Vaasal Vantha Vanaville
By Latha Baiju
5/5
()
About this ebook
Read more from Latha Baiju
Mazhaiyodu Uravadi Rating: 4 out of 5 stars4/5Kannanin Seethai Rating: 3 out of 5 stars3/5Kaadhalenbathu Yaathenil Rating: 5 out of 5 stars5/5Nesa Veli Rating: 4 out of 5 stars4/5Brahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Layam Thedum Thaalangal Rating: 5 out of 5 stars5/5Mun Anthi Saral Nee... Rating: 5 out of 5 stars5/5Avalum Naanum Rating: 5 out of 5 stars5/5Ithayame Ithayame Rating: 4 out of 5 stars4/5Vizhigalukku Vilangidu Rating: 3 out of 5 stars3/5Thirukkural Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMaiyal Thelintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Marakka Manam Kooduthillaiye Rating: 5 out of 5 stars5/5Nizhal Thedum Nijangal Rating: 0 out of 5 stars0 ratingsUyir Sumantha Urave Rating: 0 out of 5 stars0 ratingsNeeyenge Ninaivugalange Rating: 2 out of 5 stars2/5Aaruyire... En Oruyire... Rating: 5 out of 5 stars5/5Kaadhal Ratchagan Rating: 0 out of 5 stars0 ratingsAboorva Raagangal Rating: 4 out of 5 stars4/5Vanam Vasapadum Thooram Rating: 0 out of 5 stars0 ratingsVidiyalil Oru Vennila Rating: 5 out of 5 stars5/5Thedamal Ponal Kaanamal Poven Rating: 0 out of 5 stars0 ratingsUyir Unarum Va(li)zhiyo Kaadhal Rating: 3 out of 5 stars3/5Nishaptha Mozhigal Rating: 0 out of 5 stars0 ratingsCelluloid Kanavugal Rating: 1 out of 5 stars1/5Iru Vennila... Un Vaanila... Rating: 0 out of 5 stars0 ratingsImaipeeli Neeyadi Rating: 4 out of 5 stars4/5Pazhamozhi Kathaigal Rating: 5 out of 5 stars5/5Appavin Dairy Rating: 5 out of 5 stars5/5
Related to Vaasal Vantha Vanaville
Related ebooks
Neeyenge Ninaivugalange Rating: 2 out of 5 stars2/5Imaipeeli Neeyadi Rating: 4 out of 5 stars4/5Uyir Sumantha Urave Rating: 0 out of 5 stars0 ratingsAzhagooril Poothavaley Rating: 5 out of 5 stars5/5Aaruyire... En Oruyire... Rating: 5 out of 5 stars5/5Nenjamellam Kaadhal Rating: 5 out of 5 stars5/5Vanam Vasapadum Thooram Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Kanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Uyiril Un Peyar Ezhuthugiren Rating: 5 out of 5 stars5/5Kallil Vaditha Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Virumbum Ooruyire! Rating: 0 out of 5 stars0 ratingsNooru Jenmam Nee Vendum! Rating: 0 out of 5 stars0 ratingsAboorva Raagangal Rating: 4 out of 5 stars4/5Maiyal Thelintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Ithu Irulalla! Rating: 5 out of 5 stars5/5Nizhal Thedum Nijangal Rating: 0 out of 5 stars0 ratingsUllam Unvasamanathadi Rating: 3 out of 5 stars3/5Mun Anthi Saral Nee... Rating: 5 out of 5 stars5/5Swasamadi Nee Enakku Rating: 4 out of 5 stars4/5Jagame [Kaadhal] Thanthiram Rating: 0 out of 5 stars0 ratingsEngirundho Vandhan Rating: 1 out of 5 stars1/5Uyiraaga Vaa Nila Rating: 4 out of 5 stars4/5Kanintha Mana Deepangalai! Part - 2 Rating: 5 out of 5 stars5/5Ilakkanam Maarumo Rating: 4 out of 5 stars4/5Hello... Mister Yethirkatchi! Rating: 5 out of 5 stars5/5Pattampoochi Para Para! Part-2 Rating: 5 out of 5 stars5/5Varuvaal, Kaadhal Devathai… Rating: 3 out of 5 stars3/5Kaadhal Raasi..! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkenave... Ulaginile... Piranthavale... Rating: 3 out of 5 stars3/5
Reviews for Vaasal Vantha Vanaville
2 ratings0 reviews
Book preview
Vaasal Vantha Vanaville - Latha Baiju
http://www.pustaka.co.in
வாசல் வந்த வானவில்லே
Vaasal Vantha Vanaville
Author:
லதா பைஜூ
Latha Baiju
For more books
https://www.pustaka.co.in/home/author/latha-baiju
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
வானவில் – 1
வானவில் – 2
வானவில் – 3
வானவில் – 4
வானவில் – 5
வானவில் – 6
வானவில் – 7
வானவில் – 8
வானவில் – 9
வானவில் – 10
வானவில் – 11
வானவில் – 12
வானவில் – 13
வானவில் – 14
வானவில் – 15
வானவில் – 16
வானவில் – 17
வானவில் – 18
வானவில் – 19
வானவில் – 20
வானவில் – 1
மங்களகரமான அதிகாலை நேரம். ஆதவன் மெல்ல மெல்ல தன் வெளிச்சக் கதிரால் இருட்டைத் துரத்திக் கொண்டிருந்தான். இருளும் ஒளியும் பூமிக்கு எப்படி நிச்சயமோ அது போலத்தான் இன்பமும் துன்பமும் வாழ்விலும் நிச்சயம் என்ற இயற்கைப் பாடத்தை தினமும் விடாமல் உணர்த்திக் கொண்டு இருக்கிறான் கதிரவன்.
நமது கதிரவனின் உதயம் பொள்ளாச்சியில் தொடங்குகிறது. பழைய நாட்களில் பொருள் ஆட்சி
என்று அழைக்கப்பட்ட பெயர் தான் நாளடைவில் மருவி பொள்ளாச்சி ஆகி இருந்தது.
கம்பீரமாய் வானைத் தொட்டு நிற்கும் தென்னை மரங்களும் இதமான தட்பவெப்ப நிலையும் பொள்ளாச்சியின் தனிச் சிறப்பு. கண்கள் எட்டும் தூரம் வரை எங்கும் பசுமை.. பசுமை மட்டுமே...
மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்திருப்பதால் இங்கு வானிலை வருடந்தோறும் ரம்மியமாய் இருப்பதுடன் மனம்விட்டு ரசிக்கத் தக்க இயற்கை எழிலுடனும் திகழ்கிறது. இந்நகரில் பல அணைக்கட்டுகளும் கோவில்களும் அமைந்திருப்பதால் இது ஒரு சுற்றுலாத் தளமாகவும் திகழ்கிறது.
பொள்ளாச்சியிலிருந்து புறப்பட்டிருந்த அந்தப் பேருந்து புளிய மரங்கள் அழகாய் அணிவகுத்து நின்ற சாலையில் சென்று கொண்டிருந்தது. இதமாய் வீசும் குளிரில் இரு மருங்கிலும் இருந்த இயற்கைக் காட்சிகளை சிலிர்ப்புடன் ரசித்துக் கொண்டிருந்தான் நமது நாயகன் முகிலன்.
தனது அத்தை மகளின் கல்யாணத்தில் பங்கெடுக்க பொள்ளாச்சியில் உள்ள ஒரு கிராமத்திற்கு தன் அத்தையின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது பேருந்தில் ஒலிக்கத் தொடங்கிய பாடல் அவனது இதழ்களில் அழகாய் ஒரு முறுவலை தோற்றுவித்தது. அவனது மனம் அந்தப் பாடலைக் கேட்டதும் பழைய நினைவுகளுக்கு அவனை அழைத்துச் சென்றது. அந்த சுகமான நினைவுகள் அவன் மனதில் ஒரு சந்தோஷ அலைகளாய் எழுந்து அவனது முகத்தில் உதித்த சிரிப்பினைப் பெரிதாக்கியது... அந்தப் பாடல் இதோ...
"வெண்மதி... வெண்மதியே நில்லு...
நீ வானுக்கா... மேகத்துக்கா... சொல்லு...
வானம் தான் உன்னுடைய இஷ்ட்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்ட்டம்..."
சிறு வயதில் இந்தப் பாடலைப் பாடி தன் அத்தை மகளை கிண்டல் செய்தது நினைவில் வந்தது. பள்ளி விடுமுறை நாட்களில் முகிலனும் அவனது தங்கை தாமரையும் வெண்மதியின் அத்தை மகன் ஆகாஷும் வெண்மதியின் வீட்டிற்கு வந்து விடுவார்கள். இவர்கள் மூவருடன் வெண்மதியும் அவளது அண்ணன் நிலவனும் சேர்ந்து கொண்டால் இவர்களின் கொண்டாட்டத்திற்கு அளவே கிடையாது.
அப்போது தான் இந்தத் திரைப்படப் பாடல் வெளிவந்து இருந்தது... அதைக் கேட்டு ஆகாஷும் முகிலனும் வெண்மதியை நோக்கி கிண்டலாய் பாடுவார்கள். அதைக் கேட்டு அவள் வெட்கத்துடன் சிரித்துக் கொண்டு ஓடி விடுவாள். இப்போது அந்த வெண்மதி வானத்துக்கும் இல்லாமல் மேகத்துக்கும் இல்லாமல் ஏதோ ஒரு உலகத்துக்கு வாழ்க்கைப் படப் போகிறாள். அவளை மணமுடிக்கப் போகும் பையனின் பெயர் அகிலன்.
பழைய நினைவுகளை நினைத்தவன் மனது சுகமாய் அந்த நினைவுகளை அசை போடத் தொடங்கியது. சிறு வயதில் அவர்களது பள்ளி விடுமுறை அத்தை வீட்டின் தென்னந்தோப்பிலும் மாந்தோப்பிலும் பம்ப் செட்டிலும் ஒரே ஆட்டம் பாட்டத்துடன் கழியும். அத்தை செய்து தரும் விதவிதமான பலகாரங்களைக் கட்டிக் கொண்டு தோப்பிற்கு கிளம்பினால் உண்ணவும் உறங்கவும் மட்டுமே வீட்டுக்கு வருவார்கள்.
முகிலன் சிறு பிராயத்தில் இருந்தே அந்த இயற்கைக் காட்சிகளைத் தன் கண்களால் படம் பிடித்து மனதுக்குள் சேமித்து வைப்பான். அவனுக்கு பொழுது போகாத நேரங்களில் அதைக் கருத்துக்கு கொண்டுவந்து வெண் தாள்களை தூரிகை கொண்டு வண்ண மயமாக்குவான்.
அவனது கைவரிசையில் அந்தக் காட்சிகள் அழகாய் விரியும்... அதை எல்லாம் விடுமுறைக்கு அத்தை வீட்டுக்கு வரும்போது எடுத்து வந்து வெண்மதியிடம் காட்டுவான். அவனுக்கு படிப்பு தான் வரவேயில்லை..
அவனது தந்தை ஒரு மாநகராட்சிப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தார். மகன் கட்டிடங்களை வரைந்து பெரிய எஞ்சினியராக வருவான் என்று அவர் எதிர்பார்த்திருக்க அவனுக்கோ கணிதம் பாவற்காயாய் கசந்தது.
கல்விசாலை மிகவும் பிடிக்காத இடமாய் இருந்தது. ஆறாம் வகுப்பில் இருந்து ஒவ்வொரு வகுப்பையும் மீண்டும் மீண்டும் படித்து ஐந்து வருடங்களை வீணாக்கி இருந்தான்.
முகிலனை அனைவரும் மக்கு... தற்குறி... என்று பரிகசிக்க வெண்மதி மட்டும் தான் அவனை ஒன்றும் சொல்லாமல் ஆறுதல் படுத்துவாள். அவனது மனதுக்கு இதமாய் பேசி அவனது சித்திரங்களைப் பாராட்டுவாள்.
நன்றாகப் படித்த வெண்மதி பனிரெண்டாம் வகுப்பு முடிந்து ஆசிரியர் பயிற்சி முடித்திருந்தாள். வெண்மதியின் அண்ணன் நிலவனுக்கு விவசாயத்தில் பெரும் விருப்பம் இருந்ததால் அவன் விவசாய மேற்படிப்பு முடித்திருந்தான்.
MBA முடித்த ஆகாஷ் கோவையில் அவனது தந்தையின் தொழிலையே தானும் பார்க்கத் தொடக்கி இருந்தான். முகிலனின் தங்கை தாமரை கம்ப்யூட்டர் எஞ்சினியரிங் முதல் வருடத்தில் அடி எடுத்து வைத்திருந்தாள். அனைவரும் நன்றாகப் படித்து நல்ல நிலையில் இருக்க நமது முகிலன் என்ன படித்துக் கொண்டிருக்கிறான் தெரியுமா...
பனிரெண்டாம் வகுப்பு... மீண்டும் மீண்டும் கஜினி முகம்மதுவாய் அவன் பாடசாலைக்கு படை எடுத்துக் கொண்டிருக்க விக்கிரமாதித்தனை விடாத வேதாளமாய் அவனை விடாமல் படித்து முடித்தே ஆகவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார் அவனது தந்தை.
மகனை ஒரு என்ஜினீயர் ஆக்க வேண்டும் என்பது அவரது பெரும் கனவு... ஆனால் மகனுக்கோ படிப்பு என்பது இஞ்சியைத் தின்பதுபோல் பிடிக்காத ஒன்றாய் இருந்தது.
ஒவ்வொரு வருடத்தையும் படாத பாடு பட்டு முடித்தவன் பனிரெண்டாம் வகுப்பை இரண்டாம் வருடமாக டுட்டோரியலில் படித்துக் கொண்டிருந்தான். தங்கை பொறியியல் கல்லூரியில் கால் வைத்திருக்க அவளுடன் தேர்வு எழுதியவன் டுட்டோரியல் கல்லூரியில் கால் வைத்தான்.
முகிலனின் அன்னை ஆதிரையும் எத்தனையோ முறை அவனது தந்தை கதிரவனிடம் சொல்லிப் பார்த்தார். அவனது படிப்பை நிறுத்திவிடச் சொல்லி.. எதற்கும் அவர் செவி மடுக்கவில்லை... மகனை ஒரு பெரிய படிப்பாளியாக்க வேண்டும் என்பதில் இருந்து அவர் சற்றும் மாறவில்லை... பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தவன் அவன் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் பேருந்து நின்றதும் இறங்கினான்.
சுற்றிலும் கண்ணைச் சுழல விட்டவன் அந்த ரம்மியமான சூழலை ரசித்து அனுபவித்தான். நல்ல காற்றோட்டமான அந்த இயற்கையை ஆழ்ந்து இழுத்து மூச்சு விட்டான். சிறு புன்னகையுடன் மெல்ல தன் அத்தையின் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினான்.
***
அந்த வீட்டின் முகப்பே அது ஒரு கல்யாண வீடு என்பதற்கான அடையாளமாய் பந்தல் போடப்பட்டு வாழை மரமும் மாவிலைத் தோரணமும் கட்டப்பட்டு தனிக் களையுடன் தெரிந்தது. வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த தாமரை, அண்ணனைக் கண்டதும் சிரிப்புடன் நிமிர்ந்தாள்.
வாண்ணா... பயணம் எல்லாம் சுகமா இருந்துச்சா... உன் நண்பன் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா... அதுக்கு போறேன்னு சொல்லிட்டு எங்களோட வராம இருந்துட்டே... அப்புறம் எனக்கு நான் சொன்ன கிளிப் வாங்கிட்டு வந்தியா...
என்று வாசலிலேயே கேள்விகளை ஆரம்பித்து விட்டாள்.
அவள் கேள்விகளுக்கு அவன் பதில் சொல்லிக் கொண்டிருக்கையில் அங்கே வந்த அவனது அத்தை பரிமளம், அடடா... வாத்தியார் பொண்ணுங்கிறது சரியாதான் இருக்கு... அந்தப் புள்ளையை முதல்ல உள்ளே வரவிடு... வாசல்லையே நிறுத்தி வச்சு பேசிட்டு இருக்கே...
என்றவர் நீ வாப்பா... முகிலா...
என்று அவனை உள்ளே அழைத்துச் சென்றார்.
முகிலன் அவனது நண்பன் ஒருவனின் கல்யாணத்திற்கு செல்ல வேண்டி இருந்ததால் அவனை மட்டும் தங்கள் வீட்டில் விட்டு விட்டு அவனது பெற்றோரும் தங்கையும் இரண்டு நாள் முன்னமே வெண்மதியின் கல்யாணத்திற்கு வந்திருந்தனர்.
முகிலனை அவனது அத்தை பரிமளத்திற்கு மிகவும் பிடிக்கும்... படிப்பதைத் தவிர மற்ற எல்லா காரியத்திலும் சமர்த்தனாய் இருந்த அவனை தன் மகளுக்கு மணம் முடித்து வைக்கவே அவருக்கு விருப்பமாய் இருந்தது... ஆனால் அவனுக்கு படிப்பு வராதது ஒரு பெரும் குறையாய்த் தோன்ற தன் மகளுடைய நல்வாழ்வை எண்ணி அவர் தனது ஆசையை யாரிடமும் கூறவே இல்லை... அதேபோல வெண்மதியின் தந்தை உதயனுக்கு தனது தங்கை மகன் ஆகாஷிற்கு அவளைக் கொடுக்கவே விருப்பமாய் இருந்தது...
அவர்கள் குடும்பம் பணவசதியில் இவர்களைப் விடப் பல மடங்கு இருந்ததாலும் ஆகாஷ் வீட்டில் அவன் ஒரே பிள்ளை என்பதால் அவர்கள் பணக்கார குடும்பத்தில் பெண் தேடுவதைக் கேள்விப்பட்டு தன் தங்கை அதைப் பற்றி ஒன்றும் பேசாததாலும் அவரும் தனது ஆசையை மறந்து விட்டு வெளியிடத்திலேயே மாப்பிள்ளை பார்த்திருந்தார்
அதும் அல்லாமல் வெண்மதிக்கு இப்போதே கல்யாணம் முடித்துவிட வேண்டும்... இல்லாவிட்டால் வெகு ஆண்டுகளுக்கு கல்யாண யோகமே இல்லை... என்று அவரது குடும்ப ஜோசியர் கூறிவிடவே இவர்களும் உடனே மாப்பிள்ளை பார்த்துவிட்டனர்.
வீட்டிற்குள் நுழைந்த முகிலனை அவனது அன்னை ஆதிரை சிரிப்புடன் வரவேற்றார். வாடா கண்ணா.... உன் நண்பனோட கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா... உன்னை கூட்டிட்டு வரலைன்னு உன் அத்தையும் நிலவனும் எங்களைப் போட்டு வறுத்து எடுத்துட்டாங்க... நீ போயி பிரெஷ் ஆயிட்டு வா.. நான் காப்பி எடுத்திட்டு வரேன்...
என்றார்.
அதற்குள் காப்பி கப்புடன் வந்த பரிமளம், என்னப்பா... மருமகனே... இங்கே கல்யாணத்திற்கு எத்தனை வேலை கிடக்கு... நீ பாட்டுக்கு முந்தின நாள் விருந்தாளி போல எல்லாரையும் மாதிரி வர்றே... உனக்கு பிடிச்ச வெல்லக் காப்பி போட்டேன்... இந்தா குடி...
என்றவர், என்னப்பா... முதல்ல பார்த்ததுக்கு இளைச்ச மாதிரி இருக்கியே...
என்றார்.
அத்தையின் அன்பில் நெகிழ்ந்தவன், அதெல்லாம் ஒண்ணும் இல்லை அத்தை... நீங்க தான் இளைச்ச மாதிரி இருக்கீங்க... சரி.. எங்கே.. நம்ம கல்யாணப் பொண்ணு...
என்றான் கண்களால் தேடிக் கொண்டே.
அவளுக்கு மெகந்தி போட காலையில் வரேன்னு சொன்னாங்க... குளிக்க போயிருக்கா.. இப்போ வந்திடுவா...
என்றார்.
சரி அத்தை...
என்றவன், காப்பியை ரசித்துக் குடித்தான். அதற்குள் எதற்கோ வெளியே சென்றிருந்த நிலவன் திரும்பி வரவே, அவனிடம் கல்யாண ஏற்பாடுகளைப் பற்றி விசாரித்தவன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்.
பிறகு பிரெஷ் ஆகி வந்தவன் வெண்மதியைத் தேடி அவளது அறைக்குச் செல்ல அதற்குள் கல்யாண மண்டபத்திற்கு ஒரு வேலையாய் சென்றிருந்த அவனது தந்தையும் மாமனும் திரும்பி வந்தனர்.
இவனைக் கண்ட மாமன் உதயன் நலம் விசாரிக்க தந்தை கதிரவனோ ஒன்றும் பேசாமல் முறைத்துக் கொண்டு சென்று விட்டார். அவர் மகனுடன் நன்றாகப் பேசி எத்தனையோ வருடங்கள் ஆயிருந்தன.
அவனது மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளவும் அதற்காக வசை பாடி சொல்லால் அடிக்கவும் மட்டுமே அவர் பேசிக் கொண்டிருந்தார். அவரது மனதில் அவனது தோல்விகள் பெரும் அடியாய் விழுந்தன. அதனால் அவனுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டு அவனைக் காணும் போதெல்லாம் ஒரு எதிரிபோல் முறைத்துக் கொண்டிருந்தார்.
மாமனிடம் பேசிவிட்டு வெண்மதியின் அறைக்குள் நுழைந்தான். மதி...
என்ற அவனது அழைப்பைக் கேட்டு தலை துவட்டிக் கொண்டு கண்ணாடியின் முன்பு நின்றிருந்தவள் திரும்பினாள். அப்போது தான் குளித்து முடித்து வந்தவளின் மீதிருந்து புறப்பட்ட சோப்பும் மஞ்சளும் கலந்த வாசனை அவனது நாசியை இனிமையாய்த் தாக்கியது.
ஒரு பவுடர் கூடப் போடாமல் இப்படிப் பேரெழிலுடன் ஒருத்தி இருக்க முடியுமா... இதோ தன் கண் முன்னால் ஒரு தேவதை நிற்கிறதே... மாசு மருவற்ற குழந்தை முகம்... மாருதியின் ஓவியம் ஒன்று உயிர் பெற்று வந்ததோ...
என்று அவளை ரசனையுடன் நோக்கியவன் தன்னை மறந்து நின்றுவிட்டான்.
அத்தான்... அத்தான்...
என்ற அவளது அழைப்பில் நினைவுக்கு வந்தவனை, என்ன அத்தான்... என்னைப் பார்த்து அப்படியே நின்னுட்டீங்க...
என்று சிணுங்கியவளின் குரல் குயிலை நினைவு படுத்தியது... அவளது சாந்தமான தெய்வீக அழகு எப்பொழுதும் போல் இன்றும் அவனது மனதை கொள்ளை கொண்டது.
பருவ வயதில் அவளது மீது எழுந்த விருப்பத்தை அவளது நன்மை கருதி தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டிருந்தான்.
பள்ளிப் படிப்பைக் கூட முடித்திராத தனக்கு அவளை நேசிக்க எந்த தகுதியும் இல்லை... என்று எப்போதும் போல இன்றும் நினைத்து தன்னை நிதானப் படுத்திக் கொண்டவன்,
மதிம்மா... நல்லாருக்கியா... உன் அத்தான் கல்யாணத்திற்கு சரியா வந்து சேர்ந்துட்டேன் பார்த்தியா... கல்யாணத்தை நல்லா ஜமாய்ச்சுடலாம்... சரி, என்ன சொல்லுறார் உன் மாப்பிள்ளை...
என்று அவளை சீண்டினான்.
ஹ்ம்ம்.. நாளைக்கு கல்யாணத்திற்கு இன்னைக்கு வந்திட்டு ரொம்ப பேசாதீங்க... அத்தான்... நான் நல்லாத்தான் இருக்கேன்... நீங்கதான் இளைச்ச மாதிரி இருக்கீங்க... சரி... நீங்க சாப்பிட்டீங்களா.... வாங்க... சாப்பிடலாம்...
என்று அவனையும் அழைத்துக் கொண்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.
அந்த கல்யாண மண்டபம் மிகவும் பரபரப்பாய் இருந்தது. முகப்பிலேயே நல்வரவு என்றிருந்த போர்டைச் சுற்றிலும் வண்ண வண்ண நியான் விளக்குகள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. வாழை மரமும் இளநீர்க் குலையும் மாவிலைத் தோரணங்களும் நடக்கப் போகும் கல்யாணத்துக்கு மங்கள அடையாளமாய் கம்பீரமாய் நின்றிருந்தன.
வெண்மதி வெட்ஸ் அகிலன்
என்று பெரியதாக வைக்கப்பட்டிருந்த பிளெக்ஸ் போர்டில் மணப்பெண்ணும் பையனும் கைகூப்பி வணங்கி அழகாய் சிரித்துக் கொண்டிருந்தனர். கல்யாண மேடை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு நாங்களும் கல்யாணத்துக்கு ரெடி.... என்று சிரித்துக் கொண்டிருந்தன.
சமையலறையில் தயாராகிக் கொண்டிருந்த அறுசுவை உணவுகளின் மணமும் காப்பியின் மனமும் அங்கிருந்தவர்களின் நாசியை சுகமாய்த் தடவிச் சென்றன.
கல்யாண வீட்டைச் சேர்ந்த பெண்கள் நேரமே குளித்து பட்டுப் புடவை சரசரக்க ஜொலிக்கும் நகைகளோடு புன்னகையும் சேர்ந்து போட்டியிட வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தனர். நிறைந்திருந்த பூக்களின் வாசம் மனதிற்கு இதமாய் இருந்தது.
ஆண்கள் பரபரப்பாய் கல்யாணத்திற்குத் தேவையான வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். இன்னும் சில நேரத்தில் நடக்கப் போகும் கல்யாணத்திற்காய் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர்.
வயதானவர்களும் குழந்தைகளும் தங்களுடைய தோழமைகளுடன் கதைத்துக் கொண்டிருக்க வாலிபர்களும் குமரிகளும் சிரித்துப் பேசி எதிர்பாலாரைக் கவர்ந்து கொண்டிருந்தனர்.
சில இளைஞர்கள் வருபவர்களுக்கு அமர்வதற்கான நாற்காலிகளை வரிசையாக போட்டுக் கொண்டிருக்க அதில் தன் பேரனைக் கண்ட தங்கம்மா பாட்டி, அவனை அழைத்தார். தம்பி... முகிலா.... இங்கே கொஞ்சம் வா கண்ணு....
என்று அழைத்தவரிடம் என்ன பாட்டி... எதுக்கு கூப்பிட்டீங்க...
என்று வந்து நின்றான் பேரன்.
எனக்கு கொஞ்சம் காப்பி எடுத்துட்டு வந்து தாப்பா.... அந்த பிரஷர் மாத்திரை போடணும்.... இனி எப்போ கல்யாணம் முடிஞ்சு சாப்பிட்டு போடுறது... இப்போதே போட்டுக்கறேன்...
என்றார்.
ம்ம்... மாத்திரை எல்லாம் சரியா போட்டுக்கோ பாட்டி... பழைய பாய் பிரெண்ட்ஸ் எல்லாம் உன் பேத்தி கல்யாணத்துக்கு வருவாங்க.... அவுங்களோட எல்லாம் கடலை போட உடம்புல தெம்பு வேணுமுல்ல...
என்று சிரித்தவனை முறைத்தவர்,
டேய் பொடிப்பயலே... ஒழுங்கா ஓடிப்போயிரு... ஏதாவது சொல்லி என் வாயைக் கிளறாதே.... ஒரு கிளாஸ் காப்பி கேட்டா லொள்ளா பேசிட்டு நிக்குறே... இரு.. என் மவனைக் கூப்பிடறேன்....
என்றார்.
அய்யய்யோ... உன் மகனை எல்லாம் கூப்பிடாதே பாட்டி.... அந்தாளு இங்கேயும் வந்து பிரம்பெடுத்து என்னை அடிக்க வருவார்.... சரியான ஹிட்லரு... இப்போ என்ன... உனக்கு காப்பி தானே வேணும்... இரு... நான் எடுத்திட்டு வர்றேன்....
என்று அங்கிருந்து சென்றான்.
போகின்ற அவனையே சிறிது நேரம் பார்த்திருந்த தங்கம்மா, ம்... நல்ல பாசக்கார பையன்... என் பேத்திக்கு தான் கொடுத்து வைக்கலை... இவன் மட்டும் நல்லா படிச்சிருந்தா இப்போ வேற பையன் பார்க்க வேண்டிய அவசியம் வந்திருக்குமா... எல்லாம் விதி...
என்று தன் மகன் வயிற்றுப் பேரனுக்கு மகள் வயிற்றுப் பேத்தியைக் கொடுக்க முடியாத ஆதங்கத்தில் யோசித்துக் கொண்டிருந்தார்.
அதற்குள் காப்பியுடன் திரும்பி வந்த முகிலன், இந்தாங்க பாட்டி... காப்பி...
என்று காப்பி டம்ளரை நீட்டினான். அவனிடம் காப்பியை வாங்கி மணத்தவர், என்னதான் இருந்தாலும் நம்ம மணி அய்யர் காப்பின்னாலே தனி வாசனை தான்.... எத்தனை அருமையா இருக்கு...
என்று சிலாகித்தார்.
அதை ரசித்துக் குடித்துவிட்டு அவன் கொடுத்த மாத்திரையையும் முழுங்கிவிட்டு டேய் முகிலா.... எங்கேடா.... நம்ம தாமரையைக் காணோம்... இன்னுமா புறப்பட்டுகிட்டு இருக்கா...
என்றார்.
ம்ம்... அவளும் உன்னை மாதிரி பொம்பளை வர்க்கம் ஆச்சே... அவ்வளவு சீக்கிரம் புறப்பட்டு வந்திடுவாளா.... எங்களைப் பாரு... எவ்வளவு சீக்கிரம் புறப்பட்டு வந்து வேலையைப் பார்த்திட்டு இருக்கோம்...
என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டவன் அவனை நிலவன் அழைக்கவே அவனிடம் சென்றான்.
என்னடா... நிலவா... இனி ஏதாவது செய்ய வேண்டி இருக்கா... மாப்பிள்ளைக்கு காப்பி கொடுத்தியா... இனி கல்யாணம் முடிஞ்சு தான் அவருக்கு சாப்பாடு...
என்று பேசிக் கொண்டே போனவனைத் தடுத்து சற்று ஓரமாய் அழைத்துச் சென்றவன்,
டேய் முகிலா... மாப்பிள்ளைக்கு காப்பி கொடுக்கத்தான் அவரது அறைக்குப் போனேன்... அங்கே அவரைக் காணோம் டா...
என்றான் சற்று பதட்டத்துடன்.
அதைக் கேட்டு அதிர்ந்தவன், என்னடா சொல்லறே... பாத்ரூம்ல பார்த்தியா... எங்காவது வெளியே நின்னு போன் பேசிட்டு இருக்கப் போறார்... இல்லேன்னா அவரோட நண்பர்கள் கூட எங்காவது போயிருப்பார்.... கேட்டுப்பார்த்தியா...
என்றான்.
அவரோட நண்பர்கள் யாரையும் காணவில்லை... வெளியே எல்லாம் பார்த்துட்டேன்... அங்கே இல்லை... அவுங்க அப்பா அம்மாகிட்டே கேட்கலாமான்னு யோசனையா இருக்கு... எனக்கு என்னமோ தப்பா தெரியுது... மனசுக்குள்ளே ஒரு பயம் வருது... நாம நம்ம வீட்டுப் பெரியவங்ககிட்டே சொல்லிடலாமா...
என்றான் தவிப்புடன்.
வேணாம்டா... அவுங்ககிட்டே சொன்னால் அவுங்களும் பதட்டமாயிருவாங்க... நாம முதல்ல நல்லா தேடித் பார்க்கலாம்... வா...
என்றவன் அவர்களது நெருங்கிய நண்பர்கள் இருவரை அழைத்து அவர்களிடம் விவரத்தைக் கூறிவிட்டு அவர்கள் வாசலுக்கு சென்றனர்.
அப்போது ஆகாஷ் அவனது பெற்றோர்களுடன் அங்கு வர அவர்களிடம் நலம் விசாரிக்க நின்றனர். கோட் சூட்டுடன் பெரிய பிசினெஸ் மேனைப் போல் காரில் வந்து இறங்கிய ஆகாஷ் முகிலனை இளக்காரமாய் விசாரித்தான். அவனைக் காண்பதற்கே வசீகரமான தோற்றத்துடன் அழகாய் இருந்தான்...
ஆகாஷின் அன்னை உமா முகிலனைக் கண்டு கொள்ளவே இல்லை... அவர்களுக்கு எப்போதுமே முகிலன் மீது ஒரு எரிச்சலும் கேலியும் தான். சிறிது கேப் கிடைத்தாலும் அவனைக் குற்றம் சொல்லி மட்டம் தட்டிப் பேசிக் கொண்டிருப்பார்கள்... ஆனால் நிலவனிடம் நன்றாகவே பேசினர். அவர்களின் இளக்காரமான பார்வையைக் கண்டு மனதுக்குள் சிறிது கூசினாலும் அதில் சுருண்டு போகவிருந்த மனதை சரியாக்கிக் கொண்டு அவர்களை அமரும்படி கூறிவிட்டு இவர்கள் வெளியே சென்றனர். அதற்குள் வாசலில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த ஆகாஷின் தந்தை இவர்களைக் கண்டதும் அன்புடன் விசாரித்தார்.
மனைவி, பிள்ளையைப் போலல்லாமல் அவர் அன்பானவராய் இருந்தார். அவருக்கும் வெண்மதியை மருமகளாக்கிக் கொள்ளத்தான் ஆசையாய் இருந்தது... தனது மனைவி சம்மதிக்காததால் தான் மகனுக்கு வெளியே பெண் பார்க்க சம்மதித்திருந்தார்.
மாப்பிள்ளை அகிலனின் பெற்றோர்களும் உறவினர்களும் அங்கு தான் இருந்தனர். அவர்களிடம் விசாரிப்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என நினைத்தவர்கள் ரகசியமாய் மாப்பிள்ளையைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். சிறிது நேரத்திற்குப் பிறகு மாப்பிள்ளை அறையில் இருந்து அவரது பெற்றோர்களின் உரத்த கூச்சல் கேட்கவே அங்கு பாய்ந்தனர்.
அவர்களின் கையில் இருந்த ஒரு கடிதம் அந்த அகிலன் வேறொரு பெண்ணை விரும்புவதையும் இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லாததால் இதே முகூர்த்ததில் அந்தப் பெண்ணை யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொள்ளப் போவதையும் கூறியது.
அதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து நிற்க அய்யய்யோ என் பொண்ணு கல்யாணம் இப்படி ஆகிருச்சே...
என்று கதறிய பரிமளம் மயக்கம் போட்டு விழுந்தார்.
வானவில்லின் வண்ணங்களை
எண்ணி விடலாம்...
நீ எனக்குள் தெளித்த
வாழ்க்கையின் வண்ணங்களை
எண்ணத்தான் முடியுமா...
சொல்லால் வடிக்க முடியாத
வில்லாய் நீ... உன்னை
வடித்தது யார் வானத்தில்...
வானில் வண்ண ஜாலம்
காட்ட வந்த வண்ணக் கொத்தே...
என் எண்ணங்களுக்கு
வண்ணப் பூச்சுக்களைத்
பூசிச் சென்றவளே...
இந்த வண்ணங்கள் நிறம்
கொண்டு வந்ததல்ல..
உன் குணம் கொண்டு வந்தவை...
வருவாயா என் வாசலுக்கு...
வண்ணக் கோலங்களை
அள்ளித் தெளிக்க...
வானவில் – 2
கல்யாண மாப்பிள்ளையைக் காணவில்லை என்ற செய்தி புயல் வேகத்தில் அனைவரையும் சென்றடைய அங்கே சலசலவென்று பேச்சுக்குரல் கேட்கத் தொடங்கியது...
கல்யாணம் நடக்குமா இல்லையா... என சிலர் பட்டி மன்றம் நடத்திக் கொண்டிருக்க... சிலரோ மண்டபம் வரைக்கும் வந்து நடக்காம நின்னு போச்சுன்னா இந்தப் பொண்ணை யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க என விசனிக்கத் தொடங்கியது...
இன்னும் சிலரோ கல்யாண சாப்பாடு சாப்பிட முடியுமோ முடியாதோ... என்ற ஆதங்கத்தில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தது. அகிலனின் குடும்பத்தார் பெண் வீட்டாரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு வருத்தத்துடன் வெளியே நின்று கொண்டிருந்தனர்.
மயங்கி விழுந்த பரிமளத்தின் முகத்தில் தண்ணீர் தெளித்ததும் அவர் மெல்ல கண் திறந்தார். அச்சச்சோ... இப்படி ஆகிப் போச்சே... கல்யாண மண்டபம் வரைக்கும் வந்து கல்யாணம் நின்னு போனால் என் பொண்ணை யார் கல்யாணம் பண்ணிப்பாங்க... என் தங்கத்துக்கு இப்படி ஒரு நிலை வருவதற்கா இத்தனை அவசரமாய் கல்யாண ஏற்பாடு பண்ணினோம்...
அந்த ஜோசியர் வேற இவளுக்கு இப்போ விட்டால் இன்னும் பத்து வருடத்திற்கு கல்யாண யோகமே இல்லேன்னு சொல்லிட்டாரே... நான் என்ன பண்ணுவேன்...
என்று புலம்பிக் கொண்டே அழுது கொண்டிருக்க,
அவரது கணவர் கதிரவனோ இத்தனை செலவு செய்து கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணி எல்லாம் வீணாய்ப் போயிற்றே... இதற்கே இருந்த விளைநிலத்தில் ஒரு பகுதியை விற்க வேண்டியதாய்ப் போயிற்று... என்ன பண்ணுவது...
என்று கையைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தார். அவர்களது நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே அந்த அறையில் இருந்தனர்.
பரிமளத்தின் அருகே வந்து அவரது கையைப் பற்றிக் கொண்ட முகிலனின் அன்னை ஆதிரை, அண்ணி... வருத்தப் படாதீங்க.... அந்தப் பையன் கல்யாணம் முடிந்த பிறகு இப்படி செய்திருந்தா நம்ம பொண்ணோட நிலைமையை யோசித்துப் பாருங்க.... ஏதோ இந்த வரைக்கும் நல்லதாப் போச்சுன்னு நினைச்சு சமாதானப் பட்டுக்க வேண்டியது தான்...
என்றார்.
என்னை எப்படி சமாதானப் பட சொல்லறீங்க அண்ணி... என் பொண்ணு எத்தனை ஆசையோட கல்யாணத்துக்கு தயார் ஆயிருப்பா... அவ கனவெல்லாம் கலைஞ்சு போச்சே...
என்று மீண்டும் அவர் புலம்ப ஆரம்பிக்க, அதுவரை அங்கே நடப்பதை எல்லாம் ஒரு காட்சியாளரைப் போல் நின்று பார்த்துக் கொண்டிருந்த வெண்மதி அன்னையின் அருகில் வந்தாள்.
மணப்பெண் அலங்காரத்தில் பட்டுப் புடவையும் நகைகளும் அணிந்து அழகிய பதுமையாய் மலர்ந்திருந்த அவளது முகம் சற்று வாடியிருந்தது. தன் வருத்தத்தை யாரும் காணாமல் மறைத்துக் கொண்டவள் அன்னையை சமாதானப்படுத்தத் தொடங்கினாள்.
அம்மா.... என்னை நினைத்து நீங்கள் கவலைப் படாதீங்க... எனக்கு அந்த மாதிரி எந்த ஆசையும் இல்லை... கழுத்தில் தாலி ஏறும் வரை யாரையும் என் மனதில் நினைப்பதில் எனக்கு விருப்பமில்லை... அதனால் என் கற்பனைகளைப் பற்றி யோசித்து நீங்கள் வருந்த வேண்டாம்...
என்றாள்.
அவளது தலையை அன்புடன் தடவிய பரிமளம், கண்ணு.. உன்னோட தங்கமான குணத்துக்கு உனக்கு நல்லதே வரும்டா...
என்றவர்