Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marma Manithan
Marma Manithan
Marma Manithan
Ebook269 pages1 hour

Marma Manithan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெரிய ஜமீன்தார்களை குறிவைத்து அவர்களை கொன்று அவரிகளிடமுள்ள விலைமதிப்புமிக்க பொருட்களை கொள்ளையடிக்கின்றனர். இவ்வாறு நடக்கும் கொலைக்கு காரணமானவரை கண்டுபிடிக்கும் பணியை ஏற்றுக்கொண்ட சங்கர்லாலுக்கு மர்ம மனிதனிடமிருந்து மிரட்டல் கடிதம் வருகிறது. அதில் சங்கர்லால் கொலைச் செய்யபடுவார் என்று கடிதத்தில் குறுப்பிட்டிருந்தது. அந்த மர்ம மனிதன் யார்? சங்கர்லால் அவரிடமிருந்து தப்புகிறாரா இல்லையா? என்பதை தமிழ்வாணனுக்கே உரிய சுவாரசியமாக நடையில் வாசியுங்கள்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580136605881
Marma Manithan

Read more from Tamilvanan

Related to Marma Manithan

Related ebooks

Reviews for Marma Manithan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marma Manithan - Tamilvanan

    http://www.pustaka.co.in

    மர்ம மனிதன்

    Marma Manithan

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    1

    ஒரு நாள், காலை நேரம். சங்கர்லால் கால்கள் இரண்டையும் மேசையின் மேல் தூக்கிப் போட்டுக் கொண்டு, மேசையின் மேல் மடக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகத்தை எடுத்து, விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினார்.

    புத்தகத்தை எடுத்து அவர் சில வரிகள் தாம் படித்து இருப்பார். அதற்குள், என்ன தம்பி? என்று கேட்டுக் கொண்டே எதிரில் வந்து நின்றான், அவருடைய உயிர் போன்ற பணியாள் மாது.

    தேநீர் கொண்டு வா மாது என்றார் சங்கர்லால்.

    கொஞ்சநேரத்தில் மாது தேநீர் கொண்டு வந்தான். சங்கர்லால், தேநீரை வாங்கிக் குடித்து விட்டு மறுபடியும் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினார். அப்பொழுது....

    கீழே காவல் புரிந்து கொண்டிருந்த கான்ஸ்டபிள்களில் ஒருவன் அவருக்கு எதிரே வந்து நின்றுகொண்டு சல்யூட் அடித்து, யாரோ ஓர் அம்மாள் வந்திருக்கிறாள். அவள், உடனே உங்களைப் பார்க்க வேண்டுமாம். பதறிக் கொண்டு நிற்கிறாள். உள்ளே அனுப்ப ஒப்புதல் உண்டா? என்று கேட்டான்.

    அனுப்பு என்றார் சங்கர்லால்.

    கொஞ்சநேரம் கழித்து, ஐயோ! புறப்படுங்களேன்! ரெட்டியார் தற்கொலை பண்ணிக் கொண்டாரே! புறப்படுங்களேன்! என்று அலறிக் கொண்டு, கைகளையும் கால்களையும் உதறிக் கொண்டு, சங்கர்லாலுக்கு எதிரே ஓர் அம்மாள் ஓடிவந்து நின்றாள்! அவள், தவித்தாள்.

    சங்கர்லால், புத்தகத்தை அப்படியே மேசையின் மேல் மடக்கி வைத்து விட்டு, அந்த அம்மாளைப் பார்த்து, இப்படி, இந்த நாற்காலியில் வந்து உட்காருங்கள் என்றார்.

    அந்த அம்மாள், கைகளையும் கால்களையும் உதறுவதை நிறுத்தாமல், படபடவென்று ஆடிக் கொண்டே வந்து நாற்காலியில் உட்கார்ந்தாள்.

    நான் கேட்கும் வினாக்களுக்கெல்லாம் பதறாமல் பதில் சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் நான் வருவேன் என்றார் சங்கர்லால்.

    சரி என்றாள் அந்த அம்மாள்.

    சங்கர்லால், வினாக்களைக் கேட்டார். அந்த அம்மாள் வினாக்களுக்குப் பதில் சொன்னாள்.

    எந்த ரெட்டியார் தற்கொலை பண்ணிக் கொண்டார்?

    பிரம்மபுரம் ரெட்டியார்.

    எங்கே?

    வீட்டிலேதான்.

    யார் வீட்டில்

    அவர் வீட்டிலேதான்.

    அவர் வீட்டில் எங்கே?

    ஓர் அறையிலே.

    எப்படி?

    கதவைத் தாழிட்டுக் கொண்டு துப்பாக்கியை எடுத்துச் சுட்டுக் கொண்டார்.

    எப்போது?

    கொஞ்ச நேரத்திற்கு முன்னால்

    கதவு தாழிட்டிருக்கும்போது அவர் சுட்டுக் கொண்டார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?

    துப்பாக்கி வெடிக்கும் ஓசை கேட்டது. அதைத் தொடர்ந்து, 'ஐயோ!' என்ற அலறல் கேட்டது. நான் ஓடிப்போய், சாவித் துளையின் வழியாக உள்ளே உற்றுப் பார்த்தேன். ரெட்டியார், நாற்காலியில் உட்கார்ந்தபடி மேசை மேல் கவிழ்ந்து கிடந்தார். ஒரு கைத் துப்பாக்கி அவர் மேசையில் இருந்தது.

    நீங்கள் அவருக்கு என்ன உறவு?

    நான், அவர் வீட்டு வேலைக்காரி.

    எத்தனை ஆண்டுகளாக நீங்கள் அவரிடம் வேலை பார்க்கிறீர்கள்?

    பதின்மூன்று ஆண்டுகளாக.

    சரி, போலீசுக்குச் செய்தி சொல்லிவிட்டீர்களா?

    இன்னும் சொல்லவில்லை.

    போய்ப் போலீசுக்குச் செய்தி சொல்லிவிட்டு வீட்டுக்குப் போங்கள். நான், இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கு வருகிறேன்.

    அந்த அம்மாள், கை கால்கள் ஆட, உடல் நடுங்க, அங்கிருந்து எழுந்து போனாள்.

    சங்கர்லாலுடைய கார், நடுமலைக்குப் பக்கத்திலே உள்ள பிரம்மபுரம் ரெட்டியாரின் பங்களாவிற்குள் நுழைந்து நின்றது. அங்கே, உதவிப் போலீஸ் கமிஷனர் வகாப்பும் கான்ஸ்டபிள்களும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

    கான்ஸ்டபிள்களில் ஒருவன் ஓடி வந்து காரின் கதவைத் திறந்தான். சங்கர்லால் கீழே இறங்கினார்.

    உதவிப் போலீஸ் கமிஷனர் வகாப், முன்னே போக சங்கர்லால் அவருக்குப் பின்னே போக, கான்ஸ்டபிள்கள் அவர்களைப் பின்தொடர, எல்லாரும் உள்ளே போனார்கள்.

    உதவிப் போலீஸ் கமிஷனர், பங்களாவின் நடுப்பகுதிக்கு வந்ததும், வலப்பக்கம் தெரிந்த ஓர் அறைக்கு முன் வந்து நின்றார். பிறகு திரும்பிச் சங்கர்லாலைப் பார்த்து, இதோ, இந்த அறைக்குள்ளே தான் சங்கர்லால் என்றார்.

    சங்கர்லால் முன்னே வந்து குனிந்து கதவிலிருந்த சாவித் துளையில் ஒரு கண்ணை வைத்து உள்ளே உற்றுப் பார்த்தார். உள்ளே -

    அறையின் நடுவில் ஒரு மேசை. அந்த மேசைக்கு எதிரே ஒரு நாற்காலி. அந்த நாற்காலியில் உட்கார்ந்தபடி மேசையின் மேல் குப்புற விழுந்து கிடந்தார் ரெட்டியார். அவருடைய வளைந்த முதுகும், முகத்திலே இடப்பக்கக் கன்னமும், மூக்கும், மூடிய ஒரு கண்ணுடன் நெற்றியில் கொஞ்சம் பகுதியும் தெரிந்தன. மேசையின் மேல் பவுன்கள் அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ரூபாய் அடுக்கடுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பணநோட்டுகள் கட்டுக் கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவைகளோடு -

    ஒரு கைத்துப்பாக்கியும் இருந்தது. அந்தத் துப்பாக்கி, மேசையில் இடது பக்கத்து மூலையில் இருந்தது.

    மேலே மின்சார விளக்கொன்று ஒளி வீசிக்கொண்டிருந்தது. அந்த விளக்கு இல்லாவிட்டால் அந்த அறை முழுவதும் இருண்டு கிடக்கும். ஒரே விளக்குதான் அந்த அறையில் இருந்தது.

    சங்கர்லால் திரும்பி, அங்கே நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிள்களில் ஒருவனைப் பார்த்து, போய் அந்த வேலைக்கார அம்மாளைக் கூட்டிக் கொண்டு வா என்றார்.

    கொஞ்ச நேரத்தில் அந்த வேலைக்கார அம்மாளைப் பார்த்து, உள்ளே, கதவு எப்படித் தாழிடப்பட்டிருக்கிறது? தாழ்ப்பாள் உள்ளே எங்கே இருக்கிறது? என்று கேட்டார் அமைதியாக.

    தாழ்ப்பாள், இந்த இடத்திலே இருக்கிறது என்று இரண்டு கதவுகளும் சேர்ந்த இடத்தில் நடுவில் ஓர் இடத்தைத் தொட்டுக் காண்பித்தாள் அந்த வேலைக்கார அம்மாள்.

    சங்கர்லால் சொன்னபடி, தகுந்த ஆட்கள் உடனே வரவழைக்கப்பட்டு, வேலைக்கார அம்மாள் காட்டிய இடம் குடையப்பட்டு, தாழ்ப்பாள் அப்படியே வெளியே எடுக்கப்பட்டது.

    சங்கர்லால் இரண்டு கதவுகளையும் தள்ளினார். கதவுகள் இரண்டும் திறந்து கொண்டன. உதவுப் போலீஸ் கமிஷனரை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு உள்ளே போனார் சங்கர்லால்.

    கதவு சாத்தப்பட்டது. கதவில் குடையப்பட்ட அந்த இடத்தைக் கான்ஸ்டபிள்களில் ஒருவன், தன் முதுகினால் மறைத்துக் கொண்டான்.

    உள்ளே சென்ற சங்கர்லாலும் உதவிப் போலீஸ் கமிஷனரும் பிணத்திற்கு அருகில் வந்ததும் நின்றார்கள். இருவரும் இறந்து கிடக்கும் ரெட்டியாரைப் பார்த்தார்கள். பல கோணங்களில் உற்றுப் பார்த்தார்கள்.

    ரெட்டியாரின் வயிற்றிலிருந்து இரத்தம் வெளியே வந்து வழிந்து உறைந்திருந்தது. அவர் வயிற்றில், குண்டு பாய்ந்த இடத்தில், சட்டையில் பொத்தல் விழுந்திருந்தது.

    சங்கர்லால் கையைத் தட்டினார்.

    ஒரு கான்ஸ்டபிள் உள்ளே வந்தான்.

    அந்த வேலைக்கார அம்மாளை இங்கே அனுப்பு என்றார் சங்கர்லால்.

    கொஞ்ச நேரத்தில் அந்த வேலைக்கார அம்மாள் அங்கே சங்கர்லாலுக்கு எதிரே வந்து நின்றாள். சங்கர்லால் அந்த வேலைக்கார அம்மாளிடம் வினாக்கள் பல கேட்டார். அவர் வினாக்களுக்கு வேலைக்கார அம்மாள் பதில் சொன்னாள்.

    நேற்று, ரெட்டியார் எத்தனை மணிக்கு இங்கிருந்து வெளியே போனார்?

    இரவு பத்து மணிக்கு.

    போகும்பொழுது மகிழ்ச்சியுடன் போனாரா இல்லை, கவலையுடன் போனாரா?

    மகிழ்ச்சியுடன் தான் போனார்.

    வரும்போது?

    மகிழ்ச்சியுடன் தான் வந்தார்.

    அவர் வரும்போது என்ன மணி இருக்கும்?

    இரண்டு மணி இருக்கும்.

    போகும்போதும், வரும்போதும், இதோ, இப்பொழுது அணிந்து கொண்டிருக்கிறாரே இதே உடைதான் அணிந்து இருந்தாரா?

    ஆமாம்.

    திரும்பி வந்ததும் சாப்பிட்டாரா?

    இல்லை, போகும் பொழுது சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போயிருந்தார்.

    வந்தவுடன் என்ன செய்தார்?

    வந்தவுடன் அப்படியே இந்த அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டார்.

    ரெட்டியாருக்கு மனைவி மக்கள் இல்லையா?

    மக்கள் இல்லை மனைவிதான் இருக்கிறார்.

    மனைவி எங்கே?

    அவர் தாய் வீட்டில் இருக்கிறார்.

    ரெட்டியாருக்கு உடன்பிறந்தவர்கள் ஒருவரும் இல்லையா?

    இல்லை.

    ரெட்டியாருக்குத் தாயோ, தந்தையோ உயிரோடு இருக்கிறார்களா?

    இல்லை. அவர்கள் இருவரும் இறந்து பல ஆண்டுகள் ஆகின்றன.

    ரெட்டியாரின் மனைவி, அவர் தாய் வீடு சென்று எத்தனை நாட்களாகின்றன?

    இரண்டு நாட்களாகின்றன.

    அவர் ஏன் தாய் வீடு சென்றிருக்கிறார்?

    அவருடைய தங்கைக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையைப் பார்த்துவிட்டு வரப் போயிருக்கிறார்?

    உங்களைத் தவிர, இந்தப் பங்களாவில் வேறு யாரும் வேலைக்காரர்கள் இல்லையா?

    இருக்கிறார்கள்

    யார் யார் இருக்கிறார்கள்?

    டிரைவர், சமையற்காரன், தோட்டக்காரன், தர்வான், ரெட்டியாருக்கு உடல் பிடித்துவிடுபவன், ஒரு சைக்கிள் பையன் ஆகியவர்கள் இருக்கிறார்கள்.

    அவள், பதில் சொல்லும் பொழுதெல்லாம் விளக்கு வெளிச்சம் தன் முகத்தில் படாதபடி முகத்தைத் திருப்பி கொண்டே பதில் சொன்னாள்.

    சரி, நீங்கள் போகலாம் என்றார் சங்கர்லால்.

    அவள் போய்விட்டாள்.

    சங்கர்லால் அந்த அறையை நன்றாக ஆராயத் தொடங்கினார்.

    சங்கர்லால், முதலில் தரை முழுவதையும் ஆராய்ந்தார். பிறகு, ஒவ்வொரு சுவராக ஆராய்ந்தார். இப்படி, அவர் சுவர்களை ஆராய்ந்து கொண்டே வரும்போது ஒரு சுவரில் ஒரு நீளமான கருப்புக் கோடு தெரிந்தது. சங்கர்லால் அந்தக் கோட்டை உற்றுப் பார்த்தார். அந்தக் கோடு, கீழ் விளிம்பிலிருந்து மேல் விளிம்புவரை கோல் வைத்துப் பென்சிலால் இழுத்தது போல் தெரிந்தது. ஆனால், அந்தக் கோடு பளிச்சென்று தெரியாமல் மங்கலாக மெல்லிய நூல் இழை போல் தெரிந்தது. சங்கர்லாலைத் தவிர, வேறு யாராலும் அந்தக் கோட்டைக் காண முடியாது! சுவரில் அவ்வளவு மங்கலாகத் தெரிந்தது அந்தக் கோடு!

    சங்கர்லால் அந்தக் கோட்டின் மேல் ஒரு கண்ணை வைத்து உற்றுப் பார்த்தார். பிறகு, அந்தக் கோட்டின் மேலேயும் அந்தக் கோட்டுக்குப் பக்கத்திலேயும் மெல்ல தட்டிப் பார்த்தார்.

    உதவிப் போலீஸ் கமிஷனருக்குச் சங்கர்லாலின் போக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது.

    என்ன சங்கர்லால்! இன்னும் என்ன உங்களுக்கு ஐயம்? கைப்புண்ணைக் காணக் கண்ணாடி வேண்டுமா என்ன? ரெட்டியார் நேற்று இரவு வந்திருக்கிறார்; இந்த அறைக்குள்ளே நுழைந்து கதவைச் சாத்தித் தாழிட்டுக் கொண்டிருக்கிறார்; தற்கொலை செய்து கொண்டார்! துப்பாக்கி இதோ மேசையின் மேலே இருக்கிறது! எதற்காகத் தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையின் போது தெரிந்துவிடப் போகிறது! என்றார் உதவிப் போலீஸ் கமிஷனர் உறுதியாக.

    சங்கர்லால் அவருக்கு அருகில் வந்து, இல்லை! நீங்கள் நினைப்பது மாதிரி இது தற்கொலை அல்ல! என்றார்.

    உதவிப் போலீஸ் கமிஷனருக்குத் தூக்கி வாரிப் போட்டது!

    கொஞ்சம் பொறுங்கள் என்று சொல்லிவிட்டுக் கையைத் தட்டினார் சங்கர்லால்.

    ஒரு கான்ஸ்டபிள் வந்து நின்றான்.

    அந்த அம்மாளையும் கூட்டிக் கொண்டு நீங்களும் வாருங்கள் என்றார் சங்கர்லால்.

    கொஞ்ச நேரத்திற்கெல்லாம், அந்த அறைக்குள் அந்த அம்மாளும், எல்லாக் கான்ஸ்டபிள்களும் வந்து அங்கே கூடி நின்றார்கள்.

    சங்கர்லால், உதவிப் போலீஸ் கமிஷனரைப் பார்த்து, இந்த அம்மாளைக் கைது செய்யச் சொல்லுங்கள் உடனே! என்றார்.

    உதவிப் போலீஸ் கமிஷனர் விழித்தார்!

    நீங்கள் கைது செய்யச் சொல்லப் போகிறீர்களா, இல்லையா? நான் சங்கர்லால் சொல்லுகிறேன் என்று மிக அழுத்தமாகச் சொன்னார் சங்கர்லால்.

    மனமில்லாமலேயே, அந்த அம்மளைக் கைது செய்யுங்கள் என்றார் உதவிப் போலீஸ் கமிஷனர்.

    இரண்டு கான்ஸ்டபிள்கள் அந்த அம்மாளைக் கைது செய்தார்கள்.

    அந்த அம்மாள் விழித்தாள்!

    அந்த அம்மாள் வாயைக் கட்டச் சொல்லுங்கள் என்றார் சங்கர்லால்.

    நீங்கள், என்னைப் பைத்தியமாக்குகிறீர்கள் சங்கர்லால் என்றார் வேதனையோடு உதவிப் போலீஸ் கமிஷனர்!

    இப்பொழுது என்னுடைய செயல்களெல்லாம் பைத்தியக்காரத் தனமாய்த்தான் இருக்கும். முடிவிலே தான் எல்லாம் புரியும் என்றார் சங்கர்லால் சிரித்துக் கொண்டே!

    சரி, அந்த அம்மாள் வாயைக் கட்டுங்கள் என்று கட்டளை இட்டார் உதவிப் போலீஸ் கமிஷனர்.

    அவள் வாய் ஒரு துணியால் கட்டப்பட்டது.

    சரி, இரண்டு பேர் அந்த அம்மாள் ஓடிவிடாமல் அவளைப் பிடித்துக் கொள்ளுங்கள். மற்றவர்களெல்லாரும் கொஞ்சங்கூட ஓசை செய்யாமல், கால்களையெல்லாம் மெல்லத் தூக்கிவைத்து நடந்து வாருங்கள் என்றார் சங்கர்லால், கான்ஸ்டபிள்களைப் பார்த்து.

    இரண்டு பேர், அந்த அம்மாளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். மற்றவர்கள் எல்லாம் சங்கர்லாலுக்கு அருகில் வந்து நின்றார்கள். சங்கர்லால் ஓசை இல்லாமல், அவர்களை யெல்லாம் அழைத்துக் கொண்டு போய் அந்தச் சுவரில் தெரிந்த கோட்டிற்குக் கொஞ்சம் தள்ளி ஒரே கூட்டமாக நிறுத்தினார். உதவிப் போலீஸ் கமிஷனரும் ஓசை செய்யாமல் அவர்களுக்கு அருகில் வந்து நின்றார்.

    சங்கர்லால் செவியோடு செவியாக மெல்லிய குரலில், இப்பொழுது நீங்களெல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து, வீட்டிலே தீ.... வீட்டிலே....தீ என்று உங்களால் முடிந்தவரை ஓசை போட்டுக் கத்த வேண்டும். வகாப் நீங்களும் கத்த வேண்டும் என்றார் சிரித்துக்கொண்டே!

    உதவிப் போலீஸ் கமிஷனர், ஓசை செய்யாமல் அடிமேல் அடி வைத்து வந்து சங்கர்லாலின் செவிக்குள் உங்கள் போக்கு எனக்குப் புதிராக இருக்கிறது! உம். கத்துகிறேன் என்றார்.

    அவருக்கு எதுவுமே புரியவில்லை. எல்லாம் குழப்பமாக இருந்தது! இருந்தாலும் சங்கர்லாலிடம் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டாதலால் அவர் சொல்லியபடி எல்லாம் ஆடினார்!

    சங்கர்லால் சிரித்தார். பிறகு, மெல்ல, நான் 'கத்துங்கள்' என்று சொல்லுவேன். நான், 'கத்துங்கள்' என்று சொன்னதும், உங்களால் முடிந்தவரை ஓசைபோட்டு, 'வீட்டிலே தீ.... வீட்டிலே... தீ... வீட்டிலே... தீ....' என்று கத்த வேண்டும் என்றார் சங்கர்லால், அங்கே கூடி இருந்தவர்களையெல்லாம் பார்த்து.

    எல்லாரும் தலையை ஆட்டினார்கள்.

    திடீரென்று சங்கர்லால், கத்துங்கள் என்றார்.

    அவ்வளவு தான்! மறுவினாடி எல்லாரும் வீட்டிலே தீ... வீட்டிலே தீ... வீட்டிலே தீ... என்று தொண்டை கிழிய, அந்தக் கட்டடமே தூள் தூளாக இடிந்து பொடிப் பொடியாக உதிர்ந்து விழும்படிக் கத்தினார்கள்! உதவிப் போலீஸ் கமிஷனரும் உரக்கக் கத்தினார்!

    Enjoying the preview?
    Page 1 of 1