான்கு எலைகள் இருந்தால்கூடப் போதும், அதன் நிழலிலேயும் சீட்டாட்டத்தைப் போட்டுவிடுவார்கள். பொண்டாட்டிமார்கள் விலக்குமாத்தால் அடித்தாலும் திருந்தமாட்டார்கள். பழைய கார வீடு ஆறு. அந்த ஆறும் சொல்லி வைத்தது மாதிரி அங்கங்கே ஓவாயாக இடிந்து காணப்படும். தகர வீடு நான்கு. மிச்சமிருக்கிறதில் கால்வாசி ஓட்டு வீடுகள். முக்கால்வாசி கூரை. ஆளில்லாத மரத்தடி பால்வாடி. ஐந்தாம் வகுப்பு வரைக்கும் பள்ளிக்கூடம். இத்தோடு பூட்டியே கிடக்கும் சுகாதார நிலையம் ஒன்று. மந்தையில் மேற்குப்புறம் பிள்ளையார் கோவிலும், கிழக்கே காளியம்மன் கோவிலும், வடதிசையில் கருப்பு கோவிலும் பொங்கல் வைக்கக் கல்லடுப்பு கூட்டியதுபோல் இருக்கும். தென்புறம் பெரிய தண்ணீர்த் தொட்டி. தொட்டியின் ஒவ்வொரு திசையிலும் நான்கு நான்கு திருகு குழாய்கள் இருக்கும். எல்லா ஊர்களுக்கும் சுடுகாடு வடதிசையில்தான் இருக்கும், இந்த ஊருக்கு மட்டும் தெற்கே சுடுகாடு.
செத்துத் தெக்கதலையா போனாலும் ஏங் கருமம் தீராது, இது அந்த ஊர் சனங்களின் அலுத்துப்போன குரலாக இருக்கிறதென்றால் ஒவ்வொரு ஊரும் அதனதன் வாழ்விலிருந்தும் நில அமைப்பிலிருந்தும் தங்களது துயர காலத்திற்குத் தேவையான வாக்கியங்களை எழுதிக் கொள்கின்றன.
மானாவாரி பூமி. கல்லுப் பயறும் காணப் பயறும் நஷ்டமாகாத பயிர்கள். கடலை, துவரை தட்டாஞ்செடிகளுக்கு வானம் மனசு வைக்க வேண்டும். கடந்த சில வருடங்களாகக் கை விடவில்லை. மோட்டார் தோட்டக்காரர்கள் பதினைந்துபேர். தக்காளி, வெங்காயம், கருணை, கனகாம்பரத்துக்குக் கிணற்றுத் தண்ணி போதுமானது. மற்றபடி ஆத்துக்கால் தண்ணியும், கம்மாத் தண்ணியும் ஒத்துழைத்தால் மூன்று போகம் விளையும் நெல் பயிர். நாகமலை, பணியானுக்கு ஒரு கொடை. வெளிக்குப் போக, காவல்காரனுக்குத் தெரியாமல் ஆடு மாடு மேய்க்க, வயல் காடுகளுக்குப் பல வகை இலை தழைகளை அறுத்துக் கட்டுக்கட்டி விற்க, விறகு வெட்ட, சாணி எரு மற்றும் வேப்பமுத்துப் பொறுக்க, பாரிவேட்டை அன்றைக்கு வேட்டையாட என ஏழை சனங்களின் வயிற்றை ஈரப்படுத்தியதில் பெரும் பங்குண்டு இதற்கு. இவை போக இளவயது ஆண்கள் கள்ளிப் பொதருக்குள் கீழ் சவரம் செய்வதும், மரத்தூர்களின் இடுக்குகளில் பெண்கள் தூமைத் துணிகளை செருகி வைப்பதும், ஈனுகின்ற ஆடு மாடுகளின் இளங்கொடிகளை ஓலை மட்டைகளில் கட்டி மரங்களில் தொங்க விடுவதும் மற்றும் காதல் காம அரங்கேற்றமும் கூட நடக்கும். எல்லாவற்றையும்விட நாகமலையின் மூலிகைக் காற்று அந்த ஊர் மக்களை மருத்துவமனைக்குச் செல்ல அவசியமற்றவர்களாக வைத்திருந்தது. ஆனாலும் மனித வாழ்வின் சூதாட்டத்தில் ஒரு குடிகாரனின் பிணமோ ஓர் அபலைப் பெண்ணின் பிணமோ எப்போதாவது கண்டெடுக்கப்படும் அம்மலை தலை துண்டிக்கப்பட்ட நாகப்பாம்பின் பேருடலாய்க் காணப்படும்.
2
பணியான், மந்தையின் வேம்பின் நிழலும் வெளிச்சமும் யாரும் தீட்ட இயலாத ஓவியம்போல் காணப்பட்டது. ஒவ்வொரு ஆளாய் வந்து உட்கார்ந்தனர். அம்பலக் கல்லில் ஆட்டுச் சாணி இருந்ததைக் கவனிக்காமல் சீட்டு மேசை பரமன் அமர்ந்தார். பிறகு ஏதோ பின்னால் தட்டுப்படுவதை உணர்ந்தவர், எழுந்து சென்று குழாயில் வேட்டியை அலசி கட்டிக்கொண்டு வந்தார். அதற்குள் அம்பலக் கல் ஹவுஸ்புல் ஆனது. கூட்டத்தில் ஓர் ஓரமாய் நின்று கொண்டார் பரமன். ஊர் பிரசிடெண்ட் வெள்ளைத்துரை அமர்ந்திருந்தார். கூடவே சில பெரிய மனிதர்கள். உட்கார்ந்தால் கௌரவம் குறைந்துவிடும் என்று எளவட்டம் ஒருபக்கம் விரைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தது. அதில் கணேசனும் ஒருவன். மற்றவர்கள் சிறு சிறு சரளைக் கற்களை ஒதுக்கிவிட்டு வேட்டி தூக்கி உட்கார்ந்தனர். சீட்டு மேசைப் பரமனுக்கு சீட்டுக் கிடைக்காத வருத்தம். சனங்கள் பஞ்சாயத்து நடக்கும் இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி வீடுகளின் முன் கூரை நிழலில் நின்றிருந்தனர். சில பெண்கள் குழாயடியில் தண்ணீர் பிடிக்கும் சாக்கில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். காலனிக்காரர்கள் சிலர் ஓரம்கட்டி உட்கார்ந்திருந்தனர். ஆனால் பஞ்சாயத்தில் காலனிக்காரர்களும் பெண்களும் பேசக்கூடாது என்பது எழுதப்படாத சட்டம்.
பிரசிடெண்ட் வெள்ளைத்துரைக்கு அருகே அமர்ந்திருந்த பொன்னுச்சாமிக்கு நொடிக்கு நான்கு முறை கொட்டாவி போய்க்கொண்டிருந்தது.
ஏய்... என்னப்பா இங்க வந்து கொட்டாவி விட்டுக்கிருக்க... தூக்கம் வந்தா போயி வீட்டுல தூங்குயா...
வெள்ளைத்துரை சொன்னதை, பெரிதாக எடுத்துக் கொள்ளாதவர்போல்,
அதொன்னுமில்லப்பா நீங்க பேச்ச ஆரம்பிங்க
.
எப்பா... இன்னைக்குச் சாயங்காலம் நானும் நம்மூரு பெரிய மனுசங்களும் மாரியம்மன் கோயில்ல போயி சவனம் கேட்டோம். ஆத்தா சரின்டுட்டாளப்பா... வீட்டுக்கு எம்புட்டு வரிப்போடலாம், என்னா நாடகம் போடலாமுன்றதப்பத்தி எல்லாம் ஒங்ஙொங்க கருத்தச் சொல்லுங்க.
வெள்ளைத்துரையின் பேச்சுக்கு, கிழபுறமிருக்கும் காளியம்மன் கோவில் கடைசிப் படிக்கட்டில் வெத்தலையை மென்றபடி பஞ்சாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ராமாயி கிழவி,
வரிப்போடுறது வண்ணாபயலுக்குக் கட்டிக்குடுக்குறதெல்லாம் இருக்கட்டும்...
இதற்கெல்லாம் குறுக்கே விழுந்து ஒரு சத்தில்லாத இளந்தாரி,
எல்லாம் சவனம் கேட்டுத்தானத்தா வந்துருக்காக... இதுக்குள்ள நீ என்னாத்துக்கு ஒழப்புற.
நீ சும்மார்றா, நல்லா கரட்டான்மாரி இருந்துக்கிட்டு காரியத்தனமா பண்ற...
இத்தோடு அவனை விட்டதற்குக் காரணம்