En Jannalukku Veliye
By Maalan
()
About this ebook
விசும்பின் துளியொன்று விரலில் வந்து அமர்ந்தது. நான் கண்ணை உயர்த்தி விண்ணைப் பார்த்தேன். சற்றே சாய்ந்து படுத்திருந்த யானைகளைப் போலச் சாம்பல் நிற மேகங்கள் அடிவானில் அடர்ந்திருந்தன. சரசரவென்று சற்று நேரத்தில் ஜரிகை இழைகளைப் போல மழை இறங்கும்.
இயற்கை எழுதும் ஓவியங்களில் மழைக்கு நிகராக இன்னொன்று இல்லை. அண்டை வீட்டுத் தென்னங்கீற்றுகள் அவசர அவசரமாக அசைகின்றன. அவை வான் மழையை வரவேற்கின்றனவா அல்லது நகர்ப்புறத்து நர்சரிக் குழந்தைகளைப் போல போ போ என்று துரத்துகின்றனவா? விரைந்து இறங்கிய காக்கை ஒன்று வேம்பின் கிளைகளில் உடகார்ந்து உடலைச் சிலுப்பிக் கொள்கிறது. எதிர்பாராத நேரத்தில் இறங்கிய மழையால் பயணம் தடைப்பட்டு அது பாதியில் திரும்பியிருக்க வேண்டும். மேகத்தைப் பார்த்துக் காவென்று கரைந்து கண்டனம் தெரிவித்தது காகம். கண்ணுக்குத் தெரியாமல் கத்திக் கொண்டு இருக்கிறது கன்று ஒன்று. ஐயோ நனைகிறேனே,அவிழ்த்துக் கொண்டு போய் வேறிடத்தில் கட்டுங்கள் என்கிறதா அதன் குரல்?. அல்லது ஆனந்தத்தில் சிலிர்த்துக் கொண்டு குஷியைப் பகிர்ந்து கொள்ளக் கூப்பிடுகிறதா?
Read more from Maalan
Thappu Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsEn Jannalukku Veliye - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsJana Gana Mana Rating: 0 out of 5 stars0 ratingsM. S. Rating: 0 out of 5 stars0 ratingsVizhven Endru Ninaithayo? Rating: 0 out of 5 stars0 ratingsMao Zedong Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsVazhi Thavariya Vannathu Poochigal Rating: 0 out of 5 stars0 ratingsMaalan Bathilgal Rating: 0 out of 5 stars0 ratingsManaveli Kalaignan Rating: 0 out of 5 stars0 ratingsVazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsNandhalala Rating: 5 out of 5 stars5/5Puli Vettai Rating: 0 out of 5 stars0 ratingsManam Enum Vanam Rating: 0 out of 5 stars0 ratingsAaiyram Kagitha Kokkugal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalinaal... Rating: 0 out of 5 stars0 ratings
Related to En Jannalukku Veliye
Related ebooks
Kaadhal Bothai Rating: 0 out of 5 stars0 ratingsAamam / Illai Rating: 0 out of 5 stars0 ratingsIthanai Naalai Engirunthai? Rating: 5 out of 5 stars5/5Brindavanamum Nondha Kumaranum Rating: 5 out of 5 stars5/5Aval Oru Vithiyasamanaval Rating: 0 out of 5 stars0 ratingsNaveena Gnana Mozhigal – Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Pon Maan Rating: 0 out of 5 stars0 ratingsIppadiyor Thaalattu Paadava? Rating: 0 out of 5 stars0 ratingsMazhalaiyar Paadalgal - 50 Rating: 0 out of 5 stars0 ratingsKilinjalgal Rating: 0 out of 5 stars0 ratingsDhvani Rating: 0 out of 5 stars0 ratingsUyarndhavargal Rating: 5 out of 5 stars5/5Makizha Malargal Rating: 0 out of 5 stars0 ratingsKalanthorum Aram Rating: 0 out of 5 stars0 ratingsPrachanaigal... Theervugal Rating: 0 out of 5 stars0 ratingsPuli Vettai Rating: 0 out of 5 stars0 ratingsNeeye.. Neeye.. Kadhal Theeye.. Rating: 4 out of 5 stars4/5Parisukku Ponen Rating: 0 out of 5 stars0 ratingsIrattai Naakkugal Rating: 0 out of 5 stars0 ratingsKanniley Neer Etharkku Rating: 0 out of 5 stars0 ratingsSeettu Kattu Maaligai Rating: 5 out of 5 stars5/5Naveena Navarasa Kathaikal Rating: 0 out of 5 stars0 ratingsPonniyin Selvanudan Oru Payanam Rating: 0 out of 5 stars0 ratingsசிறுவர் கதைகள் Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Poyin Rating: 0 out of 5 stars0 ratingspudhayala Vettai Rating: 0 out of 5 stars0 ratingsKaaviyama Nenjin Ooviyama Rating: 0 out of 5 stars0 ratingsApple Mathiri Unnai Appadiye Rating: 0 out of 5 stars0 ratingsOru Koppai Vithi Rating: 0 out of 5 stars0 ratingsKal Vaazhai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for En Jannalukku Veliye
0 ratings0 reviews
Book preview
En Jannalukku Veliye - Maalan
https://www.pustaka.co.in
என் ஜன்னலுக்கு வெளியே
En Jannalukku Veliye
Author:
மாலன்
Maalan
For more books
https://www.pustaka.co.in/home/author/maalan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
இன்னும் கொஞ்சம் இனிப்புச் சேராதா?
சொன்னதும் சொல்லாததும்
ஔவை எடுத்த குறும்படம்
புதையுண்ட குழந்தைகள்
வாழ்த்துக்கள் ரஜனி!. ஆனால்…
நீலம் என்பது நிறம் அல்ல
ஐயோ பாவம், அரிசி ராஜா!
பைகளுக்கு பை பை
பிச்சைக்காரி போட்ட பிச்சை!
பட்டாம் பூச்சி சொல்லும் பாடம்
குழந்தைகளிடம் பொய் சொல்லுங்கள்!
அழிரப்பர் அச்சடித்த அன்புச் சித்திரங்கள்
கோலம் செய்தி கூறுமோ?
எளிமையின் அடையாளம்
சிறகுகள் கொடுத்த பறவை
அனுமன்களே, அறிவீர்களா உங்கள் ஆற்றல்?
செருப்பும் ஸ்ரீராமரும்
உயிர்களுக்கிடையே உண்டா பேதம்?
யாமறிந்த மொழிகளிலே...
கனவும் அழைப்பும்
அரசர் வைத்த சாம்பார்
விபரீதம் விளையுமென்றால் வீட்டுக்கு அனுப்பி வைப்போம் அவர்களை
மிஸ் சந்தேகத்தின் அச்!
நடை
தனிமை பழகும் தருணம் இது
உள்ளே ஒரு கேள்வி
ஒளி படைத்த மண்ணினாய்…
அவள் மனமும் அவமானமும்
சிரமங்களுக்கு நடுவே சில வரங்கள்
பாரதத்தின் சாபமும் வாழ்த்தும்
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது!
கனவுக் கல்லறை
கதை உலகிற்குத் திரும்புவோமா?
அது அப்படித்தான்
கறுப்பும் நெருப்பும்
யாது உம் ஊர், ஏய்?
நீராடலாமா, நீர்?
பலிக்குமா பிரார்த்தனை?
கணா கணா ஆபார்
நனைக்கப் போகும் நாட்கள்
காணாமல் போன கடிதங்கள்
நினைப்பதா? மறப்பதா?
ஐயோ!
ராஷ்ட்ர பாஷா பத்தா நை?
பற்றும் வரவும்
அழுத பிள்ளைக்கு ஆப்பு மேல் ஆப்பு!
வினோத் கன்னாவா, அது யார்?
உங்கள் நெஞ்சில் உள்ளதை ஊருக்குச் சொல்லுங்கள்!
நினைவுகள் இறப்பதில்லை
சும்மா இரு, சொல்லற
இரு வேறு குழந்தைகள்
அங்கீகரிக்கப்படாத வசீகரங்கள்
கை நழுவிய பூ
கண்களுக்கு அப்பால்…
மனவாசம்
கனவில் ஒரு காதல் கதை
நாம் அறியாத நட்சத்திரங்கள்
ஆசை முகம்
நிழலே நீ யார்?
இன்னும் கொஞ்சம் இனிப்புச் சேராதா?
என் ஜன்னலுக்கு வெளியே வானத்தைக் கிழித்துக் கொண்டு விரைந்த வாணமொன்று அவசரமாய் நட்சத்திரங்களை உதிர்த்துவிட்டு அவிந்து விழுந்தது. சற்று நேரத்தில் சரவெடிகள் சடசடவென்று அதிர்ந்து தெருவைத் திகைக்க வைக்கும்.
ஒரு சிலருக்கு, அதிரவைப்பதிலுமோர் ஆனந்தம் ஒளிந்திருக்கிறது என்பதை நமக்குத் தொலைக்காட்சிகள் அவ்வப்போது நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு தினந்தோறும் தீபாவளி.
தொலைக்காட்சி விளம்பரங்களும், இணையதள வியாபாரமும், ஆனந்தம் என்பதன் அடையாளமாக அல்ல, ஆடம்பரம் என்பதன் விலாசமாக தீபாவளியை மாற்றிக் கொண்டிருக்கிறதோ என்று அண்மைக்காலமாக எனக்கொரு கவலை.
சேலைத் தலைப்பில் ஜரிகை எத்தனை, வெல்க்ரோ வைத்துத் தைத்ததா வேட்டி, செல்பேசிகளில் சிறந்ததா என் பேசி, என் பட்டாசுச் சரம் ஐநூறா ஆயிரமா என்பவையே ஆனந்தத்தின் அளவு கோல்களாகிவிட்டன.
முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரைத் தமிழ்நாட்டுக் கிராமங்களில் தீபாவளியைவிடப் பொங்கலே பெரிய திருநாள். காரணம், காசன்றி வேறல்ல. தைத் திங்களில் விளைபொருள் விற்று வந்த காசு விவசாயிகள் கையில் இருக்கும். விளைந்து வந்த நெல்லும் வெட்டி வந்த கரும்பும் வீட்டில் இருக்கும். தாராளம் என்பதே நம் கொண்டாட்டங்களின் ஆதாரம் என்பதைச் சொல்லி வந்தது பொங்கல்.
விளைந்ததைத் தின்பது என்ற விவசாயக் கலாசாரத்திலிருந்து, தின்பதை விலை கொடுத்து வாங்குவது என்ற நகர்ப்புறக் கலாசாரத்திற்கு நாம் நகர்ந்த போதுகூட தீபாவளி இப்படி வணிகத்திற்கு வாய்ப்புக் கொண்ட திருநாளாகத் திரிந்துவிடவில்லை. பொங்கல் என்பது (நன்றி) செலுத்துகிற நாளாகவும் தீபாவளி என்பது (போனஸ்) பெறுகிற நாளாகவும் இருந்தது தீபாவளி வந்தால் ஏதோ கிடைக்கும் என்பதால் திருநாள் வருவதற்கு முன்பே எதிர்பார்ப்புக்கள் வந்து விடுகின்றன. எதிர்ப்பார்ப்புகள் ஏற்பட்டுவிடுவதால் கிடைப்பதில் மகிழ்ச்சி ஏற்படுவதில்லை. மாறாக ஒப்பீடுகள் உருவாகிவிடுகின்றன. அவனுக்குக் கிடைத்தது எனக்குக் கிடைத்ததை விட அதிகமோ? எத்தனை சம்பாதிக்கிறார்கள், ஏன் இத்தனை கஞ்சத்தனம்? கேள்விக்குறிகள் குனிந்து நிற்கும்போது சந்தோஷங்கள் தலை தூக்குவதில்லை.
பெறுகிற பண்டிகையை கொடுக்கிற திருநாளாக மாற்ற முடியுமா? அண்டை வீட்டாரோடு இனிப்பைப் பகிர்ந்து கொள்வதற்கும் அப்பால் ஏதேனும் செய்ய முடியுமா? ஆதரவற்ற குழந்தைகளையும் தனிமை தழுவிக் கொண்ட முதியவர்களையும் நாடிப் போய் நலம் செய்வோர் உண்டு. இல்லை என்கவில்லை.
இன்னும் ஒரு படி முன்னேறினால் என்ன? கொடை என்பது கருணையின் கசிவாகத்தான் இருக்க வேண்டுமா? நட்பிற்கான விதையாக விழக்கூடாதா?
அண்மைக்காலமாக மதறாசின் முகம் மாறி வருகிறது. சாப்பிடக் கடைக்குப் போனால், இட்லித் தட்டை அசாமி எடுத்து வருகிறான். மெட்ரோ நிலையத்தைக் கட்டிக் கொடுக்கிறான் பீகாரி. பளிங்கு பதிக்க வருகிறான் ராஜஸ்தானி. நேரங்கெட்ட நேரத்தில் விசில் ஊதிப் போகிறான் நேபாளி. வெற்றிலை மடித்து நீட்டுகிறான் வேறேதும் தெரியாத கங்கை நதிப்புறத்தான். ஐடி அலுவலகத்திற்குள் நுழைந்தால் கன்னடனும், கலிங்கனும், வங்காளியும், தெலுங்கனும் வந்து கை குலுக்குகிறார்கள்.
இங்கே இருக்கிறது ஓர் இந்தியா. எல்லோருக்கும் சொந்த ஊருக்குப் போவதற்கு விடுமுறையோ, டிக்கெட்டோ, வாய்ப்போ கிடைப்பதில்லை. குடும்பத்தோடு கூடி இருக்க முடியாத அவர்கள் தனியராய் அறைக்குள் அடைந்து, கடை இனிப்பைத் தின்று, தொலைக்காட்சிக்குள் தொலைந்து, பண்டிகையாய் இல்லாமல் விடுமுறை நாளாகத் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களை வீடுகளுக்கு அழைத்து விருந்தொன்று கொடுத்தால் என்ன? பெற்ற பிள்ளையாய், கூடப் பிறந்த அண்ணன் தம்பியாய்ப் பேசிக் களித்தால் என்ன?
நம் குழந்தைகளின் எதிர்கால நினைவுகள் பட்டாசையும் இனிப்பையும், இணையத்தில் வாங்கிய பொருளையும் பற்றியதாக மட்டும் இருந்து விடலாமா? திரைப்படம் தொலைக்காட்சி எனச் சுருங்கிவிடலாமா? அது உறவுகளைப் பற்றியதாக விரிவடைந்தால் அவர்களுக்குச் சிறகுகள் முளைக்காதா? எனது தேசம் எத்தனை பெரியது என்றொரு பெருமிதம் பிறக்காதா? மனிதர் அனைவரும் இனியர் என்று அறிய நேர்ந்தால் அவர்கள் வாழ்வில் இன்னும் கொஞ்சம் இனிப்புச் சேராதா?
கொடுப்போம், கிடைக்கும்.
குமுதம் 23.10.2019
சொன்னதும் சொல்லாததும்
என் ஜன்னலுக்கு வெளியே, வானில் மிதந்து கொண்டிருந்த வெண்முகில்களை வரைந்து முடித்த பென்சில் முனைகளைப் போல கஞ்சன்ஜங்கா கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. கஞ்சன்ஜங்கா உலகின் மூன்றாவது உயர்ந்த சிகரம். இமயத்தின் ஒரு முகம்.
கஞ்சன்ஜங்கா என்ற திபெத்திய மொழிச் சொல்லிற்கு உயரே பனியில் பொதிந்து வைக்கப்பட்ட ஐந்து செல்வங்கள் என்று பொருள் என்று நேபாளி மொழிக் கவிஞர் திரு பிரசாத் நேபால் எனக்குப் பின்னர் விளக்கிச் சொன்னார். அதாவது கஞ்சன்ஜங்கா என்பது ஒரு சிகரத்தை அல்ல, ஐந்து மலைப் பகுதிகளைக் குறிக்கிறது என்றார் திரு. உண்மையில் மலைகளை அல்ல, அந்த மலைகளின் சரிவில் அமைந்துள்ள ஐந்து பள்ளத்தாக்குகளைக் குறிக்கிறது,
ஆனால் மொழி புரியாத வெள்ளைக்காரர்கள் அந்தச் சொல்லை மலை மீது ஏற்றிவிட்டார்கள் என்கிறார் அவர்.
நான் மறுபடியும் அந்தப் பள்ளத்தாக்கைப் பார்த்தேன். வானிலிருந்து உதிர்ந்த உறைபனி வழி தெரியாமல் தங்கிவிட்டதைப் போல அந்தப் பச்சை மா மலை மீதில் ஆங்காங்கே வீடுகள் வெள்ளைத் திட்டுக்களாகப் படிந்திருந்தன. தகரக் கூரை கொண்ட நெடிய ஆனால் எளிய கூடுகள்.
இதைத்தான் மறைத்து வைக்கப்பட்ட பெரும் செல்வங்கள் என்கிறீர்களா திரு? எனக் கேட்டேன். நேபாளிக் கவிஞர் திரு அந்த மலைகளின் மடியிலேயே வாழ்கிறார். கேங்டாக்கிற்கு அப்பால் 90 கீ.மீ தொலைவில் வசிக்கும் அவர் சிக்கிம் அரசின் ஊழியர். அரசாங்கக் கோப்புகளிடையே சிக்கிக் கொண்ட கவிமனம் அவருக்கு.
அடுத்து அவர் சொன்ன வார்த்தைகளில் அந்தக் கவிமனம் கசிந்தது. கடவுள் அருமையான எல்லாவற்றையும் கண்ணுக்குத் தெரியாமல் பொதிந்துதான் வைக்கிறார். இந்தப் பள்ளத்தாக்குகளை மட்டுமல்ல. உப்பு, தங்கம், மணிகள், தானியம், மருந்து என்பவையும் பொதிந்து வைக்கப்பட்டுள்ள ஐந்து செல்வங்கள்தானே என்றார்.
கவிதைக்குள் பொதிந்து கிடக்கும் அர்த்தங்களையும் இதில் சேர்த்துக் கொள்ளலாமா? என்று கேட்டேன். அது மனிதன் செய்தது. கடவுளுக்குப் போட்டியாக மனிதனும் எப்போதும் ஏதாவது செய்து கொண்டுதான் இருக்கிறான். ஆனால் கடவுள்தான் ஜெயிக்கிறார் என்பது திருவின் வாதம்.
நிலவைத் தொட்டுவிட்டோம், செவ்வாயைச் சுற்றுகிறோம், உலகத்தைக் இந்தக் கையடக்கத் தொலைபேசிக்குள் கொண்டு வந்து விட்டோம். அதற்குப் பின்னும் இப்படிச் சொல்லலாமா? என்றேன்
மனிதனால் இப்படி ஒரு அழகிய மலையை உருவாக்க முடியவில்லையே என்றார் ரிதுபர்ணா. அவர் இந்திக் கவிஞர். ஜப்பானில் சில காலம் வாழ்ந்தவர். ஃபியூஜி மலையை நேரில் பார்த்தவர். ஆனாலும் இமயம்தான் அவரை ஈர்த்தது.
மலை எனும் சீலையில் வெயில் வரையும் சித்திரங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவன் நேரம் பார்க்க மணிக்கட்டை உயர்த்தினேன். கடிகாரம் அங்கு இல்லை. அதை அறையிலேயே மறந்திருந்தேன். அதனால் என்ன, கைபேசி இருக்கிறதே? கால் சாராய்க்குள் கை நுழைத்து அலைபேசியை வெளியே எடுத்தேன். அது மணியை மட்டுமல்ல, தொடர்புக்கான நெட் ஒர்க் இல்லை என்பதையும் காட்டியது.
காற்றின் அலைகளைக் கைபேசிக்குள் கொண்டு வரும் தொழில்நுட்பம்
கேங்டாக்கில் நாங்கள் இருந்த விடுதியை எட்டியிருக்கவில்லை. 2G, 3G, சட்டைப் பையில் இருந்த 4G டாங்கிள் என்ற மனித முயற்சிகள் அந்த மலை நகரில் பொருளற்றுப் போயிருந்தன.
மனித முயற்சிகள் மலைக்கு முன் தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் குன்றுகளைக் குடைந்து கலைச் செல்வங்களைப் படைத்துக் காலத்தை வெல்ல முடியும் என்பதைப் பல்லவன் பாருக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறான். தலைநகரங்களைத் தவிர்த்துவிட்டு, இந்த அலைநகரை இந்தியச் சீனத் தலைவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணமாக உலகின் பார்வையும் ஊடகத்தின் கண்களும் இந்த ஊரை நோக்கித் திரும்பிருக்கின்றன. இந்த அப்பட்டமான உண்மைக்குப் பின்னால் இன்னும் சில தகவல்கள் ஒளிர்ந்து பொலிகின்றன. அர்ஜுனனையும் அவன் சகோதரர்களையும் பற்றிச் சொல்லாமல், அயல்நாட்டவருக்கு ஐவர் ரதத்தைப் பற்றிச் சொல்ல முடியுமா? பாரதம் இல்லாமல் பாரதம் உண்டா?
பாறைகளை செதுக்கிப் பல்லவன் தமிழனின் கைத்திறனைக் காட்சிப்படுத்தினான். அந்தத் திறன்கள் இப்போதும் தலைமுறை தலைமுறையாகத் தமிழர்களிடம் தொடர்கின்றன என்பதைச் சொல்லாமல் சொல்லி சூசகமாக உலகிற்கு, ஏன் நம் சக இந்தியர்களுக்கும் கூட, உணர்த்தியிருக்கிறார் மோதி. அவரது உடை, அளித்த உணவு, எல்லாவற்றிலும் தமிழனின் கலை உணர்வும் கைவண்ணமும் கையெழுத்திட்டிருந்தன. பரிசாகக் கொடுக்க நாச்சியார்கோயில் விளக்கைப் பரிந்துரைத்தவர்களை மனதால் வணங்குகிறேன். கல்லில் மட்டுமல்ல உலோகத்திலும் எழில் கூட்ட வல்லவை எங்கள் தமிழரது கரங்கள் என்பதற்கு அந்த விளக்குகள் வெளிச்சம் கூட்டுகின்றன.
தமிழருக்கும் ஒரு தகவலைத் தன் செயலால் நினைவூட்டிச் சென்றிருக்கிறார் மோதி.
அர்ஜூனன் தவத்தைப் பற்றி அவர் போட்ட ட்வீட் இது: மாமல்லபுரத்தில் காணவேண்டிய பிரம்மாண்டமான இடங்களுள் ஒன்று அர்ஜூனன் தவம். இது மகாபாரதக் கால வாழ்க்கையை உயிர்ப்பித்துக் காட்டுகிறது. பல்லவர் காலத்துச் சிற்பக்கலையின் சிறப்பை, குறிப்பாக இயற்கையையும் விலங்குகளையும் அர்ஜூனன் தவம் காட்சிப்படுத்துகிறது
ரத்தினச் சுருக்கமாகச் சிற்பத்தை, அதன் காலத்தைக், கருப்பொருளை, மூன்று வரிகளில் முழுமையாக சொல்லிவிட்ட இந்த ட்வீட்டில் கவனிக்க வேண்டிய சொற்கள் ‘இயற்கையையும் விலங்குகளையும்’ இயற்கையைத் தன் இதயத்தில் வைத்து வாழ்ந்தவன் தமிழன் என்பதற்குச் சாட்சியாகக் கடலோரத்தில் கல்லிலே கவிதை எழுதியவன் இயற்கையையும் விலங்குகளையும் வாழ்க்கையின் முத்திரைகளாக வடித்துப் போனான். ஆனால் இன்று கடற்கரைகளில் நெகிழிப் போத்தல்கள் நம் கால்களை இடறுகின்றன.
பிளாஸ்டிக்கிற்கு எதிராகப் போர் தொடுத்திருக்கிற பிரதமர், அதிகாலை நடையின் போது கையில் அகப்பட்ட பிளாஸ்டிக் புட்டிகளை பையில் சேகரித்துப் பணியாளரிடம் கொடுக்கிறார். நெடிய வரலாறும் நிகரற்ற சிறப்புக் கொண்ட மொழியும், கைத்திறனும், கலை உணர்வும் கொண்ட தமிழகத்தில் குப்பை சேர்க்காதீர்கள் என்பதற்கான குறிப்பு அது. சேர்ந்துவிட்ட குப்பைகளையும் சிரமம் பாராமல் சேகரித்துத் தூர எறியுங்கள் எனச் சொல்லாமல் சொல்கிறார் மோதி.
அதை நடிப்பு என்றும் நாடகம் என்றும் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட வீடியோ என்றும் சிலர் எழுதிக் குவிக்கிறார்கள். இருக்கட்டுமே. நடிப்பவர்களைக் கொண்டு குப்பைகளை அகற்றுவது நமக்குப் பழக்கமானதுதானே?
குமுதம் 30.10.2019
ஔவை எடுத்த குறும்படம்
என் ஜன்னலுக்கு வெளியே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.விசும்பின் துளியொன்று விரலில் வந்து அமர்ந்தது. நான் கண்ணை உயர்த்தி விண்ணைப் பார்த்தேன். சற்றே சாய்ந்து படுத்திருந்த யானைகளைப் போலச் சாம்பல் நிற மேகங்கள் அடிவானில் அடர்ந்திருந்தன. சரசரவென்று சற்று நேரத்தில் ஜரிகை இழைகளைப் போல மழை இறங்கும்.
இயற்கை எழுதும் ஓவியங்களில் மழைக்கு நிகராக இன்னொன்று இல்லை. அண்டை வீட்டுத் தென்னங்கீற்றுகள் அவசர அவசரமாக அசைகின்றன. அவை வான் மழையை வரவேற்கின்றனவா அல்லது நகர்ப்புறத்து நர்சரிக் குழந்தைகளைப் போல போ போ என்று துரத்துகின்றனவா? விரைந்து இறங்கிய காக்கை ஒன்று வேம்பின் கிளைகளில் உடகார்ந்து உடலைச் சிலுப்பிக் கொள்கிறது. எதிர்பாராத நேரத்தில் இறங்கிய மழையால் பயணம் தடைப்பட்டு அது பாதியில் திரும்பியிருக்க வேண்டும். மேகத்தைப் பார்த்துக் ‘கா’வென்று கரைந்து கண்டனம் தெரிவித்தது காகம். கண்ணுக்குத் தெரியாமல் கத்திக் கொண்டு இருக்கிறது கன்று ஒன்று. ஐயோ நனைகிறேனே,அவிழ்த்துக் கொண்டு போய் வேறிடத்தில் கட்டுங்கள் என்கிறதா அதன் குரல்? அல்லது ஆனந்தத்தில் சிலிர்த்துக் கொண்டு குஷியைப் பகிர்ந்துகொள்ளக் கூப்பிடுகிறதா?
சொற்களைக் கொண்டு சித்திரம் செய்வதில் ஒளவையைப் போலொரு ஆளில்லை. கருநீல மலர்கள் செறிந்து அடர்ந்த குன்றில் அந்த மலர்களிடையே பொன் வண்ணத்தில் ஒரு பூச்சரம் கிடந்தால் எப்படி இருக்கும்? இருண்ட மேகங்களிடையே எழுகிற மின்னல் அப்படி இருக்கிறதாம் ஒளவைக்கு. காயாம் குன்றத்துக் கொன்றை போல என்று கவிதையை ஆரம்பிக்கிறாள். விளக்கின் ஒளியைப் பாய்ச்சியது போல அந்த மின்னலின் ஒளியில் மலை பளிச்சென்று தெரிகிறது. மலையை நோக்கி மழை நகர்ந்து கொண்டிருப்பதும் தெரிகிறது.
இப்போது அவனுக்கு இயற்கை ரசிக்கும் மனம் இல்லை. மழை நகரும் வேகத்தைப் பார்த்ததும் மனைவியின் நினைவு வருகிறது. அந்த மா நிறத்து மங்கை பயந்தாங்குள்ளி. இடி கேட்டால் அரண்டு விடுவாள். பதற்றம் அதிகமாகி என்ன செய்வது என்று தெரியாமல் முன்கைகளைத் தடவி, உருவி கை வளையல்களைக் கழற்றிப் போடுவாள். அரற்றுவாள். அச்சம் மேலிட அழ ஆரம்பித்து விடுவாள். அவள் நிலைமை தெரியாமல் எவனோ ஒருவன் இந்த நேரம் குழல் எடுத்துக் கூட்டுகிறான் இசை. கார்காலத்திற்கு முன்னால் கட்டாயம் வந்துவிடுவேன் என்று சொல்லியிருக்கிறேன். கொஞ்சம் வேகமாகப் போயேன் என்று வண்டி ஓட்டுகிறவனிடம் கெஞ்சுகிறான் அவன்.
தபால் வில்லைக்குப் பின்னால் எழுதிவிடக் கூடிய இந்தத் தம்மாத்துண்டு கதைக்குள் வார்த்தைகளில் விளையாடுகிறாள் ஒளவை. நிழல் திகழ் சுடர் தொடி என்று ஒரு வரி எழுதுகிறாள். அதற்குள் எத்தனை முரண்! நிழலும் சுடரும், அதாவது ஒளியும் இருளும் ஒன்றையொன்று தொட்டு நிற்கின்றன. ஒரு காட்சி அதற்குள் சில பாத்திரங்கள், அவர்களது உணர்வுகள், அதற்கு ஒரு பின்னணி இசை, இடையே ஒரு கிண்டல், (அவள் அழுகை, அதற்கு ‘காண்ட்ராஸ்ட்’ ஆக புல்லாங்குழல்) இத்தனையும் ஒன்பது வரியில்!
இன்னொருத்தியின் கணவனும் இன்னும் வந்து சேரவில்லை. ஆனால் கார்காலம் வந்துவிட்டது என்று அவள் நம்ப மறுக்கிறாள். இது வம்புக்குப் பெய்யும் மழை என்று மழையைக் கடிந்து கொள்கிறாள்.
சங்ககாலம் முதல் சமகாலம் வரை கவிஞர்கள் மழையை, இயற்கை அளிக்கும் ஒரு பரிசு என்றே எழுதி வந்திருக்கிறார்கள். மழை பொழியவில்லை என்றால் மண்ணில் புல்கூட முளைக்காது என்ற மறுக்க முடியாத உண்மை அவர்களுக்குள் நன்றியாகச் சுரக்கிறது.
ஆனால் -
வாங்கிய கடனை வட்டியும் முதலுமாகத் திருப்பிக் கொடுக்கிறது இயற்கை என்றுதான் நான் சொல்லுவேன். தகப்பனிடம் வாங்கிய கடனை மகனிடம் செலுத்துவது போல கடலில் இருந்து எடுத்த நீரை மண்ணுக்குத் திருப்புகிறது மழை. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கும் இந்த உண்மை தெரியும். பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர் பருகி என்று எழுதுகிறது அகநானுறு.
கடனோ, கொடையோ, கடலுக்கும் மழைக்கும் இடையில் இருக்கும் மேகத்தைப் பற்றிப் பெரிதாக எவரும் பேசுவதில்லை. உப்புத் தண்ணீரை உவப்புத் தண்ணீராக மாற்றுவதில் அதற்குப் பெரும் பங்குண்டு. இசைக்கும் கலைஞனுக்கும் இடையில் நிற்கும் கருவியைப் போல, எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடை நிற்கும் பத்திரிகை ஆசிரியன் போல தகப்பனுக்கும் மகனுக்கும் நடுவில் இருக்கும் தாய் போல மண்ணுக்கும் கடலுக்கும் மத்தியில் உலவுகிறது மேகம். ஆனால் அதைக் குலாவுவோர்தான் அதிகம் இல்லை.
ஹ்ம்ம் எங்கள் ஏக்கங்கள் எங்களுக்கு.
படியிறங்கும் முன் குடையெடுத்துக் கொண்டு இறங்குங்கள். இன்று எப்போது வேண்டுமானாலும் பொழியும் வானம்.
குமுதம் 6.11.2019
புதையுண்ட குழந்தைகள்
என் ஜன்னலுக்கு வெளியே வளைந்து நிமிர்ந்த மரத்தில் வானத்தை நோக்கிப் பூத்திருக்கின்றன அந்த அக்னிப் பூக்கள். செம்மயில் கொன்றை எனத் தமிழிலும் Flame of the forest என ஆங்கிலத்திலும் பெயர் வைத்தவர் எவரோ அவர் மனதில் கவிதை கால் கொண்டிருக்கிறது. அழகிலும் அனலிலும் பிறப்பதுதானே கவிதை.
கவிதையைப் போலத்தான் குழந்தைகளும். ஒருவரே பெற்றாலும் ஒன்று போல இன்னொன்றில்லை. என்றாலும் அவற்றிடையே உயர்வென்றும் தாழ்வென்றும் இல்லை. ஆசையால் பிறந்தவை சில. அவசியத்தால் பிறந்தவை சில. விரும்பிப் பிறந்தவை சில. விபத்தாய் நிகழ்ந்தவை சில. தவமிருந்து பிறந்தவை சில. தற்செயலாய்ப் பிறந்தவை சில. இலக்கணம் மீறிச் சில சிறக்கின்றன. ஒழுங்குக்குள் அடங்கியும் சில உணர்ச்சிகளைச் சீவுகின்றன. விளங்கிக்கொள்ள முடியாமல் விடுகதைகளாய்ச் சில உலவுகின்றன. வெள்ளந்தியாச் சிரித்தே சில ஜெயிக்கின்றன.
குழந்தைகளே கவிதையாய் இருப்பதாலோ என்னவோ குழந்தைகளுக்கான கவிதைகளை இன்று அதிகம் காண முடிவதில்லை. ஆழ்துளைக் கிணற்றுக்குள் அகப்பட்டுக் கொண்ட குழந்தையைப் போலக் காட்சிகளுக்குள் கட்டுண்டு கிடக்கும் சமூகத்தில் குழந்தைகளுக்கான இலக்கியம் கொஞ்சம் கொஞ்சமாகக் கை நழுவிப் போய்க் கொண்டிருக்கிறது.
சொல்லுக்கு முன் ஒலி இருந்தது என்பார்கள். ஒலி எழுத்தாக உருவம் பெற்று சொற்களாகத் தொடுக்கப்பட்டு வார்த்தைகளால் அடுக்கப்பட்டு வளர்ந்தது என்பதுதான் இலக்கியத்தின் வரலாறு. குழந்தை இலக்கியமும் முதலில் குரலில் உருவானதுதான்.
தாய்ப்பாலைப் போலக் குழந்தை இலக்கியமும் தாயிடமிருந்துதான் முதலில் கசிந்தது. குழந்தையைக் கொஞ்சவும் குடும்பத்தைச் சீண்டவும் தாய்மார்கள் பெற்றெடுத்த கவிதைகள்தான் தாலாட்டு. அதுதான் குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளப்பட்ட முதல் இலக்கியம்.
தமிழ்க் குடும்பங்களில் தந்தையையும் விஞ்சிய இடம் மாமனுக்கு. ஆனந்தத்தைப் பங்கு வைக்கவும் ஆற்றாமையைச் சொல்லி அழவும் அவர்தான் அம்மாவிற்குத் துணை, தோழமை, தொண்டன்.
இந்த மாமன், கவிதை எழுதுகிற மாமன். மருமகனைக் கொஞ்சப் பரிசுகள் கொண்டு வருகிறான். கிலுகிலுப்பை அல்ல, பொம்மைகள் அல்ல, இனிப்புப் பண்டங்கள் அல்ல, இசை எழுப்பும் மணிகள் அல்ல, எழுதுகிற மனத்திற்குப் பேனாவைப் போலப் பெரிய பரிசு பிரிதொன்றில்லை.
கவி எழுதும் மாமன், குழந்தைக்குக் கொண்டு வந்தது பேனா, தங்கத்தாலான பேனா, அத்துடன் புத்தகங்கள், அவற்றோடு விலைமதிப்பற்றதென்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் அவனது கவிதைகள்.
அதைச் சொல்லி அம்மா பாடுகிறாள்.
பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே
உனக்கு
மின்னோலைப் புஸ்தகமும்
கன்னாரே பின்னாரேன்னு-கண்ணே
கவிகளையும் கொடுத்தானோ!
மலருக்குக் கீழே மறைந்திருக்கிற முள்ளைப் போல, தானாக வருகிற இந்தத் தாலாட்டில் ஒளிந்திருந்து குத்துகிறது ஒரு கிண்டல். பேனா தங்கம்; புத்தகமும் மின்னலைப் போலப் பொலிகிற வெள்ளி. ஆனால் கவிதைகள் மட்டும் ‘கன்னா பின்னா!’ எழுதுபவனுக்கு வேண்டுமானால் இலக்கியம் பொன்னாக மின்னலாம். பொக்கிஷமாகப் பொலியலாம். ஆனால் கவிஞனைச் சுற்றியுள்ள உற்றவருக்கும் மற்றவருக்கும் அது கன்னா பின்னா கிறுக்கல்கள்தான். காகிதங்கள்தான். ஒன்றுக்கும் உதவாத ஓலைகள்தான்.
அம்மாவின் அண்ணன் கொடுத்த கவிதைகள் அருமையானதாகவே இருக்கட்டும். ஆனால் அதைப் புகுந்த வீட்டுக்காரர்களிடம் காட்டிப் பெருமையடித்துக் கொள்ள முடியுமா?
குழந்தைக்குக் கதை சொல்வதுபோல, கூடவே வாழும் அத்தையை, மாமியை, அண்ணியை, நாத்தியை, அவ்வப்போது கொழுந்தனைக் கலாய்ப்பதற்குத் தனக்கு வாய்த்த சாதனமாகத் தாலாட்டைப் பயன்படுத்துகிறாள் அம்மா.
கடலுக்குப் போன அப்பாவிற்கு அன்று கொழுத்த வேட்டை. அயிரை, ஆரம், வாளை, வழலை என விதவிதமாய் அவர் ஆயிரம் மீன் பிடித்து வந்தார். அவ்வளவையும் வாங்கிப் போக அரண்மனை ஆட்கள் வந்து விட்டார்கள். அந்த ஆயிரம் மீன்களில் ஆறு மீன்களை அம்மா தனக்காக ஒதுக்கி வைத்துக் கொண்டாள். உள்ளூர்ச் சந்தையில் அன்றைக்கு அதிக விலைக்கு விற்க முடியாது. ஆயிரம் மீன் வந்திறங்கியிருக்கிற சந்தையில் விலை அதிகமாக வைத்து எப்படி விற்க முடியும். சப்ளை அதிகமானால் டிமாண்ட் குறையும் என்ற பொருளியல் கொள்கையை அனுபவத்தால் அறிந்தவள் அவள். ஆறு மீன்களை எடுத்துக் கொண்டு அயலூர்ச் சந்தைக்குப் போனாள். அதை விற்று அவள் வாங்கியதென்ன தெரியுமா? தங்கம்! ஆறு மீனை விற்று அரைப் பவுன் தங்கம் வாங்கினாள். அந்த அரைப் பவுனை அவள் தனக்கென வைத்துக் கொள்ளவில்லை. தன் மகளுக்கு அரையிலை செய்யச் சொன்னாள் (அந்தக் காலத்தில் பெண் குழந்தைகளின் அந்தரங்க உறுப்பை மறைக்க அரச மரத்து இலை போலத் தங்கத்தில் நகை