En Jannalukku Veliye - Part 2
By Maalan
()
About this ebook
வீடோ, விமானமோ, ஓடுகிற ரயிலோ, உருள்கிற பேருந்தோ, எல்லா ஜன்னல்கலும் ஏதோ ஒரு காட்சியை எப்போதும் நம் முன் விரித்துக் கொண்டிருக்கின்றன. இயற்கைக் காட்சிகளாய் இருந்தாலும், இயங்கும் வாழ்வின் சித்திரங்களாக இருந்தாலும் அவை நம் சிந்தனையின் ஜன்னல்கலைத் திறக்கின்றன.
அந்த சிந்தனை ஜன்னல் வழி விரிந்த சித்திரங்கள்தான் இந்தக் கட்டுரைகள். இவற்றின் வழி சிந்தும் வெளிச்சம் உங்கள் எண்ணங்களுக்கு ஒளியூட்டும். இவை காலம் இட்ட கையொப்பங்கள். வரலாறு இலக்கியம் சமகால வாழ்வியல் எனப் பல வாய்க்கால்கள் வழியே கவிதையின் எழிலோடு நடக்கும் இந்தக் கட்டுரைகள் உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய ஒரு பொக்கிஷம்.
Read more from Maalan
Thappu Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsManaveli Kalaignan Rating: 0 out of 5 stars0 ratingsJana Gana Mana Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsMaalan Bathilgal Rating: 0 out of 5 stars0 ratingsNandhalala Rating: 5 out of 5 stars5/5Manam Enum Vanam Rating: 0 out of 5 stars0 ratingsAaiyram Kagitha Kokkugal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalinaal... Rating: 0 out of 5 stars0 ratingsMao Zedong Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsEn Jannalukku Veliye Rating: 0 out of 5 stars0 ratingsPuli Vettai Rating: 0 out of 5 stars0 ratingsM. S. Rating: 0 out of 5 stars0 ratingsVazhi Thavariya Vannathu Poochigal Rating: 0 out of 5 stars0 ratingsVizhven Endru Ninaithayo? Rating: 0 out of 5 stars0 ratings
Related to En Jannalukku Veliye - Part 2
Related ebooks
Oorukku Nooru Per Rating: 0 out of 5 stars0 ratingsPantham - Pavithram Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Munnuraigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratings“Thelivu” Jananesan 3 Kurunovelgal Rating: 0 out of 5 stars0 ratingsKurai Ondrum Illai Rating: 0 out of 5 stars0 ratingsகண்ணை நம்பாதே Rating: 0 out of 5 stars0 ratingsKannai Nambathey Rating: 3 out of 5 stars3/5Kaadhalenum Theeviniley Rating: 0 out of 5 stars0 ratingsMercury Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsSakthi Leelai Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsJhangiri Sundaram Rating: 0 out of 5 stars0 ratingsIppadiye Oru Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsNala Charitham Rating: 0 out of 5 stars0 ratingsIlakkanam Meeriya Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - February 2023 Rating: 0 out of 5 stars0 ratingsThen Sindhum Neram Rating: 0 out of 5 stars0 ratingsKaru Rating: 0 out of 5 stars0 ratingsManam Kavarndhavan Rating: 0 out of 5 stars0 ratingsGurupeedam Rating: 0 out of 5 stars0 ratingsAnjuthal Anjamai Rating: 0 out of 5 stars0 ratingsJenma Jenmamai Rating: 0 out of 5 stars0 ratingsKaatru Vaanga Ponen Rating: 0 out of 5 stars0 ratingsKanna Pinna Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsMaya Poigai Rating: 0 out of 5 stars0 ratingsSaagasa Mohini Rating: 2 out of 5 stars2/5Mandhira Muzhakkam Rating: 4 out of 5 stars4/5Kari Kodugal Rating: 0 out of 5 stars0 ratingsVellai Nirathoru Poonai Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsSorna Jaalam Rating: 5 out of 5 stars5/5
Reviews for En Jannalukku Veliye - Part 2
0 ratings0 reviews
Book preview
En Jannalukku Veliye - Part 2 - Maalan
https://www.pustaka.co.in
என் ஜன்னலுக்கு வெளியே - பாகம் 2
En Jannalukku Veliye - Part 2
Author:
மாலன்
Maalan
For more books
https://www.pustaka.co.in/home/author/maalan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
விஷம் உண்ட கண்டன்
பொய்யிலே பிறந்து...
மனிதர் வீழ்ந்தால் மரங்கள் எழட்டும்!
குடும்பத்தைக் கும்பிடு!
அலங்காரமும் இயந்திரமும்
நிலவுக்கும் இடமுண்டு
எமகாதகர்கள்!
வறுமையில் வாடினாரா பாரதி?
செல்லம்மாள் – பாரதி சொல்லப்படாத ஒரு காதல் கதை
போர்ப் பூமியில் ஒரு பூவனம்
மகன் தந்தைக்காற்றும் உதவி
சக்தி உபாசனை
காந்தியின் ஆடையை களைந்த மதுரை!
பயமா? பக்தியா?
புதியன விரும்பு
நடக்க அல்ல, பறக்க!
புல்லுக்கும் பொசியட்டும்
தேனீக்களும் பூனைக் குட்டிகளும்
கற்பனைகள் மெய்யாகும்!
சென்னையில் ஒரு வெனீஸ்!
பாடமும் பள்ளியறையும்
கருத்துரிமை கறுப்புக் குடை அல்ல!
சத்தமும் சட்டமும்
சூரரைப் போற்று
காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
மாறுமா தமிழ்த்தாய் வாழ்த்து?
இருளும் ஒளியும்
வேர்களும் சிறகுகளும்
குட்டித் தூக்கம் போடலாமா?
சிலைகள் சொல்லும் கதைகள்
ரெளத்திரம் பழகு!
புனைவில் போகும் பொழுது
எத்தனை துயரமான வீழ்ச்சி!
என்ன கொண்டு வந்தான் மாமன்?
சாதித்துக் காட்டிய சாதாரண குடும்பத்துச் சிறுவன்
கடவுள் ஆணா? பெண்ணா?
உலகிற்குத் தமிழகம் தந்த ஒளி
கவிதையால் நிரம்பிய காலிக் கூண்டு
வீதியெங்கும் வார்த்தைகள்
அம்மா!
தல, ரொம்ப முக்கியம்!
ஆங்கிலம் அன்னிய மொழி அல்ல!
உள்ள(த்)தை ஊருக்குச் சொல்லுங்கள் ராஜா!
சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?
கடைசியில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம்!
வரலாற்றில் வீழ்தல்
தாயும் (அவளது) தந்தையும்
கொடுப்பதே கிடைக்கும் விதைப்பதே முளைக்கும்
முப்பது வருடமாய் மாறாத முகம்
ஒடிப் போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா?
நான் அவனில்லை
மரம் என்னும் மாதா
அந்த அஞ்சலிக் குறிப்புகள்
கேள்வி பிறந்தது அன்று; நல்ல பதில் கிடைத்தது இன்று!
எல்லோரும் ஓர் இனம்
கும்பலும் கூட்டமும்
இத்தனை தற்கொலைகளுக்கு என்ன காரணம்?
சடங்கு வேண்டாம், சந்தோஷம் பரவட்டும்
அச்சூ!
நடசத்திரமா? மின்மினியா?
திருக்குறள் பக்தி இலக்கியமா?
சங்கத் தமிழும் சாரல் மழையும்!
கோஹினூர்
இணைப்பா? விடுதலையா?
காலம் எழுதிய கதை
என்ன சொல்லட்டும், வாழ்த்தா? அனுதாபமா?
விஷம் உண்ட கண்டன்
அவதூறுகளைப் போல அறைக்கு வெளியே இருந்து வீசுகிறது அனற்காற்று அந்தக் காற்றில் காகிதக் குப்பைகள் மேலெழுந்து மிதக்கின்றன. காய்ந்த சருகுகள் தரதரவெனத் தரையில் தவழ்ந்து நகர்கின்றன. புழுதி கொஞ்சம் புரண்டு படுக்கிறது. இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்கலாம். விசனம் கொள்ளத் தேவையில்லை. காலம் இவற்றைக் களைந்து எறிந்துவிட்டுக் கடந்து போகும்.
நான் கவலை கொள்வதெல்லாம் கண்ணுக்குத் தெரியாத விஷ விதைகளைக் குறித்து. வெறுப்பை உமிழும் விஷ விதைகள் இங்கு காலம் காலமாகத் தூவப்பட்டு வந்திருக்கின்றன. மெல்ல மெல்ல விஷத்தை மேனியில் ஏற்றிக் கொண்டு நாளடைவில் தன்னையே ஒரு விஷமாக்கிக் கொள்ளும் நாகநந்தியை நாம் கல்கியின் நாவலில் சந்தித்திருக்கிறோம். அதைக் கற்பனை என்றெண்ணி ரசித்திருக்கிறோம். ஆனால் அப்படிப்பட்ட மனிதர்களுடன் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பதை என்றேனும் எண்ணிப் பார்த்திருக்கிறோமோ? வாதத்தை வாதத்தால் வெல்ல வக்கற்றவர்கள் வசைகளை நம் மண்ணில் விதைத்து வந்திருக்கிறார்கள். துவேஷத்தில் தூரிகைகளைத் தோய்த்துத் தீட்டப்பட்ட கோணல் சித்திரங்களை காலம் காலமாகக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி அவர்களையும் நஞ்சில் நனைத்து வந்திருக்கிறது நம் சமூகத்தின் ஒரு பகுதி.
பாதிக்கப்பட்டவனின் பக்கம் நில் என்பது இதழியலின் பால பாடம். ஆனால் நம் ஊடகங்கள் இந்த நாகநந்திகளுக்கு அஞ்சி, நாமும் அவற்றால் தீண்டப்படுவோமோ எனப் பயந்து, கண்ணை மூடிக்கொண்டு கள்ள மெளனம் காத்து வந்திருக்கின்றன.
வரலாற்றின் பக்கங்களை வாசிப்பவர்களுக்குத் தெரியும் அவதூறுகளினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆகச் சிறந்த உதாரணம் ராஜாஜி. பொதுஜனங்களோடு பொருந்திப் போகிறவையாக அவரது கருத்துக்கள் அதிகம் இருந்ததில்லை. காஷ்மீரிலிருந்து கல்விக் கொள்கை வரை உடனடியாகக் கிடைக்கக் கூடிய சிறிய பயன்களைவிட நெடுங்காலத்திற்குப் பின் கிடைக்கக் கூடிய நன்மைகள் குறித்துச் சிந்தித்தவர் அவர். கையில் கிடைக்கக் கூடிய கனியை விட மண்ணுக்குள் மறைந்திருக்கும் விதைகள் முக்கியமானவை எனக் கருதியவர் அவர், அவற்றின் வேருக்கு நீரூற்றி வளர்த்தெடுத்தால் காலம் பல கனிகளை நம் கையில் தரும் என்றெண்ணியவர், எழுதியவர், பேசியவர், தன்னுடைய கருத்துக்களைத் தரவுகளோடும் தர்க்கங்களோடும் நிறுவியவர். அவர் கருத்துக்களைச் சரியெனக் காலம் நிரூபித்தது.
ஆனால் அவர் வாழ்நாளில் அபவாதங்களுக்கும் அவதூறுகளுக்கும் உள்ளானர். பொல்லாத வசைகளும், போக்கிரித்தனமான கேலிகளும் அவர் மீது பொழியப்பட்டன. அவை எல்லாவற்றிற்கும் அடிநாதமாக அவரது ஜாதி இருந்தது. வெளிப்படையாக அதைச் சொல்லியே அவர் மீது விஷம் கக்கப்பட்டது.
ஆனால் அவர் அவதூறுகளுக்கு பதில் சொல்ல முற்படவில்லை. எள்ளல்களை இளநகையுடனே கடந்து போனார். அவரைப் பற்றிய செய்திகளை வாசிக்கும்போது பல நேரம் ஆச்சரியத்தில் அமிழ்ந்து போயிருக்கிறேன்.
பிரச்சினைக்குரியதாகக் பேசப்பட்ட பெரியாரின் திருமணம் ஓர் உதாரணம். திராவிடர் கழகத்தின் பிரமுகர் சி.பி. நாயகம் என்பவரது வீட்டில் 1949ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் தேதி மணியம்மையை மணம் புரிந்து கொண்டார், பெரியார். சடங்குகள் மீது நம்பிக்கை இல்லாத பெரியார் சட்டபூர்வமான பதிவுத் திருமணமாகச் செய்து கொண்டார். அதற்கான நடவடிக்கைகளை அவர் ஆரம்பித்த போது அவரது அமைப்புக்குள் ஆட்சேபணைகள், எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அண்ணா முன்னெடுத்த முயற்சிகள் காரணமான அமைப்பின் முக்கிய உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு தூதுக்குழுக்கள் தனித் தனியே பெரியாரைச் சந்தித்துத் திருமணத்தைக் கைவிடக் கோரின. பெரியார் மறுத்துவிட்டார்.
இயக்கத்துக்காக, முன்பெல்லாம் அலைந்ததுபோல் இப்போது என்னால் அலைய உடல் நலம் இடம் கொடுக்கவில்லை. என்னைப் போல பொறுப்பு எடுத்துக்கொள்ள தக்க ஆள் யார் இருக்கிறார்கள்? எனக்கு நம்பிக்கை உள்ளவர் கிடைக்கவில்லை. ஆதலால் எனக்கு ஒரு வாரிசு ஏற்படுத்தி விட்டுப் போகவேண்டும். இந்தத் திருமணம், சட்டப்படிக்கான பெயரே தவிர, காரியப்படி, எனக்கு வாரிசுதான்
என்று தனது முடிவுக்கான காரணங்களை விளக்கிப் பெரியார் அறிக்கை வெளியிட்டார்.
இந்த முடிவுக்காகப் பெரியார் எவ்வளவு விமர்சிக்கப்பட்டாரோ அதை விடக் கடுமையாகத் தாக்கப்பட்டவர் ராஜாஜி. திராவிட இயக்கத்தைச் சாய்க்க ஆரியச் சதி என்றெல்லாம் அவரது ஜாதியைச் சுட்டி அவர் மீது வார்த்தைக் கணைகள் வீசப்பட்டன. இயக்கத்தை உடைப்பதற்கு ஆச்சாரியார் திட்டமிட்டு, பெரியாருக்குத் தவறான யோசனை கூறிவிட்டார் என்றும், ஆரியத்திடம் ஆலோசனை கேட்டு நடக்க ஆரம்பித்துவிட்டார் என்றும், அய்யா சரணாகதி அடைந்து விட்டார் என்றும் அவதூறுச் சேறு வீசப்பட்டது
என்று விடுதலை இதழ் அந்தக் காலத்தைப் பின்னாளில் பதிவு செய்திருக்கிறது (விடுதலை 4.3.2009)
பெரியார் தன் சொந்த வாழ்க்கை குறித்த எடுத்த முடிவிற்காக ராஜாஜியைத் தாக்குவானேன்? அதற்குக் காரணமாக அமைந்தது ஓர் சந்தேகம். மணியம்மையை மணம் செய்து கொள்வது குறித்துப் பெரியார் யோசித்துக் கொண்டிருந்த காலத்தில், அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி ஒரு கோயிலைத் திறக்கத் தனி ரயில் மூலம் திருவண்ணாமலைக்கு வந்தார். அங்கே இருவரும் தனியே சந்தித்துப் பேசினார்கள். ஒன்றும் ஒன்றும் இரண்டு எனக் கணக்குப் போட்டவர்கள் ராஜாஜிதான் திருமண யோசனையைச் சொல்லியிருக்க வேண்டும் என முடிவு செய்தார்கள்.
உண்மை என்னவெனில் பெரியார் அந்தத் திருமண யோசனையைக் கைவிட வேண்டும், குறைந்தபட்சம் ஒத்திப் போட வேண்டும் என்பதுதான் ராஜாஜியின் கருத்தாக இருந்தது. அதற்கு ஆதாரம்: 21.2.1949 அன்று தில்லியிலிருந்து ராஜாஜிக்கு எழுதிய கடிதம். தனது திருமணத்திற்கு சாட்சிக் கையெழுத்திட ராஜாஜி வரவேண்டும் எனப் பெரியார் விடுத்த கோரிக்கைக்கு ராஜாஜி அனுப்பிய பதில் அந்தக் கடிதம். பெரிய பதவியில் இருக்கும் ஒருவர், புகழ் பெற்ற வக்கீல் ஒருவர் தனது திருமணப் பதிவில் சாட்சிக் கையெழுத்திட்டால் பின்னர் கட்சியிலிருந்தோ அல்லது வேறு எங்கிருந்தோ வழக்குகள் முளைத்தால் அதை எதிர் கொள்ள உதவியாக இருக்கும் எனக் கருதி பெரியார் ராஜாஜியை அழைத்திருக்கலாம்.
"தங்களுடைய கடிதம் இன்றுதான் வெளியூரிலிருந்து திரும்பியதும் பார்த்தேன். என்பால் தாங்கள் காட்டும் அன்பைக் கண்டு நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அன்பு, நாட்டுக்கு எந்த விதத்திலாவது உதவும். தங்களுடைய கடிதத்தில் கண்டிருக்கும் விஷயத்தில், ஒரு கஷ்டம் இருக்கிறது. அதாவது, என்னுடைய பதவி.
இந்தப் பதவியை வகிப்பவன், அந்தப் பதவியை வகித்து வரும் காலத்தில் சாட்சி கையொப்பமிடுவது அல்லது அதிகாரிகள் முன்னிலையில் அத்தாட்சியாக நிற்பது, இதற்கெல்லாம் பெரும் பதவியை ஒட்டிய வழக்கத்திற்கும், பதவியின் கவுரவத்திற்கும் ஒவ்வாத காரியம் என்று இவ்விடத்திய உத்தியோகக் கூட்டம் அபிப்பிராயப்படுவார்கள்.
என் அன்புக்கு அடையாளமாக வேறு ஏதேனும் செய்ய வேண்டுமேமொழிய சாட்சிக் கையொப்பத்துக்காகப் போவது அசாத்தியம். இது ஒரு விஷயம். இரண்டாவதாக, உலக அனுபவத்தில் என்னைவிட தங்களுக்கு அனுபவம் அதிகம்... தங்களுடைய வயதையும் நான் தங்கள்பால் வைத்திருக்கும் அன்பையும் கருதி, ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
இந்த வயசில் விவாக எண்ணம் வேண்டாம் என்பது என் அபிப்பிராயம். ஆகையால் ஒரு வருடமாவது ஒத்தி வைத்து, பிறகு மனதில் எண்ணங்கள் ஊர்ஜிதப்படுத்தப்பட்டபின் செய்வது நலம். எழுதத்தோன்றியதெல்லாம் எழுதினேன். மன்னிக்க வேண்டும்."
என்று எழுதிய ராஜாஜி அந்தக் கடிதத்தின் தலைப்பில் ‘பெர்சனல்’ எனக் குறித்திருந்தார். குடியரசுத் தலைவர் மாளிகையிலிருந்து எழுதியிருந்ததால் அது அதிகாரப்பூர்வமான கடிதம் அல்ல என்பதை உணர்த்த அவர் அப்படி எழுதியிருக்க வேண்டும்.
அவதூறுச் சேறும், கடுமையான கண்டனங்களும் அள்ளி வீசப்பட்ட போது ராஜாஜி ‘அப்படி நான் ஆலோசனை கூறவில்லை’ என்று சொல்லி அந்தக் கடிதத்தை ஆதாரமாக வெளியிட்டு, அரை நொடியில் தன்னைத் தற்காத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால் தனது கடைசி மூச்சு வரை ராஜாஜி அந்த கடிதம் குறித்துத் தன் அந்தரங்க நண்பர்களிடம் கூட பகிர்ந்து கொள்ளவில்லை. அந்தக் கடிதம் எழுதப்பட்டபின் 23 வருடங்கள் ராஜாஜி உயிரோடு இருந்தார். அந்த 23 ஆண்டுகளில் அதைக் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை. வன்சொற்கள் எல்லாவற்றையும் புன்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மறைந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கடிதம் வெளிப்பட்டது.
ராஜாஜி மறைந்த பிறகு, பெரியாரும் மறைந்த பிறகு, அண்ணாவும் அமரரான பிறகு, அந்தக் கடிதம் எழுதப்பட்ட 47 ஆண்டுகளுக்குப் பின் மணியம்மை எடுத்துத் தர விடுதலை ஆசிரியர் வீரமணி அதனை வெளியிட்டார். அது வெளி வராமல் போயிருந்தால் ராஜாஜி மீது வீசப்பட்ட சேறு கழுவப்படாமலே போயிருக்கும்.
உங்களை ஒருவர் அவதூறு செய்யும் போது ராஜாஜியை நினைத்துக் கொள்ளுங்கள். நான் அவரைத்தான் நினைத்துக் கொள்ளுகிறேன்.
பொய்யிலே பிறந்து...
மாலைப் பொன்னொளியில் என் ஜன்னலுக்கு வெளியே மரங்களின் நிழல்கள் நீண்டு கிடக்கின்றன. அவற்றின் நிஜமான உயரங்களைக் காட்டிலும் நிழல்களின் நீளம் அதிகமாகவே தோற்றம் தருகிறது. உருவங்கள் உச்சி வெயிலில் சிறுத்தும், அந்தி வேளையில் நீண்டும் காணப்படுவது காலம் என்ற சித்திரக் கித்தானில் (Canvas) கதிரவன் தீட்டும் விசித்திரங்கள் என்பதால் அது குறித்து ஆச்சரியம் கொள்ள அவசியம் இல்லை. இயற்கை எழுதிய அந்த ஓவியங்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று சற்று நேரம் அவற்றை உற்றுப் பார்த்தேன். ‘மிகை’ என்றொரு சொல் புகை போல் என்னுள்ளத்தில் புரண்டு எழுந்தது.
கதிரவனைப் போலக் கவிஞர்களுக்கும் மிகை நாடும் மனம்தான். இடையே இல்லாத பெண்களைச் சங்க இலக்கியத்தில் சந்திக்கலாம். இரு மார்பகங்களுக்கு இடையே ஈர்க்குச்சி கூட நுழைய முடியாதப் பெருந்தனப் பெண்டிரையும் கூடக் காணலாம். ஆயிரம் யானைகளைக் கொன்ற ஆண்மக்களும் அங்கு உண்டு. பழம் பாடல்களில் மட்டுமல்ல, புதுக் கவிதையிலும் இத்தகையப் புனைவுகளுண்டு. இந்த உலகத்தைத் தங்கள் நெம்புகோல் கவிதைகளால் புரட்டிப் போட்டுவிடலாம் என்ற கனவும் புனைவும் நம் கவிஞர்களிடையே இருந்தன.
தமிழ்க் கவிதைகளில் மட்டுமல்ல, எல்லா மொழிகளிலும் இதுதான் நிலைமை. ஆங்கிலக் கவிஞர் பைரன், உலகத்திலிருந்து ஒவ்வொரு மனித உயிர் விடை பெறும் போதும் இங்கே இன்னொரு மனித உயிர் பூக்கிறது
என்றெழுதினார். யாருக்கோ ஆறுதல் சொல்லும் நோக்கில் அவர் அந்த வாக்கியத்தை எழுதியிருக்க வேண்டும். அதை வாசித்த கணினியின் தந்தை எனக் கருதப்படும் சார்ல்ஸ் பேபேஜ் பைரனுக்கு ஒரு கடிதம் எழுதினார்: நீங்கள் சொல்வது உண்மையல்ல. அது உண்மையாக இருக்குமானால் உலகின் மக்கள் தொகை ஒரு போதும் மாறாததாக நிலையாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்பதே அந்தக் கூற்றுப் பிழையானது என்பதை நிரூபிக்கும்
அறிவியலாளர் பேபஜ் யதார்த்தவாதி. பைரன் காதல் உலகின் பெருங்கவிஞன்.
கவிதைகள் உதிர்த்த மிகை உணர்வுகள் அழகானதாக இருந்ததால் நாம் யதார்த்தம் பேசாமல் ஏற்றுக் கொண்டு நாம் ரசித்தோம். கவிதைக்குப் பொய் அழகு என்பதால் கடைவாயில் நகை கசிய அவற்றிற்குக் கை தட்டினோம்.
சில பத்தாண்டுகளுக்கு முன்னால் சிறந்ததென சிலாகிக்கப்பட்ட யதார்த்தவாதச் சிறுகதைகள் இன்று இறந்து போய்விட்டன. சங்ககாலத்துப் பொய்கள் இப்போதும் ஜீவித்திருக்கின்றன. கதைகளை விடக் கவிதைகளுக்கு ஆயுள் அதிகம் இருப்பதற்குக் காரணமே நம்முடைய மிகை நாடும் மனம்தான்.
இன்று நாம் எல்லோரும் கவிஞர்களாகிவிட்டோம். எட்டுத்திக்கும் மிகை சுடர் விட்டு ஜொலிக்கிறது. பத்திரிகைச் செய்தியாகட்டும், ஊடக விவாதங்களாகட்டும், அரசியல் கட்சிகள் அள்ளி வீசும் வாக்குறுதிகளாகட்டும், மேடைப் பேச்சுக்களாகட்டும், வாழ்க்கைச் சரிதங்களாகட்டும், சுயப் புகழ்சிகளாகட்டும், அடுத்தவர் மீதான அவதூறுகளாகட்டும், இலக்கிய விமர்சனங்களாகட்டும் எங்கும் எதிலும் மிகை. சாயாக் கடை அரட்டைகளிலும் சலூன் கடை விவாதங்களிலும் கூட மிகை கொடி கட்டிப் பறக்கிறது. அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது
என்ற வாக்கியம் ஏதேனும் ஒரு செய்தியில் அன்றாடம் இடம் பெறாமல் இருப்பதில்லை. இன்று ஊடக உலகில் யதார்த்தவாதி வெகுஜன விரோதி.
வளர்ப்பானேன். நாம் வாழ்ந்து கொண்டிருப்பது பாகுபலி காலம். தண்ணீர் கேனைத் தன் தோளில் தூக்கிக் கொண்டு வந்திறக்கும் டெலிவரிப் பணியாளை சிவலிங்கத்தைச் சேர்த்தெடுத்து கொண்டு செல்லும் பாகுபலிகளாகப் பாவிக்கப் பழகிவிட்டது வேடிக்கையை வேண்டி நிற்கும் சமூகம். பாகுபலியின் வேர்கள், சின்ன வயதில் நாம் படித்தச் சித்திரக் கதைகளில் இருக்கின்றன. அந்த வயதைத் தாண்டி நாம் வளரவே இல்லையோ என்ற கேள்வி என்னை அவ்வப்போது என்னை அரிப்பதுண்டு.
வேடிக்கையோடு நின்று விட்டால் விசனப்பட ஏதுமில்லை. ஆனால் அது விஷமாக மாறும் போது கவலைப்படாமல் கடந்து போக முடியவில்லை. இந்த விஷத்தைப் பரப்புகிற வேலையை அல்லும் பகலும் அயராது செய்கிற தளத்திற்கு, நஞ்சு கொண்ட பாம்பை நல்ல பாம்பு என்றழைப்பதைப் போலவோ, அல்லது இன்றைய சமூகத்தின் லட்சணத்தை எடுத்துரைப்பது போலவோ, ‘சமுக ஊடகம்’ என்று பெயர். கறுப்பாக வாந்தி எடுத்தவன் காக்காயாக வாந்தி எடுத்ததாகப் பரவிய கட்டுக் கதை போன்ற மிகைபட மொழிதல் அங்கு கலாசாரமாகவே பரவிக் கால்கொண்டு நிற்கிறது.
சில நாள்களுக்கு முன் ஒரு பெரியவரை ஆறு பேர் சேர்ந்து உதைப்பது போல் ஒரு வீடியோ டிவிட்டரில் உலா வந்தது. அதற்குக் கீழிருந்த செய்தி அவர் ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுத்ததால் தாக்கப்பட்டார் என்றது. விசாரணையில் இறங்கிய காவல் துறை விஷயத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. அந்த ஆறு பேரில் அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தார்கள். தாக்கப்பட்டதற்குக் காரணம் ராமர் அல்ல, அவர் தயாரித்து விற்ற தாயத்துக்கள். காசு பணம் சேரும், கஷ்டமெல்லாம் தீரும் என்று சொல்லி அவர் தாயத்துக்களை விற்றிருந்தார். அப்படி ஏதும் நடக்காத ஆத்திரத்தில் அவரை அடித்து உதைத்து விட்டார்கள்.
இந்தச் சின்னப் பூசலுக்குக் கண் மூக்கு வைத்து, கதை கட்டி, டிவிட்டரில் வெளியிட்டார்கள் மூன்று பத்திரிகையாளர்கள். காட்டில் விழுந்த கனல் போல் பரபரப்பும் பதற்றமும் பற்றிக் கொண்டது. செய்தி பொய் எனத் தெரிந்ததும் ஒருவர் ‘செய்தி’யை நீக்கிவிட்டார். ஆனால் காவல் துறை அறிவுறுத்திய பின்னும் டிவிட்டர் நிறுவனம். அந்த வீடியோவை அகற்றவில்லை அதன் தலைமை அதிகாரி இப்போது காவல்துறை விசாரணையில் உண்மை போல் பொய் சொல்பவர்களைப் பற்றி அன்றொரு நாள் ஐந்தாம் வகுப்பில் வெற்றி வேற்கையில் (பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால் மெய் போலும்மே மெய் போலும்மே!) படித்து அதை பரிட்சை முடிந்ததும் அங்கேயே விட்டு விட்டு ஆறாம் வகுப்பிற்கு வந்து விட்டோம். ஆனால் அப்படி மறத்தல் தகுமோ என அன்றாடம் வந்து குவியும் வாட்ஸப் செய்திகள் நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.
அண்மையில் அப்படி ஒரு செய்தி. மணமகன் தேவை விளம்பரம்: வயது 24, 5 அடி 4 அங்குலம். எம்.எஸ்சி (கணிதம்), கோவிஷீல்ட் தடுப்பூசி (இரண்டு தவணையும்) போட்டுக் கொண்ட சுய தொழில் செய்யும் பெண்ணுக்கு மணமகன் தேவை. உண்மை போல தொனிக்கும் இந்த விளம்பரம் சுவாரஸ்யத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு பொய்! வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல விளம்பர வாசகங்களுக்கிடையே கோவிஷீல்டை செருகினான் பாருங்கள் அங்கு தெரிகிறது அவன் குறும்பு.
இதைப் போன்ற பொய்ச் செய்திகளை உருவாக்கித் தருவதற்கென்றே தனி இணைய தளங்கள் இருக்கின்றன. செய்தி நறுக்கைக் கொடுத்து செய்ய வேண்டியதைச் சொல்லி விட்டால் கச்சிதமாக முடித்து தேதியை மாற்றிக் கொடுத்து விடுவார்கள். அஃப்கோர்ஸ் கட்டணம் உண்டு.
பொருத்தமாகப் பொய் சொல்வதும். உள்ளதை உருப்பெருக்கி மிகைப்படுத்துவதும் ஒன்றா என்ற உங்கள் குரல் கேட்கிறது. இல்லைதான். ஆனால் சந்தோஷப்படுத்தவோ, சாமர்த்தியத்திற்காகவோ, வசீகரிக்கவோ, வம்பிற்காகவோ, பாராட்டப் பெறவோ, பாதிப்பை ஏற்படுத்தவோ மிகைப்படுத்தலில் ஆரம்பிப்பது அதற்குக் கிடைக்கும் வரவேற்பில், அல்லது அது கிடைக்காத ஏமாற்றத்தில் போகப் போக பொய்யாக பிறப்பெடுக்கும்.
கொரானா கிருமி தன் உருவை மாற்றிக் கொண்டதைப் போல. உரு மாற்றம் பெற்ற பின் அது உக்கிரமும் அடையும்.
எதற்கும் எச்சரிக்கையாகவே இருங்கள். நாம் வாழும் காலத்தில் –
வாய் மெய்யை வெல்லும்!
மனிதர் வீழ்ந்தால் மரங்கள் எழட்டும்!
எவரோ என்னை ஜன்னலுக்கு வெளியே இருந்து சார்!
என்று அழைக்கும் குரல் கேட்டது. எட்டிப் பார்த்தேன். மூர்த்தி. தபால்காரர் மூர்த்தி. அவர் அனேகமாக அழைப்பு மணியை அழுத்தமாட்டார். கையெழுத்து வாங்காமல் கொடுக்கக் கூடிய கடிதங்களைக் கதவினடியில் போட்டுப் போவார். இப்போது அழைக்கிறார் என்றால் என் கையெழுத்தைக் கோரும் கடிதமொன்று அவர் கையில் இருக்கக் கூடும்.
அழைப்பு மணிகளுக்கு ஓர் அதட்டலான குரல் உண்டு. கதவு மணியோ, கைபேசி மணியோ அதை அதிக நேரம் அலட்சியப்படுத்த முடியாது. எங்கிருந்தாலும் எழுந்தோடி வந்து அதற்கு பதில் சொல்கிற சுபாவம் எனக்கு. அந்த நேரங்களில் ஒரு மிதமான பதற்றம் என்னைப் பற்றிக் கொள்ளும்.
என்ன மூர்த்தி!
என்றேன் கையிலிருந்த உறையை நீட்டிவிட்டு கையொப்பம் வாங்கிக் கொண்டார். எனக்குத் தபால்காரர்கள் மீது தனியொரு பிரியம் உண்டு.
ஒவ்வொரு வீட்டின் வாயிலையும் உரசிக் கொண்டு நடக்கிற ஒரு நதி போல, நாள்தோறும் அனேகமாக எல்லோர் வீட்டிற்கும் வருகை தருபவர்கள் அவர்கள். எத்தனை விதமான மனிதர்களை அவர்கள் அன்றாடம் சந்திக்கிறார்கள். ஒவ்வொருவரையும் உள்ளங்கை ரேகைகளைப் போல அறிந்தவர்கள் அவர்கள்.
வாட்ஸப், இ-மெயில் இவையெல்லாம் வந்து விட்டதால் கடிதம் எழுதுகிற வழக்கம் நம் கை நழுவிப் போய்விட்டது. ஆனால் முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள்தான் அனைவரையும் தொட்டுச் செல்லும் தென்றல். எவரையும் சுட்டு விடாத சூரிய ஒளி. கிராமங்களில் சிலருக்கு அவர்கள்தாம் பேச்சுத் துணை. பலருக்கு பேசாத் துணையும் கூட.
பல வருடங்களுக்கு முன்னால் எம்.எஸ். கல்யாணசுந்தரம் என்றொரு அதிகம் பேசப்படாத, ஆனால் அபாரமான ஓர் எழுத்தாளர் தபால்கார அப்துல்காதர் என்றொரு கதை எழுதினார். சென்ற வருஷம் பெர்னார்ட்ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது ‘இவ்வூரில் பார்க்கத் தகுதியானவை என்னென்ன?’ என்று விசாரித்தார். நவாப் கோட்டை, மஹால், பேசும் கிணறு, எட்டு இடிநாதர் கோவில், பாண்டவர் சுனை என்னும் கொதி ஊற்று, தபால்கார அப்துல்காதர் என்றேன்
என்ற அசத்தலான வரிகளோடு அந்தக் கதை ஆரம்பம் ஆகும்.
மூர்த்திக்குக் கடிதங்களைக் கொண்டு வந்து கொடுப்பது கடமை, பணி. வேலை. ஆனால் அந்தக் காக்கிச் சட்டைக்குள் ஒரு கலைஞன் இருந்தார். ஒரு வித்தியாசமான கலைஞர். வேண்டாம் என நாம் வீசி எறிகிற பொருட்களைக் கொண்டு புதிதாக ஒரு பொம்மையை, சிற்பத்தை உருவாக்கிவிடுவார். சட்டம் உடைந்த ஓவியத்தைச் செப்பனிட்டுப் புதிது போல மாற்றிவிடுவார்.
அதையெல்லாம் இப்படி இரண்டு வரியில் எழுதுவது எளிது. ஆனால் அப்படி உருவாக்குவதற்குக் கைத்திறன் மட்டுமல்ல கலைக் கண் ஒன்றும் வேண்டும். எந்த உடைசலுக்குள் எந்தச் சிற்பம் ஒளிந்திருக்கிறது என்று காணும் கலைக்கண்.
நம் எல்லோருக்குமே அப்படி ஒரு மூன்றாவது கண் அருளப்பட்டிருக்கிறது. இந்த மூன்றாம் கண், சினத்தில் விழிக்கிற நெற்றிக் கண்ணல்ல. அகத்தில் மலர்கிற மனக் கண்.
அப்படி ஒரு கண் வாய்த்ததால்தான், கழித்துக் கட்டப்பட்டக் காகிதத்தில் நாம் இளம் வயதில் கப்பலைக் கண்டோம். (அதுவும் அந்தக் கத்திக் கப்பல்!) பின் அதை மடக்கித் திருப்பி, வாலைச் செருகி, வானூர்தியாக மாற்றிக் காற்றில் வீசினோம். ஆனால் காலப் போக்கில் நாம் அந்தக் கண்ணை மூடிக்கொண்டு விட்டோம். அலைச்சல் மிகுந்த வாழ்க்கையில் அந்தக் கண்ணுக்கு அவசியமோ, அவகாசமோ இல்லாமல் போய்விட்டது.
ஆனால் அலைவதையே தொழிலாகக் கொண்ட மூர்த்தி அந்த மூன்றாம் கண்ணை மூடிக் கொண்டு விடவில்லை. பலவற்றையும் கூர்ந்து பார்க்க அந்தக் கண்ணைக் கூர்மைப்படுத்திக் கொண்டார். உடைந்ததையும் ஒதுக்கியதையும் மட்டுமல்ல, இயற்கையையும் இவரது கண் பார்க்கத் தொடங்கியது. இயற்கையையும் செயற்கையையும் இணைக்க முடியும் என்று கண்டு கொண்டார்.
இந்த நுட்பம் அறிந்த பின் அவர் என் நண்பருக்கு அளித்த பரிசொன்றில் அந்த மனம் வெளிப்பட்டது. மண் தொட்டி ஒன்றில் நிமிர்ந்து நிற்கும் நெகிழிப் பூக்களைப் பொருத்தி நண்பருக்கு பரிசளித்தார். அந்த நண்பர் தொலக்காட்சியில் தோன்றும் போதெல்லாம் அவரது மேசையில் அந்தத் தொட்டியும் பூக்களும் கூடத் தோன்றுகின்றன.
மூன்று நான்கு நாட்களுக்கு முன் மூர்த்தி வாடிய முகத்தோடு வந்தார். விஷயம் என்னவென்று விசாரித்தேன். கொரானாவின் கோரப்பசிக்கு அவரது சகாக்கள் பலர் பலியாகியிருந்தார்கள். அஞ்சல் துறை என்பது மக்களுக்கு அண்மையில் இருக்கிற துறை அல்லவா? வீடு வீடாகப் போய் வருகிறவர்கள் அல்லவா தபால்காரர்கள்? எனவே தாக்கமும் பலியும் அங்கு அதிகமாக இருந்ததில் ஆச்சரியமில்லை. இந்தக் கொடுந்தொற்றுக் காலத்தில் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியவர்கள் மருத்துவர்களும் செவிலியர்களும் மட்டுமல்ல. இதைப் போன்ற முன்களப் பணியாளர்களும்தான்.
தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் முள் குத்தியதைப் போல, இழப்பு ஏற்படுத்திய வேதனையோடு இன்னொரு வருத்தமும் மூர்த்திக்கு உண்டு. ஊரோ, ஊடகங்களோ அஞ்சல் துறைப் பணியாளர்களின் இழப்பை அதிகம் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் அது. அவர் விரும்பியது விளம்பர வெளிச்சமல்ல. ஆனால் அந்தத் தியாகிகளுக்கு நாம் அஞ்சலியாவது செலுத்தியிருக்க வேண்டாமா?
இன்று மூர்த்தி ஒரு யோசனையோடு வந்தார். யோசனை அல்ல, செயல்திட்டம். அந்தத் திட்டம் குறித்து அவர் உதவியோ யோசனையோ கேட்கவில்லை. கொடை கோரவில்லை. நிதி திரட்டவில்லை. தன் முயற்சியிலேயே இதைச் செய்துவிட முடியும் என்பது அவர் நம்பிக்கை.
அவர் திட்டம் இதுதான்: கொரானாவிற்கு பலியான நண்பர்களின் நினைவைப் போற்றும் வகையில், அவரது அஞ்சலக வளாகத்திலேயே, அல்ல, அல்ல, கோயில் அல்ல - ஒரு சிறு தோட்டம் அமைக்கவிருக்கிறார் அவர். இறந்தவர்களின் நினைவாகச் சில செடிகளோ மரங்களோ நட்டு வைப்பது அவர் திட்டம். ‘கொரானா கொடுங்கூற்றுக்கு இரையான அஞ்சலக நண்பர்கள் நினைவாக’ என்று ஒரு பலகை அங்கே இடம் பெறும்.
ஒதுக்கப்பட்டவற்றுள் உயிர்ப்பைக் காணும் கண்ணுக்கு அல்லவோ இப்படி ஓர் எண்ணம் பிறக்கும்!
அவர் சொல்லிவிட்டு அகன்ற பின் அதை அசை போடத் தொடங்கியது மனம். இதை ஏன் நம் அரசே செய்யக்கூடாது? ஒவ்வொரு ஊரிலும் ஒரு சிறு தோட்டம். கொரானாவிற்கு தங்கள் உறவுகளை, நண்பர்களை இழந்தவர்கள், அவர்கள் நினைவாக அங்கே ஒரு மரம் நட அனுமதிக்கலாம். அல்லது மல்லிகை, முல்லை, ரோஜா, அரளி, செம்பருத்தி, நந்தியாவட்டை போன்றவற்றை நட்டு ஓர் நந்தவனம் உருவாக்கலாம். அங்கு படரும் நிழலோ, மலரோ அவர்கள் இயல்பை நினைவைச் சொல்லிக் கொண்டிருக்குமே!
இயற்கையிலிருந்துதான் வந்தோம். இயற்கையிடம்தான் போய்ச் சேருகிறோம். இறந்தவர்களை இயற்கை எய்தினார் எனச் சொல்வது இங்கு மரபு. மரித்தவர்கள் மரங்களாக எழுந்து