Vellai Nirathoru Poonai
By Ushadeepan
()
About this ebook
உஷாதீபனின் மன உலகம் அவரது கதை உலகம்! சிறு சம்பவத்துளிகள் பாவனையற்ற எளியமொழியில் சித்திரமாகி சிறுகதையாகி விடுகிறது. உறுத்தாத மொழிநடை வாசக மனத்தில் சிந்தனைப் பொறியைத் தெறிக்கச் செய்கிறது. ஒரு சிறிய அழுக்கை துடைத்துக் கொள்கிறது. ஒரு சிறிய சோகம் கவிந்து விடுகிறது. ஒரு வெளிச்ச நினைவு மின்னி மறைகிறது. எல்லாச் சிறுகதைகளும் மனித நேயம் என்கிற உயர் பண்பை உயிர் வடிவாகக் கொண்டுள்ளது.
Read more from Ushadeepan
Kaatrukenna Veli Rating: 0 out of 5 stars0 ratingsPongi Varum Peru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsUnnidathil Ennai Koduthean Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Karam Pidithean Rating: 0 out of 5 stars0 ratingsIvalum Oru Thodarkathaithan...! Rating: 0 out of 5 stars0 ratingsThavikkum Idaiveligal Rating: 0 out of 5 stars0 ratingsVadamalli Rating: 0 out of 5 stars0 ratingsNaan Athuvalla Rating: 0 out of 5 stars0 ratingsAmutham Viritha Valai Rating: 0 out of 5 stars0 ratingsEthirparathathu...!? Rating: 0 out of 5 stars0 ratingsThannai Vendravan Rating: 0 out of 5 stars0 ratingsNindru Olirum Sudargal Rating: 0 out of 5 stars0 ratingsMazhithalum Neettalum...! Rating: 0 out of 5 stars0 ratingsThavarugal Kutrangalalla...! Rating: 0 out of 5 stars0 ratingsUravu Solla Oruvan...! Rating: 0 out of 5 stars0 ratingsShabash Poonkutty Rating: 0 out of 5 stars0 ratingsVilaketriyaval Rating: 0 out of 5 stars0 ratingsSeivinai Seyapattu Vinai Rating: 0 out of 5 stars0 ratingsKuttram Purinthavan Rating: 0 out of 5 stars0 ratingsLatchiya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vellai Nirathoru Poonai
Related ebooks
Kalveri Kolluthadi... Rating: 5 out of 5 stars5/5Bhoomikku Vantha Suriyangal Rating: 0 out of 5 stars0 ratingsUtharayanam Rating: 0 out of 5 stars0 ratingsLatchiya Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsJayakanthan Munnuraigal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsVaazhvil Vetri Rating: 0 out of 5 stars0 ratingsAppa Ennai Mannichuduppa Rating: 0 out of 5 stars0 ratingsSila Anubavangal Sila Manithargal Rating: 0 out of 5 stars0 ratingsOrey Urimai Rating: 0 out of 5 stars0 ratingsArabu Desathil Thagappan Samy Rating: 0 out of 5 stars0 ratingsPagalil Oru Vesham Rating: 0 out of 5 stars0 ratingsSnehithan Rating: 0 out of 5 stars0 ratingsMeetchi Rating: 0 out of 5 stars0 ratingsBhoomikku Kidaitha Puthayal Rating: 0 out of 5 stars0 ratingsEzhuthapadatha Theerpugal Rating: 0 out of 5 stars0 ratingsMana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsAvalukkendru Oru Manam Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaandhamum Oru Irumbu Thundum Rating: 0 out of 5 stars0 ratingsNandhanar Theru Rating: 0 out of 5 stars0 ratingsBommai Siragugal Rating: 0 out of 5 stars0 ratingsUravu Solla Oruvan...! Rating: 0 out of 5 stars0 ratingsNaan - A Aval - Z Rating: 0 out of 5 stars0 ratingsGurupeedam Rating: 0 out of 5 stars0 ratingsKarunaiyinal Alla Rating: 0 out of 5 stars0 ratingsShurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratingsKannigal Ezhu Per Rating: 4 out of 5 stars4/5Vanthaanga Jeichaanga… Rating: 0 out of 5 stars0 ratingsThavarugal Kutrangalalla...! Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Karanam Rating: 0 out of 5 stars0 ratingsSuttaman Rating: 5 out of 5 stars5/5
Reviews for Vellai Nirathoru Poonai
0 ratings0 reviews
Book preview
Vellai Nirathoru Poonai - Ushadeepan
http://www.pustaka.co.in
வெள்ளை நிறத்தொரு பூனை
Vellai Nirathoru Poonai
Author:
உஷாதீபன்
Ushadeepan
For more books
http://www.pustaka.co.in/home/author/ushadeepan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. விச்சு அண்ணா
2. தலை
3. பெயர்
4. சில நியாயங்கள்
5. ஒரு மாலை நேர நிகழ்வு
6. பசி
7. போனால் போகட்டும் போடா...
8. கூலி
9. புதிய கஷ்டமர்
10. வெள்ளை நிறத்தொரு பூனை
11. பிறந்த நாள்
12. பொம்மை வண்டி
13. சொல்ல முடியாத உண்மைகள்
14. மனைவி அமைவதெல்லாம்
15. பாசம் மறைத்த வேஷம்
16. ஆகாயம் சுருங்குமா?
17. சுப்புணி
18. சின்னசாமி ஜெயிலுக்குப் போகிறான்
19. துருவங்கள்
20. முடிவு
21. 13ம் நம்பர் பார்சல்
22. சின்ன சபலம்
23. அழுக்கு
24. வேலைக்காரி
25. சுமை
26. இசக்கி
27. முன்னம் இட்ட தீ
28. காலதேவன்
29. நேசம்
30. சகுனம்...
31. சுழி
32. தடம்
33. பரசு அண்ணா
34. சைக்கிள்
35. அவன்
36. தடம்
37. பார்வைகள்
38. நாணயம்
39. சகுனம்
40. புலி பசித்தாலும்...
41. எதிரொலி
42. அப்பா ஏன் போகிறார்
43. பொறுமை என்றொரு பாடம்
44. வேர்கள் தாங்குவதற்கே
45. மன்னிப்பு
46. நாப்பது வயசுல...
47. அந்த ஒருநாள் தவறுக்காக...
48. தவறுக்கு ஒரு போட்டி
49. கம்ப்யூட்டர் சேலை
50. களைகள்
51. அப்பாவும் பேனாவும்!
52. அட்டை
53. அல்லல்
54. இளநீர்
55. குரூரம்
அன்பாய்... ஓர் அணிந்துரை
பாவனை இல்லை; பகட்டு இல்லை; ஆடம்பரமில்லை; படாடோபமில்லை. உஷா தீபன் என்ற தனிமனிதரின் மனமொழி நடையே எவ்வித ஒப்பனையுமில்லாமல் நேர்மையுடன் எல்லாச் சிறுகதைகளிலும் வெளிப்பட்டிருக்கிறது.
உஷாதீபனின் மனஉலகம் அவரது கதை உலகமாக விரிகிறது. மத்தியதர வர்க்க ஊழியர் நடுத்தரமான பொருளாதார வசதி உள்ள குடும்பம். ஒரு வேலைக்காரியில்லாமல் கதை நடக்காது. பல வேலைக்காரிகளும் வைத்துக் கொள்ள முடியாது. காலையில் கோவில், பகலில் அலுவலகம்... மாலையில் கோவில் என்று இயங்குகிற உஷாதீபன் என்ற தனிமனிதர். தான் அனுபவித்தவை. தான் தரிசித்தவை... தனது மனசில் தெறித்தவை பார்த்தவை... என்று இவரது அன்றாட அனுபவ எல்லைக்குள் இவரது மனசுக்குள் பதிவாகிற பதிவாகக்கூடிய நிகழ்வுகளே இவரது கதைகளாகியிருப்பதில் இவாது நேர்மையும் - மன உண்மையும் தெரிகிறது. நமக்குள் மரியாதை தோன்றுகிறது.
சிறுகதைகளில் பலவகை உண்டு. புதுமைப்பித்தன் ஒரு வகை, கு. அழகிரிசாமி ஒருவகை கு.பா. ராஜகோபாலன் ஒருவகை. மௌனி மற்றொரு வகை
இன்னும் சிலருடைய கதைகளைப் படித்தால் அழுகை வரும்... மனம் கலங்கும்... கண்ணிமைகளை ஈரமாக்கிவிடும்.
இவற்றில் உஷாதீபன் ஒரு தனி வகை.
சில வருஷகால நிகழ்வை சிறுகதையாக்குவது ஒரு பாத்திரத்தை அதன் தளத்தில் முழுசாக உயிர்ப்பித்து சித்தரித்துக் காட்டுவது... ஒரு சமுதாய உண்மையை உணர்த்துவதற்கான சம்பவக் கோர்வை உள்ள சிறுகதையாக்குவது... நிலவுகிற சமூக நிஜங்களிலேயே புறக்கணிக்கப்பட்ட நிஜங்களை தேடி எடுத்து சிறுகதையாக்குவது என்று பலமுறைமைகள் உண்டு.
உஷாதீபனின் முறைமையே தனி.
தனது அனுபவ எல்லை வட்டத்துக்குட்பட்ட ஒரு சம்பவத்தை மட்டுமே... சம்பவத்துளியை மட்டுமே சிறுகதையாக்குவது என்பதுதான் உஷாதீபனின் முறைமை.
இவர் வீட்டுக்கு வருகிற வேலைக்காரி... இவர் கண்ணில் படுகிற இளநீர்க்காரன், இவர் கோவிலுக்குப் போகிற போதெல்லாம் கண்ணில் தென்பட்ட கைவிடப்பட்ட கிழவி... இவர் அலுவலகம் போகிற இடத்தில் நிகழ்கிற தற்கொலை நிகழ்வு, இவர் முடிவெட்டப் போகிற சலூன் என்று சின்னஞ் சிறு சம்பவத்துளிகளை பாவனையற்ற எளியமொழியில் சித்திரமாக்கி சிறுகதையாக்குகிறார்.
உலுத்தாத மொழி நடை அதே நேரத்தில் வசீகரித்து அலைக்கழிக்கிற உணர்ச்சிமயமான மொழி நடையுமில்லை. தான் பார்க்கும் உலகம், மனதில் பதிவாகிற உலகம் அதுவே உண்மைமிக்க ஓர் எளிய மொழி நடையில் சிறுகதைகளாக வடிவம் பெறுகின்றன. இவரது சிறுகதைகள் யாவும், ஆழ்ந்த அதிர்வுகளையோ... முடிவில்லாத அதிர்வலைகளையோ எழுப்புவதில்லை. மாறாக... வாசகர் மனசில் ஒரு சிந்தனைப் பொறியைத் தெறிக்கச் செய்கிறது. ஒரு சிறிய அழுக்கை துடைக்கிறது. ஒரு சிறிய சோகம் கவிந்து விழுகிறது. ஒரு வெளிச்ச நினைவு மின்னி மறைகிறது.
ஆனால்... எல்லாச் சிறுகதைகளும் மனிதநேயம் என்கிற உயர் பண்பை உயிர் வடிவமாகக் கொண்டுள்ளது. மத்திய தரவர்க்க மனிதரின் மனிதநேயம், அதிலிருந்து பிறக்கிற கருணை, பரிவு எல்லாமே இவரது கதைகளின் வழித்தடம்.
இவர் பார்க்கிற ஏழை மனிதரை எல்லாம் மனித நேயத்தோடும், பரிவோடும், இவர் இப்படித் துயருறுகிறாரே வலையோடும் இயங்குகிற இவரது குணபாவமே இவரது சிறுகதைகளின் உயிராகவும் உடம்பாகவும் இயங்குகின்றன.
மனித நேயத்துக்கு எதிரான, ஏழைக்கு எதிரான எந்தச் சிந்தனையும் இக்கதைகளில் இல்லை என்பது உறுதிபட்டுப் போன விஷயம்.
இதழின் இயல்புக்கேற்ப எழுத்தை மாற்றிக் கொள்ளாமல், எல்லா இதழ்களிலும் எழுதப்பட்ட எல்லாச் சிறுகதைகளும் உஷாதீபனின் கதைகளாகவே உண்மையுடன் திகழ்வதை கவனித்துப் பாராட்டியாக வேண்டும்.
எந்த அரசியல் சாய்மானமோ தத்துவச் சாய்மானமோ இல்லாத ஒரு தனி மனிதர்... நேர்மையானவராகவும், உண்மையானவராக இருக்கும் பட்சத்தில்... அவரது படைப்புகள், ஏழை எளிய மனிதர் மீது பரிவு கொள்கிற மனிதநேயச் சிறுகதைகளாகவே இயல்பாக அமையும் என்பதற்கு உஷாதீபனின் இந்தச் சிறுகதைத் தொகுப்பே சாட்சி.
அவருக்கு எனது வாழ்த்துகள். இவரது இந்தத் தொகுப்பு, பல பிரிவுகளையும், விருதுகளையும் பெறும் என்று நம்புகிறேன்.
நன்றி
என்றும் உங்கள்
மேலாண்மை
*****
முன்னுரை
ஒரு புத்தகத்திற்கு முன்னுரை என்பது அவசியம்தானா? என்று இந்தத் தொகுதிக்கான முன்னுரையை எழுத வேண்டி அமர்ந்த இந்த வேளையில் எனக்குத் தோன்றுகிறது.
படைப்புகளை வார, மாத இதழ்கள் ஏற்றுக் கொள்கின்றன. அப்பொழுதே அவைகளுக்கு ஒரு அங்கிகாரம் கிடைத்து விடுகின்றன தான்.
வெவ்வேறு தேதிகளில், வெவ்வேறு இதழ்களில் வெளிவந்த அந்தப் படைப்புகள், ஒட்டு மொத்தமாக ஒரு பதிப்பகத்தில் புத்தகமாக நிலை பெறும்போது, மேலும் பெருமை சேருகிறது என்பதும் மறுப்பதற்கில்லைதான்.
ஆனால் ஒன்று. இவைகளால் மட்டுமே ஒரு புத்தகம் முழுப் பெருமை பெற்றுவிடுகிறதா? இவை இரண்டுக்கும் ஆதாரமாக படைப்பின் தன்மை. அதன் தரம், அது தாங்கி நிக்கும் மையக்கருத்து ஆகியவைதான் ஒரு எழுத்தாளனை முதலில் நினைக்க வைக்கின்றன; நிலை நிறுத்துகின்றன அந்த மூலம் தானே ஒரு படைப்பாளியை நிமிரச் செய்கின்றது? அதை முன்னெடுத்து வைக்க முன்னுரை என்பது அவசியமாகத் தானே செய்கிறது? ஒரு படைப்பாளி தன்னுரையாக என்ன சொல்கிறான்! எதைச் சொல்கிறான்? என்பதை நுணுக்கமாய ஆராய்ந்த பிறகு வாசகன் உள்ளே செல்கிறான். உள்ளே செல்லும் வாசகனுக்கு ஏமாற்றம் எழக்கூடாது. குறைந்தபட்சம் ஒவ்வொரு படைப்பின் மூலமாகவேனும், அல்லது ஒட்டு மொத்தமாகவேனும் அவளைச் சிந்திக்க வைக்க வேண்டும். சீர்மைக்கு உதவ வேண்டும். அந்த நோக்கிலேயே அடியெடுத்து வைத்திருக்கிறேன் நான்.
இந்த முனைப்பில் எனது படைப்புக்கள் முன்னிருத்துவது மனிதநேயம்
என்னைப் பாதிக்கும் விஷயங்களை மட்டுமே நான் எழுத முனைகின்றேன். எழுதுவது போலவே இருக்கவும் முயல்கின்றேன் என்பதும் சத்தியம்.
எந்த ஒரு நிகழ்வையும். அனுபவத்தையும், கருணை, அன்பு, உண்மை, நேர்மை, நியாயம் என்ற வட்டத்திற்குள்ளிருந்துதான் என்னால் பார்க்க முடிகிறது மனிதர்கள் அதிலிருந்து பிறழும்போது என் மனம் புழுங்குகிறது. உள்ளுக்குள் நான் கோபம் கொள்கிறேன். அல்லது மனத்துக்குள் அழுகிறேன். எனது கோபத்தின், சோகத்தின் வெளிப்பாடாகவே அவற்றின் வடிகாலாகவே படைப்புகள் உருவாகின்றன.
எனது இந்த அனுபவங்கள் அன்றாட வாழ்வில் எதிர்ப்படும் சக மனிதர்களிடமிருந்துதான் எனக்குக் கிடைக்கிறது. அவர்களைத் தங்களது வாழ்விலும் வாசகர்கள் சந்தித்திருப்பார்கள். ஆகையினால் எனது கதையுலகம் வாசகனுக்கு மிக எளிமையய் அமையும். அவனை நிச்சயம் ஈர்த்து நிறுத்தும்.
சக மனிதர்களின் பாலான நேசமும், நிதான நோக்கும் இத்தொகுதியைப் படிக்கும் வாசகனிடம் மேம்படுமாயின் அதுவே எனக்குக் கிடைத்த வெற்றி என்று திருப்தி கொள்வேன்.
கேட்டவுடன், அவசியம், அவசியம், கட்டாயம் தருகிறேன்
என்று மனமுவந்து அணிந்துரைக்கு ஒப்புக் கொண்ட அற்புதப் படைப்பாளி திரு. மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இந்தத் தொகுப்பிற்கு அவரின் அணிந்துரை கிடைத்தது என் பேறு. அதற்கு மேல் ஒரு முன்னுரை தேவையா? என்று என் மனம் நாணுகிறது இப்போதும்!
அன்புடன்,
உஷாதீபன்
*****
1. விச்சு அண்ணா
விச்சு அண்ணாவைக் காணவில்லை. காலை நாலுமணி சுமாருக்கு வழக்கம்போல் அப்பா கண் விழித்தபோது அருகே படுக்கை காலியாய்க் கிடந்தது. இங்கேதான் எங்கேயாவது போயிருப்பான், வருவான்
என்று பொதுவாகக் கூறியபடி கிளம்பிவிட்டார் அப்பா அப்படியே ஆற்றங்கரை சென்று காலைக்கடன்களை முடித்துக் கொண்டு ஐந்து மணிக்குள் ஹோட்டலுக்குள் நுழைந்தாக வேண்டும் அவருக்கு சிறிதும் தாமதம் கூடாது. இது இனிமேல் என்றும் உள்ள பாடுதான். என்ன பரபரப்பு வேண்டிக் கிடக்கிறது." என்பதான நிலைக்கு அப்பா தள்ளப்பட்டிருந்தார். அவர் மட்டுமென்ன? வீட்டிலுள்ள எல்லோருமே அம்மாதிரியான மனநிலையில் தான் இருந்தோம். வாசுகி அண்ணிக்குக்கூட கண்ணீர் வற்றித்தான் போயிருந்தது. எத்தனை நாளைக்கு நினைத்து நினைத்து அழுது கொண்டிருப்பது? எந்த ஒரு சோகமும் ஒரு கட்டத்தில் வற்றித்தான் போகிறது. பிறகு மனிதர்கள் புதிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். தயாராகி விடுகிறார்கள். காலத்தின் கட்டாயமாகிப் போகின்றன நிகழ்வுகள்.
விச்சு அண்ணா இம்மாதிரிக் காணாமல் போவது ஒன்றும் புதிதல்ல. முதல் முறையல்ல. இடையிடையே இது நடந்து கொண்டுதான் இருந்தது. ஆனாலும் எங்கு தொலைந்தாலும் சுற்றினாலும் கரெக்டாக சாப்பாட்டு நேரத்துக்கு ஆஜராகிவிடுவார்.
அதையும் தாண்டும் போதுதான் அம்மா பதறுவாள். போய்த் தேடச் சொல்லி விரட்டுவாள். ஊர் எல்லையைத் தாண்டி எங்கும் சென்றிருக்கமாட்டார் என்ற உறுதி எனக்கும் அண்ணனுக்கும் உண்டு. அதனால் நான் ஒரு திசையிலும் அவன் ஒரு திசையிலும் என்று கிளம்புவோம். இந்தப் பக்கம் கெங்குவார்பட்டி வரையிலும் அந்தப் பக்கம் பழைய வத்தலக்குண்டு வரையிலும் ஒரு அலசு அலசி விடுவோம்.
பெரும்பாலும் விச்சு அண்ணா அவ்வளவு தூரம் சென்றிருக்கமாட்டார். அதனால் தேடக் கிளம்புகையில் முதல் பார்வையாக சந்திரா டாக்கீஸ் காம்பவுண்டுக்குள் சென்று ஒரு பார்வை பார்த்து விட்டுத்தான் அடுத்தபடி என்று சிளம்பி அலசிவிட்டு அங்கும் இல்லையென்றால் கோவிந்தசாமி டாக்கீஸ் சுமைதாங்கிக் கல்லில் உட்கார்ந்திருக்கிறாரா என்று தொடருவோம்.
மனுஷனுக்கு புத்தி சரியில்லாத நிலையிலும் இந்த சினிமாப் பைத்தியம் விடல பாரு...
அண்ணா இப்படிச் சொல்லித் திட்டுவார். விச்சு அண்ணாவின் சினிமாப் பைத்தியம் அம்மாதிரியானது. எது தெரிகிறதோ இல்லையோ வெள்ளிக்கிழமை என்ன படம் மாற்றுகிறான் என்பது மட்டும் தெரியும் விச்சு அண்ணாவுக்கு. வாரா வாரம் வியாழக்கிழமை இரவு பத்து மணிக்கு மேல் தியேட்டரில் புதுப்படப் போஸ்டர் ஒட்டிய பின்னர்தான் வீடு திரும்புவார். அவர் பெட்டியைத் திறந்தால் உட்புறம் நடிகர் படத்தை ஒட்டி வைத்திருப்பார். நீளமாக ஒரு நோட்டுத் தயாரித்து தினசரியில் வரும் சினிமா விளம்பரங்களைக் கட் பண்ணி அபிமான நடிகரின் படம் ரிலீஸ் நாள், ஐம்பதாவது நாள், நூறாவது நாள், வெள்ளிவிழா என்று வரிசைப்படுத்தி அதற்குச் கலர் கொடுத்து டிசைனெல்லாம் செய்திருப்பார். இதனாலேயே அவருக்குப் படிப்பு வராமல் போனது எனலாம்.
சின்ன வயதிலேயே சினிமாவில் நடிக்கிறேன் என்று சென்னை ஓடிப்போய் திரும்பியவர் அவர். ஒவ்வொரு முறையும் ஸ்கூல் ஹெட்மாஸ்டரிடம் அப்பா போய்க் கெஞ்சி திரும்பவும் பள்ளியில் சேர்த்துவிடுவார். அதனாலேயே வருடா வருடம் உயர் வகுப்பு ஏற முடியாமல் தேங்கிப் போனார் விச்சு அண்ணா. ஒரு கட்டத்தில் இனி இவன் தேறமாட்டான் என்ற முடிவுக்கு வந்தார் அப்பா. பிறகு தான் கடை முதலாளி மூலம் சொல்லி பெரியகுளம் ஆனந்தபவன் ஹோட்டலில் சேர்த்துவிட்டார். வீட்டை விட்டுத் தனியாக இருந்ததனால் சுதந்திரமாக உணர்ந்தாரோ என்னவோ அந்த வேலையில் நிரந்தரமாக இருந்தார் விச்சு அண்ணா சுதந்திரமாக சினிமாப் பார்த்தார்.
வத்தலகுண்டு சந்திரா டாக்கீஸில் என்ன படம் என்று தினசரிகள் மூலம் தெரிந்து கொண்டு புறப்பட்டு வருவார் பெரும்பாலும் சனிக்கிழமையாகத்தான் இருக்கும் அந்த நாள் ஒவ்வொரு வாரமும் அந்த நாளில் எங்களுக்குக் கொண்டாட்டம்தான். எங்கள் எல்லோரையும் சினிமாவுக்கு அழைத்துப் போவார். அந்த அக்ரஹாரத்திலேயே அதிகம் சினிமாப் பார்த்த வீடு என்றால் அது எங்களுடையதுதான்! என்னே பெருமை!
சந்திரா டாக்கீஸில் தரை டிக்கெட் நாலணா. முண்டியடித்து ஆள் மேல் ஆள் ஏறி பொந்துக்குள் நுழைந்து டிக்கெட்டோடு வெளிப் போந்து நின்றால் உலக சாதனை நிகழ்த்தியது போல் நினைக்கத் தோன்றும். விச்சு அண்ணாவின் வருமானத்துக்கு தரை டிக்கெட்டுக்குத்தான் காசு தர முடியும். பெஞ்சு டிக்கெட் மாடி என்பதெல்லாம் வெறும் கனவுதான். இடைவேளையின் போது ஓடி ஓடிப்போய் எட்டிப் பார்ப்பதோடு சரி, தான் பார்த்து ரசித்த படத்தை எங்களை விடக் குறிப்பாக அம்மாவைப் பார்க்கச் செய்ய வேண்டும் அவருக்கு.
விச்சு அண்ணாவுக்குக் குரல் வளம் உண்டு. கூடத்தில் ஊஞ்சலில் அமர்ந்து ஆடிக் கொண்டே மங்கியதோர் நிலவினிலே...
என்று அவர் பாடும் காட்சி எங்கள் எல்லோர் மனதிலும் பதிந்து போன அழிக்க முடியாத காட்சியாகும். சித்தி, சித்தி என்று மூச்சுக்கு முன்னூறு முறை கூறிக் கொண்டு எங்கள் அம்மாவையே சுற்றிச் சுற்றி வருவார் விச்சு அண்ணா.
என்ன பார்க்கிறீர்கள்? ஆம். எங்கள் அம்மா விச்சு அண்ணாவுக்கு சித்திதான். இளம் பிராயத்திலேயே அவரது அம்மா காலமாகிவிட பதினாறு வயதில் எங்கள் அப்பாவுக்கு வாழ்க்கைப்பட்டவள் எங்கள் அம்மா. அம்மாவுக்கு விச்சு அண்ணா பேரில் பாசமும், வாஞ்சையும் மிக அதிகம். அவர் படிக்காமல் போனதில் அம்மாவுக்கு தாளமுடியாத வருத்தம். மூத்தாள் பிள்ளை என்றுதானே படிக்காமல் ஹோட்டலுக்கு அனுப்பிவிட்டாள் என்று ஊர் சொல்லுமோ என்று பயந்தாள் அம்மா அப்பா போய் கெஞ்சிக் கெஞ்சி சேர்த்துவிட்டதெல்லாம் அம்மாவின் வற்புறுத்தலால் நடந்ததுதான்.
தான் படிக்காத உறுத்தல் இருந்ததோ என்னவோ விச்சு அண்ணா எங்கள் படிப்பில் அதிகம் அக்கறைக் காட்டினார். நோட்டு, புத்தகம் என்று எது கேட்டாலும் உடனே ஓடிப்போய் வாங்கி வந்து நீட்டுவார் இங்கிலீஷ் க்ராமர் புக் வேணும் என்று அண்ணா ஒருமுறை சொல்ல உடனே மதுரை சென்று தலை சிறந்த இலக்கண நூலான 'ரன் அண்ட் மார்ட்டின்' புத்தகத்தோடு வந்து நின்றார் விச்சு அண்ணா. இத்தனைப் பாசமும் பற்றும் உள்ள ஒரு மனிதர் படிக்காமல் இப்படிச் கரண்டி பிடிக்கும் உத்தியோகத்தில் மாட்டிக் கொண்டாரே என்று எங்கள் எல்லோருக்கும் நிரம்ப வருத்தமுண்டு.
எந்தச் கெட்ட பழக்கமும் இல்லாத பிள்ளை. நல்ல குணசாலி. கொடுத்தால் விச்சுவுக்குத்தான் என் பெண்
என்று கூறிக் கொண்டு ஒரு நாள் வந்து நின்றார் வாசுசி அண்ணியின் அப்பா. பால்ய கால சிநேகிதம் நெருங்கிய உறவுமுறை தந்த பலம் அதனால் அப்பாவால் மறுக்க முடியாமல் போனது. ஆனால் இப்படியா ஆக வேண்டும்? எந்த கிரகம் அவரை இப்படிக் கொண்டு நுழைத்தது?
தனிக்குடித்தனம் போயே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றார் விச்சு அண்ணா அழகான பெண்டாட்டி. அமைந்ததில் தலைகால் புரியவில்லை அவருக்கு அசாத்தியக் சுற்பனையில் மிதந்தார். அப்பா எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் கேட்கவில்லை. உதறிவிட்டார் அப்பா. போன வேகத்தில் திரும்பி வந்தார் விச்சு அண்ணா. ஆனால் இப்படியா வந்து நிற்க வேண்டும்? யார் செய்த செய்வினை இது? எந்த ஜென்மத்துப் பாவம் இது? அம்மா அரற்றினாள். அழுது புரண்டாள். எந்த வைத்தியமும் விச்சு அண்ணாவை சரி செய்யவில்லை. இனிமேலான வாழ்க்கை அவருக்கு இப்படித்தான் கழியும் என்ற நிலை வந்தது. எல்லாருடைய மனமும் சமனப்பட்டது ஒரு பொழுதில்.
விச்சு அண்ணா வீட்டோடு இருக்க ஆரம்பித்தார். வாசல் கதவைப் பூட்டி வைத்துப் பாதுகாத்தாள் அம்மா. காவல் காத்தாள். அமாவாசை போன்ற தினங்களில் ஆர்ப்பாட்டம் அதிகரிக்கும். அண்டை வீடு, அயல் வீடு என்று துணைக்கு வருவார்கள் அவரை இழுத்துப் பிடித்துச் குளிக்கச் செய்வார்கள். புதுவேட்டி கொடுத்து உடுத்தச் செய்வார்கள். கூடவே அமர்ந்து பேசிக் கொண்டு காலம் கடத்துவார்கள் காவல் காப்பார்கள். எல்லோராலும் எல்லாச் சமயமும் கண்காணித்துக் கொண்டேவா இருக்க முடியும்? விச்சு அண்ணா சமயங்களில் காணாமல் போனார். எப்படி எப்பொழுது வெளியேறினார் என்று தெரியாது அப்படியான ஒரு பொழுதுதான் இப்பொழுதும் வந்துள்ளது.
போய்த் தேடுங்கடா எங்கேயிருந்தாலும் கண்டுப்பிடிச்சு என் கண்முன்னாடி அவனைக் கொண்டு வந்து நிறுத்தனும். இது என் கட்டளை
ருத்ரம் வந்தவளாய்க் கத்தினாள் அம்மா. நானும் அண்ணாவும் தேடச் சிளம்பினோம். படித்துறை, ஆற்றங்கரை, தென்னந்தோப்பு, தண்டபாணி கிணறு, வயல்வெளி, ஓணாங்கரடு, சென்றாயப் பெருமாள் கோயில் என்று ஒன்றுவிடாமல் அலைந்தோம். எதுவும் பாக்கி வைக்கவில்லை. எங்கும் விச்சு அண்ணா இல்லை. இரவோடு இரவாகக் கிளம்பிப் போன மனிதர் யார் கண்ணில் பட்டிருக்கக்கூடும்? ஒருவேளை அவர் முன்பு வேலை செய்த பெரியகுளம் ஆனந்தபவன் ஹோட்டலுக்குப் போயிருப்பாரோ என்று சந்தேகம் எழுந்தது எங்களுக்கு. 'வரவில்லை' என்று சொன்னார் கடை முதலாளி.
எப்படியிருந்த பிள்ளை இப்படி ஆயிட்டான்!
என்று மனம் வருந்தினார். வயிறாற சாப்பிட்டுப் போகுமாறு உபசரித்தார். விச்சு அண்ணா சம்பாதித்து வைத்திருந்த நற்பெயர் அங்கே எங்களுக்குப் போதிய மரியாதையை வழங்கிற்று.
முப்பது வயதுவரை நன்றாக இருந்த ஒரு மனிதன் பிறகு திருமணம் செய்து கொண்டு ஒரு பெண்ணின் வாழ்க்கை வேறு வீணாகி இப்படி கண்முன்னே பைத்தியமாய் அலைய வேண்டுமா? வருந்தாதவர்கள் பாக்கியில்லை. எழவு வீட்டுக்கு வந்து போவது போலவே எல்லாரும் வந்து துக்கம் கேட்டுவிட்டுப் போனார்கள்.
தனிக்குடித்தனம் வேண்டாம்டா. அவ இங்கேயே இருக்கட்டும். கொஞ்சநாள் கழிச்சுப் பார்த்துக்கலாம்னு அடிச்சிண்டேனே... கேட்கலியே பாவி... என்ன வீடு பார்த்தானோ? எந்தப் பேய் அடிச்சிதோ? தெரியலியே... என் பையன் பரப்பிரம்மமா வந்து நிற்கிறாளே... நான் என்ன பண்ணுவேன் இதை எப்படி சமாளிக்கப் போறேன்... என் ஆயுசே போயிடும் போலிருக்கே?
என்று அம்மா புலம்ப ஆரம்பித்தாள்.
ஆனால் அந்த நிலையிலும் வாசுகி அண்ணியை நாக்கு மேல் பல்லுப் போட்டு ஒரு சுடுசொல் சொன்னதில்லை அம்மா. அங்கே தெய்வமாய் நின்றாள் அவள்.
அப்பாவின் முகம் இருண்டு போய்க் கிடந்தது. தீவிரச் சிந்தனையில் இருந்தார் அவர். போலீஸில் கடை முதலாளியைக் கொண்டு புகார் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவோம்
என்றனர் அவர்கள். ஒரு வாரம் கழிந்த பொழுதில் தேவதானப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் பார்த்ததாகச் சிலர் வந்து சொன்னார்கள்.
பெருங்கூட்டத்தில் இவரை எப்படிக் கண்டுபிடிப்பது?
இந்தக் குழப்பத்துடனேயே நாங்கள் கிளம்பினோம்.
பொழுது சாய்ந்த வேளை. மெல்லிய இருட்டுப் பரவிய நேரம். நாங்கள் அங்கே கண்ட காட்சி எங்கள் ரத்தத்தை அப்படியே உறைய வைத்தது.
அவர்தானா? அது அவரேதானா? விச்சு அண்ணா தானா அது? யார் அவரை இப்படிக் கோரப்படுத்தியது. ஏன் இப்படி மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார்? யார் செய்த கோலம் இது? என்ன தவறு இழைத்தார் என்று இந்தக் கேவலம்? கழுதை மேல் ஏற்றி விரட்டுகிறார்களே அவரை? எதற்காக அவர் மேல் இப்படி அழுகிய பழங்களையும் முட்டைகளையும் வீசுகிறார்கள்? எதற்காக இந்த தண்டனை? தண்டனையா? அல்லது கேலி விளையாட்டா? அதோ சிறுவர்கள் வேறு கற்களையெல்லாம் எடுத்து வீசுகிறார்கள்? கெக்கலித்து ஓடுகிறார்களே? அட ஆண்டவனே! இதைக் கேட்பார் கிடையாதா? என்ன பெருங்கொடுமை?
ஐயோ நிறுத்துங்கள்... நிறுத்துங்க... இதென்ன அநியாயம்? இதென்ன அக்கிரமம்? அவர் எங்க அண்ணன்! கூடப் பிறந்தவர்! புத்தி சரியில்லாதவர்! அவரை விட்டுடுங்க... பாவம் அவரை விட்டுடுங்க... அடிக்காதீங்க... விட்டுடுங்க... அடிக்காதீங்க.
கதறிக் கொண்டே தலைதெறிக்கத் தொடர்ந்து ஓடினோம் நாங்கள்.
*****
2. தலை
எழுந்து போய்விடலாம் என்றிருந்தது. மேலும் உட்கார பொறுமையில்லை. வந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகிப் போனது. உள்ளே அழைப்பதற்கான சுவடே இல்லை. எதிரே கிடக்கும் நாளிதழ்கள் அத்தனையையும் புரட்டியாயிற்று. வார இதழ்களையும் படித்தாயிற்று கொண்டு வந்திருந்த புத்தகம் கையில் இருந்தது. புரட்ட மனமில்லை. மூளைச் சோர்வு வந்திருந்தது. சிந்தனையை ஆழமாய்ச் செலுத்திப் படிக்க வேண்டிய புத்தகம். வந்தவுடனேயே அங்கு கிடந்த தினசரியும் வார இதழ்களும் ஈர்த்துவிட்டன. சுலபமாய்ப் படிக்க பார்க்கக் கூடியவை அவை. செய்தித் தலைப்புகளும் விளம்பரங்களும் ஈர்ப்பு சக்தி உடையவை. உண்டோ கிடையாதோ சந்தர்ப்பமும் நேரமும் அவைகளை அறியத் தூண்டுகின்றன. வெறுத்து ஒதுக்க வழியில்லை. இருப்பவற்றுள் எது பரவாயில்லை என்று தேட வைக்கின்றன. காலத்தின் கட்டாயம் காலடியில்.
அப்படித் தேடித்தான் இங்கு வந்து உட்கார்ந்திருப்பதும் இல்லையென்றால் ஊருக்குள் எத்தனையோ சலூன்கள் அவற்றில் ஒன்றைத் தேடிச் செல்லாமல் பிடிவாதமாய் இங்கே பழி கிடப்போமா?
இப்படிக் காத்துக் கிடப்பதில் அவனுக்கு ஏதேனும் பச்சாதாபம் இருக்குமா? வந்தவுடனேயே வாங்க உட்காருங்க பேப்பர் பாருங்க சார்! என்றதோடு சரி பிறகு வெளியே எட்டிப் பார்க்கவேயில்லை. கருப்புக் குளிர் கண்ணாடி போட்டு மறைத்த அறை உள்ளிருந்து பார்த்தால் வெளியே நடப்பது தெரியும். ஆனால் வெளியே இருப்போர்க்கு உள்ளே எதுவும் காண முடியாது.
வருவோரையும் போவோரையும் காத்திருப்போரையும் அவன் அறியக்கூடும் வரும் எல்லாருக்கும் வரவேற்புண்டு. காத்திருப்போரை எதுவும் சொல்வதில்லை. போய்விடுவோரையும் கண்டு கொள்வதில்லை. ஒன்று முடித்து ஒன்றுக்கு ஆள் ரெடி. பிறகு அவனுக்கென்ன வந்தது? இத்தனை காலம் உண்டான பழக்கத்தில் அவன் தன்னையே கண்டு கொள்வதில்லையே? ஒரு பச்சாதாபம் கூடவா எழாது? எழுந்து என்ன செய்ய? வரிசைதானே கணக்கு? எதிராளி கத்தினால்?
சார்... தம்பி ரெடி... உட்கார்றீங்களா?
என்று ஒருமுறை கேட்டபோது இவன் மறுத்து விட்டான். அந்தப் பையனிடம் தலையைக் கொடுக்க இவனுக்கு மனமில்லை. தனக்குத் தெரிய அங்கு வேலைக்கு வந்த பையன் அவன். பெரும்பாலும் சிறுவர்களே அவனிடம் முடி வெட்டிக் கொண்டார்கள். அப்படியிருக்க தன்னை அமரச் சொன்னது குறைத்து மதிப்பிட்டதாய் உணர்ந்தான் அவன். காத்துக் கிடப்பதில் எழுந்த பச்சாதாபமோ? அல்லது அலட்சியமோ?
இவன் வேண்டாம் என்ற போது அந்தப் பையனின் முகம் சுருங்கியது. அவன் மனதைச் சங்கடப்படுத்தி விட்டோமோ என்று வருந்தினான் இவன். வளரும் பையனை ஊக்கப்படுத்த வேண்டாமா? அதற்குத் தன் தலைதான் கிடைத்ததா? வேண்டாம் என்று சொல்லும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது கடைக்காரர்தானே. அவன் மனது சங்கடப்படுமேயென்று போய் உட்கார முடியுமா? வெட்டு சரியில்லை என்றால் ஆபிஸில் கேலி செய்வார்களே! முடி திரும்ப வளரும் வரை உறுத்துமே.
சிறுவயதில் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் மொட்டையனிடம் அமர்த்திய பாட்டியின் நினைவு வந்தது. நாலணாக் காசுக்கு அவனிடம் நாலுமணி நேரம் வேலை வாங்கிய பாட்டி, இந்தப் பையனிடம் அமரப் போக அதுபோல் எதுவும் ஆகிப் போனால்?
முடி வெட்டறது வேறே... முடிதிருத்தறது வேறே... எங்க ஏரியாவுலே எத்தனையோ சலூன் இருக்கு எல்லாத்துலேயும் முடி வெட்டுறாங்க. நீங்க ஒருத்தர்தான் முடி திருத்துறீங்க...
பெரிதாகச் சிரித்தார் கடைக்காரர்.
எப்படி சார்? கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லுங்களேன் ஏக சந்தோஷம் அவருக்கு.
"அதாவது முடிக்குத் தண்ணியடிச்சு... மொத்தமா