Amarar Kalkiyin Azhiyatha Kathai Maanthargal
()
About this ebook
கல்கியின் கதாபாத்திரங்களில் பயிலும் உளவியல் சார்ந்த காதல் உணர்வுகள், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் படைப்பிலேயே கட்டப்பட்டிருப்பவை. வலிந்து புகுத்தாமல் இயல்பாகக் கூறும் அவ்வுணர்வுகளில் வாசகன் தன் அகத்தை உணர்கிறான். அவை சாகாவரம் பெற்றிருப்பது அதனால்தான். ‘அமரர் கல்கியின் அழியாத கதை மாந்தர்கள்’ என்ற இந்த நூல் கல்கி அன்பர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் நிச்சயம் கவரும்.
Read more from W.R. Vasanthan
Appaavi Varikuthirai Rating: 0 out of 5 stars0 ratingsJameen Kottai Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Vellam Rating: 0 out of 5 stars0 ratingsSuvadugalum Suvadigalum Rating: 0 out of 5 stars0 ratingsManjal Roja Rating: 0 out of 5 stars0 ratingsMalaikkottai Marmam Rating: 0 out of 5 stars0 ratingsOli Sudar Rating: 0 out of 5 stars0 ratingsUdhayan Engey? Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Paravai Rating: 0 out of 5 stars0 ratingsAmmavin Anbu Rating: 0 out of 5 stars0 ratingsThalaratha Ullam Rating: 0 out of 5 stars0 ratingsIniya Idhayam Rating: 0 out of 5 stars0 ratingsMangatha Thangam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Amarar Kalkiyin Azhiyatha Kathai Maanthargal
Related ebooks
Manam Ennum Arputha Sakthi Rating: 0 out of 5 stars0 ratingsArul, Porul, Inbam… Rating: 0 out of 5 stars0 ratingsIlakkiya Ulagil Oru Payanam… Rating: 0 out of 5 stars0 ratingsVaanampadi Rating: 0 out of 5 stars0 ratingsThannambikkai Ennum Mahasakthi Rating: 0 out of 5 stars0 ratingsItharku Munbum Itharku Piragum Rating: 0 out of 5 stars0 ratingsNaan Athuvalla Rating: 0 out of 5 stars0 ratingsThuvanthuva Yutham Rating: 0 out of 5 stars0 ratingsKaatru Veliyiniley... Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsIndiya Samudhaya Varalatril Penmai Rating: 0 out of 5 stars0 ratingsMaalai Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsPenvazhipaadu Rating: 0 out of 5 stars0 ratingsKannadi Meengal Rating: 0 out of 5 stars0 ratingsSiva Kali Peralai Rating: 0 out of 5 stars0 ratingsThappu Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsOru Mahaanin Avatharam Rating: 0 out of 5 stars0 ratingsIlakkiya Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsOorani Yappu Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Vaarpugal Rating: 0 out of 5 stars0 ratingsIdukki Rating: 0 out of 5 stars0 ratingsVithiyai Vellum Vazhigal Rating: 0 out of 5 stars0 ratingsThathuvamedhai J.k.vum Manavargalum Rating: 0 out of 5 stars0 ratingsBhoomikku Kidaitha Puthayal Rating: 0 out of 5 stars0 ratingsTamil Thirumanam Rating: 0 out of 5 stars0 ratingsMayangoli Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsVizhuthugal Rating: 5 out of 5 stars5/5Thulli Thiriyum Ninaivalaigal - Part 3 Rating: 0 out of 5 stars0 ratingsThanga Thamarai - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsVidhaikkul Virutcham Rating: 0 out of 5 stars0 ratingsAnma Kadandhu Sellum Padhai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Amarar Kalkiyin Azhiyatha Kathai Maanthargal
0 ratings0 reviews
Book preview
Amarar Kalkiyin Azhiyatha Kathai Maanthargal - W.R. Vasanthan
https://www.pustaka.co.in
அமரர் கல்கியின் அழியாத கதை மாந்தர்கள்
(ஓர் உளவியல் ஆய்வு)
Amarar Kalkiyin Azhiyatha Kathai Maanthargal
Author:
வி.ர. வசந்தன்
W.R. Vasanthan
For more books
https://www.pustaka.co.in/home/author/wr-vasanthan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
தோரண வாயில் (முன்னுரை)
1. கல்கியின் அகவியல் பார்வை
2. குந்தவியின் இதய தீபம்
3. விக்கிரமனின் காதல் விவேகம்
4. சிவகாமியின் தாமரை நெஞ்சம்
5. மாமல்லனின் மகிழம் பூ மனம்
6. நாகநந்தியின் இராவண மோகம்
7. ரஞ்சனியின் காதல் வஞ்சம்
8. வந்தியத் தேவனின் இரசிக உள்ளம்
9. குந்தவையின் காதல் இலட்சியம்
10. மணிமேகலையின் மனோரதம்
11. நந்தினியின் வினோதக் காதல்
12. ஆதித்தனின் காதல் ஆவேசம்
13. பழுவேட்டரையரின் விரகதாபம்
14. சுந்தர சோழரின் சந்தர்ப்பக் காதல்
15. மந்தாகினியின் மனக் கோயில்
16. பூங்குழலியின் நெஞ்சக்கனல்
17. அருள் மொழியின் ஆழ்மன ஏக்கம்
18. சேந்தன் அமுதனின் தெய்வீகக் காதல்
19. வானதியின் இன்பக்கனவு
20. துணைமாந்தரின் காதல் விழைவுகள்
21. புறவாயில்
தோரண வாயில் (முன்னுரை)
மனித படைப்பின் நுண்ணிய கூறுகள் உடலியல் சார்ந்ததாகவும், உளவியல் சார்ந்ததாகவும் இரு வேறு அம்சங்களாக அமைந்திருக்கின்றன. உடல் சார்ந்த வாழ்க்கை பொதுவாக அனைத்து உயிர்களுக்கும் ஒரே மாதிரியானது.
இயக்க ஆற்றலுக்காக உண்பதும், ஓய்வுக்காக உறங்குவதும், இனப்பெருக்கிற்காக உறவாடுவதுமாக உடற்கூறுகள் ஒத்தத் தன்மை கொண்டன. ஆனால் உளவியல் இயக்கம் என்பது மனிதனுக்கு மட்டுமே அருளப்பட்டது. தனித் தன்மை வாய்ந்தது.
மனிதனை பிற உயிர்வகைகளினின்றும் வேறுபடுத்துவது, உளவியலோடு தொடர்புடைய நான் என்ற உணர்வுதான். நான் என்பது என்ன? உயிரும், அதனால் இயங்கும் உடலும் சேர்ந்த மொத்த வடிவந்தான் நான் என்பதா? இல்லை, மனிதனுக்குள் தனியே செயல்படுவதாகக் கருதப்படும் ஆன்மா என்பதுதான் நானா? ஒவ்வொருவருக்குள்ளும் வியாபித்து நிற்கும் தனித்தன்மைக்கு என்ன காரணம்?
நான் என்ற உணர்விற்கு ஒவ்வொரு உயிரணுவினுள்ளும் இருந்து இயக்கும் உயிர் சக்தியும், உடலுமே காரணங்களாயின், அனைத்து மனிதரும் விலங்கினங்களைப் போல ஒரே குணமும், செயல்பாடுகளும் கொண்டிருக்கவேண்டும். உடல் தொடர்பின்றி அவனுக்குள் தனித்து இயங்கும் அது ஆன்மா என்றால், அவன் துயிலும் போதும், உணர்வற்ற நிலையிலும் அது விழித்திருந்து அவனுக்கு வழிகாட்ட வேண்டும், அல்லது தன்னை உணர வேண்டும். இரண்டும் இல்லையெனும் போது அந்த உணர்வு எவ்வாறு தோன்றுகிறது?
அந்த உணர்வுக்கும், ஒவ்வொருவரின் தனித்த இயல்புக்கும் காரணமாக அமைவது, சிந்தனை ஆற்றல் கொண்ட மனித மூளையின் இயக்கமே. மரபு வழியே கடத்தப்பட்டு, மரபணுக்களால் மூளையின் அமைப்பில் கட்டப்படும் குணயியல்புகளும், அனுபவங்களைப் பதிவுசெய்து நினைவில் சேமித்து வைத்து, அதை பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றலுமே இந்த உணர்வுக்கு அடிப்படை. மனித மூளையின் தன்னை உணரும் ஆற்றலே நான் என்ற உணர்வாகும்.
இந்த உணர்வுகள் மனிதனுக்கு மனிதன் மாறுபட்ட வழியில் செயல் வேகம் பெறுவது, அவனுள் மரபு வழியே வந்து வியாபித்து நிற்கும் அகச் சுவைகளாலும், வாழ்க்கை ஓட்டத்தில் மூளை பதிவு செய்து பாதுகாக்கும் அனுபவங்களால் உருவாகும் ஆழ்மனத் தேவைகளாலுமே ஆகும்.
மனிதர்களின் வேறுபட்ட நாட்டங்களுக்கும், குணயியல்புகளுக்கும், செயல்பாடுகளுக்கும் இவையே காரணங்களாகின்றன.
பேராசிரியர் கல்கி அவர்களின் கதாபாத்திரங்கள் உயிர்த் தன்மை மிக்கதாய், காலத்தால் நினைவிலிருந்து அகலாததாய் இருப்பதற்குக் காரணம் என்ன என்பது பல்லாண்டுகளாக என் சிந்தையைத் துருவிய கேள்வி!
அன்னாரின் இலக்கியப் படைப்புக்களை இந்த வழியில் நுணுக்கமாக ஆராயப் புகுந்த போது, மேற்கண்டவாறு அறிவியல் வழியில், உளவியல் அணுகுமுறையோடு அவர் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் பண்பாக்கம் செய்திருப்பதே முதலில் என் சிந்தையில் இடறிற்று.
எனவே, அவரது கதாபாத்திரங்களில் அமைந்து கிடக்கும் உளவியல் கூறுகளை ஆழமாக ஆராய்ச்சி மனப்பான்மையோடு உற்று நோக்கலானேன். அதற்காக கல்கி அவர்களின் கதைகளை பல முறை மீண்டும் மீண்டும் படிக்க நேர்ந்தது. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ஒவ்வொரு கோணங்களில் அந்த உளவியல் மனச்சாய்வுகள் எடுத்தாளப்பட்டிருப்பது என்னை மெய்ச் சிலிர்க்க வைத்தன. அதனால் எழுந்ததே இந்தப் புத்தக நாட்டம்.
கம்பரின் காவியத்திலிருந்தும், சங்க இலக்கியங்களிலிருந்தும், கல்கியின் சம கால புலவர்களிடத்திருந்தும் பாடல்களை நான் எடுத்தாண்டிருப்பது இலக்கிய ஒப்பீடு மட்டும் கருதியல்ல. மனிதனின் அடிப்படை உணர்வுகள் நிலைத்தத் தன்மை கொண்டன. இலக்கியம் என்பதே அழகியல் கூட்டப் பெற்ற உணர்ச்சிகளின் வெளிப்பாடுதான். அவ்வகையில் மனித உணர்வுகள் எக்காலத்தும் ஒத்தவையே என்பதை வலியுறுத்தும் பொருட்டும், உளவியலின் ஆழங்களைக் கண்டுணர்ந்து எழுதும் எழுத்துக்களே காலத்தை வெல்கின்றன என்பதை உணர்த்தும் பொருட்டுமே ஒத்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பாடல்களைக் குறிப்பிட்டேன். உளவியலின் வீச்சு பாத்திர அமைப்பில் எந்த அளவுக்கு மேலோங்கி நிற்கிறதோ, இந்த அளவுக்கு அக் கதாபாத்திரம் சாகாவரம் பெறும்.
குறுந்தொகைக் காதலியின் ஏக்கமாயினும், பூங்குழலியின் ஏக்கமாயினும் உணர்வுகள் ஒத்தவை. சீதையின் உணர்வுகளே சிவகாமிக்கும் உரியது.
புத்தக விரிவாக்கம் கருதி, என் ஆய்வுக்கு கல்கியின் சரித்திர நாவல்களை மட்டும் எடுத்துக் கொண்டேன். அவரது சமூக நாவல்களிலும், சிறுகதைகளிலும் கூட இப்படியொரு ஆய்வினைச் செய்ய வேண்டும் என்பது என் அவா. பரந்து விரிந்த அந்த இலக்கியக் கடலுக்குள் ஆழ்ந்து அதன் நுட்பங்களைக் கண்டுணர்ந்து எழுத எனக்கு இரண்டரை ஆண்டுகள் பிடித்தன. என் சொந்தக் கருத்துக்களையும், ஊகங்களையும் தவிர்த்து, பாத்திர சூழமைவையும் அவற்றின் உணர்ச்சிகளையும் ஆராயத்தான் அதிக கவனம் எடுத்துக் கொண்டேன்.
மனித குலத்தை அழியாமல் காப்பதில் நியாயம், நேர்மை, கனிவு, பாசம், இரக்கம், பரிவு என்ற பல பண்புகள் அடிப்படையாக இருப்பினும் அவற்றுக்கெல்லாம் ஆதாரப் பண்பாக அமைந்தது அன்புணர்ச்சியே. அதிலும் ஆண், பெண் இருபாலருக்குமிடையே தோன்றும் காதலுணர்ச்சி அவனை இயக்கும் கருவியாகவும், இழுக்கும் காந்தமாகவும் செயல்படுகிறது.
கல்கியின் கதைகள் அனைத்திலும் ஆதார சுருதியாக இழைவது காதல் என்ற சக்திதான். எனவே, இந்நூலாக்கத்திற்கு, தன் கதை மாந்தர்களின் காதல் நாட்டத்திற்கு ஆதாரமாக அவர் அணுகியிருக்கும் உளவியல் பற்றி என் சிந்தையைச் செலுத்தினேன்.
நாகநந்தி, பெரிய பழுவேட்டரையர், வானதி, நந்தினி போன்ற கதாபாத்திரங்களில் அவற்றின் காதல் நாட்டத்திற்கான உளவியல் கூறுகளை கல்கி தெளிவாக விவரிப்பார் எனில், மற்று அனைத்துக் கதாமாந்தர்களின் காதல் நாட்டங்களிலும், அவர்களின் அக மனத் தேவையோடு உளவியல் கூறுகள் இணைத்துக் கட்டப்பட்டிருப்பது நுணுகி ஆராய்ந்தால் நன்கு புலனாகும். அவைகள் சூழ்நிலை அமைவாலும், பிற கதை மாந்தர்களின் கூற்றுகளாலும் பொருத்திக் காட்டப்படுகின்றன.
கல்கியின் கதாபாத்திரங்களில் பயிலும் உளவியல் சார்ந்த காதல் உணர்வுகள், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் படைப்பிலேயே கட்டப்பட்டிருப்பவை. வலிந்து புகுத்தாமல் இயல்பாகக் கூறும் அவ்வுணர்வுகளில் வாசகன் தன் அகத்தை உணர்கிறான். அவை சாகாவரம் பெற்றிருப்பது அதனால்தான்.
‘அமரர் கல்கியின் அழியாத கதை மாந்தர்கள்’ என்ற இந்த நூல் கல்கி அன்பர்களையும், இலக்கிய ஆர்வலர்களையும் நிச்சயம் கவரும் என்று நம்புகிறேன்.
- வி.ர.வசந்தன்
1. கல்கியின் அகவியல் பார்வை
உயிரினங்கள் தோன்றிய அன்றிலிருந்து அவற்றின் உள்ளே ஓடும் பாலின ஈர்ப்பு என்ற நேர் - எதிர் மின்சாரத்தில்தான் சிருஷ்டிப்பின் சாரம் அடங்கிக் கிடக்கிறது.
விண்மீன்களும், வான் கோள்களும் ஒன்றையொன்று கவர்ந்து, தங்கள் ஈர்ப்பு விசையால் இப்பிரபஞ்சத்தை நிலை பிறழாமல் காப்பது போல், ஆணினத்துக்கும், பெண்ணினத்துக்கும் இடையிலான கவர்ச்சியே உயிர்களை அழியாமல் காக்கிறது.
ஆண்டாண்டு காலமாய் மனித குலத்தை இயக்கி வரும் இந்த ஆதாரசக்தி, காமம் என்ற உடல் இச்சையின் அடித்தளத்தில் கட்டப்பட்டிருந்தும், காதல் என்பதில் ஆழ்ந்த உளவியல் அம்சங்களும் அடங்கியுள்ளன. ஜடப்பொருட்களின் ஈர்ப்புக்கும், பிற உயிரினங்களின் இணை சேரும் வேட்கைக்கும், மனித காதலுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு. மனித காதலை பிறவற்றிலிருந்து வேறுபடுத்தி வைத்திருப்பது சிந்தனை ஆற்றல் கொண்ட அவனது மனம். காமம் என்பது உடலின் இச்சையாயின், காதல் என்பது மனதின் இச்சை.
பசிக்காக விலங்குகளை வேட்டையாடிய ஆதி மனிதர்களின் வேட்டுவ மூர்க்கமும், தன்னைக் காத்துக்கொள்ள எதிராளியைக் கொன்று வீழ்த்திய அசுர ஆவேசமும் நாகரிக வளர்ச்சியில் வீரமென்றும், போர்க்கலையென்றும் எவ்வாறு ஆனதோ, அவ்வாறே காமம் என்ற பாலின வேட்கைதான் காதலாக வர்ணம் பூசிக்கொண்டது என்றொரு கருத்து உண்டு.
இக்கூற்று வீரத்துக்குப் பொருந்துமாயினும், காதலுக்குப் பொருந்துவதில்லை. ஏனெனில் வீரம் முற்றும் முழுக்க புறவாழ்க்கை சார்ந்தது. சூழ்நிலைகள் ஏற்படுத்தும் கட்டாயத்தால் ஆளுமை செய்யப்படுவது. அதில் மனதின் தேவையில்லை. ஆனால் காதல் என்பது அவனுக்குள்ளிருந்து அவனை இயக்கும் உணர்வு. அது அகத்தின் தேவை. நேசிக்கவும், நேசிக்கப் படவும் ஏற்பட்ட இந்த ஆழ் மன அழுத்தம் மனித மரபுடன் இரண்டறக் கலந்தது, பசி சார்ந்த உடலின் புற வாழ்க்கையில் சுயநலம் மட்டுமே உண்டு. ஆனால் காதல் சார்ந்த அகவாழ்வில் கொடுத்துப் பெறும் அன்புணர்வே மிஞ்சி நிற்கும்.
எத்தனை செல்வங்கள் இருப்பினும், இவ்வுலக இன்பங்கள் அனைத்தையும் துய்ப்பினும் தனிமை வாழ்வில் ஒரு ஆணும், பெண்ணும் ஒரு போதும் திருப்தியடைந்து விடுவதில்லை. அது இன்னொரு இதயத்தின் அன்புக்கு ஏங்குகிறது. தனித்த வாழ்வை அரை வாழ்வாகவே எண்ணுகிறது, மனித இனம். ஆனால் பிற உயிரினங்களில் இணை சேரும் வேட்கையேயன்றி, அன்புக்கு ஏங்கும் இத்தவிப்பு இருப்பதில்லை. அது மனித மனங்களுக்கு மட்டுமே சொந்தமானது.
‘புருஷர்களையும் சரி, ஸ்திரீகளையும் சரி, ஒரு பிராயத்திற்குப் பிறகு தனிமை என்னும் துன்பம் பீடிக்கிறது. வாழ்க்கையில் வேறு எல்லாவித சுக சௌகரியங்களும் இருந்தாலும், ஏதோ குறை உணர்ச்சி இருந்து கொண்டிருக்கிறது. ஒரு ஜீவன் இன்னொரு ஜீவனுடைய கூட்டுறவை நாடுகிறது. புருஷனுக்கு ஸ்திரீயினுடைய சிநேகத்தினாலும், ஸ்திரீக்குப் புருஷனுடைய சிநேகத்தினாலும்தான் இந்தக் குறை தீரும். இது இயற்கை நியதி. கடவுளின் சித்தம். ஒருவனுக்கு இத்தகைய குறை தோன்றாவிட்டால், அவன் இயற்கைக்கு மாறுபட்டவன் என்றே தீர்மானிக்கலாம். ஜீவன்களுடைய தனிமைத் துன்பத்தைப் போக்கிக் கூட்டுறவின் மகிழ்ச்சியை அவர்களுக்கு அளிப்பதற்காகத்தான் கலியாணம் என்பது ஏற்பட்டது. கலியாணத்தின் இந்த இலட்சியம் நிறைவேற வேண்டுமானால், சில நிபந்தனைகள் பூர்த்தியாக வேண்டும். அவைகளில் முக்கியமானது காதல்... காதலில் தேகதத்துவம், மனோதத்துவம் இரண்டும் அடங்கியிருக்கின்றன. காதலி அல்லது காதலனுடைய ஸ்பர்சத்தினால் எவ்வளவு இன்பம் உண்டாகிறதோ, அவ்வளவு இன்பம் அவள் அல்லது அவனைப் பற்றி நினைப்பதிலேயே உண்டாகிறது’ (கலியாணம் - தனிக் கட்டுரை) என்று மனதின் தேவை பற்றியும், அதில் ஆளுமை செய்யும் காதலின் தன்மை பற்றியும் குறிப்பிடுவார் கல்கி. மனதின் தேவையாக உருவாகி வளரும் காதல் மனிதர்களுக்கு மட்டுமே உரிய தனிப் பெரும் சொத்து.
மனித மனதின் தனி இயல்பான இந்த ஆதி உணர்வை ஒரு கதை வடிவிலும் அவர் எடுத்துரைப்பது நோக்கத்தக்கது.
‘கடவுள் படைத்த ஆதிமனிதன், ஒரு மலையின் சாரலில் ஒரு குறைவும் இல்லாமல் வாழ்ந்து வந்தான். ஆயினும் அவனுடைய உள்ளத்தின் உள்ளே ஏதோ ஒரு குறை, இனந் தெரியாத ஒரு வகைத் தாபம் இடைவிடாமல் குடி கொண்டிருந்தது. ஏதோ ஒரு அரிய பொருளை, இதுவரை பார்த்தும் அனுபவித்துமறியாத இன்பத்தை அவனுடைய இதயம் தேடிக் கொண்டிருந்தது. எனக்காகவே படைக்கப்பட்ட அந்தப் பொருளை, கற்பகக் கனியை, என்னை கவர்ந்திழுக்கும் காந்தத்தை எங்கே காண்பேன்? எப்போது காண்பேன்? என்று அவன் இதயம் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தது.
ஆதி மனிதனைப் படைத்த அதே சமயத்தில் இறைவன் ஆதி ஸ்திரியையும் படைத்தார். மலையின் மற்றொரு பக்கத்துச் சாரலில் அவள் வசித்து வந்தாள். வெளிப்படையாகப் பார்த்தால் அவளுக்கு ஒரு குறைவும் இல்லை. ஆனால் உள்ளத்தினுள்ளே ஒரு தீப்பிழம்பு ஜூவாலை விட்டு அவளை எரித்துக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு சக்தி கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தது. அந்த சக்தி எங்கிருந்து இழுக்கிறது? எந்தத் திசையை நோக்கி இழுக்கிறது என்பது ஒன்றும் தெரியவில்லை.
வெயிற்காலத்தில் ஒருநாள் காட்டில் தீ மூண்டு நாலாப்புறமும் பரவத் தொடங்கியது. மலையைச் சுற்றி நெருப்பு அதி வேகமாய்ப் பரவி வந்தது. மனிதனும், ஸ்திரியும் காட்டுக்குள் போனால் ஆபத்துக்குள்ளாவோம் என்று உணர்ந்து மலைமேல் ஏறினார்கள். மலையின் உச்சியில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்தார்கள். பார்த்த கண்கள் பார்த்தபடி கண் கொட்டாமல் நின்றார்கள். இத்தனை காலமும் தாங்கள் உயிர் வாழ்ந்ததெல்லாம் இந்த ஒரு சந்திப்புக்காகவே என்பதை உள்ளுணர்வினால் அறிந்தார்கள். தங்களைக் கவர்ந்திழுத்த இனந்தெரியாத சக்தி இதுதான் என்பதையும் தெரிந்து கொண்டார்கள். தங்களில் ஒருவரிடம் உள்ள குறையை, இன்னொருவரால் இட்டு நிரப்பிப் பூர்த்தி செய்ய முடியும் என்பதை அறிந்தார்கள். இவ்விதம் ஒன்று சேர்ந்து விட்டவர்களை இனிப் பிரிக்கக் கூடிய சக்தி, உலகில் வேறொன்றும் கிடையாது என்பதையும் உறுதியாக உணர்ந்தார்கள்’ (பொன்னியின் செல்வன், பாகம்.1: அத். 48)
பாலின வேட்கைக்கும், அன்பு பரிமாற்றத்திற்கும் மனிதன் ஏங்கும் ஏக்கத்தைச் சொல்வதே கல்கியின் இந்த கதை வடிவ விவரிப்பு. இவ்வாறு காமமும், அன்பும் ஈரிழையாய்ப் பின்னிப் பிணையும் போதுதான் காதல் பிறக்கிறது. இணை தேடும் தவிப்பு மட்டுமே அன்று அது.
ஆணும், பெண்ணுமாய் இருவர் மட்டுமே வாழ்ந்த போது அன்பின் ஏக்கமும், இணை சேரும் தவிப்பும் மட்டுமே அவர்களின் அகமனத் தேவையாய் இருந்திருக்கக் கூடும். ஆனால் நாகரிக உலகின் பரிமாணம் விசாலமானது. அதன் கோணங்களும், தேவைகளும் மாறுபடுபவை. நாகரிக உலகில் வாழும் மனிதனின் காதல் நாட்டத்தை அவனது ஆழ் மனதுக்குள் படிந்து கிடக்கும் தேவைகளே நிர்ணயிக்கின்றன. இத்தேவைகள் மரபு வழியாய் வந்து, ஒவ்வொருவருக்குள்ளும் தனிச்சுவையாய் நிலை கொண்டு நிற்பதாகும். மரபு வழி வந்த சுவைகளால் ஏற்படும் அகமன உணர்வுகளோடு, சூழல்களின் தாக்கத்தால் கட்டப்படும் உள்ளார்ந்த விருப்புகளும் கலந்திருக்கின்றன.
காமத்துக்கு கண்கள் இல்லாதிருந்த போதிலும், காதலுக்குக் கண்கள் உண்டு. அவை அக மனதின் கண்கள். அந்தக் கண்கள் விழித்துக் கொள்ளும் போதுதான் உள் மனதில் காதல் சலனம் தோன்றுகிறது.
‘எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற்றகும்’ என்ற தொல்காப்பியக் கூற்று உயிரினங்களின் ஜீவக் கூறுகளில் அமைந்து கிடக்கும் பாலின வேட்கையைச் சொல்வதாகும். ஆயின் காதல் நாட்டத்திற்கு மனக்கண் விழிப்புற வேண்டும்.
இரைக்காவும், இனவிருத்திக்காவும் மட்டுமே மனிதன் இயங்கியிருந்தால், அவனும் ஒரு விலங்காகவே இருந்திருப்பான். நாகரிகம் வளர்ந்தேயிராது. ஆனால் மிருகங்களைப் போலின்றி அவனுக்குள் ஒரு மனதின் தேவையிருந்தது. அத்துடன் மனிதனின் சிந்தனையாற்றலும் கற்பனை வளமும் சேர்ந்து காமத்தை காதலாக்கியது. சமுதாய வளர்ச்சியினால் ஏற்பட்ட வாழ்க்கைச் சிக்கல்கள், மனித மனதில் பின்னல்களை உருவாக்கி, ஆழ்மனத் தேவைகளை விரிவுபடுத்தி, மனிதனுக்கு மனிதன் அதை வேறுபடுத்தியது. நாகரிக வளர்ச்சியும், வாழும் சூழ்நிலையும் அவனுக்குத் தனிப்பட்ட சமுதாய இலக்குகளையும், இலட்சியப் பார்வைகளையும் அளித்தன. அவனது காதல் நாட்டமும் அவற்றிற்கிசைவாகவே அமைந்தது.
தனது ஆழ்மனதின் விருப்பிற்கான காரணத்தை, அவனே பெரும்பாலும் உணர்ந்திருப்பதில்லை. அது மரபு வழி அவன் அணுக்களில் கட்டப்பட்டிருக்கும் கட்டளை. அதை மீறும் சக்தியில்லாமல்தான் காதலில் கரைகிறான். காரணம் கொண்டு காதல் தோன்றுவதில்லை என்பதும் அதனாலேயே.
குறுந்தொகைப் பாடலொன்றில், எதற்காக மனம் தன் காதலியிடம் ஆசை கொண்டு ஏங்குகிறது என்று புரியாமல், கையற்றுப் புலம்பும் காதலன் ஒருவனின் கூற்று இங்கு கவனத்தைக் கவர்வதாகும்.
‘இதற்கிது மாண்டது என்னாது, அதற்பட்டு
ஆண்டொழிந்தன்றே மாண்தகை நெஞ்சம்’
(குறுந்தொகை, நெய்தல் திணை பாடல்.184)
என்று தவிக்கிறான் அக்காதலன்.
மரபுவழியாய் கடத்தப்பட்ட தனிச்சுவைகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடுவதே ஒருவரிடம் ஏற்படாத ஈர்ப்பு மற்றொருவரிடம் ஏற்பட காரணமாகும். அது தன்ணுணர்வை மீறிய மரபின் கட்டளை. கல்கியும் இக்கூற்றினை ஏற்பார்.
‘அன்பு ஏன் ஏற்படுகிறது, எவ்வாறு ஏற்படுகிறது என்று இது வரை உலகில் யாரும் கண்டு பிடித்துச் சொன்னதில்லை’
(பொன்னியின் செல்வன், பாகம் 3; அத். 46)
மனித உளவியலில், மரபியலும் கலந்தே இருப்பதால்தான் மனம் குறிப்பிட்டவர்களிடம் மாள்கிறது. அதனால் அது தன்னையும் மீறிய உணர்வாய் அமைந்து விடுகிறது.
தன்னை மீறி ஆளுமை செய்யும் காதலின் ஆட்சியில் தன்னை நிலை நிறுத்தவும், வெற்றி பெறவும் மனிதன் நடத்திய போராட்டமே நாகரிக வளர்ச்சியின் முதற் கல்.
எதிர்பாலினத்தவரை ஈர்க்க அவன் எடுத்த முயற்சியே அத்தனை பண்பாட்டுக்கும், கலைகளுக்கும், சமுதாய கட்டமைப்பிற்கும் அடிப்படையானது. நாகரிக வளர்ச்சியினால் காமம் காதலாகவில்லை. மாறாக அவ்வளர்ச்சியின் ஆதாரமே காதல்தான். இயக்கு சக்தியாக உள்ளிருந்து மனிதனை ஆட்டிப் படைப்பது காதல் சக்தியே.
‘காதலினால் உயிர் தோன்றும் – இங்கு
காதலினால் உயிர் வீரத்திலேறும்,
காதலினால் அறிவெய்தும்; - இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்’
(பாரதியார் கவிதைகள் - அந்திப் பொழுது)
என்ற பாரதியாரின் வரிகள், வெறும் உணர்ச்சி வேக எழுத்தல்ல, ஆழ்ந்த சிந்தனையின் வெளிப்பாடு.
காதல் சாம்ராஜ்யத்தில் அழகின் ஆட்சி கோலோச்சுவது உண்மைதான். ஆனால் அது மலரின் வண்ணம், வண்டை ஈர்ப்பது போன்றதே. இது ஒரு பொதுமைக் கூறு. மனம் புற அழகினைக் கண்டு, மயக்கம் கொள்கிறதேயன்றி, தெளிந்த காதலுக்கு அது அடிப்படையாகாது.
‘அழகைப் பார்த்து ஆசை கொள்வதுண்டு; மோகம் கொள்வதும் உண்டு. ஆனால் அதை உண்மையான அன்பு என்று சொல்ல முடியாது. அது நிலைத்திருப்பதும் இல்லை’ (பொன்னியின் செல்வன், பாகம் 3; அத். 46) என்பது கல்கியின் கருத்து.
புற அழகை வேறுபடுத்தி மனம் காண்பதே அதற்குச் சான்று. பேரழகு என்று ஒருவர் கொண்டாடுவதை